ஜுட் சமந்த
நண்பர்களுடன் விடுமுறையைக் கழிக்கச் சென்ற இடத்தில் ஏற்பட்ட எதிர்பாராத அனர்த்தம் அப்பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மாரவில, மூதுகட்டுவ கடற்கரைப் பகுதியில் கடலில் நீராடிக் கொண்டிருந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவர் பாரிய கடல் அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
வென்னப்புவ – நைனாமடம பகுதியிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஐந்து பேர் கொண்ட இளைஞர்கள் குழுவினர், விடுமுறையைக் கொண்டாடுவதற்காக கடந்த 22ஆம் திகதி மாலை மாரவில கடற்கரைக்கு வந்துள்ளனர். மாலை 6.00 மணியளவில் இவர்கள் கடலில் இறங்கி நீராடிக்கொண்டிருந்த போதே திடீரென வந்த இராட்சத அலை இரு இளைஞர்களை இழுத்துச் சென்றுள்ளது.
அலையில் சிக்கி உயிருக்குப் போராடிய இளைஞர்களைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக கடலில் குதித்து ஒருவரை பத்திரமாக மீட்டுள்ளனர். எனினும், மற்றைய இளைஞரான தொடாங்கொட – யக்கலமுல்ல பகுதியைச் சேர்ந்த எதிரிசூரிய கமகே பெதும் தெநெத் அசோக (வயது 18) என்பவர் கண் இமைக்கும் நேரத்தில் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டு மாயமானார்.
அதிர்ச்சியூட்டும் விடயம் என்னவென்றால், அனர்த்தம் இடம்பெற்ற வேளையில் கடலின் சீற்றம் அதிகமாக இருந்ததால் அங்கு நீராட வேண்டாம் என கடற்கரையில் இருந்த உள்ளூர் மீனவர்கள் எச்சரித்துள்ளனர். எனினும், அந்த எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் இளைஞர்கள் கடலில் இறங்கியமையே இந்த விபரீதத்திற்கு வழிவகுத்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
மாயமான 18 வயது இளைஞரைக் கண்டுபிடிப்பதற்காக பிரதேச மீனவர்கள் உடனடியாக படகுகளில் தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்த போதிலும், கடலின் கொந்தளிப்பான தன்மை மற்றும் பலத்த காற்று மீட்புப் பணிகளுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


