சுமார் 12 கோடி ரூபா பெறுமதியான 12 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று (24) ஹோமாகமவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த பிரசாத் நிஷாந்த கொலம்பகே என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர், வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘ஹோமாகம ககன’ என்பவரின் போதைப்பொருள் கடத்தல்களை வழிநடத்தியவர் என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கிடைத்த தகவலுக்கு அமையவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாயில் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ‘கொண்ட ரஞ்சித்’ என்ற ரஞ்சித் பெரேரா என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி உள்ளிட்ட கடத்தல்காரர்களைக் கைது செய்ததன் மூலம் ஆரம்பிக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் கீழ், இதுவரையில் 37 கிலோ கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு கட்டமாக, டுபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ‘கொண்ட ரஞ்சி’ என்பவரின் முக்கிய உதவியாளர் ஒருவரும், சுமார் 30 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


