ஜுட் சமந்த
அமைதியாக நகர்ந்து கொண்டிருந்த அந்தப் பிற்பகல் வேளையில், வீட்டின் நிசப்தத்தைக் கலைத்து ஒலித்த தொலைபேசி மணி ஓசை, ஒரு தாயின் வாழ்க்கையையே உலுக்கிப் போடும் என்று அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மாரவில – மஹவெவ, அடப்பரகம பிரதேசத்தைச் சேர்ந்த பெத்தே லியனகே தொன் நதீரா சித்ரானி என்ற பெண்ணுக்கே இந்த கொடூர அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 08 ஆம் திகதி நண்பகல் 1.00 மணியளவில், அடையாளம் தெரியாத இலக்கம் ஒன்றில் இருந்து அந்த அழைப்பு வந்துள்ளது. மறுமுனையில் பேசிய நபர், எவ்வித தயக்கமுமின்றி நேரடியாக 20 லட்சம் ரூபாய் திறைப்பணத்தைக் கேட்டுள்ளார். பணம் தராவிட்டால், “உன் குழந்தையின் தலையிலேயே சுட்டுக் கொன்றுவிடுவேன்” என கொடூரமாக மிரட்டியுள்ளார்.
அத்துடன் நிறுத்திவிடாமல், அன்றைய தினம் முழுவதிலும் அதே இலக்கத்திலிருந்து மூன்று முறை தொடர்ச்சியாக அழைப்புகள் வந்து, அந்தப் பெண்ணை திகிலின் உச்சத்திற்கே கொண்டு சென்றுள்ளன. வெளிநாட்டில் பணிபுரியும் கணவர் அருகில் இல்லாத சூழலில், இரு சிறு பிள்ளைகளுடன் தனியாக வாழும் அந்தத் தாய், இந்த மிரட்டலால் மீள முடியாத அதிர்ச்சியிலும் பயத்திலும் உறைந்துபோயுள்ளார்.
தற்போது இச்சம்பவம் தொடர்பாக மாரவில பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். சம்பவம் குறித்து மாரவில நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், அச்சுறுத்தல் விடுக்க பயன்படுத்தப்பட்ட தொலைபேசி இலக்கம் தொடர்பான பகுப்பாய்வு அறிக்கையைப் பெற பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். சந்தேகநபரை வலைவீசித் தேடிவரும் பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


