உலகக் கால்பந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில், சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) எடுத்த ஒரு ரகசிய முடிவு இப்போது உலக விளையாட்டு அரங்கில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. உலகக் கிண்ணப் போட்டிகள் மற்றும் அதன் முக்கிய நிகழ்வுகளை நடத்துவதற்காக $2000 கோடி ($20 Billion) மதிப்பில் “FIFA Forward Enterprise” என்ற துணை நிறுவனத்தை உருவாக்க FIFA திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் 20 சதவீத பங்குகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்து, சுமார் $420 கோடி ($4.2 Billion) நிதி திரட்டுவதே FIFA தலைவர் ஜியான்னி இன்ஃபான்டினோவின் இலக்காகும்.
ஆனால், இந்த மெகா திட்டம் உலகக் கால்பந்தை வழிநடத்தும் பிராந்திய கூட்டமைப்புகளுக்குத் தெரியாமலேயே அரங்கேற்றப்பட்டிருப்பதுதான் இப்போது பூதாகரமான சர்ச்சையாக வெடித்துள்ளது. வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்து கூட்டமைப்பு (CONCACAF) மற்றும் ஆசிய கால்பந்து கூட்டமைப்பு (AFC) ஆகிய இரண்டும் FIFA-வின் இந்த தன்னிச்சையான போக்கைக் கடுமையாகக் கண்டித்துள்ளன. ஊடக அறிக்கைகள் மூலமாகவே இந்தத் தகவலைத் தாம் அறிந்துகொண்டதாகவும், விளையாட்டு நிர்வாகத்தின் அடிப்படை விவாதங்கள் எதுவுமின்றி இவ்வளவு பெரிய முடிவு எடுக்கப்பட்டது “நடைமுறை மீறல்” என்றும் CONCACAF கொந்தளித்துள்ளது.
சர்ச்சையின் வீச்சை மேலும் அதிகரிக்கும் வகையில், ஐரோப்பிய கால்பந்து சம்மேளனமான UEFA நடுரோட்டில் இறங்கி போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. “கால்பந்தின் ஆன்மாவையும் நிர்வாகத்தையும் வியாபாரப் பொருட்களாக விற்க முடியாது; இது FIFA-வுக்கு மட்டுமே சொந்தமான சொத்து அல்ல” என ஆவேசமாகத் தெரிவித்துள்ள UEFA, வரவிருக்கும் உலகக் கிண்ணப் போட்டிகளைப் புறக்கணிப்பது குறித்து ஆலோசிக்கத் தனது 55 உறுப்பு நாடுகளுடன் அவசரக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது.
FIFA-வின் இந்தத் திட்டத்திற்கு எதிராகப் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து கால்பந்து சம்மேளனங்களும் அணிதிரண்டுள்ளன. இங்கிலாந்து FA அமைப்பு, “இந்த முடிவு எடுக்கப்பட்ட விதத்தில் எந்தவொரு வெளிப்படைத்தன்மையோ அல்லது நல்லாட்சியோ இல்லை” எனக் குற்றம் சாட்டியுள்ளது. அதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தின் விளையாட்டு ஆணையர் கிளென் மிகா லெஃப், தனியார் முதலீட்டாளர்களின் நிதி நலன்களுக்கு ஏற்ப FIFA-வின் அதிகாரங்கள் வளைக்கப்படும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளார்.
மொத்தமுள்ள 211 உறுப்பு நாடுகளில், 143 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் AFC, CONCACAF மற்றும் UEFA ஆகிய அமைப்புகள் எதிர்ப்புக் குரல் கொடுத்துள்ளதால் FIFA தலைவர் இன்ஃபான்டினோ பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார். “கால்பந்தின் ஜனநாயகமயமாக்கல் மற்றும் உலகளாவிய வளர்ச்சிக்காகவே இந்த நிதி பயன்படுத்தப்படும்” என FIFA தரப்பு நியாயம் கற்பித்தாலும், விளையாட்டு உலகத்தை வர்த்தகக் கார்ப்பரேட்களிடம் அடகு வைக்கத் துணியும் இந்த நகர்வு, உலகக் கால்பந்து வரலாற்றிலேயே சந்தித்திராத மிகப்பெரிய பிளவுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


