Aljazeera: உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி விறுவிறுப்பாக முடிவடைந்த போதிலும், மைதானத்தில் இடம்பெற்ற கைகலப்புகள் மற்றும் அரசியல் சர்ச்சை அலைகள் இன்னமும் ஓய்ந்தபாடில்லை. ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கிண்ணத்தைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, மைதானத்தில் இடம்பெற்ற மோதல்கள் உலகக் கால்பந்து ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன.
இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் தீவிர கவனம் செலுத்திய சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA), அர்ஜென்டீனா வீரர்கள் மற்றும் உதவிப் பயிற்றுநர் மீது உத்தியோகபூர்வமாக ஒழுக்க நடவடிக்கை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. குறிப்பாக, போட்டிக்களத்தில் எதிரணி வீரர்களைத் தாக்கிய குற்றச்சாட்டுகளின் கீழ் நடுகள வீரர் லியான்ட்ரோ பரீடஸ் மீது 3 குற்றச்சாட்டுகளும், தடுப்பாட்ட வீரர் நஹுவேல் மொலினா மீது 2 குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன. அத்துடன், உதவிப் பயிற்றுநர் ரொபர்ட்டோ அயாலா மீது ஒரு தாக்குதல் குற்றச்சாட்டும் பதிவாகியுள்ளது.
ஆனால், பிரச்சனை இத்தோடு மட்டும் முடியவே இல்லை. இறுதிப்போட்டி மோதல்களுக்கு அப்பால், அரையிறுதிப் போட்டியின் போது வெடித்த அரசியல் சர்ச்சையும் தற்போது அர்ஜென்டீனாவை நசுக்கி வருகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதியில் 2-1 என வெற்றி பெற்றதன் பின்னர், அர்ஜென்டீனா வீரர்கள் “Las Malvinas son Argentinas” (“மால்வினாஸ் தீவுகள் அர்ஜென்டீனாவுக்கே சொந்தம்”) என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பதாகையை ஏந்தி நின்றமை பெரும் புயலைக் கிளப்பியது.
ஃபாக்லேண்ட் தீவுகள் தொடர்பில் பிரித்தானியாவுக்கும் அர்ஜென்டீனாவுக்கும் இடையே நீடித்து வரும் எல்லைப் பிரச்சினையை விளையாட்டுக் களத்திற்குள் இழுத்ததாக பிரித்தானிய அரசு கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து, விளையாட்டு நிகழ்வொன்றை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தியதாக அர்ஜென்டீனா கால்பந்து சம்மேளனம் (AFA) மீது FIFA உத்தியோகபூர்வ வழக்குப் பதிவு செய்துள்ளது.
விசாரணைகளின் கொடூரம் இத்துடன் நிற்கவில்லை. மைதானத்தில் ரசிகர்கள் காட்டிய ஒழுக்கக்கேடான நடத்தைகளும் இப்போது அர்ஜென்டீனாவுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளன. போட்டித் தொடரின் போது ரசிகர்கள் எழுப்பிய இனவெறி முழக்கங்கள், மைதானத்திற்குள் பொருட்களை வீசியெறிந்தமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை மீறியமை தொடர்பான குற்றச்சாட்டுகளும் அடுக்கடுக்காக உள்ளடக்கப்பட்டுள்ளன.
தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ள வீரர்கள் மற்றும் அர்ஜென்டீனா கால்பந்து சம்மேளனம் தங்களது விளக்கங்களை முன்வைக்க FIFA சந்தர்ப்பம் அளித்துள்ளது. இதன்பின்னர், FIFA ஒழுக்கக் குழுவின் தீர்ப்பு வெளியாகும் போது வீரர்கள் தடைகளை எதிர்நோக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.




