அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண் சுமார் 8 நிமிடங்கள் உயிரிழந்த நிலையில், மீண்டும் அவர் உயிர் பெற்றார். இதற்கிடையே உயிரிழந்த போது தனது உடலுக்கு என்ன நடந்தது. அப்போது என்ன உணர்ந்தேன் என்பது உள்ளிட்ட தகவல்களை அந்த பெண் பகிர்ந்துள்ளார்.
இந்த உலகில் மிக அரிதாகச் சிலருக்கு மட்டும் தற்காலிகமாக உயிர் பிரிந்து மீண்டும் உயிர் வரும். அப்படி தான் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண் ஒருவர் சுமார் எட்டு நிமிடங்கள் உயிரிழந்த நிலையில் மீண்டும் உயிர் பெற்றார். அந்த எட்டு நிமிடங்கள் என்ன நடந்தது.. உடலும் மனதும் எப்படி இருந்தது என்பது குறித்த அனுபவத்தை அவர் இப்போது பகிர்ந்துள்ளார்.
அமெரிக்காவின் கொலராடோவைச் சேர்ந்த பிரியானா லாஃபெர்டி அந்த பெண் சொன்ன தகவல் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது. தனது உடலுக்கு மேலே தானே மிதந்தது போலவும், டைம் என்ற ஒன்றே இல்லாத ஒரு உலகத்திற்குள் நுழைந்தது போலவும் உணர்ந்ததாகக் கூறியுள்ளார். 33 வயதான இவர், மயோக்ளோனஸ் டிஸ்டோனியா என்ற ஆபத்தான நரம்பியல் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது உடல் திடீரென மொத்தமாகச் செயலிழந்துவிட்டது.
அப்போது உயிர் பிரியும் தருணம் ‘ரெடியாக இருக்கிறீர்களா?’ என்று ஒரு குரல் கேட்டதாகவும் அவர் கூறுகிறார். அந்த குரல் கேட்ட அடுத்த நொடி எல்லாம் இருண்டுவிட்டதாகவும் லாஃபெர்டி தெரிவித்தார். அப்போது அவரை பரிசோதித்த டாக்டர்கள், மருத்துவ ரீதியாக இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இருப்பினும், அப்போதும் உணர்வு தன்னுடன் தொடர்ந்தது என்று அவர் கூறினார்.
லாஃபெர்டி மேலும் கூறுகையில், “மரணம் என்பது ஒரு மாயை. நமது ஆன்மா ஒருபோதும் இறப்பதில்லை. நமது உணர்வு உயிருடன் தான் இருக்கிறது. நாம் உருமாற மட்டுமே செய்கிறோம். என் எண்ணங்கள் அப்படியே இருந்தது உணர முடிந்தது. அங்கு நடந்தது ஒரு மாயை போல இருந்தது. அது ஒரு ஆசீர்வாதம் என்று சொல்லலாம். மிதப்பது போல நான் திடீரென எனது உடலில் இருந்து பிரிந்து தனியாக மிதப்பது போல உணர்ந்தேன்.
எனது மனித உருவத்தைப் பார்க்கவும் முடியவில்லை. அதை நினைவில் கொள்ளவும் முடியவில்லை. ஆனால் நான் முழுமையாக விழிப்புடன் இருந்தேன், நான் உயிருடன் இருப்பது போலவே உணர்ந்தேன். உடலில் எந்த வலியும் இல்லை.. அமைதி மற்றும் தெளிவு மட்டுமே இருந்தது.
அப்போது தான் பூமியில் வாழும் வாழ்க்கை மட்டும் இறுதியானதோ முடிவானதோ இல்லை என்பதை உணர முடிந்தது. நமக்கு மேலான ஒரு அறிவு இருக்கிறது.. அது நிபந்தனையற்ற அன்புடன் நம்மை வழிநடத்துகிறது. அது நம்மைக் கண்காணிக்கவும் செய்கிறது. அங்கு நேரம் இல்லாதது போல் இருந்தாலும் எல்லாம் சரியாக நடப்பது போலவே இருந்தது” என்றார். Also Read
மரணத்திற்கு அருகிலுள்ள சென்றுவிட்டுத் திரும்புவோரின் அனுபவங்கள், அதாவது Near-death experiences, சிக்கலானவை மற்றும் விளக்கக் கடினமானவை. ஆய்வாளர்கள் அவற்றைப் புரிந்து கொள்ளத் தொடர்ந்து முயன்று வருகின்றனர். 2022ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், மனித மூளை இறக்கும் தறுவாயில் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளை விரைவாக நினைவு கூரும் என்பது கண்டறியப்பட்டது.
பலர் இதைத் தான் ‘வாழ்க்கை கண் முன் வந்து செல்வது’ என்று விவரிக்கின்றனர். கனடாவின் கல்கரி பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் நடந்த ஆய்வில், உலகில் வாழும் அனைத்து உயிரினங்களும் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஒரு மங்கலான ஒளியை வெளியிடுகின்றன என்றும் இறக்கும் போது மட்டுமே அந்த ஒளி மறைந்துவிடுகிறது என்றனர்.. இந்த மங்கலான ஒளியை அல்ட்ராவீக் ஃபோட்டான் எமிஷன் (Ultraweak photon emission – UPE) என்றும் குறிப்பிடுகிறார்கள்.