கல்வியின் வாசல் தேடி வரும் மழலைகளை வரவேற்கும் உன்னத நிகழ்வான “கால்கோள் விழா”, புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இன்று (29) மிகவும் உணர்வுபூர்வமாகவும், விமர்சையாகவும் நடைபெற்றது.
கல்லூரியின் அதிபர் ஜனாப் S.M. ஹுசைமத் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த வரவேற்பு நிகழ்வு, பாடசாலை வரலாற்றில் மற்றுமொரு மைல்கல்லாக அமைந்தது.
விழாவின் தொடக்கத்தில், புதிய மாணவர்கள் கல்லூரியின் பேண்ட் வாத்தியங்கள் முழங்க, மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு கௌரவமாக அழைத்து வரப்பட்டனர். தரம் இரண்டு, மூன்று மற்றும் நான்கு பயிலும் சிரேஷ்ட மாணவர்கள், தமது புதிய தம்பிகளையும் தங்கைகளையும் இன்முகத்துடன் வரவேற்ற காட்சி அங்கிருந்தோரின் நெஞ்சங்களை நெகிழச் செய்தது.
2026ஆம் கல்வியாண்டிற்காக சுமார் 85 புதிய மாணவர்கள் இப்பாடசாலையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இம்மாணவர்களின் கல்விச் செயல்பாடுகளைச் சீராக முன்னெடுக்கும் வகையில் அவர்கள் மூன்று வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்படவுள்ளன.
தனித்துவமான கற்பித்தல் முறைகள் மூலம் அவர்களின் ஆரம்பக் கல்வி பலப்படுத்தப்படவுள்ளது.
கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விழாவில், மாணவர்களின் கலை நிகழ்வுகள் விழாவிற்கு மேலதிக மெருகூட்டின. தொடர்ந்து நடைபெற்ற அமர்வில், அதிபர் மற்றும் விசேட பேச்சாளர்கள் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பெறுமதிமிக்க ஆலோசனைகளை வழங்கினர்.
“ஒரு குழந்தையின் கல்விப் பயணம் என்பது பாடசாலையும் பெற்றோரும் இணைந்து கட்டியெழுப்பும் கோபுரம்,” என இதன்போது வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், உலமாக்கள், பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், பாடசாலைச் சமூகம் மற்றும் பெற்றோர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இது பாடசாலையின் வளர்ச்சி மீது அப்பகுதி மக்கள் கொண்டுள்ள அக்கறையை வெளிப்படுத்துவதாக அமைந்தது.
புதிய சீருடையில், கைகளில் புத்தகப் பைகளுடன் துள்ளித்திரிந்த மழலைகளின் சிரிப்பொலியால் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலய வளாகமே இன்று விழாக்கோலம் பூண்டிருந்தது.






















