சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, இலங்கையின் முன்னணி பெண்கள் பங்கேற்கும் மிதிவண்டி கொண்டாட்டமான “Ride Colombo 2026” இரண்டாவது ஆண்டாக மீண்டும் பிரம்மாண்டமாக நடத்தப்படவுள்ளது. இதற்கான உத்தியோகபூர்வ ஊடக சந்திப்பு அண்மையில் கொழும்பு Cinnamon Life – City of Dreams வளாகத்தில் நடைபெற்றது.
“என் சவாரி, என் குரல். மாற்றத்தின் சக்கரம்” (My Ride. My Voice. Wheels of Change) என்ற ஆழமான கருப்பொருளில் இந்த ஆண்டு நிகழ்வு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது வெறும் மிதிவண்டி சவாரி மட்டுமல்லாது, ஒவ்வொரு பெண்ணும் தன்னம்பிக்கையுடன் தனது குரலை சமூகத்தில் ஒலிக்கச் செய்யவும், நாட்டின் முன்னேற்றத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு அங்கமாக மாறவும் உருவாக்கப்பட்ட ஒரு தளமாகும் என Feel Lanka அமைப்பின் நெறியாளர் மதுர தர்மரத்ன தெரிவித்தார்.
இது 2026 மார்ச் 7 ஆம் திகதி சனிக்கிழமை, கொழும்பு Galle Face Green பகுதியில் மாலை 3.00 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது
இந்த நிகழ்வில் நாட்டின் அனைத்துப் பாகங்களிலிருந்தும் மற்றும் உலக நாடுகளிலிருந்தும் பெண்கள் பங்கேற்க உள்ளனர். குறிப்பாக, வடகிழக்கு மாகாணங்களில் வாழும் பெண்களும் இந்த ஒற்றுமைக்கான சவாரி நிகழ்வில் பங்கேற்க வேண்டும் என்று ஏற்பாட்டாளர்கள் விசேட அழைப்பு விடுத்துள்ளனர்.
Ride Colombo 2026 இன் சிறப்பம்சமாக, இதன் மூலம் கிடைக்கும் டிக்கெட் வருவாயின் 100% நிதி, Feel Lanka, Indira Cancer Fund மற்றும் Helpline 1333 ஆகிய மூன்று தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கப்படும். இதன் மூலம் பங்கேற்பாளர்கள் சமூக நலன் மற்றும் சுகாதார மேம்பாட்டு முயற்சிகளுக்கு நேரடியாகப் பங்களிக்கின்றனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற Ride Colombo 2025 பிரச்சாரமானது, சர்வதேச ரீதியில் உயரிய அங்கீகாரமான “MarCom Platinum Award” விருதைப் பெற்றுள்ளது. இந்த விருதைப் பெறும் முதல் இலங்கைப் பிராண்ட் பிரச்சாரம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பிரம்மாண்ட நிகழ்விற்கு LUMALA பிரதான அனுசரணையாளராகச் செயற்படுகிறது. இவர்களுடன் இணைந்து Cinnamon Life, Maharaja Broadcasting Corporation, Maya Hive, Lipton மற்றும் பல முன்னணி நிறுவனங்கள் கைகோர்த்துள்ளன.
இந்தச் சவாரி நிகழ்வில் பங்கேற்க விரும்புவோர் www.ridecolombo.com என்ற இணையதளத்தின் ஊடாகப் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி இம்மாதம் 28 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
பெண்களின் சுதந்திரம், வலிமை மற்றும் ஒற்றுமையின் அடையாளமாகத் திகழும் இந்தப் பயணத்தில் இணைந்து மாற்றத்தின் சக்கரமாகத் திகழுமாறு அனைத்துப் பெண்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



