ஈரான் உடனான மோதல் முற்றி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது உயர்மட்ட ராணுவத் தளபதி ஜெனரல் டான் கெய்ன் ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக வெளியான செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
அமெரிக்காவின் பிரபல நாளிதழான ‘வாஷிங்டன் போஸ்ட்’ மற்றும் ‘ஆக்சியோஸ்’ (Axios) இணையதளம் வெளியிட்ட செய்திகளின்படி, ஈரானைத் தாக்கினால் அமெரிக்கா ஒரு நீண்ட காலப் போரில் சிக்கிக்கொள்ள நேரிடும் என்றும், அமெரிக்க வீரர்களுக்கு அதிக உயிர்ச்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஜெனரல் கெய்ன் அதிபரை எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, இஸ்ரேல் மற்றும் உக்ரைன் போன்ற நட்பு நாடுகளுக்கு வழங்கப்பட்ட ராணுவ உதவிகளால் அமெரிக்காவின் வெடிமருந்து கையிருப்பு (munitions stockpiles) குறைந்துள்ளதாகவும், இது ஈரானின் எதிர் தாக்குதலைச் சமாளிப்பதில் சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் கெய்ன் கவலை தெரிவித்ததாக அந்த அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
இந்தச் செய்திகளை “போலியான ஊடகச் செய்திகள்” என்று சமூக வலைதளப் பதிவில் பதிவிட்டுள்ள அதிபர் ட்ரம்ப், ஜெனரல் கெய்ன் ஈரானுக்கு எதிரானப் போரை “எளிதில் வெல்ல முடியும்” என்று நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“கெய்னுக்குத் தெரிந்தது ஒன்றே ஒன்றுதான்: அது எப்படி வெற்றி பெறுவது என்பது மட்டுமே. அவருக்கு உத்தரவிடப்பட்டால், அவர் படையை முன்னின்று நடத்துவார்” என்று ட்ரம்ப் பாராட்டியுள்ளார். மேலும், ஈரானுடனான போர் குறித்த செய்திகள் அனைத்தும் திட்டமிட்டுத் தவறாக எழுதப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தளபதி அலுவலகத்தின் விளக்கம்
இந்த விவகாரம் குறித்து ஜெனரல் கெய்னின் அலுவலகம் விடுத்துள்ள விளக்கத்தில், நாட்டின் பாதுகாப்பு முடிவுகளை எடுக்கும் சிவில் தலைவர்களுக்குத் தேவையான ராணுவ விருப்பங்கள் (military options), அதன் விளைவுகள் மற்றும் அதனால் ஏற்படும் அபாயங்கள் குறித்துத் தெளிவுபடுத்துவதே தளபதியின் பணி என்று தெரிவித்துள்ளது.
ஈரான் தனது அணுசக்தி மற்றும் ஏவுகணை திட்டங்கள் தொடர்பான அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்கவில்லை என்றால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று ட்ரம்ப் தொடர்ந்து எச்சரித்து வருகிறார். இதற்காக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகள் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளன.
மறுபுறம், பேச்சுவார்த்தைக்குத் தாங்கள் தயாராக இருப்பதாகவும், ஆனால் அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அதற்குப் பதிலடி கொடுத்துத் தற்காத்துக் கொள்வோம் என்றும் ஈரான் அறிவித்துள்ளது. இந்தச் சூழலில், அமெரிக்காவின் உள்மட்ட ராணுவ ஆலோசனைகள் குறித்த செய்திகள் சர்வதேச அளவில் உற்றுநோக்கப்படுகின்றன.


