கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் சமூக மேம்பாட்டுத் திட்டங்களை வலுப்படுத்தும் நோக்கில், புதிய நியமனங்கள் மற்றும் இடர் நிவாரண உதவிகள் வழங்கும் விசேட நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
பிரஜாசக்தி தலைவர்களுக்கான நியமனங்கள்:
கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுகளிலும் மக்கள் பணிகளை முன்னெடுப்பதற்காக 43 பிரஜாசக்தி தலைவர்களுக்குப் புதிய நியமனங்கள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன. இதன்மூலம் கிராம மட்டத்திலான சமூகப் பணிகள் மேலும் உத்வேகம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் ஏற்பட்ட ‘டித்வா’ புயல் காரணமாக கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் பல குடும்பங்கள் வாழ்வாதார பாதிப்புகளை எதிர்கொண்டன. இதனைக் கருத்திற்கொண்டு, பாதிக்கப்பட்ட 435 குடும்பங்களைச் சேர்ந்த 701 மாணவர்களின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அவர்களுக்குக் காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கடல்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன், கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர் மருங்கன் மோகன் மற்றும் கரைச்சி பிரதேச செயலாளர் முகுந்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
இவர்களுடன் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.



