ஜூட் சமந்த
சிலாபம், ஆராச்சிகட்டுவ பகுதியில் 7ஆம் தரத்தில் கல்வி பயிலும் 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர், இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை சிலாபம் பொலிஸாரால் கண்டறியப்பட்டுள்ளது.
தனது பெற்றோருடன் அடிக்கடி முரண்பட்டுக் கொண்டு, வன்முறையான முறையில் நடந்து கொண்ட அந்தச் சிறுமியை, அதற்கான காரணத்தைக் கண்டறிய சிலாபம் சட்ட வைத்திய அதிகாரியிடம் பொலிஸார் ஒப்படைத்தனர்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளின் பின்னரே, அந்தச் சிறுமி இதற்கு முன்னர் இரண்டு முறை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக சிறுமி சிலாபம் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் விரிவான வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார்.
உறவினர் செய்த அத்துமீறல்
சிறுமி வழங்கிய வாக்குமூலத்தின் படி, முதன்முதலில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி நாத்தாண்டியா – வலஹாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த அவரது 37 வயதுடைய உறவினர் ஒருவரால் அவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.
தனது வீட்டில் வைத்து இந்த அத்துமீறலைச் செய்த அந்த நபர், இது குறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவதாகச் சிறுமியை மிரட்டியதுடன், அவருக்கு 500 ரூபாய் பணத்தையும் கொடுத்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக மாரவில பொலிஸாரால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மாரவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
மற்றொரு சம்பவமாக, கடந்த 2025 ஜூலை 05 ஆம் திகதி நாவலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த தனது காதலனுடன் இரண்டு சந்தர்ப்பங்களில் உடலுறவு கொண்டதாகச் சிறுமி தெரிவித்துள்ளார். தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக அவர் வாக்குறுதி அளித்ததால் இந்த விடயத்தை மறைத்ததாகவும், அந்தச் சமயத்தில் தனது தாய் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றிருந்ததாகவும் சிறுமி குறிப்பிட்டுள்ளார். இந்தச் சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன், சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது அவரது தாயின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவுகளுக்கு அமைய, அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


