ஜூட் சமந்த
பிங்கிரிய – போவத்தையிலிருந்து ரஸ்நாயக்கபுர வரையான வீதியில் தெதுரு ஓயாவிற்கு குறுக்கே அமைந்துள்ள “கடிகாவ பாலம்” (Kadigawa Bridge), ‘டிட்வா’ (Ditwa) சூறாவளிக்குப் பின்னர் பாரிய சேதமடைந்து தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுவதாக பிரதேசவாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
‘டிட்வா’ சூறாவளி நிலவிய காலப்பகுதியில், தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் அனைத்து வான்கதவுகளும் திறக்கப்பட்டன. இதனால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில் சிக்கி இந்தப் பாலம் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது. பாலத்தின் பாதுகாப்புத் தூண்களின் அடிப்பகுதி (Foundation) முழுமையாக அரிப்புக்குள்ளாகியுள்ளதை அவதானிக்க முடிகிறது.
மேலும், வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பாரிய மரக்கட்டைகள் பாலத்தின் அடியில் சிக்கியுள்ளன. எதிர்வரும் மழைக்காலத்திற்கு முன்னதாக இந்த மரக்கட்டைகளை அகற்றி பாலத்தைப் பாதுகாக்கத் தவறினால், பாலம் பாரிய ஆபத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சேதமடைந்துள்ள அரச கட்டமைப்புக்கள்
பாலத்திற்கு அருகில் தெதுரு ஓயா ஆற்றின் கரை கடுமையாக அரிப்புக்குள்ளாகியுள்ளது. இதன் காரணமாக, அங்கு அமைக்கப்பட்டிருந்த அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்குச் சொந்தமான நீர் அளவீட்டு கருவி மற்றும் நீர்வளச் சபையின் நீர்ப்பரேற்று நிலையம் என்பனவும் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சூறாவளி அனர்த்தம் ஏற்பட்டு சுமார் மூன்று மாதங்கள் கடந்துள்ள போதிலும், சேதமடைந்த பாலத்தைச் சீரமைக்கவோ அல்லது அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைப் புனரமைக்கவோ இதுவரை எந்தவொரு அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பிரதேசவாசிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
இந்த நிலை தொடர்ந்தால் கடிகாவ பாலம் எந்நேரமும் சரிந்து விழக்கூடும் எனவும், அவ்வாறு நேர்ந்தால் பிங்கிரிய மற்றும் ரஸ்நாயக்கபுர இடையிலான போக்குவரத்துத் தொடர்புகள் முழுமையாகத் துண்டிக்கப்படும் எனவும் மக்கள் எச்சரிக்கின்றனர்.
எனவே, பாரிய அனர்த்தம் ஒன்று ஏற்படுவதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகக் தலையிட்டு பாலத்தைச் சீரமைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





