ஜூட் சமந்த
35 கிராம் 474 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளைக் கைவசம் வைத்திருந்ததோடு, அதனை வியாபாரம் செய்த குற்றத்திற்காக ஒருவருக்குச் சிலாபம் மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. மேல் நீதிமன்ற நீதிபதி நயோமி விக்ரமசேகரவினால் கடந்த 6ஆம் திகதி இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டவர் வென்னப்புவ – கிரிமெட்டியான வத்த பிரதேசத்தைச் சேர்ந்த எம்.ஏ. கசுன் விமங்க என்பவர் ஆவார்.
கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் திகதி அல்லது அதற்கு அண்மைய ஒரு நாளில், கிரிமெட்டியான வத்த பகுதியில் வைத்து வென்னப்புவ பொலிஸாரால் குறித்த நபர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபருக்கு எதிராக போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் அதனை வியாபாரம் செய்தமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரால் சிலாபம் மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
வழக்கு விசாரணைகளின் முடிவில், சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டதையடுத்து, நீதிபதி அவருக்கு இந்த ஆயுள் தண்டனையை வழங்கி உத்தரவிட்டார்.


