(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
புத்தளம் அல்-ஹசனாத் வீதி மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக மர்ம நபர்களால் சிறுவர்களைக் கடத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளியாகும் தகவல்கள் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை (10) காலை, அல்-ஹசனாத் எட்டாவது ஒழுங்கையில் அமைந்துள்ள அல்-ஹசனாத் பள்ளிவாசலில் இயங்கும் குர்ஆன் மத்ரஸாவிற்குச் சென்றுவிட்டு இரண்டு சிறுவர்கள் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். இதன்போது, முகக்கவசம் அணிந்திருந்த நான்கு மர்ம நபர்கள் அச்சிறுவர்களைத் துரத்திச் சென்றுள்ளனர்.
சாமர்த்தியமாகச் செயற்பட்ட சிறுவர்கள் அங்கிருந்து ஓடித் தப்பியுள்ளனர். பாதையோரத்தில் வெள்ளை நிற வாகனம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும், அந்த வாகனத்தில் வந்தவர்களே தங்களைத் துரத்தியதாகவும் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேபோன்றதொரு கடத்தல் முயற்சி கடந்த வாரமும் இதே வீதியில் காலை வேளையில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவங்கள் குறித்து கருத்துத் தெரிவித்த அல்-ஹசனாத் பள்ளிவாசலின் பேஷ் இமாம், இச்சம்பவங்கள் உண்மை என்பதை உறுதிப்படுத்தியதோடு, பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் இந்த அச்சுறுத்தல் நிலைமை தொடர்பில் பெற்றோர்கள் மற்றும் ஊர் மக்கள் கடும் கவலை அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக, புத்தளம் மாநகர மேயர், புத்தளம் நகர பள்ளிவாசல் நிர்வாகத்தினர், புத்தளம் பொலிஸார் ஆகியோரின் கவனத்திற்குத் தற்பொழுது கொண்டு செல்லப்பட்டுள்ளது:
பாதுகாப்புத் தரப்பினர் இச்சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து, இப்பகுதிகளில் ரோந்து நடவடிக்கைகளை அதிகரிப்பதன் மூலம் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறுவர்கள் மத்ரஸா அல்லது பாடசாலைகளுக்குச் செல்லும்போதும், வீடு திரும்பும்போதும் அவர்கள் தனியாகச் செல்வதைத் தவிர்த்து, பெரியவர்களின் துணையுடன் செல்வதை உறுதிப்படுத்துமாறு சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்துகின்றனர்.


