கல்பிட்டி, பத்தலங்குண்டுவ தீவில் தங்கியிருந்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த தனது மகன் மாயமாகி 4 மாதங்கள் கடந்தும், பொலிஸார் இது குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை என சிலாபம் – புஞ்சி வலத்தவ பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய எம்.ஏ. ஸ்ரீயாணி பிரேமலதா என்பவர் குற்றம் சாட்டியுள்ளார்.
காணாமல் போயுள்ள பி.ஆர். சஞ்சீவ விக்ரமசிங்க (38) எனும் மூன்று பிள்ளைகளின் தந்தை, கடந்த 15 ஆண்டுகளாக பத்தலங்குண்டுவ தீவில் தனியாக வசித்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் திகதி ஊருக்கு வந்துவிட்டு மீண்டும் தீவுக்குச் செல்வதாகக் கூறிச் சென்றவர், அன்று மாலை அங்குள்ள சிலருடன் இணைந்து மது விருந்து ஒன்றில் பங்கேற்றுள்ளார். அந்த விருந்தில் கடற்படையைச் சேர்ந்த இருவர் மற்றும் தீவைச் சேர்ந்த மேலும் சிலர் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் அவர் குறித்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
படுகொலை சந்தேகமும் பொலிஸ் மெத்தனமும்
இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட தாய் தெரிவிக்கும்போது, “எனது மகன் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை. விருந்து முடிந்து அவர்கள் அனைவரும் ஒரு படகில் ஏரிப் பகுதிக்குச் சென்றபோது, எனது மகன் ஏரியில் விழுந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் எவரும் அவரைக் காப்பாற்றவில்லை. அவரது உடல் எங்கோ ஓரிடத்தில் புதைக்கப்பட்டுள்ளதாகவே நான் கருதுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கல்பட்டி பொலிஸ் நிலையம், புத்தளம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) ஆகியவற்றில் பலமுறை முறையிட்டும் இதுவரை முறையான விசாரணைகள் எதுவும் இடம்பெறவில்லை என அவர் கவலை வெளியிட்டுள்ளார். கல்பட்டி பொலிஸார் கடற்படை வீரர்கள் இருவர் உட்பட சிலரிடம் வாக்குமூலம் பெற்ற போதிலும், அந்த நேரத்தில் தன்னை அனுமதிக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தனது மகன் உயிருடன் இருந்தால் கண்டிப்பாகத் தொடர்பு கொண்டிருப்பார் என்று கூறும் அத்தாய், பொலிஸார் ஏன் இந்த விடயத்தில் மௌனம் காக்கிறார்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். “குறைந்தபட்சம் எனது மகன் இறந்துவிட்டான் என்பதற்கான மரணச் சான்றிதழாவது கிடைத்தால், அவருக்கான இறுதிச் சடங்குகளை எம்மால் செய்ய முடியும்” என அவர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


