ஜூட் சமந்த
புத்தளம் மற்றும் சிலாபம் – வட்டக்கல்லியப் பகுதிகளில் “துரித மீன்பிடி” (Running Gear) முறையில் ஈடுபடும் மீனவர்கள், தங்களுக்குத் தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முறையான வழிமுறை இல்லாததால் தமது வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த மீனவர்கள் வலைகளைப் பயன்படுத்தாமல், தூண்டில் முறையைப் பயன்படுத்தி கரைப்பகுதியிலிருந்து 30 முதல் 50 கடல் மைல் தொலைவிலுள்ள ஆழ்கடலுக்குச் சென்று, ஏற்றுமதி சந்தையை இலக்காகக் கொண்ட டூனா, கெலவல்லா மற்றும் பலயா போன்ற மீன் வகைகளைப் பிடிக்கின்றனர். ஏனைய மீனவர்கள் மண்ணெண்ணெய் பயன்படுத்தும் வேளையில், இவர்கள் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட, புகை மற்றும் எண்ணெய் கசிவு ஏற்படுத்தாத சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத பெட்ரோல் என்ஜின்களையே பயன்படுத்துகின்றனர்.
புத்தளம் மாவட்டத்தில் இவ்வாறான பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்ட 200க்கும் மேற்பட்ட படகுகள் தற்போது எரிபொருள் இன்றி கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து மீனவர் ரொஷான் பெர்னாண்டோ கூறுகையில், “எமது படகுகளுக்கு ஒரு நாளைக்குக் குறைந்தது 60 லீட்டர் பெட்ரோல் தேவைப்படுகிறது. ஆனால் எரிபொருள் கூட்டுத்தாபனம் வெறும் 5 லீட்டர் மாத்திரமே வழங்க முடியும் எனக் கூறுகிறது” எனத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
மீன்பிடித் திணைக்களம் வழங்கியுள்ள அனுமதிப்பத்திரத்தில் இந்த இயந்திரங்கள் பெட்ரோல் மூலம் இயங்குபவை எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், அதிகாரிகள் தங்களுக்குத் தேவையான எரிபொருளை வழங்க மறுப்பதாக மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். “குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 30 லீட்டர் பெட்ரோல் வழங்கினால் கூட, நாம் ஒரு நாள் விட்டு ஒரு நாளாவது கடலுக்குச் செல்வோம்” என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 10 நாட்களாகத் தொழிலுக்குச் செல்ல முடியாததால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
சிலாபம் வட்டக்கல்லியவைச் சேர்ந்த சஞ்சீவ மதுவந்த மற்றும் கயான் சதுரங்க ஆகியோர் கருத்துத் தெரிவிக்கையில், தங்களுக்கு வேறு தொழில் தெரியாது எனவும், 10 நாட்களாக வருமானம் இல்லாததால் பிள்ளைகள் பட்டினியால் வாடுவதாகவும் வேதனை தெரிவித்தனர்.
கார்மல் மாதா மீனவர் சங்கத்தின் உறுப்பினர்கள் உட்படப் பாதிக்கப்பட்ட அனைத்து மீனவர்களும், இந்த விவகாரத்தில் அரசாங்கம் தலையிட்டு தங்களுக்கு உரிய எரிபொருள் வசதியைச் செய்து தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.




