ஜூட் சமந்த
சிலாபம், காக்கப்பள்ளி பகுதியில் உள்ள சிகையலங்கார நிலையம் ஒன்றில், 9 வயது மற்றும் 11 மாதங்கள் உடைய சிறுவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் இரண்டு சந்தேகநபர்களை சிலாபம் பொலிஸாரின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் கைது செய்துள்ளது.
குறித்த சிகையலங்கார நிலையத்தினுள் சிறுவன் துஷ்பிரயோகம் செய்யப்படும் வீடியோ காட்சிகள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வந்தன. இந்த வீடியோவை அவதானித்த நபர் ஒருவர் பொலிஸ் தலைமையகத்தில் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைவாக, சந்தேகநபர்களை உடனடியாகக் கைது செய்யுமாறு சிலாபம் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், பாதிக்கப்பட்ட சிறுவனையும் அவரது தந்தையையும் அடையாளம் கண்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுவன் வழங்கிய வாக்குமூலத்தின்படி, இந்தச் சம்பவம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்றுள்ளது என்பது தெரியவந்துள்ளது. சிறுவன் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 54 வயதுடைய ஒருவரும், அதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 58 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் காக்கப்பள்ளி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுவன் மருத்துவப் பரிசோதனைகளுக்காக சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.


