ஈரான் மீதான போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்து வருகின்றன. இந்த விலை உயர்விலிருந்து உள்நாட்டு நுகர்வோர்களைப் பாதுகாக்கவும், பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும் வியட்நாம் நிதி அமைச்சு அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது.
உள்நாட்டுச் சந்தையில் எரிபொருள் விலையை கட்டுக்குள் வைப்பதற்காக, குறிப்பிட்ட சில வரிகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அந்நாட்டு நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
எரிபொருட்கள் மீதான சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரி மற்றும் விசேட கொள்வனவு வரி ஆகியவற்றை வியட்நாம் நிதி அமைச்சு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது.
ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் தகவல்படி, இந்த வரி விலக்கு நடவடிக்கைகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் என்றும், எதிர்வரும் ஏப்ரல் 15-ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என்றும் நிதி அமைச்சின் உத்தியோகபூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஈரான் மீதான போரினால் உலக சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் தொடர்ந்தும் அதிகரித்து வரும் நிலையில், வியட்நாம் தமது உள்நாட்டு சந்தையை ஸ்திரப்படுத்துவதற்காக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக எரிபொருள் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், உலக நாடுகள் பலவற்றிலும் பணவீக்கத்தை அதிகரித்துள்ளன. இந்த இக்கட்டான சூழலில், வியட்நாமின் இந்த வரி குறைப்பு நடவடிக்கை அந்நாட்டு போக்குவரத்து மற்றும் விமானத் துறைக்கு பெரும் நிம்மதியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


