குவைத் விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த தாக்குதலில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்றாலும், பயணிகள் விமான நிலையம் மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
குவைத் சர்வதேச விமான நிலையம் மீது, ஒன்றுக்கும் மேற்பட்ட தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை அந்நாட்டு செய்தி ஊடகமான ‘KUNA’ தெரிவித்திருக்கிறது.
இந்த தாக்குதலில், விமான நிலையத்தின் ரேடார் அமைப்பு பாதிக்கப்பட்டிருக்கிறது. உயிரிழப்பு, காயம் ஏற்படவில்லை என்பதை குவைத் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் உறுதி செய்திருக்கிறது.
இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது குறித்த விரிவான விசாரணையை பாதுகாப்பு அமைப்புகள் தொடங்கியுள்ளன. ரேடார் அமைப்பு சேதமடைந்துள்ளதால், விமானப் போக்குவரத்து மற்றும் சிக்னல் பெறுவதில் தற்காலிகத் தடைகள் அல்லது தாமதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கனவே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், குவைத் மீதான இந்தத் தாக்குதல் சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.
ஏற்கெனவே சவுதி, அமீரகம் உள்ளிட்ட நாடுகளின் விமா நிலையங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில், தற்போது நடந்திருக்கும் தாக்குதல், மத்திய கிழக்கில் இன்னும் பதற்றம் கொஞ்சமும் குறையவில்லை என்பதை வெளிப்படுத்தியிருக்கிறது.


