மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம், உலகளாவிய வர்த்தக மற்றும் எரிசக்தி சந்தைகளில் புதிய அச்சத்தை உருவாக்கியுள்ளது.
இந்த சூழலில் ஈரான் ஏற்கனவே ஹார்மூஸ் நீரிணையை மொத்தமாக கைப்பற்றி தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலையில் தற்போது அடுத்தாக ஒரு முக்கிய வழித்தடத்தை முடக்க உள்ளதாக எச்சரித்துள்ளது. அதுதான் Bab al-Mandab Strait, இது உலக வரைபடத்தில் சிறியதாகத் தோன்றினாலும், உலக பொருளாதாரத்தில் இந்த நீரிணை மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.
ஈரான் இந்த பாப் அல் மண்டப் பாதையை முடக்கினால் சவுதி அரேபியாவின் வர்த்தகம், பொருளாதாரம், வருமானம் என அனைத்தும் பாதிக்கும் அபாயம் உள்ளது. இதேபோல் ஐரோப்பா, ஆப்பிரிக்காவின் பொருளாதாரத்தை முடக்கும் அபாயம் இந்த வழித்தடத்திக்கு உள்ளது.
அமெரிக்காவின் எரிசக்தித் தகவல் நிர்வாகத்தின் தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டில் தினமும் சுமார் 4.1 மில்லியன் பேரல் பெட்ரோலியம் பொருட்கள் இந்த நீரிணை வழியாக சென்றுள்ளது. இது ஹார்மூஸ் வழியாக செல்லும் 20 மில்லியன் பேரலுடன் ஒப்பிடும்போது குறைவாக இருந்தாலும், முக்கியத்துவம் வாய்ந்தாக உள்ளது எப்படி?
இது ஹார்மூஸ் வழித்தடம் முடங்கும் போது எண்ணெய் ஏற்றுமதிக்கான மாற்று பாதையாகவும் பாப் அல் மண்டப் நீரிணை செயல்படுகிறது. சவுதி அரேபியாவின் Yanbu துறைமுகத்திற்கு தினமும் சுமார் 7 மில்லியன் பேரல் எண்ணெய் குழாய் வழியாக கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து, அது செங்கடல் வழியாக பாப் அல்-மண்டப் நீரிணையை கடந்து உலக சந்தைகளுக்கு அனுப்பப்படுகிறது. தற்போது இது முடக்கப்பட்டால் சவுதியின் பெரும்பகுதி வர்த்தகம் முடங்கும்.
மத்திய கிழக்கின் எரிசக்தி பொருளாதாரத்தில், சவுதி அரேபியா மிக முக்கியமான நாடாக உள்ளது. இந்த நாட்டின் எண்ணெய் ஏற்றுமதியை உலக சந்தைகளுக்கு கொண்டு செல்லும் முக்கிய கடல் வழித்தடங்களில் ஒன்றாக பாப் அல் மண்டப் நீரிணை திகழ்கிறது.
குறிப்பாக ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளுக்கு தினமும் மில்லியன் கணக்கான பேரல் எண்ணெய் இந்த வழியாக அனுப்பப்படுகிறது. இதனால், இந்த நீரிணையின் பாதுகாப்பு சவுதி பொருளாதாரத்திற்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய விஷயமாகும். ஹார்மூஸ் நீரிணை பாதையில் பதற்றம் அல்லது தடைகள் உருவானால், பாப் அல்-மண்டப் நீரிணை முக்கிய மாற்று பாதையாக சவுதி அரேபியாவுக்கு செயல்படுகிறது. சவுதி அரேபியாவின் மேற்குக் கடற்கரையில் உள்ள துறைமுகங்களுக்கு எண்ணெய் குழாய்கள் மூலம் கொண்டு எரிவாயு, கச்சா எண்ணெய் செல்லப்பட்டு, அங்கிருந்து செங்கடலில் இந்த நீரிணை வழியாக உலக சந்தைகளுக்கு சவுதி அரேபியா ஏற்றுமதி செய்து வருகிறது.
இதனால், ஹார்முஸ் பாதை பாதிக்கப்பட்டாலும், சவுதி தனது ஏற்றுமதியை தொடரும் வாய்ப்பு பாப் அல் மண்டப் நீரிணை தந்தது. ஆனால் தற்போது ஈரான் ஹார்மூஸ் மற்றும் பாப் அல் மண்டெப் ஆகிய இரு முக்கிய கடல் வழித்தடங்களும் ஒரே நேரத்தில் முடக்கும் காரணத்தால், சவுதி அரேபியாவின் எண்ணெய் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படும். இது உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் பெரிய பாதிப்பை உருவாக்கும்.
கச்சா எண்ணெய் மட்டுமல்லாமல், உலகளாவிய சரக்கு வர்த்தகத்திலும் பாப் அல் மண்டப் நீரிணை முக்கிய பங்கு வகிக்கிறது. சூயஸ் கால்வாய் வழியாக ஐரோப்பா மற்றும் ஆசியா இடையே பயணிக்கும் கப்பல்கள், இந்த நீரிணையை கடக்கின்றன. இதனால், உலக வர்த்தகத்தின் சுமார் 12% சரக்கு போக்குவரத்து இந்த பாதையை சார்ந்துள்ளது. இந்த வழித்தடம் பாதிக்கப்பட்டால், அதன் தாக்கம் மத்திய கிழக்கை மட்டுமல்லாது, உலகம் முழுவதும் எதிரொலிக்கும்.
பாப் அல்-மண்டப் நீரிணையுடன் ஈரான் எந்த வகையிலும் நேரடியாக கடற்கரை இணைப்பு இல்லாத போதிலும், ஈரான் இந்த பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இதற்கு காரணம், ஈரானுக்கு பக்கபலமாக இருக்கும் யெமன் நாட்டில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு. இந்த ஹவுதி அமைப்பு, கடந்த 2023-2024 காலகட்டத்தில் செங்கடலில் இஸ்ரேல் தொடர்புடைய கப்பல்களை குறிவைத்து பல தாக்குதல்கள் நடத்தியுள்ளது. தற்போது ஈரானுக்கு ஆதரவமாக, இஸ்ரேல் ராணுவ இலக்குகளையும் தாக்க தொடங்கியுள்ளது. இதனால், ஈரான்-யெமன் கூட்டணி எந்த நேரத்திலும் பாப் அல்-மண்டப் நீரிணையை கைப்பபற்றி முடக்க கூடும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது. பாப் அல்-மண்டப் நீரிணை முடக்கப்பட்டால் சூயஸ் கால்வாய் வழியாக ஆசியாவுக்கு நடக்கும் அனைத்து வர்த்தகமும் பாதிக்கப்படும்.
ஏற்கனவே ஹார்மூஸ் பகுதியில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலைகளை ஒரு போரலுக்கு 110 டாலர் வரையில் உயர்ந்துள்ளன. அமெரிக்காவில் பெட்ரோல் விலை ஒரு கேலனுக்கு 4 டாலரை கடந்துள்ளது. மேலும் ஜேபி மோர்கன் சேஸ் ஆய்வாளர்கள், இந்த நிலை தொடர்ந்தால் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 150 டாலர் வரை உயரக்கூடும் என கணித்துள்ளனர். மேலும் குறுகிய காலத்தில் $120-$130 இடையே நிலைத்திருக்கலாம் என்றும் கணித்துள்ளனர்.
பாப் அல்-மண்டப் நீரிணையும் பாதிக்கப்பட்டால், இந்த விலை மேலும் அதிகரித்து 200 டாலரை கூட தாண்டும் அபாயம் இருப்பதாக முன்பு எச்சரிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை ஹூதி அமைப்பு பாப் அல்-மண்டப் நீரிணையில் கப்பல்களை நேரடியாக தாக்கவில்லை. இருப்பினும், நிலைமை வேகமாக மாறக்கூடியதாக இருப்பதால், உலக சந்தைகள் தொடர்ந்து கவனத்தில் வைத்துள்ளன. இதுக்குறித்து ஈரானின் புதிய உச்ச தலைவர் முஜ்தபா கமேனி-யின் ஆலோசகரான அலி அக்பர் விலாயதி போட்ட டிவீட் தான் தற்போது பதற்றத்திற்கு முக்கியமான காரணமாக விளங்குகிறது.


