சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் நாட்டில் இடம்பெற்ற பல்வேறு விபத்துச் சம்பவங்களினால் சுமார் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டில் மரணங்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் மாத்திரம் 53 பேர் பலியாகியுள்ளனர். குறிப்பாக, புத்தாண்டுக்கு முந்தைய நாளான ஏப்ரல் 13 மற்றும் ஏப்ரல் 10 ஆகிய திகதிகளிலேயே அதிகளவிலான விபத்து மரணங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதிக வேகம், மதுபோதையில் வாகனம் செலுத்துதல் மற்றும் கவனயீனம் ஆகியவையே இந்த உயிரிழப்புகளுக்குப் பின்னாலுள்ள பிரதான காரணங்களாகக் கூறப்படுகின்றன.
இதேவேளை கொண்டாட்டங்களுக்காக நீர்நிலைகளுக்குச் சென்றவர்களில் 27 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். பாதுகாப்பற்ற இடங்களில் நீராடியமை மற்றும் நீர்நிலைகளின் தன்மை அறியாது இறங்கியமை இந்தத் துயரங்களுக்குக் காரணமாகியுள்ளது.
கடந்த ஆண்டுகளின் புத்தாண்டு கால புள்ளிவிபரங்களோடு ஒப்பிடுகையில், இந்த வருடம் வீதி விபத்துக்கள் மற்றும் நீரில் மூழ்கிய சம்பவங்களினால் ஏற்பட்ட மரணங்கள் பாரிய அளவில் அதிகரித்துள்ளன.
“கொண்டாட்டங்களின் போது பொதுமக்கள் போதியளவு அவதானத்துடன் செயற்படாததே இவ்வாறான உயிரிழப்புகள் அதிகரிக்கக் காரணமாகியுள்ளது. எதிர்காலத்திலாவது வீதி ஒழுங்குவிதிகளையும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களையும் முறையாகப் பின்பற்றுவது அவசியமாகும்.”
புத்தாண்டு மகிழ்ச்சி பல குடும்பங்களில் சோகமாக மாறியுள்ள இந்தச் சூழல், சமூகப் பாதுகாப்பு குறித்த மேலதிக விழிப்புணர்வின் அவசியத்தை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளது.


