கொழும்பு – நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பு குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, திறைசேரியில் இருந்து 2.5 மில்லியன் ரூபாய் காணாமல் போயுள்ளதாகத் தெரிவித்து கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தற்போதைய நிதி உறுதியற்ற தன்மையும், வங்கித்துறையில் காணப்படும் மேற்பார்வை குறைபாடுகளும் நாட்டின் எதிர்காலத்திற்கு “பயங்கரவாதத்தை விட பாரதூரமான அச்சுறுத்தல்” என்று அவர் வாதிட்டார்.
திறைசேரி மற்றும் வர்த்தக வங்கிகளில் இருந்து நிதி திடீரென காணாமல் போகும் ஒரு “மிகவும் ஆபத்தான நிகழ்வு” குறித்து முஸ்தபா சுட்டிக்காட்டினார். தேசிய பாதுகாப்பைப் போன்றே பொருளாதார ஸ்திரத்தன்மையும் முக்கியமானது என்று வலியுறுத்திய அவர், வங்கி அமைப்பின் பாதுகாப்பு மீது சர்வதேச முதலீட்டாளர்கள் நம்பிக்கை இழந்தால், நேரடி வெளிநாட்டு முதலீடுகளை (FDI) ஈர்ப்பது சாத்தியமற்றதாகிவிடும் என்றார்.
“திறைசேரியில் உள்ள பணத்தைப் பாதுகாக்க முடியாவிட்டால், அது ஒரு பாரிய பிரச்சினையாகும். டிஜிட்டல் மயமாக்கல் முன்னெடுக்கப்பட்ட போதிலும், அங்கீகரிக்கப்படாத பணப் பரிமாற்றங்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வங்கிகள் தவறிவிட்டன,” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், வங்கி மேற்பார்வைக்காக மாதத்திற்கு 50 முதல் 100 மில்லியன் ரூபாய் வரை வசூலிக்கும் மத்திய வங்கி, அனைத்துத் துறைகளிலும் ஏற்பட்டுள்ள பாரிய குறைபாடுகளைக் கண்காணிக்கத் தவறிவிட்டதாக அவர் கடுமையாகச் சாடினார்.
இவ்வாறான கட்டமைப்புத் தோல்விகளைச் சரிசெய்ய, அரசாங்கம் உடனடியாக ஒரு விசேட பணிக்குழுவை (Special Task Force) நியமிக்க வேண்டும் என்று முஸ்தபா வலியுறுத்தினார். நிறுவன ரீதியான தோல்விகளுக்கு உயர்மட்ட அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், ஜப்பானில் ஒரு ரயில் ஒரு நிமிடம் தாமதமானாலும் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்யும் கலாச்சாரத்தை உதாரணமாகக் காட்டினார்.
“அவர்கள் ஊழல்வாதிகளாக இல்லாதிருக்கலாம், ஆனால் ஒரு பதவிக்கு நியமிக்கப்பட்டு பொறுப்பை ஏற்கும் போது, அந்த நிறுவனங்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை அவர்களுக்கு உண்டு,” என்று அவர் குறிப்பிட்டார்.
அரசாங்க இயந்திரமும் நீதித்துறையும் சரியாகச் இயங்கும் பட்சத்தில், அவசரகாலச் சட்டத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவது தேவையற்றது என அவர் சவால் விடுத்தார்.
சாதாரண சட்டங்களை இடைநிறுத்துவதன் மூலம் அவசரகாலச் சட்டம் இயங்குவதால், இது பொதுமக்களிடையே “அடக்குமுறை குறித்த அச்சத்தை” உருவாக்குவதாக அவர் சுட்டிக்காட்டினார். அண்மைய புயல் பாதிப்புகளுக்குப் பின்னரான மீட்புப் பணிகளுக்கு ஏன் இத்தகைய அதிகாரங்கள் தேவைப்படுகின்றன என்று கேள்வி எழுப்பிய அவர், புனரமைப்புப் பணிகளுக்கு சாதாரண சட்டக் கட்டமைப்புகளே போதுமானவை என்றார்.
கடந்த கால அரசாங்கங்களையோ அல்லது “75 வருட சாபத்தையோ” குறை கூறுவதை அரசாங்கம் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று முஸ்தபா கேட்டுக்கொண்டார். கடந்த காலத் தவறுகளைச் சரி செய்வதற்காகவே தற்போதைய அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதை அவர் சபைக்கு நினைவூட்டினார்.
“ஒவ்வொரு முறையும் எதிர்க்கட்சியின் வரலாற்றைப் பற்றிப் பேசாதீர்கள்… பொறுப்பைச் சரியாக ஏற்றுக்கொண்டு, உண்மையான மாற்றத்தை உருவாக்குங்கள்,” என்று கூறி அவர் தனது உரையை நிறைவு செய்தார்.


