திட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியேற்றப் பணிகளைத் துரிதப்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதியின் பணியாட்டொகுதி பிரதானி மற்றும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் ஆகியோர் இணைந்து முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர்.
ஜனாதிபதி அவர்களின் தலைமையில் மாவட்ட மட்டத்தில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் எட்டப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
தீர்மானத்தை அறிவிக்க காலக்கெடு
திட்வா சூறாவளி அனர்த்தத்தினால் வீடுகளை முழுமையாக இழந்த குடும்பங்கள் மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) அதிக ஆபத்துள்ள வலயங்களில் வசிப்பதாக அடையாளப்படுத்தப்பட்ட குடும்பங்களின் மீள்குடியேற்றம் குறித்து இந்த அறிவித்தல் கவனம் செலுத்துகிறது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களில் ஒரு பகுதியினர், தங்களின் மீள்குடியேற்றம் அல்லது இழப்பீடு தொடர்பான இறுதித் தீர்மானத்தை இதுவரை உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கவில்லை எனத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தங்களது விருப்பத்தேர்வு அல்லது தீர்மானத்தை இதுவரை அறிவிக்காத குடும்பங்கள், எதிர்வரும் 2026 ஜூன் மாதம் 15 ஆம் திகதிக்குள் வழங்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திகதிக்குள் தங்களது தீர்மானத்தை எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிப்பது அவசியம் என மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குப் பின்னர் சமர்ப்பிக்கப்படும் கோரிக்கைகள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் எச்சரித்துள்ளார்.
“2026.06.15 ஆம் திகதிக்குப் பின்னர் தங்களது தீர்மானத்தை அறிவிக்கும் குடும்பங்கள், முழுமையான வீட்டு வசதி இழப்பீட்டுக்கோ அல்லது அரசினால் முன்னெடுக்கப்படும் மீள்குடியேற்றத் திட்டங்களுக்கோ உள்வாங்கப்பட மாட்டார்கள்.”
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான விழிப்புணர்வினை உடனடியாக வழங்குமாறும், மீள்குடியேற்றப் பணிகளில் எவ்வித தாமதமும் ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது பிரதேச செயலகங்கள் அல்லது கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக இது தொடர்பான மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அந்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



