இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் எபோலா வைரஸ் நோய் தொடர்பான சந்தேகத்திற்குரிய ஒரு சம்பவம் பதிவாகியுள்ளமை சுகாதாரத் துறையினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உகாண்டாவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவிலிருந்து ஏர் அரேபியா விமானத்தின் மூலம் வெள்ளிக்கிழமை காலை ஜெய்ப்பூரை வந்தடைந்தார். வழக்கமான விமான நிலைய சுகாதாரப் பரிசோதனையின் போது, எபோலா நோயுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் சில அறிகுறிகள் அவரிடம் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, அந்தப் பெண் உடனடியாக ஜெய்ப்பூரிலுள்ள RUHS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடுமையான தனிமைப்படுத்தல் பிரிவில் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளார்.
எனினும், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என மருத்துவ அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். RUHS மருத்துவமனையின் மேற்பார்வையாளர் டாக்டர் அனில் குப்தா, “அந்தப் பெண்ணுக்கு எபோலா உறுதியாக இருப்பதாக இதுவரை கண்டறியப்படவில்லை. நோய்க்கு ஒத்த சில அறிகுறிகள் காணப்படுகின்றன. ஆனால் ஆய்வகப் பரிசோதனை முடிவுகள் கிடைத்த பின்னரே உறுதியான தகவலை வழங்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், நோயாளியிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகள் மேலதிக ஆய்வுகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும், தொற்று நோய் மேலாண்மை நடைமுறைகளுக்கு அமைய அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
எபோலா உலகின் மிகவும் ஆபத்தான வைரஸ் நோய்களில் ஒன்றாகக் கருதப்படுவதால், இந்த சம்பவம் தொடர்பாக இந்திய சுகாதார அதிகாரிகள் மிகுந்த அவதானத்துடன் செயல்பட்டு வருவதுடன், தற்போது அனைவரின் கவனமும் ஆய்வகப் பரிசோதனை முடிவுகளின் மீதே திரும்பியுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


