முதலைப்பாளி மைதானம் இன்று எஞ்சின்களின் கர்ஜனையாலும், ரசிகர்களின் ஆரவாரத்தாலும் அதிரந்தது. இளைஞர்களின் அசாத்திய வேகத்திற்கும் விவேகத்திற்கும் களம் அமைத்துக் கொடுத்த “முதலைப்பாலி மோட்டார் பைக் ரேஸ்” (Mudalaipali Motorbike Rally) மிகவும் பிரம்மாண்டமான முறையில் இன்று அரங்கேறியது.
வழக்கமான அரசியல் மேடைகளைத் தாண்டி, துடிப்பான இளைஞர்களின் திறமைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த மோட்டார் சைக்கிள் ரேஸ் நிகழ்வில் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் NTM. தாஹிர் அவர்கள் முதன்மை அதிதியாகக் கலந்துகொண்டார்.
மைதானத்தைச் சுற்றி திரண்டிருந்த நூற்றுக்கணக்கான ரசிகர்களின் உற்சாகக் கூச்சலுக்கு மத்தியில், களம் சுவாரஷ்யத்தின் உச்சிக்கே சென்றது. இந்த அதிரடி பந்தயக் களத்திற்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்களான பைஷர் மரைக்கார், பர்மின் மற்றும் மௌலவி பஸால் இஸ்மாயீல் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் பலரும் நேரில் வருகை தந்து வீரர்களைக் குதூகலப்படுத்தினர்.
வளைந்து நெளிந்து செல்லும் மைதானப் பாதைகளில், காத்தைக் கீறிக்கொண்டு பாய்ந்த பைக்குகளையும், இளைஞர்களின் அபாரமான சாகசத் திறமைகளையும் நாடாளுமன்ற உறுப்பினர் NTM தாஹிர் அவர்கள் மிக உன்னிப்பாகக் கண்டு களித்தார். அத்தோடு நின்றுவிடாமல், போட்டியின் இறுதியில் வெற்றியீட்டிய வீரர்களுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து, அவர்களுக்கான பரிசில்கள் மற்றும் நினைவு சின்னங்களை வழங்கி கௌரவித்தார்.
இளைஞர்களின் இவ்வாறான விளையாட்டுத் திறமைகள் மற்றும் அவர்களின் எதிர்காலக் கனவுகளுக்குத் தாம் என்றும் பக்கபலமாகவிருந்து, துணை நிற்போம் என்ற உறுதியையும் மக்கள் மத்தியில் அரசியல் தலைவர்கள் இதன்போது வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.





