உலக அரசியல் அரங்கம் மீண்டும் ஒருமுறை அதிரத் தொடங்கியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பைக் கொலை செய்ய ஈரான் அண்மையில் ஒரு புதிய சதித் திட்டத்தைத் தீட்டியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை, அமெரிக்காவிற்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான 60 நாள் தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தம் முறிந்து, இரு நாடுகளும் மாறி மாறித் தாக்கிக் கொள்ளும் இக்கட்டான சூழலில், இந்த உளவுத் தகவல் உலகளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க உளவுத்துறையானது கடந்த சில வாரங்களாகவே ட்ரம்பிற்கு எதிரான ஈரானின் அச்சுறுத்தல்களைத் தீவிரமாகக் கண்காணித்து வந்த போதிலும், இந்த வாரம் இஸ்ரேல் வழங்கிய எச்சரிக்கையானது மிகவும் விசேடமானது என வாஷிங்டன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில், இது ஈரான் தற்போதைக்குத் தீட்டியுள்ள ஒரு குறிப்பிட்ட இரகசியத் திட்டத்தை அக்குவேறாக ஆணிவேறாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளது. எனினும், இந்தத் தகவலை அமெரிக்கா இன்னும் சுயாதீனமாக உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இந்த உளவுத் தகவலின் பின்னணியில் ஒரு பெரும் அரசியல் காய்நகர்த்தல் இருப்பதாக அமெரிக்க உயர் அதிகாரிகள் சிலர் சந்தேகிக்கின்றனர். ஈரானுக்கு எதிராக அமெரிக்கா இன்னும் கடுமையான இராணுவ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விரும்புவதாகவும், ட்ரம்பின் முடிவுகளைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றுவதற்காகவே இஸ்ரேல் இந்தத் தகவலை இப்போது கசியவிட்டுள்ளதாகவும் அவர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, ஈரானுடனான ட்ரம்பின் இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளை நெதன்யாகு கடுமையாக எதிர்த்து வரும் நிலையிலேயே இந்தத் திருப்பம் நிகழ்ந்துள்ளது.
“அவர்கள் அமெரிக்கத் தலைவரான என்னைத்தான் ஒழிக்க நினைக்கிறார்கள்” என்று புதன்கிழமை அன்று ட்ரம்ப் செய்தியாளர்களிடம் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். ஈரானின் கொலைப் பட்டியலில் தான் முதலிடத்தில் இருப்பதை ஒப்புக்கொண்ட அவர், “இதுவரை நான் கொஞ்சம் அதிர்ஷ்டசாலி, ஆனால் அது எவ்வளவு காலம் நீடிக்கும் என்று தெரியாது. இவர்கள் மிகவும் கொடூரமான மனிதர்கள், இந்த புற்றுநோயை நாம் ஆரம்பத்திலேயே கிள்ளியெறிய வேண்டும்” எனத் தனது பாணியில் எச்சரித்துள்ளார். அண்மையில் கொல்லப்பட்ட ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கில், “ட்ரம்ப்பை கொல்வோம்” என்ற பதாகைகளுடன் ஈரானிய மக்கள் வீதிக்கு வந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மறுபுறம், திரைக்குப் பின்னால் மற்றொரு சுவாரஸ்யமான நாடகம் அரங்கேறி வருகின்றது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே வான்வழித் தாக்குதல்கள் மீண்டும் ஆரம்பமாகி, போர்நிறுத்த உடன்படிக்கை முடிவுக்கு வந்துவிட்டதாக ட்ரம்பே அறிவித்தாலும், வரும் ஆகஸ்ட் மாத நடுப்பகுதிக்குள் ஒரு புதிய அணுஆயுத ஒப்பந்தத்தைக் கொண்டுவர இரு நாடுகளும் இரகசியமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. எந்நேரமும் ஈரான் மீது தாக்குதல் நடத்த ‘யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்’ போர்க்கப்பலில் போர் விமானங்கள் ஆயுதங்களுடன் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தாலும், இராஜதந்திர ரீதியில் இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே வாஷிங்டன் தற்போது முன்னுரிமை வழங்கி வருகின்றது. இராஜதந்திரமா அல்லது யுத்தமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


