2026 ஃபிஃபா உலகக் கிண்ண கால்பந்து தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஒட்டுமொத்த உலக இரசிகர்களையும் சீட்டின் நுனிக்கே கொண்டு வந்த இரண்டு அதிரடி காலிறுதி ஆட்டங்கள் நிறைவுக்கு வந்துள்ளன. உலகக் கிண்ண வரலாற்றில் மற்றுமொரு மறக்க முடியாத அத்தியாயத்தை எழுதும் நோக்கில் களம் புகுந்த அர்ஜென்டினா மற்றும் இங்கிலாந்து அணிகள், கூடுதல் நேரப் பரபரப்பில் தங்களது அரையிறுதி வாய்ப்பை அதிரடியாக உறுதி செய்துள்ளன.
சுவிட்சர்லாந்துக்கு எதிரான போட்டியில் அர்ஜென்டினா அணி ஆரம்பம் முதலே கடும் சவாலை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே சுவிஸ் வீரர்கள் ஆக்ரோஷமாக முன்னேறிய போதிலும், மெஸ்ஸியின் மாயாஜால கார்னர் வாய்ப்பை லாவகமாகப் பயன்படுத்திய அலெக்சிஸ் மெக் அலிஸ்டர், தலையால் முட்டி பந்தை கோல் வலைக்குள் திணித்து அர்ஜென்டினாவை முன்னிலைப்படுத்தினார். எனினும், சுவிஸ் வீரர் பிரீல் எம்போலோவின் கோல் அடிக்கும் அசுரத்தனமான முயற்சியை அர்ஜென்டினாவின்Wall என்று அழைக்கப்படும் கோல்கீப்பர் எமிலியானோ மார்டினெஸ் சாதுரியமாகத் தடுத்து நிறுத்த, அரங்கம் அதிர்ந்தது.
ஆனால், கதையின் இரண்டாம் பாதியில் சுவிஸ் வீரர் டான் என்டோயே அடித்த மின்னல் வேக கோல் ஆட்டத்தை சமநிலைக்குக் கொண்டு வந்தது. போட்டி உச்சக்கட்ட பதற்றத்தை நோக்கிய நகர்ந்த 72-வது நிமிடத்தில், சுவிஸின் நட்சத்திர வீரர் எம்போலோ இரண்டாவது மஞ்சள் அட்டை (சிவப்பு அட்டை) பெற்று மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டார். இதுவே ஆட்டத்தின் போக்கை முழுமையாக மாற்றியமைத்தது. 10 வீரர்களுடன் சுவிஸ் அணி திணறிய வேளையில், போட்டியின் கூடுதல் நேரத்தில் மைதானத்துக்குள் புகுந்த ஜூலியன் அல்வரெஸ் மற்றும் லௌடாரோ மார்டினெஸ் ஆகியோர் அடுத்தடுத்து கோல்களைப் பொழிந்து அர்ஜென்டினாவின் அரையிறுதிப் பயணத்தை 100% உறுதி செய்தனர்.
இதேவேளை, நோர்வே அணிக்கு எதிராக களம் கண்ட இங்கிலாந்து அணியும் மரண பயத்தை கண்முன்னே கண்டது என்றே கூற வேண்டும். போட்டியின் முதல் பாதியில் நோர்வேயின் ஆண்ட்ரியாஸ் ஷெல்டெரப் முதல் கோலை அடித்து இங்கிலாந்துக்கு அதிர்ச்சியளித்தார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் அணியைக் காப்பாற்ற முன்வந்த இங்கிலாந்தின் இளம் சிங்கம் ஜூட் பெல்லிங்ஹாம், முதல் பாதி முடிவதற்குள் ஒரு அதிரடி கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார்.
இரண்டாம் பாதியில் இரு அணிகளும் புள்ளிகளைப் பெற மல்லுக்கட்டிய நிலையில், நோர்வே அடித்த ஒரு கோல் ‘VAR’ (Video Assistant Referee) தொழில்நுட்பத்தின் துல்லியமான கணிப்பால் ரத்து செய்யப்பட, மைதானத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஆட்டம் கூடுதல் நேரத்திற்கு நகர்ந்த போது, நோர்வே கோல்கீப்பர் நைலேண்ட் செய்த சிறு தவறைக் கச்சிதமாகப் பயன்படுத்திய பெல்லிங்ஹாம், தனது இரண்டாவது கோலை அடித்து இங்கிலாந்து இரசிகர்களை ஆனந்தக் கண்ணீரில் நனையவைத்தார்.
இந்த அசுரத்தனமான வெற்றிகளைத் தொடர்ந்து, உலகக் கிண்ண கால்பந்து அரங்கின் தற்போதைய ஹாட் டாபிக் (Hot Topic) புதன்கிழமை நடைபெறவுள்ள மெகா அரையிறுதிப் போட்டிதான். வரும் புதன்கிழமை (15) அட்லாண்டா மைதானத்தில், லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினாவும், ஜூட் பெல்லிங்ஹாமின் இங்கிலாந்தும் இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டைப் பெற நேருக்கு நேர் மோதவுள்ளன. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கால்பந்து யுத்தத்தைக் காண உலகமே இப்போது அட்லாண்டாவை நோக்கித் திரும்பியுள்ளது.




