உலக அரசியலின் பார்வையை மீண்டும் தன் பக்கம் திருப்பியிருக்கிறது மத்திய கிழக்கு! அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம், சவூதி அரேபியாவுடன் சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளையும், பொருளாதாரத்தையும் மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அணுசக்திச் சட்டத்தின் பிரிவு 123-ன் கீழ் (Section 123) கையெழுத்தாகியுள்ள இந்த ஒப்பந்தம், பல பில்லியன் டாலர்கள் மதிப்பிலான, பல தசாப்த கால கூட்டாண்மைக்கு வழிவகுக்கும் எனக் கூறப்படுகிறது. இதன் மூலம் அமெரிக்க நிறுவனங்கள் சவூதி அரேபியாவிற்கு அணுசக்தி தொழில்நுட்பங்களை வழங்கி அணு உலைகளை அமைக்க உதவும். “அமெரிக்காவின் அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் விஞ்ஞானிகளின் பங்களிப்புடன், சர்வதேச பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டே இந்த திட்டம் செயல்படுத்தப்படும்” என அமெரிக்க ஆற்றல் துறைச் செயலாளர் கிறிஸ் ரைட் (Chris Wright) தெளிவுபடுத்தியுள்ளார்.
இருப்பினும், இந்த ஒப்பந்தத்தில் வெளிவராத ஒரு விடயம் தான் தற்போது உலக நாடுகளிடையே மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. சவூதி அரேபியா தனது சொந்த மண்ணிலேயே யுரேனியத்தைச் செறிவூட்ட (Uranium Enrichment) இந்த ஒப்பந்தம் வழிவகை செய்யலாம் என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆற்றல் தேவைக்காக யுரேனியத்தைச் செறிவூட்டுவது அணு ஆயுத உற்பத்திப் பாதைக்கு வித்திட்டுவிடுமோ என்ற அச்சத்தால், வாஷிங்டன் காங்கிரஸ் இதற்குக் கடும் எதிர்ப்புகள் கிளம்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபுறம், ஈரானுக்கு எதிரான போரும், பிராந்தியத்தில் நிலவும் கடுமையான மோதல் சூழலும் நீடித்துக்கொண்டிருக்கும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஈரானின் அணுசக்தி மையங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்ட பின்னணியில், சவூதி அரேபியாவுக்கு அணுசக்தி கதவுகளை அமெரிக்கா திறந்துவிடுவது மத்திய கிழக்கின் பாதுகாப்புச் சமநிலையை எவ்வாறு மாற்றப்போகிறது என்பதை உலக நாடுகள் மிக உற்றுநோக்கி வருகின்றன.


