டிஜிட்டல் உலகில் கோடி கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் பிரபல மெசேஜிங் செயலியான டெலிகிராமின் (Telegram) நிறுவனர் பாவெல் துரோவுக்கு (Pavel Durov) எதிராக ரஷ்யா எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு மறைமுகமாக உதவினார் என்ற தீவிர குற்றச்சாட்டின் கீழ், அவரை சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து ரஷ்யா உத்தியோகபூர்வமாக பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
இந்த அதிரடி நடவடிக்கையின் பின்னணியில் ரஷ்யாவின் முதன்மை உள்நாட்டுப் பாதுகாப்பு முகமையான FSB (Federal Security Service) தீவிரமாக செயற்பட்டு வருகிறது. உக்ரைன் உளவு அமைப்புகள் மற்றும் தீவிரவாத குழுக்கள் ரஷ்யாவிற்குள் நாச வேலைகளை செய்யவும், தாக்குதல்களை ஒருங்கிணைக்கவும், பிரம்மாண்ட சைபர் மோசடிகளை முன்னெடுக்கவும் டெலிகிராம் சேனல்களை ஒரு கேடயமாகப் பயன்படுத்தி வருவதாக FSB பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளது.
இங்குதான் விடயம் மேலும் தீவிரமடைகிறது. தனது தளம் ஊடாக இடம்பெறும் இத்தகைய சதிச் செயல்களையும் தீவிரவாத ஒருங்கிணைப்புகளையும் தடுக்கத் தவறியமையே பாவெல் துரோவ் மீதான வழக்குப் பதிவுக்கு பிரதான காரணமாகும். அத்துடன், சட்டவிரோத செயல்களுக்குப் பயன்படுத்தப்படும் ஏராளமான டெலிகிராம் சேனல்கள், சாட்கள் மற்றும் பாட்களை (Bots) தடையின்றி இயங்க அனுமதித்ததோடு, அவற்றை நீக்குவதற்கும் டெலிகிராம் நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துவிட்டதாக பாதுகாப்பு தரப்பு சுட்டிக்காட்டுகிறது.
இருப்பினும், இந்த விவகாரத்தில் ரஷ்யாவுக்கு மிகப்பெரிய சட்ட ரீதியான சவால் காத்துக் கொண்டிருக்கிறது. ரஷ்யாவில் பிறந்தவரான பாவெல் துரோவ், தற்போது பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகிய நாடுகளின் குடியுரிமைகளைப் பெற்று அந்நாடுகளிலேயே வசித்து வருகிறார். சர்வதேச சட்ட வல்லுநர்களின் கணிப்புப்படி, அவர் மேற்கண்ட நாடுகளில் இருக்கும் பட்சத்தில், அவரை ரஷ்யாவிற்கு நாடு கடத்துவது நடைமுறைச் சாத்தியமற்ற ஒன்று என்பதால், இந்த விவகாரம் அடுத்தகட்டமாக எத்தகைய பூகோள அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


