ஜுட் சமந்த
நீர்கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் மூவரை கொஸ்வத்த பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து களவாடப்பட்ட 4 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
கொஸ்வத்த பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் முதலில் கைது செய்யப்பட்டார். ஹால்தடுவன – போதியாபுர பகுதியைச் சேர்ந்த குறித்த நபரிடம் முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணைகளிலேயே, திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட பாரிய மோட்டார் சைக்கிள் திருட்டு வலைப்பின்னல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கைதான நபரின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு உடனடியாக களமிறங்கிய பொலிஸ் குழுவினர், தங்கொட்டுவ – லிகிரியாகம பகுதியில் பதுங்கியிருந்த மேலும் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்தனர். இவர்கள் நீர்கொழும்பு, ஆராச்சிக்கட்டுவ மற்றும் கொஸ்வத்த ஆகிய பிரதேசங்களில் இருந்து திட்டமிட்டு இந்த மோட்டார் சைக்கிள்களை திருடி விற்பனை செய்து வந்தமை தெரியவந்துள்ளது.
திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தி இவர்கள் ஏதேனும் பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டனரா என்ற கோணத்திலும் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கொஸ்வத்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சனத் சமிந்தவின் ஆலோசனையின் கீழ், குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் சந்திரசேகர உள்ளிட்ட குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


