ஜுட் சமந்த
கற்பிட்டி கடல் பிராந்தியத்தில் சட்டவிரோத கடத்தல் நடவடிக்கைகளை முறியடிக்கும் நோக்கில் இலங்கை கடற்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில், தலவில கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை பாரிய கடத்தல் முயற்சி ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு வேளையில் மர்மமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான வர்த்தகப் பொருட்கள் மற்றும் பூச்சிகொல்லி மருந்துத் தொகையை கடற்படையினர் அதிரடியாகக் கைப்பற்றியுள்ளனர்.
தலவில கடற்படை முகாமின் உத்தியோகத்தர்கள் இன்று (20) அதிகாலை 1.00 மணியளவில் கடற்கரையோரப் பகுதியில் விசேட ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோதே, சந்தேகத்திற்கிடமான முறையில் கரையில் குவிக்கப்பட்டிருந்த பல பொலித்தீன் உறைகளைக் கண்டறிந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தீவிர சோதனையில், திட்டமிட்ட கடத்தல் நடவடிக்கை அம்பலமானது.
இதன்போது, 12 பொலித்தீன் உறைகளில் பொதி செய்யப்பட்டிருந்த 591 கிலோகிராம் உலர் இஞ்சி மற்றும் 3 உறைகளில் அடைக்கப்பட்டிருந்த 75 கிலோகிராம் ஏலக்காய்த் என்பன கைப்பற்றப்பட்டன. அத்துடன், சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 100 மில்லி லீற்றர் கொள்ளளவைக் கொண்ட 200 ‘Tafgon’ பூச்சிக்கொல்லி திரவ போத்தல்களும், 100 ‘Leokem’ போத்தல்களும் கடற்படையினரால் முழுமையாகப் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்தியாவிலிருந்து சர்வதேச கடல் எல்லையைக் கடந்து படகுகள் மூலம் இந்த பொருட்கள் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு, பின்னர் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு விநியோகிப்பதற்காகவே கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட அனைத்துப் பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இக்கடத்தல் வலையமைப்பின் பின்னணியில் உள்ள நபர்களைக் கைது செய்யும் நோக்கில் கற்பிட்டி பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


