இலங்கை இசை வரலாற்றின் அழியாத பொக்கிஷமும், பல தசாப்தங்களாகத் தன் வசீகரக் குரலால் உலகெங்கிலும் உள்ள இசை ரசிகர்களின் இதயங்களை ஆட்டிப்படைத்த மூத்த இசைக்கலைஞருமான நந்தா மாலினி நேற்று (20) தனது 82 ஆவது வயதில் காலமானார். நாவலையில் உள்ள அவரது இல்லத்தில் ஏற்பட்ட இந்த எதிர்பாராத இழப்பு ஒட்டுமொத்த தேசத்தையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இசைத்துறையில் அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பிற்கு மதிப்பளிக்கும் வகையில், இலங்கையில் மூன்று நாட்கள் தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படுவதாக அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தத் துக்க தினங்களை முன்னிட்டு, நாட்டிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இன்று (ஆகஸ்ட் 21), நாளை (22) மற்றும் நாளை மறுதினம் (23) ஆகிய தினங்களில் அரச கட்டடங்கள் அனைத்திலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.
இது தொடர்பான விசேட வழிகாட்டல்கள் அடங்கிய 04/2026 ஆம் இலக்க உள்நாட்டலுவல்கள் சுற்றறிக்கை இன்றைய தினம் (21) உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். அலோக பண்டாரவின் கையொப்பத்துடன் இச்சுற்றறிக்கை அனைத்து அரச திணைக்களங்களுக்கும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள்/அரசாங்க அதிபர்கள், திணைக்களத் தலைவர்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச் சட்ட சபைகளின் தலைவர்கள் என அனைத்து நிர்வாகப் பிரிவினருக்கும் இந்த உத்தரவை உரிய முறையில் நடைமுறைப்படுத்துமாறு தெளிவுறுத்தப்பட்டுள்ளது.


