Thursday, February 5, 2026
Sponsored advertisementspot_img
Home Blog

நாகவில்லுவில் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ்வின் நினைவுதினம்!

பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று நாகவில்லுவில் இடம்பெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வு!

இலங்கை திருநாட்டில் பெளதீக ரீதியான பல வேலைத்திட்டங்களையும், இடம்பெயர்வு மற்றும் எல்லை நிர்ணயம் தொடர்பான பறந்துபட்ட அறிவினையும் கொண்டிருந்த எருக்கலம்பிட்டியை சேர்ந்த மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது வருட நினைவு தின நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

அந்த வகையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் நினைவுப் பேருரையும், புத்தக வெளியீடு நிகழ்வும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் ஏற்பாட்டில் நேற்று 25.08.2025 புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய அதிபர் ஜனாப் S.M. ஹுஸைமத் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், புத்தி ஜீவிகள் மற்றும் குடும்பத்தார்கள் கலந்தகொண்டமை விஷேட அம்சமாகும்.

சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் பொருளாளர் ஜனாப் ஏ.ஜி. அனீஸ் (Bsc.Agri) அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.

மேலும் இஸ்லாமிய கற்கை அறபு மொழிப் பீட, தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களினால் நூல் அறிமுக உரையும், நினைவுப் பேருரையும் மிகவும் உணர்வுபூர்வமாக நிகழ்த்தப்பட்டது.

கிழக்கு மற்றும் தென் கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பங்களிப்பு அளப்பெரியது என நினைவு கூறிய பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன், வடக்கில் ஏற்பட்ட யுத்தம் மற்றும் முஸ்லிம்களின் இடம்பெயர்வு குறித்து அதீத அக்கறையுடன் செயற்பட்ட மிக முக்கியமானவர் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்கள் எனவும் எடுத்துரைத்தார்.

வடக்கு முஸ்லிம்களின் இடம்பெயர்வு மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பில் அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களுடன் பலதரப்பட்ட கலந்துரையாடல்களை நடத்தி, சர்வதேசம் வரை இவ்விடயங்களை கொண்டுசென்ற மகான் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் என பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் தனது உரையில் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் புதல்வி சட்டத்தரணி எப்.சப்னா ஹஸ்புல்லாஹ் அவர்களினால் ஏற்புரை நிகழ்த்தப்பட்டதுடன், நூல் வெளியீடு நிகழ்வும் இடம்பெற்றது.

நூலின் முதற்பிரதியை ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தரும், புத்தளம் எருக்கலம்பிட்டி பள்ளிவாசல் நிர்வாக சபையின் முன்னாள் உறுப்பினருமான ஜனாப் ரஹ்மத்துல்லாஹ் (GS) அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

மேலும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் செயலாளர் ஜனாப் எஸ்.எச்.எம். றிஸ்னி அவர்களினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டதுடன், தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன், மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பாரியாருக்கும் நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில், பேராசிரியர்கள், கல்விமான்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், பாடசாலைச் சமூகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் குடும்பத்தார்கள் என பலரும் கலந்து சிறப்பித்ததுடன், ஈ நியூஸ் பெஸ்ட் ஊடக நிறுவனம் ஊடக அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரணிலுக்காக ஒன்று திரண்ட அரசியல் தலைவர்கள்!

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விசாரணை கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது, நாட்டின் அடிப்படை ஜனநாயக நிறுவனங்களின் வலிமை குறித்து கடுமையான கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் விளைவுகள் ஒரு தனிநபரின் அல்லது எந்தவொரு அரசியல் கட்சிகளின் தலைவிதியையும் விட, சமூகத்தின் உரிமைகளுக்கான பிரச்சினைகளை தோற்றிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் தலைவர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைகளை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது மற்றும் விளக்கமறியலை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து நடத்திய விசேட ஊடக சந்திப்பில் பங்கேற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரல முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் அறிக்கையை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

போர்த்துக்கல் அணி சாம்பியன் ஆனது!

0

‘நேஷன்ஸ் லீக்’ கால்பந்தில் போர்ச்சுகல் அணி சாம்பியன் ஆனது. பைனலில் ‘பெனால்டி ஷூட் அவுட்டில்’ 5-3 என ஸ்பெயினை வீழ்த்தியது.

ஐரோப்பிய கால்பந்து அணிகளுக்காக ‘நேஷன்ஸ் லீக்’ தொடர் நடத்தப்படுகிறது. மொத்தம் 54 அணிகள் பங்கேற்றன. நேற்று ஜெர்மனியின் முனிக் நகரில் நடந்த பைனலில், போர்ச்சுகல், நடப்பு யூரோ சாம்பியன் ஸ்பெயின் பலப்பரீட்சை நடத்தின. போட்டியின் 21வது நிமிடம் ஜுபிமெண்டி (ஸ்பெயின்), 26வது நிமிடம் மெண்டிஸ் (போர்ச்சுகல்) தலா ஒரு கோல் அடித்தனர். 45வது நிமிடம் மைக்கேல் ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் ஸ்பெயின் அணி 2-1 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் 61 வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். போர்ச்சுகல் அணிக்காக இவர் அடித்த 138வது கோல் இது. 90 நிமிட முடிவில் போட்டி 2-2 என சமன் ஆனது. அடுத்து நடந்த கூடுதல் நேரத்திலும் (30 நிமிடம்) இரு அணியும் கோல் அடிக்கவில்லை.

இதையடுத்து வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி ‘பெனால்டி ஷூட் அவுட்டுக்கு’ சென்றது. இரு அணிக்கும் தலா 5 வாய்ப்புகள் தரப்பட்டன. காயம் காரணமாக 88 வது நிமிடம் வெளியேறிய ரொனால்டோ, இதில் பங்கேற்கவில்லை.

முதல் 3 வாய்ப்பில் போர்ச்சுகலின் ராமோஸ், விடின்ஹா, பெர்ணான்டஸ் கோல் அடித்தனர். மறுபக்கம் ஸ்பெயின் தரப்பில் மெரினோ, பயேனா, இஸ்கோ கோல் அடிக்க 3-3 என ஆனது.

4வது வாய்ப்பில் மெண்டெஸ் (போர்ச்சுகல்) கோல் அடிக்க, ஸ்பெயினின் மோராட்டோ அடித்த பந்தை கோல் கீப்பர் டீகோ கோஸ்டா தடுத்து அசத்தினார்.

5வது வாய்ப்பில் நெவேஸ் கோல் அடித்தார். இதையடுத்து 5-3 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் ‘திரில்’ வெற்றி பெற்றது. 2019க்குப் பின் இத்தொடரில் மீண்டும் சாம்பியன் ஆனது.

தில்லையடியில் சிக்கிய கடத்தல் பீடி இலைகள்!

0

புத்தளத்தில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளுடன் வேன் ஒன்றும் பறிமுதல்!

இலங்கை கடற்படை, பொலிஸாருடன் இணைந்து, புத்தளம், தில்லையடி பகுதியில் 2025 ஜூன் 05 இரவு வேளையில் நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகள் கொண்ட ஒரு வேன் கைப்பற்றப்பட்டது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிறுவனம், புத்தளம் பொலிஸாருடன் இணைந்து தில்லையடி பகுதியில் நடத்திய இந்த சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்று சோதனை செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகளானது வாகனத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் வேன் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களால் ஆபத்தா?

விண்வெளியில் பூமியை சுற்றி வந்துக்கொண்டிருக்கும் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கொள்களை சீனா நினைத்தால் வெறும் 12 மணி நேரத்தில் தாக்கி அழித்துவிட முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் என்கிற செய்தி ஊடகத்தில் இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது தற்போது சீனா 99 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. இவை அனைத்தும் நான்ஜிங் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஆஸ்ட்ரோனாட்டிக்ஸ் பல்கலைக்கழகத்தின் விண்வெளிக் கட்டுப்பாட்டுத் துறையின் இயக்குநர் வூ யுன்ஹுவா தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இவை அனைத்தும் எலான் மஸ்கின் 1400 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை வெறும் 12 மணி நேரத்தில் காலி செய்துவிடும். சீன செயற்கைக்கோளில் லேசர், நுண் அலைகளை உருவாக்கும் கருவி, உளவு கருவிகள் பொருத்தப்பட்டிருக்கலாம். ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் வெறுமென நெட்வொர்க் கொடுக்க மட்டுமே பயன்படுத்தப்படுவதில்லை. தவிர, ராணுவ நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது என சீனா குற்றம்சாட்டி வருகிறது.

அதாவது, உக்ரைன்-ரஷ்யா போரில், உக்ரைன் படைகளுக்கு தகவல்கள் கொடுக்கவும், ரஷ்ய எல்லையை துல்லியமாக கண்காணிக்கவும் இந்த செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த 2022ம் ஆண்டு ரஷ்ய போரின்போது அப்போதைய உக்ரைனின் துணைப் பிரதமரான மைக்கைலோ ஃபெடோரோவ், “ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் சேவையை உடனடியாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த மஸ்க், “உடனடியாக சேவை வழங்கப்படும்” என்று கூறியிருந்தார்.

உக்ரைன் போருடன் மட்டுமே ஸ்டார்லிங்க் நிற்காது, நாளை சீனாவுக்கும்-தைவானுக்கும் பஞ்சாயது ஏற்பட்டால் அப்போதும், தைவானுக்கு சப்போர்ட் செய்ய ஸ்டார்லிங்க் வரும். எனவே இந்த கூட்டு நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்க சீனா இந்த புதிய செயற்கைக்கோள்களை உருவாக்கியிருக்கிறது.

கடந்த 2023ம் ஆண்டு இதற்கான பணிகளை சீனா தொடங்கியது. இந்த திட்டத்திற்கு ‘கியான்ஃபான் மெகா-விண்மீன் திட்டம்’ (Qianfan mega-constellation project) என்றும் பெயரிட்டிருந்தது. நோக்கம் உலகம் முழுவதும் இணைய தொடர்பை வழங்குவதாகும். இதற்காக மொத்தம் 15,000 சிறிய ரக செயற்கைக்கோள்களை ஏவ சீனா முடிவெடுத்தது. இதன் முதல் தொகுப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏவப்பட்டது. இதில் 18 செயற்கைக்கோள்கள் இருந்தன.

ஒவ்வொன்றும் சுமார் 300 கி.கி எடையில் இருந்தது. இவை பூமியிலிருந்து 800 கி.மீ உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டது. இதேபோன்று 2024 டிசம்பரில் அடுத்து இரண்டு தொகுதி ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. தற்போது மொத்தம் 99 செயற்கைக்கோள்கள் விண்வெளியில் இருக்கின்றன. 15,000 செயற்கைக்கோள்களை 3 கட்டங்களாக ஏவ இருக்கிறது. முதல் கட்டத்தில் 1,296 செயற்கைக்கோள்கள் ஏவப்படும். இதில் 648 செயற்கைக்கோள்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஏவப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் கன்னி உரை

0

அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்புவோம்

தேசியத்துவத்துடனும் ஐக்கியத்துடனும் ஒன்றுபட்டு நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க இன்று (23) காலை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

பதவிப் பிரமாணத்தின் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய முழுமையான உரை:

மக்களால் ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது நமது நாட்டின் ஜனநாயகத்திலிருக்கும் மிக முக்கியமான அம்சமாகும். தேர்தலில் வாக்களித்தல் மற்றும் ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதோடு ஜனநாயகம் நிறைவு பெறுவதில்லை. இது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சம் என்றாலும், நம் நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்த, கட்டமைப்புகளின் வலிமையும், சட்டங்களை வலுப்படுத்துவதும் அவசியம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனவே, எனது பதவிக்காலத்தில் இந்த நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.

அத்துடன், இந்த நாட்டில் ஜனநாயக முறையில் அதிகாரப் பரிமாற்றம் நடந்த வரலாறும் உண்டு. தேர்தலில் நிகழும் அதிகாரப் பரிமாற்றத்தை எந்தத் தலைவரும் நிராகரித்ததில்லை. அதற்கமைய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த மக்கள்ஆணையை சுமூகமாக ஏற்றுக்கொண்டதுடன், ஜனநாயக ரீதியில் அதிகாரத்தை கைமாற்றுவதற்கான அவரின் அர்ப்பணிப்பிற்கும் முன்னுதாரணத்திற்கும் நன்றி தெரிவிக்கிறேன். மேலும் எமக்கு கிடைப்பது மிகவும் சவால் நிறைந்த நாடு என்பதை நன்கு புரிந்து கொண்டிருக்கிறோம். நமது அரசியலில் தூய்மையான, மக்களால் எதிர்பார்க்கப்படும் சிறந்த அரசியல் கலாசாரத்திற்காக அவசியம் காணப்படுகிறது.அதற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

நம் நாட்டின் அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு நல்லெண்ணம் இல்லை. எனவே, அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் மீது மக்கள் மரியாதை மற்றும் நம்பிக்கையை மீட்டெடுக்க எங்கள் தரப்பிலிருந்து முடிந்த அனைத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.

மேலும், நமக்கு முன் இருக்கும் இந்த ஆழமான நெருக்கடியை வெறும் அரசோ, வெறும் அரசியல் கட்சியோ அல்லது ஒரு தனி நபரோ மட்டும் தீர்க்க முடியும் என்று நாங்கள் நம்பவில்லை. ஏனென்றால், நான் முன்பு கூறியது போல், நான் ஒரு மாயாஜால வித்தைக்காரனல்ல. நான் மந்திரவாதியும் இல்லை. நான் இந்த நாட்டின் சாதாரண குடிமகன். எம்மிடம் திறமைகள் உள்ளன. இயலாமைகளும் உள்ளன. தெரிந்த விடயங்களும் உள்ளன அதேபோன்று, தெரியாத விடயங்களும் உள்ளன.

ஆனால் திறமைகளைப் பயன்படுத்தி தெரியாதவற்றை சேகரித்துக்கொண்டு சிறந்த முடிவுகளை எடுத்து இந்த நாட்டை வழிநடத்துவதே எனது தலையாய பணியாகும். அந்த கூட்டுப் பங்களிப்பின் ஒரு அங்கமாக மாறுவது எனது பொறுப்பாகும். மேலும், இந்த நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதில் பொது மக்கள் மற்றும் அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் பாரிய பொறுப்பு உள்ளது. அந்தப் பொறுப்பை நிறைவேற்ற அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்.

ஆனால், நாட்டின் ஜனாதிபதி என்ற முறையில், இந்தப் பணியை முன்னின்று நடத்துவதில் எனக்கு முதன்மையான மற்றும் மிக முக்கியமான பொறுப்பு இருப்பதை நான் ஏற்றுக்கொண்டேன். எனவே, இந்தச் சவாலை வெற்றிகொள்வதற்காக எனக்குக் வழங்கப்பட்டுள்ள பணியை நான் உரிய முறையில் நிறைவேற்றுவேன் என்பதை செயற்பாடு மற்றும் நடைமுறை மூலம் எல்லா சந்தர்ப்பங்களிலும் இந்த நாட்டின் பிரஜைகளுக்கு வெளிப்படுத்த நான் தயாராக இருக்கிறேன்.

மேலும் நமது நாட்டுக்கு சர்வதேச ஆதரவு தேவை. எனவே, உலகில் எத்தகைய அதிகாரப் பிளவுகள் இருந்தாலும், ஒவ்வொரு நாட்டையும் எமக்கு மிகவும் சாதகமாக கையாள்வதே நமது எதிர்பார்ப்பாகும். நாம் உலகில் தனிமைப்படுத்தப்பட்ட நாடு அல்ல. உலகத்துடன் கூட்டாக முன்னேற வேண்டிய ஒரு நாடாகும். அது தொடர்பில் தேவையான முடிவுகளை எடுக்க நாங்கள் சிறிதும் தயங்குவதில்லை.

மேலும், நம் நாட்டைக் கட்டியெழுப்புவதில் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு பெரும் பங்கு உள்ளது. எனவே, நாட்டை மேலும் வலுவாகக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு அவர்கள் ஆதரவளிப்பார்கள் என நான் கருதுகின்றேன்.

நம் நாட்டின் ஜனநாயகத்தின் ஊடாக நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். அதற்காக மக்கள் எனக்கு வாக்களித்தனர்.

மேலும் எனக்கு வழங்கப்படாத வாக்குகளும் உள்ளன. எனவே, எங்களின் வெற்றியின் உள்ளடக்கம் மற்றும் அளவு குறித்து எங்களுக்கு நல்ல புரிதல் உள்ளது. எனவே, எங்களுக்கு ஆதரவு வழங்காத மற்றும் எங்களை நம்பாத பிரஜைகளின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெறுவதே எனது நிர்வாகத்தின் போது எனக்கு வழங்கப்பட்டுள்ள பணியாகும். அந்தப் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

எதிர்காலத்தில் இவை அனைத்தையும் நீங்கள் நடைமுறையில் கண்டுகொள்ள முடியும். அதற்கு அனைத்து மக்களின் ஆதரவையும் எதிர்பார்க்கின்றேன்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தேர்தலில் இவ்வாறுதான் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்

0

அதிகாரிகள் மற்றும் பிற தேவைகள் முடிந்த பிறகு, மாலை 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (19) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி பிற்பகல் 4.15 மணிளவில் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“எதிர்வரும் 21ம் திகதி வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள் பெறப்பட்டதும், அதிகாரிகள் மற்றும் இதர தேவைகள் முடிந்ததும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் இரவு 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

மாலை 4.15 மணிளவில் தபால் மூல வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

அத்துடன் மாவட்ட அளவில் ஒவ்வொரு வட்டாரத்திலும் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெறும்.

வாக்கு எண்ணிக்கையின் முடிவில் முடிவுகள் கிடைத்தவுடன் ஊடகங்களுக்கு வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையே முதலில் எண்ணப்படும்.

அந்தக் கணக்கெடுப்பின் பின்னர் (மாவட்ட அளவில் எண்ணும் பணி) முதலில் வாக்குப்பெட்டிகளில் உள்ள வாக்குகள் எண்ணப்படும்.

அதன் பிறகு, ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு, தொகுதி மற்றும் மாவட்ட அளவில் அது தயாரிக்கப்படுகிறது.

தேர்தல்கள் செயலகமே ஒட்டுமொத்த முடிவுகளைக் கணக்கிடும்.

எந்த வேட்பாளரும் 50 வீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்றுள்ளாரா என சரிபார்க்கப்படும்.

அப்படியானால், அந்த நேரத்தில் வாக்கு எண்ணும் பணிகள் நிறுத்தப்படும்.

அப்போது ஜனாதிபதியை நாங்கள் அறிவிப்போம்.

எந்த வேட்பாளருக்கும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் கிடைக்காவிடின், விருப்பு வாக்கு எண்ணிக்கைக்கு செல்ல வேண்டும்.

அங்கு, அதிக வாக்குகள் பெற்ற இரண்டு வேட்பாளர்கள் போட்டியில் வைத்து விட்டு  மீதமுள்ள 36 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து நீக்கப்படுவர்” என்றார்.

புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக மாறும்

0

புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வாத்தியாசலையாக மாற்றம் பெரும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று புத்தளத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ அலிசப்ரி ரஹீம் மற்றும் சிந்தக்க மாயாதுன்ன தலைமையில் புத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்திலே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

புத்தளம் மக்களின் நீண்ட நாள் தேவையாக இருந்து வருகின்ற புத்தளம் தல வைத்தியசாலையை தரமுயர்த்துவது தொடர்பாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ அலிசப்ரி ரஹீம் அவர்களினால் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோலுக்கிணங்க குறித்த வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.

மேலும் புத்தளத்தில் மீன் பிடி தொழிலை முன்னேற்றும் நோக்கத்தில் மீன் பிடி துறைமுகம் ஒன்றை அமைக்கும் யோசனையும் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டதுடன், அதற்கான முன்னெடுப்புகளும் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்டமை புத்தளம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நாட்டில் நிரந்தர பொருளாதார அபிவிருத்தியை நிலை நாட்ட தாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டை பொருளாதார அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவதே தனது பிரதான நோக்கம் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மொட்டுக்கட்சிக்கு எதிராக நிற்கும் முக்கிய அமைச்சர்கள்

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக மொட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளரை இந்த வாரம் அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்காதிருக்கவும், மொட்டு சின்னத்தில் தனியாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமக்கு ஆதரவு வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பியிருந்த கடிதம் நேற்றைய தினம் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தினால் அரசியல் குழுவில் முன்வைக்கப்பட்டது.

எவ்வாறாயினும் அந்த கடிதத்தை நிராகரிக்க அரசியல் குழுக் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுவில் 82 பேர் அங்கம் வகிப்பதுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் 72 பேர் பங்கேற்றனர்.

இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த 11 பேர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

மஹிந்தானந்த அலுத்கமகே, பந்துல குணவர்தன, பிரதீப் உந்துகொட, கோகிலா ஹர்ஷனி குணவர்தன, சஹன் பிரதீப், ரமேஸ் பத்திரன, கஞ்சன விஜேசேகர, பிரசன்ன ரணதுங்க, கனக ஹேரத், மொஹான் பிரியதர்ஷன ஆகியோர் கட்சியின் சார்பில் தனியான வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

அத்துடன் பிறிதொரு கட்சியின் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்கும் உறுப்பினர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் யோசனைக்கு 6 பேர் எதிராக வாக்களித்துள்ளனர்.

எவ்வாறாயினும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் எனக் கூறப்பட்ட தம்மிக பெரேரா தொடர்பில் அரசியல் குழுக் கூட்டத்தின்போது எந்தவித கருத்துக்களும் பரிமாற்றிக் கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவளிக்காத 11 பேர் உள்ளிட்ட தரப்பினர் நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தனவின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சைனப் ஆரம்பப் பாடசாலைக்கு ஆளுநர் வருகை!

0

புத்தளம் சைனப் ஆரம்ப பாடசாலையின் முப்பெரும் விழா பாடசாலை அதிபர் யஹியா தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து புத்தளம் ஜெய்னப் பாடசாலைக்கு 22 லட்சம் ரூபா பெறுமதியான நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு, சிறுவர் விளையாட்டு நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தல் மற்றும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் செயற்திட்டத்தின் கீழ் BCMH நிறுவனத்தினால் கற்றல் உபகரணம் வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் கடந்த செவ்வாய்க்கிழமை (16) வெகு விமர்சையாக இடம்பெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதியாக வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், விசேட அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மற்றும் கௌரவ அதிதியாக புத்தளம் வலயக்கல்விப் பணிப்பாளர் அர்ஜுன ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆரம்ப பாடசாலையின் முக்கியத்துவம் மற்றும் அறிவார்ந்த சமூகத்தை கட்டியெழுப்ப ஆரம்ப பாடசாலை ஆற்றிவருகின்ற அர்ப்பணிப்பு குறித்து விரிவாக பேசிய வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், புத்தளம் மாவட்ட பாடசாலைகளின் துரித வளர்ச்சி பற்றியும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

மேலும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் செயற்திட்டத்திற்கு வடமேல் மாகாண ஆளுநர் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் ஜவ்ஷி ஜமால்தின், இணைப்புச் செயலாளர் எச். அமீர் அலி ஆசிரியர், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் உட்பட உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் அயல் பாடசாலையின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு
நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு

ஹிருணிகாவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறை

0

கடத்தல் வழக்கில் முன்னாள் எம்.பி ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்தத் தீர்ப்பை அறிவித்தார்.

தெமட்டகொட பகுதியிலுள்ள கடை ஒன்றில் பணிபுரிந்த அமில பிரியந்த அமரசிங்க எனும் இளைஞர் ஒருவரை 2015 டிசம்பர் 21ஆம் திகதி ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு சொந்தமான டிபெண்டர் வாகனத்தில் கடத்திய வழக்கு விசாரணை முடிவில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

29 குற்றங்கள் தொடர்பில் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் 8 பேரும் குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில், அச்சம்பத்திற்கு உதவி, ஒத்தாசை புரிந்ததாக ஹிருணிகா மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்திருந்தார்.

அத்தோடு, சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவின் ஆதரவாளர்கள் 8 பேர் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைதான ஐந்தாம் சந்தேகநபரின் மகள் அளித்துள்ள வாக்குமூலத்தில், தமது தாயாருடன் தொடர்பு பேணிய நபர் ஒருவரை தாம் காண்பித்ததாகவும், அவரை தமது தந்தையும் அவருடன் சென்றவர்களும் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு ஹிருணிகாவிடம் அழைத்துச் சென்றதாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

ஓவியப்போட்டியில் எருக்கலம்பிட்டி மாணவன் முதலாமிடம்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட வட மாகாண மானவர்களுக்கிடையிலான சித்திரப்போட்டியில் மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்றார்.

வீதி விபத்துக்கள் இல்லாத நாளைக்கான பாடசாலையிலிருந்து அணிவக்குப்போம் எனும் தொனிப்பொருளில் கடந்த வியாழக்கிழமை (13.06.2024) அன்று நடாத்தப்பட்ட வட மாகாண மாணவர்களுக்கிடையிலான குறித்த சித்திரப்போட்டியில் சுமார் 2600 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

சித்திரப்போட்டியில் பங்குபற்றிய 2600 மாணவர்களில் 250 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு நேற்றைய தினம் (15.06.2024) அவர்களுக்கான போட்டி இடம்பெற்றது.

நடைபெற்று முடிந்த இறுதிச் சுற்றுப்போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்று பெருமதிமிக்க பரிசில்களை பெற்றுக்கொண்டார்.

முதலாம் இடம் பெற்ற முஹம்மது ஹுசைன் என்ற மாணவனுக்கு சான்றிதல், துவிச்சக்கரவண்டி மற்றும் 8500/- ரூபா பெறுமதியான வவுச்சரும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இதேவேளை குறித்த போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய இல்முதீன் முஹம்மது ஹஸ்பான் 7 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய மற்றொரு மாணவரான முஹம்மது சம்ஹான் 8 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

பாரிய சாவல்களுக்கு மத்தியில் தனி ஒரு மனிதனாக இம் மாணாவர்களை ஊக்கப்படுத்தி, தயார்ப்படுத்தி போட்டியில் பங்குபெறச் செய்து வெற்றிபெறச் செய்த எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியின் சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் அவர்களின் இம் முயற்சிக்கு, பாடசாலை சமூகம் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் நன்றி தெரிவித்தனர்.

தமக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வந்து தேசிய அளவில் இடம்பெறும் போட்டிகளில் மாணவர்களை பங்குபெறச் செய்வதே தனது இலக்கு என சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் எமது ஊடகத்திற்கு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை இராஜினாமா

0

நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்துள்ளனர்.

சாந்த நிரியல்ல உட்பட 15 பேர் கொண்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரின் அறிவித்தலுக்கு அமைய இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி திங்கட்கிழமை புதிய பணிப்பாளர் சபை நியமிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ “அத தெரண” விற்கு தெரிவித்தார்.

புத்தளம் எருக்கலம்பிட்டியில் கடும் வெள்ளம்

0

புத்தளம் பகுதியில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக புத்தளம் பகுதி முழுதும் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.

புத்தளம், தில்லையடி, பாலாவி, புத்தளம் எருக்கலம்பிட்டி, ஹிதாயத் நகர்,  மதுரங்குளி மற்றும் ஏனைய பல கிராமங்களும் வெள்ளித்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமமும் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 1500 குடும்பங்கள் இங்கு வாழ்ந்துவருவதுடன், அனைத்து வீடுகளும் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நூற்றிற்கும் அதிகமான வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் ஐநூற்றுக்கும் அதிகமான வீடுகள் பகுதி அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8ஆம் திகதி ஏற்பட்ட மழை வெள்ளித்தினால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் மற்றும் பாடசாலைகளில் தற்காலிகமாக  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு தினங்களாக இவர்களுக்கான சமைத்த உணவுகள் மூன்று வேலைகளிலும் ஊர் தனவந்தர்களின் உதவியுடனும், பள்ளிவாசல் நிர்வாக சபையின் வழிகாட்டலுடனும் வழங்கப்பட்டு வருவதுடன், ஊர் மக்களுக்கும் உணவு விநியோகங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

இவர்களுக்கான நிவாரண உதவிகள் இதுவரை அரசாங்கத்தினால் வழங்கப்படாத போதிலும், ஊர் மக்களின் பங்களிப்புடன் மாத்திரமே பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு விநியோகங்கள் இதுவரை  வழங்கப்பட்டு வருகின்றது.

புத்தளம் பொத்துவில்லு பகுதியில் உள்ள குளம் மழை நீரினால்  பெருக்கெடுத்துள்ளதால் குறித்த குளத்து நீர் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமத்திற்குள் தொடர்ந்தும் மூன்றாவது நாளாக ஊடறுத்து செல்வதால் வீடுகள் தொடர்ந்தும் நீருள் மூழ்கியுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்தின் நிவாரண உதவிக்காக பல மக்கள் தொடர்ந்தும் எதிர்பார்த்து காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

சுதந்திரமா? சுமையா? – வடக்கு கிழக்கில் வெடித்த “கரிநாள்” எழுச்சி!

இலங்கைத் திருநாட்டின் 78வது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் தெற்கில் களைகட்டியுள்ள நிலையில், வடக்கிலும் கிழக்கிலும் சோகம் தோய்ந்த கறுப்பு நிறம் வீதிகளை ஆக்கிரமித்துள்ளது.

கிளிநொச்சியில் இன்று சுதந்திர தினத்தை எதிர்ப்பு தெரிவித்து வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்திருந்தன.

“தமிழர்களுக்கு இது சுதந்திர தினம் அல்ல, இது ஒரு கரிநாள்” என்ற கோஷத்துடன், கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று ஒரு மாபெரும் மக்கள் புரட்சி வெடித்திருக்கிறது.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்த ஒருமித்த அழைப்பு, இன்று ஒரு மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ளது. சிவில் அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் ஒரு புள்ளியில் இணைந்துள்ளனர்.

போராட்டம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பமாகி, நகரத்தை நோக்கி ஒரு பெரும் பேரணியாக உருவெடுத்தது.

  • வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்: கைகளில் படங்களை ஏந்தி, நீதிக்காகக் காத்திருக்கும் அந்த விழிகளில் தெறிப்பது வெறும் கண்ணீரல்ல, அது காலங்காலமான வலி.
  • இளைஞர் மற்றும் மாணவர்கள்: வருங்கால சந்ததியினரின் உரிமையை உறுதிப்படுத்த வீதியில் இறங்கியுள்ளனர்.
  • தென்னிந்திய ஆதரவு: இந்த போராட்டத்திற்கு எல்லை கடந்து தென்னிந்தியப் பிரபலங்களும் ஆதரவு தெரிவித்துள்ளமை, ஈழத் தமிழர்களின் கோரிக்கைக்கு சர்வதேசப் பரிமாணத்தை வழங்கியுள்ளது.

போராட்டத்தின் ஒரு பகுதியாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ள ஊடக அறிக்கையில், தமிழர்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

போராட்டம் நடைபெறும் வீதிகளெங்கும் பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்ததுடன், இந்த பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியிலும், மக்கள் எவ்வித அச்சமுமின்றித் தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இலங்கை, சுதந்திர தினத்தை மிக விமரிசையாகக் கொண்டாடும் இவ்வேளையில், வடக்கு கிழக்கில் ஒலிக்கும் இந்த “கரிநாள்” முழக்கம், ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வுக்கான அவசியத்தை உலக நாடுகளுக்கு மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தியுள்ளது.

புத்தளத்தில் கோலாகலமாக நடைபெற்ற சுதந்திர தின விழா!

0

புத்தளத்தில் கோலாகலமாக நடைபெற்ற இலங்கையின் 78-வது சுதந்திர தின விழா: “இலங்கையை கட்டியெழுப்புவோம்” எனும் மகுடத்தில் சிறப்பான கொண்டாட்டம்

இலங்கை திருநாட்டின் 78-வது சுதந்திர தின விழா, “இலங்கையை கட்டியெழுப்புவோம்” எனும் தொனிப்பொருளில் புத்தளம் கொழும்பு முகத்திடலில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் கொண்டாடப்பட்டது.

புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கயான் ஜானக அவர்களின் தலைமையில் இவ்விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

விழாவிற்கு வருகை தந்த கயான் ஜானக உள்ளிட்ட அதிதிகளை, புத்தளம் புனித ஆண்ட்ரூ கல்லூரியின் (St. Andrew’s College) மாணவர் படைப் பிரிவினரும், ஆனந்தா கல்லூரியின் பேண்ட் வாத்தியக் குழுவினரும் அணிவகுப்புடன் கௌரவமாக வரவேற்றனர்.

புனித ஆண்ட்ரூ கல்லூரி மாணவர்களின் தேசிய கீதத்துடனும், ஆனந்தா கல்லூரி மாணவர்களின் ஆசீர்வாதப் பாடல்களுடனும் விழா இனிதே ஆரம்பமானது.

விழாவை மேலும் மெருகூட்டும் வகையில் பல்வேறு கலாசார மற்றும் கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன:

கருவலகஸ்வெவ கலாசார மத்திய நிலையத்தின் பூஜா நடனம், இந்து கல்லூரி மாணவிகள் வழங்கிய பரதநாட்டிய கலைநிகழ்ச்சி, புத்தளம் மற்றும் பல்லம கலாசார மத்திய நிலையங்களின் புதுமையான நவீன நடனங்கள், ஆனமடுவ கலாசார மத்திய நிலையத்தின் பாரம்பரிய ‘வெஸ்’ (Wes) நடனம் நிகழ்வை மேலும் மெருகூட்டின.

புத்தளம் மாவட்டச் செயலாளர் திரு. இந்திக்க மஞ்சுள சில்வா அவர்களின் வரவேற்புரையை தொடர்ந்து, இந்த நன்நாளில், நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மது பைசல் தமிழ் மொழியில் தனது சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

சிங்கள மொழியில் நாடாளுமன்ற உறுப்பினர் கயான் ஜானக தனது வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்து கொண்டார்.

இந்நிகழ்வில் மகா சங்கத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்கள், புத்தளம் மாவட்டச் செயலாளர் இந்திக சில்வா, மேலதிக மாவட்டச் செயலாளர்களான புபுதிகா எஸ். பண்டார (நிர்வாகம்) மற்றும் சதுரிகா ஜயசிங்க (காணி) ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவர்களுடன் முப்படைகளின் பிரதிநிதிகள், பொலிஸார், சிவில் பாதுகாப்புப் படையினர், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் நிறுவனத்திடமிருந்து பெட்ரோல் கொள்வனவு!

0

இலங்கைக்குத் தேவையான 92 ரக பெட்ரோல் விநியோகத்திற்காக, சிங்கப்பூரைச் சேர்ந்த M/s. Epdesa Pte. Ltd. நிறுவனத்துடன் நீண்டகால ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தலா 300,000 (± 5%) பீப்பாய்கள் கொண்ட 05 கப்பல் பெட்ரோல் தொகுதிகளை கொள்வனவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த விநியோகங்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் இடம்பெறவுள்ளன.

இலங்கை கனிப்பொருள் எண்ணெய் கூட்டுத்தாபனத்தில் (CPC) பதிவு செய்யப்பட்ட விநியோகஸ்தர்களிடமிருந்து இதற்கான விலைமனுக்கள் கோரப்பட்டிருந்தன. இதில் மொத்தம் 06 விநியோகஸ்தர்கள் தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருந்தனர்.

சமர்ப்பிக்கப்பட்ட விலைமனுக்களை மதிப்பீடு செய்த உயர் மட்ட நிலையான கொள்முதல் குழுவின் பரிந்துரைக்கமைய, குறைந்த விலையை முன்வைத்த (Lowest Responsive Bidder) சிங்கப்பூரின் M/s. Epdesa Pte. Ltd. நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தத்தை வழங்கத் தீர்மானிக்கப்பட்டது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி அவர்கள் சமர்ப்பித்த இந்த முன்மொழிவுக்கு அமைச்சரவை தனது உத்தியோகபூர்வ அங்கீகாரத்தை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரிய வகை உயிரினத்தை வேட்டையாடிய கொடூரம்!

இலங்கையின் பல்லுயிர் பெருக்கத்தின் அடையாளங்களில் ஒன்றான, மிகவும் அரிய வகை உயிரினமான “உக்லான்” (Pangolin/அழுங்கு வகை) விலங்கினை இறைச்சிக்காக கடத்திச் சென்ற கும்பலை தர்மபுரம் பொலிஸார் இன்று (03.02.2026) அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், அரிய வகை விலங்கு ஒன்று இறைச்சிக்காகக் கொல்லப்பட்டு கடத்தப்படுவதாக பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்ததையடுத்து உடனடியாகச் செயற்பட்ட தர்மபுரம் பொலிஸார், குறித்த பகுதியில் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டனர்.

இந்தச் சோதனையின் போது, உக்லான் விலங்கினை இறைச்சிக்காக எடுத்துச் சென்ற சந்தேக நபர்கள் கையும் மெய்யுமாகப் பிடிபட்டனர். இயற்கையின் பொக்கிஷமாக கருதப்படும் இவ்வுயிரினத்தை, வெறும் பணத்திற்காகவும் நாவசைவிற்காகவும் சிதைக்க முற்பட்ட செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள தர்மபுரம் பொலிஸார், நாளை (04.02.2026) அவர்களை கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் வனப்பகுதிகளில் மிக அரிதாகக் காணப்படும் உக்லான் (அழுங்கு) போன்ற உயிரினங்கள், உலக அளவில் பாதுகாக்கப்பட்ட பட்டியலிலுள்ளவை.

இவ்வாறான விலங்குகளை வேட்டையாடுவது தண்டனைக்குரிய குற்றம் என்பதால் பொலிஸாரின் இந்த அதிரடி நடவடிக்கை பிரதேசவாசிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இலங்கையின் சுதந்திர தினத்தில் சவூதி தூதுவர் நெகிழ்ச்சி!

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, நட்பு நாடான இலங்கை குடியரசின் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைவதாக இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானி தெரிவித்துள்ளார்.

இந்த தேசியத் திருநாள் இலங்கை குடியரசின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். இது அந்நாட்டு மக்கள் தமது தேசிய இறையாண்மையை நிலைநாட்டவும், அபிவிருத்தி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான பாதையை பலப்படுத்தவும் மேற்கொண்ட சாதனைகளை பிரதிபலிப்பதாக இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்தர்ப்பத்தில், எமது இரு நட்பு நாடுகளுக்கும் இடையே நிலவும் இருதரப்பு உறவுகளுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பல்வேறு துறைகளில் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வினால் இந்த உறவுகள் அடையாளப்படுத்தப்படுகின்றன. எமது இரு நாடுகளினதும் மக்களினதும் பொதுவான நலன்களுக்காக இந்த உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் மேம்படுத்தவும் தாம் எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை குடியரசின் இந்த தேசிய கொண்டாட்டத்தில் தானும் இணைந்து கொள்வதுடன், இலங்கை குடியரசு தொடர்ந்தும் பாதுகாப்பாகவும், ஸ்திரத்தன்மையுடனும் விளங்கி, மேன்மேலும் முன்னேற்றத்தையும் சுபிட்சத்தையும் அடைய வேண்டுமென வாழ்த்துவதாக காலித் ஹமூத் அல்-கஹ்தானி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தாயும், மகனும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில்!

0

சிரந்தி மற்றும் நாமல் ராஜபக்சவிற்கு அழைப்பாணை: விசாரணை பிரிவுகளில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாரியார் சிரந்தி ராஜபக்ச மற்றும் அவரது புதல்வர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோர் இன்றைய தினம் (03) நிதி குற்றப்புலனாய்வுப் பிரிவின் வெவ்வேறு விசாரணை பிரிவுகளில் ஆஜராகியுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் சிரந்தி ராஜபக்சவை இன்றைய தினம் காலை 09 மணியளவில் நிதி குற்றப்புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகுமாறு பணிக்கப்பட்டிருந்த நிலையில் ‘சிரிலிய’ (Siriliya) கணக்கிலிருந்த நிதியைப் பயன்படுத்தி வீடொன்றை கொள்வனவு செய்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுத் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றைப் பதிவுசெய்ய இன்று காலை குற்றப்புலனாய்வுப் பிரிவிக்கு வருகை தந்தார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இன்றைய தினம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார்.

திட்டமிட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ (Kehelbaddara Padme) என்பவருடன் தொடர்புகளைப் பேணியதாக நாமல் ராஜபக்ச மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரணை செய்வதற்காகவே அவர் இவ்வாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார்

இன்றைய தினம் தந்தை மஹிந்த ராஜபக்சவின் பாரியார் மற்றும் புதல்வர் ஆகிய இருவருமே வெவ்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைப் பிரிவுகளுக்கு வருகை தந்துள்ள நிலையில், குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வெளியில் பெருமளவான ஆதரவாளர்கள் குழுமியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில் உலகக்கிண்ண வெற்றிக் கிண்ணத்திற்கு நேர்ந்த கதி!

0

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கிண்ணப் போட்டிக்கான (T20 World Cup) வெற்றிக்கிண்ணத்தை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வந்த போது, நல்லூர் கந்தசுவாமி கோவில் நிர்வாகத்தினருக்கும் அமைப்பாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் அமைதியற்ற சூழல் நிலவியது.

தெற்கிலிருந்து வெற்றிக்கிண்ணத்தை ஏந்தி வந்த குழுவினர், கோவில் வளாகத்தின் புனிதத்தன்மையைப் பேணாமல், காலணிகளை (Shoes) அணிந்து கொண்டு அங்குமிங்கும் நடமாடியுள்ளனர். இவர்களின் இச்செயலால் அதிருப்தியடைந்த கோவில் நிர்வாகிகள் தமது கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். அத்துடன், அக்குழுவினர் கோவில் முழுவதும் ஒழுக்கமற்ற முறையில் புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்தமையும் நிர்வாகத்தினரை கோபமடையச் செய்தது.

“வெற்றிக்கிண்ணத்தை விட எமக்கு கடவுளே முக்கியம்” வாக்குவாதம் முற்றிய நிலையில், அங்கிருந்த மதகுரு ஒருவர் அமைப்பாளர்களுடன் வந்திருந்த ஒரு தமிழ் நபரைப் பார்த்து, “எங்களுக்கு இந்த வெற்றிக்கிண்ணத்தை விட எமது கடவுளே மிகவும் பெறுமதியானவர். எனவே, உங்களது பெறுமதியான வெற்றிக்கிண்ணத்தை எடுத்துக்கொண்டு உடனடியாக இவ்விடத்தை விட்டு வெளியேறுங்கள்” என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

நல்லூர் கோவிலின் பாரம்பரிய ஆசாரப்படி, உள்ளே நுழையும் ஆண்கள் அனைவரும் மேற்சட்டை அணியாமல் (Bare-chested) நுழைய வேண்டும் என்பது விதியாகும். வெற்றிக்கிண்ணத்தை ஏந்தி வந்த குழுவில் இருந்த சிலர் இந்த விதியைப் பின்பற்ற மறுத்ததால், அங்கு மீண்டும் ஒரு குழப்பான சூழ்நிலை உருவானது.

இதனைத் தொடர்ந்து, அக்குழுவினர் மிகுந்த ஒழுக்கத்துடன் நடந்து கொள்வதாக இணங்கியதையடுத்து, வெற்றிக்கிண்ணம் கோவிலில் வைக்கப்பட்டு, ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்தவுடன் அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டது. இருப்பினும், இந்த கசப்பான சம்பவத்தை அடுத்து, கோவிலின் கலாசார விழுமியங்களையும் ஒழுக்கக் கட்டுப்பாடுகளையும் மதிக்காத எந்தவொரு குழுவினருக்கும், எதிர்காலத்தில் கோவில் வளாகத்திற்குள் எவ்விதமான நடவடிக்கைகளுக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது என நல்லூர் கோவில் நிர்வாக சபை அதிரடியாகத் தீர்மானித்துள்ளது.

வெலிகம பிரதேச சபை தேசிய மக்கள் சக்தி வசம்!

0

வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளராக தேசிய மக்கள் சக்தியின் சிந்தக ஹேவாபதிரண தெரிவு

வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் தேசிய மக்கள் சக்தியின் (NPP) சார்பில் போட்டியிட்ட சட்டத்தரணி சிந்தக ஹேவாபதிரண (Chinthaka Hewapathirana) வெற்றி பெற்று, புதிய தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்,.

வெற்றிடமாக இருந்த தவிசாளர் பதவிக்காக நடைபெற்ற இந்த வாக்கெடுப்பில், சிந்தக ஹேவாபதிரண 22 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்து கூட்டு எதிர்க்கட்சியின் சார்பில் போட்டியிட்ட ரசிக பிரியங்கர (Rasika Priyankara) 21 வாக்குகளைப் பெற்றார். இரண்டு வாக்குகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதால் அவை நிராகரிக்கப்பட்டன.

முன்னாள் தவிசாளர் லசந்த விக்கிரமசேகர படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்தப் பதவி வெற்றிடமானது. இதற்கு முன்னர் கடந்த நவம்பர் 28 மற்றும் டிசம்பர் 26 ஆகிய திகதிகளில் தவிசாளரைத் தெரிவு செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வருகை தராததால் போதிய கோரம் (Quorum) இன்றி கைவிடப்பட்டன,.

தெற்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எரந்தி உமயங்கனா மென்டிஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சபையின் 45 உறுப்பினர்களும் கலந்துகொண்டமை ஒரு சிறப்பம்சமாகும். அறுவை சிகிச்சை செய்துகொண்டிருந்த எச்.ஏ. பத்மசிறி என்ற உறுப்பினர் கூட மற்றவர்களின் உதவியுடன் சபை அமர்வில் பங்கேற்று தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

வாக்கெடுப்பு முறையைத் தீர்மானிப்பதில் சபையில் இருவேறு கருத்துக்கள் நிலவின. கூட்டு எதிர்க்கட்சியினர் பகிரங்க வாக்கெடுப்பை வலியுறுத்திய நிலையில், தேசிய மக்கள் சக்தியினர் இரகசிய வாக்கெடுப்பை நடத்த முன்மொழிந்தனர். இறுதியில், 25 உறுப்பினர்களின் ஆதரவுடன் இரகசிய வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது.

வெற்றிக்குப் பின்னர் உரையாற்றிய புதிய தவிசாளர் சிந்தக ஹேவாபதிரண பின்வருமாறு கருத்துக்களைத் தெரிவித்தார்:

இந்த வெற்றியை வெறும் கொண்டாட்டமாக மட்டும் தான் கருதவில்லை எனவும், வெலிகம பகுதியில் நீண்டகாலமாக நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே தனது முதன்மை நோக்கம் என்றும் குறிப்பிட்டார்.

கடந்த காலத்தில் வெலிகம பகுதி போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் ஆதிக்கம் நிறைந்த ஒரு ‘கருப்பு வலயமாக’ இருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

அனைத்துத் துறையினரினதும் ஒத்துழைப்புடன், “அழகான வாழ்க்கை – வளமான நாடு” என்ற ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தை யதார்த்தமாக்கி, ஒரு புதிய வெலிகமவை உருவாக்கப் போவதாக அவர் உறுதியளித்தார்.

சிந்தக ஹேவாபதிரண இதற்கு முன்னர் வெலிகம பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தேர்தல் நடவடிக்கைகள் மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்றதுடன், அப்பகுதியில் பலத்த பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

விலங்கு பண்ணையில் இயங்கி வந்த பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம்!

0

ஜூட் சமந்த

விலங்கு பண்ணையில் இயங்கி வந்த பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை: 312 போத்தல்கள் மற்றும் உபகரணங்கள் மீட்பு

மாரவிலை – இஹல கட்டுநேரிய பகுதியில் அமைந்துள்ள விலங்கு பண்ணை ஒன்றினுள் இரகசியமான முறையில் நடத்தப்பட்டு வந்த கசிப்பு (சட்டவிரோத மதுபானம்) உற்பத்தி நிலையமொன்றை மாரவிலை பொலிஸார் அதிரடியாக முற்றுகையிட்டுள்ளனர்.

கடந்த 2 ஆம் திகதி இரவு மாரவிலை பொலிஸாரால் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, அந்த இடத்தில் கசிப்பு உற்பத்தி செய்து கொண்டிருந்த 29 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் தங்கோட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சோதனையின் போது கசிப்பு உற்பத்தி நிலையத்திலிருந்து 312 கசிப்பு போத்தல்கள், 42 பிளாஸ்டிக் பீப்பாய்கள், 2 செப்பு சுருள்கள் (Copper coils), கசிப்பு காய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்படும் ஏனைய உபகரணங்கள் பொலிஸாரினால் மீட்கப்பட்டன.

பொலிஸ் விசேட பிரிவின் (Police Special Bureau) மாரவிலை கிளையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய இந்த முற்றுகை திட்டமிடப்பட்டது. மாரவிலை பொலிஸ் நிலையத்தின் ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் சமோத் தர்மப்பிரிய உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் இந்தத் திடீர் சோதனையை முன்னெடுத்திருந்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட கசிப்பு உள்ளிட்ட பொருட்கள் அனைத்தையும் மாரவிலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இப்பகுதியில் இவ்வாறான சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையங்கள் தொடர்பில் பொலிஸார் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.

மாயமான மனிதர்கள்! சிலாபத்தில் நடந்தது விபத்தா அல்லது சதியா?

0

ஜூட் சமந்த

சிலாபத்தில் மீன்பிடிக்கச் சென்ற இரண்டு மீனவர்கள் மர்மமான முறையில் காணாமல் போயுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சிலாபம் மீனவர்களின் மர்மமான காணாமல் போதல்: கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்களா? உறவினர்கள் சந்தேகம்

கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி அதிகாலை மீன்பிடிக்கச் சென்ற சிலாபம் பகுதியைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளனர். இவர்களின் காணாமல் போதல் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்காத நிலையில், அவர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என உறவினர்கள் பலத்த சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

காணாமல் போனவர்கள் சிலாபம் – குருசபாடுவ பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய ரொஷான் பெர்னாண்டோ மற்றும் தலாடிவெல்ல பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய சுஜித் குமார பெர்னாண்டோ என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் தலா இரண்டு பிள்ளைகளின் தந்தையாவர்.

கடந்த 19 ஆம் திகதி அதிகாலை 2:00 மணியளவில் இவர்கள் இருவரும் ஒரு சிறிய டிங்கி படகில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இருப்பினும், அன்றைய தினமே முற்பகலில் அவர்கள் சென்ற படகானது சிலாபம் முகத்துவாரத்திற்கு (Lagoon Mouth) அருகில் எவ்வித சேதமுமின்றி மற்றைய மீனவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், படகில் சென்ற இரண்டு மீனவர்களும் அங்கு இருக்கவில்லை.

இயற்கை அனர்த்தமா அல்லது திட்டமிட்ட குற்றமா?

காணாமல் போன ரொஷானின் மனைவி ஆஷா பெர்னாண்டோ இது குறித்துக் கூறுகையில்,

“எனது கணவர் மதுவோ அல்லது புகைப்பிடிக்கும் பழக்கமோ இல்லாதவர். வழக்கமாக கடல் கொந்தளிப்பாக இருக்கும் போது படகுகள் கவிழ்வது இயல்பு, ஆனால் தற்போது கடல் மிகவும் அமைதியாக உள்ளது. அவர்கள் சென்ற படகு கவிழவும் இல்லை” எனத் தெரிவித்தார். படகு முகத்துவாரத்திற்கு அருகிலேயே மீட்கப்பட்டதால், விபத்து நடந்திருந்தால் அது அங்கேயே நடந்திருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

உறவினரான டபிள்யூ. அந்திகா பெர்னாண்டோ இச்சம்பவத்தில் பாரிய சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்தார். “அவர்கள் கடலில் விழுந்து காணாமல் போயிருந்தால் இந்நேரம் உடல்கள் எங்காவது கரை ஒதுங்கியிருக்க வேண்டும். யாரோ அவர்களைக் கடத்திச் சென்று கொலை செய்திருப்பார்கள் என்றே நாங்கள் கருதுகிறோம்” என அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், முறையான குற்றப்புலனாய்வு விசாரணைகளை முன்னெடுக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த முதலாம் திகதி, சிலாபம் முகத்துவாரத்திற்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் பொலிஸாருடன் இணைந்து தேடுதல் நடத்தப்பட்டது. இருப்பினும், அக்காடு மிகவும் அடர்த்தியாக இருந்த காரணத்தினால் தேடுதல் குழுவினரால் உள்ளே செல்ல முடியாமல் போனதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுஜித் குமாரின் மனைவி டபிள்யூ. இந்திராணி தனது கணவரே தங்களின் ஒரே வாழ்வாதாரம் எனக் கண்ணீருடன் தெரிவித்தார். “அவருக்கு என்ன நடந்தது என்று தெரிந்தால் மாத்திரமே எங்களால் ஏதோ ஒரு மதக் கருமத்தையாவது செய்ய முடியும். இன்று இரண்டு பிள்ளைகளுடன் நான் தனித்து விடப்பட்டுள்ளேன்” என அவர் வேதனை தெரிவித்தார்.

காணாமல் போன மீனவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிய அவர்களின் உறவினர்கள் ஒருபுறம் தெய்வங்களை நாடிச் செல்கின்றனர், மறுபுறம் சட்டத்தின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். எனினும், இன்றுவரை அவர்களின் கேள்விக்கு எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.