Sunday, May 3, 2026
Sponsored advertisementspot_img
Home Blog

நாகவில்லுவில் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ்வின் நினைவுதினம்!

பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று நாகவில்லுவில் இடம்பெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வு!

இலங்கை திருநாட்டில் பெளதீக ரீதியான பல வேலைத்திட்டங்களையும், இடம்பெயர்வு மற்றும் எல்லை நிர்ணயம் தொடர்பான பறந்துபட்ட அறிவினையும் கொண்டிருந்த எருக்கலம்பிட்டியை சேர்ந்த மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது வருட நினைவு தின நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

அந்த வகையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் நினைவுப் பேருரையும், புத்தக வெளியீடு நிகழ்வும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் ஏற்பாட்டில் நேற்று 25.08.2025 புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய அதிபர் ஜனாப் S.M. ஹுஸைமத் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், புத்தி ஜீவிகள் மற்றும் குடும்பத்தார்கள் கலந்தகொண்டமை விஷேட அம்சமாகும்.

சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் பொருளாளர் ஜனாப் ஏ.ஜி. அனீஸ் (Bsc.Agri) அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.

மேலும் இஸ்லாமிய கற்கை அறபு மொழிப் பீட, தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களினால் நூல் அறிமுக உரையும், நினைவுப் பேருரையும் மிகவும் உணர்வுபூர்வமாக நிகழ்த்தப்பட்டது.

கிழக்கு மற்றும் தென் கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பங்களிப்பு அளப்பெரியது என நினைவு கூறிய பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன், வடக்கில் ஏற்பட்ட யுத்தம் மற்றும் முஸ்லிம்களின் இடம்பெயர்வு குறித்து அதீத அக்கறையுடன் செயற்பட்ட மிக முக்கியமானவர் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்கள் எனவும் எடுத்துரைத்தார்.

வடக்கு முஸ்லிம்களின் இடம்பெயர்வு மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பில் அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களுடன் பலதரப்பட்ட கலந்துரையாடல்களை நடத்தி, சர்வதேசம் வரை இவ்விடயங்களை கொண்டுசென்ற மகான் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் என பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் தனது உரையில் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் புதல்வி சட்டத்தரணி எப்.சப்னா ஹஸ்புல்லாஹ் அவர்களினால் ஏற்புரை நிகழ்த்தப்பட்டதுடன், நூல் வெளியீடு நிகழ்வும் இடம்பெற்றது.

நூலின் முதற்பிரதியை ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தரும், புத்தளம் எருக்கலம்பிட்டி பள்ளிவாசல் நிர்வாக சபையின் முன்னாள் உறுப்பினருமான ஜனாப் ரஹ்மத்துல்லாஹ் (GS) அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

மேலும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் செயலாளர் ஜனாப் எஸ்.எச்.எம். றிஸ்னி அவர்களினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டதுடன், தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன், மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பாரியாருக்கும் நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில், பேராசிரியர்கள், கல்விமான்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், பாடசாலைச் சமூகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் குடும்பத்தார்கள் என பலரும் கலந்து சிறப்பித்ததுடன், ஈ நியூஸ் பெஸ்ட் ஊடக நிறுவனம் ஊடக அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரணிலுக்காக ஒன்று திரண்ட அரசியல் தலைவர்கள்!

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விசாரணை கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது, நாட்டின் அடிப்படை ஜனநாயக நிறுவனங்களின் வலிமை குறித்து கடுமையான கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் விளைவுகள் ஒரு தனிநபரின் அல்லது எந்தவொரு அரசியல் கட்சிகளின் தலைவிதியையும் விட, சமூகத்தின் உரிமைகளுக்கான பிரச்சினைகளை தோற்றிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் தலைவர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைகளை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது மற்றும் விளக்கமறியலை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து நடத்திய விசேட ஊடக சந்திப்பில் பங்கேற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரல முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் அறிக்கையை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

போர்த்துக்கல் அணி சாம்பியன் ஆனது!

0

‘நேஷன்ஸ் லீக்’ கால்பந்தில் போர்ச்சுகல் அணி சாம்பியன் ஆனது. பைனலில் ‘பெனால்டி ஷூட் அவுட்டில்’ 5-3 என ஸ்பெயினை வீழ்த்தியது.

ஐரோப்பிய கால்பந்து அணிகளுக்காக ‘நேஷன்ஸ் லீக்’ தொடர் நடத்தப்படுகிறது. மொத்தம் 54 அணிகள் பங்கேற்றன. நேற்று ஜெர்மனியின் முனிக் நகரில் நடந்த பைனலில், போர்ச்சுகல், நடப்பு யூரோ சாம்பியன் ஸ்பெயின் பலப்பரீட்சை நடத்தின. போட்டியின் 21வது நிமிடம் ஜுபிமெண்டி (ஸ்பெயின்), 26வது நிமிடம் மெண்டிஸ் (போர்ச்சுகல்) தலா ஒரு கோல் அடித்தனர். 45வது நிமிடம் மைக்கேல் ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் ஸ்பெயின் அணி 2-1 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் 61 வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். போர்ச்சுகல் அணிக்காக இவர் அடித்த 138வது கோல் இது. 90 நிமிட முடிவில் போட்டி 2-2 என சமன் ஆனது. அடுத்து நடந்த கூடுதல் நேரத்திலும் (30 நிமிடம்) இரு அணியும் கோல் அடிக்கவில்லை.

இதையடுத்து வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி ‘பெனால்டி ஷூட் அவுட்டுக்கு’ சென்றது. இரு அணிக்கும் தலா 5 வாய்ப்புகள் தரப்பட்டன. காயம் காரணமாக 88 வது நிமிடம் வெளியேறிய ரொனால்டோ, இதில் பங்கேற்கவில்லை.

முதல் 3 வாய்ப்பில் போர்ச்சுகலின் ராமோஸ், விடின்ஹா, பெர்ணான்டஸ் கோல் அடித்தனர். மறுபக்கம் ஸ்பெயின் தரப்பில் மெரினோ, பயேனா, இஸ்கோ கோல் அடிக்க 3-3 என ஆனது.

4வது வாய்ப்பில் மெண்டெஸ் (போர்ச்சுகல்) கோல் அடிக்க, ஸ்பெயினின் மோராட்டோ அடித்த பந்தை கோல் கீப்பர் டீகோ கோஸ்டா தடுத்து அசத்தினார்.

5வது வாய்ப்பில் நெவேஸ் கோல் அடித்தார். இதையடுத்து 5-3 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் ‘திரில்’ வெற்றி பெற்றது. 2019க்குப் பின் இத்தொடரில் மீண்டும் சாம்பியன் ஆனது.

தில்லையடியில் சிக்கிய கடத்தல் பீடி இலைகள்!

0

புத்தளத்தில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளுடன் வேன் ஒன்றும் பறிமுதல்!

இலங்கை கடற்படை, பொலிஸாருடன் இணைந்து, புத்தளம், தில்லையடி பகுதியில் 2025 ஜூன் 05 இரவு வேளையில் நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகள் கொண்ட ஒரு வேன் கைப்பற்றப்பட்டது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிறுவனம், புத்தளம் பொலிஸாருடன் இணைந்து தில்லையடி பகுதியில் நடத்திய இந்த சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்று சோதனை செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகளானது வாகனத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் வேன் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களால் ஆபத்தா?

விண்வெளியில் பூமியை சுற்றி வந்துக்கொண்டிருக்கும் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கொள்களை சீனா நினைத்தால் வெறும் 12 மணி நேரத்தில் தாக்கி அழித்துவிட முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் என்கிற செய்தி ஊடகத்தில் இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது தற்போது சீனா 99 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. இவை அனைத்தும் நான்ஜிங் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஆஸ்ட்ரோனாட்டிக்ஸ் பல்கலைக்கழகத்தின் விண்வெளிக் கட்டுப்பாட்டுத் துறையின் இயக்குநர் வூ யுன்ஹுவா தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இவை அனைத்தும் எலான் மஸ்கின் 1400 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை வெறும் 12 மணி நேரத்தில் காலி செய்துவிடும். சீன செயற்கைக்கோளில் லேசர், நுண் அலைகளை உருவாக்கும் கருவி, உளவு கருவிகள் பொருத்தப்பட்டிருக்கலாம். ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் வெறுமென நெட்வொர்க் கொடுக்க மட்டுமே பயன்படுத்தப்படுவதில்லை. தவிர, ராணுவ நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது என சீனா குற்றம்சாட்டி வருகிறது.

அதாவது, உக்ரைன்-ரஷ்யா போரில், உக்ரைன் படைகளுக்கு தகவல்கள் கொடுக்கவும், ரஷ்ய எல்லையை துல்லியமாக கண்காணிக்கவும் இந்த செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த 2022ம் ஆண்டு ரஷ்ய போரின்போது அப்போதைய உக்ரைனின் துணைப் பிரதமரான மைக்கைலோ ஃபெடோரோவ், “ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் சேவையை உடனடியாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த மஸ்க், “உடனடியாக சேவை வழங்கப்படும்” என்று கூறியிருந்தார்.

உக்ரைன் போருடன் மட்டுமே ஸ்டார்லிங்க் நிற்காது, நாளை சீனாவுக்கும்-தைவானுக்கும் பஞ்சாயது ஏற்பட்டால் அப்போதும், தைவானுக்கு சப்போர்ட் செய்ய ஸ்டார்லிங்க் வரும். எனவே இந்த கூட்டு நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்க சீனா இந்த புதிய செயற்கைக்கோள்களை உருவாக்கியிருக்கிறது.

கடந்த 2023ம் ஆண்டு இதற்கான பணிகளை சீனா தொடங்கியது. இந்த திட்டத்திற்கு ‘கியான்ஃபான் மெகா-விண்மீன் திட்டம்’ (Qianfan mega-constellation project) என்றும் பெயரிட்டிருந்தது. நோக்கம் உலகம் முழுவதும் இணைய தொடர்பை வழங்குவதாகும். இதற்காக மொத்தம் 15,000 சிறிய ரக செயற்கைக்கோள்களை ஏவ சீனா முடிவெடுத்தது. இதன் முதல் தொகுப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏவப்பட்டது. இதில் 18 செயற்கைக்கோள்கள் இருந்தன.

ஒவ்வொன்றும் சுமார் 300 கி.கி எடையில் இருந்தது. இவை பூமியிலிருந்து 800 கி.மீ உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டது. இதேபோன்று 2024 டிசம்பரில் அடுத்து இரண்டு தொகுதி ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. தற்போது மொத்தம் 99 செயற்கைக்கோள்கள் விண்வெளியில் இருக்கின்றன. 15,000 செயற்கைக்கோள்களை 3 கட்டங்களாக ஏவ இருக்கிறது. முதல் கட்டத்தில் 1,296 செயற்கைக்கோள்கள் ஏவப்படும். இதில் 648 செயற்கைக்கோள்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஏவப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் கன்னி உரை

0

அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்புவோம்

தேசியத்துவத்துடனும் ஐக்கியத்துடனும் ஒன்றுபட்டு நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க இன்று (23) காலை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

பதவிப் பிரமாணத்தின் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய முழுமையான உரை:

மக்களால் ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது நமது நாட்டின் ஜனநாயகத்திலிருக்கும் மிக முக்கியமான அம்சமாகும். தேர்தலில் வாக்களித்தல் மற்றும் ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதோடு ஜனநாயகம் நிறைவு பெறுவதில்லை. இது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சம் என்றாலும், நம் நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்த, கட்டமைப்புகளின் வலிமையும், சட்டங்களை வலுப்படுத்துவதும் அவசியம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனவே, எனது பதவிக்காலத்தில் இந்த நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.

அத்துடன், இந்த நாட்டில் ஜனநாயக முறையில் அதிகாரப் பரிமாற்றம் நடந்த வரலாறும் உண்டு. தேர்தலில் நிகழும் அதிகாரப் பரிமாற்றத்தை எந்தத் தலைவரும் நிராகரித்ததில்லை. அதற்கமைய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த மக்கள்ஆணையை சுமூகமாக ஏற்றுக்கொண்டதுடன், ஜனநாயக ரீதியில் அதிகாரத்தை கைமாற்றுவதற்கான அவரின் அர்ப்பணிப்பிற்கும் முன்னுதாரணத்திற்கும் நன்றி தெரிவிக்கிறேன். மேலும் எமக்கு கிடைப்பது மிகவும் சவால் நிறைந்த நாடு என்பதை நன்கு புரிந்து கொண்டிருக்கிறோம். நமது அரசியலில் தூய்மையான, மக்களால் எதிர்பார்க்கப்படும் சிறந்த அரசியல் கலாசாரத்திற்காக அவசியம் காணப்படுகிறது.அதற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

நம் நாட்டின் அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு நல்லெண்ணம் இல்லை. எனவே, அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் மீது மக்கள் மரியாதை மற்றும் நம்பிக்கையை மீட்டெடுக்க எங்கள் தரப்பிலிருந்து முடிந்த அனைத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.

மேலும், நமக்கு முன் இருக்கும் இந்த ஆழமான நெருக்கடியை வெறும் அரசோ, வெறும் அரசியல் கட்சியோ அல்லது ஒரு தனி நபரோ மட்டும் தீர்க்க முடியும் என்று நாங்கள் நம்பவில்லை. ஏனென்றால், நான் முன்பு கூறியது போல், நான் ஒரு மாயாஜால வித்தைக்காரனல்ல. நான் மந்திரவாதியும் இல்லை. நான் இந்த நாட்டின் சாதாரண குடிமகன். எம்மிடம் திறமைகள் உள்ளன. இயலாமைகளும் உள்ளன. தெரிந்த விடயங்களும் உள்ளன அதேபோன்று, தெரியாத விடயங்களும் உள்ளன.

ஆனால் திறமைகளைப் பயன்படுத்தி தெரியாதவற்றை சேகரித்துக்கொண்டு சிறந்த முடிவுகளை எடுத்து இந்த நாட்டை வழிநடத்துவதே எனது தலையாய பணியாகும். அந்த கூட்டுப் பங்களிப்பின் ஒரு அங்கமாக மாறுவது எனது பொறுப்பாகும். மேலும், இந்த நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதில் பொது மக்கள் மற்றும் அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் பாரிய பொறுப்பு உள்ளது. அந்தப் பொறுப்பை நிறைவேற்ற அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்.

ஆனால், நாட்டின் ஜனாதிபதி என்ற முறையில், இந்தப் பணியை முன்னின்று நடத்துவதில் எனக்கு முதன்மையான மற்றும் மிக முக்கியமான பொறுப்பு இருப்பதை நான் ஏற்றுக்கொண்டேன். எனவே, இந்தச் சவாலை வெற்றிகொள்வதற்காக எனக்குக் வழங்கப்பட்டுள்ள பணியை நான் உரிய முறையில் நிறைவேற்றுவேன் என்பதை செயற்பாடு மற்றும் நடைமுறை மூலம் எல்லா சந்தர்ப்பங்களிலும் இந்த நாட்டின் பிரஜைகளுக்கு வெளிப்படுத்த நான் தயாராக இருக்கிறேன்.

மேலும் நமது நாட்டுக்கு சர்வதேச ஆதரவு தேவை. எனவே, உலகில் எத்தகைய அதிகாரப் பிளவுகள் இருந்தாலும், ஒவ்வொரு நாட்டையும் எமக்கு மிகவும் சாதகமாக கையாள்வதே நமது எதிர்பார்ப்பாகும். நாம் உலகில் தனிமைப்படுத்தப்பட்ட நாடு அல்ல. உலகத்துடன் கூட்டாக முன்னேற வேண்டிய ஒரு நாடாகும். அது தொடர்பில் தேவையான முடிவுகளை எடுக்க நாங்கள் சிறிதும் தயங்குவதில்லை.

மேலும், நம் நாட்டைக் கட்டியெழுப்புவதில் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு பெரும் பங்கு உள்ளது. எனவே, நாட்டை மேலும் வலுவாகக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு அவர்கள் ஆதரவளிப்பார்கள் என நான் கருதுகின்றேன்.

நம் நாட்டின் ஜனநாயகத்தின் ஊடாக நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். அதற்காக மக்கள் எனக்கு வாக்களித்தனர்.

மேலும் எனக்கு வழங்கப்படாத வாக்குகளும் உள்ளன. எனவே, எங்களின் வெற்றியின் உள்ளடக்கம் மற்றும் அளவு குறித்து எங்களுக்கு நல்ல புரிதல் உள்ளது. எனவே, எங்களுக்கு ஆதரவு வழங்காத மற்றும் எங்களை நம்பாத பிரஜைகளின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெறுவதே எனது நிர்வாகத்தின் போது எனக்கு வழங்கப்பட்டுள்ள பணியாகும். அந்தப் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

எதிர்காலத்தில் இவை அனைத்தையும் நீங்கள் நடைமுறையில் கண்டுகொள்ள முடியும். அதற்கு அனைத்து மக்களின் ஆதரவையும் எதிர்பார்க்கின்றேன்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தேர்தலில் இவ்வாறுதான் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்

0

அதிகாரிகள் மற்றும் பிற தேவைகள் முடிந்த பிறகு, மாலை 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (19) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி பிற்பகல் 4.15 மணிளவில் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“எதிர்வரும் 21ம் திகதி வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள் பெறப்பட்டதும், அதிகாரிகள் மற்றும் இதர தேவைகள் முடிந்ததும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் இரவு 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

மாலை 4.15 மணிளவில் தபால் மூல வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

அத்துடன் மாவட்ட அளவில் ஒவ்வொரு வட்டாரத்திலும் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெறும்.

வாக்கு எண்ணிக்கையின் முடிவில் முடிவுகள் கிடைத்தவுடன் ஊடகங்களுக்கு வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையே முதலில் எண்ணப்படும்.

அந்தக் கணக்கெடுப்பின் பின்னர் (மாவட்ட அளவில் எண்ணும் பணி) முதலில் வாக்குப்பெட்டிகளில் உள்ள வாக்குகள் எண்ணப்படும்.

அதன் பிறகு, ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு, தொகுதி மற்றும் மாவட்ட அளவில் அது தயாரிக்கப்படுகிறது.

தேர்தல்கள் செயலகமே ஒட்டுமொத்த முடிவுகளைக் கணக்கிடும்.

எந்த வேட்பாளரும் 50 வீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்றுள்ளாரா என சரிபார்க்கப்படும்.

அப்படியானால், அந்த நேரத்தில் வாக்கு எண்ணும் பணிகள் நிறுத்தப்படும்.

அப்போது ஜனாதிபதியை நாங்கள் அறிவிப்போம்.

எந்த வேட்பாளருக்கும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் கிடைக்காவிடின், விருப்பு வாக்கு எண்ணிக்கைக்கு செல்ல வேண்டும்.

அங்கு, அதிக வாக்குகள் பெற்ற இரண்டு வேட்பாளர்கள் போட்டியில் வைத்து விட்டு  மீதமுள்ள 36 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து நீக்கப்படுவர்” என்றார்.

புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக மாறும்

0

புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வாத்தியாசலையாக மாற்றம் பெரும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று புத்தளத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ அலிசப்ரி ரஹீம் மற்றும் சிந்தக்க மாயாதுன்ன தலைமையில் புத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்திலே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

புத்தளம் மக்களின் நீண்ட நாள் தேவையாக இருந்து வருகின்ற புத்தளம் தல வைத்தியசாலையை தரமுயர்த்துவது தொடர்பாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ அலிசப்ரி ரஹீம் அவர்களினால் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோலுக்கிணங்க குறித்த வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.

மேலும் புத்தளத்தில் மீன் பிடி தொழிலை முன்னேற்றும் நோக்கத்தில் மீன் பிடி துறைமுகம் ஒன்றை அமைக்கும் யோசனையும் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டதுடன், அதற்கான முன்னெடுப்புகளும் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்டமை புத்தளம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நாட்டில் நிரந்தர பொருளாதார அபிவிருத்தியை நிலை நாட்ட தாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டை பொருளாதார அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவதே தனது பிரதான நோக்கம் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மொட்டுக்கட்சிக்கு எதிராக நிற்கும் முக்கிய அமைச்சர்கள்

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக மொட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளரை இந்த வாரம் அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்காதிருக்கவும், மொட்டு சின்னத்தில் தனியாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமக்கு ஆதரவு வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பியிருந்த கடிதம் நேற்றைய தினம் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தினால் அரசியல் குழுவில் முன்வைக்கப்பட்டது.

எவ்வாறாயினும் அந்த கடிதத்தை நிராகரிக்க அரசியல் குழுக் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுவில் 82 பேர் அங்கம் வகிப்பதுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் 72 பேர் பங்கேற்றனர்.

இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த 11 பேர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

மஹிந்தானந்த அலுத்கமகே, பந்துல குணவர்தன, பிரதீப் உந்துகொட, கோகிலா ஹர்ஷனி குணவர்தன, சஹன் பிரதீப், ரமேஸ் பத்திரன, கஞ்சன விஜேசேகர, பிரசன்ன ரணதுங்க, கனக ஹேரத், மொஹான் பிரியதர்ஷன ஆகியோர் கட்சியின் சார்பில் தனியான வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

அத்துடன் பிறிதொரு கட்சியின் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்கும் உறுப்பினர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் யோசனைக்கு 6 பேர் எதிராக வாக்களித்துள்ளனர்.

எவ்வாறாயினும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் எனக் கூறப்பட்ட தம்மிக பெரேரா தொடர்பில் அரசியல் குழுக் கூட்டத்தின்போது எந்தவித கருத்துக்களும் பரிமாற்றிக் கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவளிக்காத 11 பேர் உள்ளிட்ட தரப்பினர் நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தனவின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சைனப் ஆரம்பப் பாடசாலைக்கு ஆளுநர் வருகை!

0

புத்தளம் சைனப் ஆரம்ப பாடசாலையின் முப்பெரும் விழா பாடசாலை அதிபர் யஹியா தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து புத்தளம் ஜெய்னப் பாடசாலைக்கு 22 லட்சம் ரூபா பெறுமதியான நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு, சிறுவர் விளையாட்டு நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தல் மற்றும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் செயற்திட்டத்தின் கீழ் BCMH நிறுவனத்தினால் கற்றல் உபகரணம் வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் கடந்த செவ்வாய்க்கிழமை (16) வெகு விமர்சையாக இடம்பெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதியாக வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், விசேட அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மற்றும் கௌரவ அதிதியாக புத்தளம் வலயக்கல்விப் பணிப்பாளர் அர்ஜுன ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆரம்ப பாடசாலையின் முக்கியத்துவம் மற்றும் அறிவார்ந்த சமூகத்தை கட்டியெழுப்ப ஆரம்ப பாடசாலை ஆற்றிவருகின்ற அர்ப்பணிப்பு குறித்து விரிவாக பேசிய வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், புத்தளம் மாவட்ட பாடசாலைகளின் துரித வளர்ச்சி பற்றியும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

மேலும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் செயற்திட்டத்திற்கு வடமேல் மாகாண ஆளுநர் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் ஜவ்ஷி ஜமால்தின், இணைப்புச் செயலாளர் எச். அமீர் அலி ஆசிரியர், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் உட்பட உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் அயல் பாடசாலையின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு
நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு

ஹிருணிகாவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறை

0

கடத்தல் வழக்கில் முன்னாள் எம்.பி ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்தத் தீர்ப்பை அறிவித்தார்.

தெமட்டகொட பகுதியிலுள்ள கடை ஒன்றில் பணிபுரிந்த அமில பிரியந்த அமரசிங்க எனும் இளைஞர் ஒருவரை 2015 டிசம்பர் 21ஆம் திகதி ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு சொந்தமான டிபெண்டர் வாகனத்தில் கடத்திய வழக்கு விசாரணை முடிவில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

29 குற்றங்கள் தொடர்பில் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் 8 பேரும் குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில், அச்சம்பத்திற்கு உதவி, ஒத்தாசை புரிந்ததாக ஹிருணிகா மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்திருந்தார்.

அத்தோடு, சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவின் ஆதரவாளர்கள் 8 பேர் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைதான ஐந்தாம் சந்தேகநபரின் மகள் அளித்துள்ள வாக்குமூலத்தில், தமது தாயாருடன் தொடர்பு பேணிய நபர் ஒருவரை தாம் காண்பித்ததாகவும், அவரை தமது தந்தையும் அவருடன் சென்றவர்களும் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு ஹிருணிகாவிடம் அழைத்துச் சென்றதாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

ஓவியப்போட்டியில் எருக்கலம்பிட்டி மாணவன் முதலாமிடம்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட வட மாகாண மானவர்களுக்கிடையிலான சித்திரப்போட்டியில் மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்றார்.

வீதி விபத்துக்கள் இல்லாத நாளைக்கான பாடசாலையிலிருந்து அணிவக்குப்போம் எனும் தொனிப்பொருளில் கடந்த வியாழக்கிழமை (13.06.2024) அன்று நடாத்தப்பட்ட வட மாகாண மாணவர்களுக்கிடையிலான குறித்த சித்திரப்போட்டியில் சுமார் 2600 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

சித்திரப்போட்டியில் பங்குபற்றிய 2600 மாணவர்களில் 250 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு நேற்றைய தினம் (15.06.2024) அவர்களுக்கான போட்டி இடம்பெற்றது.

நடைபெற்று முடிந்த இறுதிச் சுற்றுப்போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்று பெருமதிமிக்க பரிசில்களை பெற்றுக்கொண்டார்.

முதலாம் இடம் பெற்ற முஹம்மது ஹுசைன் என்ற மாணவனுக்கு சான்றிதல், துவிச்சக்கரவண்டி மற்றும் 8500/- ரூபா பெறுமதியான வவுச்சரும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இதேவேளை குறித்த போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய இல்முதீன் முஹம்மது ஹஸ்பான் 7 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய மற்றொரு மாணவரான முஹம்மது சம்ஹான் 8 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

பாரிய சாவல்களுக்கு மத்தியில் தனி ஒரு மனிதனாக இம் மாணாவர்களை ஊக்கப்படுத்தி, தயார்ப்படுத்தி போட்டியில் பங்குபெறச் செய்து வெற்றிபெறச் செய்த எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியின் சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் அவர்களின் இம் முயற்சிக்கு, பாடசாலை சமூகம் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் நன்றி தெரிவித்தனர்.

தமக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வந்து தேசிய அளவில் இடம்பெறும் போட்டிகளில் மாணவர்களை பங்குபெறச் செய்வதே தனது இலக்கு என சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் எமது ஊடகத்திற்கு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை இராஜினாமா

0

நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்துள்ளனர்.

சாந்த நிரியல்ல உட்பட 15 பேர் கொண்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரின் அறிவித்தலுக்கு அமைய இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி திங்கட்கிழமை புதிய பணிப்பாளர் சபை நியமிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ “அத தெரண” விற்கு தெரிவித்தார்.

புத்தளம் எருக்கலம்பிட்டியில் கடும் வெள்ளம்

0

புத்தளம் பகுதியில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக புத்தளம் பகுதி முழுதும் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.

புத்தளம், தில்லையடி, பாலாவி, புத்தளம் எருக்கலம்பிட்டி, ஹிதாயத் நகர்,  மதுரங்குளி மற்றும் ஏனைய பல கிராமங்களும் வெள்ளித்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமமும் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 1500 குடும்பங்கள் இங்கு வாழ்ந்துவருவதுடன், அனைத்து வீடுகளும் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நூற்றிற்கும் அதிகமான வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் ஐநூற்றுக்கும் அதிகமான வீடுகள் பகுதி அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8ஆம் திகதி ஏற்பட்ட மழை வெள்ளித்தினால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் மற்றும் பாடசாலைகளில் தற்காலிகமாக  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு தினங்களாக இவர்களுக்கான சமைத்த உணவுகள் மூன்று வேலைகளிலும் ஊர் தனவந்தர்களின் உதவியுடனும், பள்ளிவாசல் நிர்வாக சபையின் வழிகாட்டலுடனும் வழங்கப்பட்டு வருவதுடன், ஊர் மக்களுக்கும் உணவு விநியோகங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

இவர்களுக்கான நிவாரண உதவிகள் இதுவரை அரசாங்கத்தினால் வழங்கப்படாத போதிலும், ஊர் மக்களின் பங்களிப்புடன் மாத்திரமே பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு விநியோகங்கள் இதுவரை  வழங்கப்பட்டு வருகின்றது.

புத்தளம் பொத்துவில்லு பகுதியில் உள்ள குளம் மழை நீரினால்  பெருக்கெடுத்துள்ளதால் குறித்த குளத்து நீர் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமத்திற்குள் தொடர்ந்தும் மூன்றாவது நாளாக ஊடறுத்து செல்வதால் வீடுகள் தொடர்ந்தும் நீருள் மூழ்கியுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்தின் நிவாரண உதவிக்காக பல மக்கள் தொடர்ந்தும் எதிர்பார்த்து காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

போதைப்பொருள் மாஃபியாவிற்கு எதிராக நின்ற வீரன் கொலை!

0

போதைப்பொருள் வியாபாரத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்த நபர் ஒருவர், இனந்தெரியாத கும்பலால் இரும்புத் தடியால் தாக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மாரவிலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாரவிலை – குருசப் பள்ளிப் பகுதியைச் சேர்ந்த பொன்னம்பெருமகே ஸ்ரீலால் பெர்னாண்டோ (60 வயது) என்பவரே இவ்வாறு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இரவு 7.00 மணியளவில், மாரவிலை பகுதியில் வைத்து இவருக்கும் ஒரு குழுவினருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியுள்ளது. இதன்போது அக்குழுவினர் இரும்புத் தடிகளால் ஸ்ரீலால் பெர்னாண்டோவை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர், உடனடியாக மாரவிலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வந்தார். எனினும், சிகிச்சை பலனின்றி கடந்த மே மாதம் 01 ஆம் திகதி அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

உயிரிழந்த ஸ்ரீலால் பெர்னாண்டோ, குருசப் பள்ளிப் பகுதியில் ஒரு கும்பலால் முன்னெடுக்கப்பட்டு வரும் சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தவர் எனத் தெரியவந்துள்ளது. இந்த எதிர்ப்பு காரணமாகவே அவர் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும், அவர்கள் தற்போது பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளைக் கைது செய்வதற்கு மாரவிலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தித் தொகுப்பு: ஜூட் சமந்த

தோற்றால் கதை ஓவர். விஜய்தான் உதவனும் – தவெக வேட்பாளர்கள்!

0

தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களம் கண்ட தமிழக வெற்றிக் கழகம் (தவெக), தனது முதல் தேர்தல் பயணத்தை நிறைவு செய்திருக்கிறது. விஜய், அரசியலில் காலடி எடுத்து வைத்தபோது அவரோடு பயணித்த வேட்பாளர்கள் இப்போது ஒரு இக்கட்டான சூழலில் சிக்கியுள்ளனர். தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே, பல வேட்பாளர்களின் வீடுகளில் நிம்மதி மறைந்து, ‘கடன்’ என்ற பூதம் ஆட்டமிழக்கத் தொடங்கியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் ஒரு புதிய கட்சி என்பதால், மற்ற திராவிடக் கட்சிகளைப் போல அசுர பலம் கொண்ட தேர்தல் நிதி அந்தப் பார்ட்டியிடம் இல்லை என்பது நிதர்சனம். கட்சியின் தலைமை ஒரு குறிப்பிட்ட அளவிலான தொகையை வழங்கியதாகக் கூறப்பட்டாலும், கள நிலவரப்படி தங்களை நிலைநிறுத்திக் கொள்ள வேட்பாளர்கள் பெரும் தொகையைச் செலவிட வேண்டியிருந்தது.

மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் எனப் பலரும், தங்கள் கைவசம் இருந்த சேமிப்புத் தொகையைத் தாண்டி, பல லட்சம் ரூபாய் தனிநபர் கடன் (Personal Loan) பெற்றுள்ளனர். அதையும் தாண்டி, தங்கள் குடும்பத்தினரின் தங்க நகைகளை அடகு வைத்து ‘கோல்ட் லோன்’ மூலமாக அவசரத் தேவைக்கு நிதி திரட்டியுள்ளனர். தேர்தல் பிரச்சார வாகனங்கள், தொண்டர்களுக்கான உணவு, விளம்பர பேனர்கள் மற்றும் சமூக ஊடகப் பிரச்சாரங்கள் என ஒவ்வொன்றுக்கும் அவர்கள் செலவிட்ட தொகை இன்று அவர்களுக்கு ஒரு பெரும் சுமையாக உருவெடுத்துள்ளது.

“வெற்றி பெற்றால் எப்படியாவது சமாளித்துவிடலாம்” என்ற நம்பிக்கையில் கடன் வாங்கிய வேட்பாளர்கள், இப்போது தேர்தல் முடிவுகள் குறித்த கணிப்புகளால் கலக்கமடைந்துள்ளனர். ஒருவேளை தாங்கள் தோல்வியடைந்தால் அல்லது கட்சி எதிர்பார்த்த வெற்றியைப் பெறத் தவறினால், வாங்கிய கடனை எப்படித் திருப்பிச் செலுத்துவது என்ற கேள்வி அவர்களைத் துரத்துகிறது.

“கட்சிக்காக எல்லாவற்றையும் இழந்துவிட்டோம். இப்போது வட்டி கட்டக்கூட வழியில்லாத சூழல் உருவாகியுள்ளது” என சில வேட்பாளர்கள் நெருக்கமான வட்டாரங்களில் புலம்பி வருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, நடுத்தர வர்க்கப் பின்னணியில் இருந்து வந்த வேட்பாளர்கள், வாங்கிய தனிநபர் கடனுக்கான மாதாந்திரத் தவணையை (EMI) எப்படிக் கட்டப் போகிறோம் என்ற அச்சத்தில் உள்ளனர்.

விஜய் கைகொடுப்பாரா? எதிர்பார்ப்பில் வேட்பாளர்கள்

இந்த இக்கட்டான நிலையில், வேட்பாளர்களின் ஒட்டுமொத்த பார்வையும் இப்போது விஜய் பக்கமே திரும்பியுள்ளது. “நாங்கள் விஜய்க்காகவும், கட்சியின் எதிர்காலத்திற்காகவும் தான் இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்துள்ளோம். எனவே, ஒருவேளை பின்னடைவு ஏற்பட்டால், கட்சித் தலைமை எங்களைக் கைவிடக்கூடாது” என்பதே அவர்களின் தற்போதைய கோரிக்கையாக உள்ளது.

தோல்வியடையும் வேட்பாளர்களுக்கு நிதியுதவி அளிப்பதோ அல்லது அவர்களின் கடனை அடைக்க ஏதேனும் ஒரு வழியைக் காட்டுவதோ விஜய்க்குச் சாத்தியமா? என்ற விவாதம் கட்சிக்குள் எழுந்துள்ளது. விஜய் தனது சொந்த நிதியில் இருந்து உதவி செய்வாரா அல்லது எதிர்காலத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு ஒரு ‘நிவாரண நிதி’ போல எதையேனும் உருவாக்குவாரா எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அரசியல் எதிர்காலத்திற்கு விடுக்கப்படும் எச்சரிக்கை

புதிதாக அரசியலுக்கு வரும் இளைஞர்களுக்கும், சாமானியர்களுக்கும் இந்தச் சூழல் ஒரு எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது. முறையான நிதித் திட்டமிடல் இன்றி, உணர்ச்சிவசப்பட்டு கடன் வாங்கித் தேர்தல் களம் காண்பது, தனிநபர் வாழ்க்கையை எந்தளவுக்குப் பாதிக்கும் என்பதற்குத் தவெக வேட்பாளர்களின் தற்போதைய நிலையே சாட்சி.

முடிவுகள் சாதகமாக அமைந்தால் இந்தக் கடன்கள் அவர்களுக்கு ஒரு ‘முதலீடாக’த் தோன்றும். ஆனால், முடிவுகள் பாதகமானால், தமிழக வெற்றிக் கழகத்தின் பல முக்கிய நிர்வாகிகள் நீண்ட கால நிதி நெருக்கடியில் சிக்க நேரிடும். விஜய் தனது தொண்டர்களுக்காகவும், வேட்பாளர்களுக்காகவும் என்ன அதிரடி முடிவை எடுக்கப்போகிறார் என்பதே இப்போதைய ஹாட் டாபிக்!

மஹிந்த ராஜபக்ஷவுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைப்பாணை!

0

சர்ச்சைக்குரிய 2013ஆம் ஆண்டு எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன ஆகியோரை மே மாதம் 12ஆம் திகதி வாக்குமூலம் அளிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் விமான சேவைக்காக 06 எயார்பஸ் A-330 ரக விமானங்களையும், 08 எயார்பஸ் A-350 ரக விமானங்களையும் கொள்வனவு செய்தபோது, 02 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றதாக அப்போதைய ஸ்ரீலங்கன் விமான சேவையின் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி நியோமாலி விஜேநாயக்க ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இது தொடர்பாக இலஞ்ச ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக, சந்தேக நபரான கபில சந்திரசேன கடந்த மார்ச் 12ஆம் திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு, பின்னர் மே மாதம் 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிதி மோசடியில் ஈடு ஈடுபட்ட 120 வெளிநாட்டவர்கள் கைது!

0

ராஜகிரிய, மெத வெலிக்கடை வீதியில் உள்ள இடமொன்றில் சட்டவிரோத நிதி மோசடிகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் சுமார் 120 வெளிநாட்டவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தப் பிரிவினரிடையே சீனா, வியட்நாம், மலேசியா, மடகாஸ்கர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் கம்போடியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களிடமிருந்து ஏராளமான கணினிகள் மற்றும் கைபேசிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மெத வெலிக்கடை வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் பல மாடிகளை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து, இவர்கள் இந்த மோசடி நடவடிக்கையை முன்னெடுத்து வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது நடவடிக்கையின் போது இவர்களில் ஒரு குழுவினர் தப்பியோடியுள்ளனர். அவர்களைக் கைது செய்வதற்காக வெலிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை கணினி குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 36 வெளிநாட்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட 37 பேர் வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், நேற்று சனிக்கிழமை (02) மாலை வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் மற்றும் தலங்கம பொலிஸார் இணைந்து மேற்கொண்ட விசேட சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் விலையில் அதிரடி மாற்றம்!

0

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 2026 மே 02 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் மாற்றங்களை அறிவித்துள்ளது.

புதிய எரிபொருள் விலையின் அடிப்படையில், ஒக்டேன் 92 ரக பெட்ரோல் 12 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு ஒரு லீற்றரின் புதிய விலையாக ரூ. 410.00 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு ஒரு லீற்றரின் புதிய விலையாக ரூ. 470.00 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒட்டோ டீசல் 10 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு ஒரு லீற்றரின் புதிய விலையாக ரூ. 392.00 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சுப்பர் டீசல் 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு ஒரு லீற்றரின் புதிய விலையாக ரூ. 458.00 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் புதிய விலை ரூ. 265.00 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 10 ரூபாயால் மண்ணெண்ணெய் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

நிதி மோசடி: நிஷாந்தவின் மரணம் தற்கொலையா? திட்டமிட்ட சதியா?

0

திறைசேரியின் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மூன்றாம் தரப்பினருக்குக் கைமாறிய சம்பவம் தொடர்பாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க நிஷாந்த ராஜபக்சவின் மரணம் குறித்து உளவியல் ரீதியான மரணப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என ‘தினன தகுன’ அமைப்பின் உறுப்பினர் சட்டத்தரணி ஷிரால் லக்திலக கோரியுள்ளார். 

இந்த நிதி மோசடி குறித்து நிதி அமைச்சின் செயலாளர் 4 மாதங்களாகத் தகவல்களை மறைத்திருப்பது கடுமையான சந்தேகத்தைத் தோற்றுவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

எனவே, இது குறித்து ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோரிடம் உளவியல் ரீதியான மரணப் பரிசோதனையை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுப்பதாக ஷிரால் லக்திலக இதன்போது தெரிவித்துள்ளார். 

நிதியமைச்சின் அதிகாரியின் மரணம் ஒரு தற்கொலை என சட்ட வைத்திய அதிகாரிகள் குழு நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. 

இலங்கையில் தற்கொலைகள் மற்றும் மரணங்கள் தொடர்பான வைத்திய அறிக்கைகள் குறித்த ஒரு மோசமான வரலாறு இருப்பதை நாம் அறிவோம். 

தாஜுதீனின் மரணம் தொடர்பிலும் இவ்வாறான உத்தியோகபூர்வ அறிக்கைகள் வந்தன, ஆனால் அவை சரியானவை அல்ல என்பது பின்னரே தெரியவந்தது. 

எனவே, இந்த மரணப் பரிசோதனை அறிக்கை நல்லது, ஆனால் மருத்துவ அறிவியலில் இதற்கு அடுத்த கட்டமாக உளவியல் ரீதியான மரணப் பரிசோதனை ஒன்று உள்ளது. அதனை முன்னெடுக்குமாறே நாம் ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சரிடம் கோருகிறோம். 

உளவியல் ரீதியான மரணப் பரிசோதனை என்பது மூன்று விடயங்களை ஆராயும். தற்கொலைக்கான காரணம் என்ன? அவரது மனநிலை எவ்வாறு இருந்தது? அந்த மரணம் எவ்வாறு சம்பவித்தது? மரணத்திற்கு முன்னர் நடந்த சம்பவங்களை ஆராய வேண்டும். 

ஹர்ஷ டி சில்வா கூறுவது போல் இது ஒரு திருட்டு. நிதிச் செயலாளர் 4 மாதங்களாக இதனை மறைத்ததில் எமக்கு சந்தேகம் உள்ளது. 

உயிரிழந்த அதிகாரியின் செயல்பாடுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு செயல்பாடு இதன் பின்னணியில் இருந்திருக்கலாம். 

இது எனது தவறு அல்ல என்ற அடிப்படையிலேயே இந்தத் தற்கொலை நடந்திருக்க வேண்டும் என நாம் கருதுகிறோம். 

ஒன்பது தடவைகள் இது தவறுதலாக நடக்கவில்லை என்றால், அதற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய வேண்டும். அவருக்கு அந்தச் சூழலை உருவாக்கியது யார்? என்பது தொடர்பில் வௌிப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்கம் தோல்வியடைந்துவிட்டது; ஒன்றிணைந்து பயணிப்போம்!

0

தற்போதைய அரசாங்கத்தின் நிர்வாகத் திறமையின்மை மற்றும் ஊழல்களைக் கடுமையாகச் சாடியுள்ள நாட்டின் 8வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் ஒன்றிணைந்த பயணத்தின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் மக்கள் வழங்கிய ஆணையைத் தவறாகப் பயன்படுத்தி வருவதாக ரணில் விக்கிரமசிங்க தனது மே தினச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, திறைசேரியில் இருந்து 25 இலட்சம் அமெரிக்க டொலர்கள் முறைகேடாகக் கையாளப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். மக்களுக்கு வழங்கப்பட்ட எந்தவொரு வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை என்றும், வாழ்க்கைச் செலவு விண்ணைத் தொட்டுள்ள நிலையில் மக்கள் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரின் குரல் ஒடுக்கப்படுவதாகவும், ஜனநாயக விழுமியங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நிதி அமைச்சின் செயலாளர் நாடாளுமன்றக் குழுக்களுக்கு சமூகமளிக்க மறுத்தமை மற்றும் மக்களின் எதிர்ப்பின் பின்னரே அவர் இணங்கியமை போன்ற விடயங்கள் ஜனநாயகப் பின்னடைவைக் காட்டுவதாக அவர் கூறியுள்ளார். அத்துடன், அரசாங்கம் பௌத்த மத உரிமைகளை மீறி வருவதாகவும், கத்தோலிக்கப் பாடசாலைகள் விவகாரத்தில் அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் கவலையளிப்பதாகவும் அவர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

1977 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கங்களால் முன்னெடுக்கப்பட்ட பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும் தற்போது ஸ்தம்பிதமடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கைத்தொழில், சுற்றுலா மற்றும் கட்டுமானத் துறைகள் வீழ்ச்சியடைந்துள்ளதால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், இவ்வருடம் வெசாக் பண்டிகை மற்றும் மே தினம் ஒரே காலப்பகுதியில் வருவதைக் குறிப்பிட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, சமய வழிபாடுகளுக்கு முன்னுரிமை அளித்து மே தின நிகழ்வுகளை மாற்றியமைத்த கடந்த கால முன்னுதாரணங்களை நினைவூட்டியுள்ளார். 2018 ஆம் ஆண்டு வெசாக் வாரத்தை முன்னிட்டு மே தின ஊர்வலங்கள் மே 7 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இருப்பினும், இம்முறை மே 1 ஆம் திகதியே பேரணிகளை நடத்த ஐக்கிய மக்கள் சக்தி எடுத்துள்ள முடிவை அவர் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து பயணிப்பது குறித்து தற்போது பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க வெளிப்படுத்தியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணிக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள அவர், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகள் குழுவொன்று அந்தப் பேரணியில் கலந்துகொள்ளும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசியல் சூழலில், “பாவ் மடுவத் ஹோரா” (Pavu Maduwat Hora) போன்ற வாசகங்களை கிராம மட்டத்திற்குக் கொண்டு செல்வது சிறந்தது என அவர் யோசனை தெரிவித்துள்ளதோடு, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

சிலாபம் கடற்பரப்பில் 2000 கிலோ பீடி இலைகளுடன் 10 பேர் கைது!

0

இலங்கை கடற்படையினர் சிலாபம் கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் 2000 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கடத்த முயன்ற ஒரு இந்தியப் படகு மற்றும் மூன்று இலங்கை படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது நான்கு இந்தியர்கள் உட்பட 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2026 ஏப்ரல் 28 அன்று, சிலாபம் கடற்பரப்பில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படைக் கப்பல் ஒன்று, சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நான்கு படகுகளை வழிமறித்து சோதனைக்கு உட்படுத்தியது.

இதன்போது, கடலில் வைத்து இந்திய மீன்பிடிப் படகிலிருந்து மூன்று உள்ளூர் டிங்கி படகுகளுக்கு பொதிகளை மாற்றிக் கொண்டிருந்தமை கண்டறியப்பட்டது. கடற்படையினர் நடத்திய தீவிர சோதனையில், அந்தப் படகுகளில் இருந்து 54 பெரிய பைகளில் அடைக்கப்பட்டிருந்த 2000 கிலோவுக்கும் அதிக எடையுள்ள பீடி இலைகள் மீட்கப்பட்டன.

இந்தச் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்:

இந்திய மீன்பிடிப் படகில் இருந்த 18 முதல் 50 வயதுக்குட்பட்ட நான்கு (04) சந்தேக நபர்கள் மற்றும் கடத்தலுக்கு உதவியாகச் செயற்பட்ட கல்பிட்டி பகுதியைச் சேர்ந்த 21 முதல் 42 வயதுக்குட்பட்ட ஆறு (06) சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுடன், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இந்திய மீன்பிடிப் படகு, மூன்று உள்ளூர் டிங்கி படகுகள் மற்றும் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுக சுங்க அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

நாட்டின் கடல் எல்லை ஊடாக இடம்பெறும் இவ்வாறான சட்டவிரோதக் கடத்தல் நடவடிக்கைகளைத் தடுக்க கடற்படையினர் தொடர்ச்சியான கண்காணிப்பு பணிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த வருடம் பலர் சிறைக்கு செல்வார்கள் – ஜனாதிபதி உறுதி!

0

இந்த வருடத்திற்குள் அதிகளவானவர்கள் சிறைக்கூடம் செல்வார்கள் என்பது உறுதி என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் நேற்று இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மேதின கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எந்தவொரு தராதரமும் பாராமல் சட்டம் அனைவருக்கும் சமம் என்ற அடிப்படையில் நடைமுறைப்படுத்துவோம். 1000 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

வழக்கு விசாரணைகளுக்கு அமைய விரைவாக ஊழல்வாதிகளும் குற்றங்களில் ஈடுபட்டவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுகின்றனர். சிறைக்கு சென்றவண்ணமுள்ளனர். இதன் காரணமாகவே சில தரப்பினர் அஞ்சுகின்றனர்.

அனைத்து குற்றவாளிகளையும் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான மக்கள் ஆணையை நீங்கள் வழங்கியுள்ளீர்கள். அந்த ஆணையை நிறைவேற்றுவதற்காகவே நாம் செயற்படுகின்றோம்.

மக்களும், அரசாங்கமும் ஒன்றுடன் ஒன்று இணைந்து பயணிக்கும் அரசாங்கமாக இது அமைந்துள்ளதால், மக்களது எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில் தமது சேவை அமையும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை!

0

இலங்கையின் பல மாவட்டங்களில் இன்று பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதானிப்பு நிலையம் அறிவித்துள்ளது.

பல பகுதிகளில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்கள், பொலன்னறுவை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்கள் மேலும், தென் மாகாணத்தின் கரையோரப் பகுதிகள் மற்றும் களுத்துறை, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகாலை வேளையில் பயணங்களை மேற்கொள்பவர்கள் மற்றும் மலையகப் பகுதிகளில் வசிப்பவர்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்கள், அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் அதிக பனிமூட்டம் நிலவக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். அத்துடன் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடிய அபாயமும் காணப்படுவதால், பொது மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.