Sunday, March 29, 2026
Sponsored advertisementspot_img
Home Blog

நாகவில்லுவில் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ்வின் நினைவுதினம்!

பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று நாகவில்லுவில் இடம்பெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வு!

இலங்கை திருநாட்டில் பெளதீக ரீதியான பல வேலைத்திட்டங்களையும், இடம்பெயர்வு மற்றும் எல்லை நிர்ணயம் தொடர்பான பறந்துபட்ட அறிவினையும் கொண்டிருந்த எருக்கலம்பிட்டியை சேர்ந்த மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது வருட நினைவு தின நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

அந்த வகையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் நினைவுப் பேருரையும், புத்தக வெளியீடு நிகழ்வும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் ஏற்பாட்டில் நேற்று 25.08.2025 புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய அதிபர் ஜனாப் S.M. ஹுஸைமத் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், புத்தி ஜீவிகள் மற்றும் குடும்பத்தார்கள் கலந்தகொண்டமை விஷேட அம்சமாகும்.

சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் பொருளாளர் ஜனாப் ஏ.ஜி. அனீஸ் (Bsc.Agri) அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.

மேலும் இஸ்லாமிய கற்கை அறபு மொழிப் பீட, தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களினால் நூல் அறிமுக உரையும், நினைவுப் பேருரையும் மிகவும் உணர்வுபூர்வமாக நிகழ்த்தப்பட்டது.

கிழக்கு மற்றும் தென் கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பங்களிப்பு அளப்பெரியது என நினைவு கூறிய பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன், வடக்கில் ஏற்பட்ட யுத்தம் மற்றும் முஸ்லிம்களின் இடம்பெயர்வு குறித்து அதீத அக்கறையுடன் செயற்பட்ட மிக முக்கியமானவர் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்கள் எனவும் எடுத்துரைத்தார்.

வடக்கு முஸ்லிம்களின் இடம்பெயர்வு மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பில் அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களுடன் பலதரப்பட்ட கலந்துரையாடல்களை நடத்தி, சர்வதேசம் வரை இவ்விடயங்களை கொண்டுசென்ற மகான் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் என பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் தனது உரையில் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் புதல்வி சட்டத்தரணி எப்.சப்னா ஹஸ்புல்லாஹ் அவர்களினால் ஏற்புரை நிகழ்த்தப்பட்டதுடன், நூல் வெளியீடு நிகழ்வும் இடம்பெற்றது.

நூலின் முதற்பிரதியை ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தரும், புத்தளம் எருக்கலம்பிட்டி பள்ளிவாசல் நிர்வாக சபையின் முன்னாள் உறுப்பினருமான ஜனாப் ரஹ்மத்துல்லாஹ் (GS) அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

மேலும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் செயலாளர் ஜனாப் எஸ்.எச்.எம். றிஸ்னி அவர்களினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டதுடன், தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன், மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பாரியாருக்கும் நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில், பேராசிரியர்கள், கல்விமான்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், பாடசாலைச் சமூகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் குடும்பத்தார்கள் என பலரும் கலந்து சிறப்பித்ததுடன், ஈ நியூஸ் பெஸ்ட் ஊடக நிறுவனம் ஊடக அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரணிலுக்காக ஒன்று திரண்ட அரசியல் தலைவர்கள்!

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விசாரணை கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது, நாட்டின் அடிப்படை ஜனநாயக நிறுவனங்களின் வலிமை குறித்து கடுமையான கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் விளைவுகள் ஒரு தனிநபரின் அல்லது எந்தவொரு அரசியல் கட்சிகளின் தலைவிதியையும் விட, சமூகத்தின் உரிமைகளுக்கான பிரச்சினைகளை தோற்றிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் தலைவர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைகளை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது மற்றும் விளக்கமறியலை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து நடத்திய விசேட ஊடக சந்திப்பில் பங்கேற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரல முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் அறிக்கையை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

போர்த்துக்கல் அணி சாம்பியன் ஆனது!

0

‘நேஷன்ஸ் லீக்’ கால்பந்தில் போர்ச்சுகல் அணி சாம்பியன் ஆனது. பைனலில் ‘பெனால்டி ஷூட் அவுட்டில்’ 5-3 என ஸ்பெயினை வீழ்த்தியது.

ஐரோப்பிய கால்பந்து அணிகளுக்காக ‘நேஷன்ஸ் லீக்’ தொடர் நடத்தப்படுகிறது. மொத்தம் 54 அணிகள் பங்கேற்றன. நேற்று ஜெர்மனியின் முனிக் நகரில் நடந்த பைனலில், போர்ச்சுகல், நடப்பு யூரோ சாம்பியன் ஸ்பெயின் பலப்பரீட்சை நடத்தின. போட்டியின் 21வது நிமிடம் ஜுபிமெண்டி (ஸ்பெயின்), 26வது நிமிடம் மெண்டிஸ் (போர்ச்சுகல்) தலா ஒரு கோல் அடித்தனர். 45வது நிமிடம் மைக்கேல் ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் ஸ்பெயின் அணி 2-1 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் 61 வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். போர்ச்சுகல் அணிக்காக இவர் அடித்த 138வது கோல் இது. 90 நிமிட முடிவில் போட்டி 2-2 என சமன் ஆனது. அடுத்து நடந்த கூடுதல் நேரத்திலும் (30 நிமிடம்) இரு அணியும் கோல் அடிக்கவில்லை.

இதையடுத்து வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி ‘பெனால்டி ஷூட் அவுட்டுக்கு’ சென்றது. இரு அணிக்கும் தலா 5 வாய்ப்புகள் தரப்பட்டன. காயம் காரணமாக 88 வது நிமிடம் வெளியேறிய ரொனால்டோ, இதில் பங்கேற்கவில்லை.

முதல் 3 வாய்ப்பில் போர்ச்சுகலின் ராமோஸ், விடின்ஹா, பெர்ணான்டஸ் கோல் அடித்தனர். மறுபக்கம் ஸ்பெயின் தரப்பில் மெரினோ, பயேனா, இஸ்கோ கோல் அடிக்க 3-3 என ஆனது.

4வது வாய்ப்பில் மெண்டெஸ் (போர்ச்சுகல்) கோல் அடிக்க, ஸ்பெயினின் மோராட்டோ அடித்த பந்தை கோல் கீப்பர் டீகோ கோஸ்டா தடுத்து அசத்தினார்.

5வது வாய்ப்பில் நெவேஸ் கோல் அடித்தார். இதையடுத்து 5-3 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் ‘திரில்’ வெற்றி பெற்றது. 2019க்குப் பின் இத்தொடரில் மீண்டும் சாம்பியன் ஆனது.

தில்லையடியில் சிக்கிய கடத்தல் பீடி இலைகள்!

0

புத்தளத்தில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளுடன் வேன் ஒன்றும் பறிமுதல்!

இலங்கை கடற்படை, பொலிஸாருடன் இணைந்து, புத்தளம், தில்லையடி பகுதியில் 2025 ஜூன் 05 இரவு வேளையில் நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகள் கொண்ட ஒரு வேன் கைப்பற்றப்பட்டது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிறுவனம், புத்தளம் பொலிஸாருடன் இணைந்து தில்லையடி பகுதியில் நடத்திய இந்த சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்று சோதனை செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகளானது வாகனத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் வேன் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களால் ஆபத்தா?

விண்வெளியில் பூமியை சுற்றி வந்துக்கொண்டிருக்கும் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கொள்களை சீனா நினைத்தால் வெறும் 12 மணி நேரத்தில் தாக்கி அழித்துவிட முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் என்கிற செய்தி ஊடகத்தில் இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது தற்போது சீனா 99 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. இவை அனைத்தும் நான்ஜிங் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஆஸ்ட்ரோனாட்டிக்ஸ் பல்கலைக்கழகத்தின் விண்வெளிக் கட்டுப்பாட்டுத் துறையின் இயக்குநர் வூ யுன்ஹுவா தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இவை அனைத்தும் எலான் மஸ்கின் 1400 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை வெறும் 12 மணி நேரத்தில் காலி செய்துவிடும். சீன செயற்கைக்கோளில் லேசர், நுண் அலைகளை உருவாக்கும் கருவி, உளவு கருவிகள் பொருத்தப்பட்டிருக்கலாம். ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் வெறுமென நெட்வொர்க் கொடுக்க மட்டுமே பயன்படுத்தப்படுவதில்லை. தவிர, ராணுவ நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது என சீனா குற்றம்சாட்டி வருகிறது.

அதாவது, உக்ரைன்-ரஷ்யா போரில், உக்ரைன் படைகளுக்கு தகவல்கள் கொடுக்கவும், ரஷ்ய எல்லையை துல்லியமாக கண்காணிக்கவும் இந்த செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த 2022ம் ஆண்டு ரஷ்ய போரின்போது அப்போதைய உக்ரைனின் துணைப் பிரதமரான மைக்கைலோ ஃபெடோரோவ், “ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் சேவையை உடனடியாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த மஸ்க், “உடனடியாக சேவை வழங்கப்படும்” என்று கூறியிருந்தார்.

உக்ரைன் போருடன் மட்டுமே ஸ்டார்லிங்க் நிற்காது, நாளை சீனாவுக்கும்-தைவானுக்கும் பஞ்சாயது ஏற்பட்டால் அப்போதும், தைவானுக்கு சப்போர்ட் செய்ய ஸ்டார்லிங்க் வரும். எனவே இந்த கூட்டு நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்க சீனா இந்த புதிய செயற்கைக்கோள்களை உருவாக்கியிருக்கிறது.

கடந்த 2023ம் ஆண்டு இதற்கான பணிகளை சீனா தொடங்கியது. இந்த திட்டத்திற்கு ‘கியான்ஃபான் மெகா-விண்மீன் திட்டம்’ (Qianfan mega-constellation project) என்றும் பெயரிட்டிருந்தது. நோக்கம் உலகம் முழுவதும் இணைய தொடர்பை வழங்குவதாகும். இதற்காக மொத்தம் 15,000 சிறிய ரக செயற்கைக்கோள்களை ஏவ சீனா முடிவெடுத்தது. இதன் முதல் தொகுப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏவப்பட்டது. இதில் 18 செயற்கைக்கோள்கள் இருந்தன.

ஒவ்வொன்றும் சுமார் 300 கி.கி எடையில் இருந்தது. இவை பூமியிலிருந்து 800 கி.மீ உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டது. இதேபோன்று 2024 டிசம்பரில் அடுத்து இரண்டு தொகுதி ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. தற்போது மொத்தம் 99 செயற்கைக்கோள்கள் விண்வெளியில் இருக்கின்றன. 15,000 செயற்கைக்கோள்களை 3 கட்டங்களாக ஏவ இருக்கிறது. முதல் கட்டத்தில் 1,296 செயற்கைக்கோள்கள் ஏவப்படும். இதில் 648 செயற்கைக்கோள்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஏவப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் கன்னி உரை

0

அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்புவோம்

தேசியத்துவத்துடனும் ஐக்கியத்துடனும் ஒன்றுபட்டு நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க இன்று (23) காலை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

பதவிப் பிரமாணத்தின் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய முழுமையான உரை:

மக்களால் ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது நமது நாட்டின் ஜனநாயகத்திலிருக்கும் மிக முக்கியமான அம்சமாகும். தேர்தலில் வாக்களித்தல் மற்றும் ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதோடு ஜனநாயகம் நிறைவு பெறுவதில்லை. இது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சம் என்றாலும், நம் நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்த, கட்டமைப்புகளின் வலிமையும், சட்டங்களை வலுப்படுத்துவதும் அவசியம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனவே, எனது பதவிக்காலத்தில் இந்த நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.

அத்துடன், இந்த நாட்டில் ஜனநாயக முறையில் அதிகாரப் பரிமாற்றம் நடந்த வரலாறும் உண்டு. தேர்தலில் நிகழும் அதிகாரப் பரிமாற்றத்தை எந்தத் தலைவரும் நிராகரித்ததில்லை. அதற்கமைய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த மக்கள்ஆணையை சுமூகமாக ஏற்றுக்கொண்டதுடன், ஜனநாயக ரீதியில் அதிகாரத்தை கைமாற்றுவதற்கான அவரின் அர்ப்பணிப்பிற்கும் முன்னுதாரணத்திற்கும் நன்றி தெரிவிக்கிறேன். மேலும் எமக்கு கிடைப்பது மிகவும் சவால் நிறைந்த நாடு என்பதை நன்கு புரிந்து கொண்டிருக்கிறோம். நமது அரசியலில் தூய்மையான, மக்களால் எதிர்பார்க்கப்படும் சிறந்த அரசியல் கலாசாரத்திற்காக அவசியம் காணப்படுகிறது.அதற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

நம் நாட்டின் அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு நல்லெண்ணம் இல்லை. எனவே, அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் மீது மக்கள் மரியாதை மற்றும் நம்பிக்கையை மீட்டெடுக்க எங்கள் தரப்பிலிருந்து முடிந்த அனைத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.

மேலும், நமக்கு முன் இருக்கும் இந்த ஆழமான நெருக்கடியை வெறும் அரசோ, வெறும் அரசியல் கட்சியோ அல்லது ஒரு தனி நபரோ மட்டும் தீர்க்க முடியும் என்று நாங்கள் நம்பவில்லை. ஏனென்றால், நான் முன்பு கூறியது போல், நான் ஒரு மாயாஜால வித்தைக்காரனல்ல. நான் மந்திரவாதியும் இல்லை. நான் இந்த நாட்டின் சாதாரண குடிமகன். எம்மிடம் திறமைகள் உள்ளன. இயலாமைகளும் உள்ளன. தெரிந்த விடயங்களும் உள்ளன அதேபோன்று, தெரியாத விடயங்களும் உள்ளன.

ஆனால் திறமைகளைப் பயன்படுத்தி தெரியாதவற்றை சேகரித்துக்கொண்டு சிறந்த முடிவுகளை எடுத்து இந்த நாட்டை வழிநடத்துவதே எனது தலையாய பணியாகும். அந்த கூட்டுப் பங்களிப்பின் ஒரு அங்கமாக மாறுவது எனது பொறுப்பாகும். மேலும், இந்த நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதில் பொது மக்கள் மற்றும் அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் பாரிய பொறுப்பு உள்ளது. அந்தப் பொறுப்பை நிறைவேற்ற அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்.

ஆனால், நாட்டின் ஜனாதிபதி என்ற முறையில், இந்தப் பணியை முன்னின்று நடத்துவதில் எனக்கு முதன்மையான மற்றும் மிக முக்கியமான பொறுப்பு இருப்பதை நான் ஏற்றுக்கொண்டேன். எனவே, இந்தச் சவாலை வெற்றிகொள்வதற்காக எனக்குக் வழங்கப்பட்டுள்ள பணியை நான் உரிய முறையில் நிறைவேற்றுவேன் என்பதை செயற்பாடு மற்றும் நடைமுறை மூலம் எல்லா சந்தர்ப்பங்களிலும் இந்த நாட்டின் பிரஜைகளுக்கு வெளிப்படுத்த நான் தயாராக இருக்கிறேன்.

மேலும் நமது நாட்டுக்கு சர்வதேச ஆதரவு தேவை. எனவே, உலகில் எத்தகைய அதிகாரப் பிளவுகள் இருந்தாலும், ஒவ்வொரு நாட்டையும் எமக்கு மிகவும் சாதகமாக கையாள்வதே நமது எதிர்பார்ப்பாகும். நாம் உலகில் தனிமைப்படுத்தப்பட்ட நாடு அல்ல. உலகத்துடன் கூட்டாக முன்னேற வேண்டிய ஒரு நாடாகும். அது தொடர்பில் தேவையான முடிவுகளை எடுக்க நாங்கள் சிறிதும் தயங்குவதில்லை.

மேலும், நம் நாட்டைக் கட்டியெழுப்புவதில் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு பெரும் பங்கு உள்ளது. எனவே, நாட்டை மேலும் வலுவாகக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு அவர்கள் ஆதரவளிப்பார்கள் என நான் கருதுகின்றேன்.

நம் நாட்டின் ஜனநாயகத்தின் ஊடாக நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். அதற்காக மக்கள் எனக்கு வாக்களித்தனர்.

மேலும் எனக்கு வழங்கப்படாத வாக்குகளும் உள்ளன. எனவே, எங்களின் வெற்றியின் உள்ளடக்கம் மற்றும் அளவு குறித்து எங்களுக்கு நல்ல புரிதல் உள்ளது. எனவே, எங்களுக்கு ஆதரவு வழங்காத மற்றும் எங்களை நம்பாத பிரஜைகளின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெறுவதே எனது நிர்வாகத்தின் போது எனக்கு வழங்கப்பட்டுள்ள பணியாகும். அந்தப் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

எதிர்காலத்தில் இவை அனைத்தையும் நீங்கள் நடைமுறையில் கண்டுகொள்ள முடியும். அதற்கு அனைத்து மக்களின் ஆதரவையும் எதிர்பார்க்கின்றேன்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தேர்தலில் இவ்வாறுதான் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்

0

அதிகாரிகள் மற்றும் பிற தேவைகள் முடிந்த பிறகு, மாலை 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (19) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி பிற்பகல் 4.15 மணிளவில் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“எதிர்வரும் 21ம் திகதி வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள் பெறப்பட்டதும், அதிகாரிகள் மற்றும் இதர தேவைகள் முடிந்ததும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் இரவு 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

மாலை 4.15 மணிளவில் தபால் மூல வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

அத்துடன் மாவட்ட அளவில் ஒவ்வொரு வட்டாரத்திலும் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெறும்.

வாக்கு எண்ணிக்கையின் முடிவில் முடிவுகள் கிடைத்தவுடன் ஊடகங்களுக்கு வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையே முதலில் எண்ணப்படும்.

அந்தக் கணக்கெடுப்பின் பின்னர் (மாவட்ட அளவில் எண்ணும் பணி) முதலில் வாக்குப்பெட்டிகளில் உள்ள வாக்குகள் எண்ணப்படும்.

அதன் பிறகு, ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு, தொகுதி மற்றும் மாவட்ட அளவில் அது தயாரிக்கப்படுகிறது.

தேர்தல்கள் செயலகமே ஒட்டுமொத்த முடிவுகளைக் கணக்கிடும்.

எந்த வேட்பாளரும் 50 வீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்றுள்ளாரா என சரிபார்க்கப்படும்.

அப்படியானால், அந்த நேரத்தில் வாக்கு எண்ணும் பணிகள் நிறுத்தப்படும்.

அப்போது ஜனாதிபதியை நாங்கள் அறிவிப்போம்.

எந்த வேட்பாளருக்கும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் கிடைக்காவிடின், விருப்பு வாக்கு எண்ணிக்கைக்கு செல்ல வேண்டும்.

அங்கு, அதிக வாக்குகள் பெற்ற இரண்டு வேட்பாளர்கள் போட்டியில் வைத்து விட்டு  மீதமுள்ள 36 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து நீக்கப்படுவர்” என்றார்.

புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக மாறும்

0

புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வாத்தியாசலையாக மாற்றம் பெரும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று புத்தளத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ அலிசப்ரி ரஹீம் மற்றும் சிந்தக்க மாயாதுன்ன தலைமையில் புத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்திலே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

புத்தளம் மக்களின் நீண்ட நாள் தேவையாக இருந்து வருகின்ற புத்தளம் தல வைத்தியசாலையை தரமுயர்த்துவது தொடர்பாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ அலிசப்ரி ரஹீம் அவர்களினால் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோலுக்கிணங்க குறித்த வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.

மேலும் புத்தளத்தில் மீன் பிடி தொழிலை முன்னேற்றும் நோக்கத்தில் மீன் பிடி துறைமுகம் ஒன்றை அமைக்கும் யோசனையும் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டதுடன், அதற்கான முன்னெடுப்புகளும் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்டமை புத்தளம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நாட்டில் நிரந்தர பொருளாதார அபிவிருத்தியை நிலை நாட்ட தாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டை பொருளாதார அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவதே தனது பிரதான நோக்கம் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மொட்டுக்கட்சிக்கு எதிராக நிற்கும் முக்கிய அமைச்சர்கள்

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக மொட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளரை இந்த வாரம் அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்காதிருக்கவும், மொட்டு சின்னத்தில் தனியாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமக்கு ஆதரவு வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பியிருந்த கடிதம் நேற்றைய தினம் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தினால் அரசியல் குழுவில் முன்வைக்கப்பட்டது.

எவ்வாறாயினும் அந்த கடிதத்தை நிராகரிக்க அரசியல் குழுக் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுவில் 82 பேர் அங்கம் வகிப்பதுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் 72 பேர் பங்கேற்றனர்.

இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த 11 பேர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

மஹிந்தானந்த அலுத்கமகே, பந்துல குணவர்தன, பிரதீப் உந்துகொட, கோகிலா ஹர்ஷனி குணவர்தன, சஹன் பிரதீப், ரமேஸ் பத்திரன, கஞ்சன விஜேசேகர, பிரசன்ன ரணதுங்க, கனக ஹேரத், மொஹான் பிரியதர்ஷன ஆகியோர் கட்சியின் சார்பில் தனியான வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

அத்துடன் பிறிதொரு கட்சியின் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்கும் உறுப்பினர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் யோசனைக்கு 6 பேர் எதிராக வாக்களித்துள்ளனர்.

எவ்வாறாயினும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் எனக் கூறப்பட்ட தம்மிக பெரேரா தொடர்பில் அரசியல் குழுக் கூட்டத்தின்போது எந்தவித கருத்துக்களும் பரிமாற்றிக் கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவளிக்காத 11 பேர் உள்ளிட்ட தரப்பினர் நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தனவின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சைனப் ஆரம்பப் பாடசாலைக்கு ஆளுநர் வருகை!

0

புத்தளம் சைனப் ஆரம்ப பாடசாலையின் முப்பெரும் விழா பாடசாலை அதிபர் யஹியா தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து புத்தளம் ஜெய்னப் பாடசாலைக்கு 22 லட்சம் ரூபா பெறுமதியான நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு, சிறுவர் விளையாட்டு நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தல் மற்றும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் செயற்திட்டத்தின் கீழ் BCMH நிறுவனத்தினால் கற்றல் உபகரணம் வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் கடந்த செவ்வாய்க்கிழமை (16) வெகு விமர்சையாக இடம்பெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதியாக வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், விசேட அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மற்றும் கௌரவ அதிதியாக புத்தளம் வலயக்கல்விப் பணிப்பாளர் அர்ஜுன ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆரம்ப பாடசாலையின் முக்கியத்துவம் மற்றும் அறிவார்ந்த சமூகத்தை கட்டியெழுப்ப ஆரம்ப பாடசாலை ஆற்றிவருகின்ற அர்ப்பணிப்பு குறித்து விரிவாக பேசிய வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், புத்தளம் மாவட்ட பாடசாலைகளின் துரித வளர்ச்சி பற்றியும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

மேலும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் செயற்திட்டத்திற்கு வடமேல் மாகாண ஆளுநர் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் ஜவ்ஷி ஜமால்தின், இணைப்புச் செயலாளர் எச். அமீர் அலி ஆசிரியர், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் உட்பட உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் அயல் பாடசாலையின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு
நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு

ஹிருணிகாவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறை

0

கடத்தல் வழக்கில் முன்னாள் எம்.பி ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்தத் தீர்ப்பை அறிவித்தார்.

தெமட்டகொட பகுதியிலுள்ள கடை ஒன்றில் பணிபுரிந்த அமில பிரியந்த அமரசிங்க எனும் இளைஞர் ஒருவரை 2015 டிசம்பர் 21ஆம் திகதி ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு சொந்தமான டிபெண்டர் வாகனத்தில் கடத்திய வழக்கு விசாரணை முடிவில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

29 குற்றங்கள் தொடர்பில் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் 8 பேரும் குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில், அச்சம்பத்திற்கு உதவி, ஒத்தாசை புரிந்ததாக ஹிருணிகா மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்திருந்தார்.

அத்தோடு, சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவின் ஆதரவாளர்கள் 8 பேர் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைதான ஐந்தாம் சந்தேகநபரின் மகள் அளித்துள்ள வாக்குமூலத்தில், தமது தாயாருடன் தொடர்பு பேணிய நபர் ஒருவரை தாம் காண்பித்ததாகவும், அவரை தமது தந்தையும் அவருடன் சென்றவர்களும் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு ஹிருணிகாவிடம் அழைத்துச் சென்றதாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

ஓவியப்போட்டியில் எருக்கலம்பிட்டி மாணவன் முதலாமிடம்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட வட மாகாண மானவர்களுக்கிடையிலான சித்திரப்போட்டியில் மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்றார்.

வீதி விபத்துக்கள் இல்லாத நாளைக்கான பாடசாலையிலிருந்து அணிவக்குப்போம் எனும் தொனிப்பொருளில் கடந்த வியாழக்கிழமை (13.06.2024) அன்று நடாத்தப்பட்ட வட மாகாண மாணவர்களுக்கிடையிலான குறித்த சித்திரப்போட்டியில் சுமார் 2600 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

சித்திரப்போட்டியில் பங்குபற்றிய 2600 மாணவர்களில் 250 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு நேற்றைய தினம் (15.06.2024) அவர்களுக்கான போட்டி இடம்பெற்றது.

நடைபெற்று முடிந்த இறுதிச் சுற்றுப்போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்று பெருமதிமிக்க பரிசில்களை பெற்றுக்கொண்டார்.

முதலாம் இடம் பெற்ற முஹம்மது ஹுசைன் என்ற மாணவனுக்கு சான்றிதல், துவிச்சக்கரவண்டி மற்றும் 8500/- ரூபா பெறுமதியான வவுச்சரும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இதேவேளை குறித்த போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய இல்முதீன் முஹம்மது ஹஸ்பான் 7 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய மற்றொரு மாணவரான முஹம்மது சம்ஹான் 8 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

பாரிய சாவல்களுக்கு மத்தியில் தனி ஒரு மனிதனாக இம் மாணாவர்களை ஊக்கப்படுத்தி, தயார்ப்படுத்தி போட்டியில் பங்குபெறச் செய்து வெற்றிபெறச் செய்த எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியின் சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் அவர்களின் இம் முயற்சிக்கு, பாடசாலை சமூகம் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் நன்றி தெரிவித்தனர்.

தமக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வந்து தேசிய அளவில் இடம்பெறும் போட்டிகளில் மாணவர்களை பங்குபெறச் செய்வதே தனது இலக்கு என சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் எமது ஊடகத்திற்கு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை இராஜினாமா

0

நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்துள்ளனர்.

சாந்த நிரியல்ல உட்பட 15 பேர் கொண்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரின் அறிவித்தலுக்கு அமைய இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி திங்கட்கிழமை புதிய பணிப்பாளர் சபை நியமிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ “அத தெரண” விற்கு தெரிவித்தார்.

புத்தளம் எருக்கலம்பிட்டியில் கடும் வெள்ளம்

0

புத்தளம் பகுதியில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக புத்தளம் பகுதி முழுதும் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.

புத்தளம், தில்லையடி, பாலாவி, புத்தளம் எருக்கலம்பிட்டி, ஹிதாயத் நகர்,  மதுரங்குளி மற்றும் ஏனைய பல கிராமங்களும் வெள்ளித்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமமும் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 1500 குடும்பங்கள் இங்கு வாழ்ந்துவருவதுடன், அனைத்து வீடுகளும் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நூற்றிற்கும் அதிகமான வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் ஐநூற்றுக்கும் அதிகமான வீடுகள் பகுதி அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8ஆம் திகதி ஏற்பட்ட மழை வெள்ளித்தினால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் மற்றும் பாடசாலைகளில் தற்காலிகமாக  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு தினங்களாக இவர்களுக்கான சமைத்த உணவுகள் மூன்று வேலைகளிலும் ஊர் தனவந்தர்களின் உதவியுடனும், பள்ளிவாசல் நிர்வாக சபையின் வழிகாட்டலுடனும் வழங்கப்பட்டு வருவதுடன், ஊர் மக்களுக்கும் உணவு விநியோகங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

இவர்களுக்கான நிவாரண உதவிகள் இதுவரை அரசாங்கத்தினால் வழங்கப்படாத போதிலும், ஊர் மக்களின் பங்களிப்புடன் மாத்திரமே பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு விநியோகங்கள் இதுவரை  வழங்கப்பட்டு வருகின்றது.

புத்தளம் பொத்துவில்லு பகுதியில் உள்ள குளம் மழை நீரினால்  பெருக்கெடுத்துள்ளதால் குறித்த குளத்து நீர் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமத்திற்குள் தொடர்ந்தும் மூன்றாவது நாளாக ஊடறுத்து செல்வதால் வீடுகள் தொடர்ந்தும் நீருள் மூழ்கியுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்தின் நிவாரண உதவிக்காக பல மக்கள் தொடர்ந்தும் எதிர்பார்த்து காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

“ஈரானின் ஆட்சியை மாற்ற இதுவே தருணம்” பஹ்லவி அதிரடி முழக்கம்!

ஈரானின் மறைந்த ஷா மன்னரின் மகனும், தற்பொழுது புலம்பெயர்ந்து வாழ்ந்து வருபவருமான பட்டத்து இளவரசர் ரெசா பஹ்லவி, அமெரிக்காவில் நடைபெற்ற அரசியல் மாநாட்டில் ஆற்றிய உரை சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானில் தற்போதைய ஆட்சி மாற்றத்திற்கான தனது தயார் நிலையை அவர் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த மார்ச் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெற்ற CPAC (Conservative Political Action Conference) 2026 மாநாட்டில் பஹ்லவி கலந்துகொண்டார். அங்கு ஆற்றிய உரையில், ஈரானின் தற்போதைய ஆட்சியாளர்களுடன் எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்த வேண்டாம் என அமெரிக்காவிற்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் அவர் கோரிக்கை விடுத்தார். “ஈரானிய ஆட்சியாளர்களுடனான விவகாரத்தை இப்போதே முடித்துவிடுங்கள்” (Finish the job) என்று அவர் ஆக்ரோஷமாகப் பேசினார்.

ஈரானில் தற்போதைய இஸ்லாமியக் குடியரசு வீழ்ச்சியடைந்தால், அதிகாரத்தை உடனடியாகப் பொறுப்பேற்கத் தான் தயாராக இருப்பதாக பஹ்லவி அறிவித்தார். இதற்காக ஈரானுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள நிபுணர்களைக் கொண்டு ஒரு “இடைக்கால ஆட்சி அமைப்பு” ஏற்கனவே உருவாக்கப்பட்டுத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

180 நாட்கள் நீடிக்கும் இந்த இடைக்கால ஆட்சிக்குப் பிறகு, நாட்டில் பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் ராணுவக் கட்டமைப்புகள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களை அவர் பாராட்டியது இந்த உரையில் மிகவும் சர்ச்சைக்குரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

இந்தத் தாக்குதல்கள் ஆட்சியின் வீழ்ச்சியை வேகப்படுத்தும் என்றும், இதன் மூலம் உயிரிழப்புகளைக் குறைக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஈரானிய பாதுகாப்புப் படையினர் தற்போதைய ஆட்சிக்கான ஆதரவைக் கைவிட்டு மக்கள் பக்கம் சேர வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

பஹ்லவியின் இந்தப் பேச்சுக்கு ஈரான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அவரை வெளிநாட்டு சக்திகளின் “கைப்பாவை” என்று வர்ணித்துள்ள ஈரான் ஊடகங்கள், அவர் பயங்கரவாதத்தைத் தூண்டுவதாகக் குற்றம் சாட்டியுள்ளன. அதேசமயம், ஈரானுக்குள்ளும் பல போராட்டக்காரர்கள் இவரை ஒரு மதச்சார்பற்ற தலைவராகப் பார்த்தாலும், வெளிநாட்டு ராணுவத் தலையீட்டை அவர் ஆதரிப்பது நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்து என்று ஒரு தரப்பினர் அச்சம் தெரிவிக்கின்றனர்.

பஹ்லவியின் இந்தத் திடீர் அரசியல் நகர்வுகள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஈரானின் எதிர்காலத்தை நோக்கிய இந்தப் போர் மேகங்கள் மற்றும் அரசியல் மாற்றங்கள் சர்வதேச அரசியலில் முக்கியத் திருப்பமாகப் பார்க்கப்படுகின்றன.

“நேபாளத்தில் நள்ளிரவு அதிரடி: முன்னாள் பிரதமர் சர்மா ஒலி கைது!

0

நேபாளத்தின் முன்னாள் பிரதமர் சர்மா ஒலி நேற்று கைது செய்யப்பட்டார். நேபாளத்தில் கடந்த ஆண்டு ஜென் இசட் இயக்கப் போராட்டங்கள் வெடித்தது. போராட்டத்தின்போது சுமார் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் உட்பட சுமார் 76 பேர் கொல்லப்பட்டனர்.

இது தொடர்பான சம்பவங்களை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் முன்னாள் பிரதமர் சர்மா ஒலி மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேக்கக் உள்ளிட்டோர் மீது குற்றவியல் பிரிவுகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தது.

இந்நிலையில் புதிதாக பிரதமராக பொறுப்பேற்ற பாலேந்திர ஷா தலைமையிலான முதல் அமைச்சரவை கூட்டத்தில் விசாரணை ஆணையம் அளித்த பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து முன்னாள் பிரதமரும் சிபிஎன்-யூஎம்எல் கட்சியின் தலைவருமான சர்மா ஒலி பக்தபூர் மாவட்டத்தின் குண்டு பகுதியில் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டார். மேலும் முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேக்கக் கதுன்ஜே பகுதியில் உள்ள அவரது வீட்டில் இருந்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் ட்ரோன் கிடங்கை தரைமட்டமாக்கியதா ஈரான்?

துபாயில் அமைந்துள்ள உக்ரைன் நாட்டின் ட்ரோன்-எதிர்ப்பு அமைப்புகளின் கிடங்கை தாக்கி அழித்ததாக ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்திற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திடீர் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அமெரிக்கப் படைகளின் மறைவிடமாக செயல்பட்ட உக்ரைன் கிடங்கை தாக்கியதாக ஈரான் கூறியுள்ளது.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படை (IRGC) மற்றும் அதன் கூட்டு செயல்பாட்டு மையமான காத்தம் அல்-அன்பியா (Khatam al-Anbiya) மார்ச் 28, 2026 அன்று ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

அதில், துபாயில் அமெரிக்க இராணுவத் தளபதிகள் மற்றும் வீரர்கள் பதுங்கியிருந்த இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாகக் கூறியது. அதே நேரத்தில், அமெரிக்கப் படைகளுக்கு உதவும் நோக்கில் துபாயில் அமைக்கப்பட்டிருந்த உக்ரைனிய ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளின் (Anti-drone systems) கிடங்கை தாக்கி அழித்ததாகவும் தெரிவித்தது.

இந்தத் தாக்குதலின் போது அங்கு 21 உக்ரைனிய நிபுணர்கள் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் ஈரான் தரப்பில் உரிமை கோரப்பட்டது.

இந் நிலையில் ஈரானின் இந்த அறிவிப்பை உக்ரைன் அரசு முற்றிலுமாக மறுத்துள்ளது. இது குறித்து உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹியோர்ஹி திகி மற்றும் உக்ரைன் பாதுகாப்பு கவுன்சில் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது:

ஈரானின் இந்தச் செய்தி “முற்றிலும் பொயானது” என்றும், இது ஈரானிய மற்றும் ரஷ்ய அரசுகளின் திட்டமிடப்பட்ட தவறான தகவல் பரப்புதல் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

அமீரகத்தில் உக்ரைனிய நிபுணர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை என அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

சர்வதேச செய்தி நிறுவனங்கள் ஈரானின் உரிமை கோரலைப் பதிவு செய்துள்ளனரே தவிர, உக்ரைன் கிடங்கு உண்மையில் அழிக்கப்பட்டதற்கான எவ்வித செயற்கைக்கோள் படங்களோ அல்லது தரைமட்ட ஆதாரங்களோ இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

ஈரான் இத்தாக்குதலை நடத்தியதாகக் கூறினாலும், உக்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத் தரப்பிலிருந்து இதற்கு எவ்வித அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நீரிணையை கடக்க பாகிஸ்தான் ஈரானுடன் வரலாற்று ஒப்பந்தம்!

நவீன வரலாற்றிலேயே மிக மோசமான எரிசக்தி நெருக்கடியைச் சந்தித்து வரும் பாகிஸ்தான், தனது 20 கப்பல்களை ஹார்முஸ் நீரிணை வழியாகச் செலுத்த ஈரானுடன் ஒரு முக்கியமான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையை அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தார் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தான் கொடியுடன் கூடிய 20 கப்பல்கள் ஹார்முஸ் நீரிணை வழியாகப் பயணிக்க ஈரான் அனுமதி அளித்துள்ளது.

நாளொன்றுக்கு இரண்டு கப்பல்கள் வீதம் இந்த நீரிணையைக் கடக்கும் என்று இஷாக் தார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த முடிவை “அமைதிக்கான முன்னோடி” மற்றும் ஒரு “வரவேற்கத்தக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை” என்று அவர் பாராட்டியுள்ளார்.

கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய ஒருங்கிணைந்த தாக்குதல்களில் ஈரானின் உயர்மட்டத் தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணை போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. இந்தப் போரில் ஈரானில் சுமார் 2,000 பேரும், லெபனானில் 1,100-க்கும் மேற்பட்டோரும் உயிரிழந்துள்ளனர்.

உலக வர்த்தகத்தின் முக்கியப் பாதையாகக் கருதப்படும் இந்த நீரிணை முடங்கியதால், கச்சா எண்ணெய் விலை 40 சதவீதம் உயர்ந்து, ஒரு பேரல் 100 டாலரைத் தாண்டியுள்ளது. சுமார் 2,000 கப்பல்கள் நீரிணையின் இருபுறமும் தவித்து வரும் நிலையில், உலக வர்த்தக அமைப்பு (WTO) இதனை கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான பாதிப்பு என்று வர்ணித்துள்ளது.

ஈரானின் கட்டுப்பாடுகளும் கட்டணமும்:
ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) தற்போது இந்த நீரிணையை ஒரு சோதனைச் சாவடியாக மாற்றியுள்ளது. இந்த வழியாகச் செல்லும் கப்பல்கள் தங்களின் சரக்கு விவரங்கள் மற்றும் குழுவினர் பட்டியலைச் சமர்ப்பித்து அனுமதி குறியீடு பெற வேண்டும். சில கப்பல்கள் இந்த நீரிணையைக் கடக்க தலா 2 மில்லியன் டாலர் வரை சீன யுவான் (Yuan) மதிப்பில் கட்டணமாகச் செலுத்தியுள்ளதாகத் தெரிகிறது. ஏற்கனவே மலேசியக் கப்பல்களுக்கும் இத்தகைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒப்பந்தம் பாகிஸ்தானின் தீவிர ராஜதந்திர முயற்சியின் பலனாகக் கருதப்படுகிறது. பாகிஸ்தான் ராணுவத் தளபதி பீல்டு மார்ஷல் ஆசிம் முனீர், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் இது குறித்துப் பேசியுள்ளார். அதே சமயம், ஹார்முஸ் நீரிணை மீதான தனது அதிகாரத்தை சர்வதேச சமூகம் முறையாக அங்கீகரிக்க வேண்டும் என்று ஈரான் நிபந்தனை விதித்துள்ளது.

தற்போது ஈரான் மின் நிலையங்கள் மீதான தாக்குதலை அமெரிக்கா ஐந்து நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளது. இந்த அவகாசம் சனிக்கிழமையுடன் முடிவடையும் நிலையில், இஸ்ரேல் தனது தாக்குதல்களைத் தொடரும் என்று அறிவித்துள்ளது உலக நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கியூ.ஆர் (QR) முறையில் அறிமுகமாகும் புதிய அப்டேட்!

0

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமையை மேலும் எளிமைப்படுத்தும் நோக்கில், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் தமது வாகனங்களை மொத்தமாகப் பதிவு செய்யக்கூடிய புதிய வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால இது குறித்துத் தெரிவிக்கையில்,

பெரிய அளவிலான வாகனங்களைக் கொண்ட நிறுவனங்கள், ஒவ்வொரு வாகனத்தையும் தனித்தனியாகப் பதிவு செய்வதற்குப் பதிலாக, ஒரே குழுவாகப் பதிவு செய்யும் வசதியை அமைச்சகம் உருவாக்கி வருகிறது.

இதுவரை சுமார் 6 மில்லியன் பயனாளர்கள் இந்த அமைப்பில் பதிவு செய்துள்ளனர். கடந்த மார்ச் 15 ஆம் திகதி முதல் இரண்டு வாரங்களில் மட்டும் சுமார் 2 மில்லியன் புதிய பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் தரவுத்தளத்தில் உள்ள தகவல்களுடன் முரண்பாடுகள் காணப்படுவதால், சுமார் 200,000 பயனாளர்கள் சில சிரமங்களை எதிர்கொள்ளக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயந்திர எண்களை வாசிப்பதில் ஏற்படும் எழுத்துப் பிழைகளே (உதாரணமாக: ‘0’ என்பதற்குப் பதில் ‘O’) இதற்கு முக்கியக் காரணமாகும். இவை தற்போது உடனுக்குடன் சரிசெய்யப்பட்டு வருகின்றன.

ஆரம்பக் கட்டத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் சரிசெய்யப்பட்டுள்ளதால், தற்போது பயனாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்த போதிலும் கட்டமைப்பு ஸ்திரமாக உள்ளதாகச் செயலாளர் உறுதியளித்தார்.

வாகனங்கள் அல்லாத ஏனைய அத்தியாவசியத் துறைகளுக்கும் இந்த கியூ.ஆர். முறைமை விரிவுபடுத்தப்படவுள்ளது. விவசாய உபகரணங்கள் மற்றும் கடற்றொழில் படகுகளை இந்த அமைப்பில் இணைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது அந்தந்தத் துறையினருக்கு எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் பெரும் நிவாரணத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, கியூ.ஆர். குறியீடுகளைத் தவறாகப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடிகள் குறித்து அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மற்றவர்களின் கியூ.ஆர். குறியீடுகளைச் சட்டவிரோதமாகப் பதிவிறக்கம் செய்த 153 கைபேசி இலக்கங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த மோசடிகள் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் 79 இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில், கறுப்புச் சந்தையில் விற்பனை செய்வதற்காக எரிபொருளைப் பதுக்கி வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களுக்கு எதிராக காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பதிவு தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பதற்காக 1919 என்ற அவசர இலக்கத்திற்கு மேலதிகமாக, ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிலும் ஒரு ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுமக்கள் தமது பகுதிகளில் உள்ள இந்த அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள முடியும் என டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் கைது!

0

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகமாகப் பணியாற்றும் கமல் அமரசிங்க, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கெப் ரக வாகனமொன்றின் சேஸி (Chassis) இலக்கத்தைத் திருத்தி, அதனை போலியான முறையில் பதிவு செய்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் கீழேயே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள கமல் அமரசிங்க, இன்று (28) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

அமெரிக்காவில் ட்ரம்பிற்கு எதிராக 3,000 இடங்களில் போராட்டங்கள்!

0

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் ஈரானுடனான போர்ச் சூழலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இன்று அமெரிக்கா முழுவதும் 3,000க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டங்களை நடத்த “No Kings” என்ற மக்கள் இயக்கம் திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே 2025 ஜூன் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் நடைபெற்ற போராட்டங்களில் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர்.

அதனைத் தொடர்ந்து இந்த வாரமும் லட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்ரம்பின் கடுமையான குடிவரவு கொள்கைகள் மற்றும் ஈரானுக்கு எதிரான போர் நடவடிக்கைகள் ஆகியவற்றை முன்வைத்து இந்தப் போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வொஷிங்டன் டி.சி. மினியாபோலிஸ், சிகாகோ மற்றும் சென் பிரான்சிஸ்கோ போன்ற முக்கிய நகரங்களில் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அல்ஜெஸீரா செய்திகள் தெரிவிக்கின்றன.

சுமார் 6,46,000 மக்கள் தொகையைக் கொண்ட சிறிய மாநிலமான வெர்மான்ட்டில் மாத்திரம் 40க்கும் மேற்பட்ட போராட்டங்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய போராட்ட தினங்களில் ஒன்றாக இந்தச் சனிக்கிழமை அமையும் என ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

உலகில் அதிகம் பாதிக்கப்படும் 2-வது நாடாக இலங்கை!

0

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்துள்ள இராணுவ நடவடிக்கைகள் காரணமாக, ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து தடைப்பட்டுள்ளமை உலகப் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நெருக்கடி நிலைமையால் பொருட்களின் விலை அதிகரிப்பினால் உலக அளவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இரண்டாவது நாடாக இலங்கை பதிவாகியுள்ளதாக பிபிசி வெரிஃபை (BBC Verify) ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

வழமையாக நாளொன்றுக்கு 100-க்கும் மேற்பட்ட கப்பல்கள் பயணிக்கும் ஹோர்முஸ் நீரிணை வழியிலான போக்குவரத்து, தற்போது ஒரு சில கப்பல்களாகக் குறைந்துள்ளதாக பிபிசி வெரிஃபை சுட்டிக்காட்டுகிறது.

இதன் விளைவாக, எரிபொருள் மற்றும் எரிவாயு விலை அதிகரிப்புடன், ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள், மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் வேகமாக அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய விவசாயத் தேவைகளுக்கான யூரியா, பொட்டாஷியம், அமோனியா மற்றும் பொஸ்பரேட் போன்ற உரத் தேவைகளில் மூன்றில் ஒரு பங்கு (1/3) பொதுவாக இந்த நீரிணை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது.

வட அரைக்கோளத்தில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் முக்கிய பயிர்ச்செய்கை காலங்களாக இருப்பதால், தற்போதைய உரத் தட்டுப்பாடு ஆண்டின் பிற்பகுதியில் பயிர் விளைச்சல் குறைவதற்கு நேரடியாக வழிவகுக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், ஜெர்மனியின் கீல் ஆராய்ச்சி நிறுவனம்(Kiel Research Institute), ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டால், உலகளாவிய கோதுமை விலை 4.2% ஆகவும், பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலைகள் 5.2% ஆகவும் உயரக்கூடும் எனக் குறிப்பிடுகிறது.

கீல் நிறுவனத்தின் தரவுகளின்படி, ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டால் பொருட்களின் விலை அதிகம் உயரக்கூடிய நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது.

உணவுப் பொருட்களின் ஒட்டுமொத்த விலை அதிகரிப்பால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடுகளாக ஜாம்பியா (30.7%), இலங்கை (15.3%), தாய்வான் (12.5%) மற்றும் பாகிஸ்தான் (11.4%) ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ளன.

ஈரான் மோதலிலிருந்து கத்தார் விலகல்:

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போர் பதற்றத்திலிருந்து கத்தார் அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக கத்தார் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கை, சர்வதேச அரங்கில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

​கடந்த மார்ச் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில், கத்தாரின் முக்கிய எரிசக்தி மையமான ‘ராஸ் லப்பான்’ மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது. இந்தத் தாக்குதல்களை கத்தார் ராணுவம் வெற்றிகரமாக முறியடித்த போதிலும், நாட்டின் திரவ இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதியில் 17% பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

​இந்தத் தாக்குதலால் சுமார் $20 பில்லியன் டாலர் வரை இழப்பு ஏற்படக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளின் எரிசக்தி உள்கட்டமைப்பில் உள்ள பலவீனத்தை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

விலகலுக்கான காரணம் என்ன?

​அமெரிக்கா தலைமையிலான கூட்டணியின் முயற்சிகள் ஒருபுறம் இருந்தாலும், ஈரான் உடனான நேரடி மோதலைத் தவிர்க்க கத்தார் முடிவு செய்துள்ளது.

  • ​உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயலை கத்தாரும் ஈரானும் பகிர்ந்து கொள்கின்றன. ஈரானுடன் பகைத்துக் கொள்வது கத்தாரின் பொருளாதார அடித்தளத்தையே பாதிக்கும்.
  • போரினால் ஏற்படும் பேரழிவை விட, பிராந்திய நாடுகளுடன் இணைந்து வாழ்வதே சிறந்தது என கத்தார் கருதுகிறது.
  • ​ஆயுத மோதல்களை விட பேச்சுவார்த்தை மூலமே நிரந்தரத் தீர்வு காண முடியும் என கத்தார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

வளைகுடா அரசியலில் மாற்றம்

​கத்தாரின் இந்தத் திடீர் முடிவு, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) போன்ற அண்டை நாடுகளுக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கக் கூட்டணியில் பிளவு ஏற்படுவதை இது காட்டுவதுடன், மற்ற நாடுகளும் தங்கள் பொருளாதார நலனைக் கருதி ஈரானுடனான உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளன.

​மொத்தத்தில், ஒரு போரைத் தொடர்வதை விட, தனது நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து கத்தார் எடுத்துள்ள இந்த முடிவு, மத்திய கிழக்கு அரசியலில் ஒரு புதிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.

பிஸ்கட் மற்றும் இனிப்பு வகைகளின் விலைகள் அதிகரிக்கப்பு?

0

இலங்கையில் பிஸ்கட், ஐஸ்கிரீம் மற்றும் சாக்லேட் உள்ளிட்ட இனிப்பு பண்டங்களின் விலைகளை எதிர்வரும் மே மாதம் வரை அதிகரிப்பதில்லை என இலங்கை இனிப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் (Lanka Confectionery Manufacturers Association) உறுதியளித்துள்ளது.

வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவுக்கும், இனிப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று (26) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய தாக்கம் மற்றும் உள்நாட்டுத் தொழிற்றுறையில் அதன் பாதிப்புகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

தற்போதைய பொருளாதாரச் சூழலில் நுகர்வோரால் மேலதிக விலை உயர்வைத் தாங்கிக்கொள்ள முடியாது என்பதை அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார். உள்நாட்டு பிஸ்கட் உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் அதேவேளை, நுகர்வோர் பாதிக்கப்படுவதை ஆகக்குறைந்த மட்டத்தில் பேணுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என அவர் தெரிவித்தார்.

அத்துடன், கடினமான காலப்பகுதியிலும் நுகர்வோர் நலன் கருதி செயற்படுமாறு கேட்டுக்கொண்ட அமைச்சர், உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தீர்க்க அரசாங்கம் தலையிடத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்தச் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த சங்கத்தின் தலைவர் எஸ்.எம்.டி. சூரியகுமார, பின்வரும் முக்கிய விடயங்களைப் பகிர்ந்து கொண்டார்:

  • இலங்கையின் இனிப்புப் பண்டத் தேவையானது 95% உள்நாட்டு உற்பத்தியின் மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது.
  • இத்தொழிற்றுறையில் சுமார் 50,000 பேர் நேரடியாகவும், 5 இலட்சத்திற்கும் அதிகமானோர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
  • கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 15 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொழில்நுட்ப முதலீடுகள் இத்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மின்சார மற்றும் எரிவாயு கட்டண உயர்வு மற்றும் இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு ஆகியவை இத்துறை எதிர்கொள்ளும் பிரதான சவால்களாக உள்ளன. குறிப்பாக, கரோனா காலத்திற்குப் பிறகு பெரிய அளவில் விலையேற்றம் செய்யப்படாமல், மிகக் குறைந்த இலாபத்துடனேயே இத்தொழிற்றுறை இயங்கி வருவதாக சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

இருப்பினும், சித்திரைப் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குச் சுமையை ஏற்படுத்தாத வகையில் மே மாதம் வரை விலையை அதிகரிப்பதில்லை என சங்கம் ஒருமனதாகத் தீர்மானித்துள்ளது. மே மாதத்திற்குப் பின்னரும் எரிவாயு, மின்சாரம் மற்றும் மூலப்பொருட்களின் விலைகள் அதிகரித்தால் மட்டுமே விலை திருத்தம் குறித்து பரிசீலிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும், துறைமுகத்தில் மூலப்பொருட்களை விடுவிப்பதில் ஏற்படும் தாமதம் மற்றும் கப்பல் கட்டண உயர்வு போன்ற பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டிய உற்பத்தியாளர்கள், புத்தாண்டு கால விநியோக நடவடிக்கைகளுக்காகத் தடையற்ற எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துமாறும் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.