Tuesday, June 30, 2026
Sponsored advertisementspot_img
Home Blog

நாகவில்லுவில் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ்வின் நினைவுதினம்!

பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று நாகவில்லுவில் இடம்பெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வு!

இலங்கை திருநாட்டில் பெளதீக ரீதியான பல வேலைத்திட்டங்களையும், இடம்பெயர்வு மற்றும் எல்லை நிர்ணயம் தொடர்பான பறந்துபட்ட அறிவினையும் கொண்டிருந்த எருக்கலம்பிட்டியை சேர்ந்த மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது வருட நினைவு தின நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

அந்த வகையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் நினைவுப் பேருரையும், புத்தக வெளியீடு நிகழ்வும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் ஏற்பாட்டில் நேற்று 25.08.2025 புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய அதிபர் ஜனாப் S.M. ஹுஸைமத் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், புத்தி ஜீவிகள் மற்றும் குடும்பத்தார்கள் கலந்தகொண்டமை விஷேட அம்சமாகும்.

சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் பொருளாளர் ஜனாப் ஏ.ஜி. அனீஸ் (Bsc.Agri) அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.

மேலும் இஸ்லாமிய கற்கை அறபு மொழிப் பீட, தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களினால் நூல் அறிமுக உரையும், நினைவுப் பேருரையும் மிகவும் உணர்வுபூர்வமாக நிகழ்த்தப்பட்டது.

கிழக்கு மற்றும் தென் கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பங்களிப்பு அளப்பெரியது என நினைவு கூறிய பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன், வடக்கில் ஏற்பட்ட யுத்தம் மற்றும் முஸ்லிம்களின் இடம்பெயர்வு குறித்து அதீத அக்கறையுடன் செயற்பட்ட மிக முக்கியமானவர் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்கள் எனவும் எடுத்துரைத்தார்.

வடக்கு முஸ்லிம்களின் இடம்பெயர்வு மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பில் அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களுடன் பலதரப்பட்ட கலந்துரையாடல்களை நடத்தி, சர்வதேசம் வரை இவ்விடயங்களை கொண்டுசென்ற மகான் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் என பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் தனது உரையில் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் புதல்வி சட்டத்தரணி எப்.சப்னா ஹஸ்புல்லாஹ் அவர்களினால் ஏற்புரை நிகழ்த்தப்பட்டதுடன், நூல் வெளியீடு நிகழ்வும் இடம்பெற்றது.

நூலின் முதற்பிரதியை ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தரும், புத்தளம் எருக்கலம்பிட்டி பள்ளிவாசல் நிர்வாக சபையின் முன்னாள் உறுப்பினருமான ஜனாப் ரஹ்மத்துல்லாஹ் (GS) அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

மேலும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் செயலாளர் ஜனாப் எஸ்.எச்.எம். றிஸ்னி அவர்களினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டதுடன், தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன், மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பாரியாருக்கும் நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில், பேராசிரியர்கள், கல்விமான்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், பாடசாலைச் சமூகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் குடும்பத்தார்கள் என பலரும் கலந்து சிறப்பித்ததுடன், ஈ நியூஸ் பெஸ்ட் ஊடக நிறுவனம் ஊடக அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரணிலுக்காக ஒன்று திரண்ட அரசியல் தலைவர்கள்!

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விசாரணை கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது, நாட்டின் அடிப்படை ஜனநாயக நிறுவனங்களின் வலிமை குறித்து கடுமையான கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் விளைவுகள் ஒரு தனிநபரின் அல்லது எந்தவொரு அரசியல் கட்சிகளின் தலைவிதியையும் விட, சமூகத்தின் உரிமைகளுக்கான பிரச்சினைகளை தோற்றிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் தலைவர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைகளை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது மற்றும் விளக்கமறியலை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து நடத்திய விசேட ஊடக சந்திப்பில் பங்கேற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரல முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் அறிக்கையை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

போர்த்துக்கல் அணி சாம்பியன் ஆனது!

0

‘நேஷன்ஸ் லீக்’ கால்பந்தில் போர்ச்சுகல் அணி சாம்பியன் ஆனது. பைனலில் ‘பெனால்டி ஷூட் அவுட்டில்’ 5-3 என ஸ்பெயினை வீழ்த்தியது.

ஐரோப்பிய கால்பந்து அணிகளுக்காக ‘நேஷன்ஸ் லீக்’ தொடர் நடத்தப்படுகிறது. மொத்தம் 54 அணிகள் பங்கேற்றன. நேற்று ஜெர்மனியின் முனிக் நகரில் நடந்த பைனலில், போர்ச்சுகல், நடப்பு யூரோ சாம்பியன் ஸ்பெயின் பலப்பரீட்சை நடத்தின. போட்டியின் 21வது நிமிடம் ஜுபிமெண்டி (ஸ்பெயின்), 26வது நிமிடம் மெண்டிஸ் (போர்ச்சுகல்) தலா ஒரு கோல் அடித்தனர். 45வது நிமிடம் மைக்கேல் ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் ஸ்பெயின் அணி 2-1 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் 61 வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். போர்ச்சுகல் அணிக்காக இவர் அடித்த 138வது கோல் இது. 90 நிமிட முடிவில் போட்டி 2-2 என சமன் ஆனது. அடுத்து நடந்த கூடுதல் நேரத்திலும் (30 நிமிடம்) இரு அணியும் கோல் அடிக்கவில்லை.

இதையடுத்து வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி ‘பெனால்டி ஷூட் அவுட்டுக்கு’ சென்றது. இரு அணிக்கும் தலா 5 வாய்ப்புகள் தரப்பட்டன. காயம் காரணமாக 88 வது நிமிடம் வெளியேறிய ரொனால்டோ, இதில் பங்கேற்கவில்லை.

முதல் 3 வாய்ப்பில் போர்ச்சுகலின் ராமோஸ், விடின்ஹா, பெர்ணான்டஸ் கோல் அடித்தனர். மறுபக்கம் ஸ்பெயின் தரப்பில் மெரினோ, பயேனா, இஸ்கோ கோல் அடிக்க 3-3 என ஆனது.

4வது வாய்ப்பில் மெண்டெஸ் (போர்ச்சுகல்) கோல் அடிக்க, ஸ்பெயினின் மோராட்டோ அடித்த பந்தை கோல் கீப்பர் டீகோ கோஸ்டா தடுத்து அசத்தினார்.

5வது வாய்ப்பில் நெவேஸ் கோல் அடித்தார். இதையடுத்து 5-3 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் ‘திரில்’ வெற்றி பெற்றது. 2019க்குப் பின் இத்தொடரில் மீண்டும் சாம்பியன் ஆனது.

தில்லையடியில் சிக்கிய கடத்தல் பீடி இலைகள்!

0

புத்தளத்தில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளுடன் வேன் ஒன்றும் பறிமுதல்!

இலங்கை கடற்படை, பொலிஸாருடன் இணைந்து, புத்தளம், தில்லையடி பகுதியில் 2025 ஜூன் 05 இரவு வேளையில் நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகள் கொண்ட ஒரு வேன் கைப்பற்றப்பட்டது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிறுவனம், புத்தளம் பொலிஸாருடன் இணைந்து தில்லையடி பகுதியில் நடத்திய இந்த சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்று சோதனை செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகளானது வாகனத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் வேன் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களால் ஆபத்தா?

விண்வெளியில் பூமியை சுற்றி வந்துக்கொண்டிருக்கும் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கொள்களை சீனா நினைத்தால் வெறும் 12 மணி நேரத்தில் தாக்கி அழித்துவிட முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் என்கிற செய்தி ஊடகத்தில் இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது தற்போது சீனா 99 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. இவை அனைத்தும் நான்ஜிங் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஆஸ்ட்ரோனாட்டிக்ஸ் பல்கலைக்கழகத்தின் விண்வெளிக் கட்டுப்பாட்டுத் துறையின் இயக்குநர் வூ யுன்ஹுவா தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இவை அனைத்தும் எலான் மஸ்கின் 1400 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை வெறும் 12 மணி நேரத்தில் காலி செய்துவிடும். சீன செயற்கைக்கோளில் லேசர், நுண் அலைகளை உருவாக்கும் கருவி, உளவு கருவிகள் பொருத்தப்பட்டிருக்கலாம். ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் வெறுமென நெட்வொர்க் கொடுக்க மட்டுமே பயன்படுத்தப்படுவதில்லை. தவிர, ராணுவ நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது என சீனா குற்றம்சாட்டி வருகிறது.

அதாவது, உக்ரைன்-ரஷ்யா போரில், உக்ரைன் படைகளுக்கு தகவல்கள் கொடுக்கவும், ரஷ்ய எல்லையை துல்லியமாக கண்காணிக்கவும் இந்த செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த 2022ம் ஆண்டு ரஷ்ய போரின்போது அப்போதைய உக்ரைனின் துணைப் பிரதமரான மைக்கைலோ ஃபெடோரோவ், “ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் சேவையை உடனடியாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த மஸ்க், “உடனடியாக சேவை வழங்கப்படும்” என்று கூறியிருந்தார்.

உக்ரைன் போருடன் மட்டுமே ஸ்டார்லிங்க் நிற்காது, நாளை சீனாவுக்கும்-தைவானுக்கும் பஞ்சாயது ஏற்பட்டால் அப்போதும், தைவானுக்கு சப்போர்ட் செய்ய ஸ்டார்லிங்க் வரும். எனவே இந்த கூட்டு நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்க சீனா இந்த புதிய செயற்கைக்கோள்களை உருவாக்கியிருக்கிறது.

கடந்த 2023ம் ஆண்டு இதற்கான பணிகளை சீனா தொடங்கியது. இந்த திட்டத்திற்கு ‘கியான்ஃபான் மெகா-விண்மீன் திட்டம்’ (Qianfan mega-constellation project) என்றும் பெயரிட்டிருந்தது. நோக்கம் உலகம் முழுவதும் இணைய தொடர்பை வழங்குவதாகும். இதற்காக மொத்தம் 15,000 சிறிய ரக செயற்கைக்கோள்களை ஏவ சீனா முடிவெடுத்தது. இதன் முதல் தொகுப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏவப்பட்டது. இதில் 18 செயற்கைக்கோள்கள் இருந்தன.

ஒவ்வொன்றும் சுமார் 300 கி.கி எடையில் இருந்தது. இவை பூமியிலிருந்து 800 கி.மீ உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டது. இதேபோன்று 2024 டிசம்பரில் அடுத்து இரண்டு தொகுதி ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. தற்போது மொத்தம் 99 செயற்கைக்கோள்கள் விண்வெளியில் இருக்கின்றன. 15,000 செயற்கைக்கோள்களை 3 கட்டங்களாக ஏவ இருக்கிறது. முதல் கட்டத்தில் 1,296 செயற்கைக்கோள்கள் ஏவப்படும். இதில் 648 செயற்கைக்கோள்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஏவப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் கன்னி உரை

0

அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்புவோம்

தேசியத்துவத்துடனும் ஐக்கியத்துடனும் ஒன்றுபட்டு நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க இன்று (23) காலை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

பதவிப் பிரமாணத்தின் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய முழுமையான உரை:

மக்களால் ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது நமது நாட்டின் ஜனநாயகத்திலிருக்கும் மிக முக்கியமான அம்சமாகும். தேர்தலில் வாக்களித்தல் மற்றும் ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதோடு ஜனநாயகம் நிறைவு பெறுவதில்லை. இது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சம் என்றாலும், நம் நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்த, கட்டமைப்புகளின் வலிமையும், சட்டங்களை வலுப்படுத்துவதும் அவசியம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனவே, எனது பதவிக்காலத்தில் இந்த நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.

அத்துடன், இந்த நாட்டில் ஜனநாயக முறையில் அதிகாரப் பரிமாற்றம் நடந்த வரலாறும் உண்டு. தேர்தலில் நிகழும் அதிகாரப் பரிமாற்றத்தை எந்தத் தலைவரும் நிராகரித்ததில்லை. அதற்கமைய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த மக்கள்ஆணையை சுமூகமாக ஏற்றுக்கொண்டதுடன், ஜனநாயக ரீதியில் அதிகாரத்தை கைமாற்றுவதற்கான அவரின் அர்ப்பணிப்பிற்கும் முன்னுதாரணத்திற்கும் நன்றி தெரிவிக்கிறேன். மேலும் எமக்கு கிடைப்பது மிகவும் சவால் நிறைந்த நாடு என்பதை நன்கு புரிந்து கொண்டிருக்கிறோம். நமது அரசியலில் தூய்மையான, மக்களால் எதிர்பார்க்கப்படும் சிறந்த அரசியல் கலாசாரத்திற்காக அவசியம் காணப்படுகிறது.அதற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

நம் நாட்டின் அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு நல்லெண்ணம் இல்லை. எனவே, அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் மீது மக்கள் மரியாதை மற்றும் நம்பிக்கையை மீட்டெடுக்க எங்கள் தரப்பிலிருந்து முடிந்த அனைத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.

மேலும், நமக்கு முன் இருக்கும் இந்த ஆழமான நெருக்கடியை வெறும் அரசோ, வெறும் அரசியல் கட்சியோ அல்லது ஒரு தனி நபரோ மட்டும் தீர்க்க முடியும் என்று நாங்கள் நம்பவில்லை. ஏனென்றால், நான் முன்பு கூறியது போல், நான் ஒரு மாயாஜால வித்தைக்காரனல்ல. நான் மந்திரவாதியும் இல்லை. நான் இந்த நாட்டின் சாதாரண குடிமகன். எம்மிடம் திறமைகள் உள்ளன. இயலாமைகளும் உள்ளன. தெரிந்த விடயங்களும் உள்ளன அதேபோன்று, தெரியாத விடயங்களும் உள்ளன.

ஆனால் திறமைகளைப் பயன்படுத்தி தெரியாதவற்றை சேகரித்துக்கொண்டு சிறந்த முடிவுகளை எடுத்து இந்த நாட்டை வழிநடத்துவதே எனது தலையாய பணியாகும். அந்த கூட்டுப் பங்களிப்பின் ஒரு அங்கமாக மாறுவது எனது பொறுப்பாகும். மேலும், இந்த நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதில் பொது மக்கள் மற்றும் அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் பாரிய பொறுப்பு உள்ளது. அந்தப் பொறுப்பை நிறைவேற்ற அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்.

ஆனால், நாட்டின் ஜனாதிபதி என்ற முறையில், இந்தப் பணியை முன்னின்று நடத்துவதில் எனக்கு முதன்மையான மற்றும் மிக முக்கியமான பொறுப்பு இருப்பதை நான் ஏற்றுக்கொண்டேன். எனவே, இந்தச் சவாலை வெற்றிகொள்வதற்காக எனக்குக் வழங்கப்பட்டுள்ள பணியை நான் உரிய முறையில் நிறைவேற்றுவேன் என்பதை செயற்பாடு மற்றும் நடைமுறை மூலம் எல்லா சந்தர்ப்பங்களிலும் இந்த நாட்டின் பிரஜைகளுக்கு வெளிப்படுத்த நான் தயாராக இருக்கிறேன்.

மேலும் நமது நாட்டுக்கு சர்வதேச ஆதரவு தேவை. எனவே, உலகில் எத்தகைய அதிகாரப் பிளவுகள் இருந்தாலும், ஒவ்வொரு நாட்டையும் எமக்கு மிகவும் சாதகமாக கையாள்வதே நமது எதிர்பார்ப்பாகும். நாம் உலகில் தனிமைப்படுத்தப்பட்ட நாடு அல்ல. உலகத்துடன் கூட்டாக முன்னேற வேண்டிய ஒரு நாடாகும். அது தொடர்பில் தேவையான முடிவுகளை எடுக்க நாங்கள் சிறிதும் தயங்குவதில்லை.

மேலும், நம் நாட்டைக் கட்டியெழுப்புவதில் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு பெரும் பங்கு உள்ளது. எனவே, நாட்டை மேலும் வலுவாகக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு அவர்கள் ஆதரவளிப்பார்கள் என நான் கருதுகின்றேன்.

நம் நாட்டின் ஜனநாயகத்தின் ஊடாக நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். அதற்காக மக்கள் எனக்கு வாக்களித்தனர்.

மேலும் எனக்கு வழங்கப்படாத வாக்குகளும் உள்ளன. எனவே, எங்களின் வெற்றியின் உள்ளடக்கம் மற்றும் அளவு குறித்து எங்களுக்கு நல்ல புரிதல் உள்ளது. எனவே, எங்களுக்கு ஆதரவு வழங்காத மற்றும் எங்களை நம்பாத பிரஜைகளின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெறுவதே எனது நிர்வாகத்தின் போது எனக்கு வழங்கப்பட்டுள்ள பணியாகும். அந்தப் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

எதிர்காலத்தில் இவை அனைத்தையும் நீங்கள் நடைமுறையில் கண்டுகொள்ள முடியும். அதற்கு அனைத்து மக்களின் ஆதரவையும் எதிர்பார்க்கின்றேன்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தேர்தலில் இவ்வாறுதான் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்

0

அதிகாரிகள் மற்றும் பிற தேவைகள் முடிந்த பிறகு, மாலை 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (19) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி பிற்பகல் 4.15 மணிளவில் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“எதிர்வரும் 21ம் திகதி வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள் பெறப்பட்டதும், அதிகாரிகள் மற்றும் இதர தேவைகள் முடிந்ததும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் இரவு 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

மாலை 4.15 மணிளவில் தபால் மூல வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

அத்துடன் மாவட்ட அளவில் ஒவ்வொரு வட்டாரத்திலும் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெறும்.

வாக்கு எண்ணிக்கையின் முடிவில் முடிவுகள் கிடைத்தவுடன் ஊடகங்களுக்கு வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையே முதலில் எண்ணப்படும்.

அந்தக் கணக்கெடுப்பின் பின்னர் (மாவட்ட அளவில் எண்ணும் பணி) முதலில் வாக்குப்பெட்டிகளில் உள்ள வாக்குகள் எண்ணப்படும்.

அதன் பிறகு, ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு, தொகுதி மற்றும் மாவட்ட அளவில் அது தயாரிக்கப்படுகிறது.

தேர்தல்கள் செயலகமே ஒட்டுமொத்த முடிவுகளைக் கணக்கிடும்.

எந்த வேட்பாளரும் 50 வீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்றுள்ளாரா என சரிபார்க்கப்படும்.

அப்படியானால், அந்த நேரத்தில் வாக்கு எண்ணும் பணிகள் நிறுத்தப்படும்.

அப்போது ஜனாதிபதியை நாங்கள் அறிவிப்போம்.

எந்த வேட்பாளருக்கும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் கிடைக்காவிடின், விருப்பு வாக்கு எண்ணிக்கைக்கு செல்ல வேண்டும்.

அங்கு, அதிக வாக்குகள் பெற்ற இரண்டு வேட்பாளர்கள் போட்டியில் வைத்து விட்டு  மீதமுள்ள 36 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து நீக்கப்படுவர்” என்றார்.

புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக மாறும்

0

புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வாத்தியாசலையாக மாற்றம் பெரும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று புத்தளத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ அலிசப்ரி ரஹீம் மற்றும் சிந்தக்க மாயாதுன்ன தலைமையில் புத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்திலே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

புத்தளம் மக்களின் நீண்ட நாள் தேவையாக இருந்து வருகின்ற புத்தளம் தல வைத்தியசாலையை தரமுயர்த்துவது தொடர்பாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ அலிசப்ரி ரஹீம் அவர்களினால் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோலுக்கிணங்க குறித்த வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.

மேலும் புத்தளத்தில் மீன் பிடி தொழிலை முன்னேற்றும் நோக்கத்தில் மீன் பிடி துறைமுகம் ஒன்றை அமைக்கும் யோசனையும் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டதுடன், அதற்கான முன்னெடுப்புகளும் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்டமை புத்தளம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நாட்டில் நிரந்தர பொருளாதார அபிவிருத்தியை நிலை நாட்ட தாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டை பொருளாதார அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவதே தனது பிரதான நோக்கம் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மொட்டுக்கட்சிக்கு எதிராக நிற்கும் முக்கிய அமைச்சர்கள்

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக மொட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளரை இந்த வாரம் அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்காதிருக்கவும், மொட்டு சின்னத்தில் தனியாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமக்கு ஆதரவு வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பியிருந்த கடிதம் நேற்றைய தினம் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தினால் அரசியல் குழுவில் முன்வைக்கப்பட்டது.

எவ்வாறாயினும் அந்த கடிதத்தை நிராகரிக்க அரசியல் குழுக் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுவில் 82 பேர் அங்கம் வகிப்பதுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் 72 பேர் பங்கேற்றனர்.

இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த 11 பேர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

மஹிந்தானந்த அலுத்கமகே, பந்துல குணவர்தன, பிரதீப் உந்துகொட, கோகிலா ஹர்ஷனி குணவர்தன, சஹன் பிரதீப், ரமேஸ் பத்திரன, கஞ்சன விஜேசேகர, பிரசன்ன ரணதுங்க, கனக ஹேரத், மொஹான் பிரியதர்ஷன ஆகியோர் கட்சியின் சார்பில் தனியான வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

அத்துடன் பிறிதொரு கட்சியின் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்கும் உறுப்பினர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் யோசனைக்கு 6 பேர் எதிராக வாக்களித்துள்ளனர்.

எவ்வாறாயினும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் எனக் கூறப்பட்ட தம்மிக பெரேரா தொடர்பில் அரசியல் குழுக் கூட்டத்தின்போது எந்தவித கருத்துக்களும் பரிமாற்றிக் கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவளிக்காத 11 பேர் உள்ளிட்ட தரப்பினர் நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தனவின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சைனப் ஆரம்பப் பாடசாலைக்கு ஆளுநர் வருகை!

0

புத்தளம் சைனப் ஆரம்ப பாடசாலையின் முப்பெரும் விழா பாடசாலை அதிபர் யஹியா தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து புத்தளம் ஜெய்னப் பாடசாலைக்கு 22 லட்சம் ரூபா பெறுமதியான நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு, சிறுவர் விளையாட்டு நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தல் மற்றும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் செயற்திட்டத்தின் கீழ் BCMH நிறுவனத்தினால் கற்றல் உபகரணம் வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் கடந்த செவ்வாய்க்கிழமை (16) வெகு விமர்சையாக இடம்பெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதியாக வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், விசேட அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மற்றும் கௌரவ அதிதியாக புத்தளம் வலயக்கல்விப் பணிப்பாளர் அர்ஜுன ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆரம்ப பாடசாலையின் முக்கியத்துவம் மற்றும் அறிவார்ந்த சமூகத்தை கட்டியெழுப்ப ஆரம்ப பாடசாலை ஆற்றிவருகின்ற அர்ப்பணிப்பு குறித்து விரிவாக பேசிய வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், புத்தளம் மாவட்ட பாடசாலைகளின் துரித வளர்ச்சி பற்றியும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

மேலும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் செயற்திட்டத்திற்கு வடமேல் மாகாண ஆளுநர் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் ஜவ்ஷி ஜமால்தின், இணைப்புச் செயலாளர் எச். அமீர் அலி ஆசிரியர், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் உட்பட உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் அயல் பாடசாலையின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு
நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு

ஹிருணிகாவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறை

0

கடத்தல் வழக்கில் முன்னாள் எம்.பி ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்தத் தீர்ப்பை அறிவித்தார்.

தெமட்டகொட பகுதியிலுள்ள கடை ஒன்றில் பணிபுரிந்த அமில பிரியந்த அமரசிங்க எனும் இளைஞர் ஒருவரை 2015 டிசம்பர் 21ஆம் திகதி ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு சொந்தமான டிபெண்டர் வாகனத்தில் கடத்திய வழக்கு விசாரணை முடிவில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

29 குற்றங்கள் தொடர்பில் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் 8 பேரும் குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில், அச்சம்பத்திற்கு உதவி, ஒத்தாசை புரிந்ததாக ஹிருணிகா மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்திருந்தார்.

அத்தோடு, சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவின் ஆதரவாளர்கள் 8 பேர் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைதான ஐந்தாம் சந்தேகநபரின் மகள் அளித்துள்ள வாக்குமூலத்தில், தமது தாயாருடன் தொடர்பு பேணிய நபர் ஒருவரை தாம் காண்பித்ததாகவும், அவரை தமது தந்தையும் அவருடன் சென்றவர்களும் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு ஹிருணிகாவிடம் அழைத்துச் சென்றதாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

ஓவியப்போட்டியில் எருக்கலம்பிட்டி மாணவன் முதலாமிடம்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட வட மாகாண மானவர்களுக்கிடையிலான சித்திரப்போட்டியில் மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்றார்.

வீதி விபத்துக்கள் இல்லாத நாளைக்கான பாடசாலையிலிருந்து அணிவக்குப்போம் எனும் தொனிப்பொருளில் கடந்த வியாழக்கிழமை (13.06.2024) அன்று நடாத்தப்பட்ட வட மாகாண மாணவர்களுக்கிடையிலான குறித்த சித்திரப்போட்டியில் சுமார் 2600 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

சித்திரப்போட்டியில் பங்குபற்றிய 2600 மாணவர்களில் 250 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு நேற்றைய தினம் (15.06.2024) அவர்களுக்கான போட்டி இடம்பெற்றது.

நடைபெற்று முடிந்த இறுதிச் சுற்றுப்போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்று பெருமதிமிக்க பரிசில்களை பெற்றுக்கொண்டார்.

முதலாம் இடம் பெற்ற முஹம்மது ஹுசைன் என்ற மாணவனுக்கு சான்றிதல், துவிச்சக்கரவண்டி மற்றும் 8500/- ரூபா பெறுமதியான வவுச்சரும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இதேவேளை குறித்த போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய இல்முதீன் முஹம்மது ஹஸ்பான் 7 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய மற்றொரு மாணவரான முஹம்மது சம்ஹான் 8 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

பாரிய சாவல்களுக்கு மத்தியில் தனி ஒரு மனிதனாக இம் மாணாவர்களை ஊக்கப்படுத்தி, தயார்ப்படுத்தி போட்டியில் பங்குபெறச் செய்து வெற்றிபெறச் செய்த எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியின் சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் அவர்களின் இம் முயற்சிக்கு, பாடசாலை சமூகம் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் நன்றி தெரிவித்தனர்.

தமக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வந்து தேசிய அளவில் இடம்பெறும் போட்டிகளில் மாணவர்களை பங்குபெறச் செய்வதே தனது இலக்கு என சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் எமது ஊடகத்திற்கு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை இராஜினாமா

0

நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்துள்ளனர்.

சாந்த நிரியல்ல உட்பட 15 பேர் கொண்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரின் அறிவித்தலுக்கு அமைய இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி திங்கட்கிழமை புதிய பணிப்பாளர் சபை நியமிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ “அத தெரண” விற்கு தெரிவித்தார்.

புத்தளம் எருக்கலம்பிட்டியில் கடும் வெள்ளம்

0

புத்தளம் பகுதியில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக புத்தளம் பகுதி முழுதும் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.

புத்தளம், தில்லையடி, பாலாவி, புத்தளம் எருக்கலம்பிட்டி, ஹிதாயத் நகர்,  மதுரங்குளி மற்றும் ஏனைய பல கிராமங்களும் வெள்ளித்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமமும் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 1500 குடும்பங்கள் இங்கு வாழ்ந்துவருவதுடன், அனைத்து வீடுகளும் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நூற்றிற்கும் அதிகமான வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் ஐநூற்றுக்கும் அதிகமான வீடுகள் பகுதி அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8ஆம் திகதி ஏற்பட்ட மழை வெள்ளித்தினால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் மற்றும் பாடசாலைகளில் தற்காலிகமாக  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு தினங்களாக இவர்களுக்கான சமைத்த உணவுகள் மூன்று வேலைகளிலும் ஊர் தனவந்தர்களின் உதவியுடனும், பள்ளிவாசல் நிர்வாக சபையின் வழிகாட்டலுடனும் வழங்கப்பட்டு வருவதுடன், ஊர் மக்களுக்கும் உணவு விநியோகங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

இவர்களுக்கான நிவாரண உதவிகள் இதுவரை அரசாங்கத்தினால் வழங்கப்படாத போதிலும், ஊர் மக்களின் பங்களிப்புடன் மாத்திரமே பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு விநியோகங்கள் இதுவரை  வழங்கப்பட்டு வருகின்றது.

புத்தளம் பொத்துவில்லு பகுதியில் உள்ள குளம் மழை நீரினால்  பெருக்கெடுத்துள்ளதால் குறித்த குளத்து நீர் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமத்திற்குள் தொடர்ந்தும் மூன்றாவது நாளாக ஊடறுத்து செல்வதால் வீடுகள் தொடர்ந்தும் நீருள் மூழ்கியுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்தின் நிவாரண உதவிக்காக பல மக்கள் தொடர்ந்தும் எதிர்பார்த்து காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மாதம்பையில் பயங்கரம்: கணவரை கட்டிவைத்துவிட்டு நகைகள் கொள்ளை!

0

ஜுட் சமந்த

மாதம்பே, செம்புகட்டிய பகுதியில் வசிக்கும் 62 வயதான பஸ்நாயக்க அப்புஹாமிலாகே துலானி தீபிகா பஸ்நாயக்க என்ற பெண்மணி, கடந்த 29ஆம் திகதி அதிகாலை வழக்கம் போல் நித்திரையில் ஆழ்ந்திருந்தார். அப்போது, தனது கட்டிலுக்கு அருகில் யாரோ நடமாடுவது போன்ற ஒரு விசித்திரமான உணர்வு அவருக்கு ஏற்பட்டுள்ளது. திடுக்கிட்டு கண்விழித்துப் பார்த்தபோது முகத்தை முழுமையாக மூடியபடி, அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் கத்தி முனையில் அவர் முன்னால் நின்றுகொண்டிருந்தனர்.

பெண்ணை சத்தமிடக் கூடாது என மிரட்டிய அந்த முகமூடி கும்பல், “வீட்டில் இருக்கும் பணத்தையும் நகையையும் உடனடியாக எடு!” என அதட்டியுள்ளனர். தன்னிடம் பணம் எதுவும் இல்லை என அந்தப் பெண் பதறியடி கூறியபோதும், கொள்ளையர்கள் விடுவதாக இல்லை. வீட்டின் மூலை முடுக்கெல்லாம் தேடி, அங்கிருந்த பெருமளவிலான தங்க நகைகளையும், அந்தப் பெண் விரலில் அணிந்திருந்த தங்க மோதிரத்தையும் பறித்துக்கொண்டனர். அத்தோடு நிறுத்தாமல், அங்கிருந்த 10,000 ரூபா பெறுமதியான ஒரு கைத்தொலைபேசியையும் சுருட்டிக்கொண்டு அந்த கும்பல் இருளில் மறைந்தது.

கொள்ளையர்கள் சென்ற பின் தெரிந்த அதிர்ச்சி உண்மை!

கொள்ளைக் கும்பல் வீட்டை விட்டு வெளியேறியதும், பதற்றத்துடன் தனது கணவரைத் தேடி ஓடிய துலானிக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. அவரது கணவரின் கை, கால்கள் மற்றும் வாய் துணிகளால் கட்டப்பட்ட நிலையில், அவர் படுக்கையறையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். கொள்ளையர்கள் வீட்டிற்குள் நுழைந்ததும் முதன்வேலையாக கணவரைத்தான் கட்டிப்போட்டு மிரட்டியுள்ளனர் என்பது பின்னரே தெரியவந்தது.

கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மொத்த மதிப்பு ரூபா 2 கோடியே 21 இலட்சத்து 76 ஆயிரத்து 250 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

பொலிஸார் வசம் வாக்குமூலம்: வலைவீசித் தேடப்படும் முகமூடிக் கும்பல்!

பாதிக்கப்பட்ட பெண்மணி உடனடியாக மாதம்பே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். கொள்ளையர்கள் முகமூடி அணிந்திருந்தாலும், அவர்களின் உடல்வாகு மற்றும் குரலை வைத்து, மீண்டும் பார்த்தால் தம்மால் நிச்சயமாக அடையாளம் காண முடியும் என அவர் பொலிஸாரிடம் தைரியமாகத் தெரிவித்துள்ளார்.

தற்போது வரை கொள்ளையர்கள் பற்றிய எந்தவொரு உறுதியான தகவலும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ள மாதம்பே பொலிஸார், சம்பவ இடத்திற்குச் சென்று தடயங்களைச் சேகரித்து, கொள்ளையர்களைக் கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இலங்கையை அதிரவைக்கும் இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் அதிரடி விழிப்புணர்வு!

  1. 65,000 கி.மீ கடந்த சென்னை ‘ஜேம்ஸ் பாண்ட்’: ஸ்மார்ட்போன் ஆபத்துக்கு எதிராக முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சைக்கிள் பயணம்!
  2. “போனை வையுங்க, உயிரை காப்பற்றுங்க!” – இலங்கையை அதிரவைக்கும் இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் அதிரடி விழிப்புணர்வு!
  3. முல்லைத்தீவு To யாழ்ப்பாணம்: தற்கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க சைக்கிளில் புறப்பட்ட நிஜ ஹீரோ!

இன்றைய நவீன டிஜிட்டல் உலகில், நமது கைகளில் இருக்கும் கையடக்கத் தொலைபேசிகள் மனித வாழ்வை எளிதாக்கியுள்ள அதேவேளை, மறுபுறம் பல விபரீதங்களுக்கும் வழிவகுத்துக் கொண்டிருக்கின்றன. அளவுக்கு மிஞ்சிய தொலைபேசிப் பயன்பாடு காரணமாக, தற்கொலைகள், கொலைகள் மற்றும் வீதி விபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதற்கு எதிராக உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் விழிப்புணர்வுப் போராட்டம் ஒன்று தற்போது இலங்கை மண்ணில் அரங்கேறியுள்ளது.

இந்தியாவின் சென்னையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞரான கமின் மொன்சாரி, “தற்கொலை அற்ற சமூகத்தை உருவாக்குவோம்” என்ற உன்னத தொனிப்பொருளை ஏந்தி, தனது துவிச்சக்கரவண்டி மூலமாகப் பாரிய விழிப்புணர்வுப் பயணமொன்றை ஆரம்பித்துள்ளார்.

இந்தியாவைத் தொடர்ந்து இலங்கையிலும் சாதனைப் பயணம்!

யாரும் எளிதில் செய்யத் துணியாத இந்த விழிப்புணர்வுப் பயணத்தை கமின் மொன்சாரி சாதாரணமாக ஆரம்பிக்கவில்லை. இந்தியாவில் பல மாநிலங்களைக் கடந்து, சுமார் 65,000 கிலோமீட்டர் தூரம் வரை தனது சைக்கிளிலேயே பயணித்து, அங்குள்ள பொதுமக்களிடையே கையடக்கத் தொலைபேசியின் ஆபத்துக்கள் மற்றும் தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வை வெற்றிகரமாக ஏற்படுத்தியுள்ளார்.

இந்தியாவில் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது தனது அண்டை நாடான இலங்கைக்கு வருகை தந்துள்ள அவர், இலங்கை முழுவதையும் தனது சைக்கிள் பயணத்தின் மூலம் விழிப்புணர்வுப் பாதையாக மாற்றத் திட்டமிட்டுள்ளார்.

முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி அதிரடிப் பயணம்!

தொலைபேசி அடிமைத்தனத்திலிருந்து தற்போதைய சமுதாயம் மீண்டெழ வேண்டும் என்பதை வலியுறுத்தி, இலங்கையில் தனது பயணத்தைத் தொடர்ந்து வரும் கமின் மொன்சாரி, தற்போது முல்லைத்தீவுப் பகுதியிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார். முல்லைத்தீவிலிருந்து பரந்தன் ஊடாக யாழ்ப்பாணம் நோக்கிய வீதியில் வீறுகொண்டு பயணிக்கும் இவரை, வழியெங்கும் உள்ள உள்ளூர் மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வியப்புடனும் நெகிழ்ச்சியுடனும் வரவேற்று ஊக்குவித்து வருகின்றனர்.

ஒரு மாற்றுத்திறனாளி இளைஞன், எல்லைகளையெல்லாம் கடந்து சமூகத்தின் நலனுக்காக வீதியில் இறங்கிப் போராடும் இந்தக்காட்சி, சமூக வலைத்தளங்களில் (Social Media) தற்போது காட்டுத்தீயாய் பரவி, உலகளாவிய ரீதியில் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காதலனை நம்பிச் சென்ற யுவதிக்கு நேர்ந்த கொடூரம்: மாத்தளையில் அதிர்ச்சி!

0

காதலனைத் தேடிச் சென்ற கண்டி யுவதிக்கு நேர்ந்த விபரீதம்: மாத்தளையில் விடிய விடிய நடந்த கூட்டு வன்புணர்வு!

காதலனைப் பார்ப்பதற்காகக் கண்டியிலிருந்து மாத்தளைக்கு நம்பிக்கையோடு பயணித்த இளம் யுவதி ஒருவருக்கு, எவராலும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்குக் கொடூரமான அனுபவம் ஒன்று நேர்ந்துள்ளது. சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இச்சம்பவம் மாத்தளை மாவட்டத்தின் வில்ஜமுவ நகரில் இடம்பெற்றுள்ளது.

குறித்த யுவதி தனது 33 வயதுடைய காதலனைச் சந்திப்பதற்காக வில்ஜமுவ பகுதிக்குச் சென்றுள்ளார். எனினும், அங்குச் சென்ற யுவதியை அவரது காதலன், தனது நண்பர் ஒருவருக்குச் சொந்தமான மூன்று மாடி வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்குதான் அந்த யுவதியின் வாழ்க்கையை உலுக்கிய கொடூரம் அரங்கேறத் தொடங்கியுள்ளது.

அங்கு வைத்து காதலன் ஏனைய மூன்று நண்பர்களுக்கும் தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்து வரவழைத்துள்ளார். பின்னர், அவர்கள் அனைவரும் மதுபானம் அருந்திவிட்டு, அந்த யுவதியை விடிய விடிய கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர். இத்துடன் நின்றுவிடாது, 55 வயதுடைய மற்றுமொரு சந்தேகநபர் பராமரித்து வந்த வேறொரு வீட்டிற்கும் அந்த யுவதியைக் கூட்டிச்சென்று மீண்டும் கொடூரமாகப் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட ஏனைய சந்தேகநபர்கள் 37 முதல் 55 வயதுக்குட்பட்டவர்கள் எனப் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மறுநாள் காலை, அந்த நரகத்திலிருந்து எப்படியோ தப்பியோடிய யுவதி, பேருந்து மூலம் கண்டிக்குத் திரும்பியுள்ளார். எனினும், கடுமையான இரத்தப்போக்கு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக அவர் உடனடியாக உடுதும்பர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், மேலதிக சிகிச்சைக்காகக் கண்டி தேசிய மருத்துவமனைக்கு அவசரமாக மாற்றப்பட்டார்.

மருத்துவமனையில் யுவதியை பரிசோதித்த மருத்துவர்கள், அவரைச் சட்ட மருத்துவ அதிகாரியிடம் (JMO) ஒப்படைத்த போதே, தனக்கு நேர்ந்த இந்த அநீதியை அவர் வாக்குமூலமாக வெளிப்படுத்தியுள்ளார்.

இதனை அடுத்து, உடுதும்பர பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டு, மேலதிக விசாரணைகளுக்காக வில்ஜமுவ பொலிஸாரிடம் வழக்கை ஒப்படைத்தனர். வில்ஜமுவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுமேத பண்டார மற்றும் பெண் பொலிஸ் பரிசோதகர் அனோமா குமாரி தலைமையிலான விசேட பொலிஸ் குழுவினர், அதிரடியாகச் செயற்பட்டு காதலன் உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்களையும் உடனடியாகக் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் மாத்தளை நாவுல நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

சிலாபத்தில் அதிரடி வேட்டை: விசேட நிபுணர்கள் களமிறங்கிய பின்னணி?

0

ஜுட் சமந்த

சிலாபத்தில் அதிரடி ‘டெங்கு ஆபரேஷன்’: களத்தில் குதித்த நிபுணர்கள் குழு!

சிலாபம் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமப் புறங்களில் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் திடீரென அதிகரித்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதனை அடுத்து, பிரதேச பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கில் சுகாதாரத் துறையினர் தற்போது அதிரடியான கள நடவடிக்கைகளில் குதித்துள்ளனர்.

சாதாரணமாக நடக்கும் சோதனைகளைப் போலல்லாமல், இம்முறை விஞ்ஞானபூர்வமான அணுகுமுறையுடன் அதிகாரிகள் சோதனைகளை முடுக்கிவிட்டுள்ளனர். பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுடன் (PHIs) இணைந்து, நுளம்புகளின் வாழ்விடங்கள் மற்றும் அவற்றின் பரம்பரை பற்றி ஆராயும் பூச்சியியல் வல்லுநர்களும் (Entomologists) இந்தத் தேடுதல் வேட்டையில் நேரடியாகப் பங்கெடுத்துள்ளனர். இன்று காலை சிலாபம் ‘சங்கட்டான’ பகுதியில் இக்குழுவினர் மேற்கொண்ட அதிரடிச் சோதனையின் போது, பல திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

பொதுமக்கள் சுத்தமாக இருக்கிறது என்று நினைத்த பல இடங்களிலேயே, ஆயிரக்கணக்கான டெங்கு நுளம்புப் புழுக்கள் தேங்கியிருந்த நீர் நிலைகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. வீடுகளின் முற்றங்கள், பாழடைந்த கிணறுகள் மற்றும் முறையான வடிகாலமைப்பு இல்லாத இடங்களே இந்த நுளம்புகளின் பிரதான சொர்க்கபுரியாக மாறியுள்ளன என்பதை அதிகாரிகள் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதிகாரிகளின் இந்தத் திடீர் வருகையும் சோதனைகளும் அப்பகுதி மக்களிடையே பெரும் விழிப்புணர்வையும், அதேநேரம் ஒருவித பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. “நாங்கள் எமது சூழலைச் சுத்தமாக வைத்திருக்கின்றோம்” என்று அலட்சியமாக இருந்த பலருக்கு, இந்தச் சோதனை நடவடிக்கை ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது.

இந்த ஆபத்து உங்களையும் உங்கள் குடும்பத்தையும் சூழ்ந்துகொள்ளாமல் இருக்க வேண்டுமாயின், விழிப்புணர்வு மாத்திரம் போதாது; உடனடிச் செயற்பாடும் அவசியமாகும். உங்கள் வீட்டுச் சூழலில் நீர் தேங்கும் இடங்களை இன்றே துப்புரவு செய்யுங்கள். இல்லையெனில், அடுத்த முறை சுகாதாரப் பிரிவினரின் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல் உங்கள் வீட்டு வாசலையும் தேடி வரலாம்!

வெள்ளித்திரையாக மாறிய மஹவெவ: உருவான பிரம்மாண்ட தோரணம்!

0

ஜுட் சமந்த

மஹவெவ: இலங்கையின் பாரம்பரிய பௌத்த கலாசார விழாக்களில் பிரதான இடத்தை வகிக்கும் தோரணக் கண்காட்சிகள், நவீன தொழில்நுட்ப ஒளியமைப்புகளுடன் மக்களைக் கவர்ந்து வரும் நிலையில், மஹவெவ பிரதேசத்தில் மற்றுமொரு பிரம்மாண்ட தோரணம் மக்கள் பார்வைக்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மஹவெவ – கல்அமுண ஸ்ரீ வர்தனாகார விகாரையின் தோரணக் குழுவினரால் மிகவும் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட இந்தத் தோரணம், நேற்று முன்தினம் (27) சனிக்கிழமை இரவு உத்தியோகபூர்வமாக ஒளிரூட்டப்பட்டது.

இம்முறை இந்தத் தோரணம் அமைக்கப்பட்டுள்ள இடம் தான் தற்போதைய பிரதான ஈர்ப்பு மையமாக மாறியுள்ளது. பரந்த இடவசதியைக் கொண்ட கல்அமுண விளையாட்டு மைதானத்தில் இந்தத் தோரணம் கம்பீரமாகத் தளம் அமைத்துள்ளதால், ஆயிரக்கணக்கான மக்கள் எவ்வித நெருக்கடியுமின்றி ஒரே நேரத்தில் இந்த ஒளிரும் கலைவடிவத்தைக் கண்டு ரசித்து வருகின்றனர்.

வெறும் ஒளியமைப்பு மாத்திரமன்றி, ஆன்மீகக் கதையையும் பாமர மக்களுக்கும் புரியும் வகையில் கொண்டு சேர்ப்பதே இதன் பின்னணியாகும். அந்தவகையில், இம்முறை பௌத்தர்களின் வாழ்வியலோடு பிணைந்த “கட்டஹாரி” ஜாதகக் கதையை மையமாக வைத்தே இந்தத் தோரணத்தின் கதைக்களம், கண்கவர் ஓவியங்கள் மற்றும் வர்ண விளக்குகளின் சேர்க்கையோடு தத்ரூபமாக விவரிக்கப்பட்டுள்ளது.

பிராந்தியத்தின் ஆன்மீக வழிகாட்டியான கல்அமுண ஸ்ரீ வர்தனாகார விகாரையின் விகாராதிபதி, வணக்கத்திற்குரிய எதாஉடகந்தே ஞானாலோக்க தேரரின் ஆசியுடனும், அவரது முன்னிலையிலும் இந்தத் தோரணம் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. தொழில்நுட்பக் கலைஞர்களின் கடின உழைப்பில் உருவாகியுள்ள இந்தத் தோரணத்தைக் காண்பதற்கும், வார இறுதி நாட்களைக் கழிப்பதற்கும் நாடளாவிய ரீதியில் இருந்து தற்போது மக்கள் கூட்டம் அலைமோதி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

விஜயதாசவுக்கு சவால் விடும் சமுதித்த! ‘யூடியூப்’ தடைக்கு எதிராக மீண்டும் நீதிமன்றம்?

0
  • முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராசபக்ஷ மற்றும் ரகித ராசபக்ஷ ஆகியோரை மையப்படுத்தி கடந்த 2025 ஆம் ஆண்டு ‘Truth with Chamuditha’ யூடியூப் தளத்தில் ஒரு விசேட நேர்காணல் ஒளிபரப்பப்பட்டது.
  • இந்த நேர்காணல் வெளியாவதைத் தடுக்கும் நோக்கில், விஜயதாச ராசபக்ஷ தரப்பினர் உடனடியாக நீதிமன்றத்தை நாடி அதற்கு எதிராக இடைக்கால தடையுத்தரவு ஒன்றைப் பெற்றிருந்தனர்.
  • தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் சட்ட ரீதியான மாற்றங்களை அடுத்து, இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இலங்கையின் இணைய ஊடகப் பரப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ‘Truth with Chamuditha’ யூடியூப் பக்கத்தின் (Channel) விசேட நேர்காணல் விவகாரம், தற்போது மீண்டும் ஒரு சட்டப் போராட்டமாக உருவெடுத்துள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டு முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராசபக்ஷ மற்றும் ரகித ராசபக்ஷ ஆகியோரை இலக்கு வைத்து ஊடகவியலாளர் சாமுதித்த சமரவிக்ரமவினால் நடத்தப்பட்ட அந்த விசேட அரசியல் வெளிப்படுத்தல் நிகழ்ச்சி, ஒளிபரப்பாவதற்கு முன்னரே பெரும் அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தது.

ஆனால், அந்தச் சந்தர்ப்பத்தில் சாமுதித்தவின் கேள்விகளுக்கு முகங்கொடுப்பதைத் தவிர்த்துக் கொண்ட விஜயதாச ராசபக்ஷவின் தரப்பினர், மிக அவசரமாக நீதிமன்றத்தை நாடி சாமுதித்தவின் யூடியூப் தளத்தில் அந்த விசேட நேர்காணல் காணொளி வெளியாவதைத் தடுக்கும் வகையில், தமக்குச் சாதகமானதொரு இடைக்கால தடையுத்தரவையும் அவர்கள் நீதிமன்றத்தினூடாகப் பெற்றுக் கொள்வதில் வெற்றியடைந்தனர். இதனால், அந்த பரபரப்பான நேர்காணலில் என்னதான் பேசப்பட்டது என்பதை அறிய முடியாமல் சமூக வலைத்தள வாசகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

இருப்பினும், இந்த விவகாரம் இத்துடன் முடிவுக்கு வந்துவிடவில்லை என்பதுதான் தற்போதைய பிரதான திருப்புமுனையாகும். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் சூழல் மற்றும் சட்ட நகர்வுகளுக்கு மத்தியில், ஊடகவியலாளர் சாமுதித்த சமரவிக்ரம இந்த தடையுத்தரவை அப்படியே விட்டுவிடத் தயாராக இல்லை என்ற அதிரடித் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த முறை விதிக்கப்பட்ட அந்த நீதிமன்ற தடையுத்தரவுக்கு மிக பலமான முறையில் சட்ட ரீதியாக சவால் விடுப்பதற்கு சாமுதித்த தற்போது சகல ஏற்பாடுகளையும் பூர்த்தி செய்துள்ளார். ஊடக சுதந்திரத்தை நிலைநாட்டும் நோக்கில், குறித்த தடையுத்தரவை நீக்கக் கோரி மீண்டுமொருமுறை நீதிமன்றக் கதவுகளைத் தட்ட அவர் தயாராகி வருகிறார்.

இதன்படி, இந்த தடையுத்தரவுக்கு எதிரான புதிய சட்டப் போராட்டம் கொழும்பு நீதிமன்றில் மிக விரைவில் ஆரம்பமாகவுள்ளது. அரசியல் பிரமுகர்களின் அழுத்தங்களுக்குப் பணியாமல், உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்காக சாமுதித்த எடுக்கவுள்ள இந்த அடுத்தகட்ட அதிரடி சட்ட நடவடிக்கை, மீண்டும் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதங்களை கிளப்பத் தொடங்கியுள்ளது.

வனாத்தவில்லு தோட்டத்தில் கொழுந்துவிட்டு எரிந்த போதைப்பொருட்கள்!

0

ஜூட் சமந்த

மினுவாங்கொடை மற்றும் நீர்கொழும்பு பிராந்தியங்களை அதிரவைத்த பெரும்போதைப்பொருள் கடத்தல் வழக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பல கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் தொகையொன்று புத்தளம் – வனாத்தவில்லுவ, லக்டோ வத்தையில் அமைந்துள்ள பிரத்தியேக தகன உலை வளாகத்தில் வைத்து தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

  • நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த பல கோடி பெறுமதியான போதைப்பொருட்களே இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளன.
  • புத்தளம் – வனாத்தவில்லுவ, லக்டோ வத்தையில் அமைந்துள்ள பிரத்தியேக தகன உலை வளாகத்தில் வைத்து இவை ஜூன் 27ஆம் திகதி எரியூட்டப்பட்டன.
  • அழிக்கப்பட்டவற்றுள் 14 கிலோவிற்கும் அதிக “ஐஸ்” (Ice) போதைப்பொருளும், 39 கிலோவிற்கும் அதிக “குஷ்” (Kush) கஞ்சா வகைகளும் முதன்மை பெறுகின்றன.

நீர்கொழும்பு நீதிமன்ற பாதுகாப்பறையில் பல வருடங்களாக பூட்டி வைக்கப்பட்டிருந்த அந்த அபாயகரமான போதைப்பொருள் பொதிகள், நேற்று ஜூன் 27ஆம் திகதி காலை பலத்த ஆயுதமேந்திய பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் வெளியில் எடுக்கப்பட்டன. கொழும்பையும் நீர்கொழும்பையும் உலுக்கிய பிரதான போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டு, வழக்கு விசாரணைகள் முற்றாக நிறைவடைந்த பொருட்களே இவ்வாறு புத்தளத்திற்கு கொண்டுசெல்லப்பட்டன.

நீர்கொழும்பிலிருந்து புத்தளம் – வனாத்தவில்லுவ “லக்டோ வத்தை” பகுதியில் விசேடமாக அமைக்கப்பட்டுள்ள உயர் வெப்பநிலை தகன உலை வளாகத்திள் வைத்து இந்த நச்சுப் பொருட்கள் எரித்து சாம்பலாக்கப்பட்டன.

சாம்பலான போதைப்பொருள் பட்டியல்: மலைக்க வைக்கும் எடைகள்!

நீதிமன்றத்தின் முன்னிலையில் ஒவ்வொன்றாக எடையிடப்பட்டு, உத்தியோகபூர்வமாக எரியூட்டப்பட்ட போதைப்பொருட்களின் விபரம் இதோ:

போதைப்பொருள் வகைஅழிக்கப்பட்ட அளவு
ஐஸ் (Ice – Methamphetamine)14 கிலோ கிராம் 97 கிராம்
குஷ் (Kush – வீரியம் கூடிய கஞ்சா)39 கிலோ கிராம் 710 கிராம்
ஹெரோயின் (Heroin)01 கிலோ கிராம் 02 கிராம்
கஞ்சா மற்றும் ஹாஷிஷ் (Hashish)04 கிலோ கிராம் 139 கிராம்
மண்டி (Mandi)01 கிலோ கிராம் 200 கிராம்
கொகெய்ன் (Cocaine)02 கிலோ கிராம் 30 கிராம்
போதை மாத்திரைகள் (Narcotic Pills)26,262 மாத்திரைகள்
உயர் அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில் விழுந்த முற்றுப்புள்ளி

இந்த முழுமையான அழிப்பு நடவடிக்கையானது சட்டப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படுவதற்காக, நீர்கொழும்பு பிரதான நீதவான் திலினி பெரேரா நேரடியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்து கண்காணித்தார். அவருடன் இணைந்து அரசாங்கத்தின் சிரேஷ்ட இரசாயன பகுப்பாய்வாளர், ஆபத்தான ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் உதவிப் பணிப்பாளர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் உதவிப் பணிப்பாளர் ஆகியோர் முன்னிலையிலேயே அனைத்துப் பொதிகளும் தகன உலையினுள் தள்ளப்பட்டு, சில நிமிடங்களில் சாம்பலாக்கப்பட்டன.

இலங்கையின் எதிர்காலச் சந்ததியைச் சீரழிக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு, நீதிமன்றத்தின் இந்த அதிரடி நடவடிக்கை ஒரு பலமான எச்சரிக்கையாக அமைந்துள்ளது என்பதில் ஐயமில்லை.

பொசொன் தன்சல்களுக்கு அதிரடி உத்தரவு: மீறினால் சட்ட நடவடிக்கை!

0

ஜூட் சமந்த

இலங்கையில் பொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தன்சல்கள் (அன்னதானங்கள்) தொடர்பில் இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் (PHIs) மிக முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் கடந்த வெசாக் பண்டிகையை விடவும், இம்முறை பொசொன் காலத்தில் நாடளாவிய ரீதியில், குறிப்பாக வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பெருமளவிலான தன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பதில் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

அச்சுறுத்தும் டெங்கு: பிளாஸ்டிக்குக்கு தடை விழுமா?

“தற்போது நாம் மிகத் தீவிரமான டெங்கு பரவல் காலப்பகுதியில் இருக்கிறோம் என்பதை எவரும் மறந்துவிடக் கூடாது” என எச்சரிக்கும் உபுல் ரோஹண, கடந்த வெசாக் தன்சல்களின் முடிவில் டன் கணக்கில் மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் சூழலில் கொட்டப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக, கோப்பி மற்றும் குளிர்பான தன்சல்களில் பிளாஸ்டிக் கோப்பைகளின் பயன்பாடு சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதனால் இம்முறை மக்காத பொருட்களை சூழலில் வீசுவதை முற்றாகத் தவிர்க்குமாறு ஏற்பாட்டாளர்களுக்கு விசேட வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

களத்தில் 2000 PHI அதிகாரிகள்: தராதரம் பார்க்க மாட்டோம்!

பொசொன் தினத்திற்கு முன்னரே அனைத்து தன்சல் ஏற்பாட்டாளர்களுக்குமான ஆலோசனைகளும் ஆரம்பக் கட்டப் பரிசோதனைகளும் நிறைவடைந்துள்ளன. பொசொன் தினத்திலும் அதற்கு அடுத்த நாட்களிலும் 2,000 இற்கும் மேற்பட்ட சுகாதார அதிகாரிகள் நாடளாவிய ரீதியில் கண்காணிப்பில் ஈடுபடவுள்ளனர். இதன்போது, ஏற்பாட்டாளர்களின் பதவியோ அல்லது அந்தஸ்தோ பார்க்கப்பட மாட்டாது; மக்களின் சுகாதார பாதுகாப்பு மட்டுமே முதன்மையாகக் கருதப்படும் என சங்கம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

பக்தர்களுக்கு உணவு வழங்குவது புண்ணியமான காரியம் என்றாலும், அது சூழலையோ அல்லது மக்களின் ஆரோக்கியத்தையோ சீரழிப்பதாக அமையக் கூடாது. விதிகளை மீறி சுகாதார சீர்கேடுகளுடன் தன்சல்களை நடத்துவோருக்கு எதிராக எவ்வித தயக்கமும் இன்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.

கல்பிட்டியை அதிரவைத்த மாபெரும் படகுப் போட்டி 2026!

0

கல்பிட்டி: இலங்கையின் கரையோரப் பிரதேசங்களில் சாகச விளையாட்டுகளுக்குப் புகழ்பெற்ற கல்பிட்டி மண், இன்று மற்றுமொரு வரலாற்றுச் சிறப்புமிக்க விளையாட்டுத் திருவிழாவிற்கு சாட்சியமாகியுள்ளது.

வன்னி முந்தல் கடல் அலைகளைக் கிழித்துக்கொண்டு, அதிவேகப் படகுகள் சீறிப்பாய்ந்த “WANNIMUNDAL SEA LIONS KALPITIYA BOAT RACE 2026” படகு ஓட்டப் போட்டி இன்று (27.06.2026) சனிக்கிழமை வன்னி முந்தல் கடற்பரப்பில் மிக வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.

கரையோரம் எங்கும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான விளையாட்டு ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில், கடல் அலைகளின் வேகமும், மனிதர்களின் வீரமும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட காட்சிகள் பார்ப்போரைக் சிலிர்க்க வைத்தன.

எல்லைகளைக் கடந்த மோதல்!

வன்னி முந்தல் ‘ஸீ லயன்ஸ்’ (Wannimundal Sea Lions Sports Club) விளையாட்டுக் கழகத்தினர் மிக நேர்த்தியாக ஏற்பாடு செய்திருந்த இப்போட்டியானது, வெறும் உள்ளூர் போட்டியாக மட்டும் சுருங்கிவிடவில்லை.

கல்பிட்டியின் கடல் சவால்களை எதிர்கொள்வதற்காக சிலாபம், நீர்கொழும்பு மற்றும் மன்னார் ஆகிய கடல்சார் மாவட்டங்களிலிருந்து வருகை தந்திருந்த திறமைவாய்ந்த மாலுமிகளும், அதிவேகப் படகோட்டிகளும் களமிறங்கியிருந்தனர்.

இதனால் ஆரம்பம் முதலே போட்டியில் அசாத்திய விறுவிறுப்பும், அட்ரினலின் எகிறும் சாகசங்களும் நிறைந்திருந்தன.

களமிறங்கிய முக்கிய புள்ளிகள்: இலங்கையின் பாரம்பரிய மற்றும் நவீன படகோட்டுக் கலையை ஊக்குவிக்கும் நோக்கில் அமைந்த இந்நிகழ்விற்கு, புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், புத்தளம் மற்றும் கல்பிட்டி அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ M.J.M. பைசல் அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டார்.

அவருடன் கல்பிட்டி பிரதேச சபையின் தவிசாளர் சகோதரர் A.R.M. றிகாஸ் மற்றும் முன்னாள் தவிசாளர் சகோதரர் A.M. இன்பாஸ் ஆகியோரும் கலந்துகொண்டு போட்டியாளர்களை உற்சாகப்படுத்தியதோடு, வெற்றியாளர்களுக்கான கௌரவிப்புகளையும் வழங்கினர்.

சமூக வலைத்தளங்களை ஆக்கிரமிக்கும் கல்பிட்டி!

தற்போது இணையத்தில் இந்தப் படகுப் போட்டியின் வான்வழி (Drone) காணொளிகளும், அலைகளுக்கு நடுவே படகுகள் பறந்து செல்லும் அதிரடிப் புகைப்படங்களும் #KalpitiyaBoatRace2026 என்ற ஹேஷ்டேக்குடன் ட்ரெண்டாகி வருகின்றன.

சுற்றுலாப் பயணிகளையும், விளையாட்டுப் பிரியர்களையும் ஒரே புள்ளியில் இணைத்த இந்த வன்னி முந்தல் படகு ஓட்டப் போட்டி, கல்பிட்டி பிராந்தியத்தின் விளையாட்டுச் சுற்றுலாத்துறையை (Sports Tourism) அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

தேசமே ஒன்றிணைவோம்’ ஆபரேஷனில் சிக்கிய 2 லட்சம்பேர்!

0

இலங்கையை உலுக்கிக் கொண்டிருக்கும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் அட்டகாசங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்ட மாபெரும் மனிதாபிமான வேட்டை தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

‘தேசமே ஒன்றிணைவோம்’ (The Nation Together) என்ற மகுட வாசகத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த தேசிய நடவடிக்கை, தற்பொழுது குற்றவாளிகளின் சிம்மசொப்பனமாக மாறியுள்ளது.

கடந்த 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த அதிரடி ஆபரேஷன், நேற்று முன்தினம் (ஜூன் 25) வரை தங்குதடையின்றி தொடர்ந்துவரும் நிலையில், இக்காலப்பகுதிக்குள் மாத்திரம் முப்படையினரின் ஒத்துழைப்புடன் நாடு தழுவிய ரீதியில் 215,526 பிரம்மாண்ட சுற்றிவளைப்புத் தேடுதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

திடுக்கிடும் திருப்பமாக, இந்த சுற்றிவளைப்புகளின் போது இதுவரை 214,333 சந்தேகநபர்கள் கூண்டோடு தூக்கப்பட்டு உள்ளார்கள்.

கைதானவர்களில் சாதாரண குற்றவாளிகள் மட்டுமன்றி, சர்வதேச போதைப்பொருள் வலைப்பின்னல்களுடன் தொடர்புடைய பெரும் புள்ளிகளும் அடங்குவதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் மிக முக்கியமாக, 3,112 பேருக்கு எதிராக தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவு (Detention Orders) பெறப்பட்டு, இரகசிய இடங்களில் வைத்து வலைப்பின்னல்கள் குறித்த விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

அடுத்த கட்டமாக, குற்றவாளிகளின் முதுகெலும்பை உடைக்கும் வகையில், போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 360 நபர்களின் சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதேநேரம், இந்த கொடிய போதைப் பயன்பாட்டினால் சீரழிந்து போன 2,188 போதைப்பொருள் பாவனையாளர்களைக் கண்டறிந்து, அவர்களை நல்வழிப்படுத்துவதற்காகப் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பும் மனிதாபிமான நடவடிக்கைகளும் இணையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆனால், இந்த ஒட்டுமொத்த ஆபரேஷனின் அதிரவைக்கும் பின்னணி என்னவென்றால், பொலிஸார் கைப்பற்றியுள்ள போதைப்பொருட்களின் மலைக்கவைக்கும் அளவுகள் தான். நாட்டின் எதிர்காலத் தலைமுறையையே அழிக்கவிருந்த பின்வரும் போதைப்பொருட்கள் முற்றாக முடக்கப்பட்டுள்ளன:

ஹெரோயின்:1,963 கிலோகிராம் 863 கிராம் ஐஸ் (Meth):2,119 கிலோகிராம் 629 கிராம் கொக்கையின்:288 கிலோகிராம் 864 கிராம் கஞ்சா:5,817 கிலோகிராம் 714 கிராம் (மேலும் 12,899,201 கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டுள்ளன)

குஷ் (Kush):479 கிலோகிராம் 246 கிராம் ஹாஷிஷ் (Hashish): 312 கிலோகிராம் 291 கிராம்.

இலங்கை வரலாற்றில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட மிக உக்கிரமான போராக இது பார்க்கப்படுகிறது. இந்த சுற்றிவளைப்புகள் இத்துடன் நின்றுவிடப் போவதில்லை எனவும், நாட்டின் மூலை முடுக்கெங்கும் உள்ள போதைப்பொருள் வலையமைப்புகள் வேரறுக்கப்படும் வரையில் ஆபரேஷன் தொடரும் எனவும் பொலிஸ் உயர்மட்ட வட்டாரங்கள் எச்சரித்துள்ளன.