Sunday, April 19, 2026
Sponsored advertisementspot_img
Home Blog

நாகவில்லுவில் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ்வின் நினைவுதினம்!

பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று நாகவில்லுவில் இடம்பெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வு!

இலங்கை திருநாட்டில் பெளதீக ரீதியான பல வேலைத்திட்டங்களையும், இடம்பெயர்வு மற்றும் எல்லை நிர்ணயம் தொடர்பான பறந்துபட்ட அறிவினையும் கொண்டிருந்த எருக்கலம்பிட்டியை சேர்ந்த மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது வருட நினைவு தின நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

அந்த வகையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் நினைவுப் பேருரையும், புத்தக வெளியீடு நிகழ்வும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் ஏற்பாட்டில் நேற்று 25.08.2025 புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய அதிபர் ஜனாப் S.M. ஹுஸைமத் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், புத்தி ஜீவிகள் மற்றும் குடும்பத்தார்கள் கலந்தகொண்டமை விஷேட அம்சமாகும்.

சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் பொருளாளர் ஜனாப் ஏ.ஜி. அனீஸ் (Bsc.Agri) அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.

மேலும் இஸ்லாமிய கற்கை அறபு மொழிப் பீட, தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களினால் நூல் அறிமுக உரையும், நினைவுப் பேருரையும் மிகவும் உணர்வுபூர்வமாக நிகழ்த்தப்பட்டது.

கிழக்கு மற்றும் தென் கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பங்களிப்பு அளப்பெரியது என நினைவு கூறிய பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன், வடக்கில் ஏற்பட்ட யுத்தம் மற்றும் முஸ்லிம்களின் இடம்பெயர்வு குறித்து அதீத அக்கறையுடன் செயற்பட்ட மிக முக்கியமானவர் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்கள் எனவும் எடுத்துரைத்தார்.

வடக்கு முஸ்லிம்களின் இடம்பெயர்வு மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பில் அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களுடன் பலதரப்பட்ட கலந்துரையாடல்களை நடத்தி, சர்வதேசம் வரை இவ்விடயங்களை கொண்டுசென்ற மகான் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் என பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் தனது உரையில் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் புதல்வி சட்டத்தரணி எப்.சப்னா ஹஸ்புல்லாஹ் அவர்களினால் ஏற்புரை நிகழ்த்தப்பட்டதுடன், நூல் வெளியீடு நிகழ்வும் இடம்பெற்றது.

நூலின் முதற்பிரதியை ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தரும், புத்தளம் எருக்கலம்பிட்டி பள்ளிவாசல் நிர்வாக சபையின் முன்னாள் உறுப்பினருமான ஜனாப் ரஹ்மத்துல்லாஹ் (GS) அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

மேலும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் செயலாளர் ஜனாப் எஸ்.எச்.எம். றிஸ்னி அவர்களினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டதுடன், தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன், மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பாரியாருக்கும் நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில், பேராசிரியர்கள், கல்விமான்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், பாடசாலைச் சமூகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் குடும்பத்தார்கள் என பலரும் கலந்து சிறப்பித்ததுடன், ஈ நியூஸ் பெஸ்ட் ஊடக நிறுவனம் ஊடக அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரணிலுக்காக ஒன்று திரண்ட அரசியல் தலைவர்கள்!

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விசாரணை கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது, நாட்டின் அடிப்படை ஜனநாயக நிறுவனங்களின் வலிமை குறித்து கடுமையான கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் விளைவுகள் ஒரு தனிநபரின் அல்லது எந்தவொரு அரசியல் கட்சிகளின் தலைவிதியையும் விட, சமூகத்தின் உரிமைகளுக்கான பிரச்சினைகளை தோற்றிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் தலைவர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைகளை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது மற்றும் விளக்கமறியலை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து நடத்திய விசேட ஊடக சந்திப்பில் பங்கேற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரல முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் அறிக்கையை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

போர்த்துக்கல் அணி சாம்பியன் ஆனது!

0

‘நேஷன்ஸ் லீக்’ கால்பந்தில் போர்ச்சுகல் அணி சாம்பியன் ஆனது. பைனலில் ‘பெனால்டி ஷூட் அவுட்டில்’ 5-3 என ஸ்பெயினை வீழ்த்தியது.

ஐரோப்பிய கால்பந்து அணிகளுக்காக ‘நேஷன்ஸ் லீக்’ தொடர் நடத்தப்படுகிறது. மொத்தம் 54 அணிகள் பங்கேற்றன. நேற்று ஜெர்மனியின் முனிக் நகரில் நடந்த பைனலில், போர்ச்சுகல், நடப்பு யூரோ சாம்பியன் ஸ்பெயின் பலப்பரீட்சை நடத்தின. போட்டியின் 21வது நிமிடம் ஜுபிமெண்டி (ஸ்பெயின்), 26வது நிமிடம் மெண்டிஸ் (போர்ச்சுகல்) தலா ஒரு கோல் அடித்தனர். 45வது நிமிடம் மைக்கேல் ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் ஸ்பெயின் அணி 2-1 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் 61 வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். போர்ச்சுகல் அணிக்காக இவர் அடித்த 138வது கோல் இது. 90 நிமிட முடிவில் போட்டி 2-2 என சமன் ஆனது. அடுத்து நடந்த கூடுதல் நேரத்திலும் (30 நிமிடம்) இரு அணியும் கோல் அடிக்கவில்லை.

இதையடுத்து வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி ‘பெனால்டி ஷூட் அவுட்டுக்கு’ சென்றது. இரு அணிக்கும் தலா 5 வாய்ப்புகள் தரப்பட்டன. காயம் காரணமாக 88 வது நிமிடம் வெளியேறிய ரொனால்டோ, இதில் பங்கேற்கவில்லை.

முதல் 3 வாய்ப்பில் போர்ச்சுகலின் ராமோஸ், விடின்ஹா, பெர்ணான்டஸ் கோல் அடித்தனர். மறுபக்கம் ஸ்பெயின் தரப்பில் மெரினோ, பயேனா, இஸ்கோ கோல் அடிக்க 3-3 என ஆனது.

4வது வாய்ப்பில் மெண்டெஸ் (போர்ச்சுகல்) கோல் அடிக்க, ஸ்பெயினின் மோராட்டோ அடித்த பந்தை கோல் கீப்பர் டீகோ கோஸ்டா தடுத்து அசத்தினார்.

5வது வாய்ப்பில் நெவேஸ் கோல் அடித்தார். இதையடுத்து 5-3 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் ‘திரில்’ வெற்றி பெற்றது. 2019க்குப் பின் இத்தொடரில் மீண்டும் சாம்பியன் ஆனது.

தில்லையடியில் சிக்கிய கடத்தல் பீடி இலைகள்!

0

புத்தளத்தில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளுடன் வேன் ஒன்றும் பறிமுதல்!

இலங்கை கடற்படை, பொலிஸாருடன் இணைந்து, புத்தளம், தில்லையடி பகுதியில் 2025 ஜூன் 05 இரவு வேளையில் நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகள் கொண்ட ஒரு வேன் கைப்பற்றப்பட்டது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிறுவனம், புத்தளம் பொலிஸாருடன் இணைந்து தில்லையடி பகுதியில் நடத்திய இந்த சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்று சோதனை செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகளானது வாகனத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் வேன் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களால் ஆபத்தா?

விண்வெளியில் பூமியை சுற்றி வந்துக்கொண்டிருக்கும் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கொள்களை சீனா நினைத்தால் வெறும் 12 மணி நேரத்தில் தாக்கி அழித்துவிட முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் என்கிற செய்தி ஊடகத்தில் இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது தற்போது சீனா 99 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. இவை அனைத்தும் நான்ஜிங் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஆஸ்ட்ரோனாட்டிக்ஸ் பல்கலைக்கழகத்தின் விண்வெளிக் கட்டுப்பாட்டுத் துறையின் இயக்குநர் வூ யுன்ஹுவா தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இவை அனைத்தும் எலான் மஸ்கின் 1400 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை வெறும் 12 மணி நேரத்தில் காலி செய்துவிடும். சீன செயற்கைக்கோளில் லேசர், நுண் அலைகளை உருவாக்கும் கருவி, உளவு கருவிகள் பொருத்தப்பட்டிருக்கலாம். ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் வெறுமென நெட்வொர்க் கொடுக்க மட்டுமே பயன்படுத்தப்படுவதில்லை. தவிர, ராணுவ நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது என சீனா குற்றம்சாட்டி வருகிறது.

அதாவது, உக்ரைன்-ரஷ்யா போரில், உக்ரைன் படைகளுக்கு தகவல்கள் கொடுக்கவும், ரஷ்ய எல்லையை துல்லியமாக கண்காணிக்கவும் இந்த செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த 2022ம் ஆண்டு ரஷ்ய போரின்போது அப்போதைய உக்ரைனின் துணைப் பிரதமரான மைக்கைலோ ஃபெடோரோவ், “ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் சேவையை உடனடியாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த மஸ்க், “உடனடியாக சேவை வழங்கப்படும்” என்று கூறியிருந்தார்.

உக்ரைன் போருடன் மட்டுமே ஸ்டார்லிங்க் நிற்காது, நாளை சீனாவுக்கும்-தைவானுக்கும் பஞ்சாயது ஏற்பட்டால் அப்போதும், தைவானுக்கு சப்போர்ட் செய்ய ஸ்டார்லிங்க் வரும். எனவே இந்த கூட்டு நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்க சீனா இந்த புதிய செயற்கைக்கோள்களை உருவாக்கியிருக்கிறது.

கடந்த 2023ம் ஆண்டு இதற்கான பணிகளை சீனா தொடங்கியது. இந்த திட்டத்திற்கு ‘கியான்ஃபான் மெகா-விண்மீன் திட்டம்’ (Qianfan mega-constellation project) என்றும் பெயரிட்டிருந்தது. நோக்கம் உலகம் முழுவதும் இணைய தொடர்பை வழங்குவதாகும். இதற்காக மொத்தம் 15,000 சிறிய ரக செயற்கைக்கோள்களை ஏவ சீனா முடிவெடுத்தது. இதன் முதல் தொகுப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏவப்பட்டது. இதில் 18 செயற்கைக்கோள்கள் இருந்தன.

ஒவ்வொன்றும் சுமார் 300 கி.கி எடையில் இருந்தது. இவை பூமியிலிருந்து 800 கி.மீ உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டது. இதேபோன்று 2024 டிசம்பரில் அடுத்து இரண்டு தொகுதி ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. தற்போது மொத்தம் 99 செயற்கைக்கோள்கள் விண்வெளியில் இருக்கின்றன. 15,000 செயற்கைக்கோள்களை 3 கட்டங்களாக ஏவ இருக்கிறது. முதல் கட்டத்தில் 1,296 செயற்கைக்கோள்கள் ஏவப்படும். இதில் 648 செயற்கைக்கோள்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஏவப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் கன்னி உரை

0

அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்புவோம்

தேசியத்துவத்துடனும் ஐக்கியத்துடனும் ஒன்றுபட்டு நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க இன்று (23) காலை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

பதவிப் பிரமாணத்தின் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய முழுமையான உரை:

மக்களால் ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது நமது நாட்டின் ஜனநாயகத்திலிருக்கும் மிக முக்கியமான அம்சமாகும். தேர்தலில் வாக்களித்தல் மற்றும் ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதோடு ஜனநாயகம் நிறைவு பெறுவதில்லை. இது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சம் என்றாலும், நம் நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்த, கட்டமைப்புகளின் வலிமையும், சட்டங்களை வலுப்படுத்துவதும் அவசியம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனவே, எனது பதவிக்காலத்தில் இந்த நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.

அத்துடன், இந்த நாட்டில் ஜனநாயக முறையில் அதிகாரப் பரிமாற்றம் நடந்த வரலாறும் உண்டு. தேர்தலில் நிகழும் அதிகாரப் பரிமாற்றத்தை எந்தத் தலைவரும் நிராகரித்ததில்லை. அதற்கமைய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த மக்கள்ஆணையை சுமூகமாக ஏற்றுக்கொண்டதுடன், ஜனநாயக ரீதியில் அதிகாரத்தை கைமாற்றுவதற்கான அவரின் அர்ப்பணிப்பிற்கும் முன்னுதாரணத்திற்கும் நன்றி தெரிவிக்கிறேன். மேலும் எமக்கு கிடைப்பது மிகவும் சவால் நிறைந்த நாடு என்பதை நன்கு புரிந்து கொண்டிருக்கிறோம். நமது அரசியலில் தூய்மையான, மக்களால் எதிர்பார்க்கப்படும் சிறந்த அரசியல் கலாசாரத்திற்காக அவசியம் காணப்படுகிறது.அதற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

நம் நாட்டின் அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு நல்லெண்ணம் இல்லை. எனவே, அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் மீது மக்கள் மரியாதை மற்றும் நம்பிக்கையை மீட்டெடுக்க எங்கள் தரப்பிலிருந்து முடிந்த அனைத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.

மேலும், நமக்கு முன் இருக்கும் இந்த ஆழமான நெருக்கடியை வெறும் அரசோ, வெறும் அரசியல் கட்சியோ அல்லது ஒரு தனி நபரோ மட்டும் தீர்க்க முடியும் என்று நாங்கள் நம்பவில்லை. ஏனென்றால், நான் முன்பு கூறியது போல், நான் ஒரு மாயாஜால வித்தைக்காரனல்ல. நான் மந்திரவாதியும் இல்லை. நான் இந்த நாட்டின் சாதாரண குடிமகன். எம்மிடம் திறமைகள் உள்ளன. இயலாமைகளும் உள்ளன. தெரிந்த விடயங்களும் உள்ளன அதேபோன்று, தெரியாத விடயங்களும் உள்ளன.

ஆனால் திறமைகளைப் பயன்படுத்தி தெரியாதவற்றை சேகரித்துக்கொண்டு சிறந்த முடிவுகளை எடுத்து இந்த நாட்டை வழிநடத்துவதே எனது தலையாய பணியாகும். அந்த கூட்டுப் பங்களிப்பின் ஒரு அங்கமாக மாறுவது எனது பொறுப்பாகும். மேலும், இந்த நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதில் பொது மக்கள் மற்றும் அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் பாரிய பொறுப்பு உள்ளது. அந்தப் பொறுப்பை நிறைவேற்ற அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்.

ஆனால், நாட்டின் ஜனாதிபதி என்ற முறையில், இந்தப் பணியை முன்னின்று நடத்துவதில் எனக்கு முதன்மையான மற்றும் மிக முக்கியமான பொறுப்பு இருப்பதை நான் ஏற்றுக்கொண்டேன். எனவே, இந்தச் சவாலை வெற்றிகொள்வதற்காக எனக்குக் வழங்கப்பட்டுள்ள பணியை நான் உரிய முறையில் நிறைவேற்றுவேன் என்பதை செயற்பாடு மற்றும் நடைமுறை மூலம் எல்லா சந்தர்ப்பங்களிலும் இந்த நாட்டின் பிரஜைகளுக்கு வெளிப்படுத்த நான் தயாராக இருக்கிறேன்.

மேலும் நமது நாட்டுக்கு சர்வதேச ஆதரவு தேவை. எனவே, உலகில் எத்தகைய அதிகாரப் பிளவுகள் இருந்தாலும், ஒவ்வொரு நாட்டையும் எமக்கு மிகவும் சாதகமாக கையாள்வதே நமது எதிர்பார்ப்பாகும். நாம் உலகில் தனிமைப்படுத்தப்பட்ட நாடு அல்ல. உலகத்துடன் கூட்டாக முன்னேற வேண்டிய ஒரு நாடாகும். அது தொடர்பில் தேவையான முடிவுகளை எடுக்க நாங்கள் சிறிதும் தயங்குவதில்லை.

மேலும், நம் நாட்டைக் கட்டியெழுப்புவதில் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு பெரும் பங்கு உள்ளது. எனவே, நாட்டை மேலும் வலுவாகக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு அவர்கள் ஆதரவளிப்பார்கள் என நான் கருதுகின்றேன்.

நம் நாட்டின் ஜனநாயகத்தின் ஊடாக நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். அதற்காக மக்கள் எனக்கு வாக்களித்தனர்.

மேலும் எனக்கு வழங்கப்படாத வாக்குகளும் உள்ளன. எனவே, எங்களின் வெற்றியின் உள்ளடக்கம் மற்றும் அளவு குறித்து எங்களுக்கு நல்ல புரிதல் உள்ளது. எனவே, எங்களுக்கு ஆதரவு வழங்காத மற்றும் எங்களை நம்பாத பிரஜைகளின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெறுவதே எனது நிர்வாகத்தின் போது எனக்கு வழங்கப்பட்டுள்ள பணியாகும். அந்தப் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

எதிர்காலத்தில் இவை அனைத்தையும் நீங்கள் நடைமுறையில் கண்டுகொள்ள முடியும். அதற்கு அனைத்து மக்களின் ஆதரவையும் எதிர்பார்க்கின்றேன்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தேர்தலில் இவ்வாறுதான் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்

0

அதிகாரிகள் மற்றும் பிற தேவைகள் முடிந்த பிறகு, மாலை 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (19) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி பிற்பகல் 4.15 மணிளவில் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“எதிர்வரும் 21ம் திகதி வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள் பெறப்பட்டதும், அதிகாரிகள் மற்றும் இதர தேவைகள் முடிந்ததும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் இரவு 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

மாலை 4.15 மணிளவில் தபால் மூல வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

அத்துடன் மாவட்ட அளவில் ஒவ்வொரு வட்டாரத்திலும் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெறும்.

வாக்கு எண்ணிக்கையின் முடிவில் முடிவுகள் கிடைத்தவுடன் ஊடகங்களுக்கு வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையே முதலில் எண்ணப்படும்.

அந்தக் கணக்கெடுப்பின் பின்னர் (மாவட்ட அளவில் எண்ணும் பணி) முதலில் வாக்குப்பெட்டிகளில் உள்ள வாக்குகள் எண்ணப்படும்.

அதன் பிறகு, ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு, தொகுதி மற்றும் மாவட்ட அளவில் அது தயாரிக்கப்படுகிறது.

தேர்தல்கள் செயலகமே ஒட்டுமொத்த முடிவுகளைக் கணக்கிடும்.

எந்த வேட்பாளரும் 50 வீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்றுள்ளாரா என சரிபார்க்கப்படும்.

அப்படியானால், அந்த நேரத்தில் வாக்கு எண்ணும் பணிகள் நிறுத்தப்படும்.

அப்போது ஜனாதிபதியை நாங்கள் அறிவிப்போம்.

எந்த வேட்பாளருக்கும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் கிடைக்காவிடின், விருப்பு வாக்கு எண்ணிக்கைக்கு செல்ல வேண்டும்.

அங்கு, அதிக வாக்குகள் பெற்ற இரண்டு வேட்பாளர்கள் போட்டியில் வைத்து விட்டு  மீதமுள்ள 36 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து நீக்கப்படுவர்” என்றார்.

புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக மாறும்

0

புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வாத்தியாசலையாக மாற்றம் பெரும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று புத்தளத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ அலிசப்ரி ரஹீம் மற்றும் சிந்தக்க மாயாதுன்ன தலைமையில் புத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்திலே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

புத்தளம் மக்களின் நீண்ட நாள் தேவையாக இருந்து வருகின்ற புத்தளம் தல வைத்தியசாலையை தரமுயர்த்துவது தொடர்பாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ அலிசப்ரி ரஹீம் அவர்களினால் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோலுக்கிணங்க குறித்த வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.

மேலும் புத்தளத்தில் மீன் பிடி தொழிலை முன்னேற்றும் நோக்கத்தில் மீன் பிடி துறைமுகம் ஒன்றை அமைக்கும் யோசனையும் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டதுடன், அதற்கான முன்னெடுப்புகளும் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்டமை புத்தளம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நாட்டில் நிரந்தர பொருளாதார அபிவிருத்தியை நிலை நாட்ட தாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டை பொருளாதார அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவதே தனது பிரதான நோக்கம் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மொட்டுக்கட்சிக்கு எதிராக நிற்கும் முக்கிய அமைச்சர்கள்

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக மொட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளரை இந்த வாரம் அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்காதிருக்கவும், மொட்டு சின்னத்தில் தனியாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமக்கு ஆதரவு வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பியிருந்த கடிதம் நேற்றைய தினம் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தினால் அரசியல் குழுவில் முன்வைக்கப்பட்டது.

எவ்வாறாயினும் அந்த கடிதத்தை நிராகரிக்க அரசியல் குழுக் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுவில் 82 பேர் அங்கம் வகிப்பதுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் 72 பேர் பங்கேற்றனர்.

இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த 11 பேர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

மஹிந்தானந்த அலுத்கமகே, பந்துல குணவர்தன, பிரதீப் உந்துகொட, கோகிலா ஹர்ஷனி குணவர்தன, சஹன் பிரதீப், ரமேஸ் பத்திரன, கஞ்சன விஜேசேகர, பிரசன்ன ரணதுங்க, கனக ஹேரத், மொஹான் பிரியதர்ஷன ஆகியோர் கட்சியின் சார்பில் தனியான வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

அத்துடன் பிறிதொரு கட்சியின் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்கும் உறுப்பினர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் யோசனைக்கு 6 பேர் எதிராக வாக்களித்துள்ளனர்.

எவ்வாறாயினும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் எனக் கூறப்பட்ட தம்மிக பெரேரா தொடர்பில் அரசியல் குழுக் கூட்டத்தின்போது எந்தவித கருத்துக்களும் பரிமாற்றிக் கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவளிக்காத 11 பேர் உள்ளிட்ட தரப்பினர் நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தனவின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சைனப் ஆரம்பப் பாடசாலைக்கு ஆளுநர் வருகை!

0

புத்தளம் சைனப் ஆரம்ப பாடசாலையின் முப்பெரும் விழா பாடசாலை அதிபர் யஹியா தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து புத்தளம் ஜெய்னப் பாடசாலைக்கு 22 லட்சம் ரூபா பெறுமதியான நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு, சிறுவர் விளையாட்டு நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தல் மற்றும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் செயற்திட்டத்தின் கீழ் BCMH நிறுவனத்தினால் கற்றல் உபகரணம் வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் கடந்த செவ்வாய்க்கிழமை (16) வெகு விமர்சையாக இடம்பெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதியாக வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், விசேட அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மற்றும் கௌரவ அதிதியாக புத்தளம் வலயக்கல்விப் பணிப்பாளர் அர்ஜுன ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆரம்ப பாடசாலையின் முக்கியத்துவம் மற்றும் அறிவார்ந்த சமூகத்தை கட்டியெழுப்ப ஆரம்ப பாடசாலை ஆற்றிவருகின்ற அர்ப்பணிப்பு குறித்து விரிவாக பேசிய வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், புத்தளம் மாவட்ட பாடசாலைகளின் துரித வளர்ச்சி பற்றியும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

மேலும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் செயற்திட்டத்திற்கு வடமேல் மாகாண ஆளுநர் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் ஜவ்ஷி ஜமால்தின், இணைப்புச் செயலாளர் எச். அமீர் அலி ஆசிரியர், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் உட்பட உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் அயல் பாடசாலையின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு
நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு

ஹிருணிகாவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறை

0

கடத்தல் வழக்கில் முன்னாள் எம்.பி ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்தத் தீர்ப்பை அறிவித்தார்.

தெமட்டகொட பகுதியிலுள்ள கடை ஒன்றில் பணிபுரிந்த அமில பிரியந்த அமரசிங்க எனும் இளைஞர் ஒருவரை 2015 டிசம்பர் 21ஆம் திகதி ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு சொந்தமான டிபெண்டர் வாகனத்தில் கடத்திய வழக்கு விசாரணை முடிவில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

29 குற்றங்கள் தொடர்பில் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் 8 பேரும் குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில், அச்சம்பத்திற்கு உதவி, ஒத்தாசை புரிந்ததாக ஹிருணிகா மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்திருந்தார்.

அத்தோடு, சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவின் ஆதரவாளர்கள் 8 பேர் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைதான ஐந்தாம் சந்தேகநபரின் மகள் அளித்துள்ள வாக்குமூலத்தில், தமது தாயாருடன் தொடர்பு பேணிய நபர் ஒருவரை தாம் காண்பித்ததாகவும், அவரை தமது தந்தையும் அவருடன் சென்றவர்களும் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு ஹிருணிகாவிடம் அழைத்துச் சென்றதாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

ஓவியப்போட்டியில் எருக்கலம்பிட்டி மாணவன் முதலாமிடம்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட வட மாகாண மானவர்களுக்கிடையிலான சித்திரப்போட்டியில் மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்றார்.

வீதி விபத்துக்கள் இல்லாத நாளைக்கான பாடசாலையிலிருந்து அணிவக்குப்போம் எனும் தொனிப்பொருளில் கடந்த வியாழக்கிழமை (13.06.2024) அன்று நடாத்தப்பட்ட வட மாகாண மாணவர்களுக்கிடையிலான குறித்த சித்திரப்போட்டியில் சுமார் 2600 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

சித்திரப்போட்டியில் பங்குபற்றிய 2600 மாணவர்களில் 250 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு நேற்றைய தினம் (15.06.2024) அவர்களுக்கான போட்டி இடம்பெற்றது.

நடைபெற்று முடிந்த இறுதிச் சுற்றுப்போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்று பெருமதிமிக்க பரிசில்களை பெற்றுக்கொண்டார்.

முதலாம் இடம் பெற்ற முஹம்மது ஹுசைன் என்ற மாணவனுக்கு சான்றிதல், துவிச்சக்கரவண்டி மற்றும் 8500/- ரூபா பெறுமதியான வவுச்சரும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இதேவேளை குறித்த போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய இல்முதீன் முஹம்மது ஹஸ்பான் 7 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய மற்றொரு மாணவரான முஹம்மது சம்ஹான் 8 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

பாரிய சாவல்களுக்கு மத்தியில் தனி ஒரு மனிதனாக இம் மாணாவர்களை ஊக்கப்படுத்தி, தயார்ப்படுத்தி போட்டியில் பங்குபெறச் செய்து வெற்றிபெறச் செய்த எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியின் சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் அவர்களின் இம் முயற்சிக்கு, பாடசாலை சமூகம் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் நன்றி தெரிவித்தனர்.

தமக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வந்து தேசிய அளவில் இடம்பெறும் போட்டிகளில் மாணவர்களை பங்குபெறச் செய்வதே தனது இலக்கு என சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் எமது ஊடகத்திற்கு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை இராஜினாமா

0

நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்துள்ளனர்.

சாந்த நிரியல்ல உட்பட 15 பேர் கொண்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரின் அறிவித்தலுக்கு அமைய இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி திங்கட்கிழமை புதிய பணிப்பாளர் சபை நியமிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ “அத தெரண” விற்கு தெரிவித்தார்.

புத்தளம் எருக்கலம்பிட்டியில் கடும் வெள்ளம்

0

புத்தளம் பகுதியில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக புத்தளம் பகுதி முழுதும் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.

புத்தளம், தில்லையடி, பாலாவி, புத்தளம் எருக்கலம்பிட்டி, ஹிதாயத் நகர்,  மதுரங்குளி மற்றும் ஏனைய பல கிராமங்களும் வெள்ளித்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமமும் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 1500 குடும்பங்கள் இங்கு வாழ்ந்துவருவதுடன், அனைத்து வீடுகளும் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நூற்றிற்கும் அதிகமான வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் ஐநூற்றுக்கும் அதிகமான வீடுகள் பகுதி அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8ஆம் திகதி ஏற்பட்ட மழை வெள்ளித்தினால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் மற்றும் பாடசாலைகளில் தற்காலிகமாக  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு தினங்களாக இவர்களுக்கான சமைத்த உணவுகள் மூன்று வேலைகளிலும் ஊர் தனவந்தர்களின் உதவியுடனும், பள்ளிவாசல் நிர்வாக சபையின் வழிகாட்டலுடனும் வழங்கப்பட்டு வருவதுடன், ஊர் மக்களுக்கும் உணவு விநியோகங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

இவர்களுக்கான நிவாரண உதவிகள் இதுவரை அரசாங்கத்தினால் வழங்கப்படாத போதிலும், ஊர் மக்களின் பங்களிப்புடன் மாத்திரமே பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு விநியோகங்கள் இதுவரை  வழங்கப்பட்டு வருகின்றது.

புத்தளம் பொத்துவில்லு பகுதியில் உள்ள குளம் மழை நீரினால்  பெருக்கெடுத்துள்ளதால் குறித்த குளத்து நீர் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமத்திற்குள் தொடர்ந்தும் மூன்றாவது நாளாக ஊடறுத்து செல்வதால் வீடுகள் தொடர்ந்தும் நீருள் மூழ்கியுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்தின் நிவாரண உதவிக்காக பல மக்கள் தொடர்ந்தும் எதிர்பார்த்து காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கோலி, ரோஹித்தையே வீட்டுக்கு அனுப்பியவர்தான் இவர்!

0

இந்திய கிரிக்கெட் அணியில் ஜாம்பவான்களாக வலம் வந்த விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற மூத்த வீரர்களையே அணியை விட்டு வெளியேற்றியதில் முக்கிய பங்கு வகித்தவர் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர். இவரது தேர்வின் கீழ் அணித் தேர்வில் பல அதிர்ச்சிகளைச் சந்தித்தாலும், இந்திய அணி வரலாற்று வெற்றிகளையும் குவித்தது. இதனால் பிசிசிஐ அவருக்கு பதவி நீட்டிப்பு அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைத் தேர்வாளராகச் செயல்பட்டு வருபவர் அஜித் அகர்கர். இவரது தற்போதைய பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைய உள்ளது. இந்த நிலையில், இவரது பதவிக்காலத்தை 2027 ஜூன் வரை நீட்டிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அகர்கர் தேர்வுக் குழு தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு, இந்திய அணி 2024 மற்றும் 2026 டி20 உலகக்கோப்பைகளையும், கடந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியையும் வென்று அசத்தியது. இந்தத் தொடர் வெற்றிகளே அவரது பதவி நீட்டிப்புக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

அகர்கர் பதவியேற்ற பிறகு இந்திய அணியில் பல கடுமையான மாற்றங்கள் அரங்கேறின. குறிப்பாக, டெஸ்ட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற மூத்த வீரர்களுக்கு விடை கொடுக்கப்பட்டு அணி ஒரு புதிய கட்டத்திற்கு நகர்த்தப்பட்டது. அவர்களுக்குப் பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. மேலும், டெஸ்ட் அணிக்கு சுப்மன் கில், டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் என புதிய கேப்டன்களையும் அகர்கர் துணிச்சலாக நியமித்தார்.

நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் இந்தியா தொடர் தோல்விகளைச் சந்தித்தாலும், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அடைந்த அபார வெற்றிகள் அவரது தேர்வுக் கொள்கைக்கு வலு சேர்த்துள்ளன. அணி நிர்வாகத்தின் பேச்சை கேட்காத இஷான் கிஷன் போன்ற வீரர்களை அணியிலிருந்து நீக்கித் தனது கண்டிப்பைக் காட்டிய அவர், பின்னர் அவர்கள் திறமையை நிரூபித்ததும் மீண்டும் உலகக்கோப்பை அணியில் சேர்த்து தனது நெகிழ்வுத்தன்மையையும் வெளிப்படுத்தினார்.

மேலும், தற்போதைய தேர்வுக் குழுவில் உள்ள ஆர் பி சிங் மற்றும் பிரக்யான் ஓஜா ஆகியோர் புதிதாகப் பொறுப்பேற்றவர்கள் என்பதால், அகர்கர் போன்ற அனுபவமிக்க ஒருவரின் வழிகாட்டுதல் தொடர்ந்து அணிக்குத் தேவை என வாரியம் கருதுகிறது. அடுத்த ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை நடைபெற உள்ளதால், அணியின் தேர்வில் எந்தவிதமான குழப்பமும் இன்றி ஒரு நிலைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காகவே பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது. ஐபிஎல் போட்டிகளின் இடையே பிசிசிஐ அதிகாரிகள் அகர்கரை நேரில் சந்தித்து இந்த பதவி நீட்டிப்பு குறித்த தகவலை அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்க உள்ளனர். துணிச்சலான முடிவுகளுக்குக் கிடைத்த பரிசாகவே இது பார்க்கப்படுகிறது.

திட்டமிட்டு வைக்கப்பட்ட தீ? – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலி!

0

மஹரகமையில் உள்ள ஈரடுக்கு வீடொன்றின் மேல் மாடிக்கு இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் உயிரிழந்துள்ளதோடு, மேலும் இரு ஆண்கள் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர். 

மஹரகம, பமுணுவ வீதி, எக்சத் சுபசாதக மாவத்தை, இரண்டாவது குறுக்கு ஒழுங்கையில் உள்ள வீடொன்றில் வாடகை அடிப்படையில் வசித்து வந்த 55 வயதுடைய பெண் மற்றும் அவரது 16 வயதுடைய மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். 

இந்தக் கொடூரச் சம்பவத்தில் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான சிறுமியின் தந்தை மற்றும் வீட்டின் உரிமையாளரான 76 வயதுடைய முதியவர் ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

நேற்று (18) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், அயலவர்கள் உடனடியாகச் செயல்பட்டுத் தீயை அணைத்து, காயமடைந்த இரு ஆண்களையும் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

பின்னர் வீட்டைச் சோதனையிட்ட போது, அறையொன்றுக்குள் தாயும் மகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 

குற்றச் செயல் நடந்த இடத்தில் பெட்ரோல் வாடை வீசியுள்ளதோடு, வீடொன்றிற்குத் தீ வைத்து மேற்கொள்ளப்பட்ட இரட்டைக் கொலைச் சம்பவம் இதுவென விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், மஹரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உழவியந்திரம் கவிழ்ந்து 29 வயது இளம் குடும்பஸ்தர் பலி!

0

பாஸ்கரன் கதீசன் – வவுனியா

வடக்கு, மதியாமடு பகுதியில் நேற்று உழவியந்திரம் கவிழ்ந்து இடம்பெற்ற கோர விபத்தில் 29 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

நேற்றைய தினம் குறித்த நபர் தனது அத்தியாவசியத் தேவை ஒன்றின் நிமித்தம் உழவியந்திரத்தைச் செலுத்திச் சென்றுள்ளார். இதன்போது, எதிர்பாராத விதமாக உழவியந்திரம் கட்டுப்பாட்டை இழந்து திடீரெனத் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தின்போது உழவியந்திரத்தைச் செலுத்திச் சென்ற சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளாகி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 29 வயதுடைய இளம் குடும்பஸ்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த புளியங்குளம் பொலிஸார், விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் மதியாமடு கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புத்தளம் மாவட்ட மக்களுக்கு 318 மில்லியன் ரூபா இழப்பீடு!

0

ஜூட் சமந்த

புத்தளம்: “டிட்வா” (Ditva) சூறாவளியினால் புத்தளம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கும் நிகழ்வு அண்மையில் புத்தளம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அரச நிர்வாக அமைச்சர் கலாநிதி சந்தன அபேரத்ன தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பயனாளிகளுக்கு மொத்தமாக 318 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டது.

இச்சூறாவளியின் காரணமாக புத்தளம் மாவட்டத்தின் 07 பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள மக்கள் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டனர். இதில் அதிகப்படியான பாதிப்புகள் கருவலாகஸ்வெவ பிரதேச செயலகப் பிரிவில் பதிவாகியுள்ளன. மாவட்ட ரீதியாக:

  • 150 வீடுகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளன.
  • 29 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
  • 49 தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு தொழில்துறைகள் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.

பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்காக முதற்கட்டமாக பின்வரும் இழப்பீட்டுத் தொகைகள் வழங்கப்பட்டன:

  • முழுமையாகச் சேதமடைந்த வீடுகளை மீளக் கட்டியெழுப்ப முதற்கட்டமாக தலா 20 இலட்சம் ரூபா வழங்கப்பட்டது.
  • பகுதியளவில் சேதமடைந்த வீடுகளைப் புனரமைக்க தலா 30 இலட்சம் ரூபா வழங்கப்பட்டது.
  • பாதிக்கப்பட்ட தொழிற்சாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முதற்கட்டமாக தலா 20 இலட்சம் ரூபா வீதம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் கலாநிதி சந்தன அபேரத்ன, அரசாங்கம் கடந்த ஒரு வருடத்தில் மேற்கொண்ட முறையான நிதி முகாமைத்துவம் மற்றும் வரிக் கொள்கை காரணமாக ஒரு இலட்சம் கோடி ரூபாவை சேமிக்க முடிந்துள்ளதாகத் தெரிவித்தார். இதன் விளைவாகவே, பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக 50,000 கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்ய முடிந்ததாக அவர் குறிப்பிட்டார். மேலும், பேரிடர் நிலைமைகளைக் காரணம் காட்டி நாட்டின் எந்தவொரு அபிவிருத்திப் பணிகளும் நிறுத்தப்படவோ அல்லது ஒத்திவைக்கப்படவோ இல்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

“இந்த இழப்பீட்டு நிதி ஜனாதிபதியினதோ, அமைச்சர்களினதோ அல்லது அரச அதிகாரிகளினதோ தனிப்பட்ட பணம் அல்ல; இது பொதுமக்களின் பணம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது” என்று அமைச்சர் வலியுறுத்தினார். அத்துடன், தொழிற்சாலைகள் இயங்குவதன் மூலமே அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் உறுதிப்படுத்தப்படும் என்பதால், பாதிக்கப்பட்ட தொழிற்சாலைகளை விரைவாக மீண்டும் ஆரம்பிக்குமாறு அதன் உரிமையாளர்களிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.

இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், புத்தளம் மாவட்டச் செயலாளர் இந்திகா சில்வா உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

அமைச்சர் கே.டி லாந்காந்தவிடம் மன்னிப்பு கோரியதா ஹிரு ஊடகம்?

0

அமைச்சர் கே.டி லாந்காந்தவின் சொத்துக்கள் தொடர்பில் ஹிரு தொலைக்காட்சியூடாக ஒளிபரப்பிய செய்தி தவறானது என அறிவித்து, அமைச்சரின் சட்டத்தரணியால் கோரிக்கை கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஹிரு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டதற்கு அமைய, அமைச்சரின் பிணையங்களின் பெறுமதி மற்றும் சொத்துக்களின் மொத்த பெறுமதி ஆகியன தவறாக அறிக்கையிடப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் சில தரவுகளை மீண்டும் உறுதி செய்துக் கொள்வதற்கான உரித்துக்கு அமைய, குறித்த தகவல்களை ஹிரு தொலைக்காட்சி செய்தி மீண்டும் வெளியிட்டுள்ளது.

அமைச்சர் கே.டி. லால்காந்த, தன்னுடையதும், தனது குடும்ப உறுப்பினர்களுக்குமான 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுக்குரிய சொத்து விபரங்களை கையூட்டல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவிடம் சமர்பித்தமை தொடர்பில் கடந்த 16 ஆம் திகதி ஹிரு செய்தி வெளியிட்டது.

அதற்கமைய, அசையா சொத்துக்களாக, அன்பளிப்பு உரித்தினூடாக கிடைக்கப்பெற்ற 60 இலட்சம் ரூபாய் பெறுமதியான 2500 சதுரஅடி கட்டடம், 10 பேர்ச்சஸ் காணி, 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான நிரந்தர கட்டடம் மற்றும் 20 பேர்ச்சஸ் காணி, 560 இலட்சம் ரூபாய் பெறுமதியான நான்காயிரத்து 50 சதுர அடி கட்டடம் மற்றும் 14 பேர்ச்சஸ் காணி ஆகியன தொடர்பில் ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன.

மேலும், உரித்தினூடாக கிடைக்கப்பெற்ற 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான 7.26 பேர்ச்சஸ் காணியிலுள்ள 2500 சதுர அடியிலான கட்டடம் மற்றும் வணிக கட்டடம் என்பனவும் தமது அசையா சொத்துக்கள் என அமைச்சர் கே.டி லாந்காந்த அறிவித்துள்ளார்.

இதனை தவிர அசையும் சொத்துக்களாக, 16 இலட்சம் ரூபாய் பெறுமதியான 8 பவுண் தங்க ஆபரணங்களும், 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான 120 கிராம் தங்கம் மற்றும் 45 இலட்சம் ரூபாய் பெறுமதியான சிற்றூர்ந்து ஒன்றும் உள்ளதாக தெரிவித்து அவர் ஆவணங்களை சமர்பித்துள்ளார்.

அத்துடன், மாதாந்த சம்பளத்தினூடாக உழைத்த 7 இலட்சத்து, 38 ஆயிரத்து 918 ரூபாய் 10 சதம் பணமும், சொத்துக்களை குத்தகைக்கு வழங்கியமையூடாக பெற்றுக் கொள்ளப்பட்ட 4 இலட்சம் ரூபாய் பணமும், ஓய்வூதிய கொடுப்பனவாக 7 இலட்சத்து 71 ஆயிரத்து 400 ரூபாய் பணமும் அவரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை தவிர, சொத்து விபரங்களின் அடிப்படையில், நிலையான வைப்பினூடாக வருடாந்தம் 27 இலட்சத்து 55 ஆயிரத்து 851 ரூபாய் 97 சதம் பணத்தை பெற்றுக் கொண்டுள்ளதாகவும், தற்போதைய தொழில் என்ற அடிப்படையில் வருடாந்தம் 18 இலட்சம் வருவாய் சமர்பிக்கப்பட்டுள்ளதாக, ஹிரு தொலைக்காட்சியின் செய்தியில் அறிக்கையிடப்பட்டது.

இந்த சொத்து விபரங்களில் தவறில்லை என்பது, கையூட்டல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவிடம் சமர்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களுடாக அறியமுடிகிறது.

எனினும், அமைச்சரின் பிணையங்கள் மற்றும் சொத்துக்களின் மொத்த பெறுமதி தவறானது என தெரிவித்து, அமைச்சரின் சட்டத்தரணி ஹிரு ஊடகத்திற்கு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார்.

அமைச்சரின் பிணையங்களின் மொத்த பெறுமதி 38 கோடியே 39 இலட்சத்து ஆறாயிரத்து 705 ரூபாய் 40 சதம் என ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்ததாக, தவறாக அறிக்கையிடப்பட்டதை ஹிரு தொலைக்காட்சி இன்று தெரிவித்துள்ளது.

அதன்படி, அமைச்சருக்கு சொந்தமான பிணையங்களின் மொத்த பெறுமதி ஒரு இலட்சத்து, 43 ஆயிரத்து 475 ரூபாய் 08 சதம் என்பதே சரியான அறிக்கையாகும்.

இதனை தவிர அமைச்சரூடாக சமர்பிக்கப்பட்ட சொத்துக்களின் மொத்த பெறுமதி 46 கோடி ரூபாய்க்கும் அதிகம் என அறிக்கையிட்டமை, மொத்தக் கணிப்பில் ஏற்பட்ட தவறு என்பதையும் ஹிரு தொலைக்காட்சி செய்தி இன்று குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், அமைச்சரூடாக சமர்பிக்கப்பட்ட ஆவணங்களுக்கு அமைய, சொத்துக்களின் மொத்த பெறுமதி சுமார் 08 கோடி ரூபாய் ஆகும்.

இதற்கமைய, அமைச்சர் கே.டி.லால்காந்தவுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு ஹிரு தொலைக்காட்சி செய்தி கவலை வெளியிட்டுள்ளது.

அதிரடித் திருப்பம்: மீண்டும் மூடப்பட்டது ஹோர்முஸ் நீரிணை!

நேற்று முழுமையாகத் திறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ஹோர்முஸ் நீரிணை, இன்று மீண்டும் மூடப்பட்டுள்ளதாக ஈரானிய கடற்படை அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் துறைமுக முற்றுகை தொடர்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை ஊடாகப் பயணித்துக்கொண்டிருந்த வணிகக் கப்பல்களுக்கு, ஈரானிய கடற்படை வானொலி தகவல் ஊடாக அவசரச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில், “ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்பட்டுள்ளது, எந்தக் கப்பல்களும் கடந்து செல்ல அனுமதி இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச கப்பல் போக்குவரத்து தகவல் உறுதிப்படுத்தியுள்ளன.

ஈரான் தனது வான்பரப்பு மற்றும் நீரிணையைத் திறப்பதாக அறிவித்திருந்த போதிலும், ஈரானிய துறைமுகங்கள் மீதான தனது முற்றுகையைத் தளர்த்தப்போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

அமெரிக்காவின் இந்த ‘கடல்சார் கொள்ளை’ மற்றும் முற்றுகை தொடர்வதால், நீரிணையின் கட்டுப்பாடு மீண்டும் பழைய நிலைக்கு (கடுமையான இராணுவக் கண்காணிப்பு) கொண்டுவரப்படுவதாக ஈரானின் ‘காதம் அல்-அன்பியா’ (Khatam Al-Anbiya) இராணுவக் கட்டளைப்பீடம் தெரிவித்துள்ளது.

இந்தத் திடீர் அறிவிப்பைத் தொடர்ந்து, நீரிணையை நோக்கிச் சென்று கொண்டிருந்த சுமார் 5க்கும் மேற்பட்ட எரிபொருள் தாங்கிக் கப்பல்கள் (கிரேக்கம் மற்றும் இந்தியக் கப்பல்கள் உட்பட) தமது பயணத்தை ரத்து செய்துவிட்டுத் திரும்பியுள்ளன.

ஈரானில் 10 நாள் போர்நிறுத்தம் அமுலில் உள்ள போதிலும், ஹோர்முஸ் நீரிணை விவகாரம் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளில் பெரும் முட்டுக்கட்டையாக உருவெடுத்துள்ளது. இதனால் சர்வதேசச் சந்தையில் எரிபொருள் விநியோகத்தில் மீண்டும் சிக்கல் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

லெபனானில் போர் நிறுத்தம், உலகில் எண்ணெய் விலை சரிவு:

சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் மிகமுக்கியமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரான் அரசு ஹார்முஸ் நீரிணையை அனைத்த வணிகக் கப்பல்களுக்கு முழுமையாக திறந்துவிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு உடனடியாக கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்துள்ளது. இது உலக பொருளாதாரத்திற்கு மிக முக்கியமான சிக்னலாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக அமெரிக்கா – ஈரான் மத்தியிலான 2ஆம் கட்ட பேச்சுவாத்தைக்கு முன்பு இத்தகைய அறிவிப்பு வெளியானது முதலீட்டு சந்தைக்கு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.

ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தனது எக்ஸ் பக்கத்தில் இந்த முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். லெபனான் நாட்டில் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தும் காரணமாக ஹார்முஸ் நீரிணை வழியாக அனைத்து வணிகக் கப்பல்களும் முழுமையாக செல்ல அனுமதிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

லெபனான் போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும் வரையில் ஹார்முஸ் நீரிணை திறந்திருக்கும் என்றும் அப்பாஸ் அராக்சி குறிப்பிட்டார். மேலும், பாதுகாப்பான பயணம் ஈரான் துறைமுகங்கள் மற்றும் கடல்சார் அமைப்பு ஏற்கெனவே அறிவித்த ஒருங்கிணைக்கப்பட்ட பாதையில் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தெளிவுபடுத்தினார்.

ஈரான் வெளியுறவு அமைச்சரின் அறிவிப்பு வெளியான உடனேயே சர்வதேச எண்ணெய் சந்தையில் இதன் விலை வீழ்ச்சியடைந்தது. கச்சா எண்ணெய் பியூச்சர்ஸ் சந்தையில் (futures market) ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் பியூச்சர்ஸ் ஒப்பந்தம் மதிப்பு இந்திய நேரப்படி மாலை 7.45 மணியளவில் 10.80 சதவீதம் குறைந்து 88.66 டாலருக்கு வர்த்தகமானது.

இதுவே அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் 10.88 சதவீதம் குறைந்து 84.03 டாலராக உள்ளது. இன்று காலை முதல் பாகிஸ்தானில் ஈரான் – அமெரிக்கா மத்தியில் விரைவில் 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை துவங்கும் என தகவல் வெளியான நிலையில் கச்சா எண்ணெய் விலை சிறிய அளவில் குறைந்து வந்தது. தற்போது ஹார்முஸ் மொத்தமாக திறக்கப்பட்டது மூலம் கச்சா எண்ணெய் ஒரு பேரல் சுமார் 9 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி உலக எண்ணெய் வர்த்தகத்தில் மிக முக்கிய பாதையாக இருப்பதால், இதில் ஏற்பட்ட முடக்கம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது ஈரான் முழுமையாக திறக்கப்பட்டதாக அறிவித்தது மூலம் விலை குறைய துவங்கியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்திலும் இந்த அறிவிப்பை தெரிவித்தார். ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாக திறந்துவிட்டதாகவும், உலகளாவிய சரக்கு கப்பல்கள் பயணிக்க முழுமையாக தயாராக உள்ளதாகவும் அறிவித்துள்ளது என்று அவர் பதிவிட்டார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அரசு தலைமையில் நேற்று நடந்த லெபனான் மற்றும் இஸ்ரேல் தலைவர்கள் மத்தியிலான கூட்டத்தில், 10 நாள் போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது. இதை டிரம்ப் லாஸ் வேகாஸ் செய்தியாளர் சந்திப்பின் போது அறிவித்தார். இதை லெபனான் மக்கள் கொண்டாடி தீர்த்தனர். மேலும் இஸ்ரேல் ஹிஸ்புல்லா மீதான தாக்குதலையும் நிறுத்துவதாக அந்த சந்திப்பில் உத்தரவாதம் கொடுத்துள்ள காரணத்தால் மத்திய கிழக்கில் தற்காலிக அமைதி உருவாக்கியுள்ளது.

இதன் தாக்கமாக, ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான பதற்றத்தையும் குறைக்கும் முயற்சிகளும், வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன. கடந்த வாரம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில், ஈரான் தரப்பு, ஹிஸ்புல்லா மீது இஸ்ரேல் நடத்தும் போரை நிறுத்துவது முக்கிய கோரிக்கையாக முன்வைத்தது. இஸ்ரேல் நேரடியாக லெபனானுடன் அல்லாமல், அந்த நாட்டுக்குள் செயல்படும் ஹெஸ்புல்லா அமைப்புடன் மோதி வருகிறது.

இந்த ஹிஸ்புல்லா அமைப்பு ஈறானுக்கு ஆதரவாக செயல்படுவது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் லெபனான் மீதான தாக்குதலை நிறுத்துவதை ஏற்றுக் கொண்டதாக தெரிவித்தார்.

ஆனால் இஸ்ரேல் தனது படைகளை லெபனானில் இருந்து திரும்பப் பெறப்படமாட்டாது என்று தெளிவுபடுத்தியுள்ளார். மொத்தத்தில், இந்த தற்காலிக போர்நிறுத்தம் நிலையான அமைதிக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், நிலைமை இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை என்பதே உண்மை. மேலும் ஈரானும் லெபனான் மீதான போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு உள்ள இந்த 10 நாட்களுக்கு மட்டுமே ஹார்முஸ் திறக்கப்படும் என தெளிவாக தெரிவித்துள்ளது.

ஹார்முஸ் வழித்தடம் ஏன் முக்கியம்

உலகின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20 – 25 சதவீதம் வரையிலும், இயற்கை எரிவாயுவில் (LNG) சுமார் 25 சதவீத பங்கும் இந்த குறுகிய நீரிணை வழியாகவே நடைபெறுகிறது. ஹார்முஸ் வழியாக ஏற்றுமதி செய்யப்படும் எரிபொருட்கள் பெரும்பாலும் இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற ஆசிய நாடுகளுக்கே அதிகளவில் சென்றடைகின்றன.

ஹார்முஸ் நீரிணை வழியாக எரிபொருள் ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடுகளின் பட்டியல்: சவுதி அரேபியா தனது மொத்த ஏற்றுமதியில் சுமார் சுமார் 37.2% ஹார்முஸ் நீரிணை வாயிலாக ஏற்றுமதி செய்கிறது. ஈராக் – சுமார் 22.8% ஏற்றுமதி செய்து இரண்டாவது இடத்தில் உள்ளது.

இதை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகம் (UAE) சுமார் 12.9%, ஈரான் சுமார் 10.6%, குவைத் 10.1%, உலகின் முக்கிய LNG ஏற்றுமதியாளரான கத்தார் முழுமையாக இந்த பாதையை நம்பியிருக்கிறது. பஹ்ரைன் பெட்ரோலிய மற்றும் ரசாயன ஏற்றுமதிக்கு இந்த வழியைப் பயன்படுத்துகிறது.

பாதுகாப்பு பிரதி அமைச்சரை பதவி நீக்க அதிரடி கோரிக்கை!

0

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் பக்கச்சார்பற்ற முறையிலும், நியாயமாகவும் முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்த, தற்போதைய பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவை உடனடியாக அந்தப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என அருட்தந்தை ரொஹான் டி சில்வா அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் உள்ள சமூக மற்றும் சமய மையத்தினால் (CSR) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று 7 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, ‘நினைவு, வலி மற்றும் நம்பிக்கை: 7 ஆண்டுகளின் பின்னர் நீதியைத் தேடி’ எனும் தலைப்பில் விசேட அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றிய அருட்தந்தை ரொஹான் டி சில்வா, விசாரணைகளின் தற்போதைய நிலை குறித்து கருத்துத் தெரிவித்தார்.

அவர் தனது உரையில் குறிப்பிட்ட முக்கிய அம்சங்கள்:

  • சாதகமான நகர்வு: நீண்ட கால தாமதத்திற்குப் பிறகு, தற்போது ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் ஒரு நம்பிக்கையூட்டும் திசையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளன.
  • பதவி நீக்கம் ஏன்?: தாக்குதல்கள் நடைபெற்ற காலகட்டத்தில், சர்ச்சைக்குரிய சாய்ந்தமருது சம்பவங்கள் இடம்பெற்ற போது, கிழக்கு மாகாண கட்டளைத் தளபதியாக அருண ஜயசேகர கடமையாற்றியிருந்தார்.
  • சுயாதீன விசாரணை: தற்போது அவர் பாதுகாப்பு பிரதி அமைச்சராகப் பதவி வகிப்பது, விசாரணைகளின் வெளிப்படைத்தன்மையைப் பாதிக்கக்கூடும். எனவே, விசாரணைகள் முழுமையாக நிறைவடையும் வரை அவரை அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்க வேண்டும்.
நீதி வேண்டிய போராட்டம்

“பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமானால், விசாரணைகளைத் தடுக்கும் அல்லது செல்வாக்கு செலுத்தும் நிலையில் எவரும் இருக்கக் கூடாது. இதற்கான தகுந்த சூழலை உருவாக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்” என அருட்தந்தை மேலும் சுட்டிக்காட்டினார்.

ஈஸ்டர் தாக்குதல் நடந்து ஏழு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், கத்தோலிக்க திருச்சபை மற்றும் சிவில் அமைப்புகள் தொடர்ந்து நீதிக்காகக் குரல் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தில் அரசாங்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விலங்குகளுக்காக வைக்கப்பட்ட கட்டுத் துப்பாக்கி வெடித்து நபர் பலி!

0

ஜூட் சமந்த

ஆனமடுவ பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட கட்டுத் துப்பாக்கி வெடித்ததில் சிக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவரை ஆனமடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தத் துயரச் சம்பவம் ஏப்ரல் 17ஆம் தேதி காலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் ஆனமடுவ, பரமாகந்தகம பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ரன்கொத்பேடி துரயலாகே தினேஷ் மங்கள அமரதாச என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பரமாகந்த மலையின் பின்புற பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடும் நோக்கில் தாம் கட்டுத் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததாகவும், ஏப்ரல் 17 அன்று காலை 7.30 மணியளவில் அங்கு சென்று பார்த்தபோது, அத்துப்பாக்கி வெடித்ததில் தினேஷ் என்பவர் உயிரிழந்து கிடப்பதைக் கண்டதாகவும் சந்தேகநபர் ஒருவரே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் குழுவினர், உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டனர். இருப்பினும், உயிரிழந்த நபர் எதற்காக அந்த காட்டுப் பகுதிக்குச் சென்றார் என்பது குறித்த காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பரமாகந்தகம பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். உயிரிழந்தவரின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணைகள் நடைபெறவுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்த மேலதிக சட்ட நடவடிக்கைகளை ஆனைமடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எரிசக்தி அமைச்சர் ஜனாதிபதிக்கு எழுதிய உருக்கமான கடிதம்!

0

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு அனுப்பிய கடிதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

“நிலக்கரி விநியோகம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமிக்க எடுத்த தீர்மானத்தையும், 2009ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி இறக்குமதிகள் குறித்து முறையான விசாரணையை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி செயலாளர் ஊடாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்தமையையும் நான் பெரிதும் பாராட்டுகிறேன். இதன் மூலம் ஊழலுக்கு எதிராகவும், மக்கள் ஆணையை நிறைவேற்றுவதிலும் உங்களுக்கு இருக்கும் துணிச்சலான உறுதிப்பாட்டை இது வெளிப்படுத்துகிறது.

எவ்வாறாயினும், இனிவரும் காலங்களில் மேற்கொள்ளப்படவுள்ள விசாரணை நடவடிக்கைகள் மிகவும் சுதந்திரமாகவும், எந்தவொரு பக்கச்சார்பின்றியும் முன்னெடுக்கப்பட வேண்டும் என நான் நம்புகிறேன். இந்த விசாரணைகள் இடம்பெறும் காலப்பகுதியில் நான் இப்பதவியில் நீடிப்பது அதற்கு ஒரு தடையாக அமையக்கூடும் என்ற நிலப்பாட்டில் இருந்து, 17.04.2026 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிசக்தி அமைச்சர் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளேன்.

இந்த விசாரணை நிறைவடைந்து உண்மை மக்களுக்குத் தெளிவுபடுத்தப்படும் வரை நான் இத்தீர்மானத்தில் உறுதியாக இருப்பேன். அத்துடன், இந்த விசாரணைகளின் மூலம் கிடைக்கப்பெறும் எந்தவொரு முடிவையும் நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வேன். தூய்மையான அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்காக நீங்களும் அரசாங்கமும் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டங்களுக்கு எனது ஆதரவு எப்போதும் இருக்கும்.”