பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று நாகவில்லுவில் இடம்பெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வு!
இலங்கை திருநாட்டில் பெளதீக ரீதியான பல வேலைத்திட்டங்களையும், இடம்பெயர்வு மற்றும் எல்லை நிர்ணயம் தொடர்பான பறந்துபட்ட அறிவினையும் கொண்டிருந்த எருக்கலம்பிட்டியை சேர்ந்த மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது வருட நினைவு தின நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
அந்த வகையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் நினைவுப் பேருரையும், புத்தக வெளியீடு நிகழ்வும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் ஏற்பாட்டில் நேற்று 25.08.2025 புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய அதிபர் ஜனாப் S.M. ஹுஸைமத் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், புத்தி ஜீவிகள் மற்றும் குடும்பத்தார்கள் கலந்தகொண்டமை விஷேட அம்சமாகும்.
சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் பொருளாளர் ஜனாப் ஏ.ஜி. அனீஸ் (Bsc.Agri) அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.
மேலும் இஸ்லாமிய கற்கை அறபு மொழிப் பீட, தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களினால் நூல் அறிமுக உரையும், நினைவுப் பேருரையும் மிகவும் உணர்வுபூர்வமாக நிகழ்த்தப்பட்டது.
கிழக்கு மற்றும் தென் கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பங்களிப்பு அளப்பெரியது என நினைவு கூறிய பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன், வடக்கில் ஏற்பட்ட யுத்தம் மற்றும் முஸ்லிம்களின் இடம்பெயர்வு குறித்து அதீத அக்கறையுடன் செயற்பட்ட மிக முக்கியமானவர் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்கள் எனவும் எடுத்துரைத்தார்.
வடக்கு முஸ்லிம்களின் இடம்பெயர்வு மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பில் அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களுடன் பலதரப்பட்ட கலந்துரையாடல்களை நடத்தி, சர்வதேசம் வரை இவ்விடயங்களை கொண்டுசென்ற மகான் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் என பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் தனது உரையில் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் புதல்வி சட்டத்தரணி எப்.சப்னா ஹஸ்புல்லாஹ் அவர்களினால் ஏற்புரை நிகழ்த்தப்பட்டதுடன், நூல் வெளியீடு நிகழ்வும் இடம்பெற்றது.
நூலின் முதற்பிரதியை ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தரும், புத்தளம் எருக்கலம்பிட்டி பள்ளிவாசல் நிர்வாக சபையின் முன்னாள் உறுப்பினருமான ஜனாப் ரஹ்மத்துல்லாஹ் (GS) அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.
மேலும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் செயலாளர் ஜனாப் எஸ்.எச்.எம். றிஸ்னி அவர்களினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டதுடன், தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன், மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பாரியாருக்கும் நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில், பேராசிரியர்கள், கல்விமான்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், பாடசாலைச் சமூகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் குடும்பத்தார்கள் என பலரும் கலந்து சிறப்பித்ததுடன், ஈ நியூஸ் பெஸ்ட் ஊடக நிறுவனம் ஊடக அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விசாரணை கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது, நாட்டின் அடிப்படை ஜனநாயக நிறுவனங்களின் வலிமை குறித்து கடுமையான கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் விளைவுகள் ஒரு தனிநபரின் அல்லது எந்தவொரு அரசியல் கட்சிகளின் தலைவிதியையும் விட, சமூகத்தின் உரிமைகளுக்கான பிரச்சினைகளை தோற்றிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் தலைவர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைகளை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது மற்றும் விளக்கமறியலை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து நடத்திய விசேட ஊடக சந்திப்பில் பங்கேற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரல முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் அறிக்கையை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
‘நேஷன்ஸ் லீக்’ கால்பந்தில் போர்ச்சுகல் அணி சாம்பியன் ஆனது. பைனலில் ‘பெனால்டி ஷூட் அவுட்டில்’ 5-3 என ஸ்பெயினை வீழ்த்தியது.
ஐரோப்பிய கால்பந்து அணிகளுக்காக ‘நேஷன்ஸ் லீக்’ தொடர் நடத்தப்படுகிறது. மொத்தம் 54 அணிகள் பங்கேற்றன. நேற்று ஜெர்மனியின் முனிக் நகரில் நடந்த பைனலில், போர்ச்சுகல், நடப்பு யூரோ சாம்பியன் ஸ்பெயின் பலப்பரீட்சை நடத்தின. போட்டியின் 21வது நிமிடம் ஜுபிமெண்டி (ஸ்பெயின்), 26வது நிமிடம் மெண்டிஸ் (போர்ச்சுகல்) தலா ஒரு கோல் அடித்தனர். 45வது நிமிடம் மைக்கேல் ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் ஸ்பெயின் அணி 2-1 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் 61 வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். போர்ச்சுகல் அணிக்காக இவர் அடித்த 138வது கோல் இது. 90 நிமிட முடிவில் போட்டி 2-2 என சமன் ஆனது. அடுத்து நடந்த கூடுதல் நேரத்திலும் (30 நிமிடம்) இரு அணியும் கோல் அடிக்கவில்லை.
இதையடுத்து வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி ‘பெனால்டி ஷூட் அவுட்டுக்கு’ சென்றது. இரு அணிக்கும் தலா 5 வாய்ப்புகள் தரப்பட்டன. காயம் காரணமாக 88 வது நிமிடம் வெளியேறிய ரொனால்டோ, இதில் பங்கேற்கவில்லை.
முதல் 3 வாய்ப்பில் போர்ச்சுகலின் ராமோஸ், விடின்ஹா, பெர்ணான்டஸ் கோல் அடித்தனர். மறுபக்கம் ஸ்பெயின் தரப்பில் மெரினோ, பயேனா, இஸ்கோ கோல் அடிக்க 3-3 என ஆனது.
4வது வாய்ப்பில் மெண்டெஸ் (போர்ச்சுகல்) கோல் அடிக்க, ஸ்பெயினின் மோராட்டோ அடித்த பந்தை கோல் கீப்பர் டீகோ கோஸ்டா தடுத்து அசத்தினார்.
5வது வாய்ப்பில் நெவேஸ் கோல் அடித்தார். இதையடுத்து 5-3 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் ‘திரில்’ வெற்றி பெற்றது. 2019க்குப் பின் இத்தொடரில் மீண்டும் சாம்பியன் ஆனது.
புத்தளத்தில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளுடன் வேன் ஒன்றும் பறிமுதல்!
இலங்கை கடற்படை, பொலிஸாருடன் இணைந்து, புத்தளம், தில்லையடி பகுதியில் 2025 ஜூன் 05 இரவு வேளையில் நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகள் கொண்ட ஒரு வேன் கைப்பற்றப்பட்டது.
அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிறுவனம், புத்தளம் பொலிஸாருடன் இணைந்து தில்லையடி பகுதியில் நடத்திய இந்த சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்று சோதனை செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகளானது வாகனத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் வேன் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
விண்வெளியில் பூமியை சுற்றி வந்துக்கொண்டிருக்கும் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கொள்களை சீனா நினைத்தால் வெறும் 12 மணி நேரத்தில் தாக்கி அழித்துவிட முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சவுத் சைனா மார்னிங் போஸ்ட் என்கிற செய்தி ஊடகத்தில் இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது தற்போது சீனா 99 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. இவை அனைத்தும் நான்ஜிங் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஆஸ்ட்ரோனாட்டிக்ஸ் பல்கலைக்கழகத்தின் விண்வெளிக் கட்டுப்பாட்டுத் துறையின் இயக்குநர் வூ யுன்ஹுவா தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இவை அனைத்தும் எலான் மஸ்கின் 1400 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை வெறும் 12 மணி நேரத்தில் காலி செய்துவிடும். சீன செயற்கைக்கோளில் லேசர், நுண் அலைகளை உருவாக்கும் கருவி, உளவு கருவிகள் பொருத்தப்பட்டிருக்கலாம். ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் வெறுமென நெட்வொர்க் கொடுக்க மட்டுமே பயன்படுத்தப்படுவதில்லை. தவிர, ராணுவ நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது என சீனா குற்றம்சாட்டி வருகிறது.
அதாவது, உக்ரைன்-ரஷ்யா போரில், உக்ரைன் படைகளுக்கு தகவல்கள் கொடுக்கவும், ரஷ்ய எல்லையை துல்லியமாக கண்காணிக்கவும் இந்த செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த 2022ம் ஆண்டு ரஷ்ய போரின்போது அப்போதைய உக்ரைனின் துணைப் பிரதமரான மைக்கைலோ ஃபெடோரோவ், “ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் சேவையை உடனடியாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த மஸ்க், “உடனடியாக சேவை வழங்கப்படும்” என்று கூறியிருந்தார்.
உக்ரைன் போருடன் மட்டுமே ஸ்டார்லிங்க் நிற்காது, நாளை சீனாவுக்கும்-தைவானுக்கும் பஞ்சாயது ஏற்பட்டால் அப்போதும், தைவானுக்கு சப்போர்ட் செய்ய ஸ்டார்லிங்க் வரும். எனவே இந்த கூட்டு நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்க சீனா இந்த புதிய செயற்கைக்கோள்களை உருவாக்கியிருக்கிறது.
கடந்த 2023ம் ஆண்டு இதற்கான பணிகளை சீனா தொடங்கியது. இந்த திட்டத்திற்கு ‘கியான்ஃபான் மெகா-விண்மீன் திட்டம்’ (Qianfan mega-constellation project) என்றும் பெயரிட்டிருந்தது. நோக்கம் உலகம் முழுவதும் இணைய தொடர்பை வழங்குவதாகும். இதற்காக மொத்தம் 15,000 சிறிய ரக செயற்கைக்கோள்களை ஏவ சீனா முடிவெடுத்தது. இதன் முதல் தொகுப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏவப்பட்டது. இதில் 18 செயற்கைக்கோள்கள் இருந்தன.
ஒவ்வொன்றும் சுமார் 300 கி.கி எடையில் இருந்தது. இவை பூமியிலிருந்து 800 கி.மீ உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டது. இதேபோன்று 2024 டிசம்பரில் அடுத்து இரண்டு தொகுதி ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. தற்போது மொத்தம் 99 செயற்கைக்கோள்கள் விண்வெளியில் இருக்கின்றன. 15,000 செயற்கைக்கோள்களை 3 கட்டங்களாக ஏவ இருக்கிறது. முதல் கட்டத்தில் 1,296 செயற்கைக்கோள்கள் ஏவப்படும். இதில் 648 செயற்கைக்கோள்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஏவப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்புவோம்
தேசியத்துவத்துடனும் ஐக்கியத்துடனும் ஒன்றுபட்டு நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க இன்று (23) காலை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
பதவிப் பிரமாணத்தின் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய முழுமையான உரை:
மக்களால் ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது நமது நாட்டின் ஜனநாயகத்திலிருக்கும் மிக முக்கியமான அம்சமாகும். தேர்தலில் வாக்களித்தல் மற்றும் ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதோடு ஜனநாயகம் நிறைவு பெறுவதில்லை. இது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சம் என்றாலும், நம் நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்த, கட்டமைப்புகளின் வலிமையும், சட்டங்களை வலுப்படுத்துவதும் அவசியம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனவே, எனது பதவிக்காலத்தில் இந்த நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.
அத்துடன், இந்த நாட்டில் ஜனநாயக முறையில் அதிகாரப் பரிமாற்றம் நடந்த வரலாறும் உண்டு. தேர்தலில் நிகழும் அதிகாரப் பரிமாற்றத்தை எந்தத் தலைவரும் நிராகரித்ததில்லை. அதற்கமைய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த மக்கள்ஆணையை சுமூகமாக ஏற்றுக்கொண்டதுடன், ஜனநாயக ரீதியில் அதிகாரத்தை கைமாற்றுவதற்கான அவரின் அர்ப்பணிப்பிற்கும் முன்னுதாரணத்திற்கும் நன்றி தெரிவிக்கிறேன். மேலும் எமக்கு கிடைப்பது மிகவும் சவால் நிறைந்த நாடு என்பதை நன்கு புரிந்து கொண்டிருக்கிறோம். நமது அரசியலில் தூய்மையான, மக்களால் எதிர்பார்க்கப்படும் சிறந்த அரசியல் கலாசாரத்திற்காக அவசியம் காணப்படுகிறது.அதற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.
நம் நாட்டின் அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு நல்லெண்ணம் இல்லை. எனவே, அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் மீது மக்கள் மரியாதை மற்றும் நம்பிக்கையை மீட்டெடுக்க எங்கள் தரப்பிலிருந்து முடிந்த அனைத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.
மேலும், நமக்கு முன் இருக்கும் இந்த ஆழமான நெருக்கடியை வெறும் அரசோ, வெறும் அரசியல் கட்சியோ அல்லது ஒரு தனி நபரோ மட்டும் தீர்க்க முடியும் என்று நாங்கள் நம்பவில்லை. ஏனென்றால், நான் முன்பு கூறியது போல், நான் ஒரு மாயாஜால வித்தைக்காரனல்ல. நான் மந்திரவாதியும் இல்லை. நான் இந்த நாட்டின் சாதாரண குடிமகன். எம்மிடம் திறமைகள் உள்ளன. இயலாமைகளும் உள்ளன. தெரிந்த விடயங்களும் உள்ளன அதேபோன்று, தெரியாத விடயங்களும் உள்ளன.
ஆனால் திறமைகளைப் பயன்படுத்தி தெரியாதவற்றை சேகரித்துக்கொண்டு சிறந்த முடிவுகளை எடுத்து இந்த நாட்டை வழிநடத்துவதே எனது தலையாய பணியாகும். அந்த கூட்டுப் பங்களிப்பின் ஒரு அங்கமாக மாறுவது எனது பொறுப்பாகும். மேலும், இந்த நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதில் பொது மக்கள் மற்றும் அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் பாரிய பொறுப்பு உள்ளது. அந்தப் பொறுப்பை நிறைவேற்ற அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்.
ஆனால், நாட்டின் ஜனாதிபதி என்ற முறையில், இந்தப் பணியை முன்னின்று நடத்துவதில் எனக்கு முதன்மையான மற்றும் மிக முக்கியமான பொறுப்பு இருப்பதை நான் ஏற்றுக்கொண்டேன். எனவே, இந்தச் சவாலை வெற்றிகொள்வதற்காக எனக்குக் வழங்கப்பட்டுள்ள பணியை நான் உரிய முறையில் நிறைவேற்றுவேன் என்பதை செயற்பாடு மற்றும் நடைமுறை மூலம் எல்லா சந்தர்ப்பங்களிலும் இந்த நாட்டின் பிரஜைகளுக்கு வெளிப்படுத்த நான் தயாராக இருக்கிறேன்.
மேலும் நமது நாட்டுக்கு சர்வதேச ஆதரவு தேவை. எனவே, உலகில் எத்தகைய அதிகாரப் பிளவுகள் இருந்தாலும், ஒவ்வொரு நாட்டையும் எமக்கு மிகவும் சாதகமாக கையாள்வதே நமது எதிர்பார்ப்பாகும். நாம் உலகில் தனிமைப்படுத்தப்பட்ட நாடு அல்ல. உலகத்துடன் கூட்டாக முன்னேற வேண்டிய ஒரு நாடாகும். அது தொடர்பில் தேவையான முடிவுகளை எடுக்க நாங்கள் சிறிதும் தயங்குவதில்லை.
மேலும், நம் நாட்டைக் கட்டியெழுப்புவதில் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு பெரும் பங்கு உள்ளது. எனவே, நாட்டை மேலும் வலுவாகக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு அவர்கள் ஆதரவளிப்பார்கள் என நான் கருதுகின்றேன்.
நம் நாட்டின் ஜனநாயகத்தின் ஊடாக நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். அதற்காக மக்கள் எனக்கு வாக்களித்தனர்.
மேலும் எனக்கு வழங்கப்படாத வாக்குகளும் உள்ளன. எனவே, எங்களின் வெற்றியின் உள்ளடக்கம் மற்றும் அளவு குறித்து எங்களுக்கு நல்ல புரிதல் உள்ளது. எனவே, எங்களுக்கு ஆதரவு வழங்காத மற்றும் எங்களை நம்பாத பிரஜைகளின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெறுவதே எனது நிர்வாகத்தின் போது எனக்கு வழங்கப்பட்டுள்ள பணியாகும். அந்தப் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
எதிர்காலத்தில் இவை அனைத்தையும் நீங்கள் நடைமுறையில் கண்டுகொள்ள முடியும். அதற்கு அனைத்து மக்களின் ஆதரவையும் எதிர்பார்க்கின்றேன்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அதிகாரிகள் மற்றும் பிற தேவைகள் முடிந்த பிறகு, மாலை 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (19) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி பிற்பகல் 4.15 மணிளவில் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
“எதிர்வரும் 21ம் திகதி வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள் பெறப்பட்டதும், அதிகாரிகள் மற்றும் இதர தேவைகள் முடிந்ததும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் இரவு 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.
மாலை 4.15 மணிளவில் தபால் மூல வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.
அத்துடன் மாவட்ட அளவில் ஒவ்வொரு வட்டாரத்திலும் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெறும்.
வாக்கு எண்ணிக்கையின் முடிவில் முடிவுகள் கிடைத்தவுடன் ஊடகங்களுக்கு வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையே முதலில் எண்ணப்படும்.
அந்தக் கணக்கெடுப்பின் பின்னர் (மாவட்ட அளவில் எண்ணும் பணி) முதலில் வாக்குப்பெட்டிகளில் உள்ள வாக்குகள் எண்ணப்படும்.
அதன் பிறகு, ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு, தொகுதி மற்றும் மாவட்ட அளவில் அது தயாரிக்கப்படுகிறது.
தேர்தல்கள் செயலகமே ஒட்டுமொத்த முடிவுகளைக் கணக்கிடும்.
எந்த வேட்பாளரும் 50 வீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்றுள்ளாரா என சரிபார்க்கப்படும்.
அப்படியானால், அந்த நேரத்தில் வாக்கு எண்ணும் பணிகள் நிறுத்தப்படும்.
அப்போது ஜனாதிபதியை நாங்கள் அறிவிப்போம்.
எந்த வேட்பாளருக்கும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் கிடைக்காவிடின், விருப்பு வாக்கு எண்ணிக்கைக்கு செல்ல வேண்டும்.
அங்கு, அதிக வாக்குகள் பெற்ற இரண்டு வேட்பாளர்கள் போட்டியில் வைத்து விட்டு மீதமுள்ள 36 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து நீக்கப்படுவர்” என்றார்.
புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வாத்தியாசலையாக மாற்றம் பெரும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று புத்தளத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ அலிசப்ரி ரஹீம் மற்றும் சிந்தக்க மாயாதுன்ன தலைமையில் புத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்திலே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
புத்தளம் மக்களின் நீண்ட நாள் தேவையாக இருந்து வருகின்ற புத்தளம் தல வைத்தியசாலையை தரமுயர்த்துவது தொடர்பாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ அலிசப்ரி ரஹீம் அவர்களினால் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோலுக்கிணங்க குறித்த வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.
மேலும் புத்தளத்தில் மீன் பிடி தொழிலை முன்னேற்றும் நோக்கத்தில் மீன் பிடி துறைமுகம் ஒன்றை அமைக்கும் யோசனையும் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டதுடன், அதற்கான முன்னெடுப்புகளும் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்டமை புத்தளம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
நாட்டில் நிரந்தர பொருளாதார அபிவிருத்தியை நிலை நாட்ட தாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டை பொருளாதார அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவதே தனது பிரதான நோக்கம் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக மொட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளரை இந்த வாரம் அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்காதிருக்கவும், மொட்டு சின்னத்தில் தனியாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமக்கு ஆதரவு வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பியிருந்த கடிதம் நேற்றைய தினம் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தினால் அரசியல் குழுவில் முன்வைக்கப்பட்டது.
எவ்வாறாயினும் அந்த கடிதத்தை நிராகரிக்க அரசியல் குழுக் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுவில் 82 பேர் அங்கம் வகிப்பதுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் 72 பேர் பங்கேற்றனர்.
இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த 11 பேர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
மஹிந்தானந்த அலுத்கமகே, பந்துல குணவர்தன, பிரதீப் உந்துகொட, கோகிலா ஹர்ஷனி குணவர்தன, சஹன் பிரதீப், ரமேஸ் பத்திரன, கஞ்சன விஜேசேகர, பிரசன்ன ரணதுங்க, கனக ஹேரத், மொஹான் பிரியதர்ஷன ஆகியோர் கட்சியின் சார்பில் தனியான வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
அத்துடன் பிறிதொரு கட்சியின் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்கும் உறுப்பினர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் யோசனைக்கு 6 பேர் எதிராக வாக்களித்துள்ளனர்.
எவ்வாறாயினும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் எனக் கூறப்பட்ட தம்மிக பெரேரா தொடர்பில் அரசியல் குழுக் கூட்டத்தின்போது எந்தவித கருத்துக்களும் பரிமாற்றிக் கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவளிக்காத 11 பேர் உள்ளிட்ட தரப்பினர் நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தனவின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
புத்தளம் சைனப் ஆரம்ப பாடசாலையின் முப்பெரும் விழா பாடசாலை அதிபர் யஹியா தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து புத்தளம் ஜெய்னப் பாடசாலைக்கு 22 லட்சம் ரூபா பெறுமதியான நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு, சிறுவர் விளையாட்டு நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தல் மற்றும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் செயற்திட்டத்தின் கீழ் BCMH நிறுவனத்தினால் கற்றல் உபகரணம் வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் கடந்த செவ்வாய்க்கிழமை (16) வெகு விமர்சையாக இடம்பெற்றது.
நிகழ்வின் பிரதம அதிதியாக வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், விசேட அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மற்றும் கௌரவ அதிதியாக புத்தளம் வலயக்கல்விப் பணிப்பாளர் அர்ஜுன ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆரம்ப பாடசாலையின் முக்கியத்துவம் மற்றும் அறிவார்ந்த சமூகத்தை கட்டியெழுப்ப ஆரம்ப பாடசாலை ஆற்றிவருகின்ற அர்ப்பணிப்பு குறித்து விரிவாக பேசிய வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், புத்தளம் மாவட்ட பாடசாலைகளின் துரித வளர்ச்சி பற்றியும் மகிழ்ச்சி தெரிவித்தார்.
மேலும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் செயற்திட்டத்திற்கு வடமேல் மாகாண ஆளுநர் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் ஜவ்ஷி ஜமால்தின், இணைப்புச் செயலாளர் எச். அமீர் அலி ஆசிரியர், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் உட்பட உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் அயல் பாடசாலையின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
கடத்தல் வழக்கில் முன்னாள் எம்.பி ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்தத் தீர்ப்பை அறிவித்தார்.
தெமட்டகொட பகுதியிலுள்ள கடை ஒன்றில் பணிபுரிந்த அமில பிரியந்த அமரசிங்க எனும் இளைஞர் ஒருவரை 2015 டிசம்பர் 21ஆம் திகதி ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு சொந்தமான டிபெண்டர் வாகனத்தில் கடத்திய வழக்கு விசாரணை முடிவில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
29 குற்றங்கள் தொடர்பில் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் 8 பேரும் குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில், அச்சம்பத்திற்கு உதவி, ஒத்தாசை புரிந்ததாக ஹிருணிகா மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்திருந்தார்.
அத்தோடு, சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவின் ஆதரவாளர்கள் 8 பேர் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைதான ஐந்தாம் சந்தேகநபரின் மகள் அளித்துள்ள வாக்குமூலத்தில், தமது தாயாருடன் தொடர்பு பேணிய நபர் ஒருவரை தாம் காண்பித்ததாகவும், அவரை தமது தந்தையும் அவருடன் சென்றவர்களும் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு ஹிருணிகாவிடம் அழைத்துச் சென்றதாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட வட மாகாண மானவர்களுக்கிடையிலான சித்திரப்போட்டியில் மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்றார்.
வீதி விபத்துக்கள் இல்லாத நாளைக்கான பாடசாலையிலிருந்து அணிவக்குப்போம் எனும் தொனிப்பொருளில் கடந்த வியாழக்கிழமை (13.06.2024) அன்று நடாத்தப்பட்ட வட மாகாண மாணவர்களுக்கிடையிலான குறித்த சித்திரப்போட்டியில் சுமார் 2600 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.
சித்திரப்போட்டியில் பங்குபற்றிய 2600 மாணவர்களில் 250 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு நேற்றைய தினம் (15.06.2024) அவர்களுக்கான போட்டி இடம்பெற்றது.
நடைபெற்று முடிந்த இறுதிச் சுற்றுப்போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்று பெருமதிமிக்க பரிசில்களை பெற்றுக்கொண்டார்.
முதலாம் இடம் பெற்ற முஹம்மது ஹுசைன் என்ற மாணவனுக்கு சான்றிதல், துவிச்சக்கரவண்டி மற்றும் 8500/- ரூபா பெறுமதியான வவுச்சரும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இதேவேளை குறித்த போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய இல்முதீன் முஹம்மது ஹஸ்பான் 7 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.
எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய மற்றொரு மாணவரான முஹம்மது சம்ஹான் 8 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.
பாரிய சாவல்களுக்கு மத்தியில் தனி ஒரு மனிதனாக இம் மாணாவர்களை ஊக்கப்படுத்தி, தயார்ப்படுத்தி போட்டியில் பங்குபெறச் செய்து வெற்றிபெறச் செய்த எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியின் சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் அவர்களின் இம் முயற்சிக்கு, பாடசாலை சமூகம் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் நன்றி தெரிவித்தனர்.
தமக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வந்து தேசிய அளவில் இடம்பெறும் போட்டிகளில் மாணவர்களை பங்குபெறச் செய்வதே தனது இலக்கு என சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் எமது ஊடகத்திற்கு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
புத்தளம் பகுதியில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக புத்தளம் பகுதி முழுதும் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.
புத்தளம், தில்லையடி, பாலாவி, புத்தளம் எருக்கலம்பிட்டி, ஹிதாயத் நகர், மதுரங்குளி மற்றும் ஏனைய பல கிராமங்களும் வெள்ளித்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அவ்வகையில் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமமும் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
சுமார் 1500 குடும்பங்கள் இங்கு வாழ்ந்துவருவதுடன், அனைத்து வீடுகளும் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
நூற்றிற்கும் அதிகமான வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் ஐநூற்றுக்கும் அதிகமான வீடுகள் பகுதி அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 8ஆம் திகதி ஏற்பட்ட மழை வெள்ளித்தினால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் மற்றும் பாடசாலைகளில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த இரண்டு தினங்களாக இவர்களுக்கான சமைத்த உணவுகள் மூன்று வேலைகளிலும் ஊர் தனவந்தர்களின் உதவியுடனும், பள்ளிவாசல் நிர்வாக சபையின் வழிகாட்டலுடனும் வழங்கப்பட்டு வருவதுடன், ஊர் மக்களுக்கும் உணவு விநியோகங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
இவர்களுக்கான நிவாரண உதவிகள் இதுவரை அரசாங்கத்தினால் வழங்கப்படாத போதிலும், ஊர் மக்களின் பங்களிப்புடன் மாத்திரமே பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு விநியோகங்கள் இதுவரை வழங்கப்பட்டு வருகின்றது.
புத்தளம் பொத்துவில்லு பகுதியில் உள்ள குளம் மழை நீரினால் பெருக்கெடுத்துள்ளதால் குறித்த குளத்து நீர் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமத்திற்குள் தொடர்ந்தும் மூன்றாவது நாளாக ஊடறுத்து செல்வதால் வீடுகள் தொடர்ந்தும் நீருள் மூழ்கியுள்ளது.
மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்தின் நிவாரண உதவிக்காக பல மக்கள் தொடர்ந்தும் எதிர்பார்த்து காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அணு ஆயுதக் கொள்கையைக் கைவிட்டால் ஈரானுக்கு $300 பில்லியன்? – அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் பரபரப்பு பேட்டி!
வாஷிங்டன்: சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்து, அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் (JD Vance) ‘சிபிஎஸ் மார்னிங்ஸ்’ (CBS Mornings) ஊடகத்திற்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் அதிரடித் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
ஈரான் தனது அணு ஆயுதத் திட்டங்களை முழுமையாகக் கைவிட்டு, சர்வதேச விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டால், அதற்குப் பகரமாக $300 பில்லியன் டாலர் மதிப்பிலான சர்வதேச மறுசீரமைப்பு நிதியைப் பெறுவதற்கான வாய்ப்புகள் குறித்து இந்த நேர்காணலில் விவாதிக்கப்பட்டது.
அமெரிக்க மக்களின் வரிப்பணம் ஈரானுக்குப் போகாது!
இந்தத் திட்டம் குறித்து எழும் விமர்சனங்களுக்குப் பதிலளித்த துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ், இதில் அமெரிக்கப் பொதுமக்களின் வரிப்பணம் எதுவும் நேரடியாக ஈரானுக்கு வழங்கப்படாது என்பதைத் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.
“ஈரானுக்கு வழங்கப்பட ஆலோசிக்கப்படும் இந்த நிதியுதவி, அமெரிக்கக் கருவூலத்திலிருந்து போகாது. மாறாக, வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) நாடுகள்தான் இந்த நிதிப் பங்களிப்பை வழங்கவுள்ளன.
அதுமட்டுமின்றி, டெஹ்ரான் (ஈரான் அரசு) தனது அணு ஆயுத தயாரிப்பு முயற்சிகளை முற்றிலும் நிறுத்திக்கொண்டு, சர்வதேச நிபந்தனைகளை முறையாக நிறைவேற்றினால் மட்டுமே இந்த நிதி விடுவிக்கப்படும்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
$300 பில்லியன் நிதியின் பின்னணி என்ன?
செய்தி ஊடகங்களில் பரவி வரும் இந்த $300 பில்லியன் டாலர் நிதியானது, அமெரிக்கா ஈரானுக்கு வழங்கும் போர் இழப்பீடு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழ் வெளியிட்ட புலனாய்வு அறிக்கையின்படி, ஈரானின் முந்தைய போர்ச் சேதங்களை மதிப்பிட்டும், தற்போதைய போர் நிறுத்த மற்றும் அணு ஆயுதப் பேச்சுவார்த்தைகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவுமே இந்த முதலீட்டு முறை முன்மொழியப்பட்டுள்ளது.
இது இன்னும் இறுதி செய்யப்படாத ஒரு ஆரம்பகட்ட ஆலோசனையே ஆகும். ஈரான் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி அணு ஆயுதப் பாதையைக் கைவிடுமா அல்லது சர்வதேச சமூகத்தின் பொருளாதார அழுத்தங்களுக்குத் தொடர்ந்து முகம் கொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மட்டக்களப்பு துப்பாக்கிச்சூடு: ‘பிள்ளையான்’ மீது பாய்ந்தது சி.ஐ.டி.யின் கொலைக் குற்றச்சாட்டு!
கிழக்கு மாகாணத்தையே உலுக்கிய ஐந்து பேரின் படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உட்பட மூன்று சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று (15) திடுக்கிடும் உண்மைகளை அறிக்கையிட்டுள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டு அரங்கேறிய இந்த கொடூரக் கொலைகள் குறித்து சி.ஐ.டி. நடத்திய தீவிர விசாரணைகளின் பின்னரே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டி-56 ரக துப்பாக்கிகளால் நடத்தப்பட்ட மூன்று கொடூரங்கள்!
சி.ஐ.டி. நீதிமன்றில் சமர்ப்பித்த அறிக்கையின்படி, மட்டக்களப்பில் வெவ்வேறு காலகட்டங்களில் டி-56 ரக அதிநவீன துப்பாக்கிகளைப் பயன்படுத்தி இந்த 5 கொலைகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த மூன்று சம்பவங்களிலும் பிள்ளையான் 3ஆவது சந்தேகநபராக முறைப்படி பெயரிடப்பட்டுள்ளார்.
அந்தக் கொலைக் குற்றச்சாட்டுகளின் பின்னணி இதோ:
முதலாவது சம்பவம் (ஜனவரி 9, 2008): மட்டக்களப்பு, கல்லடி முருகன் ஆலயத்திற்கு அருகிலுள்ள விளையாட்டு மைதானத்திற்கு அருகில் முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர் உட்பட இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இரண்டாவது சம்பவம் (மே 22, 2008): காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதான வீதியில் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
மூன்றாவது சம்பவம் (ஆகஸ்ட் 20, 2008): வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்ணன்குடா பகுதியில் இரவு வேளையில் ஆயுததாரிகளால் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
சந்தேகநபர்களின் தற்போதைய நிலை என்ன?
இந்த வழக்கில் அடையாளம் காணப்பட்டுள்ள மூன்று சந்தேகநபர்கள் குறித்த விபரங்களையும் சி.ஐ.டி. அம்பலப்படுத்தியுள்ளது:
1ஆம் சந்தேகநபர்: ஏற்கனவே இலங்கையை விட்டு தப்பியோடி வெளிநாட்டில் வசித்து வருகிறார்.
2ஆம் மற்றும் 3ஆம் சந்தேகநபர்கள்: கடந்த 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் நவம்பர் மாதங்களில் கைது செய்யப்பட்டு, சி.ஐ.டி.யினரின் தடுத்து வைப்பு உத்தரவின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.
இவர்கள் இருவரும் நேற்று திங்கட்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சிறையிலிருக்கும் பிள்ளையானுக்கு நீதிமன்றின் அடுத்த உத்தரவு
கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மற்றுமொரு பாரிய வழக்குத் தொடர்பாக, பிள்ளையான் தற்போது கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனைக் கருத்திற் கொண்ட மட்டக்களப்பு நீதவான், இந்த கொலை வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் அடுத்த தவணையன்று, பிள்ளையானை மட்டக்களப்பு நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு வெலிக்கடை சிறைச்சாலை அத்தியட்சகருக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இலங்கை அரசியலிலும் கிழக்கு மாகாணத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த ஐந்து பேரின் படுகொலைகள் தொடர்பில், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் (CID) மேலும் பல கோணங்களில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
எரிபொருள் பரிசோதனையில் வெடித்த விபரீதம்: கிளிநொச்சியில் முற்றாக எரிந்து சாம்பலாகிய மோட்டார் சைக்கிள்!
கிளிநொச்சி: எரிபொருள் நுகர்வு பரிசோதனை நடந்து கொண்டிருந்த போதே, எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்து சாம்பலாகிய சம்பவம் தருமபுர பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் இன்று (15.06.2026) கரைச்சி பிரதேச சபையினரால் மோட்டார் சைக்கிள்களுக்கான எரிபொருள் நுகர்வு பரிசோதனை (Fuel Consumption Test) மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, எதிர்பாராத விதமாக பிரதேச சபைக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் ஒன்றில் திடீரென தீப்பற்றிக் கொண்டது.
தீ கண் இமைக்கும் நேரத்திற்குள் அதிவேகமாக பரவியதால், அந்த மோட்டார் சைக்கிள் முற்றுமுழுதாக தீயில் எரிந்து சாம்பலாகியது. எனினும், அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தின் போது அங்கிருந்த எவருக்கும் எவ்வித காயங்களோ, உயிராபத்தோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து தருமபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
உடனடியாக விழிப்புணர்வில் இறங்கிய அதிகாரிகள்!
தற்போது நிலவும் கடும் வறட்சி மற்றும் பலத்த காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக ஆங்காங்கே தீ விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இந்த ஆபத்தான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, தீ விபத்துக்களைத் தடுப்பது மற்றும் தீ பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்த அவசர விழிப்புணர்வு செயலமர்வு ஒன்று கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகத்தில் உடனடியாக முன்னெடுக்கப்பட்டது.
தற்போதுள்ள வானிலை மாற்றங்களால் சிறிய தீப்பொறி கூட பெரிய அனர்த்தத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், பொதுமக்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் அனைவரும் தீ பாதுகாப்பு வழிமுறைகளை துல்லியமாக பின்பற்ற வேண்டும் என இந்த செயலமர்வின் போது வலியுறுத்தப்பட்டது.
டெங்கு தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை! நுளம்பு பெருக்கத்திற்கு இடமளித்தால் சட்டநடவடிக்கை!
செய்தியாளர்:ஜூட் சமந்த
நாடு முழுவதும் டெங்கு ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பதில் தலைவர் திரு. உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் விசேட டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் 15ஆம் திகதி முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளது.
அந்தந்தப் பகுதிகளில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டத்தில் பொது சுகாதார பரிசோதகர்கள், பூச்சியியல் அதிகாரிகள், குடும்ப சுகாதார அதிகாரிகள் மற்றும் தொண்டர் அமைப்புகளின் உறுப்பினர்கள் இணைந்துள்ளனர்.
வேலைத்திட்டத்தின் முதல் நாளான 15ஆம் திகதியன்று, முக்கியமாக பொது இடங்கள், அதனைச் சுற்றியுள்ள வீடுகள் மற்றும் வீட்டுத் தோட்டங்கள் என்பன தீவிரமாக பரிசோதிக்கப்பட்டன.
இந்தப் பரிசோதனைகளின் போது டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய மற்றும் பெருக இடமளிக்கப்பட்டிருந்த பல இடங்கள் அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவ்வாறான இடங்களின் உரிமையாளர்களுக்கு அறிவித்தல்களை வழங்கவும், எச்சரிக்கை விடுக்கவும் பரிசோதனை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
விருப்பமில்லாவிட்டாலும், டெங்கு நுளம்பு பெருகுவதற்கு இடமளித்த நபர்கள், நிறுவனங்கள் மற்றும் வீட்டின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த உபுல் ரோஹண, இந்த வருடம் டெங்கு காய்ச்சலால் பல துரதிர்ஷ்டவசமான மரணங்கள் பதிவாகியுள்ளதாக கவலை வெளியிட்டார். அத்துடன், பெருமளவான நோயாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சில வைத்தியசாலைகளில் நோயாளர்களை அனுமதிக்கும் கொள்ளளவு எல்லை மீறியுள்ளமை மிகவும் துரதிர்ஷ்டவசமான நிலைமை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதிகாரிகளால் மாத்திரம் இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாது என்பதை வலியுறுத்திய அவர், பொதுமக்கள் தமது வீடுகள் மற்றும் வேலைத் தளங்களை டெங்கு அற்ற வலயங்களாக மாற்ற முழுமையான ஆதரவையும் அர்ப்பணிப்பையும் வழங்கினால் மாத்திரமே இந்த நோயை எவ்வித சிக்கலுமின்றி கட்டுப்படுத்த முடியும் என பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தினத் தாக்குதல் என்பது இலங்கையின் நவீன வரலாற்றில் மிகவும் வேதனையான ஒரு தேசிய வடுவாகும். அன்று அப்பாவி மக்கள் மாத்திரம் உயிரிழக்கவில்லை; மாறாக அரசின் மீதான மக்கள் நம்பிக்கையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. எனவே, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான உண்மையைக் கண்டறிவது எந்தவொரு கட்சியின் அரசியல் திட்டமாகவும் இருக்கக் கூடாது. இது பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் குடும்பங்கள், மத மற்றும் தேசிய நல்லிணக்கம், பாதுகாப்புப் படையின் நிரபராதியான உறுப்பினர்கள் மற்றும் நாட்டின் சட்ட முறைமை ஆகியவற்றுக்குச் சொந்தமான நீதிக்கான பிரச்சினையாகும்.
எனினும், இன்று ஈஸ்டர் விசாரணை தொடர்பில் வேறொரு அரசியல் செயற்பாடு காணப்படுகின்றது. முன்னாள் புலனாய்வு அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரக் கட்டமைப்புகள் அல்லது பழைய அரசியல் முகாமுக்கு நெருக்கமான நபர்கள் மீது சட்டம் செயற்படத் தொடங்கும் போது, அதனை “அரசியல் பழிவாங்கல்” எனப் பெயரிடும் பிரசாரங்கள் முன்னிலைக்கு வருகின்றன. மேலோட்டமாகப் பார்த்தால் இது சட்டப்பூர்வமான நடைமுறையைப் பற்றிப் பேசுவது போல் தோன்றலாம். ஆனால், இதன் ஆழமான அரசியல் நோக்கம், சட்டம் செயற்படுத்தப்படுவதற்கு முன்னரே அந்தச் செயன்முறையை அபகீர்த்திக்கு உள்ளாக்குவதாகும்.
சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான மத தீவிரவாத வலையமைப்பு ஈஸ்டர் தாக்குதலை நடத்தியது என்பதை ஏற்றுக்கொள்வது, அந்தத் தாக்குதல் நடைபெற எவ்வாறு இடமளிக்கப்பட்டது என்ற கேள்வியை இல்லாதொழிக்காது.
தாக்குதலை நடத்தியவர்களை அடையாளம் காண்பது ஒரு விடயம்.
அதனைத் தடுப்பதற்கான வாய்ப்புகள் ஏன் தவறவிடப்பட்டன?
முன்னெச்சரிக்கைகள் எவ்வாறு புறக்கணிக்கப்பட்டன?
விசாரணைகள் முடக்கப்பட்டனவா?
புலனாய்வுச் சேவைகளுக்கும் அரசியல் அதிகாரக் கட்டமைப்புகளுக்கும் இடையில் அசாதாரண தொடர்புகள் இருந்தனவா?
தாக்குதலின் பின்னர் ஏற்பட்ட பாதுகாப்பு அச்சத்தின் மூலம் அரசியல் ரீதியாகப் பயனடைந்தவர்கள் யார்?
என்பவற்றைக் கண்டறிவது மற்றுமொரு முக்கியமான விடயமாகும். “சஹ்ரான் தான் செய்தார்” என்ற பதில், “வேறு எதையும் விசாரிக்க வேண்டாம்” என்ற முடிவுக்கு இட்டுச்செல்ல முடியாது. இது சட்டத்தின் தர்க்கம் அல்ல, மாறாக உண்மையை மூடிமறைக்கும் ஒரு அரசியல் தர்க்கமாகும்.
தற்போதைய அரசாங்கம் சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்களுக்கு உயர்ந்தபட்ச சுயாதீனமான வெளியை வழங்கியுள்ளதாகவே தெரிகிறது. சட்டமானது அரசியல் அனுமதிக்காகக் காத்திருக்காமல் அதிகாரம் கொண்டவர்களை நெருங்கக்கூடிய சூழல் உருவாகியிருப்பது, சட்டத்தின் ஆட்சியை உயிர்ப்பிப்பதாகும்.
அரசியல் பழிவாங்கலா?
சட்டம் அதிகாரம் மிக்க ஒருவரை நெருங்கியதால் மாத்திரம் அது ஒருபோதும் “அரசியல் பழிவாங்கலாக” மாறிவிடாது. அரசியல் பழிவாங்கல் ஒன்று இருக்குமானால், அது சாட்சியங்கள் ஊடாக நிரூபிக்கப்பட வேண்டும். விசாரணை பழைய ஆளுங்கட்சி முகாமுக்கோ, முன்னாள் பாதுகாப்பு அதிகாரிக்கோ அல்லது அரசியல் ரீதியாக அதிகாரம் மிக்க நபருக்கோ தொடர்புடையது என்பதற்காக மாத்திரம் அதனைப் பழிவாங்கல் எனப் பார்ப்பது, சட்டத்தின் சுயாதீனமான செயற்பாட்டிற்கு எதிரான ஒரு தற்பாதுகாப்புப் பிரசாரமாகும்.
ஜனநாயக நாடொன்றில், பாதுகாப்பு மற்றும் புலனாய்வு நிறுவனங்கள் இரகசிய அதிகாரத்தின் உரிமையாளர்கள் அல்ல. அவை மக்களுக்காக அதிகாரம் வழங்கப்பட்ட நிறுவனங்களாகும். மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அந்த நிறுவனங்கள், பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவே தமது அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும். இரகசியத்தன்மை நாட்டினைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர, அதிகாரத்தைப் பாதுகாக்க அல்ல. குறிப்பிட்ட ஒரு புலனாய்வு அதிகாரி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதை, ஒட்டுமொத்த இராணுவத்திற்கும் எதிரான தாக்குதலாகச் சித்தரிப்பது முற்றிலும் தவறான ஒப்பீடாகும். இராணுவத்தின் கௌரவம் பொறுப்புக்கூறலினூடாகவே பாதுகாக்கப்படுகிறதே அன்றி, பொறுப்புக்கூறலில் இருந்து தப்பியோடுவதன் மூலம் அல்ல.
உண்மையைத் தேடும் பயணம்
ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் இலங்கையின் அரசியல் களம் மாறியது. மக்கள் மத்தியில் அச்சம், கோபம், பாதுகாப்பு தொடர்பான அவநம்பிக்கை மற்றும் பலமான நிர்வாகம் ஒன்றிற்கான கோரிக்கை ஆகியவை ஒரே நேரத்தில் அதிகரித்தன. அரசியல்-பொருளாதார ரீதியாகப் பார்க்கும் போது, அந்தச் சந்தர்ப்பத்தில் “பாதுகாப்பு” என்பது வெறுமனே ஒரு அரச சேவையாக அன்றி, அரசியல் பெறுமதி கொண்ட ஒரு மூலதனமாக மாறியது. அந்த மக்கள் அச்சத்தின் மூலம் அரசியல் ரீதியாகப் பயனடைந்த அதிகார முகாம்கள், இன்று ஈஸ்டர் உண்மையைத் தேடுவதை ஒரு சட்ட மற்றும் அரசியல் ஆபத்தாகப் பார்ப்பதில் ஆச்சரியமில்லை.
அதனால்தான், ஈஸ்டர் விசாரணையை “அரசியல் பழிவாங்கல்” எனப் பெயரிடுவது வெறுமனே ஒரு கருத்து வெளியீடு அல்ல. அது பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிக்கும் ஒரு தந்திரோபாயமாகும். பெருமளவு உயிரிழப்புகள் ஏற்பட்ட ஒரு குற்றத்தில், நீதி என்பது உயிரிழந்த தற்கொலைக் குண்டுதாரிகளின் பெயர்களை மீண்டும் கூறுவதல்ல; நீதி என்பது முழுமையான உண்மையாகும்.
உண்மையான தேசிய நல்லிணக்கம்
எனவே, நாட்டுக்குத் தேவையானது விசாரணையை வலுப்படுத்துவதாகும். ஆனால், அது சட்டத்திற்குப் புறம்பாக அல்லாமல், சட்டத்தின் ஊடாகவே நடைபெற வேண்டும். சந்தேக நபர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் உண்மையை அறிந்துகொள்ளும் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். பாதுகாப்புப் படையினரின் கௌரவம் ஒட்டுமொத்தமாக அபகீர்த்திக்கு உள்ளாக்கப்படக் கூடாது. அதேபோல, பாதுகாப்புப் படையின் பெயரைப் பயன்படுத்தி எவரும் சட்டத்தில் இருந்து தப்பிக்க இடமளிக்கக் கூடாது.
ஒரு நாடு குணமடைவதற்கான முதல் நிபந்தனை முழுமையான உண்மையாகும். இது ஒரு பழிவாங்கல் அல்ல, மாறாக அரசை மீண்டும் நம்ப முடியுமா என்பதற்கான ஒரு பரிசோதனையாகும். எனவே, சட்டத்திற்குச் சுயாதீனமாகச் செயற்பட இடமளிக்கப்பட வேண்டும், மேலும் அந்தச் சுயாதீனமானது நீதித்துறை பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு ஆகியவற்றுடன் இணைந்திருக்க வேண்டும். அதுவே உண்மையைச் சென்றடையக்கூடிய ஜனநாயக வழியுமாகும்.
தேசிய பளுதூக்கல் விளையாட்டு விழா சிலாபத்தில் கோலாகலம்!
இலங்கை பளுதூக்கல் (Powerlifting) சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய விளையாட்டு விழா, கடந்த 14 ஆம் திகதி நாள் முழுவதும் சிலாபம் – பம்பல பகுதியில் கோலாகலமாக நடைபெற்றது.
உடற்கட்டமைப்பு சம்மேளனத்தின் செயலாளர் ஐ.பி. நந்தசேன மற்றும் அச்சம்மேளனத்தின் உறுப்பினர் வசந்த குமார ஆகியோரின் தலைமையில் இந்த விளையாட்டு விழா இடம்பெற்றது. நாடளாவிய ரீதியில் உள்ள விளையாட்டுச் சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பெருமளவிலான வீர, வீராங்கனைகள் இதில் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். பல்வேறு எடைப் பிரிவுகளின் கீழ், ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் பல சுவாரஸ்யமான போட்டிகள் இங்கு நடைபெற்றன.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த இலங்கை பளுதூக்கல் சம்மேளனத்தின் தலைவர் திரு. ஜே.எம். அர்பத் அவர்கள் பின்வருமாறு கூறினார்:
“இந்த விளையாட்டு நமது நாட்டுக்கு இன்னும் புதியது. எனினும், பல நாடுகளில் இவ்விளையாட்டு மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. கடந்த சில ஆண்டுகளில் நமது நாட்டு வீர, வீராங்கனைகள் பல சர்வதேச போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிகளைப் பெற்றுள்ளனர். ஆனால், இந்த விளையாட்டை நமது நாட்டில் பிரபலப்படுத்துவதற்கு யாரிடமிருந்தும் போதிய ஆதரவு கிடைப்பதில்லை. நாங்கள் தற்போது இந்த விளையாட்டை நாட்டின் பல மாவட்டங்களில் விரிவுபடுத்தியுள்ளோம். எதிர்காலத்தில் மேலும் பல வீர, வீராங்கனைகளை இதில் இணைத்துக்கொள்ள நாங்கள் உத்தேசித்துள்ளோம்.”
ருஹுணு பல்கலைக்கழகத்தின் பொருளியல் திணைக்களத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சந்திக குணசிங்க
சிலாபம்: வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற போதை ஆசாமியால் ஏற்பட்ட வாக்குவாதம், இறுதியில் வன்முறையாக மாறியதில் மூன்று இளம் பாதுகாப்பு அதிகாரிகள் படுகாயமடைந்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் சிலாபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுபோதையில் வந்த நபரால் வெடித்த மோதல்
கடந்த 14ஆம் திகதி இரவு 7.10 மணியளவில், சிலாபம் பொது வைத்தியசாலையின் பிரதான நுழைவாயிலில் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. நோயாளி ஒருவரைப் பார்ப்பதற்காக அநாவசியமான முறையில் மதுபோதையில் வந்த நபர் ஒருவர், வைத்தியசாலைக்குள் பலவந்தமாக நுழைய முயன்றுள்ளார்.
அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதன் போது இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம், ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியுள்ளது. போதை ஆசாமி மற்றும் அவருடன் வந்தவர்கள் பாதுகாப்பு அதிகாரிகள் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு உள்ளான மூன்று பாதுகாப்பு அதிகாரிகளும் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிப்புக்குள்ளான பாதுகாப்பு அதிகாரிகள்:
விக்ரமநாயக்க பத்திரனகே அஷேன் தனஞ்சய (வயது 20) – ஆரச்சிகட்டுவ, அத்தங்கனய பகுதியைச் சேர்ந்தவர்.
தென்னகோன் முதியன்சேலாகே துலார மதுசங்க (வயது 20) – அனுராதபுரம், ரணவரவ பகுதியைச் சேர்ந்தவர்.
கவிந்த தில்ஷான் (வயது 19) – ஹெட்டிபொல, அம்பகஹவெவ பகுதியைச் சேர்ந்தவர்.
இச்சம்பவம் குறித்து முறைப்பாடு கிடைக்கப்பெற்றவுடன் உடனடியாகச் செயற்பட்ட சிலாபம் பொலிஸார், தாக்குதலுடன் தொடர்புடைய இருவரைக் கைது செய்துள்ளனர். இவர்கள் சிலாபம் – கரவிட்ட மற்றும் இனிகொடவெல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தாக்குதல் நடத்தியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களை சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளைச் சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். அரச ஊழியர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் தாக்குதல் நடத்தியமை தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இலங்கை வலுதூக்கும் சம்மேளனத்தினால் (Sri Lanka Powerlifting Federation) ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய விளையாட்டு விழா, கடந்த 14ஆம் திகதி சிலாபம் – பம்பலை பிரதேசத்தில் நாள் முழுவதும் மிகவும் சிறப்பான முறையில் நடந்தேறியது.
உடற்கட்டமைப்பு சம்மேளனத்தின் (Bodybuilding Federation) செயலாளர் ஐ.பி. நந்தசேன மற்றும் அச்சம்மேளனத்தின் உறுப்பினர் வசந்த குமார ஆகியோரின் தலைமையின் கீழ் இந்த விளையாட்டு விழா வைபவரீதியாக ஆரம்பமானது. நாடளாவிய ரீதியில் உள்ள பல்வேறு விளையாட்டு கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தி பெருமளவான வீர, வீராங்கனைகள் இப்போட்டிகளில் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்றிருந்தனர்.
பல்வேறு எடைப் பிரிவுகளின் கீழ், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பல போட்டிகள் இங்கு விறுவிறுப்பாக நடத்தப்பட்ட போட்டிகளில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் திறமையான வீர, வீராங்கனைகள் இதில் தங்களது பலத்தை வெளிப்படுத்தினர்.
“விளையாட்டைப் பிரபலப்படுத்தப் போதுமான ஆதரவில்லை” – தலைவர் ஜே.எம். அர்பாத்
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய இலங்கை வலுதூக்கும் சம்மேளனத்தின் தலைவர் ஜே.எம். அர்பாத் அவர்கள், இந்த விளையாட்டின் தற்போதைய நிலை குறித்து தனது கவலையை வெளிப்படுத்தினார்:
“இந்த விளையாட்டு இன்னும் நமது நாட்டிற்குப் புதியதுதான். ஆனால், உலகின் பல நாடுகளில் இது மிகவும் பிரபல்யமாக விளையாடப்படுகிறது. கடந்த சில வருடங்களில் நமது நாட்டு வீர, வீராங்கனைகள் பல சர்வதேச போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிகளை ஈட்டி நமது தாய்நாட்டுக்குப் பெரும் பெருமை சேர்த்துள்ளனர்.
ஆயினும், இந்த விளையாட்டை நமது நாட்டில் மேலும் பிரபலப்படுத்துவதற்குத் தேவையான அல்லது போதுமான ஆதரவு எவரிடமிருந்தும் கிடைப்பதில்லை என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். இவ்வாறான சவால்களுக்கு மத்தியிலும், நாம் தற்போது இந்த விளையாட்டை நாட்டின் பல மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். எதிர்காலத்தில் மேலும் பல புதிய வீர, வீராங்கனைகளை இதில் இணைத்துக்கொள்ள நாம் திட்டமிட்டுள்ளோம் என தலைவர் ஜே.எம். அர்பாத் தெரிவித்தார்.
உயர் கல்வி மற்றும் தஃவா பணிக்கு AI உள்ளிட்ட நவீன தொழிநுட்பங்களை பயன்படுத்துவது தொடர்பில் புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரி மாணவிகளுக்கு தெளிவூட்டும் செயலமர்வொன்று நேற்று சனிக்கிழமை (13) மாலை இடம்பெற்றது.
புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் எம்.ஏ.எல்.எம்.பஸ்லுல் பாரிஸ் (நளீமி) தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும், விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான எம்.பி.எம்.பைரூஸ் வளவாளராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் இஸட்.ஏ.சன்ஹீர் உட்பட இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரியில் கற்பிக்கும் முஅல்லிமாக்கள் மற்றும் மாணவிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, உயர் கல்வி மற்றும் தஃவா பணிக்கு AI உள்ளிட்ட நவீன தொழிநுட்பங்களை பயன்படுத்துவது எவ்வாறு எனும் தலைப்பில் வளவாளராக கலந்துகொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும், விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான எம்.பி.எம்.பைரூஸ் விளக்கமளித்து தெளிவூட்டியதுடன், மாணவிகளின் சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தார்.
மேலும், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சமூக வளைத்தளங்களால் இளம் சமூகம் எதிர்நோக்கியுள்ள அச்சுறுத்தல்கள் குறித்தும் எடுத்துரைத்ததுடன், மாணவிகள் அவற்றை எவ்வாறு பாதுகாப்பாக பயன்படுத்தலாம் என்றும் விழிப்புணர்வூட்டும் தெளிவும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் கட்டமைப்பு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகலாம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீப் தெரிவித்துள்ளனர்.
எனினும், ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தாகும் என்ற தகவலை ஈரான் உறுதிப்படுத்தவில்லை. “அது நாளை நடைபெறாது, ஆனால் வரும் நாட்களில் நடைபெறலாம்” என ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுவதுடன், அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையை நீக்கவும், ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ஈரானில் சில கடும்போக்கு ஆதரவாளர்கள் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அதேவேளை, ஈரானின் அணு திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் பின்னர் தனியாக நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்பின் பிறந்தநாளில் அமைதி ஒப்பந்தமா?
சனிக்கிழமை தனது சமூக ஊடகப் பதிவில் டிரம்ப், “ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தாகும்” என்று தெரிவித்தார். குறிப்பிடத்தக்க வகையில், அது அவரது 80வது பிறந்தநாளாகும்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீப், இரு தரப்பும் ஏற்கனவே ஒரு கட்டமைப்பு உடன்பாட்டை எட்டியுள்ளதாகவும், ஞாயிற்றுக்கிழமை மின்னணு கையெழுத்து நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இஸ்ரேல் அதிருப்தி – மத்திய கிழக்கில் புதிய அரசியல் புயலா?
இஸ்ரேல் இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இல்லை என்று அறிவித்துள்ளது.
மேலும், லெபனானில் ஈரானின் கூட்டாளியான ஹெஸ்பொல்லாவுக்கு எதிராக கடந்த 24 மணி நேரத்தில் 70-க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதனால், அமெரிக்கா அமைதியை நோக்கிச் செல்லும் வேளையில், மத்திய கிழக்கில் பதற்றம் இன்னும் முழுமையாக அடங்கவில்லை என்பதும் தெளிவாகிறது.
உலகம் காத்திருக்கும் தருணம்
பல மாதங்களாக இரத்தம் சிந்திய இந்த மோதல் முடிவுக்கு வருமா? ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுமா? உலக எண்ணெய் விலைகள் குறையுமா? அல்லது கடைசி நேரத்தில் ஒப்பந்தம் முறியடிக்கப்படுமா?
இந்த கேள்விகளுக்கான பதிலை அறிய உலக நாடுகள் அனைத்தும் தற்போது வாஷிங்டன், தெஹ்ரான் மற்றும் இஸ்லாமாபாத் நோக்கி உற்றுநோக்கிக் கொண்டிருக்கின்றன.
வனாதவில்லுவ, ஜூன் 14: குத்தகை அடிப்படையில் பெற்றிருந்த முந்திரி (கஜூ) தோட்டத்தில் அறுவடை மேற்கொள்ளச் சென்ற குழுவினர் மீது முரட்டுத்தனமான தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக வனாதவில்லுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த ஜூன் 13ஆம் திகதி மாலை இந்த தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலுக்கு உள்ளானவர்கள் குத்தகைதாரரான மொஹமட் நிபாஸ் மொஹமட் (30) மற்றும் அவரது ஊழியர்களான ஆர்.எம். ரிஷான் (19), ஐ.எம். ருக்ஷான் (25) ஆகிய அனைவரும் கல்பிட்டி – ஏத்தாலை பகுதியைச் சேர்ந்தவர்கள் என அறியப்படுகிறது.
காயமடைந்த மூவரும் மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பின்னணியில் கொலைச் சம்பவம்?
சிலாபம் தோட்டக் கம்பனிக்குச் சொந்தமான வனாதவில்லுவ – கரதீவு, பகுதியில் அமைந்துள்ள முந்திரி (கஜூ) தோட்டம், கல்பிட்டி ஏத்தாலை பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டிருந்த நிலையில், தோட்டத்தின் பாதுகாப்பிற்காக பலர் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், கடந்த ஜூன் 9ஆம் திகதி அதிகாலை சுமார் 1.30 மணியளவில் முந்திரி (கஜூ) சேகரிப்பதற்காக சட்டவிரோதமாக தோட்டத்திற்குள் நுழைந்ததாக கூறப்படும் ஒருவரை பாதுகாப்பு பணியாளர்கள் தடுத்துள்ளனர். இதன்போது ஏற்பட்ட தகராறை அடுத்து மேற்கொள்ளப்பட்ட ஏர் ரைஃபிள் துப்பாக்கிச் சூட்டில் அதுகோரலகே பிரதீப் சுசந்த (38) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்தார்.
“குடும்பத்திற்காக கஜூ சேகரிக்கச் சென்றார்” – கிராம மக்கள் குற்றச்சாட்டு
உயிரிழந்த பிரதீப் சுசந்த, கரதீவு ஏரிப்பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தவர் என்றும், குடும்பத்தின் பொருளாதார நெருக்கடி காரணமாக முந்திரி (கஜூ) சேகரிக்கச் சென்றபோது முதலில் தாக்கப்பட்டு பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தோட்டத்தில் பணியாற்றிய நான்கு பாதுகாப்பு ஊழியர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பழிவாங்கும் தாக்குதலா?
இந்நிலையில், தாம் குத்தகைக்கு பெற்றிருந்த தோட்டத்தில் முந்திரி (கஜூ) அறுவடை செய்யச் சென்றபோது சுமார் 100 பேர் கொண்ட குழுவொன்று திடீரென தாக்குதல் நடத்தியதாக குத்தகைதாரர் மொஹமட் நிபாஸ் மொஹமட் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த சம்பவம், முன்னர் இடம்பெற்ற உயிரிழப்பு சம்பவத்துடன் தொடர்புடைய பழிவாங்கும் நடவடிக்கையா என்ற கோணத்திலும் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வனாதவில்லுவ பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரு முந்திரி (கஜூ) தோட்டத்தை மையமாகக் கொண்டு ஆரம்பித்த மோதல், உயிரிழப்பு, கைது மற்றும் பெரும் தாக்குதல் வரை சென்றிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.