Thursday, January 22, 2026
Sponsored advertisementspot_img
Home Blog

நாகவில்லுவில் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ்வின் நினைவுதினம்!

பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று நாகவில்லுவில் இடம்பெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வு!

இலங்கை திருநாட்டில் பெளதீக ரீதியான பல வேலைத்திட்டங்களையும், இடம்பெயர்வு மற்றும் எல்லை நிர்ணயம் தொடர்பான பறந்துபட்ட அறிவினையும் கொண்டிருந்த எருக்கலம்பிட்டியை சேர்ந்த மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது வருட நினைவு தின நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

அந்த வகையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் நினைவுப் பேருரையும், புத்தக வெளியீடு நிகழ்வும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் ஏற்பாட்டில் நேற்று 25.08.2025 புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய அதிபர் ஜனாப் S.M. ஹுஸைமத் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், புத்தி ஜீவிகள் மற்றும் குடும்பத்தார்கள் கலந்தகொண்டமை விஷேட அம்சமாகும்.

சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் பொருளாளர் ஜனாப் ஏ.ஜி. அனீஸ் (Bsc.Agri) அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.

மேலும் இஸ்லாமிய கற்கை அறபு மொழிப் பீட, தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களினால் நூல் அறிமுக உரையும், நினைவுப் பேருரையும் மிகவும் உணர்வுபூர்வமாக நிகழ்த்தப்பட்டது.

கிழக்கு மற்றும் தென் கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பங்களிப்பு அளப்பெரியது என நினைவு கூறிய பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன், வடக்கில் ஏற்பட்ட யுத்தம் மற்றும் முஸ்லிம்களின் இடம்பெயர்வு குறித்து அதீத அக்கறையுடன் செயற்பட்ட மிக முக்கியமானவர் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்கள் எனவும் எடுத்துரைத்தார்.

வடக்கு முஸ்லிம்களின் இடம்பெயர்வு மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பில் அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களுடன் பலதரப்பட்ட கலந்துரையாடல்களை நடத்தி, சர்வதேசம் வரை இவ்விடயங்களை கொண்டுசென்ற மகான் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் என பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் தனது உரையில் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் புதல்வி சட்டத்தரணி எப்.சப்னா ஹஸ்புல்லாஹ் அவர்களினால் ஏற்புரை நிகழ்த்தப்பட்டதுடன், நூல் வெளியீடு நிகழ்வும் இடம்பெற்றது.

நூலின் முதற்பிரதியை ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தரும், புத்தளம் எருக்கலம்பிட்டி பள்ளிவாசல் நிர்வாக சபையின் முன்னாள் உறுப்பினருமான ஜனாப் ரஹ்மத்துல்லாஹ் (GS) அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

மேலும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் செயலாளர் ஜனாப் எஸ்.எச்.எம். றிஸ்னி அவர்களினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டதுடன், தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன், மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பாரியாருக்கும் நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில், பேராசிரியர்கள், கல்விமான்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், பாடசாலைச் சமூகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் குடும்பத்தார்கள் என பலரும் கலந்து சிறப்பித்ததுடன், ஈ நியூஸ் பெஸ்ட் ஊடக நிறுவனம் ஊடக அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரணிலுக்காக ஒன்று திரண்ட அரசியல் தலைவர்கள்!

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விசாரணை கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது, நாட்டின் அடிப்படை ஜனநாயக நிறுவனங்களின் வலிமை குறித்து கடுமையான கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் விளைவுகள் ஒரு தனிநபரின் அல்லது எந்தவொரு அரசியல் கட்சிகளின் தலைவிதியையும் விட, சமூகத்தின் உரிமைகளுக்கான பிரச்சினைகளை தோற்றிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் தலைவர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைகளை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது மற்றும் விளக்கமறியலை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து நடத்திய விசேட ஊடக சந்திப்பில் பங்கேற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரல முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் அறிக்கையை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

போர்த்துக்கல் அணி சாம்பியன் ஆனது!

0

‘நேஷன்ஸ் லீக்’ கால்பந்தில் போர்ச்சுகல் அணி சாம்பியன் ஆனது. பைனலில் ‘பெனால்டி ஷூட் அவுட்டில்’ 5-3 என ஸ்பெயினை வீழ்த்தியது.

ஐரோப்பிய கால்பந்து அணிகளுக்காக ‘நேஷன்ஸ் லீக்’ தொடர் நடத்தப்படுகிறது. மொத்தம் 54 அணிகள் பங்கேற்றன. நேற்று ஜெர்மனியின் முனிக் நகரில் நடந்த பைனலில், போர்ச்சுகல், நடப்பு யூரோ சாம்பியன் ஸ்பெயின் பலப்பரீட்சை நடத்தின. போட்டியின் 21வது நிமிடம் ஜுபிமெண்டி (ஸ்பெயின்), 26வது நிமிடம் மெண்டிஸ் (போர்ச்சுகல்) தலா ஒரு கோல் அடித்தனர். 45வது நிமிடம் மைக்கேல் ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் ஸ்பெயின் அணி 2-1 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் 61 வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். போர்ச்சுகல் அணிக்காக இவர் அடித்த 138வது கோல் இது. 90 நிமிட முடிவில் போட்டி 2-2 என சமன் ஆனது. அடுத்து நடந்த கூடுதல் நேரத்திலும் (30 நிமிடம்) இரு அணியும் கோல் அடிக்கவில்லை.

இதையடுத்து வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி ‘பெனால்டி ஷூட் அவுட்டுக்கு’ சென்றது. இரு அணிக்கும் தலா 5 வாய்ப்புகள் தரப்பட்டன. காயம் காரணமாக 88 வது நிமிடம் வெளியேறிய ரொனால்டோ, இதில் பங்கேற்கவில்லை.

முதல் 3 வாய்ப்பில் போர்ச்சுகலின் ராமோஸ், விடின்ஹா, பெர்ணான்டஸ் கோல் அடித்தனர். மறுபக்கம் ஸ்பெயின் தரப்பில் மெரினோ, பயேனா, இஸ்கோ கோல் அடிக்க 3-3 என ஆனது.

4வது வாய்ப்பில் மெண்டெஸ் (போர்ச்சுகல்) கோல் அடிக்க, ஸ்பெயினின் மோராட்டோ அடித்த பந்தை கோல் கீப்பர் டீகோ கோஸ்டா தடுத்து அசத்தினார்.

5வது வாய்ப்பில் நெவேஸ் கோல் அடித்தார். இதையடுத்து 5-3 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் ‘திரில்’ வெற்றி பெற்றது. 2019க்குப் பின் இத்தொடரில் மீண்டும் சாம்பியன் ஆனது.

தில்லையடியில் சிக்கிய கடத்தல் பீடி இலைகள்!

0

புத்தளத்தில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளுடன் வேன் ஒன்றும் பறிமுதல்!

இலங்கை கடற்படை, பொலிஸாருடன் இணைந்து, புத்தளம், தில்லையடி பகுதியில் 2025 ஜூன் 05 இரவு வேளையில் நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகள் கொண்ட ஒரு வேன் கைப்பற்றப்பட்டது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிறுவனம், புத்தளம் பொலிஸாருடன் இணைந்து தில்லையடி பகுதியில் நடத்திய இந்த சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்று சோதனை செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகளானது வாகனத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் வேன் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களால் ஆபத்தா?

விண்வெளியில் பூமியை சுற்றி வந்துக்கொண்டிருக்கும் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கொள்களை சீனா நினைத்தால் வெறும் 12 மணி நேரத்தில் தாக்கி அழித்துவிட முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் என்கிற செய்தி ஊடகத்தில் இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது தற்போது சீனா 99 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. இவை அனைத்தும் நான்ஜிங் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஆஸ்ட்ரோனாட்டிக்ஸ் பல்கலைக்கழகத்தின் விண்வெளிக் கட்டுப்பாட்டுத் துறையின் இயக்குநர் வூ யுன்ஹுவா தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இவை அனைத்தும் எலான் மஸ்கின் 1400 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை வெறும் 12 மணி நேரத்தில் காலி செய்துவிடும். சீன செயற்கைக்கோளில் லேசர், நுண் அலைகளை உருவாக்கும் கருவி, உளவு கருவிகள் பொருத்தப்பட்டிருக்கலாம். ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் வெறுமென நெட்வொர்க் கொடுக்க மட்டுமே பயன்படுத்தப்படுவதில்லை. தவிர, ராணுவ நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது என சீனா குற்றம்சாட்டி வருகிறது.

அதாவது, உக்ரைன்-ரஷ்யா போரில், உக்ரைன் படைகளுக்கு தகவல்கள் கொடுக்கவும், ரஷ்ய எல்லையை துல்லியமாக கண்காணிக்கவும் இந்த செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த 2022ம் ஆண்டு ரஷ்ய போரின்போது அப்போதைய உக்ரைனின் துணைப் பிரதமரான மைக்கைலோ ஃபெடோரோவ், “ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் சேவையை உடனடியாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த மஸ்க், “உடனடியாக சேவை வழங்கப்படும்” என்று கூறியிருந்தார்.

உக்ரைன் போருடன் மட்டுமே ஸ்டார்லிங்க் நிற்காது, நாளை சீனாவுக்கும்-தைவானுக்கும் பஞ்சாயது ஏற்பட்டால் அப்போதும், தைவானுக்கு சப்போர்ட் செய்ய ஸ்டார்லிங்க் வரும். எனவே இந்த கூட்டு நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்க சீனா இந்த புதிய செயற்கைக்கோள்களை உருவாக்கியிருக்கிறது.

கடந்த 2023ம் ஆண்டு இதற்கான பணிகளை சீனா தொடங்கியது. இந்த திட்டத்திற்கு ‘கியான்ஃபான் மெகா-விண்மீன் திட்டம்’ (Qianfan mega-constellation project) என்றும் பெயரிட்டிருந்தது. நோக்கம் உலகம் முழுவதும் இணைய தொடர்பை வழங்குவதாகும். இதற்காக மொத்தம் 15,000 சிறிய ரக செயற்கைக்கோள்களை ஏவ சீனா முடிவெடுத்தது. இதன் முதல் தொகுப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏவப்பட்டது. இதில் 18 செயற்கைக்கோள்கள் இருந்தன.

ஒவ்வொன்றும் சுமார் 300 கி.கி எடையில் இருந்தது. இவை பூமியிலிருந்து 800 கி.மீ உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டது. இதேபோன்று 2024 டிசம்பரில் அடுத்து இரண்டு தொகுதி ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. தற்போது மொத்தம் 99 செயற்கைக்கோள்கள் விண்வெளியில் இருக்கின்றன. 15,000 செயற்கைக்கோள்களை 3 கட்டங்களாக ஏவ இருக்கிறது. முதல் கட்டத்தில் 1,296 செயற்கைக்கோள்கள் ஏவப்படும். இதில் 648 செயற்கைக்கோள்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஏவப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் கன்னி உரை

0

அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்புவோம்

தேசியத்துவத்துடனும் ஐக்கியத்துடனும் ஒன்றுபட்டு நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க இன்று (23) காலை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

பதவிப் பிரமாணத்தின் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய முழுமையான உரை:

மக்களால் ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது நமது நாட்டின் ஜனநாயகத்திலிருக்கும் மிக முக்கியமான அம்சமாகும். தேர்தலில் வாக்களித்தல் மற்றும் ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதோடு ஜனநாயகம் நிறைவு பெறுவதில்லை. இது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சம் என்றாலும், நம் நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்த, கட்டமைப்புகளின் வலிமையும், சட்டங்களை வலுப்படுத்துவதும் அவசியம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனவே, எனது பதவிக்காலத்தில் இந்த நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.

அத்துடன், இந்த நாட்டில் ஜனநாயக முறையில் அதிகாரப் பரிமாற்றம் நடந்த வரலாறும் உண்டு. தேர்தலில் நிகழும் அதிகாரப் பரிமாற்றத்தை எந்தத் தலைவரும் நிராகரித்ததில்லை. அதற்கமைய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த மக்கள்ஆணையை சுமூகமாக ஏற்றுக்கொண்டதுடன், ஜனநாயக ரீதியில் அதிகாரத்தை கைமாற்றுவதற்கான அவரின் அர்ப்பணிப்பிற்கும் முன்னுதாரணத்திற்கும் நன்றி தெரிவிக்கிறேன். மேலும் எமக்கு கிடைப்பது மிகவும் சவால் நிறைந்த நாடு என்பதை நன்கு புரிந்து கொண்டிருக்கிறோம். நமது அரசியலில் தூய்மையான, மக்களால் எதிர்பார்க்கப்படும் சிறந்த அரசியல் கலாசாரத்திற்காக அவசியம் காணப்படுகிறது.அதற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

நம் நாட்டின் அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு நல்லெண்ணம் இல்லை. எனவே, அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் மீது மக்கள் மரியாதை மற்றும் நம்பிக்கையை மீட்டெடுக்க எங்கள் தரப்பிலிருந்து முடிந்த அனைத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.

மேலும், நமக்கு முன் இருக்கும் இந்த ஆழமான நெருக்கடியை வெறும் அரசோ, வெறும் அரசியல் கட்சியோ அல்லது ஒரு தனி நபரோ மட்டும் தீர்க்க முடியும் என்று நாங்கள் நம்பவில்லை. ஏனென்றால், நான் முன்பு கூறியது போல், நான் ஒரு மாயாஜால வித்தைக்காரனல்ல. நான் மந்திரவாதியும் இல்லை. நான் இந்த நாட்டின் சாதாரண குடிமகன். எம்மிடம் திறமைகள் உள்ளன. இயலாமைகளும் உள்ளன. தெரிந்த விடயங்களும் உள்ளன அதேபோன்று, தெரியாத விடயங்களும் உள்ளன.

ஆனால் திறமைகளைப் பயன்படுத்தி தெரியாதவற்றை சேகரித்துக்கொண்டு சிறந்த முடிவுகளை எடுத்து இந்த நாட்டை வழிநடத்துவதே எனது தலையாய பணியாகும். அந்த கூட்டுப் பங்களிப்பின் ஒரு அங்கமாக மாறுவது எனது பொறுப்பாகும். மேலும், இந்த நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதில் பொது மக்கள் மற்றும் அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் பாரிய பொறுப்பு உள்ளது. அந்தப் பொறுப்பை நிறைவேற்ற அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்.

ஆனால், நாட்டின் ஜனாதிபதி என்ற முறையில், இந்தப் பணியை முன்னின்று நடத்துவதில் எனக்கு முதன்மையான மற்றும் மிக முக்கியமான பொறுப்பு இருப்பதை நான் ஏற்றுக்கொண்டேன். எனவே, இந்தச் சவாலை வெற்றிகொள்வதற்காக எனக்குக் வழங்கப்பட்டுள்ள பணியை நான் உரிய முறையில் நிறைவேற்றுவேன் என்பதை செயற்பாடு மற்றும் நடைமுறை மூலம் எல்லா சந்தர்ப்பங்களிலும் இந்த நாட்டின் பிரஜைகளுக்கு வெளிப்படுத்த நான் தயாராக இருக்கிறேன்.

மேலும் நமது நாட்டுக்கு சர்வதேச ஆதரவு தேவை. எனவே, உலகில் எத்தகைய அதிகாரப் பிளவுகள் இருந்தாலும், ஒவ்வொரு நாட்டையும் எமக்கு மிகவும் சாதகமாக கையாள்வதே நமது எதிர்பார்ப்பாகும். நாம் உலகில் தனிமைப்படுத்தப்பட்ட நாடு அல்ல. உலகத்துடன் கூட்டாக முன்னேற வேண்டிய ஒரு நாடாகும். அது தொடர்பில் தேவையான முடிவுகளை எடுக்க நாங்கள் சிறிதும் தயங்குவதில்லை.

மேலும், நம் நாட்டைக் கட்டியெழுப்புவதில் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு பெரும் பங்கு உள்ளது. எனவே, நாட்டை மேலும் வலுவாகக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு அவர்கள் ஆதரவளிப்பார்கள் என நான் கருதுகின்றேன்.

நம் நாட்டின் ஜனநாயகத்தின் ஊடாக நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். அதற்காக மக்கள் எனக்கு வாக்களித்தனர்.

மேலும் எனக்கு வழங்கப்படாத வாக்குகளும் உள்ளன. எனவே, எங்களின் வெற்றியின் உள்ளடக்கம் மற்றும் அளவு குறித்து எங்களுக்கு நல்ல புரிதல் உள்ளது. எனவே, எங்களுக்கு ஆதரவு வழங்காத மற்றும் எங்களை நம்பாத பிரஜைகளின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெறுவதே எனது நிர்வாகத்தின் போது எனக்கு வழங்கப்பட்டுள்ள பணியாகும். அந்தப் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

எதிர்காலத்தில் இவை அனைத்தையும் நீங்கள் நடைமுறையில் கண்டுகொள்ள முடியும். அதற்கு அனைத்து மக்களின் ஆதரவையும் எதிர்பார்க்கின்றேன்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தேர்தலில் இவ்வாறுதான் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்

0

அதிகாரிகள் மற்றும் பிற தேவைகள் முடிந்த பிறகு, மாலை 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (19) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி பிற்பகல் 4.15 மணிளவில் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“எதிர்வரும் 21ம் திகதி வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள் பெறப்பட்டதும், அதிகாரிகள் மற்றும் இதர தேவைகள் முடிந்ததும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் இரவு 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

மாலை 4.15 மணிளவில் தபால் மூல வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

அத்துடன் மாவட்ட அளவில் ஒவ்வொரு வட்டாரத்திலும் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெறும்.

வாக்கு எண்ணிக்கையின் முடிவில் முடிவுகள் கிடைத்தவுடன் ஊடகங்களுக்கு வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையே முதலில் எண்ணப்படும்.

அந்தக் கணக்கெடுப்பின் பின்னர் (மாவட்ட அளவில் எண்ணும் பணி) முதலில் வாக்குப்பெட்டிகளில் உள்ள வாக்குகள் எண்ணப்படும்.

அதன் பிறகு, ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு, தொகுதி மற்றும் மாவட்ட அளவில் அது தயாரிக்கப்படுகிறது.

தேர்தல்கள் செயலகமே ஒட்டுமொத்த முடிவுகளைக் கணக்கிடும்.

எந்த வேட்பாளரும் 50 வீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்றுள்ளாரா என சரிபார்க்கப்படும்.

அப்படியானால், அந்த நேரத்தில் வாக்கு எண்ணும் பணிகள் நிறுத்தப்படும்.

அப்போது ஜனாதிபதியை நாங்கள் அறிவிப்போம்.

எந்த வேட்பாளருக்கும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் கிடைக்காவிடின், விருப்பு வாக்கு எண்ணிக்கைக்கு செல்ல வேண்டும்.

அங்கு, அதிக வாக்குகள் பெற்ற இரண்டு வேட்பாளர்கள் போட்டியில் வைத்து விட்டு  மீதமுள்ள 36 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து நீக்கப்படுவர்” என்றார்.

புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக மாறும்

0

புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வாத்தியாசலையாக மாற்றம் பெரும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று புத்தளத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ அலிசப்ரி ரஹீம் மற்றும் சிந்தக்க மாயாதுன்ன தலைமையில் புத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்திலே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

புத்தளம் மக்களின் நீண்ட நாள் தேவையாக இருந்து வருகின்ற புத்தளம் தல வைத்தியசாலையை தரமுயர்த்துவது தொடர்பாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ அலிசப்ரி ரஹீம் அவர்களினால் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோலுக்கிணங்க குறித்த வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.

மேலும் புத்தளத்தில் மீன் பிடி தொழிலை முன்னேற்றும் நோக்கத்தில் மீன் பிடி துறைமுகம் ஒன்றை அமைக்கும் யோசனையும் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டதுடன், அதற்கான முன்னெடுப்புகளும் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்டமை புத்தளம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நாட்டில் நிரந்தர பொருளாதார அபிவிருத்தியை நிலை நாட்ட தாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டை பொருளாதார அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவதே தனது பிரதான நோக்கம் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மொட்டுக்கட்சிக்கு எதிராக நிற்கும் முக்கிய அமைச்சர்கள்

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக மொட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளரை இந்த வாரம் அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்காதிருக்கவும், மொட்டு சின்னத்தில் தனியாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமக்கு ஆதரவு வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பியிருந்த கடிதம் நேற்றைய தினம் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தினால் அரசியல் குழுவில் முன்வைக்கப்பட்டது.

எவ்வாறாயினும் அந்த கடிதத்தை நிராகரிக்க அரசியல் குழுக் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுவில் 82 பேர் அங்கம் வகிப்பதுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் 72 பேர் பங்கேற்றனர்.

இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த 11 பேர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

மஹிந்தானந்த அலுத்கமகே, பந்துல குணவர்தன, பிரதீப் உந்துகொட, கோகிலா ஹர்ஷனி குணவர்தன, சஹன் பிரதீப், ரமேஸ் பத்திரன, கஞ்சன விஜேசேகர, பிரசன்ன ரணதுங்க, கனக ஹேரத், மொஹான் பிரியதர்ஷன ஆகியோர் கட்சியின் சார்பில் தனியான வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

அத்துடன் பிறிதொரு கட்சியின் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்கும் உறுப்பினர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் யோசனைக்கு 6 பேர் எதிராக வாக்களித்துள்ளனர்.

எவ்வாறாயினும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் எனக் கூறப்பட்ட தம்மிக பெரேரா தொடர்பில் அரசியல் குழுக் கூட்டத்தின்போது எந்தவித கருத்துக்களும் பரிமாற்றிக் கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவளிக்காத 11 பேர் உள்ளிட்ட தரப்பினர் நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தனவின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சைனப் ஆரம்பப் பாடசாலைக்கு ஆளுநர் வருகை!

0

புத்தளம் சைனப் ஆரம்ப பாடசாலையின் முப்பெரும் விழா பாடசாலை அதிபர் யஹியா தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து புத்தளம் ஜெய்னப் பாடசாலைக்கு 22 லட்சம் ரூபா பெறுமதியான நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு, சிறுவர் விளையாட்டு நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தல் மற்றும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் செயற்திட்டத்தின் கீழ் BCMH நிறுவனத்தினால் கற்றல் உபகரணம் வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் கடந்த செவ்வாய்க்கிழமை (16) வெகு விமர்சையாக இடம்பெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதியாக வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், விசேட அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மற்றும் கௌரவ அதிதியாக புத்தளம் வலயக்கல்விப் பணிப்பாளர் அர்ஜுன ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆரம்ப பாடசாலையின் முக்கியத்துவம் மற்றும் அறிவார்ந்த சமூகத்தை கட்டியெழுப்ப ஆரம்ப பாடசாலை ஆற்றிவருகின்ற அர்ப்பணிப்பு குறித்து விரிவாக பேசிய வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், புத்தளம் மாவட்ட பாடசாலைகளின் துரித வளர்ச்சி பற்றியும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

மேலும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் செயற்திட்டத்திற்கு வடமேல் மாகாண ஆளுநர் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் ஜவ்ஷி ஜமால்தின், இணைப்புச் செயலாளர் எச். அமீர் அலி ஆசிரியர், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் உட்பட உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் அயல் பாடசாலையின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு
நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு

ஹிருணிகாவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறை

0

கடத்தல் வழக்கில் முன்னாள் எம்.பி ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்தத் தீர்ப்பை அறிவித்தார்.

தெமட்டகொட பகுதியிலுள்ள கடை ஒன்றில் பணிபுரிந்த அமில பிரியந்த அமரசிங்க எனும் இளைஞர் ஒருவரை 2015 டிசம்பர் 21ஆம் திகதி ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு சொந்தமான டிபெண்டர் வாகனத்தில் கடத்திய வழக்கு விசாரணை முடிவில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

29 குற்றங்கள் தொடர்பில் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் 8 பேரும் குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில், அச்சம்பத்திற்கு உதவி, ஒத்தாசை புரிந்ததாக ஹிருணிகா மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்திருந்தார்.

அத்தோடு, சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவின் ஆதரவாளர்கள் 8 பேர் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைதான ஐந்தாம் சந்தேகநபரின் மகள் அளித்துள்ள வாக்குமூலத்தில், தமது தாயாருடன் தொடர்பு பேணிய நபர் ஒருவரை தாம் காண்பித்ததாகவும், அவரை தமது தந்தையும் அவருடன் சென்றவர்களும் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு ஹிருணிகாவிடம் அழைத்துச் சென்றதாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

ஓவியப்போட்டியில் எருக்கலம்பிட்டி மாணவன் முதலாமிடம்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட வட மாகாண மானவர்களுக்கிடையிலான சித்திரப்போட்டியில் மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்றார்.

வீதி விபத்துக்கள் இல்லாத நாளைக்கான பாடசாலையிலிருந்து அணிவக்குப்போம் எனும் தொனிப்பொருளில் கடந்த வியாழக்கிழமை (13.06.2024) அன்று நடாத்தப்பட்ட வட மாகாண மாணவர்களுக்கிடையிலான குறித்த சித்திரப்போட்டியில் சுமார் 2600 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

சித்திரப்போட்டியில் பங்குபற்றிய 2600 மாணவர்களில் 250 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு நேற்றைய தினம் (15.06.2024) அவர்களுக்கான போட்டி இடம்பெற்றது.

நடைபெற்று முடிந்த இறுதிச் சுற்றுப்போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்று பெருமதிமிக்க பரிசில்களை பெற்றுக்கொண்டார்.

முதலாம் இடம் பெற்ற முஹம்மது ஹுசைன் என்ற மாணவனுக்கு சான்றிதல், துவிச்சக்கரவண்டி மற்றும் 8500/- ரூபா பெறுமதியான வவுச்சரும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இதேவேளை குறித்த போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய இல்முதீன் முஹம்மது ஹஸ்பான் 7 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய மற்றொரு மாணவரான முஹம்மது சம்ஹான் 8 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

பாரிய சாவல்களுக்கு மத்தியில் தனி ஒரு மனிதனாக இம் மாணாவர்களை ஊக்கப்படுத்தி, தயார்ப்படுத்தி போட்டியில் பங்குபெறச் செய்து வெற்றிபெறச் செய்த எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியின் சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் அவர்களின் இம் முயற்சிக்கு, பாடசாலை சமூகம் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் நன்றி தெரிவித்தனர்.

தமக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வந்து தேசிய அளவில் இடம்பெறும் போட்டிகளில் மாணவர்களை பங்குபெறச் செய்வதே தனது இலக்கு என சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் எமது ஊடகத்திற்கு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை இராஜினாமா

0

நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்துள்ளனர்.

சாந்த நிரியல்ல உட்பட 15 பேர் கொண்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரின் அறிவித்தலுக்கு அமைய இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி திங்கட்கிழமை புதிய பணிப்பாளர் சபை நியமிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ “அத தெரண” விற்கு தெரிவித்தார்.

புத்தளம் எருக்கலம்பிட்டியில் கடும் வெள்ளம்

0

புத்தளம் பகுதியில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக புத்தளம் பகுதி முழுதும் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.

புத்தளம், தில்லையடி, பாலாவி, புத்தளம் எருக்கலம்பிட்டி, ஹிதாயத் நகர்,  மதுரங்குளி மற்றும் ஏனைய பல கிராமங்களும் வெள்ளித்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமமும் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 1500 குடும்பங்கள் இங்கு வாழ்ந்துவருவதுடன், அனைத்து வீடுகளும் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நூற்றிற்கும் அதிகமான வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் ஐநூற்றுக்கும் அதிகமான வீடுகள் பகுதி அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8ஆம் திகதி ஏற்பட்ட மழை வெள்ளித்தினால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் மற்றும் பாடசாலைகளில் தற்காலிகமாக  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு தினங்களாக இவர்களுக்கான சமைத்த உணவுகள் மூன்று வேலைகளிலும் ஊர் தனவந்தர்களின் உதவியுடனும், பள்ளிவாசல் நிர்வாக சபையின் வழிகாட்டலுடனும் வழங்கப்பட்டு வருவதுடன், ஊர் மக்களுக்கும் உணவு விநியோகங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

இவர்களுக்கான நிவாரண உதவிகள் இதுவரை அரசாங்கத்தினால் வழங்கப்படாத போதிலும், ஊர் மக்களின் பங்களிப்புடன் மாத்திரமே பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு விநியோகங்கள் இதுவரை  வழங்கப்பட்டு வருகின்றது.

புத்தளம் பொத்துவில்லு பகுதியில் உள்ள குளம் மழை நீரினால்  பெருக்கெடுத்துள்ளதால் குறித்த குளத்து நீர் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமத்திற்குள் தொடர்ந்தும் மூன்றாவது நாளாக ஊடறுத்து செல்வதால் வீடுகள் தொடர்ந்தும் நீருள் மூழ்கியுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்தின் நிவாரண உதவிக்காக பல மக்கள் தொடர்ந்தும் எதிர்பார்த்து காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

டித்வா சூறாவளியால் வனாத்தவில்லு பிரதேச செயலக பிரிவில் பேரழிவு!

0

அண்மையில் ஏற்பட்ட டித்வா சூறாவளி மற்றும் வெள்ள அனர்த்தத்தினால் வனாத்தவில்லு பிரதேசத்தில் உள்ள வில்லு அமைப்பு (சிறிய குளங்கள்) கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக வனாத்தவில்லு பிரதேச செயலாளர் பிரபாகரன் தெரிவித்தார்.

குறித்த பிரதேசத்தில் உள்ள, ஏழு வில்லு அமைப்புகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதோடு, சின்ன நாகவில்லு பகுதியில் சுமார் 76 ஏக்கர் நிலப்பரப்பு நீரில் மூழ்கியுள்ளதாக பிரதேச செயலாளர் இன்று ஈ நியூஸ் பெஸ்ட் ஊடகத்திற்கு தெரிவித்தார்.

வனாத்தவில்லு பிரதேசத்திற்கு இன்று மேற்கொண்ட விசேட கள ஆய்வு நடவடிக்கையில் பங்குகொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஈ நியூஸ் பெஸ்ட் ஊடகத்திற்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;

சின்ன நாகவில்லு பகுதியை சுற்றியுள்ள பகுதிகள் மேட்டு நிலங்களாக இருப்பதால், தேங்கியுள்ள நீரை வெளியேற்றுவதில் பிரதேச மட்டத்தில் எடுக்கப்பட்ட முயற்சிகள் சவாலாக அமைந்துள்ளன.

வனாத்துவில்லு, சுவர்ணமாலி வில்லுவ, சீயகலுவ மற்றும் ஜூல் வில்லுவ ஆகிய பகுதிகளில் உள்ள வில்லு அமைப்புகளுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. விவசாய நிலங்களைப் பொறுத்தமட்டில், சுமார் 230 ஏக்கர் தென்னை காணிகளும், அதே அளவிலான 230 ஏக்கர் முந்திரி காணிகளும் தற்போது நீரில் மூழ்கியுள்ளன.

இந்த விடயம் தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) மற்றும் மாவட்டச் செயலாளர் ஊடாகத் தகவல் வழங்கப்பட்டு, இன்று பல திணைக்களங்களின் உயர்மட்ட அதிகாரிகளின் பங்குபற்றலுடன் விசேட கள ஆய்வு நடத்தப்பட்டது.

குறித்த ஆய்வு நடவடிக்கையில் மகாவலி அதிகாரசபை, காணி மீட்புத் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், விவசாய சேவைகள் திணைக்களம், பிரதேச செயலகம் மற்றும் பிரதேச செயலாளர், மத்திய மற்றும் மாகாண சுற்றாடல் அதிகாரசபைகள், பிரதேச சபை செயலாளர் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், விவசாயத் திணைக்கள அதிகாரிகள் பங்குகொண்டனர்.

இதன் போது, தேங்கியுள்ள நீரை வெளியேற்றுவதற்குத் தேவையான தற்காலிக தீர்வுகளை உடனடியாக மேற்கொள்வது குறித்தும், எதிர்காலத்திற்காக நீண்டகால தீர்வுகளை நடைமுறைப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக வனாத்தவில்லு பிரதேச செயலாளர் பிரபாகரன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் நகர சபை உறுப்பினர் ராஜன் ஐயாவின் பதவி பறிப்பு!

0

கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தினார் எனும் குற்றச்சாட்டில் ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சியின் மன்னார் நகர சபை உறுப்பினர் ராஜன் ஐயா, அதன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சி சார்பாக ஐந்து சபைகளுக்காக மொத்தமாக சுமார் 10 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த நிலையில், மன்னார் நகர சபை உறுப்பினர் ராஜன் ஐயா, இவ்வாறு அதன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

மன்னார் நகர சபைக்கு நியமிக்கப்பட்ட கௌரவ ராஜன் ஐயா, சபையின் முதல் அமர்வில் ஊடகவியலாளர்களுக்கும் நகர சபை தவிசாளருக்கும் வழங்கிய செவ்வியின் (Interview) மூலம் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தியதாக, கட்சித் தலைமையால் அவரிடம் விளக்கம் கோரப்பட்டது.

அவர் முறையான விளக்கம் அளிக்காத காரணத்தால், அவரது கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்ட்டுள்ளதாக ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சி அறிவித்துள்ளது.

இதனை எதிர்த்து ராஜன் ஐயா நீதிமன்றத்தை நாடிய நிலையில், சுமார் மூன்று மாத கால விசாரணைக்குப் பின் மன்னார் மாவட்ட நீதிமன்றம் அவருக்கு எதிராக தீர்ப்பளித்தது. இம்மாதம் 12ஆம் திகதி வழங்கப்பட்ட அந்தத் தீர்ப்பின்படி, அவர் கட்சி உறுப்புரிமையை இழந்துவிட்டார் என்பது உறுதி செய்யப்பட்டது.

நீதிமன்றத் தீர்ப்பின்படி அவர் கட்சி உறுப்புரிமையை இழந்தமையால், அவர் தனது மன்னார் நகர சபை உறுப்பினர் பதவியையும் இழந்துள்ளதுடன், இது தொடர்பில் இன்று 21/01/2026 வர்த்தமானியில் (Gazette) அதிகாரப்பூர்வமாக கட்சியின் உறுப்புரிமையை இழந்துள்ளதாக பிரசுரிக்கப்பட்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போதைப் பாவனை ஓட்டுநர்கள் இனி தப்பிக்க வழியில்லை!

0

பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, போதைப்பொருள் பயன்படுத்திய ஓட்டுநர்கள் மற்றும் பேருந்து நடத்துனர்களைக் கண்டறியும் நடமாடும் ஆய்வக சேவை ஒன்று 2026 ஜனவரி 21 அன்று கொழும்பு பாஸ்டியன் மாவத்தையில் உள்ள தனியார் பேருந்து முனையத்தில் உத்தியோகபூர்வமாகத் தொடங்கப்பட்டது.

இந்த நடமாடும் ஆய்வகம் கடந்த 14 நாட்களில் உட்கொள்ளப்பட்ட நான்கு வகையான போதைப்பொருட்களை கண்டறியும் திறன் கொண்டது, மேலும் இதன் முடிவுகள் சில நிமிடங்களிலேயே வெளியாகும்.

போதைப்பொருள் உட்கொண்டது உறுதி செய்யப்பட்ட ஓட்டுநர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதுடன், அவர்களின் ஓட்டுநர் உரிமத்தை இடைநீக்கம் செய்தல் அல்லது ரத்து செய்தல் போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

முதல் நாளில் சோதனை செய்யப்பட்ட 59 ஓட்டுநர்களில், 10 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது கண்டறியப்பட்டது. இவர்களில் எட்டு பேர் கஞ்சாவையும், இருவர் ஹெராயின் மற்றும் ஐஸ் (ice) போதைப்பொருட்களையும் பயன்படுத்தியிருந்தனர்.

இந்தத் திட்டம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC), தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் (NITM) மற்றும் இலங்கை காவல்துறை ஆகியவற்றால் இணைந்து முன்னெடுக்கப்படுகிறது. இத்தகைய சோதனைகளை எதிர்காலத்தில் நாடு முழுவதும் விரிவுபடுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இந்தத் தொடக்க விழாவில் போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் டி. பி. ஜே. சேனாதீர, தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் யு. சி. பி. பெரேரா மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் நிலான் மிராண்டா உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

40 ஆண்டுகளின் பின்னர் மீளுயிர் பெறும் பரந்தன் தொழிற்சாலை!

1954 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பரந்தன் இரசாயன தொழிற்சாலை, போர்ச் சூழல் காரணமாக 1985 ஆம் ஆண்டு மூடப்பட்டு, தற்போது, சுமார் 40 வருடங்களின் பின்னர் இதனை மீண்டும் இயக்குவதற்கான அடிக்கல் இன்று ஜனவரி 21 அன்று நடப்பட்டது,.

அரசாங்கம் முதற்கட்டமாக 500 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதுடன், அடுத்த 9 மாதங்களில் அடிப்படை உட்கட்டுமானங்கள் அமைக்கப்படும் என்றும், அரச – தனியார் கூட்டுப் பங்காண்மை (PPP) மூலம் மொத்தம் 6.3 பில்லியன் ரூபா முதலீட்டில் 30 மாதங்களில் தொழிற்சாலை முழுமையாக இயங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தொழிற்சாலை முன்பு குளோரின், கொஸ்டிக் சோடா மற்றும் ஹைதரோ குளோரிக் அமிலம் போன்றவற்றை உற்பத்தி செய்தது.

கடந்த 40 வருடங்களாக இவை இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், இனி உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டு, உபரி உற்பத்தி மூலம் ஏற்றுமதி செய்து டொலர் உழைக்கும் மையமாக பரந்தன் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வடக்கில் அமையவுள்ள மூன்று பாரிய முதலீட்டு வலயங்களில் ஒன்று பரந்தனில் அமையவுள்ளமையால், கிளிநொச்சி மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கு பல்லாயிரக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளுக்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.

புலம்பெயர்ந்து வாழும் மக்கள் நுகர்வுத் தேவைகளுக்குப் பணம் அனுப்புவதை விட, இவ்வாறான நிலையான உற்பத்திகளில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.

சர்வமதத் தலைவர்களின் ஆசியுடன் நடைபெற்ற இந்த நிகழ்வில், முன்னாள் பணியாளர்களால் அடிக்கல் நாட்டப்பட்டமை ஒரு உணர்வுபூர்வமான விடயமாக அமைந்தது. இதில் அமைச்சர்களான சுனில் ஹந்துன்நெத்தி, இ.சந்திரசேகர் மற்றும் பல முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

கடைசி எச்சரிக்கை! பங்களாதேஷ் அணிக்கு 24 மணிநேர கெடு!

0

டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக பங்களாதேஷ் அணி இந்தியாவுக்குச் செல்லாவிட்டால், அவர்களுக்குப் பதிலாக வேறு ஒரு அணியைப் மாற்றீடு செய்ய சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று (21) தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பங்களாதேஷிற்குப் பதிலாக வேறு ஒரு நாடு சேர்க்கப்படும் என்பது குறித்து பங்களாதேஷ் அரசாங்கத்திற்கும் அந்த நாட்டு கிரிக்கெட் சபைக்கும் ஐசிசி அறிவித்துள்ளது. 

பங்களாதேஷ் அணி இந்தியாவுக்குச் செல்ல மறுப்பது குறித்து கலந்துரையாடுவதற்காக ஐசிசியின் முழுநேர உறுப்பு நாடுகளின் பணிப்பாளர்கள் பங்கேற்புடன் இன்று நடைபெற்ற தீர்மானமிக்க கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

இக்கூட்டத்தைத் தொடர்ந்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், மாற்று அணியொன்றைப் பெயரிடுவதற்குப் பெரும்பாலானோர் ஆதரவாக வாக்களித்துள்ளனர். 

எவ்வாறாயினும், இந்தியாவில் விளையாடுவது குறித்த தமது இறுதி நிலைப்பாட்டை அறிவிக்க பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கு ஐசிசி மேலும் ஒரு நாள் அவகாசம் வழங்கியுள்ளது. 

பங்களாதேஷ் தனது முடிவை மாற்றிக்கொள்ளாவிட்டால், ‘C’ குழுவில் பங்களாதேஷிற்குப் பதிலாக ஸ்கொட்லாந்து அணி விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தளம் மீன்பிடி அலுவலகத்திற்கு முன்னால் மீனவர்கள் போராட்டம்!

0

ஜூட் சமந்த

இன்று 21 அன்று, மா வலைகளை (beach seine) இழுப்பதற்காக டிராக்டர்களில் பொருத்தப்படும் வின்ச் இயந்திரங்களை (winch machines) அரசாங்கம் தடை செய்துள்ளதற்கு எதிராக, புத்தளம் உதவி மீன்பிடி பணிப்பாளர் அலுவலகத்திற்கு முன்னால் ஒரு எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் உடப்பு, கல்பிட்டி மற்றும் சின்னப்பாடுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மா வலை மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் கலந்துகொண்டனர்.

போராட்டத்திற்கு முன்னதாக, மீனவர்கள் புத்தளம் உதவி மீன்பிடி பணிப்பாளர் சரத் சந்திரநாயக்கவைச் சந்தித்து இது குறித்துக் கலந்துரையாடினர். பின்னர், மீனவர்களால் தயாரிக்கப்பட்ட கோரிக்கை கடிதம் ஒன்று அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டுள்ள இந்த வின்ச் இயந்திரங்களைப் பயன்படுத்தத் தான் அனுமதி வழங்க முடியாது என்றும், மீனவர்களின் கடிதத்தை மீன்பிடித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு (Director General) மேலதிக நடவடிக்கைக்காக அனுப்பி வைக்க மட்டுமே முடியும் என்றும் உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்.

மா வலைகளை இழுப்பதற்குத் தேவையான தொழிலாளர்களைக் கண்டறிவது தற்போது பெரும் சவாலாக இருப்பதாகவும், டிராக்டர்களில் பொருத்தப்படும் இந்த வின்ச் இயந்திரங்களைத் தடை செய்தால் மா வலை மீன்பிடித் தொழில் முழுமையாக அழிந்துவிடும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் கவலை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

கடலில் மூழ்கிய எலீஷா கப்பலால் ஏற்பட்ட சூழல் பாதிப்பு!

0

ஜூட் சமந்த

கடலில் மூழ்கிய எலீஷா (Elisha) கப்பலில் இருந்து இலங்கையின் மேற்கு கடற்கரைக்கு அடித்து வரப்பட்ட பிளாஸ்டிக் மணிகளை (Plastic beads) அகற்றும் வேலைத்திட்டத்தை சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகாரசபை (MEPA) ஆரம்பித்துள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் 25 ஆம் திகதி, இந்தியாவின் கேரளா மாநிலத்திற்கு அருகில் உள்ள இந்தியக் கடல் பகுதியில், லைபீரியக் கொடியின் கீழ் பயணித்த எலீஷா கப்பல் தீப்பிடித்து அழிந்தது. இந்த விபத்து நடந்து 10 நாட்களுக்குப் பிறகு, கப்பலில் இருந்த பொருட்கள் இலங்கையின் மேற்கு கடற்கரையை வந்தடைந்தன.

கடந்த ஆண்டு ஜூன் மாத முதல் வாரத்தில், சிலாபம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடற்கரைப் பகுதிகளில் பெருமளவிலான பிளாஸ்டிக் மணிகள் கண்டறியப்பட்டன. இவை எலீஷா கப்பலில் இருந்தவை என சூழலியலாளர்கள் உறுதிப்படுத்தியதோடு, இதனால் பாரிய சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தற்போது வென்னப்புவ – நைனாமடு முதல் கல்பிட்டி வரை அடையாளம் காணப்பட்ட கடற்கரைப் பகுதிகளில் இந்த மணிகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரிகளின் மேற்பார்வையில், அந்தந்தப் பகுதிகளில் இருந்து பணியமர்த்தப்பட்ட தொழிலாளர்கள், கடற்கரையில் உள்ள கற்கள் மற்றும் சிப்பிகளுக்கு இடையில் சிக்கியுள்ள பிளாஸ்டிக் மணிகளை மிகவும் அவதானமாகப் பிரித்தெடுத்து அகற்றி வருகின்றனர்.

இந்த வேலைத்திட்டத்தின் போது பிளாஸ்டிக் மணிகளுக்கு மேலதிகமாக, கடற்கரையில் காணப்படும் ஏனைய கழிவுகளும் அகற்றப்படுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தேசியப் பேரிடராக மாறிய கராச்சி தீ விபத்து!

கராச்சியில் உள்ள குல் பிளாசா வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு குழந்தை உட்பட பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது,

சிந்து மாகாண முதல்வர் முராத் அலி ஷா, 65 பேர் இன்னும் காணவில்லை என்று தெரிவித்துள்ள நிலையில், ஆளுநர் கம்ரான் டெசோரி இந்த எண்ணிக்கை 70-க்கும் மேல் இருக்கலாம் என்று கூறியுள்ளார். ஆளுநர் இதனை ஒரு “தேசியப் பேரிடர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மீட்புப் பணிகள் மந்தமாக நடப்பதாகத் தெரிவித்துள்ளனர். தனது குடும்ப உறுப்பினர்கள் ஆறு பேரைத் தேடிக்கொண்டிருக்கும் கோசர் பானோ, இனி அவர்களை உயிருடன் மீட்போம் என்ற நம்பிக்கை இல்லை என்றும், அவர்களின் உடல் பாகங்களையாவது அடையாளம் காண முடியுமா என்று ஏங்குவதாகவும் வேதனையுடன் தெரிவித்தார்.

இந்தத் தீ விபத்து பல வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை முழுமையாக அழித்துள்ளது.

20 ஆண்டுகால கடின உழைப்பு வீணாகிவிட்டதாகக் கடைக்காரர் யாஸ்மின் பானோ கவலை தெரிவித்துள்ளார். சனிக்கிழமை இரவு தொடங்கிய இந்தத் தீயை அணைக்க சுமார் 36 மணி நேரம் ஆனது, ஆனால் திங்கட்கிழமை மீண்டும் சில பகுதிகளில் தீப்பிழம்புகள் தென்பட்டன,.

கட்டிடம் தற்போது மிகவும் பலவீனமாக இருப்பதால் அது எந்த நேரத்திலும் இடியக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தீ விபத்திற்கு மின் கசிவு காரணமாக இருக்கலாம் என்று ஆரம்பத்தில் சந்தேகிக்கப்பட்டாலும், தற்போது இது குறித்து காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது.

கராச்சியில் பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் சட்டவிரோத கட்டுமானங்கள் காரணமாக அடிக்கடி இத்தகைய தீ விபத்துகள் ஏற்படுகின்றன:

கடந்த நவம்பர் 2023-ல் ஒரு வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலியாகியதுடன், 2012-ல் ஒரு ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட கோரத் தீ விபத்தில் 260 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

வரைபடத்திலிருந்து அழியும் “குட்டி யாழ்ப்பாணம்”

0

ஜூட் சமந்த

ஆரச்சிக்கட்டுவ – உடப்பு மீன்பிடி கிராமத்தின் கடற்கரைப் பகுதி மீண்டும் ஒருமுறை மிகக் கடுமையான முறையில் கடல் அரிப்புக்கு உள்ளாகி வருகின்றது.

கடந்த ஜனவரி 11 ஆம் திகதி கடலில் ஏற்பட்ட ஒருவித மாற்றத்தைத் தொடர்ந்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் தமது மீன்பிடித் தொழிலை முன்னெடுக்க முடியாமல் போயுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

புத்தளம் மாவட்டத்தின் ஆரச்சிக்கட்டுவ பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள உடப்பு கிராமம் “குட்டி யாழ்ப்பாணம்” (පුංචි යාපනය) என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள மக்களில் பெரும்பான்மையானோர் தமிழ் மக்களாக இருப்பதோடு, அவர்கள் யாழ்ப்பாணப் பிரதேசத்துடன் நெருங்கிய உறவினர்களாக இருப்பதும் இதற்கு முக்கிய காரணமாகும்

இக்கிராம மக்களின் பிரதான தொழில் மீன்பிடியாகும். மேற்கே உள்ள கடலும், கிழக்கே உள்ள முந்தலமை கலப்பும் இவர்களின் பொருளாதாரத்தின் முக்கிய மையங்களாக உள்ளன.

சில ஆண்டுகளுக்கு முன்பும் இங்கு கடல் அரிப்பு ஏற்பட்டபோது, ஊடகங்களின் வெளிப்படுத்தலைத் தொடர்ந்து அரசாங்கம் கடல் அரிப்பைக் கட்டுப்படுத்த சில கற்பாரைகளை (Rock barriers) இட்டிருந்தது.

தற்போது சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு கடற்கரை அரிப்பு ஏற்பட்டுள்ளதுடன் 02 மீன்பிடி வாடிகள் முற்றாக கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளன. அத்துடன் கடற்கரை ஓரத்தில் இருந்த மின்சாரக் கம்பங்களும் சரிந்து விழுந்துள்ளன.

கடல் தரைப்பகுதியை நோக்கி ஊடுருவுவதால் மக்கள் வீடுகளில் இருக்க அச்சப்படுகின்றனர். முன்னதாக இடப்பட்ட கற்பாரைகளுக்கு அருகிலேயே தற்போது அரிப்பு ஏற்படுவதால், அந்தக் கற்பாரைகளும் கடலுக்குள் அடித்துச் செல்லப்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால் படகுகளை கரையில் நிறுத்துவதில் மீனவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

சுமார் 500 மீட்டருக்கும் அதிகமான நிலப்பரப்பு தற்போது கடலுக்குள் காவு கொள்ளப்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அரசாங்கம் உடனடியாக இந்த விடயத்தில் தலையிடாவிட்டால், உடப்பு கிராமம் இலங்கையின் வரைபடத்திலிருந்தே அழிந்துவிடும் அபாயம் உள்ளதாக கிராம மக்கள் மிகுந்த அச்சத்துடன் தெரிவிக்கின்றனர்.

கைபேசி ஊடாக ரகசியமாக போதைப்பொருள் வியாபாரம்!

0

ஜூட் சமந்த

கைபேசி ஊடாக மிகவும் இரகசியமான முறையிலும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவரை மாரவிலை பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை நேற்று 19 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது. மாரவிலை – குருச பள்ளிக்கு (Kurusa Palliya) அருகில் வசிக்கும் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 450 கிராம் 450 மில்லிகிராம் ஹெரோயின், 5 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், ஒரு மின்சார தராசு, இரண்டு பொதியிடும் இயந்திரங்கள், போதைப்பொருட்களை பொதியிடப் பயன்படுத்தப்படும் பெருமளவிலான உறைகள் மற்றும் 5 கைபேசிகள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபர் அவ்வப்போது தனது கைபேசி இலக்கங்களை மாற்றிக்கொண்டு, நீண்டகாலமாக இந்த போதைப்பொருள் வியாபாரத்தை முன்னெடுத்து வந்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

மாரவிலை பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி சமத் தர்மப்பிரிய (Chamath Dharmapriya) தலைமையிலான அதிகாரிகளே இந்தச் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.