Tuesday, July 7, 2026
Sponsored advertisementspot_img
Home Blog

நாகவில்லுவில் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ்வின் நினைவுதினம்!

பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று நாகவில்லுவில் இடம்பெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வு!

இலங்கை திருநாட்டில் பெளதீக ரீதியான பல வேலைத்திட்டங்களையும், இடம்பெயர்வு மற்றும் எல்லை நிர்ணயம் தொடர்பான பறந்துபட்ட அறிவினையும் கொண்டிருந்த எருக்கலம்பிட்டியை சேர்ந்த மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது வருட நினைவு தின நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

அந்த வகையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் நினைவுப் பேருரையும், புத்தக வெளியீடு நிகழ்வும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் ஏற்பாட்டில் நேற்று 25.08.2025 புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய அதிபர் ஜனாப் S.M. ஹுஸைமத் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், புத்தி ஜீவிகள் மற்றும் குடும்பத்தார்கள் கலந்தகொண்டமை விஷேட அம்சமாகும்.

சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் பொருளாளர் ஜனாப் ஏ.ஜி. அனீஸ் (Bsc.Agri) அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.

மேலும் இஸ்லாமிய கற்கை அறபு மொழிப் பீட, தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களினால் நூல் அறிமுக உரையும், நினைவுப் பேருரையும் மிகவும் உணர்வுபூர்வமாக நிகழ்த்தப்பட்டது.

கிழக்கு மற்றும் தென் கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பங்களிப்பு அளப்பெரியது என நினைவு கூறிய பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன், வடக்கில் ஏற்பட்ட யுத்தம் மற்றும் முஸ்லிம்களின் இடம்பெயர்வு குறித்து அதீத அக்கறையுடன் செயற்பட்ட மிக முக்கியமானவர் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்கள் எனவும் எடுத்துரைத்தார்.

வடக்கு முஸ்லிம்களின் இடம்பெயர்வு மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பில் அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களுடன் பலதரப்பட்ட கலந்துரையாடல்களை நடத்தி, சர்வதேசம் வரை இவ்விடயங்களை கொண்டுசென்ற மகான் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் என பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் தனது உரையில் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் புதல்வி சட்டத்தரணி எப்.சப்னா ஹஸ்புல்லாஹ் அவர்களினால் ஏற்புரை நிகழ்த்தப்பட்டதுடன், நூல் வெளியீடு நிகழ்வும் இடம்பெற்றது.

நூலின் முதற்பிரதியை ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தரும், புத்தளம் எருக்கலம்பிட்டி பள்ளிவாசல் நிர்வாக சபையின் முன்னாள் உறுப்பினருமான ஜனாப் ரஹ்மத்துல்லாஹ் (GS) அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

மேலும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் செயலாளர் ஜனாப் எஸ்.எச்.எம். றிஸ்னி அவர்களினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டதுடன், தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன், மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பாரியாருக்கும் நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில், பேராசிரியர்கள், கல்விமான்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், பாடசாலைச் சமூகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் குடும்பத்தார்கள் என பலரும் கலந்து சிறப்பித்ததுடன், ஈ நியூஸ் பெஸ்ட் ஊடக நிறுவனம் ஊடக அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரணிலுக்காக ஒன்று திரண்ட அரசியல் தலைவர்கள்!

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விசாரணை கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது, நாட்டின் அடிப்படை ஜனநாயக நிறுவனங்களின் வலிமை குறித்து கடுமையான கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் விளைவுகள் ஒரு தனிநபரின் அல்லது எந்தவொரு அரசியல் கட்சிகளின் தலைவிதியையும் விட, சமூகத்தின் உரிமைகளுக்கான பிரச்சினைகளை தோற்றிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் தலைவர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைகளை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது மற்றும் விளக்கமறியலை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து நடத்திய விசேட ஊடக சந்திப்பில் பங்கேற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரல முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் அறிக்கையை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

போர்த்துக்கல் அணி சாம்பியன் ஆனது!

0

‘நேஷன்ஸ் லீக்’ கால்பந்தில் போர்ச்சுகல் அணி சாம்பியன் ஆனது. பைனலில் ‘பெனால்டி ஷூட் அவுட்டில்’ 5-3 என ஸ்பெயினை வீழ்த்தியது.

ஐரோப்பிய கால்பந்து அணிகளுக்காக ‘நேஷன்ஸ் லீக்’ தொடர் நடத்தப்படுகிறது. மொத்தம் 54 அணிகள் பங்கேற்றன. நேற்று ஜெர்மனியின் முனிக் நகரில் நடந்த பைனலில், போர்ச்சுகல், நடப்பு யூரோ சாம்பியன் ஸ்பெயின் பலப்பரீட்சை நடத்தின. போட்டியின் 21வது நிமிடம் ஜுபிமெண்டி (ஸ்பெயின்), 26வது நிமிடம் மெண்டிஸ் (போர்ச்சுகல்) தலா ஒரு கோல் அடித்தனர். 45வது நிமிடம் மைக்கேல் ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் ஸ்பெயின் அணி 2-1 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் 61 வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். போர்ச்சுகல் அணிக்காக இவர் அடித்த 138வது கோல் இது. 90 நிமிட முடிவில் போட்டி 2-2 என சமன் ஆனது. அடுத்து நடந்த கூடுதல் நேரத்திலும் (30 நிமிடம்) இரு அணியும் கோல் அடிக்கவில்லை.

இதையடுத்து வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி ‘பெனால்டி ஷூட் அவுட்டுக்கு’ சென்றது. இரு அணிக்கும் தலா 5 வாய்ப்புகள் தரப்பட்டன. காயம் காரணமாக 88 வது நிமிடம் வெளியேறிய ரொனால்டோ, இதில் பங்கேற்கவில்லை.

முதல் 3 வாய்ப்பில் போர்ச்சுகலின் ராமோஸ், விடின்ஹா, பெர்ணான்டஸ் கோல் அடித்தனர். மறுபக்கம் ஸ்பெயின் தரப்பில் மெரினோ, பயேனா, இஸ்கோ கோல் அடிக்க 3-3 என ஆனது.

4வது வாய்ப்பில் மெண்டெஸ் (போர்ச்சுகல்) கோல் அடிக்க, ஸ்பெயினின் மோராட்டோ அடித்த பந்தை கோல் கீப்பர் டீகோ கோஸ்டா தடுத்து அசத்தினார்.

5வது வாய்ப்பில் நெவேஸ் கோல் அடித்தார். இதையடுத்து 5-3 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் ‘திரில்’ வெற்றி பெற்றது. 2019க்குப் பின் இத்தொடரில் மீண்டும் சாம்பியன் ஆனது.

தில்லையடியில் சிக்கிய கடத்தல் பீடி இலைகள்!

0

புத்தளத்தில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளுடன் வேன் ஒன்றும் பறிமுதல்!

இலங்கை கடற்படை, பொலிஸாருடன் இணைந்து, புத்தளம், தில்லையடி பகுதியில் 2025 ஜூன் 05 இரவு வேளையில் நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகள் கொண்ட ஒரு வேன் கைப்பற்றப்பட்டது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிறுவனம், புத்தளம் பொலிஸாருடன் இணைந்து தில்லையடி பகுதியில் நடத்திய இந்த சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்று சோதனை செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகளானது வாகனத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் வேன் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களால் ஆபத்தா?

விண்வெளியில் பூமியை சுற்றி வந்துக்கொண்டிருக்கும் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கொள்களை சீனா நினைத்தால் வெறும் 12 மணி நேரத்தில் தாக்கி அழித்துவிட முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் என்கிற செய்தி ஊடகத்தில் இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது தற்போது சீனா 99 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. இவை அனைத்தும் நான்ஜிங் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஆஸ்ட்ரோனாட்டிக்ஸ் பல்கலைக்கழகத்தின் விண்வெளிக் கட்டுப்பாட்டுத் துறையின் இயக்குநர் வூ யுன்ஹுவா தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இவை அனைத்தும் எலான் மஸ்கின் 1400 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை வெறும் 12 மணி நேரத்தில் காலி செய்துவிடும். சீன செயற்கைக்கோளில் லேசர், நுண் அலைகளை உருவாக்கும் கருவி, உளவு கருவிகள் பொருத்தப்பட்டிருக்கலாம். ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் வெறுமென நெட்வொர்க் கொடுக்க மட்டுமே பயன்படுத்தப்படுவதில்லை. தவிர, ராணுவ நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது என சீனா குற்றம்சாட்டி வருகிறது.

அதாவது, உக்ரைன்-ரஷ்யா போரில், உக்ரைன் படைகளுக்கு தகவல்கள் கொடுக்கவும், ரஷ்ய எல்லையை துல்லியமாக கண்காணிக்கவும் இந்த செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த 2022ம் ஆண்டு ரஷ்ய போரின்போது அப்போதைய உக்ரைனின் துணைப் பிரதமரான மைக்கைலோ ஃபெடோரோவ், “ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் சேவையை உடனடியாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த மஸ்க், “உடனடியாக சேவை வழங்கப்படும்” என்று கூறியிருந்தார்.

உக்ரைன் போருடன் மட்டுமே ஸ்டார்லிங்க் நிற்காது, நாளை சீனாவுக்கும்-தைவானுக்கும் பஞ்சாயது ஏற்பட்டால் அப்போதும், தைவானுக்கு சப்போர்ட் செய்ய ஸ்டார்லிங்க் வரும். எனவே இந்த கூட்டு நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்க சீனா இந்த புதிய செயற்கைக்கோள்களை உருவாக்கியிருக்கிறது.

கடந்த 2023ம் ஆண்டு இதற்கான பணிகளை சீனா தொடங்கியது. இந்த திட்டத்திற்கு ‘கியான்ஃபான் மெகா-விண்மீன் திட்டம்’ (Qianfan mega-constellation project) என்றும் பெயரிட்டிருந்தது. நோக்கம் உலகம் முழுவதும் இணைய தொடர்பை வழங்குவதாகும். இதற்காக மொத்தம் 15,000 சிறிய ரக செயற்கைக்கோள்களை ஏவ சீனா முடிவெடுத்தது. இதன் முதல் தொகுப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏவப்பட்டது. இதில் 18 செயற்கைக்கோள்கள் இருந்தன.

ஒவ்வொன்றும் சுமார் 300 கி.கி எடையில் இருந்தது. இவை பூமியிலிருந்து 800 கி.மீ உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டது. இதேபோன்று 2024 டிசம்பரில் அடுத்து இரண்டு தொகுதி ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. தற்போது மொத்தம் 99 செயற்கைக்கோள்கள் விண்வெளியில் இருக்கின்றன. 15,000 செயற்கைக்கோள்களை 3 கட்டங்களாக ஏவ இருக்கிறது. முதல் கட்டத்தில் 1,296 செயற்கைக்கோள்கள் ஏவப்படும். இதில் 648 செயற்கைக்கோள்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஏவப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் கன்னி உரை

0

அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்புவோம்

தேசியத்துவத்துடனும் ஐக்கியத்துடனும் ஒன்றுபட்டு நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க இன்று (23) காலை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

பதவிப் பிரமாணத்தின் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய முழுமையான உரை:

மக்களால் ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது நமது நாட்டின் ஜனநாயகத்திலிருக்கும் மிக முக்கியமான அம்சமாகும். தேர்தலில் வாக்களித்தல் மற்றும் ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதோடு ஜனநாயகம் நிறைவு பெறுவதில்லை. இது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சம் என்றாலும், நம் நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்த, கட்டமைப்புகளின் வலிமையும், சட்டங்களை வலுப்படுத்துவதும் அவசியம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனவே, எனது பதவிக்காலத்தில் இந்த நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.

அத்துடன், இந்த நாட்டில் ஜனநாயக முறையில் அதிகாரப் பரிமாற்றம் நடந்த வரலாறும் உண்டு. தேர்தலில் நிகழும் அதிகாரப் பரிமாற்றத்தை எந்தத் தலைவரும் நிராகரித்ததில்லை. அதற்கமைய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த மக்கள்ஆணையை சுமூகமாக ஏற்றுக்கொண்டதுடன், ஜனநாயக ரீதியில் அதிகாரத்தை கைமாற்றுவதற்கான அவரின் அர்ப்பணிப்பிற்கும் முன்னுதாரணத்திற்கும் நன்றி தெரிவிக்கிறேன். மேலும் எமக்கு கிடைப்பது மிகவும் சவால் நிறைந்த நாடு என்பதை நன்கு புரிந்து கொண்டிருக்கிறோம். நமது அரசியலில் தூய்மையான, மக்களால் எதிர்பார்க்கப்படும் சிறந்த அரசியல் கலாசாரத்திற்காக அவசியம் காணப்படுகிறது.அதற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

நம் நாட்டின் அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு நல்லெண்ணம் இல்லை. எனவே, அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் மீது மக்கள் மரியாதை மற்றும் நம்பிக்கையை மீட்டெடுக்க எங்கள் தரப்பிலிருந்து முடிந்த அனைத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.

மேலும், நமக்கு முன் இருக்கும் இந்த ஆழமான நெருக்கடியை வெறும் அரசோ, வெறும் அரசியல் கட்சியோ அல்லது ஒரு தனி நபரோ மட்டும் தீர்க்க முடியும் என்று நாங்கள் நம்பவில்லை. ஏனென்றால், நான் முன்பு கூறியது போல், நான் ஒரு மாயாஜால வித்தைக்காரனல்ல. நான் மந்திரவாதியும் இல்லை. நான் இந்த நாட்டின் சாதாரண குடிமகன். எம்மிடம் திறமைகள் உள்ளன. இயலாமைகளும் உள்ளன. தெரிந்த விடயங்களும் உள்ளன அதேபோன்று, தெரியாத விடயங்களும் உள்ளன.

ஆனால் திறமைகளைப் பயன்படுத்தி தெரியாதவற்றை சேகரித்துக்கொண்டு சிறந்த முடிவுகளை எடுத்து இந்த நாட்டை வழிநடத்துவதே எனது தலையாய பணியாகும். அந்த கூட்டுப் பங்களிப்பின் ஒரு அங்கமாக மாறுவது எனது பொறுப்பாகும். மேலும், இந்த நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதில் பொது மக்கள் மற்றும் அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் பாரிய பொறுப்பு உள்ளது. அந்தப் பொறுப்பை நிறைவேற்ற அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்.

ஆனால், நாட்டின் ஜனாதிபதி என்ற முறையில், இந்தப் பணியை முன்னின்று நடத்துவதில் எனக்கு முதன்மையான மற்றும் மிக முக்கியமான பொறுப்பு இருப்பதை நான் ஏற்றுக்கொண்டேன். எனவே, இந்தச் சவாலை வெற்றிகொள்வதற்காக எனக்குக் வழங்கப்பட்டுள்ள பணியை நான் உரிய முறையில் நிறைவேற்றுவேன் என்பதை செயற்பாடு மற்றும் நடைமுறை மூலம் எல்லா சந்தர்ப்பங்களிலும் இந்த நாட்டின் பிரஜைகளுக்கு வெளிப்படுத்த நான் தயாராக இருக்கிறேன்.

மேலும் நமது நாட்டுக்கு சர்வதேச ஆதரவு தேவை. எனவே, உலகில் எத்தகைய அதிகாரப் பிளவுகள் இருந்தாலும், ஒவ்வொரு நாட்டையும் எமக்கு மிகவும் சாதகமாக கையாள்வதே நமது எதிர்பார்ப்பாகும். நாம் உலகில் தனிமைப்படுத்தப்பட்ட நாடு அல்ல. உலகத்துடன் கூட்டாக முன்னேற வேண்டிய ஒரு நாடாகும். அது தொடர்பில் தேவையான முடிவுகளை எடுக்க நாங்கள் சிறிதும் தயங்குவதில்லை.

மேலும், நம் நாட்டைக் கட்டியெழுப்புவதில் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு பெரும் பங்கு உள்ளது. எனவே, நாட்டை மேலும் வலுவாகக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு அவர்கள் ஆதரவளிப்பார்கள் என நான் கருதுகின்றேன்.

நம் நாட்டின் ஜனநாயகத்தின் ஊடாக நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். அதற்காக மக்கள் எனக்கு வாக்களித்தனர்.

மேலும் எனக்கு வழங்கப்படாத வாக்குகளும் உள்ளன. எனவே, எங்களின் வெற்றியின் உள்ளடக்கம் மற்றும் அளவு குறித்து எங்களுக்கு நல்ல புரிதல் உள்ளது. எனவே, எங்களுக்கு ஆதரவு வழங்காத மற்றும் எங்களை நம்பாத பிரஜைகளின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெறுவதே எனது நிர்வாகத்தின் போது எனக்கு வழங்கப்பட்டுள்ள பணியாகும். அந்தப் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

எதிர்காலத்தில் இவை அனைத்தையும் நீங்கள் நடைமுறையில் கண்டுகொள்ள முடியும். அதற்கு அனைத்து மக்களின் ஆதரவையும் எதிர்பார்க்கின்றேன்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தேர்தலில் இவ்வாறுதான் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்

0

அதிகாரிகள் மற்றும் பிற தேவைகள் முடிந்த பிறகு, மாலை 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (19) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி பிற்பகல் 4.15 மணிளவில் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“எதிர்வரும் 21ம் திகதி வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள் பெறப்பட்டதும், அதிகாரிகள் மற்றும் இதர தேவைகள் முடிந்ததும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் இரவு 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

மாலை 4.15 மணிளவில் தபால் மூல வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

அத்துடன் மாவட்ட அளவில் ஒவ்வொரு வட்டாரத்திலும் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெறும்.

வாக்கு எண்ணிக்கையின் முடிவில் முடிவுகள் கிடைத்தவுடன் ஊடகங்களுக்கு வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையே முதலில் எண்ணப்படும்.

அந்தக் கணக்கெடுப்பின் பின்னர் (மாவட்ட அளவில் எண்ணும் பணி) முதலில் வாக்குப்பெட்டிகளில் உள்ள வாக்குகள் எண்ணப்படும்.

அதன் பிறகு, ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு, தொகுதி மற்றும் மாவட்ட அளவில் அது தயாரிக்கப்படுகிறது.

தேர்தல்கள் செயலகமே ஒட்டுமொத்த முடிவுகளைக் கணக்கிடும்.

எந்த வேட்பாளரும் 50 வீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்றுள்ளாரா என சரிபார்க்கப்படும்.

அப்படியானால், அந்த நேரத்தில் வாக்கு எண்ணும் பணிகள் நிறுத்தப்படும்.

அப்போது ஜனாதிபதியை நாங்கள் அறிவிப்போம்.

எந்த வேட்பாளருக்கும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் கிடைக்காவிடின், விருப்பு வாக்கு எண்ணிக்கைக்கு செல்ல வேண்டும்.

அங்கு, அதிக வாக்குகள் பெற்ற இரண்டு வேட்பாளர்கள் போட்டியில் வைத்து விட்டு  மீதமுள்ள 36 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து நீக்கப்படுவர்” என்றார்.

புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக மாறும்

0

புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வாத்தியாசலையாக மாற்றம் பெரும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று புத்தளத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ அலிசப்ரி ரஹீம் மற்றும் சிந்தக்க மாயாதுன்ன தலைமையில் புத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்திலே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

புத்தளம் மக்களின் நீண்ட நாள் தேவையாக இருந்து வருகின்ற புத்தளம் தல வைத்தியசாலையை தரமுயர்த்துவது தொடர்பாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ அலிசப்ரி ரஹீம் அவர்களினால் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோலுக்கிணங்க குறித்த வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.

மேலும் புத்தளத்தில் மீன் பிடி தொழிலை முன்னேற்றும் நோக்கத்தில் மீன் பிடி துறைமுகம் ஒன்றை அமைக்கும் யோசனையும் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டதுடன், அதற்கான முன்னெடுப்புகளும் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்டமை புத்தளம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நாட்டில் நிரந்தர பொருளாதார அபிவிருத்தியை நிலை நாட்ட தாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டை பொருளாதார அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவதே தனது பிரதான நோக்கம் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மொட்டுக்கட்சிக்கு எதிராக நிற்கும் முக்கிய அமைச்சர்கள்

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக மொட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளரை இந்த வாரம் அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்காதிருக்கவும், மொட்டு சின்னத்தில் தனியாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமக்கு ஆதரவு வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பியிருந்த கடிதம் நேற்றைய தினம் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தினால் அரசியல் குழுவில் முன்வைக்கப்பட்டது.

எவ்வாறாயினும் அந்த கடிதத்தை நிராகரிக்க அரசியல் குழுக் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுவில் 82 பேர் அங்கம் வகிப்பதுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் 72 பேர் பங்கேற்றனர்.

இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த 11 பேர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

மஹிந்தானந்த அலுத்கமகே, பந்துல குணவர்தன, பிரதீப் உந்துகொட, கோகிலா ஹர்ஷனி குணவர்தன, சஹன் பிரதீப், ரமேஸ் பத்திரன, கஞ்சன விஜேசேகர, பிரசன்ன ரணதுங்க, கனக ஹேரத், மொஹான் பிரியதர்ஷன ஆகியோர் கட்சியின் சார்பில் தனியான வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

அத்துடன் பிறிதொரு கட்சியின் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்கும் உறுப்பினர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் யோசனைக்கு 6 பேர் எதிராக வாக்களித்துள்ளனர்.

எவ்வாறாயினும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் எனக் கூறப்பட்ட தம்மிக பெரேரா தொடர்பில் அரசியல் குழுக் கூட்டத்தின்போது எந்தவித கருத்துக்களும் பரிமாற்றிக் கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவளிக்காத 11 பேர் உள்ளிட்ட தரப்பினர் நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தனவின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சைனப் ஆரம்பப் பாடசாலைக்கு ஆளுநர் வருகை!

0

புத்தளம் சைனப் ஆரம்ப பாடசாலையின் முப்பெரும் விழா பாடசாலை அதிபர் யஹியா தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து புத்தளம் ஜெய்னப் பாடசாலைக்கு 22 லட்சம் ரூபா பெறுமதியான நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு, சிறுவர் விளையாட்டு நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தல் மற்றும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் செயற்திட்டத்தின் கீழ் BCMH நிறுவனத்தினால் கற்றல் உபகரணம் வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் கடந்த செவ்வாய்க்கிழமை (16) வெகு விமர்சையாக இடம்பெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதியாக வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், விசேட அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மற்றும் கௌரவ அதிதியாக புத்தளம் வலயக்கல்விப் பணிப்பாளர் அர்ஜுன ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆரம்ப பாடசாலையின் முக்கியத்துவம் மற்றும் அறிவார்ந்த சமூகத்தை கட்டியெழுப்ப ஆரம்ப பாடசாலை ஆற்றிவருகின்ற அர்ப்பணிப்பு குறித்து விரிவாக பேசிய வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், புத்தளம் மாவட்ட பாடசாலைகளின் துரித வளர்ச்சி பற்றியும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

மேலும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் செயற்திட்டத்திற்கு வடமேல் மாகாண ஆளுநர் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் ஜவ்ஷி ஜமால்தின், இணைப்புச் செயலாளர் எச். அமீர் அலி ஆசிரியர், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் உட்பட உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் அயல் பாடசாலையின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு
நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு

ஹிருணிகாவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறை

0

கடத்தல் வழக்கில் முன்னாள் எம்.பி ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்தத் தீர்ப்பை அறிவித்தார்.

தெமட்டகொட பகுதியிலுள்ள கடை ஒன்றில் பணிபுரிந்த அமில பிரியந்த அமரசிங்க எனும் இளைஞர் ஒருவரை 2015 டிசம்பர் 21ஆம் திகதி ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு சொந்தமான டிபெண்டர் வாகனத்தில் கடத்திய வழக்கு விசாரணை முடிவில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

29 குற்றங்கள் தொடர்பில் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் 8 பேரும் குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில், அச்சம்பத்திற்கு உதவி, ஒத்தாசை புரிந்ததாக ஹிருணிகா மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்திருந்தார்.

அத்தோடு, சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவின் ஆதரவாளர்கள் 8 பேர் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைதான ஐந்தாம் சந்தேகநபரின் மகள் அளித்துள்ள வாக்குமூலத்தில், தமது தாயாருடன் தொடர்பு பேணிய நபர் ஒருவரை தாம் காண்பித்ததாகவும், அவரை தமது தந்தையும் அவருடன் சென்றவர்களும் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு ஹிருணிகாவிடம் அழைத்துச் சென்றதாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

ஓவியப்போட்டியில் எருக்கலம்பிட்டி மாணவன் முதலாமிடம்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட வட மாகாண மானவர்களுக்கிடையிலான சித்திரப்போட்டியில் மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்றார்.

வீதி விபத்துக்கள் இல்லாத நாளைக்கான பாடசாலையிலிருந்து அணிவக்குப்போம் எனும் தொனிப்பொருளில் கடந்த வியாழக்கிழமை (13.06.2024) அன்று நடாத்தப்பட்ட வட மாகாண மாணவர்களுக்கிடையிலான குறித்த சித்திரப்போட்டியில் சுமார் 2600 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

சித்திரப்போட்டியில் பங்குபற்றிய 2600 மாணவர்களில் 250 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு நேற்றைய தினம் (15.06.2024) அவர்களுக்கான போட்டி இடம்பெற்றது.

நடைபெற்று முடிந்த இறுதிச் சுற்றுப்போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்று பெருமதிமிக்க பரிசில்களை பெற்றுக்கொண்டார்.

முதலாம் இடம் பெற்ற முஹம்மது ஹுசைன் என்ற மாணவனுக்கு சான்றிதல், துவிச்சக்கரவண்டி மற்றும் 8500/- ரூபா பெறுமதியான வவுச்சரும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இதேவேளை குறித்த போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய இல்முதீன் முஹம்மது ஹஸ்பான் 7 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய மற்றொரு மாணவரான முஹம்மது சம்ஹான் 8 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

பாரிய சாவல்களுக்கு மத்தியில் தனி ஒரு மனிதனாக இம் மாணாவர்களை ஊக்கப்படுத்தி, தயார்ப்படுத்தி போட்டியில் பங்குபெறச் செய்து வெற்றிபெறச் செய்த எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியின் சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் அவர்களின் இம் முயற்சிக்கு, பாடசாலை சமூகம் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் நன்றி தெரிவித்தனர்.

தமக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வந்து தேசிய அளவில் இடம்பெறும் போட்டிகளில் மாணவர்களை பங்குபெறச் செய்வதே தனது இலக்கு என சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் எமது ஊடகத்திற்கு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை இராஜினாமா

0

நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்துள்ளனர்.

சாந்த நிரியல்ல உட்பட 15 பேர் கொண்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரின் அறிவித்தலுக்கு அமைய இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி திங்கட்கிழமை புதிய பணிப்பாளர் சபை நியமிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ “அத தெரண” விற்கு தெரிவித்தார்.

புத்தளம் எருக்கலம்பிட்டியில் கடும் வெள்ளம்

0

புத்தளம் பகுதியில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக புத்தளம் பகுதி முழுதும் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.

புத்தளம், தில்லையடி, பாலாவி, புத்தளம் எருக்கலம்பிட்டி, ஹிதாயத் நகர்,  மதுரங்குளி மற்றும் ஏனைய பல கிராமங்களும் வெள்ளித்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமமும் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 1500 குடும்பங்கள் இங்கு வாழ்ந்துவருவதுடன், அனைத்து வீடுகளும் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நூற்றிற்கும் அதிகமான வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் ஐநூற்றுக்கும் அதிகமான வீடுகள் பகுதி அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8ஆம் திகதி ஏற்பட்ட மழை வெள்ளித்தினால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் மற்றும் பாடசாலைகளில் தற்காலிகமாக  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு தினங்களாக இவர்களுக்கான சமைத்த உணவுகள் மூன்று வேலைகளிலும் ஊர் தனவந்தர்களின் உதவியுடனும், பள்ளிவாசல் நிர்வாக சபையின் வழிகாட்டலுடனும் வழங்கப்பட்டு வருவதுடன், ஊர் மக்களுக்கும் உணவு விநியோகங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

இவர்களுக்கான நிவாரண உதவிகள் இதுவரை அரசாங்கத்தினால் வழங்கப்படாத போதிலும், ஊர் மக்களின் பங்களிப்புடன் மாத்திரமே பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு விநியோகங்கள் இதுவரை  வழங்கப்பட்டு வருகின்றது.

புத்தளம் பொத்துவில்லு பகுதியில் உள்ள குளம் மழை நீரினால்  பெருக்கெடுத்துள்ளதால் குறித்த குளத்து நீர் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமத்திற்குள் தொடர்ந்தும் மூன்றாவது நாளாக ஊடறுத்து செல்வதால் வீடுகள் தொடர்ந்தும் நீருள் மூழ்கியுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்தின் நிவாரண உதவிக்காக பல மக்கள் தொடர்ந்தும் எதிர்பார்த்து காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ரெட் அலெர்ட்: இலங்கையில் 61 ஆயிரத்தை தாண்டியது டெங்கு!

0

இலங்கையில் நாளுக்கு நாள் அச்சுறுத்தலாக மாறிவரும் டெங்கு காய்ச்சலின் பரவல், தற்போது மிக மோசமான ஒரு எல்லைக் கோட்டைத் தொட்டுள்ளது. நாடு முழுவதும் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை மிகத் தீவிரமாகப் பதிவாகி வருவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிபரங்கள் எச்சரிக்கின்றன. தற்போதைய நிலவரப்படி, மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 61,060 ஆக உயர்வடைந்துள்ளமை பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 24 மணித்தியால இடைவெளிக்குள் மட்டும் 2,604 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இந்தத் தரவானது, டெங்கு நுளம்புகளின் பெருக்கம் மற்றும் வைரஸ் பரவல் வேகம் எந்தளவிற்கு கட்டுப்பாட்டை மீறிச் சென்று கொண்டிருக்கிறது என்பதை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

மாகாண ரீதியான தரவுகளைப் பார்க்கும்போது, இலங்கையின் வர்த்தக மற்றும் நிர்வாக மையமாக விளங்கும் மேல் மாகாணமே இந்த டெங்குப் போரில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மொத்த நோயாளர்களில் 52.50 வீதமானோர், அதாவது பாதிக்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் மேல் மாகாணத்திலேயே முடங்கியுள்ளனர். அங்கு பதிவாகியுள்ள நோயாளர்களின் எண்ணிக்கை மாத்திரம் 32,054 ஆகும். அதிக மக்கள் தொகை நெருக்கடியும், முறையற்ற கழிவகற்றல் முறைகளுமே மேல் மாகாணத்தை டெங்குவின் கூடாரமாக மாற்றியுள்ளதாக சுகாதாரக் துறை அதிகாரிகள் கவலை வெளியிடுகின்றனர்.

மேல் மாகாணத்திற்கு அடுத்தபடியாக, சுற்றுலா மையமாக விளங்கும் தென் மாகாணத்தில் டெங்குவின் தாக்கம் கோரத்தாண்டவமாடி வருகிறது. அங்கு 9,674 நோயாளர்கள் இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, சபரகமுவ மாகாணத்தில் 5,237 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், நிலைமை மேலும் மோசமடைவதைத் தடுக்க அங்கு விசேட துப்புரவுப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இதேவேளை, நாட்டின் ஏனைய மாகாணங்களும் இந்த டெங்கு அபாயத்திலிருந்து தப்பவில்லை. மத்திய மாகாணத்தில் 4,823 பேரும், கிழக்கு மாகாணத்தில் 2,979 பேரும், வடமேல் மாகாணத்தில் 2,778 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேபோன்று ஊவா மாகாணத்தில் 1,550 பேரும், வடமத்திய மாகாணத்தில் 1,013 பேரும் நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஒப்பீட்டளவில் குறைந்த எண்ணிக்கையாக வட மாகாணத்தில் 957 பேர் பதிவாகியுள்ளனர். எவ்வாறாயினும், இந்த எண்கள் எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்கலாம் என்பதால், நுளம்புகள் பெருகும் இடங்களை துப்புரவு செய்வதில் பொதுமக்கள் தங்களின் பங்களிப்பை உடனடியாக வழங்க வேண்டும் என சுகாதாரப் பிரிவினர் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.

உலக விலையை விட அதிக காசு கொடுத்து எரிபொருள் வாங்கிய இலங்கை!

0

எரிபொருள் விலை சூத்திரத்தின்படி மக்களுக்கு நியாயமான விலையில் பெட்ரோல், டீசல் கிடைக்கிறதா? அல்லது உலக சந்தையைக் காட்டி உள்நாட்டில் பகற்கொள்ளை நடக்கிறதா? என்ற பாரிய சந்தேகம் தற்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் பொதுமக்களுக்கு அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்திருந்தாலும், தமக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி தப்பித்துக்கொள்ளப் பார்க்கிறது. ஆனால், இந்த நஷ்டத்திற்கு உண்மையான காரணம் உலக சந்தை விலை உயர்வு அல்ல, மாறாக இலங்கையின் கொள்வனவு முறையில் உள்ள பாரிய ஓட்டைதான் என்பதை நாட்டின் முன்னணி பொருளாதார பகுப்பாய்வு நிறுவனமான ‘publicfinance.lk’ அம்பலப்படுத்தியுள்ளது.

2026 மே மாதத்தில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் எரிபொருளைக் கொள்வனவு செய்த உத்தியோகபூர்வ தரவுகளை ஆராய்ந்தபோதுதான் இந்த அதிர்ச்சி உண்மை வெளிவந்துள்ளது. அந்த காலகட்டத்தில் உலக சந்தையில் நிலவிய சராசரி விலைகளை விட, இலங்கை கூட்டுத்தாபனமானது பெட்ரோலுக்காக 15 வீதமும், டீசலுக்காக 13 வீதமும் ‘அதிகப்படியான’ பணத்தை அள்ளி இறைத்துள்ளது. அதாவது, உலகமே குறைந்த விலைக்கு எரிபொருள் வாங்கியபோது, இலங்கை மட்டும் ஏன் சந்தை விலையை விடக் கூடுதல் விலை கொடுத்து வாங்கியது என்ற மர்மம் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

ஒருவேளை இலங்கை உலக சந்தையின் சாதாரண விலைக்கு மட்டுமே எரிபொருளைக் கொள்வனவு செய்திருந்தால், இன்று இலங்கையர்களுக்கு மிகக் குறைந்த விலையில் டீசலையும் பெட்ரோலையும் பெற்றிருக்க முடியும். அதேநேரம், கூட்டுத்தாபனத்திற்கும் எவ்வித நஷ்டமும் ஏற்பட்டிருக்காது. நீண்டகால விலை சூத்திரத்தின்படி கணிப்பீடு செய்திருந்தால், கடந்த ஜூன் மாதத்தில் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 381 ரூபாவாகவும், பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 424 ரூபாவாகவும் மட்டுமே இருந்திருக்க வேண்டும். இந்த விலையில் அரசாங்கம் வழங்கும் வரிக் கழிவுகளான பெட்ரோலுக்கு 20 ரூபாவும், டீசலுக்கு 100 ரூபாவும் உள்ளடக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், நடந்ததோ தலைகீழ்! கூட்டுத்தாபனம் உலக சந்தை விலைக்குப் புறம்பான அதிக செலவில் எரிபொருளை வாங்கியதால், ஜூன் மாதத்தில் டீசல் லீற்றர் ஒன்றை 407 ரூபாவிற்கு விற்க வேண்டியதாயிற்று. இது விலை சூத்திரத்தை விட 26 ரூபா அதிகமாகும். அதேபோல் பெட்ரோல் லீற்றர் ஒன்றை 434 ரூபாவிற்கு விற்பனை செய்ததுடன், இது விலை சூத்திரத்தை விட 9 ரூபா அதிகமாகும்.

இந்த தவறான கொள்வனவு விலை முறையினால் கூட்டுத்தாபனத்திற்கும் கட்டுப்படியாகவில்லை, மக்களுக்கும் நிம்மதியில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. கூட்டுத்தாபனம் வாங்கிய அதிக விலையின்படி அதன் செலவை ஈடுசெய்ய வேண்டுமாயின் பெட்ரோல் 474 ரூபாவிற்கும், டீசல் 436 ரூபாவிற்கும் விற்கப்பட்டிருக்க வேண்டும். இதனால் ஜூன் மாத சில்லறை விலையின்படி கூட்டுத்தாபனத்திற்கு பெட்ரோல் லீற்றருக்கு 40 ரூபாவும், டீசலுக்கு 29 ரூபாவும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

சுருக்கமாகக் கூறின், உலக சந்தையோடு ஒப்பிடும்போது இலங்கையில் டீசல் அதிக விலைக்கு விற்கப்படுகிறது, ஆனால் கூட்டுத்தாபனம் வாங்கிய கொள்ளை விலையோடு ஒப்பிடும்போது அது நஷ்டத்தில் விற்கப்படுவதாக ‘publicfinance.lk’ சுட்டிக்காட்டியுள்ளது. அதிகாரிகளின் இந்த நிர்வாகக் குறைபாடுகளுக்கு தற்போதும் நுகர்வோரே பலியாக்கப்பட்டு வருகின்றனர்.

கோப் குழுவில் அம்பலமாகிய கப்பல் கூட்டுத்தாபனத்தின் ‘மர்ம’ நஷ்டம்!

0

பொதுமக்களின் வரிப்பணம் எவ்வாறெல்லாம் வீணடிக்கப்படுகிறது என்பதற்கு மற்றுமொரு அதிர்ச்சி உதாரணம் தற்போது நாடாளுமன்றப் பொது வியாபாரங்கள் பற்றிய குழுவில் (COPE) வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இலங்கை கப்பல் கூட்டுத்தாபனம் (Ceylon Shipping Corporation Limited) தனக்குச் சொந்தமான 6 இணை நிறுவனங்களில் செய்துள்ள முதலீடுகளின் உண்மை நிலை என்ன தெரியுமா? கேட்கவே நெஞ்சம் பதறும் வகையில், சுமார் 63 கோடி (630 மில்லியன்) ரூபா முதலீட்டுக்கு ஒட்டுமொத்தமாகவே வருடாந்த இலாபமாக வெறும் 4 லட்சம் ரூபா மட்டுமே கிடைத்துள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் கோப் குழு விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

கோடிக்கணக்கில் முதலீடு செய்துவிட்டு, வெறும் சொற்ப தொகையை இலாபமாகப் பெறும் இந்த விசித்திரமான வியாபார தந்திரம் எப்படிச் சாத்தியமானது என்ற கேள்வி தற்போது மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த 6 இணை நிறுவனங்களின் பணிப்பாளர் சபைகளில் கப்பல் கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரிகள் பலரும் அங்கம் வகித்து வந்துள்ளனர். அப்படியிருந்தும், நிறுவனங்களின் செயல்திறனை உயர்த்துவதற்கோ அல்லது இலாபத்தை அதிகரிப்பதற்கோ இந்த அதிகாரிகள் எவ்வித உருப்படியான பங்களிப்பையும் வழங்கவில்லை என நாடாளுமன்றக் குழு சுட்டிக்காட்டியுள்ளது. அதிகாரிகள் வெறும் பதவிகளை மட்டுமே அலங்கரித்தனரா என்ற சந்தேகமும் இதனால் எழுந்துள்ளது.

விசாரணைகள் இத்துடன் நின்றுவிடவில்லை. இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்தின் ஒட்டுமொத்த முகாமைத்துவம், நிதிப் பயன்பாடு மற்றும் கப்பல் போக்குவரத்துச் செயற்பாடுகளின் மந்தகதி குறித்து கோப் குழு மிக ஆழமாக ஆராய்ந்துள்ளது. திறமையற்ற நிர்வாகமே இந்த நஷ்டத்திற்குப் பின்னணியில் உள்ளதா? அல்லது நிதி கையாடல்கள் ஏதேனும் இடம்பெற்றதா? என்ற கோணத்திலும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

இலங்கையின் கடல்சார் வணிகத் துறையில் பிரதான தூணாக இருக்க வேண்டிய ஒரு பொது நிறுவனம், இவ்வாறு நிதி மேலாண்மையில் படுதோல்வி அடைந்திருப்பது ஒட்டுமொத்த பொருளாதாரப் பின்னடைவையும் பிரதிபலிக்கிறது. குறிப்பாக மனிதவள மேலாண்மையில் உள்ள குறைபாடுகளும், கப்பல் இயக்கங்களின் திறமையின்மையும் இந்த வீழ்ச்சியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த பாரிய நிதி வீணடிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், கப்பல் கூட்டுத்தாபனத்தின் ஒட்டுமொத்த நிர்வாகக் கட்டமைப்பை முற்றாக சீரமைக்கவும் கோப் குழுவினால் அதிரடியான பல பரிந்துரைகள் தற்போது அரசாங்கத்திற்கு முன்வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பரிந்துரைகள் வெறும் காகிதத்தோடு நின்றுவிடுமா அல்லது நஷ்டத்தில் ஓடும் கூட்டுத்தாபனத்திற்குப் புத்துயிர் அளிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கோர வன்முறை: பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு!

0

நீர்கொழும்பு சிறைச்சாலை வளாகம் இன்று காலை ஒரு யுத்தக் களமாக மாறியுள்ளது. இன்று (06) காலை 10.15 மணியளவில் சிறைச்சாலைக்குள் மீண்டும் ஒரு பாரிய வன்முறை வெடித்துள்ளது. ஆரம்பத்தில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்டதாகக் கருதப்பட்ட இந்த மோதல், கணப்பொழுதில் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் கைதிகளுக்கும் இடையிலான பெரும் போராக உருவெடுத்தது. நிலைமை விபரீதமானதை அடுத்து, வன்முறையைக் கட்டுப்படுத்த பொலிஸார் துப்பாக்கிச் பிரயோகம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்.

நேரம் செல்லச் செல்ல சிறைச்சாலைக்குள் இருந்து வந்த செய்திகள் ஒட்டுமொத்த நாட்டையும் அதிரவைத்துள்ளன. முற்பகல் 11.38 மணியளவில் 5 பேரின் மரணத்துடன் ஆரம்பித்த இந்த கொடூரம், மதியம் 12.00 மணிக்கு 7 ஆகவும், 12.46 மணிக்கு 19 ஆகவும் உயர்ந்து, இறுதியாகக் கிடைத்த உத்தியோகபூர்வ தகவல்களின்படி பலி எண்ணிக்கை 25 ஆகப் பதிவாகியுள்ளது. இந்த பலி எண்ணிக்கையானது தற்போதைய நிலவரப்படி மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

உயிரிழந்தவர்களில் அதிகாரிகளும் அடக்கம்: மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்டோர்!

இந்த கொடூர மோதலில் கைதிகள் மாத்திரமன்றி, கடமையில் இருந்த சிறை உத்தியோகத்தர்கள் நால்வரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன், பாதுகாப்புப் படையினர் மற்றும் கைதிகள் உட்பட சுமார் 100 பேர் வரை படுகாயமடைந்த நிலையில் நீர்கொழும்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வைத்தியசாலை வளாகத்திலும் தற்போது பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற ஆரம்பக்கட்ட மோதலில் இரு கைதிகள் உயிரிழந்ததுடன் 38 பேர் காயமடைந்திருந்தனர். அவர்கள் இன்னமும் சிகிச்சை பெற்று வரும் நிலையிலேயே, இன்று காலை இந்தத் திடீர் அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. சிறைச்சாலையின் உட்பகுதியில் தற்போதும் பதற்றமான சூழல் நிலவுவதுடன், மேலதிக இராணுவ மற்றும் பொலிஸ் பிரிவினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

மாறவில கடலில் பயங்கரம்: ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞன்!

0

ஜுட் சமந்த

வார இறுதி விடுமுறையைக் கழிப்பதற்காகக் கடற்கரைக்குச் செல்வோர், கடலின் ஆக்ரோஷத்தை உணராமல் செயற்படுவதால் ஏற்படும் விபத்துக்கள் தொடர்கதையாகி வருகின்றன. அந்த வகையில், நேற்றிரவு மாறவில கடற்பகுதியில் இடம்பெற்ற ஒரு துயரச் சம்பவம் ஒட்டுமொத்தப் பிரதேசத்தையும் உலுக்கியுள்ளது. நீர்கொழும்புப் பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள், மாறவில – லன்சிகம கடற்கரையின் ஆபத்தை உணராமல் இரவு நேரத்தில் கடலில் இறங்கியதே இந்த அனர்த்தத்திற்குப் பின்னணியாக அமைந்துள்ளது.

நேற்று (05) ஞாயிற்றுக்கிழமை இரவு 7.40 மணியளவில், நிலவொளி மற்றும் கடற்கரையின் அமைதிக்கு மத்தியில் அந்த இரு இளைஞர்களும் கடலில் நீராடிக்கொண்டிருந்தபோது அவர்களை நோக்கி வந்த ஒரு ராட்சத அலை, நொடிப் பொழுதில் ஒரு இளைஞனை மாத்திரம் கடலுக்குள் இழுத்துச் சென்றது.

இவ்வாறு அலையினால் இழுத்துச் செல்லப்பட்டு, கடலில் மாயமானவர் நீர்கொழும்பு – பெரியமுல்லை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய வர்ணகுலசூரிய மகமூனகே ரோசித பெர்னாண்டோ என பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார். தன் கண் முன்னாலேயே நண்பன் அலையோடு அடித்துச் செல்லப்படுவதைக் கண்ட மற்றைய இளைஞன், செய்வதறியாது கத்திக் கூச்சலிட்டுள்ளார்.

இதனையடுத்து, நள்ளிரவு என்றும் பாராமல் சம்பவ இடத்திற்கு விரைந்த பிரதேசவாசிகளும் மீனவர்களும் இணைந்து, மாயமான இளைஞனை உயிருடன் மீட்கும் நோக்கில் பாரிய தேடுதல் வேட்டை ஒன்றை ஆரம்பித்தனர். எனினும், இரவு நேரக் கடல் கொந்தளிப்பு மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக நேற்றிரவு முழுவதும் தேடியும் ரோசித பெர்னாண்டோவின் உடல் இதுவரை கண்டெடுக்கப்படவில்லை.

தற்போது மாறவில பொலிஸார் இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளதுடன், கடற்படையினரின் உதவியுடன் தேடுதல் பணிகளைப் பலப்படுத்தியுள்ளனர். அலைகளின் சீற்றம் அதிகமாக உள்ள காலப்பகுதியில், இரவு வேளைகளில் கடலில் இறங்குவதைத் தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கல்பிட்டியில் சிக்கிய பஸ்கள்: பயணிகளின் உயிருக்கு ஆபத்தா?

0

ஜுட் சமந்த

பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் அதிர்ச்சித் தகவல் ஒன்று கல்பிட்டிப் பகுதியிலிருந்து வெளியாகியுள்ளது. டீசல் விலைச் சேமிப்பைக் குறிவைத்து, சட்டவிரோதமான முறையில் மண்ணெண்ணெயைப் பயன்படுத்தி பயணிகளை ஏற்றிச் சென்ற 7 பேருந்துகளை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.

நீண்ட நாட்களாகவே இவ்வாறான முறைகேடுகள் நடப்பதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, புத்தளம் பிராந்திய போக்குவரத்துப் பிரிவினரும் கல்பிட்டி பொலிஸாரும் இணைந்து வீதிகளில் அதிரடி வேட்டை ஒன்றை அரங்கேற்றினர். கொழும்பில் இருந்தும் புத்தளத்தில் இருந்தும் கல்பிட்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்துகள் மட்டுமன்றி, அரச இ.போ.ச (CTB) பேருந்துகளும் இந்தத் திடீர் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன.

அப்படியே எரிபொருள் டாங்கியைத் திறந்து சோதித்த பொலிஸாருக்குக் காத்திருந்தது பெரும் அதிர்ச்சி. இயந்திரங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய மற்றும் சுற்றாடலுக்குப் பெரும் புகை மாசடைவை ஏற்படுத்தக் கூடிய மண்ணெண்ணெயை ஊற்றி, எவ்விதப் பயமுமின்றி பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, ஆபத்தான முறையில் பயணிகளின் உயிரோடு விளையாடிய 7 பேருந்துகளின் சாரதிகளையும் கையும் மெய்யுமாகப் பிடித்த பொலிஸார், அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். லாபத்தை மட்டுமே குறிவைத்து நடத்தப்படும் இவ்வாறான மோசடிகளுக்கு எதிராக இனிமேலும் சோதனைகள் தொடரும் என பொலிஸ் தரப்பு எச்சரித்துள்ளது.

கால் நூற்றாண்டு கால ஏக்கம் நிறைவு: புதிய கட்டிடக் கனவு நனவாகியது!

0

புத்தளம்: அபிவிருத்திகளும், நவீன கல்வி வசதிகளும் வெறும் வார்த்தைகளாக மட்டுமன்றி, செயல் வடிவம் பெறும்போதுதான் ஒரு சமூகத்தின் எதிர்காலம் பிரகாசமடைகிறது. அந்த வகையில், வடமேல் மாகாணத்தின் முக்கிய கல்விக்கூடங்களில் ஒன்றான புத்தளம் பாத்திமா பாலிகா மகா வித்தியாலய சமூகத்தின் கால் நூற்றாண்டு காலப் பெரும் கனவு, நேற்று சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக நனவாகத் தொடங்கியுள்ளது.

64 வருடங்களுக்கும் மேலான நீண்டதொரு வரலாற்றைக் கொண்ட இப்பாடசாலையில், போதிய இடவசதிகளின்றி மாணவிகள் எதிர்நோக்கி வந்த சவால்களுக்கு தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பாரிய தீர்வொன்றை வழங்கியுள்ளது. பாடசாலைக்கு புதிய வகுப்பறை கட்டிடம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக கடந்த 25 வருடங்களாக விடுக்கப்பட்டு வந்த கோரிக்கைகள், இதோ இப்போது சாத்தியமாகியிருக்கின்றன.

தேசிய மக்கள் சக்தியின் உள்ளூர் பிரதிநிதிகள் மற்றும் “சகோதர, சகோதரிகளின்” தொடர்ச்சியான அரசியல் மற்றும் சமூகக் களப் போராட்டங்களின் விளைவாக, தற்போதைய அரசாங்கத்தினால் இதற்கென 29 மில்லியன் ரூபா நிதி நேரடியாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் நிர்மாணிக்கப்படவுள்ள 90×25 அடி பரப்பளவைக் கொண்ட பிரம்மாண்ட புதிய வகுப்பறை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா, நேற்று (04.07.2026) காலை மிக விமரிசையாக அரங்கேறியது.

கல்லூரி அதிபர் திருமதி A.L. ஸரீனா பர்வீன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில், பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

அமைச்சருடன் இணைந்து, தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைப்பாளருமான கயான் ஜானக, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்பிட்டி மற்றும் புத்தளம் பிரதேச செயலக அபிவிருத்தி குழு தலைவருமான M.J.M. பைசல் மற்றும் புத்தளம் மாநகர சபையின் முதல்வர் ரின்ஷாத் அஹ்மத் ஆகியோர் உட்பட மாநகர சபை உறுப்பினர்களும் இந்நிகழ்வுக்கு பலம் சேர்த்தனர்.

இந்த அடிக்கல் நாட்டு விழாவானது, புத்தளம் மண்ணின் பெண் கல்வியில் ஒரு புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர்.

புத்தளத்தில் நனவாகும் ஏழைக் குடும்பத்தின் வீட்டுக்கனவு!

0

சொந்தமாக ஒரு பாதுகாப்பான வீடு என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்நாள் கனவு. அதிலும் அன்றாட வாழ்வாதாரத்திற்கே போராடும் வறிய குடும்பங்களுக்கு அது எட்டாக்கனிதான். அவ்வாறானதொரு ஏழைக் குடும்பத்தின் நீண்டகாலக் கனவை நனவாக்கும் நோக்கில், புத்தளத்தில் புதியதொரு வீட்டுத் திட்டம் நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

புத்தளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ரத்மல்யாய கிராம உத்தியோகத்தர் பிரிவிலேயே இந்த நெகிழ்ச்சியான நிகழ்வு இடம்பெற்றது. அங்கு வாழும் மிகவும் வறிய குடும்பம் ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு ஒரு நிரந்தர வீட்டை அமைத்துக் கொடுப்பதற்கான அரசாங்க நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல்லை புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கல்பிட்டி மற்றும் புத்தளம் பிரதேச செயலக அபிவிருத்திக் குழுத் தலைவருமான சகோதரர் முஹம்மது பைசல் அவர்கள் நேற்று (03.07.2026) நாட்டி வைத்தார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் முழுமையான நிதிப் பங்களிப்புடன் இந்த வீடமைப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எத்தனையோ சவால்களுக்கு மத்தியில் வாழும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும். வெறுமனே ஒரு கட்டிடத்தை எழுப்புவதுடன் நின்றுவிடாமல், பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்து, அவர்களின் முகங்களில் மகிழ்ச்சியைக் காண்பதே இதன் இலக்கு என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த முக்கிய நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரர் முகமது பைசல் அவர்களுடன், புத்தளம் பிரதேச சபை உறுப்பினரும் பிரஜா சக்தி தலைவருமான சகோதரர் கியாஸ் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் முக்கிய கட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

அவர்களோடு, அரச அதிகாரிகள், வீட்டுத் திட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் இப்பயனாளிக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அரச அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து உழைக்கும் போது அடிமட்ட மக்களின் தேவைகள் எவ்வாறு விரைவாக நிறைவேற்றப்படுகின்றன என்பதற்கு இந்த வீட்டுத் திட்டத் தொடக்கம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

கனடாவை 3-0 என வீழ்த்தி, காலிறுதிக்கு தகுதி பெற்றது மொரோக்கோ!

0

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த 2026 FIFA உலகக்கிண்ணத்தின் முதலாவது நாக்-அவுட் சுற்றில், இணை வழங்கு நாடான கனடா மற்றும் பலம் வாய்ந்த மொரோக்கோ அணிகள் மோதின. கால்பந்து வரலாற்றில் முதன்முறையாக நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்று வரலாற்று சாதனை படைத்த கனடா அணி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனால், அவர்களால் கோல் போடும் வாய்ப்புகளை துரதிர்ஷ்டவசமாக முழுமைப்படுத்த முடியவில்லை.

மைதானத்தில் பதற்றம்: மொரோக்கோவிற்கு விழுந்த பலத்த அடி!

கடந்த 2022 உலகக்கிண்ணத்தில் அரையிறுதி வரை சென்று சாதனை படைத்த ‘அட்லஸ் லயன்ஸ்’ (Morocco) அணிக்கு ஆரம்பம் அத்தனை சுலபமாக இருக்கவில்லை. ஆட்டத்தின் 22வது நிமிடத்திலேயே அணியின் முன்னணி கோல் வேட்டையாளர் இஸ்மைல் சைபாரி (Ismael Saibari) உபாதைக்குள்ளாகி மைதானத்தை விட்டு கண்ணீருடன் வெளியேறியது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரு அணிகளும் முட்டி மோதிய இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் நடுவரால் 6 மஞ்சள் அட்டைகள் (Yellow Cards) காண்பிக்கப்பட்டன என்றால், மைதானத்தில் எவ்வளவு பரபரப்பு நிலவியிருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ளுங்கள்! இறுதியாக முதல் பாதி ஆட்டம் கோல் எதுவுமின்றி சமநிலையில் முடிந்தது.

இரண்டாம் பாதியில் ருத்ரதாண்டவம் ஆடிய மொரோக்கோ!

இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியதும் ஆட்டத்தின் போக்கே தலைகீழாக மாறியது. 50வது நிமிடத்தில் மொரோக்கோவின் அசெடின் ஓனாஹி (Azzedine Ounahi) முதல் கோலை அடித்து மைதானத்தை அதிர வைத்தார். இதனால் கனடா அணி கடுமையான நெருக்கடிக்குள்ளானது. தொடர்ந்து பதிலடி கொடுக்க கனடா முயன்ற போதிலும், மொரோக்கோவின் தற்காப்பு அரணை அவர்களால் உடைக்க முடியவில்லை. ஆட்டத்தின் 82வது நிமிடத்தில் மீண்டும் ஒரு மாயாஜாலம் செய்த ஓனாஹி, தனது இரண்டாவது கோலையும் பதிவு செய்து மொரோக்கோவின் வெற்றியை அசைக்க முடியாத இடத்திற்கு கொண்டு சென்றார்.

கடைசி நிமிட ‘பினிஷிங்’

ஆட்டம் முடியப்போகும் கூடுதல் நேரத்தில், மாற்று ஆட்டக்காரராக களம் புகுந்த சுஃபியான் ரஹிமி (Soufiane Rahimi) மொரோக்கோவின் 3வது கோலை அடித்து கனடாவின் உலகக்கிண்ணக் கனவை முற்றிலுமாக தகர்த்தார். 3-0 என்ற கோல் கணக்கு கனடா அணிக்கு சற்றே ஏமாற்றத்தை தந்தாலும், உலகக்கிண்ண வரலாற்றில் தங்களது சிறந்த பங்களிப்பை வழங்கி, அஞ்சா நெஞ்சத்தோடு தலைநிமிர்ந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளது கனடா அணி.

இனி வரும் ஜூலை 9ஆம் திகதி நடைபெறவுள்ள காலிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அல்லது பராகுவே அணியுடன் மொரோக்கோ மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் டெங்கு அவசரகால நிலை! 39 பேர் பலி!

0
  • ஜனவரி முதல் ஜூலை 4 ஆம் திகதி வரை இலங்கையில் 59,638 பேருக்கு டெங்கு தொற்று உறுதி; 39 உயிர்கள் பலி!
  • மேல் மாகாணத்தில் மாத்திரம் 52.50% வீதமான பாதிப்பு; கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே அதிக அபாயம்.
  • ஜூலை மாதத்தின் முதல் 4 நாட்களில் மாத்திரம் 4,251 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு நிலைமை தீவிரமடைந்துள்ளது.

இலங்கையில் இம்முறை பெய்த தென்மேற்கு பருவமழையும், அதனைத் தொடர்ந்த வெள்ளப்பெருக்கும் வடிந்துவிட்டாலும், அது விட்டுச்சென்ற ஆபத்து இப்போது ஒட்டுமொத்த நாட்டையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. ஆம், 2026 ஆம் ஆண்டின் டெங்கு காய்ச்சல் பரவல் தற்போது சாதாரண கட்டத்தைத் தாண்டி, ஒரு தீவிர தொற்றுநோய் (Epidemic) நிலையை எட்டியுள்ளது. இது ஒவ்வொரு குடிமகனும் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டிய தருணம் என்பதை புள்ளிவிவரங்கள் அச்சுறுத்தலோடு உணர்த்துகின்றன.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் (NDCU) அதிர்ச்சியூட்டும் தரவுகளின்படி, ஜனவரி முதல் ஜூலை 4 ஆம் திகதி நள்ளிரவு வரையிலான காலப்பகுதியில் மாத்திரம் 59,638 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 39 உயிர்களை இந்த நுளம்பு காவு கொண்டுள்ளது. நிலைமையின் தீவிரம் என்னவென்றால், கடந்த மே மாதத்தில் 8,590 ஆக இருந்த பாதிப்பு, ஜூன் மாதத்தில் 21,546 ஆக இருமடங்கிற்கும் மேலாக சடுதியாக அதிகரித்துள்ளது. இதைவிடக் கொடுமை, ஜூலை மாதத்தின் முதல் நான்கு நாட்களுக்குள் மாத்திரம் 4,251 புதிய நோயாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளமை நிலைமையின் வேகத்தை கண்முன் நிறுத்துகிறது.

துரதிஷ்டவசமாக, நாட்டின் மொத்த பாதிப்பில் அரைவாசிக்கும் மேற்பட்டவை (52.50%) மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளன. கொழும்பு (12,017 பாதிப்புகள்) மற்றும் கம்பஹா (11,740 பாதிப்புகள்) ஆகிய இரண்டு மாவட்டங்கள் மாத்திரமே முழு நாட்டின் பாதிப்பில் 40 வீதத்தை தம்மகத்தே கொண்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக தென் மாகாணத்தில் 9,507 பேரும், சபரகமுவ மாகாணத்தில் 5,172 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் உள்ள 142 சுகாதார வைத்திய அதிகாரிகள் (MOH) பிரிவுகள் தற்போது “அதி அபாய வலயங்களாக” பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த சடுதியான அதிகரிப்பால் நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பு பாரிய நெருக்கடியை சந்தித்துள்ளது. சிறுவர் வைத்தியசாலைகள் உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள பல அரச வைத்தியசாலைகள் நோயாளர்களால் நிரம்பி வழிவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கண்ணங்கர கவலையுடன் சுட்டிக்காட்டியுள்ளார். ஒவ்வொரு கட்டிலிலும் நோயாளர்கள் முண்டியடிக்கும் நிலை, நிலைமையின் பயங்கரத்தை எடுத்துக்காட்டுகிறது.

இந்த ஆபத்தான நிலையை கட்டுப்படுத்த அரசாங்கம் இப்போது அதிரடி களமிறங்கியுள்ளது. சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவின் நேரடி வழிகாட்டலில் ‘அவசரகால டெங்கு ஒழிப்பு செயல்பாட்டு மையம்’ உடனடியாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் நுளம்பு பெருகும் இடங்கள் குறித்த முறைப்பாடுகளை வழங்க 0117 966366 என்ற விசேட அவசர இலக்கமும் (Hotline) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வீடுகள், பாடசாலைகள், பொது மற்றும் கட்டுமான இடங்களில் நீர் தேங்கும் வகையில் நுளம்பு பெருகும் சூழலை வைத்திருப்பவர்களுக்கு எதிராக ‘சிவப்பு எச்சரிக்கை’ (Red Notice) வழங்கப்படுவதுடன், கடுமையான சட்ட நடவடிக்கைகளும் பாய்ந்து வருகின்றன.

டெங்கு ஒரு சாதாரண காய்ச்சல் அல்ல, அது உயிரைப் பறிக்கும் ஆயுதம். உங்கள் வீட்டைச் சுற்றியுள்ள சிறிய சிரட்டை, பிளாஸ்டிக் மூடிகளில் தேங்கும் ஒரு துளி நீர் கூட உங்கள் குடும்பத்தின் உயிரைப் பறிக்கலாம். விழிப்பாக இருப்போம், டெங்குவை ஒழிப்போம்!