Saturday, May 23, 2026
Sponsored advertisementspot_img
Home Blog

நாகவில்லுவில் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ்வின் நினைவுதினம்!

பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று நாகவில்லுவில் இடம்பெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வு!

இலங்கை திருநாட்டில் பெளதீக ரீதியான பல வேலைத்திட்டங்களையும், இடம்பெயர்வு மற்றும் எல்லை நிர்ணயம் தொடர்பான பறந்துபட்ட அறிவினையும் கொண்டிருந்த எருக்கலம்பிட்டியை சேர்ந்த மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது வருட நினைவு தின நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

அந்த வகையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் நினைவுப் பேருரையும், புத்தக வெளியீடு நிகழ்வும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் ஏற்பாட்டில் நேற்று 25.08.2025 புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய அதிபர் ஜனாப் S.M. ஹுஸைமத் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், புத்தி ஜீவிகள் மற்றும் குடும்பத்தார்கள் கலந்தகொண்டமை விஷேட அம்சமாகும்.

சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் பொருளாளர் ஜனாப் ஏ.ஜி. அனீஸ் (Bsc.Agri) அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.

மேலும் இஸ்லாமிய கற்கை அறபு மொழிப் பீட, தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களினால் நூல் அறிமுக உரையும், நினைவுப் பேருரையும் மிகவும் உணர்வுபூர்வமாக நிகழ்த்தப்பட்டது.

கிழக்கு மற்றும் தென் கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பங்களிப்பு அளப்பெரியது என நினைவு கூறிய பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன், வடக்கில் ஏற்பட்ட யுத்தம் மற்றும் முஸ்லிம்களின் இடம்பெயர்வு குறித்து அதீத அக்கறையுடன் செயற்பட்ட மிக முக்கியமானவர் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்கள் எனவும் எடுத்துரைத்தார்.

வடக்கு முஸ்லிம்களின் இடம்பெயர்வு மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பில் அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களுடன் பலதரப்பட்ட கலந்துரையாடல்களை நடத்தி, சர்வதேசம் வரை இவ்விடயங்களை கொண்டுசென்ற மகான் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் என பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் தனது உரையில் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் புதல்வி சட்டத்தரணி எப்.சப்னா ஹஸ்புல்லாஹ் அவர்களினால் ஏற்புரை நிகழ்த்தப்பட்டதுடன், நூல் வெளியீடு நிகழ்வும் இடம்பெற்றது.

நூலின் முதற்பிரதியை ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தரும், புத்தளம் எருக்கலம்பிட்டி பள்ளிவாசல் நிர்வாக சபையின் முன்னாள் உறுப்பினருமான ஜனாப் ரஹ்மத்துல்லாஹ் (GS) அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

மேலும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் செயலாளர் ஜனாப் எஸ்.எச்.எம். றிஸ்னி அவர்களினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டதுடன், தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன், மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பாரியாருக்கும் நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில், பேராசிரியர்கள், கல்விமான்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், பாடசாலைச் சமூகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் குடும்பத்தார்கள் என பலரும் கலந்து சிறப்பித்ததுடன், ஈ நியூஸ் பெஸ்ட் ஊடக நிறுவனம் ஊடக அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரணிலுக்காக ஒன்று திரண்ட அரசியல் தலைவர்கள்!

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விசாரணை கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது, நாட்டின் அடிப்படை ஜனநாயக நிறுவனங்களின் வலிமை குறித்து கடுமையான கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் விளைவுகள் ஒரு தனிநபரின் அல்லது எந்தவொரு அரசியல் கட்சிகளின் தலைவிதியையும் விட, சமூகத்தின் உரிமைகளுக்கான பிரச்சினைகளை தோற்றிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் தலைவர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைகளை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது மற்றும் விளக்கமறியலை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து நடத்திய விசேட ஊடக சந்திப்பில் பங்கேற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரல முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் அறிக்கையை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

போர்த்துக்கல் அணி சாம்பியன் ஆனது!

0

‘நேஷன்ஸ் லீக்’ கால்பந்தில் போர்ச்சுகல் அணி சாம்பியன் ஆனது. பைனலில் ‘பெனால்டி ஷூட் அவுட்டில்’ 5-3 என ஸ்பெயினை வீழ்த்தியது.

ஐரோப்பிய கால்பந்து அணிகளுக்காக ‘நேஷன்ஸ் லீக்’ தொடர் நடத்தப்படுகிறது. மொத்தம் 54 அணிகள் பங்கேற்றன. நேற்று ஜெர்மனியின் முனிக் நகரில் நடந்த பைனலில், போர்ச்சுகல், நடப்பு யூரோ சாம்பியன் ஸ்பெயின் பலப்பரீட்சை நடத்தின. போட்டியின் 21வது நிமிடம் ஜுபிமெண்டி (ஸ்பெயின்), 26வது நிமிடம் மெண்டிஸ் (போர்ச்சுகல்) தலா ஒரு கோல் அடித்தனர். 45வது நிமிடம் மைக்கேல் ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் ஸ்பெயின் அணி 2-1 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் 61 வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். போர்ச்சுகல் அணிக்காக இவர் அடித்த 138வது கோல் இது. 90 நிமிட முடிவில் போட்டி 2-2 என சமன் ஆனது. அடுத்து நடந்த கூடுதல் நேரத்திலும் (30 நிமிடம்) இரு அணியும் கோல் அடிக்கவில்லை.

இதையடுத்து வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி ‘பெனால்டி ஷூட் அவுட்டுக்கு’ சென்றது. இரு அணிக்கும் தலா 5 வாய்ப்புகள் தரப்பட்டன. காயம் காரணமாக 88 வது நிமிடம் வெளியேறிய ரொனால்டோ, இதில் பங்கேற்கவில்லை.

முதல் 3 வாய்ப்பில் போர்ச்சுகலின் ராமோஸ், விடின்ஹா, பெர்ணான்டஸ் கோல் அடித்தனர். மறுபக்கம் ஸ்பெயின் தரப்பில் மெரினோ, பயேனா, இஸ்கோ கோல் அடிக்க 3-3 என ஆனது.

4வது வாய்ப்பில் மெண்டெஸ் (போர்ச்சுகல்) கோல் அடிக்க, ஸ்பெயினின் மோராட்டோ அடித்த பந்தை கோல் கீப்பர் டீகோ கோஸ்டா தடுத்து அசத்தினார்.

5வது வாய்ப்பில் நெவேஸ் கோல் அடித்தார். இதையடுத்து 5-3 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் ‘திரில்’ வெற்றி பெற்றது. 2019க்குப் பின் இத்தொடரில் மீண்டும் சாம்பியன் ஆனது.

தில்லையடியில் சிக்கிய கடத்தல் பீடி இலைகள்!

0

புத்தளத்தில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளுடன் வேன் ஒன்றும் பறிமுதல்!

இலங்கை கடற்படை, பொலிஸாருடன் இணைந்து, புத்தளம், தில்லையடி பகுதியில் 2025 ஜூன் 05 இரவு வேளையில் நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகள் கொண்ட ஒரு வேன் கைப்பற்றப்பட்டது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிறுவனம், புத்தளம் பொலிஸாருடன் இணைந்து தில்லையடி பகுதியில் நடத்திய இந்த சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்று சோதனை செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகளானது வாகனத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் வேன் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களால் ஆபத்தா?

விண்வெளியில் பூமியை சுற்றி வந்துக்கொண்டிருக்கும் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கொள்களை சீனா நினைத்தால் வெறும் 12 மணி நேரத்தில் தாக்கி அழித்துவிட முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் என்கிற செய்தி ஊடகத்தில் இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது தற்போது சீனா 99 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. இவை அனைத்தும் நான்ஜிங் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஆஸ்ட்ரோனாட்டிக்ஸ் பல்கலைக்கழகத்தின் விண்வெளிக் கட்டுப்பாட்டுத் துறையின் இயக்குநர் வூ யுன்ஹுவா தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இவை அனைத்தும் எலான் மஸ்கின் 1400 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை வெறும் 12 மணி நேரத்தில் காலி செய்துவிடும். சீன செயற்கைக்கோளில் லேசர், நுண் அலைகளை உருவாக்கும் கருவி, உளவு கருவிகள் பொருத்தப்பட்டிருக்கலாம். ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் வெறுமென நெட்வொர்க் கொடுக்க மட்டுமே பயன்படுத்தப்படுவதில்லை. தவிர, ராணுவ நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது என சீனா குற்றம்சாட்டி வருகிறது.

அதாவது, உக்ரைன்-ரஷ்யா போரில், உக்ரைன் படைகளுக்கு தகவல்கள் கொடுக்கவும், ரஷ்ய எல்லையை துல்லியமாக கண்காணிக்கவும் இந்த செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த 2022ம் ஆண்டு ரஷ்ய போரின்போது அப்போதைய உக்ரைனின் துணைப் பிரதமரான மைக்கைலோ ஃபெடோரோவ், “ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் சேவையை உடனடியாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த மஸ்க், “உடனடியாக சேவை வழங்கப்படும்” என்று கூறியிருந்தார்.

உக்ரைன் போருடன் மட்டுமே ஸ்டார்லிங்க் நிற்காது, நாளை சீனாவுக்கும்-தைவானுக்கும் பஞ்சாயது ஏற்பட்டால் அப்போதும், தைவானுக்கு சப்போர்ட் செய்ய ஸ்டார்லிங்க் வரும். எனவே இந்த கூட்டு நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்க சீனா இந்த புதிய செயற்கைக்கோள்களை உருவாக்கியிருக்கிறது.

கடந்த 2023ம் ஆண்டு இதற்கான பணிகளை சீனா தொடங்கியது. இந்த திட்டத்திற்கு ‘கியான்ஃபான் மெகா-விண்மீன் திட்டம்’ (Qianfan mega-constellation project) என்றும் பெயரிட்டிருந்தது. நோக்கம் உலகம் முழுவதும் இணைய தொடர்பை வழங்குவதாகும். இதற்காக மொத்தம் 15,000 சிறிய ரக செயற்கைக்கோள்களை ஏவ சீனா முடிவெடுத்தது. இதன் முதல் தொகுப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏவப்பட்டது. இதில் 18 செயற்கைக்கோள்கள் இருந்தன.

ஒவ்வொன்றும் சுமார் 300 கி.கி எடையில் இருந்தது. இவை பூமியிலிருந்து 800 கி.மீ உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டது. இதேபோன்று 2024 டிசம்பரில் அடுத்து இரண்டு தொகுதி ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. தற்போது மொத்தம் 99 செயற்கைக்கோள்கள் விண்வெளியில் இருக்கின்றன. 15,000 செயற்கைக்கோள்களை 3 கட்டங்களாக ஏவ இருக்கிறது. முதல் கட்டத்தில் 1,296 செயற்கைக்கோள்கள் ஏவப்படும். இதில் 648 செயற்கைக்கோள்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஏவப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் கன்னி உரை

0

அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்புவோம்

தேசியத்துவத்துடனும் ஐக்கியத்துடனும் ஒன்றுபட்டு நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க இன்று (23) காலை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

பதவிப் பிரமாணத்தின் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய முழுமையான உரை:

மக்களால் ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது நமது நாட்டின் ஜனநாயகத்திலிருக்கும் மிக முக்கியமான அம்சமாகும். தேர்தலில் வாக்களித்தல் மற்றும் ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதோடு ஜனநாயகம் நிறைவு பெறுவதில்லை. இது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சம் என்றாலும், நம் நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்த, கட்டமைப்புகளின் வலிமையும், சட்டங்களை வலுப்படுத்துவதும் அவசியம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனவே, எனது பதவிக்காலத்தில் இந்த நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.

அத்துடன், இந்த நாட்டில் ஜனநாயக முறையில் அதிகாரப் பரிமாற்றம் நடந்த வரலாறும் உண்டு. தேர்தலில் நிகழும் அதிகாரப் பரிமாற்றத்தை எந்தத் தலைவரும் நிராகரித்ததில்லை. அதற்கமைய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த மக்கள்ஆணையை சுமூகமாக ஏற்றுக்கொண்டதுடன், ஜனநாயக ரீதியில் அதிகாரத்தை கைமாற்றுவதற்கான அவரின் அர்ப்பணிப்பிற்கும் முன்னுதாரணத்திற்கும் நன்றி தெரிவிக்கிறேன். மேலும் எமக்கு கிடைப்பது மிகவும் சவால் நிறைந்த நாடு என்பதை நன்கு புரிந்து கொண்டிருக்கிறோம். நமது அரசியலில் தூய்மையான, மக்களால் எதிர்பார்க்கப்படும் சிறந்த அரசியல் கலாசாரத்திற்காக அவசியம் காணப்படுகிறது.அதற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

நம் நாட்டின் அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு நல்லெண்ணம் இல்லை. எனவே, அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் மீது மக்கள் மரியாதை மற்றும் நம்பிக்கையை மீட்டெடுக்க எங்கள் தரப்பிலிருந்து முடிந்த அனைத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.

மேலும், நமக்கு முன் இருக்கும் இந்த ஆழமான நெருக்கடியை வெறும் அரசோ, வெறும் அரசியல் கட்சியோ அல்லது ஒரு தனி நபரோ மட்டும் தீர்க்க முடியும் என்று நாங்கள் நம்பவில்லை. ஏனென்றால், நான் முன்பு கூறியது போல், நான் ஒரு மாயாஜால வித்தைக்காரனல்ல. நான் மந்திரவாதியும் இல்லை. நான் இந்த நாட்டின் சாதாரண குடிமகன். எம்மிடம் திறமைகள் உள்ளன. இயலாமைகளும் உள்ளன. தெரிந்த விடயங்களும் உள்ளன அதேபோன்று, தெரியாத விடயங்களும் உள்ளன.

ஆனால் திறமைகளைப் பயன்படுத்தி தெரியாதவற்றை சேகரித்துக்கொண்டு சிறந்த முடிவுகளை எடுத்து இந்த நாட்டை வழிநடத்துவதே எனது தலையாய பணியாகும். அந்த கூட்டுப் பங்களிப்பின் ஒரு அங்கமாக மாறுவது எனது பொறுப்பாகும். மேலும், இந்த நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதில் பொது மக்கள் மற்றும் அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் பாரிய பொறுப்பு உள்ளது. அந்தப் பொறுப்பை நிறைவேற்ற அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்.

ஆனால், நாட்டின் ஜனாதிபதி என்ற முறையில், இந்தப் பணியை முன்னின்று நடத்துவதில் எனக்கு முதன்மையான மற்றும் மிக முக்கியமான பொறுப்பு இருப்பதை நான் ஏற்றுக்கொண்டேன். எனவே, இந்தச் சவாலை வெற்றிகொள்வதற்காக எனக்குக் வழங்கப்பட்டுள்ள பணியை நான் உரிய முறையில் நிறைவேற்றுவேன் என்பதை செயற்பாடு மற்றும் நடைமுறை மூலம் எல்லா சந்தர்ப்பங்களிலும் இந்த நாட்டின் பிரஜைகளுக்கு வெளிப்படுத்த நான் தயாராக இருக்கிறேன்.

மேலும் நமது நாட்டுக்கு சர்வதேச ஆதரவு தேவை. எனவே, உலகில் எத்தகைய அதிகாரப் பிளவுகள் இருந்தாலும், ஒவ்வொரு நாட்டையும் எமக்கு மிகவும் சாதகமாக கையாள்வதே நமது எதிர்பார்ப்பாகும். நாம் உலகில் தனிமைப்படுத்தப்பட்ட நாடு அல்ல. உலகத்துடன் கூட்டாக முன்னேற வேண்டிய ஒரு நாடாகும். அது தொடர்பில் தேவையான முடிவுகளை எடுக்க நாங்கள் சிறிதும் தயங்குவதில்லை.

மேலும், நம் நாட்டைக் கட்டியெழுப்புவதில் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு பெரும் பங்கு உள்ளது. எனவே, நாட்டை மேலும் வலுவாகக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு அவர்கள் ஆதரவளிப்பார்கள் என நான் கருதுகின்றேன்.

நம் நாட்டின் ஜனநாயகத்தின் ஊடாக நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். அதற்காக மக்கள் எனக்கு வாக்களித்தனர்.

மேலும் எனக்கு வழங்கப்படாத வாக்குகளும் உள்ளன. எனவே, எங்களின் வெற்றியின் உள்ளடக்கம் மற்றும் அளவு குறித்து எங்களுக்கு நல்ல புரிதல் உள்ளது. எனவே, எங்களுக்கு ஆதரவு வழங்காத மற்றும் எங்களை நம்பாத பிரஜைகளின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெறுவதே எனது நிர்வாகத்தின் போது எனக்கு வழங்கப்பட்டுள்ள பணியாகும். அந்தப் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

எதிர்காலத்தில் இவை அனைத்தையும் நீங்கள் நடைமுறையில் கண்டுகொள்ள முடியும். அதற்கு அனைத்து மக்களின் ஆதரவையும் எதிர்பார்க்கின்றேன்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தேர்தலில் இவ்வாறுதான் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்

0

அதிகாரிகள் மற்றும் பிற தேவைகள் முடிந்த பிறகு, மாலை 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (19) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி பிற்பகல் 4.15 மணிளவில் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“எதிர்வரும் 21ம் திகதி வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள் பெறப்பட்டதும், அதிகாரிகள் மற்றும் இதர தேவைகள் முடிந்ததும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் இரவு 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

மாலை 4.15 மணிளவில் தபால் மூல வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

அத்துடன் மாவட்ட அளவில் ஒவ்வொரு வட்டாரத்திலும் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெறும்.

வாக்கு எண்ணிக்கையின் முடிவில் முடிவுகள் கிடைத்தவுடன் ஊடகங்களுக்கு வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையே முதலில் எண்ணப்படும்.

அந்தக் கணக்கெடுப்பின் பின்னர் (மாவட்ட அளவில் எண்ணும் பணி) முதலில் வாக்குப்பெட்டிகளில் உள்ள வாக்குகள் எண்ணப்படும்.

அதன் பிறகு, ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு, தொகுதி மற்றும் மாவட்ட அளவில் அது தயாரிக்கப்படுகிறது.

தேர்தல்கள் செயலகமே ஒட்டுமொத்த முடிவுகளைக் கணக்கிடும்.

எந்த வேட்பாளரும் 50 வீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்றுள்ளாரா என சரிபார்க்கப்படும்.

அப்படியானால், அந்த நேரத்தில் வாக்கு எண்ணும் பணிகள் நிறுத்தப்படும்.

அப்போது ஜனாதிபதியை நாங்கள் அறிவிப்போம்.

எந்த வேட்பாளருக்கும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் கிடைக்காவிடின், விருப்பு வாக்கு எண்ணிக்கைக்கு செல்ல வேண்டும்.

அங்கு, அதிக வாக்குகள் பெற்ற இரண்டு வேட்பாளர்கள் போட்டியில் வைத்து விட்டு  மீதமுள்ள 36 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து நீக்கப்படுவர்” என்றார்.

புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக மாறும்

0

புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வாத்தியாசலையாக மாற்றம் பெரும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று புத்தளத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ அலிசப்ரி ரஹீம் மற்றும் சிந்தக்க மாயாதுன்ன தலைமையில் புத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்திலே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

புத்தளம் மக்களின் நீண்ட நாள் தேவையாக இருந்து வருகின்ற புத்தளம் தல வைத்தியசாலையை தரமுயர்த்துவது தொடர்பாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ அலிசப்ரி ரஹீம் அவர்களினால் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோலுக்கிணங்க குறித்த வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.

மேலும் புத்தளத்தில் மீன் பிடி தொழிலை முன்னேற்றும் நோக்கத்தில் மீன் பிடி துறைமுகம் ஒன்றை அமைக்கும் யோசனையும் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டதுடன், அதற்கான முன்னெடுப்புகளும் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்டமை புத்தளம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நாட்டில் நிரந்தர பொருளாதார அபிவிருத்தியை நிலை நாட்ட தாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டை பொருளாதார அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவதே தனது பிரதான நோக்கம் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மொட்டுக்கட்சிக்கு எதிராக நிற்கும் முக்கிய அமைச்சர்கள்

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக மொட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளரை இந்த வாரம் அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்காதிருக்கவும், மொட்டு சின்னத்தில் தனியாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமக்கு ஆதரவு வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பியிருந்த கடிதம் நேற்றைய தினம் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தினால் அரசியல் குழுவில் முன்வைக்கப்பட்டது.

எவ்வாறாயினும் அந்த கடிதத்தை நிராகரிக்க அரசியல் குழுக் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுவில் 82 பேர் அங்கம் வகிப்பதுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் 72 பேர் பங்கேற்றனர்.

இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த 11 பேர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

மஹிந்தானந்த அலுத்கமகே, பந்துல குணவர்தன, பிரதீப் உந்துகொட, கோகிலா ஹர்ஷனி குணவர்தன, சஹன் பிரதீப், ரமேஸ் பத்திரன, கஞ்சன விஜேசேகர, பிரசன்ன ரணதுங்க, கனக ஹேரத், மொஹான் பிரியதர்ஷன ஆகியோர் கட்சியின் சார்பில் தனியான வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

அத்துடன் பிறிதொரு கட்சியின் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்கும் உறுப்பினர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் யோசனைக்கு 6 பேர் எதிராக வாக்களித்துள்ளனர்.

எவ்வாறாயினும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் எனக் கூறப்பட்ட தம்மிக பெரேரா தொடர்பில் அரசியல் குழுக் கூட்டத்தின்போது எந்தவித கருத்துக்களும் பரிமாற்றிக் கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவளிக்காத 11 பேர் உள்ளிட்ட தரப்பினர் நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தனவின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சைனப் ஆரம்பப் பாடசாலைக்கு ஆளுநர் வருகை!

0

புத்தளம் சைனப் ஆரம்ப பாடசாலையின் முப்பெரும் விழா பாடசாலை அதிபர் யஹியா தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து புத்தளம் ஜெய்னப் பாடசாலைக்கு 22 லட்சம் ரூபா பெறுமதியான நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு, சிறுவர் விளையாட்டு நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தல் மற்றும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் செயற்திட்டத்தின் கீழ் BCMH நிறுவனத்தினால் கற்றல் உபகரணம் வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் கடந்த செவ்வாய்க்கிழமை (16) வெகு விமர்சையாக இடம்பெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதியாக வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், விசேட அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மற்றும் கௌரவ அதிதியாக புத்தளம் வலயக்கல்விப் பணிப்பாளர் அர்ஜுன ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆரம்ப பாடசாலையின் முக்கியத்துவம் மற்றும் அறிவார்ந்த சமூகத்தை கட்டியெழுப்ப ஆரம்ப பாடசாலை ஆற்றிவருகின்ற அர்ப்பணிப்பு குறித்து விரிவாக பேசிய வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், புத்தளம் மாவட்ட பாடசாலைகளின் துரித வளர்ச்சி பற்றியும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

மேலும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் செயற்திட்டத்திற்கு வடமேல் மாகாண ஆளுநர் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் ஜவ்ஷி ஜமால்தின், இணைப்புச் செயலாளர் எச். அமீர் அலி ஆசிரியர், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் உட்பட உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் அயல் பாடசாலையின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு
நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு

ஹிருணிகாவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறை

0

கடத்தல் வழக்கில் முன்னாள் எம்.பி ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்தத் தீர்ப்பை அறிவித்தார்.

தெமட்டகொட பகுதியிலுள்ள கடை ஒன்றில் பணிபுரிந்த அமில பிரியந்த அமரசிங்க எனும் இளைஞர் ஒருவரை 2015 டிசம்பர் 21ஆம் திகதி ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு சொந்தமான டிபெண்டர் வாகனத்தில் கடத்திய வழக்கு விசாரணை முடிவில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

29 குற்றங்கள் தொடர்பில் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் 8 பேரும் குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில், அச்சம்பத்திற்கு உதவி, ஒத்தாசை புரிந்ததாக ஹிருணிகா மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்திருந்தார்.

அத்தோடு, சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவின் ஆதரவாளர்கள் 8 பேர் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைதான ஐந்தாம் சந்தேகநபரின் மகள் அளித்துள்ள வாக்குமூலத்தில், தமது தாயாருடன் தொடர்பு பேணிய நபர் ஒருவரை தாம் காண்பித்ததாகவும், அவரை தமது தந்தையும் அவருடன் சென்றவர்களும் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு ஹிருணிகாவிடம் அழைத்துச் சென்றதாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

ஓவியப்போட்டியில் எருக்கலம்பிட்டி மாணவன் முதலாமிடம்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட வட மாகாண மானவர்களுக்கிடையிலான சித்திரப்போட்டியில் மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்றார்.

வீதி விபத்துக்கள் இல்லாத நாளைக்கான பாடசாலையிலிருந்து அணிவக்குப்போம் எனும் தொனிப்பொருளில் கடந்த வியாழக்கிழமை (13.06.2024) அன்று நடாத்தப்பட்ட வட மாகாண மாணவர்களுக்கிடையிலான குறித்த சித்திரப்போட்டியில் சுமார் 2600 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

சித்திரப்போட்டியில் பங்குபற்றிய 2600 மாணவர்களில் 250 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு நேற்றைய தினம் (15.06.2024) அவர்களுக்கான போட்டி இடம்பெற்றது.

நடைபெற்று முடிந்த இறுதிச் சுற்றுப்போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்று பெருமதிமிக்க பரிசில்களை பெற்றுக்கொண்டார்.

முதலாம் இடம் பெற்ற முஹம்மது ஹுசைன் என்ற மாணவனுக்கு சான்றிதல், துவிச்சக்கரவண்டி மற்றும் 8500/- ரூபா பெறுமதியான வவுச்சரும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இதேவேளை குறித்த போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய இல்முதீன் முஹம்மது ஹஸ்பான் 7 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய மற்றொரு மாணவரான முஹம்மது சம்ஹான் 8 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

பாரிய சாவல்களுக்கு மத்தியில் தனி ஒரு மனிதனாக இம் மாணாவர்களை ஊக்கப்படுத்தி, தயார்ப்படுத்தி போட்டியில் பங்குபெறச் செய்து வெற்றிபெறச் செய்த எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியின் சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் அவர்களின் இம் முயற்சிக்கு, பாடசாலை சமூகம் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் நன்றி தெரிவித்தனர்.

தமக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வந்து தேசிய அளவில் இடம்பெறும் போட்டிகளில் மாணவர்களை பங்குபெறச் செய்வதே தனது இலக்கு என சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் எமது ஊடகத்திற்கு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை இராஜினாமா

0

நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்துள்ளனர்.

சாந்த நிரியல்ல உட்பட 15 பேர் கொண்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரின் அறிவித்தலுக்கு அமைய இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி திங்கட்கிழமை புதிய பணிப்பாளர் சபை நியமிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ “அத தெரண” விற்கு தெரிவித்தார்.

புத்தளம் எருக்கலம்பிட்டியில் கடும் வெள்ளம்

0

புத்தளம் பகுதியில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக புத்தளம் பகுதி முழுதும் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.

புத்தளம், தில்லையடி, பாலாவி, புத்தளம் எருக்கலம்பிட்டி, ஹிதாயத் நகர்,  மதுரங்குளி மற்றும் ஏனைய பல கிராமங்களும் வெள்ளித்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமமும் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 1500 குடும்பங்கள் இங்கு வாழ்ந்துவருவதுடன், அனைத்து வீடுகளும் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நூற்றிற்கும் அதிகமான வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் ஐநூற்றுக்கும் அதிகமான வீடுகள் பகுதி அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8ஆம் திகதி ஏற்பட்ட மழை வெள்ளித்தினால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் மற்றும் பாடசாலைகளில் தற்காலிகமாக  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு தினங்களாக இவர்களுக்கான சமைத்த உணவுகள் மூன்று வேலைகளிலும் ஊர் தனவந்தர்களின் உதவியுடனும், பள்ளிவாசல் நிர்வாக சபையின் வழிகாட்டலுடனும் வழங்கப்பட்டு வருவதுடன், ஊர் மக்களுக்கும் உணவு விநியோகங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

இவர்களுக்கான நிவாரண உதவிகள் இதுவரை அரசாங்கத்தினால் வழங்கப்படாத போதிலும், ஊர் மக்களின் பங்களிப்புடன் மாத்திரமே பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு விநியோகங்கள் இதுவரை  வழங்கப்பட்டு வருகின்றது.

புத்தளம் பொத்துவில்லு பகுதியில் உள்ள குளம் மழை நீரினால்  பெருக்கெடுத்துள்ளதால் குறித்த குளத்து நீர் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமத்திற்குள் தொடர்ந்தும் மூன்றாவது நாளாக ஊடறுத்து செல்வதால் வீடுகள் தொடர்ந்தும் நீருள் மூழ்கியுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்தின் நிவாரண உதவிக்காக பல மக்கள் தொடர்ந்தும் எதிர்பார்த்து காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பொருளாதார நெருக்கடி இனி ஒருபோதும் வராது!

0

“நாட்டில் 2022 ஆம் ஆண்டைப் போன்றதொரு பொருளாதார நெருக்கடி மீண்டும் ஒருபோதும் ஏற்படாது” என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் யுத்தச் சூழல் ஒரு வெளிப்புற சவாலாக இருந்தாலும், அதனைத் திறம்படக் கையாள்வதற்கான ஆளுமையும் பலமும் தற்போதைய அரசாங்கத்திடம் உள்ளதாக அவர் உறுதியளித்துள்ளார்.

12 ஆண்டு காலமாக முடங்கிக் கிடந்த நிந்தவூர் கலாசார நிலையத்தின் நிர்மாணப் பணிகளை இன்று (22) முற்பகல் மீண்டும் ஆரம்பித்து வைக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

“அன்று 50 மில்லியன் டொலர்… இன்று 7,000 மில்லியன் டொலர்!”

மத்திய கிழக்கு யுத்த சூழலால் டொலரின் மதிப்பு உயர்ந்து, இறக்குமதிப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தற்போதைய நிலையை 2022 உடன் ஒப்பிடுபவர்களுக்குப் பதிலடி கொடுத்தார்:

“சிலர் இது 2022 போன்ற நிலை என்று வதந்திகளைப் பரப்பப் பார்க்கிறார்கள். ஆனால், 2022 இல் நம்மிடம் ரூபாயும் இருக்கவில்லை, மத்திய வங்கியில் டொலரும் இருக்கவில்லை. அன்று மத்திய வங்கியில் வெறும் 50 மில்லியன் டொலர்களே இருந்தது. ஆனால் இன்று சந்தையில் டொலர் தட்டுப்பாடு நிலவினாலும், மத்திய வங்கியிடம் கிட்டத்தட்ட 7,000 மில்லியன் டொலர் கையிருப்பு உள்ளது. இன்னும் சில தினங்களில் மேலும் 700 மில்லியன் டொலர்கள் கிடைக்கவுள்ளன.”

அன்று ஏற்பட்டது போல எரிபொருள், எரிவாயு, பால்மா அல்லது உரத் தட்டுப்பாடு நாட்டில் மீண்டும் ஏற்படுவதற்கு தற்போதைய அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என்றும் அவர் நாட்டு மக்களுக்குப் பொறுப்புடன் உறுதியளித்தார்.

மக்கள் ஆணையின் பலம்: “ஒன்றரை வருடங்களில் சாதித்தது என்ன?”

சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைத்து மக்களின் பேராதரவுடன் இந்த ஆட்சி மலர்ந்து ஒன்றரை வருடங்கள் நிறைவடைந்துள்ளதை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, மக்கள் தமக்கு வழங்கிய ஆணையின் எதிர்பார்ப்புகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்:

  • இனவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி: கடந்த காலத்தில் நிலவிய அச்சமும் அவநம்பிக்கையும் ஒழிக்கப்பட்டு, கடந்த ஒன்றரை வருடங்களாக அனைத்து இன மக்களும் எவ்வித அச்சமும் இன்றி ஒற்றுமையாக வாழும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
  • அரசியல்வாதிகளின் எல்லையற்ற சலுகைகள் ரத்து: 5 வருடங்கள் பணியாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துடன், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரச செலவில் வழங்கப்பட்ட வீடு, வாகனம், மின் மற்றும் நீர்க்கட்டண சலுகைகளும் நிறுத்தப்பட்டு, அவர்கள் சத்தமின்றி வெளியேறியுள்ளனர்.
  • ஊழலுக்கு எதிரான சவுக்கடி: “நானோ, எனது அமைச்சரவையோ அல்லது எம்.பிக்களோ மக்களின் ஒரு சதத்தைக் கூட திருடவோ வீண்விரயம் செய்யவோ மாட்டோம். அவ்வாறு செய்பவர்களுக்கு இந்த அரசில் இடமில்லை” என ஜனாதிபதி முழங்கினார்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம்: “முன்னாள் ஜனாதிபதிகளும் விதிவிலக்கல்ல”

“அதிகாரம், செல்வம் மற்றும் அந்தஸ்து ஆகியவற்றைப் பார்க்காமல் இன்று சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது” என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, இலங்கையின் வரலாற்றிலேயே முதல் முறையாக முன்னாள் ஜனாதிபதிகள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கும், நீதிமன்றத்திற்கும் அழைக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார். பஸ்களில் ஆட்களைத் திரட்டி வந்து வீதியில் கோஷமிடுவதற்காக அரசாங்கம் தனது சட்ட நடவடிக்கைகளை மாற்றப்போவதில்லை என்றும் அவர் எச்சரித்தார்.

12 ஆண்டுகளின் பின் உயிர் பெற்ற நிந்தவூர் கலாசார நிலையம்!

1999 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, 2014 ஆம் ஆண்டு முதல் முழுமையாகக் கைவிடப்பட்டிருந்த நிந்தவூர் கலாசார நிலையத்தின் பணிகள், இப்பிரதேச மக்களின் நீண்டகால கோரிக்கைக்கு அமைவாக 12 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

  • மொத்த திட்ட மதிப்பு: 945.04 மில்லியன் ரூபா.
  • தற்போதைய ஒதுக்கீடு: 2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் 300 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இறுதி இலக்கு: எஞ்சிய நிதியும் தேவைக்கேற்ப ஒதுக்கப்பட்டு, 2027 திசம்பர் 31 ஆம் திகதிக்குள் பணிகள் முழுமையாக நிறைவு செய்யப்படும்.
முக்கிய பிரமுகர்களின் கருத்துக்கள்:
  • நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா: “கடந்த தேர்தல் காலத்தில் இப்பிரதேச மக்களின் மிக முக்கிய கோரிக்கையாக இந்த கலாசார நிலையமே இருந்தது. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, வரவுசெலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கி, இன்று பணிகளை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதிக்கு நிந்தவூர் மக்கள் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”
  • கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர: “30 வருட யுத்தத்தினால் கிழக்கு மாகாண மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். இந்த அரசாங்கம் இன, மத பேதமின்றிச் செயற்படுகிறது. இந்த கலாசார மண்டபம் அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழ்வதற்கான அடித்தளமாக அமையும்.”

இந்நிகழ்வில் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர், மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

நாகவில்லுவில் ஒளிரும் வீதிகள்; வெள்ளத் தடுப்புப் பணிகளும் தீவிரம்!

புத்தளம் பிரதேச சபைக்குட்பட்ட நாகவில்லு, எருக்கலம்பிட்டி கிராம மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு மிகத் துரிதமாகத் தீர்வு காணப்பட்டுள்ளது. புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் ஷாஹின் ரீஷா அவர்களின் நேரடி வழிகாட்டலில், அப்பகுதியில் பழுதடைந்திருந்த வீதி மின்விளக்குகள் அனைத்தும் புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், வடிகான் துப்பரவுப் பணிகளும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இருளை விரட்டிய 35 மின்விளக்குகள்!

எருக்கலம்பிட்டி கிராமத்தின் குறுக்கு வீதிகளில் உள்ள சுமார் 35 வீதி மின்விளக்குகள் பழுதடைந்திருந்ததன் காரணமாக, இரவு வேளைகளில் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்தனர். குறிப்பாக, இப்பகுதிகளில் இருளைப் பயன்படுத்தி சில இளைஞர்கள் தவறான நடத்தைகளில் ஈடுபடுவதாக மக்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். அத்துடன், பொதுமக்கள் இரவு வேளையில் பாதுகாப்பாகப் பயணிக்க முடியாத நிலையும் காணப்பட்டது.

பொதுமக்களின் இந்த நியாயமான கோரிக்கையையும் பாதுகாப்பையும் கருத்திற் கொண்டு, கடந்த இரண்டு தினங்களாக மேற்கொள்ளப்பட்ட தீவிர திருத்தப்பணிகள் தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. எதிர்வரும் தியாகத் திருநாளான ஈதுல் அழ்ஹா (ஹஜ் பெருநாள்) தினத்தை முன்னிட்டு, மக்கள் அச்சமின்றி நடமாடும் வகையில் இத்திருத்தப்பணி மிகவும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டதாக பிரதேச சபை உறுப்பினர் ஷாஹின் ரீஷா எமது ஈ நியூஸ் பெஸ்ட் ஊடகத்திற்கு தெரிவித்தார்.

இதேபோன்று கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பதாகவும், ஜனாப் ஷாஹீன் ரீஸாவின் வழிகாட்டலில் இப்பகுதியின் குறுக்கு வீதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் திருத்தப்பட்டு மக்கள் பாவனைக்குக் கையளிக்கப்பட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.

பருவமழைக்கு முன் அதிரடி: பெகோ இயந்திரம் மூலம் வடிகான்கள் துப்பரவு!

இதேவேளை தற்போது ஆரம்பமாகியுள்ள பருவப்பெயர்ச்சி மழையினை அடுத்து, கிராமத்தில் ஏற்படக்கூடிய வெள்ள அனர்த்தங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மற்றொரு பாரிய வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் ஷாஹீன் ரீஸா அவர்கள் புத்தளம் பிரதேச சபை தலைவரிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, பிரதேச சபைத் தலைவரின் நேரடி கண்காணிப்பில் வடிகான்களைத் துப்பரவு செய்யும் பணிகள் நேற்று முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் மருங்கில் உள்ள வீதியோர வடிகான்கள் மற்றும் கிராமத்தின் குறுக்கு வீதிகளில் உள்ள வடிகான்கள் ‘பெகோ’ இயந்திரங்கள் மூலம் வடிகான்களில் தேங்கியிருந்த கழிவுகள் மற்றும் மண் திட்டுக்கள் அகற்றப்பட்டு துப்பரவு செய்யப்பட்டன.

மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியும் நன்றியும்!

எருக்கலம்பிட்டி கிராமத்தின் ‘C’ பகுதியில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் இவ்வாறானதொரு முறையான வடிகான் துப்பரவுப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதனால் இப்பகுதியில் வழக்கமாக ஏற்படும் வெள்ள அபாயம் நீங்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தங்களின் தேவைகளை உணர்ந்து, பண்டிகைக் காலத்திலும், மழைக்காலத்திலும் மிகத் துரிதமாகச் செயற்பட்ட பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் ஷாஹீன் ரீஸாவிற்கு எருக்கலம்பிட்டி கிராம மக்கள் தமது நெஞ்சார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

நுரைச்சோலை மின்நிலையம் குறித்து ஆராய அவசர உப குழு நியமனம்!

0

நுரைச்சோலை லக்விஜய மின்நிலையத்தால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் தாக்கத்தை ஆராய்ந்து பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கு உப குழு

நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தினால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் தாக்கத்தை ஆராய்ந்து பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) பாக்ய ஸ்ரீ ஹேரத் அவர்கள் தலைமையில் உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களின் தலைமையில் அண்மையில் கூடிய போதே இந்த உபகுழு நியமிக்கப்பட்டது.

நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தினால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் தாக்கம் குறித்து கலந்துரையாடுவதற்கு சுற்றாடல் அமைச்சு, வலுசக்தி அமைச்சு, சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு உள்ளிட்ட அரசாங்க நிறுவனங்கள் சிலவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் இதில் பங்கெடுத்திருந்தனர்.

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாட்டினால் சுற்றுச்சூழலில் ஏற்படும் தாக்கம் குறித்தும், அதற்குப் பொறுப்பான தரப்பினர் மற்றும் நிறுவனங்களால் ஏதேனும் குறைபாடுகள் இடம்பெற்றுள்ளனவா என்பது குறித்து நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் பின்னரே குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக உப குழுவொன்றை நியமிக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இலங்கையில் உள்ள ஜேர்மன், ஜப்பான் மற்றும் சீன தூதுரகங்கள் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் போன்றவற்றுடன் கலந்துரையாடி அந்தந்த நாடுகளில் மின் உற்பத்தி நிலையங்கள் அமைந்துள்ள சூழல்களில் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களை அறிந்துகொள்வது தொடர்பில் அதிகாரிகளுக்கு பயிற்சித் திட்டமொன்றை வழங்குவது தொடர்பில் கோரிக்கை முன்வைக்கவிருப்பதாக குழுவின் தலைவர் இங்கு தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் NTM. தாஹிர்
புத்தளம் மாவட்ட செயலாளர் திரு. சிந்திக்க சில்வா
பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி

புத்தளத்தில் ரத்மல்யாய, தம்மன்னகம பகுதிகளில் இரு குடும்பங்களுக்கு புதிய வீடுகள்!

0

வறுமைக் கோட்டின் கீழ் வாழும் எளிய மக்களின் ஆகப்பெரிய கனவு, தமக்கென ஒரு நிரந்தரமான ஒரு வீட்டை அமைத்துக் கொள்வதாகும். அந்தக் கனவை நனவாக்கி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான மற்றுமொரு உன்னதப் படிநிலை இன்று புத்தளத்தில் அரங்கேறியுள்ளது.

புத்தளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இரண்டு வெவ்வேறான கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில், மிகவும் வறிய நிலையில் வாழ்ந்து வந்த இரு குடும்பங்களுக்கு, அரசாங்க நிதியுதவியுடன் கூடிய நிரந்தர வீடுகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இன்று (22) மிகச் சிறப்பாக நடைபெற்றன.

ரத்மல்யாய கிராமத்தில் புதிய விடியல்

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நிதியுதவியுடன், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை இலக்காகக் கொண்டு இந்த வீடமைப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக, புத்தளம் பிரதேச செயலகப் பிரிவின் ரத்மல்யாய கிராம உத்தியோகத்தர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட ஒரு வறிய குடும்பத்திற்கான புதிய வீட்டின் அடிக்கல் இன்று காலை நாட்டி வைக்கப்பட்டது.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் M.J.M. பைசல் அவர்களின் கரங்களால் இந்த அடிக்கல் உத்தியோகபூர்வமாக நாட்டி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில்:

  • புத்தளம் பிரதேச சபை உறுப்பினரும் பிரஜா சக்தி தலைவருமான சகோதரர் கியாஸ்,
  • தேசிய மக்கள் சக்தியின் (NPP) முக்கிய கட்சி உறுப்பினர்கள்,
  • அரச அதிகாரிகள் மற்றும் வீடமைப்புத் திட்ட உத்தியோகத்தர்கள்,
  • பயனாளி குடும்பத்தினர் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
தம்மன்னகம கிராமத்திலும் தொடர்ந்த மக்கள் சேவை

இதனைத் தொடர்ந்து, புத்தளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தம்மன்னகம கிராம உத்தியோகத்தர் பிரிவிலும் மற்றுமொரு வறிய குடும்பத்திற்கான நிரந்தர வீட்டுக்காக பாராளுமன்ற உறுப்பினர் M.J.M. பைசல் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டன.

உரிய தகுதியின் அடிப்படையில், மிகவும் கஷ்டப்படும் குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு, இந்த வீடுகள் வழங்கப்படுவது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தம்மன்னகமவில் நடைபெற்ற நிகழ்வில்:

  • பாராளுமன்ற உறுப்பினர் சகோதரர் முகமது பைசல்,
  • புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ரஜிதா,
  • பிரஜா சக்தி தலைவர் சகோதரர் நிமேஸ்,
  • தேசிய மக்கள் சக்தியின் கட்சி உறுப்பினர்கள் மற்றும் வீட்டுத்திட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

“சொந்தமாக ஒரு வீடு என்பது எட்டாக்கனியாக இருந்த நிலையில், அரசாங்கத்தின் இந்த நிதியுதவி எமது வாழ்நாளின் ஆகச்சிறந்த பரிசாகும்” என வீடுகளைப் பெற்றுக்கொண்ட பயனாளிகள் இதன்போது நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

தேசிய மக்கள் சக்தியின் மக்கள் நலத்திட்டங்களின் ஒரு பகுதியாக, அடிமட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் இந்த வீடமைப்புப் பணிகள் தங்குதடையின்றி முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அவசர எச்சரிக்கை: கொட்டும் மழையால் அதிரும் 6 மாவட்டங்கள்!

0

நாடு முழுவதும் வெளுத்து வாங்கி வரும் கனமழை மற்றும் சீரற்ற வானிலை காரணமாக, இலங்கையின் மிக முக்கிய 6 மாவட்டங்களுக்குப் பாரிய நிலச்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) இந்த அவசர எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த நிலச்சரிவுக்கான ஆரம்பக்கட்ட எச்சரிக்கையானது நாளை (மே 23) இரவு 9:00 மணி வரை அமலில் இருக்கும் என NBRO அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

🛑 உயிரைக் காக்க உடனே நகருங்கள்: 7 பிரதேசங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’ (Level 3)!

நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதால், கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மிக ஆபத்தான ‘நிலை 3’ (Level 3 Red Warning) சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் வாழும் மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

  • கேகாலை மாவட்டம்: தெரணியகல, ருவன்வெல்ல, தெஹியோவிட்ட.
  • இரத்தினபுரி மாவட்டம்: இரத்தினபுரி, அயகம, குருவிட்ட, எஹெலியகொட.

முக்கிய குறிப்பு: சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்போர், நிலச்சரிவுக்கான அறிகுறிகள் (மண்ணில் வெடிப்பு, மரங்கள் சாய்வது, திடீர் நீரூற்றுகள்) தென்பட்டால் கணப்பொழுதும் தாமதிக்காமல் பாதுகாப்பான முகாம்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

⚠️ தீவிரக் கண்காணிப்பில் இருக்கும் ஏனைய பகுதிகள் (Level 2 எச்சரிக்கை):

மேலும் 6 மாவட்டங்களைச் சேர்ந்த பல பிரதேசங்களுக்கு ‘நிலை 2’ (Level 2) எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில்

மாவட்டம்அபாயப் பகுதிகள் (Level 2)
கொழும்புசீதாவக்க, படுகா
கம்பஹாமீரிகம, திவுலபிட்டிய, அத்தனகல்ல
களுத்துறைஅகலவத்த, மத்துகம, ஹொரண, புலத்சிங்கள, இங்கிரிய, பாலிந்தநுவர
கேகாலைபுலத்கோஹுபிட்டிய, யாட்டியாந்தோட்டை
நுவரெலியாஅம்பகமுவ
இரத்தினபுரிபெல்மதுல்ல, கிரியெல்ல, எலபாத்த, கலவானை, நிவித்திகல
🌧️ செய்திப் பிரிவு வழங்கும் அவசர வேண்டுகோள்:

மழை தொடர்ந்து நீடிப்பதால், மலைப்பாங்கான மற்றும் சரிவான பகுதிகளில் வசிக்கும் மக்கள் இரவு வேளைகளில் கூடுதல் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அத்தியாவசியத் தேவையின்றி ஆபத்தான மலைப் பாதைகளில் பயணிப்பதைத் தவிர்க்குமாறும் மக்கள் கேட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

உங்கள் உயிரும், உங்கள் குடும்பத்தின் பாதுகாப்பும் உங்கள் கைகளில்தான் உள்ளது! வானிலை மாற்றங்களை உடனுக்குடன் அவதானியுங்கள்!

9 ஆண்டு கால முடக்கம்? மாகாண சபை தேர்தலுக்கு விழுந்தது இடி!

0

கொழும்பு, மே 22 (டெய்லி மிரர்) – நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் சமூகச் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டிற்குள் மாகாண சபை தேர்தல்களை நடத்துவது சாத்தியமில்லை என்று அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் (NPP) முதன்மைக் கூட்டணிக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனவின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா ‘டெய்லி மிரர்’ நாளிதழுக்கு வழங்கிய நேர்காணலில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். மாகாண சபை தேர்தல்களை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அடுத்த ஆண்டே (2027) ஆராயப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

9 ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் மாகாண சபைகள்!

அதிகாரப் பகிர்வு, அரசியலமைப்பு சீர்திருத்தம் மற்றும் நீண்டகாலமாகத் தாமதிக்கப்பட்டு வரும் மாகாண சபை தேர்தல்களை நடத்துவது ஆகியவற்றுக்குத் தேசிய மக்கள் சக்தி (NPP) தனது தேர்தல் கொள்கைப் பிரகடனத்தில் முக்கியத்துவம் அளித்திருந்தது. இருப்பினும், கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து இலங்கையின் மாகாண சபைகள் அனைத்தும் மக்கள் பிரதிநிதிகள் இன்றி முடங்கிய நிலையிலேயே காணப்படுகின்றன.

தேர்தலை நடத்துவதில் தேர்தல் ஆணைக்குழுவிற்குப் பெரும் சவாலாக இருப்பது தற்போதைய அரசியல் சூழல் மட்டுமல்ல; தேர்தல் முறையில் கொண்டுவரப்பட்ட ஒரு “சட்டச் சிக்கல்” தான் இதற்குக் பிரதான காரணம் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.

தேர்தலை முடக்கிய ‘விகிதாசார முறை’ மாற்றம்

மாகாண சபை தேர்தல் முறையை மாற்றுவதற்காக 2017 ஆம் ஆண்டு 17 ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல் (திருத்தச்) சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்படி, ‘கலப்பு உறுப்பினர் விகிதாசார பிரதிநிதித்துவ முறை’ இதன்போது அறிமுகப்படுத்தப்பட்டது.

  • 50% பிரதிநிதிகள்: வட்டார ரீதியாக (Wards) நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவர்.
  • 50% பிரதிநிதிகள்: விகிதாசாரப் பட்டியலின் (Proportional lists) அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இந்த புதிய முறையின் கீழ் தேர்தலை நடத்துவதற்குத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்காக நியமிக்கப்பட்ட எல்லை நிர்ணய ஆணைக்குழு தனது அறிக்கையை 2018 இல் சமர்ப்பித்தது. ஆனால், அரசியல் கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட கடுமையான முரண்பாடுகள் காரணமாக, நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட அந்த அறிக்கை பெரும்பான்மை ஆதரவின்றி தோற்கடிக்கப்பட்டது.

எதிர்க்கட்சிகளின் கோரிக்கையும் நாடாளுமன்றக் குழுவின் முடிவும்

புதிய முறையின் கீழ் எல்லைகளை மறுநிர்ணயம் செய்வது சட்டரீதியாகவும், கால அவகாசத்தின் அடிப்படையிலும் பெரும் சவாலாக உள்ளது. எனவே, தேர்தலை மேலும் தாமதப்படுத்தாமல், “பழைய தேர்தல் முறையிலேயே” உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்த இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவும், எந்த தேர்தல் முறையின் கீழ் மாகாண சபை தேர்தலை நடத்தலாம் என்பதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காகவும் தற்போது நாடாளுமன்ற விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைகள் மற்றும் சட்டத் திருத்தங்களைத் தொடர்ந்தே, 9 ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் மாகாண சபைகளுக்குப் புதிய உயிர் கிடைக்குமா என்பது தெரியவரும். அதுவரை மக்கள் பிரதிநிதிகள் இல்லாத மாகாண நிர்வாகமே தொடரும் எனத் தெரிகிறது.

பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டது வெள்ள அபாய எச்சரிக்கை!

0

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக சில நீர்நிலைகளை அண்மித்த பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி களனி மற்றும் களு கங்கையை அண்மித்த சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கே வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீர்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, களனி கங்கையை அண்மித்த ருவன்வெல்ல, சீத்தாவக்க, தொம்பே, தெஹியோவிட்ட, எஹெலியகொட, யட்டியாந்தோட்டை மற்றும் புளத்கோபிட்டிய ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட தாழ்நிலப்பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், களு கங்கையின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், அதனை அண்மித்த சில தாழ்நிலப்பகுதிகளுக்கு சிறு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, இரத்தினபுரி, குருவிட்ட, அயகம, எலபத்தா, கிரியெல்ல ஆகிய தாழ்நிலப்பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதற்குரிய அபாயம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை கொழும்பு ஆமர் வீதி பகுதியில் ஜெயத்தவனாராமய விஹாரையை அண்மித்த வீதியில், வெள்ள நீர் நிரம்பியுள்ளதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளாதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

அத்துடன் கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியின், ரன்வல பஹன பகுதி, நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 200 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன், மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வௌ்ளத்தால் மூழ்கிய சிலாபம் வைத்தியசாலை!

0

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, சிலாபம் பொது வைத்தியசாலையின் 3 சிகிச்சை அறைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 

இதன் காரணமாக அந்த சிகிச்சை அறைகளில் இருந்த நோயாளர்களை வேறு சிகிச்சை அறைகளுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் தினேஷ் கொக்கல தெரிவித்தார். 

அத்துடன், நேற்று இரவு முதல் பெய்து வரும் பலத்த மழை காரணமாக புத்தளம் பகுதியின் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், சில வீதிகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

புத்தளம் – மாதம்பை, கலகிட்டியாவ வீதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்தமையினால் அவ்வீதியின் போக்குவரத்து முழுமையாக ஸ்தம்பிதமடைந்துள்ளது. 

இதன் காரணமாக அவ்வீதியைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு மாதம்பை பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இலங்கையின் அந்நிய செலாவணி சந்தை பாரிய நெருக்கடியில்: ஹர்ஷ!

0

இலங்கையின் அந்நிய செலாவணி சந்தை தற்போது ஒரு அபாயகரமான “நச்சுச் சுழற்சியில்” (Vicious Cycle) சிக்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் சீர்குலைவதைத் தடுக்கவேண்டுமானால், சந்தையில் நம்பிக்கையை கட்டியெழுப்புவது மிக அவசரமானத் தேவை என அவர் வலியுறுத்தினார்.

வேகமாக வீழ்ச்சியடையும் ரூபாயின் மதிப்பு

சந்தையானது முழுக்க முழுக்க “நம்பிக்கை” என்பதன் அடிப்படையிலேயே இயங்குகிறது என்று குறிப்பிட்ட அவர், அந்த நம்பிக்கை உடையும் போது ஒட்டுமொத்த சந்தையும் வீழ்ச்சியடையும் என எச்சரித்தார். இலங்கை வங்கியின் தரவுகளின்படி, ஒரு அமெரிக்க டாலரின் விற்பனை விலை 354 ரூபாயைக் கடந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், இந்த வீழ்ச்சி எங்கு போய் நிற்கும் என்ற கேள்வி எழுந்துள்ளதாகக் கூறினார்.

சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த நிச்சயமற்ற தன்மையால் ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கின்றனர்.

ஏற்றுமதியாளர்கள் ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடையும் என்ற எதிர்பார்ப்பில், தங்களிடமுள்ள டாலர்களை ரூபாயாக மாற்றாமல் காலம் தாழ்த்துகின்றனர்.

இதேபோல இறக்குமதியாளர்கள் எதிர்காலத்தில் டாலரின் விலை இன்னும் அதிகரிக்கும் என்ற அச்சத்தில், தற்போதே டாலர்களைக் கொள்வனவு செய்ய முற்படுகின்றனர்.

இதன் காரணமாக சந்தையில் டாலருக்கான தட்டுப்பாடு அதிகரிப்பதுடன், முறையான கேள்வி மற்றும் வழங்கல் (Bid and Offer) இல்லாத நிலை உருவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்பு

சந்தையில் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை குறைந்துள்ளதால், அதனை ஈடுசெய்ய அடுத்த வாரமளவில் வட்டி விகிதங்கள் 50 முதல் 100 புள்ளிகள் (0.5% – 1%) வரை அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஹர்ஷ டி சில்வா எச்சரித்துள்ளார். அவ்வாறு வட்டி விகிதம் அதிகரித்தால்:

  1. அரசாங்கம் செலுத்த வேண்டிய கடன் வட்டி அதிகரிக்கும்.
  2. மக்கள் மீது சுமத்தப்படும் வரி அளவு மேலும் அதிகரிக்கக்கூடும்.
அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட அழைப்பு

“நாடு வீழ்ச்சியடைய நான் விடமாட்டேன்” என ஜனாதிபதி கூறுவது மட்டும் சந்தைக்குப் போதுமானதல்ல என்று குறிப்பிட்ட அவர், சந்தை அரசியல் ரீதியானது அல்ல என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றார். நிதி அமைச்சு, திறைசேரி மற்றும் மத்திய வங்கி ஆகியவை இணைந்து சந்தையில் நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்பத் தேவையான முறையான பொறிமுறையை உடனடியாகச் செயற்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

தவறும் பட்சத்தில், இந்த பொருளாதார நச்சுச் சுழற்சி நாட்டை மேலும் பாரிய விபரீதத்திற்கு இட்டுச் செல்லும் என அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

உலகின் மிகச்சிறந்த நாடுகளின் வரிசையில் இலங்கை 4-வது இடம்!

0
குடும்பங்கள் குடியேறச் சிறந்த நாடுகள்: உலகளவில் இலங்கை 4-வது இடம்!

புதிய நாடு ஒன்றிற்கு இடம்பெயரும் போது கவனிக்க வேண்டிய மிக முக்கிய காரணிகளான சுகாதாரத் தரம், வாழ்க்கைச் செலவு, வேலைவாய்ப்புகள் மற்றும் குடும்பங்களுக்கான உகந்த சூழல் உள்ளிட்ட 34 முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு, உலகளவில் பிரபலமான 82 நாடுகள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில் இலங்கை மிக முக்கிய இடத்தை பிடித்துளளது.

இந்த ஆய்வின் முடிவில், குடும்பங்களுடன் குடியேறுவதற்கு மிகச்சிறந்த நாடுகளின் பட்டியலில் ஸ்பெயின் முதலிடத்தையும், சீனா இரண்டாம் இடத்தையும், அமெரிக்கா மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன. இவற்றைத் தொடர்ந்து இலங்கை 4-வது இடத்தைக் கைப்பற்றி ஆசிய பிராந்தியத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

தரவரிசையை தீர்மானித்த முக்கிய காரணிகள்

கடந்த 2025-ஆம் ஆண்டின் அறிக்கையோடு ஒப்பிடுகையில், இந்த 2026-ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் கூடுதல் காரணிகளும் விரிவான அளவீடுகளும் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக, குழந்தைகளுடன் இடம்பெயரும் குடும்பங்களின் அன்றாட வாழ்க்கையைத் தீர்மானிக்கும் நடைமுறைச் சாத்தியக்கூறுகள் குறித்து இந்த ஆய்வு தீவிரமாக ஆராய்ந்துள்ளது.

  • கல்வியின் தரம்
  • மலிவான குழந்தை பராமரிப்புச் செலவுகள் (Childcare Affordability)
  • மகப்பேறு மற்றும் பிரசவ விடுப்புக் கொள்கைகள் (Maternity & Paternity Leave)
  • சர்வதேசப் பள்ளிகளுக்கான வாய்ப்புகள் (International Schooling) போன்ற முக்கிய விடயங்கள் இதில் உற்றுநோக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் முன்னேற்றத்திற்கு வழியமைத்த காரணங்கள்

கடந்த ஆண்டு (2025) இதே தரவரிசையில் இலங்கை முதலிடத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டும் புதிய மற்றும் விரிவுபடுத்தப்பட்ட அளவீடுகளுக்கு மத்தியிலும் இலங்கை முன்னணியில் திகழ்கிறது.

இலங்கையின் தரமான கல்வி முறை மற்றும் மிகவும் மலிவான குழந்தை பராமரிப்புச் செலவுகள் ஆகியவையே இலங்கை 4-வது இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.

மேலும், குடியேறும் குடும்பங்களுக்கு அத்தியாவசியத் தேவையாகக் கருதப்படும் “சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பு” கொண்ட நாடுகளின் வரிசையிலும் இலங்கை 5-வது இடத்தைப் பிடித்து மற்றுமொரு மைல்கல்லை எட்டியுள்ளது.

சர்வதேச நாடுகளின் நிலைப்பாடு (முதல் 3 இடங்கள்)

தரவரிசைநாடுமுக்கிய சிறப்பம்சங்கள்
01ஸ்பெயின்மலிவான குழந்தை பராமரிப்பு, தாராளமான பெற்றோர் விடுமுறைக் கொள்கைகள் (2026 முதல் கூடுதல் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அமலாகிறது) மற்றும் வலுவான பொதுக் கல்வி முறை.
02சீனாவிரிவான கல்வி உள்கட்டமைப்பு, முக்கிய நகரங்களில் அதிகரித்து வரும் சர்வதேசப் பள்ளிகளின் தேர்வுகள் மற்றும் மேம்பட்டு வரும் பெற்றோர் விடுமுறை வசதிகள்.
03அமெரிக்காசில மாநிலங்களில் குழந்தை பராமரிப்புச் செலவுகள் அதிகமாக இருந்தபோதிலும், சர்வதேசப் பள்ளிகளின் தரம் மற்றும் பலதரப்பட்ட கல்விப் பாதைகள்.

இலங்கைக்கு அடுத்தபடியாக, சிறந்த சர்வதேசப் பள்ளிகள் மற்றும் கவர்ச்சிகரமான பெற்றோர் நலன்புரிச் சலுகைகள் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் (UAE) வெளிநாட்டுத் தொழிலாளர்களை ஈர்க்கும் முக்கிய நாடாகத் தொடர்ந்து நீடிக்கிறது.

வெளிநாடுகளுக்கு இடம்பெயர நினைக்கும் குடும்பங்களுக்கு, வெறும் கனவுகளை விட அன்றாட நடைமுறைச் சாத்தியக்கூறுகளே மிக முக்கியம்” என ரெமிட்லி நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய அளவீடுகளின் சேர்க்கை காரணமாக கடந்த ஆண்டு பின்வரிசையில் இருந்த பல நாடுகள் இம்முறை முதல் 10 இடங்களுக்குள் முன்னேறியுள்ள நிலையில், இலங்கை தொடர்ந்து தனது வலுவான நிலையைத் தக்கவைத்துக் கொண்டுள்ளமை சிறப்பம்சமாகும்.