Saturday, May 9, 2026
Sponsored advertisementspot_img
Home Blog

நாகவில்லுவில் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ்வின் நினைவுதினம்!

பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று நாகவில்லுவில் இடம்பெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வு!

இலங்கை திருநாட்டில் பெளதீக ரீதியான பல வேலைத்திட்டங்களையும், இடம்பெயர்வு மற்றும் எல்லை நிர்ணயம் தொடர்பான பறந்துபட்ட அறிவினையும் கொண்டிருந்த எருக்கலம்பிட்டியை சேர்ந்த மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது வருட நினைவு தின நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

அந்த வகையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் நினைவுப் பேருரையும், புத்தக வெளியீடு நிகழ்வும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் ஏற்பாட்டில் நேற்று 25.08.2025 புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய அதிபர் ஜனாப் S.M. ஹுஸைமத் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், புத்தி ஜீவிகள் மற்றும் குடும்பத்தார்கள் கலந்தகொண்டமை விஷேட அம்சமாகும்.

சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் பொருளாளர் ஜனாப் ஏ.ஜி. அனீஸ் (Bsc.Agri) அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.

மேலும் இஸ்லாமிய கற்கை அறபு மொழிப் பீட, தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களினால் நூல் அறிமுக உரையும், நினைவுப் பேருரையும் மிகவும் உணர்வுபூர்வமாக நிகழ்த்தப்பட்டது.

கிழக்கு மற்றும் தென் கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பங்களிப்பு அளப்பெரியது என நினைவு கூறிய பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன், வடக்கில் ஏற்பட்ட யுத்தம் மற்றும் முஸ்லிம்களின் இடம்பெயர்வு குறித்து அதீத அக்கறையுடன் செயற்பட்ட மிக முக்கியமானவர் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்கள் எனவும் எடுத்துரைத்தார்.

வடக்கு முஸ்லிம்களின் இடம்பெயர்வு மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பில் அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களுடன் பலதரப்பட்ட கலந்துரையாடல்களை நடத்தி, சர்வதேசம் வரை இவ்விடயங்களை கொண்டுசென்ற மகான் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் என பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் தனது உரையில் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் புதல்வி சட்டத்தரணி எப்.சப்னா ஹஸ்புல்லாஹ் அவர்களினால் ஏற்புரை நிகழ்த்தப்பட்டதுடன், நூல் வெளியீடு நிகழ்வும் இடம்பெற்றது.

நூலின் முதற்பிரதியை ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தரும், புத்தளம் எருக்கலம்பிட்டி பள்ளிவாசல் நிர்வாக சபையின் முன்னாள் உறுப்பினருமான ஜனாப் ரஹ்மத்துல்லாஹ் (GS) அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

மேலும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் செயலாளர் ஜனாப் எஸ்.எச்.எம். றிஸ்னி அவர்களினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டதுடன், தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன், மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பாரியாருக்கும் நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில், பேராசிரியர்கள், கல்விமான்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், பாடசாலைச் சமூகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் குடும்பத்தார்கள் என பலரும் கலந்து சிறப்பித்ததுடன், ஈ நியூஸ் பெஸ்ட் ஊடக நிறுவனம் ஊடக அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரணிலுக்காக ஒன்று திரண்ட அரசியல் தலைவர்கள்!

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விசாரணை கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது, நாட்டின் அடிப்படை ஜனநாயக நிறுவனங்களின் வலிமை குறித்து கடுமையான கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் விளைவுகள் ஒரு தனிநபரின் அல்லது எந்தவொரு அரசியல் கட்சிகளின் தலைவிதியையும் விட, சமூகத்தின் உரிமைகளுக்கான பிரச்சினைகளை தோற்றிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் தலைவர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைகளை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது மற்றும் விளக்கமறியலை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து நடத்திய விசேட ஊடக சந்திப்பில் பங்கேற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரல முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் அறிக்கையை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

போர்த்துக்கல் அணி சாம்பியன் ஆனது!

0

‘நேஷன்ஸ் லீக்’ கால்பந்தில் போர்ச்சுகல் அணி சாம்பியன் ஆனது. பைனலில் ‘பெனால்டி ஷூட் அவுட்டில்’ 5-3 என ஸ்பெயினை வீழ்த்தியது.

ஐரோப்பிய கால்பந்து அணிகளுக்காக ‘நேஷன்ஸ் லீக்’ தொடர் நடத்தப்படுகிறது. மொத்தம் 54 அணிகள் பங்கேற்றன. நேற்று ஜெர்மனியின் முனிக் நகரில் நடந்த பைனலில், போர்ச்சுகல், நடப்பு யூரோ சாம்பியன் ஸ்பெயின் பலப்பரீட்சை நடத்தின. போட்டியின் 21வது நிமிடம் ஜுபிமெண்டி (ஸ்பெயின்), 26வது நிமிடம் மெண்டிஸ் (போர்ச்சுகல்) தலா ஒரு கோல் அடித்தனர். 45வது நிமிடம் மைக்கேல் ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் ஸ்பெயின் அணி 2-1 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் 61 வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். போர்ச்சுகல் அணிக்காக இவர் அடித்த 138வது கோல் இது. 90 நிமிட முடிவில் போட்டி 2-2 என சமன் ஆனது. அடுத்து நடந்த கூடுதல் நேரத்திலும் (30 நிமிடம்) இரு அணியும் கோல் அடிக்கவில்லை.

இதையடுத்து வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி ‘பெனால்டி ஷூட் அவுட்டுக்கு’ சென்றது. இரு அணிக்கும் தலா 5 வாய்ப்புகள் தரப்பட்டன. காயம் காரணமாக 88 வது நிமிடம் வெளியேறிய ரொனால்டோ, இதில் பங்கேற்கவில்லை.

முதல் 3 வாய்ப்பில் போர்ச்சுகலின் ராமோஸ், விடின்ஹா, பெர்ணான்டஸ் கோல் அடித்தனர். மறுபக்கம் ஸ்பெயின் தரப்பில் மெரினோ, பயேனா, இஸ்கோ கோல் அடிக்க 3-3 என ஆனது.

4வது வாய்ப்பில் மெண்டெஸ் (போர்ச்சுகல்) கோல் அடிக்க, ஸ்பெயினின் மோராட்டோ அடித்த பந்தை கோல் கீப்பர் டீகோ கோஸ்டா தடுத்து அசத்தினார்.

5வது வாய்ப்பில் நெவேஸ் கோல் அடித்தார். இதையடுத்து 5-3 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் ‘திரில்’ வெற்றி பெற்றது. 2019க்குப் பின் இத்தொடரில் மீண்டும் சாம்பியன் ஆனது.

தில்லையடியில் சிக்கிய கடத்தல் பீடி இலைகள்!

0

புத்தளத்தில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளுடன் வேன் ஒன்றும் பறிமுதல்!

இலங்கை கடற்படை, பொலிஸாருடன் இணைந்து, புத்தளம், தில்லையடி பகுதியில் 2025 ஜூன் 05 இரவு வேளையில் நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகள் கொண்ட ஒரு வேன் கைப்பற்றப்பட்டது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிறுவனம், புத்தளம் பொலிஸாருடன் இணைந்து தில்லையடி பகுதியில் நடத்திய இந்த சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்று சோதனை செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகளானது வாகனத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் வேன் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களால் ஆபத்தா?

விண்வெளியில் பூமியை சுற்றி வந்துக்கொண்டிருக்கும் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கொள்களை சீனா நினைத்தால் வெறும் 12 மணி நேரத்தில் தாக்கி அழித்துவிட முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் என்கிற செய்தி ஊடகத்தில் இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது தற்போது சீனா 99 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. இவை அனைத்தும் நான்ஜிங் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஆஸ்ட்ரோனாட்டிக்ஸ் பல்கலைக்கழகத்தின் விண்வெளிக் கட்டுப்பாட்டுத் துறையின் இயக்குநர் வூ யுன்ஹுவா தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இவை அனைத்தும் எலான் மஸ்கின் 1400 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை வெறும் 12 மணி நேரத்தில் காலி செய்துவிடும். சீன செயற்கைக்கோளில் லேசர், நுண் அலைகளை உருவாக்கும் கருவி, உளவு கருவிகள் பொருத்தப்பட்டிருக்கலாம். ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் வெறுமென நெட்வொர்க் கொடுக்க மட்டுமே பயன்படுத்தப்படுவதில்லை. தவிர, ராணுவ நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது என சீனா குற்றம்சாட்டி வருகிறது.

அதாவது, உக்ரைன்-ரஷ்யா போரில், உக்ரைன் படைகளுக்கு தகவல்கள் கொடுக்கவும், ரஷ்ய எல்லையை துல்லியமாக கண்காணிக்கவும் இந்த செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த 2022ம் ஆண்டு ரஷ்ய போரின்போது அப்போதைய உக்ரைனின் துணைப் பிரதமரான மைக்கைலோ ஃபெடோரோவ், “ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் சேவையை உடனடியாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த மஸ்க், “உடனடியாக சேவை வழங்கப்படும்” என்று கூறியிருந்தார்.

உக்ரைன் போருடன் மட்டுமே ஸ்டார்லிங்க் நிற்காது, நாளை சீனாவுக்கும்-தைவானுக்கும் பஞ்சாயது ஏற்பட்டால் அப்போதும், தைவானுக்கு சப்போர்ட் செய்ய ஸ்டார்லிங்க் வரும். எனவே இந்த கூட்டு நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்க சீனா இந்த புதிய செயற்கைக்கோள்களை உருவாக்கியிருக்கிறது.

கடந்த 2023ம் ஆண்டு இதற்கான பணிகளை சீனா தொடங்கியது. இந்த திட்டத்திற்கு ‘கியான்ஃபான் மெகா-விண்மீன் திட்டம்’ (Qianfan mega-constellation project) என்றும் பெயரிட்டிருந்தது. நோக்கம் உலகம் முழுவதும் இணைய தொடர்பை வழங்குவதாகும். இதற்காக மொத்தம் 15,000 சிறிய ரக செயற்கைக்கோள்களை ஏவ சீனா முடிவெடுத்தது. இதன் முதல் தொகுப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏவப்பட்டது. இதில் 18 செயற்கைக்கோள்கள் இருந்தன.

ஒவ்வொன்றும் சுமார் 300 கி.கி எடையில் இருந்தது. இவை பூமியிலிருந்து 800 கி.மீ உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டது. இதேபோன்று 2024 டிசம்பரில் அடுத்து இரண்டு தொகுதி ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. தற்போது மொத்தம் 99 செயற்கைக்கோள்கள் விண்வெளியில் இருக்கின்றன. 15,000 செயற்கைக்கோள்களை 3 கட்டங்களாக ஏவ இருக்கிறது. முதல் கட்டத்தில் 1,296 செயற்கைக்கோள்கள் ஏவப்படும். இதில் 648 செயற்கைக்கோள்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஏவப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் கன்னி உரை

0

அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்புவோம்

தேசியத்துவத்துடனும் ஐக்கியத்துடனும் ஒன்றுபட்டு நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க இன்று (23) காலை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

பதவிப் பிரமாணத்தின் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய முழுமையான உரை:

மக்களால் ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது நமது நாட்டின் ஜனநாயகத்திலிருக்கும் மிக முக்கியமான அம்சமாகும். தேர்தலில் வாக்களித்தல் மற்றும் ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதோடு ஜனநாயகம் நிறைவு பெறுவதில்லை. இது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சம் என்றாலும், நம் நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்த, கட்டமைப்புகளின் வலிமையும், சட்டங்களை வலுப்படுத்துவதும் அவசியம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனவே, எனது பதவிக்காலத்தில் இந்த நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.

அத்துடன், இந்த நாட்டில் ஜனநாயக முறையில் அதிகாரப் பரிமாற்றம் நடந்த வரலாறும் உண்டு. தேர்தலில் நிகழும் அதிகாரப் பரிமாற்றத்தை எந்தத் தலைவரும் நிராகரித்ததில்லை. அதற்கமைய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த மக்கள்ஆணையை சுமூகமாக ஏற்றுக்கொண்டதுடன், ஜனநாயக ரீதியில் அதிகாரத்தை கைமாற்றுவதற்கான அவரின் அர்ப்பணிப்பிற்கும் முன்னுதாரணத்திற்கும் நன்றி தெரிவிக்கிறேன். மேலும் எமக்கு கிடைப்பது மிகவும் சவால் நிறைந்த நாடு என்பதை நன்கு புரிந்து கொண்டிருக்கிறோம். நமது அரசியலில் தூய்மையான, மக்களால் எதிர்பார்க்கப்படும் சிறந்த அரசியல் கலாசாரத்திற்காக அவசியம் காணப்படுகிறது.அதற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

நம் நாட்டின் அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு நல்லெண்ணம் இல்லை. எனவே, அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் மீது மக்கள் மரியாதை மற்றும் நம்பிக்கையை மீட்டெடுக்க எங்கள் தரப்பிலிருந்து முடிந்த அனைத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.

மேலும், நமக்கு முன் இருக்கும் இந்த ஆழமான நெருக்கடியை வெறும் அரசோ, வெறும் அரசியல் கட்சியோ அல்லது ஒரு தனி நபரோ மட்டும் தீர்க்க முடியும் என்று நாங்கள் நம்பவில்லை. ஏனென்றால், நான் முன்பு கூறியது போல், நான் ஒரு மாயாஜால வித்தைக்காரனல்ல. நான் மந்திரவாதியும் இல்லை. நான் இந்த நாட்டின் சாதாரண குடிமகன். எம்மிடம் திறமைகள் உள்ளன. இயலாமைகளும் உள்ளன. தெரிந்த விடயங்களும் உள்ளன அதேபோன்று, தெரியாத விடயங்களும் உள்ளன.

ஆனால் திறமைகளைப் பயன்படுத்தி தெரியாதவற்றை சேகரித்துக்கொண்டு சிறந்த முடிவுகளை எடுத்து இந்த நாட்டை வழிநடத்துவதே எனது தலையாய பணியாகும். அந்த கூட்டுப் பங்களிப்பின் ஒரு அங்கமாக மாறுவது எனது பொறுப்பாகும். மேலும், இந்த நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதில் பொது மக்கள் மற்றும் அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் பாரிய பொறுப்பு உள்ளது. அந்தப் பொறுப்பை நிறைவேற்ற அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்.

ஆனால், நாட்டின் ஜனாதிபதி என்ற முறையில், இந்தப் பணியை முன்னின்று நடத்துவதில் எனக்கு முதன்மையான மற்றும் மிக முக்கியமான பொறுப்பு இருப்பதை நான் ஏற்றுக்கொண்டேன். எனவே, இந்தச் சவாலை வெற்றிகொள்வதற்காக எனக்குக் வழங்கப்பட்டுள்ள பணியை நான் உரிய முறையில் நிறைவேற்றுவேன் என்பதை செயற்பாடு மற்றும் நடைமுறை மூலம் எல்லா சந்தர்ப்பங்களிலும் இந்த நாட்டின் பிரஜைகளுக்கு வெளிப்படுத்த நான் தயாராக இருக்கிறேன்.

மேலும் நமது நாட்டுக்கு சர்வதேச ஆதரவு தேவை. எனவே, உலகில் எத்தகைய அதிகாரப் பிளவுகள் இருந்தாலும், ஒவ்வொரு நாட்டையும் எமக்கு மிகவும் சாதகமாக கையாள்வதே நமது எதிர்பார்ப்பாகும். நாம் உலகில் தனிமைப்படுத்தப்பட்ட நாடு அல்ல. உலகத்துடன் கூட்டாக முன்னேற வேண்டிய ஒரு நாடாகும். அது தொடர்பில் தேவையான முடிவுகளை எடுக்க நாங்கள் சிறிதும் தயங்குவதில்லை.

மேலும், நம் நாட்டைக் கட்டியெழுப்புவதில் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு பெரும் பங்கு உள்ளது. எனவே, நாட்டை மேலும் வலுவாகக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு அவர்கள் ஆதரவளிப்பார்கள் என நான் கருதுகின்றேன்.

நம் நாட்டின் ஜனநாயகத்தின் ஊடாக நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். அதற்காக மக்கள் எனக்கு வாக்களித்தனர்.

மேலும் எனக்கு வழங்கப்படாத வாக்குகளும் உள்ளன. எனவே, எங்களின் வெற்றியின் உள்ளடக்கம் மற்றும் அளவு குறித்து எங்களுக்கு நல்ல புரிதல் உள்ளது. எனவே, எங்களுக்கு ஆதரவு வழங்காத மற்றும் எங்களை நம்பாத பிரஜைகளின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெறுவதே எனது நிர்வாகத்தின் போது எனக்கு வழங்கப்பட்டுள்ள பணியாகும். அந்தப் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

எதிர்காலத்தில் இவை அனைத்தையும் நீங்கள் நடைமுறையில் கண்டுகொள்ள முடியும். அதற்கு அனைத்து மக்களின் ஆதரவையும் எதிர்பார்க்கின்றேன்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தேர்தலில் இவ்வாறுதான் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்

0

அதிகாரிகள் மற்றும் பிற தேவைகள் முடிந்த பிறகு, மாலை 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (19) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி பிற்பகல் 4.15 மணிளவில் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“எதிர்வரும் 21ம் திகதி வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள் பெறப்பட்டதும், அதிகாரிகள் மற்றும் இதர தேவைகள் முடிந்ததும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் இரவு 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

மாலை 4.15 மணிளவில் தபால் மூல வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

அத்துடன் மாவட்ட அளவில் ஒவ்வொரு வட்டாரத்திலும் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெறும்.

வாக்கு எண்ணிக்கையின் முடிவில் முடிவுகள் கிடைத்தவுடன் ஊடகங்களுக்கு வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையே முதலில் எண்ணப்படும்.

அந்தக் கணக்கெடுப்பின் பின்னர் (மாவட்ட அளவில் எண்ணும் பணி) முதலில் வாக்குப்பெட்டிகளில் உள்ள வாக்குகள் எண்ணப்படும்.

அதன் பிறகு, ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு, தொகுதி மற்றும் மாவட்ட அளவில் அது தயாரிக்கப்படுகிறது.

தேர்தல்கள் செயலகமே ஒட்டுமொத்த முடிவுகளைக் கணக்கிடும்.

எந்த வேட்பாளரும் 50 வீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்றுள்ளாரா என சரிபார்க்கப்படும்.

அப்படியானால், அந்த நேரத்தில் வாக்கு எண்ணும் பணிகள் நிறுத்தப்படும்.

அப்போது ஜனாதிபதியை நாங்கள் அறிவிப்போம்.

எந்த வேட்பாளருக்கும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் கிடைக்காவிடின், விருப்பு வாக்கு எண்ணிக்கைக்கு செல்ல வேண்டும்.

அங்கு, அதிக வாக்குகள் பெற்ற இரண்டு வேட்பாளர்கள் போட்டியில் வைத்து விட்டு  மீதமுள்ள 36 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து நீக்கப்படுவர்” என்றார்.

புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக மாறும்

0

புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வாத்தியாசலையாக மாற்றம் பெரும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று புத்தளத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ அலிசப்ரி ரஹீம் மற்றும் சிந்தக்க மாயாதுன்ன தலைமையில் புத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்திலே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

புத்தளம் மக்களின் நீண்ட நாள் தேவையாக இருந்து வருகின்ற புத்தளம் தல வைத்தியசாலையை தரமுயர்த்துவது தொடர்பாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ அலிசப்ரி ரஹீம் அவர்களினால் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோலுக்கிணங்க குறித்த வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.

மேலும் புத்தளத்தில் மீன் பிடி தொழிலை முன்னேற்றும் நோக்கத்தில் மீன் பிடி துறைமுகம் ஒன்றை அமைக்கும் யோசனையும் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டதுடன், அதற்கான முன்னெடுப்புகளும் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்டமை புத்தளம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நாட்டில் நிரந்தர பொருளாதார அபிவிருத்தியை நிலை நாட்ட தாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டை பொருளாதார அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவதே தனது பிரதான நோக்கம் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மொட்டுக்கட்சிக்கு எதிராக நிற்கும் முக்கிய அமைச்சர்கள்

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக மொட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளரை இந்த வாரம் அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்காதிருக்கவும், மொட்டு சின்னத்தில் தனியாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமக்கு ஆதரவு வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பியிருந்த கடிதம் நேற்றைய தினம் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தினால் அரசியல் குழுவில் முன்வைக்கப்பட்டது.

எவ்வாறாயினும் அந்த கடிதத்தை நிராகரிக்க அரசியல் குழுக் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுவில் 82 பேர் அங்கம் வகிப்பதுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் 72 பேர் பங்கேற்றனர்.

இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த 11 பேர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

மஹிந்தானந்த அலுத்கமகே, பந்துல குணவர்தன, பிரதீப் உந்துகொட, கோகிலா ஹர்ஷனி குணவர்தன, சஹன் பிரதீப், ரமேஸ் பத்திரன, கஞ்சன விஜேசேகர, பிரசன்ன ரணதுங்க, கனக ஹேரத், மொஹான் பிரியதர்ஷன ஆகியோர் கட்சியின் சார்பில் தனியான வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

அத்துடன் பிறிதொரு கட்சியின் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்கும் உறுப்பினர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் யோசனைக்கு 6 பேர் எதிராக வாக்களித்துள்ளனர்.

எவ்வாறாயினும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் எனக் கூறப்பட்ட தம்மிக பெரேரா தொடர்பில் அரசியல் குழுக் கூட்டத்தின்போது எந்தவித கருத்துக்களும் பரிமாற்றிக் கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவளிக்காத 11 பேர் உள்ளிட்ட தரப்பினர் நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தனவின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சைனப் ஆரம்பப் பாடசாலைக்கு ஆளுநர் வருகை!

0

புத்தளம் சைனப் ஆரம்ப பாடசாலையின் முப்பெரும் விழா பாடசாலை அதிபர் யஹியா தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து புத்தளம் ஜெய்னப் பாடசாலைக்கு 22 லட்சம் ரூபா பெறுமதியான நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு, சிறுவர் விளையாட்டு நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தல் மற்றும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் செயற்திட்டத்தின் கீழ் BCMH நிறுவனத்தினால் கற்றல் உபகரணம் வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் கடந்த செவ்வாய்க்கிழமை (16) வெகு விமர்சையாக இடம்பெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதியாக வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், விசேட அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மற்றும் கௌரவ அதிதியாக புத்தளம் வலயக்கல்விப் பணிப்பாளர் அர்ஜுன ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆரம்ப பாடசாலையின் முக்கியத்துவம் மற்றும் அறிவார்ந்த சமூகத்தை கட்டியெழுப்ப ஆரம்ப பாடசாலை ஆற்றிவருகின்ற அர்ப்பணிப்பு குறித்து விரிவாக பேசிய வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், புத்தளம் மாவட்ட பாடசாலைகளின் துரித வளர்ச்சி பற்றியும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

மேலும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் செயற்திட்டத்திற்கு வடமேல் மாகாண ஆளுநர் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் ஜவ்ஷி ஜமால்தின், இணைப்புச் செயலாளர் எச். அமீர் அலி ஆசிரியர், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் உட்பட உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் அயல் பாடசாலையின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு
நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு

ஹிருணிகாவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறை

0

கடத்தல் வழக்கில் முன்னாள் எம்.பி ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்தத் தீர்ப்பை அறிவித்தார்.

தெமட்டகொட பகுதியிலுள்ள கடை ஒன்றில் பணிபுரிந்த அமில பிரியந்த அமரசிங்க எனும் இளைஞர் ஒருவரை 2015 டிசம்பர் 21ஆம் திகதி ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு சொந்தமான டிபெண்டர் வாகனத்தில் கடத்திய வழக்கு விசாரணை முடிவில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

29 குற்றங்கள் தொடர்பில் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் 8 பேரும் குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில், அச்சம்பத்திற்கு உதவி, ஒத்தாசை புரிந்ததாக ஹிருணிகா மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்திருந்தார்.

அத்தோடு, சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவின் ஆதரவாளர்கள் 8 பேர் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைதான ஐந்தாம் சந்தேகநபரின் மகள் அளித்துள்ள வாக்குமூலத்தில், தமது தாயாருடன் தொடர்பு பேணிய நபர் ஒருவரை தாம் காண்பித்ததாகவும், அவரை தமது தந்தையும் அவருடன் சென்றவர்களும் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு ஹிருணிகாவிடம் அழைத்துச் சென்றதாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

ஓவியப்போட்டியில் எருக்கலம்பிட்டி மாணவன் முதலாமிடம்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட வட மாகாண மானவர்களுக்கிடையிலான சித்திரப்போட்டியில் மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்றார்.

வீதி விபத்துக்கள் இல்லாத நாளைக்கான பாடசாலையிலிருந்து அணிவக்குப்போம் எனும் தொனிப்பொருளில் கடந்த வியாழக்கிழமை (13.06.2024) அன்று நடாத்தப்பட்ட வட மாகாண மாணவர்களுக்கிடையிலான குறித்த சித்திரப்போட்டியில் சுமார் 2600 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

சித்திரப்போட்டியில் பங்குபற்றிய 2600 மாணவர்களில் 250 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு நேற்றைய தினம் (15.06.2024) அவர்களுக்கான போட்டி இடம்பெற்றது.

நடைபெற்று முடிந்த இறுதிச் சுற்றுப்போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்று பெருமதிமிக்க பரிசில்களை பெற்றுக்கொண்டார்.

முதலாம் இடம் பெற்ற முஹம்மது ஹுசைன் என்ற மாணவனுக்கு சான்றிதல், துவிச்சக்கரவண்டி மற்றும் 8500/- ரூபா பெறுமதியான வவுச்சரும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இதேவேளை குறித்த போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய இல்முதீன் முஹம்மது ஹஸ்பான் 7 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய மற்றொரு மாணவரான முஹம்மது சம்ஹான் 8 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

பாரிய சாவல்களுக்கு மத்தியில் தனி ஒரு மனிதனாக இம் மாணாவர்களை ஊக்கப்படுத்தி, தயார்ப்படுத்தி போட்டியில் பங்குபெறச் செய்து வெற்றிபெறச் செய்த எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியின் சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் அவர்களின் இம் முயற்சிக்கு, பாடசாலை சமூகம் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் நன்றி தெரிவித்தனர்.

தமக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வந்து தேசிய அளவில் இடம்பெறும் போட்டிகளில் மாணவர்களை பங்குபெறச் செய்வதே தனது இலக்கு என சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் எமது ஊடகத்திற்கு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை இராஜினாமா

0

நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்துள்ளனர்.

சாந்த நிரியல்ல உட்பட 15 பேர் கொண்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரின் அறிவித்தலுக்கு அமைய இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி திங்கட்கிழமை புதிய பணிப்பாளர் சபை நியமிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ “அத தெரண” விற்கு தெரிவித்தார்.

புத்தளம் எருக்கலம்பிட்டியில் கடும் வெள்ளம்

0

புத்தளம் பகுதியில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக புத்தளம் பகுதி முழுதும் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.

புத்தளம், தில்லையடி, பாலாவி, புத்தளம் எருக்கலம்பிட்டி, ஹிதாயத் நகர்,  மதுரங்குளி மற்றும் ஏனைய பல கிராமங்களும் வெள்ளித்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமமும் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 1500 குடும்பங்கள் இங்கு வாழ்ந்துவருவதுடன், அனைத்து வீடுகளும் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நூற்றிற்கும் அதிகமான வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் ஐநூற்றுக்கும் அதிகமான வீடுகள் பகுதி அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8ஆம் திகதி ஏற்பட்ட மழை வெள்ளித்தினால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் மற்றும் பாடசாலைகளில் தற்காலிகமாக  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு தினங்களாக இவர்களுக்கான சமைத்த உணவுகள் மூன்று வேலைகளிலும் ஊர் தனவந்தர்களின் உதவியுடனும், பள்ளிவாசல் நிர்வாக சபையின் வழிகாட்டலுடனும் வழங்கப்பட்டு வருவதுடன், ஊர் மக்களுக்கும் உணவு விநியோகங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

இவர்களுக்கான நிவாரண உதவிகள் இதுவரை அரசாங்கத்தினால் வழங்கப்படாத போதிலும், ஊர் மக்களின் பங்களிப்புடன் மாத்திரமே பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு விநியோகங்கள் இதுவரை  வழங்கப்பட்டு வருகின்றது.

புத்தளம் பொத்துவில்லு பகுதியில் உள்ள குளம் மழை நீரினால்  பெருக்கெடுத்துள்ளதால் குறித்த குளத்து நீர் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமத்திற்குள் தொடர்ந்தும் மூன்றாவது நாளாக ஊடறுத்து செல்வதால் வீடுகள் தொடர்ந்தும் நீருள் மூழ்கியுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்தின் நிவாரண உதவிக்காக பல மக்கள் தொடர்ந்தும் எதிர்பார்த்து காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் 15 வருடமாகத் தொடரும் மணல் கொள்ளை!

கிளிநொச்சி மாவட்டம், தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெத்தலியாற்றுப் பகுதியில் கடந்த 15 ஆண்டுகாலமாகத் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் சட்டவிரோத மணல் அகழ்வினால், அப்பகுதியின் இயற்கைச் சூழலும் விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன.

விவசாய நிலங்கள் மற்றும் அரச காடுகள் பாதிப்பு

​சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுபவர்கள், ஆற்றுப் படுக்கைகளைத் தாண்டி ஆற்றுக்கு அருகாமையில் அமைந்துள்ள விளைநிலங்களுக்குள்ளும் அத்துமீறி நுழைந்து மணல் அகழ்வில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக:

  • ​பல ஏக்கர் கணக்கான விவசாய நிலங்கள் பாரிய குழிகளாக மாற்றப்பட்டு, செய்கைக்கு உதவாத நிலங்களாக மாறியுள்ளன.
  • ​ஆற்றுப் படுக்கைகள் சிதைக்கப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, விவசாயக் கிணறுகள் வற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் அருகிலுள்ள அரச காடுகள் அழிக்கப்பட்டு, இயற்கை அரணாக விளங்கும் மரங்களும் வேரோடு சாய்க்கப்படுகின்றன.

பறவைகள் சரணாலயத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்

​நெத்தலியாற்றுப் பகுதியை அண்டியுள்ள பறவைகள் சரணாலயம் மற்றும் வனவிலங்கு வாழ்விடங்கள் மணல் கொள்ளையர்களின் செயற்பாட்டினால் சிதைக்கப்பட்டு வருகின்றன. இயந்திரங்கள் எழுப்பும் சத்தம் மற்றும் மனித ஊடுருவல்கள் காரணமாக இப்பகுதிக்கு வரும் அரிய வகை பறவைகள் இடம்பெயர்ந்து செல்வதுடன், வனவிலங்குகளின் வாழ்விடங்களும் சுருங்கி வருகின்றன.

அதிகாரிகளின் மௌனம் – மக்கள் விசனம்

​சுமார் 15 வருடங்களாக இச்சட்டவிரோத செயற்பாடுகள் பகிரங்கமாக நடைபெற்று வரும் நிலையிலும், இதனைத் தடுப்பதற்கு உரிய அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பிரதேச மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

​தர்மபுரம் பொலிஸார் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரிகள் ஒன்றிணைந்து, இப்பகுதியில் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்களும் விவசாய அமைப்புகளும் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.

30 இலட்சம் இலஞ்சம் பெற்ற குருநாகல் மாநகர பிரதி மேயர்!

0

ஒப்பந்தம் ஒன்றை இரத்து செய்யாமல் இருப்பதற்காக 30 இலட்சம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் குருநாகல் மாநகர சபையின் பிரதி மேயர் கைது செய்யப்பட்டுள்ளார்.

​இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் நேற்று (2026.05.08) மாலை 6.00 மணியளவில் பத்தரமுல்லையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

சம்பவத்தின் பின்னணி

​பன்னிபிட்டிய பகுதியைச் சேர்ந்த ஒருவரால் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டது. முறைப்பாட்டாளர் குருநாகல் பேருந்து நிலையம் மற்றும் வர்த்தக தொகுதியின் பராமரிப்பு மற்றும் துப்புரவுப் பணிகளுக்கான ஒப்பந்தத்தைப் பெற்றிருந்தார்.

​எனினும், குறித்த பேருந்து நிலைய கழிப்பறைத் தொகுதிக்கான நீர் கட்டணத்தில் 40 இலட்சம் ரூபாய் நிலுவை காணப்பட்டதைக் காரணம் காட்டி, அந்த துப்புரவு ஒப்பந்தத்தை இரத்து செய்ய குருநாகல் மாநகர சபை தீர்மானித்திருந்தது.

இலஞ்சக் கோரிக்கை

​இந்த ஒப்பந்தம் இரத்து செய்யப்படுவதைத் தடுத்து, ஏனைய உறுப்பினர்களின் ஆதரவுடன் அதனைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு உதவி புரிய பிரதி மேயர் மொஹமட் மொயினுதீன் மொஹமட் அசார்தீன் என்பவர் இலஞ்சம் கோரியதாகக் கூறப்படுகிறது:

  • ​முதலில் ஒப்பந்தத்தை இரத்து செய்யாமல் இருக்க 50 இலட்சம் ரூபாய் கோரப்பட்டது.
  • ​ஒப்பந்தப் பணிகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்ல மாதந்தோறும் 5 இலட்சம் ரூபாய் இலஞ்சமாக வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
  • ​இறுதியில், ஆரம்பமாக கோரப்பட்ட 50 இலட்சம் ரூபாயில், 30 இலட்சம் ரூபாயை பெற்றுக்கொள்ள பிரதி மேயர் சம்மதித்துள்ளார்.

கைது நடவடிக்கை

​குறித்த 30 இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்ட போதே, இலஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் அவர் கையும் மெய்யுமாகப் பிடிக்கப்பட்டார்.

​கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தோள் கொடுக்கும் சிறுத்தைகள்.. கைகோர்க்கும் தளபதி!

0

தவெக ஆட்சி அமைக்க விடுதலை சிறுத்தைகள் ஆதரவை அளித்து இருக்கிறது. விஜய் வென்று ராஜினாமா செய்ய இருக்கும் திருச்சி கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் திருமாவளவன் போட்டியிடுகிறார். விஜய் அமைச்சரவையில் திருமாவளவன் உள்பட அக்கட்சியை சேர்ந்த 2 பேர் அமைச்சர்கள் ஆகின்றனர்.

தமிழகத்தில் தனி பெரும்பான்மையுடன் அதிக தொகுதிகளை வென்றுள்ள தவெக ஆட்சியமைக்க போதிய எண்ணிக்கையில் எம்எல்ஏக்கள் இல்லை. எனவே மற்ற கட்சிகளிடம் ஆதரவு கேட்டது. 5 எம்எல்ஏக்கள் வைத்துள்ள காங்கிரஸ் முதல் கட்சியாக ஆதரவை அளித்துவிட்டது. இந்திய கம்யூனிஸ்., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளும் தவெகவுக்கு தங்களின் அதிகாரப்பூர்வ ஆதரவை அறிவித்து இருக்கின்றன.

திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் பல கட்ட ஆலோசனைகளுக்கு பின்னர், தமது ஆதரவை தவெகவுக்கு வழங்கி உள்ளது. காங்கிரஸ் 5, இடதுசாரிகள் 4, விடுதலை சிறுத்தைகள் 2 என ஆதரவு மூலம் பெரும்பான்மை எண்ணிக்கையான 118ஐ தவெக எட்டி பிடித்துள்ளது.

கூட்டணிக்கட்சிகளின் ஆதரவுடன் தமிழகத்தில் தவெக ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்ட நிலையில், தாம் வெற்றி பெற்ற 2 தொகுதிகளில் ஒன்றான திருச்சி கிழக்கு தொகுதியை விஜய் ராஜினாமா செய்கிறார். அந்த தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார்.

போட்டியிட்டு எம்எல்ஏ ஆகும் அவர், கூட்டணி அரசில் அமைச்சராகவும் இடம்பெற உள்ளார். அவருடன் மேலும் ஒரு விசிக எம்எல்ஏவும் அமைச்சராகிறார். தமிழகத்தில் அமைய உள்ள கூட்டணி ஆட்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 அமைச்சர்கள் பதவி தரப்படுகின்றன.

9 தசாப்த இசைப் பயணத்திற்காக தேவானந்த கௌரவிப்பு!

0

இலங்கை நாட்டுப்புறப் பாடல் கலையை வளர்ப்பதில் தனித்துவமான பங்காற்றிய மூத்த பாடகர் தேவானந்த வைத்தியசேகரவின் 90 ஆண்டுகால கலைப் பயணத்தைப் பாராட்டும் வகையில், “நீல நுவன்” எனும் விசேட பாராட்டு இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தால் (SLBC) ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, நேற்று (07) கொழும்பு – 10 இல் உள்ள ஆனந்த சமரகோன் கலையகத்தில் வெகுவிமரிசையாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கௌரவ விருந்தினர்களாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் டாக்டர் ஹினிதும சுனில் செனவி, வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கௌசல்யா அரியரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்:

நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, தேவானந்த வைத்தியசேகர அவர்களின் கலைப் பணியானது பல தலைமுறை ரசிகர்களின் இதயங்களை மகிழ்வித்துள்ளதாகக் குறிப்பிட்டார். அத்தகைய கலைஞர்கள் நாட்டின் “தேசிய வளங்கள்” என்றும் அவர் போற்றினார். மேலும், வைத்தியசேகரவின் பங்களிப்பைப் பாராட்டி அமைச்சரினால் நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.

அமைச்சர் டாக்டர் ஹினிதும சுனில் செனவி உரையாற்றுகையில், ஒரு மருத்துவர் சிறந்த இசைக்கலைஞராக இருப்பது வியப்பிற்குரியது எனத் தெரிவித்ததோடு, வானொலியின் பழைய கலாச்சாரத் தூண்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தற்போது பல நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டு வருவதையும் சுட்டிக்காட்டினார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எழுதப்பட்ட “சியவசக சிஹானந்தா” என்ற நூலை, அதன் தற்போதைய தலைவர் பேராசிரியர் உதித்த கயாஷன் குணசேகர வெளியிட்டார். இதன் ஒரு பிரதி தேவானந்த வைத்தியசேகரவுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கீர்த்தி பாஸ்கலே, சனத் குணதிலக்க, ஜனக விக்ரமசிங்க, இந்திராணி பெரேரா உள்ளிட்ட முன்னணி கலைஞர்களும் பல அறிஞர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

ஏறாவூர் பொலிஸ் நிலையக் காணி பாடசாலைக்கு வழங்க வேண்டும்!

தற்போது ஏறாவூர் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணியை அலிகார் தேசியப் பாடசாலைக்கு கையளிக்குமாறும், பொலிஸ் நிலையத்தை நகர சபையினால் ஒதுக்கப்பட்டுள்ள புதிய இடத்திற்கு இடமாற்றுமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நேற்று (07) நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், ஏறாவூர் கல்விச் சமூகத்தின் நீண்டகாலத் தேவையொன்றை வலியுறுத்திப் பேசினார்.

“அண்மையில் பாதுகாப்புக்கு பொறுப்பான அமைச்சர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்த வேளையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஏறாவூர் நகர சபைத் தவிசாளருமான எம்.எஸ். நளீம் இவ்விடயத்தை அமைச்சரின் கவனத்திற்கு நேடியாகக் கொண்டு சென்றார். இதன்போது, பொலிஸ் நிலையத்தை இடமாற்றம் செய்வது குறித்த இணக்கப்பாடும், அனுமதியும் அமைச்சரினால் வழங்கப்பட்டது என குறிப்பிட்டார்.

அலிகார் தேசியப் பாடசாலையின் தற்போதைய நிலைமை குறித்து விபரித்த அவர், அங்கு 3,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருவதைச் சுட்டிக்காட்டினார். மாணவர் எண்ணிக்கைக்கேற்ப போதிய கட்டிட வசதிகள் இல்லாமையினால் ஆசிரியர்களும் மாணவர்களும் அன்றாடம் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

“மாணவர்களின் கல்வி நலன் என்பது மிக முக்கியமானது. தற்போதுள்ள இடப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய பொலிஸ் நிலையக் காணி பாடசாலைக்கு வழங்கப்படுவது அவசியமாகும். இதற்காக ஏறாவூர் நகர சபையினால் பொலிஸ் நிலையத்திற்கென புதிய காணி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது.”

பொலிஸ் நிலையத்தை புதிய இடத்திற்கு மாற்றுவதன் மூலம், அலிகார் தேசியப் பாடசாலையின் கட்டிடத் தேவைகளை நிவர்த்தி செய்ய முடியும் எனத் தெரிவித்த கலாநிதி ஹிஸ்புல்லாஹ், மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு இந்த விவகாரத்தில் உரிய அமைச்சர் விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் தனது உரையில் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.

பயங்கரவாதத்தை விட பொருளாதார பாதுகாப்பற்ற தன்மை ஆபத்தானது!

0

கொழும்பு – நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பு குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, திறைசேரியில் இருந்து 2.5 மில்லியன் ரூபாய் காணாமல் போயுள்ளதாகத் தெரிவித்து கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தற்போதைய நிதி உறுதியற்ற தன்மையும், வங்கித்துறையில் காணப்படும் மேற்பார்வை குறைபாடுகளும் நாட்டின் எதிர்காலத்திற்கு “பயங்கரவாதத்தை விட பாரதூரமான அச்சுறுத்தல்” என்று அவர் வாதிட்டார்.

திறைசேரி மற்றும் வர்த்தக வங்கிகளில் இருந்து நிதி திடீரென காணாமல் போகும் ஒரு “மிகவும் ஆபத்தான நிகழ்வு” குறித்து முஸ்தபா சுட்டிக்காட்டினார். தேசிய பாதுகாப்பைப் போன்றே பொருளாதார ஸ்திரத்தன்மையும் முக்கியமானது என்று வலியுறுத்திய அவர், வங்கி அமைப்பின் பாதுகாப்பு மீது சர்வதேச முதலீட்டாளர்கள் நம்பிக்கை இழந்தால், நேரடி வெளிநாட்டு முதலீடுகளை (FDI) ஈர்ப்பது சாத்தியமற்றதாகிவிடும் என்றார்.

“திறைசேரியில் உள்ள பணத்தைப் பாதுகாக்க முடியாவிட்டால், அது ஒரு பாரிய பிரச்சினையாகும். டிஜிட்டல் மயமாக்கல் முன்னெடுக்கப்பட்ட போதிலும், அங்கீகரிக்கப்படாத பணப் பரிமாற்றங்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வங்கிகள் தவறிவிட்டன,” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், வங்கி மேற்பார்வைக்காக மாதத்திற்கு 50 முதல் 100 மில்லியன் ரூபாய் வரை வசூலிக்கும் மத்திய வங்கி, அனைத்துத் துறைகளிலும் ஏற்பட்டுள்ள பாரிய குறைபாடுகளைக் கண்காணிக்கத் தவறிவிட்டதாக அவர் கடுமையாகச் சாடினார்.

இவ்வாறான கட்டமைப்புத் தோல்விகளைச் சரிசெய்ய, அரசாங்கம் உடனடியாக ஒரு விசேட பணிக்குழுவை (Special Task Force) நியமிக்க வேண்டும் என்று முஸ்தபா வலியுறுத்தினார். நிறுவன ரீதியான தோல்விகளுக்கு உயர்மட்ட அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், ஜப்பானில் ஒரு ரயில் ஒரு நிமிடம் தாமதமானாலும் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்யும் கலாச்சாரத்தை உதாரணமாகக் காட்டினார்.

“அவர்கள் ஊழல்வாதிகளாக இல்லாதிருக்கலாம், ஆனால் ஒரு பதவிக்கு நியமிக்கப்பட்டு பொறுப்பை ஏற்கும் போது, அந்த நிறுவனங்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை அவர்களுக்கு உண்டு,” என்று அவர் குறிப்பிட்டார்.

அரசாங்க இயந்திரமும் நீதித்துறையும் சரியாகச் இயங்கும் பட்சத்தில், அவசரகாலச் சட்டத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவது தேவையற்றது என அவர் சவால் விடுத்தார்.

சாதாரண சட்டங்களை இடைநிறுத்துவதன் மூலம் அவசரகாலச் சட்டம் இயங்குவதால், இது பொதுமக்களிடையே “அடக்குமுறை குறித்த அச்சத்தை” உருவாக்குவதாக அவர் சுட்டிக்காட்டினார். அண்மைய புயல் பாதிப்புகளுக்குப் பின்னரான மீட்புப் பணிகளுக்கு ஏன் இத்தகைய அதிகாரங்கள் தேவைப்படுகின்றன என்று கேள்வி எழுப்பிய அவர், புனரமைப்புப் பணிகளுக்கு சாதாரண சட்டக் கட்டமைப்புகளே போதுமானவை என்றார்.

கடந்த கால அரசாங்கங்களையோ அல்லது “75 வருட சாபத்தையோ” குறை கூறுவதை அரசாங்கம் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று முஸ்தபா கேட்டுக்கொண்டார். கடந்த காலத் தவறுகளைச் சரி செய்வதற்காகவே தற்போதைய அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதை அவர் சபைக்கு நினைவூட்டினார்.

“ஒவ்வொரு முறையும் எதிர்க்கட்சியின் வரலாற்றைப் பற்றிப் பேசாதீர்கள்… பொறுப்பைச் சரியாக ஏற்றுக்கொண்டு, உண்மையான மாற்றத்தை உருவாக்குங்கள்,” என்று கூறி அவர் தனது உரையை நிறைவு செய்தார்.

7 பில்லியன் காலி! மெட்ரோ பேருந்து திட்டம் ஒரு ‘தேசியக் குற்றம்’

0

அரசாங்கத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘மெட்ரோ பேருந்து’ திட்டத்திற்காக சுமார் 7 பில்லியன் ரூபா பொதுப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இது குறித்து கருத்துத் தெரிவித்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, மெட்ரோ பேருந்து திட்டம் என்பது இலங்கை போக்குவரத்துச் சபையின் தற்போதைய முறையை வேறொரு பெயரில் அறிமுகப்படுத்தும் முயற்சியே அன்றி வேறில்லை எனத் தெரிவித்தார்.

இலங்கையின் பயணிகள் போக்குவரத்து உட்கட்டமைப்பு ஏற்கனவே இலங்கை போக்குவரத்துச் சபையினால் சீரழிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இலங்கை போக்குவரத்து சபையின் காரணமாகவே இலங்கையில் போக்குவரத்துத் துறை அழிந்தது. இப்போது மெட்ரோ பேருந்துகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் அரசாங்கம் மீண்டும் அதே தவற்றைச் செய்கிறது” என அவர் சாடினார்.

இந்தத் திட்டத்தின் ஊடாக திறைசேரியின் நிதி சூறையாடப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், இதனை ஒரு ‘தேசியக் குற்றம்’ என வர்ணித்தார்.

புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்துவதால் பொதுப் போக்குவரத்தில் நிலவும் முறையான சிக்கல்களுக்குத் தீர்வு கிடைக்காது எனவும், இது பழைய தோல்விகளையே மீண்டும் பிரதிபலிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அர்த்தமுள்ள மேம்பாடுகள் எதனையும் வழங்காமல், மக்களின் வரிப்பணத்தை மாத்திரம் இந்தத் திட்டம் வீணடிப்பதாக அவர் மேலும் வாதிட்டார்.

தமிழக அரசியலில் அதிரடி: 108 எம்.எல்.ஏ-க்களும் ராஜினாமா?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தமிழக அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் (த.வெ.க) 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. தி.மு.க கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. ஆட்சியமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஆதரவைப் பெற்றுள்ள விஜய், கவர்னர் அர்லேகரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

தனிப்பெரும் கட்சியாக இருந்தபோதும், “118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை உறுதிப்படுத்தாமல் ஆட்சியமைக்க அழைக்க முடியாது” என்று ஆளுநர் கறாராகத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, த.வெ.க நிர்வாகிகள் வி.சி.க மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் ஆதரவு கோரிப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

மறுபுறம், அ.தி.மு.க-வுக்கு தி.மு.க வெளியிலிருந்து ஆதரவு அளித்து, த.வெ.க-வை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க முயற்சிப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இது த.வெ.க தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆளுநரின் நடவடிக்கை மற்றும் திராவிடக் கட்சிகளின் வியூகங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், த.வெ.க ஒரு அதிரடி முடிவை கையில் எடுத்துள்ளது. “தனிப்பெரும் கட்சியான எங்களை ஆட்சியமைக்க அழைக்காமல், தி.மு.க – அ.தி.மு.க கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க முயன்றால், எங்களது 108 எம்.எல்.ஏ-க்களும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வார்கள்” என த.வெ.க எச்சரித்துள்ளது.

இந்த முடிவு எடுக்கப்பட்டால் இந்திய அரசியலமைப்பு வரலாற்றிலேயே ஒரே நேரத்தில் 108 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்வது இதுவே முதல் முறையாகும்.

108 பேர் ராஜினாமா செய்தால், சட்டசபையின் மொத்த பலம் 126 ஆகக் குறையும். அப்போது வெறும் 64 எம்.எல்.ஏ-க்கள் இருந்தாலே ஒருவர் முதலமைச்சராக முடியும். இது தி.மு.க-வுக்குச் சாதகமாக அமையக்கூடும் என்றாலும், மக்கள் மத்தியில் அது பெரும் அவப்பெயரை ஏற்படுத்தும்.

எம்.எல்.ஏ-க்களாகப் பதவியேற்பதற்கு முன்பே ராஜினாமா செய்வது சட்ட ரீதியான சிக்கல்களை உருவாக்கும். மேலும், 108 தொகுதிகளுக்கு மீண்டும் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். இது அரசுக்கு பெரும் நிதிச்சுமையை உண்டாக்கும்.

தி.மு.க மற்றும் அ.தி.மு.க கூட்டணி அமைப்பதில் குழப்பம் நீடிப்பதாலும், த.வெ.க ராஜினாமா அஸ்திரத்தை ஏந்துவதாலும் தமிழகத்தில் ஒரு நிலையற்ற தன்மை நிலவுகிறது. இந்தச் சூழலில், எந்தக் கட்சியாலும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாவிட்டால், சட்டப்பிரிவு 356-ன் கீழ் ஆளுநர் பரிந்துரையின் பேரில் தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

“பதவி ஆசை எங்களுக்கு இல்லை” என்பதை மக்கள் முன் நிரூபிக்க த.வெ.க இந்த முடிவை எடுக்கத் துணிந்துள்ளது. மறுபுறம், “விஜய் ஒருமுறை ஆட்சிக்கு வந்துவிட்டால் அவரை அசைக்க முடியாது” என்ற அச்சத்தில் திராவிடக் கட்சிகள் காய் நகர்த்தி வருகின்றன. வரும் மே 10-ஆம் தேதி வரை தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் சென்னையிலேயே இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் விஜய்யா? அல்லது தமிழகம் குடியரசுத் தலைவர் ஆட்சியை நோக்கிச் செல்கிறதா? என்பது அடுத்த சில நாட்களில் தெரியவரும்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முன்னாள் CEO கபில சந்திரசேன தற்கொலை!

0

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும் போது 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு எதிராக விசாரணை இடம்பெற்று வரும் நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. 

இந்த வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கபில சந்திரசேனவுக்கு கடந்த 2 தினங்களுக்கு முன்னர் பிணை வழங்கப்பட்டது.  

இந்நிலையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவுக்கு பிணை வழங்குவதற்காக, அவரது உறவினர்கள் எனக்கூறி போலி பிணையாளர்கள் இருவர் நீதிமன்றில் முன்னிலையானமை தெரியவந்தமையை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். 

கபில சந்திரசேனவின் பிணை நிபந்தனைகளின்படி, அவரது நெருங்கிய உறவினர்கள் மூவர் ஆள் பிணை வழங்க வேண்டியிருந்தது. 

இதற்காக உறவினர்களாக முன்னிலைப்படுவதற்குச் சந்தேக நபர்கள் தலா 15,000 ரூபாயைப் பணமாகப் பெற்றுக்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. 

இந்நிலையில் பிணை நிபந்தனைகளை மீறி நீதிமன்றத்தின் நம்பிக்கையைச் சிதைத்துள்ளமையால், கபில சந்திரசேனவை மீண்டும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் நேற்று உத்தரவிட்டார். 

இந்த சூழலிலேயே கபில சந்திரசேனவின் சடலம் கொள்ளுப்பிட்டியவில் உள்ள வீட்டில் இருந்து இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

புத்தளம் மேதானந்தா கல்லூரியில் அடிக்கல் நாட்டு விழா!

0

புத்தளம் கோட்ட கல்விப் பிரிவுக்குட்பட்ட மேதானந்தா வித்யாலய மாணவர்களின் நீண்டகாலத் தேவையாக இருந்த புதிய வகுப்பறைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா அண்மையில் கோலாகலமாக நடைபெற்றது.

புத்தளம் மேதானந்தா வித்யாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்பட்ட 80 அடி × 25 அடி அளவிலான ஒற்றை மாடி வகுப்பறைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, கடந்த திங்கட்கிழமை (04.05.2025) அன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வானது, புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கல்பிட்டி மற்றும் புத்தளம் அபிவிருத்திக் குழுத் தலைவருமான சகோதரர் முகமது பைசல் அவர்களின் தலைமையில் இனிதே இடம்பெற்றது.

நாட்டின் எதிர்காலத் தூண்களான மாணவர்களின் கல்விக்கு முதன்மை முன்னுரிமை அளிக்கும் தேசிய மக்கள் சக்தியின் (NPP) அரசாங்கத்தின் கீழ் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 11.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் கற்றல் சூழலை மேம்படுத்தவும், இடவசதிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும் இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.

இந்த விசேட நிகழ்வில் கௌரவ மதத் தலைவர்கள் கலந்துகொண்டு ஆசிகளை வழங்கினர். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரர் பைசல் அவர்களுடன், பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், கல்வி பயிலும் மாணவச் செல்வங்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.

அத்துடன், புத்தளம் பிரதேச சபையின் உறுப்பினர்கள், கிராம அபிவிருத்திக் குழு (CDC) தலைவர்கள், தேசிய மக்கள் சக்தியின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து சிறப்பித்தனர்.

புதிய கட்டிடத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடையும் பட்சத்தில், பாடசாலையின் கல்வித் தரம் மேலும் உயர்வடையும் என ஆசிரியர்களும் பெற்றோர்களும் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளனர்.