Tuesday, May 19, 2026
Sponsored advertisementspot_img
Home Blog

நாகவில்லுவில் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ்வின் நினைவுதினம்!

பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று நாகவில்லுவில் இடம்பெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வு!

இலங்கை திருநாட்டில் பெளதீக ரீதியான பல வேலைத்திட்டங்களையும், இடம்பெயர்வு மற்றும் எல்லை நிர்ணயம் தொடர்பான பறந்துபட்ட அறிவினையும் கொண்டிருந்த எருக்கலம்பிட்டியை சேர்ந்த மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது வருட நினைவு தின நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

அந்த வகையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் நினைவுப் பேருரையும், புத்தக வெளியீடு நிகழ்வும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் ஏற்பாட்டில் நேற்று 25.08.2025 புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய அதிபர் ஜனாப் S.M. ஹுஸைமத் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், புத்தி ஜீவிகள் மற்றும் குடும்பத்தார்கள் கலந்தகொண்டமை விஷேட அம்சமாகும்.

சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் பொருளாளர் ஜனாப் ஏ.ஜி. அனீஸ் (Bsc.Agri) அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.

மேலும் இஸ்லாமிய கற்கை அறபு மொழிப் பீட, தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களினால் நூல் அறிமுக உரையும், நினைவுப் பேருரையும் மிகவும் உணர்வுபூர்வமாக நிகழ்த்தப்பட்டது.

கிழக்கு மற்றும் தென் கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பங்களிப்பு அளப்பெரியது என நினைவு கூறிய பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன், வடக்கில் ஏற்பட்ட யுத்தம் மற்றும் முஸ்லிம்களின் இடம்பெயர்வு குறித்து அதீத அக்கறையுடன் செயற்பட்ட மிக முக்கியமானவர் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்கள் எனவும் எடுத்துரைத்தார்.

வடக்கு முஸ்லிம்களின் இடம்பெயர்வு மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பில் அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களுடன் பலதரப்பட்ட கலந்துரையாடல்களை நடத்தி, சர்வதேசம் வரை இவ்விடயங்களை கொண்டுசென்ற மகான் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் என பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் தனது உரையில் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் புதல்வி சட்டத்தரணி எப்.சப்னா ஹஸ்புல்லாஹ் அவர்களினால் ஏற்புரை நிகழ்த்தப்பட்டதுடன், நூல் வெளியீடு நிகழ்வும் இடம்பெற்றது.

நூலின் முதற்பிரதியை ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தரும், புத்தளம் எருக்கலம்பிட்டி பள்ளிவாசல் நிர்வாக சபையின் முன்னாள் உறுப்பினருமான ஜனாப் ரஹ்மத்துல்லாஹ் (GS) அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

மேலும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் செயலாளர் ஜனாப் எஸ்.எச்.எம். றிஸ்னி அவர்களினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டதுடன், தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன், மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பாரியாருக்கும் நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில், பேராசிரியர்கள், கல்விமான்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், பாடசாலைச் சமூகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் குடும்பத்தார்கள் என பலரும் கலந்து சிறப்பித்ததுடன், ஈ நியூஸ் பெஸ்ட் ஊடக நிறுவனம் ஊடக அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரணிலுக்காக ஒன்று திரண்ட அரசியல் தலைவர்கள்!

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விசாரணை கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது, நாட்டின் அடிப்படை ஜனநாயக நிறுவனங்களின் வலிமை குறித்து கடுமையான கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் விளைவுகள் ஒரு தனிநபரின் அல்லது எந்தவொரு அரசியல் கட்சிகளின் தலைவிதியையும் விட, சமூகத்தின் உரிமைகளுக்கான பிரச்சினைகளை தோற்றிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் தலைவர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைகளை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது மற்றும் விளக்கமறியலை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து நடத்திய விசேட ஊடக சந்திப்பில் பங்கேற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரல முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் அறிக்கையை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

போர்த்துக்கல் அணி சாம்பியன் ஆனது!

0

‘நேஷன்ஸ் லீக்’ கால்பந்தில் போர்ச்சுகல் அணி சாம்பியன் ஆனது. பைனலில் ‘பெனால்டி ஷூட் அவுட்டில்’ 5-3 என ஸ்பெயினை வீழ்த்தியது.

ஐரோப்பிய கால்பந்து அணிகளுக்காக ‘நேஷன்ஸ் லீக்’ தொடர் நடத்தப்படுகிறது. மொத்தம் 54 அணிகள் பங்கேற்றன. நேற்று ஜெர்மனியின் முனிக் நகரில் நடந்த பைனலில், போர்ச்சுகல், நடப்பு யூரோ சாம்பியன் ஸ்பெயின் பலப்பரீட்சை நடத்தின. போட்டியின் 21வது நிமிடம் ஜுபிமெண்டி (ஸ்பெயின்), 26வது நிமிடம் மெண்டிஸ் (போர்ச்சுகல்) தலா ஒரு கோல் அடித்தனர். 45வது நிமிடம் மைக்கேல் ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் ஸ்பெயின் அணி 2-1 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் 61 வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். போர்ச்சுகல் அணிக்காக இவர் அடித்த 138வது கோல் இது. 90 நிமிட முடிவில் போட்டி 2-2 என சமன் ஆனது. அடுத்து நடந்த கூடுதல் நேரத்திலும் (30 நிமிடம்) இரு அணியும் கோல் அடிக்கவில்லை.

இதையடுத்து வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி ‘பெனால்டி ஷூட் அவுட்டுக்கு’ சென்றது. இரு அணிக்கும் தலா 5 வாய்ப்புகள் தரப்பட்டன. காயம் காரணமாக 88 வது நிமிடம் வெளியேறிய ரொனால்டோ, இதில் பங்கேற்கவில்லை.

முதல் 3 வாய்ப்பில் போர்ச்சுகலின் ராமோஸ், விடின்ஹா, பெர்ணான்டஸ் கோல் அடித்தனர். மறுபக்கம் ஸ்பெயின் தரப்பில் மெரினோ, பயேனா, இஸ்கோ கோல் அடிக்க 3-3 என ஆனது.

4வது வாய்ப்பில் மெண்டெஸ் (போர்ச்சுகல்) கோல் அடிக்க, ஸ்பெயினின் மோராட்டோ அடித்த பந்தை கோல் கீப்பர் டீகோ கோஸ்டா தடுத்து அசத்தினார்.

5வது வாய்ப்பில் நெவேஸ் கோல் அடித்தார். இதையடுத்து 5-3 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் ‘திரில்’ வெற்றி பெற்றது. 2019க்குப் பின் இத்தொடரில் மீண்டும் சாம்பியன் ஆனது.

தில்லையடியில் சிக்கிய கடத்தல் பீடி இலைகள்!

0

புத்தளத்தில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளுடன் வேன் ஒன்றும் பறிமுதல்!

இலங்கை கடற்படை, பொலிஸாருடன் இணைந்து, புத்தளம், தில்லையடி பகுதியில் 2025 ஜூன் 05 இரவு வேளையில் நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகள் கொண்ட ஒரு வேன் கைப்பற்றப்பட்டது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிறுவனம், புத்தளம் பொலிஸாருடன் இணைந்து தில்லையடி பகுதியில் நடத்திய இந்த சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்று சோதனை செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகளானது வாகனத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் வேன் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களால் ஆபத்தா?

விண்வெளியில் பூமியை சுற்றி வந்துக்கொண்டிருக்கும் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கொள்களை சீனா நினைத்தால் வெறும் 12 மணி நேரத்தில் தாக்கி அழித்துவிட முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் என்கிற செய்தி ஊடகத்தில் இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது தற்போது சீனா 99 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. இவை அனைத்தும் நான்ஜிங் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஆஸ்ட்ரோனாட்டிக்ஸ் பல்கலைக்கழகத்தின் விண்வெளிக் கட்டுப்பாட்டுத் துறையின் இயக்குநர் வூ யுன்ஹுவா தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இவை அனைத்தும் எலான் மஸ்கின் 1400 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை வெறும் 12 மணி நேரத்தில் காலி செய்துவிடும். சீன செயற்கைக்கோளில் லேசர், நுண் அலைகளை உருவாக்கும் கருவி, உளவு கருவிகள் பொருத்தப்பட்டிருக்கலாம். ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் வெறுமென நெட்வொர்க் கொடுக்க மட்டுமே பயன்படுத்தப்படுவதில்லை. தவிர, ராணுவ நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது என சீனா குற்றம்சாட்டி வருகிறது.

அதாவது, உக்ரைன்-ரஷ்யா போரில், உக்ரைன் படைகளுக்கு தகவல்கள் கொடுக்கவும், ரஷ்ய எல்லையை துல்லியமாக கண்காணிக்கவும் இந்த செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த 2022ம் ஆண்டு ரஷ்ய போரின்போது அப்போதைய உக்ரைனின் துணைப் பிரதமரான மைக்கைலோ ஃபெடோரோவ், “ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் சேவையை உடனடியாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த மஸ்க், “உடனடியாக சேவை வழங்கப்படும்” என்று கூறியிருந்தார்.

உக்ரைன் போருடன் மட்டுமே ஸ்டார்லிங்க் நிற்காது, நாளை சீனாவுக்கும்-தைவானுக்கும் பஞ்சாயது ஏற்பட்டால் அப்போதும், தைவானுக்கு சப்போர்ட் செய்ய ஸ்டார்லிங்க் வரும். எனவே இந்த கூட்டு நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்க சீனா இந்த புதிய செயற்கைக்கோள்களை உருவாக்கியிருக்கிறது.

கடந்த 2023ம் ஆண்டு இதற்கான பணிகளை சீனா தொடங்கியது. இந்த திட்டத்திற்கு ‘கியான்ஃபான் மெகா-விண்மீன் திட்டம்’ (Qianfan mega-constellation project) என்றும் பெயரிட்டிருந்தது. நோக்கம் உலகம் முழுவதும் இணைய தொடர்பை வழங்குவதாகும். இதற்காக மொத்தம் 15,000 சிறிய ரக செயற்கைக்கோள்களை ஏவ சீனா முடிவெடுத்தது. இதன் முதல் தொகுப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏவப்பட்டது. இதில் 18 செயற்கைக்கோள்கள் இருந்தன.

ஒவ்வொன்றும் சுமார் 300 கி.கி எடையில் இருந்தது. இவை பூமியிலிருந்து 800 கி.மீ உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டது. இதேபோன்று 2024 டிசம்பரில் அடுத்து இரண்டு தொகுதி ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. தற்போது மொத்தம் 99 செயற்கைக்கோள்கள் விண்வெளியில் இருக்கின்றன. 15,000 செயற்கைக்கோள்களை 3 கட்டங்களாக ஏவ இருக்கிறது. முதல் கட்டத்தில் 1,296 செயற்கைக்கோள்கள் ஏவப்படும். இதில் 648 செயற்கைக்கோள்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஏவப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் கன்னி உரை

0

அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்புவோம்

தேசியத்துவத்துடனும் ஐக்கியத்துடனும் ஒன்றுபட்டு நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க இன்று (23) காலை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

பதவிப் பிரமாணத்தின் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய முழுமையான உரை:

மக்களால் ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது நமது நாட்டின் ஜனநாயகத்திலிருக்கும் மிக முக்கியமான அம்சமாகும். தேர்தலில் வாக்களித்தல் மற்றும் ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதோடு ஜனநாயகம் நிறைவு பெறுவதில்லை. இது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சம் என்றாலும், நம் நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்த, கட்டமைப்புகளின் வலிமையும், சட்டங்களை வலுப்படுத்துவதும் அவசியம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனவே, எனது பதவிக்காலத்தில் இந்த நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.

அத்துடன், இந்த நாட்டில் ஜனநாயக முறையில் அதிகாரப் பரிமாற்றம் நடந்த வரலாறும் உண்டு. தேர்தலில் நிகழும் அதிகாரப் பரிமாற்றத்தை எந்தத் தலைவரும் நிராகரித்ததில்லை. அதற்கமைய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த மக்கள்ஆணையை சுமூகமாக ஏற்றுக்கொண்டதுடன், ஜனநாயக ரீதியில் அதிகாரத்தை கைமாற்றுவதற்கான அவரின் அர்ப்பணிப்பிற்கும் முன்னுதாரணத்திற்கும் நன்றி தெரிவிக்கிறேன். மேலும் எமக்கு கிடைப்பது மிகவும் சவால் நிறைந்த நாடு என்பதை நன்கு புரிந்து கொண்டிருக்கிறோம். நமது அரசியலில் தூய்மையான, மக்களால் எதிர்பார்க்கப்படும் சிறந்த அரசியல் கலாசாரத்திற்காக அவசியம் காணப்படுகிறது.அதற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

நம் நாட்டின் அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு நல்லெண்ணம் இல்லை. எனவே, அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் மீது மக்கள் மரியாதை மற்றும் நம்பிக்கையை மீட்டெடுக்க எங்கள் தரப்பிலிருந்து முடிந்த அனைத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.

மேலும், நமக்கு முன் இருக்கும் இந்த ஆழமான நெருக்கடியை வெறும் அரசோ, வெறும் அரசியல் கட்சியோ அல்லது ஒரு தனி நபரோ மட்டும் தீர்க்க முடியும் என்று நாங்கள் நம்பவில்லை. ஏனென்றால், நான் முன்பு கூறியது போல், நான் ஒரு மாயாஜால வித்தைக்காரனல்ல. நான் மந்திரவாதியும் இல்லை. நான் இந்த நாட்டின் சாதாரண குடிமகன். எம்மிடம் திறமைகள் உள்ளன. இயலாமைகளும் உள்ளன. தெரிந்த விடயங்களும் உள்ளன அதேபோன்று, தெரியாத விடயங்களும் உள்ளன.

ஆனால் திறமைகளைப் பயன்படுத்தி தெரியாதவற்றை சேகரித்துக்கொண்டு சிறந்த முடிவுகளை எடுத்து இந்த நாட்டை வழிநடத்துவதே எனது தலையாய பணியாகும். அந்த கூட்டுப் பங்களிப்பின் ஒரு அங்கமாக மாறுவது எனது பொறுப்பாகும். மேலும், இந்த நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதில் பொது மக்கள் மற்றும் அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் பாரிய பொறுப்பு உள்ளது. அந்தப் பொறுப்பை நிறைவேற்ற அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்.

ஆனால், நாட்டின் ஜனாதிபதி என்ற முறையில், இந்தப் பணியை முன்னின்று நடத்துவதில் எனக்கு முதன்மையான மற்றும் மிக முக்கியமான பொறுப்பு இருப்பதை நான் ஏற்றுக்கொண்டேன். எனவே, இந்தச் சவாலை வெற்றிகொள்வதற்காக எனக்குக் வழங்கப்பட்டுள்ள பணியை நான் உரிய முறையில் நிறைவேற்றுவேன் என்பதை செயற்பாடு மற்றும் நடைமுறை மூலம் எல்லா சந்தர்ப்பங்களிலும் இந்த நாட்டின் பிரஜைகளுக்கு வெளிப்படுத்த நான் தயாராக இருக்கிறேன்.

மேலும் நமது நாட்டுக்கு சர்வதேச ஆதரவு தேவை. எனவே, உலகில் எத்தகைய அதிகாரப் பிளவுகள் இருந்தாலும், ஒவ்வொரு நாட்டையும் எமக்கு மிகவும் சாதகமாக கையாள்வதே நமது எதிர்பார்ப்பாகும். நாம் உலகில் தனிமைப்படுத்தப்பட்ட நாடு அல்ல. உலகத்துடன் கூட்டாக முன்னேற வேண்டிய ஒரு நாடாகும். அது தொடர்பில் தேவையான முடிவுகளை எடுக்க நாங்கள் சிறிதும் தயங்குவதில்லை.

மேலும், நம் நாட்டைக் கட்டியெழுப்புவதில் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு பெரும் பங்கு உள்ளது. எனவே, நாட்டை மேலும் வலுவாகக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு அவர்கள் ஆதரவளிப்பார்கள் என நான் கருதுகின்றேன்.

நம் நாட்டின் ஜனநாயகத்தின் ஊடாக நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். அதற்காக மக்கள் எனக்கு வாக்களித்தனர்.

மேலும் எனக்கு வழங்கப்படாத வாக்குகளும் உள்ளன. எனவே, எங்களின் வெற்றியின் உள்ளடக்கம் மற்றும் அளவு குறித்து எங்களுக்கு நல்ல புரிதல் உள்ளது. எனவே, எங்களுக்கு ஆதரவு வழங்காத மற்றும் எங்களை நம்பாத பிரஜைகளின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெறுவதே எனது நிர்வாகத்தின் போது எனக்கு வழங்கப்பட்டுள்ள பணியாகும். அந்தப் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

எதிர்காலத்தில் இவை அனைத்தையும் நீங்கள் நடைமுறையில் கண்டுகொள்ள முடியும். அதற்கு அனைத்து மக்களின் ஆதரவையும் எதிர்பார்க்கின்றேன்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தேர்தலில் இவ்வாறுதான் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்

0

அதிகாரிகள் மற்றும் பிற தேவைகள் முடிந்த பிறகு, மாலை 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (19) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி பிற்பகல் 4.15 மணிளவில் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“எதிர்வரும் 21ம் திகதி வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள் பெறப்பட்டதும், அதிகாரிகள் மற்றும் இதர தேவைகள் முடிந்ததும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் இரவு 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

மாலை 4.15 மணிளவில் தபால் மூல வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

அத்துடன் மாவட்ட அளவில் ஒவ்வொரு வட்டாரத்திலும் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெறும்.

வாக்கு எண்ணிக்கையின் முடிவில் முடிவுகள் கிடைத்தவுடன் ஊடகங்களுக்கு வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையே முதலில் எண்ணப்படும்.

அந்தக் கணக்கெடுப்பின் பின்னர் (மாவட்ட அளவில் எண்ணும் பணி) முதலில் வாக்குப்பெட்டிகளில் உள்ள வாக்குகள் எண்ணப்படும்.

அதன் பிறகு, ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு, தொகுதி மற்றும் மாவட்ட அளவில் அது தயாரிக்கப்படுகிறது.

தேர்தல்கள் செயலகமே ஒட்டுமொத்த முடிவுகளைக் கணக்கிடும்.

எந்த வேட்பாளரும் 50 வீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்றுள்ளாரா என சரிபார்க்கப்படும்.

அப்படியானால், அந்த நேரத்தில் வாக்கு எண்ணும் பணிகள் நிறுத்தப்படும்.

அப்போது ஜனாதிபதியை நாங்கள் அறிவிப்போம்.

எந்த வேட்பாளருக்கும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் கிடைக்காவிடின், விருப்பு வாக்கு எண்ணிக்கைக்கு செல்ல வேண்டும்.

அங்கு, அதிக வாக்குகள் பெற்ற இரண்டு வேட்பாளர்கள் போட்டியில் வைத்து விட்டு  மீதமுள்ள 36 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து நீக்கப்படுவர்” என்றார்.

புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக மாறும்

0

புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வாத்தியாசலையாக மாற்றம் பெரும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று புத்தளத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ அலிசப்ரி ரஹீம் மற்றும் சிந்தக்க மாயாதுன்ன தலைமையில் புத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்திலே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

புத்தளம் மக்களின் நீண்ட நாள் தேவையாக இருந்து வருகின்ற புத்தளம் தல வைத்தியசாலையை தரமுயர்த்துவது தொடர்பாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ அலிசப்ரி ரஹீம் அவர்களினால் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோலுக்கிணங்க குறித்த வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.

மேலும் புத்தளத்தில் மீன் பிடி தொழிலை முன்னேற்றும் நோக்கத்தில் மீன் பிடி துறைமுகம் ஒன்றை அமைக்கும் யோசனையும் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டதுடன், அதற்கான முன்னெடுப்புகளும் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்டமை புத்தளம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நாட்டில் நிரந்தர பொருளாதார அபிவிருத்தியை நிலை நாட்ட தாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டை பொருளாதார அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவதே தனது பிரதான நோக்கம் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மொட்டுக்கட்சிக்கு எதிராக நிற்கும் முக்கிய அமைச்சர்கள்

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக மொட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளரை இந்த வாரம் அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்காதிருக்கவும், மொட்டு சின்னத்தில் தனியாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமக்கு ஆதரவு வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பியிருந்த கடிதம் நேற்றைய தினம் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தினால் அரசியல் குழுவில் முன்வைக்கப்பட்டது.

எவ்வாறாயினும் அந்த கடிதத்தை நிராகரிக்க அரசியல் குழுக் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுவில் 82 பேர் அங்கம் வகிப்பதுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் 72 பேர் பங்கேற்றனர்.

இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த 11 பேர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

மஹிந்தானந்த அலுத்கமகே, பந்துல குணவர்தன, பிரதீப் உந்துகொட, கோகிலா ஹர்ஷனி குணவர்தன, சஹன் பிரதீப், ரமேஸ் பத்திரன, கஞ்சன விஜேசேகர, பிரசன்ன ரணதுங்க, கனக ஹேரத், மொஹான் பிரியதர்ஷன ஆகியோர் கட்சியின் சார்பில் தனியான வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

அத்துடன் பிறிதொரு கட்சியின் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்கும் உறுப்பினர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் யோசனைக்கு 6 பேர் எதிராக வாக்களித்துள்ளனர்.

எவ்வாறாயினும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் எனக் கூறப்பட்ட தம்மிக பெரேரா தொடர்பில் அரசியல் குழுக் கூட்டத்தின்போது எந்தவித கருத்துக்களும் பரிமாற்றிக் கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவளிக்காத 11 பேர் உள்ளிட்ட தரப்பினர் நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தனவின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சைனப் ஆரம்பப் பாடசாலைக்கு ஆளுநர் வருகை!

0

புத்தளம் சைனப் ஆரம்ப பாடசாலையின் முப்பெரும் விழா பாடசாலை அதிபர் யஹியா தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து புத்தளம் ஜெய்னப் பாடசாலைக்கு 22 லட்சம் ரூபா பெறுமதியான நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு, சிறுவர் விளையாட்டு நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தல் மற்றும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் செயற்திட்டத்தின் கீழ் BCMH நிறுவனத்தினால் கற்றல் உபகரணம் வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் கடந்த செவ்வாய்க்கிழமை (16) வெகு விமர்சையாக இடம்பெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதியாக வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், விசேட அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மற்றும் கௌரவ அதிதியாக புத்தளம் வலயக்கல்விப் பணிப்பாளர் அர்ஜுன ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆரம்ப பாடசாலையின் முக்கியத்துவம் மற்றும் அறிவார்ந்த சமூகத்தை கட்டியெழுப்ப ஆரம்ப பாடசாலை ஆற்றிவருகின்ற அர்ப்பணிப்பு குறித்து விரிவாக பேசிய வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், புத்தளம் மாவட்ட பாடசாலைகளின் துரித வளர்ச்சி பற்றியும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

மேலும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் செயற்திட்டத்திற்கு வடமேல் மாகாண ஆளுநர் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் ஜவ்ஷி ஜமால்தின், இணைப்புச் செயலாளர் எச். அமீர் அலி ஆசிரியர், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் உட்பட உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் அயல் பாடசாலையின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு
நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு

ஹிருணிகாவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறை

0

கடத்தல் வழக்கில் முன்னாள் எம்.பி ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்தத் தீர்ப்பை அறிவித்தார்.

தெமட்டகொட பகுதியிலுள்ள கடை ஒன்றில் பணிபுரிந்த அமில பிரியந்த அமரசிங்க எனும் இளைஞர் ஒருவரை 2015 டிசம்பர் 21ஆம் திகதி ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு சொந்தமான டிபெண்டர் வாகனத்தில் கடத்திய வழக்கு விசாரணை முடிவில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

29 குற்றங்கள் தொடர்பில் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் 8 பேரும் குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில், அச்சம்பத்திற்கு உதவி, ஒத்தாசை புரிந்ததாக ஹிருணிகா மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்திருந்தார்.

அத்தோடு, சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவின் ஆதரவாளர்கள் 8 பேர் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைதான ஐந்தாம் சந்தேகநபரின் மகள் அளித்துள்ள வாக்குமூலத்தில், தமது தாயாருடன் தொடர்பு பேணிய நபர் ஒருவரை தாம் காண்பித்ததாகவும், அவரை தமது தந்தையும் அவருடன் சென்றவர்களும் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு ஹிருணிகாவிடம் அழைத்துச் சென்றதாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

ஓவியப்போட்டியில் எருக்கலம்பிட்டி மாணவன் முதலாமிடம்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட வட மாகாண மானவர்களுக்கிடையிலான சித்திரப்போட்டியில் மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்றார்.

வீதி விபத்துக்கள் இல்லாத நாளைக்கான பாடசாலையிலிருந்து அணிவக்குப்போம் எனும் தொனிப்பொருளில் கடந்த வியாழக்கிழமை (13.06.2024) அன்று நடாத்தப்பட்ட வட மாகாண மாணவர்களுக்கிடையிலான குறித்த சித்திரப்போட்டியில் சுமார் 2600 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

சித்திரப்போட்டியில் பங்குபற்றிய 2600 மாணவர்களில் 250 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு நேற்றைய தினம் (15.06.2024) அவர்களுக்கான போட்டி இடம்பெற்றது.

நடைபெற்று முடிந்த இறுதிச் சுற்றுப்போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்று பெருமதிமிக்க பரிசில்களை பெற்றுக்கொண்டார்.

முதலாம் இடம் பெற்ற முஹம்மது ஹுசைன் என்ற மாணவனுக்கு சான்றிதல், துவிச்சக்கரவண்டி மற்றும் 8500/- ரூபா பெறுமதியான வவுச்சரும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இதேவேளை குறித்த போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய இல்முதீன் முஹம்மது ஹஸ்பான் 7 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய மற்றொரு மாணவரான முஹம்மது சம்ஹான் 8 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

பாரிய சாவல்களுக்கு மத்தியில் தனி ஒரு மனிதனாக இம் மாணாவர்களை ஊக்கப்படுத்தி, தயார்ப்படுத்தி போட்டியில் பங்குபெறச் செய்து வெற்றிபெறச் செய்த எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியின் சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் அவர்களின் இம் முயற்சிக்கு, பாடசாலை சமூகம் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் நன்றி தெரிவித்தனர்.

தமக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வந்து தேசிய அளவில் இடம்பெறும் போட்டிகளில் மாணவர்களை பங்குபெறச் செய்வதே தனது இலக்கு என சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் எமது ஊடகத்திற்கு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை இராஜினாமா

0

நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்துள்ளனர்.

சாந்த நிரியல்ல உட்பட 15 பேர் கொண்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரின் அறிவித்தலுக்கு அமைய இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி திங்கட்கிழமை புதிய பணிப்பாளர் சபை நியமிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ “அத தெரண” விற்கு தெரிவித்தார்.

புத்தளம் எருக்கலம்பிட்டியில் கடும் வெள்ளம்

0

புத்தளம் பகுதியில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக புத்தளம் பகுதி முழுதும் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.

புத்தளம், தில்லையடி, பாலாவி, புத்தளம் எருக்கலம்பிட்டி, ஹிதாயத் நகர்,  மதுரங்குளி மற்றும் ஏனைய பல கிராமங்களும் வெள்ளித்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமமும் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 1500 குடும்பங்கள் இங்கு வாழ்ந்துவருவதுடன், அனைத்து வீடுகளும் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நூற்றிற்கும் அதிகமான வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் ஐநூற்றுக்கும் அதிகமான வீடுகள் பகுதி அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8ஆம் திகதி ஏற்பட்ட மழை வெள்ளித்தினால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் மற்றும் பாடசாலைகளில் தற்காலிகமாக  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு தினங்களாக இவர்களுக்கான சமைத்த உணவுகள் மூன்று வேலைகளிலும் ஊர் தனவந்தர்களின் உதவியுடனும், பள்ளிவாசல் நிர்வாக சபையின் வழிகாட்டலுடனும் வழங்கப்பட்டு வருவதுடன், ஊர் மக்களுக்கும் உணவு விநியோகங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

இவர்களுக்கான நிவாரண உதவிகள் இதுவரை அரசாங்கத்தினால் வழங்கப்படாத போதிலும், ஊர் மக்களின் பங்களிப்புடன் மாத்திரமே பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு விநியோகங்கள் இதுவரை  வழங்கப்பட்டு வருகின்றது.

புத்தளம் பொத்துவில்லு பகுதியில் உள்ள குளம் மழை நீரினால்  பெருக்கெடுத்துள்ளதால் குறித்த குளத்து நீர் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமத்திற்குள் தொடர்ந்தும் மூன்றாவது நாளாக ஊடறுத்து செல்வதால் வீடுகள் தொடர்ந்தும் நீருள் மூழ்கியுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்தின் நிவாரண உதவிக்காக பல மக்கள் தொடர்ந்தும் எதிர்பார்த்து காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

புதிய வரிச் சட்டத்தால் நடுத்தர மக்களை நசுக்கப் பார்க்கிறது அரசு!

0

இறைவரிச் சட்டத் திருத்தங்கள் மூலம் பொதுமக்களைச் சிறையிலடைக்க முயற்சி – பைசர் முஸ்தபா எச்சரிக்கை

உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள புதிய திருத்தங்கள் “மிகவும் கடுமையானவை” (Draconian) எனவும், முன்னர் சிவில் விவகாரங்களாகக் கருதப்பட்ட நிர்வாகத் தவறுகளை குற்றவியல் குற்றங்களாக மாற்ற அரசாங்கம் முயற்சிப்பதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான பைசர் முஸ்தபா இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நிர்வாகத் தவறுகளுக்கு சிறைத்தண்டனை, ஆண்டு வருமான அறிக்கையைச் சமர்ப்பிக்கத் தவறுதல், வரிப் பதிவு செய்யத் தவறுதல் அல்லது ஆணையாளர் நாயகம் முன்னிலையில் முன்னிலையாகத் தவறுதல், போன்ற விடயங்களுக்காக ஆறு மாத சிறைத்தண்டனை மற்றும் 4 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப் புதிய திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பெரிய நிறுவனங்களுக்கு இவற்றைக் கையாள தணிக்கையாளர்கள் (Auditors) உள்ளனர், ஆனால் ஒவ்வொரு குடிமகனும் வரி நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், இத்தகைய சட்டங்களால் சாதாரண மக்களே பாதிக்கப்படுவார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வரி ஏய்ப்புக்கும் சாதாரண நிர்வாகத் தவறுக்கும் வித்தியாசம் இருப்பதாகவும், இத்தகைய சிறு தவறுகளுக்காக ஒருவரை நீதவான் நீதிமன்றத்திற்கு இழுப்பது முறையற்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அரசியலமைப்பு ரீதியான சிக்கல்கள், வரி மேன்முறையீடுகள் நிலுவையில் இருக்கும் போதே நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர ஆணையாளருக்கு அதிகாரம் வழங்க அரசாங்கம் ஏற்கனவே முயன்றதை அவர் நினைவு கூர்ந்தார். அத்தகைய நடவடிக்கை அரசியலமைப்பிற்கு முரணானது என்றும், அதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் மக்கள் தீர்ப்பு அவசியம் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.

சிறு வணிகர்கள் மீதான வற் (VAT) வரிப் சுமை வற் வரிப்பிற்கான வரம்பை மாதத்திற்கு 5 மில்லியன் ரூபாவிலிருந்து 3 மில்லியன் ரூபாவாகக் குறைக்க அரசாங்கம் எடுத்துள்ள முடிவையும் முஸ்தபா கடுமையாக விமர்சித்தார். வற் வரி லாபத்தில் அல்லாமல் மொத்த வருமானத்திலேயே (Turnover) கணக்கிடப்படுவதால், இது சிறிய சில்லறை கடை உரிமையாளர்களைப் பெருமளவில் பாதிக்கும் என அவர் விளக்கினார்.

மொத்த வரிச்சுமை தற்போது 20.5% வரை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்த அவர், வரிச் சுமையைக் குறைப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இன்று மக்கள் மீது தாங்க முடியாத சுமையை ஏற்றியுள்ளதாகக் கூறி, இந்தத் தண்டனை நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

பாங்கொக்கிலிருந்து ‘கிரீன் செனல்’ ஊடாக வந்த ‘குஷ்’ போதைப்பொருள்

0

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ‘கிரீன் செனல்’ (Green Channel) ஊடாக இலங்கைக்குள் கடத்த முயன்ற 14 கிலோவிற்கும் அதிக எடையுடைய ‘குஷ்’ (Kush) போதைப்பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருள் தொகையின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 140.56 மில்லியன் ரூபா (14 கோடி ரூபாவிற்கும் அதிகம்) என மதிப்பிடப்பட்டுள்ளது.

திட்டமிட்ட கடத்தல் முறியடிப்பு

தாய்லாந்தின் பாங்கொக் நகரிலிருந்து வருகை தந்த இரு இலங்கை பயணிகள், விமான நிலையத்தின் சுங்க சோதனைகள் ஏதுமற்ற ‘கிரீன் செனல்’ பகுதியைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி இந்த போதைப்பொருள் பொதிகளைக் கடத்த முயன்றுள்ளனர். எனினும், அங்கு கடமையில் இருந்த அதிகாரிகளின் துரித மற்றும் சாதுரியமான சோதனையின் போது இந்த பெரும் போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டது.

இதன்போது அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் பொதிகளின் மொத்த எடை 14.562 கிலோகிராம் என சுங்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின்படி, அவர்கள் இருவரும் கொழும்பு, தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த 23 மற்றும் 30 வயதுடைய இளைஞர்கள் எனத் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவர் மீதும், கைப்பற்றப்பட்ட 14 கோடி ரூபா பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருள் மீதும் மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, அவர்கள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கைக்குள் போதைப்பொருள் ஊடுருவலைத் தடுக்கும் நோக்கில் விமான நிலையப் பாதுகாப்பு மற்றும் சுங்க சோதனைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ள பின்னணியில் இக்கடத்தல் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பாதுகாப்பை உறுதி செய்து புதிய சட்டமூலம் – உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

0

பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுக்கும் உடன்படிக்கை (திருத்த) சட்டமூலமானது, நாட்டின் அரசியலமைப்பிற்கு முழுமையாக இணங்கக்கூடிய வகையில் அமைந்துள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

இந்தத் தீர்மானத்தை சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று (19) காலை பாராளுமன்றத்திற்கு அறிவித்தார். 

அரசியலமைப்பின் 121 (1) ஆம் பிரிவின் கீழ் முன்வைக்கப்பட்ட சவாலொன்றைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார். 

இந்தச் சட்டமூலம் ஒட்டுமொத்தமாகவும், அதேபோன்று அதில் உள்ள ஒவ்வொரு விதிகளும் அரசியலமைப்பின் எந்தவொரு பிரிவுக்கும் முரணாக அமையவில்லை என நீதிமன்றம் முடிவு செய்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இடி,மின்னலுடன் வரும் பருவமழை; மக்களே விழிப்பாக இருங்கள்!

0

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் தாபிக்கப்பட்டு வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வட மாகாணத்திலும் அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். 

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30–40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். 

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

ஆதவ் அர்ஜுனாவை சந்தித்த அர்ச்சுனா எம்.பி!

0

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, இன்று தமிழ்நாடு தலைமைச் செயலக அலுவலகத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து உரையாடினார்.

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் தமிழ் மக்களின் வாழ்வாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து இச்சந்திப்பில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

​பரஸ்பர நல்லுறவும் தமிழ் மக்கள் நலனும்​மிகவும் சுமுகமான மற்றும் நட்பு ரீதியிலான சூழலில் நடைபெற்ற இந்த உயர்மட்டச் சந்திப்பில், இந்தியா – இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர நல்லுறவை அடுத்த கட்டத்திற்கு எப்படிக் கொண்டு செல்வது என்பது குறித்து இருவரும் விவாதித்தனர்.

குறிப்பாக, இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நல்வாழ்வு, கல்வி மற்றும் பொருளாதார உரிமைகள் குறித்தும், அவர்களது நலன்களைப் பாதுகாப்பதற்கான கூட்டு முயற்சிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.​ மீனவர் பாதுகாப்பு மற்றும் ஒன்றுபட்ட வளர்ச்சி ​தமிழக மற்றும் ஈழத்துத் தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினையாக இருந்து வரும் மீனவர் பாதுகாப்பு குறித்து இச்சந்திப்பில் முக்கியமாக வலியுறுத்தப்பட்டது.

இரு நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்து, எல்லையோரப் பதற்றங்களைத் தவிர்ப்பதற்கான சுமூகமான தீர்வுகள் குறித்து பேசப்பட்டது.​ மேலும், பிராந்திய அளவிலான ஒன்றுபட்ட வளர்ச்சி (Inclusive Growth) என்ற இலக்கை அடைவதற்கும், இரு நாட்டுத் தமிழர்களுக்கிடையிலான கலாச்சார மற்றும் பொருளாதாரப் பிணைப்பை வலுப்படுத்துவது அவசியம் என்றும் இருதரப்பிலும் ஒருமித்த கருத்து எட்டப்பட்டது.​

அந்த வகையில் இந்தச் சந்திப்பு ஆரோக்கியமானதொரு தொடக்கமாக அமைந்துள்ளது,” என சந்திப்பின் நிறைவில் பரஸ்பரம் நெகிழ்ச்சியோடு தெரிவிக்கப்பட்டது.​ இருநாட்டுத் தமிழ் மக்களின் உறவுப் பாலத்தை மேலும் பலப்படுத்தும் நோக்கில் அமைந்துள்ள இச்சந்திப்பு, அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பிளே-ஆஃப் போக உங்களுக்கு என்ன தகுதி இருக்கு? கதறும் ராஜஸ்தான்!

0

வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் களம் இறங்கிவிட்டு, மைதானத்தில் ‘பள்ளிக்குழந்தைகள்’ போல சொதப்பி, டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் படுதோல்வி அடைந்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்.

இந்த அவமானகரமான தோல்வியால் ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற ராஜஸ்தான் அணியின் புதிய கேப்டன் ரியான் பராக், தனது சொந்த அணி வீரர்களையே ஊடகங்களுக்கு முன்னால் கடுமையாகச் சாடியுள்ளார்.

“இப்படி ஒரு கேவலமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், நாங்கள் பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறவே தகுதியற்றவர்கள்” என்று அவர் ஆவேசமாகப் பேசியிருப்பது ஐபிஎல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கை நழுவிய கேட்ச்… கதறிய சங்கக்காரா!

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த முக்கியமான லீக் ஆட்டத்தில், டெல்லி அணி 188 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது. டெல்லி அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் கே.எல். ராகுல் பூஜ்ஜிய ரன்னில் இருந்தபோது, முதல் ஓவரிலேயே மிக எளிமையான ஒரு கேட்ச் வாய்ப்பை ராஜஸ்தான் வீரர் யாஷ் ராஜ் புஞ்சா கோட்டைவிட்டார்.

விளையாட்டின் அடிப்படைத் தார்மீகத்தைக் கூட மறந்து கோட்டைவிடப்பட்ட அந்த ஒரு கேட்ச், ஒட்டுமொத்த போட்டியின் தலையெழுத்தையே மாற்றியது. உயிர் பிழைத்த ராகுல், அபிஷேக் போரெல்லுடன் இணைந்து ராஜஸ்தான் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார்.

இந்த ஜோடி 10 ஓவர்களில் 100 ரன்களைக் குவித்து டெல்லியின் வெற்றியை உறுதி செய்தது. மைதானத்தில் வீரர்கள் பந்துகளைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த லாவகத்தைக் கண்ட பயிற்சியாளர் குமார் சங்கக்காரா கோபத்தில் கத்திக் கதறிய காட்சிகள் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தன.

முன்னதாக ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்தபோது 14 ஓவர்களில் 160 ரன்களுக்கு 2 விக்கெட் என்று இமாலய ஸ்கோரை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. ஆனால், டெல்லி அணியின் மிட்செல் ஸ்டார்க், லுங்கி நிகிடி ஆகியோரின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல், ராஜஸ்தானின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒட்டுமொத்தமாகச் சரணடைந்தனர். 200 ரன்களைத் தாண்டியிருக்க வேண்டிய ஸ்கோர், மிடில் ஆர்டரின் மட்டமான பேட்டிங்கால் சுருங்கியது.

கேப்டனின் விசித்திர முடிவு – விமர்சனத்தில் பராக்!

போட்டியின் 18-வது ஓவரை பகுதிநேரப் பந்துவீச்சாளரான டோனோவன் ஃபெரைராவிடம் கேப்டன் ரியான் பராக் ஒப்படைத்தது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. அந்த ஓவரைப் பயன்படுத்திய அக்சர் படேல் 16 ரன்களை வெளுத்து வாங்கினார்.

பிளே-ஆஃப் கனவு நனவாகுமா? தொங்கலில் ராஜஸ்தான்!

இந்தக் கேவலமான தோல்வியின் மூலம் ராஜஸ்தான் அணி 12 புள்ளிகளுடன் 5-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. ரன் ரேட்டும் +0.027 என்று மிக மோசமாக உள்ளதால், அடுத்த 2 போட்டிகளில் லக்னோ மற்றும் மும்பை அணிகளுக்கு எதிராகப் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றால் மட்டுமே பிளே-ஆஃப் செல்ல முடியும் என்ற கத்தி மேல் நடக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது ராஜஸ்தான்.

திறமையான வீரர்களை வைத்துக் கொண்டு, அலட்சியத்தால் வெற்றியைத் தாரை வார்த்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இந்த ஆட்டம் ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 17ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று!

தமிழினத்தின் வரலாற்றில் ஆறாத வடுவாகவும், என்றுமே மறக்க முடியாத பெருந் துயரமாகவும் பதிந்துபோன மே 18 முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நாள் இன்றைய தினம் (18.05.2026) தாயகத்திலும் உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் மத்தியிலும் உணர்வெழுச்சியோடு நினைவு கூரப்பட்டது.

கண்ணீர் மழையில் நனைந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்

கடந்த 2009ஆம் ஆண்டு இதே போன்றதொரு மே மாத நன்னாளில், உலகமே வேடிக்கை பார்க்க, கொடிய யுத்தத்தின் கோரப் பிடியில் சிக்குண்டு பல்லாயிரக்கணக்கான எமது தொப்புள்கொடி உறவுகள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்; பல்லாயிரக்கணக்கானோர் அங்கவீனர்களாக்கப்பட்டனர்; ஆயிரக்கணக்கான உறவுகள் இன்றுவரை என்னவென்றே தெரியாதவாறு பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டனர்.

அவ்வாறு அநியாயமாகப் பறிபோன எமது சொந்தங்களின் ஆத்ம சாந்திக்காகவும், அவர்களின் நீதிக்காகவும் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பல்லாயிரக்கணக்கான உறவுகள் ஒன்றுகூடினர். தாயகத்தின் நாலா திசைகளில் இருந்தும், பல தடைகளையும் கடந்து வருகை தந்திருந்த மக்களின் கண்ணீர் மழையினால் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் நனைந்தது.

இவ் அஞ்சலி நிகழ்வில் மதக் குருமார்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறவினர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு சுடரேற்றியும், மலரஞ்சலி செலுத்தியும் தமது நெஞ்சார்ந்த அஞ்சலியைச் செலுத்தினர்.

தர்மபுரத்தில் உணர்வுப்பூர்வமான நினைவேந்தல்

இதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவு நாளை முன்னிட்டு கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியில் இளந்தாரகை விளையாட்டுக்கழகம் மற்றும் அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து உணர்வுப்பூர்வமான அஞ்சலி நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் திரளாகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில், ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களும் கலந்துகொண்டு, முள்ளிவாய்க்காலில் மடிந்த எமது உறவுகளுக்குத் தனது அஞ்சலியைச் செலுத்தியதோடு, மக்களின் துயரிலும் பங்கெடுத்துக் கொண்டார்.

முள்ளிவாய்க்கால் என்பது வெறும் மண் அல்ல; அது தமிழ் மக்களின் கூட்டுத்துயரத்தின் சின்னம். எத்தனையோ ஆண்டுகள் கடந்தாலும், காலங்கள் மாறினாலும் எமது உறவுகளின் இழப்பால் ஏற்பட்ட வடுவும், அவர்களுக்கான நீதிக்கான தாகமும் தமிழர்களின் நெஞ்சங்களை விட்டு ஒருபோதும் அகலாது என்பதை இன்றைய நினைவேந்தல் நிகழ்வுகள் மீண்டும் ஒருமுறை உலகிற்குப் பறைசாற்றியுள்ளன.

ஜே.வி.பி தலைமையகத்தில் மோதல்?எதிர்க்கட்சியை இணைக்க அழுத்தம்!

0

கொழும்பு, மே 18 (டெய்லி மிரர்): தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்திற்குள் கடந்த சில மாதங்களாகவே கருத்து வேறுபாடுகளும், மோதல்களும் நிலவி வருவதாக பல்வேறு வதந்திகள் பரவி வந்த நிலையில், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் நோக்கில், எதிர்க்கட்சியில் உள்ள திறமையான பாராளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் சில சிரேஷ்ட அரசாங்க உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பெலவத்தையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) தலைமையகத்தில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே இந்த விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் டெய்லி மிரர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

தற்போது வீழ்ச்சியடைந்து வரும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும், அரசாங்கத்தின் கொள்கை வகுப்பிற்கு ஆதரவளிப்பதற்கும் எதிர்க்கட்சியில் உள்ள தகுதியும் திறமையும் வாய்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்திற்குள் உள்வாங்குவது குறித்து ஜே.வி.பி.யின் சிரேஷ்ட தலைவர்கள் ஆலோசித்துள்ளனர்.

அத்துடன், ஜே.வி.பி.யின் வழக்கமான “ஒற்றைக் கட்சி” (One-party ideology) என்ற சித்தாந்தத்தில் இப்போது மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும், எதிர்க்கட்சிகளில் உள்ள திறமையாளர்களுக்கு அரசாங்கத்தில் இடமளிக்க வேண்டும் என்றும் சிலர் வலுவாக வாதிட்டுள்ளனர்.

எனினும், இந்த யோசனையை ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா முற்றிலும் நிராகரித்துள்ளார். ஜே.வி.பி அதன் ஒற்றைக் கொள்கையிலேயே தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்றும், இந்த தருணத்தில் யாருக்கும் அழைப்பு விடுக்கக் கூடாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். எனினும், டில்வின் சில்வாவின் இந்த கருத்துக்கு கட்சியின் மற்றொரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டுள்ளனர்.

முற்றிய வாக்குவாதம்: கைகலப்பில் முடிந்ததாக தகவல்

இந்த காரசாரமான விவாதத்தின் போது, விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்தவின் வீடு தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்தி காரணமாக அரசாங்கத்தின் செல்வாக்கு ஓரளவுக்கு சரிந்துள்ளதாக டில்வின் சில்வா சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் லால்காந்த, டில்வின் சில்வாவுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த மோதல் ஒரு கட்டத்தில் கட்டுப்பாட்டை மீறிச் சென்றதாகவும், அங்கு பிரசன்னமாகியிருந்த தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டு வன்முறையில் ஈடுபடும் அளவிற்கு நிலைமை மோசமடைந்ததாகவும் உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியின் நிலைப்பாடு என்ன?

இந்த ஒட்டுமொத்த சம்பவத்தின் போதும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அங்கேயே இருந்துள்ளார். அரசாங்கம் தனது ஊழல் எதிர்ப்பு கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருந்தபோதிலும், தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பது குறித்த பிரேரணையை அவர் நிராகரிக்கவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ இல்லை எனத் தெரிகிறது.

அமைச்சரவை அந்தஸ்து கோரும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள்

இதேவேளை, அரசாங்கத்திற்கு ஏதோ ஒரு வழியில் ஆதரவளிப்பதற்காக எதிர்க்கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களை சிரேஷ்ட அரசாங்க உறுப்பினர்கள் ஏற்கனவே அணுகியுள்ளனர். எனினும், அவ்வாறு அணுகப்பட்ட சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள், தமக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகள் (Cabinet portfolios) வேண்டும் என நிபந்தனை விதித்ததால், அந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அரசாங்கத்தின் திறைசேரிப் பணத்தை ஹேக்கர்கள் (Hackers) கொள்ளையடித்ததாகக் கூறப்படும் அண்மைக்கால சர்ச்சை மற்றும் கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியில், நாட்டின் நலனைக் கருத்திற்கொண்டே இந்த முடிவுகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

நாட்டின் பொருளாதாரத்தை சீரமைப்பதிலும் ஊழலை ஒழிப்பதிலும் ஜனாதிபதி திஸாநாயக்க உறுதியாக உள்ளார் என்றும், பொருளாதார சவால்களை எதிர்கொள்ள நிபுணர்களின் ஆலோசனைகளையும் பல்வேறு புதிய திட்டங்களையும் ஏற்றுக்கொள்வதற்கு அவரது தலைமைத்துவம் தயாராகவே இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

நாத்தாண்டியா கூட்டுறவுச் சங்கத்தின் 50ஆவது பொன்விழா!

0

ஜூட் சமந்த

நாத்தாண்டியா கூட்டுறவு வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, நாத்தாண்டியா பல்வேறு சேவை கூட்டுறவுச் சங்கத்தின் 50ஆவது பொன்விழா ஆண்டு நிறைவை முன்னிட்டு 50 பௌத்த துறவிகளுக்கான மகா தானப் புண்ணிய காரியம் கடந்த 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பக்திப்பூர்வமாக நடைபெற்றது.

சங்கத்தின் 50 ஆண்டுகால வெற்றிகரமான மக்கள் சேவையைக் கொண்டாடும் வகையிலும், அதற்கு ஆசி வேண்டியும் இந்த ஆன்மீக நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விழாவின் முக்கிய அம்சமாக, நாத்தாண்டியா நகர மையப்பகுதியில் இருந்து ஆரம்பமான பௌத்த துறவிகளை அழைத்து வரும் ஊர்வலம் அமைந்திருந்தது. இதில் 50 மகா சங்கத்தினரும் பக்திப்பூர்வமாக விழா நடைபெறும் இடத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து, முறைப்படி 50 மகா சங்கத்தினருக்குமான மகா தானம்மற்றும் அட்டப்பிறிகர உள்ளிட்ட நற்கொடைகள் வழங்கும் புண்ணிய காரியங்கள் நடைபெற்றன.

இந்நிகழ்வில் 50 ஆண்டுகால கூட்டுறவுச் சங்கத்தின் வளர்ச்சிக்கு உழைத்த அனைவருக்கும் இதன்போது ஆசிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிரடி உயர்வு!

உலகப் பொருளாதாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்று (18) மீண்டும் மிகப்பாரிய உச்சத்தை பதிவு செய்துள்ளது.

கடந்த சில நாட்களாக நிலவி வந்த மந்தமான சூழ்நிலையை உடைத்து, இன்று மசகு எண்ணெய் விலை சடுதியாக அதிரடி உயர்வைச் சந்தித்துள்ளது நுகர்வோர் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

விலை நிலவரம்: புதிய உச்சம்

சர்வதேச சந்தையின் தற்போதைய தரவுகளின்படி,

  • பிரெண்ட் (Brent) வகை மசகு எண்ணெய்: இதன் விலை ஒரே நாளில் 2.44% என்ற அதிரடி உயர்வைப் பதிவு செய்துள்ளது. இதன்படி, ஒரு பீப்பாய் பிரெண்ட் வகை மசகு எண்ணெய்யின் புதிய விலை 111.7 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.
  • டபிள்யூ.டி.ஐ. (WTI) வகை மசகு எண்ணெய்: அமெரிக்காவின் டபிள்யூ.டி.ஐ. வகை மசகு எண்ணெய் விலையும் கணிசமாக உயர்ந்து, ஒரு பீப்பாய் 108.32 அமெரிக்க டொலர்களாக விற்பனையாகி வருகின்றது.
விலையேற்றத்திற்கான பின்னணி என்ன?

உலகையே உலுக்கி வரும் இந்த திடீர் விலை அதிகரிப்புக்கு பின்னால் இரண்டு முக்கிய புவிசார் அரசியல் காரணங்கள் இருப்பதாக சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

1. அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தையில் இழுபறி: ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான நிச்சயமற்ற நிலை, உலக எண்ணெய் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சத்தை சந்தையில் உருவாக்கியுள்ளது.

2. ஐக்கிய அரபு இராச்சியம் மீதான தாக்குதல்கள்: அண்மையில் ஐக்கிய அரபு இராச்சியம் (UAE) மீது நடத்தப்பட்ட ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடுமையான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகின் முக்கிய எண்ணெய் உற்பத்தி பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள இந்த பாதுகாப்பு அச்சுறுத்தல், விலையேற்றத்திற்கு பிரதான வினையூக்கியாக அமைந்துள்ளது.

இந்த அதிரடி விலையேற்றம் காரணமாக, எரிபொருளை இறக்குமதி செய்யும் இலங்கை உள்ளிட்ட வளரும் நாடுகளின் பொருளாதாரம் மேலும் கடுமையான சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் என அஞ்சப்படுகிறது. உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் பயணிப்பது, உள்ளூர் சந்தைகளில் எரிபொருள் விலை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மேலும் உயர்வதற்கே வழிவகுக்கும் என பொருளாதார விவகார ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.