Tuesday, April 28, 2026
Sponsored advertisementspot_img
Home Blog

நாகவில்லுவில் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ்வின் நினைவுதினம்!

பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று நாகவில்லுவில் இடம்பெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வு!

இலங்கை திருநாட்டில் பெளதீக ரீதியான பல வேலைத்திட்டங்களையும், இடம்பெயர்வு மற்றும் எல்லை நிர்ணயம் தொடர்பான பறந்துபட்ட அறிவினையும் கொண்டிருந்த எருக்கலம்பிட்டியை சேர்ந்த மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது வருட நினைவு தின நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

அந்த வகையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் நினைவுப் பேருரையும், புத்தக வெளியீடு நிகழ்வும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் ஏற்பாட்டில் நேற்று 25.08.2025 புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய அதிபர் ஜனாப் S.M. ஹுஸைமத் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், புத்தி ஜீவிகள் மற்றும் குடும்பத்தார்கள் கலந்தகொண்டமை விஷேட அம்சமாகும்.

சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் பொருளாளர் ஜனாப் ஏ.ஜி. அனீஸ் (Bsc.Agri) அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.

மேலும் இஸ்லாமிய கற்கை அறபு மொழிப் பீட, தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களினால் நூல் அறிமுக உரையும், நினைவுப் பேருரையும் மிகவும் உணர்வுபூர்வமாக நிகழ்த்தப்பட்டது.

கிழக்கு மற்றும் தென் கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பங்களிப்பு அளப்பெரியது என நினைவு கூறிய பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன், வடக்கில் ஏற்பட்ட யுத்தம் மற்றும் முஸ்லிம்களின் இடம்பெயர்வு குறித்து அதீத அக்கறையுடன் செயற்பட்ட மிக முக்கியமானவர் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்கள் எனவும் எடுத்துரைத்தார்.

வடக்கு முஸ்லிம்களின் இடம்பெயர்வு மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பில் அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களுடன் பலதரப்பட்ட கலந்துரையாடல்களை நடத்தி, சர்வதேசம் வரை இவ்விடயங்களை கொண்டுசென்ற மகான் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் என பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் தனது உரையில் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் புதல்வி சட்டத்தரணி எப்.சப்னா ஹஸ்புல்லாஹ் அவர்களினால் ஏற்புரை நிகழ்த்தப்பட்டதுடன், நூல் வெளியீடு நிகழ்வும் இடம்பெற்றது.

நூலின் முதற்பிரதியை ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தரும், புத்தளம் எருக்கலம்பிட்டி பள்ளிவாசல் நிர்வாக சபையின் முன்னாள் உறுப்பினருமான ஜனாப் ரஹ்மத்துல்லாஹ் (GS) அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

மேலும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் செயலாளர் ஜனாப் எஸ்.எச்.எம். றிஸ்னி அவர்களினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டதுடன், தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன், மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பாரியாருக்கும் நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில், பேராசிரியர்கள், கல்விமான்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், பாடசாலைச் சமூகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் குடும்பத்தார்கள் என பலரும் கலந்து சிறப்பித்ததுடன், ஈ நியூஸ் பெஸ்ட் ஊடக நிறுவனம் ஊடக அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரணிலுக்காக ஒன்று திரண்ட அரசியல் தலைவர்கள்!

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விசாரணை கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது, நாட்டின் அடிப்படை ஜனநாயக நிறுவனங்களின் வலிமை குறித்து கடுமையான கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் விளைவுகள் ஒரு தனிநபரின் அல்லது எந்தவொரு அரசியல் கட்சிகளின் தலைவிதியையும் விட, சமூகத்தின் உரிமைகளுக்கான பிரச்சினைகளை தோற்றிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் தலைவர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைகளை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது மற்றும் விளக்கமறியலை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து நடத்திய விசேட ஊடக சந்திப்பில் பங்கேற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரல முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் அறிக்கையை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

போர்த்துக்கல் அணி சாம்பியன் ஆனது!

0

‘நேஷன்ஸ் லீக்’ கால்பந்தில் போர்ச்சுகல் அணி சாம்பியன் ஆனது. பைனலில் ‘பெனால்டி ஷூட் அவுட்டில்’ 5-3 என ஸ்பெயினை வீழ்த்தியது.

ஐரோப்பிய கால்பந்து அணிகளுக்காக ‘நேஷன்ஸ் லீக்’ தொடர் நடத்தப்படுகிறது. மொத்தம் 54 அணிகள் பங்கேற்றன. நேற்று ஜெர்மனியின் முனிக் நகரில் நடந்த பைனலில், போர்ச்சுகல், நடப்பு யூரோ சாம்பியன் ஸ்பெயின் பலப்பரீட்சை நடத்தின. போட்டியின் 21வது நிமிடம் ஜுபிமெண்டி (ஸ்பெயின்), 26வது நிமிடம் மெண்டிஸ் (போர்ச்சுகல்) தலா ஒரு கோல் அடித்தனர். 45வது நிமிடம் மைக்கேல் ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் ஸ்பெயின் அணி 2-1 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் 61 வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். போர்ச்சுகல் அணிக்காக இவர் அடித்த 138வது கோல் இது. 90 நிமிட முடிவில் போட்டி 2-2 என சமன் ஆனது. அடுத்து நடந்த கூடுதல் நேரத்திலும் (30 நிமிடம்) இரு அணியும் கோல் அடிக்கவில்லை.

இதையடுத்து வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி ‘பெனால்டி ஷூட் அவுட்டுக்கு’ சென்றது. இரு அணிக்கும் தலா 5 வாய்ப்புகள் தரப்பட்டன. காயம் காரணமாக 88 வது நிமிடம் வெளியேறிய ரொனால்டோ, இதில் பங்கேற்கவில்லை.

முதல் 3 வாய்ப்பில் போர்ச்சுகலின் ராமோஸ், விடின்ஹா, பெர்ணான்டஸ் கோல் அடித்தனர். மறுபக்கம் ஸ்பெயின் தரப்பில் மெரினோ, பயேனா, இஸ்கோ கோல் அடிக்க 3-3 என ஆனது.

4வது வாய்ப்பில் மெண்டெஸ் (போர்ச்சுகல்) கோல் அடிக்க, ஸ்பெயினின் மோராட்டோ அடித்த பந்தை கோல் கீப்பர் டீகோ கோஸ்டா தடுத்து அசத்தினார்.

5வது வாய்ப்பில் நெவேஸ் கோல் அடித்தார். இதையடுத்து 5-3 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் ‘திரில்’ வெற்றி பெற்றது. 2019க்குப் பின் இத்தொடரில் மீண்டும் சாம்பியன் ஆனது.

தில்லையடியில் சிக்கிய கடத்தல் பீடி இலைகள்!

0

புத்தளத்தில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளுடன் வேன் ஒன்றும் பறிமுதல்!

இலங்கை கடற்படை, பொலிஸாருடன் இணைந்து, புத்தளம், தில்லையடி பகுதியில் 2025 ஜூன் 05 இரவு வேளையில் நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகள் கொண்ட ஒரு வேன் கைப்பற்றப்பட்டது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிறுவனம், புத்தளம் பொலிஸாருடன் இணைந்து தில்லையடி பகுதியில் நடத்திய இந்த சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்று சோதனை செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகளானது வாகனத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் வேன் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களால் ஆபத்தா?

விண்வெளியில் பூமியை சுற்றி வந்துக்கொண்டிருக்கும் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கொள்களை சீனா நினைத்தால் வெறும் 12 மணி நேரத்தில் தாக்கி அழித்துவிட முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் என்கிற செய்தி ஊடகத்தில் இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது தற்போது சீனா 99 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. இவை அனைத்தும் நான்ஜிங் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஆஸ்ட்ரோனாட்டிக்ஸ் பல்கலைக்கழகத்தின் விண்வெளிக் கட்டுப்பாட்டுத் துறையின் இயக்குநர் வூ யுன்ஹுவா தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இவை அனைத்தும் எலான் மஸ்கின் 1400 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை வெறும் 12 மணி நேரத்தில் காலி செய்துவிடும். சீன செயற்கைக்கோளில் லேசர், நுண் அலைகளை உருவாக்கும் கருவி, உளவு கருவிகள் பொருத்தப்பட்டிருக்கலாம். ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் வெறுமென நெட்வொர்க் கொடுக்க மட்டுமே பயன்படுத்தப்படுவதில்லை. தவிர, ராணுவ நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது என சீனா குற்றம்சாட்டி வருகிறது.

அதாவது, உக்ரைன்-ரஷ்யா போரில், உக்ரைன் படைகளுக்கு தகவல்கள் கொடுக்கவும், ரஷ்ய எல்லையை துல்லியமாக கண்காணிக்கவும் இந்த செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த 2022ம் ஆண்டு ரஷ்ய போரின்போது அப்போதைய உக்ரைனின் துணைப் பிரதமரான மைக்கைலோ ஃபெடோரோவ், “ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் சேவையை உடனடியாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த மஸ்க், “உடனடியாக சேவை வழங்கப்படும்” என்று கூறியிருந்தார்.

உக்ரைன் போருடன் மட்டுமே ஸ்டார்லிங்க் நிற்காது, நாளை சீனாவுக்கும்-தைவானுக்கும் பஞ்சாயது ஏற்பட்டால் அப்போதும், தைவானுக்கு சப்போர்ட் செய்ய ஸ்டார்லிங்க் வரும். எனவே இந்த கூட்டு நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்க சீனா இந்த புதிய செயற்கைக்கோள்களை உருவாக்கியிருக்கிறது.

கடந்த 2023ம் ஆண்டு இதற்கான பணிகளை சீனா தொடங்கியது. இந்த திட்டத்திற்கு ‘கியான்ஃபான் மெகா-விண்மீன் திட்டம்’ (Qianfan mega-constellation project) என்றும் பெயரிட்டிருந்தது. நோக்கம் உலகம் முழுவதும் இணைய தொடர்பை வழங்குவதாகும். இதற்காக மொத்தம் 15,000 சிறிய ரக செயற்கைக்கோள்களை ஏவ சீனா முடிவெடுத்தது. இதன் முதல் தொகுப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏவப்பட்டது. இதில் 18 செயற்கைக்கோள்கள் இருந்தன.

ஒவ்வொன்றும் சுமார் 300 கி.கி எடையில் இருந்தது. இவை பூமியிலிருந்து 800 கி.மீ உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டது. இதேபோன்று 2024 டிசம்பரில் அடுத்து இரண்டு தொகுதி ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. தற்போது மொத்தம் 99 செயற்கைக்கோள்கள் விண்வெளியில் இருக்கின்றன. 15,000 செயற்கைக்கோள்களை 3 கட்டங்களாக ஏவ இருக்கிறது. முதல் கட்டத்தில் 1,296 செயற்கைக்கோள்கள் ஏவப்படும். இதில் 648 செயற்கைக்கோள்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஏவப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் கன்னி உரை

0

அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்புவோம்

தேசியத்துவத்துடனும் ஐக்கியத்துடனும் ஒன்றுபட்டு நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க இன்று (23) காலை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

பதவிப் பிரமாணத்தின் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய முழுமையான உரை:

மக்களால் ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது நமது நாட்டின் ஜனநாயகத்திலிருக்கும் மிக முக்கியமான அம்சமாகும். தேர்தலில் வாக்களித்தல் மற்றும் ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதோடு ஜனநாயகம் நிறைவு பெறுவதில்லை. இது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சம் என்றாலும், நம் நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்த, கட்டமைப்புகளின் வலிமையும், சட்டங்களை வலுப்படுத்துவதும் அவசியம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனவே, எனது பதவிக்காலத்தில் இந்த நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.

அத்துடன், இந்த நாட்டில் ஜனநாயக முறையில் அதிகாரப் பரிமாற்றம் நடந்த வரலாறும் உண்டு. தேர்தலில் நிகழும் அதிகாரப் பரிமாற்றத்தை எந்தத் தலைவரும் நிராகரித்ததில்லை. அதற்கமைய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த மக்கள்ஆணையை சுமூகமாக ஏற்றுக்கொண்டதுடன், ஜனநாயக ரீதியில் அதிகாரத்தை கைமாற்றுவதற்கான அவரின் அர்ப்பணிப்பிற்கும் முன்னுதாரணத்திற்கும் நன்றி தெரிவிக்கிறேன். மேலும் எமக்கு கிடைப்பது மிகவும் சவால் நிறைந்த நாடு என்பதை நன்கு புரிந்து கொண்டிருக்கிறோம். நமது அரசியலில் தூய்மையான, மக்களால் எதிர்பார்க்கப்படும் சிறந்த அரசியல் கலாசாரத்திற்காக அவசியம் காணப்படுகிறது.அதற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

நம் நாட்டின் அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு நல்லெண்ணம் இல்லை. எனவே, அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் மீது மக்கள் மரியாதை மற்றும் நம்பிக்கையை மீட்டெடுக்க எங்கள் தரப்பிலிருந்து முடிந்த அனைத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.

மேலும், நமக்கு முன் இருக்கும் இந்த ஆழமான நெருக்கடியை வெறும் அரசோ, வெறும் அரசியல் கட்சியோ அல்லது ஒரு தனி நபரோ மட்டும் தீர்க்க முடியும் என்று நாங்கள் நம்பவில்லை. ஏனென்றால், நான் முன்பு கூறியது போல், நான் ஒரு மாயாஜால வித்தைக்காரனல்ல. நான் மந்திரவாதியும் இல்லை. நான் இந்த நாட்டின் சாதாரண குடிமகன். எம்மிடம் திறமைகள் உள்ளன. இயலாமைகளும் உள்ளன. தெரிந்த விடயங்களும் உள்ளன அதேபோன்று, தெரியாத விடயங்களும் உள்ளன.

ஆனால் திறமைகளைப் பயன்படுத்தி தெரியாதவற்றை சேகரித்துக்கொண்டு சிறந்த முடிவுகளை எடுத்து இந்த நாட்டை வழிநடத்துவதே எனது தலையாய பணியாகும். அந்த கூட்டுப் பங்களிப்பின் ஒரு அங்கமாக மாறுவது எனது பொறுப்பாகும். மேலும், இந்த நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதில் பொது மக்கள் மற்றும் அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் பாரிய பொறுப்பு உள்ளது. அந்தப் பொறுப்பை நிறைவேற்ற அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்.

ஆனால், நாட்டின் ஜனாதிபதி என்ற முறையில், இந்தப் பணியை முன்னின்று நடத்துவதில் எனக்கு முதன்மையான மற்றும் மிக முக்கியமான பொறுப்பு இருப்பதை நான் ஏற்றுக்கொண்டேன். எனவே, இந்தச் சவாலை வெற்றிகொள்வதற்காக எனக்குக் வழங்கப்பட்டுள்ள பணியை நான் உரிய முறையில் நிறைவேற்றுவேன் என்பதை செயற்பாடு மற்றும் நடைமுறை மூலம் எல்லா சந்தர்ப்பங்களிலும் இந்த நாட்டின் பிரஜைகளுக்கு வெளிப்படுத்த நான் தயாராக இருக்கிறேன்.

மேலும் நமது நாட்டுக்கு சர்வதேச ஆதரவு தேவை. எனவே, உலகில் எத்தகைய அதிகாரப் பிளவுகள் இருந்தாலும், ஒவ்வொரு நாட்டையும் எமக்கு மிகவும் சாதகமாக கையாள்வதே நமது எதிர்பார்ப்பாகும். நாம் உலகில் தனிமைப்படுத்தப்பட்ட நாடு அல்ல. உலகத்துடன் கூட்டாக முன்னேற வேண்டிய ஒரு நாடாகும். அது தொடர்பில் தேவையான முடிவுகளை எடுக்க நாங்கள் சிறிதும் தயங்குவதில்லை.

மேலும், நம் நாட்டைக் கட்டியெழுப்புவதில் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு பெரும் பங்கு உள்ளது. எனவே, நாட்டை மேலும் வலுவாகக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு அவர்கள் ஆதரவளிப்பார்கள் என நான் கருதுகின்றேன்.

நம் நாட்டின் ஜனநாயகத்தின் ஊடாக நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். அதற்காக மக்கள் எனக்கு வாக்களித்தனர்.

மேலும் எனக்கு வழங்கப்படாத வாக்குகளும் உள்ளன. எனவே, எங்களின் வெற்றியின் உள்ளடக்கம் மற்றும் அளவு குறித்து எங்களுக்கு நல்ல புரிதல் உள்ளது. எனவே, எங்களுக்கு ஆதரவு வழங்காத மற்றும் எங்களை நம்பாத பிரஜைகளின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெறுவதே எனது நிர்வாகத்தின் போது எனக்கு வழங்கப்பட்டுள்ள பணியாகும். அந்தப் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

எதிர்காலத்தில் இவை அனைத்தையும் நீங்கள் நடைமுறையில் கண்டுகொள்ள முடியும். அதற்கு அனைத்து மக்களின் ஆதரவையும் எதிர்பார்க்கின்றேன்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தேர்தலில் இவ்வாறுதான் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்

0

அதிகாரிகள் மற்றும் பிற தேவைகள் முடிந்த பிறகு, மாலை 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (19) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி பிற்பகல் 4.15 மணிளவில் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“எதிர்வரும் 21ம் திகதி வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள் பெறப்பட்டதும், அதிகாரிகள் மற்றும் இதர தேவைகள் முடிந்ததும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் இரவு 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

மாலை 4.15 மணிளவில் தபால் மூல வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

அத்துடன் மாவட்ட அளவில் ஒவ்வொரு வட்டாரத்திலும் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெறும்.

வாக்கு எண்ணிக்கையின் முடிவில் முடிவுகள் கிடைத்தவுடன் ஊடகங்களுக்கு வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையே முதலில் எண்ணப்படும்.

அந்தக் கணக்கெடுப்பின் பின்னர் (மாவட்ட அளவில் எண்ணும் பணி) முதலில் வாக்குப்பெட்டிகளில் உள்ள வாக்குகள் எண்ணப்படும்.

அதன் பிறகு, ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு, தொகுதி மற்றும் மாவட்ட அளவில் அது தயாரிக்கப்படுகிறது.

தேர்தல்கள் செயலகமே ஒட்டுமொத்த முடிவுகளைக் கணக்கிடும்.

எந்த வேட்பாளரும் 50 வீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்றுள்ளாரா என சரிபார்க்கப்படும்.

அப்படியானால், அந்த நேரத்தில் வாக்கு எண்ணும் பணிகள் நிறுத்தப்படும்.

அப்போது ஜனாதிபதியை நாங்கள் அறிவிப்போம்.

எந்த வேட்பாளருக்கும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் கிடைக்காவிடின், விருப்பு வாக்கு எண்ணிக்கைக்கு செல்ல வேண்டும்.

அங்கு, அதிக வாக்குகள் பெற்ற இரண்டு வேட்பாளர்கள் போட்டியில் வைத்து விட்டு  மீதமுள்ள 36 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து நீக்கப்படுவர்” என்றார்.

புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக மாறும்

0

புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வாத்தியாசலையாக மாற்றம் பெரும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று புத்தளத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ அலிசப்ரி ரஹீம் மற்றும் சிந்தக்க மாயாதுன்ன தலைமையில் புத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்திலே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

புத்தளம் மக்களின் நீண்ட நாள் தேவையாக இருந்து வருகின்ற புத்தளம் தல வைத்தியசாலையை தரமுயர்த்துவது தொடர்பாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ அலிசப்ரி ரஹீம் அவர்களினால் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோலுக்கிணங்க குறித்த வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.

மேலும் புத்தளத்தில் மீன் பிடி தொழிலை முன்னேற்றும் நோக்கத்தில் மீன் பிடி துறைமுகம் ஒன்றை அமைக்கும் யோசனையும் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டதுடன், அதற்கான முன்னெடுப்புகளும் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்டமை புத்தளம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நாட்டில் நிரந்தர பொருளாதார அபிவிருத்தியை நிலை நாட்ட தாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டை பொருளாதார அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவதே தனது பிரதான நோக்கம் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மொட்டுக்கட்சிக்கு எதிராக நிற்கும் முக்கிய அமைச்சர்கள்

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக மொட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளரை இந்த வாரம் அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்காதிருக்கவும், மொட்டு சின்னத்தில் தனியாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமக்கு ஆதரவு வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பியிருந்த கடிதம் நேற்றைய தினம் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தினால் அரசியல் குழுவில் முன்வைக்கப்பட்டது.

எவ்வாறாயினும் அந்த கடிதத்தை நிராகரிக்க அரசியல் குழுக் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுவில் 82 பேர் அங்கம் வகிப்பதுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் 72 பேர் பங்கேற்றனர்.

இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த 11 பேர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

மஹிந்தானந்த அலுத்கமகே, பந்துல குணவர்தன, பிரதீப் உந்துகொட, கோகிலா ஹர்ஷனி குணவர்தன, சஹன் பிரதீப், ரமேஸ் பத்திரன, கஞ்சன விஜேசேகர, பிரசன்ன ரணதுங்க, கனக ஹேரத், மொஹான் பிரியதர்ஷன ஆகியோர் கட்சியின் சார்பில் தனியான வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

அத்துடன் பிறிதொரு கட்சியின் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்கும் உறுப்பினர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் யோசனைக்கு 6 பேர் எதிராக வாக்களித்துள்ளனர்.

எவ்வாறாயினும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் எனக் கூறப்பட்ட தம்மிக பெரேரா தொடர்பில் அரசியல் குழுக் கூட்டத்தின்போது எந்தவித கருத்துக்களும் பரிமாற்றிக் கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவளிக்காத 11 பேர் உள்ளிட்ட தரப்பினர் நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தனவின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சைனப் ஆரம்பப் பாடசாலைக்கு ஆளுநர் வருகை!

0

புத்தளம் சைனப் ஆரம்ப பாடசாலையின் முப்பெரும் விழா பாடசாலை அதிபர் யஹியா தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து புத்தளம் ஜெய்னப் பாடசாலைக்கு 22 லட்சம் ரூபா பெறுமதியான நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு, சிறுவர் விளையாட்டு நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தல் மற்றும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் செயற்திட்டத்தின் கீழ் BCMH நிறுவனத்தினால் கற்றல் உபகரணம் வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் கடந்த செவ்வாய்க்கிழமை (16) வெகு விமர்சையாக இடம்பெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதியாக வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், விசேட அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மற்றும் கௌரவ அதிதியாக புத்தளம் வலயக்கல்விப் பணிப்பாளர் அர்ஜுன ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆரம்ப பாடசாலையின் முக்கியத்துவம் மற்றும் அறிவார்ந்த சமூகத்தை கட்டியெழுப்ப ஆரம்ப பாடசாலை ஆற்றிவருகின்ற அர்ப்பணிப்பு குறித்து விரிவாக பேசிய வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், புத்தளம் மாவட்ட பாடசாலைகளின் துரித வளர்ச்சி பற்றியும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

மேலும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் செயற்திட்டத்திற்கு வடமேல் மாகாண ஆளுநர் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் ஜவ்ஷி ஜமால்தின், இணைப்புச் செயலாளர் எச். அமீர் அலி ஆசிரியர், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் உட்பட உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் அயல் பாடசாலையின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு
நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு

ஹிருணிகாவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறை

0

கடத்தல் வழக்கில் முன்னாள் எம்.பி ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்தத் தீர்ப்பை அறிவித்தார்.

தெமட்டகொட பகுதியிலுள்ள கடை ஒன்றில் பணிபுரிந்த அமில பிரியந்த அமரசிங்க எனும் இளைஞர் ஒருவரை 2015 டிசம்பர் 21ஆம் திகதி ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு சொந்தமான டிபெண்டர் வாகனத்தில் கடத்திய வழக்கு விசாரணை முடிவில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

29 குற்றங்கள் தொடர்பில் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் 8 பேரும் குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில், அச்சம்பத்திற்கு உதவி, ஒத்தாசை புரிந்ததாக ஹிருணிகா மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்திருந்தார்.

அத்தோடு, சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவின் ஆதரவாளர்கள் 8 பேர் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைதான ஐந்தாம் சந்தேகநபரின் மகள் அளித்துள்ள வாக்குமூலத்தில், தமது தாயாருடன் தொடர்பு பேணிய நபர் ஒருவரை தாம் காண்பித்ததாகவும், அவரை தமது தந்தையும் அவருடன் சென்றவர்களும் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு ஹிருணிகாவிடம் அழைத்துச் சென்றதாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

ஓவியப்போட்டியில் எருக்கலம்பிட்டி மாணவன் முதலாமிடம்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட வட மாகாண மானவர்களுக்கிடையிலான சித்திரப்போட்டியில் மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்றார்.

வீதி விபத்துக்கள் இல்லாத நாளைக்கான பாடசாலையிலிருந்து அணிவக்குப்போம் எனும் தொனிப்பொருளில் கடந்த வியாழக்கிழமை (13.06.2024) அன்று நடாத்தப்பட்ட வட மாகாண மாணவர்களுக்கிடையிலான குறித்த சித்திரப்போட்டியில் சுமார் 2600 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

சித்திரப்போட்டியில் பங்குபற்றிய 2600 மாணவர்களில் 250 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு நேற்றைய தினம் (15.06.2024) அவர்களுக்கான போட்டி இடம்பெற்றது.

நடைபெற்று முடிந்த இறுதிச் சுற்றுப்போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்று பெருமதிமிக்க பரிசில்களை பெற்றுக்கொண்டார்.

முதலாம் இடம் பெற்ற முஹம்மது ஹுசைன் என்ற மாணவனுக்கு சான்றிதல், துவிச்சக்கரவண்டி மற்றும் 8500/- ரூபா பெறுமதியான வவுச்சரும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இதேவேளை குறித்த போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய இல்முதீன் முஹம்மது ஹஸ்பான் 7 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய மற்றொரு மாணவரான முஹம்மது சம்ஹான் 8 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

பாரிய சாவல்களுக்கு மத்தியில் தனி ஒரு மனிதனாக இம் மாணாவர்களை ஊக்கப்படுத்தி, தயார்ப்படுத்தி போட்டியில் பங்குபெறச் செய்து வெற்றிபெறச் செய்த எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியின் சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் அவர்களின் இம் முயற்சிக்கு, பாடசாலை சமூகம் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் நன்றி தெரிவித்தனர்.

தமக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வந்து தேசிய அளவில் இடம்பெறும் போட்டிகளில் மாணவர்களை பங்குபெறச் செய்வதே தனது இலக்கு என சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் எமது ஊடகத்திற்கு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை இராஜினாமா

0

நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்துள்ளனர்.

சாந்த நிரியல்ல உட்பட 15 பேர் கொண்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரின் அறிவித்தலுக்கு அமைய இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி திங்கட்கிழமை புதிய பணிப்பாளர் சபை நியமிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ “அத தெரண” விற்கு தெரிவித்தார்.

புத்தளம் எருக்கலம்பிட்டியில் கடும் வெள்ளம்

0

புத்தளம் பகுதியில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக புத்தளம் பகுதி முழுதும் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.

புத்தளம், தில்லையடி, பாலாவி, புத்தளம் எருக்கலம்பிட்டி, ஹிதாயத் நகர்,  மதுரங்குளி மற்றும் ஏனைய பல கிராமங்களும் வெள்ளித்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமமும் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 1500 குடும்பங்கள் இங்கு வாழ்ந்துவருவதுடன், அனைத்து வீடுகளும் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நூற்றிற்கும் அதிகமான வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் ஐநூற்றுக்கும் அதிகமான வீடுகள் பகுதி அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8ஆம் திகதி ஏற்பட்ட மழை வெள்ளித்தினால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் மற்றும் பாடசாலைகளில் தற்காலிகமாக  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு தினங்களாக இவர்களுக்கான சமைத்த உணவுகள் மூன்று வேலைகளிலும் ஊர் தனவந்தர்களின் உதவியுடனும், பள்ளிவாசல் நிர்வாக சபையின் வழிகாட்டலுடனும் வழங்கப்பட்டு வருவதுடன், ஊர் மக்களுக்கும் உணவு விநியோகங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

இவர்களுக்கான நிவாரண உதவிகள் இதுவரை அரசாங்கத்தினால் வழங்கப்படாத போதிலும், ஊர் மக்களின் பங்களிப்புடன் மாத்திரமே பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு விநியோகங்கள் இதுவரை  வழங்கப்பட்டு வருகின்றது.

புத்தளம் பொத்துவில்லு பகுதியில் உள்ள குளம் மழை நீரினால்  பெருக்கெடுத்துள்ளதால் குறித்த குளத்து நீர் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமத்திற்குள் தொடர்ந்தும் மூன்றாவது நாளாக ஊடறுத்து செல்வதால் வீடுகள் தொடர்ந்தும் நீருள் மூழ்கியுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்தின் நிவாரண உதவிக்காக பல மக்கள் தொடர்ந்தும் எதிர்பார்த்து காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பதவி விலகும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைவர் ஷம்மி சில்வா!

0

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா தனது பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளார். 

இன்று (28) பிற்பகல் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தின் போது அவர் இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

ஷம்மி சில்வா 2019 ஆம் ஆண்டு முதன்முறையாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டதுடன், அன்று முதல் இதுவரையான 7 ஆண்டு காலம் அப் பதவியில் நீடித்தார். 

கடந்த காலங்களில் அவருக்கும் கிரிக்கெட் நிர்வாகத்திற்கும் எதிராகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய கிரிக்கெட் நிர்வாகத்தைப் பதவியிலிருந்து விலகுமாறு அரசாங்கத் தரப்பு அறிவுறுத்தியுள்ளதாக அண்மையில் ஊடகச் செய்திகள் வெளியாகியிருந்தன. 

தற்போது பெரும் பேசுபொருளாக உள்ள கிரிக்கெட் வீரர்களின் முகாமையாளர் ஒருவர் மற்றும் சிரேஷ்ட கிரிக்கெட் வீரர்கள் சிலர் உள்ளிட்ட குழுவினர், அரசாங்கத்தின் உயர்மட்டத் தரப்பினரைச் சந்தித்து தற்போதைய கிரிக்கெட் நிர்வாகம் குறித்துப் முறைப்பாடு அளித்திருந்த பின்னணியில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு கௌரவிப்பு!

0

நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் மன்னார் மாவட்ட மட்டத்தில் முதலிடங்களைப் பெற்று சாதனை படைத்த மாணவர்களைக் கௌரவிக்கும் விசேட நிகழ்வு இன்று மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் அருட்சகோதரர் சந்தியோகு அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், மாவட்ட ரீதியில் பல்வேறு துறைகளில் முதலிடம் பிடித்த மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

குறிப்பாக, உயர்தரப் பாடநெறிகளான உயிரியல் (Bio), கணிதம் (Maths), வர்த்தகம் (Commerce), கலை (Arts), பொறியியல் தொழில்நுட்பம் (E-Tech), உயிரியல் தொழில்நுட்பம் (B-Tech) உள்ளிட்ட ஆறு வெவ்வேறு துறைகளில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவர்கள் இதன்போது பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

சாதனை படைத்த இந்த மாணவர்களின் கல்வி முயற்சியினை ஊக்குவிக்கும் வகையில், மன்னார் மக்கள் வங்கிக் கிளையின் முகாமையாளர் ஜனாப் ஹக் முஹம்மது அரூஸ் அவர்களினால் பணப்பரிசில்களும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கல்வி உயரதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சாதனையாளர்களை வாழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புற்றுநோய் நோயாளிகளுக்கு மரண அடி: முடங்கியது PET ஸ்கேன்!

0

இலங்கையில் உள்ள அரச வைத்தியசாலைகளில் புற்றுநோய் கண்டறியும் கருவிகள் மற்றும் சிகிச்சை இயந்திரங்கள் செயலிழந்துள்ளதால், ஆயிரக்கணக்கான நோயாளிகள் மரணப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிகிச்சைகளுக்காக நீண்ட காத்திருப்புப் பட்டியலில் உள்ள நோயாளிகள், உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் உயிராபத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

புற்றுநோய் சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கும் ‘லீனியர் ஆக்சிலரேட்டர்’ (Linear Accelerator) கதிரியக்க இயந்திரங்கள் முறையாக இயங்காததே இந்த நெருக்கடிக்கு முதன்மைக் காரணமாகும். தற்போது பயன்பாட்டிலுள்ள ஐந்து இயந்திரங்களில் இரண்டு முழுமையாக செயலிழந்துள்ளன. இதனால், கதிரியக்க சிகிச்சை (Radiation Therapy) பெறுவதற்காக நோயாளிகள் பல மாதங்கள், சில சமயம் ஒரு வருடத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அவிசாவளையைச் சேர்ந்த நோயாளி ஒருவர் தனது கவலையை இவ்வாறு பகிர்ந்து கொண்டார்:

“நான் கதிரியக்க சிகிச்சைக்காக ஒரு வருடத்திற்கும் மேலாக காத்திருக்கிறேன். நாட்கள் செல்லச் செல்ல எனது நிலைமை மோசமடைந்து வருகின்றது. வைத்தியசாலைக்கு எத்தனை முறை சென்றாலும், எப்போது சிகிச்சை தொடங்கும் என்பதற்கு முறையான பதில் இல்லை. இது எனது குடும்பத்தை மன ரீதியாகவும் நிதி ரீதியாகவும் கடுமையாக பாதித்துள்ளது.”

முடங்கியுள்ள PET ஸ்கேன் சேவைகள்

கடந்த மார்ச் 27 ஆம் திகதி முதல் அரச வைத்தியசாலைகளில் PET ஸ்கேன் பரிசோதனைகள் முற்றாக முடங்கியுள்ளன. மகரகம அபேக்ஷா வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலை ஆகியவற்றில் இந்தப் பரிசோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

PET ஸ்கேன் பரிசோதனைக்கு அவசியமான ‘புளோரோடியோக்ஸிகுளுக்கோஸ்’ (FDG) என்ற கதிரியக்க இரசாயனப் பொருள் இல்லாததே இதற்கு முக்கிய காரணமாகும்.

இந்தியாவிலிருந்து இதனை இறக்குமதி செய்யும் நிறுவனம், தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகார சபையில் (NMRA) தனது பதிவை இன்னும் புதுப்பிக்கவில்லை. மருந்து வகையின் கீழ் இதனை மீண்டும் பதிவு செய்யுமாறு வழங்கப்பட்ட அறிவுறுத்தலின் பேரில் மார்ச் 27 அன்று விண்ணப்பித்தும், இதுவரை அனுமதி கிடைக்கவில்லை.

அரசு வைத்தியசாலைகளில் PET ஸ்கேன் செய்ய 4 மாதங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டியுள்ள நிலையில், தனியார் வைத்தியசாலைகளில் இதற்கு 300,000 ரூபாவிற்கும் அதிகமாக செலவாகிறது. தற்போது நிலவும் இரசாயனத் தட்டுப்பாடு காரணமாக தனியார் துறையிலும் இந்தச் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த அவல நிலைக்கு மத்தியில், நீண்டகாலமாக இழுபறியில் இருந்த ஐந்து ‘லீனியர் ஆக்சிலரேட்டர்’ இயந்திரங்களைக் கொள்வனவு செய்யும் பணிகளை NMRA துரிதப்படுத்தியுள்ளது. இதில் இரண்டு இயந்திரங்கள் ஏற்கனவே கிடைக்கப்பெற்றுள்ளன. எஞ்சிய இயந்திரங்கள் அநுராதபுரம், பதுளை, குருநாகல், அம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளில் நிறுவப்படவுள்ளதாக சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், புற்றுநோயைக் கண்டறிவதிலும் சிகிச்சையின் முன்னேற்றத்தை அளவிடுவதிலும் PET ஸ்கேன் முக்கியமானது என்பதால், நிலவும் மருந்துத் தட்டுப்பாட்டை நீக்கி உயிர்களைக் காக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரத் துறை சார்ந்தோர் வலியுறுத்துகின்றனர்.

‘Rebuilding SriLanka’ சட்டபூர்வமானதா? – ஹர்ஷ கேள்வி!

0

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “இலங்கையை கட்டியெழுப்புவோம்” ‘Rebuilding Sri Lanka’ நிதியம் சட்டபூர்வமாக ஸ்தாபிக்கப்படவில்லை எனவும், அதன் இருப்பு குறித்து பாரிய சந்தேகம் உள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

தமது ‘X’ பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள அவர், பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ இந்த நிதி “பாதுகாப்பாக” இருப்பதாகக் தெரிவித்துள்ள கருத்தானது முற்றிலும் தவறானது எனவும், அவ்வாறானதொரு நிதி இதுவரை சட்டப்பூர்வமாக நிறுவப்படவே இல்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார்.

மறுசீரமைப்புப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி பாதுகாப்பாக உள்ளதாகக் குறிப்பிட்டிருந்த இந்தக் கூற்று பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிபந்தனைகளின்படி அத்தகைய நிதி நடைமுறையில் இருக்க வாய்ப்பில்லை என ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையின் கீழ், நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட சட்டரீதியான நிதியங்களைத் தவிர ஏனைய பல நிதியங்கள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளன. அவ்வாறிருக்கையில், இந்த ‘நிதியம்’ நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் முறையாக உருவாக்கப்படவில்லை என ஹர்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, ‘டிட்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்டவர்களை மீளக் கட்டியெழுப்புவதற்காக இந்த நிதியம் உருவாக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

2026 ஏப்ரல் 24 ஆம் திகதிய நிலவரப்படி, சுமார் 9,583 மில்லியன் ரூபாய் இதில் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும், இது பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இருப்பினும், இந்த நிதி குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அரசாங்க அதிகாரிகள் முன்னுக்குப் பின் முரணான பதில்களையே வழங்கி வருவதாக ஹர்ஷ டி சில்வா குற்றம் சாட்டியுள்ளார்.

இதுவரை பாராளுமன்றத்தின் ஊடாக அத்தகைய நிதி நிறுவப்படாத நிலையில், “பாதுகாப்பாக இருக்கிறது” என்று கூறப்படும் நிதி எது? என்பது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.

இந்த நிதியம் தொடர்பாக அதிகாரிகள் “பணியாற்றிக் கொண்டிருப்பதாக” (working on it) கூறுவதிலிருந்தே, இது இன்னும் சட்டபூர்வமாக ஸ்தாபிக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது என அவர் தெரிவித்தார்.

இல்லாத ஒரு நிதியைப் பற்றிப் பேசுவதை விடுத்து, நாட்டின் நிதி நிலைமை குறித்த உண்மைகளை வெளிப்படைத்தன்மையுடன் அறிவிக்குமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

திறைசேரி கொள்ளை வெறும் பணமல்ல, நாட்டின் பாதுகாப்பு!

0

இலங்கை திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தவறான தரப்பினருக்குப் பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பது ஒரு ‘சைபர் கொள்ளை’ எனத் தெரியவந்துள்ள நிலையில், இது நாட்டின் முழுப் பொருளாதாரத்திற்கும் விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கருத்திற்கொண்டு, இது குறித்து விசாரணை நடத்த உடனடியாக ஜனாதிபதி விசேட விசாரணைக்குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என்று அவர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான பைசர் முஸ்தபா, இது வெறும் பணத் திருட்டு மட்டுமல்ல, நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலாகும் என்று சுட்டிக்காட்டினார்.

உலகின் அதியுயர் பாதுகாப்பு கொண்ட அமெரிக்காவின் ‘வெள்ளை மாளிகை’ கட்டமைப்புக்களே ஹேக்கர்களால் ஊடுருவப்படும் நிலையில், இலங்கையின் சைபர் பாதுகாப்பு முறைமைகளில் உள்ள பலவீனங்கள் குறித்து புத்திஜீவித்துவக் கண்ணோட்டத்துடன் ஆராய வேண்டிய தருணம் இதுவென அவர் குறிப்பிட்டார்.

இந்த பாரிய நிதி மோசடியுடன் தொடர்புடையவர்கள் எவராக இருந்தாலும், அவர்களின் அரசியல் அந்தஸ்து அல்லது கட்சி பேதமின்றி சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார். இதற்காக சர்வதேச ரீதியிலான தொடர்புகள் மற்றும் உயர் தொழில்நுட்ப அறிவு கொண்ட நிபுணர்களின் உதவியைப் பெறுவது அவசியமாகும்.

அத்துடன், நாட்டின் திறைசேரி போன்ற மிக முக்கியமான நிதி நிறுவனத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள நிலையில், இழந்த நிதியை மீண்டும் மீட்பதற்கு எதிர்க்கட்சியின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் யோசனை முன்வைத்துள்ளார்.

இலங்கையின் வங்கி முறைமை மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் போன்ற முக்கிய நிறுவனங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப பாதுகாப்பு முறைகள் காலாவதியானவையா என்பதை உடனடியாகப் பரிசோதிக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

தொழில்நுட்ப ரீதியிலான நிதிப் பரிமாற்றங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கலாநிதி ஹான்ஸ் விஜேசுரிய போன்ற துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய ‘ஜனாதிபதி விசேட விசாரணைக்குழு’ ஒன்றை உடனடியாக நியமிக்குமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சைபர் பாதுகாப்பு தொடர்பான தொழில்நுட்பக் குறைபாடுகள் குறித்து முறையான ஆய்வுகளை மேற்கொண்டு, பலமான ‘ஃபயர்வால்’ அல்லது நவீன பாதுகாப்பு உத்திகளைப் புகுத்தாவிட்டால், இது தேசிய பொருளாதாரத்திற்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் எச்சரித்தார்.

இந்த வெளிப்பாடானது ஒரு சாதாரண செய்தி மட்டுமல்ல, நாட்டின் நிதி இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான ஒரு எச்சரிக்கை மணியாகும் என்றும் பைசர் முஸ்தபா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைக்கு அருகிலுள்ள பாலம் உடைந்து 6 மாதங்கள்: மக்கள் அவதி!

0

செய்தித் தொகுப்பு: ஜூட் சமந்த

மகாவெவ, சிவிராஜ விசேட தேவையுடையோர் பாடசாலைக்கு அருகில் உள்ள பாலம் உடைந்து வீழ்ந்து 6 மாதங்கள் கடந்துள்ள போதிலும், அதனை புனரமைக்க அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு, மேல் மகாவெவ மற்றும் வீஹேன ஆகிய கிராமங்களை இணைக்கும் வகையில் “தம்வெல் அகார” கால்வாயின் குறுக்கே மூன்று சிறிய பாலங்கள் அமைக்கப்பட்டன.

அந்த வகையில் சிவிராஜ விசேட தேவையுடையோர் பாடசாலைக்கு அருகில் மூன்று பாலங்களில் ஒன்றான குறித்த பாலம் புகழ்பெற்ற ஓவியர் சோலியஸ் மென்டிஸ் அவர்களால் அமைக்கப்பட்டிருந்தது. இந்தப் பாடசாலைக்கு தினசரி ஏராளமானோர் வருகை தருவதோடு, அரச ஊழியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் இப்பாலத்தைப் பயன்படுத்தி வந்தனர்.

சுமார் 6 மாதங்களுக்கு முன்பு, மரக்கட்டைகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று பயணித்த போது இந்தப் பாலம் திடீரென உடைந்து வீழ்ந்தது. விபத்துக்குள்ளான லொறியின் உரிமையாளர், பாலத்திற்கு ஏற்பட்ட சேதத்திற்காக சுமார் 6 இலட்சம் ரூபாயை வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் செலுத்தி தனது வாகனத்தை விடுவித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், நட்டஈடு அறவிடப்பட்ட போதிலும் பாலத்தைப் புனரமைக்க இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இது குறித்து சிவிராஜ விசேட தேவையுடையோர் பாடசாலையின் தலைவர் பிரின்ஸ்லி விக்ரமநாயக்க கருத்து தெரிவிக்கையில்:

“எமது பாடசாலையில் 28 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். அவர்கள் அனைவரும் இந்தப் பாலத்தின் ஊடாகவே வரவேண்டும். பாலம் உடைந்ததால் தற்போது கிராம மக்கள் தற்காலிகமாக ஒரு மரப்பாலத்தை அமைத்துள்ளனர். இதன் மூலம் வாகனங்கள் செல்ல முடியாது. இதனால் மக்கள் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்குத் தெரிவித்தும் இதுவரை பலனில்லை,” என்றார்.

மேல் மகாவெவ சமூக பொலிஸ் குழுவின் தலைவர் மெக்மில்லன் பெர்னாண்டோ கூறுகையில்:

“உடைந்த நிலையில் உள்ள இந்தப் பாலம் தற்போது மிகவும் அபாயகரமாக உள்ளது. இரவு நேரங்களில் இப்பகுதி இருட்டாக இருப்பதால், பாதையை அறியாதவர்கள் விபத்துக்குள்ளாகும் வாய்ப்பு அதிகம். ஏற்கனவே இரண்டு மோட்டார் சைக்கிள்கள் பாலத்தில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின. இன்னும் ஒரு உயிர் பலி வாங்கும் வரை அதிகாரிகள் காத்திருக்கின்றனரா?” எனக் கேள்வி எழுப்பினார்.

வீஹேன கிராமத்தில் அதிகளவிலான குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், எஞ்சியுள்ள ஏனைய இரண்டு பாலங்களும் பலவீனமடைந்து காணப்படுகின்றன. அவை உடைந்தால் இரண்டு கிராமங்களும் முழுமையாகத் துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது.

எனவே, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, இந்த பாலத்தை உடனடியாகப் புனரமைத்துத் தருமாறு பிரதேச மக்கள் மற்றும் சிவில் அமைப்புகள் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரிஷாட் பதியுதீன் மேன்முறையீட்டில் தொடரும் திருப்பங்கள்!

0

வில்பத்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு அருகில் உள்ள காடுகளை அழித்து மீள்குடியேற்றம் செய்தமைக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை விசாரிப்பதிலிருந்து உயர்நீதிமன்ற நீதியரசர் ஒருவர் இன்று (27) விலகியுள்ளார். 

ரிஷாட் பதியுதீனால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மேன்முறையீடு, இன்று ஏ.எச்.எம்.டி. நவாஸ், சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகிய மூவர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இதன்போது, தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த மனு விசாரணையிலிருந்து தான் விலகுவதாக நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் தெரிவித்தார். 

இதற்கமைய, இந்த மேன்முறையீட்டு மனுவை வேறு ஒரு நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் செப்டம்பர் மாதம் 09ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டது. 

வில்பத்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு அருகிலுள்ள காடுகளை அழித்து அங்கு மக்களைக் குடியேற்றியமைக்கு எதிராக, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக சுற்றுச்சூழல் நீதி மையம் 2015ஆம் ஆண்டு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதிப்பேராணை மனு (Writ) மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது. 

அந்த மனுவை விசாரித்து தீர்ப்பளித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், குறித்த பகுதிகளில் காடுகளை அழித்தமைக்கு முன்னாள் அமைச்சரே பொறுப்புக்கூற வேண்டும் என்றும், அதற்கமைய மீண்டும் காடுகளை வளர்ப்பதற்கான செலவை அவர் வனப் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. 

அதன்படி, மீண்டும் காடுகளை வளர்ப்பதற்காக முன்னாள் அமைச்சர் சுமார் 106 கோடி ரூபாய் பணத்தைச் செலுத்த வேண்டும் என வனப் பாதுகாப்புத் திணைக்களம் கணக்கிட்டிருந்தது. 

இந்த மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பு சட்டத்திற்கு முரணானது எனவும், அதனை ரத்து செய்யுமாறு கோரியுமே ரிஷாட் பதியுதீன் உயர்நீதிமன்றத்தில் இந்த மேன்முறையீட்டைத் தாக்கல் செய்துள்ளார். 

இந்த மனு விசாரணையிலிருந்து நீதியரசர்களான மஹிந்த சமயவர்தன, யசந்த கோதாகொட, ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் ஏற்கனவே விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

PSL தொடரில் வரலாறு படைத்த குசல் மெண்டிஸ்!

0

பாகிஸ்தான் சுப்பர் லீக் (PSL) வரலாற்றில், ஒரு பருவகாலத்தில் (Season) 500 ஓட்டங்களைக் கடந்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் பெற்றுள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் குசல் மெண்டிஸ், இந்த மைல்கல்லை எட்டியதன் மூலம் சர்வதேச அளவில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இதற்கு முன்னர் பல முன்னணி வெளிநாட்டு வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்றிருந்த போதிலும், எவராலும் எட்ட முடியாத 500 ஓட்டங்கள் என்ற இலக்கை மெண்டிஸ் முதன்முறையாகக் கடந்துள்ளார்.

வெளிநாட்டு மண்ணில் நடைபெறும் ஒரு லீக் தொடரில் இலங்கை வீரர் ஒருவர் இவ்வாறானதொரு சாதனையைப் படைத்திருப்பது இலங்கை கிரிக்கெட் இரசிகர்களுக்குப் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.

முன்னதாக எந்தவொரு வெளிநாட்டு வீரரும் ஒரே பதிப்பில் 500 ஓட்டங்களை கடந்ததில்லை.

இதற்கு முன்பு, 2023இல் ரில்லே ரோசோவ் எடுத்த 453 ஓட்டங்களே ஒரு வெளிநாட்டு வீரரின் அதிகபட்ச ஓட்டங்களாக இருந்தது.

குறித்த தொடரில் 9 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள குசல் மெண்டிஸ் 500 ஓட்டங்களை குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

டீசல் இறக்குமதியில் பாரிய ஊழல்: கூட்டு எதிர்க்கட்சி முறைப்பாடு!

0

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் மேற்கொள்ளப்பட்ட டீசல் இறக்குமதியின் போது பாரிய ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி, அந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியின் பிரதிநிதிகளால் இந்த முறைப்பாடு இன்று திங்கட்கிழமை (27) சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த டீசல் இறக்குமதி நடவடிக்கையினால் அரசாங்கத்திற்கு பெருமளவிலான நிதி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அந்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட ஆவணங்களைப் பரிசீலிக்குமாறு எதிர்க்கட்சி பிரதிநிதிகள் ஆணைக்குழுவிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். 

இந்த கொடுக்கல் வாங்கலில் பாரிய மோசடி இடம்பெற்றுள்ளதா என்பது குறித்து கண்டறியப்பட வேண்டும் எனவும், இந்த நஷ்டத்திற்குப் பொறுப்பான நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அந்த முறைப்பாட்டில் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.   

கடல் அரிப்பினால் அழியும் அபாயத்தில் உடப்பு கிராமம்!

0

ஜூட் சமந்த

ஆரச்சிக்கட்டுவ, உடப்பு கடற்கரைப் பிரதேசம் மீண்டும் ஒருமுறை பாரிய கடல் அரிப்புக்கு உள்ளாகத் தொடங்கியுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தெற்கே பெருங்கடலாலும், மேற்கே முந்தலம் களப்பாலும் சூழப்பட்டுள்ள உடப்பு கிராமத்தில் சுமார் 5000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களில் பெரும்பாலானோரின் பிரதான வாழ்வாதாரமாக மீன்பிடித் தொழில் காணப்படுகிறது. கடலிலும் களப்பிலும் மீன்பிடித்தல் மற்றும் பிடிபடும் மீன்களை விற்பனை செய்தல் என இக்கிராமத்தின் பொருளாதாரம் முழுமையாக கடலைச் சார்ந்தே அமைந்துள்ளது. மேலும், உடப்புக் கடற்கரையில் அமைந்துள்ள மீன்பிடி வாடிகளில் பெருமளவிலான கருவாடு உற்பத்தி செய்யப்பட்டு தினசரி சந்தைக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

கடலே தங்களின் உயிர்நாடி என்பதால், உடப்பு மக்கள் கடற்கரையைப் பாதுகாப்பதில் மிகுந்த அக்கறை காட்டி வருகின்றனர். கடற்கரை அரிப்புக்குள்ளாவதால் மீன்பிடிப் படகுகளை நிறுத்தி வைப்பதற்கும், மீன்பிடி வலைகளைச் சுத்தம் செய்வதற்கும், கருவாடு காயவைப்பதற்கான வாடிகளை அமைப்பதற்கும் இடமில்லாத சூழல் உருவாகியுள்ளமை அம்மக்களின் வாழ்வாதாரத்தை நேரடியாகப் பாதித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே பருவக்காற்று காலங்களில் உடப்பு கடற்கரை கடும் அரிப்புக்கு உள்ளாகி வருகின்றது. இது குறித்து மக்கள் மற்றும் ஊடகங்கள் விடுத்த கோரிக்கைகளை அடுத்து, கடற்கரை பாதுகாப்புத் திணைக்களம் கடல் அரிப்பைக் கட்டுப்படுத்த கற்பாறைகளை இட்டுத் தற்காலிகப் பாதுகாப்பை வழங்கியது.

இருப்பினும், தற்போது இடப்பட்டுள்ள அந்தப் பாறைகளுக்கு இடையினூடாக கடல் நீர் உட்புகுந்து கடற்கரை அரிக்கப்படுவது பாரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

“பருவக்காற்று காலம் ஆரம்பிப்பதற்கு முன்னரே இவ்வளவு மோசமான கடல் அரிப்பு ஏற்படுகின்றது என்றால், வரும் நாட்களில் நிலைமை இன்னும் மோசமாகும்,” என கிராம மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

கடல் அரிப்பின் கோரத்தாண்டவத்தால் ஏற்கனவே கடற்கரையோரம் இருந்த பல வீடுகளும், கடற்கரைக்கு இணையாக இருந்த வீதியும் கடலுக்குள் மூழ்கியுள்ளன. அத்துடன், கடற்கரையோரம் அமைக்கப்பட்டிருந்த பல மின் கம்பங்கள் கடல் அரிப்பினால் சரிந்து விழுந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த கடல் அரிப்பைத் தடுக்க அதிகாரிகள் உடனடியாக நிரந்தரத் தீர்வொன்றை வழங்காவிட்டால், எதிர்காலத்தில் இலங்கையின் வரைபடத்திலிருந்து ‘உடப்பு’ என்ற கிராமம் மறைந்து போவது ஆச்சரியப்படுவதற்கில்லை என இப்பகுதி மக்கள் எச்சரிக்கின்றனர்.