Wednesday, November 26, 2025
Sponsored advertisementspot_img
Home Blog

நாகவில்லுவில் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ்வின் நினைவுதினம்!

பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று நாகவில்லுவில் இடம்பெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வு!

இலங்கை திருநாட்டில் பெளதீக ரீதியான பல வேலைத்திட்டங்களையும், இடம்பெயர்வு மற்றும் எல்லை நிர்ணயம் தொடர்பான பறந்துபட்ட அறிவினையும் கொண்டிருந்த எருக்கலம்பிட்டியை சேர்ந்த மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது வருட நினைவு தின நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

அந்த வகையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் நினைவுப் பேருரையும், புத்தக வெளியீடு நிகழ்வும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் ஏற்பாட்டில் நேற்று 25.08.2025 புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய அதிபர் ஜனாப் S.M. ஹுஸைமத் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், புத்தி ஜீவிகள் மற்றும் குடும்பத்தார்கள் கலந்தகொண்டமை விஷேட அம்சமாகும்.

சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் பொருளாளர் ஜனாப் ஏ.ஜி. அனீஸ் (Bsc.Agri) அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.

மேலும் இஸ்லாமிய கற்கை அறபு மொழிப் பீட, தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களினால் நூல் அறிமுக உரையும், நினைவுப் பேருரையும் மிகவும் உணர்வுபூர்வமாக நிகழ்த்தப்பட்டது.

கிழக்கு மற்றும் தென் கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பங்களிப்பு அளப்பெரியது என நினைவு கூறிய பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன், வடக்கில் ஏற்பட்ட யுத்தம் மற்றும் முஸ்லிம்களின் இடம்பெயர்வு குறித்து அதீத அக்கறையுடன் செயற்பட்ட மிக முக்கியமானவர் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்கள் எனவும் எடுத்துரைத்தார்.

வடக்கு முஸ்லிம்களின் இடம்பெயர்வு மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பில் அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களுடன் பலதரப்பட்ட கலந்துரையாடல்களை நடத்தி, சர்வதேசம் வரை இவ்விடயங்களை கொண்டுசென்ற மகான் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் என பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் தனது உரையில் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் புதல்வி சட்டத்தரணி எப்.சப்னா ஹஸ்புல்லாஹ் அவர்களினால் ஏற்புரை நிகழ்த்தப்பட்டதுடன், நூல் வெளியீடு நிகழ்வும் இடம்பெற்றது.

நூலின் முதற்பிரதியை ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தரும், புத்தளம் எருக்கலம்பிட்டி பள்ளிவாசல் நிர்வாக சபையின் முன்னாள் உறுப்பினருமான ஜனாப் ரஹ்மத்துல்லாஹ் (GS) அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

மேலும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் செயலாளர் ஜனாப் எஸ்.எச்.எம். றிஸ்னி அவர்களினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டதுடன், தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன், மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பாரியாருக்கும் நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில், பேராசிரியர்கள், கல்விமான்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், பாடசாலைச் சமூகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் குடும்பத்தார்கள் என பலரும் கலந்து சிறப்பித்ததுடன், ஈ நியூஸ் பெஸ்ட் ஊடக நிறுவனம் ஊடக அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரணிலுக்காக ஒன்று திரண்ட அரசியல் தலைவர்கள்!

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விசாரணை கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது, நாட்டின் அடிப்படை ஜனநாயக நிறுவனங்களின் வலிமை குறித்து கடுமையான கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் விளைவுகள் ஒரு தனிநபரின் அல்லது எந்தவொரு அரசியல் கட்சிகளின் தலைவிதியையும் விட, சமூகத்தின் உரிமைகளுக்கான பிரச்சினைகளை தோற்றிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் தலைவர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைகளை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது மற்றும் விளக்கமறியலை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து நடத்திய விசேட ஊடக சந்திப்பில் பங்கேற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரல முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் அறிக்கையை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

போர்த்துக்கல் அணி சாம்பியன் ஆனது!

0

‘நேஷன்ஸ் லீக்’ கால்பந்தில் போர்ச்சுகல் அணி சாம்பியன் ஆனது. பைனலில் ‘பெனால்டி ஷூட் அவுட்டில்’ 5-3 என ஸ்பெயினை வீழ்த்தியது.

ஐரோப்பிய கால்பந்து அணிகளுக்காக ‘நேஷன்ஸ் லீக்’ தொடர் நடத்தப்படுகிறது. மொத்தம் 54 அணிகள் பங்கேற்றன. நேற்று ஜெர்மனியின் முனிக் நகரில் நடந்த பைனலில், போர்ச்சுகல், நடப்பு யூரோ சாம்பியன் ஸ்பெயின் பலப்பரீட்சை நடத்தின. போட்டியின் 21வது நிமிடம் ஜுபிமெண்டி (ஸ்பெயின்), 26வது நிமிடம் மெண்டிஸ் (போர்ச்சுகல்) தலா ஒரு கோல் அடித்தனர். 45வது நிமிடம் மைக்கேல் ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் ஸ்பெயின் அணி 2-1 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் 61 வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். போர்ச்சுகல் அணிக்காக இவர் அடித்த 138வது கோல் இது. 90 நிமிட முடிவில் போட்டி 2-2 என சமன் ஆனது. அடுத்து நடந்த கூடுதல் நேரத்திலும் (30 நிமிடம்) இரு அணியும் கோல் அடிக்கவில்லை.

இதையடுத்து வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி ‘பெனால்டி ஷூட் அவுட்டுக்கு’ சென்றது. இரு அணிக்கும் தலா 5 வாய்ப்புகள் தரப்பட்டன. காயம் காரணமாக 88 வது நிமிடம் வெளியேறிய ரொனால்டோ, இதில் பங்கேற்கவில்லை.

முதல் 3 வாய்ப்பில் போர்ச்சுகலின் ராமோஸ், விடின்ஹா, பெர்ணான்டஸ் கோல் அடித்தனர். மறுபக்கம் ஸ்பெயின் தரப்பில் மெரினோ, பயேனா, இஸ்கோ கோல் அடிக்க 3-3 என ஆனது.

4வது வாய்ப்பில் மெண்டெஸ் (போர்ச்சுகல்) கோல் அடிக்க, ஸ்பெயினின் மோராட்டோ அடித்த பந்தை கோல் கீப்பர் டீகோ கோஸ்டா தடுத்து அசத்தினார்.

5வது வாய்ப்பில் நெவேஸ் கோல் அடித்தார். இதையடுத்து 5-3 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் ‘திரில்’ வெற்றி பெற்றது. 2019க்குப் பின் இத்தொடரில் மீண்டும் சாம்பியன் ஆனது.

தில்லையடியில் சிக்கிய கடத்தல் பீடி இலைகள்!

0

புத்தளத்தில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளுடன் வேன் ஒன்றும் பறிமுதல்!

இலங்கை கடற்படை, பொலிஸாருடன் இணைந்து, புத்தளம், தில்லையடி பகுதியில் 2025 ஜூன் 05 இரவு வேளையில் நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகள் கொண்ட ஒரு வேன் கைப்பற்றப்பட்டது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிறுவனம், புத்தளம் பொலிஸாருடன் இணைந்து தில்லையடி பகுதியில் நடத்திய இந்த சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்று சோதனை செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகளானது வாகனத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் வேன் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களால் ஆபத்தா?

விண்வெளியில் பூமியை சுற்றி வந்துக்கொண்டிருக்கும் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கொள்களை சீனா நினைத்தால் வெறும் 12 மணி நேரத்தில் தாக்கி அழித்துவிட முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் என்கிற செய்தி ஊடகத்தில் இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது தற்போது சீனா 99 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. இவை அனைத்தும் நான்ஜிங் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஆஸ்ட்ரோனாட்டிக்ஸ் பல்கலைக்கழகத்தின் விண்வெளிக் கட்டுப்பாட்டுத் துறையின் இயக்குநர் வூ யுன்ஹுவா தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இவை அனைத்தும் எலான் மஸ்கின் 1400 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை வெறும் 12 மணி நேரத்தில் காலி செய்துவிடும். சீன செயற்கைக்கோளில் லேசர், நுண் அலைகளை உருவாக்கும் கருவி, உளவு கருவிகள் பொருத்தப்பட்டிருக்கலாம். ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் வெறுமென நெட்வொர்க் கொடுக்க மட்டுமே பயன்படுத்தப்படுவதில்லை. தவிர, ராணுவ நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது என சீனா குற்றம்சாட்டி வருகிறது.

அதாவது, உக்ரைன்-ரஷ்யா போரில், உக்ரைன் படைகளுக்கு தகவல்கள் கொடுக்கவும், ரஷ்ய எல்லையை துல்லியமாக கண்காணிக்கவும் இந்த செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த 2022ம் ஆண்டு ரஷ்ய போரின்போது அப்போதைய உக்ரைனின் துணைப் பிரதமரான மைக்கைலோ ஃபெடோரோவ், “ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் சேவையை உடனடியாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த மஸ்க், “உடனடியாக சேவை வழங்கப்படும்” என்று கூறியிருந்தார்.

உக்ரைன் போருடன் மட்டுமே ஸ்டார்லிங்க் நிற்காது, நாளை சீனாவுக்கும்-தைவானுக்கும் பஞ்சாயது ஏற்பட்டால் அப்போதும், தைவானுக்கு சப்போர்ட் செய்ய ஸ்டார்லிங்க் வரும். எனவே இந்த கூட்டு நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்க சீனா இந்த புதிய செயற்கைக்கோள்களை உருவாக்கியிருக்கிறது.

கடந்த 2023ம் ஆண்டு இதற்கான பணிகளை சீனா தொடங்கியது. இந்த திட்டத்திற்கு ‘கியான்ஃபான் மெகா-விண்மீன் திட்டம்’ (Qianfan mega-constellation project) என்றும் பெயரிட்டிருந்தது. நோக்கம் உலகம் முழுவதும் இணைய தொடர்பை வழங்குவதாகும். இதற்காக மொத்தம் 15,000 சிறிய ரக செயற்கைக்கோள்களை ஏவ சீனா முடிவெடுத்தது. இதன் முதல் தொகுப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏவப்பட்டது. இதில் 18 செயற்கைக்கோள்கள் இருந்தன.

ஒவ்வொன்றும் சுமார் 300 கி.கி எடையில் இருந்தது. இவை பூமியிலிருந்து 800 கி.மீ உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டது. இதேபோன்று 2024 டிசம்பரில் அடுத்து இரண்டு தொகுதி ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. தற்போது மொத்தம் 99 செயற்கைக்கோள்கள் விண்வெளியில் இருக்கின்றன. 15,000 செயற்கைக்கோள்களை 3 கட்டங்களாக ஏவ இருக்கிறது. முதல் கட்டத்தில் 1,296 செயற்கைக்கோள்கள் ஏவப்படும். இதில் 648 செயற்கைக்கோள்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஏவப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் கன்னி உரை

0

அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்புவோம்

தேசியத்துவத்துடனும் ஐக்கியத்துடனும் ஒன்றுபட்டு நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க இன்று (23) காலை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

பதவிப் பிரமாணத்தின் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய முழுமையான உரை:

மக்களால் ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது நமது நாட்டின் ஜனநாயகத்திலிருக்கும் மிக முக்கியமான அம்சமாகும். தேர்தலில் வாக்களித்தல் மற்றும் ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதோடு ஜனநாயகம் நிறைவு பெறுவதில்லை. இது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சம் என்றாலும், நம் நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்த, கட்டமைப்புகளின் வலிமையும், சட்டங்களை வலுப்படுத்துவதும் அவசியம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனவே, எனது பதவிக்காலத்தில் இந்த நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.

அத்துடன், இந்த நாட்டில் ஜனநாயக முறையில் அதிகாரப் பரிமாற்றம் நடந்த வரலாறும் உண்டு. தேர்தலில் நிகழும் அதிகாரப் பரிமாற்றத்தை எந்தத் தலைவரும் நிராகரித்ததில்லை. அதற்கமைய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த மக்கள்ஆணையை சுமூகமாக ஏற்றுக்கொண்டதுடன், ஜனநாயக ரீதியில் அதிகாரத்தை கைமாற்றுவதற்கான அவரின் அர்ப்பணிப்பிற்கும் முன்னுதாரணத்திற்கும் நன்றி தெரிவிக்கிறேன். மேலும் எமக்கு கிடைப்பது மிகவும் சவால் நிறைந்த நாடு என்பதை நன்கு புரிந்து கொண்டிருக்கிறோம். நமது அரசியலில் தூய்மையான, மக்களால் எதிர்பார்க்கப்படும் சிறந்த அரசியல் கலாசாரத்திற்காக அவசியம் காணப்படுகிறது.அதற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

நம் நாட்டின் அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு நல்லெண்ணம் இல்லை. எனவே, அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் மீது மக்கள் மரியாதை மற்றும் நம்பிக்கையை மீட்டெடுக்க எங்கள் தரப்பிலிருந்து முடிந்த அனைத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.

மேலும், நமக்கு முன் இருக்கும் இந்த ஆழமான நெருக்கடியை வெறும் அரசோ, வெறும் அரசியல் கட்சியோ அல்லது ஒரு தனி நபரோ மட்டும் தீர்க்க முடியும் என்று நாங்கள் நம்பவில்லை. ஏனென்றால், நான் முன்பு கூறியது போல், நான் ஒரு மாயாஜால வித்தைக்காரனல்ல. நான் மந்திரவாதியும் இல்லை. நான் இந்த நாட்டின் சாதாரண குடிமகன். எம்மிடம் திறமைகள் உள்ளன. இயலாமைகளும் உள்ளன. தெரிந்த விடயங்களும் உள்ளன அதேபோன்று, தெரியாத விடயங்களும் உள்ளன.

ஆனால் திறமைகளைப் பயன்படுத்தி தெரியாதவற்றை சேகரித்துக்கொண்டு சிறந்த முடிவுகளை எடுத்து இந்த நாட்டை வழிநடத்துவதே எனது தலையாய பணியாகும். அந்த கூட்டுப் பங்களிப்பின் ஒரு அங்கமாக மாறுவது எனது பொறுப்பாகும். மேலும், இந்த நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதில் பொது மக்கள் மற்றும் அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் பாரிய பொறுப்பு உள்ளது. அந்தப் பொறுப்பை நிறைவேற்ற அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்.

ஆனால், நாட்டின் ஜனாதிபதி என்ற முறையில், இந்தப் பணியை முன்னின்று நடத்துவதில் எனக்கு முதன்மையான மற்றும் மிக முக்கியமான பொறுப்பு இருப்பதை நான் ஏற்றுக்கொண்டேன். எனவே, இந்தச் சவாலை வெற்றிகொள்வதற்காக எனக்குக் வழங்கப்பட்டுள்ள பணியை நான் உரிய முறையில் நிறைவேற்றுவேன் என்பதை செயற்பாடு மற்றும் நடைமுறை மூலம் எல்லா சந்தர்ப்பங்களிலும் இந்த நாட்டின் பிரஜைகளுக்கு வெளிப்படுத்த நான் தயாராக இருக்கிறேன்.

மேலும் நமது நாட்டுக்கு சர்வதேச ஆதரவு தேவை. எனவே, உலகில் எத்தகைய அதிகாரப் பிளவுகள் இருந்தாலும், ஒவ்வொரு நாட்டையும் எமக்கு மிகவும் சாதகமாக கையாள்வதே நமது எதிர்பார்ப்பாகும். நாம் உலகில் தனிமைப்படுத்தப்பட்ட நாடு அல்ல. உலகத்துடன் கூட்டாக முன்னேற வேண்டிய ஒரு நாடாகும். அது தொடர்பில் தேவையான முடிவுகளை எடுக்க நாங்கள் சிறிதும் தயங்குவதில்லை.

மேலும், நம் நாட்டைக் கட்டியெழுப்புவதில் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு பெரும் பங்கு உள்ளது. எனவே, நாட்டை மேலும் வலுவாகக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு அவர்கள் ஆதரவளிப்பார்கள் என நான் கருதுகின்றேன்.

நம் நாட்டின் ஜனநாயகத்தின் ஊடாக நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். அதற்காக மக்கள் எனக்கு வாக்களித்தனர்.

மேலும் எனக்கு வழங்கப்படாத வாக்குகளும் உள்ளன. எனவே, எங்களின் வெற்றியின் உள்ளடக்கம் மற்றும் அளவு குறித்து எங்களுக்கு நல்ல புரிதல் உள்ளது. எனவே, எங்களுக்கு ஆதரவு வழங்காத மற்றும் எங்களை நம்பாத பிரஜைகளின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெறுவதே எனது நிர்வாகத்தின் போது எனக்கு வழங்கப்பட்டுள்ள பணியாகும். அந்தப் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

எதிர்காலத்தில் இவை அனைத்தையும் நீங்கள் நடைமுறையில் கண்டுகொள்ள முடியும். அதற்கு அனைத்து மக்களின் ஆதரவையும் எதிர்பார்க்கின்றேன்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தேர்தலில் இவ்வாறுதான் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்

0

அதிகாரிகள் மற்றும் பிற தேவைகள் முடிந்த பிறகு, மாலை 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (19) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி பிற்பகல் 4.15 மணிளவில் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“எதிர்வரும் 21ம் திகதி வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள் பெறப்பட்டதும், அதிகாரிகள் மற்றும் இதர தேவைகள் முடிந்ததும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் இரவு 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

மாலை 4.15 மணிளவில் தபால் மூல வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

அத்துடன் மாவட்ட அளவில் ஒவ்வொரு வட்டாரத்திலும் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெறும்.

வாக்கு எண்ணிக்கையின் முடிவில் முடிவுகள் கிடைத்தவுடன் ஊடகங்களுக்கு வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையே முதலில் எண்ணப்படும்.

அந்தக் கணக்கெடுப்பின் பின்னர் (மாவட்ட அளவில் எண்ணும் பணி) முதலில் வாக்குப்பெட்டிகளில் உள்ள வாக்குகள் எண்ணப்படும்.

அதன் பிறகு, ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு, தொகுதி மற்றும் மாவட்ட அளவில் அது தயாரிக்கப்படுகிறது.

தேர்தல்கள் செயலகமே ஒட்டுமொத்த முடிவுகளைக் கணக்கிடும்.

எந்த வேட்பாளரும் 50 வீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்றுள்ளாரா என சரிபார்க்கப்படும்.

அப்படியானால், அந்த நேரத்தில் வாக்கு எண்ணும் பணிகள் நிறுத்தப்படும்.

அப்போது ஜனாதிபதியை நாங்கள் அறிவிப்போம்.

எந்த வேட்பாளருக்கும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் கிடைக்காவிடின், விருப்பு வாக்கு எண்ணிக்கைக்கு செல்ல வேண்டும்.

அங்கு, அதிக வாக்குகள் பெற்ற இரண்டு வேட்பாளர்கள் போட்டியில் வைத்து விட்டு  மீதமுள்ள 36 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து நீக்கப்படுவர்” என்றார்.

புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக மாறும்

0

புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வாத்தியாசலையாக மாற்றம் பெரும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று புத்தளத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ அலிசப்ரி ரஹீம் மற்றும் சிந்தக்க மாயாதுன்ன தலைமையில் புத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்திலே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

புத்தளம் மக்களின் நீண்ட நாள் தேவையாக இருந்து வருகின்ற புத்தளம் தல வைத்தியசாலையை தரமுயர்த்துவது தொடர்பாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ அலிசப்ரி ரஹீம் அவர்களினால் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோலுக்கிணங்க குறித்த வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.

மேலும் புத்தளத்தில் மீன் பிடி தொழிலை முன்னேற்றும் நோக்கத்தில் மீன் பிடி துறைமுகம் ஒன்றை அமைக்கும் யோசனையும் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டதுடன், அதற்கான முன்னெடுப்புகளும் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்டமை புத்தளம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நாட்டில் நிரந்தர பொருளாதார அபிவிருத்தியை நிலை நாட்ட தாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டை பொருளாதார அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவதே தனது பிரதான நோக்கம் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மொட்டுக்கட்சிக்கு எதிராக நிற்கும் முக்கிய அமைச்சர்கள்

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக மொட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளரை இந்த வாரம் அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்காதிருக்கவும், மொட்டு சின்னத்தில் தனியாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமக்கு ஆதரவு வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பியிருந்த கடிதம் நேற்றைய தினம் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தினால் அரசியல் குழுவில் முன்வைக்கப்பட்டது.

எவ்வாறாயினும் அந்த கடிதத்தை நிராகரிக்க அரசியல் குழுக் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுவில் 82 பேர் அங்கம் வகிப்பதுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் 72 பேர் பங்கேற்றனர்.

இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த 11 பேர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

மஹிந்தானந்த அலுத்கமகே, பந்துல குணவர்தன, பிரதீப் உந்துகொட, கோகிலா ஹர்ஷனி குணவர்தன, சஹன் பிரதீப், ரமேஸ் பத்திரன, கஞ்சன விஜேசேகர, பிரசன்ன ரணதுங்க, கனக ஹேரத், மொஹான் பிரியதர்ஷன ஆகியோர் கட்சியின் சார்பில் தனியான வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

அத்துடன் பிறிதொரு கட்சியின் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்கும் உறுப்பினர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் யோசனைக்கு 6 பேர் எதிராக வாக்களித்துள்ளனர்.

எவ்வாறாயினும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் எனக் கூறப்பட்ட தம்மிக பெரேரா தொடர்பில் அரசியல் குழுக் கூட்டத்தின்போது எந்தவித கருத்துக்களும் பரிமாற்றிக் கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவளிக்காத 11 பேர் உள்ளிட்ட தரப்பினர் நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தனவின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சைனப் ஆரம்பப் பாடசாலைக்கு ஆளுநர் வருகை!

0

புத்தளம் சைனப் ஆரம்ப பாடசாலையின் முப்பெரும் விழா பாடசாலை அதிபர் யஹியா தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து புத்தளம் ஜெய்னப் பாடசாலைக்கு 22 லட்சம் ரூபா பெறுமதியான நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு, சிறுவர் விளையாட்டு நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தல் மற்றும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் செயற்திட்டத்தின் கீழ் BCMH நிறுவனத்தினால் கற்றல் உபகரணம் வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் கடந்த செவ்வாய்க்கிழமை (16) வெகு விமர்சையாக இடம்பெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதியாக வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், விசேட அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மற்றும் கௌரவ அதிதியாக புத்தளம் வலயக்கல்விப் பணிப்பாளர் அர்ஜுன ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆரம்ப பாடசாலையின் முக்கியத்துவம் மற்றும் அறிவார்ந்த சமூகத்தை கட்டியெழுப்ப ஆரம்ப பாடசாலை ஆற்றிவருகின்ற அர்ப்பணிப்பு குறித்து விரிவாக பேசிய வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், புத்தளம் மாவட்ட பாடசாலைகளின் துரித வளர்ச்சி பற்றியும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

மேலும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் செயற்திட்டத்திற்கு வடமேல் மாகாண ஆளுநர் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் ஜவ்ஷி ஜமால்தின், இணைப்புச் செயலாளர் எச். அமீர் அலி ஆசிரியர், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் உட்பட உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் அயல் பாடசாலையின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு
நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு

ஹிருணிகாவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறை

0

கடத்தல் வழக்கில் முன்னாள் எம்.பி ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்தத் தீர்ப்பை அறிவித்தார்.

தெமட்டகொட பகுதியிலுள்ள கடை ஒன்றில் பணிபுரிந்த அமில பிரியந்த அமரசிங்க எனும் இளைஞர் ஒருவரை 2015 டிசம்பர் 21ஆம் திகதி ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு சொந்தமான டிபெண்டர் வாகனத்தில் கடத்திய வழக்கு விசாரணை முடிவில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

29 குற்றங்கள் தொடர்பில் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் 8 பேரும் குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில், அச்சம்பத்திற்கு உதவி, ஒத்தாசை புரிந்ததாக ஹிருணிகா மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்திருந்தார்.

அத்தோடு, சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவின் ஆதரவாளர்கள் 8 பேர் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைதான ஐந்தாம் சந்தேகநபரின் மகள் அளித்துள்ள வாக்குமூலத்தில், தமது தாயாருடன் தொடர்பு பேணிய நபர் ஒருவரை தாம் காண்பித்ததாகவும், அவரை தமது தந்தையும் அவருடன் சென்றவர்களும் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு ஹிருணிகாவிடம் அழைத்துச் சென்றதாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

ஓவியப்போட்டியில் எருக்கலம்பிட்டி மாணவன் முதலாமிடம்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட வட மாகாண மானவர்களுக்கிடையிலான சித்திரப்போட்டியில் மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்றார்.

வீதி விபத்துக்கள் இல்லாத நாளைக்கான பாடசாலையிலிருந்து அணிவக்குப்போம் எனும் தொனிப்பொருளில் கடந்த வியாழக்கிழமை (13.06.2024) அன்று நடாத்தப்பட்ட வட மாகாண மாணவர்களுக்கிடையிலான குறித்த சித்திரப்போட்டியில் சுமார் 2600 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

சித்திரப்போட்டியில் பங்குபற்றிய 2600 மாணவர்களில் 250 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு நேற்றைய தினம் (15.06.2024) அவர்களுக்கான போட்டி இடம்பெற்றது.

நடைபெற்று முடிந்த இறுதிச் சுற்றுப்போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்று பெருமதிமிக்க பரிசில்களை பெற்றுக்கொண்டார்.

முதலாம் இடம் பெற்ற முஹம்மது ஹுசைன் என்ற மாணவனுக்கு சான்றிதல், துவிச்சக்கரவண்டி மற்றும் 8500/- ரூபா பெறுமதியான வவுச்சரும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இதேவேளை குறித்த போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய இல்முதீன் முஹம்மது ஹஸ்பான் 7 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய மற்றொரு மாணவரான முஹம்மது சம்ஹான் 8 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

பாரிய சாவல்களுக்கு மத்தியில் தனி ஒரு மனிதனாக இம் மாணாவர்களை ஊக்கப்படுத்தி, தயார்ப்படுத்தி போட்டியில் பங்குபெறச் செய்து வெற்றிபெறச் செய்த எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியின் சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் அவர்களின் இம் முயற்சிக்கு, பாடசாலை சமூகம் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் நன்றி தெரிவித்தனர்.

தமக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வந்து தேசிய அளவில் இடம்பெறும் போட்டிகளில் மாணவர்களை பங்குபெறச் செய்வதே தனது இலக்கு என சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் எமது ஊடகத்திற்கு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை இராஜினாமா

0

நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்துள்ளனர்.

சாந்த நிரியல்ல உட்பட 15 பேர் கொண்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரின் அறிவித்தலுக்கு அமைய இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி திங்கட்கிழமை புதிய பணிப்பாளர் சபை நியமிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ “அத தெரண” விற்கு தெரிவித்தார்.

புத்தளம் எருக்கலம்பிட்டியில் கடும் வெள்ளம்

0

புத்தளம் பகுதியில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக புத்தளம் பகுதி முழுதும் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.

புத்தளம், தில்லையடி, பாலாவி, புத்தளம் எருக்கலம்பிட்டி, ஹிதாயத் நகர்,  மதுரங்குளி மற்றும் ஏனைய பல கிராமங்களும் வெள்ளித்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமமும் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 1500 குடும்பங்கள் இங்கு வாழ்ந்துவருவதுடன், அனைத்து வீடுகளும் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நூற்றிற்கும் அதிகமான வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் ஐநூற்றுக்கும் அதிகமான வீடுகள் பகுதி அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8ஆம் திகதி ஏற்பட்ட மழை வெள்ளித்தினால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் மற்றும் பாடசாலைகளில் தற்காலிகமாக  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு தினங்களாக இவர்களுக்கான சமைத்த உணவுகள் மூன்று வேலைகளிலும் ஊர் தனவந்தர்களின் உதவியுடனும், பள்ளிவாசல் நிர்வாக சபையின் வழிகாட்டலுடனும் வழங்கப்பட்டு வருவதுடன், ஊர் மக்களுக்கும் உணவு விநியோகங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

இவர்களுக்கான நிவாரண உதவிகள் இதுவரை அரசாங்கத்தினால் வழங்கப்படாத போதிலும், ஊர் மக்களின் பங்களிப்புடன் மாத்திரமே பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு விநியோகங்கள் இதுவரை  வழங்கப்பட்டு வருகின்றது.

புத்தளம் பொத்துவில்லு பகுதியில் உள்ள குளம் மழை நீரினால்  பெருக்கெடுத்துள்ளதால் குறித்த குளத்து நீர் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமத்திற்குள் தொடர்ந்தும் மூன்றாவது நாளாக ஊடறுத்து செல்வதால் வீடுகள் தொடர்ந்தும் நீருள் மூழ்கியுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்தின் நிவாரண உதவிக்காக பல மக்கள் தொடர்ந்தும் எதிர்பார்த்து காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

வடக்கில் முதல்முறை ஜனாதிபதியின் பிறந்தநாள் கொண்டாட்டம்!

கிளிநொச்சியில் ஜனாதிபதி அனுரா குமார திசாநாயக்கஅவர்களுக்கு பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள்

வரலாற்றில் முதல்முறையாக வடமாகாணத்தில் ஜனாதிபதி ஒருவருக்கு பிறந்தநாள் கொண்டாடிய நிகழ்வு நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் சுண்டிகுளம் சந்தி இளைஞர்களின் ஏற்பாட்டினால் நேற்று 24.11.2025 மாலை 4.00 மணியளவில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக அவர்களின் 57வது பிறந்தநாளை முன்னிட்டு சுண்டிக்குளம் சந்தி இளைஞர்களினால் கேக் வெட்டி, பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.

வீதியில் சென்ற மக்களுக்கு கேக், இனிப்பு வகைகளையும் வழங்கிக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இளைஞர்கள்;

முன்னைய ஆட்சியாளர்கள் எவரும் சொன்னதை செய்வதில்லை, தற்போதைய ஜனாதிபதி கூறிய வாக்குறுதிகளை செயல்படுத்தி வருகிறார். போதை பொருளை முற்றும் முழுதாக அளித்து இளைய தலைமுறைகளை போதைப் பொருளிலிருந்து மீட்டெடுத்து, நாட்டின் போதை பொருளை முற்று முழுதாக ஒழிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டமை எமக்கு பிடித்துள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் தற்போதைய ஜனாதிபதி இராணுவத்தினரை அகற்றுவதாகவும் தற்போதைய அரசாங்கத்தில் மக்களுக்கான பேச்சு சுதந்திரத்தை முற்றும் முழுதாக வழங்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக மக்கள் தமது தேவைகளை இலகுவாக பெற்றுக்கொள்ள கூடிய வகையில் அனைத்து திணைக்கலங்களும் செயற்பட்டு வருவதை முழு மனதுடன் வரவேற்பதாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

அக்கராஜன்குளம் பகுதியில் மாமனாரை கொன்ற மருமகன்!

கிளிநொச்சி அக்கராஜன்குளம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட ஸ்கந்தபுரம் பகுதியில், மருமகனின் தாக்குதலுக்குள்ளான மாமனார் உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்றிரவு பதிவாகியுள்ளது.

இறந்தவரின் மகளுடன் சண்டையிட்டபோது, மகள் தந்தை வீட்டிற்கு தப்பியோடிய நிலையில் மகளை தாக்க முற்பட்ட மருமகனை தடுக்க முற்பட்ட மாமனார் மருமகனின் தாக்குதலுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் 59 வயதான கதிரவேலு சிவராசசிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

25 வயது மதிக்கத்தக்க மருமகன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருடன் சேர்ந்து குறித்த சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் அவரது சிறிய தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக அக்கராஜன்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்தவர்களின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

புத்தளத்தில் முக்கிய நீர் தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு!

0

ஜூட் சமந்த

ராஜகங்கனை, தெதுரு ஓயா, இங்கினிமிட்டிய மற்றும் தப்போவ நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் மேலும் திறக்கப்பட்டுள்ளதால், கலா ஓயா, தெதுரு ஓயா மற்றும் மீ ஓயாவின் நீர்மட்டம் அதிக அளவில் இருப்பதாக புத்தளம் பேரிடர் மேலாண்மை பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று 25 ஆம் தேதி பிற்பகல் நிலவரப்படி, இங்கினிமிட்டிய நீர்த்தேக்கத்தின் 4 வான்கதவுகள் தலா 2 அடி மற்றும் 2 வான்கதவுகள் தலா 1 அடி திறக்கப்பட்டுள்ளன. திறக்கப்பட்ட வான்கதவுகளிலிருந்து மீ ஓயாவிற்கு வினாடிக்கு 5000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

தப்போவ நீர்த்தேக்கத்தின் 4 வான்கதவுகள் தலா 1 அடி திறக்கப்பட்டுள்ளன.

அந்த வான்கதவுகளிலிருந்து மீ ஓயாவிற்கு வினாடிக்கு 880 கன அடி தண்ணீர் சேர்க்கப்படுவதாக நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.

ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் நான்கு வான்கதவுகள் தலா 4 அடி திறக்கப்பட்டுள்ளன.

இந்த மதகுகள் வழியாக கலா ஓயாவில் வினாடிக்கு 3856 கன அடி நீர் சேர்க்கப்படுகிறது.

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் நான்கு மதகுகள் தலா 2 அடி திறக்கப்பட்டுள்ளன.

இந்த மதகுகள் வழியாக தெதுரு ஓயாவில் வினாடிக்கு 5400 கன அடி நீர் சேர்க்கப்படுவதாக நீர்ப்பாசனத் துறை மேலும் தெரிவித்துள்ளது.

செம்மஞ்சள் நிறமாக மாறிய பாராளுமன்றம்!

0

பாராளுமன்றத்திற்குள் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாய்மொழியாகவோ அல்லது எவ்வகையிலோ துன்புறுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில், நிலையியற் கட்டளைகளை திருத்துவதற்கான முன்மொழிவை சபாநாயகரிடம் சமர்ப்பிக்க பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

பால்நிலைசார் வன்முறைக்கு எதிரான (GBV) 16 நாட்கள் வேலைத்திட்டத்திற்கு ஆதரவாகப் பாராளுமன்றத்தில் பல நிகழ்ச்சிகள் நேற்று (24) இடம்பெற்றன.

அதற்கமைய, பால்நிலைசார் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதைக் குறிக்கும் இலச்சினைகள் பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய மற்றும் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன ஆகியோருக்கு அணிவிக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற பணியாளர்கள் செம்மஞ்சள் நிறம் அல்லது செம்மஞ்சள் நிறம் கலந்த ஆடைகளை நேற்று (24) அணிந்து வந்திருந்தனர்.

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம், ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் (UNFPA) அனுசரணையுடன் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில், பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி, குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க, ஆளும் கட்சியின் முதற்கோலாசான் அமைச்சர் (வைத்தியர்) நளிந்த ஜயதிஸ்ஸ, மற்றும் எதிர்க்கட்சியின் கௌரவ முதற்கோலாசான் கயந்த கருணாதிலக ஆகியோருக்கும் அடையாள இலச்சினைகள் அணிவிக்கப்பட்டன. அத்துடன், பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, பணியாட்தொகுதியின் பிரதானியும் பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன மற்றும் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன ஆகியோருக்கும் ஒன்றியத்தினால் இலச்சினைகள் அணிவிக்கப்பட்டன.

மேலும், பாராளுமன்ற உறுப்பினர்கள் நுழைவாயிலில் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பால்நிலைசார் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஆதரவை வெளிப்படுத்தும் இலச்சினைகள் அணிவிக்கப்பட்டன.

16 நாட்கள் வேலைத்திட்டம் என்பது பால்நிலைசார் வன்முறைக்கு (GBV) எதிராக வருடாந்தம் நவம்பர் 25 முதல் டிசம்பர் 10 வரை நடத்தப்படும் ஒரு உலகளாவிய பிரச்சாரமாகும். இது பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான சர்வதேச தினத்தில் தொடங்கி மனித உரிமைகள் தினத்தன்று முடிவடைகிறது. உலகளவில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையைத் தடுக்கவும், அகற்றவும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது, நடவடிக்கைகளை பலப்படுத்துவதும் இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அவர்களின் 16 நாட்கள் வேலைத்திட்டத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய கருப்பொருள், “அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கும் எதிரான டிஜிட்டல் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர ஒன்றிணைவோம்” என்பதை வலியுறுத்துகிறது.

இதனுடன் இணைந்ததாக, பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் ஒரு விசேட ஊடகச் சந்திப்பும் நடத்தப்பட்டது.

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய அவர்கள் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்,

இந்த ஆண்டுக்கான கருப்பொருளான, அனைத்துப் பெண்களுக்கும் மற்றும் சிறுமிகளுக்கும் எதிராக டிஜிட்டல் வெளியில் நிகழும் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து அனைவரும் விசேட கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தார். அத்துடன், சட்டக் கொள்கைகளை உருவாக்குவதைத் தாண்டி, பால்நிலைசார் வன்முறையை ஒழிப்பதற்குச் சமூகப் பொறுப்பும் கவனமும் தேவை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இம்முறை பாராளுமன்றத்தில் பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது ஒரு சாதகமான நிலைமையாகும் என்றும், பால்நிலைசார் வன்முறையை ஒழிப்பதைச் சமூகமயமாக்குவதற்கு கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணையுமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவரும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான சரோஜா சாவித்ரி போல்ராஜ் அவர்கள் குறிப்பிடுகையில்,

2024 ஆம் ஆண்டில் உலகெங்கிலும் 315 மில்லியன் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகியுள்ளனர் என்று தெரிவித்தார். இலங்கையிலும் இது நிகழ்கிறது என்றும், குறிப்பாக டிஜிட்டல் வெளியில் அரசியல் உட்பட அனைத்துத் துறைகளிலும் பெண்களும் சிறுமிகளும் எதிர்கொள்ளும் துஷ்பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். அதற்கமைய, உயர்சபையான பாராளுமன்றத்திலும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாய்மொழியாகவோ துன்புறுத்தப்படுவதைத் தடுப்பதற்காக நிலையியற் கட்டளைகளைத் திருத்துவதற்கான ஒரு முன்மொழிவைக் சபாநாயகரிடம் சமர்ப்பிக்க பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அதற்கமைய, பால்நிலைசார் வன்முறையை ஒழிப்பதற்கான முதலாவது முன்னுதாரணத்தை பாராளுமன்றம் என்றவையில் நாட்டிற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். அரசியலில் எத்தகைய கொள்கைகளைக் கொண்டிருந்தாலும், பால்நிலைசார் வன்முறையை ஒழிப்பதற்காக அனைவரும் ஒன்றிணையுமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.

அத்துடன், இங்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் பிரதி-இணைத் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமிந்திராணி கிரியெல்ல குறிப்பிடுகையில், பால்நிலைசார் வன்முறையை ஒழிப்பது குறித்து ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் (UNFPA) மற்றும் ஐ.நா. பெண்கள் வேலைத்திட்டம் (UN women) நடத்திய அண்மைய ஆய்வில், பெண்கள், சிறுமிகள் உட்பட அனைத்து தனிநபர்களும் அடிக்கடி பல்வேறு வகையான இணையத் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவது வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அதற்கமைய, போலிக் கணக்குகளை உருவாக்குவது 36.9% என்றும், ஆபாசமான தகவல்கள்/வீடியோக்களைப் பகிர்வது 36.9% என்றும் அவர் குறிப்பிட்டார். இலங்கையில் ஐந்து பெண்களில் ஒருவர் உடல்ரீதியாகவோ அல்லது வாய்மொழியாகவோ பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள் என்றும், இந்த நிலைமையை மாற்றி ஒரு சிறந்த சமூகத்தை உருவாக்க கட்சி பேதமின்றி அனைவரும் செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அத்துடன், இந்த வேலைத்திட்டத்தை இலங்கை பாராளுமன்றத்தில் செயற்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கியமைக்காக ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்திற்கு (UNFPA) அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

அடுத்த சில நாட்களுக்கு அதிகரிக்கும் மழை வீழ்ச்சி!

0

இலங்கையைச் சுற்றியுள்ள தாழ்வான வளிமண்டலத்தில் நிலவும் கொந்தளிப்பான நிலை காரணமாக, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் மழையுடனான நிலைமை இன்று (25) முதல் அடுத்த சில நாட்களுக்குள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அதன்படி வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். 

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1:00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஏற்பட வாய்ப்புள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ இற்கு மேல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

நாட்டின் ஏனைய பகுதிகளில் சில இடங்களில் 75 மி.மீ இற்கு மேல் ஓரளவு கனமழை பெய்யக்கூடும். 

வடக்கு மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் மணிக்கு சுமார் 40 கி.மீ வேகத்தில் இடைக்கிடையே ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். 

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைப்பதற்கான தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் அறிவுறுத்தியுள்ளது.

நுரைச்சோலையில் நண்பர்கள் இருவர் கத்திக்குத்து!

0

ஜூட் சமந்த

ஒன்றாக மது அருந்திய பின்னர் ஏற்பட்ட கைகலப்பு மற்றும் கத்தி சண்டையில் காயமடைந்த இரண்டு நண்பர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நுரைச்சோலை போலீசார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் ஒருவர் புத்தளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன், மற்றவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த மோதல் கடந்த 23 ஆம் தேதி இரவு நுரைச்சோலை காவல் பிரிவின் ஆதனாத்தலே – அந்தகன்னியா பகுதியில் நடந்தது.

ஏத்தாளை – அந்தகன்னிய பகுதியைச் சேர்ந்த இருவர் இந்த சம்பவத்தில் காயமடைந்தனர். அவர்களில், ஹதபான்கொட பத்மசிறி புத்தளம் மருத்துவமனையிலும், ருவன் ஸ்ரீலால் கொழும்பு தேசிய மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் நண்பர்கள் என்று கூறப்படுகிறது.

23 ஆம் தேதி மாலை, இருவரும் ஒன்றாக மது அருந்தினர். பின்னர், இருவரும் வீடு திரும்பும் போது, ​​வாக்குவாதம் மோசமடைந்தததால் அக்கம்பக்கத்தினர் வந்து சண்டையை சமரசம் செய்ய முயன்றனர்.

பின்னர், ருவான் ஸ்ரீலால் வீட்டிற்குள் சென்று, கூர்மையான கத்தியை எடுத்து, பத்மசிறியைத் தாக்கி, காயங்களை ஏற்படுத்தினார். சம்பவத்தை நேரில் பார்த்த பத்மசிறியின் இரண்டு மகன்கள் சம்பவ இடத்திற்கு வந்து, ருவான் ஸ்ரீலாலை தடியால் தாக்கியதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

சண்டையில் காயமடைந்த இருவரையும் அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக புத்தளம் ஆதார மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர்களில் ஒருவர், ஆபத்தான நிலையில், மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சண்டையில் ஈடுபட்ட ஒரு சந்தேக நபர், நோரச்சோலை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நோரச்சோலை போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேருந்து பயணிகளுக்கு இன்றுமுதல் புதிய வசதி அறிமுகம்!

0

பயணிகள் பேருந்துகளில் பயணிக்கும் போது பயணச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதி இன்று முதல் வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. 

இதற்கமைய, இதன் ஆரம்ப நிகழ்வு இன்று (24) காலை மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில் இடம்பெறவுள்ளது.

பேருந்து கட்டணம் செலுத்திய பின்னர் மீதிப் பணத்தை திரும்பப் பெறாதது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வாக, வங்கி அட்டைகள் ஊடாக கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

டிஜிட்டல் அமைச்சு மற்றும் போக்குவரத்து அமைச்சு இணைந்து இந்த புதிய முறையை நடைமுறைப்படுத்துகின்றன. 

முதற்கட்டமாக சுமார் 20 வழித்தடங்களில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

0

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

2025 நவம்பர் 24ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

தென் அந்தமான் கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகியுள்ளது. அது மேற்கு – வடமேற்குத் திசையில் நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், இன்று, நவம்பர் 24 ஆம் திகதியளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிக்கைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

மழை நிலைமை:

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று :

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்குத் திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை மற்றும் மன்னார் ஊடாக சிலாபம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை:

திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை மற்றும் மன்னார் ஊடாக சிலாபம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் சாதாரண முதல் மிதமான அலை வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

புத்தளத்தில் 2 உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

0

ஜூட் சமந்த

நீண்ட தூர பேருந்துகள் தேநீர் அருந்துவதற்காக நிறுத்தப்படும் இரண்டு உணவகங்களின் உரிமையாளர்கள் மற்றும் பேக்கரி பொருட்களை விற்பனை செய்த இரண்டு மொபைல் வாகனங்களின் ஓட்டுநர்கள் மீது கருவலகஸ்வெவ சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தின் பொது சுகாதார ஆய்வாளர்கள் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

புத்தளம் – தப்போவ மற்றும் சாலியவெவ பகுதிகளில் உள்ள இரண்டு உணவகங்கள் மற்றும் அந்த பகுதிகளில் பேக்கரி பொருட்களை விற்பனை செய்ய பயன்படுத்தப்பட்ட இரண்டு முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் மீது பொது சுகாதார ஆய்வாளர்கள் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

நீண்ட தூர பேருந்துகள் தேநீர் மற்றும் உணவுக்காக நிறுத்தப்படும் உணவகங்களின் தரம் குறித்து ஆராயுமாறு பயணிகள் சுகாதார அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளனர். அதன்படி, புத்தளம் – அனுராதபுரம் வழித்தடத்தில் நீண்ட தூர பேருந்துகள் நிறுத்தப்படும் தப்போவ மற்றும் சாலியவெவ பகுதிகளில் இயங்கும் 08 உணவகங்கள் பொது சுகாதார ஆய்வாளர்களால் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

முறையான நடைமுறைகள் இல்லாமல் உணவு தயாரித்தல், முகமூடிகள் இல்லாமல் குப்பைத் தொட்டிகளை வைத்திருத்தல் மற்றும் ஈக்கள் மற்றும் தூசிக்கு ஆளாகும் வகையில் விற்பனைக்காக சமைத்த உணவை சேமித்து வைத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் இரண்டு உணவகங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக பொது சுகாதார ஆய்வாளர்கள் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது, ​​பேக்கரி பொருட்களை விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்ட இரண்டு முச்சக்கர வண்டிகளையும் பொது சுகாதார பரிசோதகர்களால் பரிசோதிக்கப்பட்டது. இரண்டு முச்சக்கர வண்டிகளின் ஓட்டுநர்களும் உணவு விற்பனைக்குத் தேவையான மருத்துவ அறிக்கைகளைப் பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இந்தச் சோதனையின் போது, ​​மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற ஏராளமான உணவுகளை அழிக்கவும் பொது சுகாதார பரிசோதகர்களால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொது சுகாதார பரிசோதகர்களால் இரண்டு உணவகங்களின் உரிமையாளர்கள் மற்றும் முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் மீது புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சோதனைகளை கருவலகஸ்வெவ நிர்வாக பொது சுகாதார பரிசோதகர் என். சுரேஷ் மற்றும் கலாஓயா பிரதேச பொது சுகாதார பரிசோதகர்களான நீல் ஜெயசிங்க மற்றும் தம்மிக வருசபெரும ஆகியோர் மேற்கொண்டனர்.

அது நமது ஊழியர்களின் பணம், நமக்கே சொந்தமானது!

0

ஜூட் சமந்த

வெளிநாட்டில் உள்ள இலங்கை தொழிலாளர்களிடமிருந்து அந்தந்த நாடுகளில் சமூகப் பாதுகாப்பு நிதிக்காக சேகரிக்கப்பட்ட பணத்தை மீட்டெடுக்க முடிந்தால், நாட்டிற்கு அதிக அளவு அந்நியச் செலாவணியைப் பெற முடியும் என்று இலங்கை வெளிநாட்டு தொழிலாளர் வலையமைப்பு தெரிவித்துள்ளது.

வென்னப்புவ பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை வெளிநாட்டு தொழிலாளர் வலையமைப்பு இதனை தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை வெளிநாட்டு தொழிலாளர் வலையமைப்பின் செயலாளர் வழக்கறிஞர் சுனில் ரத்நாயக்க கருது தெரிவிக்கையில்;

ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தற்போது 3 மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்கள் பணிபுரிகின்றனர். முதலாளிகள் மாதாந்திர அடிப்படையில் பெறும் கொடுப்பனவிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை வசூலிக்கிறார்கள்.

இந்த வழியில் சேகரிக்கப்படும் பணம் சமூகப் பாதுகாப்பு நிதி அல்லது ஊழியர் சேமலாப நிதி என்று அழைக்கப்படுகிறது. இந்த வழியில் சேகரிக்கப்பட்டு அந்த நாடுகளில் வைக்கப்படும் பணம் நமது நாட்டிற்குச் சொந்தமான பணம். ஏனெனில் அந்த பணம் நமது மக்களிடமிருந்து சேகரிக்கப்படுகிறது.

இந்தப் பணத்தை உரிமையாளர்களிடம் எவ்வாறு திரும்பப் பெறுவது என்பதை நாங்கள் ஆராய்ந்தபோது, ​​பல சட்ட சிக்கல்கள் இருப்பதைக் கண்டறிந்தோம். சட்டப் பிரச்சினைகளை ஒரே நேரத்தில் தீர்க்க முடியாது என்பதை நாங்கள் அறிவோம்.

இது குறித்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சருடன் நாங்கள் விவாதித்தோம்.

மற்ற நாடுகளில் உள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு நிதி அல்லது ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்காக அவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட பணம் திரும்பப் பெறப்பட்டுள்ளது என்பதையும் நாங்கள் அறிந்திருக்கிறோம்.

தற்போது இந்த விஷயத்தை நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். ஏனெனில், அரசாங்கம் சம்பந்தப்பட்ட நாடுகளுடன் விவாதித்து இந்தப் பணத்தை நம் நாட்டிற்குக் கொண்டு வருவது எளிதாக இருக்கும் என வலையமைப்பின் தலைவர் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில்;

இத்தாலியில் பணிபுரிந்த மற்றும் பணிபுரியும் அனைவரும் அவர்கள் பெறும் கொடுப்பனவில் ஒரு பகுதியை ஓய்வூதிய நிதி மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதிக்கு செலுத்த வேண்டும்.

நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பை அடைந்த பிறகு, அவர்களுக்கு இத்தாலிய அரசாங்கம் ஓய்வூதியம் வழங்குகிறது. ஆனால் சமூகப் பாதுகாப்பு நிதிக்காக அவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட பணம் திரும்பப் பெறப்படவில்லை. செலுத்த வேண்டிய தொகை மிகப்பெரியது.

பெறப்படும் ஒரே விஷயம் அந்நியச் செலாவணி என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

முந்தைய அரசாங்கங்களின் அதிகாரிகளுடன் இதைப் பற்றி நாங்கள் விவாதித்தோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை. இருப்பினும், தற்போதைய அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சர் எங்களுக்கு நல்ல பதிலைக் கொடுத்தார்.

தொழிலாளர்கள் தொடர்பாக இத்தாலிய மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கு இடையே 1984 ஆம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை.

இந்த ஒப்பந்தம் உடனடியாக புதுப்பிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அப்போது எந்த பிரச்சனையும் இல்லாமல் இந்தத் தொகையை நாங்கள் பெற முடியும்.

இத்தாலியில் இருந்து தொடங்கி மற்ற நாடுகளில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்களுக்கு இந்த வேலையை எடுத்துச் செல்ல நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

மத்திய கிழக்கு நாடுகளில் 25-30 ஆண்டுகளாக பணியாற்றியவர்கள் இருப்பதை நாங்கள் அறிவோம். அவர்களுக்கும் இந்த உரிமை இருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.