Tuesday, August 4, 2026
Sponsored advertisementspot_img
Home Blog

நாகவில்லுவில் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ்வின் நினைவுதினம்!

பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று நாகவில்லுவில் இடம்பெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வு!

இலங்கை திருநாட்டில் பெளதீக ரீதியான பல வேலைத்திட்டங்களையும், இடம்பெயர்வு மற்றும் எல்லை நிர்ணயம் தொடர்பான பறந்துபட்ட அறிவினையும் கொண்டிருந்த எருக்கலம்பிட்டியை சேர்ந்த மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது வருட நினைவு தின நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

அந்த வகையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் நினைவுப் பேருரையும், புத்தக வெளியீடு நிகழ்வும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் ஏற்பாட்டில் நேற்று 25.08.2025 புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய அதிபர் ஜனாப் S.M. ஹுஸைமத் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், புத்தி ஜீவிகள் மற்றும் குடும்பத்தார்கள் கலந்தகொண்டமை விஷேட அம்சமாகும்.

சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் பொருளாளர் ஜனாப் ஏ.ஜி. அனீஸ் (Bsc.Agri) அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.

மேலும் இஸ்லாமிய கற்கை அறபு மொழிப் பீட, தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களினால் நூல் அறிமுக உரையும், நினைவுப் பேருரையும் மிகவும் உணர்வுபூர்வமாக நிகழ்த்தப்பட்டது.

கிழக்கு மற்றும் தென் கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பங்களிப்பு அளப்பெரியது என நினைவு கூறிய பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன், வடக்கில் ஏற்பட்ட யுத்தம் மற்றும் முஸ்லிம்களின் இடம்பெயர்வு குறித்து அதீத அக்கறையுடன் செயற்பட்ட மிக முக்கியமானவர் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்கள் எனவும் எடுத்துரைத்தார்.

வடக்கு முஸ்லிம்களின் இடம்பெயர்வு மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பில் அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களுடன் பலதரப்பட்ட கலந்துரையாடல்களை நடத்தி, சர்வதேசம் வரை இவ்விடயங்களை கொண்டுசென்ற மகான் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் என பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் தனது உரையில் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் புதல்வி சட்டத்தரணி எப்.சப்னா ஹஸ்புல்லாஹ் அவர்களினால் ஏற்புரை நிகழ்த்தப்பட்டதுடன், நூல் வெளியீடு நிகழ்வும் இடம்பெற்றது.

நூலின் முதற்பிரதியை ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தரும், புத்தளம் எருக்கலம்பிட்டி பள்ளிவாசல் நிர்வாக சபையின் முன்னாள் உறுப்பினருமான ஜனாப் ரஹ்மத்துல்லாஹ் (GS) அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

மேலும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் செயலாளர் ஜனாப் எஸ்.எச்.எம். றிஸ்னி அவர்களினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டதுடன், தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன், மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பாரியாருக்கும் நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில், பேராசிரியர்கள், கல்விமான்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், பாடசாலைச் சமூகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் குடும்பத்தார்கள் என பலரும் கலந்து சிறப்பித்ததுடன், ஈ நியூஸ் பெஸ்ட் ஊடக நிறுவனம் ஊடக அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரணிலுக்காக ஒன்று திரண்ட அரசியல் தலைவர்கள்!

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விசாரணை கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது, நாட்டின் அடிப்படை ஜனநாயக நிறுவனங்களின் வலிமை குறித்து கடுமையான கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் விளைவுகள் ஒரு தனிநபரின் அல்லது எந்தவொரு அரசியல் கட்சிகளின் தலைவிதியையும் விட, சமூகத்தின் உரிமைகளுக்கான பிரச்சினைகளை தோற்றிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் தலைவர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைகளை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது மற்றும் விளக்கமறியலை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து நடத்திய விசேட ஊடக சந்திப்பில் பங்கேற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரல முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் அறிக்கையை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

போர்த்துக்கல் அணி சாம்பியன் ஆனது!

0

‘நேஷன்ஸ் லீக்’ கால்பந்தில் போர்ச்சுகல் அணி சாம்பியன் ஆனது. பைனலில் ‘பெனால்டி ஷூட் அவுட்டில்’ 5-3 என ஸ்பெயினை வீழ்த்தியது.

ஐரோப்பிய கால்பந்து அணிகளுக்காக ‘நேஷன்ஸ் லீக்’ தொடர் நடத்தப்படுகிறது. மொத்தம் 54 அணிகள் பங்கேற்றன. நேற்று ஜெர்மனியின் முனிக் நகரில் நடந்த பைனலில், போர்ச்சுகல், நடப்பு யூரோ சாம்பியன் ஸ்பெயின் பலப்பரீட்சை நடத்தின. போட்டியின் 21வது நிமிடம் ஜுபிமெண்டி (ஸ்பெயின்), 26வது நிமிடம் மெண்டிஸ் (போர்ச்சுகல்) தலா ஒரு கோல் அடித்தனர். 45வது நிமிடம் மைக்கேல் ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் ஸ்பெயின் அணி 2-1 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் 61 வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். போர்ச்சுகல் அணிக்காக இவர் அடித்த 138வது கோல் இது. 90 நிமிட முடிவில் போட்டி 2-2 என சமன் ஆனது. அடுத்து நடந்த கூடுதல் நேரத்திலும் (30 நிமிடம்) இரு அணியும் கோல் அடிக்கவில்லை.

இதையடுத்து வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி ‘பெனால்டி ஷூட் அவுட்டுக்கு’ சென்றது. இரு அணிக்கும் தலா 5 வாய்ப்புகள் தரப்பட்டன. காயம் காரணமாக 88 வது நிமிடம் வெளியேறிய ரொனால்டோ, இதில் பங்கேற்கவில்லை.

முதல் 3 வாய்ப்பில் போர்ச்சுகலின் ராமோஸ், விடின்ஹா, பெர்ணான்டஸ் கோல் அடித்தனர். மறுபக்கம் ஸ்பெயின் தரப்பில் மெரினோ, பயேனா, இஸ்கோ கோல் அடிக்க 3-3 என ஆனது.

4வது வாய்ப்பில் மெண்டெஸ் (போர்ச்சுகல்) கோல் அடிக்க, ஸ்பெயினின் மோராட்டோ அடித்த பந்தை கோல் கீப்பர் டீகோ கோஸ்டா தடுத்து அசத்தினார்.

5வது வாய்ப்பில் நெவேஸ் கோல் அடித்தார். இதையடுத்து 5-3 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் ‘திரில்’ வெற்றி பெற்றது. 2019க்குப் பின் இத்தொடரில் மீண்டும் சாம்பியன் ஆனது.

தில்லையடியில் சிக்கிய கடத்தல் பீடி இலைகள்!

0

புத்தளத்தில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளுடன் வேன் ஒன்றும் பறிமுதல்!

இலங்கை கடற்படை, பொலிஸாருடன் இணைந்து, புத்தளம், தில்லையடி பகுதியில் 2025 ஜூன் 05 இரவு வேளையில் நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகள் கொண்ட ஒரு வேன் கைப்பற்றப்பட்டது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிறுவனம், புத்தளம் பொலிஸாருடன் இணைந்து தில்லையடி பகுதியில் நடத்திய இந்த சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்று சோதனை செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகளானது வாகனத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் வேன் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களால் ஆபத்தா?

விண்வெளியில் பூமியை சுற்றி வந்துக்கொண்டிருக்கும் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கொள்களை சீனா நினைத்தால் வெறும் 12 மணி நேரத்தில் தாக்கி அழித்துவிட முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் என்கிற செய்தி ஊடகத்தில் இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது தற்போது சீனா 99 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. இவை அனைத்தும் நான்ஜிங் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஆஸ்ட்ரோனாட்டிக்ஸ் பல்கலைக்கழகத்தின் விண்வெளிக் கட்டுப்பாட்டுத் துறையின் இயக்குநர் வூ யுன்ஹுவா தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இவை அனைத்தும் எலான் மஸ்கின் 1400 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை வெறும் 12 மணி நேரத்தில் காலி செய்துவிடும். சீன செயற்கைக்கோளில் லேசர், நுண் அலைகளை உருவாக்கும் கருவி, உளவு கருவிகள் பொருத்தப்பட்டிருக்கலாம். ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் வெறுமென நெட்வொர்க் கொடுக்க மட்டுமே பயன்படுத்தப்படுவதில்லை. தவிர, ராணுவ நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது என சீனா குற்றம்சாட்டி வருகிறது.

அதாவது, உக்ரைன்-ரஷ்யா போரில், உக்ரைன் படைகளுக்கு தகவல்கள் கொடுக்கவும், ரஷ்ய எல்லையை துல்லியமாக கண்காணிக்கவும் இந்த செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த 2022ம் ஆண்டு ரஷ்ய போரின்போது அப்போதைய உக்ரைனின் துணைப் பிரதமரான மைக்கைலோ ஃபெடோரோவ், “ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் சேவையை உடனடியாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த மஸ்க், “உடனடியாக சேவை வழங்கப்படும்” என்று கூறியிருந்தார்.

உக்ரைன் போருடன் மட்டுமே ஸ்டார்லிங்க் நிற்காது, நாளை சீனாவுக்கும்-தைவானுக்கும் பஞ்சாயது ஏற்பட்டால் அப்போதும், தைவானுக்கு சப்போர்ட் செய்ய ஸ்டார்லிங்க் வரும். எனவே இந்த கூட்டு நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்க சீனா இந்த புதிய செயற்கைக்கோள்களை உருவாக்கியிருக்கிறது.

கடந்த 2023ம் ஆண்டு இதற்கான பணிகளை சீனா தொடங்கியது. இந்த திட்டத்திற்கு ‘கியான்ஃபான் மெகா-விண்மீன் திட்டம்’ (Qianfan mega-constellation project) என்றும் பெயரிட்டிருந்தது. நோக்கம் உலகம் முழுவதும் இணைய தொடர்பை வழங்குவதாகும். இதற்காக மொத்தம் 15,000 சிறிய ரக செயற்கைக்கோள்களை ஏவ சீனா முடிவெடுத்தது. இதன் முதல் தொகுப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏவப்பட்டது. இதில் 18 செயற்கைக்கோள்கள் இருந்தன.

ஒவ்வொன்றும் சுமார் 300 கி.கி எடையில் இருந்தது. இவை பூமியிலிருந்து 800 கி.மீ உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டது. இதேபோன்று 2024 டிசம்பரில் அடுத்து இரண்டு தொகுதி ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. தற்போது மொத்தம் 99 செயற்கைக்கோள்கள் விண்வெளியில் இருக்கின்றன. 15,000 செயற்கைக்கோள்களை 3 கட்டங்களாக ஏவ இருக்கிறது. முதல் கட்டத்தில் 1,296 செயற்கைக்கோள்கள் ஏவப்படும். இதில் 648 செயற்கைக்கோள்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஏவப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் கன்னி உரை

0

அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்புவோம்

தேசியத்துவத்துடனும் ஐக்கியத்துடனும் ஒன்றுபட்டு நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க இன்று (23) காலை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

பதவிப் பிரமாணத்தின் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய முழுமையான உரை:

மக்களால் ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது நமது நாட்டின் ஜனநாயகத்திலிருக்கும் மிக முக்கியமான அம்சமாகும். தேர்தலில் வாக்களித்தல் மற்றும் ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதோடு ஜனநாயகம் நிறைவு பெறுவதில்லை. இது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சம் என்றாலும், நம் நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்த, கட்டமைப்புகளின் வலிமையும், சட்டங்களை வலுப்படுத்துவதும் அவசியம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனவே, எனது பதவிக்காலத்தில் இந்த நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.

அத்துடன், இந்த நாட்டில் ஜனநாயக முறையில் அதிகாரப் பரிமாற்றம் நடந்த வரலாறும் உண்டு. தேர்தலில் நிகழும் அதிகாரப் பரிமாற்றத்தை எந்தத் தலைவரும் நிராகரித்ததில்லை. அதற்கமைய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த மக்கள்ஆணையை சுமூகமாக ஏற்றுக்கொண்டதுடன், ஜனநாயக ரீதியில் அதிகாரத்தை கைமாற்றுவதற்கான அவரின் அர்ப்பணிப்பிற்கும் முன்னுதாரணத்திற்கும் நன்றி தெரிவிக்கிறேன். மேலும் எமக்கு கிடைப்பது மிகவும் சவால் நிறைந்த நாடு என்பதை நன்கு புரிந்து கொண்டிருக்கிறோம். நமது அரசியலில் தூய்மையான, மக்களால் எதிர்பார்க்கப்படும் சிறந்த அரசியல் கலாசாரத்திற்காக அவசியம் காணப்படுகிறது.அதற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

நம் நாட்டின் அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு நல்லெண்ணம் இல்லை. எனவே, அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் மீது மக்கள் மரியாதை மற்றும் நம்பிக்கையை மீட்டெடுக்க எங்கள் தரப்பிலிருந்து முடிந்த அனைத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.

மேலும், நமக்கு முன் இருக்கும் இந்த ஆழமான நெருக்கடியை வெறும் அரசோ, வெறும் அரசியல் கட்சியோ அல்லது ஒரு தனி நபரோ மட்டும் தீர்க்க முடியும் என்று நாங்கள் நம்பவில்லை. ஏனென்றால், நான் முன்பு கூறியது போல், நான் ஒரு மாயாஜால வித்தைக்காரனல்ல. நான் மந்திரவாதியும் இல்லை. நான் இந்த நாட்டின் சாதாரண குடிமகன். எம்மிடம் திறமைகள் உள்ளன. இயலாமைகளும் உள்ளன. தெரிந்த விடயங்களும் உள்ளன அதேபோன்று, தெரியாத விடயங்களும் உள்ளன.

ஆனால் திறமைகளைப் பயன்படுத்தி தெரியாதவற்றை சேகரித்துக்கொண்டு சிறந்த முடிவுகளை எடுத்து இந்த நாட்டை வழிநடத்துவதே எனது தலையாய பணியாகும். அந்த கூட்டுப் பங்களிப்பின் ஒரு அங்கமாக மாறுவது எனது பொறுப்பாகும். மேலும், இந்த நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதில் பொது மக்கள் மற்றும் அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் பாரிய பொறுப்பு உள்ளது. அந்தப் பொறுப்பை நிறைவேற்ற அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்.

ஆனால், நாட்டின் ஜனாதிபதி என்ற முறையில், இந்தப் பணியை முன்னின்று நடத்துவதில் எனக்கு முதன்மையான மற்றும் மிக முக்கியமான பொறுப்பு இருப்பதை நான் ஏற்றுக்கொண்டேன். எனவே, இந்தச் சவாலை வெற்றிகொள்வதற்காக எனக்குக் வழங்கப்பட்டுள்ள பணியை நான் உரிய முறையில் நிறைவேற்றுவேன் என்பதை செயற்பாடு மற்றும் நடைமுறை மூலம் எல்லா சந்தர்ப்பங்களிலும் இந்த நாட்டின் பிரஜைகளுக்கு வெளிப்படுத்த நான் தயாராக இருக்கிறேன்.

மேலும் நமது நாட்டுக்கு சர்வதேச ஆதரவு தேவை. எனவே, உலகில் எத்தகைய அதிகாரப் பிளவுகள் இருந்தாலும், ஒவ்வொரு நாட்டையும் எமக்கு மிகவும் சாதகமாக கையாள்வதே நமது எதிர்பார்ப்பாகும். நாம் உலகில் தனிமைப்படுத்தப்பட்ட நாடு அல்ல. உலகத்துடன் கூட்டாக முன்னேற வேண்டிய ஒரு நாடாகும். அது தொடர்பில் தேவையான முடிவுகளை எடுக்க நாங்கள் சிறிதும் தயங்குவதில்லை.

மேலும், நம் நாட்டைக் கட்டியெழுப்புவதில் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு பெரும் பங்கு உள்ளது. எனவே, நாட்டை மேலும் வலுவாகக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு அவர்கள் ஆதரவளிப்பார்கள் என நான் கருதுகின்றேன்.

நம் நாட்டின் ஜனநாயகத்தின் ஊடாக நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். அதற்காக மக்கள் எனக்கு வாக்களித்தனர்.

மேலும் எனக்கு வழங்கப்படாத வாக்குகளும் உள்ளன. எனவே, எங்களின் வெற்றியின் உள்ளடக்கம் மற்றும் அளவு குறித்து எங்களுக்கு நல்ல புரிதல் உள்ளது. எனவே, எங்களுக்கு ஆதரவு வழங்காத மற்றும் எங்களை நம்பாத பிரஜைகளின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெறுவதே எனது நிர்வாகத்தின் போது எனக்கு வழங்கப்பட்டுள்ள பணியாகும். அந்தப் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

எதிர்காலத்தில் இவை அனைத்தையும் நீங்கள் நடைமுறையில் கண்டுகொள்ள முடியும். அதற்கு அனைத்து மக்களின் ஆதரவையும் எதிர்பார்க்கின்றேன்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தேர்தலில் இவ்வாறுதான் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்

0

அதிகாரிகள் மற்றும் பிற தேவைகள் முடிந்த பிறகு, மாலை 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (19) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி பிற்பகல் 4.15 மணிளவில் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“எதிர்வரும் 21ம் திகதி வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள் பெறப்பட்டதும், அதிகாரிகள் மற்றும் இதர தேவைகள் முடிந்ததும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் இரவு 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

மாலை 4.15 மணிளவில் தபால் மூல வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

அத்துடன் மாவட்ட அளவில் ஒவ்வொரு வட்டாரத்திலும் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெறும்.

வாக்கு எண்ணிக்கையின் முடிவில் முடிவுகள் கிடைத்தவுடன் ஊடகங்களுக்கு வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையே முதலில் எண்ணப்படும்.

அந்தக் கணக்கெடுப்பின் பின்னர் (மாவட்ட அளவில் எண்ணும் பணி) முதலில் வாக்குப்பெட்டிகளில் உள்ள வாக்குகள் எண்ணப்படும்.

அதன் பிறகு, ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு, தொகுதி மற்றும் மாவட்ட அளவில் அது தயாரிக்கப்படுகிறது.

தேர்தல்கள் செயலகமே ஒட்டுமொத்த முடிவுகளைக் கணக்கிடும்.

எந்த வேட்பாளரும் 50 வீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்றுள்ளாரா என சரிபார்க்கப்படும்.

அப்படியானால், அந்த நேரத்தில் வாக்கு எண்ணும் பணிகள் நிறுத்தப்படும்.

அப்போது ஜனாதிபதியை நாங்கள் அறிவிப்போம்.

எந்த வேட்பாளருக்கும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் கிடைக்காவிடின், விருப்பு வாக்கு எண்ணிக்கைக்கு செல்ல வேண்டும்.

அங்கு, அதிக வாக்குகள் பெற்ற இரண்டு வேட்பாளர்கள் போட்டியில் வைத்து விட்டு  மீதமுள்ள 36 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து நீக்கப்படுவர்” என்றார்.

புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக மாறும்

0

புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வாத்தியாசலையாக மாற்றம் பெரும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று புத்தளத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ அலிசப்ரி ரஹீம் மற்றும் சிந்தக்க மாயாதுன்ன தலைமையில் புத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்திலே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

புத்தளம் மக்களின் நீண்ட நாள் தேவையாக இருந்து வருகின்ற புத்தளம் தல வைத்தியசாலையை தரமுயர்த்துவது தொடர்பாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ அலிசப்ரி ரஹீம் அவர்களினால் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோலுக்கிணங்க குறித்த வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.

மேலும் புத்தளத்தில் மீன் பிடி தொழிலை முன்னேற்றும் நோக்கத்தில் மீன் பிடி துறைமுகம் ஒன்றை அமைக்கும் யோசனையும் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டதுடன், அதற்கான முன்னெடுப்புகளும் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்டமை புத்தளம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நாட்டில் நிரந்தர பொருளாதார அபிவிருத்தியை நிலை நாட்ட தாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டை பொருளாதார அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவதே தனது பிரதான நோக்கம் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மொட்டுக்கட்சிக்கு எதிராக நிற்கும் முக்கிய அமைச்சர்கள்

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக மொட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளரை இந்த வாரம் அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்காதிருக்கவும், மொட்டு சின்னத்தில் தனியாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமக்கு ஆதரவு வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பியிருந்த கடிதம் நேற்றைய தினம் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தினால் அரசியல் குழுவில் முன்வைக்கப்பட்டது.

எவ்வாறாயினும் அந்த கடிதத்தை நிராகரிக்க அரசியல் குழுக் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுவில் 82 பேர் அங்கம் வகிப்பதுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் 72 பேர் பங்கேற்றனர்.

இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த 11 பேர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

மஹிந்தானந்த அலுத்கமகே, பந்துல குணவர்தன, பிரதீப் உந்துகொட, கோகிலா ஹர்ஷனி குணவர்தன, சஹன் பிரதீப், ரமேஸ் பத்திரன, கஞ்சன விஜேசேகர, பிரசன்ன ரணதுங்க, கனக ஹேரத், மொஹான் பிரியதர்ஷன ஆகியோர் கட்சியின் சார்பில் தனியான வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

அத்துடன் பிறிதொரு கட்சியின் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்கும் உறுப்பினர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் யோசனைக்கு 6 பேர் எதிராக வாக்களித்துள்ளனர்.

எவ்வாறாயினும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் எனக் கூறப்பட்ட தம்மிக பெரேரா தொடர்பில் அரசியல் குழுக் கூட்டத்தின்போது எந்தவித கருத்துக்களும் பரிமாற்றிக் கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவளிக்காத 11 பேர் உள்ளிட்ட தரப்பினர் நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தனவின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சைனப் ஆரம்பப் பாடசாலைக்கு ஆளுநர் வருகை!

0

புத்தளம் சைனப் ஆரம்ப பாடசாலையின் முப்பெரும் விழா பாடசாலை அதிபர் யஹியா தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து புத்தளம் ஜெய்னப் பாடசாலைக்கு 22 லட்சம் ரூபா பெறுமதியான நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு, சிறுவர் விளையாட்டு நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தல் மற்றும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் செயற்திட்டத்தின் கீழ் BCMH நிறுவனத்தினால் கற்றல் உபகரணம் வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் கடந்த செவ்வாய்க்கிழமை (16) வெகு விமர்சையாக இடம்பெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதியாக வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், விசேட அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மற்றும் கௌரவ அதிதியாக புத்தளம் வலயக்கல்விப் பணிப்பாளர் அர்ஜுன ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆரம்ப பாடசாலையின் முக்கியத்துவம் மற்றும் அறிவார்ந்த சமூகத்தை கட்டியெழுப்ப ஆரம்ப பாடசாலை ஆற்றிவருகின்ற அர்ப்பணிப்பு குறித்து விரிவாக பேசிய வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், புத்தளம் மாவட்ட பாடசாலைகளின் துரித வளர்ச்சி பற்றியும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

மேலும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் செயற்திட்டத்திற்கு வடமேல் மாகாண ஆளுநர் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் ஜவ்ஷி ஜமால்தின், இணைப்புச் செயலாளர் எச். அமீர் அலி ஆசிரியர், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் உட்பட உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் அயல் பாடசாலையின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு
நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு

ஹிருணிகாவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறை

0

கடத்தல் வழக்கில் முன்னாள் எம்.பி ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்தத் தீர்ப்பை அறிவித்தார்.

தெமட்டகொட பகுதியிலுள்ள கடை ஒன்றில் பணிபுரிந்த அமில பிரியந்த அமரசிங்க எனும் இளைஞர் ஒருவரை 2015 டிசம்பர் 21ஆம் திகதி ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு சொந்தமான டிபெண்டர் வாகனத்தில் கடத்திய வழக்கு விசாரணை முடிவில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

29 குற்றங்கள் தொடர்பில் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் 8 பேரும் குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில், அச்சம்பத்திற்கு உதவி, ஒத்தாசை புரிந்ததாக ஹிருணிகா மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்திருந்தார்.

அத்தோடு, சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவின் ஆதரவாளர்கள் 8 பேர் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைதான ஐந்தாம் சந்தேகநபரின் மகள் அளித்துள்ள வாக்குமூலத்தில், தமது தாயாருடன் தொடர்பு பேணிய நபர் ஒருவரை தாம் காண்பித்ததாகவும், அவரை தமது தந்தையும் அவருடன் சென்றவர்களும் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு ஹிருணிகாவிடம் அழைத்துச் சென்றதாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

ஓவியப்போட்டியில் எருக்கலம்பிட்டி மாணவன் முதலாமிடம்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட வட மாகாண மானவர்களுக்கிடையிலான சித்திரப்போட்டியில் மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்றார்.

வீதி விபத்துக்கள் இல்லாத நாளைக்கான பாடசாலையிலிருந்து அணிவக்குப்போம் எனும் தொனிப்பொருளில் கடந்த வியாழக்கிழமை (13.06.2024) அன்று நடாத்தப்பட்ட வட மாகாண மாணவர்களுக்கிடையிலான குறித்த சித்திரப்போட்டியில் சுமார் 2600 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

சித்திரப்போட்டியில் பங்குபற்றிய 2600 மாணவர்களில் 250 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு நேற்றைய தினம் (15.06.2024) அவர்களுக்கான போட்டி இடம்பெற்றது.

நடைபெற்று முடிந்த இறுதிச் சுற்றுப்போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்று பெருமதிமிக்க பரிசில்களை பெற்றுக்கொண்டார்.

முதலாம் இடம் பெற்ற முஹம்மது ஹுசைன் என்ற மாணவனுக்கு சான்றிதல், துவிச்சக்கரவண்டி மற்றும் 8500/- ரூபா பெறுமதியான வவுச்சரும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இதேவேளை குறித்த போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய இல்முதீன் முஹம்மது ஹஸ்பான் 7 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய மற்றொரு மாணவரான முஹம்மது சம்ஹான் 8 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

பாரிய சாவல்களுக்கு மத்தியில் தனி ஒரு மனிதனாக இம் மாணாவர்களை ஊக்கப்படுத்தி, தயார்ப்படுத்தி போட்டியில் பங்குபெறச் செய்து வெற்றிபெறச் செய்த எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியின் சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் அவர்களின் இம் முயற்சிக்கு, பாடசாலை சமூகம் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் நன்றி தெரிவித்தனர்.

தமக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வந்து தேசிய அளவில் இடம்பெறும் போட்டிகளில் மாணவர்களை பங்குபெறச் செய்வதே தனது இலக்கு என சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் எமது ஊடகத்திற்கு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

புத்தளம் எருக்கலம்பிட்டியில் கடும் வெள்ளம்

0

புத்தளம் பகுதியில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக புத்தளம் பகுதி முழுதும் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.

புத்தளம், தில்லையடி, பாலாவி, புத்தளம் எருக்கலம்பிட்டி, ஹிதாயத் நகர்,  மதுரங்குளி மற்றும் ஏனைய பல கிராமங்களும் வெள்ளித்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமமும் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 1500 குடும்பங்கள் இங்கு வாழ்ந்துவருவதுடன், அனைத்து வீடுகளும் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நூற்றிற்கும் அதிகமான வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் ஐநூற்றுக்கும் அதிகமான வீடுகள் பகுதி அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8ஆம் திகதி ஏற்பட்ட மழை வெள்ளித்தினால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் மற்றும் பாடசாலைகளில் தற்காலிகமாக  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு தினங்களாக இவர்களுக்கான சமைத்த உணவுகள் மூன்று வேலைகளிலும் ஊர் தனவந்தர்களின் உதவியுடனும், பள்ளிவாசல் நிர்வாக சபையின் வழிகாட்டலுடனும் வழங்கப்பட்டு வருவதுடன், ஊர் மக்களுக்கும் உணவு விநியோகங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

இவர்களுக்கான நிவாரண உதவிகள் இதுவரை அரசாங்கத்தினால் வழங்கப்படாத போதிலும், ஊர் மக்களின் பங்களிப்புடன் மாத்திரமே பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு விநியோகங்கள் இதுவரை  வழங்கப்பட்டு வருகின்றது.

புத்தளம் பொத்துவில்லு பகுதியில் உள்ள குளம் மழை நீரினால்  பெருக்கெடுத்துள்ளதால் குறித்த குளத்து நீர் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமத்திற்குள் தொடர்ந்தும் மூன்றாவது நாளாக ஊடறுத்து செல்வதால் வீடுகள் தொடர்ந்தும் நீருள் மூழ்கியுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்தின் நிவாரண உதவிக்காக பல மக்கள் தொடர்ந்தும் எதிர்பார்த்து காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இன்னும் 3 சிறைகளில் அசம்பாவிதம் நடக்கப்போகிறதா?

0
சிறைச்சாலைகளை இலக்குவைக்கும் நாசகாரச் சக்தி? பாராளுமன்றத்தில் அமைச்சர் வெளியிட்ட பரபரப்பு வாக்குமூலம்!

நாட்டின் சிறைச்சாலை அமைப்பைச் சீர்குலைத்து, பெரும் கலவரத்தை உருவாக்கச் சதித்திட்டம் தீட்டப்படுகிறதா? என்ற அதிர வைக்கும் சந்தேகத்தை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாநாயக்கார பாராளுமன்றத்தில் இன்று வெளிப்படுத்தியுள்ளார். மகர சிறைச்சாலையில் இடம்பெற்ற விகாரமான மோதல் சம்பவம் தொடர்பில் விசேட கூற்றொன்றை விடுத்தபோதே, இந்த அதிரடித் தகவல்களை அவர் சபையின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.

மகர சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் வெறும் கைதிகளுக்கிடையிலான மோதல் மட்டுமல்ல, அதன் பின்னணியில் அந்தச் சிறைச்சாலையின் இயல்புநிலையை முழுமையாகச் சீர்குலைக்கும் திட்டமிட்ட முயற்சியொன்று இருந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவத்தின் பின்னணியில் வெளிப்புறத் தரப்பொன்றின் கைகள் உள்ளதா என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அது தொடர்பான முழுமையான விசாரணைகள் தற்பொழுது மிகத் தீவிரமாக முடுக்கப்பட்டுள்ளன.

ஆனால், அதிர்ச்சி இதோடு முடியவடையவில்லை! மகர சிறைச்சாலைச் சம்பவத்தைத் தொடர்ந்து, நாட்டில் உள்ள இன்னும் மூன்று சிறைச்சாலைகள் தொடர்பாகத் தமக்குக் கிடைத்த மிகவும் முக்கியமான ரகசியத் தகவல்களைச் சிறைச்சாலையின் உயர் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக அமைச்சர் ஹர்ஷண நாநாயக்கார சுட்டிக்காட்டினார். இதன் மூலம், ஏனைய சிறைகளில் நடக்கவிருந்த அசம்பாவிதங்கள் முன்கூட்டியே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

அதேவேளை, மகர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலின் போது பொதுச் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தற்பொழுது கணக்கிடப்பட்டு வருகின்றன. சிறைச்சாலையின் அமைதியைச் சீர்குலைத்து, சேதங்களை ஏற்படுத்திய கைதிகள் எவராயினும் அவர்களுக்கு எதிராகச் சட்டம் தனது கடமையை மிகக் கடுமையாகச் செய்யும் என்றும், அவர்கள் தகுந்த தண்டனையை அனுபவிப்பது உறுதி என்றும் அமைச்சர் இறுதியாக எச்சரித்துள்ளார்.

கறுப்புப் பணம் மற்றும் பயங்கரவாத நிதியளிப்பைத் தடுக்க புதிய சட்டங்கள்!

0

இலங்கையின் பொருளாதாரப் பாதுகாப்பு மற்றும் நிதி அமைப்பின் வெளிப்படைத்தன்மையை முழுமையாக உறுதிப்படுத்தும் நோக்கில், பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட மூன்று முக்கிய நிதிச் சட்டமூலங்கள் உத்தியோகபூர்வமாகச் சட்டங்களாக மாறியுள்ளன. கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், இச்சட்டமூலங்களில் இன்று (04) தனது சான்றுரையைப் பதிவுசெய்து கையொப்பமிட்டுள்ளார். இதன் மூலம், சட்டவிரோதப் பணப் பரிமாற்றங்கள் மற்றும் நிதிக் குற்றங்களுக்கு எதிரான இலங்கையின் போராட்டம் புதியதொரு பரிமாணத்தை எட்டியுள்ளது.

நிதி உலகையும் தேசிய பாதுகாப்பையும் அச்சுறுத்தும் கறுப்புப் பணச் சுத்திகரிப்பை அடியோடு ஒழிப்பதே இதன் முதன்மை நோக்கமாகும். இதற்கமைய, 2026 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பணம் தூயதாக்கல் தடை (திருத்தச்) சட்டத்தின் மூலம், நிதிக் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை அதிவிரைவாக முன்னெடுக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில், ஒரு நபர் நீதிமன்றத்தால் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்படாத நிலையிலும்கூட, சந்தேகத்திற்குரிய சொத்துக்களைத் தற்காலிகமாகத் தடுத்து வைக்கவும், அவற்றைக் கட்டுப்படுத்தவும் சட்ட ரீதியான வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.

டிஜிட்டல் யுகத்தின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில், 2026 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் (திருத்தச்) சட்டமும் கடுமையாக்கப்பட்டுள்ளது. இதன்கீழ், கிரிப்டோகரன்சி போன்ற மெய்நிகர் சொத்து சேவை வழங்குநர்கள் அனைவருமே இனி சட்டபூர்வ நிதிப் பரிவர்த்தனை வரைவிலக்கணத்திற்குள் கொண்டுவரப்படுகின்றனர். மேலும், சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகளை இடைநிறுத்தி வைக்கும் உத்தரவுக் காலம் 7 நாட்களில் இருந்து 14 வேலை நாட்கள் வரை நீடிக்கப்பட்டுள்ளதோடு, இதற்கென வலுவான ‘நிதிப் புலனாய்வுப் பிரிவு’ மற்றும் தேசியக் குழு என்பனவும் அமைக்கப்படவுள்ளன.

அதேபோன்று, நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் வகையில் 2026 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாய (திருத்தச்) சட்டமும் எவ்வித மாற்றமுமின்றி சட்டமாக்கப்பட்டுள்ளது. இது ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைத் தீர்மானங்கள் மற்றும் சர்வதேச நிதி நடவடிக்கை செயலணியின் (FATF) சர்வதேச தரநிலைகளுக்கு அமைய உருவாக்கப்பட்டுள்ளது.

இப்புதிய சட்டத் திருத்தங்கள் நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் சட்டவிரோதப் பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதுடன், வரவிருக்கும் சர்வதேச பரஸ்பர மதிப்பீடுகளில் இலங்கையின் நிதித் துறையின் நம்பகத் தன்மையையும், தேசிய பாதுகாப்பையும் உலகளவில் உயர்த்திக் காட்டும் என்பதில் சந்தேகமில்லை.

என் கைது ஒரு காமெடி: “ரீல்ஸ் வெறியில் டம்மி முதல்வர்”

0

சென்னை: என் கைது நடவடிக்கையை காமெடியாக பார்க்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கைது நடவடிக்கை பயந்தவன் நான் அல்ல என்று கூறியுள்ள உதயநிதி ஸ்டாலின், நான் பேசாத ஒன்றை கட், காப்பி, பேஸ்ட் செய்து பொய்யாக பரப்புகின்றனர் என்றும் குற்றம்சாட்டியுள்ளார். காவிரி பிரச்சனையை திசை திருப்ப முதல்வர் விஜய் முயற்சிப்பதாகவும் கூறிய உதயநிதி ஸ்டாலின், திமுகவின் கடைசி தொண்டன் கூட கைது நடவடிக்கைக்கு பயப்பட மாட்டான் என்றும் தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் நடந்த திமுக ஆர்ப்பாட்டத்தின் போது முதல்வர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து சர்ச்சையாக பேசியதாக புகார் அளிக்கப்பட்ட வழக்கில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார். காலையிலேயே உதயநிதி ஸ்டாலினின் வீட்டிற்கு வந்த போலீசார், அவரை கைது செய்வதில் தீவிரம் காட்டினர்.

இதனிடையே உதயநிதி ஸ்டாலின் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அப்போது 12 மணி வரை உதயநிதி ஸ்டாலின் கைது செய்யக் கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனாலும் 11 மணியளவிலேயே உதயநிதி ஸ்டாலின் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அப்போது வீட்டில் இருந்தே முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் போலீஸ் அராஜகம் என்று கோஷம் எழுப்பினார்.

இதன்பின் காவல்துறை வாகனத்தில் ஏறிய உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தேர்தலுக்கு முன் தவெக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்று ஆர்ப்பாட்டத்தில் பேசினேன். டம்மி முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் என்று அனைவருக்கும் ரீல்ஸ் வெறி முற்றி போயுள்ளது.

நான் பேசாத ஒன்றை பேசியதாக கட், காப்பி, பேஸ்ட் செய்து பொய் பரப்புகின்றனர். என் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. என்னுடைய கைது நடவடிக்கையை காமெடியாக பார்க்கிறேன். இதற்கு பயப்படுபவம்ன் நான் அல்ல.. திமுகவின் கடைசி தொண்டன் கூட கைதுக்கு பயப்படும் ஆள் கிடையாது. காவிரி பிரச்சனையை திசை திருப்ப என் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை சட்டப்படி எதிர்கொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.

இதன்பின் காவல்துறை வேனில் இருந்தவாறே உதயநிதி ஸ்டாலின் வெளியில் எட்டி திமுக தொண்டர்களிடம் இருந்து விடைபெற்று கொண்டார். இதனிடையே உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை உதயநிதி கைது செய்யப்பட்டதற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கண்டனம் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரை கைதுசெய்வது ஜனநாயக உணர்வு, அரசியல் நாகரிகத்துக்கு பொருந்தாத செயல்; நாளை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவரை கைதுசெய்வதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தில் 4 பேர் உட்பட 7 பேர் பலி!

0

நாட்டில் தற்போது நிலவிவரும் கடுமையான சீரற்ற வானிலை மற்றும் திடீர் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளதாகக் காவல்துறை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அத்துடன், ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ள நிலையில், அவரைத் தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இயற்கையின் இந்தச் சீற்றத்தால் மிக மோசமான பாதிப்பை ஹட்டன் பகுதி சந்தித்துள்ளது. ஹட்டன் – பொல்பிட்டிய, மொரஹேனகம பகுதியில் திடீரென ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக வீடு ஒன்று முற்றாகப் புதையுண்டது. இந்தச் சோகமான சம்பவத்தில் வீட்டில் இருந்த 47, 83 மற்றும் 58 வயதுடைய மூன்று பெண்களும், 22 வயதுடைய இளைஞர் ஒருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, சீறிப்பாயும் வெள்ளப்பெருக்கும் மனித உயிர்களைக் காவு கொண்டுவருகிறது. வட்டவளை, ஞானானந்தகம வீதியில் அமைந்துள்ள மகாவலி கங்கைக்குக் குறுக்கேயான பாலத்தைக் கடக்க முயன்ற 53 வயதுடைய நபர் ஒருவர், எதிர்பாராதவிதமாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.

மற்றொரு புறம், வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகள் மீது மண்மேடுகள் சரிந்து விழுந்ததில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. நாவலப்பிட்டி, சோலங்கந்த, ஜனஉதான கிராமத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 67 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதேபோன்று, நாவலப்பிட்டி பஸ்பாகே கோரளையில் வீடு ஒன்றின் மீது ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி மேலும் ஒரு 67 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளதை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கண்டி மாவட்ட பிரதிப் பணிப்பாளர் இந்திக ரணவீர உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, கினிகத்தேனை – அம்பகமுவ பகுதியில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட 45 வயதுடைய நபர் ஒருவர் இதுவரை கண்டுபிடிக்கப்படாமல் காணாமல் போயுள்ளார். அனர்த்தங்கள் காரணமாக மேலும் மூவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், நாட்டின் பல இடங்களில் மண்சரிவு அபாயம் தீவிரமடைந்துள்ளது.

நிலைமை இவ்வாறிருக்க, மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும் சீரற்ற வானிலையை முன்னிட்டு கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று (4) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாணக் கல்விச் செயலாளர் அறிவித்துள்ளார். ஆபத்தான பகுதிகளில் வாழும் மக்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

அரசின் முடிவுக்குச் சர்வதேச அளவில் கிளம்பியது பலத்த எதிர்ப்பு!

0

இலங்கை நீதித்துறையின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கிய திருத்தச் சட்டமூலம் ஒன்று தொடர்பில் தற்போது சர்வதேச அளவில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பதற்காக இலங்கை அரசாங்கம் அண்மையில் முன்மொழிந்துள்ள அரசியலமைப்புத் திருத்தம் குறித்துச் சர்வதேச நீதிபதிகள் சங்கம் (International Association of Judges) தனது கடுமையான கவலையையும் எதிர்ப்பையும் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.

அரசாங்கத்தினால் அவசர அவசரமாகக் கொண்டுவரப்படும் இத்தகைய சட்டத் திருத்தங்கள் தன்னிச்சையான மற்றும் தற்காலிகத் தீர்மானங்களின் அடிப்படையில் அமையக்கூடாது எனச் சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச அமைப்பு, இவ்வாறான நடவடிக்கைகள் நீதித்துறையின் ஒட்டுமொத்தக் கட்டமைப்புக்கே பெரும் சவாலாக அமையும் என எச்சரித்துள்ளது.

1953 ஆம் ஆண்டு ஒஸ்திரியாவின் சல்ஸ்பர்க் நகரில் தோற்றுவிக்கப்பட்டு, தற்போது இத்தாலியின் ரோமைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் இச்சங்கம், உலகின் மிகப்பழமையான மற்றும் மிகப்பெரிய சர்வதேச நீதிபதிகள் அமைப்பாகும். உலகெங்கிலும் உள்ள நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதையும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதையும் முதன்மை நோக்கமாகக் கொண்டு இயங்கும் இந்த அமைப்பு, தற்போது இலங்கையின் விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் இந்த முன்மொழிவுக்கு எதிராக ஏற்கனவே இலங்கை நீதித்துறை சேவைச் சங்கம் மற்றும் பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் உட்படப் பல உள்நாட்டு, வெளிநாட்டு அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றன. இந்நிலையிலேயே, இந்தத் தீவிர நிலைமையைக் கவனத்திற்கொண்டு சர்வதேச நீதிபதிகள் சங்கமும் அரசாங்கத்திற்குத் தனது அழுத்தமான கோரிக்கையை விடுத்துள்ளது.

அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் என்பது தர்க்கரீதியான, கொள்கைசார்ந்த மற்றும் வலுவான நடைமுறைகளின் மூலமே முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், மாறாக அவசர முடிவுகள் மூலம் நிறைவேற்றப்பட்டால் அது நீதித்துறையின் சுயாதீனத் தன்மையை முற்றாகச் சீர்குலைத்துவிடும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, முன்மொழியப்பட்டுள்ள இந்தச் சட்டமூலத்தை அரசாங்கம் உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனச் சர்வதேச நீதிபதிகள் சங்கம் கௌரவமாகக் கேட்டுக்கொண்டுள்ளது.

வரைபடத்திலிருந்தே மறையப்போகிறதா கற்பிட்டி, கீரிமுந்தலம கிராமம்?

0

இலங்கையின் வரைபடத்தை எடுத்துப் பார்த்தால் வடமேற்குச் கடலோரத்தில் மிக அழகாகக் காட்சியளிக்கும் கற்பிட்டி தீபகற்பத்தின் ஒரு பகுதி, விரைவில் அந்த வரைபடத்திலிருந்தே துடைத்தெறியப்படும் அதிர்ச்சிகரமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. கற்பிட்டி – கீரிமுந்தலம எனும் அழகிய மீனவக் கிராமம் தான் தற்போது கடலின் கொடூரப் பசிக்கு இரையாகிக் கொண்டிருக்கிறது!

இங்குள்ள 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அன்றாட வயிற்றுப் பிழைப்புக்காக முழுமையாகக் கடலையே நம்பியிருக்கிறார்கள். ஆனால், கடந்த சில நாட்களாக சீறிப்பாயும் அலைகள், அவர்களின் நிலத்தையும் நிம்மதியையும் சேர்த்தே மெல்ல மெல்ல விழுங்கி வருகிறது. கரையோரங்கள் மிக மோசமாக அரிப்புக்குள்ளாகி வருவதால், கிராமமே கடலுக்குள் மூழ்கும் அபாய எச்சரிக்கை மணிகள் அடிக்கத் தொடங்கியுள்ளன.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த பிரதேச மக்களும், ‘டஜ்பே’ கிராமிய மீனவர் அமைப்பும் இணைந்து, கடலைத் தடுக்க தங்களால் முடிந்தவரை மணல் மூடைகளை அடுக்கி தற்காலிக அரண் அமைத்தனர். ஆனால், தற்போது வீசிவரும் பேரடை புயல் காற்றும், வழக்கத்திற்கு மாறான கொந்தளிப்பான அலைகளும் அந்த மணல் மூடைகளையும் அசால்ட்டாக கடலுக்குள் இழுத்துச் சென்றுவிட்டன!

அதுமட்டுமா? கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல மீன்பிடிப் படகுகள், அலைகளின் மோதலால் பலத்த சேதமடைந்துள்ளன. “வழமையாகக் தவணைக்காலத்தில் கடல் கொந்தளிப்பாக இருப்பது எங்களுக்குப் பழகிய ஒன்றுதான். ஆனால், இம்முறை இதுவரை இல்லாதவாறு அலைகள் மிகக் கொடூரமாக சீறிப்பாய்கின்றன!” எனக் கண்ணீருடன் கூறுகிறார் உள்ளூர் மீனவர் ஒருவர்.

படகுகளை நங்கூரமிடவும், வாடிகளை அமைத்து மீன்பிடித் தொழிலைச் செய்யவும் அவர்களுக்கு இந்தச் சிறிய கரைப்பகுதிதான் ஒரே வாழ்வாதாரம். அதுவும் கடலுக்குள் கரைந்து போனால், அவர்களின் வாழ்வாதாரம் முற்றாக முடங்கிவிடும். அதிகாரிகளும் அரசும் உடனடியாகத் தலையிட்டு நிரந்தரக் கரைப்ப பாதுகாப்புத் தடுப்புகளை ஏற்படுத்தாவிட்டால், கீரிமுந்தலம கிராமம் என்பது வெறும் வரலாற்றுப் புத்தகங்களில் மட்டுமே எஞ்சியிருக்கும்!

ஜுட் சமந்த

அமரபுர மகா நிகாயவின் அனுநாயக்க தேரரின் இறுதிச்சடங்கு அரசாங்க மரியாதைகளுடன்!

0

ஜுட் சமந்த

இலங்கையின் பௌத்த சாசனத்திற்கும் சமூகத்திற்கும் அளப்பரிய சேவையாற்றிய அமரபுர மகா நிகாயவின் அனுநாயக்க, அதிபூஜ்ய ஹேனேபொல சிறி சுமங்கல திஸ்ஸாபிதான தேரரின் இறுதிச் சடங்குகள் நேற்றைய தினம் (ஆகஸ்ட் 02) மாபெரும் மக்கள் அலைக்கு மத்தியில் அரசாங்க மரியாதைகளுடன் இடம்பெற்றன. மாதம்பே – கருக்கமுவ சுகதானந்த வித்தியாலய மைதானத்திற்குத் திரண்ட ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீருக்கும் சோகத்திற்கும் மத்தியில் தேரரின் திருவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

1959 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் திகதி மாதம்பே – ஹேனபொல கிராமத்தில் பிறந்த இவர், 1975 ஆம் ஆண்டு துறவற வாழ்க்கை பயணத்தைத் தொடங்கினார். மாரவில – ஹால்பன்வில ஸ்ரீ ஞானோதய பிரிவேனாவில் உயர்கல்வியைக் கற்று, 1981 இல் சீதுவ – மூகலன்கமுவ சீமாலக்கயில் உபசம்பதா நிலையை அடைந்தார். இதன்பின்னர், மாதம்பே மற்றும் அதனைச் சுற்றியுள்ள பௌத்த விகாரைகளின் விகாராதிபதியாகப் பொறுப்பேற்று, அப்பகுதி மக்களின் ஆன்மீகத் தேவைகளை முன்னின்று பூர்த்தி செய்யத் தொடங்கினார்.

தேரரின் சமூக மற்றும் மதச் சேவைகளைப் பாராட்டி, 1995 இல் அமரபுர மகா நிகாயவின் வடமேல் மாகாண உப பிரதான சங்கநாயகவியாகப் உயர்த்தப்பட்டார். தொடர்ந்து 2021 ஒக்டோபர் 19 அன்று அமரபுர மகா நிகாயவின் ‘அனுநாயக்க’ என்ற உயரிய பதவிக்கு நியமிக்கப்பட்டார். மாதம்பே சாசனாரக்ஷக்க பலமண்டலத்தின் செயலாளராகவும், கலாச்சார மையத்தின் தலைமை ஆலோசகராகவும் அப்பகுதியின் மறுமலர்ச்சிக்குத் தொடர்ச்சியாகப் பங்காற்றி வந்தார்.

திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த ஆசாட பௌர்ணமி (எசல போயா) தினத்தன்று மாதம்பே – கருக்கமுவ ஸ்ரீ சுபோதாராம விகாரையில் வைத்து தேரர் இயற்கையெய்தினார். இச்செய்தி வெளியானதைத் தொடர்ந்து, அப்பகுதி முழுவதிலும் சோக அலை வீசியதுடன், தேரருக்கு மரியாதை செலுத்த நாடளாவிய ரீதியில் மக்கள் வரத் தொடங்கினர்.

நேற்றைய இறுதி நிகழ்வில், அமரபுர மகா நிகாயவின் மகாநாயக்க அதிபூஜ்ய மாதம்பாகம அஸ்ஸஜி தேரர், சிரேஷ்ட பேராசிரியர் கந்தேகொட விமலதம்ம தேரர், நாகதீப ராஜமகா விகாராதிபதி நவதகல பதுமக hisமி உள்ளிட்ட மகா சங்கத்தினரும், கத்தோலிக்க மதத் தலைவர்களும் பங்கேற்றனர். மேலும், ராஜாங்க நிர்வாக அமைச்சர் கலாநிதி சந்தன அபேரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணி விஜேசிங்க, புத்தளம் மற்றும் களுத்துறை மாவட்டச் செயலாளர்கள் உட்படப் பல அரச அதிகாரிகளும், பொதுமக்களும் திரண்டு அஞ்சலி செலுத்தினர். ஸ்ரீ சுபோதாராம விகாரையிலிருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட தேரரின் திருவுடல், பூரண அரசாங்க மரியாதைகளுடன் தகனம் செய்யப்பட்டது.

யாழில் வரலாற்று சிறப்புமிக்க ஜும்ஆ பள்ளிவாசல் மீள்கட்டுமானம் ஆரம்பம்!

0

யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க அடையாளங்களில் ஒன்றான மண்கும்பான் வெள்ளக்கடற்கரை ஜும்ஆ பள்ளிவாசல், தனது புதிய அத்தியாயத்தை இன்று வெகுவிமர்சையாகத் தொடங்கியுள்ளது!

நீண்டகால எதிர்பார்ப்புக்குப் பின்னர், இப்பள்ளிவாசலின் மீள்கட்டுமானப் பணிகள் மற்றும் அடிக்கல் நாட்டு விழா, இன்று (02.08.2026) ஞாயிற்றுக்கிழமை பள்ளிவாசல் வளாகத்தில் உணர்வுப்பூர்வமாக நடைபெற்று முடிந்துள்ளது.

ஆன்மீக ஒளியோடு ஆரம்பமான இந்நிகழ்வு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் (யாழ், கிளிநொச்சி கிளை) தலைவர் மௌலவி ஏ.எம். அப்துல் அஸீஸ் (காஸிமி) அவர்களின் மனதை உருக்கும் புனித கிராஅத் ஓதலுடன் முறைப்படி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, பள்ளிவாசலின் பொருளாளர் அல்ஹாஜ் எஸ்.எச்.எம். நியாஸ் தலைமறை உரை ஆற்ற, அந்த அரங்கம் முழுவதும் ஒரு புதிய எதிர்பார்ப்பின் அலை வீசியது.

இந்நிகழ்வுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில், சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் பிரதியமைச்சர் சகோதரர் முனீர் முலஃபர் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் சிறப்புப் பிரதிநிதியாக, ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன் அவர்கள் கலந்துகொண்டு தமது பங்களிப்பை வழங்கினார்.

ஆனால், இந்த நிகழ்வின் மிகச் சிறப்புமிக்க தருணம் எது தெரியுமா?

இங்கு நிலவிய மத நல்லிணக்கமும் சகோதரத்துவமும்தான்! மண்கும்பான் கிராம அபிவிருத்திச் சங்கச் செயலாளர் அ. அன்டன் ஜேசுதாசன் அவர்கள், கிராம மட்டத் தமிழ் பிரதிநிதியாக மேடையேறி உரையாற்றியபோது, அங்கிருந்த மக்களிடையே ஒரு நெகிழ்ச்சியான கட்டமைப்பு உருவானது. தமிழ் – முஸ்லிம் மக்களின் ஒற்றுமைக்கு இந்த மீள்கட்டுமானப் பணி ஒரு பலமான பாலமாக அமையும் என்பதை அவரது வார்த்தைகள் பறைசாற்றின.

இவர்களுடன் இணைந்து, அரசியல் மற்றும் நிர்வாகத் தளங்களின் முக்கிய தலைவர்களும் ஒரே கூரையின் கீழ் திரண்டிருந்தனர். யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெ.றஜீவன், க. இளங்குமரன், புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம்.பைசல், வேலனை பிரதேச சபைத் தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் மற்றும் வேலனை பிரதேச செயலாளர் த. அகிலன் ஆகியோர் நிகழ்வை சிறப்பித்தனர்.

மட்டுமன்றி, பள்ளிவாசல் நிர்வாகத்தினர், கட்டுமானக் குழுவினர், அரச அதிகாரிகள், பொலிஸ் மற்றும் முப்படை அதிகாரிகள் என பலதரப்பட்ட முக்கியஸ்தர்களுடன், அப்பகுதிவாழ் மக்களும் திரளாகக் கலந்துகொண்டு இந்த வரலாற்றுத் தருணத்திற்குச் சாட்சியாக அமைந்தனர். இந்த அடிக்கல் நாட்டு விழா, வெறும் ஒரு கட்டிடத்திற்கான தொடக்கம் மட்டுமல்ல; அது பிரதேசத்தின் கலாசார மற்றும் நல்லிணக்கத்தின் புதிய விடியல்!

கற்பிட்டி பத்தலங்குண்டு பகுதியில் கரைஒதுங்கிய சடலமும் பீடி மூட்டைகளும்!

0

கற்பிட்டி கடல் பரப்பு நேற்றைய தினம் (01) வழக்கத்திற்கு மாறாகக் கொந்தளிப்பாகக் காணப்பட்டது. அந்தச் சீற்றமடைந்த அலைகளுக்கு நடுவே, சட்டவிரோதமான முறையில் பெருந்தொகையான பீடி இலை மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த படகொன்று இலங்கையை நோக்கி இரகசியமாக நகர்ந்துகொண்டிருந்தது. ஆனால், அந்த நள்ளிரவுப் பயணம் தங்களுக்கு மரணப் பொறியாக மாறும் என்பதைப் படகில் இருந்த இருவரும் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை!

பத்தலங்குண்டு தீவுக்குச் சமீபமாகப் படகு வந்துகொண்டிருந்தபோது, கொடூரமான காலநிலை காரணமாக எழுந்த இராட்சத அலை மோதி, படகு நொடிப் பொழுதில் கடலில் தலைகீழாகக் கவிழ்ந்தது.

சீறிப்பாய்ந்த அலைகள்: சடலமாகக் கரைஒதுங்கிய கடத்தல்காரர்!

படகு கவிழ்ந்ததைத் தொடர்ந்து, அதிலிருந்த இருவரும் அலறல் சத்தத்துடன் ஆழமான கடலுக்குள் தூக்கி வீசப்பட்டனர். சீற்றமடைந்த அலைகளுடன் போராட முடியாமல் ஒருவர் கடலுக்குள் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தச் சோக சம்பவத்தில் கற்பிட்டி – குரக்கன்ஹேனை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய கோபால் ரவீந்திர குமார் என்பவரே உயிரிழந்துள்ளார். கடலில் மூழ்கிய அவரது சடலம், பின்னர் பத்தலங்குண்டு தீவுக்கரையில் சடலமாகக் கரைஒதுங்கிய நிலையிலேயே கண்டெடுக்கப்பட்டது.

நடுக் கடலில் மரணப் போராட்டம்: நீந்தி கரையேறிய நபருக்குக் காத்திருந்த அதிர்ச்சி!

அதேவேளை, படகில் இருந்த மற்றைய நபர் மரணத்தின் பிடியிலிருந்து தப்பிக்கக் கடலில் கடுமையாக நீந்தியுள்ளார். பல மணிநேர போராட்டத்திற்குப் பிறகு, அவர் எப்படியோ பத்தலங்குண்டு தீவின் கரையை வந்தடைந்தார்.

உயிர்தப்பி வந்த அவருக்கு நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள் அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது! சம்பவம் குறித்துத் தகவலறிந்த கற்பிட்டி பொலிஸார், கரைஒதுங்கிய அந்த நபரை உடனடியாகச் சுற்றி வளைத்து அதிரடியாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரும் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவரென தெரியவந்துள்ளது.

தீவு மக்களிடம் சிக்கிய சாட்சியங்கள்: பொலிஸார் தீவிர விசாரணை!

விபத்துக்குள்ளான படகில் கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் அடங்கிய 5 பெரு மூட்டைகள் பத்தலங்குண்டு தீவின் கரையில் ஒதுங்கியுள்ளன. அவற்றை மீட்ட அப்பகுதி மீனவர்களும் பொதுமக்களும் உடனடியாகக் கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

சட்டவிரோதமாகக் கடல் வழியாகக் கொண்டுவரப்பட்ட இந்த பீடி இலைகள் எங்கிருந்து கடத்தப்பட்டன? இதன் பின்னணியில் உள்ள பிரதான புள்ளிகள் யார்? என்பது குறித்துக் கைது செய்யப்பட்ட நபரிடம் கற்பிட்டி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்னந்தோட்டத்தில் கவிழ்ந்த ட்ரெக்டர் – இளைஞர் பரிதாப பலி!

0

ஜுட் சமந்த

மாதம்பை – இஸ்ஸம்மடில்ல பகுதியில் அமைந்துள்ள தனியார் தென்னந்தோப்பொன்றில் நேற்றைய தினம் (01) மாலை 4.00 மணியளவில், பயிர்களுக்கு நீர் பாய்ச்சும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்த அந்த இளைஞன், அடுத்த சில நிமிடங்களில் தன் வாழ்நாள் முடிவுக்கு வரும் என்பதைச் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை.

நீர் போசர் (Bowser) பொருத்தப்பட்ட ட்ரெக்டரை இயக்கியபடி தென்னந்தோப்பின் பாதையில் பயணித்துக் கொண்டிருந்தபோது, நொடிப் பொழுதில் நிலமை தலைகீழாக மாறியது!

கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலுக்குள் கவிழ்ந்த போசர்!

தோட்டத்துப் பாதையில் இயங்கிக்கொண்டிருந்த அந்த ட்ரெக்டர், எதிர்பாராத விதமாகச் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த ஆழமான வாய்க்காலுக்குள் தூக்கி வீசப்பட்டுத் தலைகீழாகக் கவிழ்ந்தது. பாரிய போசர் இணைக்கப்பட்டிருந்ததால் ட்ரெக்டர் பலத்த சத்தத்துடன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்தக் கோர விபத்தில் ட்ரெக்டரைச் செலுத்திச் சென்ற இளைஞன், வாகனத்தின் அடியில் சிக்கி பலத்த காயங்களுக்கு உள்ளானார்.

அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த தோட்டத்தில் பணிபுரிந்த ஏனைய தொழிலாளர்கள் மற்றும் பகுதி மக்கள் உடனடியாகச் செயல்பட்டு, காயமடைந்த இளைஞனை மீட்டுச் சிலாபம் பொது வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர்.

வைத்தியர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்றப் போராடியபோதிலும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிரிழந்தது யார்? பொலிஸார் தீவிர விசாரணை!

இவ்விபத்தில் உயிரிழந்தவர் வனாத்தவில்லு – இஸ்மாயில்புர பகுதியைச் சேர்ந்த அங்கம்பொடிகே நிமேஷ் தாருக என்ற இளைஞர் என அடையாளங் காணப்பட்டுள்ளார்.

சொந்த ஊரிலிருந்து பணி நிமித்தம் மாதம்பைக்கு வந்த இடத்தில் இந்தச் சோகச் சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மாதம்பை பொலிஸார் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கான சரியான காரணம் இயந்திரக் கோளாறா அல்லது கவனயீனமா என்பது குறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.