Home Blog

நாகவில்லுவில் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ்வின் நினைவுதினம்!

பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று நாகவில்லுவில் இடம்பெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வு!

இலங்கை திருநாட்டில் பெளதீக ரீதியான பல வேலைத்திட்டங்களையும், இடம்பெயர்வு மற்றும் எல்லை நிர்ணயம் தொடர்பான பறந்துபட்ட அறிவினையும் கொண்டிருந்த எருக்கலம்பிட்டியை சேர்ந்த மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது வருட நினைவு தின நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

அந்த வகையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் நினைவுப் பேருரையும், புத்தக வெளியீடு நிகழ்வும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் ஏற்பாட்டில் நேற்று 25.08.2025 புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய அதிபர் ஜனாப் S.M. ஹுஸைமத் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், புத்தி ஜீவிகள் மற்றும் குடும்பத்தார்கள் கலந்தகொண்டமை விஷேட அம்சமாகும்.

சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் பொருளாளர் ஜனாப் ஏ.ஜி. அனீஸ் (Bsc.Agri) அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.

மேலும் இஸ்லாமிய கற்கை அறபு மொழிப் பீட, தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களினால் நூல் அறிமுக உரையும், நினைவுப் பேருரையும் மிகவும் உணர்வுபூர்வமாக நிகழ்த்தப்பட்டது.

கிழக்கு மற்றும் தென் கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பங்களிப்பு அளப்பெரியது என நினைவு கூறிய பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன், வடக்கில் ஏற்பட்ட யுத்தம் மற்றும் முஸ்லிம்களின் இடம்பெயர்வு குறித்து அதீத அக்கறையுடன் செயற்பட்ட மிக முக்கியமானவர் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்கள் எனவும் எடுத்துரைத்தார்.

வடக்கு முஸ்லிம்களின் இடம்பெயர்வு மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பில் அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களுடன் பலதரப்பட்ட கலந்துரையாடல்களை நடத்தி, சர்வதேசம் வரை இவ்விடயங்களை கொண்டுசென்ற மகான் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் என பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் தனது உரையில் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் புதல்வி சட்டத்தரணி எப்.சப்னா ஹஸ்புல்லாஹ் அவர்களினால் ஏற்புரை நிகழ்த்தப்பட்டதுடன், நூல் வெளியீடு நிகழ்வும் இடம்பெற்றது.

நூலின் முதற்பிரதியை ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தரும், புத்தளம் எருக்கலம்பிட்டி பள்ளிவாசல் நிர்வாக சபையின் முன்னாள் உறுப்பினருமான ஜனாப் ரஹ்மத்துல்லாஹ் (GS) அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

மேலும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் செயலாளர் ஜனாப் எஸ்.எச்.எம். றிஸ்னி அவர்களினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டதுடன், தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன், மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பாரியாருக்கும் நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில், பேராசிரியர்கள், கல்விமான்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், பாடசாலைச் சமூகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் குடும்பத்தார்கள் என பலரும் கலந்து சிறப்பித்ததுடன், ஈ நியூஸ் பெஸ்ட் ஊடக நிறுவனம் ஊடக அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரணிலுக்காக ஒன்று திரண்ட அரசியல் தலைவர்கள்!

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விசாரணை கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது, நாட்டின் அடிப்படை ஜனநாயக நிறுவனங்களின் வலிமை குறித்து கடுமையான கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் விளைவுகள் ஒரு தனிநபரின் அல்லது எந்தவொரு அரசியல் கட்சிகளின் தலைவிதியையும் விட, சமூகத்தின் உரிமைகளுக்கான பிரச்சினைகளை தோற்றிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் தலைவர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைகளை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது மற்றும் விளக்கமறியலை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து நடத்திய விசேட ஊடக சந்திப்பில் பங்கேற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரல முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் அறிக்கையை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

போர்த்துக்கல் அணி சாம்பியன் ஆனது!

0

‘நேஷன்ஸ் லீக்’ கால்பந்தில் போர்ச்சுகல் அணி சாம்பியன் ஆனது. பைனலில் ‘பெனால்டி ஷூட் அவுட்டில்’ 5-3 என ஸ்பெயினை வீழ்த்தியது.

ஐரோப்பிய கால்பந்து அணிகளுக்காக ‘நேஷன்ஸ் லீக்’ தொடர் நடத்தப்படுகிறது. மொத்தம் 54 அணிகள் பங்கேற்றன. நேற்று ஜெர்மனியின் முனிக் நகரில் நடந்த பைனலில், போர்ச்சுகல், நடப்பு யூரோ சாம்பியன் ஸ்பெயின் பலப்பரீட்சை நடத்தின. போட்டியின் 21வது நிமிடம் ஜுபிமெண்டி (ஸ்பெயின்), 26வது நிமிடம் மெண்டிஸ் (போர்ச்சுகல்) தலா ஒரு கோல் அடித்தனர். 45வது நிமிடம் மைக்கேல் ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் ஸ்பெயின் அணி 2-1 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் 61 வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். போர்ச்சுகல் அணிக்காக இவர் அடித்த 138வது கோல் இது. 90 நிமிட முடிவில் போட்டி 2-2 என சமன் ஆனது. அடுத்து நடந்த கூடுதல் நேரத்திலும் (30 நிமிடம்) இரு அணியும் கோல் அடிக்கவில்லை.

இதையடுத்து வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி ‘பெனால்டி ஷூட் அவுட்டுக்கு’ சென்றது. இரு அணிக்கும் தலா 5 வாய்ப்புகள் தரப்பட்டன. காயம் காரணமாக 88 வது நிமிடம் வெளியேறிய ரொனால்டோ, இதில் பங்கேற்கவில்லை.

முதல் 3 வாய்ப்பில் போர்ச்சுகலின் ராமோஸ், விடின்ஹா, பெர்ணான்டஸ் கோல் அடித்தனர். மறுபக்கம் ஸ்பெயின் தரப்பில் மெரினோ, பயேனா, இஸ்கோ கோல் அடிக்க 3-3 என ஆனது.

4வது வாய்ப்பில் மெண்டெஸ் (போர்ச்சுகல்) கோல் அடிக்க, ஸ்பெயினின் மோராட்டோ அடித்த பந்தை கோல் கீப்பர் டீகோ கோஸ்டா தடுத்து அசத்தினார்.

5வது வாய்ப்பில் நெவேஸ் கோல் அடித்தார். இதையடுத்து 5-3 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் ‘திரில்’ வெற்றி பெற்றது. 2019க்குப் பின் இத்தொடரில் மீண்டும் சாம்பியன் ஆனது.

தில்லையடியில் சிக்கிய கடத்தல் பீடி இலைகள்!

0

புத்தளத்தில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளுடன் வேன் ஒன்றும் பறிமுதல்!

இலங்கை கடற்படை, பொலிஸாருடன் இணைந்து, புத்தளம், தில்லையடி பகுதியில் 2025 ஜூன் 05 இரவு வேளையில் நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகள் கொண்ட ஒரு வேன் கைப்பற்றப்பட்டது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிறுவனம், புத்தளம் பொலிஸாருடன் இணைந்து தில்லையடி பகுதியில் நடத்திய இந்த சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்று சோதனை செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகளானது வாகனத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் வேன் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களால் ஆபத்தா?

விண்வெளியில் பூமியை சுற்றி வந்துக்கொண்டிருக்கும் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கொள்களை சீனா நினைத்தால் வெறும் 12 மணி நேரத்தில் தாக்கி அழித்துவிட முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் என்கிற செய்தி ஊடகத்தில் இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது தற்போது சீனா 99 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. இவை அனைத்தும் நான்ஜிங் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஆஸ்ட்ரோனாட்டிக்ஸ் பல்கலைக்கழகத்தின் விண்வெளிக் கட்டுப்பாட்டுத் துறையின் இயக்குநர் வூ யுன்ஹுவா தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இவை அனைத்தும் எலான் மஸ்கின் 1400 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை வெறும் 12 மணி நேரத்தில் காலி செய்துவிடும். சீன செயற்கைக்கோளில் லேசர், நுண் அலைகளை உருவாக்கும் கருவி, உளவு கருவிகள் பொருத்தப்பட்டிருக்கலாம். ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் வெறுமென நெட்வொர்க் கொடுக்க மட்டுமே பயன்படுத்தப்படுவதில்லை. தவிர, ராணுவ நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது என சீனா குற்றம்சாட்டி வருகிறது.

அதாவது, உக்ரைன்-ரஷ்யா போரில், உக்ரைன் படைகளுக்கு தகவல்கள் கொடுக்கவும், ரஷ்ய எல்லையை துல்லியமாக கண்காணிக்கவும் இந்த செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த 2022ம் ஆண்டு ரஷ்ய போரின்போது அப்போதைய உக்ரைனின் துணைப் பிரதமரான மைக்கைலோ ஃபெடோரோவ், “ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் சேவையை உடனடியாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த மஸ்க், “உடனடியாக சேவை வழங்கப்படும்” என்று கூறியிருந்தார்.

உக்ரைன் போருடன் மட்டுமே ஸ்டார்லிங்க் நிற்காது, நாளை சீனாவுக்கும்-தைவானுக்கும் பஞ்சாயது ஏற்பட்டால் அப்போதும், தைவானுக்கு சப்போர்ட் செய்ய ஸ்டார்லிங்க் வரும். எனவே இந்த கூட்டு நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்க சீனா இந்த புதிய செயற்கைக்கோள்களை உருவாக்கியிருக்கிறது.

கடந்த 2023ம் ஆண்டு இதற்கான பணிகளை சீனா தொடங்கியது. இந்த திட்டத்திற்கு ‘கியான்ஃபான் மெகா-விண்மீன் திட்டம்’ (Qianfan mega-constellation project) என்றும் பெயரிட்டிருந்தது. நோக்கம் உலகம் முழுவதும் இணைய தொடர்பை வழங்குவதாகும். இதற்காக மொத்தம் 15,000 சிறிய ரக செயற்கைக்கோள்களை ஏவ சீனா முடிவெடுத்தது. இதன் முதல் தொகுப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏவப்பட்டது. இதில் 18 செயற்கைக்கோள்கள் இருந்தன.

ஒவ்வொன்றும் சுமார் 300 கி.கி எடையில் இருந்தது. இவை பூமியிலிருந்து 800 கி.மீ உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டது. இதேபோன்று 2024 டிசம்பரில் அடுத்து இரண்டு தொகுதி ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. தற்போது மொத்தம் 99 செயற்கைக்கோள்கள் விண்வெளியில் இருக்கின்றன. 15,000 செயற்கைக்கோள்களை 3 கட்டங்களாக ஏவ இருக்கிறது. முதல் கட்டத்தில் 1,296 செயற்கைக்கோள்கள் ஏவப்படும். இதில் 648 செயற்கைக்கோள்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஏவப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் கன்னி உரை

0

அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்புவோம்

தேசியத்துவத்துடனும் ஐக்கியத்துடனும் ஒன்றுபட்டு நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க இன்று (23) காலை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

பதவிப் பிரமாணத்தின் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய முழுமையான உரை:

மக்களால் ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது நமது நாட்டின் ஜனநாயகத்திலிருக்கும் மிக முக்கியமான அம்சமாகும். தேர்தலில் வாக்களித்தல் மற்றும் ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதோடு ஜனநாயகம் நிறைவு பெறுவதில்லை. இது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சம் என்றாலும், நம் நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்த, கட்டமைப்புகளின் வலிமையும், சட்டங்களை வலுப்படுத்துவதும் அவசியம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனவே, எனது பதவிக்காலத்தில் இந்த நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.

அத்துடன், இந்த நாட்டில் ஜனநாயக முறையில் அதிகாரப் பரிமாற்றம் நடந்த வரலாறும் உண்டு. தேர்தலில் நிகழும் அதிகாரப் பரிமாற்றத்தை எந்தத் தலைவரும் நிராகரித்ததில்லை. அதற்கமைய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த மக்கள்ஆணையை சுமூகமாக ஏற்றுக்கொண்டதுடன், ஜனநாயக ரீதியில் அதிகாரத்தை கைமாற்றுவதற்கான அவரின் அர்ப்பணிப்பிற்கும் முன்னுதாரணத்திற்கும் நன்றி தெரிவிக்கிறேன். மேலும் எமக்கு கிடைப்பது மிகவும் சவால் நிறைந்த நாடு என்பதை நன்கு புரிந்து கொண்டிருக்கிறோம். நமது அரசியலில் தூய்மையான, மக்களால் எதிர்பார்க்கப்படும் சிறந்த அரசியல் கலாசாரத்திற்காக அவசியம் காணப்படுகிறது.அதற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

நம் நாட்டின் அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு நல்லெண்ணம் இல்லை. எனவே, அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் மீது மக்கள் மரியாதை மற்றும் நம்பிக்கையை மீட்டெடுக்க எங்கள் தரப்பிலிருந்து முடிந்த அனைத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.

மேலும், நமக்கு முன் இருக்கும் இந்த ஆழமான நெருக்கடியை வெறும் அரசோ, வெறும் அரசியல் கட்சியோ அல்லது ஒரு தனி நபரோ மட்டும் தீர்க்க முடியும் என்று நாங்கள் நம்பவில்லை. ஏனென்றால், நான் முன்பு கூறியது போல், நான் ஒரு மாயாஜால வித்தைக்காரனல்ல. நான் மந்திரவாதியும் இல்லை. நான் இந்த நாட்டின் சாதாரண குடிமகன். எம்மிடம் திறமைகள் உள்ளன. இயலாமைகளும் உள்ளன. தெரிந்த விடயங்களும் உள்ளன அதேபோன்று, தெரியாத விடயங்களும் உள்ளன.

ஆனால் திறமைகளைப் பயன்படுத்தி தெரியாதவற்றை சேகரித்துக்கொண்டு சிறந்த முடிவுகளை எடுத்து இந்த நாட்டை வழிநடத்துவதே எனது தலையாய பணியாகும். அந்த கூட்டுப் பங்களிப்பின் ஒரு அங்கமாக மாறுவது எனது பொறுப்பாகும். மேலும், இந்த நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதில் பொது மக்கள் மற்றும் அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் பாரிய பொறுப்பு உள்ளது. அந்தப் பொறுப்பை நிறைவேற்ற அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்.

ஆனால், நாட்டின் ஜனாதிபதி என்ற முறையில், இந்தப் பணியை முன்னின்று நடத்துவதில் எனக்கு முதன்மையான மற்றும் மிக முக்கியமான பொறுப்பு இருப்பதை நான் ஏற்றுக்கொண்டேன். எனவே, இந்தச் சவாலை வெற்றிகொள்வதற்காக எனக்குக் வழங்கப்பட்டுள்ள பணியை நான் உரிய முறையில் நிறைவேற்றுவேன் என்பதை செயற்பாடு மற்றும் நடைமுறை மூலம் எல்லா சந்தர்ப்பங்களிலும் இந்த நாட்டின் பிரஜைகளுக்கு வெளிப்படுத்த நான் தயாராக இருக்கிறேன்.

மேலும் நமது நாட்டுக்கு சர்வதேச ஆதரவு தேவை. எனவே, உலகில் எத்தகைய அதிகாரப் பிளவுகள் இருந்தாலும், ஒவ்வொரு நாட்டையும் எமக்கு மிகவும் சாதகமாக கையாள்வதே நமது எதிர்பார்ப்பாகும். நாம் உலகில் தனிமைப்படுத்தப்பட்ட நாடு அல்ல. உலகத்துடன் கூட்டாக முன்னேற வேண்டிய ஒரு நாடாகும். அது தொடர்பில் தேவையான முடிவுகளை எடுக்க நாங்கள் சிறிதும் தயங்குவதில்லை.

மேலும், நம் நாட்டைக் கட்டியெழுப்புவதில் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு பெரும் பங்கு உள்ளது. எனவே, நாட்டை மேலும் வலுவாகக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு அவர்கள் ஆதரவளிப்பார்கள் என நான் கருதுகின்றேன்.

நம் நாட்டின் ஜனநாயகத்தின் ஊடாக நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். அதற்காக மக்கள் எனக்கு வாக்களித்தனர்.

மேலும் எனக்கு வழங்கப்படாத வாக்குகளும் உள்ளன. எனவே, எங்களின் வெற்றியின் உள்ளடக்கம் மற்றும் அளவு குறித்து எங்களுக்கு நல்ல புரிதல் உள்ளது. எனவே, எங்களுக்கு ஆதரவு வழங்காத மற்றும் எங்களை நம்பாத பிரஜைகளின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெறுவதே எனது நிர்வாகத்தின் போது எனக்கு வழங்கப்பட்டுள்ள பணியாகும். அந்தப் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

எதிர்காலத்தில் இவை அனைத்தையும் நீங்கள் நடைமுறையில் கண்டுகொள்ள முடியும். அதற்கு அனைத்து மக்களின் ஆதரவையும் எதிர்பார்க்கின்றேன்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தேர்தலில் இவ்வாறுதான் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்

0

அதிகாரிகள் மற்றும் பிற தேவைகள் முடிந்த பிறகு, மாலை 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (19) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி பிற்பகல் 4.15 மணிளவில் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“எதிர்வரும் 21ம் திகதி வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள் பெறப்பட்டதும், அதிகாரிகள் மற்றும் இதர தேவைகள் முடிந்ததும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் இரவு 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

மாலை 4.15 மணிளவில் தபால் மூல வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

அத்துடன் மாவட்ட அளவில் ஒவ்வொரு வட்டாரத்திலும் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெறும்.

வாக்கு எண்ணிக்கையின் முடிவில் முடிவுகள் கிடைத்தவுடன் ஊடகங்களுக்கு வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையே முதலில் எண்ணப்படும்.

அந்தக் கணக்கெடுப்பின் பின்னர் (மாவட்ட அளவில் எண்ணும் பணி) முதலில் வாக்குப்பெட்டிகளில் உள்ள வாக்குகள் எண்ணப்படும்.

அதன் பிறகு, ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு, தொகுதி மற்றும் மாவட்ட அளவில் அது தயாரிக்கப்படுகிறது.

தேர்தல்கள் செயலகமே ஒட்டுமொத்த முடிவுகளைக் கணக்கிடும்.

எந்த வேட்பாளரும் 50 வீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்றுள்ளாரா என சரிபார்க்கப்படும்.

அப்படியானால், அந்த நேரத்தில் வாக்கு எண்ணும் பணிகள் நிறுத்தப்படும்.

அப்போது ஜனாதிபதியை நாங்கள் அறிவிப்போம்.

எந்த வேட்பாளருக்கும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் கிடைக்காவிடின், விருப்பு வாக்கு எண்ணிக்கைக்கு செல்ல வேண்டும்.

அங்கு, அதிக வாக்குகள் பெற்ற இரண்டு வேட்பாளர்கள் போட்டியில் வைத்து விட்டு  மீதமுள்ள 36 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து நீக்கப்படுவர்” என்றார்.

புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக மாறும்

0

புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வாத்தியாசலையாக மாற்றம் பெரும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று புத்தளத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ அலிசப்ரி ரஹீம் மற்றும் சிந்தக்க மாயாதுன்ன தலைமையில் புத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்திலே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

புத்தளம் மக்களின் நீண்ட நாள் தேவையாக இருந்து வருகின்ற புத்தளம் தல வைத்தியசாலையை தரமுயர்த்துவது தொடர்பாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ அலிசப்ரி ரஹீம் அவர்களினால் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோலுக்கிணங்க குறித்த வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.

மேலும் புத்தளத்தில் மீன் பிடி தொழிலை முன்னேற்றும் நோக்கத்தில் மீன் பிடி துறைமுகம் ஒன்றை அமைக்கும் யோசனையும் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டதுடன், அதற்கான முன்னெடுப்புகளும் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்டமை புத்தளம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நாட்டில் நிரந்தர பொருளாதார அபிவிருத்தியை நிலை நாட்ட தாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டை பொருளாதார அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவதே தனது பிரதான நோக்கம் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மொட்டுக்கட்சிக்கு எதிராக நிற்கும் முக்கிய அமைச்சர்கள்

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக மொட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளரை இந்த வாரம் அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்காதிருக்கவும், மொட்டு சின்னத்தில் தனியாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமக்கு ஆதரவு வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பியிருந்த கடிதம் நேற்றைய தினம் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தினால் அரசியல் குழுவில் முன்வைக்கப்பட்டது.

எவ்வாறாயினும் அந்த கடிதத்தை நிராகரிக்க அரசியல் குழுக் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுவில் 82 பேர் அங்கம் வகிப்பதுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் 72 பேர் பங்கேற்றனர்.

இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த 11 பேர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

மஹிந்தானந்த அலுத்கமகே, பந்துல குணவர்தன, பிரதீப் உந்துகொட, கோகிலா ஹர்ஷனி குணவர்தன, சஹன் பிரதீப், ரமேஸ் பத்திரன, கஞ்சன விஜேசேகர, பிரசன்ன ரணதுங்க, கனக ஹேரத், மொஹான் பிரியதர்ஷன ஆகியோர் கட்சியின் சார்பில் தனியான வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

அத்துடன் பிறிதொரு கட்சியின் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்கும் உறுப்பினர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் யோசனைக்கு 6 பேர் எதிராக வாக்களித்துள்ளனர்.

எவ்வாறாயினும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் எனக் கூறப்பட்ட தம்மிக பெரேரா தொடர்பில் அரசியல் குழுக் கூட்டத்தின்போது எந்தவித கருத்துக்களும் பரிமாற்றிக் கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவளிக்காத 11 பேர் உள்ளிட்ட தரப்பினர் நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தனவின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சைனப் ஆரம்பப் பாடசாலைக்கு ஆளுநர் வருகை!

0

புத்தளம் சைனப் ஆரம்ப பாடசாலையின் முப்பெரும் விழா பாடசாலை அதிபர் யஹியா தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து புத்தளம் ஜெய்னப் பாடசாலைக்கு 22 லட்சம் ரூபா பெறுமதியான நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு, சிறுவர் விளையாட்டு நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தல் மற்றும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் செயற்திட்டத்தின் கீழ் BCMH நிறுவனத்தினால் கற்றல் உபகரணம் வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் கடந்த செவ்வாய்க்கிழமை (16) வெகு விமர்சையாக இடம்பெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதியாக வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், விசேட அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மற்றும் கௌரவ அதிதியாக புத்தளம் வலயக்கல்விப் பணிப்பாளர் அர்ஜுன ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆரம்ப பாடசாலையின் முக்கியத்துவம் மற்றும் அறிவார்ந்த சமூகத்தை கட்டியெழுப்ப ஆரம்ப பாடசாலை ஆற்றிவருகின்ற அர்ப்பணிப்பு குறித்து விரிவாக பேசிய வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், புத்தளம் மாவட்ட பாடசாலைகளின் துரித வளர்ச்சி பற்றியும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

மேலும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் செயற்திட்டத்திற்கு வடமேல் மாகாண ஆளுநர் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் ஜவ்ஷி ஜமால்தின், இணைப்புச் செயலாளர் எச். அமீர் அலி ஆசிரியர், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் உட்பட உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் அயல் பாடசாலையின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு
நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு

ஹிருணிகாவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறை

0

கடத்தல் வழக்கில் முன்னாள் எம்.பி ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்தத் தீர்ப்பை அறிவித்தார்.

தெமட்டகொட பகுதியிலுள்ள கடை ஒன்றில் பணிபுரிந்த அமில பிரியந்த அமரசிங்க எனும் இளைஞர் ஒருவரை 2015 டிசம்பர் 21ஆம் திகதி ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு சொந்தமான டிபெண்டர் வாகனத்தில் கடத்திய வழக்கு விசாரணை முடிவில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

29 குற்றங்கள் தொடர்பில் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் 8 பேரும் குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில், அச்சம்பத்திற்கு உதவி, ஒத்தாசை புரிந்ததாக ஹிருணிகா மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்திருந்தார்.

அத்தோடு, சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவின் ஆதரவாளர்கள் 8 பேர் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைதான ஐந்தாம் சந்தேகநபரின் மகள் அளித்துள்ள வாக்குமூலத்தில், தமது தாயாருடன் தொடர்பு பேணிய நபர் ஒருவரை தாம் காண்பித்ததாகவும், அவரை தமது தந்தையும் அவருடன் சென்றவர்களும் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு ஹிருணிகாவிடம் அழைத்துச் சென்றதாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

ஓவியப்போட்டியில் எருக்கலம்பிட்டி மாணவன் முதலாமிடம்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட வட மாகாண மானவர்களுக்கிடையிலான சித்திரப்போட்டியில் மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்றார்.

வீதி விபத்துக்கள் இல்லாத நாளைக்கான பாடசாலையிலிருந்து அணிவக்குப்போம் எனும் தொனிப்பொருளில் கடந்த வியாழக்கிழமை (13.06.2024) அன்று நடாத்தப்பட்ட வட மாகாண மாணவர்களுக்கிடையிலான குறித்த சித்திரப்போட்டியில் சுமார் 2600 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

சித்திரப்போட்டியில் பங்குபற்றிய 2600 மாணவர்களில் 250 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு நேற்றைய தினம் (15.06.2024) அவர்களுக்கான போட்டி இடம்பெற்றது.

நடைபெற்று முடிந்த இறுதிச் சுற்றுப்போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்று பெருமதிமிக்க பரிசில்களை பெற்றுக்கொண்டார்.

முதலாம் இடம் பெற்ற முஹம்மது ஹுசைன் என்ற மாணவனுக்கு சான்றிதல், துவிச்சக்கரவண்டி மற்றும் 8500/- ரூபா பெறுமதியான வவுச்சரும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இதேவேளை குறித்த போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய இல்முதீன் முஹம்மது ஹஸ்பான் 7 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய மற்றொரு மாணவரான முஹம்மது சம்ஹான் 8 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

பாரிய சாவல்களுக்கு மத்தியில் தனி ஒரு மனிதனாக இம் மாணாவர்களை ஊக்கப்படுத்தி, தயார்ப்படுத்தி போட்டியில் பங்குபெறச் செய்து வெற்றிபெறச் செய்த எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியின் சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் அவர்களின் இம் முயற்சிக்கு, பாடசாலை சமூகம் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் நன்றி தெரிவித்தனர்.

தமக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வந்து தேசிய அளவில் இடம்பெறும் போட்டிகளில் மாணவர்களை பங்குபெறச் செய்வதே தனது இலக்கு என சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் எமது ஊடகத்திற்கு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

புத்தளம் எருக்கலம்பிட்டியில் கடும் வெள்ளம்

0

புத்தளம் பகுதியில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக புத்தளம் பகுதி முழுதும் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.

புத்தளம், தில்லையடி, பாலாவி, புத்தளம் எருக்கலம்பிட்டி, ஹிதாயத் நகர்,  மதுரங்குளி மற்றும் ஏனைய பல கிராமங்களும் வெள்ளித்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமமும் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 1500 குடும்பங்கள் இங்கு வாழ்ந்துவருவதுடன், அனைத்து வீடுகளும் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நூற்றிற்கும் அதிகமான வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் ஐநூற்றுக்கும் அதிகமான வீடுகள் பகுதி அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8ஆம் திகதி ஏற்பட்ட மழை வெள்ளித்தினால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் மற்றும் பாடசாலைகளில் தற்காலிகமாக  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு தினங்களாக இவர்களுக்கான சமைத்த உணவுகள் மூன்று வேலைகளிலும் ஊர் தனவந்தர்களின் உதவியுடனும், பள்ளிவாசல் நிர்வாக சபையின் வழிகாட்டலுடனும் வழங்கப்பட்டு வருவதுடன், ஊர் மக்களுக்கும் உணவு விநியோகங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

இவர்களுக்கான நிவாரண உதவிகள் இதுவரை அரசாங்கத்தினால் வழங்கப்படாத போதிலும், ஊர் மக்களின் பங்களிப்புடன் மாத்திரமே பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு விநியோகங்கள் இதுவரை  வழங்கப்பட்டு வருகின்றது.

புத்தளம் பொத்துவில்லு பகுதியில் உள்ள குளம் மழை நீரினால்  பெருக்கெடுத்துள்ளதால் குறித்த குளத்து நீர் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமத்திற்குள் தொடர்ந்தும் மூன்றாவது நாளாக ஊடறுத்து செல்வதால் வீடுகள் தொடர்ந்தும் நீருள் மூழ்கியுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்தின் நிவாரண உதவிக்காக பல மக்கள் தொடர்ந்தும் எதிர்பார்த்து காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

புத்தளம் – சிலாபம் வீதியில் அதிசொகுசு ஜீப்பில் கஞ்சா வேட்டை!

0

ஜுட் சமந்த

புத்தளம் – சிலாபம் பிரதான வீதியில் நள்ளிரவில் சீறிப்பாய்ந்து வந்த அந்த அதிசொகுசு ஜீப் வண்டியைப் பார்த்தபோது, அதற்குள் இவ்வளவு பெரிய சட்டவிரோத ரகசியம் ஒளிந்திருக்கும் என்று பொலிஸார் கூட ஆரம்பத்தில் ஊகிக்கவில்லை. வழக்கமான வீதித் தடை சோதனையின் போது நடந்த அந்த ஒரு கணப்பொழுதுச் சோதனை, மிகப்பெரிய கஞ்சா கடத்தல் கும்பலின் சதியை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.

ஆகஸ்ட் 09ஆம் திகதி இரவோடு இரவாக பத்துப்ளுஓய பொலிஸ் வீதித் தடையில் ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் போக்குவரத்துப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் கொன்ஸ்டபிள்களான கோனார (73916) மற்றும் மேதிஸ் (78293) ஆகியோர் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த சொகுசு ஜீப்பை மறித்துச் பரிசோதித்தபோது, பொலிஸாரே அதிர்ந்துபோயினர். அந்த வாகனத்தினுள் மிகவும் நுட்பமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 17 கிலோகிராமும் 985 மில்லிகிராமும் கொண்ட பெருந்தொகை கஞ்சா மீட்கப்பட்டது.

வாகனத்தை ஓட்டிவந்த 24 வயதுடைய இளைஞனும், அவருடன் பயணித்த 23 வயதுடைய இளம் பெண்ணும் தம்பதிகள் என்பது விசாரணையில் தெரியவந்தது. மொணராகலை – ஹம்பேகமுவ பகுதியைச் சேர்ந்த கணவனும், இராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த மனைவியும் திருமணத்திற்குப் பிறகு இருவரது வீடுகளிலும் மாறி மாறி வசித்து வந்தவாறே இந்த சட்டவிரோத கஞ்சா வியாபாரத்தை ஜோடியாக முன்னெடுத்து வந்துள்ளனர்.

ஆனால், உண்மையான திருப்பம் கஞ்சா பிடிபட்டதற்குப் பிறகுதான் நடந்தது! கைதிலிருந்து எப்படியாவது தப்பித்துவிட வேண்டும் என்று திட்டமிட்ட அந்த இளம் ஜோடி, சோதனையிட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு உடனடியாக 1 லட்சம் ரூபாயை லஞ்சமாகக் கொடுக்க முன்வந்தது. பொலிஸார் அதற்கு அசையாததால், நொடிப் பொழுதில் லஞ்சத் தொகையை 5 லட்சம் ரூபாய் (ரூ. 500,000) ஆக உயர்த்தினர். “பணத்தை பெற்றுக்கொண்டு எங்களை விட்டுவிடுங்கள்” எனக் கெஞ்சியுள்ளனர்.

ஆனாலும், அந்த இளம் ஜோடியின் பல லட்சம் ரூபாய் ஆசை வார்த்தைகளுக்கு ஆளாகாத ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் அதிகாரிகள், நேர்மையுடன் செயற்பட்டு லஞ்சத்தை முற்றாக நிராகரித்தனர். உடனடியாக கணவன், மனைவி இருவரையும் கைது செய்ததோடு, கைப்பற்றப்பட்ட 17 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா மற்றும் அதிசொகுசு ஜீப் வண்டியையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முந்தல் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தீர்ப்பு குறித்து கார்டினல் ரஞ்சித் ஆண்டகை அதிரடி அறிக்கை!

0

2019ஆம் ஆண்டு நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தற்போது மிக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளன. இத்தாக்குதலின் போது கடமைகளைத் தவறவிட்ட குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோருக்கு நீதிமன்றினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட செய்தி நாடு முழுவதும் கடும் விவாதங்களை தோற்றுவித்திருந்தது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில்தான், கொழும்பு பேராயர் மேல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை தனது நிலைப்பாட்டை மிகவும் தெளிவான முறையில் வெளிப்படுத்தியுள்ளார். கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வித் தொகுப்பின் 2267வது பத்தியை மேற்கோள் காட்டிப் பேசிய அவர், எந்தவொரு சூழ்நிலையிலும் மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை ஆணித்தரமாகக் கூறியுள்ளார்.

மரண தண்டனையானது மனிதனின் அடிப்படை கண்ணியத்தையே முற்றாக மீறும் ஒரு செயல் சுட்டிக்காட்டிய கார்டினல் ஆண்டகை, திருச்சபையின் போதனைகளுக்கு அமைவாக எந்தவொரு நபருக்கும் மரண தண்டனை வழங்குவதை ஆதரிக்க முடியாது எனத் தெரிவித்தார். பேராயரின் இந்த அறிவிப்பானது, வழக்கை உற்றுநோக்கிக் கொண்டிருந்த பொதுமக்களிடையே புதியதொரு உரையாடலைத் தோற்றுவித்துள்ளது.

அதேவேளை, நாட்டின் சட்டக் கட்டமைப்பு குறித்த தனது நிலைப்பாட்டையும் கொழும்பு பேராயர் இல்லம் தெளிவாகக் கோடிட்டுக் காட்டியுள்ளது. இலங்கை நீதிமன்ற அமைப்பின் சுயாதீனத் தன்மை மீது தாம் முழுமையான நம்பிக்கையைக் கொண்டிருப்பதாகவும், நீதிமன்றின் தீர்மானங்களிலோ அல்லது நடைபெற்று வரும் விவாதங்களிலோ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தலையிடும் உத்தேசம் தமக்கு இல்லை என்றும் பேராயர் இல்லம் சுட்டிக்காட்டியுள்ளது.

இருப்பினும், இந்த விவகாரத்தின் மிக முக்கிய கட்டம் இன்னும் முடிவடையவில்லை என்பதே பாதிக்கப்பட்ட மக்களின் கவலையாக உள்ளது. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களோடு தொடர்ந்து கைகோர்த்து நிற்கும் பேராயர் இல்லம், இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் மறைந்துள்ள உண்மையான சூத்திரதாரி அல்லது சூத்திரதாரிகள் யார் என்பதை வெளிக்கொணர்வதே முதன்மையான இலக்கு என வலியுறுத்தியுள்ளது. அனைத்துத் தரப்பினரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையான நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதில் பேராயர் இல்லம் உறுதியான எதிர்பார்ப்போடு இயங்கி வருகின்றது.

சிலாபம் வீதியில் போதையில் இரவு 10 மணிக்கு நடந்த கோர நாடகம்!

0

ஜுட் சமந்த

நிசப்தமான இரவில், ஆள் நடமாட்டம் குறைந்த அந்த வீதியில் வீசிய காற்று வெறும் சாதாரண காற்று அல்ல; அது ஒரு தொழிலதிபரின் உயிரைப் பறிக்கப் பார்த்த திகில் கணங்களின் தொடக்கம். கடந்த ஜூலை 26 ஆம் திகதி இரவு 10.00 மணியளவில் சிலாபம் – ஜெயபிம பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த தொழிலதிபர் இந்திக மனோஜ் பிரசன்ன குமாரவுக்கு, தன் முன்னால் சென்ற கார் ஒரு சாதாரண கார் அல்ல என்பது சட்டென்று புரிந்தது.

முன்னால் சென்ற காரில் இருந்தவர்கள் மது அருந்திக்கொண்டே அபாயகரமான முறையில் வாகனத்தை செலுத்தியதை அவதானித்த தொழிலதிபர், அவர்களை முந்திச் செல்ல முயன்றார். ஆனால், எதிர்பாராதவிதமாக இரு கார்களும் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகின. அந்த நொடியில் இருந்துதான் உண்மையான அச்சுறுத்தல் தொடங்கியது.

அச்சமயத்தில் தொழிலதிபரின் காரினுள் 11 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், விலையுயர்ந்த மாணிக்கக் கற்கள் மற்றும் அவரது பாதுகாப்புக்காக பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட தனிப்பட்ட கைத்துப்பாக்கி என்பன இருந்துள்ளன. விபத்து நடந்த கையோடு, வீதியில் நின்ற வேறு சிலருடன் சேர்ந்து கொண்ட அந்த மதுபோதைக் கும்பல், தொழிலதிபரைச் சுற்றி வளைத்து, கொடூரமாகத் தாக்கவும் வாகனத்திற்குச் சேதம் விளைவிக்கவும் முயன்றது.

வெளியே வந்தால் உயிர் ஆபத்து என்பதை உணர்ந்த தொழிலதிபர், பொலிஸார் வரும் வரை காரினுள்ளேயே பூட்டிக்கொண்டு, நடக்கும் அனைத்து வன்முறைகளையும் தன் கையடக்கத் தொலைபேசியில் வீடியோவாகப் பதிவு செய்தார். பொலிஸார் வந்ததும், மதுபோதையில் காரைச் செலுத்திய நபரைக் காப்பாற்ற வேறு ஒருவரைச் சாரதியாக மாற்ற அக்கும்பல் முயன்றது. ஆனால், தொழிலதிபரின் எதிர்ப்பால் அது முறியடிக்கப்பட்டு, பரிசோதனையில் அந்தச் சாரதி மது அருந்தியிருந்தது உறுதியானது.

ஆனால், உண்மையான அதிர்ச்சி அதன்பின்னர்தான் காத்திருந்தது. இரு தரப்பையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற சிலாபம் பொலிஸார், பாதிக்கப்பட்ட தொழிலதிபரை மட்டும் கூண்டில் அடைத்து மறுநாள் நீதிமன்றில் ஆஜர்படுத்தி பிணையில் அனுப்பியுள்ளனர். தனக்கு கொலை மிரட்டல் விடுத்து தாக்குதல் நடத்த முயன்ற நபர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காமல், சிலாபம் தலைமையக பொலிஸ் பரிசோதகர் எதிர்தரப்பிற்கு சாதகமாகச் செயற்படுவதாகக் குற்றம் சுமத்தியுள்ள தொழிலதிபர், இநீதிக்கு எதிராக தற்போது பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

“20 லட்சம் தா… இல்லாட்டி பிள்ளையின் தலையில் ரவை பாயும்!”

0

ஜுட் சமந்த

அமைதியாக நகர்ந்து கொண்டிருந்த அந்தப் பிற்பகல் வேளையில், வீட்டின் நிசப்தத்தைக் கலைத்து ஒலித்த தொலைபேசி மணி ஓசை, ஒரு தாயின் வாழ்க்கையையே உலுக்கிப் போடும் என்று அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மாரவில – மஹவெவ, அடப்பரகம பிரதேசத்தைச் சேர்ந்த பெத்தே லியனகே தொன் நதீரா சித்ரானி என்ற பெண்ணுக்கே இந்த கொடூர அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 08 ஆம் திகதி நண்பகல் 1.00 மணியளவில், அடையாளம் தெரியாத இலக்கம் ஒன்றில் இருந்து அந்த அழைப்பு வந்துள்ளது. மறுமுனையில் பேசிய நபர், எவ்வித தயக்கமுமின்றி நேரடியாக 20 லட்சம் ரூபாய் திறைப்பணத்தைக் கேட்டுள்ளார். பணம் தராவிட்டால், “உன் குழந்தையின் தலையிலேயே சுட்டுக் கொன்றுவிடுவேன்” என கொடூரமாக மிரட்டியுள்ளார்.

அத்துடன் நிறுத்திவிடாமல், அன்றைய தினம் முழுவதிலும் அதே இலக்கத்திலிருந்து மூன்று முறை தொடர்ச்சியாக அழைப்புகள் வந்து, அந்தப் பெண்ணை திகிலின் உச்சத்திற்கே கொண்டு சென்றுள்ளன. வெளிநாட்டில் பணிபுரியும் கணவர் அருகில் இல்லாத சூழலில், இரு சிறு பிள்ளைகளுடன் தனியாக வாழும் அந்தத் தாய், இந்த மிரட்டலால் மீள முடியாத அதிர்ச்சியிலும் பயத்திலும் உறைந்துபோயுள்ளார்.

தற்போது இச்சம்பவம் தொடர்பாக மாரவில பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். சம்பவம் குறித்து மாரவில நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், அச்சுறுத்தல் விடுக்க பயன்படுத்தப்பட்ட தொலைபேசி இலக்கம் தொடர்பான பகுப்பாய்வு அறிக்கையைப் பெற பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். சந்தேகநபரை வலைவீசித் தேடிவரும் பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

போதைக்கு எதிராக வீதியில் இறங்கி போராடிய மதுரங்குளிய மக்கள்!

0

கிராமத்தின் அமைதியைக் குலைத்து, இளம் தலைமுறையின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் அந்த “அறியப்படாத கரம்” எது?

நாளுக்கு நாள் அதிகரிக்கும் போதைப்பொருள் அபாயத்தால் அதிர்ந்துபோயுள்ள மதுரங்குளிய – முக்குத்தொடுவாவ மக்கள், இனி பொறுப்பதில் அர்த்தமில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர். தமது பிரதேசத்தைப் போதைப்பொருள் பிடியிலிருந்து மீட்டெடுக்கக் கோரி, வீதியில் இறங்கி மக்கள் நடத்திய போராட்டம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை (09) காலை மதுரங்குளிய – முக்குத்தொடுவாவ சந்தியில் திரண்ட பொதுமக்கள், கோஷங்களை எழுப்பித் தமது கோபத்தையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினர். முக்குத்தொடுவாவ, தொஸ்தரவத்த, வெல்லவத்த மற்றும் கஜுவத்த ஆகிய சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த பெரியோர்கள் முதல் இளைஞர்கள் வரை திரளாகப் பங்கேற்ற இப்போராட்டம், அப்பகுதியைச் சூடேற்றியது.

எவரும் எளிதில் அடையாளம் காண முடியாத வகையில் மறைமுகமாக இயங்கும் சக்திமிக்க போதைப்பொருள் கும்பலொன்று, இப்பகுதியின் இளைஞர்களை இலக்கு வைத்து இந்த விபரீத வலையை விரித்துள்ளது. நாள்தோறும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இந்தப் பழக்கத்திற்கு அடிமையாகி வருவதாகவும், தங்களின் பிள்ளைகளின் எதிர்காலம் தங்களது கண்முன்னே சீரழிவதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றும் மக்கள் கொதிப்படைந்தனர்.

போராட்டம் வலுப்பெற்ற நிலையில், கிராமத்துப் மக்களின் குரலுக்குப் பலம் சேர்க்கும் வகையில் மதத் தலைவர்களும் மக்கள் பிரதிநிதிகளும் நேரடியாகக் களத்தில் குதித்தனர். தொஸ்தரவத்த ஞானோதயாராம விகாராதிபதி வணக்கத்திற்குரிய வெலாசியே தமித்த தேரர், தொடுவாவ பங்குத்தந்தை தனுஷ்க பெர்னாண்டோ அடிகளார் ஆகியோருடன் பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் கிஹான் மற்றும் முகமட் பைசல் ஆகியோரும் போராட்டத்தில் பங்கெடுத்து மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

சட்டத்தை உடனடியாகக் கடுமையாக்கி, இந்த நாசகார போதைப்பொருள் வலையமைப்பை அடியோடு வீழ்த்த வேண்டும் என்பதே அனைவரது ஒரே கோரிக்கையாகும். அதிகாரிகளும் பொலிஸாரும் உடனடியாகச் தலையிட்டு, தமது பிள்ளைகளை இந்த பேரழிவிலிருந்து காப்பாற்றி, பிரதேசத்தில் அமைதியை ஏற்படுத்தாவிட்டால் போராட்டம் மேலும் தீவிரமடையும் என்ற எச்சரிக்கையுடன் ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது.

அதிரடி உத்தரவால் உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு திடீர் இடமாற்றம்!

0

பொலிஸ் உயர் மட்டத்தில் தூள் பறக்கும் மாற்றி யோசிப்பு! மாகாணங்களுக்குப் பொறுப்பான ‘பிக் பாஸ்களுக்கு’ விழுந்த அதிரடி சீட்டு

நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொலிஸ் நிர்வாகக் கட்டமைப்பில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், பொலிஸ் தலைமையகத்தினால் விடுக்கப்பட்டுள்ள உத்தரவு ஒன்று பொலிஸ் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் (SDIGs) மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் (ASPs) அடங்கலாகப் பல உயர் அதிகாரிகள் உடனடி அமலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த அதிரடி ஆட்டத்தின் முதலாவது நகர்வாக, சிறப்புப் பணியகத்தில் பணியாற்றி வந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சம்பத் குமார உடனடியாக கிழக்கு மாகாணத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். அதேபோல், இதுவரை தெற்கு மாகாணத்திற்குப் பொறுப்பாக இருந்து களம் கண்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜெயலத், சபரகமுவ மாகாணத்தின் புதிய பொலிஸ் தலைவராகப் பொறுப்பேற்கவுள்ளார்.

விஷயம் இதோடு முடியபோவதில்லை. சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் தலைவராகச் செயலாற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவிற்கு, பயிற்சி மற்றும் உயர்மட்டப் பயிற்சிகள் பிரிவின் பணிப்பாளர் என்ற கூடுதல் பொறுப்பு வழங்கி அவரது அதிகாரக் கரம் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம், வடக்கு மற்றும் தெற்கு மாகாணங்களின் பாதுகாப்பு வியூகங்களில் ஒரு சுவாரஷ்யமான “நாற்காலி ஆட்டம்” அரங்கேறியுள்ளது. சிறப்புப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே.பி. கருணரத்ன வடக்கு மாகாணத்திற்குப் பொறுப்பாக மாற்றப்பட, இதுவரை வடக்கை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் புத்திக சிறிவர்தன, அப்படியே தெற்கு மாகாணத்தின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிரேஷ்ட அதிகாரிகள் மட்டுமல்லாது, 6 உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களும் (ASPs) இந்த இடமாற்றப் பட்டியலில் சிக்கியுள்ளனர். இதில் காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளராகக் கடமையாற்றிய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நாமல் பெரேரா, பொலிஸ் களப்படைப் பிரிவுக்கு மாற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அதிரடி இடமாற்றங்கள் அனைத்தும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் (NPC) இறுதி அங்கீகாரத்திற்கு உட்பட்டே முறைப்படி அமல்படுத்தப்படும் என பொலிஸ் தலைமையகம் தெளிவுபடுத்தியுள்ளது.

சிறைகளுக்குள் சதி! கைதிகளை பகடைக்காய்களாக்க மாஸ்டர் பிளான்!

0

சிறைகளுக்குள் பாரிய சதி! கைதிகளை பகடைக்காய்களாக மாற்ற பிளான்: அம்பலப்படுத்துகிறது அரசாங்கம்

நாட்டின் பாதுகாப்பு மற்றும் சிறைச்சாலைகளின் அமைதியை குலைக்கும் வகையில் பின்னணியில் இருந்து இயங்கும் சில சுயநலவாதிகள், கைதிகளை தூண்டிவிட்டு பெரும் கலவரத்தை உருவாக்க சதித்திட்டம் தீட்டி வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தங்களின் குறுகிய அரசியல் மற்றும் தனிப்பட்ட நோக்கங்களுக்காக கைதிகளின் உணர்ச்சிகளை தூண்டிவிடும் இந்த அபாண்டமான வலையில் யாரும் சிக்கிவிடக் கூடாது என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

நீண்டகாலமாக சிறைக்கைதிகள் சந்தித்து வரும் மிக முக்கியப் பிரச்சினையான பிணை தாமதத்திற்கு, அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கை தாமதமே முதன்மை காரணம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் துறையில் காணப்பட்ட 118 பணியாளர் வெற்றிடங்கள் காரணமாகவே ஆயிரக்கணக்கான அறிக்கைகள் முடங்கிக் கிடந்தன. ஆனால், இந்த முடக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், உடனடியாக 70 புதிய ஊழியர்களை நியமிக்கவும், இம் மாத இறுதிக்குள் அதிநவீன தொழில்நுட்ப சாதனங்களை இறக்கி வேலையை விரைவுபடுத்தவும் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுமட்டுமன்றி, மாதத்திற்கு 7,500 முதல் 9,000 அறிக்கைகள் வரை விரைவாக வழங்கி வழக்குகளை தள்ளுபடி செய்யும் அளவுக்கு திணைக்களத்தின் திறனை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, 10 கிராமிற்கும் அதிகமான தூய போதைப்பொருள் வழக்குகளில் மேல்முறையீட்டு நீதிமன்றம் வரை செல்ல வேண்டிய சிக்கலான சட்ட விதிகளில் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது. இதன் மூலம் மேல் நீதிமன்றங்கள் மூலமாகவே மிக விரைவாக பிணை கோரக்கூடிய சட்ட முன்மொழிவு அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.

“உங்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும் பிரச்சனைகளுக்கும் அரசாங்கம் படிப்படியாக தீர்வு கண்டு வருகிறது. சிறை நெரிசலைக் குறைக்கவும் வசதிகளை மேம்படுத்தவும் முன்னெப்போதும் இல்லாத முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனவே, சிலரின் சுயநல ஆசைக்காக உங்களை பகடைக்காய்களாக பயன்படுத்த அனுமதிக்காதீர்கள்” என அமைச்சர் நேரடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமைதியின்மை என்ற பெயரில் சிறைச்சாலை சொத்துக்களை தீயிட்டு கொளுத்துவதும், வளங்களை சேதப்படுத்துவதும் இறுதியில் கைதிகளின் உரிமைகளையே பறிக்கும் என எச்சரித்த அமைச்சர், சட்டத் திருத்தங்கள் மற்றும் பகுப்பாய்வு அறிக்கைகளை விரைவுபடுத்தும் அரசாங்கத்தின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

“ஜனாதிபதி அவர்களே… ஜன்னல் வழியே வெளியே பாருங்கள்!”

0

நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில், ஊடகங்கள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் எழுதப்பட்ட திறந்த மடலொன்று இன்று சமூக வலைத்தளங்களிலும் இணைய ஊடகங்களிலும் பெருமளவில் வைரலாகி வருகின்றது. ‘டெய்லி மிரர்’ பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள இந்த பகிரங்கக் கடிதம், தற்போதைய ஆட்சியின் செயற்பாடுகள் மற்றும் ஊடகங்கள் மீதான பார்வை குறித்த முக்கிய விவாதங்களைத் தோற்றுவித்துள்ளது.

தவறு செய்தவர்களுக்கும் ஊழல்வாதிகளுக்கும் எதிராக ஜனாதிபதி எடுத்து வரும் தீவிர நடவடிக்கைகள் தினமும் மக்களால் பாராட்டப்பட்டு வருகின்ற போதிலும், நாட்டின் சாமானிய மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகள் மற்றும் துயரங்கள் புறக்கணிக்கப்படக் கூடாது என்பது இந்த மடலின் பிரதான செய்தியாகும். “ஜனாதிபதி அவர்களே, உங்களது அலுவலக ஜன்னல் வழியே வெளியே பாருங்கள்; உங்களது மக்களின் அன்றாடப் போராட்டங்களையும் துயரங்களையும் காதுகொடுத்துக் கேளுங்கள்” என்ற கோரிக்கை அதில் ஆழமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஊடகங்கள் தொடர்பாக ஜனாதிபதி அண்மையில் வெளியிட்ட கருத்துக்களுக்கு இதில் காட்டமான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. ஊடகங்கள் அரசாங்கத்தின் எதிரிகள் அல்ல என்றும், அவை குறிப்பிடப்பட்டது போல எந்தவொரு “குப்பை மேட்டிலும்” இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேநேரம், தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் ஊடகங்களை எதிர்கொள்வதற்கும் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கும் தேவையான தைரியம் இல்லாமல் விலகி ஓடுவதாகவும் இதில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அவரது தேசிய மக்கள் சக்தி (NPP) தரப்பினர், ஊடக நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் தங்களுக்கு எதிராகப் போலிச் செய்திகளையும், தவாறான அரசியல் பரப்புரைகளையும் மேற்கொண்டு வருவதாக நாடாளுமன்றத்திலும் பொதுக் கூட்டங்களிலும் கடுமையாகச் சாடினர். ஊடகங்கள் பொறுப்புடன் செயல்படாவிடில் சட்டம் பாயும் என்ற அரசாங்கத்தின் தொனி ஊடகச் சுதந்திரத்தை முடக்கும் முயற்சியோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவான ஊடகச் சுதந்திர வாக்குறுதிகளுக்கு மத்தியில், சமூக ஊடகங்களில் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக அவதூறு அல்லது போலித் தகவல்களைப் பரப்புபவர்களை அவசரகாலச் சட்ட விதிகளின் (Emergency Regulations) கீழ் கைது செய்யுமாறு பொதுப் பாதுகாப்பு அமைச்சின் மூலம் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன், பேரிடர் மேலாண்மைக்கு மட்டுமே அவசரகாலச் சட்டம் பயன்படுத்தப்படும் என்ற ஜனாதிபதியின் முந்தைய வாக்குறுதிக்கு இது முரணாக இருப்பதாக சிவில் அமைப்புகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் கடந்த காலப் பழிவாங்கல்களுக்குப் பொறுப்புக்கூறுவதைத் தவிர்ப்பதாகவும், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் விமர்சனக் குரல்களை எழுப்பும் ஊடகவியலாளர்களை மௌனிக்கச் செய்யும் வகையில் அடக்குமுறைகளைக் கையாள்வதாகவும் Civicus Monitor போன்ற சர்வதேச மனித உரிமை கண்காணிப்பு அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

குறுகிய காலத்தில் ஆட்சி அமைத்துள்ள போதிலும், முந்தைய ஆட்சியாளர்களிடமிருந்து மாறுபட்ட ஒரு தலைவராகவே ஜனாதிபதி அநுரகுமார தன்னை நிரூபித்துள்ளார் என்பதை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, உண்மையை தைரியமாக எதிர்கொள்ளும் பண்பை தொடர்ந்து வெளிப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த திறந்த மடல் தற்போது இலங்கையின் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், அரசாங்கத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பையும் மக்களிடையே அதிகரித்துள்ளது.

நீர்கொழும்பு பல்லான்சேனை சிறைச்சாலையில் பதற்ற நிலை!

0

கடலோர நகரான நீர்கொழும்பின் அமைதியைக் குலைக்கும் வகையில், அங்குள்ள பல்லான்சேனை சிறைச்சாலையில் திடீரெனக் கடுமையான பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சிறை வளாகத்திற்குள் எதிர்பாராதவிதமாக உருவாகியுள்ள இந்த அமைதியின்மை குறித்துத் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் தொற்றிக்கொண்டுள்ளது.

சம்பவம் நடந்த சில நிமிடங்களிலேயே நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த பொலிஸ் உயர் அதிகாரிகள், உடனடியாகச் செயற்பட்டுப் பல பொலிஸ் குழுக்களைச் சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பியுள்ளனர். சிறை வளாகத்தைச் சுற்றிலும் மற்றும் அதனை அண்மித்த முக்கிய வீதிகளிலும் பொலிஸார் பலத்த பாதுகாப்பு வளையத்தை அமைத்து நிலைமையைக் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

இருப்பினும், சிறைச்சாலையினுள் இந்தத் திடீர் பதற்ற நிலைமை எதனால் ஏற்பட்டது, கைதிகளுக்கு இடையே மோதல் ஏதேனும் உருவானதா அல்லது வேறு ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தனவா என்பது தொடர்பான உத்தியோகபூர்வ முழுமையான விவரங்களைச் பொலிஸார் இதுவரை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தவில்லை.

தற்போது பொலிஸ் படையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு வரும் பல்லான்சேனை சிறை வளாகத்தில், அசம்பாவிதங்கள் எதுவும் தொடராமல் தடுப்பதற்காக மேலதிகப் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான அடுத்தகட்ட அதிகாரப்பூர்வமான தகவல்களைப் பொலிஸார் விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஒரு அதிகாரியின் உயிரைப் பறித்த பண மோசடி: பாராளுமன்றத்தில் ஹக்கீம்!

0

அவுஸ்திரேலியாவிற்குச் செலுத்த வேண்டிய கடன் திருப்பிச் செலுத்துதல் மற்றும் அது தொடர்பான நிதியியல் முறைகேடுகள் குறித்துப் பாராளுமன்றத்தில் புதன்கிழமை (05) விவாதம் சூடுபிடித்த போது, சபையே ஒரு கணம் அதிர்ந்து போனது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், அதிகாரிகளின் பொறுப்பற்ற தனத்தை அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் வெளிப்படுத்தி ஆவேசமாக உரையாற்றினார்.

அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழு) இடம்பெற்ற விசாரணைகளைச் சுட்டிக்காட்டி தனது உரையைத் தொடங்கிய அவர், அங்கு நடந்த கூத்துக்களைச் சபையில் தோலுரித்துக் காட்டினார். நிதியமைச்சிலும் மத்திய வங்கியிலும் பொறுப்பான பதவிகளிலிருக்கும் அதிகாரிகளிடம் கேள்விகளை எழுப்பிய போது, அவர்கள் எவ்வித பொறுப்புணர்ச்சியும் இன்றி ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டி ‘பந்து பரிமாற்றம்’ செய்யும் விளையாட்டிலேயே ஈடுபட்டதாக அவர் அம்பலப்படுத்தினார்.

அங்கிருந்த அறிக்கையை வாசித்துக் காட்டிய ரவூப் ஹக்கீம், நாட்டின் வங்கியாளராகச் செயற்படும் மத்திய வங்கி, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சந்தேகத்திற்குரிய இந்தப் பரிவர்த்தனைகள் குறித்து ஏற்கனவே அறிந்திருந்தும் கைகட்டி வேடிக்கை பார்த்ததாகக் சாடினார். “அங்கே ஏதோ தவறு நடக்கிறது” எனச் சிவப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும், அதைப் பொருட்படுத்தாமல் சம்பந்தப்பட்ட தரப்பினர் தொடர்ந்து அந்தச் சந்தேகத்திற்குரிய பணப் பரிவர்த்தனைகளுக்கு அங்கீகாரம் வழங்கிப் பணத்தை அனுப்பியுள்ளனர்!

நாட்டின் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய மத்திய வங்கி, இத்தகைய சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகள் குறித்து நிதிப் புலனாய்வுப் பிரிவிடம் முன்கூட்டியே அறிக்கையிட்டிருக்க வேண்டும். ஆனால், இந்த பாரிய தவறிலிருந்து மத்திய வங்கி எக்காரணத்தைக் கொண்டும் தப்பியோட முடியாது என அவர் முழங்கினார். நிதி அறிக்கையிடல் சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் சார்பில் பணத்தை மாற்றிய வங்கியாளர் என்ற முறையில் மத்திய வங்கி முழுப் பொறுப்பையும் ஏற்றாக வேண்டும்.

ஆனால், இங்குதான் அரசாங்கத்தின் மிகப்பெரிய அதிகாரப் துஷ்பிரயோகம் நடந்துள்ளது! சட்டமா அதிபர் திணைக்களத்தின் உதவியைப் பெற்று மத்திய வங்கி தன் மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து சாதுரியமாகத் தப்பித்துக்கொண்டுள்ளதாக ஹக்கீம் கடுமையாக விமர்சித்தார். மத்திய வங்கி மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் போன்ற உயர்மட்ட அரச நிறுவனங்களின் இந்தத் தீவிரக் கவனக்குறைவாலும், பொறுப்பற்ற தன்மையாலும் ஏற்கனவே ஒரு தற்கொலைச் சம்பவம் நிகழ்ந்து, ஒரு மூத்த அதிகாரியின் உயிரே பறிபோயுள்ளது என்ற அரச நிர்வாகத்தின் படுதோல்வியை அவர் மிகுந்த வேதனையுடன் சுட்டிக்காட்டினார்.