பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று நாகவில்லுவில் இடம்பெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வு!
இலங்கை திருநாட்டில் பெளதீக ரீதியான பல வேலைத்திட்டங்களையும், இடம்பெயர்வு மற்றும் எல்லை நிர்ணயம் தொடர்பான பறந்துபட்ட அறிவினையும் கொண்டிருந்த எருக்கலம்பிட்டியை சேர்ந்த மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது வருட நினைவு தின நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
அந்த வகையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் நினைவுப் பேருரையும், புத்தக வெளியீடு நிகழ்வும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் ஏற்பாட்டில் நேற்று 25.08.2025 புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய அதிபர் ஜனாப் S.M. ஹுஸைமத் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், புத்தி ஜீவிகள் மற்றும் குடும்பத்தார்கள் கலந்தகொண்டமை விஷேட அம்சமாகும்.
சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் பொருளாளர் ஜனாப் ஏ.ஜி. அனீஸ் (Bsc.Agri) அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.
மேலும் இஸ்லாமிய கற்கை அறபு மொழிப் பீட, தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களினால் நூல் அறிமுக உரையும், நினைவுப் பேருரையும் மிகவும் உணர்வுபூர்வமாக நிகழ்த்தப்பட்டது.
கிழக்கு மற்றும் தென் கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பங்களிப்பு அளப்பெரியது என நினைவு கூறிய பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன், வடக்கில் ஏற்பட்ட யுத்தம் மற்றும் முஸ்லிம்களின் இடம்பெயர்வு குறித்து அதீத அக்கறையுடன் செயற்பட்ட மிக முக்கியமானவர் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்கள் எனவும் எடுத்துரைத்தார்.
வடக்கு முஸ்லிம்களின் இடம்பெயர்வு மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பில் அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களுடன் பலதரப்பட்ட கலந்துரையாடல்களை நடத்தி, சர்வதேசம் வரை இவ்விடயங்களை கொண்டுசென்ற மகான் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் என பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் தனது உரையில் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் புதல்வி சட்டத்தரணி எப்.சப்னா ஹஸ்புல்லாஹ் அவர்களினால் ஏற்புரை நிகழ்த்தப்பட்டதுடன், நூல் வெளியீடு நிகழ்வும் இடம்பெற்றது.
நூலின் முதற்பிரதியை ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தரும், புத்தளம் எருக்கலம்பிட்டி பள்ளிவாசல் நிர்வாக சபையின் முன்னாள் உறுப்பினருமான ஜனாப் ரஹ்மத்துல்லாஹ் (GS) அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.
மேலும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் செயலாளர் ஜனாப் எஸ்.எச்.எம். றிஸ்னி அவர்களினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டதுடன், தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன், மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பாரியாருக்கும் நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில், பேராசிரியர்கள், கல்விமான்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், பாடசாலைச் சமூகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் குடும்பத்தார்கள் என பலரும் கலந்து சிறப்பித்ததுடன், ஈ நியூஸ் பெஸ்ட் ஊடக நிறுவனம் ஊடக அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விசாரணை கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது, நாட்டின் அடிப்படை ஜனநாயக நிறுவனங்களின் வலிமை குறித்து கடுமையான கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் விளைவுகள் ஒரு தனிநபரின் அல்லது எந்தவொரு அரசியல் கட்சிகளின் தலைவிதியையும் விட, சமூகத்தின் உரிமைகளுக்கான பிரச்சினைகளை தோற்றிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் தலைவர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைகளை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது மற்றும் விளக்கமறியலை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து நடத்திய விசேட ஊடக சந்திப்பில் பங்கேற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரல முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் அறிக்கையை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
‘நேஷன்ஸ் லீக்’ கால்பந்தில் போர்ச்சுகல் அணி சாம்பியன் ஆனது. பைனலில் ‘பெனால்டி ஷூட் அவுட்டில்’ 5-3 என ஸ்பெயினை வீழ்த்தியது.
ஐரோப்பிய கால்பந்து அணிகளுக்காக ‘நேஷன்ஸ் லீக்’ தொடர் நடத்தப்படுகிறது. மொத்தம் 54 அணிகள் பங்கேற்றன. நேற்று ஜெர்மனியின் முனிக் நகரில் நடந்த பைனலில், போர்ச்சுகல், நடப்பு யூரோ சாம்பியன் ஸ்பெயின் பலப்பரீட்சை நடத்தின. போட்டியின் 21வது நிமிடம் ஜுபிமெண்டி (ஸ்பெயின்), 26வது நிமிடம் மெண்டிஸ் (போர்ச்சுகல்) தலா ஒரு கோல் அடித்தனர். 45வது நிமிடம் மைக்கேல் ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் ஸ்பெயின் அணி 2-1 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் 61 வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். போர்ச்சுகல் அணிக்காக இவர் அடித்த 138வது கோல் இது. 90 நிமிட முடிவில் போட்டி 2-2 என சமன் ஆனது. அடுத்து நடந்த கூடுதல் நேரத்திலும் (30 நிமிடம்) இரு அணியும் கோல் அடிக்கவில்லை.
இதையடுத்து வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி ‘பெனால்டி ஷூட் அவுட்டுக்கு’ சென்றது. இரு அணிக்கும் தலா 5 வாய்ப்புகள் தரப்பட்டன. காயம் காரணமாக 88 வது நிமிடம் வெளியேறிய ரொனால்டோ, இதில் பங்கேற்கவில்லை.
முதல் 3 வாய்ப்பில் போர்ச்சுகலின் ராமோஸ், விடின்ஹா, பெர்ணான்டஸ் கோல் அடித்தனர். மறுபக்கம் ஸ்பெயின் தரப்பில் மெரினோ, பயேனா, இஸ்கோ கோல் அடிக்க 3-3 என ஆனது.
4வது வாய்ப்பில் மெண்டெஸ் (போர்ச்சுகல்) கோல் அடிக்க, ஸ்பெயினின் மோராட்டோ அடித்த பந்தை கோல் கீப்பர் டீகோ கோஸ்டா தடுத்து அசத்தினார்.
5வது வாய்ப்பில் நெவேஸ் கோல் அடித்தார். இதையடுத்து 5-3 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் ‘திரில்’ வெற்றி பெற்றது. 2019க்குப் பின் இத்தொடரில் மீண்டும் சாம்பியன் ஆனது.
புத்தளத்தில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளுடன் வேன் ஒன்றும் பறிமுதல்!
இலங்கை கடற்படை, பொலிஸாருடன் இணைந்து, புத்தளம், தில்லையடி பகுதியில் 2025 ஜூன் 05 இரவு வேளையில் நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகள் கொண்ட ஒரு வேன் கைப்பற்றப்பட்டது.
அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிறுவனம், புத்தளம் பொலிஸாருடன் இணைந்து தில்லையடி பகுதியில் நடத்திய இந்த சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்று சோதனை செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகளானது வாகனத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் வேன் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
விண்வெளியில் பூமியை சுற்றி வந்துக்கொண்டிருக்கும் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கொள்களை சீனா நினைத்தால் வெறும் 12 மணி நேரத்தில் தாக்கி அழித்துவிட முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சவுத் சைனா மார்னிங் போஸ்ட் என்கிற செய்தி ஊடகத்தில் இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது தற்போது சீனா 99 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. இவை அனைத்தும் நான்ஜிங் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஆஸ்ட்ரோனாட்டிக்ஸ் பல்கலைக்கழகத்தின் விண்வெளிக் கட்டுப்பாட்டுத் துறையின் இயக்குநர் வூ யுன்ஹுவா தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இவை அனைத்தும் எலான் மஸ்கின் 1400 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை வெறும் 12 மணி நேரத்தில் காலி செய்துவிடும். சீன செயற்கைக்கோளில் லேசர், நுண் அலைகளை உருவாக்கும் கருவி, உளவு கருவிகள் பொருத்தப்பட்டிருக்கலாம். ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் வெறுமென நெட்வொர்க் கொடுக்க மட்டுமே பயன்படுத்தப்படுவதில்லை. தவிர, ராணுவ நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது என சீனா குற்றம்சாட்டி வருகிறது.
அதாவது, உக்ரைன்-ரஷ்யா போரில், உக்ரைன் படைகளுக்கு தகவல்கள் கொடுக்கவும், ரஷ்ய எல்லையை துல்லியமாக கண்காணிக்கவும் இந்த செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த 2022ம் ஆண்டு ரஷ்ய போரின்போது அப்போதைய உக்ரைனின் துணைப் பிரதமரான மைக்கைலோ ஃபெடோரோவ், “ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் சேவையை உடனடியாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த மஸ்க், “உடனடியாக சேவை வழங்கப்படும்” என்று கூறியிருந்தார்.
உக்ரைன் போருடன் மட்டுமே ஸ்டார்லிங்க் நிற்காது, நாளை சீனாவுக்கும்-தைவானுக்கும் பஞ்சாயது ஏற்பட்டால் அப்போதும், தைவானுக்கு சப்போர்ட் செய்ய ஸ்டார்லிங்க் வரும். எனவே இந்த கூட்டு நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்க சீனா இந்த புதிய செயற்கைக்கோள்களை உருவாக்கியிருக்கிறது.
கடந்த 2023ம் ஆண்டு இதற்கான பணிகளை சீனா தொடங்கியது. இந்த திட்டத்திற்கு ‘கியான்ஃபான் மெகா-விண்மீன் திட்டம்’ (Qianfan mega-constellation project) என்றும் பெயரிட்டிருந்தது. நோக்கம் உலகம் முழுவதும் இணைய தொடர்பை வழங்குவதாகும். இதற்காக மொத்தம் 15,000 சிறிய ரக செயற்கைக்கோள்களை ஏவ சீனா முடிவெடுத்தது. இதன் முதல் தொகுப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏவப்பட்டது. இதில் 18 செயற்கைக்கோள்கள் இருந்தன.
ஒவ்வொன்றும் சுமார் 300 கி.கி எடையில் இருந்தது. இவை பூமியிலிருந்து 800 கி.மீ உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டது. இதேபோன்று 2024 டிசம்பரில் அடுத்து இரண்டு தொகுதி ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. தற்போது மொத்தம் 99 செயற்கைக்கோள்கள் விண்வெளியில் இருக்கின்றன. 15,000 செயற்கைக்கோள்களை 3 கட்டங்களாக ஏவ இருக்கிறது. முதல் கட்டத்தில் 1,296 செயற்கைக்கோள்கள் ஏவப்படும். இதில் 648 செயற்கைக்கோள்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஏவப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்புவோம்
தேசியத்துவத்துடனும் ஐக்கியத்துடனும் ஒன்றுபட்டு நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க இன்று (23) காலை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
பதவிப் பிரமாணத்தின் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய முழுமையான உரை:
மக்களால் ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது நமது நாட்டின் ஜனநாயகத்திலிருக்கும் மிக முக்கியமான அம்சமாகும். தேர்தலில் வாக்களித்தல் மற்றும் ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதோடு ஜனநாயகம் நிறைவு பெறுவதில்லை. இது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சம் என்றாலும், நம் நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்த, கட்டமைப்புகளின் வலிமையும், சட்டங்களை வலுப்படுத்துவதும் அவசியம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனவே, எனது பதவிக்காலத்தில் இந்த நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.
அத்துடன், இந்த நாட்டில் ஜனநாயக முறையில் அதிகாரப் பரிமாற்றம் நடந்த வரலாறும் உண்டு. தேர்தலில் நிகழும் அதிகாரப் பரிமாற்றத்தை எந்தத் தலைவரும் நிராகரித்ததில்லை. அதற்கமைய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த மக்கள்ஆணையை சுமூகமாக ஏற்றுக்கொண்டதுடன், ஜனநாயக ரீதியில் அதிகாரத்தை கைமாற்றுவதற்கான அவரின் அர்ப்பணிப்பிற்கும் முன்னுதாரணத்திற்கும் நன்றி தெரிவிக்கிறேன். மேலும் எமக்கு கிடைப்பது மிகவும் சவால் நிறைந்த நாடு என்பதை நன்கு புரிந்து கொண்டிருக்கிறோம். நமது அரசியலில் தூய்மையான, மக்களால் எதிர்பார்க்கப்படும் சிறந்த அரசியல் கலாசாரத்திற்காக அவசியம் காணப்படுகிறது.அதற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.
நம் நாட்டின் அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு நல்லெண்ணம் இல்லை. எனவே, அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் மீது மக்கள் மரியாதை மற்றும் நம்பிக்கையை மீட்டெடுக்க எங்கள் தரப்பிலிருந்து முடிந்த அனைத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.
மேலும், நமக்கு முன் இருக்கும் இந்த ஆழமான நெருக்கடியை வெறும் அரசோ, வெறும் அரசியல் கட்சியோ அல்லது ஒரு தனி நபரோ மட்டும் தீர்க்க முடியும் என்று நாங்கள் நம்பவில்லை. ஏனென்றால், நான் முன்பு கூறியது போல், நான் ஒரு மாயாஜால வித்தைக்காரனல்ல. நான் மந்திரவாதியும் இல்லை. நான் இந்த நாட்டின் சாதாரண குடிமகன். எம்மிடம் திறமைகள் உள்ளன. இயலாமைகளும் உள்ளன. தெரிந்த விடயங்களும் உள்ளன அதேபோன்று, தெரியாத விடயங்களும் உள்ளன.
ஆனால் திறமைகளைப் பயன்படுத்தி தெரியாதவற்றை சேகரித்துக்கொண்டு சிறந்த முடிவுகளை எடுத்து இந்த நாட்டை வழிநடத்துவதே எனது தலையாய பணியாகும். அந்த கூட்டுப் பங்களிப்பின் ஒரு அங்கமாக மாறுவது எனது பொறுப்பாகும். மேலும், இந்த நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதில் பொது மக்கள் மற்றும் அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் பாரிய பொறுப்பு உள்ளது. அந்தப் பொறுப்பை நிறைவேற்ற அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்.
ஆனால், நாட்டின் ஜனாதிபதி என்ற முறையில், இந்தப் பணியை முன்னின்று நடத்துவதில் எனக்கு முதன்மையான மற்றும் மிக முக்கியமான பொறுப்பு இருப்பதை நான் ஏற்றுக்கொண்டேன். எனவே, இந்தச் சவாலை வெற்றிகொள்வதற்காக எனக்குக் வழங்கப்பட்டுள்ள பணியை நான் உரிய முறையில் நிறைவேற்றுவேன் என்பதை செயற்பாடு மற்றும் நடைமுறை மூலம் எல்லா சந்தர்ப்பங்களிலும் இந்த நாட்டின் பிரஜைகளுக்கு வெளிப்படுத்த நான் தயாராக இருக்கிறேன்.
மேலும் நமது நாட்டுக்கு சர்வதேச ஆதரவு தேவை. எனவே, உலகில் எத்தகைய அதிகாரப் பிளவுகள் இருந்தாலும், ஒவ்வொரு நாட்டையும் எமக்கு மிகவும் சாதகமாக கையாள்வதே நமது எதிர்பார்ப்பாகும். நாம் உலகில் தனிமைப்படுத்தப்பட்ட நாடு அல்ல. உலகத்துடன் கூட்டாக முன்னேற வேண்டிய ஒரு நாடாகும். அது தொடர்பில் தேவையான முடிவுகளை எடுக்க நாங்கள் சிறிதும் தயங்குவதில்லை.
மேலும், நம் நாட்டைக் கட்டியெழுப்புவதில் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு பெரும் பங்கு உள்ளது. எனவே, நாட்டை மேலும் வலுவாகக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு அவர்கள் ஆதரவளிப்பார்கள் என நான் கருதுகின்றேன்.
நம் நாட்டின் ஜனநாயகத்தின் ஊடாக நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். அதற்காக மக்கள் எனக்கு வாக்களித்தனர்.
மேலும் எனக்கு வழங்கப்படாத வாக்குகளும் உள்ளன. எனவே, எங்களின் வெற்றியின் உள்ளடக்கம் மற்றும் அளவு குறித்து எங்களுக்கு நல்ல புரிதல் உள்ளது. எனவே, எங்களுக்கு ஆதரவு வழங்காத மற்றும் எங்களை நம்பாத பிரஜைகளின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெறுவதே எனது நிர்வாகத்தின் போது எனக்கு வழங்கப்பட்டுள்ள பணியாகும். அந்தப் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
எதிர்காலத்தில் இவை அனைத்தையும் நீங்கள் நடைமுறையில் கண்டுகொள்ள முடியும். அதற்கு அனைத்து மக்களின் ஆதரவையும் எதிர்பார்க்கின்றேன்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அதிகாரிகள் மற்றும் பிற தேவைகள் முடிந்த பிறகு, மாலை 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (19) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி பிற்பகல் 4.15 மணிளவில் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
“எதிர்வரும் 21ம் திகதி வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள் பெறப்பட்டதும், அதிகாரிகள் மற்றும் இதர தேவைகள் முடிந்ததும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் இரவு 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.
மாலை 4.15 மணிளவில் தபால் மூல வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.
அத்துடன் மாவட்ட அளவில் ஒவ்வொரு வட்டாரத்திலும் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெறும்.
வாக்கு எண்ணிக்கையின் முடிவில் முடிவுகள் கிடைத்தவுடன் ஊடகங்களுக்கு வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையே முதலில் எண்ணப்படும்.
அந்தக் கணக்கெடுப்பின் பின்னர் (மாவட்ட அளவில் எண்ணும் பணி) முதலில் வாக்குப்பெட்டிகளில் உள்ள வாக்குகள் எண்ணப்படும்.
அதன் பிறகு, ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு, தொகுதி மற்றும் மாவட்ட அளவில் அது தயாரிக்கப்படுகிறது.
தேர்தல்கள் செயலகமே ஒட்டுமொத்த முடிவுகளைக் கணக்கிடும்.
எந்த வேட்பாளரும் 50 வீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்றுள்ளாரா என சரிபார்க்கப்படும்.
அப்படியானால், அந்த நேரத்தில் வாக்கு எண்ணும் பணிகள் நிறுத்தப்படும்.
அப்போது ஜனாதிபதியை நாங்கள் அறிவிப்போம்.
எந்த வேட்பாளருக்கும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் கிடைக்காவிடின், விருப்பு வாக்கு எண்ணிக்கைக்கு செல்ல வேண்டும்.
அங்கு, அதிக வாக்குகள் பெற்ற இரண்டு வேட்பாளர்கள் போட்டியில் வைத்து விட்டு மீதமுள்ள 36 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து நீக்கப்படுவர்” என்றார்.
புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வாத்தியாசலையாக மாற்றம் பெரும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று புத்தளத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ அலிசப்ரி ரஹீம் மற்றும் சிந்தக்க மாயாதுன்ன தலைமையில் புத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்திலே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
புத்தளம் மக்களின் நீண்ட நாள் தேவையாக இருந்து வருகின்ற புத்தளம் தல வைத்தியசாலையை தரமுயர்த்துவது தொடர்பாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ அலிசப்ரி ரஹீம் அவர்களினால் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோலுக்கிணங்க குறித்த வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.
மேலும் புத்தளத்தில் மீன் பிடி தொழிலை முன்னேற்றும் நோக்கத்தில் மீன் பிடி துறைமுகம் ஒன்றை அமைக்கும் யோசனையும் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டதுடன், அதற்கான முன்னெடுப்புகளும் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்டமை புத்தளம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
நாட்டில் நிரந்தர பொருளாதார அபிவிருத்தியை நிலை நாட்ட தாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டை பொருளாதார அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவதே தனது பிரதான நோக்கம் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக மொட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளரை இந்த வாரம் அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்காதிருக்கவும், மொட்டு சின்னத்தில் தனியாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமக்கு ஆதரவு வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பியிருந்த கடிதம் நேற்றைய தினம் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தினால் அரசியல் குழுவில் முன்வைக்கப்பட்டது.
எவ்வாறாயினும் அந்த கடிதத்தை நிராகரிக்க அரசியல் குழுக் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுவில் 82 பேர் அங்கம் வகிப்பதுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் 72 பேர் பங்கேற்றனர்.
இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த 11 பேர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
மஹிந்தானந்த அலுத்கமகே, பந்துல குணவர்தன, பிரதீப் உந்துகொட, கோகிலா ஹர்ஷனி குணவர்தன, சஹன் பிரதீப், ரமேஸ் பத்திரன, கஞ்சன விஜேசேகர, பிரசன்ன ரணதுங்க, கனக ஹேரத், மொஹான் பிரியதர்ஷன ஆகியோர் கட்சியின் சார்பில் தனியான வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
அத்துடன் பிறிதொரு கட்சியின் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்கும் உறுப்பினர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் யோசனைக்கு 6 பேர் எதிராக வாக்களித்துள்ளனர்.
எவ்வாறாயினும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் எனக் கூறப்பட்ட தம்மிக பெரேரா தொடர்பில் அரசியல் குழுக் கூட்டத்தின்போது எந்தவித கருத்துக்களும் பரிமாற்றிக் கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவளிக்காத 11 பேர் உள்ளிட்ட தரப்பினர் நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தனவின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
புத்தளம் சைனப் ஆரம்ப பாடசாலையின் முப்பெரும் விழா பாடசாலை அதிபர் யஹியா தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து புத்தளம் ஜெய்னப் பாடசாலைக்கு 22 லட்சம் ரூபா பெறுமதியான நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு, சிறுவர் விளையாட்டு நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தல் மற்றும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் செயற்திட்டத்தின் கீழ் BCMH நிறுவனத்தினால் கற்றல் உபகரணம் வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் கடந்த செவ்வாய்க்கிழமை (16) வெகு விமர்சையாக இடம்பெற்றது.
நிகழ்வின் பிரதம அதிதியாக வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், விசேட அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மற்றும் கௌரவ அதிதியாக புத்தளம் வலயக்கல்விப் பணிப்பாளர் அர்ஜுன ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆரம்ப பாடசாலையின் முக்கியத்துவம் மற்றும் அறிவார்ந்த சமூகத்தை கட்டியெழுப்ப ஆரம்ப பாடசாலை ஆற்றிவருகின்ற அர்ப்பணிப்பு குறித்து விரிவாக பேசிய வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், புத்தளம் மாவட்ட பாடசாலைகளின் துரித வளர்ச்சி பற்றியும் மகிழ்ச்சி தெரிவித்தார்.
மேலும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் செயற்திட்டத்திற்கு வடமேல் மாகாண ஆளுநர் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் ஜவ்ஷி ஜமால்தின், இணைப்புச் செயலாளர் எச். அமீர் அலி ஆசிரியர், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் உட்பட உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் அயல் பாடசாலையின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
கடத்தல் வழக்கில் முன்னாள் எம்.பி ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்தத் தீர்ப்பை அறிவித்தார்.
தெமட்டகொட பகுதியிலுள்ள கடை ஒன்றில் பணிபுரிந்த அமில பிரியந்த அமரசிங்க எனும் இளைஞர் ஒருவரை 2015 டிசம்பர் 21ஆம் திகதி ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு சொந்தமான டிபெண்டர் வாகனத்தில் கடத்திய வழக்கு விசாரணை முடிவில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
29 குற்றங்கள் தொடர்பில் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் 8 பேரும் குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில், அச்சம்பத்திற்கு உதவி, ஒத்தாசை புரிந்ததாக ஹிருணிகா மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்திருந்தார்.
அத்தோடு, சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவின் ஆதரவாளர்கள் 8 பேர் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைதான ஐந்தாம் சந்தேகநபரின் மகள் அளித்துள்ள வாக்குமூலத்தில், தமது தாயாருடன் தொடர்பு பேணிய நபர் ஒருவரை தாம் காண்பித்ததாகவும், அவரை தமது தந்தையும் அவருடன் சென்றவர்களும் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு ஹிருணிகாவிடம் அழைத்துச் சென்றதாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட வட மாகாண மானவர்களுக்கிடையிலான சித்திரப்போட்டியில் மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்றார்.
வீதி விபத்துக்கள் இல்லாத நாளைக்கான பாடசாலையிலிருந்து அணிவக்குப்போம் எனும் தொனிப்பொருளில் கடந்த வியாழக்கிழமை (13.06.2024) அன்று நடாத்தப்பட்ட வட மாகாண மாணவர்களுக்கிடையிலான குறித்த சித்திரப்போட்டியில் சுமார் 2600 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.
சித்திரப்போட்டியில் பங்குபற்றிய 2600 மாணவர்களில் 250 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு நேற்றைய தினம் (15.06.2024) அவர்களுக்கான போட்டி இடம்பெற்றது.
நடைபெற்று முடிந்த இறுதிச் சுற்றுப்போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்று பெருமதிமிக்க பரிசில்களை பெற்றுக்கொண்டார்.
முதலாம் இடம் பெற்ற முஹம்மது ஹுசைன் என்ற மாணவனுக்கு சான்றிதல், துவிச்சக்கரவண்டி மற்றும் 8500/- ரூபா பெறுமதியான வவுச்சரும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இதேவேளை குறித்த போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய இல்முதீன் முஹம்மது ஹஸ்பான் 7 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.
எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய மற்றொரு மாணவரான முஹம்மது சம்ஹான் 8 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.
பாரிய சாவல்களுக்கு மத்தியில் தனி ஒரு மனிதனாக இம் மாணாவர்களை ஊக்கப்படுத்தி, தயார்ப்படுத்தி போட்டியில் பங்குபெறச் செய்து வெற்றிபெறச் செய்த எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியின் சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் அவர்களின் இம் முயற்சிக்கு, பாடசாலை சமூகம் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் நன்றி தெரிவித்தனர்.
தமக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வந்து தேசிய அளவில் இடம்பெறும் போட்டிகளில் மாணவர்களை பங்குபெறச் செய்வதே தனது இலக்கு என சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் எமது ஊடகத்திற்கு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
புத்தளம் பகுதியில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக புத்தளம் பகுதி முழுதும் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.
புத்தளம், தில்லையடி, பாலாவி, புத்தளம் எருக்கலம்பிட்டி, ஹிதாயத் நகர், மதுரங்குளி மற்றும் ஏனைய பல கிராமங்களும் வெள்ளித்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அவ்வகையில் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமமும் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
சுமார் 1500 குடும்பங்கள் இங்கு வாழ்ந்துவருவதுடன், அனைத்து வீடுகளும் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
நூற்றிற்கும் அதிகமான வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் ஐநூற்றுக்கும் அதிகமான வீடுகள் பகுதி அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 8ஆம் திகதி ஏற்பட்ட மழை வெள்ளித்தினால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் மற்றும் பாடசாலைகளில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த இரண்டு தினங்களாக இவர்களுக்கான சமைத்த உணவுகள் மூன்று வேலைகளிலும் ஊர் தனவந்தர்களின் உதவியுடனும், பள்ளிவாசல் நிர்வாக சபையின் வழிகாட்டலுடனும் வழங்கப்பட்டு வருவதுடன், ஊர் மக்களுக்கும் உணவு விநியோகங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
இவர்களுக்கான நிவாரண உதவிகள் இதுவரை அரசாங்கத்தினால் வழங்கப்படாத போதிலும், ஊர் மக்களின் பங்களிப்புடன் மாத்திரமே பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு விநியோகங்கள் இதுவரை வழங்கப்பட்டு வருகின்றது.
புத்தளம் பொத்துவில்லு பகுதியில் உள்ள குளம் மழை நீரினால் பெருக்கெடுத்துள்ளதால் குறித்த குளத்து நீர் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமத்திற்குள் தொடர்ந்தும் மூன்றாவது நாளாக ஊடறுத்து செல்வதால் வீடுகள் தொடர்ந்தும் நீருள் மூழ்கியுள்ளது.
மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்தின் நிவாரண உதவிக்காக பல மக்கள் தொடர்ந்தும் எதிர்பார்த்து காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி பின் வெள்ளித்திரையில் பிரபல காமெடி நடிகராக வலம் வந்தார் ரோபோ ஷங்கர்.
சில வருடங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு வந்தவர் சில தினங்களுக்கு முன் திடீரென மயங்கி விழ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நீர்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து அவர் சில தினங்கள் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பார்த்தனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வந்த ரோபோ ஷங்கர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
யாழ்ப்பாண இராச்சியத்தின் அடையாளமாக உள்ள மந்திரிமனையை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் இன்று (18) பார்வையிட்டார்
தமிழ் இராச்சிய வரலாற்றில் மிகப் பிந்திய அடையாளமாக உள்ள மந்திரிமனை அழிந்து போனால் தமிழர் வரலாறும் அழிக்கப்படும் அபாயம் உள்ளதாக வருகை தந்த அதிகாரிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
ஜமுனா ஏரி, மந்திரிமனை, சங்கிலியன் முகப்பு என்பன யாழ்ப்பாண மண்ணின் தமிழர் வரலாற்றின் முக்கியத்துவம் மிக்க பகுதிகள் எனவும், அவற்றை தொடர்ந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் சுட்டிக்காட்டினார்
நாடாளுமன்ற உறுப்பினருடன் யாழ், கிளிநொச்சி மாவட்டங்களின் தொல்லியல் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் பந்துல ஜீவ புனர்நிர்மாண உத்தியோகத்தர் கபிலன், நல்லூர் யாழ்ப்பாண வலயத்தின் உத்தியோகத்தர் மணிமாறன், கனியவள அளவையியலாளர் அமர்நாத் மற்றும் யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் ஆகியோர் உடனிருந்தனர்.
யாழ். மாவட்ட விசேட போக்குவரத்து ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகர், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் பங்கேற்புடன் யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை காலை (18.09.2025) நடைபெற்றது.
யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபனின் வரவேற்புரையைத் தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர், யாழ். மாவட்டத்தின் போக்குவரத்துப் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக இவ்வாறானதொரு தனியான கூட்டத்தைக் கூட்டியமைக்காக கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுக்கு நன்றிகளைத் தெரிவித்தார். நாட்டின் பல பாகங்களிலும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் சம காலத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதை எல்லோரும் அறிவீர்கள் எனத் தெரிவித்த ஆளுநர் குறிப்பாக கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தின் அபிவிருத்தி சகலரது கவனத்தையும் ஈர்த்துள்ளதாகச் சுட்டிக்காட்டினார். அதேபோன்றதொரு நவீனமயப்படுத்தல் வடக்கு மாகாணத்துக்கும் தேவைப்படுவதாகக் கோரிய ஆளுநர், ஏற்கனவே தூய்மை இலங்கை செயற்றிட்டத்தில் வடக்கில் 9 பேருந்து நிலையங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமையும் நினைவுகூர்ந்தார்.
இதன் பின்னர் கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகர் தனது உரையில், யாழ்ப்பாண மாவட்டத்தின் போக்குவரத்தை தற்போதுள்ள நிலைமையை விடவும் மேம்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் எனச் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்க, மக்களுக்கு நேரடியாகத் தாக்கம் செலுத்தும் ஒவ்வொரு விடயங்கள் தொடர்பிலும் மாவட்ட ரீதியாக ஒருங்கிணைப்புக்குழுவை தனித்தனியே அமைப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அதற்கு அமைவாக, யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவராக கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் அமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டார்.
அதன் பின்னர் நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் கீழான ஒவ்வொரு துறைகளின் பிரச்சினையும் தனித்தனியே ஆராயப்பட்டன.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழான வேலைத் திட்டங்கள் தொடர்பில் முதலில் ஆராயப்பட்டது. இதன்போது தீவுப் பகுதிகளின் வீதி அபிவிருத்திக்காக விசேடமாக மேலதிக நிதியாக 250 மில்லியன் ரூபா ஒதுக்கப்படுவதாக கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பயணிகள் கடற்போக்குவரத்து தொடர்பாகவும் ஆராயப்பட்டது. வீதி விபத்துக்கள், யாழ். மாவட்டத்தில் இயங்கும் சாரதி பயிற்சிப் பாடசாலைகள், புகையிரத திணைக்களம் தொடர்பான விடயங்களும் ஆராயப்பட்டன. குறிப்பாக கடந்த காலங்களில் இயங்கி தற்போது நிறுத்தப்பட்டுள்ள புகையிரத சேவைகளை மீள ஆரம்பிக்குமாறு ஆளுநர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர்.
இதேவேளை, யாழ். நகரத்திலுள்ள இலங்கை போக்குவரத்துச் சபையின் மத்திய பேருந்து நிலையம் தொடர்பாகவும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக நகரின் நெருக்கடி காரணமாக இது அமைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டது. அத்துடன் காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் பலாலி விமான நிலையம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்தக் கலந்துரையாடலில் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, ஜெ.றஜீவன் ஆகியோரும், கௌரவ தவிசாளர்கள், அமைச்சு அதிகாரிகள், பாதுகாப்புத் தரப்பினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நாள்பட்ட சிறுநீரக நோயால் நாட்டில் தினமும் சுமார் ஐந்து பேர் இறக்கும் அபாயம் காணப்படுவதாக தேசிய சிறுநீரக நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி பிரிவு தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டில், நாள்பட்ட சிறுநீரக நோயால் நாட்டில் 1,600க்கும் மேற்பட்டோர் இறந்ததாக அதன் பணிப்பாளர் வைத்தியர் சிந்தா குணரத்ன தெரிவித்தார்.
சிறுநீரக நோய் தொடர்பாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போதே வைத்தியர் சிந்தா குணரத்ன இந்த தகவலை வௌியிட்டார்.
மேலும் கருத்து தெரிவித்த வைத்தியர், சிறுநீரக நோயின் அறிகுறிகள் தாமதமாகி வருவதால், தொற்றா நோய்கள் உள்ளவர்கள் சிறுநீரக பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம் என்று சுட்டிக்காட்டினார்.
இந்த ஆண்டின் மிகப்பெரிய தொழில்துறை கண்காட்சியான “Industry Expo 2025” இன்று ஆரம்பமாகிறது.
கைத்தாழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயற்படும் தொழில் அபிவிருத்தி சபை (IDB) ஏற்பாடு செய்துள்ள “Industry Expo 2025” இன்று (18) ஆரம்பமாகிறது.
அதன்படி, இதன் ஆரம்ப விழா இன்று காலை BMICH இல் கைத்தாழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில், கைத்தாழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெறுகிறது.
இலங்கை முழுவதிலுமிருந்து 25 தொழில்துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிலதிபர்களால் முன்வைக்கப்படும் 450 கண்காட்சி கூடங்களைக் கொண்ட இந்த கண்காட்சியில், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், அரச மற்றும் தனியார் துறைகளால் வழங்கப்படும் புத்தாக்க வலயம் (Innovation Arena), பாடசாலை தொழில்முனைவோர் வட்ட நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களின் தயாரிப்புகளைக் கொண்ட கண்காட்சி கூடங்கள், பொறியியல் மற்றும் ஆராய்ச்சி சேவைக் கூடங்கள் (NERD) மற்றும் அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் தொழில்களை ஆதரிக்கும் வங்கிகளால் ஒரே கூரையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட “One Stop Service” ஆகியவை அடங்கும்.
அதன்படி, இந்தக் கண்காட்சி செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி வரை நான்கு நாட்கள் நடைபெறும்.
இலங்கையில் கௌரவம் பெறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் முஹைதீன்.
இந்தியாவின் 79வது சுதந்திர தினக்கொண்டாட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களால் தமிழ்நாடு அரசின் உயரிய கௌரவமாக விளங்கும் “தகைசால் தமிழர் விருது” இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத்தலைவர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், பேராசிரியர் முனீருல் மில்லத் கே.எம்.காதர் முஹைதீன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
தமிழ்மொழி, இலக்கியம், கலை, அறிவியல், கல்வி, சமூகம், மருத்துவம், தொழிநுட்பம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் சிறப்பாகச் சாதித்தவர்களுக்கு வழங்கப்படும் இவ்விருது “தமிழ்நாடு அரசின் மிக உயர்ந்த விருது” எனக் கருதப்படுகிறது.
ஏன் “தகைசால் தமிழர் விருது” பேராசிரியர் கே.எம்.காதர் முஹைதீன் அவர்களுக்கு வழங்கப்பட்டது?
பேராசிரியர் காதர் முஹைதீன் அவர்களின் மனிதநேயம், மத நல்லிணக்கம், அறிவார்ந்த சொற்பொழிவு, சமூக நலப்பணிகள் ஆகியவை இவ்விருதிற்கு அவரைத் தகுதியானவராக மாற்றியது.
2010ம் ஆண்டு கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் “தமிழ்நாட்டிற்கும் அரபு நாடுகளுக்குமுள்ள தொடர்புகள்” குறித்த ஆய்வுக் கட்டுரையை வழங்கியுள்ளார்.
தாருல் குர்ஆன் இதழில் எட்டாண்டுகள் தொடர்ச்சியாக “தமிழருக்கு இஸ்லாம் வந்த மதமா? சொந்தமா?” என்ற தலைப்பில் ஆழமான கட்டுரைகளை எழுதியுள்ளார்.
“வாழும் நெறி”, “குர்ஆனின் குரல்”, “இஸ்லாமிய இறைக் கோட்பாடு” உள்ளிட்ட ஆறு நூல்களை எழுதி சமூக, அறிவுத்தளங்களில் பங்களித்துள்ளார்.
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் 15 ஆண்டுகள் பேராசிரியராக இருந்து, மாணவர்களின் மனங்களில் சமூக நல்லிணக்கம், தன்னம்பிக்கை ஆகியவற்றை விதைத்துள்ளார்.
யார் இந்த பேராசிரியர் கே.எம். காதர் முஹைதீன்?
புதுக்கோட்டை மாவட்டத்தின் திருநல்லூரில், 1940 ஆம் ஆண்டு ஜனவரி 5ம் தேதி, பேராசிரியர் கே.எம்.காதர் முஹைதீன் நடுத்தரக்குடும்பத்தில் பிறந்தார்.
கல்வியில் பெரும் நாட்டம் கொண்டவராக தனது பயணத்தைத் தொடங்கிய அவர், அதன் பலனாக மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் முதுகலை (M.A.) பட்டம் பெற்றார். மேலும், அரபு மற்றும் உருது மொழிகளிலும் சிறந்த தேர்ச்சி பெற்றிருந்தார்.
எழுத்தாளர், பத்திரிகையாளர்:
மாணவராக இருந்த போதே “மறுமலர்ச்சி” இதழில் கட்டுரைகள் எழுதத் தொடங்கிய அவர், முபாரக், தாருல் குர்ஆன் போன்ற பத்திரிகைகளில் முக்கியக் கட்டுரைகளை வழங்கினார். மேலும், மணிச்சுடர் நாளிதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்.
தமிழில் முக்கியமான நூல்களையும் நூற்றுக்கணக்கான கவிதைகளையும் எழுதியுள்ள அவர், மத ரீதியான ஒப்பீடுட்டு நூல்கள் பலவற்றை எழுதியுள்ளார். அதில் குறிப்பாக “வாழும் நெறி” என்ற நூல் குறிப்பிடத்தக்கது.
அவரது எழுத்துகள் சமூக ஒற்றுமை, கல்வி முன்னேற்றம், மத விழிப்புணர்வு ஆகியவற்றை மக்களிடம் கொண்டு சேர்த்தன.
அரசியல் பங்களிப்பு:
மாணவர் நிலையிலிருந்தே அரசியல் மீது ஆர்வம் கொண்டிருந்த அவர், இந்திய முஸ்லிம்களின் இருப்பை உறுதி செய்வதில் அடையாளமாகத் திகழ்ந்த “இந்திய யூனியன் முஸ்லிம் லீக்” கட்சியின் செயற்பாடுகளில் ஈர்க்கப்பட்ட காதர் முஹைதீன் மாணவர் சங்கம் மூலம் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில உதவியாளராக, மாநில செயலாளராக பதவி வகித்து, தற்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவராகவும் உயர்ந்திருக்கிறார்.
2004–2009 காலத்தில் மக்களவை உறுப்பினராக வேலூர் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பல நாடாளுமன்றக்குழுக்களில் பணியாற்றினார். உள்துறை, வக்ஃப் தொடர்பான குழுக்கள், ஹஜ் குழு, பல்கலைக்கழகக் குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் சமூக நலனுக்காக உழைத்தார்.
நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து, அரசியல், கல்வி இரு துறைகளிலும் ஆழமான பங்களிப்பை மேற்கொண்டு வருகின்றார்.
இவர் மனித நேயம், மத நல்லிணக்கம், அறிவார்ந்த சொற்பொழிவு, சமூதாய நலன் என்பவற்றிற்கு தன்னையே அர்ப்பணித்தார். அதில் அவருடைய எழுத்து, கல்விப்பணி மற்றும் சமூகப்பங்களிப்பும் முக்கியமானதாகும்.
மனிதநேயப்பண்பு:
பேராசிரியர் காதர் முஹைதீன் அவர்களின் உயர்ந்த பண்புகளின் அடையாளம், மத நல்லிணக்கம், சமூக ஒற்றுமை, சமூக நீதிக்கான உறுதி ஆகியவற்றில் முன்னோடியாக இருந்ததுதான். பெண்கள், ஏழைகள், அனைத்து மதத்தினரும் அவரிடம் அணுகி உதவி பெற்றனர்.
மஹல்லா ஜமாத் கூட்டமைப்பைத் தொடங்கி, வட்டியில்லாத கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.
பல்வேறு மதம் சார்ந்தவர்களிடையே கலந்துரையாடல்கள், ஒப்பீட்டு மதம் வகுப்புகள் நடத்துதல் போன்றவற்றால் மத நல்லிணக்கத்துக்கு வழிவகுத்து சகிப்புத்தன்மையை வளர்த்தார்.
உரிமைகளை வென்றெடுக்கவும், அநீதிக்கெதிராகவும் உரத்த குரலில் போராடியவர் அவர். அரசியல் ரீதியாக உரிமைகளை வென்றெடுக்க கையாண்ட முக்கியமான போராட்டங்கள் வரலாற்றில் பதிவாகியுள்ளன.
2013ம் ஆண்டு ஏப்ரல் 2 – தமிழ்நாடு முழுவதும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சில கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டது.
அவை, முஸ்லிம்களுக்கு தனித்த ஒதுக்கீடு உயர்த்த வேண்டும். நிர்ப்பந்த கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். மது விற்பனையைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சென்னை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற பேரணியை நேரடியாக தனது தலைமையிலே நடத்தினார். பின்னர் மாவட்ட ஆட்சியாளரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவைக் கையளித்தார்.
வக்ஃப் சட்டத் திருத்தங்களுக்கெதிரான போராட்டத்தில் வக்ஃப் சொத்துகளின் உரிமை குறையும் வகையிலான மசோதாவைத் திரும்பப் பெற வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இப்போராட்டத்தில் அவரின் பங்களிப்பாக நாடளாவிய உரைகள், ஊடகக்கருத்துரைகள், பொதுக்கூட்டங்கள் மூலம் போராடினார். “இது வக்ஃப் திருத்தம் அல்ல, வக்ஃப் நிர்மூலமாக்குதல்” என உரையாற்றி பெரிய எதிர்ப்பை எழுப்பினார்.
மத்திய, மாநில அரசுகளுக்கெதிரான கட்சித்தீர்மானங்கள் மற்றும் போராட்டங்கள், ரயில்வே கட்டண உயர்வுக்கெதிரான பிரசாரம், இந்தி திணிப்பு எதிர்ப்பு நடவடிக்கைகள், இலங்கை முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை கண்டிக்கும் பொதுக்கூட்டங்கள், இந்திய மத்திய அரசு இஸ்லாமியர்களுக்கெதிரான சட்டங்களைக்கொண்டு வந்த போது, மத்திய அரசை நோக்கி “இறைவனின் சட்டத்தை மாற்ற நீங்கள் யார்?” என பொங்கியெழுந்து காரசாரமான கருத்துக்களை முன்வைத்து உரையாற்றினார்.
இவை அனைத்திலும் காதர் முஹைதீன் முன்மொழிந்த தீர்மானங்கள், ஆர்ப்பாட்ட அழைப்புகள், தெருப்போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
கே.எம்.காதர் முஹைதீன் தலைமையில் நடத்தப்பட்ட போராட்டங்களில் சில முழுமையாகவும் பல பகுதியளவிலும் வெற்றியைத் தந்தன.
முஸ்லிம்களுக்கு இடவொதுக்கீடு உயர்வு கோரிக்கை (2013 ஆர்ப்பாட்டம்) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி பல ஆண்டுகளாகக் கொண்டு வந்த கோரிக்கையாக இருந்தது.
2007-ல் ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆணையம் அடிப்படையில் தமிழ்நாட்டில் முஸ்லிம்களுக்கு தனியொதுக்கீடு வழங்கப்பட்டது.
பின்னர் அதனை அதிகரிக்க வேண்டுமென்ற கோரிக்கையை 2013 ஆர்ப்பாட்டங்கள் மூலம் மீண்டும் எழுப்பினர்.
இதனால், தமிழ்நாடு அரசு 2010களின் இறுதியில் முஸ்லிம் சமூக நலத்திட்ட நிதியை அதிகரித்து, கல்வி உதவித்தொகை மற்றும் சமூகப்பங்கு அதிகரிப்பை நடைமுறையில் கொண்டு வந்தது.
வக்ஃப் சட்டத்திருத்த எதிர்ப்பு :
“இது வக்ஃப் திருத்தம் அல்ல, வக்ஃப் நிர்மூலமாக்குதல் எனக் கண்டித்தபோது, கடும் எதிர்ப்பின் காரணமாக மத்திய அரசு திருத்தச்சட்டத்தில் சில பிரிவுகளைத் தளர்த்தி மாற்றங்களைச் செய்தது. இது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மற்றும் முஸ்லிம் தலைவர்களின் ஒருங்கிணைந்த போராட்டத்தால் ஏற்பட்ட வெற்றி.
இந்தி திணிப்பு எதிர்ப்பு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தொடர்ந்து எடுத்துக்கொண்ட போராட்டத்தில் அவர் முக்கிய பங்காற்றினார்.
தமிழ்நாடு முழுக்க “இந்தி விரோத மனப்பான்மை” வலுவானதால், அரசுகள் “இந்தி கட்டாயம்” என்பதை பின்வாங்கியுள்ளன. இது நடைமுறையில் வெற்றி கண்ட போராட்டமாகும்.
இலங்கை முஸ்லிம்கள் மீதான தாக்குதல், கண்டனப் போராட்டங்கள் 2013–14 காலகட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மற்றும் காதர் முஹைதீன் தலைமையில் கண்டனப் பேரணிகள் நடந்தன.
இதனால் இந்திய அரசு வெளிநாட்டுக் கொள்கையில் இலங்கை தொடர்பான வாக்கெடுப்பில் மனித உரிமை தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கத் தள்ளப்பட்டது. இது சர்வதேசளவில் ஒரு அரசியல் அழுத்த வெற்றி.
இவ்வாறு சமூகநலப் போராட்டங்களில் பல்வேறு வெற்றிகளை தனது தலைமைத்துவத்தின் கீழ் பெற்றுக் கொடுத்தார்.
அவரின் சமூக நீதிக்காகப் போராடும் உயர்ந்த குணம், மொழிப்பற்று, மக்கள் பணிகளைக் கண்டு, மறைந்த தி.மு.க தலைவர் கலைஞர் மாண்புமிகு கருணாநிதி, பேராசிரியர் கே.எம்.காதர் முஹைதீன் அவர்களை தனக்கு நெருக்கமாக வைத்துக் கொண்டார்.
தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் இந்த உயர்வான “தகைசால் தமிழர் விருதை” பேராசிரியர் கே.எம்.காதர் முஹைதீன் அவர்களுக்கு வழங்கியதுடன், மிகப்பொருத்தமான ஒருவருக்கு வழங்கியதில் திருப்திப்படுவதாக பெருமிதமடைந்தார்.
அரசியலில் எதிர் முகாமிலிருப்பவர்களும் பேராசிரியருக்கான கன்னியத்தைக் கொடுப்பதற்கு ஒரு போதும் தவறுவதில்லை.
இவ்வாறு பல முக்கிய அரசியல் தலைவர்களின் கண்ணியத்தையும், நெருக்கத்தையும், நன்மதிப்பையும், வாழ்த்தையும் தன் வாழ்நாளில் பெற்றவராக பேராசிரியர் கே.எம்.காதர் முஹைதீன் திகழ்கிறார்.
அவர், இளமைப்பருவம் தொடக்கம் தற்போது வரை தான் ஏற்றுக்கொண்ட பல பணிகளை சிறப்பாக மேற்கொண்டு தனக்கான தனித்துவமான இடத்தை மக்கள் மத்தியில் பெற்றுக்கொண்டார்.
அரசியல் ரீதியாக பெரும் பதவிகளைப் பெற்றுக் கொண்ட போதும் மற்றவர்களுக்கு உதாரணமாக எளிமையான வாழ்வையே இன்றுவரை வாழ்ந்து கொண்டிருக்கிறார். தனது ஊதியத்தையும் மாணவர்களின் கல்விக்காக செலவு செய்து வருகின்றார்.
சமூகத்திற்கான வழிகாட்டியாகவும், அதன் நலனுக்காகப் பணியாற்றுபவராகவும் கருதப்படுவதால் “முனீருல் மில்லத்” (சமூகத்தின் ஒளி) என மக்களால் கௌரவமாக அழைக்கப்படுகிறார்.
பேராசிரியரின் உயர் பண்பு, ஆளுமை, அறிவார்ந்த பேச்சுக்களால் இந்தியாவில் மட்டுமன்றி, தமிழ் பேசும் மக்கள் வாழும் நாடுகளிலும் அவரை நேசிக்கும் பல தலைவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இலங்கை வாழ் முஸ்லிம்களைப் பொறுத்தவரை இந்திய முஸ்லிம்களை தொப்புள் கொடி உறவாகத்தான் பார்க்கிறார்கள். இலங்கை முஸ்லிம்கள் விவகாரங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி கரிசணையோடு கடந்த காலங்களில் தங்களால் முடிந்த பங்களிப்புகளை வழங்கி வந்திருக்கிறது.
இலங்கையிலுள்ள முஸ்லிம் அரசியல் தலைவர்களோடு தொடரான நெருக்கத்தை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மேற்கொண்டு வருகிறது.
இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத்தலைவர் உட்பட ஏனைய நிருவாகிகளுக்கும் இலங்கையிலுள்ள பெரும்பான்மை முஸ்லிம்களின் ஆதரவைப்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர், பாராளுமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர், சட்டமுதுமாணி ரவூப் ஹக்கீம் அவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுகிறது.
பேராசிரியரை நேசிப்பவராகவும், அவரின் ஆலோசனைகளுக்கு மதிப்பளிப்பவராகவும், அவரின் வழிகாட்டல்களை ஏற்பவராகவும் ரவூப் ஹக்கீம் இருக்கிறார்.
எனவே தான், இந்திய – இலங்கை முஸ்லிம்கள் தொப்புள் கொடி உறவைப் பலப்படுத்தவும், முஸ்லிம்கள் ஒரு சமூதாயமாகப் பரந்துபட்டவர்கள் என்ற அடிப்படையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் அதன் தலைவரின் உறவு இன்றியமையாதவொன்றாக இலங்கை முஸ்லிம்களுக்கு இருப்பதால் “தகைசால் தமிழர்” என்ற உயர்வான விருது மிகத் தகுதிவாய்ந்த பேராசிரியர் கே.எம்.காதர் முகைதீன் அவர்களுக்கு கிடைக்கப்பெற்றதையிட்டு இலங்கை முஸ்லிம்களும் பெருமிதம் கொள்கின்றார்கள்.
அந்த வகையில், இலங்கையில் நாளை (செப்டம்பர்) 19 ம் திகதி தலைநகர் கொழும்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தலைமையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் மற்றும் இலங்கையர்களோடு நட்புறவு கொண்ட திருச்சி ஊடகவியலாளர் சாகுல் ஹமீத் ஆகியோர் இணைந்து “தகைசால் தமிழர்” விருது வென்ற மூத்த அரசியல் தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத்தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் கே.எம்.காதர் முஹைதீன் அவர்களுக்கு இலங்கையில் கௌரவிப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
பல தலைமுறை கண்ட பேராசிரியர் எல்லோருக்கும் சிறந்த முன்மாதிகளுடையவராகத் திகழ்கிறார். எதிர்கால சந்ததிகளுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாகவே தனது வாழ்வியலை அமைத்துக் கொண்டிருக்கிறார். நாடு கடந்து பலரது கவனத்தை ஈர்த்த தலைவராகவும் இருக்கிறார்.
இவ்வாறான உயர்ந்த ஆளுமைச் சிறப்புகளுடன் வாழ்ந்து வருகின்ற பேராசிரியர் கே.எம்.காதர் முஹைதீன் அவர்களை வாழ்த்துவதற்கு எனக்கு வயது, அனுபவம் போதாது.
எனினும், அவரின் எளிமையான வாழ்க்கை, நற்குணங்கள், வீரியமிக்க பேச்சு ஆகியவற்றைக் கண்டு வியந்து போகும் இளைஞனாக, அவரிடமிருந்து வாழ்வுப் பாடங்களைப் பெறுகிறேன்.
அவரது வாழ்வியல் ஒரு நூலாகத் தொகுக்கப்பட்டு அடுத்த தலைமுறைக்கு வழங்கப்பட வேண்டும். அது நிகழ்ந்தால், நிச்சயம் சமூக அக்கறையுடனும், நெறியுடனும், நல்ல அரசியல் பண்புகளுடனும் கூடிய புதிய தலைமுறைத் தலைவர்கள் உருவாக பாடமாகவும் அறிவுரையாகவும் இருக்கும்.
பேராசிரியர் கே.எம்.காதர் முஹைதீன் அறிவார்ந்த சமூதாயத்திற்கும், எதிர்கால சந்ததிக்கும் மிகப்பெரும் பொக்கிஷம் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்திருக்க முடியாதென்பது நிதர்சனம்.
இவ்வளவு பொருத்தமான ஒருவருக்கு “தகைசால் தமிழர்” விருதினை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் நாடு கடந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், இலங்கையில் மாபெரும் கௌரவம் மூத்த அரசியல் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் முஹைதீன் அவர்களுக்கு வழங்கப்படுவதை, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் நிருவாகிகள், ஆதரவாளர்கள், அபிமானிகள், இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் மற்றும் தமிழக மக்கள், கடல் கடந்து வாழும் அன்னாரை நேசிக்கும் நல்லுள்ளங்கள் அனைவரும் பெருமிதம் கொள்வார்கள் என்பது திண்ணம்.
எம்.என்.எம்.யஸீர் அறபாத் இளங்கலை மாணி பட்டதாரி (B.A.), தீவு முழுவதற்குமான சமாதான நீதவான், சமூக செயற்பாட்டாளர் – ஓட்டமாவடி.
மன்னார் தீவுக்குள் உள்ள ஒவ்வொரு கிராமத்தையும் பிரதிநித்துவப்படுத்தி கலந்துகொண்ட அணிகளுக்கிடையான மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி கடந்த ஞாயிறு (14.09.2025) மன்னார் நகரசபை பொது மைதானத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
மன்னார் மக்கள் வங்கி கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த சுற்றுப் போட்டிக்கு மன்னார் மக்கள் வங்கிக் கிளையின் முகாமையாளர் ஜனாப் ஹக் முகம்மது அரூஸ் தலைமை தாங்கி நடத்திவைத்தார்.
குறித்த தொடரில் ஒவ்வொரு கிராமங்களையும் சேர்ந்த சுமார் 9 அணிகள் பங்குபற்றி தொடரை அலங்கரித்தனர்.
மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற குறித்த மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியில் எருக்கலம்பிட்டி, துள்ளுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு மற்றும் தலைமன்னார் பியர் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
முதலாவது அரையிறுதி போட்டியில் எருக்கலம்பிட்டி மற்றும் துள்ளுக்குடியிருப்பு அணிகள் மோதியதுடன், எருக்கலம்பிட்டி அணியை வீழ்த்தி துள்ளுக்குடியிருப்பு அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
இதேவேளை இரண்டாவது அரையிறுதி போட்டியில் புதுக்குடியிருப்பு மற்றும் தலைமன்னார் பியர் அணிகள் மோதியதுடன், தலைமன்னார் பியர் அணியை புதுக்குடியிருப்பு அணி வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இறுதிப்போட்டியில் புதுக்குடியிருப்பு அணியும் துள்ளுக்குடியிருப்பு அணியும் பலப்பரீட்சை நடத்தியதுடன், துள்ளுக்குடியிருப்பு அணியை வீழ்த்தி புதுக்குடியிருப்பு அணி சாம்பியன் ஆனது.
தொடரில் சாம்பியன் ஆன புதுக்குடியிருப்பு அணிக்கு வெற்றிக்கிண்ணம் மற்றும் பணப்பரிசு வழங்கப்பட்டதுடன், தொடரில் இரண்டாம் இடத்தை பிடித்த துள்ளுக்குடியிருப்பு அணிக்கும் கிண்ணம் மற்றும் பணப்பரிசு வழங்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் மன்னார் மக்கள் வங்கி கிளையின் முதன்மை வாடிக்கையாளர்களில் ஒருவரான ஜனாப் எம்.எச்.எம். பாஹிம் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், மன்னார் மக்கள் வங்கி கிளையின் ஊழியர்கள் மற்றும் கிரிக்கட் அபிமானிகள் குறித்த சுற்றுத்தொடரில் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
ஆசிய கிண்ண இருபதுக்கு – 20 கிரிக்கெட் தொடர் வரலாற்றில் அதிக அரைச்சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில், இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க, இந்திய வீரர் விராட் கோலியின் சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் ஆசியக் கிண்ணத்தொடரில் இடம்பெற்ற ஹொங்கொங் அணிக்கு எதிரான போட்டியில் அவர் அடித்த அரைச்சதத்தின் மூலம், ஆசியக் கிண்ண இருபதுக்கு – 20 தொடர்களில் அவர் குவித்த அரைசதங்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. இதன் மூலம், விராட் கோஹ்லி அடித்த 8 அரைசதங்கள் என்ற சாதனையை அவர் கடந்து புதிய மைல்கல்லை பிடித்துள்ளார்.
பெத்தும் நிஸ்ஸங்க ஆசிய கிண்ண இருபதுக்கு 20 போட்டிகளில் அசால்டாக 9 அரைசதங்கள் பெற்றுள்ளார். விராட் கோஹ்லி ஆசிய கிண்ண இருபதுக்கு – 20 போட்டிகளில் 8 அரைசதங்களைப் பெற்றுள்ளார்.
இலங்கை அணியின் இளம் வீரரான பெத்தும் நிஸ்ஸங்க, அவரது சிறப்பான ஆட்டத் திறமையால், சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து புதிய சாதனைகளை படைத்து வருகிறார். விராட் கோலி போன்ற அனுபவம் வாய்ந்த வீரரின் சாதனையை முறியடித்ததன் மூலம், அவர் தனது திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார்.
நாட்டின் 119,000 கிலோமீட்டர் வீதி வலையமைப்பை அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பிரதேச சபைப் பகுதிகளில் கிராமப்புற வீதிகளை நவீனமயமாக்கும் பணி அதிகாரசபையின் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன அறிவித்துள்ளார்.
தேசிய கிராமப்புற வீதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் களுத்துறை மாவட்டத்தின் அகலவத்த தேர்தல் தொகுதியில் வீதி அபிவிருத்தியை ஆரம்பித்து வைத்துப் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கிராமப்புற வீதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 100 கிராமப்புற வீதிகள் நவீனமயமாக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பல ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்ட கிராமப்புற வீதிகளை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் இந்த ஆண்டு ரூ. 14 பில்லியன் ஒதுக்கியுள்ளது, அடுத்த ஆண்டு மேலதிக நிதியும் ஒதுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தமையினால் கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த அனைத்து தடைகளையும் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி செயற்குழு நேற்று (16) மாலை கூடிய போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பான நடவடிக்கை எடுப்பதில் ஏற்படக்கூடிய சட்ட பின்னணி குறித்து ஆராய முன்னாள் சட்டமா அதிபரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான திலக் மாரப்பன தலைமையிலான குழுவை நியமிக்கவும் இதன்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியில் இருக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுக்கு இந்த தீர்மானத்தின் ஊடாக மீண்டும் இணைந்து பணியாற்றுவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில், அதன் தலைமையகமான சிறிகொத்தாவில் குறித்த செயற்குழுக் கூட்டம் நடைபெற்றிருந்தது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் பங்கேற்ற அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையிலான யோசனை ஒன்றும் இதன்போது நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.