Tuesday, June 2, 2026
Sponsored advertisementspot_img
Home Blog

நாகவில்லுவில் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ்வின் நினைவுதினம்!

பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று நாகவில்லுவில் இடம்பெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வு!

இலங்கை திருநாட்டில் பெளதீக ரீதியான பல வேலைத்திட்டங்களையும், இடம்பெயர்வு மற்றும் எல்லை நிர்ணயம் தொடர்பான பறந்துபட்ட அறிவினையும் கொண்டிருந்த எருக்கலம்பிட்டியை சேர்ந்த மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது வருட நினைவு தின நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

அந்த வகையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் நினைவுப் பேருரையும், புத்தக வெளியீடு நிகழ்வும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் ஏற்பாட்டில் நேற்று 25.08.2025 புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய அதிபர் ஜனாப் S.M. ஹுஸைமத் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், புத்தி ஜீவிகள் மற்றும் குடும்பத்தார்கள் கலந்தகொண்டமை விஷேட அம்சமாகும்.

சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் பொருளாளர் ஜனாப் ஏ.ஜி. அனீஸ் (Bsc.Agri) அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.

மேலும் இஸ்லாமிய கற்கை அறபு மொழிப் பீட, தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களினால் நூல் அறிமுக உரையும், நினைவுப் பேருரையும் மிகவும் உணர்வுபூர்வமாக நிகழ்த்தப்பட்டது.

கிழக்கு மற்றும் தென் கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பங்களிப்பு அளப்பெரியது என நினைவு கூறிய பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன், வடக்கில் ஏற்பட்ட யுத்தம் மற்றும் முஸ்லிம்களின் இடம்பெயர்வு குறித்து அதீத அக்கறையுடன் செயற்பட்ட மிக முக்கியமானவர் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்கள் எனவும் எடுத்துரைத்தார்.

வடக்கு முஸ்லிம்களின் இடம்பெயர்வு மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பில் அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களுடன் பலதரப்பட்ட கலந்துரையாடல்களை நடத்தி, சர்வதேசம் வரை இவ்விடயங்களை கொண்டுசென்ற மகான் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் என பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் தனது உரையில் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் புதல்வி சட்டத்தரணி எப்.சப்னா ஹஸ்புல்லாஹ் அவர்களினால் ஏற்புரை நிகழ்த்தப்பட்டதுடன், நூல் வெளியீடு நிகழ்வும் இடம்பெற்றது.

நூலின் முதற்பிரதியை ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தரும், புத்தளம் எருக்கலம்பிட்டி பள்ளிவாசல் நிர்வாக சபையின் முன்னாள் உறுப்பினருமான ஜனாப் ரஹ்மத்துல்லாஹ் (GS) அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

மேலும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் செயலாளர் ஜனாப் எஸ்.எச்.எம். றிஸ்னி அவர்களினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டதுடன், தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன், மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பாரியாருக்கும் நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில், பேராசிரியர்கள், கல்விமான்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், பாடசாலைச் சமூகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் குடும்பத்தார்கள் என பலரும் கலந்து சிறப்பித்ததுடன், ஈ நியூஸ் பெஸ்ட் ஊடக நிறுவனம் ஊடக அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரணிலுக்காக ஒன்று திரண்ட அரசியல் தலைவர்கள்!

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விசாரணை கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது, நாட்டின் அடிப்படை ஜனநாயக நிறுவனங்களின் வலிமை குறித்து கடுமையான கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் விளைவுகள் ஒரு தனிநபரின் அல்லது எந்தவொரு அரசியல் கட்சிகளின் தலைவிதியையும் விட, சமூகத்தின் உரிமைகளுக்கான பிரச்சினைகளை தோற்றிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் தலைவர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைகளை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது மற்றும் விளக்கமறியலை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து நடத்திய விசேட ஊடக சந்திப்பில் பங்கேற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரல முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் அறிக்கையை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

போர்த்துக்கல் அணி சாம்பியன் ஆனது!

0

‘நேஷன்ஸ் லீக்’ கால்பந்தில் போர்ச்சுகல் அணி சாம்பியன் ஆனது. பைனலில் ‘பெனால்டி ஷூட் அவுட்டில்’ 5-3 என ஸ்பெயினை வீழ்த்தியது.

ஐரோப்பிய கால்பந்து அணிகளுக்காக ‘நேஷன்ஸ் லீக்’ தொடர் நடத்தப்படுகிறது. மொத்தம் 54 அணிகள் பங்கேற்றன. நேற்று ஜெர்மனியின் முனிக் நகரில் நடந்த பைனலில், போர்ச்சுகல், நடப்பு யூரோ சாம்பியன் ஸ்பெயின் பலப்பரீட்சை நடத்தின. போட்டியின் 21வது நிமிடம் ஜுபிமெண்டி (ஸ்பெயின்), 26வது நிமிடம் மெண்டிஸ் (போர்ச்சுகல்) தலா ஒரு கோல் அடித்தனர். 45வது நிமிடம் மைக்கேல் ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் ஸ்பெயின் அணி 2-1 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் 61 வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். போர்ச்சுகல் அணிக்காக இவர் அடித்த 138வது கோல் இது. 90 நிமிட முடிவில் போட்டி 2-2 என சமன் ஆனது. அடுத்து நடந்த கூடுதல் நேரத்திலும் (30 நிமிடம்) இரு அணியும் கோல் அடிக்கவில்லை.

இதையடுத்து வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி ‘பெனால்டி ஷூட் அவுட்டுக்கு’ சென்றது. இரு அணிக்கும் தலா 5 வாய்ப்புகள் தரப்பட்டன. காயம் காரணமாக 88 வது நிமிடம் வெளியேறிய ரொனால்டோ, இதில் பங்கேற்கவில்லை.

முதல் 3 வாய்ப்பில் போர்ச்சுகலின் ராமோஸ், விடின்ஹா, பெர்ணான்டஸ் கோல் அடித்தனர். மறுபக்கம் ஸ்பெயின் தரப்பில் மெரினோ, பயேனா, இஸ்கோ கோல் அடிக்க 3-3 என ஆனது.

4வது வாய்ப்பில் மெண்டெஸ் (போர்ச்சுகல்) கோல் அடிக்க, ஸ்பெயினின் மோராட்டோ அடித்த பந்தை கோல் கீப்பர் டீகோ கோஸ்டா தடுத்து அசத்தினார்.

5வது வாய்ப்பில் நெவேஸ் கோல் அடித்தார். இதையடுத்து 5-3 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் ‘திரில்’ வெற்றி பெற்றது. 2019க்குப் பின் இத்தொடரில் மீண்டும் சாம்பியன் ஆனது.

தில்லையடியில் சிக்கிய கடத்தல் பீடி இலைகள்!

0

புத்தளத்தில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளுடன் வேன் ஒன்றும் பறிமுதல்!

இலங்கை கடற்படை, பொலிஸாருடன் இணைந்து, புத்தளம், தில்லையடி பகுதியில் 2025 ஜூன் 05 இரவு வேளையில் நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகள் கொண்ட ஒரு வேன் கைப்பற்றப்பட்டது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிறுவனம், புத்தளம் பொலிஸாருடன் இணைந்து தில்லையடி பகுதியில் நடத்திய இந்த சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்று சோதனை செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகளானது வாகனத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் வேன் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களால் ஆபத்தா?

விண்வெளியில் பூமியை சுற்றி வந்துக்கொண்டிருக்கும் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கொள்களை சீனா நினைத்தால் வெறும் 12 மணி நேரத்தில் தாக்கி அழித்துவிட முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் என்கிற செய்தி ஊடகத்தில் இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது தற்போது சீனா 99 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. இவை அனைத்தும் நான்ஜிங் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஆஸ்ட்ரோனாட்டிக்ஸ் பல்கலைக்கழகத்தின் விண்வெளிக் கட்டுப்பாட்டுத் துறையின் இயக்குநர் வூ யுன்ஹுவா தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இவை அனைத்தும் எலான் மஸ்கின் 1400 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை வெறும் 12 மணி நேரத்தில் காலி செய்துவிடும். சீன செயற்கைக்கோளில் லேசர், நுண் அலைகளை உருவாக்கும் கருவி, உளவு கருவிகள் பொருத்தப்பட்டிருக்கலாம். ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் வெறுமென நெட்வொர்க் கொடுக்க மட்டுமே பயன்படுத்தப்படுவதில்லை. தவிர, ராணுவ நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது என சீனா குற்றம்சாட்டி வருகிறது.

அதாவது, உக்ரைன்-ரஷ்யா போரில், உக்ரைன் படைகளுக்கு தகவல்கள் கொடுக்கவும், ரஷ்ய எல்லையை துல்லியமாக கண்காணிக்கவும் இந்த செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த 2022ம் ஆண்டு ரஷ்ய போரின்போது அப்போதைய உக்ரைனின் துணைப் பிரதமரான மைக்கைலோ ஃபெடோரோவ், “ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் சேவையை உடனடியாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த மஸ்க், “உடனடியாக சேவை வழங்கப்படும்” என்று கூறியிருந்தார்.

உக்ரைன் போருடன் மட்டுமே ஸ்டார்லிங்க் நிற்காது, நாளை சீனாவுக்கும்-தைவானுக்கும் பஞ்சாயது ஏற்பட்டால் அப்போதும், தைவானுக்கு சப்போர்ட் செய்ய ஸ்டார்லிங்க் வரும். எனவே இந்த கூட்டு நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்க சீனா இந்த புதிய செயற்கைக்கோள்களை உருவாக்கியிருக்கிறது.

கடந்த 2023ம் ஆண்டு இதற்கான பணிகளை சீனா தொடங்கியது. இந்த திட்டத்திற்கு ‘கியான்ஃபான் மெகா-விண்மீன் திட்டம்’ (Qianfan mega-constellation project) என்றும் பெயரிட்டிருந்தது. நோக்கம் உலகம் முழுவதும் இணைய தொடர்பை வழங்குவதாகும். இதற்காக மொத்தம் 15,000 சிறிய ரக செயற்கைக்கோள்களை ஏவ சீனா முடிவெடுத்தது. இதன் முதல் தொகுப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏவப்பட்டது. இதில் 18 செயற்கைக்கோள்கள் இருந்தன.

ஒவ்வொன்றும் சுமார் 300 கி.கி எடையில் இருந்தது. இவை பூமியிலிருந்து 800 கி.மீ உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டது. இதேபோன்று 2024 டிசம்பரில் அடுத்து இரண்டு தொகுதி ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. தற்போது மொத்தம் 99 செயற்கைக்கோள்கள் விண்வெளியில் இருக்கின்றன. 15,000 செயற்கைக்கோள்களை 3 கட்டங்களாக ஏவ இருக்கிறது. முதல் கட்டத்தில் 1,296 செயற்கைக்கோள்கள் ஏவப்படும். இதில் 648 செயற்கைக்கோள்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஏவப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் கன்னி உரை

0

அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்புவோம்

தேசியத்துவத்துடனும் ஐக்கியத்துடனும் ஒன்றுபட்டு நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க இன்று (23) காலை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

பதவிப் பிரமாணத்தின் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய முழுமையான உரை:

மக்களால் ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது நமது நாட்டின் ஜனநாயகத்திலிருக்கும் மிக முக்கியமான அம்சமாகும். தேர்தலில் வாக்களித்தல் மற்றும் ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதோடு ஜனநாயகம் நிறைவு பெறுவதில்லை. இது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சம் என்றாலும், நம் நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்த, கட்டமைப்புகளின் வலிமையும், சட்டங்களை வலுப்படுத்துவதும் அவசியம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனவே, எனது பதவிக்காலத்தில் இந்த நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.

அத்துடன், இந்த நாட்டில் ஜனநாயக முறையில் அதிகாரப் பரிமாற்றம் நடந்த வரலாறும் உண்டு. தேர்தலில் நிகழும் அதிகாரப் பரிமாற்றத்தை எந்தத் தலைவரும் நிராகரித்ததில்லை. அதற்கமைய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த மக்கள்ஆணையை சுமூகமாக ஏற்றுக்கொண்டதுடன், ஜனநாயக ரீதியில் அதிகாரத்தை கைமாற்றுவதற்கான அவரின் அர்ப்பணிப்பிற்கும் முன்னுதாரணத்திற்கும் நன்றி தெரிவிக்கிறேன். மேலும் எமக்கு கிடைப்பது மிகவும் சவால் நிறைந்த நாடு என்பதை நன்கு புரிந்து கொண்டிருக்கிறோம். நமது அரசியலில் தூய்மையான, மக்களால் எதிர்பார்க்கப்படும் சிறந்த அரசியல் கலாசாரத்திற்காக அவசியம் காணப்படுகிறது.அதற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

நம் நாட்டின் அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு நல்லெண்ணம் இல்லை. எனவே, அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் மீது மக்கள் மரியாதை மற்றும் நம்பிக்கையை மீட்டெடுக்க எங்கள் தரப்பிலிருந்து முடிந்த அனைத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.

மேலும், நமக்கு முன் இருக்கும் இந்த ஆழமான நெருக்கடியை வெறும் அரசோ, வெறும் அரசியல் கட்சியோ அல்லது ஒரு தனி நபரோ மட்டும் தீர்க்க முடியும் என்று நாங்கள் நம்பவில்லை. ஏனென்றால், நான் முன்பு கூறியது போல், நான் ஒரு மாயாஜால வித்தைக்காரனல்ல. நான் மந்திரவாதியும் இல்லை. நான் இந்த நாட்டின் சாதாரண குடிமகன். எம்மிடம் திறமைகள் உள்ளன. இயலாமைகளும் உள்ளன. தெரிந்த விடயங்களும் உள்ளன அதேபோன்று, தெரியாத விடயங்களும் உள்ளன.

ஆனால் திறமைகளைப் பயன்படுத்தி தெரியாதவற்றை சேகரித்துக்கொண்டு சிறந்த முடிவுகளை எடுத்து இந்த நாட்டை வழிநடத்துவதே எனது தலையாய பணியாகும். அந்த கூட்டுப் பங்களிப்பின் ஒரு அங்கமாக மாறுவது எனது பொறுப்பாகும். மேலும், இந்த நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதில் பொது மக்கள் மற்றும் அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் பாரிய பொறுப்பு உள்ளது. அந்தப் பொறுப்பை நிறைவேற்ற அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்.

ஆனால், நாட்டின் ஜனாதிபதி என்ற முறையில், இந்தப் பணியை முன்னின்று நடத்துவதில் எனக்கு முதன்மையான மற்றும் மிக முக்கியமான பொறுப்பு இருப்பதை நான் ஏற்றுக்கொண்டேன். எனவே, இந்தச் சவாலை வெற்றிகொள்வதற்காக எனக்குக் வழங்கப்பட்டுள்ள பணியை நான் உரிய முறையில் நிறைவேற்றுவேன் என்பதை செயற்பாடு மற்றும் நடைமுறை மூலம் எல்லா சந்தர்ப்பங்களிலும் இந்த நாட்டின் பிரஜைகளுக்கு வெளிப்படுத்த நான் தயாராக இருக்கிறேன்.

மேலும் நமது நாட்டுக்கு சர்வதேச ஆதரவு தேவை. எனவே, உலகில் எத்தகைய அதிகாரப் பிளவுகள் இருந்தாலும், ஒவ்வொரு நாட்டையும் எமக்கு மிகவும் சாதகமாக கையாள்வதே நமது எதிர்பார்ப்பாகும். நாம் உலகில் தனிமைப்படுத்தப்பட்ட நாடு அல்ல. உலகத்துடன் கூட்டாக முன்னேற வேண்டிய ஒரு நாடாகும். அது தொடர்பில் தேவையான முடிவுகளை எடுக்க நாங்கள் சிறிதும் தயங்குவதில்லை.

மேலும், நம் நாட்டைக் கட்டியெழுப்புவதில் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு பெரும் பங்கு உள்ளது. எனவே, நாட்டை மேலும் வலுவாகக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு அவர்கள் ஆதரவளிப்பார்கள் என நான் கருதுகின்றேன்.

நம் நாட்டின் ஜனநாயகத்தின் ஊடாக நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். அதற்காக மக்கள் எனக்கு வாக்களித்தனர்.

மேலும் எனக்கு வழங்கப்படாத வாக்குகளும் உள்ளன. எனவே, எங்களின் வெற்றியின் உள்ளடக்கம் மற்றும் அளவு குறித்து எங்களுக்கு நல்ல புரிதல் உள்ளது. எனவே, எங்களுக்கு ஆதரவு வழங்காத மற்றும் எங்களை நம்பாத பிரஜைகளின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெறுவதே எனது நிர்வாகத்தின் போது எனக்கு வழங்கப்பட்டுள்ள பணியாகும். அந்தப் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

எதிர்காலத்தில் இவை அனைத்தையும் நீங்கள் நடைமுறையில் கண்டுகொள்ள முடியும். அதற்கு அனைத்து மக்களின் ஆதரவையும் எதிர்பார்க்கின்றேன்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தேர்தலில் இவ்வாறுதான் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்

0

அதிகாரிகள் மற்றும் பிற தேவைகள் முடிந்த பிறகு, மாலை 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (19) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி பிற்பகல் 4.15 மணிளவில் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“எதிர்வரும் 21ம் திகதி வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள் பெறப்பட்டதும், அதிகாரிகள் மற்றும் இதர தேவைகள் முடிந்ததும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் இரவு 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

மாலை 4.15 மணிளவில் தபால் மூல வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

அத்துடன் மாவட்ட அளவில் ஒவ்வொரு வட்டாரத்திலும் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெறும்.

வாக்கு எண்ணிக்கையின் முடிவில் முடிவுகள் கிடைத்தவுடன் ஊடகங்களுக்கு வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையே முதலில் எண்ணப்படும்.

அந்தக் கணக்கெடுப்பின் பின்னர் (மாவட்ட அளவில் எண்ணும் பணி) முதலில் வாக்குப்பெட்டிகளில் உள்ள வாக்குகள் எண்ணப்படும்.

அதன் பிறகு, ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு, தொகுதி மற்றும் மாவட்ட அளவில் அது தயாரிக்கப்படுகிறது.

தேர்தல்கள் செயலகமே ஒட்டுமொத்த முடிவுகளைக் கணக்கிடும்.

எந்த வேட்பாளரும் 50 வீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்றுள்ளாரா என சரிபார்க்கப்படும்.

அப்படியானால், அந்த நேரத்தில் வாக்கு எண்ணும் பணிகள் நிறுத்தப்படும்.

அப்போது ஜனாதிபதியை நாங்கள் அறிவிப்போம்.

எந்த வேட்பாளருக்கும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் கிடைக்காவிடின், விருப்பு வாக்கு எண்ணிக்கைக்கு செல்ல வேண்டும்.

அங்கு, அதிக வாக்குகள் பெற்ற இரண்டு வேட்பாளர்கள் போட்டியில் வைத்து விட்டு  மீதமுள்ள 36 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து நீக்கப்படுவர்” என்றார்.

புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக மாறும்

0

புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வாத்தியாசலையாக மாற்றம் பெரும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று புத்தளத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ அலிசப்ரி ரஹீம் மற்றும் சிந்தக்க மாயாதுன்ன தலைமையில் புத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்திலே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

புத்தளம் மக்களின் நீண்ட நாள் தேவையாக இருந்து வருகின்ற புத்தளம் தல வைத்தியசாலையை தரமுயர்த்துவது தொடர்பாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ அலிசப்ரி ரஹீம் அவர்களினால் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோலுக்கிணங்க குறித்த வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.

மேலும் புத்தளத்தில் மீன் பிடி தொழிலை முன்னேற்றும் நோக்கத்தில் மீன் பிடி துறைமுகம் ஒன்றை அமைக்கும் யோசனையும் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டதுடன், அதற்கான முன்னெடுப்புகளும் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்டமை புத்தளம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நாட்டில் நிரந்தர பொருளாதார அபிவிருத்தியை நிலை நாட்ட தாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டை பொருளாதார அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவதே தனது பிரதான நோக்கம் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மொட்டுக்கட்சிக்கு எதிராக நிற்கும் முக்கிய அமைச்சர்கள்

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக மொட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளரை இந்த வாரம் அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்காதிருக்கவும், மொட்டு சின்னத்தில் தனியாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமக்கு ஆதரவு வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பியிருந்த கடிதம் நேற்றைய தினம் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தினால் அரசியல் குழுவில் முன்வைக்கப்பட்டது.

எவ்வாறாயினும் அந்த கடிதத்தை நிராகரிக்க அரசியல் குழுக் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுவில் 82 பேர் அங்கம் வகிப்பதுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் 72 பேர் பங்கேற்றனர்.

இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த 11 பேர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

மஹிந்தானந்த அலுத்கமகே, பந்துல குணவர்தன, பிரதீப் உந்துகொட, கோகிலா ஹர்ஷனி குணவர்தன, சஹன் பிரதீப், ரமேஸ் பத்திரன, கஞ்சன விஜேசேகர, பிரசன்ன ரணதுங்க, கனக ஹேரத், மொஹான் பிரியதர்ஷன ஆகியோர் கட்சியின் சார்பில் தனியான வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

அத்துடன் பிறிதொரு கட்சியின் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்கும் உறுப்பினர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் யோசனைக்கு 6 பேர் எதிராக வாக்களித்துள்ளனர்.

எவ்வாறாயினும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் எனக் கூறப்பட்ட தம்மிக பெரேரா தொடர்பில் அரசியல் குழுக் கூட்டத்தின்போது எந்தவித கருத்துக்களும் பரிமாற்றிக் கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவளிக்காத 11 பேர் உள்ளிட்ட தரப்பினர் நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தனவின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சைனப் ஆரம்பப் பாடசாலைக்கு ஆளுநர் வருகை!

0

புத்தளம் சைனப் ஆரம்ப பாடசாலையின் முப்பெரும் விழா பாடசாலை அதிபர் யஹியா தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து புத்தளம் ஜெய்னப் பாடசாலைக்கு 22 லட்சம் ரூபா பெறுமதியான நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு, சிறுவர் விளையாட்டு நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தல் மற்றும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் செயற்திட்டத்தின் கீழ் BCMH நிறுவனத்தினால் கற்றல் உபகரணம் வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் கடந்த செவ்வாய்க்கிழமை (16) வெகு விமர்சையாக இடம்பெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதியாக வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், விசேட அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மற்றும் கௌரவ அதிதியாக புத்தளம் வலயக்கல்விப் பணிப்பாளர் அர்ஜுன ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆரம்ப பாடசாலையின் முக்கியத்துவம் மற்றும் அறிவார்ந்த சமூகத்தை கட்டியெழுப்ப ஆரம்ப பாடசாலை ஆற்றிவருகின்ற அர்ப்பணிப்பு குறித்து விரிவாக பேசிய வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், புத்தளம் மாவட்ட பாடசாலைகளின் துரித வளர்ச்சி பற்றியும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

மேலும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் செயற்திட்டத்திற்கு வடமேல் மாகாண ஆளுநர் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் ஜவ்ஷி ஜமால்தின், இணைப்புச் செயலாளர் எச். அமீர் அலி ஆசிரியர், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் உட்பட உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் அயல் பாடசாலையின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு
நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு

ஹிருணிகாவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறை

0

கடத்தல் வழக்கில் முன்னாள் எம்.பி ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்தத் தீர்ப்பை அறிவித்தார்.

தெமட்டகொட பகுதியிலுள்ள கடை ஒன்றில் பணிபுரிந்த அமில பிரியந்த அமரசிங்க எனும் இளைஞர் ஒருவரை 2015 டிசம்பர் 21ஆம் திகதி ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு சொந்தமான டிபெண்டர் வாகனத்தில் கடத்திய வழக்கு விசாரணை முடிவில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

29 குற்றங்கள் தொடர்பில் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் 8 பேரும் குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில், அச்சம்பத்திற்கு உதவி, ஒத்தாசை புரிந்ததாக ஹிருணிகா மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்திருந்தார்.

அத்தோடு, சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவின் ஆதரவாளர்கள் 8 பேர் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைதான ஐந்தாம் சந்தேகநபரின் மகள் அளித்துள்ள வாக்குமூலத்தில், தமது தாயாருடன் தொடர்பு பேணிய நபர் ஒருவரை தாம் காண்பித்ததாகவும், அவரை தமது தந்தையும் அவருடன் சென்றவர்களும் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு ஹிருணிகாவிடம் அழைத்துச் சென்றதாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

ஓவியப்போட்டியில் எருக்கலம்பிட்டி மாணவன் முதலாமிடம்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட வட மாகாண மானவர்களுக்கிடையிலான சித்திரப்போட்டியில் மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்றார்.

வீதி விபத்துக்கள் இல்லாத நாளைக்கான பாடசாலையிலிருந்து அணிவக்குப்போம் எனும் தொனிப்பொருளில் கடந்த வியாழக்கிழமை (13.06.2024) அன்று நடாத்தப்பட்ட வட மாகாண மாணவர்களுக்கிடையிலான குறித்த சித்திரப்போட்டியில் சுமார் 2600 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

சித்திரப்போட்டியில் பங்குபற்றிய 2600 மாணவர்களில் 250 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு நேற்றைய தினம் (15.06.2024) அவர்களுக்கான போட்டி இடம்பெற்றது.

நடைபெற்று முடிந்த இறுதிச் சுற்றுப்போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்று பெருமதிமிக்க பரிசில்களை பெற்றுக்கொண்டார்.

முதலாம் இடம் பெற்ற முஹம்மது ஹுசைன் என்ற மாணவனுக்கு சான்றிதல், துவிச்சக்கரவண்டி மற்றும் 8500/- ரூபா பெறுமதியான வவுச்சரும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இதேவேளை குறித்த போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய இல்முதீன் முஹம்மது ஹஸ்பான் 7 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய மற்றொரு மாணவரான முஹம்மது சம்ஹான் 8 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

பாரிய சாவல்களுக்கு மத்தியில் தனி ஒரு மனிதனாக இம் மாணாவர்களை ஊக்கப்படுத்தி, தயார்ப்படுத்தி போட்டியில் பங்குபெறச் செய்து வெற்றிபெறச் செய்த எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியின் சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் அவர்களின் இம் முயற்சிக்கு, பாடசாலை சமூகம் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் நன்றி தெரிவித்தனர்.

தமக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வந்து தேசிய அளவில் இடம்பெறும் போட்டிகளில் மாணவர்களை பங்குபெறச் செய்வதே தனது இலக்கு என சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் எமது ஊடகத்திற்கு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை இராஜினாமா

0

நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்துள்ளனர்.

சாந்த நிரியல்ல உட்பட 15 பேர் கொண்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரின் அறிவித்தலுக்கு அமைய இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி திங்கட்கிழமை புதிய பணிப்பாளர் சபை நியமிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ “அத தெரண” விற்கு தெரிவித்தார்.

புத்தளம் எருக்கலம்பிட்டியில் கடும் வெள்ளம்

0

புத்தளம் பகுதியில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக புத்தளம் பகுதி முழுதும் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.

புத்தளம், தில்லையடி, பாலாவி, புத்தளம் எருக்கலம்பிட்டி, ஹிதாயத் நகர்,  மதுரங்குளி மற்றும் ஏனைய பல கிராமங்களும் வெள்ளித்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமமும் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 1500 குடும்பங்கள் இங்கு வாழ்ந்துவருவதுடன், அனைத்து வீடுகளும் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நூற்றிற்கும் அதிகமான வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் ஐநூற்றுக்கும் அதிகமான வீடுகள் பகுதி அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8ஆம் திகதி ஏற்பட்ட மழை வெள்ளித்தினால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் மற்றும் பாடசாலைகளில் தற்காலிகமாக  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு தினங்களாக இவர்களுக்கான சமைத்த உணவுகள் மூன்று வேலைகளிலும் ஊர் தனவந்தர்களின் உதவியுடனும், பள்ளிவாசல் நிர்வாக சபையின் வழிகாட்டலுடனும் வழங்கப்பட்டு வருவதுடன், ஊர் மக்களுக்கும் உணவு விநியோகங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

இவர்களுக்கான நிவாரண உதவிகள் இதுவரை அரசாங்கத்தினால் வழங்கப்படாத போதிலும், ஊர் மக்களின் பங்களிப்புடன் மாத்திரமே பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு விநியோகங்கள் இதுவரை  வழங்கப்பட்டு வருகின்றது.

புத்தளம் பொத்துவில்லு பகுதியில் உள்ள குளம் மழை நீரினால்  பெருக்கெடுத்துள்ளதால் குறித்த குளத்து நீர் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமத்திற்குள் தொடர்ந்தும் மூன்றாவது நாளாக ஊடறுத்து செல்வதால் வீடுகள் தொடர்ந்தும் நீருள் மூழ்கியுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்தின் நிவாரண உதவிக்காக பல மக்கள் தொடர்ந்தும் எதிர்பார்த்து காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆழ்கடலில் சோகம்: மாரவில மீனவர் மாயம்!

0

ஜூட் சமந்த

ஆழ்கடலில் நடந்த சோகம்: தோணியில் இருந்து தவறி விழுந்து வாலிப மீனவர் மாயம் – பரபரப்புத் தகவல்கள்!

சர்வதேச கடல் பரப்பில் மீன்பிடிக்கச் சென்று, ஆழ்கடலில் தவறி விழுந்து 23 வயதுடைய இளம் மீனவர் மாயமாகியுள்ள அதிர்ச்சிச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து மாரவில காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் துயரச் சம்பவத்தில் மாயமானவர் மஹவெவ – இஹல மஹவெவ பகுதியைச் சேர்ந்த மஹாமாலிகே மனோஜ் தினுவந்த சிசிர (23 வயது) என்ற இளம் மீனவராவார்.

கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி, வென்னப்புவ – வெல்மங்கரைய மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மேலும் 6 மீனவர்களுடன் “சஞ்சன புதா 13” என்ற படகில் இவர்கள் சர்வதேச கடல் பரப்பை நோக்கித் தொழிலுக்காகப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

நடுக்கடலில் ஒலித்த ஆபத்துச் சிக்னல்!

விசாரணையில் தெரியவந்துள்ள திடுக்கிடும் தகவல்களின்படி, கடந்த மே 30ஆம் தேதி காலையில் கடற்றொழில் அமைச்சகத்தில் இருந்து தோணியின் உரிமையாளருக்கு அவசர தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில், “சஞ்சன புதா 13” தோணியின் அவசர ஆபத்து எச்சரிக்கை ஒலி தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மாரவில – தல்வில வீதியில் வசிக்கும் தோணியின் உரிமையாளரான வர்ணகுலசூரிய பிரபாத் சஞ்சீவ ஜான்ஸ், உடனடியாகக் கடற்றொழில் திணைக்களத்தின் வானொலித் தொடர்பு மையம் ஊடாகத் தனது தோணியைத் தொடர்புகொண்டுள்ளார்.

உயிரைக் குடித்த அலைகள்: படகோட்டி விவரித்த நடுக்கடல் கொடூரம்

அப்போது தோணியின் ஓட்டுநர் துசித பெர்னாண்டோ தொடர்புகொண்டு, நடுக்கடலில் நடந்த அந்தத் துயரத்தை விவரித்துள்ளார்.

“நாங்கள் கடலில் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக சுரேஷ் மற்றும் தினுவந்த ஆகிய இரு மீனவர்களும் கடலுக்குள் தவறி விழுந்தனர். பெரும் போராட்டத்திற்குப் பிறகு சுரேஷ் என்பவரை எங்களால் பத்திரமாக மீட்க முடிந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக தினுவந்த கடலலைகளுக்குள் சிக்குண்டு மாயமாகிவிட்டார்…” என அவர் அழுதுகொண்டே கூறியுள்ளார்.

37 நாட்களின் பின் நேர்ந்த சோகம்

இந்த விபத்து நடக்கும்போது, அந்த மீனவர்கள் சர்வதேச கடற்பரப்பிற்குச் சென்று சரியாக 37 நாட்கள் ஆகியிருந்ததாகத் தோணியின் உரிமையாளர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

மாயமான இளம் மீனவர் தினுவந்தவின் உடல் இதுவரை கண்டெடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடலில் மூழ்கிய மகனை எண்ணி அவரது குடும்பத்தினர் கண்ணீரில் மூழ்கியுள்ளனர். இச்சம்பவம் குறித்து மாரவில காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புத்தளத்தில் விஸ்வரூபமெடுக்கும் டெங்கு அச்சுறுத்தல்!

0

ஊடகவியலாளர்: ஜூட் சமந்த

புத்தளம்: வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு புத்தளம் மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘தன்சல்கள்’ (அன்னதானங்கள்) சுகாதாரத்துறையினரின் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. எனினும், தன்சல்களுக்குப் பின்னர் முறையாகக் கழிவுகளை அகற்றாவிட்டால், கொடிய டெங்கு நோய் பரவும் பேராபத்து உள்ளதாக சுகாதார அதிகாரிகள் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

புத்தளம் மாவட்ட பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக அதிகாரிகள் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் (PHI) இணைந்து இந்த விசேட சோதனைகளை முன்னெடுத்திருந்தனர்.

அதிகாரிகளின் அதிரடி களம் இறக்கம்!

புத்தளம் மாவட்ட பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் திமுத் பொன்வீர அவர்களின் நேரடி வழிகாட்டலின் கீழ், இரு விசேட குழுக்கள் மாவட்டம் முழுவதும் தீவிரப் பயணங்களை மேற்கொண்டு தன்சல்களைப் பரிசோதித்து, தேவையான ஆலோசனைகளை வழங்கின.

இதற்கு இணையாக, மாவட்டத்தில் கடமையாற்றும் அனைத்து பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களும் தத்தமது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தன்சல்களைப் நேரில் சென்று பரிசோதித்ததுடன், சுகாதார வழிகாட்டல்களை வழங்கினர்.

“தன்சல்கள் நிறைவடைந்ததும், அங்கு சேரும் குப்பைகளை மிகவும் முறையான வழியில் அகற்ற வேண்டும். இல்லையெனில், வரவிருக்கும் மழைக்காலத்துடன் சேர்ந்து டெங்கு நோய் மிக வேகமாகப் பரவும் பேராபத்து ஏற்படும்!”உபுல் ரோஹண (சிலாபம் நிர்வாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்)

புண்ணியக் காரியமாகச் செய்யப்படும் அன்னதானங்கள், இறுதியில் பொதுமக்களின் உயிருக்கே வினையாக முடிந்துவிடக் கூடாது என்பதில் சுகாதாரத் துறையினர் கண்ணும்கருத்துமாய் உள்ளனர். பருவமழை ஆரம்பிக்கவுள்ள நிலையில், தேங்கும் குப்பைகளும் தண்ணீரும் டெங்கு நுளம்புகளின் சொர்க்கபுரியாக மாறிவிடும் என்பதால், சுற்றுச்சூழல் தூய்மையைப் பேணுமாறு அவர்கள் உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

புத்தளம் இறால் பண்ணையாளர்களுக்கு அரசு ரூ.1375 இலட்சம் உதவி!

0

புத்தளம் / சிலாபம் 01.06.2026

உள்நாட்டு நன்னீர் இறால் வளர்ப்புத் தொழிலை மீண்டும் கட்டியெழுப்பி, அதன் மூலம் நாட்டிற்குத் தேவையான அதிகளவிலான வெளிநாட்டு அந்நியச் செலாவணியை ஈட்டிக்கொள்வதற்காக அரசாங்கம் பல விசேட வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஏற்பட்ட ‘தித்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக புத்தளம் மாவட்டத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சிறு அளவிலான இறால் வர்த்தகர்களுக்கு இழப்பீடு வழங்கும் நிகழ்வு சிலாபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வின் நிறைவில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

‘தித்வா’ சூறாவளிப் பாதிப்பும் அரசாங்கத்தின் உடனடி நிவாரணமும்

‘தித்வா’ சூறாவளியின் சீற்றம் காரணமாக புத்தளம் மாவட்டத்தில் மாத்திரம் சுமார் 315 சிறு அளவிலான இறால் வளர்ப்பு வணிகங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தன. அவ்வாறு நலிவடைந்த தொழில்துறையை மீண்டும் தழைத்தோங்கச் செய்வதற்காக, அரசாங்கத்தினால் ரூபாய் 1375 லட்சம் (137.5 மில்லியன்) இழப்பீட்டுத் தொகை இதன்போது பயனாளிகளுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டது.

ஊடகவியலாளர்கள் மத்தியில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:

“கடந்த காலங்களில் வீழ்ச்சியடைந்திருந்த இறால் தொழில்துறையை மீட்டெடுப்பதற்கு அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டிருந்த தருணத்திலேயே ‘தித்வா’ சூறாவளி பெரும் சவாலாக உருவெடுத்தது. நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த இறால் வளர்ப்புத் துறையை மேலும் மேம்படுத்துவதே எமது முதன்மை நோக்கமாகும்.

இறால் வளர்ப்பு என்பது சுயமுயற்சியால் மிக விரைவாகக் கட்டியெழுப்பக்கூடிய ஒரு தொழில்துறையாகும். அதனை எமது உற்பத்தியாளர்களும் நாங்களும் ஆழமாக நம்புகிறோம். அதனால்தான் அரசாங்கம் இந்த இக்கட்டான சூழலில் அவர்களுக்கு இவ்வாறானதொரு பாரிய நிதியுதவியை வழங்கத் தீர்மானித்தது.”

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான்,

“புத்தளம் மாவட்டத்தில் மட்டும் தற்போது 927 இறால் பண்ணைகள் இயங்கி வருகின்றன. இந்தப் பண்ணைகளின் மூலம் உற்பத்தி செய்யப்படும் இறால்களைப் புலம்பெயர் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் ஊடாக நாட்டிற்கு பெருமளவிலான வெளிநாட்டு அந்நியச் செலாவணி கிடைக்கிறது. எனவே, இந்தத் தொழில்துறையை மேலும் பாதுகாத்து, அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதே எமது கடமையாகும். அரசாங்கம் என்ற ரீதியில் அதற்கான அதிகபட்ச பங்களிப்பை நாங்கள் வழங்குவோம்” எனக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் நீரியல்வள அபிவிருத்தி அதிகாரச் சபையின் தலைவர் கித்சிறி தர்மப்பிரிய, புத்தளம் மாவட்ட மேலதிக செயலாளர் சதுரக ஜயசிங்க உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

ஊடக அறிக்கை: ஜுட் சமந்த

கடந்த இரு தினங்களில் மட்டும் 24 பேர் உயிரிழப்பு!

0

கடந்த மே 29 மற்றும் 30 ஆகிய இரு தினங்களில் மாத்திரம் நாடு முழுவதும் இடம்பெற்ற 19 வீதி விபத்துக்களில் 24 பேர் உயிரிழந்துள்ளதாகப் போக்குவரத்துப் பாதுகாப்பு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் டப்ளியூ.பீ.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.

இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இந்தத் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார்.

கடந்த இரு தினங்களில் பதிவான ஒட்டுமொத்த விபத்துக்களில்
கடந்த 2 நாட்களில், 19 வீதி விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. இவற்றில், 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

இக்காலப்பகுதியில் 29 கடுமையான விபத்துக்களும், 96 சிறிய விபத்துக்களும், 19 சேத விபத்துக்களும் ஏற்பட்டுள்ளன.

இந்த வீதி விபத்துக்களுடன் தொடர்புடைய வாகனங்களில், உந்துருளிகளே அதிகளவில் விபத்துக்குள்ளாகியுள்ளன.

மோட்டார் சைக்கிள்கள் 15, முச்சக்கரவண்டிகள் 03, பாரவூர்திகள் 02, தனியார் பேருந்துகள் 02, கெப் ரக வாகனங்கள் 01 என்பன விபத்துக்குள்ளாகியுள்ளன.

உயிரிழந்த 24 பேரில் அதிகளவானோர் வீதியில் நடந்து சென்ற பாதசாரிகள் என்பது விசேட அம்சமாகும்.

இவ்வாறு விபத்தில் உயிரிழந்தவர்களில் பாதசாரிகள் (நடந்து சென்றவர்கள்) 13 பேர், உந்துருளி ஓட்டுநர்கள் 07 பேர், உந்துருளியின் பின் ஆசனத்தில் பயணித்த பயணிகள் 01, மிதிவண்டி (சைக்கிள்) ஓட்டுநர் 01 நபர், வாகன ஓட்டுநர்கள் 01, வாகனப் பயணிகள் 01 ஆவர்.

பண்டிகைக் காலங்களில் வாகனங்களைச் செலுத்தும் போதும், வீதிகளில் பயணிக்கும் போதும் பொதுமக்கள் மற்றும் ஓட்டுநர்கள் அதிக அவதானத்துடனும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும் எனப் பிரதி காவல்துறை மா அதிபர் இங்கு மேலும் வலியுறுத்தினார்.

QR முறைமையில் மேலும் கிடுக்குப்பிடி: அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!

0

தற்போது நடைமுறையிலுள்ள எரிபொருளுக்காக QR முறைமையை எதிர்காலத்தில் மிகவும் கடுமையான முறையில் அமுல்படுத்த எதிர்பார்ப்பதாகத் துறைமுகங்கள், சிவில் விமானச் சேவைகள் மற்றும் எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்துள்ளார். 

இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். 

இந்த நெருக்கடி நிலையான சூழலில், எரிபொருள் நுகர்வை ஏதேனும் ஒரு வழியில் கட்டுப்படுத்துவதே இதன் நோக்கமாகும் என்றும், இதன் மூலம் பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை ஓரளவிற்குக் குறைத்துக்கொள்ள முடியும் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

இந்த நெருக்கடி நிலைமை தொடர்வதன் காரணமாக, எரிபொருள் நுகர்வை பெருமளவில் குறைக்க வேண்டிய தேவை நமக்கு ஏற்பட்டுள்ளது. 

ஏற்கனவே QR முறைமை மற்றும் கோட்டா முறையை அறிமுகப்படுத்தியதன் மூலம் எரிபொருள் நுகர்வில் குறிப்பிடத்தக்களவு குறைப்பை ஏற்படுத்த முடிந்த போதிலும், அது இன்னும் நாட்டின் தேவைக்கான மட்டத்திற்கு வரவில்லை.” 

தற்போது உலக சந்தையில் எரிபொருளின் விலை பெருமளவில் அதிகரித்துள்ளதால், பெருமளவிலான வெளிநாட்டு நாணயம் நாட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலை உருவாகியுள்ளது. 

இதனை ஒப்பீட்டு ரீதியாகப் பார்த்தால், கடந்த ஜனவரி மாதத்தில் 186 மில்லியனாகவும், பெப்ரவரி மாதத்தில் 97 மில்லியனாகவும் இருந்த எரிபொருள் செலவினம், மே மாதமாகும்போது வெளிநாட்டு நாணயமாக 524 மில்லியன் டொலர்கள் வரை அதிகரித்துள்ளது. 

இந்த நிலைமையைத் தொடர்ந்து தாங்கிக்கொள்வது கடினம் எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர், ஒரு நாடாக நாம் சிந்தித்து எரிபொருள் நுகர்வில் நிச்சயமாக ஏதேனும் ஒரு குறைப்பை ஏற்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார். 

நாட்டை விட்டு வெளியேறும் டொலர்களின் அளவைக் குறைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், அது ஒருபுறம் எதிர்காலத்தில் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு வழிவகுப்பதுடன், ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார். 

எனவே, எதிர்காலத்தில் இலங்கை கனிப்பொருள் எண்ணெய் கூட்டுத்தாபனமும் (CPC), டிஜிட்டல் அமைச்சுடன் இணைந்து தற்போது நடைமுறையிலுள்ள QR முறைமையை மேலும் கடுமையான முறையில் செயல்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க எதிர்பார்ப்பதாக அமைச்சர் கூறினார். 

இதன் மூலம் எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தி, பொருளாதாரத்திற்கு ஏற்படும் தாக்கத்தை ஓரளவிற்குச் சமன் செய்ய முடியும் என எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வரைபடத்திலிருந்து அழியும் அபாயத்தில் உடப்பு கிராமம்!

0

கொழும்பில் இருந்து வடக்கே சுமார் 105 கிலோமீட்டர் பயணித்தால், இயற்கை அன்னை தன் இரு கரங்களால் அள்ளி அணைத்தபடி வைத்திருக்கும் ஒரு விசித்திரமான கிராமத்தை நீங்கள் அடையலாம். அதுதான் உடப்பு எனும் அழகிய கிராமம்.

மேற்குப் பக்கம் ஆர்ப்பரிக்கும் இந்தியப் பெருங்கடல், கிழக்கே அமைதி காக்கும் முந்தல் ஏரி, தெற்கே சுற்றுலாப் பயணிகளைக் காந்தமாய்க் கவரும் ஆண்டிமுனை மணல் குன்றுகள் என இயற்கையின் அத்தனை எழிலும் கொட்டிக்கிடக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பாரம்பரியத் தமிழ் கிராமமே இந்த உடப்பு.

சுமார் 15,000இற்கும் அதிகமான மக்கள் வாழும் இந்த உடப்பு கிராமம், வெறும் மீன்பிடி கிராமம் மட்டுமல்ல. பாரம்பரிய மீன்பிடித் தொழில், கடலோர இறால் வளர்ப்பு மற்றும் நுணுக்கமான பொற்கொல்லு தொழில் (தங்க நகைகள் செய்தல்) எனப் பன்முகத்தன்மையோடு இக்கிராமத்தின் பொருளாதாரம் சுழல்கிறது.

இந்தக் கிராமத்தின் மிக சுவாரஸ்யமான அம்சமே இவர்களின் கலாசாரப் பின்னணிதான். சிலாபம் கடற்கரையோரத்தைச் சுற்றியுள்ள பிற மீன்பிடி கிராம மக்கள் பெரும்பாலும் கத்தோலிக்கர்களாகவோ அல்லது பௌத்தர்களாகவோ, தங்களைச் சிங்களவர்களாக அடையாளப்படுத்திக் கொள்ளும் ‘கறாவே’ சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். ஆனால், அதற்கு நேர்மாறாக உடப்பு மக்கள் முற்றிலும் தனித்துவமானவர்கள்!

இவர்கள் ‘கரையார்’, ‘அம்பலவாணர்’, ‘ஆசாரி’ (பொற்கொல்லர்) மற்றும் ‘செட்டி’ போன்ற சமூகக் கட்டமைப்பைக் கொண்ட இந்துத் தமிழர்கள் ஆவர். இவர்கள் தமக்கே உரித்தான, முற்றிலும் மாறுபட்ட மற்றும் தனித்துவமான வழிபாட்டு முறைகளையும் வாழ்வியலையும் இன்றும் தங்களின் அடையாளமாகப் பாதுகாத்து வரும் அதேவேளை அன்றுதொட்டு இன்றுவரை முஸ்லிம்களும் தமிழர்களோடு ஒன்றோடு ஒன்றாக இதே கிராமத்தில் பூர்வீகமாக வாழ்ந்துவருகின்றனர்.

யுத்த வடுக்களும் தற்போதைய வாழ்வியலும்:

அமைதியான இந்த இயற்கைச் சூழலுக்குப் பின்னணியில், நீண்டகாலமாக நீடித்த இலங்கை உள்நாட்டுப் போரின் ஆறாத வடுக்களும் மறைந்துள்ளன. யுத்தத்தின் கோரப்பிடியால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இந்தக் கிராமத்தில், நாட்டின் பிற பகுதிகளிலிருந்து, குறிப்பாகக் கிழக்கின் திருகோணமலை மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்த பெருமளவிலான தமிழ் அகதிகளும் தஞ்சம் புகுந்து இங்கு வாழ்ந்து வருகின்றனர்.

யுத்த காலப் பாதிப்புகள் இந்த மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தையும் சமூகப் பொருளாதாரத்தையும் இன்னும் ஆழமாகப் பாதித்துக் கொண்டே இருக்கின்றன என்பது கசப்பான உண்மை.

அதிகாலையில் கடலுக்குச் சென்று மீன்பிடித்து, மாலையில் கரையேறும் எளிய தமிழ் மக்களின் வாழ்விடம். ஆன்மீகப் பெருமை வாய்ந்த, இலங்கையில் பிரசித்திபெற்ற ‘ஸ்ரீ பார்த்தசாரதி’ ஆலயத்தைக் கொண்டுள்ள புண்ணியமும், அமைதியும் நிறைந்த உடப்பு கிராமம் இயற்கையின் கோரத் தாண்டவத்தாலும், அதிகாரிகளின் அலட்சியத்தாலும் மெல்ல மெல்லக் கடலுக்குள் மூழ்கிக் கொண்டிருக்கும் அதிர்ச்சித் தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கரையைத் தாண்டும் கடல்: வீடுகளைக் காவு கொள்ளும் அலைகள்!

அண்மைக் காலமாக உடப்பு கிராமத்தில் கடலரிப்பின் வேகம் முன்னெப்போதையும் விடக் கடுமையாக அதிகரித்துள்ளது. அலைகளின் சீற்றம் தற்போது மக்களின் குடியிருப்புப் பகுதிகள் வரை ஊடுருவியுள்ளது. கடற்கரையோரம் இருந்த பல வீடுகள் ஏற்கனவே கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. எஞ்சியிருக்கும் வீடுகளும் எந்த நேரத்திலும் கடலுக்குள் விழலாம் என்ற மிக ஆபத்தான நிலையிலேயே உள்ளன.

“இரவில் தூங்கப் பயமாக இருக்கிறது. எப்போது அலை வந்து எங்கள் வீட்டை இழுத்துச் செல்லும் என்று தெரியவில்லை” என அப்பகுதி மக்கள் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர்.

கண்துடைப்பு நடவடிக்கைகள்: மண்ணுக்குள் புதைந்த கருங்கற்கள்!

மக்களின் தொடர் போராட்டங்களைத் தொடர்ந்து, தற்காலிகத் தீர்வாகக் கடலோரத்தில் சில கருங்கற்கள் கொட்டப்பட்டன. ஆனால், அது வெறும் “கண்துடைப்பு” நடவடிக்கை மட்டுமே என்பதைத் தற்போதைய நிலைமை நிரூபித்துள்ளது. முறையான திட்டமிடல் இன்றிப் போடப்பட்ட அந்தக் கற்களையும் தாண்டி கடல் நீர் ஊடுருவியுள்ளதுடன், அலைகளால் இழுத்து வரப்பட்ட மணல் அந்தக் கற்களை முழுமையாக மூடிவிட்டது. இதனால், கடலரிப்பைத் தடுப்பதற்காகச் செய்யப்பட்ட செலவுகள் அனைத்தும் வீணாகியுள்ளன என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

உடப்பு கிராமத்திற்கு ஆபத்து கடலிலிருந்து மட்டுமல்ல, நிலத்திலிருந்தும் வருகின்றது. மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு இந்தக் கிராமத்தைப் பெரிதும் வதைக்கிறது. குறிப்பாக, வெள்ளநீர் கலப்பு (Lagoon) வழியாகப் பெருங்கடலுக்கு வெளியேற்றப்படும்போது, அதை அண்மித்துள்ள குடியிருப்புகள் மற்றும் நிலப்பகுதிகள் மிகத் தீவிரமான அரிப்புக்குள்ளாகின்றன.

இது ஒருபுறமிருக்க, பருவப்பெயர்ச்சிக் காற்று (Monsoon Wind) வீசும் காலங்களில் கடலரிப்பின் வேகம் பல மடங்கு அதிகரித்து, கிராமத்தையே வரைபடத்திலிருந்து ஒட்டுமொத்தமாக இல்லாதொழிக்கும் ஒரு துர்பாக்கிய நிலையை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதிக்குக் கடிதம் அனுப்பியும் மௌனம் காக்கும் அரசு!

தங்கள் வாழ்வாதாரமும், சொந்த மண்ணும் அழிவதைக் கண்டு சகிக்காத உடப்பு கிராம மக்கள், இந்த அவல நிலை குறித்து நேரடியாக ஜனாதிபதிக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளனர். எனினும், இதுவரை எவ்விதமான ஆக்கபூர்வமான முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பதுதான் வேதனையான உண்மை.

உரிய அரசியல்வாதிகளும், அரச அதிகாரிகளும் இந்த விடயத்தில் தொடர்ந்து அலட்சியம் காட்டி, கோப்புகளை இழுத்தடித்து வருகின்றனர்.

இறுதி எச்சரிக்கை: அழியப் போகிறதா ஒரு பாரம்பரிய கிராமம்?

அதிகாரிகளின் இந்த மெத்தனப் போக்கு நீடித்தால், இலங்கையின் மிக அழகிய ஒரு மீனவக் கிராமமும், அங்குள்ள மக்களின் பல தசாப்த கால வரலாறும் கடலுக்குள் சங்கமமாகிவிடும் பேராபத்து எழுந்துள்ளது.

இனிமேலும் தற்காலிகக் கண்துடைப்புகளைச் செய்யாமல், உடப்பு கிராமத்தைக் காப்பாற்ற “நிரந்தரக் கடல் தடுப்பு அணை” போன்ற முறையான பொறியியல் தீர்வுகளை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்பதே ஒட்டுமொத்தப் பொதுமக்களினதும், சமூக ஆர்வலர்களினதும் அவசரக் கோரிக்கையாகும்!

கொழும்பில் கோலாகலமாக நிறைவடைந்த சர்வதேச கல்வி மாநாடு 2026!

0

கொழும்பு: சர்வதேச தரம் வாய்ந்த கல்விச் சூழலை உருவாக்குவதற்கும், நவீன கற்பித்தல் முறைகளை மேம்படுத்துவதற்குமான ஒரு பிரம்மாண்டமான தளம் கொழும்பில் அரங்கேறியுள்ளது. International Association For Quality Education (சர்வதேச தரமான கல்விக்கான அமைப்பு) மற்றும் இலங்கையின் முன்னணி உயர்கல்வி நிறுவனமான Amazon College ஆகியன இணைந்து நடத்திய “சர்வதேச தரமான கல்வி மாநாடு 2026” (International Quality Education Conference 2026) கொழும்பு ஸ்ரீலங்கா ஃபவுண்டேஷன் இன்ஸ்டிட்யூட் வளாகத்தில் மிக வெற்றிகரமாக நடைபெற்றது.

மாறிவரும் உலகிற்கு ஏற்ப கல்வித்துறையில் கொண்டுவரப்பட வேண்டிய மாற்றங்கள், குறிப்பாக முன்பள்ளிக் கல்வியின் தர மேம்பாடு மற்றும் சர்வதேச கல்வி ஒத்துழைப்புகள் குறித்து விரிவாக ஆராய்வதே இம்மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.

சர்வதேச பிரதிநிதிகளின் சங்கமம்

இலங்கையின் கல்வி வரலாற்றில் முக்கியத்துவமிக்க ஒரு நிகழ்வாகக் கருதப்படும் இம்மாநாட்டில் உள்நாட்டு கல்வியாளர்கள், கல்வித் துறை நிபுணர்கள் மற்றும் ஆய்வாளர்களுடன், இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்த 17 சர்வதேச பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அவர்கள் தரமான முன்பள்ளிக் கல்வி மேம்பாடு, புதுமையான கல்வி நடைமுறைகள் மற்றும் நாடுகளுக்கிடையிலான கல்விசார் ஒத்துழைப்புகள் குறித்து ஆழமான கலந்துரையாடல்களை மேற்கொண்டதோடு, தொழில்முறை தொடர்பு அமர்வுகளிலும் சுறுசுறுப்புடன் பங்கேற்றனர்.

இலங்கை வினியோகஸ்தர் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஆணைக்குழுவில் (TVEC) முறையாகப் பதிவு செய்யப்பட்ட ஓர் உயர்கல்வி நிறுவனமான அமேசான் கல்லூரி, இலங்கையில் உயர்ந்த கல்வித் தரநிலைகளைப் பேணுவதிலும், கல்வி மேம்பாட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதிலும் தனக்குள்ள அசைக்க முடியாத அர்ப்பணிப்பை இம்மாநாட்டின் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்டியுள்ளது.

சிறப்பு விருந்தினர்களின் வருகையும் வழிகாட்டல்களும்

கல்வி மற்றும் அரசியல் துறையைச் சேர்ந்த பல முக்கிய ஆளுமைகள் இந்நிகழ்வில் சிறப்பம்சமாகத் திகழ்ந்தனர்:

பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் ஷாணிக்கா ஹிரிம்புரகம அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

சிறப்பு விருந்தினர்களாக மேற்கு மாகாண கல்வி, கலாசாரம், கலை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் ஜீ. எல். வேர்மன் பெரேரா, கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் ரஞ்சித் பண்டார (பொருளாதார நிபுணர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் கோப் – COPE குழுவின் முன்னாள் தலைவர்), வடமத்திய மாகாண ஆரம்பக் குழந்தைகள் அபிவிருத்தி ஆணையத்தின் முன்னாள் பணிப்பாளர் நிமால் ஏகநாயக்க, சர்வதேச தரமான கல்வி சங்கத்தின் தலைவர் ஜனக கமல்கோட, Amazon College மற்றும் Campus நிறுவனத்தின் பணிப்பாளர் இல்ஹாம் மரிக்கார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆய்வுக் கட்டுரைகளும் பாராட்டுக்களும்

மாநாட்டின் மற்றொரு முக்கிய அங்கமாக, பல இளம் மற்றும் மூத்த ஆய்வாளர்கள் தங்களது புதிய ஆய்வு முன்மொழிவுகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர். கல்வித் துறையில் அறிவையும் சிறந்த நடைமுறைகளையும் பரிமாறிக்கொள்வதற்கு இந்த ஆய்வுகள் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளதுடன், மாநாட்டின் வெற்றிக்கு உழைத்த பேச்சாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் சர்வதேச பிரதிநிதிகள் அனைவரும் பாராட்டு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மட்டக்களப்பில் பஸ் – லொறி மோதி கோர விபத்து!

0

மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதான வீதி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் முன்பாக தனியர் பஸ்ஸொன்றும், சிறிய ரக லொறி ஒன்றும் நேற்று (26) காலை 10.30 மணியளவில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பஸ் நடத்துனர் உட்பட 5 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆரையம்பதியில் இருந்து கதுருவெல பிரதேசத்துக்கு பிரயாணித்த தனியார் பஸ்ஸும், வாழைச்சேனை பகுதியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற லொறியும் சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்துக்கு முன்னால் உள்ள பிரதான வீதி பாதசாரிகள் வீதியை கடக்கும் வெள்ளை கோட்டு பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பஸ் வண்டி நடத்துனர் மற்றும் பஸ் வண்டியில் பிரயாணிகள், லொறியில் சென்றவர் உட்பட 5 பேர் படுகாயமடைந்ததையடுத்து அவர்களை சித்தாண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பழைய முறைமையில் மாகாணசபை தேர்தல்: 41 கட்சிகள் வரலாற்றுப் பிரகடனம்!

0

நீண்டகாலமாகத் தாமதமடைந்து வரும் மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்துவது மற்றும் அதற்கான தேர்தல் முறைமைகள் குறித்து, அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று கொழும்பில் நடைபெற்றது.

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே அமைப்பு) ஏற்பாடு செய்திருந்த இக்கலந்துரையாடலில் பல்வேறு அரசியல் கட்சிகளின் பொதுச் செயலாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, மாகாண சபைத் தேர்தலை நடத்துவதன் முக்கியத்துவம், அது தொடர்ச்சியாகக் காலதாமதமாவதற்கான காரணங்கள் மற்றும் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

இச்சந்திப்பில் கலந்துகொண்ட 42 எதிர்க்கட்சிகள் மற்றும் கண்காணிப்பு அமைப்புகளில், ஒரேயொரு கட்சியைத் தவிர ஏனைய அனைத்துப் பிரிவினரும் இணைந்து ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டுப் பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

இக்கூட்டுப் பிரகடனம் தற்போதைய நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவிற்கும் ஆளுங்கட்சிக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இக்கூட்டுப் பிரகடனத்தின் முதன்மை உடன்பாடுகள் வருமாறு,

2017 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்கச் சட்டத் திருத்தத்திற்கு முன்னர் நடைமுறையிலிருந்த பழைய தேர்தல் முறையின் கீழ், தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்களை உடனடியாக நடத்துவதற்கு அனைத்துத் தரப்பினரும் உடன்பாடு கண்டுள்ளனர்.

நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் இறுதிப் பரிந்துரைகள் மற்றும் முடிவுகள் கிடைக்கும் வரை, இந்த பழைய தேர்தல் முறையையே தற்காலிகமாகப் பயன்படுத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை மட்டத்தில், தத்தமது கட்சிகளின் வேட்புமனுக்களில் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான பிரதிநிதித்துவத்தை 25 சதவீதமாக சுயாதீனமான அடிப்படையில் உறுதி செய்வதற்கு அரசியல் கட்சிகள் சம்மதம் தெரிவித்துள்ளன.

ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்நாட்டின் முதன்மை அரசியல் தலைவர்கள் பலர் இக்கலந்துரையாடலில் நேரில் பங்கேற்றிருந்தனர்.

எதிர்க்கட்சிகள் தரப்பில்: ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அதுகோரள, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

ஆளுங்கட்சித் தரப்பில் தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் நிஹால் அபேசிங்க கலந்துகொண்டார்.

அத்துடன், மாகாண சபைத் தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து ஆராய்ந்து நாடாளுமன்றத்திற்குப் பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவில், எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இக்கலந்துரையாடலில் முழுமையாகப் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாட்டுக்குள் மீண்டும் தரமற்ற நிலக்கரியா? வெடித்த புதிய சர்ச்சை!

0

முற்றாக நிராகரிக்கப்பட வேண்டிய நிலக்கரி ஏற்றிய கப்பலொன்று கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடல் எல்லையில் நங்கூரமிட்டுள்ளதாக ‘ஃப்ரீ லோயர்ஸ்’ அமைப்பு தெரிவித்துள்ளது. 

அவ்வமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி குறித்த நிலக்கரி கப்பலின் ஏற்றுமதி அறிக்கை பிரதிகள், குறித்த நிலக்கரி நிறுவனத்தின் அனைத்து அதிகாரிகள் மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட தரப்பினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

அந்த அறிக்கையின்படி, குறித்த நிலக்கரி கப்பல் தென்னாப்பிரிக்காவின் ‘ரிச்சர்ட்ஸ் பே கோல் டெர்மினல்’ துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு வந்துள்ளதுடன், அதில் 59,766 மெட்ரிக் தொன் நிலக்கரி இருப்பு உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், அந்த நிலக்கரி இருப்பின் சாம்பல் சதவீதம் 16.8 அலகுகளாகக் காணப்படுவதால், லங்கா நிலக்கரி நிறுவனம் கோரியிருந்த ஒப்பந்தப் பெறுமதியான 16 அலகுகளை விட அது அதிகரித்துள்ளது. 

இதன் காரணமாக, அபராதக் கொடுப்பனவுக்கு உட்படுத்தியோ அல்லது வேறு எந்த வகையிலோ அந்த நிலக்கரி இருப்பைக் கொள்வனவு செய்ய நிலக்கரி நிறுவனத்திற்கு சட்டரீதியான அதிகாரம் இல்லை என ‘ஃப்ரீ லோயர்ஸ்’ அமைப்பு தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது. 

இது தொடர்பாக ‘அத தெரண’ ஊடகத்திற்கு கருத்துத் தெரிவித்துள்ள வலுசக்தி அமைச்சர் பேராசிரியர் அனுர கருணாதிலக, குறித்த நிலக்கரி இருப்பு தரத்தில் குறைவாக இருந்தபோதிலும், அதனை நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்திக்காகப் பயன்படுத்த முடியும் எனத் தெரிவித்துள்ளார். 

ஒப்பந்த நடைமுறைகளின்படி, தரம் தொடர்பான இப்பிரச்சினை குறித்து ஏற்கனவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். 

அத்துடன், குறித்த கப்பல் விவகாரத்தில் பல்வேறு அமைப்புகள் தங்களது அரசியல் தேவைகளுக்காகப் பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் அனுர கருணாதிலக மேலும் தெரிவித்துள்ளார்.