Wednesday, May 13, 2026
Sponsored advertisementspot_img
Home Blog

நாகவில்லுவில் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ்வின் நினைவுதினம்!

பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று நாகவில்லுவில் இடம்பெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வு!

இலங்கை திருநாட்டில் பெளதீக ரீதியான பல வேலைத்திட்டங்களையும், இடம்பெயர்வு மற்றும் எல்லை நிர்ணயம் தொடர்பான பறந்துபட்ட அறிவினையும் கொண்டிருந்த எருக்கலம்பிட்டியை சேர்ந்த மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது வருட நினைவு தின நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

அந்த வகையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் நினைவுப் பேருரையும், புத்தக வெளியீடு நிகழ்வும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் ஏற்பாட்டில் நேற்று 25.08.2025 புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய அதிபர் ஜனாப் S.M. ஹுஸைமத் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், புத்தி ஜீவிகள் மற்றும் குடும்பத்தார்கள் கலந்தகொண்டமை விஷேட அம்சமாகும்.

சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் பொருளாளர் ஜனாப் ஏ.ஜி. அனீஸ் (Bsc.Agri) அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.

மேலும் இஸ்லாமிய கற்கை அறபு மொழிப் பீட, தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களினால் நூல் அறிமுக உரையும், நினைவுப் பேருரையும் மிகவும் உணர்வுபூர்வமாக நிகழ்த்தப்பட்டது.

கிழக்கு மற்றும் தென் கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பங்களிப்பு அளப்பெரியது என நினைவு கூறிய பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன், வடக்கில் ஏற்பட்ட யுத்தம் மற்றும் முஸ்லிம்களின் இடம்பெயர்வு குறித்து அதீத அக்கறையுடன் செயற்பட்ட மிக முக்கியமானவர் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்கள் எனவும் எடுத்துரைத்தார்.

வடக்கு முஸ்லிம்களின் இடம்பெயர்வு மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பில் அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களுடன் பலதரப்பட்ட கலந்துரையாடல்களை நடத்தி, சர்வதேசம் வரை இவ்விடயங்களை கொண்டுசென்ற மகான் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் என பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் தனது உரையில் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் புதல்வி சட்டத்தரணி எப்.சப்னா ஹஸ்புல்லாஹ் அவர்களினால் ஏற்புரை நிகழ்த்தப்பட்டதுடன், நூல் வெளியீடு நிகழ்வும் இடம்பெற்றது.

நூலின் முதற்பிரதியை ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தரும், புத்தளம் எருக்கலம்பிட்டி பள்ளிவாசல் நிர்வாக சபையின் முன்னாள் உறுப்பினருமான ஜனாப் ரஹ்மத்துல்லாஹ் (GS) அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

மேலும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் செயலாளர் ஜனாப் எஸ்.எச்.எம். றிஸ்னி அவர்களினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டதுடன், தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன், மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பாரியாருக்கும் நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில், பேராசிரியர்கள், கல்விமான்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், பாடசாலைச் சமூகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் குடும்பத்தார்கள் என பலரும் கலந்து சிறப்பித்ததுடன், ஈ நியூஸ் பெஸ்ட் ஊடக நிறுவனம் ஊடக அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரணிலுக்காக ஒன்று திரண்ட அரசியல் தலைவர்கள்!

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விசாரணை கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது, நாட்டின் அடிப்படை ஜனநாயக நிறுவனங்களின் வலிமை குறித்து கடுமையான கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் விளைவுகள் ஒரு தனிநபரின் அல்லது எந்தவொரு அரசியல் கட்சிகளின் தலைவிதியையும் விட, சமூகத்தின் உரிமைகளுக்கான பிரச்சினைகளை தோற்றிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் தலைவர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைகளை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது மற்றும் விளக்கமறியலை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து நடத்திய விசேட ஊடக சந்திப்பில் பங்கேற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரல முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் அறிக்கையை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

போர்த்துக்கல் அணி சாம்பியன் ஆனது!

0

‘நேஷன்ஸ் லீக்’ கால்பந்தில் போர்ச்சுகல் அணி சாம்பியன் ஆனது. பைனலில் ‘பெனால்டி ஷூட் அவுட்டில்’ 5-3 என ஸ்பெயினை வீழ்த்தியது.

ஐரோப்பிய கால்பந்து அணிகளுக்காக ‘நேஷன்ஸ் லீக்’ தொடர் நடத்தப்படுகிறது. மொத்தம் 54 அணிகள் பங்கேற்றன. நேற்று ஜெர்மனியின் முனிக் நகரில் நடந்த பைனலில், போர்ச்சுகல், நடப்பு யூரோ சாம்பியன் ஸ்பெயின் பலப்பரீட்சை நடத்தின. போட்டியின் 21வது நிமிடம் ஜுபிமெண்டி (ஸ்பெயின்), 26வது நிமிடம் மெண்டிஸ் (போர்ச்சுகல்) தலா ஒரு கோல் அடித்தனர். 45வது நிமிடம் மைக்கேல் ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் ஸ்பெயின் அணி 2-1 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் 61 வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். போர்ச்சுகல் அணிக்காக இவர் அடித்த 138வது கோல் இது. 90 நிமிட முடிவில் போட்டி 2-2 என சமன் ஆனது. அடுத்து நடந்த கூடுதல் நேரத்திலும் (30 நிமிடம்) இரு அணியும் கோல் அடிக்கவில்லை.

இதையடுத்து வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி ‘பெனால்டி ஷூட் அவுட்டுக்கு’ சென்றது. இரு அணிக்கும் தலா 5 வாய்ப்புகள் தரப்பட்டன. காயம் காரணமாக 88 வது நிமிடம் வெளியேறிய ரொனால்டோ, இதில் பங்கேற்கவில்லை.

முதல் 3 வாய்ப்பில் போர்ச்சுகலின் ராமோஸ், விடின்ஹா, பெர்ணான்டஸ் கோல் அடித்தனர். மறுபக்கம் ஸ்பெயின் தரப்பில் மெரினோ, பயேனா, இஸ்கோ கோல் அடிக்க 3-3 என ஆனது.

4வது வாய்ப்பில் மெண்டெஸ் (போர்ச்சுகல்) கோல் அடிக்க, ஸ்பெயினின் மோராட்டோ அடித்த பந்தை கோல் கீப்பர் டீகோ கோஸ்டா தடுத்து அசத்தினார்.

5வது வாய்ப்பில் நெவேஸ் கோல் அடித்தார். இதையடுத்து 5-3 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் ‘திரில்’ வெற்றி பெற்றது. 2019க்குப் பின் இத்தொடரில் மீண்டும் சாம்பியன் ஆனது.

தில்லையடியில் சிக்கிய கடத்தல் பீடி இலைகள்!

0

புத்தளத்தில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளுடன் வேன் ஒன்றும் பறிமுதல்!

இலங்கை கடற்படை, பொலிஸாருடன் இணைந்து, புத்தளம், தில்லையடி பகுதியில் 2025 ஜூன் 05 இரவு வேளையில் நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகள் கொண்ட ஒரு வேன் கைப்பற்றப்பட்டது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிறுவனம், புத்தளம் பொலிஸாருடன் இணைந்து தில்லையடி பகுதியில் நடத்திய இந்த சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்று சோதனை செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகளானது வாகனத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் வேன் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களால் ஆபத்தா?

விண்வெளியில் பூமியை சுற்றி வந்துக்கொண்டிருக்கும் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கொள்களை சீனா நினைத்தால் வெறும் 12 மணி நேரத்தில் தாக்கி அழித்துவிட முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் என்கிற செய்தி ஊடகத்தில் இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது தற்போது சீனா 99 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. இவை அனைத்தும் நான்ஜிங் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஆஸ்ட்ரோனாட்டிக்ஸ் பல்கலைக்கழகத்தின் விண்வெளிக் கட்டுப்பாட்டுத் துறையின் இயக்குநர் வூ யுன்ஹுவா தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இவை அனைத்தும் எலான் மஸ்கின் 1400 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை வெறும் 12 மணி நேரத்தில் காலி செய்துவிடும். சீன செயற்கைக்கோளில் லேசர், நுண் அலைகளை உருவாக்கும் கருவி, உளவு கருவிகள் பொருத்தப்பட்டிருக்கலாம். ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் வெறுமென நெட்வொர்க் கொடுக்க மட்டுமே பயன்படுத்தப்படுவதில்லை. தவிர, ராணுவ நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது என சீனா குற்றம்சாட்டி வருகிறது.

அதாவது, உக்ரைன்-ரஷ்யா போரில், உக்ரைன் படைகளுக்கு தகவல்கள் கொடுக்கவும், ரஷ்ய எல்லையை துல்லியமாக கண்காணிக்கவும் இந்த செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த 2022ம் ஆண்டு ரஷ்ய போரின்போது அப்போதைய உக்ரைனின் துணைப் பிரதமரான மைக்கைலோ ஃபெடோரோவ், “ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் சேவையை உடனடியாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த மஸ்க், “உடனடியாக சேவை வழங்கப்படும்” என்று கூறியிருந்தார்.

உக்ரைன் போருடன் மட்டுமே ஸ்டார்லிங்க் நிற்காது, நாளை சீனாவுக்கும்-தைவானுக்கும் பஞ்சாயது ஏற்பட்டால் அப்போதும், தைவானுக்கு சப்போர்ட் செய்ய ஸ்டார்லிங்க் வரும். எனவே இந்த கூட்டு நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்க சீனா இந்த புதிய செயற்கைக்கோள்களை உருவாக்கியிருக்கிறது.

கடந்த 2023ம் ஆண்டு இதற்கான பணிகளை சீனா தொடங்கியது. இந்த திட்டத்திற்கு ‘கியான்ஃபான் மெகா-விண்மீன் திட்டம்’ (Qianfan mega-constellation project) என்றும் பெயரிட்டிருந்தது. நோக்கம் உலகம் முழுவதும் இணைய தொடர்பை வழங்குவதாகும். இதற்காக மொத்தம் 15,000 சிறிய ரக செயற்கைக்கோள்களை ஏவ சீனா முடிவெடுத்தது. இதன் முதல் தொகுப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏவப்பட்டது. இதில் 18 செயற்கைக்கோள்கள் இருந்தன.

ஒவ்வொன்றும் சுமார் 300 கி.கி எடையில் இருந்தது. இவை பூமியிலிருந்து 800 கி.மீ உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டது. இதேபோன்று 2024 டிசம்பரில் அடுத்து இரண்டு தொகுதி ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. தற்போது மொத்தம் 99 செயற்கைக்கோள்கள் விண்வெளியில் இருக்கின்றன. 15,000 செயற்கைக்கோள்களை 3 கட்டங்களாக ஏவ இருக்கிறது. முதல் கட்டத்தில் 1,296 செயற்கைக்கோள்கள் ஏவப்படும். இதில் 648 செயற்கைக்கோள்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஏவப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் கன்னி உரை

0

அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்புவோம்

தேசியத்துவத்துடனும் ஐக்கியத்துடனும் ஒன்றுபட்டு நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க இன்று (23) காலை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

பதவிப் பிரமாணத்தின் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய முழுமையான உரை:

மக்களால் ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது நமது நாட்டின் ஜனநாயகத்திலிருக்கும் மிக முக்கியமான அம்சமாகும். தேர்தலில் வாக்களித்தல் மற்றும் ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதோடு ஜனநாயகம் நிறைவு பெறுவதில்லை. இது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சம் என்றாலும், நம் நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்த, கட்டமைப்புகளின் வலிமையும், சட்டங்களை வலுப்படுத்துவதும் அவசியம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனவே, எனது பதவிக்காலத்தில் இந்த நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.

அத்துடன், இந்த நாட்டில் ஜனநாயக முறையில் அதிகாரப் பரிமாற்றம் நடந்த வரலாறும் உண்டு. தேர்தலில் நிகழும் அதிகாரப் பரிமாற்றத்தை எந்தத் தலைவரும் நிராகரித்ததில்லை. அதற்கமைய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த மக்கள்ஆணையை சுமூகமாக ஏற்றுக்கொண்டதுடன், ஜனநாயக ரீதியில் அதிகாரத்தை கைமாற்றுவதற்கான அவரின் அர்ப்பணிப்பிற்கும் முன்னுதாரணத்திற்கும் நன்றி தெரிவிக்கிறேன். மேலும் எமக்கு கிடைப்பது மிகவும் சவால் நிறைந்த நாடு என்பதை நன்கு புரிந்து கொண்டிருக்கிறோம். நமது அரசியலில் தூய்மையான, மக்களால் எதிர்பார்க்கப்படும் சிறந்த அரசியல் கலாசாரத்திற்காக அவசியம் காணப்படுகிறது.அதற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

நம் நாட்டின் அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு நல்லெண்ணம் இல்லை. எனவே, அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் மீது மக்கள் மரியாதை மற்றும் நம்பிக்கையை மீட்டெடுக்க எங்கள் தரப்பிலிருந்து முடிந்த அனைத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.

மேலும், நமக்கு முன் இருக்கும் இந்த ஆழமான நெருக்கடியை வெறும் அரசோ, வெறும் அரசியல் கட்சியோ அல்லது ஒரு தனி நபரோ மட்டும் தீர்க்க முடியும் என்று நாங்கள் நம்பவில்லை. ஏனென்றால், நான் முன்பு கூறியது போல், நான் ஒரு மாயாஜால வித்தைக்காரனல்ல. நான் மந்திரவாதியும் இல்லை. நான் இந்த நாட்டின் சாதாரண குடிமகன். எம்மிடம் திறமைகள் உள்ளன. இயலாமைகளும் உள்ளன. தெரிந்த விடயங்களும் உள்ளன அதேபோன்று, தெரியாத விடயங்களும் உள்ளன.

ஆனால் திறமைகளைப் பயன்படுத்தி தெரியாதவற்றை சேகரித்துக்கொண்டு சிறந்த முடிவுகளை எடுத்து இந்த நாட்டை வழிநடத்துவதே எனது தலையாய பணியாகும். அந்த கூட்டுப் பங்களிப்பின் ஒரு அங்கமாக மாறுவது எனது பொறுப்பாகும். மேலும், இந்த நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதில் பொது மக்கள் மற்றும் அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் பாரிய பொறுப்பு உள்ளது. அந்தப் பொறுப்பை நிறைவேற்ற அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்.

ஆனால், நாட்டின் ஜனாதிபதி என்ற முறையில், இந்தப் பணியை முன்னின்று நடத்துவதில் எனக்கு முதன்மையான மற்றும் மிக முக்கியமான பொறுப்பு இருப்பதை நான் ஏற்றுக்கொண்டேன். எனவே, இந்தச் சவாலை வெற்றிகொள்வதற்காக எனக்குக் வழங்கப்பட்டுள்ள பணியை நான் உரிய முறையில் நிறைவேற்றுவேன் என்பதை செயற்பாடு மற்றும் நடைமுறை மூலம் எல்லா சந்தர்ப்பங்களிலும் இந்த நாட்டின் பிரஜைகளுக்கு வெளிப்படுத்த நான் தயாராக இருக்கிறேன்.

மேலும் நமது நாட்டுக்கு சர்வதேச ஆதரவு தேவை. எனவே, உலகில் எத்தகைய அதிகாரப் பிளவுகள் இருந்தாலும், ஒவ்வொரு நாட்டையும் எமக்கு மிகவும் சாதகமாக கையாள்வதே நமது எதிர்பார்ப்பாகும். நாம் உலகில் தனிமைப்படுத்தப்பட்ட நாடு அல்ல. உலகத்துடன் கூட்டாக முன்னேற வேண்டிய ஒரு நாடாகும். அது தொடர்பில் தேவையான முடிவுகளை எடுக்க நாங்கள் சிறிதும் தயங்குவதில்லை.

மேலும், நம் நாட்டைக் கட்டியெழுப்புவதில் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு பெரும் பங்கு உள்ளது. எனவே, நாட்டை மேலும் வலுவாகக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு அவர்கள் ஆதரவளிப்பார்கள் என நான் கருதுகின்றேன்.

நம் நாட்டின் ஜனநாயகத்தின் ஊடாக நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். அதற்காக மக்கள் எனக்கு வாக்களித்தனர்.

மேலும் எனக்கு வழங்கப்படாத வாக்குகளும் உள்ளன. எனவே, எங்களின் வெற்றியின் உள்ளடக்கம் மற்றும் அளவு குறித்து எங்களுக்கு நல்ல புரிதல் உள்ளது. எனவே, எங்களுக்கு ஆதரவு வழங்காத மற்றும் எங்களை நம்பாத பிரஜைகளின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெறுவதே எனது நிர்வாகத்தின் போது எனக்கு வழங்கப்பட்டுள்ள பணியாகும். அந்தப் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

எதிர்காலத்தில் இவை அனைத்தையும் நீங்கள் நடைமுறையில் கண்டுகொள்ள முடியும். அதற்கு அனைத்து மக்களின் ஆதரவையும் எதிர்பார்க்கின்றேன்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தேர்தலில் இவ்வாறுதான் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்

0

அதிகாரிகள் மற்றும் பிற தேவைகள் முடிந்த பிறகு, மாலை 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (19) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி பிற்பகல் 4.15 மணிளவில் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“எதிர்வரும் 21ம் திகதி வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள் பெறப்பட்டதும், அதிகாரிகள் மற்றும் இதர தேவைகள் முடிந்ததும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் இரவு 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

மாலை 4.15 மணிளவில் தபால் மூல வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

அத்துடன் மாவட்ட அளவில் ஒவ்வொரு வட்டாரத்திலும் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெறும்.

வாக்கு எண்ணிக்கையின் முடிவில் முடிவுகள் கிடைத்தவுடன் ஊடகங்களுக்கு வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையே முதலில் எண்ணப்படும்.

அந்தக் கணக்கெடுப்பின் பின்னர் (மாவட்ட அளவில் எண்ணும் பணி) முதலில் வாக்குப்பெட்டிகளில் உள்ள வாக்குகள் எண்ணப்படும்.

அதன் பிறகு, ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு, தொகுதி மற்றும் மாவட்ட அளவில் அது தயாரிக்கப்படுகிறது.

தேர்தல்கள் செயலகமே ஒட்டுமொத்த முடிவுகளைக் கணக்கிடும்.

எந்த வேட்பாளரும் 50 வீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்றுள்ளாரா என சரிபார்க்கப்படும்.

அப்படியானால், அந்த நேரத்தில் வாக்கு எண்ணும் பணிகள் நிறுத்தப்படும்.

அப்போது ஜனாதிபதியை நாங்கள் அறிவிப்போம்.

எந்த வேட்பாளருக்கும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் கிடைக்காவிடின், விருப்பு வாக்கு எண்ணிக்கைக்கு செல்ல வேண்டும்.

அங்கு, அதிக வாக்குகள் பெற்ற இரண்டு வேட்பாளர்கள் போட்டியில் வைத்து விட்டு  மீதமுள்ள 36 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து நீக்கப்படுவர்” என்றார்.

புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக மாறும்

0

புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வாத்தியாசலையாக மாற்றம் பெரும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று புத்தளத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ அலிசப்ரி ரஹீம் மற்றும் சிந்தக்க மாயாதுன்ன தலைமையில் புத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்திலே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

புத்தளம் மக்களின் நீண்ட நாள் தேவையாக இருந்து வருகின்ற புத்தளம் தல வைத்தியசாலையை தரமுயர்த்துவது தொடர்பாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ அலிசப்ரி ரஹீம் அவர்களினால் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோலுக்கிணங்க குறித்த வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.

மேலும் புத்தளத்தில் மீன் பிடி தொழிலை முன்னேற்றும் நோக்கத்தில் மீன் பிடி துறைமுகம் ஒன்றை அமைக்கும் யோசனையும் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டதுடன், அதற்கான முன்னெடுப்புகளும் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்டமை புத்தளம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நாட்டில் நிரந்தர பொருளாதார அபிவிருத்தியை நிலை நாட்ட தாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டை பொருளாதார அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவதே தனது பிரதான நோக்கம் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மொட்டுக்கட்சிக்கு எதிராக நிற்கும் முக்கிய அமைச்சர்கள்

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக மொட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளரை இந்த வாரம் அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்காதிருக்கவும், மொட்டு சின்னத்தில் தனியாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமக்கு ஆதரவு வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பியிருந்த கடிதம் நேற்றைய தினம் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தினால் அரசியல் குழுவில் முன்வைக்கப்பட்டது.

எவ்வாறாயினும் அந்த கடிதத்தை நிராகரிக்க அரசியல் குழுக் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுவில் 82 பேர் அங்கம் வகிப்பதுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் 72 பேர் பங்கேற்றனர்.

இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த 11 பேர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

மஹிந்தானந்த அலுத்கமகே, பந்துல குணவர்தன, பிரதீப் உந்துகொட, கோகிலா ஹர்ஷனி குணவர்தன, சஹன் பிரதீப், ரமேஸ் பத்திரன, கஞ்சன விஜேசேகர, பிரசன்ன ரணதுங்க, கனக ஹேரத், மொஹான் பிரியதர்ஷன ஆகியோர் கட்சியின் சார்பில் தனியான வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

அத்துடன் பிறிதொரு கட்சியின் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்கும் உறுப்பினர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் யோசனைக்கு 6 பேர் எதிராக வாக்களித்துள்ளனர்.

எவ்வாறாயினும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் எனக் கூறப்பட்ட தம்மிக பெரேரா தொடர்பில் அரசியல் குழுக் கூட்டத்தின்போது எந்தவித கருத்துக்களும் பரிமாற்றிக் கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவளிக்காத 11 பேர் உள்ளிட்ட தரப்பினர் நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தனவின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சைனப் ஆரம்பப் பாடசாலைக்கு ஆளுநர் வருகை!

0

புத்தளம் சைனப் ஆரம்ப பாடசாலையின் முப்பெரும் விழா பாடசாலை அதிபர் யஹியா தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து புத்தளம் ஜெய்னப் பாடசாலைக்கு 22 லட்சம் ரூபா பெறுமதியான நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு, சிறுவர் விளையாட்டு நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தல் மற்றும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் செயற்திட்டத்தின் கீழ் BCMH நிறுவனத்தினால் கற்றல் உபகரணம் வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் கடந்த செவ்வாய்க்கிழமை (16) வெகு விமர்சையாக இடம்பெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதியாக வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், விசேட அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மற்றும் கௌரவ அதிதியாக புத்தளம் வலயக்கல்விப் பணிப்பாளர் அர்ஜுன ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆரம்ப பாடசாலையின் முக்கியத்துவம் மற்றும் அறிவார்ந்த சமூகத்தை கட்டியெழுப்ப ஆரம்ப பாடசாலை ஆற்றிவருகின்ற அர்ப்பணிப்பு குறித்து விரிவாக பேசிய வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், புத்தளம் மாவட்ட பாடசாலைகளின் துரித வளர்ச்சி பற்றியும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

மேலும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் செயற்திட்டத்திற்கு வடமேல் மாகாண ஆளுநர் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் ஜவ்ஷி ஜமால்தின், இணைப்புச் செயலாளர் எச். அமீர் அலி ஆசிரியர், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் உட்பட உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் அயல் பாடசாலையின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு
நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு

ஹிருணிகாவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறை

0

கடத்தல் வழக்கில் முன்னாள் எம்.பி ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்தத் தீர்ப்பை அறிவித்தார்.

தெமட்டகொட பகுதியிலுள்ள கடை ஒன்றில் பணிபுரிந்த அமில பிரியந்த அமரசிங்க எனும் இளைஞர் ஒருவரை 2015 டிசம்பர் 21ஆம் திகதி ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு சொந்தமான டிபெண்டர் வாகனத்தில் கடத்திய வழக்கு விசாரணை முடிவில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

29 குற்றங்கள் தொடர்பில் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் 8 பேரும் குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில், அச்சம்பத்திற்கு உதவி, ஒத்தாசை புரிந்ததாக ஹிருணிகா மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்திருந்தார்.

அத்தோடு, சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவின் ஆதரவாளர்கள் 8 பேர் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைதான ஐந்தாம் சந்தேகநபரின் மகள் அளித்துள்ள வாக்குமூலத்தில், தமது தாயாருடன் தொடர்பு பேணிய நபர் ஒருவரை தாம் காண்பித்ததாகவும், அவரை தமது தந்தையும் அவருடன் சென்றவர்களும் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு ஹிருணிகாவிடம் அழைத்துச் சென்றதாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

ஓவியப்போட்டியில் எருக்கலம்பிட்டி மாணவன் முதலாமிடம்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட வட மாகாண மானவர்களுக்கிடையிலான சித்திரப்போட்டியில் மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்றார்.

வீதி விபத்துக்கள் இல்லாத நாளைக்கான பாடசாலையிலிருந்து அணிவக்குப்போம் எனும் தொனிப்பொருளில் கடந்த வியாழக்கிழமை (13.06.2024) அன்று நடாத்தப்பட்ட வட மாகாண மாணவர்களுக்கிடையிலான குறித்த சித்திரப்போட்டியில் சுமார் 2600 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

சித்திரப்போட்டியில் பங்குபற்றிய 2600 மாணவர்களில் 250 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு நேற்றைய தினம் (15.06.2024) அவர்களுக்கான போட்டி இடம்பெற்றது.

நடைபெற்று முடிந்த இறுதிச் சுற்றுப்போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்று பெருமதிமிக்க பரிசில்களை பெற்றுக்கொண்டார்.

முதலாம் இடம் பெற்ற முஹம்மது ஹுசைன் என்ற மாணவனுக்கு சான்றிதல், துவிச்சக்கரவண்டி மற்றும் 8500/- ரூபா பெறுமதியான வவுச்சரும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இதேவேளை குறித்த போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய இல்முதீன் முஹம்மது ஹஸ்பான் 7 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய மற்றொரு மாணவரான முஹம்மது சம்ஹான் 8 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

பாரிய சாவல்களுக்கு மத்தியில் தனி ஒரு மனிதனாக இம் மாணாவர்களை ஊக்கப்படுத்தி, தயார்ப்படுத்தி போட்டியில் பங்குபெறச் செய்து வெற்றிபெறச் செய்த எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியின் சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் அவர்களின் இம் முயற்சிக்கு, பாடசாலை சமூகம் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் நன்றி தெரிவித்தனர்.

தமக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வந்து தேசிய அளவில் இடம்பெறும் போட்டிகளில் மாணவர்களை பங்குபெறச் செய்வதே தனது இலக்கு என சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் எமது ஊடகத்திற்கு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை இராஜினாமா

0

நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்துள்ளனர்.

சாந்த நிரியல்ல உட்பட 15 பேர் கொண்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரின் அறிவித்தலுக்கு அமைய இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி திங்கட்கிழமை புதிய பணிப்பாளர் சபை நியமிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ “அத தெரண” விற்கு தெரிவித்தார்.

புத்தளம் எருக்கலம்பிட்டியில் கடும் வெள்ளம்

0

புத்தளம் பகுதியில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக புத்தளம் பகுதி முழுதும் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.

புத்தளம், தில்லையடி, பாலாவி, புத்தளம் எருக்கலம்பிட்டி, ஹிதாயத் நகர்,  மதுரங்குளி மற்றும் ஏனைய பல கிராமங்களும் வெள்ளித்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமமும் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 1500 குடும்பங்கள் இங்கு வாழ்ந்துவருவதுடன், அனைத்து வீடுகளும் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நூற்றிற்கும் அதிகமான வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் ஐநூற்றுக்கும் அதிகமான வீடுகள் பகுதி அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8ஆம் திகதி ஏற்பட்ட மழை வெள்ளித்தினால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் மற்றும் பாடசாலைகளில் தற்காலிகமாக  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு தினங்களாக இவர்களுக்கான சமைத்த உணவுகள் மூன்று வேலைகளிலும் ஊர் தனவந்தர்களின் உதவியுடனும், பள்ளிவாசல் நிர்வாக சபையின் வழிகாட்டலுடனும் வழங்கப்பட்டு வருவதுடன், ஊர் மக்களுக்கும் உணவு விநியோகங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

இவர்களுக்கான நிவாரண உதவிகள் இதுவரை அரசாங்கத்தினால் வழங்கப்படாத போதிலும், ஊர் மக்களின் பங்களிப்புடன் மாத்திரமே பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு விநியோகங்கள் இதுவரை  வழங்கப்பட்டு வருகின்றது.

புத்தளம் பொத்துவில்லு பகுதியில் உள்ள குளம் மழை நீரினால்  பெருக்கெடுத்துள்ளதால் குறித்த குளத்து நீர் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமத்திற்குள் தொடர்ந்தும் மூன்றாவது நாளாக ஊடறுத்து செல்வதால் வீடுகள் தொடர்ந்தும் நீருள் மூழ்கியுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்தின் நிவாரண உதவிக்காக பல மக்கள் தொடர்ந்தும் எதிர்பார்த்து காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக ஜோதிடர் நியமனம்!

0

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், அரசியல் நாகரீகத்தின் அடிப்படையில் பல்வேறு கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்று வருகிறார். நேற்றைய தொடர்ச்சியாக, இன்றும் முக்கியத் தலைவர்களைச் சந்தித்து உரையாடினார்.

சென்னை வேளச்சேரியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை அவரது இல்லத்தில் முதல்வர் விஜய் இன்று மாலை சந்தித்துப் பேசினார். விஜய்யை வாசலுக்கே வந்து உற்சாகமாக வரவேற்ற திருமாவளவன், அவருக்கு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையை (Preamble) பரிசாக வழங்கினார்.

இந்தச் சந்திப்பின் போது எம்.எல்.ஏ-க்கள் வன்னியரசு, சிந்தனை செல்வன் ஆகியோர் உடனிருந்தனர். சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “விஜய்யின் அரசியல் நாகரீகம் மற்றும் முதிர்ச்சி பாராட்டுக்குரியது. அவர் என்.டி.ஏ கூட்டணிக்கு ஆதரவு கோரவில்லை. எடப்பாடி பழனிசாமியையும் சந்திக்குமாறு நான் அறிவுறுத்தினேன், அவரும் சந்திப்பதாகத் தெரிவித்தார்” எனக் குறிப்பிட்டார்.

ரிக்கி ரத்தன் பண்டிட் நியமனம்: திருமாவளவன் விளக்கம்

தமிழக முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக, தவெக செய்தித் தொடர்பாளரும் ஜோதிடருமான ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியது. விசிக எம்.பி ரவிக்குமார் உள்ளிட்டோர் இதற்கு விமர்சனம் செய்திருந்த நிலையில், திருமாவளவன் இது குறித்துத் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்.

  • செய்தித் தொடர்பாளர் என்ற தகுதி: ரத்தன் பண்டிட் ஏற்கனவே தமிழக வெற்றி கழகத்தின் செய்தித் தொடர்பாளராக இருக்கிறார். அந்த அடிப்படையிலேயே அவருக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
  • ஜோதிடமும் மதவாதமும் ஒன்றல்ல: “ஜோசியத்தை நம்புவது வேறு, மதவாதத்தில் ஈடுபடுவது வேறு. ஜோதிடத்தை நம்புகிறவர்கள் எல்லோரும் வெறுப்பு அரசியலைப் பேசுவதில்லை. அவர் ஜோதிடராக இருக்கலாம், ஆனால் கட்சியின் பொறுப்பாளர் என்பதால் இந்த நியமனம் நடந்திருக்கலாம்,” என்று அவர் தெரிவித்தார்.

முதல்வர் விஜய் தனது அரசியல் பயணத்தில் ஒருமித்த போக்கைக் கடைப்பிடிக்கும் விதமாகப் பல்வேறு தலைவர்களைச் சந்தித்து வருகிறார்:

  • பெரியார் திடல்: கி. வீரமணியைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
  • முக்கியத் தலைவர்கள்: முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ், சீமான் மற்றும் வைகோ ஆகியோரைச் சந்தித்தார்.
  • இன்றைய சந்திப்புகள்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் மற்றும் சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் நிர்வாகிகளைச் சந்தித்த பின், திருமாவளவனைச் சந்தித்துப் பேசினார்.

முதல்வர் விஜய்யின் இந்தத் தொடர் சந்திப்புகள் தமிழக அரசியலில் ஒரு ஆரோக்கியமான போக்காகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ரத்தன் பண்டிட் நியமனம் குறித்த சர்ச்சைகளுக்குத் திருமாவளவன் அளித்துள்ள விளக்கம் கவனத்தைப் பெற்றுள்ளது.

அமைச்சரவையில் எட்டப்பட்ட சிறப்புமிக்க அதிரடி முடிவுகள்!

0

நேற்று (மே 11) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் போக்குவரத்து, சுகாதாரம், விவசாயம் மற்றும் நீதித்துறை சார்ந்த பல முக்கிய தீர்மானங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

1. கொட்டாவையில் புதிய கலப்பு அபிவிருத்தித் திட்டம்

கொட்டாவை நகர மையத்தில் அமைந்துள்ள “வலவ்வெவத்தை” (Walawwewatta) எனப்படும் ஒரு ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் கலப்பு அபிவிருத்தித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இந்த நிலத்தை 99 வருட கால நீண்டகால குத்தகை அடிப்படையில் பொருத்தமான முதலீட்டாளர் ஒருவருக்கு வழங்குவதற்கு முன்மொழிவுகள் கோரப்படவுள்ளன.
2. இலங்கை – பெலாரஸ் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

வெளிவிவகார அமைச்சர் 2026-05-12 முதல் 2026-05-15 வரை பெலாரஸ் குடியரசிற்கு மேற்கொள்ளவுள்ள உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் பின்வரும் துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படவுள்ளன:

  • விமான சேவைகள் ஒப்பந்தம்.
  • உயர்கல்வித் துறை சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தம்.
  • சுகாதார சேவைகள் மேம்பாடு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம்.
3. யாழ்ப்பாண திருவள்ளுவர் கலாசார நிலைய நிர்வாகம்

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் 11 மாடிகளைக் கொண்டதாகக் கட்டப்பட்ட யாழ்ப்பாண திருவள்ளுவர் கலாசார நிலையத்தை நிர்வகிப்பதற்காக ஒரு ‘அறக்கட்டளையை’ (Trust) நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையம் விரைவில் யாழ்ப்பாண மாநகர சபையிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

4. விவசாயம் மற்றும் நீர்ப்பாசனத் திட்டங்கள்
  • யான் ஓயா நீர்த்தேக்கம்: இந்நீர்த்தேக்க நிர்மாணிப்பால் வயல் நிலங்களை இழந்த 245 குடும்பங்களுக்கு, மாற்றுக் காணிகளுக்குப் பதிலாக மேலதிக இழப்பீடாகக் குடும்பமொன்றுக்கு 18 இலட்சம் ரூபா வீதம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
  • வாரி மகிமை (Wari Mahima): சிறிய அளவிலான நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் எள்ளங்க (Cascade) முறைமைகளைப் புனரமைப்பதற்கான தேசியத் திட்டத்திற்காக 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 1,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
5. நெடுஞ்சாலைகள் மற்றும் மருத்துவ விநியோகக் கொள்முதல்
  • மத்திய அதிவேக வீதி: மத்திய அதிவேக வீதியின் மூன்றாம் பிரிவின் (இரம்புக்கனை முதல் கலகெதர வரை) இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகளை உள்நாட்டு நிறுவனங்களுக்கு 7 ஒப்பந்தப் பொதிகளின் கீழ் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • மருந்துப் பொருட்கள்: கடுமையான பாக்டீரியா தொற்று சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மெரோபெனெம் (Meropenem) ஊசி மருந்தின் 865,000 குப்பிகளை இந்திய நிறுவனத்திடம் இருந்து கொள்வனவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
6. சட்டத் திருத்தங்கள்
  • ஆயுள் காப்பீடு மற்றும் முதலீட்டு வங்கிச் சட்டம்: காலாவதியான 1975 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க சட்டத்தைத் தற்போதைய வணிகச் சூழலுக்கு ஏற்ப திருத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
  • விலங்குகள் சட்டம்: ‘விலங்கு’ என்ற வரைவிலக்கணத்திற்குள் பன்றி, ஆடு மற்றும் செம்மறியாடுகளையும் உள்ளடக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
  • பெண்கள் மற்றும் சிறுவர் வேலைவாய்ப்புச் சட்டம்: இச்சட்டத்தின் கீழ் நீதிமன்றங்களால் விதிக்கப்படும் தண்டப்பணத்தை 10,000 ரூபாவிலிருந்து 100,000 ரூபா வரை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மினி சூறாவளியால் சிதைந்த பரந்தன் சந்தை:அழுகும் காய்கறிகள்!

கிளிநொச்சி மாவட்டத்தின் முக்கிய வர்த்தக மையங்களில் ஒன்றான பரந்தன் பொதுச் சந்தை மற்றும் அதனைச் சூழவுள்ள வர்த்தக நிலையங்கள், உரிய பராமரிப்பின்றி சிதைவடைந்து காணப்படுவதால் அங்குள்ள வியாபாரிகள் சொல்லொண்ணாத் துயரங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி இப்பகுதியில் வீசிய மினி சூறாவளி காற்று காரணமாக, சந்தை கட்டடத் தொகுதி மற்றும் பல வர்த்தக நிலையங்களின் கூரைகள் முற்றாகப் பெயர்க்கப்பட்டு தூக்கி வீசப்பட்டன. இந்த இயற்கை அனர்த்தம் ஏற்பட்டுப் பல நாட்களாகியும், இதுவரை எவ்விதமான புனரமைப்புப் பணிகளும் முன்னெடுக்கப்படவில்லை எனப் பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாகத் தொடர்ச்சியாகப் பலத்த மழை பெய்து வருகின்றது. சந்தையின் கூரை சீர்செய்யப்படாத நிலையில், அங்குள்ள காய்கறி வியாபாரிகள் மழையிலேயே நனைந்தபடி வியாபாரம் செய்ய வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

“மழையில் நனைவதால் காய்கறிகள் மிக விரைவாக அழுகிவிடுகின்றன. விற்பனைக்காகக் கொண்டு வரும் பொருட்களை மீண்டும் பயன்படுத்த முடியாத நிலையில் வீச வேண்டியுள்ளது. கூரை இல்லாததால் நாங்களும் மழையில் நனைந்தே வியாபாரம் செய்கிறோம்,” எனத் தங்களின் வேதனையை வியாபாரிகள் பகிர்ந்துகொண்டனர்.

சந்தை வளாகம் பாதுகாப்பற்ற முறையில் இருப்பதாலும், சேறும் சகதியுமாகக் காணப்படுவதாலும் நுகர்வோரின் வருகை பெருமளவு குறைந்துள்ளது. இதன் காரணமாக வியாபாரிகள் நாளாந்தம் பாரிய நஷ்டத்தை எதிர்நோக்கி வருகின்றனர். நுகர்வோர் வரத் தயங்குவதால் தங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தங்கள் வாழ்வாதாரத்தை நம்பியுள்ள இந்தப் பகுதியைச் சீரமைக்க அதிகாரிகள் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

“நாங்கள் அன்றாடம் உழைத்து வாழ்பவர்கள். அதிகாரிகளின் அசமந்தப் போக்கால் எமது பிள்ளைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, மிக விரைவில் சந்தை கட்டடத் தொகுதியைப் புனரமைத்துத் தர வேண்டும்” எனப் பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.

9 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

0

தொடர்ச்சியாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக, பல பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையை மேலும் நீடிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தீர்மானித்துள்ளது.

நிலைமைக்கு ஏற்ப, ‘முதலாம் கட்டம்’ (விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தல்) மற்றும் ‘இரண்டாம் கட்டம்’ (கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தல்) ஆகியவற்றின் கீழ் இந்த மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல் நடைமுறைப்படுத்தப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், பின்வரும் மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட பகுதிகளுக்கு ‘விழிப்புடன் இருக்குமாறு’ (Level 1) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது:

பதுளை மாவட்டம்: பண்டாரவளை, களுத்துறை மாவட்டம்: வலல்லாவிட்ட, கண்டி மாவட்டம்: உடபலாத, பாதஹேவாஹெட்ட, கங்க இஹல கோரளை, அக்குரணை, கங்கவட்ட கோரளை, தொலுவ, பஸ்பாகே கோரளை, கேகாலை மாவட்டம்: அரநாயக்க, ரம்புக்கனை, மாவனல்லை, கேகாலை, புலத்கோஹுபிட்டிய, யட்டியாந்தோட்டை, குருநாகல் மாவட்டம்: ரிதீகம, மாத்தளை மாவட்டம்: ரிதிகம, நெலுவ, அம்பன்கங்கை கோரளை, ரத்தோட்டை, மொனராகலை மாவட்டம்: வெல்லவாய, படல்கும்புர, இரத்தினபுரி மாவட்டம்: கலவானை, கொடகவெல மற்றும் இரத்தினபுரி

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிவிப்பின்படி, இந்த எச்சரிக்கை இன்று (12) மாலை 4.00 மணி முதல் நாளை மாலை 4.00 மணி வரை அமுலில் இருக்கும்.

ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 12 வான்கதவுகள் திறப்பு!

0

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருவதால், அதன் 12 வான்கதவுகளைத் திறக்க நீர்ப்பாசன பொறியியலாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேல் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையினால் கலாபெவ நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, ராஜாங்கனை நீர்த்தேக்கத்திற்கு வரும் நீரின் அளவு வெகுவாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக, நீர்த்தேக்கத்தின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு நேற்று (11) மாலை முதல் இவ்வாறு திறக்கப்படும் வான்கதவுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான நீர்ப்பாசன பொறியியலாளர் குறிப்பிட்டார்.

அதன்படி, தற்போது நீர்த்தேக்கத்தின் 04 வான்கதவுகள் தலா 06 அடி வரையிலும், 04 வான்கதவுகள் தலா 05 அடி வரையிலும் மற்றும் 04 வான்கதவுகள் தலா 04 அடி வரையிலும் திறக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் வினாடிக்கு 14,287 கன அடி நீர் கலா ஓயாவிற்கு திறந்து விடப்படுவதாகக் கூறப்படுகிறது.

நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், கலா ஓயாவின் இருபுறமும் உள்ள தாழ்நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்களும், ஓயாவைப் பயன்படுத்துபவர்களும் இது குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

சிலாபம் “சங்க பவன” மன்றத்தின் 14வது மங்கள விழா!

0

சிலாபம் “சங்க பவன” (Sanka Bhavana) கலைமன்றத்தினால் 14-வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட, பாரம்பரிய நடனக் கலைஞர்களுக்கான ‘ஹிச வெஸ்’ (Hisa Ves) மற்றும் ‘ஷீர்ஷாபரண’ (Headdress) அணிவிக்கும் ந்ருத்யாபிஷேக மங்கள விழா அண்மையில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

இந்த ஆபிஷேக நிகழ்வின் ஆரம்பகட்ட சடங்குகள் சிலாபம் விஜயாராம விகாரையில் இடம்பெற்றன. அங்கு பாரம்பரிய முறைப்படி மத வழிபாடுகள் நடத்தப்பட்டு, மாணவர்களுக்கு புனிதமான தலைக்கவசங்கள் அணிவிக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, இந்த மங்கள விழாவின் சிறப்பம்சமாக, கலை ஆபிஷேகம் பெற்ற மாணவ, மாணவிகளின் கௌரவ ஊர்வலம் மற்றும் நடன அரங்கேற்றம் அனுராதபுரம் ருவன்வெலிசாய மகா விகாரையின் முன்னால் பக்திபூர்வமாக நடைபெற்றது.

நீண்டகால நடனப் பயிற்சியை நிறைவு செய்த 33 மாணவ, மாணவிகள் இதன்போது உத்தியோகபூர்வமாக ‘வெஸ்’ மற்றும் ‘ஷீர்ஷாபரண’ தலைக்கவசங்களை அணிந்து கலைத்துறைக்குள் தடம் பதித்தனர்.

பண்டைய ஹெல (சிங்கள) கலாச்சார முறைப்படியும், மத ரீதியான கிரியைகளுடனும் இந்த விழா மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் மகா சங்கத்தினர், கலைமன்றத்தின் ஆசிரியர்கள் மற்றும் கலை ஆபிஷேகம் பெற்ற பிள்ளைகளின் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்வின் இறுதியில், கலைப் பட்டம் பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளும் இணைந்து குழுப் புகைப்படம் ஒன்றையும் எடுத்துக்கொண்டனர். இது அவர்களின் கலைப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.

செய்தி: ஜுட் சமந்தா

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த எச்சரிக்கை!

0

இலங்கையை அண்மித்த பகுதியில் நிலவும் குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த வளிமண்டலத் தளம்பல் நிலை ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக வலுவடைந்து வட அகலாங்கு 10.1N இற்கும் கிழக்கு நெட்டங்கு 82.5E இற்கும் அருகில் நிலை கொண்டுள்ளது. 

இந்தத் தொகுதியின் தாக்கம் காரணமாக, நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை எதிர்வரும் சில நாட்களுக்கு மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அத்துடன், நாட்டைச் சூழவுள்ள ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளிலும் விரிகுடாவின் ஆழம் கூடிய கடற்பரப்புகளிலும் பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும். 

எவ்வாறாயினும், இன்றைய தினம் வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில், அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு இது காற்றழுத்தத் தாழ்வு பிரதேசமாக வலுவடைவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

எனவே, இது தொடர்பான அறிவிப்புகள் மற்றும் முன்னறிவிப்புகள் குறித்து அவதானமாக இருக்குமாறு மீனவர்கள், கடற்சார் சமூகம் உள்ளிட்ட பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.

அரிய நிகழ்வு.. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற விஜய்! 

0

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள ஜோசப் விஜய், இன்று முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது வீட்டிற்குச் சென்று சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ள நிகழ்வு முக்கிய அரசியல் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்வரை, இந்நாள் முதல்வர் சந்தித்து வாழ்த்துப் பெற்ற நிகழ்வுகள் அரிதாக தமிழக அரசியலில் நடந்துள்ளன.

தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பொதுவாகத் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது, புதிய முதலமைச்சர் பதவியேற்பு விழாவிற்கு முன்னாள் முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவதும், அதில் அவர்கள் கலந்து கொள்வதும் ஒரு மரபாக இருந்து வருகிறது. 2021-ல் மு.க. ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் ஓ. பன்னீர்செல்வம் கலந்துகொண்டிருந்தார்.

பொதுவாகத் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது, புதிய முதலமைச்சர் பதவியேற்பு விழாவிற்கு முன்னாள் முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவதும், அதில் அவர்கள் கலந்து கொள்வதும் ஒரு மரபாக இருந்து வருகிறது. 2021-ல் மு.க. ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் ஓ. பன்னீர்செல்வம் கலந்துகொண்டிருந்தார்.

மு.க.ஸ்டாலின் – ஓ.பன்னீர்செல்வம் (2021)

2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, முதலமைச்சராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார். அப்போது ஓ.பி.எஸ் அவருக்குப் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். இது ஒரு நாகரீகமான அரசியல் நிகழ்வாகப் பார்க்கப்பட்டது.

மு.க.ஸ்டாலின் – எடப்பாடி பழனிசாமி (சட்டசபை சந்திப்பு)

முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, சட்டசபை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்த நிகழ்வுகள் நடந்துள்ளன. குறிப்பாக, கொரோனா பேரிடர் காலத்தில் ஆலோசனைக் கூட்டங்களின் போது இத்தகைய சந்திப்புகள் நிகழ்ந்தன.

தற்போது விஜய் – ஸ்டாலின்

தமிழ்நாட்டின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் ஜோசப் விஜய், திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் வீட்டுக்கு வந்த முதல்வர் விஜய்யை, முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கட்டியணைத்து வரவேற்றார். பின்னர், முதல்வர் விஜய்யை சந்தித்தபோது, முன்னாள் முதல்வர் ஸ்டாலின் ஆரத்தழுவிக் கொண்டு, பொன்னாடை போர்த்தி, வாழ்த்து தெரிவித்தார்.

தமிழக அரசியல் வரலாற்றில் இதுபோன்ற சந்திப்புகள் வெறும் வாழ்த்தாக மட்டும் இல்லாமல், ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு அதிகாரம் கைமாறும் ஒரு கண்ணியமான நிகழ்வாகவும் பார்க்கப்படுகின்றன. இந்நிலையில் இந்த வழக்கத்தை விஜய்யும் பின்பற்றுவது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்கள்!

0

அன்று முதல் இன்று வரை தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்கள் எந்த வயதில் முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டனர் என்பதை இந்த பதிவில் பார்ப்போம். 

1952ம் ஆண்டு தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சி. ராஜகோபாலச்சரி பதவி ஏற்றார். அப்போது அவரின் வயது 58 ஆகும்.

தமிழ்நாட்டின் இரண்டாவது முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கல்வி கண்திறந்து காமராஜர் பதவி ஏற்றார். அப்போது அவரின் வயது 51 ஆகும்.

காமராஜரை தொடர்ந்து தமிழ்நாட்டின் மூன்றாவது முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம். பக்தவச்சலம் பதவி வகித்தார். அப்போது அவரின் வயது 65 ஆகும்.

காங்கிரஸ் ஆட்சியை தொடர்ந்து திமுக கட்சி தமிழ்நாட்டை ஆண்டது. பேரறிஞர் அண்ணா முதலமைச்சர் ஆனார். அப்போது அண்ணாவின் வயது 58 ஆகும்.

ஆட்சியில் இருந்தபோதே அண்ணா உயிரிழந்த நிலையில் இரா. நெடுஞ்செழியன் 5 நாட்கள் முதலமைச்சர் பதவி வகித்தார். அப்போது அவரின் வயது 49 ஆகும்.

1969ம் ஆண்டு மு. கருணாநிதி முதலமைச்சர் பதவி ஏற்றார். அப்போது கருணாநிதியின் வயது 47 ஆகும்.

திமுகவில் இருந்து பிரிந்து அதிமுக என்ற கட்சியை தொடங்கிய எம்ஜிஆர், 1977ம் ஆண்டு முதல்வர் பதவி ஏற்றார். அப்போது அவரின் வயது 60 ஆகும்.

எம்ஜிஆரின் மறைவை தொடர்ந்து விஎன் ஜானகி ராமச்சந்திரன் 23 நாட்கள் முதலமைச்சராக பதவி வகித்தார். அப்போது அவரின் வயது 60 ஆகும்.

1991ல் ஜெயலலிதா முதன் முதலாக முதலமைச்சர் பதவி வகித்தார். அப்போது அவரின் வயது 43 ஆகும்.

டான்சி வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் ஓ.பின்னீர்செல்வம் 160 நாட்கள் முதல்வர் பதவி வகித்தார். அப்போது அவரின் வயது 50 ஆகும்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி 2017ல் முதல்வர் பதவி ஏற்றார். அப்போது அவரின் வயது 62 ஆகும்.

2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வர் பதவி ஏற்றார். அப்போது அவரின் வயது 68 ஆகும்.

2026 சட்டமன்ற தேர்தலில் தவெக மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து தமிழ்நாட்டின் 13வது முதல்வராக இன்று 10ம் தேதி விஜய் பதவி ஏற்றார். தற்போது விஜய்யின் வயது 51 ஆகும்.

வசமாக சிக்கியது தரமற்ற கம்பிகள் உற்பத்தி செய்த பிரபல நிறுவனம்!

0

தரமற்ற இரும்புக்கம்பிகளை உற்பத்தி செய்த தொழிற்சாலை ஒன்றிற்கு முத்திரையிடுவதற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. 

கட்டாயமான SLS தரச்சான்றிதழ் இன்றி, தரமற்ற இரும்புக்கம்பிகளை உற்பத்தி செய்து வந்த ஹோமாகம கைத்தொழில் வலையத்தில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றிற்கே இவ்வாறு முத்திரையிடப்பட்டு மூடப்பட்டுள்ளது. 

கிடைத்த தகவலொன்றிற்கு அமைய, குறித்த அதிகாரசபையின் அதிகாரிகளால் நேற்று (09) இந்தத் தொழிற்சாலையில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. 

இதன்போது, இந்தத் தொழிற்சாலை சுமார் மூன்று வருடங்களாக இந்த இடத்தில் இயங்கி வந்துள்ளமையும், அவர்கள் தமது ஏனைய உற்பத்திகளுடன் சேர்த்து 6 மில்லிமீற்றர் (6mm) அளவிலான தரமற்ற இரும்புக்கம்பிகளை உற்பத்தி செய்து சந்தைக்கு விநியோகித்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது. 

இரும்புக்கம்பிகளுக்கான இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் (SLS) சான்றிதழ் இன்றி, இந்த இரும்புக்கம்பித் தொகுதியை உற்பத்தி செய்து சந்தைக்கு விநியோகித்த காரணத்தினால், குறித்த நிறுவனத்திற்கு முத்திரையிடுவதற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. 

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது. 

அதேபோல், SLS இலட்சினை இன்றி தரமற்ற உருக்குக் கம்பிகளை உற்பத்தி செய்த குற்றத்திற்காக, சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.