Wednesday, April 22, 2026
Sponsored advertisementspot_img
Home Blog

நாகவில்லுவில் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ்வின் நினைவுதினம்!

பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று நாகவில்லுவில் இடம்பெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வு!

இலங்கை திருநாட்டில் பெளதீக ரீதியான பல வேலைத்திட்டங்களையும், இடம்பெயர்வு மற்றும் எல்லை நிர்ணயம் தொடர்பான பறந்துபட்ட அறிவினையும் கொண்டிருந்த எருக்கலம்பிட்டியை சேர்ந்த மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது வருட நினைவு தின நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

அந்த வகையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் நினைவுப் பேருரையும், புத்தக வெளியீடு நிகழ்வும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் ஏற்பாட்டில் நேற்று 25.08.2025 புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய அதிபர் ஜனாப் S.M. ஹுஸைமத் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், புத்தி ஜீவிகள் மற்றும் குடும்பத்தார்கள் கலந்தகொண்டமை விஷேட அம்சமாகும்.

சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் பொருளாளர் ஜனாப் ஏ.ஜி. அனீஸ் (Bsc.Agri) அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.

மேலும் இஸ்லாமிய கற்கை அறபு மொழிப் பீட, தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களினால் நூல் அறிமுக உரையும், நினைவுப் பேருரையும் மிகவும் உணர்வுபூர்வமாக நிகழ்த்தப்பட்டது.

கிழக்கு மற்றும் தென் கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பங்களிப்பு அளப்பெரியது என நினைவு கூறிய பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன், வடக்கில் ஏற்பட்ட யுத்தம் மற்றும் முஸ்லிம்களின் இடம்பெயர்வு குறித்து அதீத அக்கறையுடன் செயற்பட்ட மிக முக்கியமானவர் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்கள் எனவும் எடுத்துரைத்தார்.

வடக்கு முஸ்லிம்களின் இடம்பெயர்வு மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பில் அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களுடன் பலதரப்பட்ட கலந்துரையாடல்களை நடத்தி, சர்வதேசம் வரை இவ்விடயங்களை கொண்டுசென்ற மகான் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் என பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் தனது உரையில் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் புதல்வி சட்டத்தரணி எப்.சப்னா ஹஸ்புல்லாஹ் அவர்களினால் ஏற்புரை நிகழ்த்தப்பட்டதுடன், நூல் வெளியீடு நிகழ்வும் இடம்பெற்றது.

நூலின் முதற்பிரதியை ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தரும், புத்தளம் எருக்கலம்பிட்டி பள்ளிவாசல் நிர்வாக சபையின் முன்னாள் உறுப்பினருமான ஜனாப் ரஹ்மத்துல்லாஹ் (GS) அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

மேலும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் செயலாளர் ஜனாப் எஸ்.எச்.எம். றிஸ்னி அவர்களினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டதுடன், தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன், மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பாரியாருக்கும் நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில், பேராசிரியர்கள், கல்விமான்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், பாடசாலைச் சமூகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் குடும்பத்தார்கள் என பலரும் கலந்து சிறப்பித்ததுடன், ஈ நியூஸ் பெஸ்ட் ஊடக நிறுவனம் ஊடக அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரணிலுக்காக ஒன்று திரண்ட அரசியல் தலைவர்கள்!

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விசாரணை கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது, நாட்டின் அடிப்படை ஜனநாயக நிறுவனங்களின் வலிமை குறித்து கடுமையான கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் விளைவுகள் ஒரு தனிநபரின் அல்லது எந்தவொரு அரசியல் கட்சிகளின் தலைவிதியையும் விட, சமூகத்தின் உரிமைகளுக்கான பிரச்சினைகளை தோற்றிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் தலைவர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைகளை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது மற்றும் விளக்கமறியலை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து நடத்திய விசேட ஊடக சந்திப்பில் பங்கேற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரல முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் அறிக்கையை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

போர்த்துக்கல் அணி சாம்பியன் ஆனது!

0

‘நேஷன்ஸ் லீக்’ கால்பந்தில் போர்ச்சுகல் அணி சாம்பியன் ஆனது. பைனலில் ‘பெனால்டி ஷூட் அவுட்டில்’ 5-3 என ஸ்பெயினை வீழ்த்தியது.

ஐரோப்பிய கால்பந்து அணிகளுக்காக ‘நேஷன்ஸ் லீக்’ தொடர் நடத்தப்படுகிறது. மொத்தம் 54 அணிகள் பங்கேற்றன. நேற்று ஜெர்மனியின் முனிக் நகரில் நடந்த பைனலில், போர்ச்சுகல், நடப்பு யூரோ சாம்பியன் ஸ்பெயின் பலப்பரீட்சை நடத்தின. போட்டியின் 21வது நிமிடம் ஜுபிமெண்டி (ஸ்பெயின்), 26வது நிமிடம் மெண்டிஸ் (போர்ச்சுகல்) தலா ஒரு கோல் அடித்தனர். 45வது நிமிடம் மைக்கேல் ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் ஸ்பெயின் அணி 2-1 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் 61 வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். போர்ச்சுகல் அணிக்காக இவர் அடித்த 138வது கோல் இது. 90 நிமிட முடிவில் போட்டி 2-2 என சமன் ஆனது. அடுத்து நடந்த கூடுதல் நேரத்திலும் (30 நிமிடம்) இரு அணியும் கோல் அடிக்கவில்லை.

இதையடுத்து வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி ‘பெனால்டி ஷூட் அவுட்டுக்கு’ சென்றது. இரு அணிக்கும் தலா 5 வாய்ப்புகள் தரப்பட்டன. காயம் காரணமாக 88 வது நிமிடம் வெளியேறிய ரொனால்டோ, இதில் பங்கேற்கவில்லை.

முதல் 3 வாய்ப்பில் போர்ச்சுகலின் ராமோஸ், விடின்ஹா, பெர்ணான்டஸ் கோல் அடித்தனர். மறுபக்கம் ஸ்பெயின் தரப்பில் மெரினோ, பயேனா, இஸ்கோ கோல் அடிக்க 3-3 என ஆனது.

4வது வாய்ப்பில் மெண்டெஸ் (போர்ச்சுகல்) கோல் அடிக்க, ஸ்பெயினின் மோராட்டோ அடித்த பந்தை கோல் கீப்பர் டீகோ கோஸ்டா தடுத்து அசத்தினார்.

5வது வாய்ப்பில் நெவேஸ் கோல் அடித்தார். இதையடுத்து 5-3 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் ‘திரில்’ வெற்றி பெற்றது. 2019க்குப் பின் இத்தொடரில் மீண்டும் சாம்பியன் ஆனது.

தில்லையடியில் சிக்கிய கடத்தல் பீடி இலைகள்!

0

புத்தளத்தில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளுடன் வேன் ஒன்றும் பறிமுதல்!

இலங்கை கடற்படை, பொலிஸாருடன் இணைந்து, புத்தளம், தில்லையடி பகுதியில் 2025 ஜூன் 05 இரவு வேளையில் நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகள் கொண்ட ஒரு வேன் கைப்பற்றப்பட்டது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிறுவனம், புத்தளம் பொலிஸாருடன் இணைந்து தில்லையடி பகுதியில் நடத்திய இந்த சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்று சோதனை செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகளானது வாகனத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் வேன் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களால் ஆபத்தா?

விண்வெளியில் பூமியை சுற்றி வந்துக்கொண்டிருக்கும் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கொள்களை சீனா நினைத்தால் வெறும் 12 மணி நேரத்தில் தாக்கி அழித்துவிட முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் என்கிற செய்தி ஊடகத்தில் இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது தற்போது சீனா 99 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. இவை அனைத்தும் நான்ஜிங் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஆஸ்ட்ரோனாட்டிக்ஸ் பல்கலைக்கழகத்தின் விண்வெளிக் கட்டுப்பாட்டுத் துறையின் இயக்குநர் வூ யுன்ஹுவா தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இவை அனைத்தும் எலான் மஸ்கின் 1400 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை வெறும் 12 மணி நேரத்தில் காலி செய்துவிடும். சீன செயற்கைக்கோளில் லேசர், நுண் அலைகளை உருவாக்கும் கருவி, உளவு கருவிகள் பொருத்தப்பட்டிருக்கலாம். ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் வெறுமென நெட்வொர்க் கொடுக்க மட்டுமே பயன்படுத்தப்படுவதில்லை. தவிர, ராணுவ நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது என சீனா குற்றம்சாட்டி வருகிறது.

அதாவது, உக்ரைன்-ரஷ்யா போரில், உக்ரைன் படைகளுக்கு தகவல்கள் கொடுக்கவும், ரஷ்ய எல்லையை துல்லியமாக கண்காணிக்கவும் இந்த செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த 2022ம் ஆண்டு ரஷ்ய போரின்போது அப்போதைய உக்ரைனின் துணைப் பிரதமரான மைக்கைலோ ஃபெடோரோவ், “ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் சேவையை உடனடியாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த மஸ்க், “உடனடியாக சேவை வழங்கப்படும்” என்று கூறியிருந்தார்.

உக்ரைன் போருடன் மட்டுமே ஸ்டார்லிங்க் நிற்காது, நாளை சீனாவுக்கும்-தைவானுக்கும் பஞ்சாயது ஏற்பட்டால் அப்போதும், தைவானுக்கு சப்போர்ட் செய்ய ஸ்டார்லிங்க் வரும். எனவே இந்த கூட்டு நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்க சீனா இந்த புதிய செயற்கைக்கோள்களை உருவாக்கியிருக்கிறது.

கடந்த 2023ம் ஆண்டு இதற்கான பணிகளை சீனா தொடங்கியது. இந்த திட்டத்திற்கு ‘கியான்ஃபான் மெகா-விண்மீன் திட்டம்’ (Qianfan mega-constellation project) என்றும் பெயரிட்டிருந்தது. நோக்கம் உலகம் முழுவதும் இணைய தொடர்பை வழங்குவதாகும். இதற்காக மொத்தம் 15,000 சிறிய ரக செயற்கைக்கோள்களை ஏவ சீனா முடிவெடுத்தது. இதன் முதல் தொகுப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏவப்பட்டது. இதில் 18 செயற்கைக்கோள்கள் இருந்தன.

ஒவ்வொன்றும் சுமார் 300 கி.கி எடையில் இருந்தது. இவை பூமியிலிருந்து 800 கி.மீ உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டது. இதேபோன்று 2024 டிசம்பரில் அடுத்து இரண்டு தொகுதி ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. தற்போது மொத்தம் 99 செயற்கைக்கோள்கள் விண்வெளியில் இருக்கின்றன. 15,000 செயற்கைக்கோள்களை 3 கட்டங்களாக ஏவ இருக்கிறது. முதல் கட்டத்தில் 1,296 செயற்கைக்கோள்கள் ஏவப்படும். இதில் 648 செயற்கைக்கோள்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஏவப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் கன்னி உரை

0

அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்புவோம்

தேசியத்துவத்துடனும் ஐக்கியத்துடனும் ஒன்றுபட்டு நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க இன்று (23) காலை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

பதவிப் பிரமாணத்தின் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய முழுமையான உரை:

மக்களால் ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது நமது நாட்டின் ஜனநாயகத்திலிருக்கும் மிக முக்கியமான அம்சமாகும். தேர்தலில் வாக்களித்தல் மற்றும் ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதோடு ஜனநாயகம் நிறைவு பெறுவதில்லை. இது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சம் என்றாலும், நம் நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்த, கட்டமைப்புகளின் வலிமையும், சட்டங்களை வலுப்படுத்துவதும் அவசியம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனவே, எனது பதவிக்காலத்தில் இந்த நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.

அத்துடன், இந்த நாட்டில் ஜனநாயக முறையில் அதிகாரப் பரிமாற்றம் நடந்த வரலாறும் உண்டு. தேர்தலில் நிகழும் அதிகாரப் பரிமாற்றத்தை எந்தத் தலைவரும் நிராகரித்ததில்லை. அதற்கமைய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த மக்கள்ஆணையை சுமூகமாக ஏற்றுக்கொண்டதுடன், ஜனநாயக ரீதியில் அதிகாரத்தை கைமாற்றுவதற்கான அவரின் அர்ப்பணிப்பிற்கும் முன்னுதாரணத்திற்கும் நன்றி தெரிவிக்கிறேன். மேலும் எமக்கு கிடைப்பது மிகவும் சவால் நிறைந்த நாடு என்பதை நன்கு புரிந்து கொண்டிருக்கிறோம். நமது அரசியலில் தூய்மையான, மக்களால் எதிர்பார்க்கப்படும் சிறந்த அரசியல் கலாசாரத்திற்காக அவசியம் காணப்படுகிறது.அதற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

நம் நாட்டின் அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு நல்லெண்ணம் இல்லை. எனவே, அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் மீது மக்கள் மரியாதை மற்றும் நம்பிக்கையை மீட்டெடுக்க எங்கள் தரப்பிலிருந்து முடிந்த அனைத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.

மேலும், நமக்கு முன் இருக்கும் இந்த ஆழமான நெருக்கடியை வெறும் அரசோ, வெறும் அரசியல் கட்சியோ அல்லது ஒரு தனி நபரோ மட்டும் தீர்க்க முடியும் என்று நாங்கள் நம்பவில்லை. ஏனென்றால், நான் முன்பு கூறியது போல், நான் ஒரு மாயாஜால வித்தைக்காரனல்ல. நான் மந்திரவாதியும் இல்லை. நான் இந்த நாட்டின் சாதாரண குடிமகன். எம்மிடம் திறமைகள் உள்ளன. இயலாமைகளும் உள்ளன. தெரிந்த விடயங்களும் உள்ளன அதேபோன்று, தெரியாத விடயங்களும் உள்ளன.

ஆனால் திறமைகளைப் பயன்படுத்தி தெரியாதவற்றை சேகரித்துக்கொண்டு சிறந்த முடிவுகளை எடுத்து இந்த நாட்டை வழிநடத்துவதே எனது தலையாய பணியாகும். அந்த கூட்டுப் பங்களிப்பின் ஒரு அங்கமாக மாறுவது எனது பொறுப்பாகும். மேலும், இந்த நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதில் பொது மக்கள் மற்றும் அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் பாரிய பொறுப்பு உள்ளது. அந்தப் பொறுப்பை நிறைவேற்ற அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்.

ஆனால், நாட்டின் ஜனாதிபதி என்ற முறையில், இந்தப் பணியை முன்னின்று நடத்துவதில் எனக்கு முதன்மையான மற்றும் மிக முக்கியமான பொறுப்பு இருப்பதை நான் ஏற்றுக்கொண்டேன். எனவே, இந்தச் சவாலை வெற்றிகொள்வதற்காக எனக்குக் வழங்கப்பட்டுள்ள பணியை நான் உரிய முறையில் நிறைவேற்றுவேன் என்பதை செயற்பாடு மற்றும் நடைமுறை மூலம் எல்லா சந்தர்ப்பங்களிலும் இந்த நாட்டின் பிரஜைகளுக்கு வெளிப்படுத்த நான் தயாராக இருக்கிறேன்.

மேலும் நமது நாட்டுக்கு சர்வதேச ஆதரவு தேவை. எனவே, உலகில் எத்தகைய அதிகாரப் பிளவுகள் இருந்தாலும், ஒவ்வொரு நாட்டையும் எமக்கு மிகவும் சாதகமாக கையாள்வதே நமது எதிர்பார்ப்பாகும். நாம் உலகில் தனிமைப்படுத்தப்பட்ட நாடு அல்ல. உலகத்துடன் கூட்டாக முன்னேற வேண்டிய ஒரு நாடாகும். அது தொடர்பில் தேவையான முடிவுகளை எடுக்க நாங்கள் சிறிதும் தயங்குவதில்லை.

மேலும், நம் நாட்டைக் கட்டியெழுப்புவதில் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு பெரும் பங்கு உள்ளது. எனவே, நாட்டை மேலும் வலுவாகக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு அவர்கள் ஆதரவளிப்பார்கள் என நான் கருதுகின்றேன்.

நம் நாட்டின் ஜனநாயகத்தின் ஊடாக நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். அதற்காக மக்கள் எனக்கு வாக்களித்தனர்.

மேலும் எனக்கு வழங்கப்படாத வாக்குகளும் உள்ளன. எனவே, எங்களின் வெற்றியின் உள்ளடக்கம் மற்றும் அளவு குறித்து எங்களுக்கு நல்ல புரிதல் உள்ளது. எனவே, எங்களுக்கு ஆதரவு வழங்காத மற்றும் எங்களை நம்பாத பிரஜைகளின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெறுவதே எனது நிர்வாகத்தின் போது எனக்கு வழங்கப்பட்டுள்ள பணியாகும். அந்தப் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

எதிர்காலத்தில் இவை அனைத்தையும் நீங்கள் நடைமுறையில் கண்டுகொள்ள முடியும். அதற்கு அனைத்து மக்களின் ஆதரவையும் எதிர்பார்க்கின்றேன்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தேர்தலில் இவ்வாறுதான் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்

0

அதிகாரிகள் மற்றும் பிற தேவைகள் முடிந்த பிறகு, மாலை 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (19) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி பிற்பகல் 4.15 மணிளவில் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“எதிர்வரும் 21ம் திகதி வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள் பெறப்பட்டதும், அதிகாரிகள் மற்றும் இதர தேவைகள் முடிந்ததும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் இரவு 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

மாலை 4.15 மணிளவில் தபால் மூல வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

அத்துடன் மாவட்ட அளவில் ஒவ்வொரு வட்டாரத்திலும் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெறும்.

வாக்கு எண்ணிக்கையின் முடிவில் முடிவுகள் கிடைத்தவுடன் ஊடகங்களுக்கு வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையே முதலில் எண்ணப்படும்.

அந்தக் கணக்கெடுப்பின் பின்னர் (மாவட்ட அளவில் எண்ணும் பணி) முதலில் வாக்குப்பெட்டிகளில் உள்ள வாக்குகள் எண்ணப்படும்.

அதன் பிறகு, ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு, தொகுதி மற்றும் மாவட்ட அளவில் அது தயாரிக்கப்படுகிறது.

தேர்தல்கள் செயலகமே ஒட்டுமொத்த முடிவுகளைக் கணக்கிடும்.

எந்த வேட்பாளரும் 50 வீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்றுள்ளாரா என சரிபார்க்கப்படும்.

அப்படியானால், அந்த நேரத்தில் வாக்கு எண்ணும் பணிகள் நிறுத்தப்படும்.

அப்போது ஜனாதிபதியை நாங்கள் அறிவிப்போம்.

எந்த வேட்பாளருக்கும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் கிடைக்காவிடின், விருப்பு வாக்கு எண்ணிக்கைக்கு செல்ல வேண்டும்.

அங்கு, அதிக வாக்குகள் பெற்ற இரண்டு வேட்பாளர்கள் போட்டியில் வைத்து விட்டு  மீதமுள்ள 36 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து நீக்கப்படுவர்” என்றார்.

புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக மாறும்

0

புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வாத்தியாசலையாக மாற்றம் பெரும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று புத்தளத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ அலிசப்ரி ரஹீம் மற்றும் சிந்தக்க மாயாதுன்ன தலைமையில் புத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்திலே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

புத்தளம் மக்களின் நீண்ட நாள் தேவையாக இருந்து வருகின்ற புத்தளம் தல வைத்தியசாலையை தரமுயர்த்துவது தொடர்பாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ அலிசப்ரி ரஹீம் அவர்களினால் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோலுக்கிணங்க குறித்த வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.

மேலும் புத்தளத்தில் மீன் பிடி தொழிலை முன்னேற்றும் நோக்கத்தில் மீன் பிடி துறைமுகம் ஒன்றை அமைக்கும் யோசனையும் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டதுடன், அதற்கான முன்னெடுப்புகளும் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்டமை புத்தளம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நாட்டில் நிரந்தர பொருளாதார அபிவிருத்தியை நிலை நாட்ட தாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டை பொருளாதார அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவதே தனது பிரதான நோக்கம் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மொட்டுக்கட்சிக்கு எதிராக நிற்கும் முக்கிய அமைச்சர்கள்

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக மொட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளரை இந்த வாரம் அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்காதிருக்கவும், மொட்டு சின்னத்தில் தனியாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமக்கு ஆதரவு வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பியிருந்த கடிதம் நேற்றைய தினம் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தினால் அரசியல் குழுவில் முன்வைக்கப்பட்டது.

எவ்வாறாயினும் அந்த கடிதத்தை நிராகரிக்க அரசியல் குழுக் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுவில் 82 பேர் அங்கம் வகிப்பதுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் 72 பேர் பங்கேற்றனர்.

இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த 11 பேர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

மஹிந்தானந்த அலுத்கமகே, பந்துல குணவர்தன, பிரதீப் உந்துகொட, கோகிலா ஹர்ஷனி குணவர்தன, சஹன் பிரதீப், ரமேஸ் பத்திரன, கஞ்சன விஜேசேகர, பிரசன்ன ரணதுங்க, கனக ஹேரத், மொஹான் பிரியதர்ஷன ஆகியோர் கட்சியின் சார்பில் தனியான வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

அத்துடன் பிறிதொரு கட்சியின் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்கும் உறுப்பினர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் யோசனைக்கு 6 பேர் எதிராக வாக்களித்துள்ளனர்.

எவ்வாறாயினும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் எனக் கூறப்பட்ட தம்மிக பெரேரா தொடர்பில் அரசியல் குழுக் கூட்டத்தின்போது எந்தவித கருத்துக்களும் பரிமாற்றிக் கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவளிக்காத 11 பேர் உள்ளிட்ட தரப்பினர் நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தனவின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சைனப் ஆரம்பப் பாடசாலைக்கு ஆளுநர் வருகை!

0

புத்தளம் சைனப் ஆரம்ப பாடசாலையின் முப்பெரும் விழா பாடசாலை அதிபர் யஹியா தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து புத்தளம் ஜெய்னப் பாடசாலைக்கு 22 லட்சம் ரூபா பெறுமதியான நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு, சிறுவர் விளையாட்டு நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தல் மற்றும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் செயற்திட்டத்தின் கீழ் BCMH நிறுவனத்தினால் கற்றல் உபகரணம் வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் கடந்த செவ்வாய்க்கிழமை (16) வெகு விமர்சையாக இடம்பெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதியாக வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், விசேட அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மற்றும் கௌரவ அதிதியாக புத்தளம் வலயக்கல்விப் பணிப்பாளர் அர்ஜுன ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆரம்ப பாடசாலையின் முக்கியத்துவம் மற்றும் அறிவார்ந்த சமூகத்தை கட்டியெழுப்ப ஆரம்ப பாடசாலை ஆற்றிவருகின்ற அர்ப்பணிப்பு குறித்து விரிவாக பேசிய வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், புத்தளம் மாவட்ட பாடசாலைகளின் துரித வளர்ச்சி பற்றியும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

மேலும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் செயற்திட்டத்திற்கு வடமேல் மாகாண ஆளுநர் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் ஜவ்ஷி ஜமால்தின், இணைப்புச் செயலாளர் எச். அமீர் அலி ஆசிரியர், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் உட்பட உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் அயல் பாடசாலையின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு
நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு

ஹிருணிகாவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறை

0

கடத்தல் வழக்கில் முன்னாள் எம்.பி ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்தத் தீர்ப்பை அறிவித்தார்.

தெமட்டகொட பகுதியிலுள்ள கடை ஒன்றில் பணிபுரிந்த அமில பிரியந்த அமரசிங்க எனும் இளைஞர் ஒருவரை 2015 டிசம்பர் 21ஆம் திகதி ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு சொந்தமான டிபெண்டர் வாகனத்தில் கடத்திய வழக்கு விசாரணை முடிவில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

29 குற்றங்கள் தொடர்பில் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் 8 பேரும் குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில், அச்சம்பத்திற்கு உதவி, ஒத்தாசை புரிந்ததாக ஹிருணிகா மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்திருந்தார்.

அத்தோடு, சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவின் ஆதரவாளர்கள் 8 பேர் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைதான ஐந்தாம் சந்தேகநபரின் மகள் அளித்துள்ள வாக்குமூலத்தில், தமது தாயாருடன் தொடர்பு பேணிய நபர் ஒருவரை தாம் காண்பித்ததாகவும், அவரை தமது தந்தையும் அவருடன் சென்றவர்களும் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு ஹிருணிகாவிடம் அழைத்துச் சென்றதாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

ஓவியப்போட்டியில் எருக்கலம்பிட்டி மாணவன் முதலாமிடம்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட வட மாகாண மானவர்களுக்கிடையிலான சித்திரப்போட்டியில் மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்றார்.

வீதி விபத்துக்கள் இல்லாத நாளைக்கான பாடசாலையிலிருந்து அணிவக்குப்போம் எனும் தொனிப்பொருளில் கடந்த வியாழக்கிழமை (13.06.2024) அன்று நடாத்தப்பட்ட வட மாகாண மாணவர்களுக்கிடையிலான குறித்த சித்திரப்போட்டியில் சுமார் 2600 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

சித்திரப்போட்டியில் பங்குபற்றிய 2600 மாணவர்களில் 250 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு நேற்றைய தினம் (15.06.2024) அவர்களுக்கான போட்டி இடம்பெற்றது.

நடைபெற்று முடிந்த இறுதிச் சுற்றுப்போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்று பெருமதிமிக்க பரிசில்களை பெற்றுக்கொண்டார்.

முதலாம் இடம் பெற்ற முஹம்மது ஹுசைன் என்ற மாணவனுக்கு சான்றிதல், துவிச்சக்கரவண்டி மற்றும் 8500/- ரூபா பெறுமதியான வவுச்சரும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இதேவேளை குறித்த போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய இல்முதீன் முஹம்மது ஹஸ்பான் 7 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய மற்றொரு மாணவரான முஹம்மது சம்ஹான் 8 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

பாரிய சாவல்களுக்கு மத்தியில் தனி ஒரு மனிதனாக இம் மாணாவர்களை ஊக்கப்படுத்தி, தயார்ப்படுத்தி போட்டியில் பங்குபெறச் செய்து வெற்றிபெறச் செய்த எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியின் சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் அவர்களின் இம் முயற்சிக்கு, பாடசாலை சமூகம் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் நன்றி தெரிவித்தனர்.

தமக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வந்து தேசிய அளவில் இடம்பெறும் போட்டிகளில் மாணவர்களை பங்குபெறச் செய்வதே தனது இலக்கு என சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் எமது ஊடகத்திற்கு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை இராஜினாமா

0

நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்துள்ளனர்.

சாந்த நிரியல்ல உட்பட 15 பேர் கொண்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரின் அறிவித்தலுக்கு அமைய இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி திங்கட்கிழமை புதிய பணிப்பாளர் சபை நியமிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ “அத தெரண” விற்கு தெரிவித்தார்.

புத்தளம் எருக்கலம்பிட்டியில் கடும் வெள்ளம்

0

புத்தளம் பகுதியில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக புத்தளம் பகுதி முழுதும் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.

புத்தளம், தில்லையடி, பாலாவி, புத்தளம் எருக்கலம்பிட்டி, ஹிதாயத் நகர்,  மதுரங்குளி மற்றும் ஏனைய பல கிராமங்களும் வெள்ளித்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமமும் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 1500 குடும்பங்கள் இங்கு வாழ்ந்துவருவதுடன், அனைத்து வீடுகளும் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நூற்றிற்கும் அதிகமான வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் ஐநூற்றுக்கும் அதிகமான வீடுகள் பகுதி அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8ஆம் திகதி ஏற்பட்ட மழை வெள்ளித்தினால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் மற்றும் பாடசாலைகளில் தற்காலிகமாக  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு தினங்களாக இவர்களுக்கான சமைத்த உணவுகள் மூன்று வேலைகளிலும் ஊர் தனவந்தர்களின் உதவியுடனும், பள்ளிவாசல் நிர்வாக சபையின் வழிகாட்டலுடனும் வழங்கப்பட்டு வருவதுடன், ஊர் மக்களுக்கும் உணவு விநியோகங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

இவர்களுக்கான நிவாரண உதவிகள் இதுவரை அரசாங்கத்தினால் வழங்கப்படாத போதிலும், ஊர் மக்களின் பங்களிப்புடன் மாத்திரமே பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு விநியோகங்கள் இதுவரை  வழங்கப்பட்டு வருகின்றது.

புத்தளம் பொத்துவில்லு பகுதியில் உள்ள குளம் மழை நீரினால்  பெருக்கெடுத்துள்ளதால் குறித்த குளத்து நீர் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமத்திற்குள் தொடர்ந்தும் மூன்றாவது நாளாக ஊடறுத்து செல்வதால் வீடுகள் தொடர்ந்தும் நீருள் மூழ்கியுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்தின் நிவாரண உதவிக்காக பல மக்கள் தொடர்ந்தும் எதிர்பார்த்து காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா நாளை!

0

இந்தியாவின் தேர்தல் களம் உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவாகக் கருதப்படுகிறது. தற்போது 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் மாத நிலவரப்படி, பல்வேறு மாநிலங்களில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்தியாவின் ஒட்டுமொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 96 கோடியைத் தாண்டியுள்ளது. இது பல நாடுகளின் மொத்த மக்கள் தொகையை விட அதிகம். தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான உடனேயே ‘தேர்தல் நடத்தை விதிகள்’ (Model Code of Conduct) அமலுக்கு வரும். இந்த விதிகள் முதன்முதலில் 1960-ஆம் ஆண்டு கேரள சட்டப்பேரவைத் தேர்தலின் போதுதான் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்தியாவில் 1962-ஆம் ஆண்டு வெறும் 29 கட்சிகள் மட்டுமே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டன. ஆனால் 2019-ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 669 ஆக உயர்ந்தது. ஏறத்தாழ 2,200% வளர்ச்சி இதுவாகும்.

ஒவ்வொரு வாக்காளரும் 2 கிலோமீட்டர் தொலைவிற்குள் ஒரு வாக்குச் சாவடியைக் கொண்டிருக்க வேண்டும் என்ற விதியைக் கொண்டு வர தேர்தல் ஆணையம் முயன்று வருகிறது. இமயமலையின் உயரமான பகுதிகள் முதல் அடர்ந்த காடுகள் வரை இதற்காகப் பணியாளர்கள் பயணம் செய்கின்றனர்.

அந்தவகையில் தற்போது தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது, இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு முடிந்துவிட்டன.

தமிழ்நாட்டில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. 234 தொகுதிகளுக்கும் சேர்த்து நாளை, ஏப்ரல் 23, 2026 அன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4, 2026 அன்று நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.

கடந்த 38 நாட்களாக அனல் பறந்த தேர்தல் பிரச்சாரம் நேற்று (ஏப்ரல் 21) மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. தற்போது அமைதிக்காலம் (Silent Period) நிலவுகிறது. தமிழக அரசியல் களம் இந்த முறை வழக்கமான இருமுனைப் போட்டியிலிருந்து மாறி, ஒரு ஐந்து முனைப் போட்டியாக உருவெடுத்துள்ளது.

வாக்குப்பதிவு நிறைவடையும் வரையிலான இந்த 48 மணி நேரத்தை ‘அமைதி காலம்’ எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இக்காலத்தில்:

  • பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் எவ்வித தேர்தல் விளம்பரங்களுக்கும் அனுமதி கிடையாது.
  • தொகுதிக்குத் தொடர்பில்லாத அரசியல் கட்சியினர் மற்றும் வெளிநபர்கள் உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
  • திருமண மண்டபங்கள் மற்றும் விடுதிகளில் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
  • மதுக்கடைகள் மூடப்பட்டு, மதுவிலக்கு காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது

தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தலில் சுமார் 5.7 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக மாநிலம் முழுவதும் 75,644 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 5,938 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 423 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், பாதுகாப்புப் பணிகளுக்காக 300 கம்பெனி துணை ராணுவப் படையினரும், 83,000-க்கும் மேற்பட்ட காவல்துறையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த மார்ச் 15 முதல் இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில், சுமார் 1200 கோடி ரூபாய்க்கும் அதிகமான ரொக்கம், மதுபானங்கள், தங்கம் மற்றும் இலவசப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே, பிரதான கட்சிகள் வாக்காளர்களுக்கு ₹1000 முதல் ₹5000 வரை பண விநியோகம் செய்வதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

முக்கியத் தலைவர்கள் அனைவரும் நேற்றுத் தங்களின் தொகுதிகளில் இறுதிக்கட்ட வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்:

  • திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்: சென்னை கொளத்தூரில் தனது பிரச்சாரத்தை முடித்தார். தமிழகத்தின் வளர்ச்சியைத் தடுக்க நினைப்பவர்களுக்குத் தான் எப்போதும் ‘டேஞ்சர்’ தான் என்று அவர் குறிப்பிட்டார்.
  • அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: சேலம் எடப்பாடியில் பிரச்சாரம் செய்தார். அதிமுகவின் கோட்டை சேலம் என்பதை 2021 தேர்தலிலேயே நிரூபித்துள்ளதாக அவர் பேசினார்.
  • தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய்: சென்னை நந்தனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் அவர் விமர்சித்துப் பேசினார்.
  • நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்: காரைக்குடியில் பிரச்சாரம் செய்து, தமிழ் தேசிய அரசியல் மாற்றத்தின் அவசியத்தை வலியுறுத்தினார்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காங்கிரஸ் மற்றும் 21 தோழமைக் கட்சிகளுடன் ‘திராவிட மாடல்’ ஆட்சியைத் தக்கவைக்கப் போராடுகிறது.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் பாஜக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து ஆட்சியைப் பிடிக்கத் தீவிரமாக உள்ளது.

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் (TVK) புதிய கட்சி, இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, ஒரு முக்கிய ‘மூன்றாவது சக்தியாக’ உருவெடுத்துள்ளது.

சீமான் தலைமையில் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி, குறிப்பாகக் காரைக்குடி போன்ற தொகுதிகளில் பலமான போட்டியை அளிக்கிறது.

வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட 12 மாற்று ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டு செல்லப்படும். தமிழகம் உட்பட கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் மே 4-ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளியாகியது அமைச்சரவைக் கூட்டத்தின் முக்கிய தீர்மானங்கள்!

0

இலங்கை அமைச்சரவையின் வாராந்தக் கூட்டம் 2026.04.20 அன்று நடைபெற்றது. இதன்போது தேசிய பாதுகாப்பு, உட்கட்டமைப்பு மேம்பாடு, கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட துறைகள் சார்ந்த பல முக்கிய தீர்மானங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தேசிய பாதுகாப்பு மற்றும் விசாரணைப் பரிந்துரைகள்: உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஆகியவற்றின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதை முறையாகக் கண்காணிக்க இதுவரை நிலையான பொறிமுறை ஒன்று இருக்கவில்லை. எனவே, பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு இணங்க, ஜனாதிபதி செயலகத்தின் மேற்பார்வையின் கீழ் தேசிய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான நிபுணர் குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

போக்குவரத்து மற்றும் விமான சேவைகள்

  • புதிய போக்குவரத்து அனுமதிப்பத்திர நடைமுறை: மாகாணங்களுக்கு இடையிலான பயணிகள் போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்காக, தற்போதுள்ள பஸ் உரிமையாளர்களைப் பாதுகாக்கும் வகையிலும் புதிய முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும் புதிய நடைமுறையொன்றை அறிமுகப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
  • களனிவெலி புகையிரத பாதை நீடிப்பு: அவிசாவளையிலிருந்து இரத்தினபுரி வரை களனிவெலி புகையிரத பாதையை நீடிப்பதற்கான சாத்தியவள ஆய்வு மற்றும் விரிவான திட்டங்களைத் தயாரிக்கும் ஒப்பந்தம் M/s. Resources Development Consultants (Pvt) Ltd நிறுவனத்திற்கு 356.22 மில்லியன் ரூபாய் செலவில் வழங்கப்பட்டுள்ளது.
  • டுபாய் விமான நிலையச் சேவைகள்: டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்களுக்கான தரைக்கையாளுதல் மற்றும் சரக்குக் கையாளுதல் சேவைகளை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு வழங்க Dnata நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு

  • தேசிய வீடமைப்பு கொள்கை: 2019 ஆம் ஆண்டு இறுதியாகத் திருத்தப்பட்ட தேசிய வீடமைப்பு கொள்கையை, தற்கால சவால்களுக்கு ஏற்ப மீளாய்வு செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
  • இடைநிறுத்தப்பட்ட வீடமைப்புத் திட்டங்கள்: 2015-2019 காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட 2,562 வீடமைப்புத் திட்டங்களில் சுமார் 10,532 வீடுகள் மட்டுமே பூர்த்தியாகியுள்ளன. எஞ்சியுள்ள திட்டங்களை முடிக்க 11.26 பில்லியன் ரூபாய் தேவைப்படும் எனக் கணக்கிடப்பட்டுள்ள நிலையில், இது குறித்துப் பரிந்துரை வழங்க நிபுணர் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.

கல்வி மற்றும் கலாசாரம்

  • புனித தாதுக்கள் அமெரிக்கா பயணம்: அம்பாறை நீலகிரி விகாரை, கங்காராம விகாரை மற்றும் மஹியங்கனை ரஜமகா விகாரை ஆகியவற்றில் உள்ள புனித தாதுக்களை 2026 மே 02 முதல் மே 10 வரை அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள மகாவிபஸ்ஸனா தியான மையத்தில் காட்சிப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • பிக்ஷு பல்கலைக்கழகம்: இலங்கை பிக்ஷு பல்கலைக்கழகத்தின் பன்நோக்குக் கட்டடத்தின் கட்டுமானச் செலவு 663 மில்லியன் ரூபாயாகத் திருத்தப்பட்டு, அதனைப் பூர்த்தி செய்ய அங்கீகாரம் வழங்கப்பட்டது.
  • வர்த்தகக் கல்வி: வர்த்தகக் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் 100 செய்முறை கற்றல் நிலையங்களை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக 25 மாவட்டங்களிலும் 25 நிலையங்கள் ஆரம்பிக்கப்படும்.

சுகாதாரம் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு

  • சிறுநீரக நோயாளர்களுக்கான மருந்துகள்: சிறுநீரக நோயாளிகளின் டயாலிசிஸ் சிகிச்சைக்காகத் தேவையான 800,000 மருந்துப் பைகளை (Peritoneal dialysis solution) 889.6 மில்லியன் ரூபாய் செலவில் கொள்வனவு செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
  • புனர்வாழ்வு நிலையங்கள்: ‘நாடும் ஒன்றாக’ (Ratama Ekata) போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்தின் கீழ், சிகிச்சை மற்றும் புனர்வாழ்வுக்காக நாடு முழுவதும் புதிதாக 06 நிலையங்களை அமைக்கவும் அவற்றுக்கான பணியாளர்களை நியமிக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஏனைய முக்கிய தீர்மானங்கள்

  • கைத்தொழில் அபிவிருத்திச் சபை உள்ளிட்ட பல நிறுவனங்களை ஒன்றிணைத்து ‘இலங்கை கைத்தொழில் மற்றும் புத்தாக்க அதிகாரசபையை’ உருவாக்குவதற்கான சட்டமூலத்தைத் தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகமாக தற்போது பதில் கடமையாற்றும் ஈராஜ் சமிந்த பத்திரஜ அவர்கள் அந்தப் பதவிக்கு நிரந்தரமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மே இறுதிக்குள் 5 இலட்சம் வந்து சேரும் – ஜனாதிபதி அதிரடி!

0

டித்வா சூறாவளியால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கான 05 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகையை, மே மாத இறுதிக்குள் வழங்கி முடிக்கவும் – ஜனாதிபதி!

டித்வா சூறாவளியால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்காக அரசினால் அங்கீகரிக்கப்பட்ட 05 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகையை, மிக சிக்கலான சந்தர்ப்பங்களைத் தவிர ஏனைய அனைத்துப் பயனாளிகளுக்கும் மே மாத இறுதிக்குள் வழங்கி முடிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பணிப்புரை விடுத்தார்.

டித்வா சூறாவளியால் பகுதியளவிலும் முழுமையாகவும் சேதமடைந்த வீடுகளில் வசித்தவர்களுக்கு இழப்பீடு வழங்குதல் மற்றும் புதிய வீடுகளை கையளிக்கும் பணிகள் தொடர்பாக இன்று (22) முற்பகல் ஜனாதிபதி அலுலகத்தில் நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

முழுமையாக சேதமடைந்த வீடுகளில் வசித்தவர்களுக்குப் புதிய வீடொன்றை வழங்குவது அல்லது வீடொன்றை கொள்வனவு செய்வதற்காக 50 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகையை வழங்கும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. அந்த இழப்பீட்டுத் தொகையை விரைவாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இன்னமும் முகாம்களில் வசித்து வரும் மக்களுக்கு, புதிய வீடுகள் கிடைக்கும் வரை அவர்களைத் தற்காலிக வீடுகளில் குடியமர்த்துவது குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அதற்கேற்ற பொருத்தமான இடங்களைக் கண்டறிந்து, அந்தப் பணிகளை மிக விரைவாக நிறைவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

மிக ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்களை வேறு இடங்களில் குடியமர்த்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், புதிய வீடு வாங்குவதற்கு இழப்பீடு பெறாதவர்களுக்காக வீட்டுத் தொகுதிகளை நிர்மாணிப்பதற்கான திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் கே. ஜி. தர்மதிலக்க உட்பட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2026-04-22

சுகாதார அமைச்சின் அதிகாரி ஊழல் குற்றச்சாட்டில் கைது!

0

சுகாதார அமைச்சின் முன்னாள் பிரதம சட்ட அதிகாரி (ஓய்வு நிலை), பாரிய நிதி மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளார்.

சுகாதார அமைச்சிற்குச் சொந்தமான “மெடி ஹவுஸ்” (Medi House) எனும் கட்டிடத்திற்கான குத்தகை உரிமையைப் பெற்றுக்கொள்வது மற்றும் அது தொடர்பான ஒப்பந்தங்களை முன்னெடுப்பதில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு ஒன்று கிடைத்திருந்தது. இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட இரகசிய விசாரணைகளின் முடிவிலேயே இந்த அதிரடி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேக நபர் சுகாதார அமைச்சின் பிரதம சட்ட உத்தியோகத்தராகப் பணியாற்றிய காலத்தில், பல மோசடிகளில் ஈடுபட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது:

அந்த வகையில் “மெடி ஹவுஸ்” கட்டிடத்தின் குத்தகை காலத்தை நீட்டிப்பதற்காக, விதிகளுக்கு முரணாக மூன்று குத்தகை ஒப்பந்தங்களைத் தயாரித்து இந்த ஒப்பந்தங்களைத் தயாரிப்பதற்கான கட்டணமாக 4,134,887 ரூபா தொகையை அவர் கோரியுள்ளார்.

கோரப்பட்ட தொகையில் முதற்கட்டமாக 2,000,000 ரூபா (20 இலட்சம்) பணத்தைப் பெற்றுள்ளதுடன், எஞ்சிய தொகையைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், “QIDIO ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்” எனும் நிறுவனத்தின் பெயரில் மக்கள் வங்கியில் வழங்கப்பட்ட 500,000 ரூபா பெறுமதியான காசோலையைப் பெற்று பணமாக்கியுள்ளமையும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, நேற்று பிற்பகல் 3.45 மணியளவில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

“அரச பதவியைத் தவறாகப் பயன்படுத்தி, ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்காகப் பெருந்தொகை பணத்தை இலஞ்சமாகக் கோரியமை மற்றும் பெற்றுக் கொண்டமை தொடர்பான சட்டப்பிரிவுகளின் கீழ் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன,”

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். சுகாதாரத் துறையில் உயர்மட்ட அதிகாரி ஒருவர் இவ்வாறான குற்றச்சாட்டில் சிக்கியுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்கொட்டுவ பாடசாலையில் நடைபெற்ற புத்தாண்டு விழா!

0

ஜூட் சமந்த

மகாவெவ – மட்டக்கொட்டுவ கடற்கரை கனிஷ்ட வித்தியாலயம் ஏற்பாடு செய்த “சூரிய மங்கள” புத்தாண்டு விழா அண்மையில் பாடசாலை வளாகத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது.

சுமார் 300 மாணவர்கள் கல்வி பயிலும் மட்டக்கொட்டுவ கடற்கரை கனிஷ்ட வித்தியாலயத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், அங்கு கற்கும் அனைத்து மாணவர்களும் ரோமன் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றுபவர்கள் என்பதாகும். அந்தப் பாடசாலையில் பௌத்த அல்லது இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் கூட இல்லாவிட்டாலும், கலாசார விழுமியங்களைப் போற்றும் வகையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆரம்பப் பிரிவு பாடத்திட்டத்தின்படி, அனைத்து மாணவர்களுக்கும் சிங்கள – தமிழ் புத்தாண்டு சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள் குறித்த அறிவை வழங்குவது அவசியமாகும். இதற்காக அதிபர் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டலில் பாடசாலை வளாகத்தினுள் “நீல்மிணி தென்ன” மற்றும் “ரன்மிணி தென்ன” என பெயரிடப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் கலாசாரங்களை பிரதிபலிக்கும் இரு கிராமங்கள் உருவாக்கப்பட்டிருந்தன.

புத்தாண்டு இளவரசனின் வருகையைத் தொடர்ந்து விழா ஆரம்பமானது. சுப நேரங்களின்படி அடுப்பு மூட்டுதல், உறவினர் வீடுகளுக்குச் செல்லுதல், உணவு உட்கொள்ளுதல் மற்றும் தலைக்கு எண்ணெய் வைத்தல் போன்ற பாரம்பரிய சடங்குகள் முறையாகக் கடைபிடிக்கப்பட்டன. அத்துடன் மாணவர்கள் பாரம்பரிய ஊஞ்சல் ஆடுவதிலும் உற்சாகமாக ஈடுபட்டனர்.

மத அல்லது இன வேறுபாடின்றி அனைத்து மாணவர்களுக்கும் புத்தாண்டு சடங்குகள் மற்றும் சுப நேரங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இவ்விழாவின் நோக்கம் என பாடசாலை அதிபர் கே.டி. விமலசேன தெரிவித்தார்.

இவ்விழாவை வெற்றிகரமாக நடத்துவதற்கு மகாவெவ ஸ்ரீ தர்மாராம வித்தியாலயத்தின் அதிபர் ஏ.எச்.எம். காமிணி அபயசிங்க மற்றும் அவரது பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர். இப்பிரதேசத்தைச் சேர்ந்த பெருமளவிலான பொதுமக்கள் இந்த கலாசார விழாவைக் கண்டுகளிக்க வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பரந்தனில் கோர விபத்து: வீதியைக் கடக்க முயன்ற முதியவர் பலி!

கிளிநொச்சி, பரந்தன் சந்திக்கு அண்மித்த ஏ-9 (A9) பிரதான வீதியில் நேற்று (21.04.2026) இரவு இடம்பெற்ற கோர விபத்தில் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி அதிவேகமாகப் பயணித்த கார் ஒன்று, நேற்று இரவு 7.00 மணியளவில் பரந்தன் சந்திக்கு அருகில் வீதியை ஊடறுக்க முயன்ற முதியவர் மீது பலமாக மோதியுள்ளது. காரின் வேகம் காரணமாகத் தூக்கி வீசப்பட்ட முதியவர், படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர் புன்னைநீராவி, கண்ணகைபுரம் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய முதியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரது சடலம் தற்போது உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காகக் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்துத் தொடர்பாகக் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். விபத்துக்குள்ளான காரின் ஓட்டுநர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இரவு நேரங்களில் போதிய வெளிச்சமின்மை அல்லது வாகனத்தின் அதிவேகம் விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

பரந்தன் சந்தி மற்றும் ஏ-9 வீதியோரங்களில் பாதசாரிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வனாத்தவில்லு கடற்கரையை மீட்கப் புறப்பட்ட அதிகாரிகள்!

0

இந்தியாவின் கேரளக் கடற்கரையில் விபத்துக்குள்ளான எம்.எஸ்.சி. எலசா III (MSC Elasa III) கப்பலிலிருந்து வெளியேறிய அபாயகரமான நெகிழி மணிகள் (Plastic Pellets), தற்போது இலங்கையின் வடமேற்கு கடற்கரைப்பகுதிகளில் கரை ஒதுங்கி வருகின்றன. இதனால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த, கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் (MEPA) தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

புத்தளம், வனாத்தவில்லுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கொங்கநத்த மற்றும் பாலுகத்துறை கடற்கரைகளில் பெருமளவிலான நெகிழி மணிகள் கரை ஒதுங்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, இப்பகுதிகளைத் தூய்மைப்படுத்தும் பணிகளை முறையாகத் திட்டமிடுவதற்காக கடந்த ஏப்ரல் (19) விசேட கள ஆய்வுப் பயணம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின்போது, தூய்மைப் பணிகளை எவ்வாறு முன்னெடுப்பது மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை எப்படிக் குறைப்பது என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இதில் ஆர். பிரபாகரன் – வனத்தவில்லுவ பிரதேச செயலாளர், சமந்த குணசேகர – தலைவர், கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம், ஜகத் குணசேகர – பொது மேலாளர், கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம், சுசந்த குமார – பூக்குளம் கிராம அலுவலர், கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் (MEPA) கள உதவியாளர் ஷமில விக்ரமசிங்க மற்றும் விசேட அதிகாரிகள் குழுவினர்.

விபத்துக்குள்ளான கப்பலிலிருந்து வெளியேறிய இந்தச் சிறிய நெகிழி மணிகள், கடல்வாழ் உயிரினங்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளன. இவை மீன்கள் மற்றும் ஆமைகளால் உணவெனத் தவறாகக் கருதப்பட்டு உட்கொள்ளப்படுவதால், கடல்சார் உணவுச் சங்கிலி கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

குறித்த கள ஆய்வின் முடிவில், பிரதேச செயலகத்தின் முழுமையான ஒத்துழைப்புடன் தன்னார்வலர்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினரை ஒருங்கிணைத்து, கடற்கரைகளைச் சுத்தம் செய்யும் பணிகளை உடனடியாகத் தொடங்க தீர்மானிக்கப்பட்டது. மணலில் கலந்துள்ள இந்த நுண் நெகிழிகளை அகற்றுவது சவாலான காரியம் என்பதால், இதற்கென விசேட தொழில்நுட்ப முறைகளைக் கையாளவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

கடல் வளத்தையும், கடற்கரை அழகையும் பாதுகாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இந்தத் தூய்மைப் பணியில் பொதுமக்களின் ஒத்துழைப்பும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரானுடனான போர்நிறுத்தம் காலவரையறையின்றி நீடிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடனான தற்காலிக போர்நிறுத்தத்தை காலவரையறையின்றி நீடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஈரானுடனான இரண்டு வார கால போர்நிறுத்தம் முடிவுக்கு வரவிருந்த நிலையில், அதனை காலவரையறையின்றி நீடிப்பதாக ட்ரம்ப் தனது Truth Social தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க, பேச்சுவார்த்தைகளுக்கு கூடுதல் அவகாசம் வழங்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஈரானிய அரசாங்கம் தற்போது பிளவுபட்டுள்ளதாகவும், அவர்கள் ஒரு ஒருங்கிணைந்த அமைதித் திட்டத்தை சமர்ப்பிக்கும் வரை தாக்குதல்கள் நிறுத்தப்படும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். போர்நிறுத்தம் நீடிக்கப்பட்டாலும், ஈரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை தொடர்ந்து அமலில் இருக்கும் என CNN மற்றும் Al Jazeera ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடற்படை முற்றுகை நீடிப்பது ஒரு “போர் நடவடிக்கை” என்றும், அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்றும் ஈரான் தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 2026 நிலவரப்படி, அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக பதவியில் உள்ள டொனால்ட் ட்ரம்ப்  ஏப்ரல் 1-ம் தேதி நாட்டிற்கு ஆற்றிய உரையைத் தொடர்ந்து, ஈரானுடனான மோதல் போக்கைக் குறைக்க இந்த இராஜதந்திர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த அறிவிப்பால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டிருந்த பதற்றம் சற்று தணியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“நமது சக்தி – நமது பூமி” இன்று உலக பூமி தினம் 2026!

0

இன்று ஏப்ரல் 22, உலகம் முழுவதும் “உலக பூமி தினம்” (Earth Day) மிகவும் எழுச்சியுடன் அனுசரிக்கப்படுகிறது. மனிதகுலம் எதிர்கொண்டுள்ள சுற்றுச்சூழல் நெருக்கடிகளுக்கு மத்தியில், இயற்கையோடு இணைந்த ஒரு வாழ்வியலை மீட்டெடுக்கும் நோக்கில் இந்த ஆண்டு இத்தினம் முக்கியத்துவம் பெறுகிறது.

2026 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய தொனிப்பொருளாக “நமது சக்தி – நமது பூமி” (Our Power – Our Planet) என்பது பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பூமியின் வளங்களைச் சுரண்டுவதை விடுத்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் நிலையான வாழ்வாதாரங்கள் மூலம் பூமியைப் பாதுகாக்கும் அதிகாரத்தை மக்கள் கையில் எடுக்க வேண்டும் என்பதே இதன் மையக்கருத்தாகும்.

நாம் இன்று ஒரு இக்கட்டான காலகட்டத்தில் நின்றுகொண்டிருக்கிறோம். 2026 இல் சுற்றுச்சூழல் சவால்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்துள்ளன:

  • காலநிலை மாற்றம்: புவி வெப்பமடைதலால் ஏற்படும் எதிர்பாராத இயற்கைச் சீற்றங்கள்.
  • பல்லுயிர் இழப்பு: அரிய வகை உயிரினங்கள் மற்றும் தாவரங்களின் அழிவு.
  • சுற்றுச்சூழல் சிதைவு: தொழில்துறை கழிவுகள் குவிதல் மற்றும் திட்டமிடப்படாத காடழிப்பு நடவடிக்கைகள்.

இவை வெறும் செய்திகள் மட்டுமல்ல, மனித குலத்தின் உயிர்வாழ்விற்கான எச்சரிக்கை மணிகளாகும்.

உலக பூமி தினத்தின் வரலாறு 1970 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கியது. அமெரிக்க செனட்டரும் சூழலியலாளருமான கேலார்ட் நெல்சன் என்பவரால் இந்த முன்னெடுப்பு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.

“ஐரோப்பிய நாடுகளின் அதிகப்படியான வள நுகர்வு காரணமாக ஏற்பட்ட காற்று மற்றும் நீர் மாசுபாட்டினால், மனித ஆரோக்கியத்திற்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்களைத் தவிர்க்க மக்கள் வீதியில் இறங்கிப் போராடியதன் விளைவே இத்தினம் உருவாகக் காரணமாக அமைந்தது.”

தற்போது, இந்த இயக்கம் உலகம் முழுவதும் பரவி, சுமார் 193 நாடுகளில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்களின் பங்கேற்புடன் ஒரு பிரம்மாண்டமான மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம்

2009 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, இத்தினம் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களின் வாழ்வையும் உறுதி செய்யும் ஒரு அமைப்பாகப் பூமியைக் கருதுவதை (Mother Earth) இந்தத் தீர்மானம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

பூமி என்பது நாம் நமது முன்னோர்களிடமிருந்து பெற்ற சொத்து அல்ல, நமது வருங்கால சந்ததியினரிடமிருந்து நாம் வாங்கிய கடன். “நமது சக்தி – நமது பூமி” என்ற இந்த ஆண்டின் உறுதிமொழிக்கு இணங்க, பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்தல், மரங்களை நடுதல் மற்றும் இயற்கை வளங்களைச் சிக்கனமாகப் பயன்படுத்துதல் போன்ற சிறு மாற்றங்கள் மூலம் ஒரு பெரும் மாற்றத்தை உருவாக்குவோம்.

பூமியைப் பாதுகாப்போம்; வருங்காலத்தைக் காப்போம்!

அடிப்படைத் தேவைகளை அறிந்து நிறைவேற்றும் ரஹ்மத் பவுண்டேஷன்

0

ஏ.எஸ்.எம்.அர்ஹம்

சமூக மேம்பாடு மற்றும் மனிதாபிமானப் பணிகளில் தடம் பதித்து வரும் கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன், மாணவர்களின் நலன் கருதி மற்றுமொரு காத்திரமான செயற்திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

மாவடிப்பள்ளி அல்-அஷ்ரப் பாடசாலை மாணவர்களின் நீண்டகாலத் தேவையாக இருந்த, தொழுகைக்கான ‘வுழு’ செய்யும் நவீன நீர் தொகுதி இன்று (21.04.2026) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

பாடசாலையின் அதிபர் ரஜாப்தீன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்முனை முன்னாள் மாநகர சபை பிரதி முதல்வரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், ரஹ்மத் பவுண்டேஷனின் ஸ்தாபகத் தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். அவர் நாடாவினை வெட்டி, புதிய நீர் தொகுதியை மாணவர்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்தார்.

மாணவர்கள் தங்களது அன்றாடக் கல்வி நடவடிக்கைகளுடன், ஆன்மீகக் கடமைகளையும் தடையின்றி நிறைவேற்றும் வகையில் இந்த ‘வுழு’ செய்யும் வசதி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய அம்சங்களாக மாணவர்கள் சுத்தமான முறையில் வுழுச் செய்வதை உறுதிப்படுத்துவதன் மூலம் பாடசாலைச் சூழலில் சிறந்த சுகாதாரப் பழக்கவழக்கங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன.

பாடசாலைக் காலத்திலிருந்தே மாணவர்களிடையே ஒழுக்கம் மற்றும் ஆன்மீகப் பண்புகளை வளர்த்தெடுக்க இத்திட்டம் ஒரு பாலமாக அமையும். ஒரே நேரத்தில் பல மாணவர்கள் இலகுவாகப் பயன்படுத்தும் வகையில் இந்நீர் தொகுதி அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ரனீஸ், பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ரஹ்மத் பவுண்டேஷனின் செயற்குழு உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

கல்வியறிவு என்பது வெறும் புத்தகப் படிப்போடு நின்றுவிடாமல், சமூக அக்கறை மற்றும் ஒழுக்க விழுமியங்களுடன் ஒன்றிணைய வேண்டும் என்பதில் ரஹ்மத் பவுண்டேஷன் காட்டி வரும் அக்கறை பாராட்டுதலுக்குரியது. “சமூகத்தின் அடிப்படைத் தேவைகளை அறிந்து, அவற்றை உரிய நேரத்தில் நிறைவேற்றுவதே உண்மையான சமூகப் பணி” என்பதை ரஹ்மத் மன்சூர் தலைமையிலான இவ்அமைப்பு மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

இத்தகைய மனிதாபிமான முயற்சிகள், எதிர்கால சந்ததியினரின் கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஒரு பலமான அஸ்திவாரமாக அமையும் என்பதில் ஐயமில்லை.