Sunday, April 5, 2026
Sponsored advertisementspot_img
Home Blog

நாகவில்லுவில் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ்வின் நினைவுதினம்!

பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று நாகவில்லுவில் இடம்பெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வு!

இலங்கை திருநாட்டில் பெளதீக ரீதியான பல வேலைத்திட்டங்களையும், இடம்பெயர்வு மற்றும் எல்லை நிர்ணயம் தொடர்பான பறந்துபட்ட அறிவினையும் கொண்டிருந்த எருக்கலம்பிட்டியை சேர்ந்த மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது வருட நினைவு தின நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

அந்த வகையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் நினைவுப் பேருரையும், புத்தக வெளியீடு நிகழ்வும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் ஏற்பாட்டில் நேற்று 25.08.2025 புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய அதிபர் ஜனாப் S.M. ஹுஸைமத் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், புத்தி ஜீவிகள் மற்றும் குடும்பத்தார்கள் கலந்தகொண்டமை விஷேட அம்சமாகும்.

சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் பொருளாளர் ஜனாப் ஏ.ஜி. அனீஸ் (Bsc.Agri) அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.

மேலும் இஸ்லாமிய கற்கை அறபு மொழிப் பீட, தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களினால் நூல் அறிமுக உரையும், நினைவுப் பேருரையும் மிகவும் உணர்வுபூர்வமாக நிகழ்த்தப்பட்டது.

கிழக்கு மற்றும் தென் கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பங்களிப்பு அளப்பெரியது என நினைவு கூறிய பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன், வடக்கில் ஏற்பட்ட யுத்தம் மற்றும் முஸ்லிம்களின் இடம்பெயர்வு குறித்து அதீத அக்கறையுடன் செயற்பட்ட மிக முக்கியமானவர் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்கள் எனவும் எடுத்துரைத்தார்.

வடக்கு முஸ்லிம்களின் இடம்பெயர்வு மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பில் அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களுடன் பலதரப்பட்ட கலந்துரையாடல்களை நடத்தி, சர்வதேசம் வரை இவ்விடயங்களை கொண்டுசென்ற மகான் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் என பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் தனது உரையில் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் புதல்வி சட்டத்தரணி எப்.சப்னா ஹஸ்புல்லாஹ் அவர்களினால் ஏற்புரை நிகழ்த்தப்பட்டதுடன், நூல் வெளியீடு நிகழ்வும் இடம்பெற்றது.

நூலின் முதற்பிரதியை ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தரும், புத்தளம் எருக்கலம்பிட்டி பள்ளிவாசல் நிர்வாக சபையின் முன்னாள் உறுப்பினருமான ஜனாப் ரஹ்மத்துல்லாஹ் (GS) அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

மேலும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் செயலாளர் ஜனாப் எஸ்.எச்.எம். றிஸ்னி அவர்களினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டதுடன், தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன், மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பாரியாருக்கும் நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில், பேராசிரியர்கள், கல்விமான்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், பாடசாலைச் சமூகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் குடும்பத்தார்கள் என பலரும் கலந்து சிறப்பித்ததுடன், ஈ நியூஸ் பெஸ்ட் ஊடக நிறுவனம் ஊடக அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரணிலுக்காக ஒன்று திரண்ட அரசியல் தலைவர்கள்!

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விசாரணை கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது, நாட்டின் அடிப்படை ஜனநாயக நிறுவனங்களின் வலிமை குறித்து கடுமையான கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் விளைவுகள் ஒரு தனிநபரின் அல்லது எந்தவொரு அரசியல் கட்சிகளின் தலைவிதியையும் விட, சமூகத்தின் உரிமைகளுக்கான பிரச்சினைகளை தோற்றிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் தலைவர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைகளை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது மற்றும் விளக்கமறியலை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து நடத்திய விசேட ஊடக சந்திப்பில் பங்கேற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரல முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் அறிக்கையை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

போர்த்துக்கல் அணி சாம்பியன் ஆனது!

0

‘நேஷன்ஸ் லீக்’ கால்பந்தில் போர்ச்சுகல் அணி சாம்பியன் ஆனது. பைனலில் ‘பெனால்டி ஷூட் அவுட்டில்’ 5-3 என ஸ்பெயினை வீழ்த்தியது.

ஐரோப்பிய கால்பந்து அணிகளுக்காக ‘நேஷன்ஸ் லீக்’ தொடர் நடத்தப்படுகிறது. மொத்தம் 54 அணிகள் பங்கேற்றன. நேற்று ஜெர்மனியின் முனிக் நகரில் நடந்த பைனலில், போர்ச்சுகல், நடப்பு யூரோ சாம்பியன் ஸ்பெயின் பலப்பரீட்சை நடத்தின. போட்டியின் 21வது நிமிடம் ஜுபிமெண்டி (ஸ்பெயின்), 26வது நிமிடம் மெண்டிஸ் (போர்ச்சுகல்) தலா ஒரு கோல் அடித்தனர். 45வது நிமிடம் மைக்கேல் ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் ஸ்பெயின் அணி 2-1 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் 61 வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். போர்ச்சுகல் அணிக்காக இவர் அடித்த 138வது கோல் இது. 90 நிமிட முடிவில் போட்டி 2-2 என சமன் ஆனது. அடுத்து நடந்த கூடுதல் நேரத்திலும் (30 நிமிடம்) இரு அணியும் கோல் அடிக்கவில்லை.

இதையடுத்து வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி ‘பெனால்டி ஷூட் அவுட்டுக்கு’ சென்றது. இரு அணிக்கும் தலா 5 வாய்ப்புகள் தரப்பட்டன. காயம் காரணமாக 88 வது நிமிடம் வெளியேறிய ரொனால்டோ, இதில் பங்கேற்கவில்லை.

முதல் 3 வாய்ப்பில் போர்ச்சுகலின் ராமோஸ், விடின்ஹா, பெர்ணான்டஸ் கோல் அடித்தனர். மறுபக்கம் ஸ்பெயின் தரப்பில் மெரினோ, பயேனா, இஸ்கோ கோல் அடிக்க 3-3 என ஆனது.

4வது வாய்ப்பில் மெண்டெஸ் (போர்ச்சுகல்) கோல் அடிக்க, ஸ்பெயினின் மோராட்டோ அடித்த பந்தை கோல் கீப்பர் டீகோ கோஸ்டா தடுத்து அசத்தினார்.

5வது வாய்ப்பில் நெவேஸ் கோல் அடித்தார். இதையடுத்து 5-3 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் ‘திரில்’ வெற்றி பெற்றது. 2019க்குப் பின் இத்தொடரில் மீண்டும் சாம்பியன் ஆனது.

தில்லையடியில் சிக்கிய கடத்தல் பீடி இலைகள்!

0

புத்தளத்தில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளுடன் வேன் ஒன்றும் பறிமுதல்!

இலங்கை கடற்படை, பொலிஸாருடன் இணைந்து, புத்தளம், தில்லையடி பகுதியில் 2025 ஜூன் 05 இரவு வேளையில் நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகள் கொண்ட ஒரு வேன் கைப்பற்றப்பட்டது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிறுவனம், புத்தளம் பொலிஸாருடன் இணைந்து தில்லையடி பகுதியில் நடத்திய இந்த சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்று சோதனை செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகளானது வாகனத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் வேன் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களால் ஆபத்தா?

விண்வெளியில் பூமியை சுற்றி வந்துக்கொண்டிருக்கும் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கொள்களை சீனா நினைத்தால் வெறும் 12 மணி நேரத்தில் தாக்கி அழித்துவிட முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் என்கிற செய்தி ஊடகத்தில் இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது தற்போது சீனா 99 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. இவை அனைத்தும் நான்ஜிங் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஆஸ்ட்ரோனாட்டிக்ஸ் பல்கலைக்கழகத்தின் விண்வெளிக் கட்டுப்பாட்டுத் துறையின் இயக்குநர் வூ யுன்ஹுவா தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இவை அனைத்தும் எலான் மஸ்கின் 1400 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை வெறும் 12 மணி நேரத்தில் காலி செய்துவிடும். சீன செயற்கைக்கோளில் லேசர், நுண் அலைகளை உருவாக்கும் கருவி, உளவு கருவிகள் பொருத்தப்பட்டிருக்கலாம். ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் வெறுமென நெட்வொர்க் கொடுக்க மட்டுமே பயன்படுத்தப்படுவதில்லை. தவிர, ராணுவ நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது என சீனா குற்றம்சாட்டி வருகிறது.

அதாவது, உக்ரைன்-ரஷ்யா போரில், உக்ரைன் படைகளுக்கு தகவல்கள் கொடுக்கவும், ரஷ்ய எல்லையை துல்லியமாக கண்காணிக்கவும் இந்த செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த 2022ம் ஆண்டு ரஷ்ய போரின்போது அப்போதைய உக்ரைனின் துணைப் பிரதமரான மைக்கைலோ ஃபெடோரோவ், “ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் சேவையை உடனடியாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த மஸ்க், “உடனடியாக சேவை வழங்கப்படும்” என்று கூறியிருந்தார்.

உக்ரைன் போருடன் மட்டுமே ஸ்டார்லிங்க் நிற்காது, நாளை சீனாவுக்கும்-தைவானுக்கும் பஞ்சாயது ஏற்பட்டால் அப்போதும், தைவானுக்கு சப்போர்ட் செய்ய ஸ்டார்லிங்க் வரும். எனவே இந்த கூட்டு நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்க சீனா இந்த புதிய செயற்கைக்கோள்களை உருவாக்கியிருக்கிறது.

கடந்த 2023ம் ஆண்டு இதற்கான பணிகளை சீனா தொடங்கியது. இந்த திட்டத்திற்கு ‘கியான்ஃபான் மெகா-விண்மீன் திட்டம்’ (Qianfan mega-constellation project) என்றும் பெயரிட்டிருந்தது. நோக்கம் உலகம் முழுவதும் இணைய தொடர்பை வழங்குவதாகும். இதற்காக மொத்தம் 15,000 சிறிய ரக செயற்கைக்கோள்களை ஏவ சீனா முடிவெடுத்தது. இதன் முதல் தொகுப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏவப்பட்டது. இதில் 18 செயற்கைக்கோள்கள் இருந்தன.

ஒவ்வொன்றும் சுமார் 300 கி.கி எடையில் இருந்தது. இவை பூமியிலிருந்து 800 கி.மீ உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டது. இதேபோன்று 2024 டிசம்பரில் அடுத்து இரண்டு தொகுதி ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. தற்போது மொத்தம் 99 செயற்கைக்கோள்கள் விண்வெளியில் இருக்கின்றன. 15,000 செயற்கைக்கோள்களை 3 கட்டங்களாக ஏவ இருக்கிறது. முதல் கட்டத்தில் 1,296 செயற்கைக்கோள்கள் ஏவப்படும். இதில் 648 செயற்கைக்கோள்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஏவப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் கன்னி உரை

0

அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்புவோம்

தேசியத்துவத்துடனும் ஐக்கியத்துடனும் ஒன்றுபட்டு நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க இன்று (23) காலை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

பதவிப் பிரமாணத்தின் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய முழுமையான உரை:

மக்களால் ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது நமது நாட்டின் ஜனநாயகத்திலிருக்கும் மிக முக்கியமான அம்சமாகும். தேர்தலில் வாக்களித்தல் மற்றும் ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதோடு ஜனநாயகம் நிறைவு பெறுவதில்லை. இது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சம் என்றாலும், நம் நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்த, கட்டமைப்புகளின் வலிமையும், சட்டங்களை வலுப்படுத்துவதும் அவசியம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனவே, எனது பதவிக்காலத்தில் இந்த நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.

அத்துடன், இந்த நாட்டில் ஜனநாயக முறையில் அதிகாரப் பரிமாற்றம் நடந்த வரலாறும் உண்டு. தேர்தலில் நிகழும் அதிகாரப் பரிமாற்றத்தை எந்தத் தலைவரும் நிராகரித்ததில்லை. அதற்கமைய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த மக்கள்ஆணையை சுமூகமாக ஏற்றுக்கொண்டதுடன், ஜனநாயக ரீதியில் அதிகாரத்தை கைமாற்றுவதற்கான அவரின் அர்ப்பணிப்பிற்கும் முன்னுதாரணத்திற்கும் நன்றி தெரிவிக்கிறேன். மேலும் எமக்கு கிடைப்பது மிகவும் சவால் நிறைந்த நாடு என்பதை நன்கு புரிந்து கொண்டிருக்கிறோம். நமது அரசியலில் தூய்மையான, மக்களால் எதிர்பார்க்கப்படும் சிறந்த அரசியல் கலாசாரத்திற்காக அவசியம் காணப்படுகிறது.அதற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

நம் நாட்டின் அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு நல்லெண்ணம் இல்லை. எனவே, அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் மீது மக்கள் மரியாதை மற்றும் நம்பிக்கையை மீட்டெடுக்க எங்கள் தரப்பிலிருந்து முடிந்த அனைத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.

மேலும், நமக்கு முன் இருக்கும் இந்த ஆழமான நெருக்கடியை வெறும் அரசோ, வெறும் அரசியல் கட்சியோ அல்லது ஒரு தனி நபரோ மட்டும் தீர்க்க முடியும் என்று நாங்கள் நம்பவில்லை. ஏனென்றால், நான் முன்பு கூறியது போல், நான் ஒரு மாயாஜால வித்தைக்காரனல்ல. நான் மந்திரவாதியும் இல்லை. நான் இந்த நாட்டின் சாதாரண குடிமகன். எம்மிடம் திறமைகள் உள்ளன. இயலாமைகளும் உள்ளன. தெரிந்த விடயங்களும் உள்ளன அதேபோன்று, தெரியாத விடயங்களும் உள்ளன.

ஆனால் திறமைகளைப் பயன்படுத்தி தெரியாதவற்றை சேகரித்துக்கொண்டு சிறந்த முடிவுகளை எடுத்து இந்த நாட்டை வழிநடத்துவதே எனது தலையாய பணியாகும். அந்த கூட்டுப் பங்களிப்பின் ஒரு அங்கமாக மாறுவது எனது பொறுப்பாகும். மேலும், இந்த நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதில் பொது மக்கள் மற்றும் அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் பாரிய பொறுப்பு உள்ளது. அந்தப் பொறுப்பை நிறைவேற்ற அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்.

ஆனால், நாட்டின் ஜனாதிபதி என்ற முறையில், இந்தப் பணியை முன்னின்று நடத்துவதில் எனக்கு முதன்மையான மற்றும் மிக முக்கியமான பொறுப்பு இருப்பதை நான் ஏற்றுக்கொண்டேன். எனவே, இந்தச் சவாலை வெற்றிகொள்வதற்காக எனக்குக் வழங்கப்பட்டுள்ள பணியை நான் உரிய முறையில் நிறைவேற்றுவேன் என்பதை செயற்பாடு மற்றும் நடைமுறை மூலம் எல்லா சந்தர்ப்பங்களிலும் இந்த நாட்டின் பிரஜைகளுக்கு வெளிப்படுத்த நான் தயாராக இருக்கிறேன்.

மேலும் நமது நாட்டுக்கு சர்வதேச ஆதரவு தேவை. எனவே, உலகில் எத்தகைய அதிகாரப் பிளவுகள் இருந்தாலும், ஒவ்வொரு நாட்டையும் எமக்கு மிகவும் சாதகமாக கையாள்வதே நமது எதிர்பார்ப்பாகும். நாம் உலகில் தனிமைப்படுத்தப்பட்ட நாடு அல்ல. உலகத்துடன் கூட்டாக முன்னேற வேண்டிய ஒரு நாடாகும். அது தொடர்பில் தேவையான முடிவுகளை எடுக்க நாங்கள் சிறிதும் தயங்குவதில்லை.

மேலும், நம் நாட்டைக் கட்டியெழுப்புவதில் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு பெரும் பங்கு உள்ளது. எனவே, நாட்டை மேலும் வலுவாகக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு அவர்கள் ஆதரவளிப்பார்கள் என நான் கருதுகின்றேன்.

நம் நாட்டின் ஜனநாயகத்தின் ஊடாக நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். அதற்காக மக்கள் எனக்கு வாக்களித்தனர்.

மேலும் எனக்கு வழங்கப்படாத வாக்குகளும் உள்ளன. எனவே, எங்களின் வெற்றியின் உள்ளடக்கம் மற்றும் அளவு குறித்து எங்களுக்கு நல்ல புரிதல் உள்ளது. எனவே, எங்களுக்கு ஆதரவு வழங்காத மற்றும் எங்களை நம்பாத பிரஜைகளின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெறுவதே எனது நிர்வாகத்தின் போது எனக்கு வழங்கப்பட்டுள்ள பணியாகும். அந்தப் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

எதிர்காலத்தில் இவை அனைத்தையும் நீங்கள் நடைமுறையில் கண்டுகொள்ள முடியும். அதற்கு அனைத்து மக்களின் ஆதரவையும் எதிர்பார்க்கின்றேன்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தேர்தலில் இவ்வாறுதான் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்

0

அதிகாரிகள் மற்றும் பிற தேவைகள் முடிந்த பிறகு, மாலை 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (19) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி பிற்பகல் 4.15 மணிளவில் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“எதிர்வரும் 21ம் திகதி வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள் பெறப்பட்டதும், அதிகாரிகள் மற்றும் இதர தேவைகள் முடிந்ததும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் இரவு 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

மாலை 4.15 மணிளவில் தபால் மூல வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

அத்துடன் மாவட்ட அளவில் ஒவ்வொரு வட்டாரத்திலும் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெறும்.

வாக்கு எண்ணிக்கையின் முடிவில் முடிவுகள் கிடைத்தவுடன் ஊடகங்களுக்கு வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையே முதலில் எண்ணப்படும்.

அந்தக் கணக்கெடுப்பின் பின்னர் (மாவட்ட அளவில் எண்ணும் பணி) முதலில் வாக்குப்பெட்டிகளில் உள்ள வாக்குகள் எண்ணப்படும்.

அதன் பிறகு, ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு, தொகுதி மற்றும் மாவட்ட அளவில் அது தயாரிக்கப்படுகிறது.

தேர்தல்கள் செயலகமே ஒட்டுமொத்த முடிவுகளைக் கணக்கிடும்.

எந்த வேட்பாளரும் 50 வீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்றுள்ளாரா என சரிபார்க்கப்படும்.

அப்படியானால், அந்த நேரத்தில் வாக்கு எண்ணும் பணிகள் நிறுத்தப்படும்.

அப்போது ஜனாதிபதியை நாங்கள் அறிவிப்போம்.

எந்த வேட்பாளருக்கும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் கிடைக்காவிடின், விருப்பு வாக்கு எண்ணிக்கைக்கு செல்ல வேண்டும்.

அங்கு, அதிக வாக்குகள் பெற்ற இரண்டு வேட்பாளர்கள் போட்டியில் வைத்து விட்டு  மீதமுள்ள 36 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து நீக்கப்படுவர்” என்றார்.

புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக மாறும்

0

புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வாத்தியாசலையாக மாற்றம் பெரும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று புத்தளத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ அலிசப்ரி ரஹீம் மற்றும் சிந்தக்க மாயாதுன்ன தலைமையில் புத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்திலே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

புத்தளம் மக்களின் நீண்ட நாள் தேவையாக இருந்து வருகின்ற புத்தளம் தல வைத்தியசாலையை தரமுயர்த்துவது தொடர்பாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ அலிசப்ரி ரஹீம் அவர்களினால் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோலுக்கிணங்க குறித்த வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.

மேலும் புத்தளத்தில் மீன் பிடி தொழிலை முன்னேற்றும் நோக்கத்தில் மீன் பிடி துறைமுகம் ஒன்றை அமைக்கும் யோசனையும் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டதுடன், அதற்கான முன்னெடுப்புகளும் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்டமை புத்தளம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நாட்டில் நிரந்தர பொருளாதார அபிவிருத்தியை நிலை நாட்ட தாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டை பொருளாதார அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவதே தனது பிரதான நோக்கம் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மொட்டுக்கட்சிக்கு எதிராக நிற்கும் முக்கிய அமைச்சர்கள்

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக மொட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளரை இந்த வாரம் அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்காதிருக்கவும், மொட்டு சின்னத்தில் தனியாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமக்கு ஆதரவு வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பியிருந்த கடிதம் நேற்றைய தினம் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தினால் அரசியல் குழுவில் முன்வைக்கப்பட்டது.

எவ்வாறாயினும் அந்த கடிதத்தை நிராகரிக்க அரசியல் குழுக் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுவில் 82 பேர் அங்கம் வகிப்பதுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் 72 பேர் பங்கேற்றனர்.

இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த 11 பேர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

மஹிந்தானந்த அலுத்கமகே, பந்துல குணவர்தன, பிரதீப் உந்துகொட, கோகிலா ஹர்ஷனி குணவர்தன, சஹன் பிரதீப், ரமேஸ் பத்திரன, கஞ்சன விஜேசேகர, பிரசன்ன ரணதுங்க, கனக ஹேரத், மொஹான் பிரியதர்ஷன ஆகியோர் கட்சியின் சார்பில் தனியான வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

அத்துடன் பிறிதொரு கட்சியின் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்கும் உறுப்பினர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் யோசனைக்கு 6 பேர் எதிராக வாக்களித்துள்ளனர்.

எவ்வாறாயினும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் எனக் கூறப்பட்ட தம்மிக பெரேரா தொடர்பில் அரசியல் குழுக் கூட்டத்தின்போது எந்தவித கருத்துக்களும் பரிமாற்றிக் கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவளிக்காத 11 பேர் உள்ளிட்ட தரப்பினர் நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தனவின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சைனப் ஆரம்பப் பாடசாலைக்கு ஆளுநர் வருகை!

0

புத்தளம் சைனப் ஆரம்ப பாடசாலையின் முப்பெரும் விழா பாடசாலை அதிபர் யஹியா தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து புத்தளம் ஜெய்னப் பாடசாலைக்கு 22 லட்சம் ரூபா பெறுமதியான நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு, சிறுவர் விளையாட்டு நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தல் மற்றும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் செயற்திட்டத்தின் கீழ் BCMH நிறுவனத்தினால் கற்றல் உபகரணம் வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் கடந்த செவ்வாய்க்கிழமை (16) வெகு விமர்சையாக இடம்பெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதியாக வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், விசேட அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மற்றும் கௌரவ அதிதியாக புத்தளம் வலயக்கல்விப் பணிப்பாளர் அர்ஜுன ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆரம்ப பாடசாலையின் முக்கியத்துவம் மற்றும் அறிவார்ந்த சமூகத்தை கட்டியெழுப்ப ஆரம்ப பாடசாலை ஆற்றிவருகின்ற அர்ப்பணிப்பு குறித்து விரிவாக பேசிய வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், புத்தளம் மாவட்ட பாடசாலைகளின் துரித வளர்ச்சி பற்றியும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

மேலும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் செயற்திட்டத்திற்கு வடமேல் மாகாண ஆளுநர் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் ஜவ்ஷி ஜமால்தின், இணைப்புச் செயலாளர் எச். அமீர் அலி ஆசிரியர், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் உட்பட உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் அயல் பாடசாலையின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு
நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு

ஹிருணிகாவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறை

0

கடத்தல் வழக்கில் முன்னாள் எம்.பி ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்தத் தீர்ப்பை அறிவித்தார்.

தெமட்டகொட பகுதியிலுள்ள கடை ஒன்றில் பணிபுரிந்த அமில பிரியந்த அமரசிங்க எனும் இளைஞர் ஒருவரை 2015 டிசம்பர் 21ஆம் திகதி ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு சொந்தமான டிபெண்டர் வாகனத்தில் கடத்திய வழக்கு விசாரணை முடிவில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

29 குற்றங்கள் தொடர்பில் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் 8 பேரும் குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில், அச்சம்பத்திற்கு உதவி, ஒத்தாசை புரிந்ததாக ஹிருணிகா மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்திருந்தார்.

அத்தோடு, சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவின் ஆதரவாளர்கள் 8 பேர் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைதான ஐந்தாம் சந்தேகநபரின் மகள் அளித்துள்ள வாக்குமூலத்தில், தமது தாயாருடன் தொடர்பு பேணிய நபர் ஒருவரை தாம் காண்பித்ததாகவும், அவரை தமது தந்தையும் அவருடன் சென்றவர்களும் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு ஹிருணிகாவிடம் அழைத்துச் சென்றதாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

ஓவியப்போட்டியில் எருக்கலம்பிட்டி மாணவன் முதலாமிடம்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட வட மாகாண மானவர்களுக்கிடையிலான சித்திரப்போட்டியில் மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்றார்.

வீதி விபத்துக்கள் இல்லாத நாளைக்கான பாடசாலையிலிருந்து அணிவக்குப்போம் எனும் தொனிப்பொருளில் கடந்த வியாழக்கிழமை (13.06.2024) அன்று நடாத்தப்பட்ட வட மாகாண மாணவர்களுக்கிடையிலான குறித்த சித்திரப்போட்டியில் சுமார் 2600 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

சித்திரப்போட்டியில் பங்குபற்றிய 2600 மாணவர்களில் 250 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு நேற்றைய தினம் (15.06.2024) அவர்களுக்கான போட்டி இடம்பெற்றது.

நடைபெற்று முடிந்த இறுதிச் சுற்றுப்போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்று பெருமதிமிக்க பரிசில்களை பெற்றுக்கொண்டார்.

முதலாம் இடம் பெற்ற முஹம்மது ஹுசைன் என்ற மாணவனுக்கு சான்றிதல், துவிச்சக்கரவண்டி மற்றும் 8500/- ரூபா பெறுமதியான வவுச்சரும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இதேவேளை குறித்த போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய இல்முதீன் முஹம்மது ஹஸ்பான் 7 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய மற்றொரு மாணவரான முஹம்மது சம்ஹான் 8 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

பாரிய சாவல்களுக்கு மத்தியில் தனி ஒரு மனிதனாக இம் மாணாவர்களை ஊக்கப்படுத்தி, தயார்ப்படுத்தி போட்டியில் பங்குபெறச் செய்து வெற்றிபெறச் செய்த எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியின் சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் அவர்களின் இம் முயற்சிக்கு, பாடசாலை சமூகம் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் நன்றி தெரிவித்தனர்.

தமக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வந்து தேசிய அளவில் இடம்பெறும் போட்டிகளில் மாணவர்களை பங்குபெறச் செய்வதே தனது இலக்கு என சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் எமது ஊடகத்திற்கு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை இராஜினாமா

0

நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்துள்ளனர்.

சாந்த நிரியல்ல உட்பட 15 பேர் கொண்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரின் அறிவித்தலுக்கு அமைய இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி திங்கட்கிழமை புதிய பணிப்பாளர் சபை நியமிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ “அத தெரண” விற்கு தெரிவித்தார்.

புத்தளம் எருக்கலம்பிட்டியில் கடும் வெள்ளம்

0

புத்தளம் பகுதியில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக புத்தளம் பகுதி முழுதும் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.

புத்தளம், தில்லையடி, பாலாவி, புத்தளம் எருக்கலம்பிட்டி, ஹிதாயத் நகர்,  மதுரங்குளி மற்றும் ஏனைய பல கிராமங்களும் வெள்ளித்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமமும் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 1500 குடும்பங்கள் இங்கு வாழ்ந்துவருவதுடன், அனைத்து வீடுகளும் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நூற்றிற்கும் அதிகமான வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் ஐநூற்றுக்கும் அதிகமான வீடுகள் பகுதி அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8ஆம் திகதி ஏற்பட்ட மழை வெள்ளித்தினால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் மற்றும் பாடசாலைகளில் தற்காலிகமாக  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு தினங்களாக இவர்களுக்கான சமைத்த உணவுகள் மூன்று வேலைகளிலும் ஊர் தனவந்தர்களின் உதவியுடனும், பள்ளிவாசல் நிர்வாக சபையின் வழிகாட்டலுடனும் வழங்கப்பட்டு வருவதுடன், ஊர் மக்களுக்கும் உணவு விநியோகங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

இவர்களுக்கான நிவாரண உதவிகள் இதுவரை அரசாங்கத்தினால் வழங்கப்படாத போதிலும், ஊர் மக்களின் பங்களிப்புடன் மாத்திரமே பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு விநியோகங்கள் இதுவரை  வழங்கப்பட்டு வருகின்றது.

புத்தளம் பொத்துவில்லு பகுதியில் உள்ள குளம் மழை நீரினால்  பெருக்கெடுத்துள்ளதால் குறித்த குளத்து நீர் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமத்திற்குள் தொடர்ந்தும் மூன்றாவது நாளாக ஊடறுத்து செல்வதால் வீடுகள் தொடர்ந்தும் நீருள் மூழ்கியுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்தின் நிவாரண உதவிக்காக பல மக்கள் தொடர்ந்தும் எதிர்பார்த்து காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

டிரம்ப் விதித்த 48 மணி நேரக் கெடு நாளை அதிகாலையுடன் முடிகிறது! 

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்காவிற்கு ஈரான் ராணுவ அதிகாரி பெரிய அதிர்ச்சி காத்திருப்பதாக பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் தற்போது உலகப்போருக்கான சூழலை உருவாக்கியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி தொடங்கிய இந்த மோதலில், இதுவரை 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஈரான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. போர் தொடங்கி 6 வாரங்கள் ஆகும் நிலையில், தற்போது தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. கடந்த மார்ச் 26ம் தேதியன்று ஈரான் நாட்டின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்பட இருந்த தாக்குதல்களை, ஏப்ரல் 6ம் தேதி திங்கட்கிழமை வரை (நாளை) நிறுத்தி வைப்பதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார்.

ஈரான் அரசின் வேண்டுகோளை ஏற்று, அமைதி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் இந்த கால அவகாசம் வழங்கப்படுவதாக அப்போது அவர் கூறியிருந்தார். இதற்காக 10 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே கடந்த 3 மற்றும் 4ம் தேதிகளில் பாரசீக வளைகுடா பகுதியில் பறந்த அமெரிக்காவின் எப்-15 ஸ்டிரைக் ஈகிள் மற்றும் ஏ-10 தண்டர்போல்ட் ஆகிய 2 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அதிரடியாக அறிவித்தது. இதற்கு பதிலடியாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரானின் புஷெர் அணு உலை, எஃகு உற்பத்தி ஆலை மற்றும் முக்கிய பாலங்களை குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தின.

குறிப்பாக காரஜ் பகுதியில் உள்ள பி1 பாலத்தை அமெரிக்கா தகர்த்தது. இதனால் ஆத்திரமடைந்த ஈரான், குவைத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மீதும், ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிசக்தி மையங்கள் மீதும் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த இக்கட்டான சூழலில், ேநற்று அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானுக்கு 48 மணி நேர அதிரடி கெடு விதித்தார். அதில், ‘ஹார்முஸ் நீர்சந்தியை மீண்டும் திறக்க ஈரான் உடன்பட வேண்டும், இல்லையெனில் நரகத்தை சந்திக்க நேரிடும்’ என்று எச்சரித்தார்.

அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை பிற்பகல் விதிக்கப்பட்ட இந்த கெடுவானது, இலங்கை நேரப்படி நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 3.30 மணி அளவில் முடிவுக்கு வருகிறது.

இந்த காலக்கெடுவுக்குள் ஈரான் பணியவில்லை என்றால் அமெரிக்கா மிகப்பெரிய அளவில் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த சூழலில், ஈரானின் பார்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரி, ‘தெற்கு ஈரான் பகுதியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், அவர்களுக்கு சாதகமாக அமையாது.

அமெரிக்க ராணுவம் வைத்துள்ள இலக்குகள் அனைத்தும் அர்த்தமற்றவை. பாலம் மற்றும் மின் நிலையங்களை தகர்ப்போம் என்ற அதிபர் டிரம்ப் விடுத்த மிரட்டல், அமெரிக்காவின் விரக்தியையே காட்டுகிறது. எங்களது அடுத்தகட்ட நடவடிக்கை அமெரிக்காவிற்கு மிகப் பெரிய அதிர்ச்சியாக அமையும். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க வளைகுடா நாடுகள் மற்றும் ஜோர்டானில் உள்ள 8 முக்கிய பாலங்களின் பட்டியலை தயார் செய்துள்ளோம். இதில் சவுதி அரேபியா – பஹ்ரைனை இணைக்கும் கிங் ஃபஹத் பாலம் மற்றும் குவைத்தின் ஷேக் ஜாபர் அல்-அகமது அல்-சபா பாலம் ஆகியவையும் அடங்கும்’ என்று அவர் கூறினார்.

ஹார்முஸ் நீர்சந்தி முடக்கப்பட்டதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. ஈரானுடன் சீனா உள்ளிட்ட சில நாடுகள் டிஜிட்டல் கரன்சி மூலம் வர்த்தகம் செய்ய முயன்றாலும், அந்த ஜலசந்தியை ராணுவ ரீதியாக திறக்க அமெரிக்கா தலைமையிலான 35 நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் கொண்டு வர தீவிர முயற்சி எடுத்து வருகின்றன. டிரம்ப் விதித்த கெடு நாளை அதிகாலை முடிய உள்ள நிலையில், ஈரான் தரப்பில் கூறப்படும் பெரிய அதிர்ச்சி என்னவாக இருக்கும் என்ற அச்சம் உலக நாடுகளிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

டிரம்பின் பைத்தியக்காரத்தனத்தை எவராலும் தடுக்க முடியாதா?

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் குறித்து சர்வதேச அணுசக்தி முகமையின் முன்னாள் இயக்குநரான முகமது எல்பாரடே தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் அரபு மொழியில், ‘இந்த பைத்தியக்காரர் (டிரம்ப்) இப்பகுதியை நெருப்புப் பந்தாக மாற்றுவதற்கு முன்பாக, உங்களால் முடிந்த அனைத்தையும் செய்து போரைத் தடுத்து நிறுத்துங்கள்’ என்று வளைகுடா நாட்டுத் தலைவர்களிடம் அவர் உருக்கமாக கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், உலக நாடுகளின் அமைப்பிற்கு அவர் விடுத்துள்ள மற்றொரு செய்தியில், ‘இந்த பைத்தியக்காரத்தனத்தை நிறுத்த யாராலும் ஒன்றும் செய்ய முடியாதா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஈரான் ராணுவ தளபதிகள் பலி;

மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் இன்று முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அதில், ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது அமெரிக்கா நடத்திய பிரம்மாண்ட வான்வழித் தாக்குதலில், அந்நாட்டு ராணுவத்தின் முக்கிய தளபதிகள் பலர் கொல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், இருள் சூழ்ந்த பகுதியில் போர் விமானங்கள் பறக்கும் சத்தமும், மிகப்பெரிய குண்டுகள் வெடிக்கும் சத்தமும் பதிவாகியுள்ளது. இதுகுறித்து அதிபர் டிரம்ப் தனது பதிவில், ‘ஈரான் நாட்டை தவறான பாதையில் வழிநடத்திச் சென்ற அந்த நாட்டு ராணுவத் தலைவர்கள் பலர், டெஹ்ரான் மீது நடத்தப்பட்ட இந்த பிரம்மாண்ட தாக்குதலில் அதிரடியாக கொல்லப்பட்டனர். அவர்களுடன் சேர்த்து இன்னும் பல முக்கிய இலக்குகளும் இந்த தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளன’ என்று தெரிவித்துள்ளார். எனினும், இந்த தாக்குதலின் தொழில்நுட்ப விவரங்கள் குறித்தோ அல்லது பலியானவர்களின் எண்ணிக்கை குறித்தோ அமெரிக்க தரப்பில் விரிவான விளக்கம் இன்னும் அளிக்கப்படவில்லை.

காட்டு யானைகள் தாக்கியதில் நால்வர் பலி!

0

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற காட்டு யானைத் தாக்குதல்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். 

எப்பாவல, கெலேஅமுணுகொலய பகுதியில் இடம்பெற்ற காட்டு யானைத் தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர். 

அத்துடன், ஹுரிகஸ்வெவ பகுதியிலும் யானைத் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இதேவேளை, தனமல்வில – ஹம்பேகமுவ பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு காட்டு யானைத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தேத்தாவாடி ஆக்கிரமிப்புக்கு தவிசாளர் வைத்த முற்றுப்புள்ளி!

கற்பிட்டி, தேத்தாவாடி மீனவ கிராமத்தில் நீண்டகாலமாக நிலவி வந்த பொதுப்பாதை ஆக்கிரமிப்புப் பிரச்சினைக்கு, கற்பிட்டி பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எஸ்.எம். றிகாஸ் அவர்களின் நேரடித் தலையீட்டின் மூலம் சுமூகமான ஒரு தீர்வு எட்டப்பட்டுள்ளது.

தேத்தாவாடி பகுதி மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் பல தசாப்தங்களாகப் பயன்படுத்தி வந்த பாதையை, அப்பகுதியில் உள்ள சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் ஆக்கிரமிக்க முயன்றதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரப் போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் நடமாட்டம் பாதிக்கப்படும் நிலை உருவானது.

பிரதேச சபையின் உறுப்பினர் ஏ.ஆர்.எம். முஸம்மில் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, தவிசாளர் ஏ.எஸ்.எம். றிகாஸ், பிரதித் தவிசாளர் சமன் குமார மற்றும் குழுவினர் தேத்தாவாடி கிராமத்திற்குச் நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.

அங்கு நிலவிய சூழலை நேரில் ஆராய்ந்த தவிசாளர், அதிரடியாக தனது முடிவுகளை அறிவித்தார்.

பொதுமக்களின் பயன்பாட்டிலுள்ள பாதையை எந்தவொரு தனியார் நிறுவனமோ அல்லது சுற்றுலா விடுதியோ ஆக்கிரமிக்க முடியாது என திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மேலும் சம்பந்தப்பட்ட சுற்றுலா விடுதியின் பொறுப்பதிகாரியை நேரில் அழைத்து எச்சரித்த தவிசாளர், மீனவர்களின் போக்குவரத்திற்கு எவ்வித இடையூறும் விளைவிக்கக் கூடாது என கடும் உத்தரவு பிறப்பித்தார்.

பொதுமக்கள் மற்றும் கடற்தொழிலாளர்கள் எவ்வித தடையுமின்றிச் சுதந்திரமாகப் பாதையைப் பயன்படுத்துவதற்கு முழு உரிமை உண்டு என்பதை அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் அவர் தெளிவுபடுத்தினார்

இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில், தவிசாளர் உடனடியாக நாரா (NARA) நிறுவனத்துடன் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டார். கடலிலிருந்து 10 மீட்டர் வரையான சட்டரீதியான கடல் எல்லையை முறைப்படி அளவீடு செய்து, அந்த எல்லையை உறுதிப்படுத்தும் வகையில் எல்லைக் கூஞ்சிகளை (Boundary Pillars) நாட்டுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

தற்போதைய தவிசாளரின் இந்த துரித நடவடிக்கையினால் மீனவ சமூகத்தின் நீண்டகாலப் கவலை நீங்கியுள்ளதுடன் மக்கள் பிரதிநிதிகளின் இந்த அதிரடித் தலையீட்டை தேத்தாவாடி கிராம மக்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

நோயாளிகளின் உயிர்களைப் பணையம் வைக்க வேண்டாம்!

0

உள்ளகப் பயிற்சியைப் பூர்த்தி செய்த வைத்தியர்களுக்குப் நியமனங்கள் வழங்கும் முறைமைக்கு எதிராக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டமானது, எவ்விதமான கலந்துரையாடல்களுக்கும் அடிப்படையற்ற ஒரு செயலாகும் எனச் சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நேற்று (04) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில், GMOA முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை குறித்துக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த விவகாரம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

“நியாயமான காரணங்களின் அடிப்படையில் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டால், அது குறித்து எம்மால் கலந்துரையாட முடியும். ஆனால், தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள இந்தப் போராட்டமானது எவ்வித அடிப்படையுமற்றது. இது குறித்துப் பேசுவதற்குக்கூட ஒன்றுமில்லை” என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சருடன் உள்ள தனிப்பட்ட மோதல்களுக்காக நோயாளிகளின் உயிர்களைப் பணையம் வைக்க வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார். “என்னுடன் உங்களுக்கு ஏதேனும் பிரச்சினை இருந்தால் எனக்குச் சவால் விடுங்கள். அதை விடுத்து, நோயாளிகளின் உயிர்களைப் பணையக் கைதிகளாக ஆக்கி அவர்களை இந்தப் பிரச்சினைகளுக்குள் இழுக்க வேண்டாம். அமைச்சருடன் இருக்கும் பிரச்சினைகளைப் பொதுமக்கள் மீது திணிக்க வேண்டாம்” என அவர் வலியுறுத்தினார்.

உள்ளகப் பயிற்சி நியமனங்கள் வழங்கும் முறைமை சட்டவிரோதமானது என GMOA கருதினால், அதற்கு எதிராக நீதிமன்றத்திற்குச் செல்லுமாறு அமைச்சர் அவர்களுக்குச் சவால் விடுத்தார். “நீங்கள் நீதிமன்றத்திற்குச் சென்றால், ஒரு பக்கத்தில் நானும் மறுபக்கத்தில் உங்கள் குழுவினரும் இருந்து சட்ட ரீதியாக இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

தன்னுடன் உள்ள முரண்பாடுகளைத் தீர்க்கச் சட்ட ரீதியான வழிகளைப் பின்பற்றுமாறு வலியுறுத்திய அமைச்சர், பொதுமக்களின் சுகாதார சேவையைப் பாதிக்கச் செய்யும் நடவடிக்கைகளைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டார்.

ஆரச்சிகட்டுவ கூட்டுறவுச் சங்க முகாமையாளர் விளக்கமறியலில்!

0

ஜூட் சமந்த

ஆரச்சிகட்டுவ பல்வேறு சேவை கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான முக்கிய ஆவணங்களைத் திருடியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட அந்தச் சங்கத்தின் பொது முகாமையாளரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க சிலாபம் நீதவான் கடந்த 4 ஆம் திகதி உத்தரவிட்டுள்ளார்.

மாதம்பே – புதிய நகர் பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கடந்த 3 ஆம் திகதி கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான நான்கு லெட்ஜர் (Ledger) புத்தகங்களை எடுத்துச் சென்றுள்ளதாகச் சங்கத்தின் தலைவர் துமிந்த தர்மவன்ச சுபசிங்க ஆரச்சிகட்டுவ காவல்துறையில் முறைப்பாடு செய்திருந்தார்.

தலைவரின் முறைப்பாட்டின் அடிப்படையில் உடனடியாகச் செயற்பட்ட காவல்துறையினர், சந்தேகநபரைக் கைது செய்ததுடன் அவரிடமிருந்த நான்கு லெட்ஜர் புத்தகங்களையும் மீட்டுள்ளனர். சந்தேகநபர் கடந்த 4 ஆம் திகதி சிலாபம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே அவரைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

குறித்த கூட்டுறவுச் சங்கத்தின் கடந்த கால நிர்வாகத்தின் போது பல நிதி மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகப் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இது தொடர்பாகச் சிலாபம் உதவி கூட்டுறவு ஆணையாளர் அலுவலகத்தினால் தற்போது விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே, இந்த ஆவணத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுற்றுலா விசாவில் வந்து டிஜிட்டல் கொள்ளை: சிக்கிய சீனப் பட்டாளம்!

0

ஜூட் சமந்த

சிலாபத்தில் சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்து இணையதளம் ஊடாக நிதி மோசடிகளில் ஈடுபட்டு வந்ததாகக் கருதப்படும் 152 வெளிநாட்டவர்களை ஏப்ரல் மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சிலாபம் நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி எஸ்.டி. அபேரத்ன கடந்த 3 ஆம் திகதி உத்தரவிட்டார்.

கைது செய்யப்பட்டவர்களில் 137 பேர் சீன நாட்டவர்கள் ஆவர். ஏனையவர்கள் வியட்நாம், தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களிடமிருந்து 177 கணினிகள், 577 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பல்வேறு மின்னணு உபகரணங்களை சோதனையிட்ட அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

சிலாபம் – இரணவில பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் கடந்த மூன்று மாதங்களாக தங்கியிருந்த இந்த வெளிநாட்டவர்கள், இணையதள குற்றங்களில் ஈடுபட்டு வருவதாக காவல்துறை புலனாய்வுப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்ததை அடுத்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கணினி குற்றப் பிரிவினர் கடந்த 2 ஆம் திகதி மாலை இந்தச் சோதனையை நடத்தினர்.

காவல்துறையினர் சுற்றிவளைத்த போது, விடுதியில் இருந்த சில சந்தேகநபர்கள் தப்பியோட முயற்சித்தனர். இதன்போது காயமடைந்த இரண்டு சீன நாட்டவர்கள் சிகிச்சைக்காக சிலாபம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா மற்றும் வணிக விசாக்களில் இலங்கைக்கு வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவர்களில் சிலரிடம் இலங்கையில் தங்கியிருப்பதற்கான முறையான விசா அனுமதி இருக்கவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் அந்த விடுதிக்கு நேரில் சென்று மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உலகெங்கும் உயிர்த்த ஞாயிறு கொண்டாட்டம் இன்றாகும்!

0

உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ மக்கள் மிகுந்த பக்தியுடன் கொண்டாடும் உயிர்த்த ஞாயிறு தினம் இன்றாகும் (05).

இயேசு கிறிஸ்து மரணத்தை வென்று உயிர்த்தெழுந்ததை நினைவு கூரும் வகையில் கிறிஸ்தவ மக்கள் உயிர்த்த ஞாயிறு தினத்தை மிகுந்த பக்தியுடன் கொண்டாடுகின்றனர். 

இயேசு கிறிஸ்து உலக மக்கள் அனைவரையும் பாவத்திலிருந்து மீட்பதற்காக சிலுவையில் தனது உயிரைத் தியாகம் செய்து, மூன்று நாட்களுக்குப் பிறகு உயிர்த்தெழுந்ததையே கிறிஸ்தவர்கள் உயிர்த்த ஞாயிறு பெருவிழாவாகக் கொண்டாடுகின்றனர். 

இயேசுவின் துன்பப்படுதல், மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை நினைவு கூர்ந்து கிறிஸ்தவ மக்கள் பல்வேறு வழிபாடுகளில் ஈடுபட்டு வந்த 40 நாட்கள் தவக்காலமும் இன்றைய உயிர்த்த ஞாயிறு தினத்துடன் நிறைவடைகிறது. 

இதேவேளை தற்போது உலக அமைதி சீர்குலைந்துள்ளதாகவும், உலகை ஆள வேண்டும் என்ற ஒரு தனிமனிதனின் பேராசை காரணமாக ஒட்டுமொத்த மனிதகுலமும் வேதனையை அனுபவித்து வருவதாகவும் கொழும்பு மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்குரிய மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பிரதான திருப்பலியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

இதன்போது கிறிஸ்தவம் என்பது வெறும் பிரார்த்தனை செய்வது அல்லது புனித பைபிளின் பகுதிகளை வாசிப்பது மாத்திரம் அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

கிறிஸ்தவம் என்பது அன்பு மற்றும் வாழ்வியல் முறையாகும். அன்பு என்பது ஒரு சேவகனாக இருப்பது, கடவுள் முன்னிலையிலும் அண்டை வீட்டார் முன்னிலையிலும் உண்மையாக இருப்பது. ஒரு தலைவன் என்பவன் சேவகனாக இருக்க வேண்டும் என்று போதிக்கப்பட்டுள்ளது, ஆனால் இன்று உலகை ஆளுபவர்கள் தலைவர்களாக இருக்கிறார்களே தவிர சேவகர்களாக இல்லை. அவர்கள் அதிகாரத்தின் பின்னால் ஓடும் ஆட்சியாளர்களாகவே இருக்கிறார்கள்.” என அங்கு தொடர்ந்து உரையாற்றிய கர்தினால் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டார்.

சஜித் கலந்துகொண்டது ‘AI’ அல்ல, உண்மை!

0

பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில எழுதிய ‘ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி’ நூல் வெளியீட்டு விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேரில் கலந்துகொண்டார் என்பதை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று (04) உறுதிப்படுத்தினார்.

சஜித் பிரேமதாச இந்த நிகழ்வில் பங்கேற்றது தொடர்பில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த சர்ச்சைகளுக்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

உதய கம்மன்பிலவின் நூல் வெளியீட்டு விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்துகொண்ட விவகாரம், குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் பலத்த விவாதங்களையும் சில அரசியல் சங்கடங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் தற்போதைய மற்றும் முன்னாள் அரசாங்கங்களின் அணுகுமுறைகளை சஜித் பிரேமதாச தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்நிலையில், அதே ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கொண்ட உதய கம்மன்பில போன்ற ஒருவரின் நூல் வெளியீட்டில், அதுவும் ராஜபக்ஷக்களுடன் இணைந்து ஒரே மேடையில் அமர்ந்திருந்தது, அவரது அரசியல் நிலைப்பாடு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. இது கட்சிக்குள்ளேயே சஜித்தின் முடிவெடுக்கும் திறன் குறித்த விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.

கொழும்பில் அண்மையில் நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டு விழாவில் சஜித் பிரேமதாச கலந்துகொண்ட காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியிருந்தன. எனினும், ஐக்கிய மக்கள் சக்தியின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இதனை மறுத்திருந்தனர். சஜித் பிரேமதாச அங்கு செல்லவில்லை என்றும், அவர் அங்கு இருப்பது போன்ற காட்சிகள் ‘செயற்கை நுண்ணறிவு’ (AI) தொழில்நுட்பத்தின் மூலம் போலியாக உருவாக்கப்பட்டவை என்றும் அவர்கள் வாதிட்டு வந்தனர்.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு முஜிபுர் ரஹ்மான் நேரடியாகப் பதிலளித்தார்.

  • ஊடகவியலாளர்: “எதிர்க்கட்சித் தலைவர் ஏன் இடையில் எழுந்து சென்றார் என்று தெரியுமா? “முஜிபுர் ரஹ்மான்: “அதை அவரிடம்தான் கேட்க வேண்டும்.”
  • ஊடகவியலாளர்: “உங்கள் கட்சியின் சில உறுப்பினர்கள் அது ‘AI’ மூலம் செய்யப்பட்டது என்கிறார்கள்.. அவர் கலந்துகொண்டதை நீங்கள் உறுதிப்படுத்துகிறீர்களா? “முஜிபுர் ரஹ்மான்: “ஆம், அவர் கலந்துகொண்டார் என்று பொதுச்செயலாளரே (ரஞ்சித் மத்தும பண்டார) ஏற்கனவே கூறிவிட்டாரே.”

எதிர்க்கட்சி தலைவர் தலைவர் ஏன் இவ்வாறானதொரு மேடையில் தோன்றினார் என்பதற்குத் தமது தொகுதி மக்களுக்குப் பதிலளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு எதிர்க்கட்சி முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தள்ளப்பட்டுள்ளனர். முஜிபுர் ரஹ்மான் போன்றவர்கள் இதனை உறுதிப்படுத்தினாலும், ஆரம்பத்தில் இது ‘AI’ மூலம் செய்யப்பட்டது என கட்சியின் சில உறுப்பினர்கள் கூற முயன்றதே அந்த அச்சத்திற்கு பிரதான காரணமாக உருவெடுத்துள்ளது.

முஸ்லிம் மற்றும் கத்தோலிக்க சமூகங்கள் சஜித் பிரேமதாசவின் முக்கிய வாக்கு வங்கிகளாக உள்ள நிலையில், ஈஸ்டர் தாக்குதலின் ‘சூத்திரதாரி’ யார் என்பது குறித்த உதய கம்மன்பிலவின் பார்வையும், அந்த மேடையில் இருந்தவர்களின் அரசியல் வரலாறும் இச்சமூகங்களுக்கு உடன்பாடானவை அல்ல. எனவே, இந்த நிகழ்வு சிறுபான்மைச் சமூகங்களின் நம்பிக்கையைச் சிதைத்து, எதிர்வரும் தேர்தல்களில் அது வாக்குகளாக மாறுவதைத் தடுக்கும் ஒரு காரணியாக அமையலாம் என கட்சி உறுப்பினர்கள் அஞ்சுகின்றனர்.

உதய கம்மன்பிலவின் இந்த நூல் வெளியீட்டு விழா அரசியல் ரீதியாகப் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இந்நிகழ்வில் சஜித் பிரேமதாசவுடன், முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரும் ஒரே மேடையில் காணப்பட்டனர்.

இவர்களுடன் முன்னாள் பாதுகாப்புப் பிரிவு பிரதானிகள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் எனப் பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கட்சிக்குள் நிலவிய முரண்பட்ட கருத்துகளுக்கு மத்தியில், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவரே இதனை உறுதிப்படுத்தியிருப்பது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.

பாகிஸ்தானில் இலவச பொதுப் போக்குவரத்து அறிமுகம்!

0

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், அரசுப் பேருந்துகள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து சேவைகள் இலவசமாக வழங்கப்படும் என்று அந்த மாகாணத்தின் முதலமைச்சர் மரியம் நவாஸ் அறிவித்துள்ளார்.

சமீபத்தில் பாகிஸ்தான் மத்திய அரசு, தலைநகர் இஸ்லாமாபாத்தில் இலவச பொதுப் போக்குவரத்து திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, பஞ்சாப் மாகாணத்திலும் இதேபோன்ற சலுகையை முதலமைச்சர் மரியம் நவாஸ் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ‘X’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டதாவது:

“அரசு வழங்கியுள்ள இந்த வசதிகளை பொதுமக்கள் அனைவரும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஊக்குவிக்கிறேன். வசதியான, மலிவான மற்றும் நிலையான பயணத்திற்கு பொதுப் போக்குவரத்தைத் தேர்ந்தெடுங்கள்.”

முன்னதாக, பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, தலைநகர் இஸ்லாமாபாத்தில் பொதுப் போக்குவரத்துச் செலவுகளை மத்திய அரசே ஏற்கும் என்று அறிவித்த சில மணி நேரங்களிலேயே, முதலமைச்சர் மரியம் நவாஸிடமிருந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எரிபொருள் சிக்கனத்தை ஊக்குவிக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் பல்வேறு நாடுகள் இத்தகைய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில், ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மற்றும் டாஸ்மேனியா ஆகிய மாநிலங்களும், பொதுமக்கள் எரிபொருளைச் சேமிப்பதை ஊக்குவிக்கும் நோக்கில் பொதுப் போக்குவரத்துக்கான கட்டணத்தைத் தள்ளுபடி செய்வதாக இந்த வாரத் தொடக்கத்தில் அறிவித்திருந்தன.

இந்த இலவசப் போக்குவரத்துத் திட்டம் பஞ்சாப் மாகாண மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு மத்தியில் இம்மாற்றமானது சாமானிய மக்களுக்குப் பெரும் நிம்மதியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு அமெரிக்க போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய ஈரான்!

ஈரானுடனான வான்வழி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானிய வான்பரப்பிலும் வளைகுடாப் பகுதியிலும் அமெரிக்காவின் இரு போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக ஈரான் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் இரு விமானிகள் மீட்கப்பட்ட நிலையில், ஒரு வீரர் இன்னும் மாயமாகியுள்ளார்.

அமெரிக்காவின் F-15E ரக ஜெட் விமானம் ஈரானியத் தாக்குதலால் சுட்டு வீழ்த்தப்பட்டது. மற்றொரு தாக்குதலில், A-10 வார்தாக் (A-10 Warthog) ரக போர் விமானம் ஈரான் எல்லைக்கு வெளியே குவைத்தில் விழுந்து நொறுங்கியது; அதன் விமானி தப்பித்து மீட்கப்பட்டார். மாயமான F-15E வீரரைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த இரு பிளாக்ஹாக் (Blackhawk) ஹெலிகாப்டர்கள் மீதும் ஈரானியப் படைகள் தாக்குதல் நடத்தின, இருப்பினும் அவை தப்பித்துச் சென்றன.

ஈரானிய வான்பரப்பு முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் ஆகியோர் கூறி வந்த நிலையில், இந்தச் சம்பவங்கள் அமெரிக்காவிற்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகின்றன.

ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை, தென்மேற்கு ஈரானில் மாயமான வீரரைத் தீவிரமாகத் தேடி வருகிறது. “பகைமை சக்திகளை” பிடிப்பவர்களுக்கு அல்லது கொல்பவர்களுக்கு சிறப்பு சன்மானம் வழங்கப்படும் என அந்நாட்டு ஆளுநர் அறிவித்துள்ளார். ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப் இது குறித்துக் கூறுகையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போர் நோக்கம் “ஆட்சி மாற்றத்திலிருந்து” தற்போது “விமானிகளைத் தேடும் வேட்டையாக” தரமிறங்கிவிட்டது என்று கிண்டல் செய்துள்ளார்.

பாகிஸ்தான் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்த முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிப்ரவரி 28 அன்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதில் இருந்து நீடிக்கும் இந்தப் போரில், இதுவரை 13 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

பிராந்தியப் பாதிப்புகள்:

  • குவைத்: ஈரானியத் தாக்குதலால் குவைத்தின் மின்சாரம் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மினா அல்-அஹ்மதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் பாதிக்கப்பட்டுள்ளன.
  • லெபனான்: லெபனானில் உள்ள பல்கலைக்கழகங்கள் தாக்கப்படலாம் என்பதால், அங்குள்ள அமெரிக்கக் குடிமக்களை வெளியேறுமாறு அமெரிக்கத் தூதரகம் எச்சரித்துள்ளது.
  • பொருளாதாரம்: போர் முடிவிற்கான அறிகுறிகள் இல்லாததால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 11% உயர்ந்துள்ளது.

அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் பாலங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் மீது மேலும் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்போது ஈரான் மற்றும் அதன் நட்பு நாடுகளின் தாக்குதல்களால் மத்திய கிழக்குப் பகுதியில் போர்ச் சூழல் மேலும் பதற்றமடைந்துள்ளது.