Tuesday, June 9, 2026
Sponsored advertisementspot_img
Home Blog

நாகவில்லுவில் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ்வின் நினைவுதினம்!

பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று நாகவில்லுவில் இடம்பெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வு!

இலங்கை திருநாட்டில் பெளதீக ரீதியான பல வேலைத்திட்டங்களையும், இடம்பெயர்வு மற்றும் எல்லை நிர்ணயம் தொடர்பான பறந்துபட்ட அறிவினையும் கொண்டிருந்த எருக்கலம்பிட்டியை சேர்ந்த மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது வருட நினைவு தின நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

அந்த வகையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் நினைவுப் பேருரையும், புத்தக வெளியீடு நிகழ்வும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் ஏற்பாட்டில் நேற்று 25.08.2025 புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய அதிபர் ஜனாப் S.M. ஹுஸைமத் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், புத்தி ஜீவிகள் மற்றும் குடும்பத்தார்கள் கலந்தகொண்டமை விஷேட அம்சமாகும்.

சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் பொருளாளர் ஜனாப் ஏ.ஜி. அனீஸ் (Bsc.Agri) அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.

மேலும் இஸ்லாமிய கற்கை அறபு மொழிப் பீட, தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களினால் நூல் அறிமுக உரையும், நினைவுப் பேருரையும் மிகவும் உணர்வுபூர்வமாக நிகழ்த்தப்பட்டது.

கிழக்கு மற்றும் தென் கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பங்களிப்பு அளப்பெரியது என நினைவு கூறிய பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன், வடக்கில் ஏற்பட்ட யுத்தம் மற்றும் முஸ்லிம்களின் இடம்பெயர்வு குறித்து அதீத அக்கறையுடன் செயற்பட்ட மிக முக்கியமானவர் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்கள் எனவும் எடுத்துரைத்தார்.

வடக்கு முஸ்லிம்களின் இடம்பெயர்வு மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பில் அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களுடன் பலதரப்பட்ட கலந்துரையாடல்களை நடத்தி, சர்வதேசம் வரை இவ்விடயங்களை கொண்டுசென்ற மகான் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் என பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் தனது உரையில் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் புதல்வி சட்டத்தரணி எப்.சப்னா ஹஸ்புல்லாஹ் அவர்களினால் ஏற்புரை நிகழ்த்தப்பட்டதுடன், நூல் வெளியீடு நிகழ்வும் இடம்பெற்றது.

நூலின் முதற்பிரதியை ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தரும், புத்தளம் எருக்கலம்பிட்டி பள்ளிவாசல் நிர்வாக சபையின் முன்னாள் உறுப்பினருமான ஜனாப் ரஹ்மத்துல்லாஹ் (GS) அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

மேலும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் செயலாளர் ஜனாப் எஸ்.எச்.எம். றிஸ்னி அவர்களினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டதுடன், தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன், மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பாரியாருக்கும் நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில், பேராசிரியர்கள், கல்விமான்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், பாடசாலைச் சமூகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் குடும்பத்தார்கள் என பலரும் கலந்து சிறப்பித்ததுடன், ஈ நியூஸ் பெஸ்ட் ஊடக நிறுவனம் ஊடக அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரணிலுக்காக ஒன்று திரண்ட அரசியல் தலைவர்கள்!

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விசாரணை கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது, நாட்டின் அடிப்படை ஜனநாயக நிறுவனங்களின் வலிமை குறித்து கடுமையான கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் விளைவுகள் ஒரு தனிநபரின் அல்லது எந்தவொரு அரசியல் கட்சிகளின் தலைவிதியையும் விட, சமூகத்தின் உரிமைகளுக்கான பிரச்சினைகளை தோற்றிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் தலைவர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைகளை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது மற்றும் விளக்கமறியலை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து நடத்திய விசேட ஊடக சந்திப்பில் பங்கேற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரல முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் அறிக்கையை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

போர்த்துக்கல் அணி சாம்பியன் ஆனது!

0

‘நேஷன்ஸ் லீக்’ கால்பந்தில் போர்ச்சுகல் அணி சாம்பியன் ஆனது. பைனலில் ‘பெனால்டி ஷூட் அவுட்டில்’ 5-3 என ஸ்பெயினை வீழ்த்தியது.

ஐரோப்பிய கால்பந்து அணிகளுக்காக ‘நேஷன்ஸ் லீக்’ தொடர் நடத்தப்படுகிறது. மொத்தம் 54 அணிகள் பங்கேற்றன. நேற்று ஜெர்மனியின் முனிக் நகரில் நடந்த பைனலில், போர்ச்சுகல், நடப்பு யூரோ சாம்பியன் ஸ்பெயின் பலப்பரீட்சை நடத்தின. போட்டியின் 21வது நிமிடம் ஜுபிமெண்டி (ஸ்பெயின்), 26வது நிமிடம் மெண்டிஸ் (போர்ச்சுகல்) தலா ஒரு கோல் அடித்தனர். 45வது நிமிடம் மைக்கேல் ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் ஸ்பெயின் அணி 2-1 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் 61 வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். போர்ச்சுகல் அணிக்காக இவர் அடித்த 138வது கோல் இது. 90 நிமிட முடிவில் போட்டி 2-2 என சமன் ஆனது. அடுத்து நடந்த கூடுதல் நேரத்திலும் (30 நிமிடம்) இரு அணியும் கோல் அடிக்கவில்லை.

இதையடுத்து வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி ‘பெனால்டி ஷூட் அவுட்டுக்கு’ சென்றது. இரு அணிக்கும் தலா 5 வாய்ப்புகள் தரப்பட்டன. காயம் காரணமாக 88 வது நிமிடம் வெளியேறிய ரொனால்டோ, இதில் பங்கேற்கவில்லை.

முதல் 3 வாய்ப்பில் போர்ச்சுகலின் ராமோஸ், விடின்ஹா, பெர்ணான்டஸ் கோல் அடித்தனர். மறுபக்கம் ஸ்பெயின் தரப்பில் மெரினோ, பயேனா, இஸ்கோ கோல் அடிக்க 3-3 என ஆனது.

4வது வாய்ப்பில் மெண்டெஸ் (போர்ச்சுகல்) கோல் அடிக்க, ஸ்பெயினின் மோராட்டோ அடித்த பந்தை கோல் கீப்பர் டீகோ கோஸ்டா தடுத்து அசத்தினார்.

5வது வாய்ப்பில் நெவேஸ் கோல் அடித்தார். இதையடுத்து 5-3 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் ‘திரில்’ வெற்றி பெற்றது. 2019க்குப் பின் இத்தொடரில் மீண்டும் சாம்பியன் ஆனது.

தில்லையடியில் சிக்கிய கடத்தல் பீடி இலைகள்!

0

புத்தளத்தில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளுடன் வேன் ஒன்றும் பறிமுதல்!

இலங்கை கடற்படை, பொலிஸாருடன் இணைந்து, புத்தளம், தில்லையடி பகுதியில் 2025 ஜூன் 05 இரவு வேளையில் நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகள் கொண்ட ஒரு வேன் கைப்பற்றப்பட்டது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிறுவனம், புத்தளம் பொலிஸாருடன் இணைந்து தில்லையடி பகுதியில் நடத்திய இந்த சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்று சோதனை செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகளானது வாகனத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் வேன் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களால் ஆபத்தா?

விண்வெளியில் பூமியை சுற்றி வந்துக்கொண்டிருக்கும் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கொள்களை சீனா நினைத்தால் வெறும் 12 மணி நேரத்தில் தாக்கி அழித்துவிட முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் என்கிற செய்தி ஊடகத்தில் இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது தற்போது சீனா 99 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. இவை அனைத்தும் நான்ஜிங் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஆஸ்ட்ரோனாட்டிக்ஸ் பல்கலைக்கழகத்தின் விண்வெளிக் கட்டுப்பாட்டுத் துறையின் இயக்குநர் வூ யுன்ஹுவா தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இவை அனைத்தும் எலான் மஸ்கின் 1400 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை வெறும் 12 மணி நேரத்தில் காலி செய்துவிடும். சீன செயற்கைக்கோளில் லேசர், நுண் அலைகளை உருவாக்கும் கருவி, உளவு கருவிகள் பொருத்தப்பட்டிருக்கலாம். ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் வெறுமென நெட்வொர்க் கொடுக்க மட்டுமே பயன்படுத்தப்படுவதில்லை. தவிர, ராணுவ நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது என சீனா குற்றம்சாட்டி வருகிறது.

அதாவது, உக்ரைன்-ரஷ்யா போரில், உக்ரைன் படைகளுக்கு தகவல்கள் கொடுக்கவும், ரஷ்ய எல்லையை துல்லியமாக கண்காணிக்கவும் இந்த செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த 2022ம் ஆண்டு ரஷ்ய போரின்போது அப்போதைய உக்ரைனின் துணைப் பிரதமரான மைக்கைலோ ஃபெடோரோவ், “ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் சேவையை உடனடியாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த மஸ்க், “உடனடியாக சேவை வழங்கப்படும்” என்று கூறியிருந்தார்.

உக்ரைன் போருடன் மட்டுமே ஸ்டார்லிங்க் நிற்காது, நாளை சீனாவுக்கும்-தைவானுக்கும் பஞ்சாயது ஏற்பட்டால் அப்போதும், தைவானுக்கு சப்போர்ட் செய்ய ஸ்டார்லிங்க் வரும். எனவே இந்த கூட்டு நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்க சீனா இந்த புதிய செயற்கைக்கோள்களை உருவாக்கியிருக்கிறது.

கடந்த 2023ம் ஆண்டு இதற்கான பணிகளை சீனா தொடங்கியது. இந்த திட்டத்திற்கு ‘கியான்ஃபான் மெகா-விண்மீன் திட்டம்’ (Qianfan mega-constellation project) என்றும் பெயரிட்டிருந்தது. நோக்கம் உலகம் முழுவதும் இணைய தொடர்பை வழங்குவதாகும். இதற்காக மொத்தம் 15,000 சிறிய ரக செயற்கைக்கோள்களை ஏவ சீனா முடிவெடுத்தது. இதன் முதல் தொகுப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏவப்பட்டது. இதில் 18 செயற்கைக்கோள்கள் இருந்தன.

ஒவ்வொன்றும் சுமார் 300 கி.கி எடையில் இருந்தது. இவை பூமியிலிருந்து 800 கி.மீ உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டது. இதேபோன்று 2024 டிசம்பரில் அடுத்து இரண்டு தொகுதி ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. தற்போது மொத்தம் 99 செயற்கைக்கோள்கள் விண்வெளியில் இருக்கின்றன. 15,000 செயற்கைக்கோள்களை 3 கட்டங்களாக ஏவ இருக்கிறது. முதல் கட்டத்தில் 1,296 செயற்கைக்கோள்கள் ஏவப்படும். இதில் 648 செயற்கைக்கோள்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஏவப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் கன்னி உரை

0

அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்புவோம்

தேசியத்துவத்துடனும் ஐக்கியத்துடனும் ஒன்றுபட்டு நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க இன்று (23) காலை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

பதவிப் பிரமாணத்தின் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய முழுமையான உரை:

மக்களால் ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது நமது நாட்டின் ஜனநாயகத்திலிருக்கும் மிக முக்கியமான அம்சமாகும். தேர்தலில் வாக்களித்தல் மற்றும் ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதோடு ஜனநாயகம் நிறைவு பெறுவதில்லை. இது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சம் என்றாலும், நம் நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்த, கட்டமைப்புகளின் வலிமையும், சட்டங்களை வலுப்படுத்துவதும் அவசியம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனவே, எனது பதவிக்காலத்தில் இந்த நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.

அத்துடன், இந்த நாட்டில் ஜனநாயக முறையில் அதிகாரப் பரிமாற்றம் நடந்த வரலாறும் உண்டு. தேர்தலில் நிகழும் அதிகாரப் பரிமாற்றத்தை எந்தத் தலைவரும் நிராகரித்ததில்லை. அதற்கமைய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த மக்கள்ஆணையை சுமூகமாக ஏற்றுக்கொண்டதுடன், ஜனநாயக ரீதியில் அதிகாரத்தை கைமாற்றுவதற்கான அவரின் அர்ப்பணிப்பிற்கும் முன்னுதாரணத்திற்கும் நன்றி தெரிவிக்கிறேன். மேலும் எமக்கு கிடைப்பது மிகவும் சவால் நிறைந்த நாடு என்பதை நன்கு புரிந்து கொண்டிருக்கிறோம். நமது அரசியலில் தூய்மையான, மக்களால் எதிர்பார்க்கப்படும் சிறந்த அரசியல் கலாசாரத்திற்காக அவசியம் காணப்படுகிறது.அதற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

நம் நாட்டின் அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு நல்லெண்ணம் இல்லை. எனவே, அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் மீது மக்கள் மரியாதை மற்றும் நம்பிக்கையை மீட்டெடுக்க எங்கள் தரப்பிலிருந்து முடிந்த அனைத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.

மேலும், நமக்கு முன் இருக்கும் இந்த ஆழமான நெருக்கடியை வெறும் அரசோ, வெறும் அரசியல் கட்சியோ அல்லது ஒரு தனி நபரோ மட்டும் தீர்க்க முடியும் என்று நாங்கள் நம்பவில்லை. ஏனென்றால், நான் முன்பு கூறியது போல், நான் ஒரு மாயாஜால வித்தைக்காரனல்ல. நான் மந்திரவாதியும் இல்லை. நான் இந்த நாட்டின் சாதாரண குடிமகன். எம்மிடம் திறமைகள் உள்ளன. இயலாமைகளும் உள்ளன. தெரிந்த விடயங்களும் உள்ளன அதேபோன்று, தெரியாத விடயங்களும் உள்ளன.

ஆனால் திறமைகளைப் பயன்படுத்தி தெரியாதவற்றை சேகரித்துக்கொண்டு சிறந்த முடிவுகளை எடுத்து இந்த நாட்டை வழிநடத்துவதே எனது தலையாய பணியாகும். அந்த கூட்டுப் பங்களிப்பின் ஒரு அங்கமாக மாறுவது எனது பொறுப்பாகும். மேலும், இந்த நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதில் பொது மக்கள் மற்றும் அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் பாரிய பொறுப்பு உள்ளது. அந்தப் பொறுப்பை நிறைவேற்ற அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்.

ஆனால், நாட்டின் ஜனாதிபதி என்ற முறையில், இந்தப் பணியை முன்னின்று நடத்துவதில் எனக்கு முதன்மையான மற்றும் மிக முக்கியமான பொறுப்பு இருப்பதை நான் ஏற்றுக்கொண்டேன். எனவே, இந்தச் சவாலை வெற்றிகொள்வதற்காக எனக்குக் வழங்கப்பட்டுள்ள பணியை நான் உரிய முறையில் நிறைவேற்றுவேன் என்பதை செயற்பாடு மற்றும் நடைமுறை மூலம் எல்லா சந்தர்ப்பங்களிலும் இந்த நாட்டின் பிரஜைகளுக்கு வெளிப்படுத்த நான் தயாராக இருக்கிறேன்.

மேலும் நமது நாட்டுக்கு சர்வதேச ஆதரவு தேவை. எனவே, உலகில் எத்தகைய அதிகாரப் பிளவுகள் இருந்தாலும், ஒவ்வொரு நாட்டையும் எமக்கு மிகவும் சாதகமாக கையாள்வதே நமது எதிர்பார்ப்பாகும். நாம் உலகில் தனிமைப்படுத்தப்பட்ட நாடு அல்ல. உலகத்துடன் கூட்டாக முன்னேற வேண்டிய ஒரு நாடாகும். அது தொடர்பில் தேவையான முடிவுகளை எடுக்க நாங்கள் சிறிதும் தயங்குவதில்லை.

மேலும், நம் நாட்டைக் கட்டியெழுப்புவதில் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு பெரும் பங்கு உள்ளது. எனவே, நாட்டை மேலும் வலுவாகக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு அவர்கள் ஆதரவளிப்பார்கள் என நான் கருதுகின்றேன்.

நம் நாட்டின் ஜனநாயகத்தின் ஊடாக நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். அதற்காக மக்கள் எனக்கு வாக்களித்தனர்.

மேலும் எனக்கு வழங்கப்படாத வாக்குகளும் உள்ளன. எனவே, எங்களின் வெற்றியின் உள்ளடக்கம் மற்றும் அளவு குறித்து எங்களுக்கு நல்ல புரிதல் உள்ளது. எனவே, எங்களுக்கு ஆதரவு வழங்காத மற்றும் எங்களை நம்பாத பிரஜைகளின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெறுவதே எனது நிர்வாகத்தின் போது எனக்கு வழங்கப்பட்டுள்ள பணியாகும். அந்தப் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

எதிர்காலத்தில் இவை அனைத்தையும் நீங்கள் நடைமுறையில் கண்டுகொள்ள முடியும். அதற்கு அனைத்து மக்களின் ஆதரவையும் எதிர்பார்க்கின்றேன்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தேர்தலில் இவ்வாறுதான் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்

0

அதிகாரிகள் மற்றும் பிற தேவைகள் முடிந்த பிறகு, மாலை 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (19) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி பிற்பகல் 4.15 மணிளவில் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“எதிர்வரும் 21ம் திகதி வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள் பெறப்பட்டதும், அதிகாரிகள் மற்றும் இதர தேவைகள் முடிந்ததும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் இரவு 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

மாலை 4.15 மணிளவில் தபால் மூல வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

அத்துடன் மாவட்ட அளவில் ஒவ்வொரு வட்டாரத்திலும் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெறும்.

வாக்கு எண்ணிக்கையின் முடிவில் முடிவுகள் கிடைத்தவுடன் ஊடகங்களுக்கு வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையே முதலில் எண்ணப்படும்.

அந்தக் கணக்கெடுப்பின் பின்னர் (மாவட்ட அளவில் எண்ணும் பணி) முதலில் வாக்குப்பெட்டிகளில் உள்ள வாக்குகள் எண்ணப்படும்.

அதன் பிறகு, ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு, தொகுதி மற்றும் மாவட்ட அளவில் அது தயாரிக்கப்படுகிறது.

தேர்தல்கள் செயலகமே ஒட்டுமொத்த முடிவுகளைக் கணக்கிடும்.

எந்த வேட்பாளரும் 50 வீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்றுள்ளாரா என சரிபார்க்கப்படும்.

அப்படியானால், அந்த நேரத்தில் வாக்கு எண்ணும் பணிகள் நிறுத்தப்படும்.

அப்போது ஜனாதிபதியை நாங்கள் அறிவிப்போம்.

எந்த வேட்பாளருக்கும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் கிடைக்காவிடின், விருப்பு வாக்கு எண்ணிக்கைக்கு செல்ல வேண்டும்.

அங்கு, அதிக வாக்குகள் பெற்ற இரண்டு வேட்பாளர்கள் போட்டியில் வைத்து விட்டு  மீதமுள்ள 36 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து நீக்கப்படுவர்” என்றார்.

புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக மாறும்

0

புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வாத்தியாசலையாக மாற்றம் பெரும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று புத்தளத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ அலிசப்ரி ரஹீம் மற்றும் சிந்தக்க மாயாதுன்ன தலைமையில் புத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்திலே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

புத்தளம் மக்களின் நீண்ட நாள் தேவையாக இருந்து வருகின்ற புத்தளம் தல வைத்தியசாலையை தரமுயர்த்துவது தொடர்பாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ அலிசப்ரி ரஹீம் அவர்களினால் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோலுக்கிணங்க குறித்த வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.

மேலும் புத்தளத்தில் மீன் பிடி தொழிலை முன்னேற்றும் நோக்கத்தில் மீன் பிடி துறைமுகம் ஒன்றை அமைக்கும் யோசனையும் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டதுடன், அதற்கான முன்னெடுப்புகளும் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்டமை புத்தளம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நாட்டில் நிரந்தர பொருளாதார அபிவிருத்தியை நிலை நாட்ட தாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டை பொருளாதார அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவதே தனது பிரதான நோக்கம் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மொட்டுக்கட்சிக்கு எதிராக நிற்கும் முக்கிய அமைச்சர்கள்

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக மொட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளரை இந்த வாரம் அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்காதிருக்கவும், மொட்டு சின்னத்தில் தனியாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமக்கு ஆதரவு வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பியிருந்த கடிதம் நேற்றைய தினம் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தினால் அரசியல் குழுவில் முன்வைக்கப்பட்டது.

எவ்வாறாயினும் அந்த கடிதத்தை நிராகரிக்க அரசியல் குழுக் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுவில் 82 பேர் அங்கம் வகிப்பதுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் 72 பேர் பங்கேற்றனர்.

இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த 11 பேர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

மஹிந்தானந்த அலுத்கமகே, பந்துல குணவர்தன, பிரதீப் உந்துகொட, கோகிலா ஹர்ஷனி குணவர்தன, சஹன் பிரதீப், ரமேஸ் பத்திரன, கஞ்சன விஜேசேகர, பிரசன்ன ரணதுங்க, கனக ஹேரத், மொஹான் பிரியதர்ஷன ஆகியோர் கட்சியின் சார்பில் தனியான வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

அத்துடன் பிறிதொரு கட்சியின் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்கும் உறுப்பினர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் யோசனைக்கு 6 பேர் எதிராக வாக்களித்துள்ளனர்.

எவ்வாறாயினும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் எனக் கூறப்பட்ட தம்மிக பெரேரா தொடர்பில் அரசியல் குழுக் கூட்டத்தின்போது எந்தவித கருத்துக்களும் பரிமாற்றிக் கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவளிக்காத 11 பேர் உள்ளிட்ட தரப்பினர் நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தனவின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சைனப் ஆரம்பப் பாடசாலைக்கு ஆளுநர் வருகை!

0

புத்தளம் சைனப் ஆரம்ப பாடசாலையின் முப்பெரும் விழா பாடசாலை அதிபர் யஹியா தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து புத்தளம் ஜெய்னப் பாடசாலைக்கு 22 லட்சம் ரூபா பெறுமதியான நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு, சிறுவர் விளையாட்டு நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தல் மற்றும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் செயற்திட்டத்தின் கீழ் BCMH நிறுவனத்தினால் கற்றல் உபகரணம் வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் கடந்த செவ்வாய்க்கிழமை (16) வெகு விமர்சையாக இடம்பெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதியாக வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், விசேட அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மற்றும் கௌரவ அதிதியாக புத்தளம் வலயக்கல்விப் பணிப்பாளர் அர்ஜுன ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆரம்ப பாடசாலையின் முக்கியத்துவம் மற்றும் அறிவார்ந்த சமூகத்தை கட்டியெழுப்ப ஆரம்ப பாடசாலை ஆற்றிவருகின்ற அர்ப்பணிப்பு குறித்து விரிவாக பேசிய வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், புத்தளம் மாவட்ட பாடசாலைகளின் துரித வளர்ச்சி பற்றியும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

மேலும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் செயற்திட்டத்திற்கு வடமேல் மாகாண ஆளுநர் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் ஜவ்ஷி ஜமால்தின், இணைப்புச் செயலாளர் எச். அமீர் அலி ஆசிரியர், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் உட்பட உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் அயல் பாடசாலையின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு
நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு

ஹிருணிகாவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறை

0

கடத்தல் வழக்கில் முன்னாள் எம்.பி ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்தத் தீர்ப்பை அறிவித்தார்.

தெமட்டகொட பகுதியிலுள்ள கடை ஒன்றில் பணிபுரிந்த அமில பிரியந்த அமரசிங்க எனும் இளைஞர் ஒருவரை 2015 டிசம்பர் 21ஆம் திகதி ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு சொந்தமான டிபெண்டர் வாகனத்தில் கடத்திய வழக்கு விசாரணை முடிவில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

29 குற்றங்கள் தொடர்பில் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் 8 பேரும் குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில், அச்சம்பத்திற்கு உதவி, ஒத்தாசை புரிந்ததாக ஹிருணிகா மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்திருந்தார்.

அத்தோடு, சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவின் ஆதரவாளர்கள் 8 பேர் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைதான ஐந்தாம் சந்தேகநபரின் மகள் அளித்துள்ள வாக்குமூலத்தில், தமது தாயாருடன் தொடர்பு பேணிய நபர் ஒருவரை தாம் காண்பித்ததாகவும், அவரை தமது தந்தையும் அவருடன் சென்றவர்களும் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு ஹிருணிகாவிடம் அழைத்துச் சென்றதாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

ஓவியப்போட்டியில் எருக்கலம்பிட்டி மாணவன் முதலாமிடம்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட வட மாகாண மானவர்களுக்கிடையிலான சித்திரப்போட்டியில் மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்றார்.

வீதி விபத்துக்கள் இல்லாத நாளைக்கான பாடசாலையிலிருந்து அணிவக்குப்போம் எனும் தொனிப்பொருளில் கடந்த வியாழக்கிழமை (13.06.2024) அன்று நடாத்தப்பட்ட வட மாகாண மாணவர்களுக்கிடையிலான குறித்த சித்திரப்போட்டியில் சுமார் 2600 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

சித்திரப்போட்டியில் பங்குபற்றிய 2600 மாணவர்களில் 250 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு நேற்றைய தினம் (15.06.2024) அவர்களுக்கான போட்டி இடம்பெற்றது.

நடைபெற்று முடிந்த இறுதிச் சுற்றுப்போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்று பெருமதிமிக்க பரிசில்களை பெற்றுக்கொண்டார்.

முதலாம் இடம் பெற்ற முஹம்மது ஹுசைன் என்ற மாணவனுக்கு சான்றிதல், துவிச்சக்கரவண்டி மற்றும் 8500/- ரூபா பெறுமதியான வவுச்சரும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இதேவேளை குறித்த போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய இல்முதீன் முஹம்மது ஹஸ்பான் 7 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய மற்றொரு மாணவரான முஹம்மது சம்ஹான் 8 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

பாரிய சாவல்களுக்கு மத்தியில் தனி ஒரு மனிதனாக இம் மாணாவர்களை ஊக்கப்படுத்தி, தயார்ப்படுத்தி போட்டியில் பங்குபெறச் செய்து வெற்றிபெறச் செய்த எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியின் சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் அவர்களின் இம் முயற்சிக்கு, பாடசாலை சமூகம் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் நன்றி தெரிவித்தனர்.

தமக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வந்து தேசிய அளவில் இடம்பெறும் போட்டிகளில் மாணவர்களை பங்குபெறச் செய்வதே தனது இலக்கு என சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் எமது ஊடகத்திற்கு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை இராஜினாமா

0

நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்துள்ளனர்.

சாந்த நிரியல்ல உட்பட 15 பேர் கொண்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரின் அறிவித்தலுக்கு அமைய இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி திங்கட்கிழமை புதிய பணிப்பாளர் சபை நியமிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ “அத தெரண” விற்கு தெரிவித்தார்.

புத்தளம் எருக்கலம்பிட்டியில் கடும் வெள்ளம்

0

புத்தளம் பகுதியில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக புத்தளம் பகுதி முழுதும் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.

புத்தளம், தில்லையடி, பாலாவி, புத்தளம் எருக்கலம்பிட்டி, ஹிதாயத் நகர்,  மதுரங்குளி மற்றும் ஏனைய பல கிராமங்களும் வெள்ளித்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமமும் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 1500 குடும்பங்கள் இங்கு வாழ்ந்துவருவதுடன், அனைத்து வீடுகளும் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நூற்றிற்கும் அதிகமான வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் ஐநூற்றுக்கும் அதிகமான வீடுகள் பகுதி அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8ஆம் திகதி ஏற்பட்ட மழை வெள்ளித்தினால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் மற்றும் பாடசாலைகளில் தற்காலிகமாக  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு தினங்களாக இவர்களுக்கான சமைத்த உணவுகள் மூன்று வேலைகளிலும் ஊர் தனவந்தர்களின் உதவியுடனும், பள்ளிவாசல் நிர்வாக சபையின் வழிகாட்டலுடனும் வழங்கப்பட்டு வருவதுடன், ஊர் மக்களுக்கும் உணவு விநியோகங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

இவர்களுக்கான நிவாரண உதவிகள் இதுவரை அரசாங்கத்தினால் வழங்கப்படாத போதிலும், ஊர் மக்களின் பங்களிப்புடன் மாத்திரமே பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு விநியோகங்கள் இதுவரை  வழங்கப்பட்டு வருகின்றது.

புத்தளம் பொத்துவில்லு பகுதியில் உள்ள குளம் மழை நீரினால்  பெருக்கெடுத்துள்ளதால் குறித்த குளத்து நீர் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமத்திற்குள் தொடர்ந்தும் மூன்றாவது நாளாக ஊடறுத்து செல்வதால் வீடுகள் தொடர்ந்தும் நீருள் மூழ்கியுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்தின் நிவாரண உதவிக்காக பல மக்கள் தொடர்ந்தும் எதிர்பார்த்து காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தாக்கமுள்ள சட்டங்கள் எங்கே?” – அரசை சவாலுக்கு உட்படுத்திய ஐ.தே.க!

0
“அரசு சட்டங்களை குவிக்கிறது; ஆனால் தாக்கமுள்ள சட்டங்கள் எங்கே?” – அரசை சவாலுக்கு உட்படுத்திய ஐ.தே.க.

கொழும்பு, ஜூன் 8 – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தின் முதல் 18 மாத காலத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களையும், தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் முதல் 18 மாத சட்டமன்ற செயல்பாடுகளையும் ஒப்பிட்டு வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையின் துல்லியம் குறித்து ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.

உள்ளூர் கொள்கை ஆய்வு நிறுவனமொன்று வெளியிட்ட அறிக்கையில், தற்போதைய அரசாங்கம் அதிகளவிலான சட்டங்களை நிறைவேற்றியதாகக் கூறப்பட்டிருந்தது. எனினும், “எண்ணிக்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அரசின் செயல்திறனை மதிப்பிட முடியாது; சட்டங்களின் தரமும் மக்களுக்கான தாக்கமும் முக்கியம்” என ஐ.தே.க. வலியுறுத்தியுள்ளது.

கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், நல்லாட்சிக் கால அரசாங்கத்தின் முதல் 18 மாதங்களில் நாட்டின் ஜனநாயகம், நல்லாட்சி, பொதுமக்கள் நலன் மற்றும் சட்ட ஆட்சி ஆகியவற்றை வலுப்படுத்திய பல முக்கியமான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவற்றில் முக்கியமாக 19ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் அதிகாரங்களை கட்டுப்படுத்தி நாடாளுமன்றத்தின் பங்கினை வலுப்படுத்திய இந்த திருத்தம், அந்நேர தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகவும் இருந்தது.

மேலும், பொதுமக்கள் பயன்படுத்தும் மருந்துகளின் தரம், பாதுகாப்பு மற்றும் விலைகுறைவை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபைச் சட்டம் கொண்டு வரப்பட்டதாகவும் கட்சி நினைவூட்டியுள்ளது.

அதேபோல், அரசின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் வரலாற்றுச் சட்டமாக கருதப்படும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மக்களுக்கு அரசின் தகவல்களைப் பெறும் உரிமையை வழங்கியதாக கூறப்பட்டுள்ளது.

தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில் தேசிய குறைந்தபட்ச ஊதியச் சட்டம் இயற்றப்பட்டதோடு, அனைத்து துறைகளிலும் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சட்டபூர்வமான குறைந்தபட்ச ஊதியம் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கை அதிகாரபூர்வமாக ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் (AIIB) இணைவதற்கு வழிவகுத்த சட்டமும் அக்காலகட்டத்தில் நிறைவேற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

குற்றச்செயல்களின் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுக்கான பாதுகாப்புச் சட்டம், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு சட்ட உதவி பெறும் உரிமையை உறுதிப்படுத்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்தம் ஆகியனவும் நல்லாட்சிக் காலத்தின் முக்கிய சாதனைகளாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

மறுபுறம், “அமைப்பு மாற்றம்” என்ற கோஷத்துடன் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாக ஐ.தே.க. குற்றஞ்சாட்டியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சில சலுகைகளை நீக்கும் சட்டங்களைத் தவிர, நாட்டில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கியமான சட்டங்களை அரசு கொண்டு வரவில்லை என கட்சி தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான 26 மாத ஆட்சிக்காலத்தில் 75 சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும், அவை நாட்டின் பொருளாதார மீட்சி மற்றும் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியதாகவும் ஐ.தே.க. சுட்டிக்காட்டியுள்ளது.

அவற்றில் 22ஆவது அரசியலமைப்பு திருத்தம், பொருளாதார மாற்றச் சட்டம், இலங்கை மத்திய வங்கிச் சட்டம், பொது நிதி முகாமைத்துவச் சட்டம் உள்ளிட்ட பல முக்கியமான சட்டங்கள் இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

“தற்போதைய அரசாங்கத்தின் செயலற்ற தன்மையை மக்கள் ஏற்கனவே உணரத் தொடங்கியுள்ளனர். இவ்வாறான ஆய்வறிக்கைகள் அரசின் உண்மையான செயல்திறனை மறைத்து, வெள்ளையடிக்கும் முயற்சியாக மட்டுமே பார்க்கப்படுகின்றன” என ஐ.தே.க. தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், “சட்டங்களின் எண்ணிக்கையா முக்கியம்? அல்லது மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் சட்டங்களா முக்கியம்?” என்ற கேள்வி மீண்டும் தேசிய அரசியல் அரங்கில் மையக்கருவாக மாறியுள்ளது.

(இது டெய்லி மிர்ரர் இணைய ஊடகத்தில் வெளியிடப்பட்ட முக்கிய செய்தி)

பிலிப்பைன்ஸை உலுக்கிய 7.8 ரிக்டர் நிலநடுக்கம்:

0

மணிலா: பிலிப்பைன்ஸின் மிண்டனாவ் (Mindanao) பிராந்தியத்தில் இன்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பெரும் அழிவையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பல கட்டிடங்கள் சீட்டுக்கட்டுகள் போல் சரிந்து விழுந்த நிலையில், அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

உள்ளூர் நேரப்படி காலை 7.17 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், மிண்டனாவ் உள்ளிட்ட பல பகுதிகளில் கடுமையாக உணரப்பட்டது. திடீரென பூமி அதிரத் தொடங்கியதால், வீடுகள், அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகங்களில் இருந்து அலறியடித்துக்கொண்டு மக்கள் வெளியில் ஓடினர். பல இடங்களில் கட்டிடங்கள் கடுமையாக குலுங்கியதுடன், சில கட்டிடங்கள் முழுமையாக இடிந்து விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களுக்குப் பின்னர், ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவான மற்றொரு அதிர்வும் உணரப்பட்டதால் மக்கள் மத்தியில் அச்சம் மேலும் அதிகரித்தது. தொடர்ச்சியான அதிர்வுகள் காரணமாக பலர் திறந்த வெளிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

ஆரம்ப கட்ட தகவல்களின்படி, இந்த பேரிடரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், குறைந்தது நான்கு பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பல கட்டிட இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்கியிருக்கக்கூடும் என அஞ்சப்படுவதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

நிலநடுக்கத்தையடுத்து பிலிப்பைன்ஸ் மற்றும் அண்டை நாடான இந்தோனேசியாவிற்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பு கருதி உயரமான பகுதிகளுக்கு அவசரமாக இடம்பெயர்ந்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளிகளில், பள்ளிக் கட்டிடங்கள் உள்ளிட்ட பல கட்டிடங்கள் கணநேரத்தில் இடிந்து விழும் அதிர்ச்சி தரும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த காட்சிகள் உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளன.

இதற்கிடையில், பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் அவசர அறிவிப்பொன்றை வெளியிட்டு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுமாறும், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் அனைத்து அரசு அமைப்புகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுனாமி எச்சரிக்கையை அலட்சியப்படுத்த வேண்டாம். உடனடியாக உயரமான இடங்களுக்கு செல்லுங்கள். காத்திருக்க வேண்டாம். நீங்கள் விட்டுச் செல்லும் எந்தப் பொருளையும் விட உங்கள் உயிர் மிகவும் முக்கியமானது” என்று மக்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், நிலநடுக்கத்தின் உண்மையான சேத விபரங்கள் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை. உலகின் அதிக நில அதிர்வு அபாயம் கொண்ட பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படும் பசிபிக் “ரிங் ஆஃப் ஃபயர்” வளையத்தில் அமைந்துள்ள பிலிப்பைன்ஸ், மீண்டும் ஒருமுறை இயற்கையின் பேராற்றலை நேரடியாக எதிர்கொண்டுள்ளது.

கல்பிட்டி பொலிஸில் அதிரடி மாற்றம்!

0

ஜூட் சமந்த

பொறுப்பதிகாரியைத் தவிர அனைத்து அதிகாரிகளும் இடமாற்றம் – பின்னணியில் ரகசிய அரசியல் சந்திப்பா?

புத்தளம் மாவட்டத்தின் கல்பிட்டி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த பொறுப்பதிகாரியைத் தவிர்ந்த ஏனைய அனைத்து பொலிஸ் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புத்தளம் பொலிஸ் பிரிவிற்கு பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர் வழங்கிய உத்தரவின் அடிப்படையில், 24 பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் 15 அதிகாரிகள் எதிர்வரும் ஜூன் 10ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் புதிய பணியிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் அனைவரும் புத்தளம் பொலிஸ் பிரிவின் கீழ் இயங்கும் ஏனைய பொலிஸ் நிலையங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, அவர்களுக்கு பதிலாக புத்தளம் பிரிவின் பல்வேறு பொலிஸ் நிலையங்களில் பணியாற்றி வந்த 35 அதிகாரிகள் உடனடியாக கல்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதனுடன், நுரைச்சோலை (நொரொச்சோலை) பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய எட்டு அதிகாரிகளும் புத்தளம் பொலிஸ் பிரிவின் பிற நிலையங்களுக்கு உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இடமாற்றங்கள் அனைத்தும், அரச சேவை ஆணைக்குழுவினால் 2022 டிசம்பர் 14ஆம் திகதி வெளியிடப்பட்ட 2310/29 இலக்க நடைமுறை விதிமுறைத் தொகுப்பின் 258(1)ஆம் பிரிவின் கீழ், பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த மே மாதம் 15ஆம் திகதி சிலாபம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் பொது பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ்மா அதிபர் தலைமையில் புத்தளம் மாவட்ட பொலிஸ் அதிகாரிகளுடன் விசேட சந்திப்பு ஒன்று நடைபெற்றிருந்தது.

அந்த சந்திப்பைத் தொடர்ந்து, அமைச்சர், பொலிஸ்மா அதிபர் மற்றும் புத்தளம் மாவட்ட அரசியல் பிரதிநிதிகள் இடையே இரகசிய கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அக்கலந்துரையாடலின் போது, கல்பிட்டி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் சில அதிகாரிகள் பல்வேறு சட்டவிரோத வர்த்தக வலையமைப்புகளுடன் தொடர்பு பேணி, ஊழல் முறையில் கடமையாற்றுவதாக ஒரு பிராந்திய அரசியல்வாதி குற்றஞ்சாட்டியதாக அறியப்படுகிறது.

இதன் காரணமாகவே கல்பிட்டி பொலிஸ் நிலையத்தில் இந்த பாரிய அளவிலான இடமாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்ற கருத்து பொலிஸ் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்த திடீர் மற்றும் விரிவான இடமாற்றம், புத்தளம் மாவட்டத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு நிர்வாகத்தில் புதிய மாற்றங்களுக்கு வழிவகுக்குமா என்பது குறித்து பொதுமக்களும் அரசியல் வட்டாரங்களும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.

கடந்த ஆண்டை விட 55% உயர்ந்த டெங்கு தொற்று!

0

இலங்கையில் டெங்கு தொற்றின் தாக்கம் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50 முதல் 55 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்தப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் கபில கண்ணங்கர தெரிவிக்கையில், இந்த ஆண்டு ஜூன் 5ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் நாடளவில் மொத்தமாக 36,168 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டார். அதில், சுமார் 50 சதவீதமான நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியிருப்பது கவலைக்கிடமான நிலையை வெளிப்படுத்துவதாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேல் மாகாணத்திற்கு அடுத்ததாக தெற்கு மாகாணத்தின் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும், சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களிலும், மேலும் புத்தளம் மற்றும் கண்டி மாவட்டங்களிலும் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

டெங்கு தொற்றின் அதிகரிப்புக்கு காரணமாக, இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தொடர்ச்சியாக நிலவிய மழையுடனான வானிலை முக்கிய பங்காற்றியுள்ளதாகவும் வைத்தியர் கபில கண்ணங்கர விளக்கமளித்தார். அதேவேளை, அண்மையில் தாக்கத்தை ஏற்படுத்திய ‘டிட்வா’ புயலுக்குப் பின்னர் பல இடங்களில் தேங்கிய குப்பைகள் மற்றும் கழிவுப் பொருட்கள் கொசுக்கள் பெருகுவதற்கான புதிய இனப்பெருக்கத் தளங்களாக மாறியுள்ளன என்றும் அவர் எச்சரித்தார்.

இதனையடுத்து, பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருப்பதுடன், மழைநீர் தேங்கக்கூடிய பாத்திரங்கள், பழைய டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட கொசு பெருகும் இடங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

டெங்கு என்பது சாதாரண காய்ச்சல் அல்ல. சரியான நேரத்தில் மருத்துவ ஆலோசனையைப் பெறத் தவறினால் உயிரிழப்புகளுக்கும் வழிவகுக்கக்கூடிய ஆபத்தான நோயாகும். எனவே, காய்ச்சல், கடுமையான தலைவலி, கண் வலி, உடல்வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையை அணுகுமாறு பொதுமக்களிடம் மீண்டும் மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

“கொசுவை கட்டுப்படுத்துவது அதிகாரிகளின் பொறுப்பு மட்டுமல்ல; ஒவ்வொரு குடும்பத்தினரின் விழிப்புணர்வும் நாட்டை டெங்கிலிருந்து பாதுகாக்கும் மிகப்பெரிய ஆயுதமாகும்” என்பதே சுகாதாரத் துறையினரின் வலியுறுத்தலாகும்.

“ஹொரகலே தோட்டத்தில் மணல் கொள்ளையா? சட்டபூர்வ வர்த்தகமா?

0

ஜூட் சமந்த

மஹவெவ – ஹொரகலே தோட்டத்தில் மணல் அகழ்வு சர்ச்சை: சுற்றுச்சூழல் பாதிப்பா? அரச அனுமதியுடன் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையா?

பசுமை பாதுகாப்பை உறுதி செய்வதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தின் கீழ், அரச நிறுவனத்துக்குச் சொந்தமான நிலப்பரப்பிலேயே மணல் அகழ்வு இடம்பெறுவதாகக் கூறப்படும் சம்பவம் புத்தளம் மாவட்டத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கால்நடை அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான மஹவெவ – ஹொரகலே தோட்டப் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு நடைபெறுவதாக நாத்தாண்டிய பிரதேச சபையின் பொது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். எனினும், அந்த குற்றச்சாட்டுகளை கால்நடை அபிவிருத்தி சபை அதிகாரிகள் முற்றாக மறுத்து, இது முழுமையாக சட்டபூர்வமான வர்த்தக நடவடிக்கை என விளக்கமளித்துள்ளனர்.

சுமார் 800 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட ஹொரகலே தோட்டத்தில் கால்நடைப் பண்ணை நடவடிக்கைகளுடன் இணைந்து குறிப்பிடத்தக்க அளவில் தென்னைச் சாகுபடியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தத் தென்னைத் தோட்டத்தின் ஒரு பகுதியில் மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதனால் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கடந்த 5ஆம் திகதி நாத்தாண்டிய பிரதேச சபையின் பொது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழுவொன்று சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டது. அப்போது சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில் மணல் அகழ்வு நடைபெற்றிருப்பது அவதானிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள்,

“சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று மக்களிடம் உறுதியளித்தே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆனால் இன்று நடைபெறுவது அதற்கு முற்றிலும் முரணான செயல்பாடுகளாகும். மணல் அகழ்வுக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் இருந்த பல தென்னை மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. மூன்று அடி அளவிலான மணல் அடுக்கு மட்டுமே அகற்றப்படும் என கூறப்பட்டாலும், அதைவிட அதிகளவு மணல் தோண்டப்பட்டிருப்பது தெளிவாக தெரிகிறது,” என குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் கால்நடை அபிவிருத்தி சபையின் ஹொரகலே தோட்ட துணைப் பொது முகாமையாளர் நீலக்ஷ நிமல்சிறி விளக்கமளித்தார்.

“இங்கு எந்தவித மணல் கொள்ளையும் நடைபெறவில்லை. இது முற்றிலும் சட்டபூர்வமான செயற்பாடாகும். தோட்டத்தின் குறிப்பிட்ட பகுதியில் தென்னைச் சாகுபடி வெற்றிகரமாக செய்ய முடியாத நிலை இருந்தது. ஆய்வுகளின் மூலம் அப்பகுதியில் இருந்த சிலிக்கா மணல் அடுக்கே அதற்குக் காரணம் என தெரியவந்தது. அதனால் அந்த மணல் அடுக்கை அகற்றி நிலத்தை தென்னைச் சாகுபடிக்குத் தகுந்தவாறு மாற்ற தீர்மானிக்கப்பட்டது.

இதற்காக புவியியல் மற்றும் சுரங்கத் திணைக்களம் உள்ளிட்ட அரச நிறுவனங்களிடமிருந்து தேவையான அனுமதிகள் பெறப்பட்டுள்ளன. மேலும், முறையான கொள்முதல் நடைமுறைகள் மற்றும் திறந்த டெண்டர் செயல்முறையின் ஊடாகவே மணல் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் கால்நடை அபிவிருத்தி சபைக்கு சுமார் 180 மில்லியன் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. எனவே இது மணல் கொள்ளையோ அல்லது சுற்றுச்சூழல் அழிவை ஏற்படுத்தும் செயற்பாடோ அல்ல,” என அவர் தெரிவித்தார்.

அரச நிறுவன நிலத்தில் நடைபெறும் இந்த மணல் அகழ்வு தொடர்பான சர்ச்சை தற்போது புத்தளம் மாவட்ட மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், இது தொடர்பாக சுயாதீன விசாரணை அவசியமென பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

“எங்களுக்கும் ஒரு வீடு” – பெரியபள்ளி குடும்பத்தின் கனவை நனவாக்கிய பைசல் எம்.பி!

0

புத்தளம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பெரியபள்ளி குடியிருப்பு கிராம உத்தியோகத்தர் பிரிவில் வாழ்ந்து வரும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பம் ஒன்றின் நீண்டநாள் சொந்த வீட்டுக் கனவு இன்று நனவாகும் பாதையில் முதல் அடியை எடுத்து வைத்தது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள நிரந்தர வீட்டிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இன்று (06.06.2026) சனிக்கிழமை புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ M.J.M. பைசல் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இந்த வீட்டுத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட குடும்பமொன்றிற்கு பாதுகாப்பான, நிலையான மற்றும் கண்ணியமான வாழ்விடத்தை வழங்கும் அரிய வாய்ப்பு உருவாகியுள்ளது. இதன் மூலம் பல ஆண்டுகளாக சொந்த வீடு என்ற கனவை மனதில் சுமந்து வாழ்ந்த அந்தக் குடும்பத்தின் எதிர்காலத்திற்கு புதிய நம்பிக்கை ஒளி பிறந்துள்ளது.

நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ முஹம்மது பைசல் அவர்களுடன், புத்தளம் மாநகர சபையின் மேயர் கெளரவ ரின்ஷாட் அகமட், பிரஜா சக்தி CDC தலைவி சகோதரி எஸ்மின், சகோதரர் ரியாஸ், சகோதரர் சர்ராஜ் உள்ளிட்ட சமூகப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

மேலும், தேசிய மக்கள் சக்தியின் கட்சி உறுப்பினர்கள், வீட்டு பயனாளிகள், சம்பந்தப்பட்ட கிராம சேவகர் பிரிவின் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் வீட்டுத்திட்ட உத்தியோகத்தர்களும் நிகழ்வில் பங்கேற்று புதிய வீட்டிற்கான அடிக்கல் நாட்டும் தருணத்தை சிறப்பித்தனர்.

ஒரு வீடு என்பது வெறும் சுவர்களும் கூரையும் கொண்ட கட்டிடம் மட்டுமல்ல; அது ஒரு குடும்பத்தின் பாதுகாப்பு, நம்பிக்கை, மரியாதை மற்றும் எதிர்கால கனவுகளின் அடையாளமாகும். அந்த வகையில், பெரியபள்ளி கிராமத்தில் இன்று நாட்டப்பட்ட இந்த அடிக்கல், ஒரு வீட்டிற்கான அடிக்கல் மட்டுமன்றி, ஒரு வறிய குடும்பத்தின் புதிய வாழ்விற்கான நம்பிக்கையின் அடிக்கல்லாகவும் அமைந்துள்ளது.

தில்லையடி பகுதியைச் சேர்ந்த மூவர் தழுவ கடலில் மூழ்கி உயிரிழப்பு!

0

அலைகளின் கோரப் பிடியில் மூன்று உயிர்கள் பலி; நுரைச்சோலையில் சோகத்தை ஏற்படுத்திய துயரச் சம்பவம்

இன்று மாலை நுரைச்சோலை தழுவ கடலில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்த துயரச் சம்பவம், அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கடற்கரைக்கு சென்றிருந்த குடும்பத்தினரில் மூவர், எதிர்பாராத விதமாக கடலலைகளில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புத்தளம் தில்லையடி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு இளம் பெண்களும் ஒரு இளைஞரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இன்று மாலை குடும்பத்தினருடன் கடற்கரைக்கு சென்று கடற்கரையில் குதூகலித்துக்கொண்டிருந்த வேளையில் வீசிய பலத்த காற்றுடன் ஏற்பட்ட அலைகளில் சிக்கி அவர்கள் கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.

பல போராட்டங்களுக்கு மத்தியில் இவர்களின் உடல்கள் கரைக்கு கொண்டுவரப்பட்ட வேலை இவர்கள் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 25 வயதுடைய இளைஞர் ஒருவரும், 18 மற்றும் 19 வயதுடைய இரண்டு இளம் பெண்களும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. விடுமுறையை சந்தோசமாக கழிக்க குடும்பத்துடன் கடற்கரைக்கு சென்ற பயணம், சில நிமிடங்களில் மீள முடியாத சோகமாக மாறியிருப்பது உறவினர்களை மட்டுமன்றி முழு ஊரையும் உலுக்கியுள்ளது.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுரைச்சோலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த துயரச் சம்பவம், கடற்கரைகளில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் அவசியத்தை மீண்டும் ஒருமுறை நினைவூட்டியுள்ளது. குறிப்பாக பலத்த அலைகள் காணப்படும் பகுதிகளில் எச்சரிக்கைகளைப் புறக்கணிக்காமல், உயிர் பாதுகாப்பை முதன்மைப்படுத்த வேண்டும் என்பதையும் இந்தச் சம்பவம் எமக்கு உணர்த்துகிறது.

மத்திய வங்கி போராட்டம் திட்டமிட்ட நாடகம்; அரசின் முகமூடியை கிழித்த ஜயந்த அத்துகோரள!

0

அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு,  மத்திய வங்கிக்கு முன்பாக திரண்டு அதன் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவைப் பதவியிலிருந்து விலகுமாறு கோரி நடத்திய போராட்டம், அரசாங்கத்தின் மற்றுமொரு அரசியல் நாடகமென சர்வஜன அதிகாரம் கட்சியின் கம்பஹா மாவட்ட முதன்மை அமைப்பாளரும் தொழிலதிபருமான ஜயந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

சர்வஜன அதிகாரம் கட்சியின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகளை வழங்குவதற்குப் பதிலாக, அரசாங்கம் தற்போதைய தோல்விகளுக்குப் பொறுப்புக்கூற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கடந்த காலங்களில் அரசாங்கம் தனது பல்வேறு தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி மத்திய வங்கியையும் நாட்டின் நிதியையும் தனிநபர்களுக்குச் சாதகமாக மாற்றியதன் மூலம் பெரும் களங்கத்தை ஏற்படுத்திக்கொண்டது. 

இவ்வாறான சூழலில், அரசாங்கத்தின் முறையற்ற நிர்வாகத்தினால் ஏற்பட்ட கசப்பான விளைவுகளுக்குத் தற்போதைய மத்திய வங்கி ஆளுநரை மட்டும் பொறுப்பாக்கி, அவரைப் பதவியிலிருந்து நீக்குவதன் மூலம் தாங்கள் செய்த தவறுகளிலிருந்து தப்பிக்க அரசாங்கம் முற்படுகிறது.

குறிப்பாக, கடந்த காலங்களில் இடம்பெற்ற 2.5 மில்லியன் டொலர் மோசடி உள்ளிட்ட அனைத்து நிதி கொடுக்கல் வாங்கல்களும் மத்திய வங்கி ஆளுநரின் கட்டுப்பாட்டில் மாத்திரம் இருக்கவில்லை. மாறாக, நிதி அமைச்சர் தலைமையிலான நிதி அமைச்சின் பொறுப்பிலேயே அவை முன்னெடுக்கப்பட்டன.

இவ்வாறான பின்னணியில், நாட்டை மீட்டெடுக்கப் போராடும் ஒருவரைப் பதவியிலிருந்து நீக்க அரசாங்கம் தனது ஆட்களைக் கொண்டு நேற்று நாடகமொன்றை அரங்கேற்றியுள்ளது. ஆட்சிக்கு வந்த நாள் முதல் மக்களை ஏமாற்றிவரும் இக்குழுவினர், தாங்கள் செய்த தவறுகளுக்கு எதிராகக் குரல் எழுப்புபவர்களை அடக்க இவ்வாறான நபர்களைப் பயன்படுத்துவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

அத்துடன், அரசாங்கம் பௌத்த மதத்துக்கு எதிரான செயற்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. பாராளுமன்றத்தில் ஜயமங்கல காதாவைப் பாராயணம் செய்யத் தடை விதித்தது முதல், உள்ளூராட்சி மன்றங்களின் ஆரம்ப நிகழ்வுகளில் பஞ்சசீலத்தைப் பின்பற்றுவதைத் தடுத்தமை வரை இவை திட்டமிட்ட செயற்பாடுகளாகும். 

மேலும், வடக்கு மாகாணத்தில் பௌத்த பிக்குகளை அச்சுறுத்தியதும், அவர்களுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தியதும் அரசாங்கத்தின் பௌத்த விரோதப் போக்கையே காட்டுகின்றது. இவ்வாறான சூழலில், புனிதமிக்க வெசாக் பண்டிகை காலத்திலும் தொடர்ச்சியான மின்வெட்டுகளை மேற்கொண்டு பௌத்த மக்களின் மனதைப் புண்படுத்தும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது என ஜயந்த அத்துகோரள மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“எனக்கு எதிராக வாக்களித்தவர்கள் தேசபக்தி அற்றவர்கள்!” – டிரம்ப் கடும் தாக்கு

0

தனக்கு எதிராக ஈரான் போர் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் “தேசபக்தி அற்றவர்கள்” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். ஈரான் மீதான டிரம்பின் போர் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட இந்தத் தீர்மானம், அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் (House of Representatives) 215–208 என்ற வாக்குகள் கணக்கில் நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்றத்தின் முறையான அனுமதி அல்லது போர் பிரகடனம் இல்லாமல், டிரம்ப் தன்னிச்சையாக ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் தடுப்பதையும், ஈரானுக்கு எதிரான அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவதையும் இந்தத் தீர்மானம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனிடையே டிரம்பின் சொந்தக் கட்சியான குடியரசுக் கட்சியை சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக (அதாவது டிரம்ப்பிற்கு எதிராக) ஜனநாயக கட்சியினருடன் இணைந்து வாக்களித்தனர்

ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், இந்த வாக்குப்பதிவு “அர்த்தமற்றது” என்றும், இதில் பங்கேற்று எனக்கு எதிராக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் தேசநலன் மற்றும் தேசம் மீதான விசுவாசம் கேள்விக்குரியது என்றும் கடுமையாக சாடி இருக்கிறார்.

ஊடகவியலாளர்களுக்கு உத்தியோகபூர்வ அங்கீகாரம்: புதிய சட்டமூலம் வெளியீடு!

0
ஊடகத்துறைக்கு புதிய அத்தியாயம்! இலங்கையில் பட்டயம் பெற்ற ஊடக உயர்தொழிலர்களுக்கான நிறுவகம் உருவாகிறது

கொழும்பு: இலங்கையின் ஊடகத் துறையை மேலும் தொழில்முறைப்படுத்தும் நோக்கில், நாட்டின் ஊடகத் துறையில் பணியாற்றும் உயர்தொழிலாளர்களுக்கான தொழில்சார் நியமங்களை அறிமுகப்படுத்தி அவற்றைப் பேணுவதற்காக “இலங்கை ஊடக உயர்தொழிலர்களின் பட்டயம் பெற்ற நிறுவகம்” என்ற புதிய அமைப்பை நிறுவுவதற்கான சட்டமூலம் அரசாங்க விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரின் பணிப்புரைக்கு அமைய, 2026 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள இந்த விசேட வர்த்தமானி, நாட்டின் ஊடகத் துறையில் புதிய மாற்றத்திற்கான அடித்தளமாகப் பார்க்கப்படுகிறது.

சட்டமூலத்தின் படி, புதிய நிறுவகம் சுயாதீனமாக இயங்கும் ஒரு கூட்டுத்தாபனமாக அமையவுள்ளதுடன், ஊடகத்துறையில் செயற்படும் பல்வேறு துறையினரையும் ஒரே தொழில்சார் கட்டமைப்பின் கீழ் கொண்டு வருவதை பிரதான இலக்காகக் கொண்டுள்ளது.

எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், பதிப்பாசிரியர்கள், தொகுப்பாளர்கள், ஒளிபரப்பாளர்கள், ஊடக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் புகைப்படப்பிடிப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து உயர்தொழிலாளர்களுக்கும் இந்த நிறுவகத்தில் உறுப்புரிமை வழங்கப்படவுள்ளது. அதேவேளை, தகைமை மற்றும் திறமைகளை அடிப்படையாகக் கொண்டு உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வ அங்கீகாரம் வழங்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், ஊடகக் கல்வி மற்றும் பயிற்சி நெறிகளை மேம்படுத்துவதற்காக பரீட்சைகள், ஆராய்ச்சிகள் மற்றும் சர்வதேச தரத்திலான கற்கைநெறிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. உலகளாவிய ஊடகப் போக்குகளுக்கு ஏற்ப உள்ளூர் ஊடகத்துறையை முன்னேற்றும் முயற்சிகளும் இந்த நிறுவகத்தின் மூலம் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதன் முக்கிய அம்சங்களில் ஒன்றாக, உறுப்பினர்களும் மாணவர்களும் கடைப்பிடிக்க வேண்டிய விசேட நடத்தைக் கோவை தயாரிக்கப்படவுள்ளது. இதன் மூலம் ஊடகத் துறையில் தொழில்சார் ஒழுக்கம், பொறுப்புணர்வு மற்றும் நம்பகத்தன்மையை வலுப்படுத்த அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

நிறுவகத்தின் நிர்வாகத்தை மேற்கொள்ள 15 உறுப்பினர்களைக் கொண்ட ஆளும் பேரவையொன்று அமைக்கப்படவுள்ளது. இதில் 8 உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படவுள்ளதுடன், மேலும் 7 பேர் நியமனத்தின் மூலம் இணைக்கப்படவுள்ளனர்.

ஆளும் பேரவை முறைப்படி உருவாகும் வரை, அமைச்சரால் நியமிக்கப்படும் இடைக்காலப் பேரவை ஒன்று செயற்படும். இதில் அமைச்சின் செயலாளருடன், ஊடகத் துறையில் குறைந்தது 20 ஆண்டுகள் அனுபவம் கொண்ட ஆறு நிபுணர்கள் இடம்பெறுவர் என வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டமூலம் அமலுக்கு வந்தால், இலங்கையின் ஊடகத் துறையில் தொழில்முறை தரநிலைகள், ஒழுக்கம் மற்றும் பொறுப்புணர்வை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய திருப்புமுனையாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.