Home Blog

நாகவில்லுவில் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ்வின் நினைவுதினம்!

பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று நாகவில்லுவில் இடம்பெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வு!

இலங்கை திருநாட்டில் பெளதீக ரீதியான பல வேலைத்திட்டங்களையும், இடம்பெயர்வு மற்றும் எல்லை நிர்ணயம் தொடர்பான பறந்துபட்ட அறிவினையும் கொண்டிருந்த எருக்கலம்பிட்டியை சேர்ந்த மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது வருட நினைவு தின நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

அந்த வகையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் நினைவுப் பேருரையும், புத்தக வெளியீடு நிகழ்வும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் ஏற்பாட்டில் நேற்று 25.08.2025 புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய அதிபர் ஜனாப் S.M. ஹுஸைமத் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், புத்தி ஜீவிகள் மற்றும் குடும்பத்தார்கள் கலந்தகொண்டமை விஷேட அம்சமாகும்.

சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் பொருளாளர் ஜனாப் ஏ.ஜி. அனீஸ் (Bsc.Agri) அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.

மேலும் இஸ்லாமிய கற்கை அறபு மொழிப் பீட, தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களினால் நூல் அறிமுக உரையும், நினைவுப் பேருரையும் மிகவும் உணர்வுபூர்வமாக நிகழ்த்தப்பட்டது.

கிழக்கு மற்றும் தென் கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பங்களிப்பு அளப்பெரியது என நினைவு கூறிய பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன், வடக்கில் ஏற்பட்ட யுத்தம் மற்றும் முஸ்லிம்களின் இடம்பெயர்வு குறித்து அதீத அக்கறையுடன் செயற்பட்ட மிக முக்கியமானவர் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்கள் எனவும் எடுத்துரைத்தார்.

வடக்கு முஸ்லிம்களின் இடம்பெயர்வு மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பில் அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களுடன் பலதரப்பட்ட கலந்துரையாடல்களை நடத்தி, சர்வதேசம் வரை இவ்விடயங்களை கொண்டுசென்ற மகான் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் என பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் தனது உரையில் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் புதல்வி சட்டத்தரணி எப்.சப்னா ஹஸ்புல்லாஹ் அவர்களினால் ஏற்புரை நிகழ்த்தப்பட்டதுடன், நூல் வெளியீடு நிகழ்வும் இடம்பெற்றது.

நூலின் முதற்பிரதியை ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தரும், புத்தளம் எருக்கலம்பிட்டி பள்ளிவாசல் நிர்வாக சபையின் முன்னாள் உறுப்பினருமான ஜனாப் ரஹ்மத்துல்லாஹ் (GS) அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

மேலும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் செயலாளர் ஜனாப் எஸ்.எச்.எம். றிஸ்னி அவர்களினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டதுடன், தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன், மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பாரியாருக்கும் நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில், பேராசிரியர்கள், கல்விமான்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், பாடசாலைச் சமூகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் குடும்பத்தார்கள் என பலரும் கலந்து சிறப்பித்ததுடன், ஈ நியூஸ் பெஸ்ட் ஊடக நிறுவனம் ஊடக அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரணிலுக்காக ஒன்று திரண்ட அரசியல் தலைவர்கள்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விசாரணை கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது, நாட்டின் அடிப்படை ஜனநாயக நிறுவனங்களின் வலிமை குறித்து கடுமையான கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் விளைவுகள் ஒரு தனிநபரின் அல்லது எந்தவொரு அரசியல் கட்சிகளின் தலைவிதியையும் விட, சமூகத்தின் உரிமைகளுக்கான பிரச்சினைகளை தோற்றிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் தலைவர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைகளை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது மற்றும் விளக்கமறியலை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து நடத்திய விசேட ஊடக சந்திப்பில் பங்கேற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரல முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் அறிக்கையை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

போர்த்துக்கல் அணி சாம்பியன் ஆனது!

‘நேஷன்ஸ் லீக்’ கால்பந்தில் போர்ச்சுகல் அணி சாம்பியன் ஆனது. பைனலில் ‘பெனால்டி ஷூட் அவுட்டில்’ 5-3 என ஸ்பெயினை வீழ்த்தியது.

ஐரோப்பிய கால்பந்து அணிகளுக்காக ‘நேஷன்ஸ் லீக்’ தொடர் நடத்தப்படுகிறது. மொத்தம் 54 அணிகள் பங்கேற்றன. நேற்று ஜெர்மனியின் முனிக் நகரில் நடந்த பைனலில், போர்ச்சுகல், நடப்பு யூரோ சாம்பியன் ஸ்பெயின் பலப்பரீட்சை நடத்தின. போட்டியின் 21வது நிமிடம் ஜுபிமெண்டி (ஸ்பெயின்), 26வது நிமிடம் மெண்டிஸ் (போர்ச்சுகல்) தலா ஒரு கோல் அடித்தனர். 45வது நிமிடம் மைக்கேல் ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் ஸ்பெயின் அணி 2-1 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் 61 வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். போர்ச்சுகல் அணிக்காக இவர் அடித்த 138வது கோல் இது. 90 நிமிட முடிவில் போட்டி 2-2 என சமன் ஆனது. அடுத்து நடந்த கூடுதல் நேரத்திலும் (30 நிமிடம்) இரு அணியும் கோல் அடிக்கவில்லை.

இதையடுத்து வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி ‘பெனால்டி ஷூட் அவுட்டுக்கு’ சென்றது. இரு அணிக்கும் தலா 5 வாய்ப்புகள் தரப்பட்டன. காயம் காரணமாக 88 வது நிமிடம் வெளியேறிய ரொனால்டோ, இதில் பங்கேற்கவில்லை.

முதல் 3 வாய்ப்பில் போர்ச்சுகலின் ராமோஸ், விடின்ஹா, பெர்ணான்டஸ் கோல் அடித்தனர். மறுபக்கம் ஸ்பெயின் தரப்பில் மெரினோ, பயேனா, இஸ்கோ கோல் அடிக்க 3-3 என ஆனது.

4வது வாய்ப்பில் மெண்டெஸ் (போர்ச்சுகல்) கோல் அடிக்க, ஸ்பெயினின் மோராட்டோ அடித்த பந்தை கோல் கீப்பர் டீகோ கோஸ்டா தடுத்து அசத்தினார்.

5வது வாய்ப்பில் நெவேஸ் கோல் அடித்தார். இதையடுத்து 5-3 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் ‘திரில்’ வெற்றி பெற்றது. 2019க்குப் பின் இத்தொடரில் மீண்டும் சாம்பியன் ஆனது.

தில்லையடியில் சிக்கிய கடத்தல் பீடி இலைகள்!

புத்தளத்தில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளுடன் வேன் ஒன்றும் பறிமுதல்!

இலங்கை கடற்படை, பொலிஸாருடன் இணைந்து, புத்தளம், தில்லையடி பகுதியில் 2025 ஜூன் 05 இரவு வேளையில் நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகள் கொண்ட ஒரு வேன் கைப்பற்றப்பட்டது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிறுவனம், புத்தளம் பொலிஸாருடன் இணைந்து தில்லையடி பகுதியில் நடத்திய இந்த சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்று சோதனை செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகளானது வாகனத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் வேன் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களால் ஆபத்தா?

விண்வெளியில் பூமியை சுற்றி வந்துக்கொண்டிருக்கும் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கொள்களை சீனா நினைத்தால் வெறும் 12 மணி நேரத்தில் தாக்கி அழித்துவிட முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் என்கிற செய்தி ஊடகத்தில் இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது தற்போது சீனா 99 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. இவை அனைத்தும் நான்ஜிங் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஆஸ்ட்ரோனாட்டிக்ஸ் பல்கலைக்கழகத்தின் விண்வெளிக் கட்டுப்பாட்டுத் துறையின் இயக்குநர் வூ யுன்ஹுவா தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இவை அனைத்தும் எலான் மஸ்கின் 1400 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை வெறும் 12 மணி நேரத்தில் காலி செய்துவிடும். சீன செயற்கைக்கோளில் லேசர், நுண் அலைகளை உருவாக்கும் கருவி, உளவு கருவிகள் பொருத்தப்பட்டிருக்கலாம். ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் வெறுமென நெட்வொர்க் கொடுக்க மட்டுமே பயன்படுத்தப்படுவதில்லை. தவிர, ராணுவ நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது என சீனா குற்றம்சாட்டி வருகிறது.

அதாவது, உக்ரைன்-ரஷ்யா போரில், உக்ரைன் படைகளுக்கு தகவல்கள் கொடுக்கவும், ரஷ்ய எல்லையை துல்லியமாக கண்காணிக்கவும் இந்த செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த 2022ம் ஆண்டு ரஷ்ய போரின்போது அப்போதைய உக்ரைனின் துணைப் பிரதமரான மைக்கைலோ ஃபெடோரோவ், “ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் சேவையை உடனடியாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த மஸ்க், “உடனடியாக சேவை வழங்கப்படும்” என்று கூறியிருந்தார்.

உக்ரைன் போருடன் மட்டுமே ஸ்டார்லிங்க் நிற்காது, நாளை சீனாவுக்கும்-தைவானுக்கும் பஞ்சாயது ஏற்பட்டால் அப்போதும், தைவானுக்கு சப்போர்ட் செய்ய ஸ்டார்லிங்க் வரும். எனவே இந்த கூட்டு நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்க சீனா இந்த புதிய செயற்கைக்கோள்களை உருவாக்கியிருக்கிறது.

கடந்த 2023ம் ஆண்டு இதற்கான பணிகளை சீனா தொடங்கியது. இந்த திட்டத்திற்கு ‘கியான்ஃபான் மெகா-விண்மீன் திட்டம்’ (Qianfan mega-constellation project) என்றும் பெயரிட்டிருந்தது. நோக்கம் உலகம் முழுவதும் இணைய தொடர்பை வழங்குவதாகும். இதற்காக மொத்தம் 15,000 சிறிய ரக செயற்கைக்கோள்களை ஏவ சீனா முடிவெடுத்தது. இதன் முதல் தொகுப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏவப்பட்டது. இதில் 18 செயற்கைக்கோள்கள் இருந்தன.

ஒவ்வொன்றும் சுமார் 300 கி.கி எடையில் இருந்தது. இவை பூமியிலிருந்து 800 கி.மீ உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டது. இதேபோன்று 2024 டிசம்பரில் அடுத்து இரண்டு தொகுதி ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. தற்போது மொத்தம் 99 செயற்கைக்கோள்கள் விண்வெளியில் இருக்கின்றன. 15,000 செயற்கைக்கோள்களை 3 கட்டங்களாக ஏவ இருக்கிறது. முதல் கட்டத்தில் 1,296 செயற்கைக்கோள்கள் ஏவப்படும். இதில் 648 செயற்கைக்கோள்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஏவப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் கன்னி உரை

அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்புவோம்

தேசியத்துவத்துடனும் ஐக்கியத்துடனும் ஒன்றுபட்டு நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க இன்று (23) காலை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

பதவிப் பிரமாணத்தின் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய முழுமையான உரை:

மக்களால் ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது நமது நாட்டின் ஜனநாயகத்திலிருக்கும் மிக முக்கியமான அம்சமாகும். தேர்தலில் வாக்களித்தல் மற்றும் ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதோடு ஜனநாயகம் நிறைவு பெறுவதில்லை. இது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சம் என்றாலும், நம் நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்த, கட்டமைப்புகளின் வலிமையும், சட்டங்களை வலுப்படுத்துவதும் அவசியம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனவே, எனது பதவிக்காலத்தில் இந்த நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.

அத்துடன், இந்த நாட்டில் ஜனநாயக முறையில் அதிகாரப் பரிமாற்றம் நடந்த வரலாறும் உண்டு. தேர்தலில் நிகழும் அதிகாரப் பரிமாற்றத்தை எந்தத் தலைவரும் நிராகரித்ததில்லை. அதற்கமைய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த மக்கள்ஆணையை சுமூகமாக ஏற்றுக்கொண்டதுடன், ஜனநாயக ரீதியில் அதிகாரத்தை கைமாற்றுவதற்கான அவரின் அர்ப்பணிப்பிற்கும் முன்னுதாரணத்திற்கும் நன்றி தெரிவிக்கிறேன். மேலும் எமக்கு கிடைப்பது மிகவும் சவால் நிறைந்த நாடு என்பதை நன்கு புரிந்து கொண்டிருக்கிறோம். நமது அரசியலில் தூய்மையான, மக்களால் எதிர்பார்க்கப்படும் சிறந்த அரசியல் கலாசாரத்திற்காக அவசியம் காணப்படுகிறது.அதற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

நம் நாட்டின் அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு நல்லெண்ணம் இல்லை. எனவே, அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் மீது மக்கள் மரியாதை மற்றும் நம்பிக்கையை மீட்டெடுக்க எங்கள் தரப்பிலிருந்து முடிந்த அனைத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.

மேலும், நமக்கு முன் இருக்கும் இந்த ஆழமான நெருக்கடியை வெறும் அரசோ, வெறும் அரசியல் கட்சியோ அல்லது ஒரு தனி நபரோ மட்டும் தீர்க்க முடியும் என்று நாங்கள் நம்பவில்லை. ஏனென்றால், நான் முன்பு கூறியது போல், நான் ஒரு மாயாஜால வித்தைக்காரனல்ல. நான் மந்திரவாதியும் இல்லை. நான் இந்த நாட்டின் சாதாரண குடிமகன். எம்மிடம் திறமைகள் உள்ளன. இயலாமைகளும் உள்ளன. தெரிந்த விடயங்களும் உள்ளன அதேபோன்று, தெரியாத விடயங்களும் உள்ளன.

ஆனால் திறமைகளைப் பயன்படுத்தி தெரியாதவற்றை சேகரித்துக்கொண்டு சிறந்த முடிவுகளை எடுத்து இந்த நாட்டை வழிநடத்துவதே எனது தலையாய பணியாகும். அந்த கூட்டுப் பங்களிப்பின் ஒரு அங்கமாக மாறுவது எனது பொறுப்பாகும். மேலும், இந்த நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதில் பொது மக்கள் மற்றும் அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் பாரிய பொறுப்பு உள்ளது. அந்தப் பொறுப்பை நிறைவேற்ற அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்.

ஆனால், நாட்டின் ஜனாதிபதி என்ற முறையில், இந்தப் பணியை முன்னின்று நடத்துவதில் எனக்கு முதன்மையான மற்றும் மிக முக்கியமான பொறுப்பு இருப்பதை நான் ஏற்றுக்கொண்டேன். எனவே, இந்தச் சவாலை வெற்றிகொள்வதற்காக எனக்குக் வழங்கப்பட்டுள்ள பணியை நான் உரிய முறையில் நிறைவேற்றுவேன் என்பதை செயற்பாடு மற்றும் நடைமுறை மூலம் எல்லா சந்தர்ப்பங்களிலும் இந்த நாட்டின் பிரஜைகளுக்கு வெளிப்படுத்த நான் தயாராக இருக்கிறேன்.

மேலும் நமது நாட்டுக்கு சர்வதேச ஆதரவு தேவை. எனவே, உலகில் எத்தகைய அதிகாரப் பிளவுகள் இருந்தாலும், ஒவ்வொரு நாட்டையும் எமக்கு மிகவும் சாதகமாக கையாள்வதே நமது எதிர்பார்ப்பாகும். நாம் உலகில் தனிமைப்படுத்தப்பட்ட நாடு அல்ல. உலகத்துடன் கூட்டாக முன்னேற வேண்டிய ஒரு நாடாகும். அது தொடர்பில் தேவையான முடிவுகளை எடுக்க நாங்கள் சிறிதும் தயங்குவதில்லை.

மேலும், நம் நாட்டைக் கட்டியெழுப்புவதில் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு பெரும் பங்கு உள்ளது. எனவே, நாட்டை மேலும் வலுவாகக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு அவர்கள் ஆதரவளிப்பார்கள் என நான் கருதுகின்றேன்.

நம் நாட்டின் ஜனநாயகத்தின் ஊடாக நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். அதற்காக மக்கள் எனக்கு வாக்களித்தனர்.

மேலும் எனக்கு வழங்கப்படாத வாக்குகளும் உள்ளன. எனவே, எங்களின் வெற்றியின் உள்ளடக்கம் மற்றும் அளவு குறித்து எங்களுக்கு நல்ல புரிதல் உள்ளது. எனவே, எங்களுக்கு ஆதரவு வழங்காத மற்றும் எங்களை நம்பாத பிரஜைகளின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெறுவதே எனது நிர்வாகத்தின் போது எனக்கு வழங்கப்பட்டுள்ள பணியாகும். அந்தப் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

எதிர்காலத்தில் இவை அனைத்தையும் நீங்கள் நடைமுறையில் கண்டுகொள்ள முடியும். அதற்கு அனைத்து மக்களின் ஆதரவையும் எதிர்பார்க்கின்றேன்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தேர்தலில் இவ்வாறுதான் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்

அதிகாரிகள் மற்றும் பிற தேவைகள் முடிந்த பிறகு, மாலை 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (19) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி பிற்பகல் 4.15 மணிளவில் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“எதிர்வரும் 21ம் திகதி வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள் பெறப்பட்டதும், அதிகாரிகள் மற்றும் இதர தேவைகள் முடிந்ததும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் இரவு 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

மாலை 4.15 மணிளவில் தபால் மூல வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

அத்துடன் மாவட்ட அளவில் ஒவ்வொரு வட்டாரத்திலும் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெறும்.

வாக்கு எண்ணிக்கையின் முடிவில் முடிவுகள் கிடைத்தவுடன் ஊடகங்களுக்கு வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையே முதலில் எண்ணப்படும்.

அந்தக் கணக்கெடுப்பின் பின்னர் (மாவட்ட அளவில் எண்ணும் பணி) முதலில் வாக்குப்பெட்டிகளில் உள்ள வாக்குகள் எண்ணப்படும்.

அதன் பிறகு, ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு, தொகுதி மற்றும் மாவட்ட அளவில் அது தயாரிக்கப்படுகிறது.

தேர்தல்கள் செயலகமே ஒட்டுமொத்த முடிவுகளைக் கணக்கிடும்.

எந்த வேட்பாளரும் 50 வீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்றுள்ளாரா என சரிபார்க்கப்படும்.

அப்படியானால், அந்த நேரத்தில் வாக்கு எண்ணும் பணிகள் நிறுத்தப்படும்.

அப்போது ஜனாதிபதியை நாங்கள் அறிவிப்போம்.

எந்த வேட்பாளருக்கும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் கிடைக்காவிடின், விருப்பு வாக்கு எண்ணிக்கைக்கு செல்ல வேண்டும்.

அங்கு, அதிக வாக்குகள் பெற்ற இரண்டு வேட்பாளர்கள் போட்டியில் வைத்து விட்டு  மீதமுள்ள 36 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து நீக்கப்படுவர்” என்றார்.

புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக மாறும்

புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வாத்தியாசலையாக மாற்றம் பெரும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று புத்தளத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ அலிசப்ரி ரஹீம் மற்றும் சிந்தக்க மாயாதுன்ன தலைமையில் புத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்திலே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

புத்தளம் மக்களின் நீண்ட நாள் தேவையாக இருந்து வருகின்ற புத்தளம் தல வைத்தியசாலையை தரமுயர்த்துவது தொடர்பாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ அலிசப்ரி ரஹீம் அவர்களினால் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோலுக்கிணங்க குறித்த வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.

மேலும் புத்தளத்தில் மீன் பிடி தொழிலை முன்னேற்றும் நோக்கத்தில் மீன் பிடி துறைமுகம் ஒன்றை அமைக்கும் யோசனையும் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டதுடன், அதற்கான முன்னெடுப்புகளும் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்டமை புத்தளம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நாட்டில் நிரந்தர பொருளாதார அபிவிருத்தியை நிலை நாட்ட தாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டை பொருளாதார அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவதே தனது பிரதான நோக்கம் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மொட்டுக்கட்சிக்கு எதிராக நிற்கும் முக்கிய அமைச்சர்கள்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக மொட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளரை இந்த வாரம் அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்காதிருக்கவும், மொட்டு சின்னத்தில் தனியாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமக்கு ஆதரவு வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பியிருந்த கடிதம் நேற்றைய தினம் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தினால் அரசியல் குழுவில் முன்வைக்கப்பட்டது.

எவ்வாறாயினும் அந்த கடிதத்தை நிராகரிக்க அரசியல் குழுக் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுவில் 82 பேர் அங்கம் வகிப்பதுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் 72 பேர் பங்கேற்றனர்.

இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த 11 பேர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

மஹிந்தானந்த அலுத்கமகே, பந்துல குணவர்தன, பிரதீப் உந்துகொட, கோகிலா ஹர்ஷனி குணவர்தன, சஹன் பிரதீப், ரமேஸ் பத்திரன, கஞ்சன விஜேசேகர, பிரசன்ன ரணதுங்க, கனக ஹேரத், மொஹான் பிரியதர்ஷன ஆகியோர் கட்சியின் சார்பில் தனியான வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

அத்துடன் பிறிதொரு கட்சியின் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்கும் உறுப்பினர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் யோசனைக்கு 6 பேர் எதிராக வாக்களித்துள்ளனர்.

எவ்வாறாயினும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் எனக் கூறப்பட்ட தம்மிக பெரேரா தொடர்பில் அரசியல் குழுக் கூட்டத்தின்போது எந்தவித கருத்துக்களும் பரிமாற்றிக் கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவளிக்காத 11 பேர் உள்ளிட்ட தரப்பினர் நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தனவின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சைனப் ஆரம்பப் பாடசாலைக்கு ஆளுநர் வருகை!

புத்தளம் சைனப் ஆரம்ப பாடசாலையின் முப்பெரும் விழா பாடசாலை அதிபர் யஹியா தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து புத்தளம் ஜெய்னப் பாடசாலைக்கு 22 லட்சம் ரூபா பெறுமதியான நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு, சிறுவர் விளையாட்டு நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தல் மற்றும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் செயற்திட்டத்தின் கீழ் BCMH நிறுவனத்தினால் கற்றல் உபகரணம் வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் கடந்த செவ்வாய்க்கிழமை (16) வெகு விமர்சையாக இடம்பெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதியாக வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், விசேட அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மற்றும் கௌரவ அதிதியாக புத்தளம் வலயக்கல்விப் பணிப்பாளர் அர்ஜுன ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆரம்ப பாடசாலையின் முக்கியத்துவம் மற்றும் அறிவார்ந்த சமூகத்தை கட்டியெழுப்ப ஆரம்ப பாடசாலை ஆற்றிவருகின்ற அர்ப்பணிப்பு குறித்து விரிவாக பேசிய வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், புத்தளம் மாவட்ட பாடசாலைகளின் துரித வளர்ச்சி பற்றியும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

மேலும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் செயற்திட்டத்திற்கு வடமேல் மாகாண ஆளுநர் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் ஜவ்ஷி ஜமால்தின், இணைப்புச் செயலாளர் எச். அமீர் அலி ஆசிரியர், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் உட்பட உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் அயல் பாடசாலையின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு
நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு

ஹிருணிகாவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறை

கடத்தல் வழக்கில் முன்னாள் எம்.பி ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்தத் தீர்ப்பை அறிவித்தார்.

தெமட்டகொட பகுதியிலுள்ள கடை ஒன்றில் பணிபுரிந்த அமில பிரியந்த அமரசிங்க எனும் இளைஞர் ஒருவரை 2015 டிசம்பர் 21ஆம் திகதி ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு சொந்தமான டிபெண்டர் வாகனத்தில் கடத்திய வழக்கு விசாரணை முடிவில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

29 குற்றங்கள் தொடர்பில் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் 8 பேரும் குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில், அச்சம்பத்திற்கு உதவி, ஒத்தாசை புரிந்ததாக ஹிருணிகா மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்திருந்தார்.

அத்தோடு, சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவின் ஆதரவாளர்கள் 8 பேர் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைதான ஐந்தாம் சந்தேகநபரின் மகள் அளித்துள்ள வாக்குமூலத்தில், தமது தாயாருடன் தொடர்பு பேணிய நபர் ஒருவரை தாம் காண்பித்ததாகவும், அவரை தமது தந்தையும் அவருடன் சென்றவர்களும் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு ஹிருணிகாவிடம் அழைத்துச் சென்றதாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

ஓவியப்போட்டியில் எருக்கலம்பிட்டி மாணவன் முதலாமிடம்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட வட மாகாண மானவர்களுக்கிடையிலான சித்திரப்போட்டியில் மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்றார்.

வீதி விபத்துக்கள் இல்லாத நாளைக்கான பாடசாலையிலிருந்து அணிவக்குப்போம் எனும் தொனிப்பொருளில் கடந்த வியாழக்கிழமை (13.06.2024) அன்று நடாத்தப்பட்ட வட மாகாண மாணவர்களுக்கிடையிலான குறித்த சித்திரப்போட்டியில் சுமார் 2600 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

சித்திரப்போட்டியில் பங்குபற்றிய 2600 மாணவர்களில் 250 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு நேற்றைய தினம் (15.06.2024) அவர்களுக்கான போட்டி இடம்பெற்றது.

நடைபெற்று முடிந்த இறுதிச் சுற்றுப்போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்று பெருமதிமிக்க பரிசில்களை பெற்றுக்கொண்டார்.

முதலாம் இடம் பெற்ற முஹம்மது ஹுசைன் என்ற மாணவனுக்கு சான்றிதல், துவிச்சக்கரவண்டி மற்றும் 8500/- ரூபா பெறுமதியான வவுச்சரும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இதேவேளை குறித்த போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய இல்முதீன் முஹம்மது ஹஸ்பான் 7 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய மற்றொரு மாணவரான முஹம்மது சம்ஹான் 8 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

பாரிய சாவல்களுக்கு மத்தியில் தனி ஒரு மனிதனாக இம் மாணாவர்களை ஊக்கப்படுத்தி, தயார்ப்படுத்தி போட்டியில் பங்குபெறச் செய்து வெற்றிபெறச் செய்த எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியின் சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் அவர்களின் இம் முயற்சிக்கு, பாடசாலை சமூகம் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் நன்றி தெரிவித்தனர்.

தமக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வந்து தேசிய அளவில் இடம்பெறும் போட்டிகளில் மாணவர்களை பங்குபெறச் செய்வதே தனது இலக்கு என சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் எமது ஊடகத்திற்கு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

புத்தளம் எருக்கலம்பிட்டியில் கடும் வெள்ளம்

புத்தளம் பகுதியில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக புத்தளம் பகுதி முழுதும் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.

புத்தளம், தில்லையடி, பாலாவி, புத்தளம் எருக்கலம்பிட்டி, ஹிதாயத் நகர்,  மதுரங்குளி மற்றும் ஏனைய பல கிராமங்களும் வெள்ளித்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமமும் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 1500 குடும்பங்கள் இங்கு வாழ்ந்துவருவதுடன், அனைத்து வீடுகளும் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நூற்றிற்கும் அதிகமான வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் ஐநூற்றுக்கும் அதிகமான வீடுகள் பகுதி அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8ஆம் திகதி ஏற்பட்ட மழை வெள்ளித்தினால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் மற்றும் பாடசாலைகளில் தற்காலிகமாக  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு தினங்களாக இவர்களுக்கான சமைத்த உணவுகள் மூன்று வேலைகளிலும் ஊர் தனவந்தர்களின் உதவியுடனும், பள்ளிவாசல் நிர்வாக சபையின் வழிகாட்டலுடனும் வழங்கப்பட்டு வருவதுடன், ஊர் மக்களுக்கும் உணவு விநியோகங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

இவர்களுக்கான நிவாரண உதவிகள் இதுவரை அரசாங்கத்தினால் வழங்கப்படாத போதிலும், ஊர் மக்களின் பங்களிப்புடன் மாத்திரமே பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு விநியோகங்கள் இதுவரை  வழங்கப்பட்டு வருகின்றது.

புத்தளம் பொத்துவில்லு பகுதியில் உள்ள குளம் மழை நீரினால்  பெருக்கெடுத்துள்ளதால் குறித்த குளத்து நீர் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமத்திற்குள் தொடர்ந்தும் மூன்றாவது நாளாக ஊடறுத்து செல்வதால் வீடுகள் தொடர்ந்தும் நீருள் மூழ்கியுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்தின் நிவாரண உதவிக்காக பல மக்கள் தொடர்ந்தும் எதிர்பார்த்து காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

உயர் நீதிமன்றம் சென்ற சட்டத்தரணிகள் சங்கம்!

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது விவகாரம்: 22வது திருத்தத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அதிரடி மனு!

அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள 22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) நேரடியாக உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளமை, தேசிய அரசியலிலும் நீதித்துறை வட்டாரங்களிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரினால் தயாரிக்கப்பட்டு, 2026 ஆகஸ்ட் 7ஆம் திகதியிட்ட விசேட வர்த்தமானி ஊடாக பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த சட்டமூலத்தின் செல்லுபடித்தன்மையை கேள்விக்குள்ளாக்கி இந்த விசேட தீர்மான மனு (Special Determination petition) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த புதிய திருத்தத்தின்படி, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் உத்தியோகபூர்வ ஓய்வுபெறும் வயதை 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 65 ஆகவும் மேலும் 2 வருடங்களால் உயர்த்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

எனினும், இந்த யோசனையானது நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பு மற்றும் நீதித்துறையின் சுயாதீனத்தன்மைக்கு சவால் விடுக்கக்கூடும் என வாதிடும் சட்டத்தரணிகள் சங்கம், இதனை சாதாரண பாராளுமன்ற நடைமுறைகள் ஊடாக மட்டும் நிறைவேற்றிவிட முடியாது என திட்டவட்டமாக சுட்டிக்காட்டியுள்ளது.

குறிப்பாக, இத்தகைய பாரிய அரசியலமைப்பு ரீதியான மாற்றங்களை மேற்கொள்வதற்கு, பாராளுமன்றத்தில் விசேட மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் மாத்திரம் போதாது என்றும், இது மக்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பிற்கு (Referendum) விடப்பட்டு மக்களின் நேரடி அங்கீகாரம் பெறப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்திடம் சட்டத்தரணிகள் சங்கம் கோரியுள்ளது. இதனால் இந்த விவகாரம் இப்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக முழு நாட்டின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பாராளுமன்றத்தில் அனல் பறந்த கார்ட்டூன் போராட்டம்!

பாராளுமன்றத்தை அதிரவைத்த கார்ட்டூன் போராட்டம்: 22வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு!

இலங்கை பாராளுமன்றத்தில் இன்று வழக்கத்திற்கு மாறாக பெரும் கூச்சல் குழப்பத்துடன் கூடிய பதற்றமான சூழ்நிலை ஒன்று திடீரென வெடித்தது. அரசாங்கத்தினால் சபைக்கு கொண்டுவரப்பட்ட 22வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சபையின் நடுவே இறங்கி காரசாரமான போராட்டத்தில் குதித்ததே இந்த அமைதியின்மைக்கு பிரதான காரணமாக அமைந்தது.

எதிர்ப்பின் உச்சக்கட்டமாக, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை மையப்படுத்தி ‘டெய்லி மிரர்’ நாளிதழில் பிரசுரிக்கப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரத்தை (Cartoon) பெரிய சுவரொட்டிகளாகக் கையில் ஏந்தியவாறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் ஆவேசமாக நின்றனர்.

அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள இந்த புதிய அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக அடுத்தடுத்து இடைவிடாது தொடர் கண்டனக் கோஷங்களை எழுப்பியவாறு அவர்கள் பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு கடும் இடையூறு விளைவித்தனர்.

குறிப்பாக, முன்மொழியப்பட்டுள்ள இந்த 22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலமானது, நீதிமன்றங்கள் திருத்தச் சட்டமூலத்துடன் இணைத்தே இன்றைய தினம் பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டது.

நீதிபதிகளின் உத்தியோகபூர்வ ஓய்வுபெறும் வயதை மேலும் அதிகரிப்பதை பிரதான நோக்கமாகக் கொண்டே இந்த இரண்டு முக்கிய சட்டமூலங்களும் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதற்கு எதிர்க்கட்சிகள் தமது கடுமையான எதிர்ப்பை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகின்ற நிலையில், இன்றைய தினம் இந்த விவகாரம் பாராளுமன்றத்தில் உச்சக்கட்ட பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்ற தீர்ப்பை முற்கூட்டியே அமைச்சர்கள் கணிப்பது எப்படி? – நாமல் காட்டம்!

“தீர்ப்பு நீதிமன்றத்தில் இருந்தா? அல்லது அமைச்சர்களிடமிருந்தா?” – நீதித்துறையின் சுயாதீனம் குறித்து நாமல் ராஜபக்ஷ காரசார கேள்வி!

நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்குவதற்கு முன்னரே, தான் சிறைக்குச் செல்லப்போவதாக தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் அமைச்சர்கள் எவ்வாறு முன்கூட்டியே கணிக்க முடியும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பகிரங்கமாக கேள்வி எழுப்பியுள்ளதுடன், இது அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் அவர் தேசிய மக்கள் சக்தி அமைச்சர்களை நோக்கி முன்வைத்துள்ள நேரடி கேள்வி பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. “நீதிமன்றம் இன்னும் தீர்ப்பையே அளிக்காத நிலையில், இன்னும் சில நாட்களில் நான் சிறைக்குச் செல்லப் போகிறேன் என்பதை இந்த அமைச்சர்கள் எப்படித் தெரிந்து வைத்திருக்கிறார்கள்? என்ற ஒரு எளிய கேள்வியை நான் அவர்களிடம் கேட்க விரும்புகிறேன்” என அவர் ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நில்லாமல், நாட்டின் நீதித்துறை கட்டமைப்பு மீதான தனது நிலைப்பாட்டை அவர் மிகத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார். நாட்டின் நீதித்துறை மீது தனக்கு அதீத நம்பிக்கை இருப்பதாகவும், நீதிமன்றம் வழங்கும் எந்தவொரு முடிவையும் தான் முழு மனதுடன் மதிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். “ஒரு வழக்கின் தன்மையை நீதிபதி முழுமையாக ஆராய்ந்து, சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டே இறுதித் தீர்ப்பை வழங்க வேண்டும்; அதுவே சரியான ஜனநாயக வழிமுறை” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும், நீதிமன்ற தீர்ப்புகள் வெளியாவதற்கு முன்னரே அமைச்சர்கள் இவ்வாறு பொறுப்பற்ற முறையில் பேசுவது, பொதுமக்களின் மனதில் தேவையற்ற சந்தேகங்களையும் குழப்பங்களையும் விதைக்கும் என அவர் எச்சரித்துள்ளார். “ஒரு வழக்கு முடிவடைவதற்கு முன்பே ஒருவர் சிறைக்குச் செல்வார் என்று ஆளும்கட்சி அமைச்சர்களே பகிரங்கமாக கூறினால், ‘நீதிமன்றம் என்ன தீர்மானிக்கப் போகிறது என்பதை இவர்கள் எப்படி முன்கூட்டியே அறிந்தார்கள்?’ என்ற கேள்வி மக்களுக்கு இயல்பாகவே எழும் அல்லவா?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இறுதியாக, இந்த விவகாரம் தன்னை மட்டும் தனிப்பட்ட ரீதியில் குறிவைப்பது பற்றியது அல்ல என்றும், ஒட்டுமொத்த நீதித்துறையின் சுயாதீனத் தன்மையைப் பாதுகாப்பது தொடர்பானது என்றும் அவர் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். “அரசியல் தலைவர்கள் ஒருபோதும் நீதிமன்ற தீர்ப்புகளை முன்கூட்டியே தீர்மானிக்கவோ, கணிக்கவோ கூடாது. எவ்வித அரசியல் அழுத்தங்களும் தலையீடுகளும் இன்றி நீதிமன்றங்கள் சுதந்திரமாக தங்களது பணிகளை முன்னெடுக்க அனுமதிக்கப்பட வேண்டும். இறுதித் தீர்ப்பு என்பது நீதிமன்றத்தில் இருந்து வர வேண்டுமே தவிர, அமைச்சர்களின் வாயிலிருந்து அல்ல” என நாமல் ராஜபக்ஷ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

சீருடை சர்ச்சை: சுகாதார அமைச்சருடன் முஸ்லிம் எம்.பி.க்கள் சந்திப்பு!

கல்முனை ஆதார வைத்தியசாலையில் புதிதாகப் பணியில் இணைந்த முஸ்லிம் சுகாதார உதவியாளர்களின் சீருடை விவகாரம் தற்போது புதிய அரசியல் மற்றும் சமூகத் தளத்தில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது. இப்பிரச்சினைக்கு நியாயமான மற்றும் நிலையான தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், எதிர்க்கட்சி முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கௌரவ சுகாதார அமைச்சரை நேரடியாகச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில், பாதிக்கப்பட்ட சுகாதார உதவியாளர்களின் தரப்பு நியாயங்கள் அமைச்சரின் கவனத்திற்கு மிக விரிவாகக் கொண்டு செல்லப்பட்டன.

குறிப்பாக, பாதிக்கப்பட்ட சுகாதார ஊழியர்களை வேறு வைத்தியசாலைகளுக்கு இடமாற்றம் செய்வதன் மூலம் இப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர முடியாது என்பதை நாடாளுமன்றக் குழுவினர் உறுதியாகச் சுட்டிக்காட்டினர். மாறாக, அவர்களது மத உணர்வுகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில், தேவைகளுக்குப் பொருத்தமான மாற்றுச் சீருடை நடைமுறையை உத்தியோகபூர்வமாக அனுமதிக்க வேண்டும் என்பதே இவர்களின் பிரதான கோரிக்கையாக அமைந்தது.

இச்சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் இணைந்து புத்தள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் N.T.M. தாஹிர், பாராளுமன்ற உறுப்பினர்களான M.L.A.M. ஹிஸ்புல்லாஹ், முஜிபுர் ரஹ்மான், இம்ரான் மஹரூப், M. நிஸாம் காரியப்பர், M.S. உத்துமாலெப்பை மற்றும் M.S. அப்துல் வாசித் ஆகியோர் கலந்துகொண்டு தமது நியாயமான கோரிக்கைகளை முன்வைத்தனர்.

நாடாளுமன்றில் 22ஆவது திருத்தச் சட்டமூலம்: அரசாங்கத்தின் அதிரடி!

இலங்கையின் நீதித்துறை கட்டமைப்பில் மிக முக்கியமானதொரு மாற்றத்தைக் கொண்டுவரும் நோக்கில், 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை அரசாங்கம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ள இந்த விசேட சட்டமூலத்தை, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சபையில் உத்தியோகபூர்வமாக சமர்ப்பித்துள்ளார். 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் நீதித்துறை சார்ந்த முக்கிய ஏற்பாடுகள் மற்றும் நீதித்துறை அமைப்பு சட்டத்தில் பாரிய திருத்தங்களைச் செய்வதற்கு இதன் மூலம் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போதைய நடைமுறையின்படி, உயர் நீதிமன்ற நீதியரசர்கள் 65 வயதிலும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் 63 வயதிலும் ஓய்வுபெற வேண்டும் என்ற விதியே அமலில் உள்ளது.

ஆனால், முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டமூலம் இந்த வயதெல்லையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் கோருகின்றது. அதன்படி, உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை 65 ஆகவும் திருத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதில் மிக முக்கிய அம்சமாக, பிரதம நீதியரசரின் பதவிக்கான விசேட நிபந்தனையொன்றும் உள்ளடக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் ஒருவர் தனது 67 வயதை அடையும் நாளிலோ அல்லது நியமிக்கப்பட்ட திகதியிலிருந்து 6 வருடங்கள் பூர்த்தியாகும் நாளிலோ—இவ்விரண்டில் எது முதலில் வருகின்றதோ அந்நாளில்—ஓய்வுபெற வேண்டும் என்ற புதிய விதி முன்வைக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றங்களில் பல வருடங்களாகத் தீர்க்கப்படாமல் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், சிரேஷ்ட மற்றும் அனுபவம் வாய்ந்த நீதியரசர்களின் நிபுணத்துவத்தை நாட்டுக்குத் தொடர்ந்தும் பெற்றுக்கொள்வதற்குமே இந்தத் திருத்தங்கள் கொண்டுவரப்படுவதாக அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.

“அப்பா ஒண்ணும் வாங்கி வரலியா?” – தந்தையின் நெஞ்சை உலுக்கும் பிஞ்சுக் குரல்!

வெற்றுப் பைகளும் புதைக்கப்பட்ட கனவுகளும்: ஒரு சாமானியனின் நரகப் பெருமூச்சு

விடியலின் முதல் வெளிச்சம் நம்பிக்கையை சுமந்து வர வேண்டும் என்பது இயற்கையின் நியதி. ஆனால் இன்றைய பொருளாதாரச் சூழலில், சூரியனின் ஒவ்வொரு விடியலும் நடுத்தர மற்றும் ஏழை குடும்பத் தலைவர்களின் இதயங்களில் ஒருவித இனம்புரியாத திகிலையும், அச்சத்தையுமே விதைத்துவிட்டுச் செல்கிறது. “இன்றைய நாள் செலவுகள் எவ்வளவாக அமையுமோ? எந்த எதிர்பாராத செலவு வாசலைத் தட்டிவிடுமோ?” என்ற பெருமூச்சுடனே ஒவ்வொரு நாளும் தொடங்குகிறது.

முன்பெல்லாம் காலங்கள் வேறு விதமாக இருந்தன. கைகளில் புழங்கிய சில நூறு ரூபாய்கள் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தைக் கட்டி மேய்த்தன. தந்தை உழைத்துக் கொண்டுவரும் சிறிய தொகையில், நான்கு பிள்ளைகளின் பாடசாலைப் பைகளில் சிற்றுண்டியும் காசும் தவழும். மாலையில் களைப்புடன் வீடு திரும்பும் பிள்ளைகளுக்குத் தேநீரும் சூடான கிம்புலா பனிசும் கிடைக்கும். இரவில் விளக்கொளியில் ஒரு துண்டு மீன் கறியோடு ஒட்டுமொத்தக் குடும்பமும் வட்டமாக அமர்ந்து பேசிய அந்தச் சிரிப்பொலிகள் இன்று எங்கே போயின? அந்தப் பொற்காலம் ஏழைகளின் வாழ்விலிருந்து நிரந்தரமாகத் திருடப்பட்டுவிட்டது. இன்று மீன் துண்டின் வாசனை கூட ஒரு ஆடம்பரமாகி, பழைய சோற்றுத் தண்ணீரில் உப்பு கரைத்து ஏப்பமிடும் அவலம்தான் எஞ்சி நிற்கிறது.

அத்தியாவசியப் பொருட்களின் தொடர் விலையேற்றமும் மறைமுக வரிகளும் குடும்பத் தலைவர்களின் தோள்களில் பாரமான மனச்சுமைகளை ஏற்றியுள்ளன

வேலைக்குக் கிளம்பும் ஒரு குடும்பத் தலைவனின் தோள்களில் பையை விட அதிகமாகத் தொங்குவது முடிவற்ற மனச்சுமைகள்தான்.

காலையில் கிழிந்த செருப்பை மாட்டிக்கொண்டு வேலைக்குக் கிளம்பும் ஒரு தகப்பனின் நடை ஒரு மனிதனின் நடை அல்ல; அது மரண தண்டனைக் கைதியின் பாரமான தப்படிகள். அவனது தோள்களில் தொங்கும் பழைய பையை விட, அவன் மனதை அழுத்தும் கேள்விகள் கொடூரமானவை. “இன்று பிள்ளைக்குத் தலைவலியோ காய்ச்சலோ வந்துவிட்டால் எங்கே போவது?”, “பாடசாலையில் புத்தகத்திற்கோ சீருடைக்கோ பணம் கேட்டுவிட்டால் என்ன செய்வது?”, “இந்த மாத கரண்ட் பில் சற்று அதிகமாக வந்தால் எந்தப் பொருளை விற்று அடைப்பது?”, “உடம்பு சரியில்லை என்று இரண்டு நாள் படுக்கையில் விழுந்துவிட்டால், இந்த நான்கு ஜீவன்களும் கஞ்சிக்கு எங்கே கையேந்தும்?”,

இந்தக் கேள்விகள் ஒவ்வொன்றும் அவன் நெஞ்சில் ஈட்டியாகப் பாய்கின்றன. குடும்ப உறவு ஒன்றின் திருமண அழைப்பிதழ் வாசலில் விழுந்தால் கூட, அந்தப் பரிசுக்கும் பயணத்திற்கும் வழியின்றி கூனிக்குறுகி, வாழ்த்த வேண்டிய தருணங்களை நினைத்து உள்ளூரச் சாகும் கொடுமை எந்த நரகத்திலும் இல்லாதது.

மாலையின் அந்தி சாயும் வேளை… அதுதான் இந்த பூலோக நரகத்தின் உச்சக்கட்டக் காட்சி.

வேலை முடிந்து, வியர்வையில் நனைந்து, சலித்துப் போன உடலோடு தெருமுனையில் நடந்து வரும் அந்தத் தகப்பனின் கண்கள் வீட்டின் வாசல் கதவையே பார்க்க அஞ்சுகின்றன. அங்கே, வாசற்படியில் நின்று கொண்டிருக்கும் அவனது ஐந்து வயதுச் சிறுமியின் கண்கள், தகப்பனின் முகத்தைப் பார்ப்பதற்கு முன்பாக அவன் கைகளைப் பார்க்கின்றன.

“அப்பா ஏதாவது வாங்கிட்டு வந்திருப்பாரா?” என்ற அந்தப் பிஞ்சின் ஏக்கப் பார்வை…

ஆனால், தகப்பனின் கைகள் வெறுமையாகத் தொங்குகின்றன. அந்தப் பிஞ்சு விரல்களுக்குக் கொடுக்க அவனிடம் ஒரு மிட்டாய் கூட இல்லை. தந்தையின் வெற்றுப் பைகளைப் பார்த்ததும், அந்தக் குழந்தையின் முகம் ஒரு கணம் சுருங்கி, ஏமாற்றம் தொண்டையை அடைக்க, வெடுக்கென முகத்தைத் திருப்பிக்கொண்டு உள்ளே ஓடும் அந்தக் காட்சி… எந்தவொரு தகப்பனின் உயிரையும் அந்த இடத்திலேயே உறைய வைத்துவிடும்.

தன் சொந்தப் பிள்ளைக்கு ஒரு மிட்டாயைக் கூட வாங்கிக் கொடுக்க முடியாத இந்த ஜென்மம் எதற்கு? இந்த ஏழை உடம்பில் இன்னும் எதற்காக இந்த மூச்சு ஓட வேண்டும்? தன் இயலாமையை ஒரு மூலையில் அமர்ந்து யாருக்கும் தெரியாமல் கண்ணீராகக் கரைக்கும் தகப்பனின் அழுகை, இந்தக் கல் நெஞ்சம் கொண்ட சமூகத்தின் காதுகளில் என்றுதான் கேற்கப்போகிறது?

அதிசயமும், கொடுமையும் என்னவென்றால் , அந்தப் பிள்ளைகளின் முதிர்ச்சிதான்.

பக்கத்து வீட்டுப் பிள்ளைகள் புது உடைகளுடனும், விதவிதமான பொம்மைகளுடனும் வீதியில் விளையாடும்போது, ஏழை வீட்டுப் பிள்ளை ஜன்னல் கம்பிகளுக்குப் பின்னால் நின்று ஏக்கமாகப் பார்க்கும். சினிமாவுக்கும் சுற்றுலாவுக்கும் சக தோழர்கள் செல்லும்போது, தன் தகப்பனின் காலியான பாக்கெட்டுகளையும், தாயின் கிழிந்த சேலையையும் பார்த்துவிட்ட அந்தப் பிஞ்சு, தன் ஆசைகளை அப்படியே உள்ளுக்குள் புதைத்துக் கொள்ளும். “எனக்கு அதெல்லாம் பிடிக்காதுப்பா, நான் போகல” என்று தகப்பனின் முகத்தைப் பார்த்து ஒரு போலிச் சிரிப்பை உதிர்க்கும் அந்தக் குழந்தையின் பக்குவம் இருக்கிறதே… அது ஒரு தந்தையின் நெஞ்சில் ஆயிரம் கத்திகளை ஒரே நேரத்தில் இறக்குவதற்குச் சமம்.

ஆசைகளைச் சுமக்க வேண்டிய வயதில், வறுமையின் பாரத்தைச் சுமந்து, மெளனமாக அழும் அந்தப் பிஞ்சுகளின் வாழ்க்கை எந்தப் பாவத்தின் தண்டனை? ஏழை வீட்டில் பிறப்பதே ஒரு சாபமா? இந்த உலகத்தில் ஏழை மனிதர்களுக்கு வாழ்க்கை என்பது வாழ்வதற்கானது அல்லவா?; ஒவ்வொரு நாளும் அவமானங்களையும் ஏமாற்றங்களையும் விழுங்கிவிட்டுச் செத்துப் பிழைக்கும் ஒரு தீராத யுத்தம். வறுமைக்கோட்டின் கீழ் புதைந்துபோன இந்த ஏழைக் கூட்டத்தின் உறைந்துபோன கண்ணீர்த் துளிகளுக்கு இந்த அதிகார வர்க்கத்திடம் என்றுதான் விடைகள் கிடைக்கப்போகிறதோ?

பணவீக்கமும் பொருளாதார நெருக்கடிகளும் வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல; அவை ஒவ்வொரு சாதாரண மனிதனின் நிம்மதியையும், ஒரு ஏழைக் குடும்பத்தின் சிரிப்பையும், ஏழைப் பிள்ளைகளின் சிறிய ஆசைகளையும் அன்றாடம் பறித்துக் கொண்டிருக்கும் நிஜமான யுத்தக் களம். இந்த நெருக்கடிகள் தணிந்து, உழைக்கும் ஒவ்வொரு கரத்திற்கும் உரிய நிம்மதியும் மகிழ்ச்சியும் மீண்டும் மலர வேண்டும் என்பதே ஒவ்வொரு சாமானியனின் தீராத பிரார்த்தனை.

“ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கும் ‘நிபுணர்கள்’ யார்?” – நாமல் கேள்வி!

நீதித்துறை சார்ந்த விவகாரங்களில் தமக்கு வழிகாட்டிய சிரேஷ்டர்கள் மற்றும் நிபுணர்களின் விபரங்களை ஜனாதிபதி உடனடியாக நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ சவால் விடுத்துள்ளார்.

பத்தரமுல்ல, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை அலுவலகத்தில் இன்று (17) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இந்த விடயங்களை காரசாரமாக முன்வைத்தார்.

நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை கேள்விக்குறியாக்கும் வகையில் ஜனாதிபதி தன்னிச்சையான தீர்மானங்களை மேற்கொண்டு வருவதாக சுட்டிக்காட்டிய நாமல் ராஜபக்ஷ, “நீதித்துறை விடயங்கள் குறித்து சிரேஷ்டர்கள் மற்றும் நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றதாக ஜனாதிபதி கூறுகிறார்; அப்படியானால் அவருக்குப் பின்னால் நின்று ஆலோசனை வழங்கும் அந்த நிபுணர்கள் யார் என்பதை நாடு அறிய விரும்புகிறது” எனத் தெரிவித்தார்.

உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் எழுந்துள்ள கடுமையான எதிர்ப்புகளையும் அவர் இதன் போது பட்டியலிட்டார். உள்நாட்டு சட்டத்தரணிகள் சங்கம், நீதிபதிகள் மட்டுமன்றி, பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் ஆசிய சட்டத்தரணிகள் சங்கம் வரை இந்த விவகாரத்தில் கடுமையான நிலைப்பாட்டையும் எதிர்ப்பையும் பதிவுசெய்துள்ள பின்னணியில், ஜனாதிபதி எதனை நோக்கி பயணிக்கிறார் என்பது புரியாத புதிராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம் ஜனாதிபதி மக்களின் கவனத்தை ஈர்க்க பிரயத்தனம் செய்கிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக குறிப்பிட்ட நாமல், “சிரேஷ்டர்களின் வழிகாட்டல்கள் தேவையில்லை என்று கூறி 159 புதிய நபர்களை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வந்த பின்னர், இப்போதுதான் அனுபவமுள்ள மனிதர்களின் தேவை உணரப்படுகிறதோ தெரியவில்லை” எனவும் தனது உரையில் விமர்சித்துள்ளார்.

2.67 கோடி கோவில் நகையை அடகு வைத்து கொட்டாஞ்சேனையில் காணி?

கொழும்பு கொம்பனித்தெரு பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க முருகன் ஆலயத்தில் இடம்பெற்றுள்ள பாரிய தங்க நகை மோசடி சம்பவம் ஒன்று தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆலயத்திற்குச் சொந்தமான சுமார் 26.7 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளைத் திருடியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், ஆலயத்தின் பிரதம குருக்களான சதீஸ்வரன் குருக்களுக்கு வெளிநாட்டுப் பயணத்தடையை விதித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பக்தர்களின் காணிக்கையாகவும், சுவாமி அலங்காரத்திற்காகவும் பாதுகாக்கப்பட்ட நகைகள் திடீரென மாயமானதைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளில், அதிர்ச்சி தரும் பல தகவல்கள் அம்பலமாகியுள்ளன.

குறித்த பிரதம குருக்கள் கோவில் நகைகளை இரகசியமாக அடகு வைத்து, அதன்மூலம் கிடைத்த பெருந்தொகைப் பணத்தைக் கொண்டு கொட்டாஞ்சேனை புதுச்செட்டித் தெருவில் பெறுமதியான சொத்து ஒன்றைக் கொள்வனவு செய்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

தற்போது இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், சந்தேகநபரான சதீஸ்வரன் குருக்கள் தலைமறைவாகி அதிகாரிகளிடமிருந்து தப்பித்து வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

காணாமல்போன புனித நகைகளை மீட்பதற்கும், குறித்த பணத்தில் வாங்கப்பட்ட சொத்துக்களைப் பரிசீலிப்பதற்கும் பொலிஸ் விசேட குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன. தலைமறைவாகியுள்ள சந்தேகநபரை வளைத்துப் பிடிக்க விரிவான தேடுதல் வேட்டைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

ரூ.5 லட்சம் பேரம் பேசி கஞ்சாவை பதுக்கிய 4 பொலிஸார் அதிரடி கைது!

சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய பொலிஸ் அதிகாரிகளே கஞ்சா வியாபாரியிடம் பல இலட்சம் ரூபாய் பேரம் பேசி, கைப்பற்றிய கஞ்சாவையும் பதுக்கிய அதிர்ச்சி சம்பவம் மொனராகலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 10ஆம் திகதி தணமல்வில, தெமோதர வௌ பகுதியிலுள்ள பாரிய கஞ்சா தோட்டமொன்றை மொனராகலை குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 6 பேர் கொண்ட பொலிஸ் குழுவினர் அதிரடியாக முற்றுகையிட்டுள்ளனர். எனினும், அந்த முற்றுகையின் பின்னணியில் நடந்த திரைமறைவு நாடகம் பொலிஸ் திணைக்களத்தையே உலுக்கியுள்ளது.

கஞ்சா தோட்டத்தை சோதனையிட்ட அதிகாரிகள், பெயரளவில் மிகச் சிறிய அளவிலான கஞ்சா பயிர்களை மாத்திரம் அழித்து நாடகமாடியுள்ளனர். எஞ்சிய பெருமளவிலான கஞ்சா பயிர்களை தங்களது வாகனங்களில் ஏற்றிக்கொண்டு தப்பியோடியதுடன், தோட்ட உரிமையாளரிடம் 5 இலட்சம் ரூபாய் கையூட்டல் (லஞ்சம்) வாங்கிக்கொண்டு அவரையும் அந்த இடத்திலேயே சுதந்திரமாக உலவவிட்டுள்ளனர்.

அத்துடன் நில்லாது, தாங்கள் எடுத்துச் சென்ற கஞ்சாவை விற்பனைக்கு தயார் செய்யும் நோக்கில், அதனை உலர்த்துவதற்காக ‘களு’ என அழைக்கப்படும் நபர் ஒருவரிடம் இரகசியமாக ஒப்படைத்ததும் விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.

ஆனால், இவர்களின் இந்த ‘கில்லாடி’ திட்டம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அரச புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து களமிறங்கிய தணமல்வில தலைமையக பொலிஸ் பரிசோதகர், கடந்த 11ஆம் திகதி கஞ்சா தோட்ட உரிமையாளரையும், கஞ்சாவை உலர்த்திய ‘களு’ என்பவரையும் அதிரடியாகக் கைது செய்து சிறையிலடைத்தார்.

நீதிமன்ற தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் அவ்விருவரிடமும் முன்னெடுக்கப்பட்ட அதிரடி விசாரணைகளில், பொலிஸ் அதிகாரிகளின் இந்த கூட்டுச் சதிப் பின்னணி முழுமையாக அம்பலமானது. இதனையடுத்து, இந்த மோசடியில் நேரடியாகப் பங்கெடுத்த இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள், ஒரு பொலிஸ் கொன்ஸ்டபிள் மற்றும் வாகன சாரதி ஆகிய நான்கு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

கண்டி நகரில் நாளை முதல் விசேட போக்குவரத்துத் திட்டம்!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கண்டி எசல பெரஹர உற்சவம் களைகட்டத் தொடங்கியுள்ள நிலையில், ஒட்டுமொத்த கண்டி நகரையும் உச்சக்கட்ட பாதுகாப்பு வலயத்திற்குள் கொண்டுவர இலங்கை பொலிஸார் தீர்மானித்துள்ளனர். நாளை (18) முதல் பெரஹர பருவகாலம் முடியும் வரை இந்த விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டம் முழுமையாக அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் கும்பல் பெரஹர நாளை ஆரம்பமாகி ஒகஸ்ட் 22ஆம் திகதி வரை வீதி உலா வரவுள்ளதுடன், வரலாற்றுச் சிறப்புமிக்க ரந்தோலி பெரஹர ஒகஸ்ட் 23ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை மிக விமரிசையாக இடம்பெறவுள்ளது.

நாடெங்கிலும் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், முன்னெப்போதும் இல்லாத வகையில் முப்படையினரின் ஒருங்கிணைப்புடன் பாரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு கடமைகளுக்காக 6,200 பொலிஸ் அதிகாரிகள், 564 விசேட அதிரடிப் படையினர் (STF), முப்படையைச் சேர்ந்த 1,200 வீரர்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் 29 பேர் என பெரும் படையணியே களமிறக்கப்பட்டுள்ளது. அத்துடன், எந்தவொரு சந்தேகத்திற்கிடமான நகர்வுகளையும் கண்டறிய பொலிஸ் மோப்ப நாய் பிரிவுகளும் முழுநேரக் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

நகரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கண்டி நகருக்குள் நுழையும் 14 முக்கிய நுழைவுப் புள்ளிகளை உள்ளடக்கி விசேட வீதி மறிப்புச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான வழிகாட்டல்களும் அதே இடத்தில் வழங்கப்படும்.

பெரஹரவை நேரில் கண்டு ரசிக்க வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக 13 பிரத்தியேக வாகன நிறுத்துமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் இலகு ரக வாகனங்களுக்காக 6 இடங்களும், கன ரக வாகனங்களுக்காக 7 இடங்களும் பிரிக்கப்பட்டு நெரிசலற்ற போக்குவரத்து முகாமைத்துவம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, பெரஹர காலப்பகுதியில் அவசியமின்றி கண்டி நகருக்குள் பிரவேசிக்காமல் பிற இடங்களுக்குப் பயணிக்கும் சாரதிகளின் நலன் கருதி, மாற்றுப் பாதைகளை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர். எனவே, சாரதிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புப் படையினரின் இந்த விசேட போக்குவரத்து நெறிப்படுத்தல்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு பொலிஸ் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.