Home Blog

நாகவில்லுவில் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ்வின் நினைவுதினம்!

பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று நாகவில்லுவில் இடம்பெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வு!

இலங்கை திருநாட்டில் பெளதீக ரீதியான பல வேலைத்திட்டங்களையும், இடம்பெயர்வு மற்றும் எல்லை நிர்ணயம் தொடர்பான பறந்துபட்ட அறிவினையும் கொண்டிருந்த எருக்கலம்பிட்டியை சேர்ந்த மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது வருட நினைவு தின நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

அந்த வகையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் நினைவுப் பேருரையும், புத்தக வெளியீடு நிகழ்வும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் ஏற்பாட்டில் நேற்று 25.08.2025 புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய அதிபர் ஜனாப் S.M. ஹுஸைமத் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், புத்தி ஜீவிகள் மற்றும் குடும்பத்தார்கள் கலந்தகொண்டமை விஷேட அம்சமாகும்.

சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் பொருளாளர் ஜனாப் ஏ.ஜி. அனீஸ் (Bsc.Agri) அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.

மேலும் இஸ்லாமிய கற்கை அறபு மொழிப் பீட, தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களினால் நூல் அறிமுக உரையும், நினைவுப் பேருரையும் மிகவும் உணர்வுபூர்வமாக நிகழ்த்தப்பட்டது.

கிழக்கு மற்றும் தென் கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பங்களிப்பு அளப்பெரியது என நினைவு கூறிய பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன், வடக்கில் ஏற்பட்ட யுத்தம் மற்றும் முஸ்லிம்களின் இடம்பெயர்வு குறித்து அதீத அக்கறையுடன் செயற்பட்ட மிக முக்கியமானவர் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்கள் எனவும் எடுத்துரைத்தார்.

வடக்கு முஸ்லிம்களின் இடம்பெயர்வு மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பில் அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களுடன் பலதரப்பட்ட கலந்துரையாடல்களை நடத்தி, சர்வதேசம் வரை இவ்விடயங்களை கொண்டுசென்ற மகான் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் என பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் தனது உரையில் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் புதல்வி சட்டத்தரணி எப்.சப்னா ஹஸ்புல்லாஹ் அவர்களினால் ஏற்புரை நிகழ்த்தப்பட்டதுடன், நூல் வெளியீடு நிகழ்வும் இடம்பெற்றது.

நூலின் முதற்பிரதியை ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தரும், புத்தளம் எருக்கலம்பிட்டி பள்ளிவாசல் நிர்வாக சபையின் முன்னாள் உறுப்பினருமான ஜனாப் ரஹ்மத்துல்லாஹ் (GS) அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

மேலும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் செயலாளர் ஜனாப் எஸ்.எச்.எம். றிஸ்னி அவர்களினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டதுடன், தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன், மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பாரியாருக்கும் நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில், பேராசிரியர்கள், கல்விமான்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், பாடசாலைச் சமூகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் குடும்பத்தார்கள் என பலரும் கலந்து சிறப்பித்ததுடன், ஈ நியூஸ் பெஸ்ட் ஊடக நிறுவனம் ஊடக அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரணிலுக்காக ஒன்று திரண்ட அரசியல் தலைவர்கள்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விசாரணை கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது, நாட்டின் அடிப்படை ஜனநாயக நிறுவனங்களின் வலிமை குறித்து கடுமையான கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் விளைவுகள் ஒரு தனிநபரின் அல்லது எந்தவொரு அரசியல் கட்சிகளின் தலைவிதியையும் விட, சமூகத்தின் உரிமைகளுக்கான பிரச்சினைகளை தோற்றிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் தலைவர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைகளை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது மற்றும் விளக்கமறியலை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து நடத்திய விசேட ஊடக சந்திப்பில் பங்கேற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரல முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் அறிக்கையை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

போர்த்துக்கல் அணி சாம்பியன் ஆனது!

‘நேஷன்ஸ் லீக்’ கால்பந்தில் போர்ச்சுகல் அணி சாம்பியன் ஆனது. பைனலில் ‘பெனால்டி ஷூட் அவுட்டில்’ 5-3 என ஸ்பெயினை வீழ்த்தியது.

ஐரோப்பிய கால்பந்து அணிகளுக்காக ‘நேஷன்ஸ் லீக்’ தொடர் நடத்தப்படுகிறது. மொத்தம் 54 அணிகள் பங்கேற்றன. நேற்று ஜெர்மனியின் முனிக் நகரில் நடந்த பைனலில், போர்ச்சுகல், நடப்பு யூரோ சாம்பியன் ஸ்பெயின் பலப்பரீட்சை நடத்தின. போட்டியின் 21வது நிமிடம் ஜுபிமெண்டி (ஸ்பெயின்), 26வது நிமிடம் மெண்டிஸ் (போர்ச்சுகல்) தலா ஒரு கோல் அடித்தனர். 45வது நிமிடம் மைக்கேல் ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் ஸ்பெயின் அணி 2-1 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் 61 வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். போர்ச்சுகல் அணிக்காக இவர் அடித்த 138வது கோல் இது. 90 நிமிட முடிவில் போட்டி 2-2 என சமன் ஆனது. அடுத்து நடந்த கூடுதல் நேரத்திலும் (30 நிமிடம்) இரு அணியும் கோல் அடிக்கவில்லை.

இதையடுத்து வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி ‘பெனால்டி ஷூட் அவுட்டுக்கு’ சென்றது. இரு அணிக்கும் தலா 5 வாய்ப்புகள் தரப்பட்டன. காயம் காரணமாக 88 வது நிமிடம் வெளியேறிய ரொனால்டோ, இதில் பங்கேற்கவில்லை.

முதல் 3 வாய்ப்பில் போர்ச்சுகலின் ராமோஸ், விடின்ஹா, பெர்ணான்டஸ் கோல் அடித்தனர். மறுபக்கம் ஸ்பெயின் தரப்பில் மெரினோ, பயேனா, இஸ்கோ கோல் அடிக்க 3-3 என ஆனது.

4வது வாய்ப்பில் மெண்டெஸ் (போர்ச்சுகல்) கோல் அடிக்க, ஸ்பெயினின் மோராட்டோ அடித்த பந்தை கோல் கீப்பர் டீகோ கோஸ்டா தடுத்து அசத்தினார்.

5வது வாய்ப்பில் நெவேஸ் கோல் அடித்தார். இதையடுத்து 5-3 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் ‘திரில்’ வெற்றி பெற்றது. 2019க்குப் பின் இத்தொடரில் மீண்டும் சாம்பியன் ஆனது.

தில்லையடியில் சிக்கிய கடத்தல் பீடி இலைகள்!

புத்தளத்தில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளுடன் வேன் ஒன்றும் பறிமுதல்!

இலங்கை கடற்படை, பொலிஸாருடன் இணைந்து, புத்தளம், தில்லையடி பகுதியில் 2025 ஜூன் 05 இரவு வேளையில் நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகள் கொண்ட ஒரு வேன் கைப்பற்றப்பட்டது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிறுவனம், புத்தளம் பொலிஸாருடன் இணைந்து தில்லையடி பகுதியில் நடத்திய இந்த சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்று சோதனை செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகளானது வாகனத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் வேன் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களால் ஆபத்தா?

விண்வெளியில் பூமியை சுற்றி வந்துக்கொண்டிருக்கும் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கொள்களை சீனா நினைத்தால் வெறும் 12 மணி நேரத்தில் தாக்கி அழித்துவிட முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் என்கிற செய்தி ஊடகத்தில் இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது தற்போது சீனா 99 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. இவை அனைத்தும் நான்ஜிங் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஆஸ்ட்ரோனாட்டிக்ஸ் பல்கலைக்கழகத்தின் விண்வெளிக் கட்டுப்பாட்டுத் துறையின் இயக்குநர் வூ யுன்ஹுவா தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இவை அனைத்தும் எலான் மஸ்கின் 1400 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை வெறும் 12 மணி நேரத்தில் காலி செய்துவிடும். சீன செயற்கைக்கோளில் லேசர், நுண் அலைகளை உருவாக்கும் கருவி, உளவு கருவிகள் பொருத்தப்பட்டிருக்கலாம். ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் வெறுமென நெட்வொர்க் கொடுக்க மட்டுமே பயன்படுத்தப்படுவதில்லை. தவிர, ராணுவ நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது என சீனா குற்றம்சாட்டி வருகிறது.

அதாவது, உக்ரைன்-ரஷ்யா போரில், உக்ரைன் படைகளுக்கு தகவல்கள் கொடுக்கவும், ரஷ்ய எல்லையை துல்லியமாக கண்காணிக்கவும் இந்த செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த 2022ம் ஆண்டு ரஷ்ய போரின்போது அப்போதைய உக்ரைனின் துணைப் பிரதமரான மைக்கைலோ ஃபெடோரோவ், “ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் சேவையை உடனடியாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த மஸ்க், “உடனடியாக சேவை வழங்கப்படும்” என்று கூறியிருந்தார்.

உக்ரைன் போருடன் மட்டுமே ஸ்டார்லிங்க் நிற்காது, நாளை சீனாவுக்கும்-தைவானுக்கும் பஞ்சாயது ஏற்பட்டால் அப்போதும், தைவானுக்கு சப்போர்ட் செய்ய ஸ்டார்லிங்க் வரும். எனவே இந்த கூட்டு நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்க சீனா இந்த புதிய செயற்கைக்கோள்களை உருவாக்கியிருக்கிறது.

கடந்த 2023ம் ஆண்டு இதற்கான பணிகளை சீனா தொடங்கியது. இந்த திட்டத்திற்கு ‘கியான்ஃபான் மெகா-விண்மீன் திட்டம்’ (Qianfan mega-constellation project) என்றும் பெயரிட்டிருந்தது. நோக்கம் உலகம் முழுவதும் இணைய தொடர்பை வழங்குவதாகும். இதற்காக மொத்தம் 15,000 சிறிய ரக செயற்கைக்கோள்களை ஏவ சீனா முடிவெடுத்தது. இதன் முதல் தொகுப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏவப்பட்டது. இதில் 18 செயற்கைக்கோள்கள் இருந்தன.

ஒவ்வொன்றும் சுமார் 300 கி.கி எடையில் இருந்தது. இவை பூமியிலிருந்து 800 கி.மீ உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டது. இதேபோன்று 2024 டிசம்பரில் அடுத்து இரண்டு தொகுதி ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. தற்போது மொத்தம் 99 செயற்கைக்கோள்கள் விண்வெளியில் இருக்கின்றன. 15,000 செயற்கைக்கோள்களை 3 கட்டங்களாக ஏவ இருக்கிறது. முதல் கட்டத்தில் 1,296 செயற்கைக்கோள்கள் ஏவப்படும். இதில் 648 செயற்கைக்கோள்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஏவப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் கன்னி உரை

அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்புவோம்

தேசியத்துவத்துடனும் ஐக்கியத்துடனும் ஒன்றுபட்டு நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க இன்று (23) காலை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

பதவிப் பிரமாணத்தின் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய முழுமையான உரை:

மக்களால் ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது நமது நாட்டின் ஜனநாயகத்திலிருக்கும் மிக முக்கியமான அம்சமாகும். தேர்தலில் வாக்களித்தல் மற்றும் ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதோடு ஜனநாயகம் நிறைவு பெறுவதில்லை. இது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சம் என்றாலும், நம் நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்த, கட்டமைப்புகளின் வலிமையும், சட்டங்களை வலுப்படுத்துவதும் அவசியம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனவே, எனது பதவிக்காலத்தில் இந்த நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.

அத்துடன், இந்த நாட்டில் ஜனநாயக முறையில் அதிகாரப் பரிமாற்றம் நடந்த வரலாறும் உண்டு. தேர்தலில் நிகழும் அதிகாரப் பரிமாற்றத்தை எந்தத் தலைவரும் நிராகரித்ததில்லை. அதற்கமைய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த மக்கள்ஆணையை சுமூகமாக ஏற்றுக்கொண்டதுடன், ஜனநாயக ரீதியில் அதிகாரத்தை கைமாற்றுவதற்கான அவரின் அர்ப்பணிப்பிற்கும் முன்னுதாரணத்திற்கும் நன்றி தெரிவிக்கிறேன். மேலும் எமக்கு கிடைப்பது மிகவும் சவால் நிறைந்த நாடு என்பதை நன்கு புரிந்து கொண்டிருக்கிறோம். நமது அரசியலில் தூய்மையான, மக்களால் எதிர்பார்க்கப்படும் சிறந்த அரசியல் கலாசாரத்திற்காக அவசியம் காணப்படுகிறது.அதற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

நம் நாட்டின் அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு நல்லெண்ணம் இல்லை. எனவே, அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் மீது மக்கள் மரியாதை மற்றும் நம்பிக்கையை மீட்டெடுக்க எங்கள் தரப்பிலிருந்து முடிந்த அனைத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.

மேலும், நமக்கு முன் இருக்கும் இந்த ஆழமான நெருக்கடியை வெறும் அரசோ, வெறும் அரசியல் கட்சியோ அல்லது ஒரு தனி நபரோ மட்டும் தீர்க்க முடியும் என்று நாங்கள் நம்பவில்லை. ஏனென்றால், நான் முன்பு கூறியது போல், நான் ஒரு மாயாஜால வித்தைக்காரனல்ல. நான் மந்திரவாதியும் இல்லை. நான் இந்த நாட்டின் சாதாரண குடிமகன். எம்மிடம் திறமைகள் உள்ளன. இயலாமைகளும் உள்ளன. தெரிந்த விடயங்களும் உள்ளன அதேபோன்று, தெரியாத விடயங்களும் உள்ளன.

ஆனால் திறமைகளைப் பயன்படுத்தி தெரியாதவற்றை சேகரித்துக்கொண்டு சிறந்த முடிவுகளை எடுத்து இந்த நாட்டை வழிநடத்துவதே எனது தலையாய பணியாகும். அந்த கூட்டுப் பங்களிப்பின் ஒரு அங்கமாக மாறுவது எனது பொறுப்பாகும். மேலும், இந்த நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதில் பொது மக்கள் மற்றும் அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் பாரிய பொறுப்பு உள்ளது. அந்தப் பொறுப்பை நிறைவேற்ற அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்.

ஆனால், நாட்டின் ஜனாதிபதி என்ற முறையில், இந்தப் பணியை முன்னின்று நடத்துவதில் எனக்கு முதன்மையான மற்றும் மிக முக்கியமான பொறுப்பு இருப்பதை நான் ஏற்றுக்கொண்டேன். எனவே, இந்தச் சவாலை வெற்றிகொள்வதற்காக எனக்குக் வழங்கப்பட்டுள்ள பணியை நான் உரிய முறையில் நிறைவேற்றுவேன் என்பதை செயற்பாடு மற்றும் நடைமுறை மூலம் எல்லா சந்தர்ப்பங்களிலும் இந்த நாட்டின் பிரஜைகளுக்கு வெளிப்படுத்த நான் தயாராக இருக்கிறேன்.

மேலும் நமது நாட்டுக்கு சர்வதேச ஆதரவு தேவை. எனவே, உலகில் எத்தகைய அதிகாரப் பிளவுகள் இருந்தாலும், ஒவ்வொரு நாட்டையும் எமக்கு மிகவும் சாதகமாக கையாள்வதே நமது எதிர்பார்ப்பாகும். நாம் உலகில் தனிமைப்படுத்தப்பட்ட நாடு அல்ல. உலகத்துடன் கூட்டாக முன்னேற வேண்டிய ஒரு நாடாகும். அது தொடர்பில் தேவையான முடிவுகளை எடுக்க நாங்கள் சிறிதும் தயங்குவதில்லை.

மேலும், நம் நாட்டைக் கட்டியெழுப்புவதில் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு பெரும் பங்கு உள்ளது. எனவே, நாட்டை மேலும் வலுவாகக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு அவர்கள் ஆதரவளிப்பார்கள் என நான் கருதுகின்றேன்.

நம் நாட்டின் ஜனநாயகத்தின் ஊடாக நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். அதற்காக மக்கள் எனக்கு வாக்களித்தனர்.

மேலும் எனக்கு வழங்கப்படாத வாக்குகளும் உள்ளன. எனவே, எங்களின் வெற்றியின் உள்ளடக்கம் மற்றும் அளவு குறித்து எங்களுக்கு நல்ல புரிதல் உள்ளது. எனவே, எங்களுக்கு ஆதரவு வழங்காத மற்றும் எங்களை நம்பாத பிரஜைகளின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெறுவதே எனது நிர்வாகத்தின் போது எனக்கு வழங்கப்பட்டுள்ள பணியாகும். அந்தப் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

எதிர்காலத்தில் இவை அனைத்தையும் நீங்கள் நடைமுறையில் கண்டுகொள்ள முடியும். அதற்கு அனைத்து மக்களின் ஆதரவையும் எதிர்பார்க்கின்றேன்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தேர்தலில் இவ்வாறுதான் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்

அதிகாரிகள் மற்றும் பிற தேவைகள் முடிந்த பிறகு, மாலை 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (19) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி பிற்பகல் 4.15 மணிளவில் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“எதிர்வரும் 21ம் திகதி வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள் பெறப்பட்டதும், அதிகாரிகள் மற்றும் இதர தேவைகள் முடிந்ததும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் இரவு 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

மாலை 4.15 மணிளவில் தபால் மூல வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

அத்துடன் மாவட்ட அளவில் ஒவ்வொரு வட்டாரத்திலும் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெறும்.

வாக்கு எண்ணிக்கையின் முடிவில் முடிவுகள் கிடைத்தவுடன் ஊடகங்களுக்கு வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையே முதலில் எண்ணப்படும்.

அந்தக் கணக்கெடுப்பின் பின்னர் (மாவட்ட அளவில் எண்ணும் பணி) முதலில் வாக்குப்பெட்டிகளில் உள்ள வாக்குகள் எண்ணப்படும்.

அதன் பிறகு, ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு, தொகுதி மற்றும் மாவட்ட அளவில் அது தயாரிக்கப்படுகிறது.

தேர்தல்கள் செயலகமே ஒட்டுமொத்த முடிவுகளைக் கணக்கிடும்.

எந்த வேட்பாளரும் 50 வீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்றுள்ளாரா என சரிபார்க்கப்படும்.

அப்படியானால், அந்த நேரத்தில் வாக்கு எண்ணும் பணிகள் நிறுத்தப்படும்.

அப்போது ஜனாதிபதியை நாங்கள் அறிவிப்போம்.

எந்த வேட்பாளருக்கும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் கிடைக்காவிடின், விருப்பு வாக்கு எண்ணிக்கைக்கு செல்ல வேண்டும்.

அங்கு, அதிக வாக்குகள் பெற்ற இரண்டு வேட்பாளர்கள் போட்டியில் வைத்து விட்டு  மீதமுள்ள 36 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து நீக்கப்படுவர்” என்றார்.

புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக மாறும்

புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வாத்தியாசலையாக மாற்றம் பெரும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று புத்தளத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ அலிசப்ரி ரஹீம் மற்றும் சிந்தக்க மாயாதுன்ன தலைமையில் புத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்திலே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

புத்தளம் மக்களின் நீண்ட நாள் தேவையாக இருந்து வருகின்ற புத்தளம் தல வைத்தியசாலையை தரமுயர்த்துவது தொடர்பாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ அலிசப்ரி ரஹீம் அவர்களினால் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோலுக்கிணங்க குறித்த வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.

மேலும் புத்தளத்தில் மீன் பிடி தொழிலை முன்னேற்றும் நோக்கத்தில் மீன் பிடி துறைமுகம் ஒன்றை அமைக்கும் யோசனையும் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டதுடன், அதற்கான முன்னெடுப்புகளும் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்டமை புத்தளம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நாட்டில் நிரந்தர பொருளாதார அபிவிருத்தியை நிலை நாட்ட தாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டை பொருளாதார அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவதே தனது பிரதான நோக்கம் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மொட்டுக்கட்சிக்கு எதிராக நிற்கும் முக்கிய அமைச்சர்கள்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக மொட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளரை இந்த வாரம் அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்காதிருக்கவும், மொட்டு சின்னத்தில் தனியாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமக்கு ஆதரவு வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பியிருந்த கடிதம் நேற்றைய தினம் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தினால் அரசியல் குழுவில் முன்வைக்கப்பட்டது.

எவ்வாறாயினும் அந்த கடிதத்தை நிராகரிக்க அரசியல் குழுக் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுவில் 82 பேர் அங்கம் வகிப்பதுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் 72 பேர் பங்கேற்றனர்.

இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த 11 பேர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

மஹிந்தானந்த அலுத்கமகே, பந்துல குணவர்தன, பிரதீப் உந்துகொட, கோகிலா ஹர்ஷனி குணவர்தன, சஹன் பிரதீப், ரமேஸ் பத்திரன, கஞ்சன விஜேசேகர, பிரசன்ன ரணதுங்க, கனக ஹேரத், மொஹான் பிரியதர்ஷன ஆகியோர் கட்சியின் சார்பில் தனியான வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

அத்துடன் பிறிதொரு கட்சியின் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்கும் உறுப்பினர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் யோசனைக்கு 6 பேர் எதிராக வாக்களித்துள்ளனர்.

எவ்வாறாயினும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் எனக் கூறப்பட்ட தம்மிக பெரேரா தொடர்பில் அரசியல் குழுக் கூட்டத்தின்போது எந்தவித கருத்துக்களும் பரிமாற்றிக் கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவளிக்காத 11 பேர் உள்ளிட்ட தரப்பினர் நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தனவின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சைனப் ஆரம்பப் பாடசாலைக்கு ஆளுநர் வருகை!

புத்தளம் சைனப் ஆரம்ப பாடசாலையின் முப்பெரும் விழா பாடசாலை அதிபர் யஹியா தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து புத்தளம் ஜெய்னப் பாடசாலைக்கு 22 லட்சம் ரூபா பெறுமதியான நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு, சிறுவர் விளையாட்டு நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தல் மற்றும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் செயற்திட்டத்தின் கீழ் BCMH நிறுவனத்தினால் கற்றல் உபகரணம் வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் கடந்த செவ்வாய்க்கிழமை (16) வெகு விமர்சையாக இடம்பெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதியாக வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், விசேட அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மற்றும் கௌரவ அதிதியாக புத்தளம் வலயக்கல்விப் பணிப்பாளர் அர்ஜுன ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆரம்ப பாடசாலையின் முக்கியத்துவம் மற்றும் அறிவார்ந்த சமூகத்தை கட்டியெழுப்ப ஆரம்ப பாடசாலை ஆற்றிவருகின்ற அர்ப்பணிப்பு குறித்து விரிவாக பேசிய வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், புத்தளம் மாவட்ட பாடசாலைகளின் துரித வளர்ச்சி பற்றியும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

மேலும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் செயற்திட்டத்திற்கு வடமேல் மாகாண ஆளுநர் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் ஜவ்ஷி ஜமால்தின், இணைப்புச் செயலாளர் எச். அமீர் அலி ஆசிரியர், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் உட்பட உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் அயல் பாடசாலையின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு
நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு

ஹிருணிகாவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறை

கடத்தல் வழக்கில் முன்னாள் எம்.பி ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்தத் தீர்ப்பை அறிவித்தார்.

தெமட்டகொட பகுதியிலுள்ள கடை ஒன்றில் பணிபுரிந்த அமில பிரியந்த அமரசிங்க எனும் இளைஞர் ஒருவரை 2015 டிசம்பர் 21ஆம் திகதி ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு சொந்தமான டிபெண்டர் வாகனத்தில் கடத்திய வழக்கு விசாரணை முடிவில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

29 குற்றங்கள் தொடர்பில் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் 8 பேரும் குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில், அச்சம்பத்திற்கு உதவி, ஒத்தாசை புரிந்ததாக ஹிருணிகா மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்திருந்தார்.

அத்தோடு, சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவின் ஆதரவாளர்கள் 8 பேர் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைதான ஐந்தாம் சந்தேகநபரின் மகள் அளித்துள்ள வாக்குமூலத்தில், தமது தாயாருடன் தொடர்பு பேணிய நபர் ஒருவரை தாம் காண்பித்ததாகவும், அவரை தமது தந்தையும் அவருடன் சென்றவர்களும் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு ஹிருணிகாவிடம் அழைத்துச் சென்றதாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

ஓவியப்போட்டியில் எருக்கலம்பிட்டி மாணவன் முதலாமிடம்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட வட மாகாண மானவர்களுக்கிடையிலான சித்திரப்போட்டியில் மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்றார்.

வீதி விபத்துக்கள் இல்லாத நாளைக்கான பாடசாலையிலிருந்து அணிவக்குப்போம் எனும் தொனிப்பொருளில் கடந்த வியாழக்கிழமை (13.06.2024) அன்று நடாத்தப்பட்ட வட மாகாண மாணவர்களுக்கிடையிலான குறித்த சித்திரப்போட்டியில் சுமார் 2600 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

சித்திரப்போட்டியில் பங்குபற்றிய 2600 மாணவர்களில் 250 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு நேற்றைய தினம் (15.06.2024) அவர்களுக்கான போட்டி இடம்பெற்றது.

நடைபெற்று முடிந்த இறுதிச் சுற்றுப்போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்று பெருமதிமிக்க பரிசில்களை பெற்றுக்கொண்டார்.

முதலாம் இடம் பெற்ற முஹம்மது ஹுசைன் என்ற மாணவனுக்கு சான்றிதல், துவிச்சக்கரவண்டி மற்றும் 8500/- ரூபா பெறுமதியான வவுச்சரும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இதேவேளை குறித்த போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய இல்முதீன் முஹம்மது ஹஸ்பான் 7 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய மற்றொரு மாணவரான முஹம்மது சம்ஹான் 8 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

பாரிய சாவல்களுக்கு மத்தியில் தனி ஒரு மனிதனாக இம் மாணாவர்களை ஊக்கப்படுத்தி, தயார்ப்படுத்தி போட்டியில் பங்குபெறச் செய்து வெற்றிபெறச் செய்த எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியின் சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் அவர்களின் இம் முயற்சிக்கு, பாடசாலை சமூகம் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் நன்றி தெரிவித்தனர்.

தமக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வந்து தேசிய அளவில் இடம்பெறும் போட்டிகளில் மாணவர்களை பங்குபெறச் செய்வதே தனது இலக்கு என சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் எமது ஊடகத்திற்கு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

புத்தளம் எருக்கலம்பிட்டியில் கடும் வெள்ளம்

புத்தளம் பகுதியில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக புத்தளம் பகுதி முழுதும் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.

புத்தளம், தில்லையடி, பாலாவி, புத்தளம் எருக்கலம்பிட்டி, ஹிதாயத் நகர்,  மதுரங்குளி மற்றும் ஏனைய பல கிராமங்களும் வெள்ளித்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமமும் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 1500 குடும்பங்கள் இங்கு வாழ்ந்துவருவதுடன், அனைத்து வீடுகளும் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நூற்றிற்கும் அதிகமான வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் ஐநூற்றுக்கும் அதிகமான வீடுகள் பகுதி அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8ஆம் திகதி ஏற்பட்ட மழை வெள்ளித்தினால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் மற்றும் பாடசாலைகளில் தற்காலிகமாக  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு தினங்களாக இவர்களுக்கான சமைத்த உணவுகள் மூன்று வேலைகளிலும் ஊர் தனவந்தர்களின் உதவியுடனும், பள்ளிவாசல் நிர்வாக சபையின் வழிகாட்டலுடனும் வழங்கப்பட்டு வருவதுடன், ஊர் மக்களுக்கும் உணவு விநியோகங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

இவர்களுக்கான நிவாரண உதவிகள் இதுவரை அரசாங்கத்தினால் வழங்கப்படாத போதிலும், ஊர் மக்களின் பங்களிப்புடன் மாத்திரமே பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு விநியோகங்கள் இதுவரை  வழங்கப்பட்டு வருகின்றது.

புத்தளம் பொத்துவில்லு பகுதியில் உள்ள குளம் மழை நீரினால்  பெருக்கெடுத்துள்ளதால் குறித்த குளத்து நீர் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமத்திற்குள் தொடர்ந்தும் மூன்றாவது நாளாக ஊடறுத்து செல்வதால் வீடுகள் தொடர்ந்தும் நீருள் மூழ்கியுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்தின் நிவாரண உதவிக்காக பல மக்கள் தொடர்ந்தும் எதிர்பார்த்து காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாடும் அஷ்ரஃபின் 26வது நினைவேந்தலும்!

முஸ்லிம் காங்கிரஸின் 32வது பேராளர் மாநாடும் அஷ்ரஃபின் 26வது நினைவேந்தலும் : அடுத்த கட்ட நகர்வுகள் தீவிரம்!

(எழுத்து : வை.அறபாத்)

இலங்கைச் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் முகவரியாகவும் அவர்களின் அரசியல் தன்னாதிக்கத்தின் குரலாகவும் திகழும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தனது வரலாற்றுச் சிறப்புமிக்க 32வது தேசிய பேராளர் மாநாட்டை இயக்கம் உதித்த காத்தான்குடி மண்ணில் எதிர்வரும் செப்டம்பர் 16ம் திகதி புதன்கிழமை நடாத்தவுள்ளது.

1981 செப்டம்பர் 21ல் காத்தான்குடியில் மர்ஹூம் அஹமத் லெப்பை சேர்மன் அவர்களின் தலைமையில் இயக்கமாகத் தோற்றுவிக்கப்பட்டு, பின்னர் 1986 நவம்பர் 26ல் கொழும்பு பாஷா விலா மண்டபத்தில் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்களால் அரசியல் கட்சியாக பிரகடனப்படுத்தப்பட்ட இக்கட்சி, இயக்கமாகி 45 ஆண்டுகளையும் அரசியல் கட்சியாகி 40 ஆண்டுகளையும் பூர்த்தி செய்யும் வரலாற்று மைல்கல்லில் கால்பதித்துள்ளது.

மர்ஹூம் தலைவர் அஷ்ரஃப் அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்த அதே வரலாற்று நாளான செப்டம்பர் 16 அன்றே, அவரின் 26வது நினைவேந்தலோடு இணைந்து இம்மாநாட்டை மீண்டும் காத்தான்குடியில் கூட்டுவது, தன் கடந்த கால வரலாற்றையும் எதிர்காலப் பாதையையும் சுயபரிசோதனை செய்து கொள்வதற்கான மிக முக்கியமானதொரு தருணமாகும்.

வரலாற்றுப் பின்னணியும் அஷ்ரஃபின் தீர்க்கதரிசனமும்

சுதந்திரத்திற்குப்பிறகு கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் தனக்கென ஒரு சுயசார்பான தேசிய அரசியல் முகவரியின்றி பிற கட்சிகளைச் சார்ந்திருந்த முஸ்லிம் சமூகத்தின் நிலையை, தலைவர் மர்ஹூம் அஷ்ரஃப் அவர்கள் “40 வருடங்கள் மலடாயிருந்த ஒரு தாய், பெரும் போராட்டத்திற்குப்பிறகு பெற்றெடுத்தக் குழந்தையாக இந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை தோற்றுவித்தார். இக்குழந்தையை நாம் பாதுகாத்துக் கொள்ளத் தவறினால் அல்லது இழந்து விடுவோமாக இருந்தால், மீண்டுமொரு குழந்தையைப் பெற்றெடுக்க இச்சமூகத்திற்கு இன்னும் எத்தனை தசாப்தங்கள் பிடிக்குமோ!” என்று உருக்கமாக உவமிப்பார்.

அஷ்ரஃப் அவர்களின் காலத்தில் கொடூரமான யுத்தமும் வடக்கு-கிழக்கில் முஸ்லிம்கள் எதிர்கொண்ட வெளியேற்றங்கள், உயிரிழப்புகள் மற்றும் நில இழப்புகள் போன்ற மிக மோசமான யதார்த்தங்களும் நிலவின. அன்றைய காலகட்டத்தில், தமிழ்த் தேசியப் போராட்டத்திற்கு ஈடுகொடுக்கவும் ஆட்சியைப் பிடிக்கவும் தென்னிலங்கை பெரும்பான்மை அரசியல் தலைமைத்துவத்திற்கு முஸ்லிம்களின் ஆதரவு அத்தியாவசியமாக இருந்தது.

அதனால் அஷ்ரஃபின் வீச்சுமிக்க ஆளுமையையும், முஸ்லிம்களின் சுயாதீனப் பேரம்பேசும் சக்தியையும் தேசியக்கட்சிகள் சகித்துக்கொண்டு, அரவணைத்துச் செல்ல வேண்டிய வரலாற்று நிர்ப்பந்தம் நிலவியது.

இவ்வாறாக, இலங்கை முஸ்லிம்களின் தேசிய அரசியல் எழுச்சி பெருந்தலைவர் அஷ்ரஃபின் தீர்க்கதரிசனமிக்க அரசியல் நகர்வுகளினாலும் கம்பீரமான குரலினாலும் உச்சக்கட்டத்தை எட்டியிருந்த ஒரு மிக முக்கியமான வரலாற்றுக் காலகட்டத்தில், 2000-ஆம் ஆண்டு செப்டம்பர் 16 அன்று அவரின் அந்த அகால மரணம் சம்பவித்தது.

பெருந்தலைவர் அஷ்ரஃப் அவர்களின் உயிர் பிரிந்த அதே செப்டம்பர் 16-ஆம் திகதியில், அவரின் பேரன்பிற்குரிய இயக்கத்தின் தேசிய பேராளர் மாநாடும் அதே மண்ணில் ஒருங்கிணைவது வெறுமனே திகதிகள் ஒத்துப்போகும் தற்செயல் நிகழ்வல்ல;

மாறாக, அவர் விட்டுச்சென்ற அரசியல் அமானிதத்தை அதே உத்வேகத்துடன் கையிலேந்தி நிற்கும் ஒரு உணர்வுபூர்வமான வரலாற்றுச் சங்கமமாகும்.

சவால்களுக்கு மத்தியில் ரவூப் ஹக்கீமின் தலைமைத்துவம்

மர்ஹூம் அஷ்ரஃப் அவர்கள் மரணிப்பதற்கு முன்பே, கட்சிப்பணிகளின் அயராத நெருக்குவாரங்களுக்கு மத்தியில் ரவூப் ஹக்கீம் தனக்கு எவ்வளவு பெரிய நம்பிக்கையாகவும் பலமாகவும் இருந்தார் என்பதை உணர்த்தும் வகையில், அன்று அவர் எழுதிய ‘தலைவர் குறிப்பில்’: “முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அயராத போராட்ட வேலைகளுக்கு மத்தியில் நமக்குக் கிடைக்கும் ஆறுதல்களோ மிகவும் அரிது. அவற்றில் ஒன்று தான் நமது கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் அவர்கள்” என்று நெகிழ்ச்சியோடு பதிவு செய்திருந்தார்.

அஷ்ரஃபின் திடீர் மறைவைத்தொடர்ந்து, கட்சிக்குள் உருவான பாரிய அரசியல் இடைவெளியும், உட்கட்சிப் பூசல்களும், ‘இணைத்தலைமை’ போன்ற சிக்கலான சோதனைகளும் இயக்கத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துப்பார்த்தன.

இத்தகைய புயல் வீசிய நெருக்கடிமிக்க சூழலில் தான், தலைவரை இழந்து தவித்த இயக்கத்தின் சுமையை ஏந்தி, அனைத்து எதிர்ப்புகளையும் மிக நிதானமாக எதிர்கொண்டு ரவூப் ஹக்கீம் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

இயக்கத்தின் பிளவுபடாத ஒருமைப்பாட்டைக் காத்து ஒற்றைத் தலைமையாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள அவர் எதிர்கொண்ட ஆரம்பகால இராஜதந்திரப் போராட்டங்கள் மிகவும் கனதியானவை.

தலைமைப் பொறுப்பேற்ற ரவூப் ஹக்கீமின் காலகட்டம், மிக மோசமான போரினதும் அதற்குப் பிந்தைய நுட்பமான அரசியல் மாற்றங்களினதும் இருவேறு சவால்களைத் தன்னுள் கொண்டதாகும். ஆரம்பத்தில் கொழுந்துவிட்டு எரிந்த போர்ச்சூழலுக்கு மத்தியிலும், 2009-இல் போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து உருவான முற்றிலும் புதிய வடிவிலான நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று.

போர் ஓய்ந்த பின்னர் தென்னிலங்கையில் மேலெழுந்த தீவிர இனவாதப்போக்குகள், ஹலால் விவகாரம், பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள், அளுத்கம, திகன அசம்பாவிதங்கள் மற்றும் கொவிட் கட்டாய ஜனாஸா எரிப்பு வரை முஸ்லிம்கள் மீது ஏவப்பட்ட சித்தாந்த ரீதியான நெருக்குவாரங்கள் அனைத்தையும், எவ்வித தீவிரப்போக்கிற்கும் இடமளித்துவிடாமல் நாட்டின் அரசியலமைப்புச் சட்டக் கட்டமைப்புக்குட்பட்டு நிதானத்துடனும் சமரசமின்றியும் கையாண்டு சமூகத்தின் பாதுகாப்பை உறுதிசெய்யும் திடமான பாத்திரத்தை அவர் திறம்பட முன்னெடுத்து வந்துள்ளார்.

சர்வதேச இராஜதந்திரமும் சட்டப்போராட்டங்களும்

முஸ்லிம்களின் தனித்துவ உரிமைகளுக்கான போராட்டத்தை பாராளுமன்ற ஜனநாயகத்திற்குள் நகர்த்தியதோடு நின்றுவிடாமல், தனது அபாரமான மும்மொழிப் புலமையைப் பயன்படுத்திச் சமூகத்தின் குரலை சர்வதேச ராஜதந்திர அரங்குகள் வரை எடுத்துச் சென்ற வீரியமிக்க ஆளுமையாக ரவூப் ஹக்கீம் திகழ்கிறார்.

முஸ்லிம்கள் மீது இனவாத நெருக்குவாரங்களும், கட்டாய ஜனாஸா எரிப்பு போன்ற மனித உரிமை மீறல்களும் ஏவப்பட்ட போதெல்லாம், ஐநா மனித உரிமைகள் பேரவை, சர்வதேசத் தூதரகங்கள் மற்றும் உலக முஸ்லிம் அமைப்புகளின் கவனத்திற்கு அவற்றைக் கொண்டுசென்று நீதிகோரினார்.

அதேவேளை, முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்கப்பால், ஒட்டுமொத்த இலங்கையின் ஜனநாயகப் பாதுகாப்பு, அரசியலமைப்பு வீழ்ச்சி மற்றும் சர்வாதிகாரப் போக்குகளுக்கெதிராகத் தெருவில் இறங்கிப் போராடவும் அவர் தயங்கியதில்லை.

பாராளுமன்றத்திலும் வீதிகளிலும் இறங்கி ஜனநாயகப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கிய அவரின் இந்த துணிச்சல்மிக்க ஆளுமை, முஸ்லிம் காங்கிரஸை வெறும் ஒரு சிறுபான்மை அமைப்பாக மட்டுமன்றி, தேசிய ஜனநாயகப் பாதுகாப்பின் முதன்மைத் தூணாகவும் உயர்த்திக் காட்டியது.

அரசியல் களத்தில் ஒரு சிறுபான்மைத் தலைவராக மட்டுமன்றி, தேசிய மட்டத்தில் ஊழலற்ற நேர்மையான அரசியலுக்கும், சட்டத்தின் ஆட்சியைப் பேணிக் காப்பதற்கும் முன்னின்ற ஒரு முற்போக்கான தேசியத் தலைவராகவும் ரவூப் ஹக்கீம் தனது தடத்தைப் பதித்துள்ளார்.

அரச அதிகாரத் துஷ்பிரயோகங்கள், அரசியலமைப்பு மீறல்கள் மற்றும் பொதுச்சொத்துகள் சூறையாடப்பட்ட ஊழல் விவகாரங்களுக்கெதிராக உச்ச நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் அவர் ஆற்றிய பாத்திரம் குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, அண்மைய காலத்தில் நாட்டிற்குப் பாரிய நிதி இழப்பையும் இறையாண்மைப் பாதிப்பையும் ஏற்படுத்தவிருந்த சர்ச்சைக்குரிய “ஈ-விசா” (e-Visa) முறைகேட்டிற்கெதிராக, எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து ஒரு சட்டத்தரணியாகவும் மக்கள் பிரதிநிதியாகவும் உச்ச நீதிமன்றத்தை நாடி, அந்த ஊழல் ஒப்பந்தத்தை இடைநிறுத்தச்செய்து நாட்டின் பில்லியன் கணக்கிலான நிதியை மீட்டெடுத்த இராஜதந்திர நடவடிக்கை இதற்குச் சிறந்த சான்றாகும்.

பல தசாப்தகால அமைச்சரவை மற்றும் நாடாளுமன்ற அனுபவங்களைக் கொண்டிருந்த போதிலும், எவ்வித ஊழல் கறைகளுமற்ற தூய்மையான அரசியல்வாதியாகவும், சட்டத்தின் மேலாதிக்கத்திற்கு மதிப்பளித்து நீதிமன்றங்கள் மூலம் தேசிய ரீதியிலான மாற்றங்களுக்கு வழிகோலிய சட்ட வல்லுநராகவும் அவர் நிமிர்ந்து நிற்பது, நாட்டின் தேசிய அரசியல் அரங்கில் அவருக்குரிய தனித்துவமான மரியாதையை உறுதிசெய்துள்ளது.

தலைமைத்துவச் சுமைகளும் தற்போதைய நெருக்கடிகளும்

ஒரு தேசிய இயக்கத்திற்குத் தலைமை தாங்குவது என்பது வெறும் பூமாலைகளையும் பாராட்டுக்களையும் பெறுவது மட்டுமல்ல.

மாறாக, கட்சிக்குள் எழும் அனைத்து புயல்களையும் தாங்கும் இடிதாங்கியாக நிற்பதுமாகும். தங்களின் சுய அரசியல் இலாபங்களுக்காகவும், கட்சி மாறி பதவிகளைப் பெற்றுக்கொள்ளவும் அரசுகளோடு இணைந்து கொள்ளும் சிலரின் சுயநலப் போக்குகளும், அதிகாரங்களைப் பெற்றுக்கொண்டு கட்சியை விட்டு விலகிச்செல்லும் சவால்களும் கட்சிக்குள் அடிக்கடி உருவெடுத்த போதிலும், ரவூப் ஹக்கீம் நிதானமிக்க அரசியல் ஆளுமையால் கட்சியைச் சிதையாமல் பாதுகாத்து வந்துள்ளார்.

இங்கு தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் அவர்கள் ஒருமுறை தனது கட்சிப்பொதுக்குழு உரையில் அங்கலாய்த்துப் பேசிய ஒரு வரலாற்றுச் சம்பவம் நினைவுக்கு வருகிறது:

“கட்சிக்கு நிதி திரட்டுவது முதல், கூட்டங்களை நடத்துவது, ஏச்சுப்பேச்சுக்களை வாங்குவது வரை அனைத்துப் பழிகளையும், சுமையையும் நானே சுமக்க வேண்டியிருக்கிறது” என அவர் வேதனையுடன் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிதர்சனமான நிலையைப் போலவே, இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலும் கட்சிக்கு நிதி திரட்டுவது முதல், கூட்டங்களை நடத்துவது, ஏச்சுப்பேச்சுக்களை வாங்குவது வரை ரவூப் ஹக்கீமே முன்னின்று சுமக்க வேண்டியுள்ளது.

கட்சிக்குள் யார் தவறு செய்தாலும், எந்தப் பின்னடைவு ஏற்பட்டாலும் தன் மீதே அத்தனை பழிகளையும் தாங்கிக்கொண்டு, இயக்கத்தின் இருப்புக்கும் சமூகத்தின் ஒட்டுமொத்தப் பாதுகாப்புக்கும் அரணாக நிற்கும் ஒரு தலைமையாகவே அவர் நிமிர்ந்து நிற்கிறார்.

இருப்பினும், இன்றைய அரசியல் சூழலில் தலைமைத்துவம் சந்திக்கும் சவால்கள் மிகவும் சிக்கலானவை. ஒருபுறம் சமூகப்பிரச்சினைகளுக்காக பாராளுமன்றத்திலும் வெளியிலும் குரல் எழுப்பும் போது “அரசியல் செய்கிறார்கள்” என்றும், மறுபுறம் இராஜதந்திர ரீதியாக நிதானத்தைக் கடைப்பிடிக்கும் போது “ஏன் அமைதியாக இருக்கிறார்” என்றும் இருமுனை விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

அரசியல் ஆதாயங்களுக்காகத் தலைமையின் நடவடிக்கைகளைத் தவறாகச் சித்தரிக்கும் எதிரணிகளின் பிரசாரங்களும், குறுகிய நோக்கம் கொண்ட சக முஸ்லிம் அரசியல் தரப்புகளின் நகர்வுகளும் சமூகத்தின் பேரம் பேசும் சக்தியைப் பலவீனப்படுத்தவே முயல்கின்றன.

இத்தகைய நெருக்கடிமிக்க சூழலில், அனைத்து ஏச்சுப் பேச்சுக்களையும் பழிகளையும் தன்மீது தாங்கிக்கொண்டு தேசிய இயக்கத்தைப் பாதுகாக்கும் தலைமையின் பாத்திரம் மிகவும் கனதியானது என்பதைச் சமூகம் உணர வேண்டியுள்ளது.

32வது மாநாடும் இளையோர் எதிர்காலமும்

இவ்வாறானதொரு பின்னணியில், காத்தான்குடியில் நடைபெறவுள்ள 32வது பேராளர் மாநாடு என்பது வெறும் வழக்கமான தீர்மானங்களை நிறைவேற்றும் அரசியல் கூட்டமாக மட்டும் அமைந்து விடக்கூடாது.

இன்றைய இளைய தலைமுறையினர் அரசியலின் ஆழமான யதார்த்தங்களையும், இலங்கை அரசியலின் வரலாற்று நுணுக்கங்களையும் சரியாகப் புரிந்து கொள்ளாமல், சமூக வலைதளங்களில் மேலெழுந்தவாரியாக முன்வைக்கப்படும் கவர்ச்சி வாதங்களினாலும் தேவையற்ற விமர்சனங்களினாலும் ஈர்க்கப்பட்டு ஒருவித அரசியல் மோகத்திற்குள் தள்ளப்படும் போக்கு அதிகரித்து வருகிறது.

உண்மைத் தன்மையை உணராமல், ஆழந்தெரியாமல் அவசரப்பட்டு இளைஞர்கள் எடுக்கும் உணர்ச்சிவசப்பட்ட முடிவுகள், ஒரு நீண்ட அரசியல் பயணத்தைக் கொண்ட கட்சிக்கும், ஒட்டுமொத்த சமூகத்தின் எதிர்காலத்திற்கும் பாரிய ஆபத்தாக முடிந்து விடக்கூடாது.

பெருந்தலைவர் அஷ்ரஃப் அவர்கள் எச்சரித்தது போல், 40 ஆண்டுகள் மலடாயிருந்து பெரும் போராட்டத்திற்குப்பின் பெற்றெடுத்த இந்த அரசியல் முகவரியை, இளையோர் தங்கள் அறியாமையினாலும் அவசரப்போக்கினாலும் இழக்க நேரிட்டால், அதன்பின் அழுது புலம்புவதிலோ வருந்துவதிலோ எந்தப்பயனும் இல்லை.

ஏனெனில், இழந்த பிறகு மீண்டுமொரு தேசிய முகவரியைப் பெற்றெடுப்பது என்பது இச்சமூகத்திற்குச் சாத்தியமற்ற ஒன்றாகவே மாறி விடும்.

எனவே, வெறும் உணர்ச்சிப் பெருக்குக்கு பலியாகாமல், இளைஞர்களுக்குச் சரியான அரசியல் விழிப்புணர்வையும் வழிகாட்டலையும் வழங்க வேண்டிய தார்மீகப்பொறுப்பு தாய் இயக்கமான முஸ்லிம் காங்கிரஸுக்கு உண்டு.

இளைஞர்களின் எழுச்சியையும் ஆற்றலையும் சரியான திசையில் திருப்பி, ‘Gen-Z’ தலைமுறையை முடிவெடுக்கும் முக்கிய இடங்களிலும், கட்சியின் முக்கிய பொறுப்புகளிலும் உள்வாங்கி, கட்சியின் எதிர்காலத்தையும் சமூகத்தின் பாதுகாப்பையும் தொலைநோக்கோடு கட்டியெழுப்புவதே இந்த 32வது பேராளர் மாநாட்டின் வரலாற்றுச்சிறப்புமிக்க கடமையாகவும், அஷ்ரஃபின் 26வது நினைவேந்தலுக்குச் செய்யும் உண்மையான நன்றிக்கடனாகவும் அமைய முடியும்.

சபாநாயகர் பதவி விலகுவாரா? தயாசிறி கடும் எச்சரிக்கை!

  • சபாநாயகருக்கு விழுந்த சட்டக்குருக்கு: பதவியை உடன் துறக்க தயாசிறி கடும் எச்சரிக்கை!
  • இலஞ்ச ஆணைக்குழுவில் சபாநாயகர் மீது விசாரணை: அரசியலமைப்பு ரீதியாக வெடித்த புதிய சர்ச்சை!
  • 7 வருட சிறைத்தண்டனைக்கு வழிவகுக்கும் ஊழல் தடுப்புச் சட்டம்: சபாநாயகர் பதவி விலகுவாரா?

இலங்கை அரசியலரங்கில் பெரும் பூகம்பத்தைக் கிளப்பும் வகையில், நாட்டின் கௌரவ சபாநாயகருக்கு எதிராக இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான தயாசிறி ஜயசேகர அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளார். இந்த சட்டச் சிக்கல்களின் பின்னணியில், சபாநாயகர் உடனடியாகத் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.

நேற்று (14) இடம்பெற்ற ‘தெரண 360’ அரசியல் கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இந்த அதிர்ச்சித் தகவலை அம்பலப்படுத்தினார். பாராளுமன்ற நிலையியல் கட்டளைகள் 29இன் கீழ் வரப்பிரசாதக் கேள்வியாக இதனை சபையில் தான் எழுப்பியதாகவும், தற்போது BC/0356/20/26 B 206 என்ற கோப்பு இலக்கத்தின் கீழ் சபாநாயகருக்கு எதிரான விசாரணைகள் ஆணைக்குழுவினால் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் அங்கு வெளிப்படுத்தினார்.

விசாரணை வளையத்துக்குள் சபாநாயகர் சிக்கியிருப்பது மாத்திரமன்றி, புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாரிய சட்ட முரண்பாடுகளும் அவருக்கெதிராக உருவாகியுள்ளன. குறிப்பாக, புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் 107(2) பிரிவின்படி, ஒரு அரச ஊழியர் அல்லது அதிகாரிக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ செல்வாக்கு செலுத்தக்கூடிய எந்தவொரு நடவடிக்கை அல்லது தீர்மானத்திலும் பங்கேற்கவோ வாக்களிக்கவோ முடியாது. சட்டத்தின் இந்த விதியை மீறிச் செயற்படுவது 10 இலட்சம் ரூபாய்க்கு மிகையாத அபராதம் அல்லது 7 ஆண்டுகள் வரையிலான கடூழிய சிறைத்தண்டனைக்கு வழிவகுக்கும் மிகக் கடுமையான குற்றமாகும்.

இத்தகைய இறுக்கமான சட்டச் சூழல் நிலவும் வேளையில்தான், அடுத்தடுத்த திடுக்கிடும் சம்பவங்கள் பாராளுமன்றில் அரங்கேறியுள்ளன. தனக்கு எதிராக விசாரணையை முன்னெடுத்து வரும் அதே இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் வருடாந்த வரவு செலவுத் திட்டத்தை, கடந்த 8ஆம் திகதி சபாநாயகரே நேரில் முன்வந்து பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். தன்மீதே விசாரணை நடத்தும் அமைப்பின் நிதி விவகாரங்களை சபாநாயகர் சமர்ப்பித்தமை அப்பட்டமான சட்டவிரோதம் என தயாசிறி ஜயசேகர காரசாரமாக சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்ட நெருக்கடி இத்துடன் முடிந்துவிடவில்லை. குறித்த ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உயர் உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் கொண்ட அரசியலமைப்புச் சபையின் தலைமைப் பொறுப்பிலும் சபாநாயகரே அமர்ந்துள்ளார். தன்னை விசாரிக்கும் அதிகாரிகளை நியமிக்கும் உயர்மட்ட சபையில் அவரே முடிவெடுக்கும் இடத்தில் இருப்பது, ஜனநாயகத்தின் அடிப்படை விதியான ‘நலன் முரண்பாட்டை’ (Conflict of interest) அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.

மேலும், தற்போது உயர் நீதிமன்ற பரிசீலனையில் உள்ள இலஞ்ச அல்லது ஊழல் ஆணைக்குழு திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், அரசியலமைப்பின் 79ஆவது பிரிவின்படி அதில் இறுதி அங்கீகாரக் கையொப்பத்தை இடவேண்டியவரும் சபாநாயகரே ஆவார். இத்தகைய சூழ்நிலையில், அவர் அந்தப் பொறுப்புகளில் தொடர்வது சட்டத்திற்குப் புறம்பானது என்பதுடன், சபாநாயகர் கதிரையில் அமர்வதற்கே அவருக்கு தார்மீக உரிமை இல்லை என சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர எச்சரித்துள்ளார்.

தான் சபாநாயகரை முன்கூட்டியே குற்றவாளியாகச் சித்தரிக்கவில்லை என்பதையும், விவகாரம் தற்போது விசாரணை மட்டத்திலேயே உள்ளது என்பதையும் தெளிவுபடுத்திய அவர், நாட்டில் தற்போது அமுலிலுள்ள கடுமையான சட்ட நிலவரங்களின்படி அவரால் இனி அந்த உயர் கதிரையில் ஒரு கணமும் நீடிக்க முடியாது என்றும், உடனடியாக இராஜினாமா செய்வதே அவருக்கு முன்னால் உள்ள ஒரே சட்டபூர்வ தெரிவு என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

கற்பிட்டியில் பரபரப்பு: இத்தாலி சுற்றுலாப் பயணியிடம் கைவரிசை!

  • கற்பிட்டி கடற்கரையில் நள்ளிரவு பரபரப்பு: இத்தாலி சுற்றுலாப் பயணியிடம் கைவரிசை காட்டிய மர்ம நபர்!
  • இத்தாலி பயணியின் பெறுமதியான உடமைகள் பறிப்பு: கற்பிட்டியில் அதிர்ச்சி சம்பவம்!
  • கடற்கரையில் உலா வந்த சுற்றுலாப் பயணிக்கு நேர்ந்த கதி: கற்பிட்டி பொலிஸார் தீவிர வலைவீச்சு!

ஜுட் சமந்த

இலங்கையின் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா நகரமான கற்பிட்டி, கந்தக்குளிய கடற்கரை பகுதியில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலி நாட்டிலிருந்து விடுமுறையைக் கழிப்பதற்காக வருகை தந்த பயணியே இவ்வாறு குற்றச்செயலொன்றுக்கு இலக்காகியுள்ளார்.

இத்தாலியின் பஜெட் (Paget) நகரைச் சேர்ந்த சாகனெல்லி மத்தியா (Zaganell Mattia) எனும் குறித்த வெளிநாட்டவர், கடந்த ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்துள்ளதுடன், இம்மாதம் 17ஆம் திகதி வரை தங்கியிருக்க திட்டமிட்டிருந்தார். கற்பிட்டி, கந்தக்குளிய பகுதியிலுள்ள சுற்றுலா விடுதியொன்றில் தங்கியிருந்த இவர், அன்றைய இரவு வேளையை அமைதியாக கழிக்க எண்ணியுள்ளார்.

கடந்த 13ஆம் திகதி இரவு 9.00 மணியளவில், கந்தக்குளிய கடற்கரையின் குளுமையான காற்றில் அவர் தனியாக உலாவிக்கொண்டிருந்த அந்த அமைதியான தருணத்தில்தான், இருளைப் பயன்படுத்திப் பாய்ந்து வந்த மர்ம நபர் ஒருவர் அவரது தோள்பையை (Side bag) கண் இமைக்கும் நேரத்தில் பலவந்தமாகப் பறித்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளார்.

திடீர் தாக்குதலால் அதிர்ச்சியடைந்த சுற்றுலாப் பயணிக்கு என்ன நடக்கிறது என்பதை உணர்வதற்குள் அந்த மர்ம நபர் கடற்கரை மணலில் மறைந்து தப்பியோடிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பையினுள் சுமார் 1,000 யூரோ பெறுமதியான உயர்தர கைக்கடிகாரம், 10,000 இலங்கை ரூபாய் பணம், கண்கண்ணாடி மற்றும் சுற்றுலா வழிகாட்டி கையேடு என்பன இருந்ததாக பொலிஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட இத்தாலி நாட்டுப் பயணி கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்ட அந்த மர்ம நபரை அடையாளங்கண்டு கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் முடுக்கிவிட்டுள்ளனர்.

புத்தளம் வீதியில் விபத்து: லொறியுடன் மோதி பொலிஸ் சார்ஜன்ட் மரணம்!

  • புத்தளம் வீதியில் கோர விபத்து: லொறியுடன் மோதி பொலிஸ் சார்ஜன்ட் பரிதாப மரணம்!
  • கொழும்பு நோக்கி கொண்டுசெல்லப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் நடுவழியில் உயிரிழப்பு: மதுரங்குளியவில் சோகம்!
  • கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்: புத்தளம் பிரதான வீதியில் நடந்த விபரீதம்!

ஜுட் சமந்த

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் நேற்றிரவு (14) இடம்பெற்ற மிக மோசமான விபத்தொன்றில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மதுரங்குளிய நகருக்கு அண்மித்த பகுதியில் இரவு 8.00 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜா-எல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த புத்தளம், சாலியவெவ பகுதியைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜன்ட் பண்டார (இல: 73287) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். கொழும்பில் இருந்து புத்தளம் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த எதிர்பாராத விபரீதம் நிகழ்ந்துள்ளது.

திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், முன்னால் பயணித்துக் கொண்டிருந்த லொறியின் வலது பக்கப் பகுதியில் பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர மோதலில் மோட்டார் சைக்கிள் சவாரி செய்த பொலிஸ் சார்ஜன்ட் மிகக் கடுமையான காயங்களுக்கு உள்ளானார்.

உடனடியாகச் செயற்பட்ட அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் மேலதிக தீவிர சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

துரதிர்ஷ்டவசமாக, நோயாளர் காவு வண்டியில் கொழும்பு நோக்கி கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்த போது, மாரவில பகுதியை அண்மித்த வேளையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது சடலம் தற்போது மாரவில ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ள மதுரங்குளிய பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள், விபத்துடன் தொடர்புடைய லொறியைக் கைப்பற்றியுள்ளதுடன் அதன் சாரதியையும் கைது செய்து தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வீதியில் கவிழ்ந்தது சிலாபம் தீயணைப்பு வாகனம்!

  • தீயை அணைக்கப் பறந்த வேளையில் விபரீதம்: வீதியில் கவிழ்ந்தது சிலாபம் தீயணைப்பு வாகனம்!
  • ஆராச்சிக்கட்டுவவில் பரபரப்பு: உயிர்களைக் காக்க முற்பட்டு நிலைகுலைந்த தீயணைப்புப் படை!
  • அதிவேகப் பயணத்தில் திடீர் திருப்பம்: சிலாபத்திலிருந்து முந்தல் நோக்கிச் சென்ற மீட்பு வாகனத்திற்கு நேர்ந்த கதி!

ஜுட் சமந்த

முந்தல் பகுதியில் கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்கும் அவசரப் பணிக்காகச் சீறிப்பாய்ந்து சென்ற தீயணைப்பு வாகனமொன்று, நடுவழியில் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிலாபம் நகர சபைக்குச் சொந்தமான தீயணைப்பு வாகனம், இன்று (14) நண்பகல் முந்தல் நோக்கி விரைந்துகொண்டிருந்த வேளையில், ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தை அண்மித்த பகுதியில் வைத்து திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து வீதியிலேயே தலைகீழாகக் கவிழ்ந்துள்ளது.

வீதியில் அஜாக்கிரதையாகவும் ஆபத்தான முறையிலும் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றையும் சிறிய ரக லொறி ஒன்றையும் மோதிவிடக் கூடாது என்பதற்காக, தீயணைப்பு வாகனத்தின் சாரதி உடனடியாகத் திருப்பியுள்ளார். மற்றவர்களின் உயிரைக் காப்பாற்ற எடுத்த இந்தத் துரித முயற்சியின் போது, வாகனம் நிலைகுலைந்து வீதியில் புரண்டது.

வாகனம் மிக மோசமாக விபத்துக்குள்ளான போதிலும், தீயணைப்புப் படையினர் நல்வாய்ப்பாக எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பியுள்ளமை பெரும் நிம்மதியை அளித்துள்ளது. இச்சம்பவம் குறித்து ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மு.கா. தேசியப் பட்டியல் எம்.பி. எம்.எஸ். அப்துல் வாஹித் ராஜினாமா!

  • பாராளுமன்றத்தில் திடீர் திருப்பம்: மு.கா. தேசியப் பட்டியல் எம்.பி. எம்.எஸ். அப்துல் வாஹித் ராஜினாமா!
  • இன்றோடு பதவி காலியானது: பாராளுமன்ற செயலாளர் நாயகம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அவசர கடிதம்!
  • அரசியல் களத்தில் அதிரடி மாற்றம்: வெற்றிடமான பத்தாவது பாராளுமன்றத்தின் ஆசனம்!

இலங்கை பாராளுமன்ற அரசியலில் மற்றொரு பரபரப்பான திருப்பம் அரங்கேறியுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான எம்.எஸ். அப்துல் வாஹித், தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.

அவரது இந்த அதிரடி பதவி விலகல் தொடர்பான தீர்மானம் இன்றைய தினம் (14) முதலே உடனடியாக நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன தேர்தல் ஆணைக்குழுவிற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதனையடுத்து, பத்தாவது பாராளுமன்றத்தின் உறுப்பினர் ஆசனங்களில் ஒன்று உத்தியோகபூர்வமாக வெற்றிடமாகியுள்ளது. 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64(5) ஆம் பிரிவின் விதிகளுக்கு அமைவாக, இந்த வெற்றிடம் குறித்த தகவல் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளருக்கு முறைப்படி எழுத்துமூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

திடீரென ஏற்பட்டுள்ள இந்த வெற்றிடத்தால் முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரத்திலும் பாராளுமன்ற அரசியலிலும் அடுத்த நகர்வுகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. அடுத்ததாக இந்த தேசியப் பட்டியல் ஆசனத்தை அலங்கரிக்கப் போகும் புதிய முகம் யார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் அரங்கில் தற்போது மேலோங்கியுள்ளது.

தேசிய அபாகஸ் மேடையில் எருக்கலம்பிட்டி மாணவன் அயான் வரலாற்று சாதனை!

  • தேசிய அபாகஸ் மேடையில் மின்னல் வேகக் கணிதம்: எருக்கலம்பிட்டி மாணவன் அயான் அஹமத் வரலாற்று சாதனை!
  • கொழும்பில் நடந்த தேசிய கணிதப் போர்: இரண்டாம் இடத்தைத் தட்டிச் சென்று கிராமத்திற்கே பெருமை சேர்த்த தரம் 4 சிறுவன்!
  • விரல் நுனியில் மாயாஜாலம்: தேசிய ரீதியில் முத்திரை பதித்த எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலய மாணவன்!

கண்ணிமைக்கும் நேரத்தில் எண்களோடு விளையாடி, கணிதத்தை விரல் நுனியில் கொண்டுவந்து தேசிய மேடையில் பிரமிக்க வைத்துள்ளார் பு/எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தரம் 4 இல் கற்கும் அனஸ் அயான் அஹமத்.

இலங்கையில் 2001 ஆம் ஆண்டு அபாகஸ் கல்வி முறையை முதன்முதலில் அறிமுகம் செய்துவைத்த முன்னோடி நிறுவனமான காமா அபாகஸ், அண்மையில் கொழும்பு 7 இல் அமைந்துள்ள ஜே.ஆர். ஜயவர்தன கலாசார மத்திய நிலையத்தில் தேசிய ரீதியிலான பிரமாண்ட அபாகஸ் போட்டியை ஏற்பாடு செய்திருந்தது. இந்தியாவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் காமா அபாகஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் கே. நாகுலநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வு, அரங்கையே பரபரப்பாக்கியது.

நாட்டின் பல்வேறு மூலைகளிலிருந்தும் இயங்கும் 40க்கும் மேற்பட்ட பயிற்சி மையங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான திறமைசாலிகள் இப்போட்டியில் களமிறங்கினர். போட்டியாளர்களின் வயது மற்றும் பயிற்சி நிலைகளை அடிப்படையாகக் கொண்டு 40 கடுமையான பிரிவுகளாகப் போட்டிகள் நடத்தப்பட்டன.

அந்தக் கடுமையான போட்டிச் சூழலிலும், பு/எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தரம் 4 இல் கற்கும் அனஸ் அயான் அஹமத் என்ற சிறுவன் தனது அபார நினைவாற்றலாலும் மின்னல் வேகக் கணக்கீட்டுத் திறனாலும் நடுவர்களையே திரும்பிப் பார்க்க வைத்தார். கடும் சவால்களுக்கு மத்தியில் தேசிய ரீதியில் 2ஆம் இடத்தைப் (1st Runner Up) பெற்றுத் தனது பாடசாலைக்கும் கிராமத்திற்கும் பெருமை தேடித்தந்துள்ளார்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்குச் சம்பியன், உப சம்பியன் கிண்ணங்களும், பங்குபற்றிய அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்ட நிலையில், கிராமத்திற்குத் திரும்பிய சாதனை நாயகன் அயான் அஹமத்திற்குப் பாடசாலையில் உற்சாகமான வரவேற்பும் பாராட்டு நிகழ்வும் நடத்தப்பட்டது.

அதிபர், ஆசிரியர்கள், சக மாணவர்கள் மற்றும் ஊர்மக்கள் அனைவரும் திரண்டு வந்து இந்த இளம் கணித மேதைக்குத் தங்களின் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் தேசிய பூங்காக்கள் அடுத்தடுத்து மூடப்படும் அபாயம்!

  • சுட்டெரிக்கும் வெயில்: இலங்கையின் தேசிய பூங்காக்கள் அடுத்தடுத்து மூடப்படும் அபாயம்!
  • வனவிலங்குகளுக்கு ஆபத்து: யாலவுக்குப் பின் மற்ற பூங்காக்களுக்கும் பூட்டு? அதிரடி முடிவு!
  • 420 கோடி வருமானமா? வனவிலங்கு பாதுகாப்பா? கடும் வறட்சியால் நெருக்கடியில் இலங்கை சுற்றுலா!

இலங்கையில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை மற்றும் நீடித்த வறட்சி காரணமாக வனவிலங்குகள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றன. எல்-நினோ காலநிலைக் காரணியால் வெப்பநிலை தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில், நாட்டின் ஏனைய தேசிய பூங்காக்களையும் தற்காலிகமாக மூட வேண்டிய நிலை ஏற்படலாம் என வனஜீவராசிகள் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.

ஏற்கனவே புகழ்பெற்ற யால தேசிய பூங்காவின் பிரதான பகுதிகளான வலயம் 1 மற்றும் 2 ஆகியவை செப்டெம்பர் 14 முதல் ஒக்டோபர் 15 வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. எனினும், சுற்றுலாப் பயணிகளின் வருகைக்காக வலயம் 3, 4, 5 மற்றும் 6 ஆகியவை தொடர்ந்து திறக்கப்பட்டுள்ளன. கடும் வறட்சியால் வனவிலங்குகளுக்கும் அவற்றின் வாழ்விடங்களுக்கும் ஏற்படும் கடுமையான அழுத்தத்தைக் குறைப்பதே இந்த நடவடிக்கையின் பிரதான நோக்கமாகும்.

நீடித்த உஷ்ணத்தால் உலர் வலயக் காடுகளில் உள்ள இயற்கை நீர்நிலைகள் மிக வேகமாக வற்றி வருகின்றன. இதனால் காட்டுயிர்கள் குடிநீரைத் தேடி அலையும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இயற்கையான வெப்பநிலையைக் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், வனப்பகுதிகளுக்குள் அவசர நீர் விநியோகம் மற்றும் அவசியமான உதவிகளை வழங்கி விலங்குகளைப் பாதுகாக்க விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மறுபுறம், நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய பங்களிப்பைச் செய்யும் வனவிலங்கு சுற்றுலாத்துறை உச்சத்தில் இருக்கும் வேளையிலேயே இந்த காலநிலை அச்சுறுத்தல் எழுந்துள்ளது. உத்தியோகபூர்வ தரவுகளின்படி, 2026 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் வரையிலான முதல் ஆறு மாதங்களில் மட்டும் 13 இலட்சத்துக்கும் அதிகமான உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் பூங்காக்களுக்கு வருகை தந்துள்ளனர். இதன்மூலம் 4.27 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான (ரூ. 4,279,609,307.37) வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக யால பூங்கா ஒன்றே 4.59 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து, சுமார் 2.10 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டித் தந்துள்ளது. மேலும் உடவளவை பூங்கா 927.5 மில்லியன் ரூபாவையும், மின்னேரியா 297.9 மில்லியன் ரூபாவையும், ஹோட்டன் சமவெளி 264.3 மில்லியன் ரூபாவையும் வருவாயாகப் பெற்றுத் தந்துள்ளன. மொத்த வருமானத்தில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளிடமிருந்தே 4.06 பில்லியன் ரூபா கிடைத்துள்ளது.

இலங்கையில் உள்ள 23 தேசிய பூங்காக்களில் பெரும்பாலானவை வறண்ட வலயங்களிலேயே அமைந்துள்ளதால், தற்போதைய வறண்ட பருவகாலம் வனவிலங்கு நிர்வாகத்திற்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது. ஒருபுறம் கோடிக்கணக்கான சுற்றுலா வருவாய், மறுபுறம் அழிவை நோக்கிச் செல்லும் வனவிலங்குகளின் பாதுகாப்பு என்ற இக்கட்டான சூழ்நிலையில், வருமானத்தை விட நாட்டின் பல்லுயிர் பாதுகாப்பிற்கே முன்னுரிமை வழங்கப்படும் என வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

விவசாயப் பேரணியில் விவசாய அமைச்சரும் பிரதியமைச்சரும் எங்கே?

  1. பொலன்னறுவையில் பரபரப்பு: அரசின் முதல் விவசாயப் பேரணியை புறக்கணித்தாரா விவசாய அமைச்சர்?
  2. அரசாங்கத்தின் 2 வருட நிறைவுப் பேரணி: விவசாய அமைச்சரும் பிரதியமைச்சரும் எங்கே? தீவிரமடையும் அரசியல் சலசலப்பு!
  3. நெல் பூமியில் விவசாய மாநாடு; மேடையில் இல்லாத அமைச்சர் லால் காந்த: உடைபடும் பின்னணி!

அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்று தனது முதலாவது இரண்டு ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்யும் தறுவாயில், நாடளாவிய ரீதியில் மக்களை நேரில் சந்தித்து மாவட்ட ரீதியிலான பேரணிகளை ஆரம்பித்திருக்கின்றது. இதன் ஆரம்பப் புள்ளியாக நாட்டின் நெற்களஞ்சியமான பொலன்னறுவையில் ஏற்பாடு செய்யப்பட்ட அரசின் முதலாவது பிரமாண்ட விவசாயப் பேரணியே தற்போது கொழும்பு அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் பிரதான நெல் உற்பத்தி மாவட்டமான பொலன்னறுவை, அண்மைக்காலமாக உற்பத்திப் பொருட்களுக்குரிய நியாயமான சந்தை வாய்ப்புகள் வழங்கப்படவில்லை எனக் கூறி விவசாயிகள் பலத்த எதிர்ப்புக் குரல்களைப் பதிவு செய்துவந்த ஒரு களம். நிலைமை இவ்வாறிருக்க, விவசாயிகளுக்கான அரசின் இந்தக் கன்னிப் பேரணியில் துறைசார் விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்தவோ அல்லது பிரதியமைச்சர் நாமல் கருணாரத்னவோ கலந்துகொள்ளாமல் தவிர்த்தமை அரசியல் ஆய்வாளர்கள் மத்தியிலும் விவசாய சமூகத்திடமும் கடுமையான சலசலப்பைத் தோற்றுவித்துள்ளது.

இந்த சர்ச்சைக்குரிய புறக்கணிப்பு குறித்து பிரதியமைச்சர் நாமல் கருணாரத்னவிடம் வினவியபோது, அவர் அதனை மிகச் சாதாரணமாகக் கடந்துசெல்ல முயன்றார். “நாங்கள் அனைவரும் அங்கு செல்ல வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை; ஆனால் அந்தப் பேரணிக்கு எமது தரப்பிலிருந்து பூரண ஆதரவை நாம் வழங்கியிருந்தோம்” என்று சுருக்கமாகக் கூறி நிலைமையைச் சமாளித்தார்.

அதேவேளை, பொலன்னறுவை தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துவதும், அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் செயலாளருமான வீடமைப்புப் பிரதியமைச்சர் டி.பி. சரத் இந்தப் பின்னணியை வேறு ஒரு கோணத்தில் தெளிவுபடுத்தினார். தமது தேர்தல் தொகுதியில் பேரணியை ஒழுங்கமைக்கும் பிரதான பொறுப்பைத் தாமே வகித்ததால், விவசாய அமைச்சரோ அல்லது பிரதியமைச்சரோ வருகை தருவது குறித்துப் பெரியளவில் கவனம் செலுத்தப்படவில்லை எனவும், அடுத்தடுத்து பல பேரணிகள் நாடளாவிய ரீதியில் வரிசையாகத் திட்டமிடப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், விவசாயிகள் விரக்தியிலிருக்கும் பிராந்தியத்திற்குத் துறைசார் தலைமை அமைச்சர்கள் வருகை தராதது வெறும் தற்செயலான நிகழ்வா அல்லது விவசாயிகளின் நேரடி எதிர்ப்பைத் தவிர்ப்பதற்கான முன்யோசனையா என்ற விவாதங்கள் இணைய ஊடகங்கள் எங்கும் தீவிரமாகப் பேசப்பட்டு வருகின்றன.

துபாயில் தகர்ந்த இலங்கை மகளிரின் ஆசியக் கிண்ணக் கனவு!

துபாயில் விறுவிறுப்பாக இடம்பெற்ற மகளிர் ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 தொடரின் இறுதிப் போட்டியில், பலம் வாய்ந்த இலங்கை அணியை 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய மகளிர் அணி சம்பியன் கிண்ணத்தை மீண்டும் தம்வசப்படுத்தியுள்ளது.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டி டுபாயில் நேற்று (13) இடம்பெற்றது. 

நாணயச் சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்து, ஆடுகளத்திற்குள் இறங்கிய கணம் முதலே அதிரடி காட்டியது. தொடக்க வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா ஜோடி, இலங்கை பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து வாணவேடிக்கை காட்டியது.

ஷபாலி வர்மா வெறும் பந்துகளில் 68 ஓட்டங்களையும், துணையாக ஆடிய ஸ்மிருதி மந்தனா 59 ஓட்டங்களையும் மின்னல் வேகத்தில் திரட்டி வலுவான அடித்தளமிட்டனர். எனினும், இவர்களின் ஆட்டமிழப்புக்குப் பின் களமிறங்கிய ஏனைய இந்திய வீராங்கனைகளால் அதே வேகத்தைத் தக்கவைக்க முடியவில்லை.

ஆரம்ப துடுப்பாட்டக் கூட்டணிகளைப் பிரித்த கையோடு துல்லியமான பந்துவீச்சை வெளிப்படுத்திய இலங்கை வீராங்கனைகள், இந்திய அணியின் ஓட்ட வேகத்தை மிக நேர்த்தியாகக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். பந்துவீச்சில் மிதாலி அயோதா, சமரி அத்தபத்து மற்றும் சமுதி பிரபோதா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்த, இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 183 ஓட்டங்களைப் பதிவு செய்தது.

இதனையடுத்து, 184 என்ற கடினமான சவால்மிக்க இலக்கை நோக்கி ஆடுகளம் புகுந்த இலங்கை மகளிர் அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய அணியின் திட்டமிட்ட பந்துவீச்சு மற்றும் சிறப்பான களத்தடுப்பை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி, சீரான இடைவெளியில் திணறியது.

இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவடைவதற்குள் சகல விக்கெட்டுகளையும் தாரைவார்த்த இலங்கை அணி, வெறும் 111 ஓட்டங்களுக்குள் சுருண்டு தோல்வியைத் தழுவியது. இதன்மூலம் 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்த இந்திய மகளிர் அணி, ஆசியாவின் முடிசூடா ராணிகளாகக் கிண்ணத்தை வானுயர ஏந்தியது.