Tuesday, July 28, 2026
Sponsored advertisementspot_img
Home Blog

நாகவில்லுவில் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ்வின் நினைவுதினம்!

பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று நாகவில்லுவில் இடம்பெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வு!

இலங்கை திருநாட்டில் பெளதீக ரீதியான பல வேலைத்திட்டங்களையும், இடம்பெயர்வு மற்றும் எல்லை நிர்ணயம் தொடர்பான பறந்துபட்ட அறிவினையும் கொண்டிருந்த எருக்கலம்பிட்டியை சேர்ந்த மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது வருட நினைவு தின நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

அந்த வகையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் நினைவுப் பேருரையும், புத்தக வெளியீடு நிகழ்வும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் ஏற்பாட்டில் நேற்று 25.08.2025 புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய அதிபர் ஜனாப் S.M. ஹுஸைமத் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், புத்தி ஜீவிகள் மற்றும் குடும்பத்தார்கள் கலந்தகொண்டமை விஷேட அம்சமாகும்.

சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் பொருளாளர் ஜனாப் ஏ.ஜி. அனீஸ் (Bsc.Agri) அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.

மேலும் இஸ்லாமிய கற்கை அறபு மொழிப் பீட, தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களினால் நூல் அறிமுக உரையும், நினைவுப் பேருரையும் மிகவும் உணர்வுபூர்வமாக நிகழ்த்தப்பட்டது.

கிழக்கு மற்றும் தென் கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பங்களிப்பு அளப்பெரியது என நினைவு கூறிய பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன், வடக்கில் ஏற்பட்ட யுத்தம் மற்றும் முஸ்லிம்களின் இடம்பெயர்வு குறித்து அதீத அக்கறையுடன் செயற்பட்ட மிக முக்கியமானவர் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்கள் எனவும் எடுத்துரைத்தார்.

வடக்கு முஸ்லிம்களின் இடம்பெயர்வு மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பில் அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களுடன் பலதரப்பட்ட கலந்துரையாடல்களை நடத்தி, சர்வதேசம் வரை இவ்விடயங்களை கொண்டுசென்ற மகான் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் என பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் தனது உரையில் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் புதல்வி சட்டத்தரணி எப்.சப்னா ஹஸ்புல்லாஹ் அவர்களினால் ஏற்புரை நிகழ்த்தப்பட்டதுடன், நூல் வெளியீடு நிகழ்வும் இடம்பெற்றது.

நூலின் முதற்பிரதியை ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தரும், புத்தளம் எருக்கலம்பிட்டி பள்ளிவாசல் நிர்வாக சபையின் முன்னாள் உறுப்பினருமான ஜனாப் ரஹ்மத்துல்லாஹ் (GS) அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

மேலும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் செயலாளர் ஜனாப் எஸ்.எச்.எம். றிஸ்னி அவர்களினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டதுடன், தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன், மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பாரியாருக்கும் நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில், பேராசிரியர்கள், கல்விமான்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், பாடசாலைச் சமூகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் குடும்பத்தார்கள் என பலரும் கலந்து சிறப்பித்ததுடன், ஈ நியூஸ் பெஸ்ட் ஊடக நிறுவனம் ஊடக அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரணிலுக்காக ஒன்று திரண்ட அரசியல் தலைவர்கள்!

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விசாரணை கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது, நாட்டின் அடிப்படை ஜனநாயக நிறுவனங்களின் வலிமை குறித்து கடுமையான கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் விளைவுகள் ஒரு தனிநபரின் அல்லது எந்தவொரு அரசியல் கட்சிகளின் தலைவிதியையும் விட, சமூகத்தின் உரிமைகளுக்கான பிரச்சினைகளை தோற்றிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் தலைவர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைகளை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது மற்றும் விளக்கமறியலை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து நடத்திய விசேட ஊடக சந்திப்பில் பங்கேற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரல முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் அறிக்கையை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

போர்த்துக்கல் அணி சாம்பியன் ஆனது!

0

‘நேஷன்ஸ் லீக்’ கால்பந்தில் போர்ச்சுகல் அணி சாம்பியன் ஆனது. பைனலில் ‘பெனால்டி ஷூட் அவுட்டில்’ 5-3 என ஸ்பெயினை வீழ்த்தியது.

ஐரோப்பிய கால்பந்து அணிகளுக்காக ‘நேஷன்ஸ் லீக்’ தொடர் நடத்தப்படுகிறது. மொத்தம் 54 அணிகள் பங்கேற்றன. நேற்று ஜெர்மனியின் முனிக் நகரில் நடந்த பைனலில், போர்ச்சுகல், நடப்பு யூரோ சாம்பியன் ஸ்பெயின் பலப்பரீட்சை நடத்தின. போட்டியின் 21வது நிமிடம் ஜுபிமெண்டி (ஸ்பெயின்), 26வது நிமிடம் மெண்டிஸ் (போர்ச்சுகல்) தலா ஒரு கோல் அடித்தனர். 45வது நிமிடம் மைக்கேல் ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் ஸ்பெயின் அணி 2-1 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் 61 வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். போர்ச்சுகல் அணிக்காக இவர் அடித்த 138வது கோல் இது. 90 நிமிட முடிவில் போட்டி 2-2 என சமன் ஆனது. அடுத்து நடந்த கூடுதல் நேரத்திலும் (30 நிமிடம்) இரு அணியும் கோல் அடிக்கவில்லை.

இதையடுத்து வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி ‘பெனால்டி ஷூட் அவுட்டுக்கு’ சென்றது. இரு அணிக்கும் தலா 5 வாய்ப்புகள் தரப்பட்டன. காயம் காரணமாக 88 வது நிமிடம் வெளியேறிய ரொனால்டோ, இதில் பங்கேற்கவில்லை.

முதல் 3 வாய்ப்பில் போர்ச்சுகலின் ராமோஸ், விடின்ஹா, பெர்ணான்டஸ் கோல் அடித்தனர். மறுபக்கம் ஸ்பெயின் தரப்பில் மெரினோ, பயேனா, இஸ்கோ கோல் அடிக்க 3-3 என ஆனது.

4வது வாய்ப்பில் மெண்டெஸ் (போர்ச்சுகல்) கோல் அடிக்க, ஸ்பெயினின் மோராட்டோ அடித்த பந்தை கோல் கீப்பர் டீகோ கோஸ்டா தடுத்து அசத்தினார்.

5வது வாய்ப்பில் நெவேஸ் கோல் அடித்தார். இதையடுத்து 5-3 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் ‘திரில்’ வெற்றி பெற்றது. 2019க்குப் பின் இத்தொடரில் மீண்டும் சாம்பியன் ஆனது.

தில்லையடியில் சிக்கிய கடத்தல் பீடி இலைகள்!

0

புத்தளத்தில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளுடன் வேன் ஒன்றும் பறிமுதல்!

இலங்கை கடற்படை, பொலிஸாருடன் இணைந்து, புத்தளம், தில்லையடி பகுதியில் 2025 ஜூன் 05 இரவு வேளையில் நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகள் கொண்ட ஒரு வேன் கைப்பற்றப்பட்டது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிறுவனம், புத்தளம் பொலிஸாருடன் இணைந்து தில்லையடி பகுதியில் நடத்திய இந்த சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்று சோதனை செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகளானது வாகனத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் வேன் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களால் ஆபத்தா?

விண்வெளியில் பூமியை சுற்றி வந்துக்கொண்டிருக்கும் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கொள்களை சீனா நினைத்தால் வெறும் 12 மணி நேரத்தில் தாக்கி அழித்துவிட முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் என்கிற செய்தி ஊடகத்தில் இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது தற்போது சீனா 99 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. இவை அனைத்தும் நான்ஜிங் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஆஸ்ட்ரோனாட்டிக்ஸ் பல்கலைக்கழகத்தின் விண்வெளிக் கட்டுப்பாட்டுத் துறையின் இயக்குநர் வூ யுன்ஹுவா தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இவை அனைத்தும் எலான் மஸ்கின் 1400 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை வெறும் 12 மணி நேரத்தில் காலி செய்துவிடும். சீன செயற்கைக்கோளில் லேசர், நுண் அலைகளை உருவாக்கும் கருவி, உளவு கருவிகள் பொருத்தப்பட்டிருக்கலாம். ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் வெறுமென நெட்வொர்க் கொடுக்க மட்டுமே பயன்படுத்தப்படுவதில்லை. தவிர, ராணுவ நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது என சீனா குற்றம்சாட்டி வருகிறது.

அதாவது, உக்ரைன்-ரஷ்யா போரில், உக்ரைன் படைகளுக்கு தகவல்கள் கொடுக்கவும், ரஷ்ய எல்லையை துல்லியமாக கண்காணிக்கவும் இந்த செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த 2022ம் ஆண்டு ரஷ்ய போரின்போது அப்போதைய உக்ரைனின் துணைப் பிரதமரான மைக்கைலோ ஃபெடோரோவ், “ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் சேவையை உடனடியாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த மஸ்க், “உடனடியாக சேவை வழங்கப்படும்” என்று கூறியிருந்தார்.

உக்ரைன் போருடன் மட்டுமே ஸ்டார்லிங்க் நிற்காது, நாளை சீனாவுக்கும்-தைவானுக்கும் பஞ்சாயது ஏற்பட்டால் அப்போதும், தைவானுக்கு சப்போர்ட் செய்ய ஸ்டார்லிங்க் வரும். எனவே இந்த கூட்டு நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்க சீனா இந்த புதிய செயற்கைக்கோள்களை உருவாக்கியிருக்கிறது.

கடந்த 2023ம் ஆண்டு இதற்கான பணிகளை சீனா தொடங்கியது. இந்த திட்டத்திற்கு ‘கியான்ஃபான் மெகா-விண்மீன் திட்டம்’ (Qianfan mega-constellation project) என்றும் பெயரிட்டிருந்தது. நோக்கம் உலகம் முழுவதும் இணைய தொடர்பை வழங்குவதாகும். இதற்காக மொத்தம் 15,000 சிறிய ரக செயற்கைக்கோள்களை ஏவ சீனா முடிவெடுத்தது. இதன் முதல் தொகுப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏவப்பட்டது. இதில் 18 செயற்கைக்கோள்கள் இருந்தன.

ஒவ்வொன்றும் சுமார் 300 கி.கி எடையில் இருந்தது. இவை பூமியிலிருந்து 800 கி.மீ உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டது. இதேபோன்று 2024 டிசம்பரில் அடுத்து இரண்டு தொகுதி ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. தற்போது மொத்தம் 99 செயற்கைக்கோள்கள் விண்வெளியில் இருக்கின்றன. 15,000 செயற்கைக்கோள்களை 3 கட்டங்களாக ஏவ இருக்கிறது. முதல் கட்டத்தில் 1,296 செயற்கைக்கோள்கள் ஏவப்படும். இதில் 648 செயற்கைக்கோள்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஏவப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் கன்னி உரை

0

அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்புவோம்

தேசியத்துவத்துடனும் ஐக்கியத்துடனும் ஒன்றுபட்டு நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க இன்று (23) காலை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

பதவிப் பிரமாணத்தின் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய முழுமையான உரை:

மக்களால் ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது நமது நாட்டின் ஜனநாயகத்திலிருக்கும் மிக முக்கியமான அம்சமாகும். தேர்தலில் வாக்களித்தல் மற்றும் ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதோடு ஜனநாயகம் நிறைவு பெறுவதில்லை. இது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சம் என்றாலும், நம் நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்த, கட்டமைப்புகளின் வலிமையும், சட்டங்களை வலுப்படுத்துவதும் அவசியம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனவே, எனது பதவிக்காலத்தில் இந்த நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.

அத்துடன், இந்த நாட்டில் ஜனநாயக முறையில் அதிகாரப் பரிமாற்றம் நடந்த வரலாறும் உண்டு. தேர்தலில் நிகழும் அதிகாரப் பரிமாற்றத்தை எந்தத் தலைவரும் நிராகரித்ததில்லை. அதற்கமைய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த மக்கள்ஆணையை சுமூகமாக ஏற்றுக்கொண்டதுடன், ஜனநாயக ரீதியில் அதிகாரத்தை கைமாற்றுவதற்கான அவரின் அர்ப்பணிப்பிற்கும் முன்னுதாரணத்திற்கும் நன்றி தெரிவிக்கிறேன். மேலும் எமக்கு கிடைப்பது மிகவும் சவால் நிறைந்த நாடு என்பதை நன்கு புரிந்து கொண்டிருக்கிறோம். நமது அரசியலில் தூய்மையான, மக்களால் எதிர்பார்க்கப்படும் சிறந்த அரசியல் கலாசாரத்திற்காக அவசியம் காணப்படுகிறது.அதற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

நம் நாட்டின் அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு நல்லெண்ணம் இல்லை. எனவே, அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் மீது மக்கள் மரியாதை மற்றும் நம்பிக்கையை மீட்டெடுக்க எங்கள் தரப்பிலிருந்து முடிந்த அனைத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.

மேலும், நமக்கு முன் இருக்கும் இந்த ஆழமான நெருக்கடியை வெறும் அரசோ, வெறும் அரசியல் கட்சியோ அல்லது ஒரு தனி நபரோ மட்டும் தீர்க்க முடியும் என்று நாங்கள் நம்பவில்லை. ஏனென்றால், நான் முன்பு கூறியது போல், நான் ஒரு மாயாஜால வித்தைக்காரனல்ல. நான் மந்திரவாதியும் இல்லை. நான் இந்த நாட்டின் சாதாரண குடிமகன். எம்மிடம் திறமைகள் உள்ளன. இயலாமைகளும் உள்ளன. தெரிந்த விடயங்களும் உள்ளன அதேபோன்று, தெரியாத விடயங்களும் உள்ளன.

ஆனால் திறமைகளைப் பயன்படுத்தி தெரியாதவற்றை சேகரித்துக்கொண்டு சிறந்த முடிவுகளை எடுத்து இந்த நாட்டை வழிநடத்துவதே எனது தலையாய பணியாகும். அந்த கூட்டுப் பங்களிப்பின் ஒரு அங்கமாக மாறுவது எனது பொறுப்பாகும். மேலும், இந்த நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதில் பொது மக்கள் மற்றும் அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் பாரிய பொறுப்பு உள்ளது. அந்தப் பொறுப்பை நிறைவேற்ற அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்.

ஆனால், நாட்டின் ஜனாதிபதி என்ற முறையில், இந்தப் பணியை முன்னின்று நடத்துவதில் எனக்கு முதன்மையான மற்றும் மிக முக்கியமான பொறுப்பு இருப்பதை நான் ஏற்றுக்கொண்டேன். எனவே, இந்தச் சவாலை வெற்றிகொள்வதற்காக எனக்குக் வழங்கப்பட்டுள்ள பணியை நான் உரிய முறையில் நிறைவேற்றுவேன் என்பதை செயற்பாடு மற்றும் நடைமுறை மூலம் எல்லா சந்தர்ப்பங்களிலும் இந்த நாட்டின் பிரஜைகளுக்கு வெளிப்படுத்த நான் தயாராக இருக்கிறேன்.

மேலும் நமது நாட்டுக்கு சர்வதேச ஆதரவு தேவை. எனவே, உலகில் எத்தகைய அதிகாரப் பிளவுகள் இருந்தாலும், ஒவ்வொரு நாட்டையும் எமக்கு மிகவும் சாதகமாக கையாள்வதே நமது எதிர்பார்ப்பாகும். நாம் உலகில் தனிமைப்படுத்தப்பட்ட நாடு அல்ல. உலகத்துடன் கூட்டாக முன்னேற வேண்டிய ஒரு நாடாகும். அது தொடர்பில் தேவையான முடிவுகளை எடுக்க நாங்கள் சிறிதும் தயங்குவதில்லை.

மேலும், நம் நாட்டைக் கட்டியெழுப்புவதில் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு பெரும் பங்கு உள்ளது. எனவே, நாட்டை மேலும் வலுவாகக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு அவர்கள் ஆதரவளிப்பார்கள் என நான் கருதுகின்றேன்.

நம் நாட்டின் ஜனநாயகத்தின் ஊடாக நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். அதற்காக மக்கள் எனக்கு வாக்களித்தனர்.

மேலும் எனக்கு வழங்கப்படாத வாக்குகளும் உள்ளன. எனவே, எங்களின் வெற்றியின் உள்ளடக்கம் மற்றும் அளவு குறித்து எங்களுக்கு நல்ல புரிதல் உள்ளது. எனவே, எங்களுக்கு ஆதரவு வழங்காத மற்றும் எங்களை நம்பாத பிரஜைகளின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெறுவதே எனது நிர்வாகத்தின் போது எனக்கு வழங்கப்பட்டுள்ள பணியாகும். அந்தப் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

எதிர்காலத்தில் இவை அனைத்தையும் நீங்கள் நடைமுறையில் கண்டுகொள்ள முடியும். அதற்கு அனைத்து மக்களின் ஆதரவையும் எதிர்பார்க்கின்றேன்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தேர்தலில் இவ்வாறுதான் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்

0

அதிகாரிகள் மற்றும் பிற தேவைகள் முடிந்த பிறகு, மாலை 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (19) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி பிற்பகல் 4.15 மணிளவில் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“எதிர்வரும் 21ம் திகதி வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள் பெறப்பட்டதும், அதிகாரிகள் மற்றும் இதர தேவைகள் முடிந்ததும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் இரவு 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

மாலை 4.15 மணிளவில் தபால் மூல வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

அத்துடன் மாவட்ட அளவில் ஒவ்வொரு வட்டாரத்திலும் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெறும்.

வாக்கு எண்ணிக்கையின் முடிவில் முடிவுகள் கிடைத்தவுடன் ஊடகங்களுக்கு வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையே முதலில் எண்ணப்படும்.

அந்தக் கணக்கெடுப்பின் பின்னர் (மாவட்ட அளவில் எண்ணும் பணி) முதலில் வாக்குப்பெட்டிகளில் உள்ள வாக்குகள் எண்ணப்படும்.

அதன் பிறகு, ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு, தொகுதி மற்றும் மாவட்ட அளவில் அது தயாரிக்கப்படுகிறது.

தேர்தல்கள் செயலகமே ஒட்டுமொத்த முடிவுகளைக் கணக்கிடும்.

எந்த வேட்பாளரும் 50 வீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்றுள்ளாரா என சரிபார்க்கப்படும்.

அப்படியானால், அந்த நேரத்தில் வாக்கு எண்ணும் பணிகள் நிறுத்தப்படும்.

அப்போது ஜனாதிபதியை நாங்கள் அறிவிப்போம்.

எந்த வேட்பாளருக்கும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் கிடைக்காவிடின், விருப்பு வாக்கு எண்ணிக்கைக்கு செல்ல வேண்டும்.

அங்கு, அதிக வாக்குகள் பெற்ற இரண்டு வேட்பாளர்கள் போட்டியில் வைத்து விட்டு  மீதமுள்ள 36 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து நீக்கப்படுவர்” என்றார்.

புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக மாறும்

0

புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வாத்தியாசலையாக மாற்றம் பெரும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று புத்தளத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ அலிசப்ரி ரஹீம் மற்றும் சிந்தக்க மாயாதுன்ன தலைமையில் புத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்திலே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

புத்தளம் மக்களின் நீண்ட நாள் தேவையாக இருந்து வருகின்ற புத்தளம் தல வைத்தியசாலையை தரமுயர்த்துவது தொடர்பாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ அலிசப்ரி ரஹீம் அவர்களினால் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோலுக்கிணங்க குறித்த வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.

மேலும் புத்தளத்தில் மீன் பிடி தொழிலை முன்னேற்றும் நோக்கத்தில் மீன் பிடி துறைமுகம் ஒன்றை அமைக்கும் யோசனையும் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டதுடன், அதற்கான முன்னெடுப்புகளும் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்டமை புத்தளம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நாட்டில் நிரந்தர பொருளாதார அபிவிருத்தியை நிலை நாட்ட தாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டை பொருளாதார அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவதே தனது பிரதான நோக்கம் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மொட்டுக்கட்சிக்கு எதிராக நிற்கும் முக்கிய அமைச்சர்கள்

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக மொட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளரை இந்த வாரம் அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்காதிருக்கவும், மொட்டு சின்னத்தில் தனியாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமக்கு ஆதரவு வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பியிருந்த கடிதம் நேற்றைய தினம் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தினால் அரசியல் குழுவில் முன்வைக்கப்பட்டது.

எவ்வாறாயினும் அந்த கடிதத்தை நிராகரிக்க அரசியல் குழுக் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுவில் 82 பேர் அங்கம் வகிப்பதுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் 72 பேர் பங்கேற்றனர்.

இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த 11 பேர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

மஹிந்தானந்த அலுத்கமகே, பந்துல குணவர்தன, பிரதீப் உந்துகொட, கோகிலா ஹர்ஷனி குணவர்தன, சஹன் பிரதீப், ரமேஸ் பத்திரன, கஞ்சன விஜேசேகர, பிரசன்ன ரணதுங்க, கனக ஹேரத், மொஹான் பிரியதர்ஷன ஆகியோர் கட்சியின் சார்பில் தனியான வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

அத்துடன் பிறிதொரு கட்சியின் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்கும் உறுப்பினர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் யோசனைக்கு 6 பேர் எதிராக வாக்களித்துள்ளனர்.

எவ்வாறாயினும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் எனக் கூறப்பட்ட தம்மிக பெரேரா தொடர்பில் அரசியல் குழுக் கூட்டத்தின்போது எந்தவித கருத்துக்களும் பரிமாற்றிக் கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவளிக்காத 11 பேர் உள்ளிட்ட தரப்பினர் நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தனவின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சைனப் ஆரம்பப் பாடசாலைக்கு ஆளுநர் வருகை!

0

புத்தளம் சைனப் ஆரம்ப பாடசாலையின் முப்பெரும் விழா பாடசாலை அதிபர் யஹியா தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து புத்தளம் ஜெய்னப் பாடசாலைக்கு 22 லட்சம் ரூபா பெறுமதியான நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு, சிறுவர் விளையாட்டு நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தல் மற்றும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் செயற்திட்டத்தின் கீழ் BCMH நிறுவனத்தினால் கற்றல் உபகரணம் வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் கடந்த செவ்வாய்க்கிழமை (16) வெகு விமர்சையாக இடம்பெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதியாக வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், விசேட அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மற்றும் கௌரவ அதிதியாக புத்தளம் வலயக்கல்விப் பணிப்பாளர் அர்ஜுன ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆரம்ப பாடசாலையின் முக்கியத்துவம் மற்றும் அறிவார்ந்த சமூகத்தை கட்டியெழுப்ப ஆரம்ப பாடசாலை ஆற்றிவருகின்ற அர்ப்பணிப்பு குறித்து விரிவாக பேசிய வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், புத்தளம் மாவட்ட பாடசாலைகளின் துரித வளர்ச்சி பற்றியும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

மேலும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் செயற்திட்டத்திற்கு வடமேல் மாகாண ஆளுநர் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் ஜவ்ஷி ஜமால்தின், இணைப்புச் செயலாளர் எச். அமீர் அலி ஆசிரியர், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் உட்பட உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் அயல் பாடசாலையின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு
நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு

ஹிருணிகாவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறை

0

கடத்தல் வழக்கில் முன்னாள் எம்.பி ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்தத் தீர்ப்பை அறிவித்தார்.

தெமட்டகொட பகுதியிலுள்ள கடை ஒன்றில் பணிபுரிந்த அமில பிரியந்த அமரசிங்க எனும் இளைஞர் ஒருவரை 2015 டிசம்பர் 21ஆம் திகதி ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு சொந்தமான டிபெண்டர் வாகனத்தில் கடத்திய வழக்கு விசாரணை முடிவில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

29 குற்றங்கள் தொடர்பில் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் 8 பேரும் குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில், அச்சம்பத்திற்கு உதவி, ஒத்தாசை புரிந்ததாக ஹிருணிகா மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்திருந்தார்.

அத்தோடு, சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவின் ஆதரவாளர்கள் 8 பேர் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைதான ஐந்தாம் சந்தேகநபரின் மகள் அளித்துள்ள வாக்குமூலத்தில், தமது தாயாருடன் தொடர்பு பேணிய நபர் ஒருவரை தாம் காண்பித்ததாகவும், அவரை தமது தந்தையும் அவருடன் சென்றவர்களும் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு ஹிருணிகாவிடம் அழைத்துச் சென்றதாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

ஓவியப்போட்டியில் எருக்கலம்பிட்டி மாணவன் முதலாமிடம்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட வட மாகாண மானவர்களுக்கிடையிலான சித்திரப்போட்டியில் மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்றார்.

வீதி விபத்துக்கள் இல்லாத நாளைக்கான பாடசாலையிலிருந்து அணிவக்குப்போம் எனும் தொனிப்பொருளில் கடந்த வியாழக்கிழமை (13.06.2024) அன்று நடாத்தப்பட்ட வட மாகாண மாணவர்களுக்கிடையிலான குறித்த சித்திரப்போட்டியில் சுமார் 2600 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

சித்திரப்போட்டியில் பங்குபற்றிய 2600 மாணவர்களில் 250 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு நேற்றைய தினம் (15.06.2024) அவர்களுக்கான போட்டி இடம்பெற்றது.

நடைபெற்று முடிந்த இறுதிச் சுற்றுப்போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்று பெருமதிமிக்க பரிசில்களை பெற்றுக்கொண்டார்.

முதலாம் இடம் பெற்ற முஹம்மது ஹுசைன் என்ற மாணவனுக்கு சான்றிதல், துவிச்சக்கரவண்டி மற்றும் 8500/- ரூபா பெறுமதியான வவுச்சரும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இதேவேளை குறித்த போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய இல்முதீன் முஹம்மது ஹஸ்பான் 7 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய மற்றொரு மாணவரான முஹம்மது சம்ஹான் 8 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

பாரிய சாவல்களுக்கு மத்தியில் தனி ஒரு மனிதனாக இம் மாணாவர்களை ஊக்கப்படுத்தி, தயார்ப்படுத்தி போட்டியில் பங்குபெறச் செய்து வெற்றிபெறச் செய்த எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியின் சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் அவர்களின் இம் முயற்சிக்கு, பாடசாலை சமூகம் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் நன்றி தெரிவித்தனர்.

தமக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வந்து தேசிய அளவில் இடம்பெறும் போட்டிகளில் மாணவர்களை பங்குபெறச் செய்வதே தனது இலக்கு என சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் எமது ஊடகத்திற்கு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை இராஜினாமா

0

நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்துள்ளனர்.

சாந்த நிரியல்ல உட்பட 15 பேர் கொண்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரின் அறிவித்தலுக்கு அமைய இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி திங்கட்கிழமை புதிய பணிப்பாளர் சபை நியமிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ “அத தெரண” விற்கு தெரிவித்தார்.

புத்தளம் எருக்கலம்பிட்டியில் கடும் வெள்ளம்

0

புத்தளம் பகுதியில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக புத்தளம் பகுதி முழுதும் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.

புத்தளம், தில்லையடி, பாலாவி, புத்தளம் எருக்கலம்பிட்டி, ஹிதாயத் நகர்,  மதுரங்குளி மற்றும் ஏனைய பல கிராமங்களும் வெள்ளித்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமமும் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 1500 குடும்பங்கள் இங்கு வாழ்ந்துவருவதுடன், அனைத்து வீடுகளும் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நூற்றிற்கும் அதிகமான வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் ஐநூற்றுக்கும் அதிகமான வீடுகள் பகுதி அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8ஆம் திகதி ஏற்பட்ட மழை வெள்ளித்தினால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் மற்றும் பாடசாலைகளில் தற்காலிகமாக  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு தினங்களாக இவர்களுக்கான சமைத்த உணவுகள் மூன்று வேலைகளிலும் ஊர் தனவந்தர்களின் உதவியுடனும், பள்ளிவாசல் நிர்வாக சபையின் வழிகாட்டலுடனும் வழங்கப்பட்டு வருவதுடன், ஊர் மக்களுக்கும் உணவு விநியோகங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

இவர்களுக்கான நிவாரண உதவிகள் இதுவரை அரசாங்கத்தினால் வழங்கப்படாத போதிலும், ஊர் மக்களின் பங்களிப்புடன் மாத்திரமே பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு விநியோகங்கள் இதுவரை  வழங்கப்பட்டு வருகின்றது.

புத்தளம் பொத்துவில்லு பகுதியில் உள்ள குளம் மழை நீரினால்  பெருக்கெடுத்துள்ளதால் குறித்த குளத்து நீர் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமத்திற்குள் தொடர்ந்தும் மூன்றாவது நாளாக ஊடறுத்து செல்வதால் வீடுகள் தொடர்ந்தும் நீருள் மூழ்கியுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்தின் நிவாரண உதவிக்காக பல மக்கள் தொடர்ந்தும் எதிர்பார்த்து காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் அல் அஸ்ஹர் அதிபர் மாற்றம்: முடிவுக்கு வந்த போராட்டம்!

0

கடந்த சில நாட்களாக மன்னார் மண்ணையே பரபரப்பில் வைத்திருந்த அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையின் அதிபர் பிரச்சினைக்கு, ஒரு வழியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கின்றது. அதிபரின் செயற்பாடுகள் தொடர்பில் எழுந்த கடும் எதிர்ப்பலைகளைத் தொடர்ந்து, அவரை உடனடியாக மாற்றி புதிய அதிபர் ஒருவரை நியமிப்பதற்கு நேற்றைய தினம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த உயர்மட்டக் கலந்துரையாடலில், மக்கள் பிரதிநிதிகள் உட்பட பல முக்கிய தரப்பினரும் நேரடியாகக் களமிறங்கினர். பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெகதீஸ்வரன் மற்றும் ரிசாத் பதியுதீன், வடக்கு மாகாண கல்விப்பணிப்பாளர், வலய கல்விப்பணிப்பாளர், பாடசாலை அதிபர், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் இதில் பங்கேற்றுத் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

பாடசாலை அதிபரின் அதிருப்திகரமான அணுகுமுறைகள், பாடசாலை நிர்வாகத்தின் பின்னடைவு மற்றும் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்களும் மாணவர்களும் அண்மைய நாட்களாக பீதியில் இறங்கி போராட்டங்களை முன்னெடுத்ததுடன், கடந்த மூன்று நாட்களாக மாணவர்கள் பாடசாலைக்குச் செல்வதையும் முழுமையாகப் புறக்கணித்திருந்தனர்.

சூடுபிடித்த இந்தச் சூழலில்தான், நேற்றைய உயர்மட்டக் கூட்டத்தில் தற்போதைய அதிபரை அந்தப் பதவியிலிருந்து மாற்றி, புதிய அதிபர் ஒருவரை நியமிப்பதே ஒரே தீர்வு என்ற தீர்க்கமான முடிவுக்கு அதிகாரிகள் வந்து சேர்ந்தனர்.

இந்த அதிரடி முடிவைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக நிலவி வந்த பதற்ற நிலை தணிந்துள்ளதுடன், தங்களது பிள்ளைகளை மீண்டும் வழமைபோல பாடசாலைக்கு அனுப்பி வைக்கப் பெற்றோர்கள் ஏகமனதாகச் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் ஸ்தம்பித்திருந்த மாணவர்களின் கல்விப் பயணம் மீண்டும் சுமுகமாக ஆரம்பமாகவுள்ளது.

டெல்லி போராட்ட களத்தில் இறக்கப்பட்ட AI ‘ரகசியக் கண்’: நடுங்கும் இந்தியா?

0

வீதிக்கு வந்த மாணவர்கள்… துரத்திய நவீன ரகசியக் கண்கள்!

இந்திய தலைநகர் டெல்லியில் அண்மையில் இடம்பெற்ற பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பான மாணவர்களின் பாரிய போராட்டக்களம், வெறும் கோரிக்கைகளை முழங்கும் இடமாக மட்டும் மாறவில்லை. அது, நவீன தொழில்நுட்பத்தின் கோரப்பிடிக்குள் மக்கள் எவ்வாறு கண்காணிக்கப்படுகிறார்கள் என்பதை உலகிற்கே வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. போராட்ட களத்திற்கு வந்த மாணவர்களின் முகங்களை, அங்கே நிறுத்தப்பட்டிருந்த பொலிஸாரின் அதிநவீன கண்காணிப்பு வாகனங்கள் ‘360 பாகை’ கோணத்தில் சுழன்று சுழன்று படம் பிடித்து, அவர்களின் முக அடையாளங்களை AI தொழில்நுட்பம் மூலம் பதிவு செய்துள்ளன.

இன்ஸ்டாகிராம் கணக்குகள் முதல் ‘இக்ஷனா’ வாகனம் வரை!

போராட்ட களத்திற்கு நுழையும் இளைஞர்களின் இன்ஸ்டாகிராம் முகவரிகளைக் கூட பொலிஸார் குறிப்பெடுத்துக் கொண்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. களத்தில் நிறுத்தப்பட்டிருந்த டெல்லி பொலிஸின் ‘இக்ஷனா’ (Ikshana – பார்வை) என்ற பெயரிடப்பட்ட சிறப்பு ரோந்து வாகனத்தின் கணினித் திரைகளில், சாதாரண மாணவர்களின் முகங்களைச் சுற்றி பச்சை நிறக் கட்டங்கள் தோன்றி, அவர்களின் முகத் துல்லியத்தை AI கணக்கிட்டுக் கொண்டிருந்த காட்சியை சர்வதேச ஊடகவியலாளர்கள் நேரிலேயே கண்டுள்ளனர். “குற்றப் பின்னணி உள்ளவர்களைக் கண்டறியவே இந்தச் சாதனம்” என பொலிஸார் சமாளித்தாலும், தங்களை அறியாமலேயே தங்கள் தனிப்பட்ட தரவுகள் திருடப்படுவதை உணர்ந்த மாணவர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சட்டத்திற்குப் புறம்பான கண்காணிப்பா? நீதிமன்றத்தில் வெடித்த மோதல்!

இந்தியாவில் பொலிஸார் இதுபோன்று முக அடையாளக் கணிப்புத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு எந்தவொரு சட்டப்பூர்வ சட்ட அனுமதியும் கிடையாது என டிஜிட்டல் உரிமை அமைப்புகள் கொதித்தெழுந்துள்ளன. இதனையடுத்து, மாணவர் தலைவி ஆயிஷே கோஷ் டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கொன்றைத் தொடந்துள்ளார். “போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் இருந்து சட்டவிரோதமாகச் சேகரிக்கப்பட்ட பயோமெட்ரிக் தரவுகள் அனைத்தையும் உடனடியாக பொலிஸார் அழிக்க வேண்டும்; இத்தகைய AI கண்காணிப்புகளுக்குக் கடுமையான வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட வேண்டும்” என அந்த மனுவில் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அரசின் விசித்திர வாதமும் எதிர்கால அபாயமும்!

அரசாங்கத்தின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல், “பொது இடங்களில் கூடும்போது தனிநபர் சுயாட்சி அல்லது தனியுரிமை பேசுவது நகைச்சுவையானது” என்றும், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க இத்தகைய AI சோதனைகள் மிகவும் அவசியம் என்றும் வாதாடியுள்ளார். கல்வி அமைச்சர் தனது பதவியை இராஜினாமா செய்யும் அளவுக்கு இப்போராட்டம் தீவிரமடைந்த போதிலும், பொலிஸார் சேகரித்த தரவுகள் எங்கே பயன்படுத்தப்படும் என்ற அச்சம் ஓய்ந்தபாடில்லை. “நாட்டின் பாதுகாப்பைக் காரணம் காட்டி மக்களின் முகங்களை AI மூலம் தொடர்ந்து கண்காணிப்பது, எதிர்காலத்தில் ஜனநாயக ரீதியான கருத்து சுதந்திரத்தையே முற்றாக முடக்கிவிடும்” என மனித உரிமை ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம்: ஈரானின் அதிரடி மறுப்பு!

மத்திய கிழக்கை உலுக்கி வரும் ஐந்து மாத கால கோரப் போரில், திடீர் திருப்பமாக அமெரிக்கா தனது இரண்டு வார வான்வழித் தாக்குதல் பிரச்சாரத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. ஈரானுடன் “நல்ல பேச்சுவார்த்தைகள்” நடந்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள போதிலும், அதன் பின்னணியில் ஒரு கடுமையான எச்சரிக்கையும் மறைந்துள்ளது. பேச்சுவார்த்தை விரும்பிய முடிவைத் தராவிட்டால், இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தது போல மீண்டும் ஈரானை நிலைகுலைய வைக்கும் தாக்குதல்கள் தொடரும் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

எங்களது DNA-விலேயே அது இல்லை: ஈரானின் அதிரடி மறுப்பு!

அமெரிக்க அதிபரின் இந்த சமரச அறிவிப்பை ஈரான் மிகவும் சாதுரியமாக எதிர்கொண்டுள்ளது. இடைத்தரகர்கள் மூலம் செய்திகள் பரிமாறப்பட்டு வருவதை ஒப்புக்கொண்ட ஈரான் வெளியுறவு அமைச்சு, ஆனால் தாங்கள் யாரிடமும் கெஞ்சி பேச்சுவார்த்தைக்கான கோரிக்கையை வைக்கவில்லை என்று தெள்ளத்தெளிவாகக் கூறியுள்ளது. “சரணடைவது அல்லது கெஞ்சுவது எங்களது DNA-விலேயே இல்லை” என ஈரானிய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளார். அதேவேளை, அமெரிக்கா தனது தாக்குதலை நிறுத்தியிருக்கும் வரை தாங்களும் தாக்குதல்களை முன்னெடுக்க மாட்டோம் என்ற நிபந்தனையையும் ஈரான் விதித்துள்ளது.

இலக்குகள் தீர்ந்துபோனதா அமெரிக்க இராணுவத்திற்கு?

ட்ரம்ப் இராஜதந்திர பேச்சுவார்த்தை பற்றிப் பேசினாலும், இந்த வான்வழித் தாக்குதல் நிறுத்தத்திற்குப் பின்னால் அமெரிக்க இராணுவத்தின் பாரிய நெருக்கடி இருப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானில் தாக்குதல் நடத்துவதற்கான முக்கிய இராணுவ இலக்குகள் தீர்ந்துபோய்விட்டதாகவும், வான் பாதுகாப்பு ஏவுகணைகளின் இருப்பு அபாய கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அமெரிக்க கூட்டுப் படைகளின் தளபதி ஜெனரல் டான் கெய்ன் அதிபருக்கு ஆலோசனை வழங்கியதாகக் கூறப்படுகிறது. எனினும், ஆயுதப் பற்றாக்குறை என்ற கூற்றை மறுத்துள்ள ட்ரம்ப், அமெரிக்கா தனது ஆயுதக் கிடங்குகளை வேகமாக நிரப்பி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

எண்ணெய் சந்தையில் பெரும் வீழ்ச்சியும் ஹோர்முஸ் நீரிணை மோதலும்

13 நாட்கள் தொடர்ந்து இரவோடு இரவாக நடத்தப்பட்ட குண்டுவீச்சுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட செய்தி வெளியான மறு கணமே, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் வரலாறு காணாத வீழ்ச்சி பதிவாகியுள்ளது. பிரெண்ட் ரக கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 9.31% வரை சரிவடைந்து $87.77 ஆகக் குறைந்துள்ளது. ஆனால் மறுபுறம், உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹோர்முஸ் நீரிணையில், தங்களின் அனுமதியின்றி பயணிக்க முயன்ற 6 சர்வதேச கப்பல்களை ஈரான் மீண்டும் திருப்பி அனுப்பியுள்ளதால், கடல்சார் பதற்றம் இன்னும் தணிந்தபாடில்லை.

சாம்பலுக்குள் எரியும் தணல்: சவுதி மீது பாய்ந்த ட்ரோன்கள்!

போர் நிறுத்தப் பேச்சுக்கள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், களத்தில் பதற்றம் குறையவில்லை என்பதைக் காட்டும் வகையில் சவுதி அரேபியாவின் ரியாத் பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைக் குறிவைத்து ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு குழுக்களே இத்தாக்குதலை நடத்தியதாக சவுதி குற்றம்சாட்டியுள்ளதுடன், பதிலடி கொடுக்கும் உரிமையும் தங்களுக்கு இருப்பதாக எச்சரித்துள்ளது. அமெரிக்காவில் ட்ரம்பின் போர்க் கொள்கைக்கு எதிராக மக்கள் கருத்துக்கணிப்புகள் சரிந்து வரும் நிலையில், இந்த தற்காலிக அமைதி நிரந்தர அமைதிக்கு வழிகோலுமா அல்லது பேரழிவின் அடுத்த கட்டத்திற்கு வழிவகுக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

3 வருட சட்டவிரோத கல் குவாரி முற்றுகை: பிரதேச சபை உறுப்பினருடன் மூவர் கைது!

0

குருநாகல், கனேவத்தை – அரன்கேலே பகுதி என்பது அமைதி நிறைந்த சூழலுக்கு பெயர் பெற்றது. ஆனால், அந்த அமைதிக்கு பின்னால் கடந்த மூன்று வருடங்களாக பிரம்மாண்டமான சட்டவிரோத கனிம அகழ்வு ஒன்று எவ்வித தடங்கலுமின்றி அரங்கேறி வந்திருக்கிறது. பூகோளவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியக அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, பொலிஸாரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில் இந்த மர்ம வலையமைப்பு அம்பலமாகியுள்ளது.

வேட்டையில் மாட்டிய மக்கள் பிரதிநிதி

சோதனையின் போது அதிகாரிகளுக்குக் காத்திருந்தது ஒரு பெரும் அதிர்ச்சி. இந்தச் சட்டவிரோத கல் குவாரி இயங்கி வந்த காணி, இப்பாகமுவ பிரதேச சபை உறுப்பினர் ஒருவருக்குச் சொந்தமானது என்பதும், அவரே இந்த சட்டவிரோத வியாபாரத்தின் பின்னணியில் இருந்து செயல்பட்டுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து குறித்த பிரதேச சபை உறுப்பினர் உட்பட மூன்று சந்தேகநபர்களை அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே கைது செய்தனர். 1992ஆம் ஆண்டின் 33ஆம் இலக்க சுரங்க மற்றும் கனிமப் பொருட்கள் சட்டத்தின் கீழ், உள்ளூராட்சி மன்றத்தின் மக்கள் பிரதிநிதி ஒருவர் கனிம அகழ்வுக்கான அனுமதிப்பத்திரத்தைப் பெற முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அள்ள அள்ளக் குறையாத உபகரணங்களும் வெடிபொருட்களும்

அதிகாரிகள் அந்த இடத்தை முற்றுகையிட்டபோதும், எந்தவொரு பயமும் இன்றி பாறைகளைத் தகர்க்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருந்தன. சம்பவ இடத்திலிருந்து கல் உடைக்கப் பயன்படுத்தப்பட்ட 2 கனரக பெக்கோ இயந்திரங்கள், அதிநவீன துளையிடும் உபகரணங்கள் மற்றும் சட்டவிரோதமாகப் சேமித்து வைக்கப்பட்டிருந்த பாரிய அளவிலான வெடிபொருட்கள் என்பனவற்றை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். அனுமதிப்பத்திரம் இன்றி வெடிபொருட்களைப் வைத்திருப்பதும், பயன்படுத்துவதும் நாட்டின் சட்டப்படி கடுமையான குற்றமாகும்.

விசாரணைகளின் போது, இந்தக் குவாரிக்காக எடுக்கப்பட்ட அனுமதிப்பத்திரம் கடந்த 2023 ஆம் ஆண்டோடு காலாவதியாகிவிட்டது என்பது வெளிச்சத்திற்கு வந்தது. அதன்பின்னர் எவ்வித புதுப்பித்தலோ அல்லது போக்குவரத்து அனுமதிப்பத்திரமோ இன்றி, கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து கல் அகழப்பட்டு கடத்தப்பட்டு வந்துள்ளது. இதனால் நாட்டின் இயற்கைச் சூழல் சீரழிந்தது மட்டுமன்றி, அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய கோடிக்கணக்கிலான வரி வருமானமும் இழக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தை நோக்கி நகரும் சட்ட நடவடிக்கை

குருநாகல் பொலிஸாரின் பூரண ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்ட இந்த அதிரடி சோதனையைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட மூவரும், பறிமுதல் செய்யப்பட்ட பெக்கோ இயந்திரங்கள் மற்றும் வெடிபொருட்களும் குருநாகல் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளன. அதிகார பலத்தைப் பயன்படுத்தி இயற்கை வளங்களைச் சூறையாடுபவர்களுக்கு இந்த நடவடிக்கை ஒரு பலமான எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

ஜுட் சமந்த

மோட்டார் சைக்கிள் வடிகானில் கவிழ்ந்து விபத்து: 24 வயது இளைஞன் உயிரிழப்பு!

0

சிலாபம் – ஆனமடுவ வீதியில் 5ஆம் கட்டைப் பகுதியில் வைது மோட்டார் சைக்கிள், திடீரென கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, அருகிலிருந்த வடிகானுக்குள் தூக்கி வீசப்பட்டு தலைகீழாகக் கவிழ்ந்துள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனை உடனடியாக மீட்டு சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையிலும், சிகிச்சைப் பலனின்றி அந்த இளைஞனின் உயிர் பிரிந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இவ்விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தவர் பள்ளம, பொத்துக்குளத்தைச் சேர்ந்த 24 வயதுடைய மொஹொட்டி பத்திரன்னஹேலாகே கயான் புஷ்பகுமார என அடையாளம் காணப்பட்டுள்ளார். துடிதுடிப்பான வயதில், வீட்டிற்கும் சமூகத்திற்கும் ஆதாரமாக இருக்க வேண்டிய ஒரு இளம் உயிர் இப்படி வீதி விபத்தொன்றில் பலியாகியிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிலாபம் பகுதியில் இருந்து ஆனமடுவ திசையை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தபோதே மோட்டார் சைக்கிள் செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து நேர்ந்துள்ளது. சம்பவம் தொடர்பில் பிரேதப் பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளதுடன், விபத்துக்கான பின்னணி காரணங்கள் குறித்து சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

ஜுட் சமந்த

இலங்கையை அச்சுறுத்தும் தீவிர டெங்கு: 82,000 ஐக் கடந்தது பாதிப்பு!

0

நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருவது நாட்டின் சுகாதாரத் துறையை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தேசிய கண்காணிப்பு அமைப்பு மற்றும் நேரடிப் புள்ளிவிபரங்களின்படி, இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,000 ஐக் கடந்துள்ள அதேவேளை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. இந்த திடீர் உயர்வு வெறும் சாதாரண பருவகாலப் பரவல் மட்டுமல்ல, இதற்குப் பின்னணியில் ஒரு பேராபத்து ஒளிந்திருப்பதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

எதனால்தான் இந்த திடீர் அபாய வீச்சு?

இம்முறை கட்டுக்கடங்காமல் பரவி வரும் டெங்கு தொற்றுக்கு DENV-2 என்ற அதிதீவிர வைரஸ் வகையே பிரதான காரணமாகும் என சுகாதார நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த வைரஸ் வீரியம் மிக்கது என்பதால், நோயாளர்களின் எண்ணிக்கையை சடுதியாக உயர்த்தி வருகின்றது. அதிலும் குறிப்பாக, நாட்டின் மொத்தப் பாதிப்பில் 52.78 சதவீதத்திற்கும் அதிகமான நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர்.

இதில் கம்பஹா மாவட்டம் இலங்கையிலேயே மிக அதிகப்படியான நோயாளர்களுடன் முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து கொழும்பு மாநகர சபை எல்லை மற்றும் புறநகர்ப் பகுதிகள் இரண்டாவது ஆபத்தான வலயங்களாக மாறியுள்ளன. இது தவிர கண்டி, மாத்தறை, களுத்துறை, காலி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலும் பாதிப்புகள் சடுதியாக உயர்ந்து வருகின்றன.

உங்கள் வீட்டின் அருகிலும் இந்த இடங்கள் இருக்கிறதா?

பொதுவாக வீடுகளில் மட்டுமே நுளம்புகள் பெருகும் என்ற எண்ணத்தை உடைக்கும் வகையில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் (NDCU) கள ஆய்வுகள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளன. டெங்கு நுளம்புகள் அதிகளவில் பெருகும் பிரதான இடங்களாக பாடசாலை வளாகங்கள், அரச அலுவலகங்கள், கைவிடப்பட்ட நிலங்கள், கட்டுமானப் பகுதிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் தொழிற்சாலைகளே அடையாளம் காணப்பட்டுள்ளன. நாம் தினமும் நடமாடும் பொது இடங்களே நோய் பரப்பும் மையங்களாக மாறியிருப்பது நிலைமையின் தீவிரத்தை உணர்த்துகிறது.

இந்த ஆபத்தான சூழலில் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு சுகாதார அதிகாரிகள் கண்டிப்பான வழிகாட்டல்களை வழங்கியுள்ளனர். காய்ச்சல் ஏற்பட்டு 24 மணிநேரத்திற்கு மேல் (அல்லது 2 நாட்கள்) நீடித்தால், அஸ்பிரின் போன்ற மருந்துகளைச் சுய மருத்துவம் மூலம் உட்கொள்வதை முற்றாகத் தவிர்க்க வேண்டும். உடல் வலி, வாந்தி, வயிற்று வலி மற்றும் கடுமையான தலைவலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக தகுதிவாய்ந்த அரச அல்லது தனியார் மருத்துவமனையை நாட வேண்டியது கட்டாயமாகும்.

அதேவேளை, பொது சுகாதாரத்தைப் அச்சுறுத்தும் வகையில் நுளம்புகள் பெருகும் சூழலை வைத்துள்ள வளாக உரிமையாளர்களுக்கு எதிராக “சிவப்பு அறிவித்தல்” (Red Notice) விடுக்கப்படுவதுடன், உடனடி நீதிமன்ற வழக்குகளும் கடுமையான சட்ட நடவடிக்கைகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நமது சிறு கவனயீனம் பெரும் பேராபத்தாக மாறக்கூடும் என்பதால், சூழலைச் சுத்தமாக வைத்துக்கொண்டு இந்த டெங்கு அலையிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வோம்!

இலங்கையின் மெய்வல்லுநர் தெரிவுக்குழுவினர் கூட்டு இராஜினாமா!

விளையாட்டுத் துறை அமைச்சின் அதிகார தலையீடுகள் மற்றும் தகுதியற்ற வீரர்கள் தடகள அணிக்குத் தெரிவு செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இலங்கை மெய்வல்லுநர் தெரிவுக்குழுவின் எஞ்சியிருந்த மூன்று உறுப்பினர்களும் தங்களது கூட்டு இராஜினாமா கடிதத்தை விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைத்துள்ளனர். இதன் மூலம் தெரிவுக்குழு முழுமையாகக் கலைக்கப்பட்டுள்ளது.

2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின் தடகள நிகழ்வுகள் ஆரம்பமாகும் அதே நாளில் இடம்பெற்றுள்ள இந்த அதிரடிப் பதவி விலகல், இலங்கை விளையாட்டு உலகில் பெரும் பரபரப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை விளையாட்டுத்துறையில் நீண்டகாலமாக நிழல்போலத் தொடர்ந்து வரும் அரசியல் மற்றும் அதிகார தலையீடுகள், தற்போது எல்லையை மீறியுள்ளதையே இந்த கூட்டு இராஜினாமா வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது. தகுதியும் திறமையும் கொண்ட விளையாட்டு வீரர்களைப் புறந்தள்ளிவிட்டு, பின்னணி பலம் கொண்ட தகுதியற்ற நபர்களை சர்வதேச மேடைக்கு அனுப்ப முயன்றதே தெரிவுக்குழுவின் இந்த அதிரடி முடிவுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

அமைச்சின் இத்தகைய செயல்பாடுகளால் அதிருப்தியடைந்த தெரிவுக்குழு உறுப்பினர்கள், தங்களது சுயமரியாதையையும் விளையாட்டுத்துறையின் வெளிப்படைத்தன்மையையும் பாதுகாக்கும் நோக்கில் இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளனர்.

முக்கிய தருணத்தில் விழுந்த இடி!

2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் நாட்டின் பதக்கக் கனவுகளோடு தடகள நிகழ்வுகள் ஆரம்பமாகும் அதே நாளில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளதுதான் ஒட்டுமொத்த விளையாட்டு உலகையும் உறைய வைத்துள்ளது. போட்டிக்காக தங்களைத் தயார்படுத்தி வரும் வீரர்களின் மனநிலையை இது நேரடியாகப் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.

நிர்வாக சீர்கேடுகளும் அதிகார துஷ்பிரயோகமும் ஒருபுறம் இருக்க, சர்வதேச ரீதியில் நாட்டின் பிம்பத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த சறுக்கல் விளையாட்டு ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்தது என்ன? எழும் கேள்விகள்

ஒரு சர்வதேச தொடர் நடக்கும் வேளையில் தெரிவுக்குழுவே இல்லாமல் இலங்கை தடகள அணி களமிறங்கும் ஒரு விசித்திரமான சூழ்நிலை உருவாகியுள்ளது. தகுதியற்ற வீரர்களின் வருகை குறித்து விளையாட்டுத்துறை அமைச்சு என்ன பதில் சொல்லப் போகிறது? பாதிக்கப்பட்ட திறமையான வீரர்களுக்கு நீதி கிடைக்குமா?

விளையாட்டுத்துறை அமைச்சின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை முழு நாடும் உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது.

எங்களுக்கு அரசியல் லஞ்சம் கொடுத்து பழக்கமில்லை – கர்ஜித்த சஜித்!

0

நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் இயற்கை வளங்களை முறையாகப் பயன்படுத்தத் தெரியாத ஒரு நிர்வாகத்தின் கீழ் இலங்கை நாளுக்கு நாள் அதலபாதாளத்தை நோக்கிச் சரிந்துகொண்டிருக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார். இரத்தினபுரி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) புதிய அலுவலகத்தை அண்மையில் திறந்துவைத்து உரையாற்றியபோதே அவர் இந்த அதிரடி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இலங்கைக்கு பெருமளவு அந்நியச் செலாவணியை ஈட்டித் தரக்கூடிய தேயிலை, இறப்பர் மற்றும் இரத்தினக்கல் போன்ற பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்த வளங்களை மேம்படுத்துவதற்கு தற்போதைய ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்திற்கு எவ்வித தொலைநோக்குப் பார்வையும் இல்லை என அவர் சாடினார். பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஆட்சியைப் பிடித்தவர்கள், இன்னமும் அதே ஏமாற்றுப் பிரசாரங்களை நம்பியே அதிகாரத்தைத் தக்கவைக்க முற்படுவதாக அவர் கவலை வெளியிட்டார்.

நிலையியற் கட்டளைகளுக்குள் ஒளிந்து பொய் பரப்புரையா?

அரசாங்கத்தின் குறைபாடுகளை சுட்டிக்காட்டியதோடு நின்றுவிடாது, திசைகாட்டி (NPP) கூட்டணி மீதும் தனது கணைகளை சஜித் பிரேமதாச தொடுத்தார். தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்குப் பின்னால் மறைந்துகொண்டு, நாட்டு மக்களுக்குத் தவறான தகவல்களையும் பொய்களையும் பரப்பி வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.

குறிப்பாக, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிக்கும் பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) தலைவர் ரஜீவ் அமரசூரியவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் ‘முதலமைச்சர் வேட்பாளர்’ பதவி லஞ்சமாகப் பேசப்பட்டதாக திசைகாட்டியினர் நாடாளுமன்றத்தில் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு சஜித் பிரேமதாச நேரடியாகப் பதிலளித்தார்.

“எங்களுக்கு அரசியல் லஞ்சம் கொடுத்து பழக்கமில்லை!”

இந்தக் குற்றச்சாட்டை முற்றாக மறுத்த எதிர்க்கட்சித் தலைவர், ஐக்கிய மக்கள் சக்தி தனது அரசியல் வரலாற்றில் யாருக்கும் அரசியல் லஞ்சங்களை வழங்கியதுமில்லை, இனிவரும் காலங்களில் வழங்கப் போவதுமில்லை என ஆவேசமாகத் தெரிவித்தார்.

திசைகாட்டி உறுப்பினர்கள் முன்வைக்கும் இந்த லஞ்சக் குற்றச்சாட்டானது, மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காக அவர்களின் அண்மைக்கால அரசியலில் உருவாக்கப்பட்ட “புதிய பொய் மற்றும் உருட்டு” அன்றி வேறொன்றும் இல்லை எனச் சாடிய சஜித் பிரேமதாச, இவ்வாறான வதந்திகளை மக்கள் ஒருபோதும் நம்பப்போவதில்லை என்றும் வலியுறுத்தினார்.

இரண்டே வாரங்களில் 10 துப்பாக்கிச் சூடுகள்: அச்சுறுத்தும் பாதாள உலகம்!

0

நாடு முழுவதும் அண்மைக் காலமாக அரங்கேறி வரும் நிழல் உலகக் குழுக்களின் வன்முறைச் சம்பவங்கள், பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்ச அலையை ஏற்படுத்தியுள்ளன. பட்டப்பகலில், வீதிகளிலும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளிலும் சர்வ சாதாரணமாமாகத் தோட்டாக்கள் பறக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளமை குறித்து காவல்துறை அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளது.

காவல்துறையின் உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டில் இதுவரை நாடு முழுவதும் 22 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் மிகவும் திடுக்கிடும் விடயம் என்னவென்றால், கடந்த ஜூலை 11 ஆம் திகதி முதல் ஜூலை 25 ஆம் திகதி வரையிலான வெறும் இரண்டு வார காலப்பகுதிக்குள் மட்டும் 10 துப்பாக்கிச் சூடுகள் அரங்கேறியுள்ளன. இந்தத் தொடர் வன்முறைச் சம்பவங்களால் பலர் தங்களது உயிர்களை இழந்துள்ளதுடன், பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திடீரென இத்தனை வன்முறைகள் வெடிப்பதற்குக் காரணம் என்ன என்ற கேள்விக்கு விடை தேடிச் சென்ற காவல்துறையினருக்கு, இதன் பின்னணியில் உள்ள அதிர்ச்சி உண்மைகள் தெரியவந்துள்ளன. பெரும்பாலான சம்பவங்கள் போதைப்பொருள் கடத்தல் வர்த்தகம் மற்றும் பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான பழிவாங்கல் மோதல்கள் காரணமாகவே நடந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளை விடவும், குறிப்பிட்ட சில பிரதான மாவட்டங்களே இந்த நிழல் உலக மோதல்களின் முக்கிய களமாக மாறியுள்ளதாகக் காவல்துறை புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் மேல் மாகாணம் மற்றும் தென் மாகாணம் ஆகிய இரு மாகாணங்களிலேயே 80 சதவீதத்திற்கும் அதிகமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. குறிப்பாக, வர்த்தக மற்றும் போதைப்பொருள் விநியோகப் பாதைகளைக் கைப்பற்றுவதற்காகவே இந்த மோதல்கள் மூண்டுள்ளன.

இதில் பிரதான இலக்காக இருப்பது கொழும்பு மாவட்டம். கொழும்பு நகரின் ஜிந்துப்பிட்டி, கிராண்ட்பாஸ், தலங்கம, கொஹுவளை மற்றும் தெஹிவளை போன்ற அடர்ந்த குடியிருப்புகள் கொண்ட பகுதிகளில் பட்டப்பகலிலேயே துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டுள்ளன. போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள இரு முக்கிய பாதாள உலகக் குழுக்களுக்கு இடையே நிலவும் அதிகாரப் போட்டியே கொழும்பில் தோட்டாக்கள் பாய்வதற்குக் பிரதான காரணமாகும்

நிலைமையின் தீவிரத்தைக் உணர்ந்து கொண்ட காவல்துறைத் தலைமையகம், பாதாள உலகக் குழுக்களின் ஆதிக்கம் அதிகம் உள்ள மற்றும் வன்முறைகள் நடக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் கொண்ட பகுதிகளைக் கண்டறிந்து உடனடி அதிரடி நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக, அப்பகுதிகளில் சிறப்பு அதிரடிப்படையினர் (STF) மற்றும் ஆயுதமேந்திய காவல்துறையினர் களமிறக்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், பாதாள உலகக் குழுவினர் தாக்குதல்களுக்குப் பெரும்பாலும் பயன்படுத்தும் சந்தேகத்திற்குரிய மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஏனைய வாகனங்களை இலக்கு வைத்து ஆங்காங்கே சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, சோதனைகள் மிகவும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வன்முறைகளில் ஈடுபடும் பாதாள உலக உறுப்பினர்களைக் கைது செய்வதற்கான விசேட விசாரணைகள் தற்போது நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

‘தேசிய நேர்மை வாரம்’ உத்தியோகபூர்வமாக இன்று ஆரம்பம்!

0

அரசு அலுவலகங்களுக்குச் சென்று வரிசையில் நின்று, ஒரு வேலையை முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும் அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா? இனி அந்த நிலைமை முற்றாக மாறப் போகிறது! இலங்கையின் அரச சேவையில் மலிந்துள்ள ஊழல், லஞ்சம் மற்றும் தேவையற்ற தாமதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஒரு முன்மாதிரியான நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில் “நேர்மையான கலாச்சாரம் – கிளீன் ஸ்ரீலங்கா” என்ற பிரம்மாண்டமான தேசிய வேலைத்திட்டம் உத்தியோகபூர்வமாகத் தொடக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியான விசேட சுற்றறிக்கைக்கு அமைய, ஜனாதிபதி அலுவலகமும் கிளீன் ஸ்ரீலங்கா தேசிய செயற்றிட்டமும் இணைந்து இந்த அதிரடி மாற்றத்தைக் கையில் எடுத்துள்ளன.

இதன் முதற்கட்டமாக, ஜூலை 27 திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு ஜனாதிபதி செயலகம் உட்பட நாட்டின் நாலாபாகங்களிலுமுள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும் லட்சக்கணக்கான அரச ஊழியர்கள் ஒரே நேரத்தில் “தேசிய நேர்மைப் பிரமாணம்” எடுத்துக்கொண்டனர். வெறுமனே பிரமாணத்தோடு மட்டும் நின்றுவிடாமல், அவர்களின் சுய ஒழுக்கம் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் புதிய ஒழுக்கக் கோவையும் இதன்போது அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நேர்மை வாரம் ஜூலை 27 முதல் ஜூலை 31 வரை பிரத்யேகமாக அனுசரிக்கப்பட்டாலும், இது ஒரு வார கால கொண்டாட்டத்தோடு முடிந்துவிடப் போவதில்லை! அரச சேவையில் நிலையானதொரு மாற்றத்தை ஏற்படுத்த இந்த தேசிய செயற்பாடு 2026 டிசம்பர் 31 வரை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த 5 நாட்களிலும் அரச சேவையின் வெவ்வேறு துறைகளை மையப்படுத்தி, நிதி, தொழில்நுட்பம், ஆன்மீகம், உட்கட்டமைப்பு மற்றும் பசுமை சூழல் என தினமும் ஒரு சிறப்பு கருப்பொருளின் கீழ் தீவிர நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன.

ஆனால், இதில் பொதுமக்களாகிய உங்களுக்கு என்ன நன்மை? இங்குதான் இந்தத் திட்டத்தின் மிக முக்கிய மாஸ்டர் பிளான் ஒளிந்திருக்கிறது!

அரசு அலுவலகங்களில் நீங்கள் எதிர்கொள்ளும் ஊழல்கள், முறைகேடுகள் அல்லது அநீதிகளைத் தட்டிக்கேட்க “உள்விவகாரப் பிரிவுகள்” அனைத்து நிறுவனங்களிலும் உருவாக்கப்படுகின்றன. இனி எந்தவொரு அரச அதிகாரியும் லஞ்சம் கேட்கவோ, உங்களை அலைக்கழிக்கவோ முடியாது. பொதுமக்கள் தங்களின் முறைப்பாடுகளை மிக இலகுவாக QR குறியீடுகள், மின்னஞ்சல், அஞ்சல், தொலைபேசி மற்றும் இணையத்தளம் மூலமாக நேரடியாகச் சமர்ப்பிக்க முடியும்.

இங்கேதான் அடுத்த சுவாரஷ்யமான தொழில்நுட்பத் திருப்பம் வருகிறது! நீங்கள் செய்யும் முறைப்பாடுகள் ஏதோ ஒரு கோப்பில் தூங்கிவிடும் என்று நினைக்க வேண்டாம். பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது அந்தந்த நிறுவனங்களின் தலைவர்கள் என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதை, ஜனாதிபதி செயலகம் தனது பிரத்தியேக ‘டிஜிட்டல் கண்காணிப்பு அமைப்பு’ மூலம் நேரடியாகக் கண்காணிக்கவுள்ளது.

அரசு அதிகாரிகள் தனிப்பட்ட லாபங்களைத் தூக்கி எறிந்துவிட்டு, மக்களின் வரிப் பணத்தையும் பொதுச் சொத்துக்களையும் பாதுகாத்து, நேர்மையான சேவையை வழங்குவதை உறுதி செய்வதே இதன் இறுதி இலக்காகும். அரச சேவையில் ஏற்படப்போகும் இந்த டிஜிட்டல் புரட்சி நாட்டின் எதிர்காலத்தை எவ்வாறு மாற்றப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!