Home Blog

நாகவில்லுவில் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ்வின் நினைவுதினம்!

பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று நாகவில்லுவில் இடம்பெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வு!

இலங்கை திருநாட்டில் பெளதீக ரீதியான பல வேலைத்திட்டங்களையும், இடம்பெயர்வு மற்றும் எல்லை நிர்ணயம் தொடர்பான பறந்துபட்ட அறிவினையும் கொண்டிருந்த எருக்கலம்பிட்டியை சேர்ந்த மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது வருட நினைவு தின நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

அந்த வகையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் நினைவுப் பேருரையும், புத்தக வெளியீடு நிகழ்வும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் ஏற்பாட்டில் நேற்று 25.08.2025 புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய அதிபர் ஜனாப் S.M. ஹுஸைமத் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், புத்தி ஜீவிகள் மற்றும் குடும்பத்தார்கள் கலந்தகொண்டமை விஷேட அம்சமாகும்.

சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் பொருளாளர் ஜனாப் ஏ.ஜி. அனீஸ் (Bsc.Agri) அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.

மேலும் இஸ்லாமிய கற்கை அறபு மொழிப் பீட, தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களினால் நூல் அறிமுக உரையும், நினைவுப் பேருரையும் மிகவும் உணர்வுபூர்வமாக நிகழ்த்தப்பட்டது.

கிழக்கு மற்றும் தென் கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பங்களிப்பு அளப்பெரியது என நினைவு கூறிய பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன், வடக்கில் ஏற்பட்ட யுத்தம் மற்றும் முஸ்லிம்களின் இடம்பெயர்வு குறித்து அதீத அக்கறையுடன் செயற்பட்ட மிக முக்கியமானவர் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்கள் எனவும் எடுத்துரைத்தார்.

வடக்கு முஸ்லிம்களின் இடம்பெயர்வு மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பில் அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களுடன் பலதரப்பட்ட கலந்துரையாடல்களை நடத்தி, சர்வதேசம் வரை இவ்விடயங்களை கொண்டுசென்ற மகான் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் என பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் தனது உரையில் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் புதல்வி சட்டத்தரணி எப்.சப்னா ஹஸ்புல்லாஹ் அவர்களினால் ஏற்புரை நிகழ்த்தப்பட்டதுடன், நூல் வெளியீடு நிகழ்வும் இடம்பெற்றது.

நூலின் முதற்பிரதியை ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தரும், புத்தளம் எருக்கலம்பிட்டி பள்ளிவாசல் நிர்வாக சபையின் முன்னாள் உறுப்பினருமான ஜனாப் ரஹ்மத்துல்லாஹ் (GS) அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

மேலும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் செயலாளர் ஜனாப் எஸ்.எச்.எம். றிஸ்னி அவர்களினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டதுடன், தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன், மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பாரியாருக்கும் நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில், பேராசிரியர்கள், கல்விமான்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், பாடசாலைச் சமூகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் குடும்பத்தார்கள் என பலரும் கலந்து சிறப்பித்ததுடன், ஈ நியூஸ் பெஸ்ட் ஊடக நிறுவனம் ஊடக அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரணிலுக்காக ஒன்று திரண்ட அரசியல் தலைவர்கள்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விசாரணை கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது, நாட்டின் அடிப்படை ஜனநாயக நிறுவனங்களின் வலிமை குறித்து கடுமையான கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் விளைவுகள் ஒரு தனிநபரின் அல்லது எந்தவொரு அரசியல் கட்சிகளின் தலைவிதியையும் விட, சமூகத்தின் உரிமைகளுக்கான பிரச்சினைகளை தோற்றிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் தலைவர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைகளை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது மற்றும் விளக்கமறியலை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து நடத்திய விசேட ஊடக சந்திப்பில் பங்கேற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரல முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் அறிக்கையை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

போர்த்துக்கல் அணி சாம்பியன் ஆனது!

‘நேஷன்ஸ் லீக்’ கால்பந்தில் போர்ச்சுகல் அணி சாம்பியன் ஆனது. பைனலில் ‘பெனால்டி ஷூட் அவுட்டில்’ 5-3 என ஸ்பெயினை வீழ்த்தியது.

ஐரோப்பிய கால்பந்து அணிகளுக்காக ‘நேஷன்ஸ் லீக்’ தொடர் நடத்தப்படுகிறது. மொத்தம் 54 அணிகள் பங்கேற்றன. நேற்று ஜெர்மனியின் முனிக் நகரில் நடந்த பைனலில், போர்ச்சுகல், நடப்பு யூரோ சாம்பியன் ஸ்பெயின் பலப்பரீட்சை நடத்தின. போட்டியின் 21வது நிமிடம் ஜுபிமெண்டி (ஸ்பெயின்), 26வது நிமிடம் மெண்டிஸ் (போர்ச்சுகல்) தலா ஒரு கோல் அடித்தனர். 45வது நிமிடம் மைக்கேல் ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் ஸ்பெயின் அணி 2-1 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் 61 வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். போர்ச்சுகல் அணிக்காக இவர் அடித்த 138வது கோல் இது. 90 நிமிட முடிவில் போட்டி 2-2 என சமன் ஆனது. அடுத்து நடந்த கூடுதல் நேரத்திலும் (30 நிமிடம்) இரு அணியும் கோல் அடிக்கவில்லை.

இதையடுத்து வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி ‘பெனால்டி ஷூட் அவுட்டுக்கு’ சென்றது. இரு அணிக்கும் தலா 5 வாய்ப்புகள் தரப்பட்டன. காயம் காரணமாக 88 வது நிமிடம் வெளியேறிய ரொனால்டோ, இதில் பங்கேற்கவில்லை.

முதல் 3 வாய்ப்பில் போர்ச்சுகலின் ராமோஸ், விடின்ஹா, பெர்ணான்டஸ் கோல் அடித்தனர். மறுபக்கம் ஸ்பெயின் தரப்பில் மெரினோ, பயேனா, இஸ்கோ கோல் அடிக்க 3-3 என ஆனது.

4வது வாய்ப்பில் மெண்டெஸ் (போர்ச்சுகல்) கோல் அடிக்க, ஸ்பெயினின் மோராட்டோ அடித்த பந்தை கோல் கீப்பர் டீகோ கோஸ்டா தடுத்து அசத்தினார்.

5வது வாய்ப்பில் நெவேஸ் கோல் அடித்தார். இதையடுத்து 5-3 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் ‘திரில்’ வெற்றி பெற்றது. 2019க்குப் பின் இத்தொடரில் மீண்டும் சாம்பியன் ஆனது.

தில்லையடியில் சிக்கிய கடத்தல் பீடி இலைகள்!

புத்தளத்தில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளுடன் வேன் ஒன்றும் பறிமுதல்!

இலங்கை கடற்படை, பொலிஸாருடன் இணைந்து, புத்தளம், தில்லையடி பகுதியில் 2025 ஜூன் 05 இரவு வேளையில் நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகள் கொண்ட ஒரு வேன் கைப்பற்றப்பட்டது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிறுவனம், புத்தளம் பொலிஸாருடன் இணைந்து தில்லையடி பகுதியில் நடத்திய இந்த சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்று சோதனை செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகளானது வாகனத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் வேன் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களால் ஆபத்தா?

விண்வெளியில் பூமியை சுற்றி வந்துக்கொண்டிருக்கும் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கொள்களை சீனா நினைத்தால் வெறும் 12 மணி நேரத்தில் தாக்கி அழித்துவிட முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் என்கிற செய்தி ஊடகத்தில் இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது தற்போது சீனா 99 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. இவை அனைத்தும் நான்ஜிங் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஆஸ்ட்ரோனாட்டிக்ஸ் பல்கலைக்கழகத்தின் விண்வெளிக் கட்டுப்பாட்டுத் துறையின் இயக்குநர் வூ யுன்ஹுவா தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இவை அனைத்தும் எலான் மஸ்கின் 1400 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை வெறும் 12 மணி நேரத்தில் காலி செய்துவிடும். சீன செயற்கைக்கோளில் லேசர், நுண் அலைகளை உருவாக்கும் கருவி, உளவு கருவிகள் பொருத்தப்பட்டிருக்கலாம். ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் வெறுமென நெட்வொர்க் கொடுக்க மட்டுமே பயன்படுத்தப்படுவதில்லை. தவிர, ராணுவ நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது என சீனா குற்றம்சாட்டி வருகிறது.

அதாவது, உக்ரைன்-ரஷ்யா போரில், உக்ரைன் படைகளுக்கு தகவல்கள் கொடுக்கவும், ரஷ்ய எல்லையை துல்லியமாக கண்காணிக்கவும் இந்த செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த 2022ம் ஆண்டு ரஷ்ய போரின்போது அப்போதைய உக்ரைனின் துணைப் பிரதமரான மைக்கைலோ ஃபெடோரோவ், “ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் சேவையை உடனடியாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த மஸ்க், “உடனடியாக சேவை வழங்கப்படும்” என்று கூறியிருந்தார்.

உக்ரைன் போருடன் மட்டுமே ஸ்டார்லிங்க் நிற்காது, நாளை சீனாவுக்கும்-தைவானுக்கும் பஞ்சாயது ஏற்பட்டால் அப்போதும், தைவானுக்கு சப்போர்ட் செய்ய ஸ்டார்லிங்க் வரும். எனவே இந்த கூட்டு நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்க சீனா இந்த புதிய செயற்கைக்கோள்களை உருவாக்கியிருக்கிறது.

கடந்த 2023ம் ஆண்டு இதற்கான பணிகளை சீனா தொடங்கியது. இந்த திட்டத்திற்கு ‘கியான்ஃபான் மெகா-விண்மீன் திட்டம்’ (Qianfan mega-constellation project) என்றும் பெயரிட்டிருந்தது. நோக்கம் உலகம் முழுவதும் இணைய தொடர்பை வழங்குவதாகும். இதற்காக மொத்தம் 15,000 சிறிய ரக செயற்கைக்கோள்களை ஏவ சீனா முடிவெடுத்தது. இதன் முதல் தொகுப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏவப்பட்டது. இதில் 18 செயற்கைக்கோள்கள் இருந்தன.

ஒவ்வொன்றும் சுமார் 300 கி.கி எடையில் இருந்தது. இவை பூமியிலிருந்து 800 கி.மீ உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டது. இதேபோன்று 2024 டிசம்பரில் அடுத்து இரண்டு தொகுதி ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. தற்போது மொத்தம் 99 செயற்கைக்கோள்கள் விண்வெளியில் இருக்கின்றன. 15,000 செயற்கைக்கோள்களை 3 கட்டங்களாக ஏவ இருக்கிறது. முதல் கட்டத்தில் 1,296 செயற்கைக்கோள்கள் ஏவப்படும். இதில் 648 செயற்கைக்கோள்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஏவப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் கன்னி உரை

அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்புவோம்

தேசியத்துவத்துடனும் ஐக்கியத்துடனும் ஒன்றுபட்டு நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க இன்று (23) காலை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

பதவிப் பிரமாணத்தின் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய முழுமையான உரை:

மக்களால் ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது நமது நாட்டின் ஜனநாயகத்திலிருக்கும் மிக முக்கியமான அம்சமாகும். தேர்தலில் வாக்களித்தல் மற்றும் ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதோடு ஜனநாயகம் நிறைவு பெறுவதில்லை. இது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சம் என்றாலும், நம் நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்த, கட்டமைப்புகளின் வலிமையும், சட்டங்களை வலுப்படுத்துவதும் அவசியம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனவே, எனது பதவிக்காலத்தில் இந்த நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.

அத்துடன், இந்த நாட்டில் ஜனநாயக முறையில் அதிகாரப் பரிமாற்றம் நடந்த வரலாறும் உண்டு. தேர்தலில் நிகழும் அதிகாரப் பரிமாற்றத்தை எந்தத் தலைவரும் நிராகரித்ததில்லை. அதற்கமைய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த மக்கள்ஆணையை சுமூகமாக ஏற்றுக்கொண்டதுடன், ஜனநாயக ரீதியில் அதிகாரத்தை கைமாற்றுவதற்கான அவரின் அர்ப்பணிப்பிற்கும் முன்னுதாரணத்திற்கும் நன்றி தெரிவிக்கிறேன். மேலும் எமக்கு கிடைப்பது மிகவும் சவால் நிறைந்த நாடு என்பதை நன்கு புரிந்து கொண்டிருக்கிறோம். நமது அரசியலில் தூய்மையான, மக்களால் எதிர்பார்க்கப்படும் சிறந்த அரசியல் கலாசாரத்திற்காக அவசியம் காணப்படுகிறது.அதற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

நம் நாட்டின் அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு நல்லெண்ணம் இல்லை. எனவே, அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் மீது மக்கள் மரியாதை மற்றும் நம்பிக்கையை மீட்டெடுக்க எங்கள் தரப்பிலிருந்து முடிந்த அனைத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.

மேலும், நமக்கு முன் இருக்கும் இந்த ஆழமான நெருக்கடியை வெறும் அரசோ, வெறும் அரசியல் கட்சியோ அல்லது ஒரு தனி நபரோ மட்டும் தீர்க்க முடியும் என்று நாங்கள் நம்பவில்லை. ஏனென்றால், நான் முன்பு கூறியது போல், நான் ஒரு மாயாஜால வித்தைக்காரனல்ல. நான் மந்திரவாதியும் இல்லை. நான் இந்த நாட்டின் சாதாரண குடிமகன். எம்மிடம் திறமைகள் உள்ளன. இயலாமைகளும் உள்ளன. தெரிந்த விடயங்களும் உள்ளன அதேபோன்று, தெரியாத விடயங்களும் உள்ளன.

ஆனால் திறமைகளைப் பயன்படுத்தி தெரியாதவற்றை சேகரித்துக்கொண்டு சிறந்த முடிவுகளை எடுத்து இந்த நாட்டை வழிநடத்துவதே எனது தலையாய பணியாகும். அந்த கூட்டுப் பங்களிப்பின் ஒரு அங்கமாக மாறுவது எனது பொறுப்பாகும். மேலும், இந்த நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதில் பொது மக்கள் மற்றும் அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் பாரிய பொறுப்பு உள்ளது. அந்தப் பொறுப்பை நிறைவேற்ற அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்.

ஆனால், நாட்டின் ஜனாதிபதி என்ற முறையில், இந்தப் பணியை முன்னின்று நடத்துவதில் எனக்கு முதன்மையான மற்றும் மிக முக்கியமான பொறுப்பு இருப்பதை நான் ஏற்றுக்கொண்டேன். எனவே, இந்தச் சவாலை வெற்றிகொள்வதற்காக எனக்குக் வழங்கப்பட்டுள்ள பணியை நான் உரிய முறையில் நிறைவேற்றுவேன் என்பதை செயற்பாடு மற்றும் நடைமுறை மூலம் எல்லா சந்தர்ப்பங்களிலும் இந்த நாட்டின் பிரஜைகளுக்கு வெளிப்படுத்த நான் தயாராக இருக்கிறேன்.

மேலும் நமது நாட்டுக்கு சர்வதேச ஆதரவு தேவை. எனவே, உலகில் எத்தகைய அதிகாரப் பிளவுகள் இருந்தாலும், ஒவ்வொரு நாட்டையும் எமக்கு மிகவும் சாதகமாக கையாள்வதே நமது எதிர்பார்ப்பாகும். நாம் உலகில் தனிமைப்படுத்தப்பட்ட நாடு அல்ல. உலகத்துடன் கூட்டாக முன்னேற வேண்டிய ஒரு நாடாகும். அது தொடர்பில் தேவையான முடிவுகளை எடுக்க நாங்கள் சிறிதும் தயங்குவதில்லை.

மேலும், நம் நாட்டைக் கட்டியெழுப்புவதில் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு பெரும் பங்கு உள்ளது. எனவே, நாட்டை மேலும் வலுவாகக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு அவர்கள் ஆதரவளிப்பார்கள் என நான் கருதுகின்றேன்.

நம் நாட்டின் ஜனநாயகத்தின் ஊடாக நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். அதற்காக மக்கள் எனக்கு வாக்களித்தனர்.

மேலும் எனக்கு வழங்கப்படாத வாக்குகளும் உள்ளன. எனவே, எங்களின் வெற்றியின் உள்ளடக்கம் மற்றும் அளவு குறித்து எங்களுக்கு நல்ல புரிதல் உள்ளது. எனவே, எங்களுக்கு ஆதரவு வழங்காத மற்றும் எங்களை நம்பாத பிரஜைகளின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெறுவதே எனது நிர்வாகத்தின் போது எனக்கு வழங்கப்பட்டுள்ள பணியாகும். அந்தப் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

எதிர்காலத்தில் இவை அனைத்தையும் நீங்கள் நடைமுறையில் கண்டுகொள்ள முடியும். அதற்கு அனைத்து மக்களின் ஆதரவையும் எதிர்பார்க்கின்றேன்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தேர்தலில் இவ்வாறுதான் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்

அதிகாரிகள் மற்றும் பிற தேவைகள் முடிந்த பிறகு, மாலை 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (19) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி பிற்பகல் 4.15 மணிளவில் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“எதிர்வரும் 21ம் திகதி வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள் பெறப்பட்டதும், அதிகாரிகள் மற்றும் இதர தேவைகள் முடிந்ததும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் இரவு 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

மாலை 4.15 மணிளவில் தபால் மூல வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

அத்துடன் மாவட்ட அளவில் ஒவ்வொரு வட்டாரத்திலும் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெறும்.

வாக்கு எண்ணிக்கையின் முடிவில் முடிவுகள் கிடைத்தவுடன் ஊடகங்களுக்கு வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையே முதலில் எண்ணப்படும்.

அந்தக் கணக்கெடுப்பின் பின்னர் (மாவட்ட அளவில் எண்ணும் பணி) முதலில் வாக்குப்பெட்டிகளில் உள்ள வாக்குகள் எண்ணப்படும்.

அதன் பிறகு, ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு, தொகுதி மற்றும் மாவட்ட அளவில் அது தயாரிக்கப்படுகிறது.

தேர்தல்கள் செயலகமே ஒட்டுமொத்த முடிவுகளைக் கணக்கிடும்.

எந்த வேட்பாளரும் 50 வீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்றுள்ளாரா என சரிபார்க்கப்படும்.

அப்படியானால், அந்த நேரத்தில் வாக்கு எண்ணும் பணிகள் நிறுத்தப்படும்.

அப்போது ஜனாதிபதியை நாங்கள் அறிவிப்போம்.

எந்த வேட்பாளருக்கும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் கிடைக்காவிடின், விருப்பு வாக்கு எண்ணிக்கைக்கு செல்ல வேண்டும்.

அங்கு, அதிக வாக்குகள் பெற்ற இரண்டு வேட்பாளர்கள் போட்டியில் வைத்து விட்டு  மீதமுள்ள 36 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து நீக்கப்படுவர்” என்றார்.

புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக மாறும்

புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வாத்தியாசலையாக மாற்றம் பெரும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று புத்தளத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ அலிசப்ரி ரஹீம் மற்றும் சிந்தக்க மாயாதுன்ன தலைமையில் புத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்திலே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

புத்தளம் மக்களின் நீண்ட நாள் தேவையாக இருந்து வருகின்ற புத்தளம் தல வைத்தியசாலையை தரமுயர்த்துவது தொடர்பாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ அலிசப்ரி ரஹீம் அவர்களினால் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோலுக்கிணங்க குறித்த வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.

மேலும் புத்தளத்தில் மீன் பிடி தொழிலை முன்னேற்றும் நோக்கத்தில் மீன் பிடி துறைமுகம் ஒன்றை அமைக்கும் யோசனையும் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டதுடன், அதற்கான முன்னெடுப்புகளும் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்டமை புத்தளம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நாட்டில் நிரந்தர பொருளாதார அபிவிருத்தியை நிலை நாட்ட தாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டை பொருளாதார அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவதே தனது பிரதான நோக்கம் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மொட்டுக்கட்சிக்கு எதிராக நிற்கும் முக்கிய அமைச்சர்கள்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக மொட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளரை இந்த வாரம் அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்காதிருக்கவும், மொட்டு சின்னத்தில் தனியாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமக்கு ஆதரவு வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பியிருந்த கடிதம் நேற்றைய தினம் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தினால் அரசியல் குழுவில் முன்வைக்கப்பட்டது.

எவ்வாறாயினும் அந்த கடிதத்தை நிராகரிக்க அரசியல் குழுக் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுவில் 82 பேர் அங்கம் வகிப்பதுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் 72 பேர் பங்கேற்றனர்.

இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த 11 பேர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

மஹிந்தானந்த அலுத்கமகே, பந்துல குணவர்தன, பிரதீப் உந்துகொட, கோகிலா ஹர்ஷனி குணவர்தன, சஹன் பிரதீப், ரமேஸ் பத்திரன, கஞ்சன விஜேசேகர, பிரசன்ன ரணதுங்க, கனக ஹேரத், மொஹான் பிரியதர்ஷன ஆகியோர் கட்சியின் சார்பில் தனியான வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

அத்துடன் பிறிதொரு கட்சியின் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்கும் உறுப்பினர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் யோசனைக்கு 6 பேர் எதிராக வாக்களித்துள்ளனர்.

எவ்வாறாயினும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் எனக் கூறப்பட்ட தம்மிக பெரேரா தொடர்பில் அரசியல் குழுக் கூட்டத்தின்போது எந்தவித கருத்துக்களும் பரிமாற்றிக் கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவளிக்காத 11 பேர் உள்ளிட்ட தரப்பினர் நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தனவின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சைனப் ஆரம்பப் பாடசாலைக்கு ஆளுநர் வருகை!

புத்தளம் சைனப் ஆரம்ப பாடசாலையின் முப்பெரும் விழா பாடசாலை அதிபர் யஹியா தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து புத்தளம் ஜெய்னப் பாடசாலைக்கு 22 லட்சம் ரூபா பெறுமதியான நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு, சிறுவர் விளையாட்டு நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தல் மற்றும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் செயற்திட்டத்தின் கீழ் BCMH நிறுவனத்தினால் கற்றல் உபகரணம் வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் கடந்த செவ்வாய்க்கிழமை (16) வெகு விமர்சையாக இடம்பெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதியாக வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், விசேட அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மற்றும் கௌரவ அதிதியாக புத்தளம் வலயக்கல்விப் பணிப்பாளர் அர்ஜுன ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆரம்ப பாடசாலையின் முக்கியத்துவம் மற்றும் அறிவார்ந்த சமூகத்தை கட்டியெழுப்ப ஆரம்ப பாடசாலை ஆற்றிவருகின்ற அர்ப்பணிப்பு குறித்து விரிவாக பேசிய வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், புத்தளம் மாவட்ட பாடசாலைகளின் துரித வளர்ச்சி பற்றியும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

மேலும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் செயற்திட்டத்திற்கு வடமேல் மாகாண ஆளுநர் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் ஜவ்ஷி ஜமால்தின், இணைப்புச் செயலாளர் எச். அமீர் அலி ஆசிரியர், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் உட்பட உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் அயல் பாடசாலையின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு
நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு

ஹிருணிகாவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறை

கடத்தல் வழக்கில் முன்னாள் எம்.பி ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்தத் தீர்ப்பை அறிவித்தார்.

தெமட்டகொட பகுதியிலுள்ள கடை ஒன்றில் பணிபுரிந்த அமில பிரியந்த அமரசிங்க எனும் இளைஞர் ஒருவரை 2015 டிசம்பர் 21ஆம் திகதி ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு சொந்தமான டிபெண்டர் வாகனத்தில் கடத்திய வழக்கு விசாரணை முடிவில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

29 குற்றங்கள் தொடர்பில் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் 8 பேரும் குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில், அச்சம்பத்திற்கு உதவி, ஒத்தாசை புரிந்ததாக ஹிருணிகா மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்திருந்தார்.

அத்தோடு, சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவின் ஆதரவாளர்கள் 8 பேர் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைதான ஐந்தாம் சந்தேகநபரின் மகள் அளித்துள்ள வாக்குமூலத்தில், தமது தாயாருடன் தொடர்பு பேணிய நபர் ஒருவரை தாம் காண்பித்ததாகவும், அவரை தமது தந்தையும் அவருடன் சென்றவர்களும் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு ஹிருணிகாவிடம் அழைத்துச் சென்றதாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

ஓவியப்போட்டியில் எருக்கலம்பிட்டி மாணவன் முதலாமிடம்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட வட மாகாண மானவர்களுக்கிடையிலான சித்திரப்போட்டியில் மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்றார்.

வீதி விபத்துக்கள் இல்லாத நாளைக்கான பாடசாலையிலிருந்து அணிவக்குப்போம் எனும் தொனிப்பொருளில் கடந்த வியாழக்கிழமை (13.06.2024) அன்று நடாத்தப்பட்ட வட மாகாண மாணவர்களுக்கிடையிலான குறித்த சித்திரப்போட்டியில் சுமார் 2600 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

சித்திரப்போட்டியில் பங்குபற்றிய 2600 மாணவர்களில் 250 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு நேற்றைய தினம் (15.06.2024) அவர்களுக்கான போட்டி இடம்பெற்றது.

நடைபெற்று முடிந்த இறுதிச் சுற்றுப்போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்று பெருமதிமிக்க பரிசில்களை பெற்றுக்கொண்டார்.

முதலாம் இடம் பெற்ற முஹம்மது ஹுசைன் என்ற மாணவனுக்கு சான்றிதல், துவிச்சக்கரவண்டி மற்றும் 8500/- ரூபா பெறுமதியான வவுச்சரும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இதேவேளை குறித்த போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய இல்முதீன் முஹம்மது ஹஸ்பான் 7 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய மற்றொரு மாணவரான முஹம்மது சம்ஹான் 8 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

பாரிய சாவல்களுக்கு மத்தியில் தனி ஒரு மனிதனாக இம் மாணாவர்களை ஊக்கப்படுத்தி, தயார்ப்படுத்தி போட்டியில் பங்குபெறச் செய்து வெற்றிபெறச் செய்த எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியின் சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் அவர்களின் இம் முயற்சிக்கு, பாடசாலை சமூகம் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் நன்றி தெரிவித்தனர்.

தமக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வந்து தேசிய அளவில் இடம்பெறும் போட்டிகளில் மாணவர்களை பங்குபெறச் செய்வதே தனது இலக்கு என சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் எமது ஊடகத்திற்கு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

புத்தளம் எருக்கலம்பிட்டியில் கடும் வெள்ளம்

புத்தளம் பகுதியில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக புத்தளம் பகுதி முழுதும் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.

புத்தளம், தில்லையடி, பாலாவி, புத்தளம் எருக்கலம்பிட்டி, ஹிதாயத் நகர்,  மதுரங்குளி மற்றும் ஏனைய பல கிராமங்களும் வெள்ளித்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமமும் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 1500 குடும்பங்கள் இங்கு வாழ்ந்துவருவதுடன், அனைத்து வீடுகளும் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நூற்றிற்கும் அதிகமான வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் ஐநூற்றுக்கும் அதிகமான வீடுகள் பகுதி அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8ஆம் திகதி ஏற்பட்ட மழை வெள்ளித்தினால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் மற்றும் பாடசாலைகளில் தற்காலிகமாக  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு தினங்களாக இவர்களுக்கான சமைத்த உணவுகள் மூன்று வேலைகளிலும் ஊர் தனவந்தர்களின் உதவியுடனும், பள்ளிவாசல் நிர்வாக சபையின் வழிகாட்டலுடனும் வழங்கப்பட்டு வருவதுடன், ஊர் மக்களுக்கும் உணவு விநியோகங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

இவர்களுக்கான நிவாரண உதவிகள் இதுவரை அரசாங்கத்தினால் வழங்கப்படாத போதிலும், ஊர் மக்களின் பங்களிப்புடன் மாத்திரமே பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு விநியோகங்கள் இதுவரை  வழங்கப்பட்டு வருகின்றது.

புத்தளம் பொத்துவில்லு பகுதியில் உள்ள குளம் மழை நீரினால்  பெருக்கெடுத்துள்ளதால் குறித்த குளத்து நீர் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமத்திற்குள் தொடர்ந்தும் மூன்றாவது நாளாக ஊடறுத்து செல்வதால் வீடுகள் தொடர்ந்தும் நீருள் மூழ்கியுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்தின் நிவாரண உதவிக்காக பல மக்கள் தொடர்ந்தும் எதிர்பார்த்து காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் சமல் ராஜபக்ஷ!

இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஏயார்பஸ் விமானக் கொள்வனவு விவகாரம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இது தொடர்பான விசேட விசாரணைகளுக்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ, இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவில் இன்று ஆஜராகியுள்ளார்.

இன்று (08) காலை சரியாக 10.00 மணியளவில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் தலைமை அலுவலகத்திற்கு அவர் வருகை தந்திருந்தார். நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த சிறிலங்கன் ஏயார்பஸ் விமானக் கொள்வனவு கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காகவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டிருந்தார்.

விசாரணை அதிகாரிகளால் ஏயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்ததுடன், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த வாக்குமூலம் பதிவு செய்யும் நடவடிக்கைகள் தீவிரமாக இடம்பெற்றன.

வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் நிறைவடைந்ததையடுத்து, அவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு வளாகத்திலிருந்து அமைதியாக வௌியேறிச் சென்றார். இந்த விவகாரம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தற்போது அரசியல் வட்டாரங்களில் தீவிரமடைந்துள்ளது.

தில்லையடி,பாலாவி,அட்டவில்லு பகுதி மக்களின் சொந்த வீட்டுக் கனவு நனவு!

புத்தளம்: கூரை இல்லாத பாதுகாப்பற்ற வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அடிப்படை வசதிகளற்ற வறிய குடும்பங்களுக்கு நிரந்தர புகலிடம் அமைத்துக் கொடுக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் புத்தளத்தில் வேகமெடுத்துள்ளது.

அந்த வகையில், புத்தளம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தில்லையடி கிராம உத்தியோகத்தர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட வறிய குடும்பம் ஒன்றின் சொந்த வீட்டுக் கனவை நனவாக்கும் விசேட அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (06.09.2026) ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்பிட்டி மற்றும் புத்தளம் பிரதேச செயலக அபிவிருத்தி குழு தலைவருமான M.J.M. பைசல் தலைமையில் இந்த நிகழ்வு உத்தியோகபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. “நிரந்தர வீடு, நிரந்தர நம்பிக்கை” என்ற தொனிப்பொருளில், எளிய மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் முழுமையான அரச நிதிப் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படும் இத்திட்டம், வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் சமூக பாதுகாப்பையும் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துவதை பிரதான இலக்காகக் கொண்டுள்ளது. பல வருடங்களாக நிரந்தர தங்குமிட வசதியின்றி தவித்த குறித்த குடும்பத்திற்கு, இத்திட்டத்தின் ஊடாக வாழ்நாள் உத்தரவாதம் கிடைத்துள்ளது.

இதேவேளை புத்தளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அட்டவில்லுவ கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள வரிய குடும்பம் ஒன்றிற்கும், புத்தளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பாலாவி கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள மற்றுமொரு வரிய குடும்பம் ஒன்றிற்குமான நிரந்தர வீடொன்றினை அரசாங்க நிதியுதவியுடன் தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்பிட்டி மற்றும் புத்தளம் பிரதேச செயலாக அபிவிருத்தி குழு தலைவருமான உறுப்பினர் M.J.M.பைசல் அவர்களால் கடந்த ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

குறித்த நிகழ்வுகளில் புத்தளம் மாநகர சபையின் முதல்வர் ரின்ஷாட் அகமட், மாநகர சபையின் தில்லையடி வட்டார உறுப்பினரும் பிரஜா சக்தி CDC தலைவருமான சஹ்ரான், புத்தளம் தள வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு தலைவர் ஜஹாஸ் மற்றும் இவர்களுடன் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள், பிரதேச செயலகத்தின் அரச உத்தியோகத்தர்கள், வீட்டுத்திட்ட கள அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சூடாகும் இலங்கை கடல் — பேராபத்தில் அரிய கடல் பாலூட்டிகள்!

  • எச்சரிக்கை: சூடாகும் இலங்கை கடல் — பேராபத்தில் அரிய கடல் பாலூட்டிகள்!
  • எல் நினோ தாக்கம்: கடலுக்கு அடியில் நிகழும் அமைதியான பேரழிவு?
  • இலங்கை கடற்பரப்பில் வெளிறும் பவளப்பாறைகள்: வனஜீவராசிகள் திணைக்களம் விடுத்துள்ள அவசர தகவல்!

இலங்கையைச் சூழவுள்ள ஆழ்கடல் பகுதியில் வழமைக்கு மாறான சூழலியல் மாற்றமொன்று மிகத் தீவிரமாக உருவாகி வருகின்றது. உலகளாவிய ரீதியில் உக்கிரமடைந்து வரும் எல் நினோ (El Niño) காலநிலை மாற்றத்தின் நேரடித் தாக்கம், தற்போது எமது கடல் நீரின் வெப்பநிலையை ஆபத்தான அளவுக்கு உயர்த்தத் தொடங்கியுள்ளது. இதன் விளைவாக, இலங்கை கடற்பரப்பை நம்பி வாழும் அரிய வகை கடல் பாலூட்டிகளின் பிரதான உணவு வலையமைப்பு முற்றாகச் சீர்குலையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் எச்சரித்துள்ளது.

இந்த வெப்ப அதிகரிப்பானது கடலின் அடியாழத்து நீரோட்டங்களில் பாரிய மாறுதல்களைத் தூண்டியுள்ளது. இதன் காரணமாக, கடல்வாழ் உயிரினங்களின் வாழ்விடங்களாகத் திகழும் பவளப்பாறைகள் மற்றும் கடல் தாவரங்களை அண்டிய போசணைப் பகுதிகள் மிகக் கடுமையான அழுத்தத்தை எதிர்கொள்கின்றன. கடல் பாலூட்டிகள் உயிர்வாழ்வதற்குத் தேவையான ஊட்டச்சத்து சமநிலை இதனால் நேரடியாகக் கேள்விக்குறியாகியுள்ளது.

நிலப்பரப்பில் ஏற்படும் வெப்ப அலைகளைக் கட்டுப்படுத்துவதற்கோ அல்லது தணிப்பதற்கோ பல்வேறு உபாயங்கள் உண்டு; ஆனால் கடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவது மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட ஒரு கடினமான விடயமாகும் என வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரஞ்சன் மாரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் ஏற்படக்கூடிய அழிவுகளைத் தடுத்து நிறுத்துவதை விட, இழப்புகள் ஏற்படும் பட்சத்தில் அவற்றை மிக விரைவாக வழமைக்குக் கொண்டுவருவதற்கான விசேட மறுசீரமைப்புத் திட்டங்களை வகுப்பதிலேயே திணைக்களம் தற்போது முழு மூச்சாகக் கவனம் செலுத்தி வருகின்றது.

இதனிடையே, கடலின் இந்த தீவிர வெப்பம் காரணமாகப் பவளப்பாறைகள் நிறமிழந்து வெளிறும் நிலை (Coral Bleaching) ஏற்கனவே நாட்டின் இரண்டு கடற்பிரதேசங்களில் அவதானிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை உயரும் காலப்பகுதியில் இது பொதுவாக நிகழக்கூடிய ஒன்றுதான் என்றாலும், தற்போதைக்கு இந்த நிலைமை பாரியதொரு இயற்கைப் பேரழிவாக உருவெடுக்கவில்லை என அதிகாரிகள் நிம்மதி வெளியிட்டுள்ளனர்.

ஆயினும் ஆபத்து இன்னும் கடந்துவிடவில்லை. கடல் நீரின் வெப்பநிலை மாற்றத்திற்குப் பவளப்பாறைகள் அதீத உணர்திறன் (Extreme Sensitivity) கொண்டவை என்பதைச் சுட்டிக்காட்டும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் (செயற்பாடுகள்) மஞ்சுள அமரரத்ன, வெப்பம் சிறிதளவு உயர்ந்தாலும் கூட பவளப்பாறைகள் மிக மோசமான பாதிப்புகளுக்கு உள்ளாகும் அபாயம் எந்நேரமும் காணப்படுவதாகத் தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சுமணரத்ன தேரருக்கு விளக்கமறியல்: மட்டக்களப்பு நீதிமன்றம் உத்தரவு!

  1. கைதான அம்பிட்டியே சுமணரத்ன தேரருக்கு விளக்கமறியல்: மட்டக்களப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
  2. அலுவலகத்திற்குள் அத்துமீறல் குற்றச்சாட்டு: அம்பிட்டிய சுமணரத்ன தேரர் கைது; பிணையும் விளக்கமறியலும்!
  3. பரபரப்பான மட்டக்களப்பு: சுமணரத்ன தேரர் அதிரடி கைது – நீதிமன்றம் எடுத்த முக்கிய முடிவு என்ன?

மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சம்பவம் கிழக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஓகஸ்ட் 31 ஆம் திகதி, மட்டக்களப்பில் அமைந்துள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் பிராந்திய அலுவலகத்திற்குள் நுழைந்த தேரர், அங்கு பணியிலிருந்த அதிகாரிகளின் அரச கடமைகளுக்குப் பலவந்தமாக இடையூறு விளைவித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்த மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார், இன்று முற்பகல் அதிரடியாக அவரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட தேரர், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் முன்னிலைப்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதவான், சந்தேகநபரை நாளை (8) ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.

இதற்கிடையே, அவருக்கு எதிராக ஏற்கனவே நிலுவையில் இருந்த வேறு இரண்டு தனிப்பட்ட வழக்குகள் தொடர்பிலும் நீதிமன்றினால் முன்னதாகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த விடயம் விசாரணையின் போது கவனத்திற்கு வந்தது.

அவ்விரு வழக்குகளையும் ஆராய்ந்த நீதிமன்றம், தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளின் அடிப்படையில் அவருக்குப் பிணை வழங்க அனுமதித்த போதிலும், புதிய குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் தொடர்ந்து சிறைக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

நடுரோட்டில் மின்சார வண்டி: திகைத்துப் போன டிராஃபிக் போலீஸ்!

டிரெண்டிங் தலைப்புப் பரிந்துரைகள்:

  • பச்சை நம்பர் பிளேட்டால் நடுரோட்டில் நின்ற மின்சார வண்டி: திகைத்துப் போன டிராஃபிக் போலீஸ்!
  • “இது ஒரிஜினல் தான் சார்!” – புதிய மின்சார வாகனத்தை மறித்த பொலிஸுக்கு ஆதாரங்களைக் காட்டிய சாரதி!
  • திணைக்களத்தின் அலட்சியமா? புதிய இலக்கத் தகட்டால் வீதியில் சிக்கிய வாகன உரிமையாளர்!

நாடு முழுவதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமைப் புரட்சி குறித்து தீவிரமாகப் பேசப்பட்டு வரும் நிலையில், மின்சார வாகனங்களை அடையாளம் காண அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய “பச்சை நிற இலக்கத் தகடு” (Green Number Plate) தற்போது வீதிகளில் புதியதொரு குழப்பத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

வெலிவேரிய பகுதியில் தனது புத்தம் புதிய மின்சார சிற்றூந்தில் (Electric Van) பயணித்த உரிமையாளர் ஒருவருக்கு, வழியில் காத்திருந்தது முற்றிலும் எதிர்பாராத ஒரு சோதனை. வழக்கத்திற்கு மாறான பச்சை நிற இலக்கத் தகட்டைக் கண்ட போக்குவரத்து காவல்துறையினர், சந்தேகத்தின் பேரில் அந்த வாகனத்தை உடனடியாக வீதியோரமாக மறித்துள்ளனர்.

அங்குதான் ஆரம்பமானது விசித்திரமான ஒரு விசாரணைப் படலம்.

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தால் மின்சார வாகனங்களுக்கு என விசேடமாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புதிய இலக்கத் தகடு குறித்து களத்தில் நின்ற காவல்துறை அதிகாரிகளுக்கு எந்தவொரு தகவலும் தெரிந்திருக்கவில்லை. இதன் காரணமாக, தனது வாகனம் சட்டப்பூர்வமானது என்பதையும், இந்த இலக்கத் தகடு அரசினால் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டது என்பதையும் நிரூபிக்க வாகன உரிமையாளர் கடும் முயற்சி எடுக்க வேண்டியதாயிற்று. இறுதியாக, திணைக்களத்திலிருந்து தனக்கு வந்த உத்தியோகபூர்வ குறுஞ்செய்தி (SMS Confirmation) மற்றும் வாகனப் பதிவு ஆவணங்களை ஒவ்வொன்றாகக் காண்பித்த பின்னரே அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தமக்கு நேர்ந்த இந்த அசௌகரியம் குறித்து சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள குறித்த வாகன உரிமையாளர், களத்தில் கடமையாற்றும் போக்குவரத்து காவல்துறையினரை மட்டும் இதற்குப் பொறுப்பாக்க முடியாது என்பதை யதார்த்தமாகப் பதிவு செய்துள்ளார். மாறாக, இதுபோன்ற புதிய கொள்கை மாற்றங்கள் மற்றும் நடைமுறைகள் தொடர்பில் கீழ்மட்ட அதிகாரிகள் வரை உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படாத நிர்வாகத் தவறே இதன் பிரதான காரணியென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இத்தகைய சங்கடமான சம்பவங்கள் எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டுமாயின், இலக்கத் தகடு மாற்றங்கள் தொடர்பான உத்தியோகபூர்வ வர்த்தமானி அறிவித்தல்களை (Gazette notifications) தாமதமின்றி அனைத்து காவல்நிலையங்களுக்கும் போக்குவரத்துப் பிரிவுகளுக்கும் திணைக்கள அதிகாரிகள் உடனடியாக விநியோகிக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் பிரதான கோரிக்கையாகவுள்ளது.

அரச திணைக்களங்கள் புதிய திட்டங்களை அலுவலக மட்டத்தில் மட்டும் நடைமுறைப்படுத்திவிட்டு, களத்தில் நிற்கும் சட்ட அமுலாக்கல் அதிகாரிகளுக்குச் சரியான முறையில் கொண்டுசேர்க்கத் தவறுவது எந்தளவிற்கு பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் என்பதை இந்த சம்பவம் மிகத் தெளிவாக வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.

பகலில் கொளுத்தும் சூரியன் – பிற்பகலில் வெளுத்து வாங்கப் போகும் மழை!

  • இன்று நண்பகல் 12.08: தலைக்கு மேலே கொளுத்தப்போகும் சூரியன் – பிற்பகலில் வெளுத்துவாங்கப் போகும் மழை!
  • இலங்கைக்கு நேரே உச்சம் கொடுக்கும் சூரியன்: பிற்பகலில் இடிமின்னல் எச்சரிக்கை!
  • சூரியனின் உச்சம் ஒருபுறம், 50 மி.மீ கனமழை மறுபுறம்: வானிலை திணைக்களத்தின் அதிரடி அறிவிப்பு!

கொழும்பு: ஒருபுறம் உச்சி மண்டையைப் பிளக்கும் வகையிலான சூரியனின் நேரடிக் கதிர்கள், மறுபுறம் பிற்பகலில் இடிமின்னலுடன் வெளுத்துவாங்கக் காத்திருக்கும் அடைமழை என இலங்கை முழுவதும் இன்று ஒரு மாறுபட்ட வானிலை மாற்றத்தை எதிர்கொள்ளவுள்ளது.

வானிலை அவதான நிலையத்தின் சமீபத்திய முன்னறிவிப்பின்படி, நாட்டின் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பின்னர் ஆங்காங்கே இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் குறிப்பிட்ட சில இடங்களில் நிலைமை சற்றுத் தீவிரமடைந்து, சுமார் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை கொட்டித் தீர்க்கும் வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன. அதேவேளை, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ஆங்காங்கே சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

ஆனால், பிற்பகலில் பெய்யவுள்ள இந்த மழையை விடவும், அதற்கு முன்னதாக வானில் நிகழும் மற்றொரு வானியல் நிகழ்வே தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக, கடந்த ஓகஸ்ட் 28 ஆம் திகதி முதல் எதிர்வரும் செப்டம்பர் 07 ஆம் திகதியான இன்றைய தினம் வரை இலங்கைக்கு அண்மையிலுள்ள அட்சரேகைகளுக்கு நேரே சூரியன் உச்சம் கொடுத்து வருகின்றது.

இதன் உச்சகட்டமாக, இன்றைய தினம் நண்பகல் 12:08 மணியளவில் காலி, அங்குலுகஹ, இமதுவ, தெலிஜ்ஜவில, யடியன மற்றும் தங்காலை ஆகிய பிரதேசங்களுக்கு நேர் மேலாகச் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

இவ்வாறான தீவிர வானிலை மாற்றங்களின் போது வீசக்கூடிய திடீர் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய ஆபத்துகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மாதம்பையில் கொழுந்துவிட்டு எரிந்த தீ: நள்ளிரவு வரை நீடித்த போராட்டம்!

  • மாதம்பையில் கொழுந்துவிட்டு எரிந்த தீ: நள்ளிரவு வரை நீடித்த பெரும் போராட்டம்!
  • குப்பைக்கு வைத்த தீயால் மூண்ட விபரீதம்: மாதம்பை மர ஆலை தீக்கிரை!
  • மணித்தியாலக் கணக்கில் பரவிய தீ: தீவிர முயற்சியால் கட்டுக்குள் கொண்டுவந்த மீட்புக் குழுவினர்!

ஜுட் சமந்த

மாதம்பை: மாலை நேர அமைதியைச் சீர்குலைத்து திடீரென எழுந்த பெரும் கரும்புகையும் கொழுந்துவிட்டு எரிந்த தீப்பிழம்புகளும் மாதம்பை நகர மக்களைப் பெரும் அதிர்ச்சியிலும் அச்சத்திலும் ஆழ்த்தின.

மாதம்பை நகரில் இயங்கிவந்த தென்னை மர உற்பத்திகளை முன்னெடுக்கும் நிறுவனமொன்றிலேயே இந்தத் தீ விபத்து சம்பவித்துள்ளது. நேற்று (06) மாலை 5.00 மணியளவில் திடீரெனப் பற்றிக்கொண்ட தீ, உலர் மரங்கள் மற்றும் கழிவுகள் காரணமாக மிகக் குறுகிய நேரத்திற்குள் ஆலை முழுவதற்கும் விசுவரூபமெடுத்துப் பரவியது.

தீயின் வேகம் அதிகரித்ததைத் தொடர்ந்து, சிலாபம் நகர சபையின் தீயணைப்புப் பிரிவினர், மாதம்பை பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அப்பகுதி மக்கள் உடனடியாகக் களத்தில் இறங்கினர். தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் பல மணித்தியாலங்கள் முன்னெடுக்கப்பட்ட தீவிர போராட்டத்தின் பலனாக, நள்ளிரவு வேளையிலேயே தீ மேலும் பரவாமல் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்தத் திடீர் அனர்த்தத்திற்கான காரணம் குறித்து பொலிஸார் முன்னெடுத்த ஆரம்பகட்ட விசாரணைகளில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த உற்பத்தி நிறுவனத்திற்கு அருகில் குவிக்கப்பட்டிருந்த குப்பைக் கூளங்களுக்கு யாரோ வைத்த தீயே, எதிர்பாராத விதமாக ஆலைக்குள் பரவி இந்த விபரீதத்தை ஏற்படுத்தியுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதிர்ஷ்டவசமாக இந்தத் தீ விபத்தினால் எவருக்கும் காயங்களோ அல்லது உயிர்ச்சேதங்களோ ஏற்படவில்லை. எனினும், தொழிற்சாலைக்கு ஏற்பட்டுள்ள உத்தேச சொத்துச் சேத விபரங்கள் இதுவரை முழுமையாகக் கணக்கிடப்படவில்லை என்பதுடன், மாதம்பை பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

சிறுநீர் கழிப்பதால் எவரஸ்ட் உருகுகிறது!

  • எவரெஸ்ட்டை உருக்கும் சிறுநீர்: சர்வதேச ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்!
  • 154 டன் பனியை உருக்கியது மனிதக் கழிவா? எவரெஸ்ட் அடிவாரத்தில் நடந்த விபரீதம்!
  • உச்சந்தலை சுற்றவைக்கும் உண்மை: எவரெஸ்ட் பனிப்பாறைகளுக்கு மனிதர்களால் வந்த பேராபத்து!

எவரெஸ்ட்டை அச்சுறுத்தும் விநோத ஆபத்து: பனிப்பாறைகளை உருக்கும் சிறுநீர்!

உலகின் கூரையாகக் கருதப்படும் கம்பீரமான எவரெஸ்ட் சிகரம், புவி வெப்பமயமாதலால் உருகி வருவது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், அங்கு மலையேறும் மனிதர்களின் மிகச் சாதாரண அன்றாட உடலியல் நடவடிக்கை ஒன்று பனிப்பாறைகளை அசுர வேகத்தில் கரைத்து வருகிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? கேட்பதற்கே ஆச்சரியமாக இருந்தாலும், சர்வதேச விஞ்ஞானிகள் குழுவொன்று அண்மையில் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவு உலகெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

புகழ்பெற்ற ‘Regional Environmental Change’ என்ற சர்வதேச அறிவியல் இதழில் வெளியாகியுள்ள இந்த திடுக்கிடும் ஆய்வு முடிவின்படி, எவரெஸ்ட் அடிவார முகாமில் தங்கியிருக்கும் மலையேற்ற வீரர்கள் சிறுநீர் கழிப்பதன் மூலம் மட்டுமே பல டன் பனிப்பாறைகள் உருகிக் கரைந்து போவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. நேபாள நில அளவைத் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட ஆய்வாளர் கிம் லால் கௌதம் தலைமையிலான சர்வதேச ஆய்வாளர்கள் குழு, எவரெஸ்ட்டின் முக்கிய பகுதியான ‘கும்பு’ (Khumbu) பனிப்பாறைப் பகுதியில் 2023 வசந்த காலத்தில் விரிவான கள ஆய்வு ஒன்றை முன்னெடுத்த போதே இந்த உண்மை அம்பலமானது.

விஞ்ஞானிகளின் கணக்கீட்டின்படி, 2023 ஆம் ஆண்டில் மட்டும் எவரெஸ்ட் மலையேற்ற வீரர்களின் சிறுநீரினால் மாத்திரம் சுமார் 154 டன் பனி உருகியுள்ளது. சுமார் 50 நாட்கள் வரை நீடிக்கும் எவரெஸ்ட் மலையேற்றப் பருவத்தில், அங்கு தங்கியிருக்கும் வீரர்கள் மற்றும் உள்ளூர் வழிகாட்டிகளால் நாளொன்றுக்கு 6,000 லீட்டருக்கும் அதிகமான சிறுநீர் வெளியேற்றப்படுகிறது. இமயமலையின் அதீத உயரத்தில் உடலின் நீர்ச்சத்தைப் பேணிக்கொள்ள அவர்கள் அதிகளவில் தண்ணீரைக் குடிப்பதாலேயே இவ்வளவு பெருந்தொகையான கழிவுநீர் உருவாகிறது.

மனிதர்களின் திடக் கழிவுகள் முகாமிலிருந்து அகற்றப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டாலும், சிறுநீரானது நேரடியாகவே திறந்தவெளியில் பனிப்பாறைகளின் மீது வெளியேற்றப்படுகிறது. மனித உடலிலிருந்து வெளியேறும் சிறுநீரிலுள்ள இயற்கை வெப்ப ஆற்றல், உறைய வைக்கும் குளிரிலும் உறைபனியைத் துரிதமாக உருக்கும் பேராற்றலைக் கொண்டுள்ளது என்பதை ஆய்வாளர்கள் ஆதாரத்துடன் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆபத்து இத்துடன் முடிந்துவிடவில்லை. முகாமில் வீரர்கள் தங்குவதற்காகப் பயன்படுத்தப்படும் சமையல் வாயு, குளிர்காயும் வெப்பமூட்டிகள் மற்றும் ஜெனரேட்டர் மின்சாரத் தேவைகளுக்காக எரிக்கப்படும் எரிபொருட்களின் வெப்பமும் சேர்ந்து, ஒட்டுமொத்தமாக 2,492 டன் பனியை ஒரே பருவத்தில் உருக்கியுள்ளதாகத் தரவுகள் கூறுகின்றன. காலநிலை மாற்றம் உலகளாவிய அச்சுறுத்தலாக இருக்கும் அதேவேளை, எவரெஸ்ட் அடிவாரத்தில் குவியும் மனிதர்களின் இந்தத் தொடர் நடவடிக்கைகள் அந்தப் பிராந்தியத்தின் நுண்-காலநிலையை சீர்குலைத்து பனி உருகுதலை மேலும் துரிதப்படுத்துவதாக விஞ்ஞானிகள் தீவிர கவலை வெளியிட்டுள்ளனர்.

கஞ்சா, பீடி இலைகளைத் தொடர்ந்து புறாக்கள் கடத்தல்!

  • கஞ்சா, பீடி இலைகளைத் தொடர்ந்து புறாக்கள் கடத்தல்: கற்பிட்டி கடலில் சிக்கிய புதுவித சூதாட்டக் கும்பல்!
  • இந்தியாவிலிருந்து கடல் வழியாகப் பறந்து வந்த “சூதாட்டப் புறாக்கள்”: புத்தளத்தில் 4 பேர் அதிரடிக் கைது!
  • இலங்கைக் கடற்பரப்பில் முதன்முறையாக விநோத கடத்தல் முறியடிப்பு: பெட்டிகளுக்குள் அடைபட்ட புறாக்கள்!

ஜுட் சமந்த

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு போதைப்பொருட்களும் சட்டவிரோதப் பொருட்களும் கடத்தப்படுவது வழமையான ஒன்றாக இருந்துவரும் வேளையில், கற்பிட்டிக் கடற்பரப்பில் அனைவரையும் திகைக்க வைக்கும் வகையில் புதுவிதமான கடத்தல் சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

புத்தளம் பிராந்திய ஊழல் ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, கடந்த 5 ஆம் திகதி இரவு கற்பிட்டி – வன்னிமுந்தல் கடற்கரைப் பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு ஒன்று முன்னெடுக்கப்பட்டது. நள்ளிரவு வேளையில் கடலில் இருந்து பொருட்களை கரைக்குக் கொண்டுவந்து, அங்கிருந்து வாகனமொன்றிற்கு மாற்றிக் கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான குழுவை பொலிஸார் சுற்றிவளைத்தனர்.

சோதனையின் போது அதிகாரிகளுக்கே பேரதிர்ச்சி காத்திருந்தது; வழக்கமாகக் கைப்பற்றப்படும் கஞ்சாவோ, பீடி இலைகளோ அல்லது பூச்சிக்கொல்லிகளோ அங்கு இருக்கவில்லை. மாறாக, இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட நூற்றுக்கணக்கான புறாக்கள் 6 பிரத்தியேகப் பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன.

சம்பவ இடத்திலேயே புறாக்களை ஏற்றி வந்த படகு, படகு இயந்திரம் மற்றும் அவற்றை நாட்டின் பிற பகுதிகளுக்குக் கொண்டு செல்லத் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் என்பன பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன், மாவனல்லையைச் சேர்ந்த ஒருவரும், கற்பிட்டி – அல் மனார் பகுதியைச் சேர்ந்த மூவருமாக நான்கு சந்தேகநபர்கள் கையும் மெய்யுமாக மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.

பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, இந்தப் புறாக்கள் இலங்கையில் பாரிய அளவில் பணயம் வைத்து நடத்தப்படும் சட்டவிரோத “புறாப் பந்தய சூதாட்டத்திற்காகவே” இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்தியாவிலிருந்து இவ்வாறு பறவைகள் சூதாட்டத்திற்காகக் கடத்தப்பட்டு சிக்கிய முதலாவது சந்தர்ப்பம் இதுவென அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வனஜீவராசிகள் திணைக்களத்தின் நிபுணத்துவ உதவியுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. புத்தளம் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கபில பிரேமதாசவின் வழிகாட்டலில், ஊழல் ஒழிப்புப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பெர்னாண்டோ தலைமையிலான குழுவினர் இந்த விசேட அதிரடி நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

சின்னப்பாடு கடற்கரையில் கரை ஒதுங்கிய மர்ம படகு!

  • சின்னப்பாடு கடற்கரையில் கரை ஒதுங்கிய மர்ம படகு: ஆட்களும் இல்லை, வலைகளும் இல்லை!
  • முந்தல் கடற்பரப்பில் பரபரப்பு: இந்திய படகில் சட்டவிரோத கடத்தலா? போலீஸ் தீவிர விசாரணை!
  • நடுக்கடலில் கைவிடப்பட்டதா இந்திய படகு? புத்தளம் கடற்கரையில் மர்ம கேனுடன் சிக்கிய விபரம்!

ஜுட் சமந்த

முந்தல் – சின்னப்பாடு கடற்கரைப் பகுதியில் நேற்று முன்தினம் (05) மாலை இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் சிறிய ரக படகொன்று மர்மமான முறையில் கரை ஒதுங்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 20 அடி நீளமுடைய இந்த படகை உடப்பு பொலிஸார் நேரில் சென்று சோதனையிட்டபோது, பலத்த சந்தேகங்களை எழுப்பும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. படகினுள் வழமையாகக் காணப்படும் மீன்பிடி உபகரணங்களோ, வலைகளோ அல்லது மீனவர்களின் ஆடைகளோ எதுவுமே இருக்கவில்லை. இதனால், குறித்த படகில் வந்தவர்கள் யார், அவர்கள் எங்கே சென்றார்கள் என்ற எந்தத் தடயமும் இன்றி படகு அனாதையாகக் காணப்பட்டுள்ளது.

சந்தேகத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், படகு கரை ஒதுங்கிய இடத்திற்குச் சற்றுத் தொலைவில் பிளாஸ்டிக் கேன் ஒன்றும் அப்பகுதி மக்களால் கண்டெடுக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த கேனை திறந்து பார்த்தபோது, அதற்குள் இரண்டு வெற்று பொலித்தீன் பைகள் மட்டுமே இருந்துள்ளன.

இதனையடுத்து, குறித்த படகானது ஏதேனும் பாரிய சட்டவிரோத நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டு, அதன் பின்னர் நடுக்கடலில் திட்டமிட்டு கைவிடப்பட்டிருக்கலாம் என பொலிஸார் பலத்த சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி அதிகாலை வேளையிலும் சிலாபம் – அம்பகந்தவில கடற்கரைப் பகுதியில் இதேபோன்றதொரு இந்திய படகு கரை ஒதுங்கியிருந்தமை நினைவுகூரத்தக்கது. தொடர்ச்சியாக இவ்வாறான இந்திய படகுகள் இலங்கைக் கடற்பரப்பில் கரை ஒதுங்கி வருவது பாதுகாப்புத் தரப்பினரிடையே பலத்த கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளதுடன், சின்னப்பாடு பகுதியில் மீட்கப்பட்ட படகு தொடர்பில் உடப்பு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.