Saturday, May 16, 2026
Sponsored advertisementspot_img
Home Blog

நாகவில்லுவில் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ்வின் நினைவுதினம்!

பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று நாகவில்லுவில் இடம்பெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வு!

இலங்கை திருநாட்டில் பெளதீக ரீதியான பல வேலைத்திட்டங்களையும், இடம்பெயர்வு மற்றும் எல்லை நிர்ணயம் தொடர்பான பறந்துபட்ட அறிவினையும் கொண்டிருந்த எருக்கலம்பிட்டியை சேர்ந்த மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது வருட நினைவு தின நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

அந்த வகையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் நினைவுப் பேருரையும், புத்தக வெளியீடு நிகழ்வும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் ஏற்பாட்டில் நேற்று 25.08.2025 புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய அதிபர் ஜனாப் S.M. ஹுஸைமத் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், புத்தி ஜீவிகள் மற்றும் குடும்பத்தார்கள் கலந்தகொண்டமை விஷேட அம்சமாகும்.

சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் பொருளாளர் ஜனாப் ஏ.ஜி. அனீஸ் (Bsc.Agri) அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.

மேலும் இஸ்லாமிய கற்கை அறபு மொழிப் பீட, தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களினால் நூல் அறிமுக உரையும், நினைவுப் பேருரையும் மிகவும் உணர்வுபூர்வமாக நிகழ்த்தப்பட்டது.

கிழக்கு மற்றும் தென் கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பங்களிப்பு அளப்பெரியது என நினைவு கூறிய பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன், வடக்கில் ஏற்பட்ட யுத்தம் மற்றும் முஸ்லிம்களின் இடம்பெயர்வு குறித்து அதீத அக்கறையுடன் செயற்பட்ட மிக முக்கியமானவர் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்கள் எனவும் எடுத்துரைத்தார்.

வடக்கு முஸ்லிம்களின் இடம்பெயர்வு மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பில் அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களுடன் பலதரப்பட்ட கலந்துரையாடல்களை நடத்தி, சர்வதேசம் வரை இவ்விடயங்களை கொண்டுசென்ற மகான் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் என பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் தனது உரையில் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் புதல்வி சட்டத்தரணி எப்.சப்னா ஹஸ்புல்லாஹ் அவர்களினால் ஏற்புரை நிகழ்த்தப்பட்டதுடன், நூல் வெளியீடு நிகழ்வும் இடம்பெற்றது.

நூலின் முதற்பிரதியை ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தரும், புத்தளம் எருக்கலம்பிட்டி பள்ளிவாசல் நிர்வாக சபையின் முன்னாள் உறுப்பினருமான ஜனாப் ரஹ்மத்துல்லாஹ் (GS) அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

மேலும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் செயலாளர் ஜனாப் எஸ்.எச்.எம். றிஸ்னி அவர்களினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டதுடன், தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன், மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பாரியாருக்கும் நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில், பேராசிரியர்கள், கல்விமான்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், பாடசாலைச் சமூகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் குடும்பத்தார்கள் என பலரும் கலந்து சிறப்பித்ததுடன், ஈ நியூஸ் பெஸ்ட் ஊடக நிறுவனம் ஊடக அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரணிலுக்காக ஒன்று திரண்ட அரசியல் தலைவர்கள்!

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விசாரணை கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது, நாட்டின் அடிப்படை ஜனநாயக நிறுவனங்களின் வலிமை குறித்து கடுமையான கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் விளைவுகள் ஒரு தனிநபரின் அல்லது எந்தவொரு அரசியல் கட்சிகளின் தலைவிதியையும் விட, சமூகத்தின் உரிமைகளுக்கான பிரச்சினைகளை தோற்றிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் தலைவர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைகளை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது மற்றும் விளக்கமறியலை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து நடத்திய விசேட ஊடக சந்திப்பில் பங்கேற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரல முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் அறிக்கையை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

போர்த்துக்கல் அணி சாம்பியன் ஆனது!

0

‘நேஷன்ஸ் லீக்’ கால்பந்தில் போர்ச்சுகல் அணி சாம்பியன் ஆனது. பைனலில் ‘பெனால்டி ஷூட் அவுட்டில்’ 5-3 என ஸ்பெயினை வீழ்த்தியது.

ஐரோப்பிய கால்பந்து அணிகளுக்காக ‘நேஷன்ஸ் லீக்’ தொடர் நடத்தப்படுகிறது. மொத்தம் 54 அணிகள் பங்கேற்றன. நேற்று ஜெர்மனியின் முனிக் நகரில் நடந்த பைனலில், போர்ச்சுகல், நடப்பு யூரோ சாம்பியன் ஸ்பெயின் பலப்பரீட்சை நடத்தின. போட்டியின் 21வது நிமிடம் ஜுபிமெண்டி (ஸ்பெயின்), 26வது நிமிடம் மெண்டிஸ் (போர்ச்சுகல்) தலா ஒரு கோல் அடித்தனர். 45வது நிமிடம் மைக்கேல் ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் ஸ்பெயின் அணி 2-1 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் 61 வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். போர்ச்சுகல் அணிக்காக இவர் அடித்த 138வது கோல் இது. 90 நிமிட முடிவில் போட்டி 2-2 என சமன் ஆனது. அடுத்து நடந்த கூடுதல் நேரத்திலும் (30 நிமிடம்) இரு அணியும் கோல் அடிக்கவில்லை.

இதையடுத்து வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி ‘பெனால்டி ஷூட் அவுட்டுக்கு’ சென்றது. இரு அணிக்கும் தலா 5 வாய்ப்புகள் தரப்பட்டன. காயம் காரணமாக 88 வது நிமிடம் வெளியேறிய ரொனால்டோ, இதில் பங்கேற்கவில்லை.

முதல் 3 வாய்ப்பில் போர்ச்சுகலின் ராமோஸ், விடின்ஹா, பெர்ணான்டஸ் கோல் அடித்தனர். மறுபக்கம் ஸ்பெயின் தரப்பில் மெரினோ, பயேனா, இஸ்கோ கோல் அடிக்க 3-3 என ஆனது.

4வது வாய்ப்பில் மெண்டெஸ் (போர்ச்சுகல்) கோல் அடிக்க, ஸ்பெயினின் மோராட்டோ அடித்த பந்தை கோல் கீப்பர் டீகோ கோஸ்டா தடுத்து அசத்தினார்.

5வது வாய்ப்பில் நெவேஸ் கோல் அடித்தார். இதையடுத்து 5-3 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் ‘திரில்’ வெற்றி பெற்றது. 2019க்குப் பின் இத்தொடரில் மீண்டும் சாம்பியன் ஆனது.

தில்லையடியில் சிக்கிய கடத்தல் பீடி இலைகள்!

0

புத்தளத்தில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளுடன் வேன் ஒன்றும் பறிமுதல்!

இலங்கை கடற்படை, பொலிஸாருடன் இணைந்து, புத்தளம், தில்லையடி பகுதியில் 2025 ஜூன் 05 இரவு வேளையில் நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகள் கொண்ட ஒரு வேன் கைப்பற்றப்பட்டது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிறுவனம், புத்தளம் பொலிஸாருடன் இணைந்து தில்லையடி பகுதியில் நடத்திய இந்த சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்று சோதனை செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகளானது வாகனத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் வேன் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களால் ஆபத்தா?

விண்வெளியில் பூமியை சுற்றி வந்துக்கொண்டிருக்கும் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கொள்களை சீனா நினைத்தால் வெறும் 12 மணி நேரத்தில் தாக்கி அழித்துவிட முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் என்கிற செய்தி ஊடகத்தில் இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது தற்போது சீனா 99 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. இவை அனைத்தும் நான்ஜிங் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஆஸ்ட்ரோனாட்டிக்ஸ் பல்கலைக்கழகத்தின் விண்வெளிக் கட்டுப்பாட்டுத் துறையின் இயக்குநர் வூ யுன்ஹுவா தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இவை அனைத்தும் எலான் மஸ்கின் 1400 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை வெறும் 12 மணி நேரத்தில் காலி செய்துவிடும். சீன செயற்கைக்கோளில் லேசர், நுண் அலைகளை உருவாக்கும் கருவி, உளவு கருவிகள் பொருத்தப்பட்டிருக்கலாம். ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் வெறுமென நெட்வொர்க் கொடுக்க மட்டுமே பயன்படுத்தப்படுவதில்லை. தவிர, ராணுவ நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது என சீனா குற்றம்சாட்டி வருகிறது.

அதாவது, உக்ரைன்-ரஷ்யா போரில், உக்ரைன் படைகளுக்கு தகவல்கள் கொடுக்கவும், ரஷ்ய எல்லையை துல்லியமாக கண்காணிக்கவும் இந்த செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த 2022ம் ஆண்டு ரஷ்ய போரின்போது அப்போதைய உக்ரைனின் துணைப் பிரதமரான மைக்கைலோ ஃபெடோரோவ், “ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் சேவையை உடனடியாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த மஸ்க், “உடனடியாக சேவை வழங்கப்படும்” என்று கூறியிருந்தார்.

உக்ரைன் போருடன் மட்டுமே ஸ்டார்லிங்க் நிற்காது, நாளை சீனாவுக்கும்-தைவானுக்கும் பஞ்சாயது ஏற்பட்டால் அப்போதும், தைவானுக்கு சப்போர்ட் செய்ய ஸ்டார்லிங்க் வரும். எனவே இந்த கூட்டு நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்க சீனா இந்த புதிய செயற்கைக்கோள்களை உருவாக்கியிருக்கிறது.

கடந்த 2023ம் ஆண்டு இதற்கான பணிகளை சீனா தொடங்கியது. இந்த திட்டத்திற்கு ‘கியான்ஃபான் மெகா-விண்மீன் திட்டம்’ (Qianfan mega-constellation project) என்றும் பெயரிட்டிருந்தது. நோக்கம் உலகம் முழுவதும் இணைய தொடர்பை வழங்குவதாகும். இதற்காக மொத்தம் 15,000 சிறிய ரக செயற்கைக்கோள்களை ஏவ சீனா முடிவெடுத்தது. இதன் முதல் தொகுப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏவப்பட்டது. இதில் 18 செயற்கைக்கோள்கள் இருந்தன.

ஒவ்வொன்றும் சுமார் 300 கி.கி எடையில் இருந்தது. இவை பூமியிலிருந்து 800 கி.மீ உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டது. இதேபோன்று 2024 டிசம்பரில் அடுத்து இரண்டு தொகுதி ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. தற்போது மொத்தம் 99 செயற்கைக்கோள்கள் விண்வெளியில் இருக்கின்றன. 15,000 செயற்கைக்கோள்களை 3 கட்டங்களாக ஏவ இருக்கிறது. முதல் கட்டத்தில் 1,296 செயற்கைக்கோள்கள் ஏவப்படும். இதில் 648 செயற்கைக்கோள்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஏவப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் கன்னி உரை

0

அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்புவோம்

தேசியத்துவத்துடனும் ஐக்கியத்துடனும் ஒன்றுபட்டு நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க இன்று (23) காலை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

பதவிப் பிரமாணத்தின் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய முழுமையான உரை:

மக்களால் ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது நமது நாட்டின் ஜனநாயகத்திலிருக்கும் மிக முக்கியமான அம்சமாகும். தேர்தலில் வாக்களித்தல் மற்றும் ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதோடு ஜனநாயகம் நிறைவு பெறுவதில்லை. இது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சம் என்றாலும், நம் நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்த, கட்டமைப்புகளின் வலிமையும், சட்டங்களை வலுப்படுத்துவதும் அவசியம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனவே, எனது பதவிக்காலத்தில் இந்த நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.

அத்துடன், இந்த நாட்டில் ஜனநாயக முறையில் அதிகாரப் பரிமாற்றம் நடந்த வரலாறும் உண்டு. தேர்தலில் நிகழும் அதிகாரப் பரிமாற்றத்தை எந்தத் தலைவரும் நிராகரித்ததில்லை. அதற்கமைய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த மக்கள்ஆணையை சுமூகமாக ஏற்றுக்கொண்டதுடன், ஜனநாயக ரீதியில் அதிகாரத்தை கைமாற்றுவதற்கான அவரின் அர்ப்பணிப்பிற்கும் முன்னுதாரணத்திற்கும் நன்றி தெரிவிக்கிறேன். மேலும் எமக்கு கிடைப்பது மிகவும் சவால் நிறைந்த நாடு என்பதை நன்கு புரிந்து கொண்டிருக்கிறோம். நமது அரசியலில் தூய்மையான, மக்களால் எதிர்பார்க்கப்படும் சிறந்த அரசியல் கலாசாரத்திற்காக அவசியம் காணப்படுகிறது.அதற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

நம் நாட்டின் அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு நல்லெண்ணம் இல்லை. எனவே, அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் மீது மக்கள் மரியாதை மற்றும் நம்பிக்கையை மீட்டெடுக்க எங்கள் தரப்பிலிருந்து முடிந்த அனைத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.

மேலும், நமக்கு முன் இருக்கும் இந்த ஆழமான நெருக்கடியை வெறும் அரசோ, வெறும் அரசியல் கட்சியோ அல்லது ஒரு தனி நபரோ மட்டும் தீர்க்க முடியும் என்று நாங்கள் நம்பவில்லை. ஏனென்றால், நான் முன்பு கூறியது போல், நான் ஒரு மாயாஜால வித்தைக்காரனல்ல. நான் மந்திரவாதியும் இல்லை. நான் இந்த நாட்டின் சாதாரண குடிமகன். எம்மிடம் திறமைகள் உள்ளன. இயலாமைகளும் உள்ளன. தெரிந்த விடயங்களும் உள்ளன அதேபோன்று, தெரியாத விடயங்களும் உள்ளன.

ஆனால் திறமைகளைப் பயன்படுத்தி தெரியாதவற்றை சேகரித்துக்கொண்டு சிறந்த முடிவுகளை எடுத்து இந்த நாட்டை வழிநடத்துவதே எனது தலையாய பணியாகும். அந்த கூட்டுப் பங்களிப்பின் ஒரு அங்கமாக மாறுவது எனது பொறுப்பாகும். மேலும், இந்த நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதில் பொது மக்கள் மற்றும் அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் பாரிய பொறுப்பு உள்ளது. அந்தப் பொறுப்பை நிறைவேற்ற அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்.

ஆனால், நாட்டின் ஜனாதிபதி என்ற முறையில், இந்தப் பணியை முன்னின்று நடத்துவதில் எனக்கு முதன்மையான மற்றும் மிக முக்கியமான பொறுப்பு இருப்பதை நான் ஏற்றுக்கொண்டேன். எனவே, இந்தச் சவாலை வெற்றிகொள்வதற்காக எனக்குக் வழங்கப்பட்டுள்ள பணியை நான் உரிய முறையில் நிறைவேற்றுவேன் என்பதை செயற்பாடு மற்றும் நடைமுறை மூலம் எல்லா சந்தர்ப்பங்களிலும் இந்த நாட்டின் பிரஜைகளுக்கு வெளிப்படுத்த நான் தயாராக இருக்கிறேன்.

மேலும் நமது நாட்டுக்கு சர்வதேச ஆதரவு தேவை. எனவே, உலகில் எத்தகைய அதிகாரப் பிளவுகள் இருந்தாலும், ஒவ்வொரு நாட்டையும் எமக்கு மிகவும் சாதகமாக கையாள்வதே நமது எதிர்பார்ப்பாகும். நாம் உலகில் தனிமைப்படுத்தப்பட்ட நாடு அல்ல. உலகத்துடன் கூட்டாக முன்னேற வேண்டிய ஒரு நாடாகும். அது தொடர்பில் தேவையான முடிவுகளை எடுக்க நாங்கள் சிறிதும் தயங்குவதில்லை.

மேலும், நம் நாட்டைக் கட்டியெழுப்புவதில் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு பெரும் பங்கு உள்ளது. எனவே, நாட்டை மேலும் வலுவாகக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு அவர்கள் ஆதரவளிப்பார்கள் என நான் கருதுகின்றேன்.

நம் நாட்டின் ஜனநாயகத்தின் ஊடாக நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். அதற்காக மக்கள் எனக்கு வாக்களித்தனர்.

மேலும் எனக்கு வழங்கப்படாத வாக்குகளும் உள்ளன. எனவே, எங்களின் வெற்றியின் உள்ளடக்கம் மற்றும் அளவு குறித்து எங்களுக்கு நல்ல புரிதல் உள்ளது. எனவே, எங்களுக்கு ஆதரவு வழங்காத மற்றும் எங்களை நம்பாத பிரஜைகளின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெறுவதே எனது நிர்வாகத்தின் போது எனக்கு வழங்கப்பட்டுள்ள பணியாகும். அந்தப் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

எதிர்காலத்தில் இவை அனைத்தையும் நீங்கள் நடைமுறையில் கண்டுகொள்ள முடியும். அதற்கு அனைத்து மக்களின் ஆதரவையும் எதிர்பார்க்கின்றேன்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தேர்தலில் இவ்வாறுதான் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்

0

அதிகாரிகள் மற்றும் பிற தேவைகள் முடிந்த பிறகு, மாலை 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (19) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி பிற்பகல் 4.15 மணிளவில் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“எதிர்வரும் 21ம் திகதி வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள் பெறப்பட்டதும், அதிகாரிகள் மற்றும் இதர தேவைகள் முடிந்ததும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் இரவு 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

மாலை 4.15 மணிளவில் தபால் மூல வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

அத்துடன் மாவட்ட அளவில் ஒவ்வொரு வட்டாரத்திலும் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெறும்.

வாக்கு எண்ணிக்கையின் முடிவில் முடிவுகள் கிடைத்தவுடன் ஊடகங்களுக்கு வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையே முதலில் எண்ணப்படும்.

அந்தக் கணக்கெடுப்பின் பின்னர் (மாவட்ட அளவில் எண்ணும் பணி) முதலில் வாக்குப்பெட்டிகளில் உள்ள வாக்குகள் எண்ணப்படும்.

அதன் பிறகு, ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு, தொகுதி மற்றும் மாவட்ட அளவில் அது தயாரிக்கப்படுகிறது.

தேர்தல்கள் செயலகமே ஒட்டுமொத்த முடிவுகளைக் கணக்கிடும்.

எந்த வேட்பாளரும் 50 வீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்றுள்ளாரா என சரிபார்க்கப்படும்.

அப்படியானால், அந்த நேரத்தில் வாக்கு எண்ணும் பணிகள் நிறுத்தப்படும்.

அப்போது ஜனாதிபதியை நாங்கள் அறிவிப்போம்.

எந்த வேட்பாளருக்கும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் கிடைக்காவிடின், விருப்பு வாக்கு எண்ணிக்கைக்கு செல்ல வேண்டும்.

அங்கு, அதிக வாக்குகள் பெற்ற இரண்டு வேட்பாளர்கள் போட்டியில் வைத்து விட்டு  மீதமுள்ள 36 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து நீக்கப்படுவர்” என்றார்.

புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக மாறும்

0

புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வாத்தியாசலையாக மாற்றம் பெரும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று புத்தளத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ அலிசப்ரி ரஹீம் மற்றும் சிந்தக்க மாயாதுன்ன தலைமையில் புத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்திலே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

புத்தளம் மக்களின் நீண்ட நாள் தேவையாக இருந்து வருகின்ற புத்தளம் தல வைத்தியசாலையை தரமுயர்த்துவது தொடர்பாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ அலிசப்ரி ரஹீம் அவர்களினால் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோலுக்கிணங்க குறித்த வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.

மேலும் புத்தளத்தில் மீன் பிடி தொழிலை முன்னேற்றும் நோக்கத்தில் மீன் பிடி துறைமுகம் ஒன்றை அமைக்கும் யோசனையும் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டதுடன், அதற்கான முன்னெடுப்புகளும் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்டமை புத்தளம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நாட்டில் நிரந்தர பொருளாதார அபிவிருத்தியை நிலை நாட்ட தாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டை பொருளாதார அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவதே தனது பிரதான நோக்கம் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மொட்டுக்கட்சிக்கு எதிராக நிற்கும் முக்கிய அமைச்சர்கள்

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக மொட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளரை இந்த வாரம் அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்காதிருக்கவும், மொட்டு சின்னத்தில் தனியாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமக்கு ஆதரவு வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பியிருந்த கடிதம் நேற்றைய தினம் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தினால் அரசியல் குழுவில் முன்வைக்கப்பட்டது.

எவ்வாறாயினும் அந்த கடிதத்தை நிராகரிக்க அரசியல் குழுக் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுவில் 82 பேர் அங்கம் வகிப்பதுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் 72 பேர் பங்கேற்றனர்.

இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த 11 பேர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

மஹிந்தானந்த அலுத்கமகே, பந்துல குணவர்தன, பிரதீப் உந்துகொட, கோகிலா ஹர்ஷனி குணவர்தன, சஹன் பிரதீப், ரமேஸ் பத்திரன, கஞ்சன விஜேசேகர, பிரசன்ன ரணதுங்க, கனக ஹேரத், மொஹான் பிரியதர்ஷன ஆகியோர் கட்சியின் சார்பில் தனியான வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

அத்துடன் பிறிதொரு கட்சியின் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்கும் உறுப்பினர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் யோசனைக்கு 6 பேர் எதிராக வாக்களித்துள்ளனர்.

எவ்வாறாயினும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் எனக் கூறப்பட்ட தம்மிக பெரேரா தொடர்பில் அரசியல் குழுக் கூட்டத்தின்போது எந்தவித கருத்துக்களும் பரிமாற்றிக் கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவளிக்காத 11 பேர் உள்ளிட்ட தரப்பினர் நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தனவின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சைனப் ஆரம்பப் பாடசாலைக்கு ஆளுநர் வருகை!

0

புத்தளம் சைனப் ஆரம்ப பாடசாலையின் முப்பெரும் விழா பாடசாலை அதிபர் யஹியா தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து புத்தளம் ஜெய்னப் பாடசாலைக்கு 22 லட்சம் ரூபா பெறுமதியான நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு, சிறுவர் விளையாட்டு நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தல் மற்றும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் செயற்திட்டத்தின் கீழ் BCMH நிறுவனத்தினால் கற்றல் உபகரணம் வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் கடந்த செவ்வாய்க்கிழமை (16) வெகு விமர்சையாக இடம்பெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதியாக வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், விசேட அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மற்றும் கௌரவ அதிதியாக புத்தளம் வலயக்கல்விப் பணிப்பாளர் அர்ஜுன ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆரம்ப பாடசாலையின் முக்கியத்துவம் மற்றும் அறிவார்ந்த சமூகத்தை கட்டியெழுப்ப ஆரம்ப பாடசாலை ஆற்றிவருகின்ற அர்ப்பணிப்பு குறித்து விரிவாக பேசிய வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், புத்தளம் மாவட்ட பாடசாலைகளின் துரித வளர்ச்சி பற்றியும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

மேலும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் செயற்திட்டத்திற்கு வடமேல் மாகாண ஆளுநர் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் ஜவ்ஷி ஜமால்தின், இணைப்புச் செயலாளர் எச். அமீர் அலி ஆசிரியர், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் உட்பட உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் அயல் பாடசாலையின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு
நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு

ஹிருணிகாவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறை

0

கடத்தல் வழக்கில் முன்னாள் எம்.பி ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்தத் தீர்ப்பை அறிவித்தார்.

தெமட்டகொட பகுதியிலுள்ள கடை ஒன்றில் பணிபுரிந்த அமில பிரியந்த அமரசிங்க எனும் இளைஞர் ஒருவரை 2015 டிசம்பர் 21ஆம் திகதி ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு சொந்தமான டிபெண்டர் வாகனத்தில் கடத்திய வழக்கு விசாரணை முடிவில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

29 குற்றங்கள் தொடர்பில் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் 8 பேரும் குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில், அச்சம்பத்திற்கு உதவி, ஒத்தாசை புரிந்ததாக ஹிருணிகா மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்திருந்தார்.

அத்தோடு, சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவின் ஆதரவாளர்கள் 8 பேர் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைதான ஐந்தாம் சந்தேகநபரின் மகள் அளித்துள்ள வாக்குமூலத்தில், தமது தாயாருடன் தொடர்பு பேணிய நபர் ஒருவரை தாம் காண்பித்ததாகவும், அவரை தமது தந்தையும் அவருடன் சென்றவர்களும் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு ஹிருணிகாவிடம் அழைத்துச் சென்றதாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

ஓவியப்போட்டியில் எருக்கலம்பிட்டி மாணவன் முதலாமிடம்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட வட மாகாண மானவர்களுக்கிடையிலான சித்திரப்போட்டியில் மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்றார்.

வீதி விபத்துக்கள் இல்லாத நாளைக்கான பாடசாலையிலிருந்து அணிவக்குப்போம் எனும் தொனிப்பொருளில் கடந்த வியாழக்கிழமை (13.06.2024) அன்று நடாத்தப்பட்ட வட மாகாண மாணவர்களுக்கிடையிலான குறித்த சித்திரப்போட்டியில் சுமார் 2600 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

சித்திரப்போட்டியில் பங்குபற்றிய 2600 மாணவர்களில் 250 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு நேற்றைய தினம் (15.06.2024) அவர்களுக்கான போட்டி இடம்பெற்றது.

நடைபெற்று முடிந்த இறுதிச் சுற்றுப்போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்று பெருமதிமிக்க பரிசில்களை பெற்றுக்கொண்டார்.

முதலாம் இடம் பெற்ற முஹம்மது ஹுசைன் என்ற மாணவனுக்கு சான்றிதல், துவிச்சக்கரவண்டி மற்றும் 8500/- ரூபா பெறுமதியான வவுச்சரும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இதேவேளை குறித்த போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய இல்முதீன் முஹம்மது ஹஸ்பான் 7 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய மற்றொரு மாணவரான முஹம்மது சம்ஹான் 8 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

பாரிய சாவல்களுக்கு மத்தியில் தனி ஒரு மனிதனாக இம் மாணாவர்களை ஊக்கப்படுத்தி, தயார்ப்படுத்தி போட்டியில் பங்குபெறச் செய்து வெற்றிபெறச் செய்த எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியின் சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் அவர்களின் இம் முயற்சிக்கு, பாடசாலை சமூகம் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் நன்றி தெரிவித்தனர்.

தமக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வந்து தேசிய அளவில் இடம்பெறும் போட்டிகளில் மாணவர்களை பங்குபெறச் செய்வதே தனது இலக்கு என சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் எமது ஊடகத்திற்கு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை இராஜினாமா

0

நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்துள்ளனர்.

சாந்த நிரியல்ல உட்பட 15 பேர் கொண்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரின் அறிவித்தலுக்கு அமைய இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி திங்கட்கிழமை புதிய பணிப்பாளர் சபை நியமிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ “அத தெரண” விற்கு தெரிவித்தார்.

புத்தளம் எருக்கலம்பிட்டியில் கடும் வெள்ளம்

0

புத்தளம் பகுதியில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக புத்தளம் பகுதி முழுதும் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.

புத்தளம், தில்லையடி, பாலாவி, புத்தளம் எருக்கலம்பிட்டி, ஹிதாயத் நகர்,  மதுரங்குளி மற்றும் ஏனைய பல கிராமங்களும் வெள்ளித்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமமும் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 1500 குடும்பங்கள் இங்கு வாழ்ந்துவருவதுடன், அனைத்து வீடுகளும் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நூற்றிற்கும் அதிகமான வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் ஐநூற்றுக்கும் அதிகமான வீடுகள் பகுதி அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8ஆம் திகதி ஏற்பட்ட மழை வெள்ளித்தினால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் மற்றும் பாடசாலைகளில் தற்காலிகமாக  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு தினங்களாக இவர்களுக்கான சமைத்த உணவுகள் மூன்று வேலைகளிலும் ஊர் தனவந்தர்களின் உதவியுடனும், பள்ளிவாசல் நிர்வாக சபையின் வழிகாட்டலுடனும் வழங்கப்பட்டு வருவதுடன், ஊர் மக்களுக்கும் உணவு விநியோகங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

இவர்களுக்கான நிவாரண உதவிகள் இதுவரை அரசாங்கத்தினால் வழங்கப்படாத போதிலும், ஊர் மக்களின் பங்களிப்புடன் மாத்திரமே பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு விநியோகங்கள் இதுவரை  வழங்கப்பட்டு வருகின்றது.

புத்தளம் பொத்துவில்லு பகுதியில் உள்ள குளம் மழை நீரினால்  பெருக்கெடுத்துள்ளதால் குறித்த குளத்து நீர் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமத்திற்குள் தொடர்ந்தும் மூன்றாவது நாளாக ஊடறுத்து செல்வதால் வீடுகள் தொடர்ந்தும் நீருள் மூழ்கியுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்தின் நிவாரண உதவிக்காக பல மக்கள் தொடர்ந்தும் எதிர்பார்த்து காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

புத்தளம் மாவட்டத்தில் சீரற்ற வானிலை: 33,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

0

கடந்த மே 13 ஆம் தேதி முதல் புத்தளம் மாவட்டத்தில் நிலவி வரும் கடும் மழை, வெள்ளம் மற்றும் பலத்த காற்று காரணமாக மாவட்டத்தின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

தேசிய இடர் நிவாரண சேவை மையம் (NDRSC) இன்று மாலை 6.00 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மாவட்டத்தின் 70 கிராம சேவகர் பிரிவுகளில் மொத்தம் 9,106 குடும்பங்களைச் சேர்ந்த 33,301 நபர்கள் இந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம் பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்தவ பெரும் பகுதியினர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 8,666 குடும்பங்களைச் சேர்ந்த 31,876 பேர் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

  • முந்தல்: 162 குடும்பங்கள் (522 நபர்கள்).
  • கருவலகஸ்வெவ: 108 குடும்பங்கள் (330 நபர்கள்) – இங்கு 12 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
  • நவகத்தேகம: 71 குடும்பங்கள் (239 நபர்கள்).
  • ஆணமடுவ: 69 குடும்பங்கள் (222 நபர்கள்).
  • தன்கொடுவ: 13 குடும்பங்கள் (45 நபர்கள்).

வனாதவில்லுவ பகுதியில் ஒரு வீடு முழுமையாகவும், 3 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. மேலும், பள்ளம மற்றும் நவகத்தேகம பகுதிகளிலும் வீடுகளுக்கு பகுதியளவு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முந்தல் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மதுரங்குளி விகாரவெவ மற்றும் பத்தையம ஆகிய குளங்களின் கட்டுகள் உடைந்துள்ளன. நிலைமையைக் கட்டுப்படுத்த உடப்பு பகுதியில் ஆற்றின் முகத்துவாரத்தை வெட்டி நீரை வெளியேற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தன்கொடுவ பகுதியில் ஜங்குராவெல – அபரஞ்சிமுல்ல கிராமத்திற்குச் செல்லும் வீதி வெள்ள நீரினால் அரித்துச் செல்லப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது. இந்த வீதி உடைந்தால் அக்கிராமம் தனிமைப்படுத்தப்படும் சூழல் நிலவுவதால், அங்கிருக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நிவாரணப் பணிகள்: தற்போது மாவட்டத்தில் 5 பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 52 குடும்பங்களைச் சேர்ந்த 168 நபர்கள் தங்கியுள்ளனர். இது தவிர, 582 குடும்பங்களைச் சேர்ந்த 1,957 நபர்கள் உறவினர்களின் வீடுகளில் தற்காலிகமாகத் தங்கியுள்ளனர்.

அதிர்ஷ்டவசமாக, இந்த அனர்த்தத்தினால் புத்தளம் மாவட்டத்தில் இதுவரை மரணங்களோ, காயங்களோ அல்லது எவரும் காணாமல் போனதாகவோ தகவல்கள் எவையும் பதிவாகவில்லை. மாவட்ட இடர் நிவாரண அதிகாரிகள் மற்றும் மாவட்டச் செயலாளர் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சீரற்ற காலநிலையால் நால்வர் உயிரிழப்பு:14 மாவட்டங்கள் பாதிப்பு!

0

இலங்கையில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் கடும் மழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) இன்று மாலை 6.00 மணி

கடந்த மே 10 ஆம் தேதி முதல் இன்று வரை நிலவிய அனர்த்தங்களினால் 14 மாவட்டங்களைச் சேர்ந்த 1,574 குடும்பங்களைச் சேர்ந்த 5,242 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு வீடு முழுமையாகவும், 192 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ள நிலையில் 5 பாதுகாப்பு மையங்களில் 52 குடும்பங்களைச் சேர்ந்த 162 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழப்புகள் மற்றும் விபத்துக்கள்:

  • மட்டக்களப்பு: மே 11 அன்று கோரளைப்பற்று தெற்கு பகுதியில் பாலத்தை கடக்க முயன்ற 46 வயதுடைய நபர் ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.
  • யாழ்ப்பாணம்: மே 14 அன்று சண்டிலிப்பாய் பகுதியில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி உயிரிழந்தார்.
  • கொழும்பு (சீதாவக்க): மே 15 அன்று கொஸ்கம பகுதியில் ஆற்றில் நீராடச் சென்ற 18 மற்றும் 19 வயதுடைய இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இவர்கள் மது அருந்தியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
  • இரயில் விபத்து: மே 16 அதிகாலை 5.19 மணியளவில் கம்பஹா, வனவாசல பகுதியில் பொல்கஹவெலையில் இருந்து களுத்துறை நோக்கிச் சென்ற புகையிரதம் தண்டவாளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. இதில் 5 பெட்டிகள் தடம் புரண்டதுடன், 10 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து மற்றும் உட்கட்டமைப்பு பாதிப்புகள்:

  • இரயில் சேவை: மன்னாருக்கும் மதவாச்சிக்கும் இடையிலான இரயில் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல், மலையகப் பாதையில் ரம்புக்கணைக்கும் அசேலவெலவுக்கும் இடையிலான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது (அசேலவெலவிலிருந்து பதுளை வரை மட்டுமே இரயில்கள் இயங்குகின்றன).
  • வீதிகள்: மாத்தளை – ரிவர்ஸ்டன் வீதி தற்போது இலகுரக வாகனங்களுக்கு மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. கண்டி – தலாத்துஓயா வீதியில் உட தெல்தொட்ட பாலம் சேதமடைந்துள்ளதால் அந்த வீதி மூடப்பட்டுள்ளது.
  • நீர்த்தேக்கங்கள்: கடும் மழை காரணமாக அனுராதபுரம், அம்பாந்தோட்டை, குருணாகல் மற்றும் மாத்தளை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பல பிரதான நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

வானிலை மற்றும் மண்சரிவு எச்சரிக்கை: வங்கக் கடலின் தென்மேற்கு பகுதியில் நிலவும் குறைந்த அழுத்த மண்டலம் காரணமாக மேல், சபரகமுவா, மத்திய, வடமேற்கு மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

மேலும், பதுளை, கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, குருணாகல், மாத்தளை, மாத்தறை, மொனராகலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் மின்னல் தாக்கம் மற்றும் தற்காலிக பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைத் தவிர்க்க அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

கொழும்பில் புதிய அரசியல் வியூகம்: மலர் வீதியில் கூடிய எதிர்க்கட்சிகள்!

0

இலங்கையில் தற்போதைய அரசாங்கத்தின் நிர்வாக சீர்கேடுகள் மற்றும் ஊழல்களுக்கு எதிராக மக்கள் மத்தியில் மாபெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கூட்டு எதிர்க்கட்சியின் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (16) கொழும்பு, மலர் வீதியில் அமைந்துள்ள காரியாலயத்தில் நடைபெற்றது.

அரசாங்கத்தினால் நாளாந்தம் முன்னெடுக்கப்படும் ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தும் நாடளாவிய ரீதியிலான கருத்தரங்குத் தொடரின் மூன்றாவது மாநாடு, வரும் 24ஆம் திகதி ஜா-எல பகுதியில் நடத்தப்படவுள்ளது. இது குறித்த இறுதித் திட்டமிடல்களுக்காகவே இக்கலந்துரையாடல் பல மணிநேரம் நீடித்து நடைபெற்றது.

இச்சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சி (UNP), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ஆகிய பிரதான அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு நேர்ந்துள்ள கொடுமை

இலங்கையில் ஒரு நிலையான பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்தை வேண்டி, பழைய அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த மக்களுக்கு தற்போதைய அரசியல் சூழல் பெரும் ஏமாற்றத்தையே தந்துள்ளது. தற்போதைய அரசாங்கத்தின் பலவீனங்களையும் ஊழல்களையும் சுட்டிக்காட்டி மக்களை அணிதிரட்ட எதிர்க்கட்சிகள் முயன்றாலும், மறுபுறம் அவை தங்களின் சுயநல அரசியல் இருப்பை தக்கவைப்பதிலேயே குறியாக உள்ளன என்ற அதிருப்தி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கடந்த காலங்களில் நாட்டைப் பேரழிவிற்குள் தள்ளியதாகக் குற்றம் சாட்டப்பட்ட தரப்புகளும், கொள்கை ரீதியாக முரண்பட்டுக் கொண்ட கட்சிகளும் இன்று “கூட்டு எதிர்க்கட்சி” என்ற போர்வையில் ஒரே மேடையில் அமர்ந்திருப்பது, உண்மையான மக்கள் நலனுக்காகவா அல்லது மீண்டும் ஆட்சிக் கட்டிலில் ஏறுவதற்காகவா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மாற்றத்தை எதிர்பார்த்து வாக்களித்த மக்கள், அன்றாட வாழ்க்கைச் செலவு உயர்வு, வரிச்சுமை மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் நசுக்கப்பட்டு வரும் வேளையில், அரசியல் கட்சிகள் தங்களின் எதிர்கால தேர்தல் இலாபங்களை மட்டுமே இலக்காகக் கொண்டு காய்களை நகர்த்தி வருவது, மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும்.

தேர்தல் வரும்போதுதான் ஒன்றிணைவோம்: லசந்த அழகியவண்ணவின் கருத்து

இக்கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண, எதிர்க்கட்சிகளின் தற்போதைய சுயரூபத்தை வெளிப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டார்.

“கூட்டு எதிர்க்கட்சியினால் வரும் 24ஆம் திகதி கம்பஹா மாவட்டத்தில் எமது கருத்தரங்குத் தொடரின் 3ஆவது கருத்தரங்கு நடத்தப்படவுள்ளது. அது தொடர்பாக கூட்டு எதிர்க்கட்சியின் அனைத்துக் கட்சிகளும் இணைந்து இன்று கலந்துரையாடலொன்றை நடத்தினோம். எதிர்க்கட்சி எல்லா இடங்களிலும் பலமாகவே இருக்கின்றது, அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. தேவையான நேரத்தில் அனைவரும் ஒன்றிணைவார்கள்.

தற்போது எதிர்க்கட்சியில் உள்ள அரசியல் கட்சிகள் தத்தமது கட்சிகளைப் பலப்படுத்தும் பணிகளையே தனித்தனியாகச் செய்து வருகின்றன. கூட்டணி குறித்த கேள்விகளை தேர்தல் ஒன்று வரும்போதுதான் கேட்க வேண்டும். தேர்தல் வரும்போது நாட்டின் தேவைக்காக, ஒரு பொறுப்புள்ள கட்சியாக அந்தப் பொறுப்பை நாங்கள் நிச்சயம் நிறைவேற்றுவோம்.” என லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

மக்களின் அவலமும் சுயநல அரசியலும்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் இந்தக் கூற்று, தற்போதைய அரசியல் கட்சிகள் மக்கள் படும் துன்பங்களை விட, தேர்தல் வெற்றிகளுக்கே முன்னுரிமை அளிக்கின்றன என்பதைத் தெட்டத்தெளிவாக்குகின்றது. “தேர்தல் வரும்போதுதான் ஒன்றிணைவோம்” என்ற இவர்களின் கொள்கை, தற்போதைய நெருக்கடியான சூழலில் தங்களுக்குத் தலைமை தாங்க வலுவானதொரு எதிர்க்கட்சி இல்லையா என ஏங்கும் சாதாரண குடிமகனுக்குச் செய்யும் துரோகமாகும்.

நாட்டில் உண்மையானதொரு ஆட்சி மாற்றத்தையும், தூய்மையான அரசியல் கலாசாரத்தையும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் மக்களுக்கு, இந்த மலர் வீதி சந்திப்புகளும், தேர்தலை மையப்படுத்திய கூட்டணிகளும் வெறும் ‘அரசியல் நாடகமாகவே’ காட்சியளிக்கின்றன.

தங்களின் வாழ்வாதாரப் போராட்டங்களுக்கு தீர்வு கிடைக்காமல், அரசியல்வாதிகளின் தேர்தல் சதுரங்க ஆட்டத்திற்குள் மக்கள் மீண்டும் பகடைக்காய்களாக்கப்படும் கொடுமையே இன்று இலங்கையில் அரங்கேறி வருகின்றது.

வாகன இறக்குமதிக்கு விழுந்தது பலத்த அடி: 50% மேலதிக வரி!

0

இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீதான சுங்க இறக்குமதி வரிக்கு, 50% மேலதிக கட்டணத்தை விதிக்க நிதி அமைச்சு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக அமைச்சு வெளியிட்டுள்ள அதி விசேட வர்த்தமானி அறிவிப்பில் இவ்விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மேலதிக கட்டணம் இன்று (16) முதல் 3 மாத காலத்திற்கு அமுல்படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் மே 15 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் வாகன இறக்குமதிக்கு வழங்கப்பட்ட கடன் கடிதங்கள் தொடர்பான இறக்குமதிக்கு இது பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

வனவாசல ரயில் விபத்தில் சதி? தண்டவாளக் கம்பிகள் திருட்டு!

0

வனவாசல உப தொடருந்து நிலையத்திற்கு அருகில் இன்று (16) இடம்பெற்ற விபத்துக்கு,தொடருந்து தண்டவாளத்தின் தடம் மாற்றும் அமைப்பின் இணைப்பு கம்பிகள் கழற்றப்பட்டிருந்தமையே காரணம் என தொடருந்து திணைக்களத்தின் போக்குவரத்து அத்தியட்சகர் அசங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.

திண்மக் கழிவு பதப்படுத்தும் வளாகம் மற்றும் பிரதான தொடருந்து பாதை ஆகியவற்றுக்கு இடையே தொடருந்ததை தடம் மாற்றுவதற்காகப் பயன்படுத்தப்படும் இணைப்பு கம்பிகளை யாரோ ஒரு நபர் அல்லது ஒரு குழுவினர் திட்டமிட்டோ, ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலோ அல்லது திருடும் நோக்கிலோ கழற்றியுள்ளமையே இந்த விபத்துக்கு தற்போதைக்கு அவதானிக்கப்பட்டுள்ள காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வனவாசல தொடருந்து நிலையத்திற்கு அருகில் கொழும்பு திண்மக் கழிவு பதப்படுத்தும் வளாகம் ஒன்று அமைந்துள்ளது. அதற்கான தொடருந்து பாதை ஒன்றும் காணப்படுகின்றது. எனினும், அது தற்போது பயன்பாட்டில் இல்லை. அந்த இடத்திலேயே இலக்கம் 507 உடைய தொடருந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்தக் பாகங்கள் கழற்றப்பட்டதன் காரணமாக தடம் மாற்றும் இணைப்பு தளர்வடைந்துள்ளது. இதனால் தொடருந்தின் முன் பெட்டி பிரதான பாதையிலும், பின் பெட்டிகள் திண்மக் கழிவு பதப்படுத்தும் முற்றத்திற்குச் செல்லும் பாதையிலும் பயணித்துள்ளன.

இவ்வாறு இந்த தொடருந்து தொகுதியின் பெட்டிகள் இரண்டு வெவ்வேறு பாதைகளில் பயணித்ததன் காரணமாக, இரண்டாவது பெட்டி தடம் புரண்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக நாங்கள் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளோம். இது குறித்து விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” என தொடருந்து போக்குவரத்து அத்தியட்சகர் அசங்க சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

மாறும் வானிலை! இடியுடன் மழை, 55 கி.மீ வேகப் புயல்காற்று!

0

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் அடுத்த சில மணித்தியாலங்களுக்கான வானிலை நிலவரம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையின்படி, நாட்டின் பல கடற்பரப்புகளில் மழையுடனான வானிலையும், பலத்த காற்றும் வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முல்லைத்தீவிலிருந்து காங்கேசந்துறை, புத்தளம் மற்றும் கொழும்பு ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனைத் தவிர, நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றின் வேகம்

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது பொதுவாக தென்மேற்குத் திசையிலிருந்து வீசக்கூடும். இதன் சாதாரண வேகம் மணித்தியாலத்துக்கு 25 முதல் 35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

இருப்பினும், காங்கேசந்துறையிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 முதல் 55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை

காங்கேசந்துறையிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

விசேட எச்சரிக்கை: இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில், சம்பந்தப்பட்ட கடற் பகுதிகளில் அவ்வப்போது கடுமையான பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், அக்கடற் பிரதேசங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

எனவே, கடற்றொழிலாளர்களும் கடல்சார் ஊழியர்களும் இவற்றுக்கு அமைவாக அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

புகையிலை, புகைப்பிடித்தலை ஒழிப்பதற்கு கூட்டு நடவடிக்கை!

0

இலங்கையில் புகையிலை நுகர்வைக் குறைப்பதென்பது வெறும் சுகாதார இலக்கு மட்டுமல்ல, அது தேசிய அபிவிருத்தியின் முதன்மையான முன்னுரிமையாகும் என சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் முன்னணிப் பல்கலைக்கழகங்கள், சுகாதார சேவை வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் உலகளாவிய சுகாதார அமைப்புகள் ஒன்றிணைந்து நடத்திய “இலங்கையில் புகையிலை பயன்பாடு மற்றும் புகைப்பிடித்தலை ஒழிப்பதற்கான உத்திகளை மேம்படுத்தல்” குறித்த கலந்துரையாடலும் ஊடகவியலாளர் சந்திப்பும் அண்மையில் கொழும்பு சினமன் லேக்சைட் (Cinnamon Lakeside) ஹோட்டலில் சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

ஆசிய பிராந்திய மக்கள் தொகையில், ஆபத்தான நிலையில் உள்ள பிரிவினரிடையே சுவாச நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளைக் குறைப்பதையும், அவர்களின் சுகாதார நிலையை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த சர்வதேச தலையீடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய சுகாதாரம் தொடர்பான Respire திட்டத்தின் கீழ், இலங்கையின் சில பல்கலைக்கழகங்கள் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.

  • ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்
  • பேராதனைப் பல்கலைக்கழகம்
  • ரஜரட்ட பல்கலைக்கழகம்
  • வயம்ப பல்கலைக்கழகம்
  • ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து இத்திட்டத்திற்கு கைகொடுத்துள்ளன.

இந்த வேலைத்திட்டத்தின் மூலம் இலங்கையில் புகையிலை பயன்பாடு மற்றும் புகைப்பிடித்தலை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் வலுப்படுத்தப்படுவதுடன், அதற்கான உத்திகள் மற்றும் கூட்டு அணுகுமுறைகளும் இங்கு வலியுறுத்தப்பட்டன.

அறிவியல் பூர்வமான அணுகுமுறைகளும் சர்வதேச ஆலோசனைகளும்

இந்நிகழ்வில், கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரசன்ன ஹேரத் அவர்களினால், தனிநபர் புகைப்பிடித்தல் தடுப்புத் தொடர்பாகப் பரிசோதிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட அறிவியல் பூர்வமான வழிமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.

அத்துடன், நியூசிலாந்தின் ஓக்லாண்ட் பல்கலைக்கழகத்தின் மக்கள் தொகை சுகாதாரப் பாடசாலையின் பொதுச் சுகாதாரத் துறைப் பேராசிரியர் கிறிஸ் புல்லன் (Prof. Chris Bullen) அவர்கள் ‘ஸூம்’ (Zoom) தொழில்நுட்பம் ஊடாகப் பிரதான உரையை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், புகைப்பிடித்தலை நிறுத்துவதற்கான உத்திகள், புகைப்பிடித்தல் மற்றும் சுவாச நோய்கள், புகைப்பிடித்தலை நிறுத்துவதற்கான முன்முயற்சிகள் மற்றும் கூட்டுச் செயற்பாட்டுத் திட்டங்கள் மற்றும் அதற்கான சான்றுகள் அடிப்படையிலான அறிவியல் அணுகுமுறைகள் குறித்து விரிவாக விளக்கமளித்தார்.

அரசாங்கத்தின் அர்ப்பணிப்பும் கொள்கை மாற்றமும்

புகையிலை நுகர்வைக் குறைப்பதில் அரசாங்கத்தின் பங்களிப்பு குறித்து சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி இங்கு விரிவாகக் கருத்து தெரிவித்தார்.

“உலகில் தவிர்க்கக்கூடிய மரணங்களுக்குப் பிரதான காரணங்களில் ஒன்றாகப் புகையிலை பயன்பாடு காணப்படுகிறது. புகையிலை சார்ந்த நோய்கள் நாட்டின் சுகாதார அமைப்பு, பொருளாதாரம் மற்றும் குடும்பங்களுக்குப் பெரும் சுமையாக மாறியுள்ளன. மக்களை நோய்களிலிருந்து பாதுகாத்து மகிழ்ச்சியாக வாழ வைப்பதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும். நோய்கள் ஏற்பட்ட பின்னர் சிகிச்சை அளிப்பதை விட, அவை ஏற்படுவதற்கு முன்பே தடுப்பதே எமது பொறுப்பாகும்” என பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும், புகைப்பிடித்தல் என்பது 100 வீதம் தவிர்க்கக்கூடிய ஒன்று எனவும், புகையிலை தயாரிப்புகளுக்கான வரிகளை அரசாங்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். புகையிலைக் கைத்தொழிலானது மறைமுக சந்தைப்படுத்தல் மற்றும் கவர்ச்சிகரமான வடிவமைப்புகள் மூலம் இளைஞர்களையே இலக்கு வைக்கிறது. எனவே, புதிய வடிவிலான அனைத்து நிக்கோடின் அடிமைத்தனங்களுக்கும் எதிராக அரசாங்கம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், மாறிவரும் சவால்களுக்கு ஏற்ப எமது கொள்கைகள் மாற்றமடைய வேண்டும் என்றும் பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், Respire ஸ்ரீ லங்கா திட்டத்தின் இணைத் தலைவர் பேராசிரியர் சாவித்திரி விமலசேகர, உலக சுகாதார அமைப்பின் (WHO) இலங்கைக்கான பிரதிநிதி வைத்தியர் ராஜேஷ் சம்பாஜிராவ் பாண்டவ் (Dr. Rajesh Sambhajirao Pandav) ஆகியோர் கலந்துகொண்டனர்.

இலங்கையில் சீரற்ற காலநிலையால் இருவர் உயிரிழப்பு!

0

இலங்கையில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் கடும் மழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதோடு, ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மே 10ஆம் திகதி காலை 6:00 மணி முதல் மே 15ஆம் திகதி மாலை 6:00 மணி வரையிலான தரவுகளின்படி, மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

மட்டக்களப்பில் 46 வயதுடைய நபர் ஒருவர் ஆற்றைக் கடக்க முயன்றபோது நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் மின்னல் தாக்கத்திற்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

இந்த அனர்த்தங்களினால் நாட்டின் 12 மாவட்டங்களைச் சேர்ந்த 47 பிரதேச செயலகப் பிரிவுகளில் மொத்தம் 1,143 குடும்பங்களைச் சேர்ந்த 3,587 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு வீடு முழுமையாகவும், 99 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. தற்போது 32 குடும்பங்களைச் சேர்ந்த 113 நபர்கள் 3 பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு: திம்பிரிகஸ்யாய பகுதியில் மரம் ஒன்று வீட்டின் மீது விழுந்ததில் ஒரு வயது மற்றும் ஆறு மாத கால சிறுவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம்: ஆனமடுவ பகுதியில் வெள்ள நீரில் சிக்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

கம்பஹா: ஜா-எல மற்றும் கணேமுல்ல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்துப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. போக்குவரத்து மற்றும் உட்கட்டமைப்பு பாதிப்புகள் சீரற்ற காலநிலையால் நாட்டின் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ரயில் சேவை:

மன்னார் – மதவாச்சி மற்றும் ரம்புக்கனை – அஸ்கிரிவத்தை ஆகியவற்றுக்கு இடையிலான ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

சாலைகள்:

கண்டியில் உடதெல்தொட்ட பாலம் இடிந்து விழுந்ததால் கண்டி-தலத்து ஓயா வீதி மூடப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீர்த்தேக்கங்கள்:

கடும் மழை காரணமாக நுவரவெவ, யான் ஓயா, லுணுகம்வெஹெர மற்றும் ராஜாங்கனை உள்ளிட்ட பல பிரதான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

மண்சரிவு மற்றும் வானிலை எச்சரிக்கைகள்

பதுளை, கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு மஞ்சள் மற்றும் அம்பர் நிற மண்சரிவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

வானிலை ஆய்வுத் திணைக்களத்தின் கணிப்பின்படி, அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுமக்கள் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைத் தவிர்க்க அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நிலைமைகளைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருவதுடன், சுமார் 35,000 பேருக்கு குறுஞ்செய்திகள் (SMS) மூலம் எச்சரிக்கைகளை வழங்கியுள்ளது.

புத்தளத்தில் மூன்று நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு!

0

ஜூட் சமந்த

நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, புத்தளம் மாவட்டத்தில் மாத்திரம் 33 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்த 8,347 குடும்பங்களைச் சேர்ந்த 30,871 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட செயலாளர் இந்திக சில்வா தெரிவித்துள்ளார்.​

பாதிக்கப்பட்ட மக்களுக்காக 6 நலன்புரி முகாம்கள் (தற்காலிக தங்குமிடங்கள்) அமைக்கப்பட்டுள்ளதுடன், இந்த முகாம்களில் தற்போது 188 குடும்பங்களைச் சேர்ந்த 584 பேர் தங்கியுள்ளனர் என்றும் மாவட்ட செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.​

​தொடர்ச்சியான அதிக மழை வீழ்ச்சி காரணமாக தெதுரு ஓயா, இங்கினிமிட்டிய மற்றும் தப்போவ ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.​

தெதுரு ஓயா நீர்த்தேக்கம்:

4 வான் கதவுகள் தலா 2 அடி வீதம் திறக்கப்பட்டுள்ளன. இதன் ஊடாக வினாடிக்கு 5,500 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.​

தப்போவ நீர்த்தேக்கம்:

12 வான் கதவுகள் தலா 2 அடி வீதம் திறக்கப்பட்டுள்ளன. இதன் ஊடாக வினாடிக்கு 4,480 கன அடி நீர் மீ ஓயாவிற்குள் வெளியேற்றப்படுகிறது.​

இங்கினிமிட்டிய நீர்த்தேக்கம்:

2 வான் கதவுகள் 3 அடி வீதமும், மேலும் 2 வான் கதவுகள் 2 அடி வீதமும், மற்றுமொரு 2 வான் கதவுகள் 1 அடி வீதமும் திறக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, வினாடிக்கு 6,000 கன அடி நீர் மீ ஓயாவிற்குள் திறந்து விடப்படுகிறது.​

வெள்ள அபாய எச்சரிக்கை​

தப்போவ மற்றும் இங்கினிமிட்டிய ஆகிய நீர்த்தேக்கங்களில் இருந்து வெளியேற்றப்படும் நீர் மீ ஓயாவிற்குள் பாய்வதனால், மீ ஓயாவின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதாக புத்தளம் மாவட்ட இடர் மேலாண்மை பிரிவு எச்சரித்துள்ளது. இதனால் அப்பகுதியில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த பிரிவு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் 150 புதிய வீடுகள் நிர்மாணிப்பு!

0

வவுனியா மாவட்டத்தில் புதிய வீடுகள் 150 கட்டப்படுகிறது – ஒதுக்கீட்டு நிதி ரூபாய் 150 மில்லியன்

“தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை” என்ற கருப்பொருளின் கீழ் அரசு ஆரம்பித்துள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் நிரந்தர வீடுகள் 150 கட்டப்படுகின்றன.

இதற்காக ரூபாய் 150 மில்லியன் செலவிடப்படுகிறது.

வவுனியா மாவட்டத்தில் வீடில்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் 150க்கு இவ்வருடம் புதிய வீடுகள் வழங்கப்படுகின்றன.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் நடைமுறைப்படுத்தப்படும் இந்த வீடமைப்பு திட்டத்தின் கீழ் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த குடும்பங்கள் 05 ற்கு நிரந்தர வீடுகள் வழங்கும் நிகழ்வு இன்று கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சரும் வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான உபாலி சமரசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

வவுனியா கற்குழி, அவுசதப்பிட்டிய, கலுகுன்னம்மடுவ, கூமான்குளம் மற்றும் நெடுங்குளம் ஆகிய கிராமங்களில் புதிய வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வீட்டிற்கும் அரசு ரூபாய் 10 இலட்சம் வரை செலவிட்டுள்ளது. புதிய வீடுகள் திறந்து வைக்கும் நிகழ்வில் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் என். கமலதாசன், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.