Wednesday, May 6, 2026
Sponsored advertisementspot_img
Home Blog

நாகவில்லுவில் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ்வின் நினைவுதினம்!

பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று நாகவில்லுவில் இடம்பெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வு!

இலங்கை திருநாட்டில் பெளதீக ரீதியான பல வேலைத்திட்டங்களையும், இடம்பெயர்வு மற்றும் எல்லை நிர்ணயம் தொடர்பான பறந்துபட்ட அறிவினையும் கொண்டிருந்த எருக்கலம்பிட்டியை சேர்ந்த மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது வருட நினைவு தின நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

அந்த வகையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் நினைவுப் பேருரையும், புத்தக வெளியீடு நிகழ்வும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் ஏற்பாட்டில் நேற்று 25.08.2025 புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய அதிபர் ஜனாப் S.M. ஹுஸைமத் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், புத்தி ஜீவிகள் மற்றும் குடும்பத்தார்கள் கலந்தகொண்டமை விஷேட அம்சமாகும்.

சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் பொருளாளர் ஜனாப் ஏ.ஜி. அனீஸ் (Bsc.Agri) அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.

மேலும் இஸ்லாமிய கற்கை அறபு மொழிப் பீட, தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களினால் நூல் அறிமுக உரையும், நினைவுப் பேருரையும் மிகவும் உணர்வுபூர்வமாக நிகழ்த்தப்பட்டது.

கிழக்கு மற்றும் தென் கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பங்களிப்பு அளப்பெரியது என நினைவு கூறிய பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன், வடக்கில் ஏற்பட்ட யுத்தம் மற்றும் முஸ்லிம்களின் இடம்பெயர்வு குறித்து அதீத அக்கறையுடன் செயற்பட்ட மிக முக்கியமானவர் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்கள் எனவும் எடுத்துரைத்தார்.

வடக்கு முஸ்லிம்களின் இடம்பெயர்வு மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பில் அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களுடன் பலதரப்பட்ட கலந்துரையாடல்களை நடத்தி, சர்வதேசம் வரை இவ்விடயங்களை கொண்டுசென்ற மகான் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் என பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் தனது உரையில் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் புதல்வி சட்டத்தரணி எப்.சப்னா ஹஸ்புல்லாஹ் அவர்களினால் ஏற்புரை நிகழ்த்தப்பட்டதுடன், நூல் வெளியீடு நிகழ்வும் இடம்பெற்றது.

நூலின் முதற்பிரதியை ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தரும், புத்தளம் எருக்கலம்பிட்டி பள்ளிவாசல் நிர்வாக சபையின் முன்னாள் உறுப்பினருமான ஜனாப் ரஹ்மத்துல்லாஹ் (GS) அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

மேலும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் செயலாளர் ஜனாப் எஸ்.எச்.எம். றிஸ்னி அவர்களினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டதுடன், தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன், மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பாரியாருக்கும் நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில், பேராசிரியர்கள், கல்விமான்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், பாடசாலைச் சமூகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் குடும்பத்தார்கள் என பலரும் கலந்து சிறப்பித்ததுடன், ஈ நியூஸ் பெஸ்ட் ஊடக நிறுவனம் ஊடக அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரணிலுக்காக ஒன்று திரண்ட அரசியல் தலைவர்கள்!

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விசாரணை கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது, நாட்டின் அடிப்படை ஜனநாயக நிறுவனங்களின் வலிமை குறித்து கடுமையான கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் விளைவுகள் ஒரு தனிநபரின் அல்லது எந்தவொரு அரசியல் கட்சிகளின் தலைவிதியையும் விட, சமூகத்தின் உரிமைகளுக்கான பிரச்சினைகளை தோற்றிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் தலைவர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைகளை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது மற்றும் விளக்கமறியலை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து நடத்திய விசேட ஊடக சந்திப்பில் பங்கேற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரல முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் அறிக்கையை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

போர்த்துக்கல் அணி சாம்பியன் ஆனது!

0

‘நேஷன்ஸ் லீக்’ கால்பந்தில் போர்ச்சுகல் அணி சாம்பியன் ஆனது. பைனலில் ‘பெனால்டி ஷூட் அவுட்டில்’ 5-3 என ஸ்பெயினை வீழ்த்தியது.

ஐரோப்பிய கால்பந்து அணிகளுக்காக ‘நேஷன்ஸ் லீக்’ தொடர் நடத்தப்படுகிறது. மொத்தம் 54 அணிகள் பங்கேற்றன. நேற்று ஜெர்மனியின் முனிக் நகரில் நடந்த பைனலில், போர்ச்சுகல், நடப்பு யூரோ சாம்பியன் ஸ்பெயின் பலப்பரீட்சை நடத்தின. போட்டியின் 21வது நிமிடம் ஜுபிமெண்டி (ஸ்பெயின்), 26வது நிமிடம் மெண்டிஸ் (போர்ச்சுகல்) தலா ஒரு கோல் அடித்தனர். 45வது நிமிடம் மைக்கேல் ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் ஸ்பெயின் அணி 2-1 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் 61 வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். போர்ச்சுகல் அணிக்காக இவர் அடித்த 138வது கோல் இது. 90 நிமிட முடிவில் போட்டி 2-2 என சமன் ஆனது. அடுத்து நடந்த கூடுதல் நேரத்திலும் (30 நிமிடம்) இரு அணியும் கோல் அடிக்கவில்லை.

இதையடுத்து வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி ‘பெனால்டி ஷூட் அவுட்டுக்கு’ சென்றது. இரு அணிக்கும் தலா 5 வாய்ப்புகள் தரப்பட்டன. காயம் காரணமாக 88 வது நிமிடம் வெளியேறிய ரொனால்டோ, இதில் பங்கேற்கவில்லை.

முதல் 3 வாய்ப்பில் போர்ச்சுகலின் ராமோஸ், விடின்ஹா, பெர்ணான்டஸ் கோல் அடித்தனர். மறுபக்கம் ஸ்பெயின் தரப்பில் மெரினோ, பயேனா, இஸ்கோ கோல் அடிக்க 3-3 என ஆனது.

4வது வாய்ப்பில் மெண்டெஸ் (போர்ச்சுகல்) கோல் அடிக்க, ஸ்பெயினின் மோராட்டோ அடித்த பந்தை கோல் கீப்பர் டீகோ கோஸ்டா தடுத்து அசத்தினார்.

5வது வாய்ப்பில் நெவேஸ் கோல் அடித்தார். இதையடுத்து 5-3 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் ‘திரில்’ வெற்றி பெற்றது. 2019க்குப் பின் இத்தொடரில் மீண்டும் சாம்பியன் ஆனது.

தில்லையடியில் சிக்கிய கடத்தல் பீடி இலைகள்!

0

புத்தளத்தில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளுடன் வேன் ஒன்றும் பறிமுதல்!

இலங்கை கடற்படை, பொலிஸாருடன் இணைந்து, புத்தளம், தில்லையடி பகுதியில் 2025 ஜூன் 05 இரவு வேளையில் நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகள் கொண்ட ஒரு வேன் கைப்பற்றப்பட்டது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிறுவனம், புத்தளம் பொலிஸாருடன் இணைந்து தில்லையடி பகுதியில் நடத்திய இந்த சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்று சோதனை செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகளானது வாகனத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் வேன் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களால் ஆபத்தா?

விண்வெளியில் பூமியை சுற்றி வந்துக்கொண்டிருக்கும் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கொள்களை சீனா நினைத்தால் வெறும் 12 மணி நேரத்தில் தாக்கி அழித்துவிட முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் என்கிற செய்தி ஊடகத்தில் இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது தற்போது சீனா 99 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. இவை அனைத்தும் நான்ஜிங் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஆஸ்ட்ரோனாட்டிக்ஸ் பல்கலைக்கழகத்தின் விண்வெளிக் கட்டுப்பாட்டுத் துறையின் இயக்குநர் வூ யுன்ஹுவா தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இவை அனைத்தும் எலான் மஸ்கின் 1400 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை வெறும் 12 மணி நேரத்தில் காலி செய்துவிடும். சீன செயற்கைக்கோளில் லேசர், நுண் அலைகளை உருவாக்கும் கருவி, உளவு கருவிகள் பொருத்தப்பட்டிருக்கலாம். ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் வெறுமென நெட்வொர்க் கொடுக்க மட்டுமே பயன்படுத்தப்படுவதில்லை. தவிர, ராணுவ நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது என சீனா குற்றம்சாட்டி வருகிறது.

அதாவது, உக்ரைன்-ரஷ்யா போரில், உக்ரைன் படைகளுக்கு தகவல்கள் கொடுக்கவும், ரஷ்ய எல்லையை துல்லியமாக கண்காணிக்கவும் இந்த செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த 2022ம் ஆண்டு ரஷ்ய போரின்போது அப்போதைய உக்ரைனின் துணைப் பிரதமரான மைக்கைலோ ஃபெடோரோவ், “ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் சேவையை உடனடியாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த மஸ்க், “உடனடியாக சேவை வழங்கப்படும்” என்று கூறியிருந்தார்.

உக்ரைன் போருடன் மட்டுமே ஸ்டார்லிங்க் நிற்காது, நாளை சீனாவுக்கும்-தைவானுக்கும் பஞ்சாயது ஏற்பட்டால் அப்போதும், தைவானுக்கு சப்போர்ட் செய்ய ஸ்டார்லிங்க் வரும். எனவே இந்த கூட்டு நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்க சீனா இந்த புதிய செயற்கைக்கோள்களை உருவாக்கியிருக்கிறது.

கடந்த 2023ம் ஆண்டு இதற்கான பணிகளை சீனா தொடங்கியது. இந்த திட்டத்திற்கு ‘கியான்ஃபான் மெகா-விண்மீன் திட்டம்’ (Qianfan mega-constellation project) என்றும் பெயரிட்டிருந்தது. நோக்கம் உலகம் முழுவதும் இணைய தொடர்பை வழங்குவதாகும். இதற்காக மொத்தம் 15,000 சிறிய ரக செயற்கைக்கோள்களை ஏவ சீனா முடிவெடுத்தது. இதன் முதல் தொகுப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏவப்பட்டது. இதில் 18 செயற்கைக்கோள்கள் இருந்தன.

ஒவ்வொன்றும் சுமார் 300 கி.கி எடையில் இருந்தது. இவை பூமியிலிருந்து 800 கி.மீ உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டது. இதேபோன்று 2024 டிசம்பரில் அடுத்து இரண்டு தொகுதி ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. தற்போது மொத்தம் 99 செயற்கைக்கோள்கள் விண்வெளியில் இருக்கின்றன. 15,000 செயற்கைக்கோள்களை 3 கட்டங்களாக ஏவ இருக்கிறது. முதல் கட்டத்தில் 1,296 செயற்கைக்கோள்கள் ஏவப்படும். இதில் 648 செயற்கைக்கோள்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஏவப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் கன்னி உரை

0

அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்புவோம்

தேசியத்துவத்துடனும் ஐக்கியத்துடனும் ஒன்றுபட்டு நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க இன்று (23) காலை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

பதவிப் பிரமாணத்தின் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய முழுமையான உரை:

மக்களால் ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது நமது நாட்டின் ஜனநாயகத்திலிருக்கும் மிக முக்கியமான அம்சமாகும். தேர்தலில் வாக்களித்தல் மற்றும் ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதோடு ஜனநாயகம் நிறைவு பெறுவதில்லை. இது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சம் என்றாலும், நம் நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்த, கட்டமைப்புகளின் வலிமையும், சட்டங்களை வலுப்படுத்துவதும் அவசியம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனவே, எனது பதவிக்காலத்தில் இந்த நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.

அத்துடன், இந்த நாட்டில் ஜனநாயக முறையில் அதிகாரப் பரிமாற்றம் நடந்த வரலாறும் உண்டு. தேர்தலில் நிகழும் அதிகாரப் பரிமாற்றத்தை எந்தத் தலைவரும் நிராகரித்ததில்லை. அதற்கமைய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த மக்கள்ஆணையை சுமூகமாக ஏற்றுக்கொண்டதுடன், ஜனநாயக ரீதியில் அதிகாரத்தை கைமாற்றுவதற்கான அவரின் அர்ப்பணிப்பிற்கும் முன்னுதாரணத்திற்கும் நன்றி தெரிவிக்கிறேன். மேலும் எமக்கு கிடைப்பது மிகவும் சவால் நிறைந்த நாடு என்பதை நன்கு புரிந்து கொண்டிருக்கிறோம். நமது அரசியலில் தூய்மையான, மக்களால் எதிர்பார்க்கப்படும் சிறந்த அரசியல் கலாசாரத்திற்காக அவசியம் காணப்படுகிறது.அதற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

நம் நாட்டின் அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு நல்லெண்ணம் இல்லை. எனவே, அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் மீது மக்கள் மரியாதை மற்றும் நம்பிக்கையை மீட்டெடுக்க எங்கள் தரப்பிலிருந்து முடிந்த அனைத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.

மேலும், நமக்கு முன் இருக்கும் இந்த ஆழமான நெருக்கடியை வெறும் அரசோ, வெறும் அரசியல் கட்சியோ அல்லது ஒரு தனி நபரோ மட்டும் தீர்க்க முடியும் என்று நாங்கள் நம்பவில்லை. ஏனென்றால், நான் முன்பு கூறியது போல், நான் ஒரு மாயாஜால வித்தைக்காரனல்ல. நான் மந்திரவாதியும் இல்லை. நான் இந்த நாட்டின் சாதாரண குடிமகன். எம்மிடம் திறமைகள் உள்ளன. இயலாமைகளும் உள்ளன. தெரிந்த விடயங்களும் உள்ளன அதேபோன்று, தெரியாத விடயங்களும் உள்ளன.

ஆனால் திறமைகளைப் பயன்படுத்தி தெரியாதவற்றை சேகரித்துக்கொண்டு சிறந்த முடிவுகளை எடுத்து இந்த நாட்டை வழிநடத்துவதே எனது தலையாய பணியாகும். அந்த கூட்டுப் பங்களிப்பின் ஒரு அங்கமாக மாறுவது எனது பொறுப்பாகும். மேலும், இந்த நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதில் பொது மக்கள் மற்றும் அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் பாரிய பொறுப்பு உள்ளது. அந்தப் பொறுப்பை நிறைவேற்ற அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்.

ஆனால், நாட்டின் ஜனாதிபதி என்ற முறையில், இந்தப் பணியை முன்னின்று நடத்துவதில் எனக்கு முதன்மையான மற்றும் மிக முக்கியமான பொறுப்பு இருப்பதை நான் ஏற்றுக்கொண்டேன். எனவே, இந்தச் சவாலை வெற்றிகொள்வதற்காக எனக்குக் வழங்கப்பட்டுள்ள பணியை நான் உரிய முறையில் நிறைவேற்றுவேன் என்பதை செயற்பாடு மற்றும் நடைமுறை மூலம் எல்லா சந்தர்ப்பங்களிலும் இந்த நாட்டின் பிரஜைகளுக்கு வெளிப்படுத்த நான் தயாராக இருக்கிறேன்.

மேலும் நமது நாட்டுக்கு சர்வதேச ஆதரவு தேவை. எனவே, உலகில் எத்தகைய அதிகாரப் பிளவுகள் இருந்தாலும், ஒவ்வொரு நாட்டையும் எமக்கு மிகவும் சாதகமாக கையாள்வதே நமது எதிர்பார்ப்பாகும். நாம் உலகில் தனிமைப்படுத்தப்பட்ட நாடு அல்ல. உலகத்துடன் கூட்டாக முன்னேற வேண்டிய ஒரு நாடாகும். அது தொடர்பில் தேவையான முடிவுகளை எடுக்க நாங்கள் சிறிதும் தயங்குவதில்லை.

மேலும், நம் நாட்டைக் கட்டியெழுப்புவதில் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு பெரும் பங்கு உள்ளது. எனவே, நாட்டை மேலும் வலுவாகக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு அவர்கள் ஆதரவளிப்பார்கள் என நான் கருதுகின்றேன்.

நம் நாட்டின் ஜனநாயகத்தின் ஊடாக நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். அதற்காக மக்கள் எனக்கு வாக்களித்தனர்.

மேலும் எனக்கு வழங்கப்படாத வாக்குகளும் உள்ளன. எனவே, எங்களின் வெற்றியின் உள்ளடக்கம் மற்றும் அளவு குறித்து எங்களுக்கு நல்ல புரிதல் உள்ளது. எனவே, எங்களுக்கு ஆதரவு வழங்காத மற்றும் எங்களை நம்பாத பிரஜைகளின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெறுவதே எனது நிர்வாகத்தின் போது எனக்கு வழங்கப்பட்டுள்ள பணியாகும். அந்தப் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

எதிர்காலத்தில் இவை அனைத்தையும் நீங்கள் நடைமுறையில் கண்டுகொள்ள முடியும். அதற்கு அனைத்து மக்களின் ஆதரவையும் எதிர்பார்க்கின்றேன்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தேர்தலில் இவ்வாறுதான் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்

0

அதிகாரிகள் மற்றும் பிற தேவைகள் முடிந்த பிறகு, மாலை 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (19) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி பிற்பகல் 4.15 மணிளவில் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“எதிர்வரும் 21ம் திகதி வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள் பெறப்பட்டதும், அதிகாரிகள் மற்றும் இதர தேவைகள் முடிந்ததும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் இரவு 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

மாலை 4.15 மணிளவில் தபால் மூல வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

அத்துடன் மாவட்ட அளவில் ஒவ்வொரு வட்டாரத்திலும் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெறும்.

வாக்கு எண்ணிக்கையின் முடிவில் முடிவுகள் கிடைத்தவுடன் ஊடகங்களுக்கு வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையே முதலில் எண்ணப்படும்.

அந்தக் கணக்கெடுப்பின் பின்னர் (மாவட்ட அளவில் எண்ணும் பணி) முதலில் வாக்குப்பெட்டிகளில் உள்ள வாக்குகள் எண்ணப்படும்.

அதன் பிறகு, ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு, தொகுதி மற்றும் மாவட்ட அளவில் அது தயாரிக்கப்படுகிறது.

தேர்தல்கள் செயலகமே ஒட்டுமொத்த முடிவுகளைக் கணக்கிடும்.

எந்த வேட்பாளரும் 50 வீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்றுள்ளாரா என சரிபார்க்கப்படும்.

அப்படியானால், அந்த நேரத்தில் வாக்கு எண்ணும் பணிகள் நிறுத்தப்படும்.

அப்போது ஜனாதிபதியை நாங்கள் அறிவிப்போம்.

எந்த வேட்பாளருக்கும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் கிடைக்காவிடின், விருப்பு வாக்கு எண்ணிக்கைக்கு செல்ல வேண்டும்.

அங்கு, அதிக வாக்குகள் பெற்ற இரண்டு வேட்பாளர்கள் போட்டியில் வைத்து விட்டு  மீதமுள்ள 36 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து நீக்கப்படுவர்” என்றார்.

புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக மாறும்

0

புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வாத்தியாசலையாக மாற்றம் பெரும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று புத்தளத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ அலிசப்ரி ரஹீம் மற்றும் சிந்தக்க மாயாதுன்ன தலைமையில் புத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்திலே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

புத்தளம் மக்களின் நீண்ட நாள் தேவையாக இருந்து வருகின்ற புத்தளம் தல வைத்தியசாலையை தரமுயர்த்துவது தொடர்பாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ அலிசப்ரி ரஹீம் அவர்களினால் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோலுக்கிணங்க குறித்த வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.

மேலும் புத்தளத்தில் மீன் பிடி தொழிலை முன்னேற்றும் நோக்கத்தில் மீன் பிடி துறைமுகம் ஒன்றை அமைக்கும் யோசனையும் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டதுடன், அதற்கான முன்னெடுப்புகளும் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்டமை புத்தளம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நாட்டில் நிரந்தர பொருளாதார அபிவிருத்தியை நிலை நாட்ட தாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டை பொருளாதார அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவதே தனது பிரதான நோக்கம் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மொட்டுக்கட்சிக்கு எதிராக நிற்கும் முக்கிய அமைச்சர்கள்

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக மொட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளரை இந்த வாரம் அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்காதிருக்கவும், மொட்டு சின்னத்தில் தனியாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமக்கு ஆதரவு வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பியிருந்த கடிதம் நேற்றைய தினம் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தினால் அரசியல் குழுவில் முன்வைக்கப்பட்டது.

எவ்வாறாயினும் அந்த கடிதத்தை நிராகரிக்க அரசியல் குழுக் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுவில் 82 பேர் அங்கம் வகிப்பதுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் 72 பேர் பங்கேற்றனர்.

இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த 11 பேர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

மஹிந்தானந்த அலுத்கமகே, பந்துல குணவர்தன, பிரதீப் உந்துகொட, கோகிலா ஹர்ஷனி குணவர்தன, சஹன் பிரதீப், ரமேஸ் பத்திரன, கஞ்சன விஜேசேகர, பிரசன்ன ரணதுங்க, கனக ஹேரத், மொஹான் பிரியதர்ஷன ஆகியோர் கட்சியின் சார்பில் தனியான வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

அத்துடன் பிறிதொரு கட்சியின் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்கும் உறுப்பினர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் யோசனைக்கு 6 பேர் எதிராக வாக்களித்துள்ளனர்.

எவ்வாறாயினும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் எனக் கூறப்பட்ட தம்மிக பெரேரா தொடர்பில் அரசியல் குழுக் கூட்டத்தின்போது எந்தவித கருத்துக்களும் பரிமாற்றிக் கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவளிக்காத 11 பேர் உள்ளிட்ட தரப்பினர் நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தனவின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சைனப் ஆரம்பப் பாடசாலைக்கு ஆளுநர் வருகை!

0

புத்தளம் சைனப் ஆரம்ப பாடசாலையின் முப்பெரும் விழா பாடசாலை அதிபர் யஹியா தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து புத்தளம் ஜெய்னப் பாடசாலைக்கு 22 லட்சம் ரூபா பெறுமதியான நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு, சிறுவர் விளையாட்டு நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தல் மற்றும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் செயற்திட்டத்தின் கீழ் BCMH நிறுவனத்தினால் கற்றல் உபகரணம் வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் கடந்த செவ்வாய்க்கிழமை (16) வெகு விமர்சையாக இடம்பெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதியாக வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், விசேட அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மற்றும் கௌரவ அதிதியாக புத்தளம் வலயக்கல்விப் பணிப்பாளர் அர்ஜுன ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆரம்ப பாடசாலையின் முக்கியத்துவம் மற்றும் அறிவார்ந்த சமூகத்தை கட்டியெழுப்ப ஆரம்ப பாடசாலை ஆற்றிவருகின்ற அர்ப்பணிப்பு குறித்து விரிவாக பேசிய வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், புத்தளம் மாவட்ட பாடசாலைகளின் துரித வளர்ச்சி பற்றியும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

மேலும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் செயற்திட்டத்திற்கு வடமேல் மாகாண ஆளுநர் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் ஜவ்ஷி ஜமால்தின், இணைப்புச் செயலாளர் எச். அமீர் அலி ஆசிரியர், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் உட்பட உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் அயல் பாடசாலையின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு
நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு

ஹிருணிகாவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறை

0

கடத்தல் வழக்கில் முன்னாள் எம்.பி ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்தத் தீர்ப்பை அறிவித்தார்.

தெமட்டகொட பகுதியிலுள்ள கடை ஒன்றில் பணிபுரிந்த அமில பிரியந்த அமரசிங்க எனும் இளைஞர் ஒருவரை 2015 டிசம்பர் 21ஆம் திகதி ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு சொந்தமான டிபெண்டர் வாகனத்தில் கடத்திய வழக்கு விசாரணை முடிவில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

29 குற்றங்கள் தொடர்பில் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் 8 பேரும் குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில், அச்சம்பத்திற்கு உதவி, ஒத்தாசை புரிந்ததாக ஹிருணிகா மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்திருந்தார்.

அத்தோடு, சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவின் ஆதரவாளர்கள் 8 பேர் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைதான ஐந்தாம் சந்தேகநபரின் மகள் அளித்துள்ள வாக்குமூலத்தில், தமது தாயாருடன் தொடர்பு பேணிய நபர் ஒருவரை தாம் காண்பித்ததாகவும், அவரை தமது தந்தையும் அவருடன் சென்றவர்களும் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு ஹிருணிகாவிடம் அழைத்துச் சென்றதாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

ஓவியப்போட்டியில் எருக்கலம்பிட்டி மாணவன் முதலாமிடம்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட வட மாகாண மானவர்களுக்கிடையிலான சித்திரப்போட்டியில் மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்றார்.

வீதி விபத்துக்கள் இல்லாத நாளைக்கான பாடசாலையிலிருந்து அணிவக்குப்போம் எனும் தொனிப்பொருளில் கடந்த வியாழக்கிழமை (13.06.2024) அன்று நடாத்தப்பட்ட வட மாகாண மாணவர்களுக்கிடையிலான குறித்த சித்திரப்போட்டியில் சுமார் 2600 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

சித்திரப்போட்டியில் பங்குபற்றிய 2600 மாணவர்களில் 250 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு நேற்றைய தினம் (15.06.2024) அவர்களுக்கான போட்டி இடம்பெற்றது.

நடைபெற்று முடிந்த இறுதிச் சுற்றுப்போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்று பெருமதிமிக்க பரிசில்களை பெற்றுக்கொண்டார்.

முதலாம் இடம் பெற்ற முஹம்மது ஹுசைன் என்ற மாணவனுக்கு சான்றிதல், துவிச்சக்கரவண்டி மற்றும் 8500/- ரூபா பெறுமதியான வவுச்சரும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இதேவேளை குறித்த போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய இல்முதீன் முஹம்மது ஹஸ்பான் 7 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய மற்றொரு மாணவரான முஹம்மது சம்ஹான் 8 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

பாரிய சாவல்களுக்கு மத்தியில் தனி ஒரு மனிதனாக இம் மாணாவர்களை ஊக்கப்படுத்தி, தயார்ப்படுத்தி போட்டியில் பங்குபெறச் செய்து வெற்றிபெறச் செய்த எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியின் சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் அவர்களின் இம் முயற்சிக்கு, பாடசாலை சமூகம் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் நன்றி தெரிவித்தனர்.

தமக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வந்து தேசிய அளவில் இடம்பெறும் போட்டிகளில் மாணவர்களை பங்குபெறச் செய்வதே தனது இலக்கு என சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் எமது ஊடகத்திற்கு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை இராஜினாமா

0

நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்துள்ளனர்.

சாந்த நிரியல்ல உட்பட 15 பேர் கொண்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரின் அறிவித்தலுக்கு அமைய இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி திங்கட்கிழமை புதிய பணிப்பாளர் சபை நியமிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ “அத தெரண” விற்கு தெரிவித்தார்.

புத்தளம் எருக்கலம்பிட்டியில் கடும் வெள்ளம்

0

புத்தளம் பகுதியில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக புத்தளம் பகுதி முழுதும் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.

புத்தளம், தில்லையடி, பாலாவி, புத்தளம் எருக்கலம்பிட்டி, ஹிதாயத் நகர்,  மதுரங்குளி மற்றும் ஏனைய பல கிராமங்களும் வெள்ளித்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமமும் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 1500 குடும்பங்கள் இங்கு வாழ்ந்துவருவதுடன், அனைத்து வீடுகளும் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நூற்றிற்கும் அதிகமான வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் ஐநூற்றுக்கும் அதிகமான வீடுகள் பகுதி அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8ஆம் திகதி ஏற்பட்ட மழை வெள்ளித்தினால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் மற்றும் பாடசாலைகளில் தற்காலிகமாக  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு தினங்களாக இவர்களுக்கான சமைத்த உணவுகள் மூன்று வேலைகளிலும் ஊர் தனவந்தர்களின் உதவியுடனும், பள்ளிவாசல் நிர்வாக சபையின் வழிகாட்டலுடனும் வழங்கப்பட்டு வருவதுடன், ஊர் மக்களுக்கும் உணவு விநியோகங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

இவர்களுக்கான நிவாரண உதவிகள் இதுவரை அரசாங்கத்தினால் வழங்கப்படாத போதிலும், ஊர் மக்களின் பங்களிப்புடன் மாத்திரமே பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு விநியோகங்கள் இதுவரை  வழங்கப்பட்டு வருகின்றது.

புத்தளம் பொத்துவில்லு பகுதியில் உள்ள குளம் மழை நீரினால்  பெருக்கெடுத்துள்ளதால் குறித்த குளத்து நீர் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமத்திற்குள் தொடர்ந்தும் மூன்றாவது நாளாக ஊடறுத்து செல்வதால் வீடுகள் தொடர்ந்தும் நீருள் மூழ்கியுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்தின் நிவாரண உதவிக்காக பல மக்கள் தொடர்ந்தும் எதிர்பார்த்து காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தவெக – காங்கிரஸ் கைகோர்ப்பு: தமிழக அரசியலில் புதிய ஆரம்பம்!

தமிழகத்தில் ஆட்சி அமைக்க தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தி.மு.க., கூட்டணியில், 28 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்றது. 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெகவுக்கு ஆட்சி அமைக்க பெரும்பான்மையை நிரூபிக்க 11 எம்எல்ஏக்கள் தேவைப்படுகின்றன. இதனால் 2 எம்எல்ஏக்களை கொண்டுள்ள இந்திய கம்யூ, மார்க்சிஸ்ட் மற்றும் விசிகவுக்கு ஆதரவு கோரி விஜய் கடிதம் அனுப்பி உள்ளார்.

இதற்கிடையே, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு ஆதரவு அளிப்பது குறித்து, தேர்தலில் வெற்றி பெற்ற காங்., வேட்பாளர்கள் ஐந்து பேருடன், அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் ஆலோசனை நடத்தினார்.

தற்போது தமிழகத்தில் ஆட்சி தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. அடுத்து வரவிருக்கும் லோக்சபா, உள்ளாட்சி தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என்று காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. தவெகவுக்கு ஆதரவு என்று காங்கிரஸ் அறிவித்ததால், திமுகவுடன் 2016ம் ஆண்டு முதல் தொடரும் அந்த கட்சியின் கூட்டணி முடிவுக்கு வந்துவிட்டது.

இந்திய தேசிய காங்கிரஸ், இந்தியாவின் மதச்சார்பற்ற, முற்போக்கான மற்றும் மக்கள் நல அரசியலின் அடையாளமாகவும், அதன் தோற்றுவிப்பாளராகவும் திகழ்கிறது. தமிழ்நாட்டு மக்களின் இந்த ஆணையை மதிப்பதும், நிலைநிறுத்துவதும், அதனை நிறைவேற்ற உதவுவதும் எங்களது அரசியலமைப்பு ரீதியான கடமையாகும். அதற்கேற்ப, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க தனது முழு ஆதரவை வழங்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும், காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியும் (CLP) முடிவு செய்துள்ளன.

இந்திய அரசியலமைப்பில் நம்பிக்கையற்ற எந்தவொரு வகுப்புவாத சக்திகளையும் இந்த கூட்டணியில் சேர்க்கக் கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் எங்களது ஆதரவு அமையும்.

தமிழக வெற்றிக் கழகம் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் இடையிலான இந்த கூட்டணி, தந்தை பெரியாரின் சமூக நீதிச் சிந்தனைகள் மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டக் கோட்பாடுகளுக்கு வலுவான அர்ப்பணிப்புடன், பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழ்நாட்டிற்கு கொண்டு வர பாடுபடும்.

பரஸ்பர மரியாதை, தகுந்த பங்கு மற்றும் பகிர்ந்தளிக்கப்பட்ட பொறுப்பு ஆகியவற்றின் அடிப்படையில் உருவான இந்த கூட்டணி, தற்போதைய ஆட்சி அமைப்பதோடு மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவைத் தேர்தல்களுக்கும் தொடரும்.

விஜய் மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் இணைந்து, மதச்சார்பற்ற மற்றும் முற்போக்கான அரசாங்கத்திற்கான தமிழ்நாட்டு மக்களின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை மதித்து நடப்பதாகவும், தமிழ்நாட்டு மக்களின், குறிப்பாக இளைஞர்களின் கனவுகளையும் வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதாகவும் உறுதிபூணுகின்றனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டுக்குள் ஒரு கார் கண்காட்சி – இங்கிலாந்து முதல் அமெரிக்கா வரை

0

நிருபர்: ஜூட் சமந்த

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் விளையாட்டு கார்களை சேகரிப்பது ஒரு பொழுதுபோக்காக இருந்தாலும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மிகப்பழமையான விளையாட்டு கார்களின் தொகுப்பைக் கொண்டிருப்பது அரிதான ஒரு விஷயமாகும்.

வென்னப்புவ – நைனாமடை பிரதேசத்தைச் சேர்ந்த பர்டி பெரேரா என்பவர், அத்தகைய ஒரு அரிய வகை சேகரிப்புக்கு உரிமையாளராகத் திகழ்கிறார். இவரிடம் இங்கிலாந்து, அமெரிக்கா, இத்தாலி, கனடா போன்ற பல நாடுகளில் தயாரிக்கப்பட்ட, சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த 65 விளையாட்டு கார்கள் உள்ளன.

தனது இந்த அரிய வகை சேகரிப்பு பற்றி பர்டி பெரேரா கருத்து தெரிவிக்கையில்:

“நான் நீண்ட காலம் இத்தாலியில் பணிபுரிந்தேன். 1990-ஆம் ஆண்டு காலப்பகுதியில் அங்குள்ள ஒரு வயதான கலைஞரிடம் பணிபுரியும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர் அடிக்கடி பல்வேறு நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வார். அவ்வாறு சென்று வரும்போதெல்லாம் அழகான விளையாட்டு கார்களை வாங்கி வருவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.”

அவரிடம் சுமார் 10 ஆண்டுகள் பணியாற்றியதாகக் கூறும் பெரேரா, அந்தக் கலைஞரின் இறுதிக்காலத்தில் அந்த பெறுமதிமிக்க கார் தொகுப்பை தன்னிடம் ஒப்படைத்ததாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். அவர் இறந்த பிறகு, அந்த நினைவாகவே அக்கார்களைத் தான் இலங்கைக்குக் கொண்டு வந்ததாக அவர் தெரிவித்தார்.

தனித்துவமான சிறப்பம்சங்கள்

இந்த சேகரிப்பில் உள்ள ஒவ்வொரு காரின் பின்புறத்திலும் அது தயாரிக்கப்பட்ட நாடு மற்றும் வருடம் தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளது. இதுவரை எங்கும் பார்த்திராத பல அரிய வகை மாதிரிகள் இந்தத் தொகுப்பில் அடங்கியுள்ளன. இந்த கார்களைக் காண்பதற்காகத் தனது இல்லத்திற்கு வரும் சிறுவர்களைப் பார்ப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக அவர் கூறுகிறார்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சேகரிப்பைப் பாதுகாப்பாகப் பராமரிப்பதற்கு, அவரது உறவினரான ரோலண்ட் ரோட்னி என்பவரும் பெரும் ஒத்துழைப்பை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முதல்வரான பிறகும் விஜய்க்கு இருக்கும் மிகப்பெரிய சிக்கல்!

இன்று ஆளுநரைச் சந்தித்து விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரலாம் எனச் சொல்லப்படுகிறது. அதன் பிறகு பெரும்பான்மையை நிரூபிக்க விஜய்க்கு 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படலாம் எனச் சொல்லப்படுகிறது. இருப்பினும், கர்நாடகாவில் எடியூரப்பா விவகாரத்தை மேற்கோள் காட்டும் சிலர், விஜய்க்குப் பெரும்பான்மையை நிரூபிக்க ஒரு நாள் மட்டுமே கால அவகாசம் வழங்கப்படும் என்கிறார்கள்.

தமிழ்நாடு தேர்தலில் 108 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக, இன்று ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோறியுள்ளது. பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், விஜய் கட்சிக்கு இப்போது 10 எம்.எல்.ஏ.க்கள் கூடுதலாகத் தேவைப்படுகிறது. இதற்காக அவர் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகளிடம் பேசி வருவதாகச் சொல்லப்படுகிறது.

ஒருவேளை எல்லாமே திட்டமிட்டபடி நடந்தால்.. ஓரிரு நாட்களில் விஜய் முதல்வராகப் பதவியேற்பார் எனத் தெரிகிறது. இருப்பினும், அதன் பிறகு அவர் சட்டசபையில் 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டி இருக்கிறது. அதை நிரூபிக்கவில்லை என்றால் ஆட்சி கவிழும்! இருப்பினும், 15 நாட்கள் இருப்பதால் அதற்குள் தேவையான பெரும்பான்மையைப் பெற முடியும் எனச் சொல்லப்பட்டது. இருப்பினும் 15 நாட்களுக்குப் பதிலாக ஒரு நாள் மட்டுமே கூட டைம் வழங்கப்படலாம் எனச் சொல்லப்படுகிறது.

இதற்கு 2018ம் ஆண்டு கர்நாடகாவில் நடந்த எடியூரப்பா விவகாரத்தை உதாரணமாகச் சொல்கிறார்கள்.. அதாவது அப்போது கர்நாடக தேர்தலில் 104 இடங்களைப் பெற்ற பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும், இது பெரும்பான்மைக்குத் தேவைப்பட்ட 112 இடங்களை விட 8 இடங்கள் குறைவாகும். எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அப்போதே ஆளுநர் அழைப்பு விடுத்தார். மேலும், பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் அளித்தார்.

இதனை எதிர்த்து காங்கிரஸ்- ஜேடிஎஸ் கூட்டணி அவசர மனுத் தாக்கல் செய்தது. அதில் குதிரை பேரம் நடக்கும் அபாயம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை அப்போதைய சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஏ.கே. சிக்ரி தலைமையிலான அமர்வு விசாரித்தது. அதில் “குதிரை பேரத்தைத் தவிர்க்க உடனடியாகப் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்” என்று கூறி, 15 நாள் அவகாசத்தை வெறும் 24 மணிநேரமாகக் குறைத்து உத்தரவிட்டது. பெரும்பான்மைக்குத் தேவையான 112 இடங்கள் இல்லாததால், எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே உணர்ச்சிகரமாகப் பேசி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

விஜய்யின் தற்போதைய நிலை எடியூரப்பாவின் நிலையை விடச் சற்று நெருக்கடியானது. எடியூரப்பாவுக்கு 8 இடங்கள் மட்டுமே தேவைப்பட்டன, ஆனால் விஜய்க்கு 10 இடங்கள் தேவைப்படுகின்றன. எனவே, எடியூரப்பாவைப் போலவே 24 மணி நேரம் மட்டும் கூட டைம் வழங்கப்படலாம். மேலும், பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை விஜய் அரசு எந்தவொரு முக்கியக் கொள்கை முடிவுகளையும் எடுக்க முடியாது.

எடியூரப்பா விவகாரத்தில், “பெரும்பான்மை என்பது நம்பர்களை பொறுத்தது; அதன் உண்மைத்தன்மை சட்டமன்றத்தில் தான் நிரூபிக்கப்பட வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. அந்த நம்பர் தான் விஜய்க்கும் இப்போது தேவைப்படுகிறது. எனவே, விஜய்க்கு ஆளுநர் இரு வாரம் டைம் வழங்கினாலும் கூட அது குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும் என எதிர்க்கட்சிகள் நீதிமன்றம் செல்ல அதிக வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால், வெறும் 24 மணி நேரத்தில் பெரும்பான்மையைப் பெற வேண்டி இருக்கும்.

தேர்தலில் தமிழ்த் திரையுலகினரின் வெற்றியும்… தோல்வியும்!

தமிழக சட்டசபைத் தேர்தலில் தமிழ்த் திரையுலகிலிருந்து சிலர் போட்டியிட்டனர். தவெக தலைவர் விஜய் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளார்.

அவரது கட்சியில் போட்டியிட்ட மற்ற திரைக் கலைஞர்களில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட விஜய்யின் நண்பரும், நடிகருமான ஸ்ரீநாத், திமுக அமைச்சர் கீதா ஜீவனைத் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.

ஸ்ரீநாத் – தவெக – 1,00,536
கீதா ஜீவன் – 62,805

சென்னை ரோகிணி தியேட்டர் உரிமையாளர்களில் ஒருவரான ரேவந்த் சரண் மதுரவாயல் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு தேர்வாகி உள்ளார்.

ரேவந்த் சரண் – தவெக – 1,41,725
கணபதி – திமுக – 80,216

சென்னை எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராஜ்மோகன் கூட ஒரு திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஓரிரு படங்களில் நடித்துள்ளார்.

ராஜ்மோகன் – தவெக – 53,901
தமிழன் பிரசன்ன – திமுக – 43,097

திமுக சார்பில் முன்னாள் அமைச்சரான உதயநிதி ஸ்டாலின், சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் – திமுக – 62,992
செல்வம் – தவெக – 55,852

வந்தவாசி தொகுதியில் தயாரிப்பாளர் அம்பேத்குமார், திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

அம்பேத்குமார் – திமுக – 63,805
ராணி – அதிமுக – 60,472

மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக்கட்சி சார்பில் அதிமுக சின்னத்தில் போட்டியிட்ட இயக்குனர் சுந்தர் சி, தோல்வியடைந்து மூன்றாம் இடத்தையே பிடித்துள்ளார்.

மதார் பஹ்ருதீன் – தவெக – 63,414
பிடிஆர் பழனிவேல் ராஜன் – திமுக – 44,286
சுந்தர் சி – அதிமுக – 33,538

சிவகங்கை தொகுதியில் முக்குலத்தோர் புலிப்படை கட்சி சார்பில் திமுக சின்னத்தில் போட்டியிட்ட நடிகர் கருணாஸ் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டு தோல்வியடைந்துள்ளார்.

குழந்தை ராணி – தவெக – 73,737
செந்தில்நாதன் – அதிமுக – 58,656
கருணாஸ் – திமுக – 57,300

சினிமா இயக்குனராகவும், நடிகராகவும் இருந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் 30,793 வாக்குகளை மட்டுமே பெற்றதால் 4ம் இடம் கிடைத்து டெபாசிட்டைப் பறிகொடுத்தார்.

டாக்டர் பிரபு – தவெக – 1,01,358
மாங்குடி – காங்கிரஸ் – 55,284
தேர்போகி வி பாண்டி – அமமுக – 33,352
சீமான் – நாம் தமிழர் – 30,793

லால்குடி தொகுதியில் சுயோச்சையாகப் போட்டியிட்ட நடிகர் மன்சூரலிகான் 101 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட்டை இழந்தார்.

லீமாரோஸ் மார்ட்டின் – அதிமுக – 60,795
குப கிருஷ்ணன் – தவெக – 58,056
பாரிவள்ளல் – திமுக – 55,565
மன்சூரலிகான் – சுயேச்சை – 101

பென்னாகரம் தொகுதியில் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்ட தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ஜிகே தமிழ்க்குமரன் தோல்வியைத் தழுவினார்.

கஜேந்திரன் – தவெக – 81,240
பாட்டாளி மக்கள் கட்சி – 78,075
ஜிகே தமிழ்க்குமரன் – காங்கிரஸ் – 53,901

முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஸ்டாலின்!

0

கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட ஸ்டாலின் தோல்வி அடைந்த நிலையில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமா கடிதத்தை கவர்னருக்கு அனுப்பினார்.

இதற்கிடையே சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நடந்து முடிந்த தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த தமிழக மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை உண்மை உணர்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவரின் ஒவ்வொரு வாக்கையும் விலைமதிப்பற்ற நம்பிக்கையாக நான் கருதுகிறேன்.

இப்போது வரை கிடைத்துள்ள புள்ளிவிபரங்களின்படி திமுக கூட்டணிக்கு 1 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்குகள் கிடைத்துள்ளன. இம்மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன். கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியானது, நம்மை விட 17.43 லட்சம் வாக்குகளை மட்டுமே கூடுதலாகப் பெற்றுள்ளது. நமக்கும் அவர்களுக்குமான வாக்கு சதவீதம் வேறுபாடு என்பது 3.52 விழுக்காடு மட்டுமே. என்னைப் பொறுத்தவரையில் தமிழக மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை வலிமையானதாகவே கருதுகிறேன்.

ஆளும் கட்சியாக இருந்தால் மக்களுக்கான திட்டங்களைத் தீட்டுவோம். எதிர்க்கட்சியாக இருந்தால் மக்களுக்கான கோரிக்கைகளுக்காகவே போராடுவோம். அந்த வகையில் இப்போது வலிமையான எதிர்க்கட்சியாக இருந்து மக்களுக்கான அரசியலை நாம் தொடர்வோம். இனம், மொழி, நாடு காக்கும் பயணத்தைத் தொடர்வோம். நமது பயணத்தில் எவரையும் பின்தங்க நான் விட மாட்டேன். மீண்டும் வெல்வோம். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

வறிய குடும்பத்தின் வீட்டுக்கனவை நனவாக்கிய தேசிய மக்கள் சக்தி!

0

தேசிய மக்கள் சக்தியின் “அனைவருக்கும் பாதுகாப்பான தங்குமிடம்” எனும் தூரநோக்கிற்கு அமைவாக, புத்தளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தம்மன்னகம கிராம உத்தியோகத்தர் பிரிவில் வறிய குடும்பம் ஒன்றுக்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடொன்று இன்று உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் (NHDA) நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட இந்த நிரந்தர வீட்டை, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் M.J.M. பைசல் அவர்கள் கலந்துகொண்டு பயனாளிகளிடம் கையளித்தார்.

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தகுதியான குடும்பங்களை அடையாளங்கண்டு, அவர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதன் மூலம் அவர்களின் நீண்டகால வீட்டுக்கனவு இதன் மூலம் நனவாக்கப்பட்டுள்ளது.

புதிய வீட்டைத் திறந்து வைத்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் M.J.M. பைசல், மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் தற்போதைய அரசாங்கம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் பிரஜா சக்தி தலைவர் மற்றும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினருமான நிமேஸ், புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ரஜிதா, தேசிய மக்கள் சக்தியின் பிரமுகர்கள், தம்மன்னகம கிராம உத்தியோகத்தர் மற்றும் அரச அதிகாரிகள், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் திட்ட உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

புதிய வீட்டினைப் பெற்றுக்கொண்ட குடும்பத்தினர், தங்களின் வாழ்வாதாரத்தைச் சீரமைக்க அரசு வழங்கிய இந்த உதவிக்குத் தமது நெகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.

எம்ஜிஆரை மிஞ்சிய விஜய்; அறிமுக தேர்தலில் சொல்லியடித்து அசத்தல்!

தமிழகத்தில் புதிதாக கட்சி துவங்கி அறிமுக தேர்தலிலேயே அதிக ஓட்டு சதவீதத்தை பெற்ற எம்ஜிஆரின் அதிமுக வை மிஞ்சி, விஜயின் தவெக முதலிடத்தை பிடித்துள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று (மே 4) வெளியாகி வருகிறது. இந்த தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான ‘தமிழக வெற்றிக் கழகம்’ (தவெக) முதல்முறையாக களத்தில் இறங்கியது. இதனால் அதிக எதிர்பார்ப்பு அக்கட்சி மீது ஏற்பட்டது.

விஜய் தனது முதல் மாநாட்டிலும் எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்தபோது எப்படி முதல்முறை தேர்தலில் வெற்றி பெற்றாரோ, அதேபோல், வரலாறு திரும்புகிறது; நாமும் ஆட்சி அமைப்போம் என்று பேசினார். அதேபோல், எம்ஜிஆருக்கு கிடைத்தது போன்ற ஆதரவு விஜய்க்கும் கிடைத்தது.

அதனை உறுதிப்படுத்தும் விதமாக முதல் தேர்தலிலேயே அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது தவெக. பெரும்பான்மை இடங்களை பெறவில்லை என்றாலும், கூடுதல் தொகுதிகளில் த.வெ.க வெற்றி முகத்தில் இருக்கிறது. பகல் 1 மணி நிலவரப்படி தவெக மட்டும் 38 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது.

எம்.ஜி.ஆர் அதிமுக கட்சி துவங்கி 1977 சட்டசபை தேர்தலில் முதன்முறையாக களமிறங்கியபோது 30.4 சதவீத ஓட்டுகளை பெற்றார். கடந்த 49 ஆண்டுகளாக அதன் பிறகு எத்தனையோ புதிய கட்சிகள் தேர்தலில் களமிறங்கின. ஆனால் அக்கட்சிகள் 10 சதவீத ஓட்டுகளைக் கூட எட்டவில்லை.

அப்படியிருக்கையில் எம்ஜிஆரின் 30.4 சதவீத சாதனையை கட்சி துவங்கி இரண்டரை ஆண்டில் முதல் தேர்தலில் தகர்த்து சாதித்துள்ளார் விஜய். இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

வரிப்பணமும் மக்கள் சலுகைகளும் எங்கே? பைஸர் முஸ்தபா கேள்வி!

0

அரசாங்கம் மக்களிடம் வரி அறவிட்டு வந்தாலும், மக்களுக்கான சலுகைகள் எங்கே; பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா கேள்வி

அரசாங்கம் மக்களிடம் வரி அறவிட்டு வந்தாலும், மக்களுக்கான சலுகைகள் எங்கே? என, பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான பைஸர் முஸ்தபா கேள்வி எழுப்பினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம்,
“ஊழல் நிறைந்த அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் சக்தி” எனும் தொனிப்பொருளில், பொரளை கெம்பல் மைதானத்தில் நடைபெற்றபோதே, அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில், கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க உள்ளிட்ட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபாவின் வழி காட்டலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்ட மக்கள் உள்ளிட்ட நாட்டின் நாலா பக்கங்களிலிருந்தும், கட்சியின் அபிமானிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்ட இம்மே தினக் கூட்டத்தில் பைஸர் முஸ்தபா மேலும் கருத்து வெளியிடும்போது,
அரசாங்கம் வரி அறவிட்டு வந்தாலும், மக்களுக்கான சலுகைகளை உரிய முறையில் வழங்க முன்வரவில்லை. மக்கள் தற்போது பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

பொருளாதார ரீதியிலும் அரசாங்கம் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் மக்கள் மீது வரி சுமத்தப்பட்டு வருகிறது. ஆனால், நிவாரணங்கள் சரியாக வழங்கப்படுவதில்லை. இது அரசாங்கம் மக்களுக்கு செய்யும் அநியாயமும் அநீதியுமாகும். எனவே, மக்களுக்கான நிவாரண உதவிகளை வழங்கவும், பொருளாதார ரீதியில் சலுகைகளைப் பெற்றுக் கொடுக்கவும் அரசாங்கம் உடனடியாக முன்வர வேண்டும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, சின்னாபின்னமாகிப் போகவில்லை. எமது கட்சி, இதுவரை பிரிந்து போகவும் இல்லை. கட்சி, கடந்த காலங்களைப் போல் மிகச் சிறப்பாக செயற்பட்டு வருகிறது. மக்கள் அபிமானம் தொடர்ந்தும் எதுவித மாற்றங்களும் இன்றி அவ்வாறே பலமாக உள்ளது.

இந்த நிலைப்பாட்டை, கட்சி என்ற வகையில் நாம் தொடர்ந்தும் உறுதியாக வலுமிக்கதாக தக்க வைப்போம். மக்களுடன் மக்களாக தோழ் தொடுத்து முன்னேறிச் செல்வோம் என்றார்.

தமிழகத்தில் ‘தளபதி’ புயல்: முதல் தேர்தலிலேயே தவெக முன்னிலை!

0

தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி தவெக 113 தொகுதிகளிலும், அதிமுக 69-க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும், திமுக 52-க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன.

முதல் முறை தேர்தலில் களம் கண்டுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதலே பல தொகுதிகளில் முன்னிலை பெற்று வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில் திமுக தலைமையிலான அணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மநீம, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படை மற்றும் தமிழர் தேசம் கட்சி ஆகிய கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

அதிமுக தலைமையிலான அணியில் பாஜ, பாமக (அன்புமணி), அமமுக, தமாகா, ஐஜேகே, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன. நடிகர் விஜய்யின் தவெக, சீமானின் நாம் தமிழர் கட்சிகள் தனித்து தேர்தலை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. மொத்தமுள்ள 234 தொகுதியிலும் 4023 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 3,579 பேர் ஆண்கள், 443 பேர் பெண்கள், ஒருவர் திருநங்கை ஆவார். இந்த தேர்தலில் 5 கோடியே 73 லட்சத்து 43,291 பேர் வாக்களிக்க தகுதி பெற்று இருந்தனர்.

இதில் 4 கோடியே 87 லட்சத்து 98,833 பேர் வாக்களித்தனர். இது 85.10 சதவீதம் ஆகும். வாக்குப்பதிவு முடிந்ததும் 75,064 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு அந்தந்த மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்குள்ள ஸ்டாங் ரூமில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டது.

போதைப்பொருள் மாஃபியாவிற்கு எதிராக நின்ற வீரன் கொலை!

0

போதைப்பொருள் வியாபாரத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்த நபர் ஒருவர், இனந்தெரியாத கும்பலால் இரும்புத் தடியால் தாக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மாரவிலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாரவிலை – குருசப் பள்ளிப் பகுதியைச் சேர்ந்த பொன்னம்பெருமகே ஸ்ரீலால் பெர்னாண்டோ (60 வயது) என்பவரே இவ்வாறு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இரவு 7.00 மணியளவில், மாரவிலை பகுதியில் வைத்து இவருக்கும் ஒரு குழுவினருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியுள்ளது. இதன்போது அக்குழுவினர் இரும்புத் தடிகளால் ஸ்ரீலால் பெர்னாண்டோவை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர், உடனடியாக மாரவிலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வந்தார். எனினும், சிகிச்சை பலனின்றி கடந்த மே மாதம் 01 ஆம் திகதி அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

உயிரிழந்த ஸ்ரீலால் பெர்னாண்டோ, குருசப் பள்ளிப் பகுதியில் ஒரு கும்பலால் முன்னெடுக்கப்பட்டு வரும் சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தவர் எனத் தெரியவந்துள்ளது. இந்த எதிர்ப்பு காரணமாகவே அவர் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும், அவர்கள் தற்போது பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளைக் கைது செய்வதற்கு மாரவிலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தித் தொகுப்பு: ஜூட் சமந்த