Saturday, November 1, 2025
Sponsored advertisementspot_img
Home Blog

நாகவில்லுவில் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ்வின் நினைவுதினம்!

பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று நாகவில்லுவில் இடம்பெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வு!

இலங்கை திருநாட்டில் பெளதீக ரீதியான பல வேலைத்திட்டங்களையும், இடம்பெயர்வு மற்றும் எல்லை நிர்ணயம் தொடர்பான பறந்துபட்ட அறிவினையும் கொண்டிருந்த எருக்கலம்பிட்டியை சேர்ந்த மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது வருட நினைவு தின நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

அந்த வகையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் நினைவுப் பேருரையும், புத்தக வெளியீடு நிகழ்வும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் ஏற்பாட்டில் நேற்று 25.08.2025 புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய அதிபர் ஜனாப் S.M. ஹுஸைமத் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், புத்தி ஜீவிகள் மற்றும் குடும்பத்தார்கள் கலந்தகொண்டமை விஷேட அம்சமாகும்.

சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் பொருளாளர் ஜனாப் ஏ.ஜி. அனீஸ் (Bsc.Agri) அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.

மேலும் இஸ்லாமிய கற்கை அறபு மொழிப் பீட, தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களினால் நூல் அறிமுக உரையும், நினைவுப் பேருரையும் மிகவும் உணர்வுபூர்வமாக நிகழ்த்தப்பட்டது.

கிழக்கு மற்றும் தென் கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பங்களிப்பு அளப்பெரியது என நினைவு கூறிய பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன், வடக்கில் ஏற்பட்ட யுத்தம் மற்றும் முஸ்லிம்களின் இடம்பெயர்வு குறித்து அதீத அக்கறையுடன் செயற்பட்ட மிக முக்கியமானவர் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்கள் எனவும் எடுத்துரைத்தார்.

வடக்கு முஸ்லிம்களின் இடம்பெயர்வு மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பில் அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களுடன் பலதரப்பட்ட கலந்துரையாடல்களை நடத்தி, சர்வதேசம் வரை இவ்விடயங்களை கொண்டுசென்ற மகான் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் என பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் தனது உரையில் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் புதல்வி சட்டத்தரணி எப்.சப்னா ஹஸ்புல்லாஹ் அவர்களினால் ஏற்புரை நிகழ்த்தப்பட்டதுடன், நூல் வெளியீடு நிகழ்வும் இடம்பெற்றது.

நூலின் முதற்பிரதியை ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தரும், புத்தளம் எருக்கலம்பிட்டி பள்ளிவாசல் நிர்வாக சபையின் முன்னாள் உறுப்பினருமான ஜனாப் ரஹ்மத்துல்லாஹ் (GS) அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

மேலும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் செயலாளர் ஜனாப் எஸ்.எச்.எம். றிஸ்னி அவர்களினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டதுடன், தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன், மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பாரியாருக்கும் நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில், பேராசிரியர்கள், கல்விமான்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், பாடசாலைச் சமூகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் குடும்பத்தார்கள் என பலரும் கலந்து சிறப்பித்ததுடன், ஈ நியூஸ் பெஸ்ட் ஊடக நிறுவனம் ஊடக அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரணிலுக்காக ஒன்று திரண்ட அரசியல் தலைவர்கள்!

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விசாரணை கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது, நாட்டின் அடிப்படை ஜனநாயக நிறுவனங்களின் வலிமை குறித்து கடுமையான கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் விளைவுகள் ஒரு தனிநபரின் அல்லது எந்தவொரு அரசியல் கட்சிகளின் தலைவிதியையும் விட, சமூகத்தின் உரிமைகளுக்கான பிரச்சினைகளை தோற்றிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் தலைவர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைகளை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது மற்றும் விளக்கமறியலை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து நடத்திய விசேட ஊடக சந்திப்பில் பங்கேற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரல முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் அறிக்கையை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

போர்த்துக்கல் அணி சாம்பியன் ஆனது!

0

‘நேஷன்ஸ் லீக்’ கால்பந்தில் போர்ச்சுகல் அணி சாம்பியன் ஆனது. பைனலில் ‘பெனால்டி ஷூட் அவுட்டில்’ 5-3 என ஸ்பெயினை வீழ்த்தியது.

ஐரோப்பிய கால்பந்து அணிகளுக்காக ‘நேஷன்ஸ் லீக்’ தொடர் நடத்தப்படுகிறது. மொத்தம் 54 அணிகள் பங்கேற்றன. நேற்று ஜெர்மனியின் முனிக் நகரில் நடந்த பைனலில், போர்ச்சுகல், நடப்பு யூரோ சாம்பியன் ஸ்பெயின் பலப்பரீட்சை நடத்தின. போட்டியின் 21வது நிமிடம் ஜுபிமெண்டி (ஸ்பெயின்), 26வது நிமிடம் மெண்டிஸ் (போர்ச்சுகல்) தலா ஒரு கோல் அடித்தனர். 45வது நிமிடம் மைக்கேல் ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் ஸ்பெயின் அணி 2-1 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் 61 வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். போர்ச்சுகல் அணிக்காக இவர் அடித்த 138வது கோல் இது. 90 நிமிட முடிவில் போட்டி 2-2 என சமன் ஆனது. அடுத்து நடந்த கூடுதல் நேரத்திலும் (30 நிமிடம்) இரு அணியும் கோல் அடிக்கவில்லை.

இதையடுத்து வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி ‘பெனால்டி ஷூட் அவுட்டுக்கு’ சென்றது. இரு அணிக்கும் தலா 5 வாய்ப்புகள் தரப்பட்டன. காயம் காரணமாக 88 வது நிமிடம் வெளியேறிய ரொனால்டோ, இதில் பங்கேற்கவில்லை.

முதல் 3 வாய்ப்பில் போர்ச்சுகலின் ராமோஸ், விடின்ஹா, பெர்ணான்டஸ் கோல் அடித்தனர். மறுபக்கம் ஸ்பெயின் தரப்பில் மெரினோ, பயேனா, இஸ்கோ கோல் அடிக்க 3-3 என ஆனது.

4வது வாய்ப்பில் மெண்டெஸ் (போர்ச்சுகல்) கோல் அடிக்க, ஸ்பெயினின் மோராட்டோ அடித்த பந்தை கோல் கீப்பர் டீகோ கோஸ்டா தடுத்து அசத்தினார்.

5வது வாய்ப்பில் நெவேஸ் கோல் அடித்தார். இதையடுத்து 5-3 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் ‘திரில்’ வெற்றி பெற்றது. 2019க்குப் பின் இத்தொடரில் மீண்டும் சாம்பியன் ஆனது.

தில்லையடியில் சிக்கிய கடத்தல் பீடி இலைகள்!

0

புத்தளத்தில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளுடன் வேன் ஒன்றும் பறிமுதல்!

இலங்கை கடற்படை, பொலிஸாருடன் இணைந்து, புத்தளம், தில்லையடி பகுதியில் 2025 ஜூன் 05 இரவு வேளையில் நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகள் கொண்ட ஒரு வேன் கைப்பற்றப்பட்டது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிறுவனம், புத்தளம் பொலிஸாருடன் இணைந்து தில்லையடி பகுதியில் நடத்திய இந்த சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்று சோதனை செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகளானது வாகனத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் வேன் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களால் ஆபத்தா?

விண்வெளியில் பூமியை சுற்றி வந்துக்கொண்டிருக்கும் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கொள்களை சீனா நினைத்தால் வெறும் 12 மணி நேரத்தில் தாக்கி அழித்துவிட முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் என்கிற செய்தி ஊடகத்தில் இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது தற்போது சீனா 99 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. இவை அனைத்தும் நான்ஜிங் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஆஸ்ட்ரோனாட்டிக்ஸ் பல்கலைக்கழகத்தின் விண்வெளிக் கட்டுப்பாட்டுத் துறையின் இயக்குநர் வூ யுன்ஹுவா தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இவை அனைத்தும் எலான் மஸ்கின் 1400 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை வெறும் 12 மணி நேரத்தில் காலி செய்துவிடும். சீன செயற்கைக்கோளில் லேசர், நுண் அலைகளை உருவாக்கும் கருவி, உளவு கருவிகள் பொருத்தப்பட்டிருக்கலாம். ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் வெறுமென நெட்வொர்க் கொடுக்க மட்டுமே பயன்படுத்தப்படுவதில்லை. தவிர, ராணுவ நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது என சீனா குற்றம்சாட்டி வருகிறது.

அதாவது, உக்ரைன்-ரஷ்யா போரில், உக்ரைன் படைகளுக்கு தகவல்கள் கொடுக்கவும், ரஷ்ய எல்லையை துல்லியமாக கண்காணிக்கவும் இந்த செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த 2022ம் ஆண்டு ரஷ்ய போரின்போது அப்போதைய உக்ரைனின் துணைப் பிரதமரான மைக்கைலோ ஃபெடோரோவ், “ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் சேவையை உடனடியாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த மஸ்க், “உடனடியாக சேவை வழங்கப்படும்” என்று கூறியிருந்தார்.

உக்ரைன் போருடன் மட்டுமே ஸ்டார்லிங்க் நிற்காது, நாளை சீனாவுக்கும்-தைவானுக்கும் பஞ்சாயது ஏற்பட்டால் அப்போதும், தைவானுக்கு சப்போர்ட் செய்ய ஸ்டார்லிங்க் வரும். எனவே இந்த கூட்டு நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்க சீனா இந்த புதிய செயற்கைக்கோள்களை உருவாக்கியிருக்கிறது.

கடந்த 2023ம் ஆண்டு இதற்கான பணிகளை சீனா தொடங்கியது. இந்த திட்டத்திற்கு ‘கியான்ஃபான் மெகா-விண்மீன் திட்டம்’ (Qianfan mega-constellation project) என்றும் பெயரிட்டிருந்தது. நோக்கம் உலகம் முழுவதும் இணைய தொடர்பை வழங்குவதாகும். இதற்காக மொத்தம் 15,000 சிறிய ரக செயற்கைக்கோள்களை ஏவ சீனா முடிவெடுத்தது. இதன் முதல் தொகுப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏவப்பட்டது. இதில் 18 செயற்கைக்கோள்கள் இருந்தன.

ஒவ்வொன்றும் சுமார் 300 கி.கி எடையில் இருந்தது. இவை பூமியிலிருந்து 800 கி.மீ உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டது. இதேபோன்று 2024 டிசம்பரில் அடுத்து இரண்டு தொகுதி ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. தற்போது மொத்தம் 99 செயற்கைக்கோள்கள் விண்வெளியில் இருக்கின்றன. 15,000 செயற்கைக்கோள்களை 3 கட்டங்களாக ஏவ இருக்கிறது. முதல் கட்டத்தில் 1,296 செயற்கைக்கோள்கள் ஏவப்படும். இதில் 648 செயற்கைக்கோள்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஏவப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் கன்னி உரை

0

அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்புவோம்

தேசியத்துவத்துடனும் ஐக்கியத்துடனும் ஒன்றுபட்டு நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க இன்று (23) காலை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

பதவிப் பிரமாணத்தின் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய முழுமையான உரை:

மக்களால் ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது நமது நாட்டின் ஜனநாயகத்திலிருக்கும் மிக முக்கியமான அம்சமாகும். தேர்தலில் வாக்களித்தல் மற்றும் ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதோடு ஜனநாயகம் நிறைவு பெறுவதில்லை. இது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சம் என்றாலும், நம் நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்த, கட்டமைப்புகளின் வலிமையும், சட்டங்களை வலுப்படுத்துவதும் அவசியம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனவே, எனது பதவிக்காலத்தில் இந்த நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.

அத்துடன், இந்த நாட்டில் ஜனநாயக முறையில் அதிகாரப் பரிமாற்றம் நடந்த வரலாறும் உண்டு. தேர்தலில் நிகழும் அதிகாரப் பரிமாற்றத்தை எந்தத் தலைவரும் நிராகரித்ததில்லை. அதற்கமைய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த மக்கள்ஆணையை சுமூகமாக ஏற்றுக்கொண்டதுடன், ஜனநாயக ரீதியில் அதிகாரத்தை கைமாற்றுவதற்கான அவரின் அர்ப்பணிப்பிற்கும் முன்னுதாரணத்திற்கும் நன்றி தெரிவிக்கிறேன். மேலும் எமக்கு கிடைப்பது மிகவும் சவால் நிறைந்த நாடு என்பதை நன்கு புரிந்து கொண்டிருக்கிறோம். நமது அரசியலில் தூய்மையான, மக்களால் எதிர்பார்க்கப்படும் சிறந்த அரசியல் கலாசாரத்திற்காக அவசியம் காணப்படுகிறது.அதற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

நம் நாட்டின் அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு நல்லெண்ணம் இல்லை. எனவே, அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் மீது மக்கள் மரியாதை மற்றும் நம்பிக்கையை மீட்டெடுக்க எங்கள் தரப்பிலிருந்து முடிந்த அனைத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.

மேலும், நமக்கு முன் இருக்கும் இந்த ஆழமான நெருக்கடியை வெறும் அரசோ, வெறும் அரசியல் கட்சியோ அல்லது ஒரு தனி நபரோ மட்டும் தீர்க்க முடியும் என்று நாங்கள் நம்பவில்லை. ஏனென்றால், நான் முன்பு கூறியது போல், நான் ஒரு மாயாஜால வித்தைக்காரனல்ல. நான் மந்திரவாதியும் இல்லை. நான் இந்த நாட்டின் சாதாரண குடிமகன். எம்மிடம் திறமைகள் உள்ளன. இயலாமைகளும் உள்ளன. தெரிந்த விடயங்களும் உள்ளன அதேபோன்று, தெரியாத விடயங்களும் உள்ளன.

ஆனால் திறமைகளைப் பயன்படுத்தி தெரியாதவற்றை சேகரித்துக்கொண்டு சிறந்த முடிவுகளை எடுத்து இந்த நாட்டை வழிநடத்துவதே எனது தலையாய பணியாகும். அந்த கூட்டுப் பங்களிப்பின் ஒரு அங்கமாக மாறுவது எனது பொறுப்பாகும். மேலும், இந்த நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதில் பொது மக்கள் மற்றும் அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் பாரிய பொறுப்பு உள்ளது. அந்தப் பொறுப்பை நிறைவேற்ற அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்.

ஆனால், நாட்டின் ஜனாதிபதி என்ற முறையில், இந்தப் பணியை முன்னின்று நடத்துவதில் எனக்கு முதன்மையான மற்றும் மிக முக்கியமான பொறுப்பு இருப்பதை நான் ஏற்றுக்கொண்டேன். எனவே, இந்தச் சவாலை வெற்றிகொள்வதற்காக எனக்குக் வழங்கப்பட்டுள்ள பணியை நான் உரிய முறையில் நிறைவேற்றுவேன் என்பதை செயற்பாடு மற்றும் நடைமுறை மூலம் எல்லா சந்தர்ப்பங்களிலும் இந்த நாட்டின் பிரஜைகளுக்கு வெளிப்படுத்த நான் தயாராக இருக்கிறேன்.

மேலும் நமது நாட்டுக்கு சர்வதேச ஆதரவு தேவை. எனவே, உலகில் எத்தகைய அதிகாரப் பிளவுகள் இருந்தாலும், ஒவ்வொரு நாட்டையும் எமக்கு மிகவும் சாதகமாக கையாள்வதே நமது எதிர்பார்ப்பாகும். நாம் உலகில் தனிமைப்படுத்தப்பட்ட நாடு அல்ல. உலகத்துடன் கூட்டாக முன்னேற வேண்டிய ஒரு நாடாகும். அது தொடர்பில் தேவையான முடிவுகளை எடுக்க நாங்கள் சிறிதும் தயங்குவதில்லை.

மேலும், நம் நாட்டைக் கட்டியெழுப்புவதில் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு பெரும் பங்கு உள்ளது. எனவே, நாட்டை மேலும் வலுவாகக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு அவர்கள் ஆதரவளிப்பார்கள் என நான் கருதுகின்றேன்.

நம் நாட்டின் ஜனநாயகத்தின் ஊடாக நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். அதற்காக மக்கள் எனக்கு வாக்களித்தனர்.

மேலும் எனக்கு வழங்கப்படாத வாக்குகளும் உள்ளன. எனவே, எங்களின் வெற்றியின் உள்ளடக்கம் மற்றும் அளவு குறித்து எங்களுக்கு நல்ல புரிதல் உள்ளது. எனவே, எங்களுக்கு ஆதரவு வழங்காத மற்றும் எங்களை நம்பாத பிரஜைகளின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெறுவதே எனது நிர்வாகத்தின் போது எனக்கு வழங்கப்பட்டுள்ள பணியாகும். அந்தப் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

எதிர்காலத்தில் இவை அனைத்தையும் நீங்கள் நடைமுறையில் கண்டுகொள்ள முடியும். அதற்கு அனைத்து மக்களின் ஆதரவையும் எதிர்பார்க்கின்றேன்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தேர்தலில் இவ்வாறுதான் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்

0

அதிகாரிகள் மற்றும் பிற தேவைகள் முடிந்த பிறகு, மாலை 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (19) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி பிற்பகல் 4.15 மணிளவில் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“எதிர்வரும் 21ம் திகதி வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள் பெறப்பட்டதும், அதிகாரிகள் மற்றும் இதர தேவைகள் முடிந்ததும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் இரவு 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

மாலை 4.15 மணிளவில் தபால் மூல வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

அத்துடன் மாவட்ட அளவில் ஒவ்வொரு வட்டாரத்திலும் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெறும்.

வாக்கு எண்ணிக்கையின் முடிவில் முடிவுகள் கிடைத்தவுடன் ஊடகங்களுக்கு வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையே முதலில் எண்ணப்படும்.

அந்தக் கணக்கெடுப்பின் பின்னர் (மாவட்ட அளவில் எண்ணும் பணி) முதலில் வாக்குப்பெட்டிகளில் உள்ள வாக்குகள் எண்ணப்படும்.

அதன் பிறகு, ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு, தொகுதி மற்றும் மாவட்ட அளவில் அது தயாரிக்கப்படுகிறது.

தேர்தல்கள் செயலகமே ஒட்டுமொத்த முடிவுகளைக் கணக்கிடும்.

எந்த வேட்பாளரும் 50 வீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்றுள்ளாரா என சரிபார்க்கப்படும்.

அப்படியானால், அந்த நேரத்தில் வாக்கு எண்ணும் பணிகள் நிறுத்தப்படும்.

அப்போது ஜனாதிபதியை நாங்கள் அறிவிப்போம்.

எந்த வேட்பாளருக்கும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் கிடைக்காவிடின், விருப்பு வாக்கு எண்ணிக்கைக்கு செல்ல வேண்டும்.

அங்கு, அதிக வாக்குகள் பெற்ற இரண்டு வேட்பாளர்கள் போட்டியில் வைத்து விட்டு  மீதமுள்ள 36 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து நீக்கப்படுவர்” என்றார்.

புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக மாறும்

0

புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வாத்தியாசலையாக மாற்றம் பெரும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று புத்தளத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ அலிசப்ரி ரஹீம் மற்றும் சிந்தக்க மாயாதுன்ன தலைமையில் புத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்திலே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

புத்தளம் மக்களின் நீண்ட நாள் தேவையாக இருந்து வருகின்ற புத்தளம் தல வைத்தியசாலையை தரமுயர்த்துவது தொடர்பாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ அலிசப்ரி ரஹீம் அவர்களினால் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோலுக்கிணங்க குறித்த வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.

மேலும் புத்தளத்தில் மீன் பிடி தொழிலை முன்னேற்றும் நோக்கத்தில் மீன் பிடி துறைமுகம் ஒன்றை அமைக்கும் யோசனையும் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டதுடன், அதற்கான முன்னெடுப்புகளும் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்டமை புத்தளம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நாட்டில் நிரந்தர பொருளாதார அபிவிருத்தியை நிலை நாட்ட தாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டை பொருளாதார அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவதே தனது பிரதான நோக்கம் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மொட்டுக்கட்சிக்கு எதிராக நிற்கும் முக்கிய அமைச்சர்கள்

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக மொட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளரை இந்த வாரம் அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்காதிருக்கவும், மொட்டு சின்னத்தில் தனியாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமக்கு ஆதரவு வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பியிருந்த கடிதம் நேற்றைய தினம் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தினால் அரசியல் குழுவில் முன்வைக்கப்பட்டது.

எவ்வாறாயினும் அந்த கடிதத்தை நிராகரிக்க அரசியல் குழுக் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுவில் 82 பேர் அங்கம் வகிப்பதுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் 72 பேர் பங்கேற்றனர்.

இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த 11 பேர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

மஹிந்தானந்த அலுத்கமகே, பந்துல குணவர்தன, பிரதீப் உந்துகொட, கோகிலா ஹர்ஷனி குணவர்தன, சஹன் பிரதீப், ரமேஸ் பத்திரன, கஞ்சன விஜேசேகர, பிரசன்ன ரணதுங்க, கனக ஹேரத், மொஹான் பிரியதர்ஷன ஆகியோர் கட்சியின் சார்பில் தனியான வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

அத்துடன் பிறிதொரு கட்சியின் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்கும் உறுப்பினர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் யோசனைக்கு 6 பேர் எதிராக வாக்களித்துள்ளனர்.

எவ்வாறாயினும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் எனக் கூறப்பட்ட தம்மிக பெரேரா தொடர்பில் அரசியல் குழுக் கூட்டத்தின்போது எந்தவித கருத்துக்களும் பரிமாற்றிக் கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவளிக்காத 11 பேர் உள்ளிட்ட தரப்பினர் நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தனவின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சைனப் ஆரம்பப் பாடசாலைக்கு ஆளுநர் வருகை!

0

புத்தளம் சைனப் ஆரம்ப பாடசாலையின் முப்பெரும் விழா பாடசாலை அதிபர் யஹியா தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து புத்தளம் ஜெய்னப் பாடசாலைக்கு 22 லட்சம் ரூபா பெறுமதியான நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு, சிறுவர் விளையாட்டு நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தல் மற்றும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் செயற்திட்டத்தின் கீழ் BCMH நிறுவனத்தினால் கற்றல் உபகரணம் வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் கடந்த செவ்வாய்க்கிழமை (16) வெகு விமர்சையாக இடம்பெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதியாக வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், விசேட அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மற்றும் கௌரவ அதிதியாக புத்தளம் வலயக்கல்விப் பணிப்பாளர் அர்ஜுன ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆரம்ப பாடசாலையின் முக்கியத்துவம் மற்றும் அறிவார்ந்த சமூகத்தை கட்டியெழுப்ப ஆரம்ப பாடசாலை ஆற்றிவருகின்ற அர்ப்பணிப்பு குறித்து விரிவாக பேசிய வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், புத்தளம் மாவட்ட பாடசாலைகளின் துரித வளர்ச்சி பற்றியும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

மேலும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் செயற்திட்டத்திற்கு வடமேல் மாகாண ஆளுநர் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் ஜவ்ஷி ஜமால்தின், இணைப்புச் செயலாளர் எச். அமீர் அலி ஆசிரியர், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் உட்பட உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் அயல் பாடசாலையின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு
நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு

ஹிருணிகாவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறை

0

கடத்தல் வழக்கில் முன்னாள் எம்.பி ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்தத் தீர்ப்பை அறிவித்தார்.

தெமட்டகொட பகுதியிலுள்ள கடை ஒன்றில் பணிபுரிந்த அமில பிரியந்த அமரசிங்க எனும் இளைஞர் ஒருவரை 2015 டிசம்பர் 21ஆம் திகதி ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு சொந்தமான டிபெண்டர் வாகனத்தில் கடத்திய வழக்கு விசாரணை முடிவில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

29 குற்றங்கள் தொடர்பில் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் 8 பேரும் குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில், அச்சம்பத்திற்கு உதவி, ஒத்தாசை புரிந்ததாக ஹிருணிகா மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்திருந்தார்.

அத்தோடு, சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவின் ஆதரவாளர்கள் 8 பேர் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைதான ஐந்தாம் சந்தேகநபரின் மகள் அளித்துள்ள வாக்குமூலத்தில், தமது தாயாருடன் தொடர்பு பேணிய நபர் ஒருவரை தாம் காண்பித்ததாகவும், அவரை தமது தந்தையும் அவருடன் சென்றவர்களும் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு ஹிருணிகாவிடம் அழைத்துச் சென்றதாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

ஓவியப்போட்டியில் எருக்கலம்பிட்டி மாணவன் முதலாமிடம்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட வட மாகாண மானவர்களுக்கிடையிலான சித்திரப்போட்டியில் மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்றார்.

வீதி விபத்துக்கள் இல்லாத நாளைக்கான பாடசாலையிலிருந்து அணிவக்குப்போம் எனும் தொனிப்பொருளில் கடந்த வியாழக்கிழமை (13.06.2024) அன்று நடாத்தப்பட்ட வட மாகாண மாணவர்களுக்கிடையிலான குறித்த சித்திரப்போட்டியில் சுமார் 2600 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

சித்திரப்போட்டியில் பங்குபற்றிய 2600 மாணவர்களில் 250 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு நேற்றைய தினம் (15.06.2024) அவர்களுக்கான போட்டி இடம்பெற்றது.

நடைபெற்று முடிந்த இறுதிச் சுற்றுப்போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்று பெருமதிமிக்க பரிசில்களை பெற்றுக்கொண்டார்.

முதலாம் இடம் பெற்ற முஹம்மது ஹுசைன் என்ற மாணவனுக்கு சான்றிதல், துவிச்சக்கரவண்டி மற்றும் 8500/- ரூபா பெறுமதியான வவுச்சரும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இதேவேளை குறித்த போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய இல்முதீன் முஹம்மது ஹஸ்பான் 7 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய மற்றொரு மாணவரான முஹம்மது சம்ஹான் 8 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

பாரிய சாவல்களுக்கு மத்தியில் தனி ஒரு மனிதனாக இம் மாணாவர்களை ஊக்கப்படுத்தி, தயார்ப்படுத்தி போட்டியில் பங்குபெறச் செய்து வெற்றிபெறச் செய்த எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியின் சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் அவர்களின் இம் முயற்சிக்கு, பாடசாலை சமூகம் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் நன்றி தெரிவித்தனர்.

தமக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வந்து தேசிய அளவில் இடம்பெறும் போட்டிகளில் மாணவர்களை பங்குபெறச் செய்வதே தனது இலக்கு என சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் எமது ஊடகத்திற்கு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை இராஜினாமா

0

நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்துள்ளனர்.

சாந்த நிரியல்ல உட்பட 15 பேர் கொண்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரின் அறிவித்தலுக்கு அமைய இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி திங்கட்கிழமை புதிய பணிப்பாளர் சபை நியமிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ “அத தெரண” விற்கு தெரிவித்தார்.

புத்தளம் எருக்கலம்பிட்டியில் கடும் வெள்ளம்

0

புத்தளம் பகுதியில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக புத்தளம் பகுதி முழுதும் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.

புத்தளம், தில்லையடி, பாலாவி, புத்தளம் எருக்கலம்பிட்டி, ஹிதாயத் நகர்,  மதுரங்குளி மற்றும் ஏனைய பல கிராமங்களும் வெள்ளித்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமமும் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 1500 குடும்பங்கள் இங்கு வாழ்ந்துவருவதுடன், அனைத்து வீடுகளும் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நூற்றிற்கும் அதிகமான வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் ஐநூற்றுக்கும் அதிகமான வீடுகள் பகுதி அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8ஆம் திகதி ஏற்பட்ட மழை வெள்ளித்தினால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் மற்றும் பாடசாலைகளில் தற்காலிகமாக  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு தினங்களாக இவர்களுக்கான சமைத்த உணவுகள் மூன்று வேலைகளிலும் ஊர் தனவந்தர்களின் உதவியுடனும், பள்ளிவாசல் நிர்வாக சபையின் வழிகாட்டலுடனும் வழங்கப்பட்டு வருவதுடன், ஊர் மக்களுக்கும் உணவு விநியோகங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

இவர்களுக்கான நிவாரண உதவிகள் இதுவரை அரசாங்கத்தினால் வழங்கப்படாத போதிலும், ஊர் மக்களின் பங்களிப்புடன் மாத்திரமே பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு விநியோகங்கள் இதுவரை  வழங்கப்பட்டு வருகின்றது.

புத்தளம் பொத்துவில்லு பகுதியில் உள்ள குளம் மழை நீரினால்  பெருக்கெடுத்துள்ளதால் குறித்த குளத்து நீர் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமத்திற்குள் தொடர்ந்தும் மூன்றாவது நாளாக ஊடறுத்து செல்வதால் வீடுகள் தொடர்ந்தும் நீருள் மூழ்கியுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்தின் நிவாரண உதவிக்காக பல மக்கள் தொடர்ந்தும் எதிர்பார்த்து காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

புத்தளத்தில் இடம்பெற்ற கருப்பு அக்டோபர் நினைவேந்தல்!

கறுப்பு அக்டோபர் 2025 – புத்தளத்தில் நினைவேந்தல் ஒன்று கூடல்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

1990 ஆம் ஆண்டில் வடக்கில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டோரின் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கருப்பு அக்டோபர் நினைவேந்தல் நிகழ்வு புத்தளத்தில் இன்று 31.10.2025 வெள்ளிக்கிழமை நடைபெற்றது

இந்நிகழ்வை 1990 ஆம் ஆண்டில் பலவந்தமாக வெளியேற்றப்பட்டோரின் சங்கம் (Forcibly Evicted Association – 1990) ஏற்பாடு செய்தது. பலவந்தமாக வெளியேற்றப்பட்டு 35 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்வில் வெளியேற்றப்பட்ட குடும்பங்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்று, தங்களது நில உரிமைகள், மீள்குடியேற்றம் மற்றும் வாழ்வாதார உரிமைகளுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

நிகழ்வில் கலந்துகொண்டோர் பல தசாப்தங்களாக நீடித்து வரும் இந்த அநீதிக்கு விரைவான தீர்வை அரசிடம் கோரினர்.

இந்நிகழ்வில் “எங்கள் வீடுகள், எங்கள் நிலங்கள், எங்கள் உரிமைகள்” என்ற வாசகம் ஒலித்ததுடன் நிகழ்வின் முடிவில் அமைதி, நீதி மற்றும் நல்லிணக்கத்திற்காக பிரார்த்தனை செய்யப்பட்டு நினைவேந்தல் நிகழ்வு நிறைவுபெற்றது.

முன்னுதாரணமாக செயற்பட்ட வடக்கு மாகாணம்!

வட மாகாணத்திலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கண்பரிசோதனைகளை நடத்தி தேவையான மாணவர்களுக்கு இலவசமாக கண்ணாடிகளை வழங்கி இலங்கையில் ஏனைய மாகாணங்களுக்கு முன்னுதாரணமான செயற்பாட்டை வட மாகாணம் மேற்கொண்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக முன்பள்ளி மற்றும் அடுத்த ஆண்டு தரம் 1 இல் இணையும் மாணவர்களுக்கான கண்பரிசோதனை நடவடிக்கைகளையும் பல தரப்பினருடன் இணைந்து முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக வட மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வட மாகாண பாடசாலை மாணவர்களுக்கான, ‘நகுலேஸ்வரி வாசுதேவன் இலவச கண் பரிசோதனை மற்றும் கண்ணாடி விநியோகத் திட்டம்’ வடக்கு மாகாண சுகாதார மற்றும் கல்வி அமைச்சுக்களுடன் இணைந்து யாழ்.போதனா மருத்துவமனையின் கண் மருத்துவ நிபுணர் எம்.மலரவன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

இந்தத் திட்டத்துக்கான நிதி அனுசரணையை அலாகா அறக்கட்டளை (மலேசியா) மூலம், அசிஸ்ட் ஆர்ஆர் (இங்கிலாந்து மற்றும் இலங்கை) ஊடாக வழங்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் ஊடாக வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கண்பரிசோதனை முன்னெடுப்பதற்காக 1,150 ஆசிரியர்கள் பயிற்றப்பட்டனர்.

அவர்கள் ஊடாக கண்டறியப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவ நிபுணர் எம்.மலரவன் தலைமையிலான குழுவினர் கண்பரிசோதனைகளை மேற்கொண்டனர். வடக்கிலுள்ள 9,313 மாணவர்களில் சுமார் 4.49 சதவீதத்தினர் கண்ணாடி தேவையுடையவர்களாக அடையாளப்படுத்தப்பட்டு அவர்களுக்கு இலவசமாக கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த ஒட்டுமொத்த செயன்முறை மற்றும் பரிந்துரைகளை உள்ளடக்கிய ‘தெளிந்த பார்வை, ஒளிமயமான எதிர்காலம்’ என்ற நூல் ஒன்றும் ஆளுநர் செயலகத்தில் வைத்து இன்று வெள்ளிக்கிழமை (31.10.2025) ஆளுநர் அவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது.

திட்டமிட்ட காலத்துக்குள் விரைவாக இதனைச் செய்து முடித்த மருத்துவ நிபுணர் மலரவன் தலைமையிலான குழுவினருக்கு ஆளுநர் நன்றிகளைக் தெரிவித்தார். இதற்கு நிதியுதவி வழங்கக் காரணமான மருத்துவர் வேலாயுதம் சர்வேஸ்வரனுக்கும் நன்றிகளை தெரிவித்ததுடன், இந்தச் செயற்றிட்டம் இலங்கையின் ஏனைய மாகாணங்களுக்கு முன்னுதாரணமானது எனவும் எமது மாகாணத்துக்கு கிடைத்த வரப்பிரசாதம் எனவும் கெளரவ ஆளுநர் தெரிவித்தார்.

கண்பார்வை குறைபாட்டுடன் இருந்த எமது மாகாணப் பிள்ளைகளுக்கு இன்று புதிய உலகத்தை காணும் வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. அவர்களது கல்வி மேம்பாட்டுக்கு வழி கிடைத்திருக்கின்றது. பல பிள்ளைகள் குறைபாடுகள் இருந்தாலும் மருத்துவமனைக்குச் செல்வதில்லை. பலருக்கு தங்கள் பிள்ளைகளுக்கு கண்ணில் குறைபாடு உள்ளது என்பதே தெரியாது. இவை எல்லாவற்றையும் மாற்றியமைக்கும் வகையில், பிள்ளைகளை தேடிச் சென்று நடத்திய இந்தச் செயற்றிட்டம் வெற்றியளித்திருக்கின்றது.

இந்தத் திட்டத்துக்கு அதிகாரிகள் பலர் ஒத்துழைப்பு வழங்கியிருக்கின்றார்கள். ஆரம்பத்தில் சிலர் இந்தத் திட்டம் ஏன் என்று யோசித்தவர்கள் கூட திட்டத்தின் நன்மையறிந்து பின்னர் ஒத்துழைப்பு நல்கியிருக்கின்றார்கள். மருத்துவ நிபுணர் மலரவனால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை கவனத்திலெடுத்து தொடர்ந்தும் திட்டம் நடைமுறையாக ஒத்துழைப்புக்கள் வழங்கப்படும், என்றார் ஆளுநர்.

இந்த நிகழ்வில், ஆளுநரின் செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர், மகளிர் விவகார அமைச்சின் செயலாளர், கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிச் செயலாளர்கள், பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி, மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

வடக்கிற்கு உலக வங்கி 24 மில்லியன் நிதி உதவி!

உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் காலநிலைக்கு சீரமைவான விவசாயத்திட்டத்தின் மூலம் வடமாகாண விவசாயத் திணைக்களம் மற்றும் பத்தலகொட நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு 24மில்லியன் ரூபா பெறுமதியான உழவியந்திரம் மற்றும் வயல் மட்டப்படுத்தும் இயந்திரங்கள் இன்று 31.10.2025 வழங்கிவைக்கப்பட்டன.

குறித்த உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு கிளிநொச்சியிலுள்ள காலநிலைக்கு சீரமைவான விவசாயத்திட்டத்தின் பிரதித்திட்டமிடல் அலுவலகத்தில் பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் A.C பாபு தலைமையில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் காலநிலைக்கு சீரமைவான விவசாயத்திட்டத்தின் உலக வங்கியின் பணிக்குழு தலைவர் Dr Sheu Salau கலந்து கொண்டு குறித்த உபகரணங்களை வழங்கி வைத்தார்.

குறித்த நிகழ்வில் திட்டப்பணிப்பாளர் சமன் பந்துலசேன உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேல்மாகாண ஆளுநருக்கு மற்றொரு பதவி!

0

மேல்மாகாண ஆளுநருக்கு மற்றொரு பதவி!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, மேல்மாகாண ஆளுநர் ஹனிஃப் யூசூப்பை வெளிநாட்டு முதலீட்டுக்கான ஜனாதிபதியின் சிறப்புத் தூதராக நியமித்துள்ளார்.

அரசியலமைப்பின் 41(1) வது பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

உலகளாவிய முதலீட்டு கூட்டாண்மைகளில் திரு. யூசூப்பின் அனுபவத்தையும், இலங்கையின் தனியார் துறையின் வளர்ச்சிக்கு அவர் அளித்த நீண்டகால பங்களிப்பையும், அரசாங்கத்தின் பொருளாதார மறுமலர்ச்சித் திட்டத்தில் உதவுவதற்கான அவரது திறனையும் இது அங்கீகரிக்கிறது.

அதன்படி, சர்வதேச முதலீட்டாளர்கள் மற்றும் மூலோபாய கூட்டாளர்களுடன் உயர் மட்ட ஈடுபாட்டை எளிதாக்குதல், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்துதல் மற்றும் இலங்கைக்கு வெளிநாட்டு நேரடி முதலீட்டை (FDI) ஈர்ப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை ஆதரித்தல், முக்கிய முதலீட்டு வாய்ப்புகளை அடையாளம் கண்டு ஊக்குவித்தல் மற்றும் முதலீட்டு வாரியம் (BOI), ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் (EDB), துறைமுக நகர ஆணையம் மற்றும் தொடர்புடைய வரி அமைச்சகங்களுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் பணியாற்றுதல் ஆகியவை அவரது பொறுப்புகளில் அடங்கும்.

இந்த முயற்சி நாட்டிற்குள் நிலையான வெளிநாட்டு முதலீட்டிற்கு சாதகமான சூழலை உருவாக்கவும், இலங்கையின் தற்போதைய பொருளாதார ஸ்திரத்தன்மையில் சர்வதேச நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரு. ஹனிஃப் யூசுப், மேல் மாகாண ஆளுநராக தனது கடமைகளுக்கு மேலதிகமாக இந்தப் பணியை ஒரு கௌரவ சேவையாகவும் மேற்கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.

வசமாக சிக்கிய சுங்கத் திணைக்கள அதிகாரிகள் ஐவர்!

0

பத்து கோடி இருபது இலட்சம் ரூபாய் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் ஐவர் கைது

2025.06.05 அன்று கொழும்பு 11, செட்டியார் தெருவில் உள்ள இரண்டு நகைக் கடைகளில் ரூ.102,000,000/= ( பத்து கோடி இருபது இலட்சம் ரூபாய்) கொள்ளைச் சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கூட்டுக் கொள்ளை விசாரணைப் பிரிவு, நடத்திய விசாரணையில், 05 சந்தேக நபர்கள் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் ஐவரும், கொஸ்கம, ஹன்வெல்ல, தங்கொட்டுவ, மில்லேவ மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 30 முதல் 46 வயதுக்குட்பட்ட இலங்கை சுங்கத் திணைக்களத்தில் பணியாற்றுபவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் சட்டபூர்வமான சோதனை நடத்துவது போல் தங்க ஆபரணக் கடைகள் இரண்டுக்குள் சென்று, அங்கிருந்து பத்து கோடி இருபது இலட்சம் ரூபா பணத்தை கைப்பற்றி அங்கிருந்த ஏழு ஊழியர்களை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்களில் நான்கு பேரிடம் சட்டவிரோத சிகரெட்டுகள் இருந்ததாக மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திவிட்டு, கொண்டு செல்லப்பட்ட பணத்தில் சுமார் ஐந்து கோடி ரூபாவை அவர்களுக்குத் திரும்பக் கொடுத்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் நேற்று (30) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அடையாள அணிவகுப்புக்காக 2025.11.07 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கல்பிட்டிய, நீர்கொழும்பில் சிக்கிய கடத்தல் பீடி இலைகள்!

0

இலங்கை கடற்படை, கடலோர காவல்படை மற்றும் புத்தளம் மதுவரி சிறப்புப் பிரிவுடன் இணைந்து, கல்பிட்டி, இப்பன் தீவிலும் நீர்கொழும்பு மாஓயா களப்பு பிரதேசத்திலும் கடந்த 2025 அக்டோபர் 28 ஆம் திகதி சிறப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது. இதன் போது, சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் எழுநூற்று தொண்ணூற்று மூன்று (793) கிலோகிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டன.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜய, புத்தளம் மதுவரி சிறப்புப் பிரிவின் ஒத்துழைப்புடன் கல்பிட்டி, இப்பன்தீவில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, தீவின் ஒரு புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பதினைந்து (15) பைகள் கண்காணிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. அங்கு, பைகளில் பொதிசெய்யப்பட்ட சுமார் நானூற்று எண்பத்து நான்கு (484) கிலோகிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டன.

இதேபோல், மேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் கெலனி, கடலோர காவல்படையுடன் இணைந்து நீர்கொழும்பின் மாஓயா களப்பு பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான ஒரு டிங்கி படகு கண்காணிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அங்கு எட்டு (08) பைகளில் பொதி செய்யப்பட்ட சுமார் முன்னூற்று ஒன்பது (309) கிலோகிராம் பீடி இலைகளுடன் (01) டிங்கி படகு கைப்பற்றப்பட்டது.

அதன்படி, இந்த நடவடிக்கைகளின் மூலம் வடமேற்கு கடற்படை கட்டளையால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் புத்தளம் மதுவரி சிறப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டன, மேலும் மேற்கு கடற்படை கட்டளையால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் டிங்கி படகு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்க அத்தியட்சகர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

ஹுஸைன் அஹமட் பைலா பிணையில் விடுதலை!

0

ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட, இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஹுஸைன் அஹமட் பைலா என்பவரை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளும், சந்தேகநபரின் சட்டத்தரணிகளும் முன்வைத்த சமர்ப்பணங்களை கவனத்தில் எடுத்துக்கொண்ட பின்னர், கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார். 

2015 ஆம் ஆண்டில் குறித்த கூட்டுத்தாபனத்திற்குப் பொருட்கள் மற்றும் சேவைகளை கொள்வனவு செய்யும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை மீறி, தேவையில்லாத நிலையில் 50 தற்காலிக களஞ்சியசாலைகளை (கொட்டகைகள்) இறக்குமதி செய்ததன் மூலம், கூட்டுத்தாபனத்திற்கு ரூ. 99,679,799.70 நட்டம் ஏற்படுத்தியதாகவும், அத்துடன் அதே மதிப்புள்ள நன்மையை வெளித்தரப்பினருக்கு வழங்கியதன் மூலம் ஊழல் குற்றத்தைச் செய்ததாகவும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இவரைக் கைது செய்திருந்தது.

நிகழ்வில் இணைந்த மன்னார் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள்!

0

“போதைப் பொருளுக்கு இல்லை என்று சொல்லுங்கள், வாழ்க்கைக்கு ஆம் என்று சொல்லுங்கள்” என்னும் கருப்பொருளில் இலங்கை முழுவதும் போதை அற்ற சமுதாயத்தை உருவாக்கும் செயற்திட்டத்தின் அங்குராபண நிகழ்வு மேன்மை தங்கிய ஐனாதிபதி தலைமையில் நேற்று இடம்பெற்றது.

மேலும் இன் நிகழ்வில் மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய அலுவலர்கள் என பலரும் காணொளி மூலம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற நிகழ்வில் இணைந்து கொண்டனர்.

அந்த வகையில் மன்னார் மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்களும் காணொளி மூலம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற நிகழ்வில் இணைந்து கொண்டனர்.

நிகழ்வின் போது போதைப் பொருளுக்கு எதிரானவன் நான் எனவும், போதைப் பொருள் ஒழிப்பு செயற்பாடுகளுக்கு இலங்கை பிரஜை என்ற அடிப்படையில் ஆதரவு தருவேன் என சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

0

நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் இன்று காலை 8.00 மணி முதல் முன்னெடுக்கப்படவிருந்த வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த சங்கம் இதனை அறிவித்துள்ளது. 

நேற்று (30) இரவு சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ (தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு), சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் இடையே நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது எட்டப்பட்ட இணக்கங்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

சுகாதார அமைச்சினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையை மீறி, தன்னிச்சையாக நடைமுறைப்படுத்த முயற்சித்த வைத்தியர்களின் இடமாற்றங்களை இடைநிறுத்தவும், அதற்குப் பதிலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையின் மூலம் ஒரு கால அட்டவணையுடன் வைத்தியர்களின் இடமாற்றங்களை நடைமுறைப்படுத்தவும் இணக்கம் ஏற்பட்டதாக அந்த சங்கம் தெரிவிக்கின்றது. 

அத்துடன், இந்த இணக்கங்கள், இன்று நடைபெறும் சுகாதார அமைச்சின் நிர்வாக வைத்தியர்களின் விசேட கலந்துரையாடலில் உறுதிப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, அந்த இணக்கங்களை கருத்தில் கொண்டு, சுகாதார அமைச்சின் நிர்வாக வைத்தியர்களின் கலந்துரையாடலில் குறித்த இணக்கங்கள் உறுதிப்படுத்தப்பட்டு எழுத்துப்பூர்வமாக கிடைக்கும் வரை, அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபையால் அறிவிக்கப்பட்டிருந்த வேலைநிறுத்தத்தை இன்று நண்பகல் 12.00 மணி வரை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அந்த இணக்கங்கள் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், எந்த நேரத்திலும் மீண்டும் வேலைநிறுத்தத்தை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

வெளியாகியது சனத்தொகை கணக்கெடுப்பு விபரம்!

0

இலங்கையில் நடாத்தப்பட்ட சனத்தொகை  கணக்கெடுப்பு தொடரில், 15வது கணக்கெடுப்பின்படி, இலங்கையின் மொத்த மக்கள் தொகை 21,763,170 என மதிப்பிடப்பட்டுள்ளது. 

“சனத்தொகை  மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு 2024” இன் கணக்கெடுப்புப் பணிகள் 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி இரண்டாவது வாரம் வரை மேற்கொள்ளப்பட்டன. 

இந்தக் கணக்கெடுப்பின் கணக்கெடுப்பு நேரமாக, 2024 டிசம்பர் 19 ஆம் திகதி அதிகாலை 00:00 மணி குறிப்பிடப்பட்டுள்ளது. 

2012 ஆம் ஆண்டின் சனத்தொகை  மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பில் பதிவான மொத்த மக்கள் தொகையை விட, இந்த முறை மக்கள் தொகை 1,403,731 அதிகமாக பதிவாகியுள்ளது. 

2001-2012 இடைப்பட்ட கணக்கெடுப்புக் காலப்பகுதியில், மக்கள் தொகையின் சராசரி வருடாந்த வளர்ச்சி வீதம் 0.7% ஆக பதிவாகி இருந்தது. 

தற்போதைய 2012-2024 இடைப்பட்ட கணக்கெடுப்புக் காலப்பகுதியில், மக்கள் தொகையின் சராசரி வருடாந்த வளர்ச்சி வீதம் 0.5% ஆக பதிவாகியுள்ளது. 

இதன்படி, நாட்டில் மக்கள் தொகை வளர்ச்சி வீதம் குறைந்துள்ள போதிலும், மக்கள் தொகை தொடர்ந்து வளர்ந்து வருகிறது என்பது தெளிவாகிறது. 

மாகாண ரீதியான மக்கள் தொகை பரம்பல்: 

இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 28.1% உடன் மேல் மாகாணமே அதிக மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. 

மிகக் குறைந்த மக்கள் தொகையான 5.3% வடக்கு மாகாணத்தில் வாழ்கின்றனர். 

மாவட்ட மட்டத்தில் மக்கள் தொகை பரம்பலை எடுத்துக்கொண்டால்: 

கம்பஹா மாவட்டத்திலேயே அதிக மக்கள் தொகை வாழ்கிறது. அதன் மக்கள் தொகை 2,433,685 ஆகும். 

அடுத்தபடியாக அதிக மக்கள் தொகை கொண்ட கொழும்பு மாவட்டத்தின் மக்கள் தொகை 2,374,461 ஆகும். 

2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை இந்த இரண்டு மாவட்டங்களில் மட்டுமே வசிக்கின்றனர். 

கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களைத் தவிர, கடந்த கால கணக்கெடுப்புகளைப் போலவே, இந்த முறையும் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டங்கள் பின்வருமாறு பதிவாகியுள்ளன: 

குருநாகல் (1,760,829) கண்டி (1,461,269) களுத்துறை (1,305,552) இரத்தினபுரி (1,145,138) காலி (1,096,585) 

இந்த ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை பதிவாகியுள்ளது. 

முந்தைய கணக்கெடுப்புகளைப் போலவே, இந்த முறையும் நாட்டின் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டங்களாக வடக்கு மாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு (122,542), மன்னார் (123,674), கிளிநொச்சி (136,434), மற்றும் வவுனியா (172,257) ஆகிய மாவட்டங்கள் பதிவாகியுள்ளன. 

வளர்ச்சி வீதம்: 

அதிகபட்ச சராசரி வருடாந்த வளர்ச்சி வீதமான 2.23% முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. 

மிகக் குறைந்த சராசரி வருடாந்த வளர்ச்சி வீதமானது வவுனியா மாவட்டத்தில் 0.01% ஆகப் பதிவாகியுள்ளது.