Tuesday, July 14, 2026
Sponsored advertisementspot_img
Home Blog

நாகவில்லுவில் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ்வின் நினைவுதினம்!

பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று நாகவில்லுவில் இடம்பெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வு!

இலங்கை திருநாட்டில் பெளதீக ரீதியான பல வேலைத்திட்டங்களையும், இடம்பெயர்வு மற்றும் எல்லை நிர்ணயம் தொடர்பான பறந்துபட்ட அறிவினையும் கொண்டிருந்த எருக்கலம்பிட்டியை சேர்ந்த மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது வருட நினைவு தின நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

அந்த வகையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் நினைவுப் பேருரையும், புத்தக வெளியீடு நிகழ்வும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் ஏற்பாட்டில் நேற்று 25.08.2025 புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய அதிபர் ஜனாப் S.M. ஹுஸைமத் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், புத்தி ஜீவிகள் மற்றும் குடும்பத்தார்கள் கலந்தகொண்டமை விஷேட அம்சமாகும்.

சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் பொருளாளர் ஜனாப் ஏ.ஜி. அனீஸ் (Bsc.Agri) அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.

மேலும் இஸ்லாமிய கற்கை அறபு மொழிப் பீட, தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களினால் நூல் அறிமுக உரையும், நினைவுப் பேருரையும் மிகவும் உணர்வுபூர்வமாக நிகழ்த்தப்பட்டது.

கிழக்கு மற்றும் தென் கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பங்களிப்பு அளப்பெரியது என நினைவு கூறிய பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன், வடக்கில் ஏற்பட்ட யுத்தம் மற்றும் முஸ்லிம்களின் இடம்பெயர்வு குறித்து அதீத அக்கறையுடன் செயற்பட்ட மிக முக்கியமானவர் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்கள் எனவும் எடுத்துரைத்தார்.

வடக்கு முஸ்லிம்களின் இடம்பெயர்வு மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பில் அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களுடன் பலதரப்பட்ட கலந்துரையாடல்களை நடத்தி, சர்வதேசம் வரை இவ்விடயங்களை கொண்டுசென்ற மகான் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் என பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் தனது உரையில் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் புதல்வி சட்டத்தரணி எப்.சப்னா ஹஸ்புல்லாஹ் அவர்களினால் ஏற்புரை நிகழ்த்தப்பட்டதுடன், நூல் வெளியீடு நிகழ்வும் இடம்பெற்றது.

நூலின் முதற்பிரதியை ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தரும், புத்தளம் எருக்கலம்பிட்டி பள்ளிவாசல் நிர்வாக சபையின் முன்னாள் உறுப்பினருமான ஜனாப் ரஹ்மத்துல்லாஹ் (GS) அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

மேலும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் செயலாளர் ஜனாப் எஸ்.எச்.எம். றிஸ்னி அவர்களினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டதுடன், தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன், மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பாரியாருக்கும் நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில், பேராசிரியர்கள், கல்விமான்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், பாடசாலைச் சமூகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் குடும்பத்தார்கள் என பலரும் கலந்து சிறப்பித்ததுடன், ஈ நியூஸ் பெஸ்ட் ஊடக நிறுவனம் ஊடக அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரணிலுக்காக ஒன்று திரண்ட அரசியல் தலைவர்கள்!

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விசாரணை கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது, நாட்டின் அடிப்படை ஜனநாயக நிறுவனங்களின் வலிமை குறித்து கடுமையான கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் விளைவுகள் ஒரு தனிநபரின் அல்லது எந்தவொரு அரசியல் கட்சிகளின் தலைவிதியையும் விட, சமூகத்தின் உரிமைகளுக்கான பிரச்சினைகளை தோற்றிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் தலைவர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைகளை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது மற்றும் விளக்கமறியலை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து நடத்திய விசேட ஊடக சந்திப்பில் பங்கேற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரல முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் அறிக்கையை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

போர்த்துக்கல் அணி சாம்பியன் ஆனது!

0

‘நேஷன்ஸ் லீக்’ கால்பந்தில் போர்ச்சுகல் அணி சாம்பியன் ஆனது. பைனலில் ‘பெனால்டி ஷூட் அவுட்டில்’ 5-3 என ஸ்பெயினை வீழ்த்தியது.

ஐரோப்பிய கால்பந்து அணிகளுக்காக ‘நேஷன்ஸ் லீக்’ தொடர் நடத்தப்படுகிறது. மொத்தம் 54 அணிகள் பங்கேற்றன. நேற்று ஜெர்மனியின் முனிக் நகரில் நடந்த பைனலில், போர்ச்சுகல், நடப்பு யூரோ சாம்பியன் ஸ்பெயின் பலப்பரீட்சை நடத்தின. போட்டியின் 21வது நிமிடம் ஜுபிமெண்டி (ஸ்பெயின்), 26வது நிமிடம் மெண்டிஸ் (போர்ச்சுகல்) தலா ஒரு கோல் அடித்தனர். 45வது நிமிடம் மைக்கேல் ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் ஸ்பெயின் அணி 2-1 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் 61 வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். போர்ச்சுகல் அணிக்காக இவர் அடித்த 138வது கோல் இது. 90 நிமிட முடிவில் போட்டி 2-2 என சமன் ஆனது. அடுத்து நடந்த கூடுதல் நேரத்திலும் (30 நிமிடம்) இரு அணியும் கோல் அடிக்கவில்லை.

இதையடுத்து வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி ‘பெனால்டி ஷூட் அவுட்டுக்கு’ சென்றது. இரு அணிக்கும் தலா 5 வாய்ப்புகள் தரப்பட்டன. காயம் காரணமாக 88 வது நிமிடம் வெளியேறிய ரொனால்டோ, இதில் பங்கேற்கவில்லை.

முதல் 3 வாய்ப்பில் போர்ச்சுகலின் ராமோஸ், விடின்ஹா, பெர்ணான்டஸ் கோல் அடித்தனர். மறுபக்கம் ஸ்பெயின் தரப்பில் மெரினோ, பயேனா, இஸ்கோ கோல் அடிக்க 3-3 என ஆனது.

4வது வாய்ப்பில் மெண்டெஸ் (போர்ச்சுகல்) கோல் அடிக்க, ஸ்பெயினின் மோராட்டோ அடித்த பந்தை கோல் கீப்பர் டீகோ கோஸ்டா தடுத்து அசத்தினார்.

5வது வாய்ப்பில் நெவேஸ் கோல் அடித்தார். இதையடுத்து 5-3 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் ‘திரில்’ வெற்றி பெற்றது. 2019க்குப் பின் இத்தொடரில் மீண்டும் சாம்பியன் ஆனது.

தில்லையடியில் சிக்கிய கடத்தல் பீடி இலைகள்!

0

புத்தளத்தில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளுடன் வேன் ஒன்றும் பறிமுதல்!

இலங்கை கடற்படை, பொலிஸாருடன் இணைந்து, புத்தளம், தில்லையடி பகுதியில் 2025 ஜூன் 05 இரவு வேளையில் நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகள் கொண்ட ஒரு வேன் கைப்பற்றப்பட்டது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிறுவனம், புத்தளம் பொலிஸாருடன் இணைந்து தில்லையடி பகுதியில் நடத்திய இந்த சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்று சோதனை செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகளானது வாகனத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் வேன் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களால் ஆபத்தா?

விண்வெளியில் பூமியை சுற்றி வந்துக்கொண்டிருக்கும் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கொள்களை சீனா நினைத்தால் வெறும் 12 மணி நேரத்தில் தாக்கி அழித்துவிட முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் என்கிற செய்தி ஊடகத்தில் இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது தற்போது சீனா 99 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. இவை அனைத்தும் நான்ஜிங் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஆஸ்ட்ரோனாட்டிக்ஸ் பல்கலைக்கழகத்தின் விண்வெளிக் கட்டுப்பாட்டுத் துறையின் இயக்குநர் வூ யுன்ஹுவா தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இவை அனைத்தும் எலான் மஸ்கின் 1400 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை வெறும் 12 மணி நேரத்தில் காலி செய்துவிடும். சீன செயற்கைக்கோளில் லேசர், நுண் அலைகளை உருவாக்கும் கருவி, உளவு கருவிகள் பொருத்தப்பட்டிருக்கலாம். ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் வெறுமென நெட்வொர்க் கொடுக்க மட்டுமே பயன்படுத்தப்படுவதில்லை. தவிர, ராணுவ நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது என சீனா குற்றம்சாட்டி வருகிறது.

அதாவது, உக்ரைன்-ரஷ்யா போரில், உக்ரைன் படைகளுக்கு தகவல்கள் கொடுக்கவும், ரஷ்ய எல்லையை துல்லியமாக கண்காணிக்கவும் இந்த செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த 2022ம் ஆண்டு ரஷ்ய போரின்போது அப்போதைய உக்ரைனின் துணைப் பிரதமரான மைக்கைலோ ஃபெடோரோவ், “ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் சேவையை உடனடியாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த மஸ்க், “உடனடியாக சேவை வழங்கப்படும்” என்று கூறியிருந்தார்.

உக்ரைன் போருடன் மட்டுமே ஸ்டார்லிங்க் நிற்காது, நாளை சீனாவுக்கும்-தைவானுக்கும் பஞ்சாயது ஏற்பட்டால் அப்போதும், தைவானுக்கு சப்போர்ட் செய்ய ஸ்டார்லிங்க் வரும். எனவே இந்த கூட்டு நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்க சீனா இந்த புதிய செயற்கைக்கோள்களை உருவாக்கியிருக்கிறது.

கடந்த 2023ம் ஆண்டு இதற்கான பணிகளை சீனா தொடங்கியது. இந்த திட்டத்திற்கு ‘கியான்ஃபான் மெகா-விண்மீன் திட்டம்’ (Qianfan mega-constellation project) என்றும் பெயரிட்டிருந்தது. நோக்கம் உலகம் முழுவதும் இணைய தொடர்பை வழங்குவதாகும். இதற்காக மொத்தம் 15,000 சிறிய ரக செயற்கைக்கோள்களை ஏவ சீனா முடிவெடுத்தது. இதன் முதல் தொகுப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏவப்பட்டது. இதில் 18 செயற்கைக்கோள்கள் இருந்தன.

ஒவ்வொன்றும் சுமார் 300 கி.கி எடையில் இருந்தது. இவை பூமியிலிருந்து 800 கி.மீ உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டது. இதேபோன்று 2024 டிசம்பரில் அடுத்து இரண்டு தொகுதி ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. தற்போது மொத்தம் 99 செயற்கைக்கோள்கள் விண்வெளியில் இருக்கின்றன. 15,000 செயற்கைக்கோள்களை 3 கட்டங்களாக ஏவ இருக்கிறது. முதல் கட்டத்தில் 1,296 செயற்கைக்கோள்கள் ஏவப்படும். இதில் 648 செயற்கைக்கோள்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஏவப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் கன்னி உரை

0

அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்புவோம்

தேசியத்துவத்துடனும் ஐக்கியத்துடனும் ஒன்றுபட்டு நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க இன்று (23) காலை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

பதவிப் பிரமாணத்தின் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய முழுமையான உரை:

மக்களால் ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது நமது நாட்டின் ஜனநாயகத்திலிருக்கும் மிக முக்கியமான அம்சமாகும். தேர்தலில் வாக்களித்தல் மற்றும் ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதோடு ஜனநாயகம் நிறைவு பெறுவதில்லை. இது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சம் என்றாலும், நம் நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்த, கட்டமைப்புகளின் வலிமையும், சட்டங்களை வலுப்படுத்துவதும் அவசியம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனவே, எனது பதவிக்காலத்தில் இந்த நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.

அத்துடன், இந்த நாட்டில் ஜனநாயக முறையில் அதிகாரப் பரிமாற்றம் நடந்த வரலாறும் உண்டு. தேர்தலில் நிகழும் அதிகாரப் பரிமாற்றத்தை எந்தத் தலைவரும் நிராகரித்ததில்லை. அதற்கமைய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த மக்கள்ஆணையை சுமூகமாக ஏற்றுக்கொண்டதுடன், ஜனநாயக ரீதியில் அதிகாரத்தை கைமாற்றுவதற்கான அவரின் அர்ப்பணிப்பிற்கும் முன்னுதாரணத்திற்கும் நன்றி தெரிவிக்கிறேன். மேலும் எமக்கு கிடைப்பது மிகவும் சவால் நிறைந்த நாடு என்பதை நன்கு புரிந்து கொண்டிருக்கிறோம். நமது அரசியலில் தூய்மையான, மக்களால் எதிர்பார்க்கப்படும் சிறந்த அரசியல் கலாசாரத்திற்காக அவசியம் காணப்படுகிறது.அதற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

நம் நாட்டின் அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு நல்லெண்ணம் இல்லை. எனவே, அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் மீது மக்கள் மரியாதை மற்றும் நம்பிக்கையை மீட்டெடுக்க எங்கள் தரப்பிலிருந்து முடிந்த அனைத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.

மேலும், நமக்கு முன் இருக்கும் இந்த ஆழமான நெருக்கடியை வெறும் அரசோ, வெறும் அரசியல் கட்சியோ அல்லது ஒரு தனி நபரோ மட்டும் தீர்க்க முடியும் என்று நாங்கள் நம்பவில்லை. ஏனென்றால், நான் முன்பு கூறியது போல், நான் ஒரு மாயாஜால வித்தைக்காரனல்ல. நான் மந்திரவாதியும் இல்லை. நான் இந்த நாட்டின் சாதாரண குடிமகன். எம்மிடம் திறமைகள் உள்ளன. இயலாமைகளும் உள்ளன. தெரிந்த விடயங்களும் உள்ளன அதேபோன்று, தெரியாத விடயங்களும் உள்ளன.

ஆனால் திறமைகளைப் பயன்படுத்தி தெரியாதவற்றை சேகரித்துக்கொண்டு சிறந்த முடிவுகளை எடுத்து இந்த நாட்டை வழிநடத்துவதே எனது தலையாய பணியாகும். அந்த கூட்டுப் பங்களிப்பின் ஒரு அங்கமாக மாறுவது எனது பொறுப்பாகும். மேலும், இந்த நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதில் பொது மக்கள் மற்றும் அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் பாரிய பொறுப்பு உள்ளது. அந்தப் பொறுப்பை நிறைவேற்ற அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்.

ஆனால், நாட்டின் ஜனாதிபதி என்ற முறையில், இந்தப் பணியை முன்னின்று நடத்துவதில் எனக்கு முதன்மையான மற்றும் மிக முக்கியமான பொறுப்பு இருப்பதை நான் ஏற்றுக்கொண்டேன். எனவே, இந்தச் சவாலை வெற்றிகொள்வதற்காக எனக்குக் வழங்கப்பட்டுள்ள பணியை நான் உரிய முறையில் நிறைவேற்றுவேன் என்பதை செயற்பாடு மற்றும் நடைமுறை மூலம் எல்லா சந்தர்ப்பங்களிலும் இந்த நாட்டின் பிரஜைகளுக்கு வெளிப்படுத்த நான் தயாராக இருக்கிறேன்.

மேலும் நமது நாட்டுக்கு சர்வதேச ஆதரவு தேவை. எனவே, உலகில் எத்தகைய அதிகாரப் பிளவுகள் இருந்தாலும், ஒவ்வொரு நாட்டையும் எமக்கு மிகவும் சாதகமாக கையாள்வதே நமது எதிர்பார்ப்பாகும். நாம் உலகில் தனிமைப்படுத்தப்பட்ட நாடு அல்ல. உலகத்துடன் கூட்டாக முன்னேற வேண்டிய ஒரு நாடாகும். அது தொடர்பில் தேவையான முடிவுகளை எடுக்க நாங்கள் சிறிதும் தயங்குவதில்லை.

மேலும், நம் நாட்டைக் கட்டியெழுப்புவதில் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு பெரும் பங்கு உள்ளது. எனவே, நாட்டை மேலும் வலுவாகக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு அவர்கள் ஆதரவளிப்பார்கள் என நான் கருதுகின்றேன்.

நம் நாட்டின் ஜனநாயகத்தின் ஊடாக நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். அதற்காக மக்கள் எனக்கு வாக்களித்தனர்.

மேலும் எனக்கு வழங்கப்படாத வாக்குகளும் உள்ளன. எனவே, எங்களின் வெற்றியின் உள்ளடக்கம் மற்றும் அளவு குறித்து எங்களுக்கு நல்ல புரிதல் உள்ளது. எனவே, எங்களுக்கு ஆதரவு வழங்காத மற்றும் எங்களை நம்பாத பிரஜைகளின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெறுவதே எனது நிர்வாகத்தின் போது எனக்கு வழங்கப்பட்டுள்ள பணியாகும். அந்தப் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

எதிர்காலத்தில் இவை அனைத்தையும் நீங்கள் நடைமுறையில் கண்டுகொள்ள முடியும். அதற்கு அனைத்து மக்களின் ஆதரவையும் எதிர்பார்க்கின்றேன்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தேர்தலில் இவ்வாறுதான் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்

0

அதிகாரிகள் மற்றும் பிற தேவைகள் முடிந்த பிறகு, மாலை 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (19) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி பிற்பகல் 4.15 மணிளவில் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“எதிர்வரும் 21ம் திகதி வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள் பெறப்பட்டதும், அதிகாரிகள் மற்றும் இதர தேவைகள் முடிந்ததும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் இரவு 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

மாலை 4.15 மணிளவில் தபால் மூல வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

அத்துடன் மாவட்ட அளவில் ஒவ்வொரு வட்டாரத்திலும் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெறும்.

வாக்கு எண்ணிக்கையின் முடிவில் முடிவுகள் கிடைத்தவுடன் ஊடகங்களுக்கு வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையே முதலில் எண்ணப்படும்.

அந்தக் கணக்கெடுப்பின் பின்னர் (மாவட்ட அளவில் எண்ணும் பணி) முதலில் வாக்குப்பெட்டிகளில் உள்ள வாக்குகள் எண்ணப்படும்.

அதன் பிறகு, ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு, தொகுதி மற்றும் மாவட்ட அளவில் அது தயாரிக்கப்படுகிறது.

தேர்தல்கள் செயலகமே ஒட்டுமொத்த முடிவுகளைக் கணக்கிடும்.

எந்த வேட்பாளரும் 50 வீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்றுள்ளாரா என சரிபார்க்கப்படும்.

அப்படியானால், அந்த நேரத்தில் வாக்கு எண்ணும் பணிகள் நிறுத்தப்படும்.

அப்போது ஜனாதிபதியை நாங்கள் அறிவிப்போம்.

எந்த வேட்பாளருக்கும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் கிடைக்காவிடின், விருப்பு வாக்கு எண்ணிக்கைக்கு செல்ல வேண்டும்.

அங்கு, அதிக வாக்குகள் பெற்ற இரண்டு வேட்பாளர்கள் போட்டியில் வைத்து விட்டு  மீதமுள்ள 36 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து நீக்கப்படுவர்” என்றார்.

புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக மாறும்

0

புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வாத்தியாசலையாக மாற்றம் பெரும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று புத்தளத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ அலிசப்ரி ரஹீம் மற்றும் சிந்தக்க மாயாதுன்ன தலைமையில் புத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்திலே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

புத்தளம் மக்களின் நீண்ட நாள் தேவையாக இருந்து வருகின்ற புத்தளம் தல வைத்தியசாலையை தரமுயர்த்துவது தொடர்பாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ அலிசப்ரி ரஹீம் அவர்களினால் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோலுக்கிணங்க குறித்த வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.

மேலும் புத்தளத்தில் மீன் பிடி தொழிலை முன்னேற்றும் நோக்கத்தில் மீன் பிடி துறைமுகம் ஒன்றை அமைக்கும் யோசனையும் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டதுடன், அதற்கான முன்னெடுப்புகளும் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்டமை புத்தளம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நாட்டில் நிரந்தர பொருளாதார அபிவிருத்தியை நிலை நாட்ட தாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டை பொருளாதார அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவதே தனது பிரதான நோக்கம் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மொட்டுக்கட்சிக்கு எதிராக நிற்கும் முக்கிய அமைச்சர்கள்

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக மொட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளரை இந்த வாரம் அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்காதிருக்கவும், மொட்டு சின்னத்தில் தனியாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமக்கு ஆதரவு வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பியிருந்த கடிதம் நேற்றைய தினம் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தினால் அரசியல் குழுவில் முன்வைக்கப்பட்டது.

எவ்வாறாயினும் அந்த கடிதத்தை நிராகரிக்க அரசியல் குழுக் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுவில் 82 பேர் அங்கம் வகிப்பதுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் 72 பேர் பங்கேற்றனர்.

இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த 11 பேர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

மஹிந்தானந்த அலுத்கமகே, பந்துல குணவர்தன, பிரதீப் உந்துகொட, கோகிலா ஹர்ஷனி குணவர்தன, சஹன் பிரதீப், ரமேஸ் பத்திரன, கஞ்சன விஜேசேகர, பிரசன்ன ரணதுங்க, கனக ஹேரத், மொஹான் பிரியதர்ஷன ஆகியோர் கட்சியின் சார்பில் தனியான வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

அத்துடன் பிறிதொரு கட்சியின் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்கும் உறுப்பினர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் யோசனைக்கு 6 பேர் எதிராக வாக்களித்துள்ளனர்.

எவ்வாறாயினும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் எனக் கூறப்பட்ட தம்மிக பெரேரா தொடர்பில் அரசியல் குழுக் கூட்டத்தின்போது எந்தவித கருத்துக்களும் பரிமாற்றிக் கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவளிக்காத 11 பேர் உள்ளிட்ட தரப்பினர் நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தனவின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சைனப் ஆரம்பப் பாடசாலைக்கு ஆளுநர் வருகை!

0

புத்தளம் சைனப் ஆரம்ப பாடசாலையின் முப்பெரும் விழா பாடசாலை அதிபர் யஹியா தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து புத்தளம் ஜெய்னப் பாடசாலைக்கு 22 லட்சம் ரூபா பெறுமதியான நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு, சிறுவர் விளையாட்டு நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தல் மற்றும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் செயற்திட்டத்தின் கீழ் BCMH நிறுவனத்தினால் கற்றல் உபகரணம் வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் கடந்த செவ்வாய்க்கிழமை (16) வெகு விமர்சையாக இடம்பெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதியாக வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், விசேட அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மற்றும் கௌரவ அதிதியாக புத்தளம் வலயக்கல்விப் பணிப்பாளர் அர்ஜுன ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆரம்ப பாடசாலையின் முக்கியத்துவம் மற்றும் அறிவார்ந்த சமூகத்தை கட்டியெழுப்ப ஆரம்ப பாடசாலை ஆற்றிவருகின்ற அர்ப்பணிப்பு குறித்து விரிவாக பேசிய வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், புத்தளம் மாவட்ட பாடசாலைகளின் துரித வளர்ச்சி பற்றியும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

மேலும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் செயற்திட்டத்திற்கு வடமேல் மாகாண ஆளுநர் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் ஜவ்ஷி ஜமால்தின், இணைப்புச் செயலாளர் எச். அமீர் அலி ஆசிரியர், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் உட்பட உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் அயல் பாடசாலையின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு
நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு

ஹிருணிகாவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறை

0

கடத்தல் வழக்கில் முன்னாள் எம்.பி ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்தத் தீர்ப்பை அறிவித்தார்.

தெமட்டகொட பகுதியிலுள்ள கடை ஒன்றில் பணிபுரிந்த அமில பிரியந்த அமரசிங்க எனும் இளைஞர் ஒருவரை 2015 டிசம்பர் 21ஆம் திகதி ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு சொந்தமான டிபெண்டர் வாகனத்தில் கடத்திய வழக்கு விசாரணை முடிவில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

29 குற்றங்கள் தொடர்பில் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் 8 பேரும் குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில், அச்சம்பத்திற்கு உதவி, ஒத்தாசை புரிந்ததாக ஹிருணிகா மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்திருந்தார்.

அத்தோடு, சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவின் ஆதரவாளர்கள் 8 பேர் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைதான ஐந்தாம் சந்தேகநபரின் மகள் அளித்துள்ள வாக்குமூலத்தில், தமது தாயாருடன் தொடர்பு பேணிய நபர் ஒருவரை தாம் காண்பித்ததாகவும், அவரை தமது தந்தையும் அவருடன் சென்றவர்களும் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு ஹிருணிகாவிடம் அழைத்துச் சென்றதாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

ஓவியப்போட்டியில் எருக்கலம்பிட்டி மாணவன் முதலாமிடம்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட வட மாகாண மானவர்களுக்கிடையிலான சித்திரப்போட்டியில் மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்றார்.

வீதி விபத்துக்கள் இல்லாத நாளைக்கான பாடசாலையிலிருந்து அணிவக்குப்போம் எனும் தொனிப்பொருளில் கடந்த வியாழக்கிழமை (13.06.2024) அன்று நடாத்தப்பட்ட வட மாகாண மாணவர்களுக்கிடையிலான குறித்த சித்திரப்போட்டியில் சுமார் 2600 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

சித்திரப்போட்டியில் பங்குபற்றிய 2600 மாணவர்களில் 250 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு நேற்றைய தினம் (15.06.2024) அவர்களுக்கான போட்டி இடம்பெற்றது.

நடைபெற்று முடிந்த இறுதிச் சுற்றுப்போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்று பெருமதிமிக்க பரிசில்களை பெற்றுக்கொண்டார்.

முதலாம் இடம் பெற்ற முஹம்மது ஹுசைன் என்ற மாணவனுக்கு சான்றிதல், துவிச்சக்கரவண்டி மற்றும் 8500/- ரூபா பெறுமதியான வவுச்சரும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இதேவேளை குறித்த போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய இல்முதீன் முஹம்மது ஹஸ்பான் 7 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய மற்றொரு மாணவரான முஹம்மது சம்ஹான் 8 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

பாரிய சாவல்களுக்கு மத்தியில் தனி ஒரு மனிதனாக இம் மாணாவர்களை ஊக்கப்படுத்தி, தயார்ப்படுத்தி போட்டியில் பங்குபெறச் செய்து வெற்றிபெறச் செய்த எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியின் சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் அவர்களின் இம் முயற்சிக்கு, பாடசாலை சமூகம் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் நன்றி தெரிவித்தனர்.

தமக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வந்து தேசிய அளவில் இடம்பெறும் போட்டிகளில் மாணவர்களை பங்குபெறச் செய்வதே தனது இலக்கு என சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் எமது ஊடகத்திற்கு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை இராஜினாமா

0

நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்துள்ளனர்.

சாந்த நிரியல்ல உட்பட 15 பேர் கொண்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரின் அறிவித்தலுக்கு அமைய இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி திங்கட்கிழமை புதிய பணிப்பாளர் சபை நியமிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ “அத தெரண” விற்கு தெரிவித்தார்.

புத்தளம் எருக்கலம்பிட்டியில் கடும் வெள்ளம்

0

புத்தளம் பகுதியில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக புத்தளம் பகுதி முழுதும் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.

புத்தளம், தில்லையடி, பாலாவி, புத்தளம் எருக்கலம்பிட்டி, ஹிதாயத் நகர்,  மதுரங்குளி மற்றும் ஏனைய பல கிராமங்களும் வெள்ளித்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமமும் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 1500 குடும்பங்கள் இங்கு வாழ்ந்துவருவதுடன், அனைத்து வீடுகளும் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நூற்றிற்கும் அதிகமான வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் ஐநூற்றுக்கும் அதிகமான வீடுகள் பகுதி அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8ஆம் திகதி ஏற்பட்ட மழை வெள்ளித்தினால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் மற்றும் பாடசாலைகளில் தற்காலிகமாக  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு தினங்களாக இவர்களுக்கான சமைத்த உணவுகள் மூன்று வேலைகளிலும் ஊர் தனவந்தர்களின் உதவியுடனும், பள்ளிவாசல் நிர்வாக சபையின் வழிகாட்டலுடனும் வழங்கப்பட்டு வருவதுடன், ஊர் மக்களுக்கும் உணவு விநியோகங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

இவர்களுக்கான நிவாரண உதவிகள் இதுவரை அரசாங்கத்தினால் வழங்கப்படாத போதிலும், ஊர் மக்களின் பங்களிப்புடன் மாத்திரமே பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு விநியோகங்கள் இதுவரை  வழங்கப்பட்டு வருகின்றது.

புத்தளம் பொத்துவில்லு பகுதியில் உள்ள குளம் மழை நீரினால்  பெருக்கெடுத்துள்ளதால் குறித்த குளத்து நீர் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமத்திற்குள் தொடர்ந்தும் மூன்றாவது நாளாக ஊடறுத்து செல்வதால் வீடுகள் தொடர்ந்தும் நீருள் மூழ்கியுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்தின் நிவாரண உதவிக்காக பல மக்கள் தொடர்ந்தும் எதிர்பார்த்து காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் விலை உலகில் குறைந்தாலும் இலங்கையில் குறையாதது ஏன்?

0

இலங்கையில் தற்போதைய சூழலில் பாமர மக்கள் முதல் அரசியல்வாதிகள் வரை அன்றாடம் பேசும் மிக விவாதத்திற்குரிய ஒரு பொருளாக எரிபொருள் விலை மாறியுள்ளது.

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை கணிசமாகக் குறையும் போதெல்லாம், அதன் பலன் ஏன் இலங்கை நுகர்வோருக்குக் கிடைப்பதில்லை என்ற கேள்வி சமூக வலைத்தளங்களிலும் மக்கள் மத்தியிலும் தீயாய் பரவி வருகின்றது. உலகச் சந்தையில் விலை சரிந்தாலும் நமது நாட்டில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறையாமல் மும்முரமாக இருப்பதன் பின்னணியில் உள்ள கசப்பான உண்மைகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

முதலாவதாக, நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை உண்மை என்னவென்றால், ‘கச்சா எண்ணெய் விலை’ என்பதும், நாம் வாங்கும் ‘எரிபொருள் விலை’ என்பதும் முற்றிலும் வேறுபட்ட இரண்டு விடயங்களாகும். கச்சா எண்ணெய் என்பது சுத்திகரிக்கப்படாத ஒரு மூலப்பொருள் மட்டுமே. அது இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் எனப் பிரித்தெடுக்கப்படும் போதே அதன் உண்மையான செலவு ஆரம்பமாகிறது. இறுதி நுகர்வோரின் கைக்கு வரும் ஒரு லீற்றர் எரிபொருளின் விலையை வெறும் கச்சா எண்ணெய் விலை மட்டும் தீர்மானிப்பதில்லை; அதன் சுத்திகரிப்புச் செலவு, சர்வதேசக் கப்பல் போக்குவரத்து மற்றும் காப்புறுதி கட்டணங்கள், துறைமுகக் கட்டணங்கள் மற்றும் அரசாங்கத்தின் வரிகள் என ஒரு நீண்ட பட்டியலே விலையைத் தீர்மானிக்கிறது.

இதற்கெல்லாம் மேலாக, இலங்கையின் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல அமைந்திருப்பது டொலரின் விளையாட்டாகும். இலங்கை சர்வதேசச் சந்தையிலிருந்து எரிபொருளைக் கொள்வனவு செய்வது அமெரிக்க டொலர்களைக் கொண்டே ஆகும். இதனால் உலகச் சந்தையில் எண்ணெய் விலை எவ்வளவுதான் பாதாளத்திற்குச் சென்றாலும், டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்தால், நாம் எரிபொருளுக்காகச் செலுத்த வேண்டிய தொகை குறையப் போவதில்லை. உதாரணமாக, உலகச் சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 90 டொலரிலிருந்து 70 டொலராகக் குறைந்தாலும், அதேவேளையில் ரூபாய் பலவீனமடைந்தால் இலங்கைக்கு எந்தவொரு நன்மையும் கிடைக்காமல் போய்விடுகிறது.

இங்குதான் மக்கள் மத்தியில் ஒரு நியாயமான கோபமும் கேள்வியும் எழுகிறது. உலகச் சந்தையில் விலை குறைந்தவுடன் “எங்களிடம் பழைய விலைக்கு வாங்கிய இருப்புக்கள் இருக்கின்றன” எனக் கூறி விலையைக் குறைக்க மறுக்கும் அதிகாரிகள், உலகச் சந்தையில் விலை ஏறிய அடுத்த நிமிடமே நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் உள்நாட்டு விலையை உயர்த்துவது எந்த வகையில் நியாயம்? ஜூன் மாதத்திற்குத் தேவையான எரிபொருள் ஒன்றரை மாதங்களுக்கு முன்பே ஓடர் செய்யப்படுகிறது என்பது உண்மையாக இருந்தாலும், விலை உயரும் போது காட்டும் அதே அவசரத்தை, விலை குறையும் போது காட்டி மக்களுக்கு ஏன் அரசு நிவாரணம் வழங்குவதில்லை என்ற கேள்விக்கு அதிகாரிகளிடம் பதிலில்லை.

தற்போது இலங்கையில் எரிபொருள் விலையைத் தீர்மானிக்க ‘விலை சூத்திரம்’ ஒன்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்த சூத்திரத்தை விடவும் ஆபத்தானது என்னவென்றால், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய அரசாங்கம் எரிபொருள் மீது விதித்துள்ள அதிகப்படியான வரிகளாகும். பல வருடங்களாக நட்டத்தோடு இயங்கிவரும் இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் நட்டத்தை ஈடுகட்டவும், அரசாங்கத்தின் அன்றாட நிர்வாகச் செலவுகளுக்கான வருமானத்தைப் பெற்றுக்கொள்ளவும் எரிபொருளையே அரசு பிரதான வருமான மூலமாகப் பயன்படுத்துகிறது.

சுருக்கமாகக் கூறின், எரிபொருள் விலை உயர்வு என்பது வாகன ஓட்டிகளை மட்டும் பாதிக்கும் விடயமல்ல. அது நாட்டின் போக்குவரத்து கட்டணம், அத்தியாவசியப் பொருட்களின் விலை என சங்கிலித் தொடராக ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையும் ஸ்தம்பிக்க வைக்கும் வல்லமை கொண்டது. எனவே, தற்போதைய பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு அரசாங்கம் உண்மையான நிவாரணத்தை வழங்க வேண்டுமாயின், விலை சூத்திரங்களைக் காட்டி உலகச் சந்தையின் மீது பழி போடுவதை நிறுத்திவிட்டு, எரிபொருள் மீது சுமத்தப்பட்டுள்ள அநியாயமான வரிகளைக் குறைக்கவோ அல்லது முற்றாக நீக்கவோ முன்வர வேண்டும் என்பதே தற்போதைய காலத்தின் கட்டாயமாகும்.

இராணுவத் தளபதி நியமனத்தின் பின்னணியில் கர்தினால்?

0

இலங்கை அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், இராணுவத்தின் மிக உயரிய பதவியான இராணுவத் தளபதியின் பதவிக்கால நீடிப்பு விவகாரத்தில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலையிடுவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தாசனாயக்க அதிரடி குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட கருத்தரங்கொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

தற்போதைய இராணுவத் தளபதியின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் கடந்த ஜூலை 2 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ள பின்னணியில், அவரது பதவிக்காலத்தை மேலும் 2028 ஜனவரி வரை நீடிப்பதற்கான இரகசிய நகர்வுகள் அரசாங்கத்திற்குள் அரங்கேறி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தன்னிச்சையான பதவிக்கால நீடிப்பு காரணமாக, இராணுவத்தில் அடுத்த கட்ட உயர் பதவிகளுக்கு வர வேண்டிய நிலாந்த பிரேமரத்ன உள்ளிட்ட பல தகுதியான சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதாகவும் சாமர சம்பத் சாடியுள்ளார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர், “அரசாங்கத்தில் உள்ளவர்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மகாநாயக்க தேரர்களைச் சந்திப்பது வழக்கம். ஆனால், தற்போதைய சூழலில் இராணுவத் தளபதி மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) பணிப்பாளர் போன்ற மிக முக்கிய பதவிகளுக்கு யாரை நியமிப்பது என்பதை கர்தினாலே தீர்மானிக்கிறார் போல தெரிகிறது. இலங்கையின் கர்தினால் ஒருவேளை போப் ஆண்டகையாகத் தெரிவு செய்யப்படாமல் இருந்தது நல்லது, இல்லையெனில் இலங்கை மற்றொரு வத்திகானாக மாறியிருக்கும்” என மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அத்தோடு, கத்தோலிக்க மதகுருமார் சிலர் மட்டக்களப்பில் உள்ள இராணுவத்தின் விடுதி உல்லாச மையங்களில் தங்கி ஆடம்பரங்களை அனுபவித்துள்ளதாகவும் அவர் இதன்போது அம்பலப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, நாட்டு மக்கள் அதிகளவு சோறு உட்கொள்வதாகக் குறிப்பிட்டிருந்த அமைச்சர் லல்காந்தவின் கருத்துக்குப் பதிலளித்த சாமர சம்பத், “சோற்றுக்கு பதிலாக நாம் என்ன சாப்பிட வேண்டும் என்று அமைச்சர் விரும்புகிறார்?” என நகைச்சுவையாகக் கேள்வி எழுப்பினார்.

மறுபுறம், இந்த அரசியல் அடக்குமுறைகளுக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவும் தனது கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், பயங்கரவாத தடுப்புச் சட்டம் (PTA) மற்றும் பொதுச் சொத்துக்கள் சட்டத்தைப் பயன்படுத்தி எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை அரசாங்கம் வேட்டையாடி வருவதாகக் குற்றம் சாட்டினார். அரசாங்கம் இந்த அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்தத் தவறினால், ஒன்றிணைந்த எதிர்க்கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மிக விரைவில் கொழும்பு வீதிகளில் இறங்கிப் போராடுவது உறுதி எனவும் அவர் தனது உரையில் சூளுரைத்தார்.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் மேலும் இரு அதிகாரிகள் உயிரிழப்பு!

0

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். 

நேற்று (13) மற்றும் இன்று (14) அதிகாலை வேளையில் குறித்த இரு சிறைச்சாலை அதிகாரிகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இவ்வாறு உயிரிழந்தவர்கள் 25 மற்றும் 39 வயதுடைய இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதன்படி, நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் எண்ணிக்கை பத்தாக உயர்ந்துள்ளது. 

கடந்த ஜூலை மாதம் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் 21 சிறைக்கைதிகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

இதற்கமைய, பதிவாகியுள்ள மொத்த மரணங்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. 

குறித்த மோதலில் காயமடைந்த மேலும் சில சிறைக்கைதிகளும் அதிகாரிகளும் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் நீர்கொழும்பு வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹொர்முஸ் நீரிணையை இனி அமெரிக்காவே கட்டுப்படுத்தும்!

உலகளாவிய எரிபொருள் விநியோகத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹொர்முஸ் நீரிணை தற்போது அமெரிக்க – ஈரான் மோதலின் அதிதீவிர மையப்புள்ளியாக மாறியுள்ளது. “ஹொர்முஸ் நீரிணையை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும், அதற்குப் பாதுகாப்புக் கட்டணமாக வளைகுடா நாடுகள் அமெரிக்காவிற்குப் பணம் செலுத்த வேண்டும்” என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

ட்ரம்ப்பின் இந்த பகிரங்க அறிவிப்பு ஒட்டுமொத்த சர்வதேச அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இதற்கு ஈரான் தற்போது மரண அடி கொடுக்கும் வகையில் பதிலடி கொடுத்துள்ளது.

ஈரானின் உச்ச கூட்டு இராணுவக் கட்டளைப் பீடமான ‘காதம் அல்-அன்பியா’ வெளியிட்டுள்ள அதிரடி வீடியோ அறிக்கை, ஒட்டுமொத்த வளைகுடா பிராந்தியத்தையும் அதிர வைத்துள்ளது. ஹொர்முஸ் நீரிணையின் நிர்வாகத்தில் அமெரிக்கா மூக்கை நுழைப்பதை ஈரான் ஒருபோதும் அனுமதிக்காது என அதில் மிக ஆக்ரோஷமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டொனால்ட் ட்ரம்ப்பின் மிரட்டல்களுக்குப் பணியப் போவதில்லை என்பதை ஈரான் இதன்மூலம் உலகிற்குப் பறைசாற்றியுள்ளது.

இந்த மோதல் வெறும் வார்த்தைப் போராக மட்டும் நின்றுவிடப் போவதில்லை என்பதை ஈரானின் அடுத்தடுத்த நகர்வுகள் காட்டுகின்றன. டெஹ்ரானால் அங்கீகரிக்கப்பட்ட கடல்வழிப் பாதைகளைத் தாண்டி, ஈரானிய இராணுவத்தின் எவ்வித ஒருங்கிணைப்பும் இல்லாமல் அமெரிக்கப் படைகள் இந்த நீரிணையைக் கடக்க முயன்றால், அவர்கள் இதுவரை கண்டிராத கடுமையான எதிர்ப்பைச் சந்திக்க நேரிடும் என ஈரான் இராணுவம் நேரடியாகவே எச்சரித்துள்ளது.

நிலைமை இவ்வாறு இருக்க, ஈரான் தனது அண்டை நாடுகளுக்கும் மிகத் தெளிவான எச்சரிக்கை மணியை அடித்துள்ளது. அமெரிக்க இராணுவத்திற்கு இந்த விவகாரத்தில் ஏதேனும் ஒரு வளைகுடா நாடு ஒத்துழைப்பு வழங்கினாலோ அல்லது தளவாட உதவிகளைச் செய்தாலோ, அது ஈரானின் இறையாண்மைக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட நேரடிப் போராகவே கருதப்படும் என ஈரான் இராணுவக் கட்டளைப் பீடம் எச்சரித்துள்ளது. இதன்மூலம் அண்டை நாடுகளை அமெரிக்கா பக்கம் சாயவிடாமல் ஈரான் முட்டுக்கட்டை போட்டுள்ளது.

“நாங்கள் ஹொர்முஸ் நீரிணை மீதான எங்களது அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் முழு பலத்துடனும் அதிகாரத்துடனும் தொடர்ந்து நிலைநாட்டுவோம்” என ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் ஊடகப் பேச்சாளர் அரச ஊடகங்கள் வாயிலாக சூளுரைத்துள்ளார். ஒருவேளை இந்த மோதலால் ஒட்டுமொத்த பிராந்தியத்திலும் போர் வெடித்தால், அதற்கான முழுப் பழியும் அமெரிக்காவையும் அதன் கூட்டாளி நாடுகளையுமே சாரும் என ஈரான் இறுதியாகக் குறிப்பிட்டுள்ளது. இந்தத் திடீர் பதற்றம் உலகப் பொருளாதாரத்திலும், கச்சா எண்ணெய் விலையிலும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதை உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.

881 பாலங்களுடன் களமிறங்கும் ‘புனருதயே புரவர’ திட்டம்!

0

நாட்டின் கிராமப்புற மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் மிக முக்கிய போக்குவரத்துப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், தற்போதைய அரசாங்கத்தினால் பாரிய உள்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டமொன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் ‘புனருதயே புரவர’ (மறுமலர்ச்சி நகரம்) தேசிய திட்டத்தின் கீழ் இந்த விசேட அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிராமப்புற மக்கள் தங்களின் அன்றாடப் போக்குவரத்து மற்றும் விவசாயப் பண்டங்களை விநியோகிப்பதில் நீண்டகாலமாக எதிர்நோக்கி வந்த தடைகளைக் கண்டறிந்து, அவற்றுக்கு உடனடித் தீர்வு வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

அரசாங்கத்தின் விசேட கவனம் – நான்கு வருட மெகா திட்டம்!

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன், கிராமப்புற உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து விசேட கவனம் செலுத்தியிருந்தது. இதற்கமைய, நாட்டின் அனைத்து உள்ளூராட்சி நிறுவன மட்டத்திலிருந்தும் பெறப்பட்ட விரிவான அறிக்கைகளின் அடிப்படையில், உடனடியாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய 881 கிராமியப் பாலங்கள் இனங்காணப்பட்டுள்ளன. இந்த நான்கு வருட பாரிய திட்டத்தை எவ்விதத் தடையுமின்றி முன்னெடுப்பதற்காக, 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் (Budget) மூலமாக விசேட நிதியொதுக்கீடும் அரசாங்கத்தால் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை (14) ஆரம்பமாகும் முதற்கட்டப் பணிகள்

இதன் முதற்கட்டமாக 1,050 மில்லியன் ரூபா என்ற பிரம்மாண்ட செலவில் 100-க்கும் மேற்பட்ட கிராமியப் பாலங்களை அபிவிருத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் மிக அவசரமாகக் கட்டப்பட வேண்டிய 38 பாலங்களின் நிர்மாணப்பணிகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (14) நாடளாவிய ரீதியில் ஒரே நேரத்தில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டின் இரு முனைகளில் பிரதான நிகழ்வுகள்

இந்த உத்தியோகபூர்வ அங்குரார்ப்பண நிகழ்வுகள் நாட்டின் இரு பிரதான பகுதிகளில் அமைச்சர்கள் தலைமையில் மிக விமரிசையாக நடைபெறவுள்ளன. குருநாகல், ரிதிகம பகுதியில் நடைபெறும் நிகழ்விற்குப் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தலைமை தாங்கவுள்ளார். அதேநேரம், ஹம்பாந்தோட்டை, சூரியவௌ பகுதியில் நடைபெறும் நிகழ்விற்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத் தலைமை தாங்கி பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளனர்.

விரைவில் வரவிருக்கும் அடுத்தடுத்த திட்டங்கள்!

வெறும் பாலங்கள் அமைப்பதுடன் மட்டும் இந்தத் திட்டம் நின்றுவிடப் போவதில்லை. உள்ளூராட்சி நிறுவனங்களை மேலும் வலுவூட்டி, மக்களின் வாழ்வாதாரத்தை அடிமட்டத்திலிருந்து கட்டியெழுப்புவதே ‘புனருதயே புரவர’ திட்டத்தின் இறுதி இலக்காகும். இதன் கீழ், இந்த வருடத்திற்குள் இன்னும் பல மக்கள் நலத்திட்டங்கள் மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத் விசேட கருத்தொன்றை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளார்.

இத்திட்டம் குறித்த மேலதிக விபரங்கள் மற்றும் பிரதி அமைச்சரின் விசேட உரையை அறிய, கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும் (Click Here).

[பிரதி அமைச்சரின் உரை மற்றும் மேலதிக விபரங்கள் அடங்கிய இணைப்பு]

தமிழ் – முஸ்லிம் கட்சிகளின் கூட்டு இனவாதமானதல்ல; சமூக விடிவுக்கானது!

0

தமிழ் – முஸ்லிம் கட்சிகளின் கூட்டு இனவாதமானதல்ல சமூக விடிவுக்கானது : மு.கா தலைவர் ஹக்கீம் விளக்கம்

பாராளுமன்றத்தில் மக்கள் ஆணையைக்கொண்டுள்ள மலையகம் மற்றும் வட கிழக்கைப் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் கூட்டு, இனவாத அடிப்படையிலானதல்ல என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இன்று (13) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத்தெரிவித்தார்.

இக்கூட்டணி குறித்து அண்மைக்காலமாக எழுப்பப்பட்டு வரும் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் அவர் இந்த விளக்கத்தை அளித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “பேரினவாதத்திற்கெதிராகச் செயற்படுவது குறித்து நண்பர் சுமந்திரன் விவரித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, கடந்த சில தினங்களாக இக்கூட்டு குறித்து அங்காங்கே எழுந்துள்ள ஒரு முக்கிய விமர்சனத்திற்கு நான் விளக்கமளிக்க விரும்புகிறேன்.

இக்கூட்டானது ‘இனவாத அடிப்படையிலானது’ என்றவாறு முன்வைக்கப்படும் விமர்சனங்களில் எவ்வித உண்மையுமில்லை.

தமிழ் பேசும் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி மக்கள் ஆணையோடு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஆறு பிரதான கட்சிகளின் ஒருங்கிணைப்பாகவே இது உருவாக்கப்பட்டுள்ளது.

நாட்டினுடைய இறைமை, சட்டத்தின் ஆட்சிக்கு விடுக்கப்படும் சவால்கள், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றைப் பாதுகாப்பது போன்ற பொதுவான கோட்பாடுகளை முன்னிறுத்தியே இப்பாராளுமன்றக் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.

தேர்தல் காலங்களிலும் ஏனைய பொதுவான காலகட்டங்களிலும் சிறுபான்மைச் சமூகங்கள் எதிர்கொள்கின்ற சவால்களுக்கு கூட்டுச் செயற்பாடுகள் மூலம் முறையான தீர்வுகளைக் காண்பதே எங்களது முதன்மை நோக்கமாகும்.

நாட்டின் பொதுவான குறிக்கோள்களுக்கமைவாகச் செயற்பட்டு எங்களுடைய சமூகங்களின் விடிவை நோக்கிய நியாயமான தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதே இவ்வொருங்கிணைப்பின் அடிப்படை எதிர்பார்ப்பாகும் என ரவூப் ஹக்கீம் மேலும் குறிப்பிட்டார்.

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் கூட்டில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தமிழரசுக்கட்சி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டமைப்பு
என பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 6 பிரதான தமிழ், முஸ்லிம் கட்சிகள் இதில் ஒன்றிணைந்துள்ள்ளமை குறிப்பிடத்தக்கது.

40,000 கைதிகளுடன் திணறும் சிறைகள்: உண்மைகள் உடைக்கும் ஹக்கீம்!

0

இலங்கையின் சிறைச்சாலைகள் இன்று கைதிகளின் கூடாரமாக அல்ல, ஒரு பெரும் மனிதாபிமான நெருக்கடியின் மையப்புள்ளியாக மாறியிருக்கின்றன. வெறும் பத்தாயிரம் (10,000) பேர் மட்டுமே தங்கியிருக்கக்கூடிய சிறை அறைகளுக்குள், இன்று நாற்பதாயிரத்திற்கும் (40,000) அதிகமான மனித உயிர்கள் திணித்து அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெரும் குற்றவாளிகள் அல்லர், மாறாக பிணை வழங்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களே என்ற அதிர்ச்சித் தகவலை வெளிப்படுத்தியுள்ளார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம்.

‘சூரியனின் விழுதுகள்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் முன்வைத்த இந்த அதிரடித் தீர்வுகள் தற்போது சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.

சிறைச்சாலைகளில் இந்த அளவுக்கு நெரிசல் ஏற்படுவதற்குப் பிணை வழங்கும் சட்டங்களில் இருக்கும் இறுக்கமான தன்மையே பிரதான காரணம் என சுட்டிக்காட்டிய முன்னாள் நீதியமைச்சர் ஹக்கீம், இந்தச் சட்டங்களில் உடனடியாக நெகிழ்வுத்தன்மை கொண்டுவரப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அதுமட்டுமன்றி, மிகச் சிறிய அளவிலான தண்டப்பணத்தைக் கூட கட்ட முடியாமல், நீண்டகாலமாகச் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் வாழும் கைதிகளை இனங்கண்டு, அவர்களை மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் முன்வைத்துள்ளார்.

இதேவேளை, சிறை நெருக்கடிக்குக் காரணமான மற்றொரு முக்கிய தடையாக விளங்குவது அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தின் ஆமை வேகத் தாமதங்களாகும். குறிப்பாக, போதைப்பொருள் வழக்குகளில் இந்தத் திணைக்களத்தின் அறிக்கை வருவதற்குப் பல மாதங்கள் எடுப்பதால், சந்தேகநபர்கள் எவ்வித விசாரணைகளும் இன்றி சிறைகளில் வாடுகின்றனர். இதற்குத் தீர்வாக, தான் நீதியமைச்சராக இருந்த காலத்தில் கொண்டுவரப்பட்ட ஒரு முக்கிய தீர்மானத்தை அவர் நினைவூட்டினார்.

அதாவது, ஒரு சந்தேகநபர் சிறையிலடைக்கப்பட்டு ஒரு வருடத்திற்குள் பகுப்பாய்வு அறிக்கை கிடைக்காவிட்டால் அவருக்குக் கட்டாயமாகப் பிணை வழங்கப்பட வேண்டும் என்ற நடைமுறையை உடனடியாகச் செயற்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இத்திணைக்களத்தில் நிலவும் பணியாளர் வெற்றிடங்களை நிரப்ப தற்போதைய நீதியமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகின்றமை ஒரு வரவேற்கத்தக்க விடயம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உலகளாவிய ரீதியில் நீதித்துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பம் பாய்ந்து செல்லும் இந்த காலகட்டத்தில், இலங்கையும் நவீன மாற்றங்களுக்குள் நுழைய வேண்டிய தருணம் இதுவாகும். கைதிகளை நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்வதில் ஏற்படும் பெரும் செலவுகளையும், பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும் தவிர்க்க வேண்டும் என்றால், சிறை வளாகத்திற்குள்ளேயே நீதிவான்கள் முன்னிலையில் விசாரணைகளை நடத்தும் வசதிகள் உருவாக்கப்பட வேண்டும். அத்துடன், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒன்லைன் ஊடாகச் சாட்சியங்களைப் பதிவு செய்யும் முறையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நவீன ஆலோசனையையும் ஹக்கீம் முன்வைத்துள்ளார்.

போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் நமது அணுகுமுறையில் மாற்றம் தேவை. போதைப்பொருள் விற்பனையாளர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், போதைப்பொருள் பாவனையாளர்களைக் குற்றவாளிகளாகச் சிறைக்குள் அடைக்காமல், அவர்களை நோயாளிகளாகக் கருதி புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்ப வேண்டும். அதோடு, சிறைகளில் நிலவும் அசுத்தமான சூழலால் கைதிகள் கடுமையான மன அழுத்தத்திற்கும் நோய்களுக்கும் ஆளாவதைத் தடுக்க சுகாதார வசதிகள் உடனடியாக மேம்படுத்தப்பட வேண்டும் என்றும், அனைத்து மதக் கைதிகளும் தத்தமது மதச் சட்டங்களின்படி வழிபாடுகளில் ஈடுபடுவதற்கான உரிமைகளும், இடவசதிகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் ரவூப் ஹக்கீம் மிகவும் தீர்க்கமாக வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று தீர்க்கமான முடிவை நோக்கி தமிழ், முஸ்லிம் கட்சிகள்!

0

இலங்கையின் வடக்கு, கிழக்கு, மலையகப் பகுதிகள் மற்றும் கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பெரும்பான்மையான வாக்கு வங்கியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் இன்று சந்தித்து, முக்கிய தீர்மானங்களை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலுள்ள விருந்தகமொன்றில் இன்று பிற்பகல் இந்த முக்கிய நிகழ்வு நடைபெறவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் குறைகளையும் நிறைகளையும் மக்கள் மத்தியில் வெளிப்படையாகவும் கூட்டாகவும் முன்வைப்பதற்கான பொதுவான மேடையொன்றை உருவாக்குவதே இந்தச் சந்திப்பின் நோக்கம் என அவர் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் நாட்டின் பல முக்கிய விவகாரங்களில் அலட்சியப் போக்குடன் செயற்படுவதாகச் சுட்டிக்காட்டிய ரவூப் ஹக்கீம், மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் அரசாங்கத்திற்கு முறையான அழுத்தங்களை வழங்க இந்த கூட்டு அரசியல் முயற்சி மிகவும் அவசியமானது என்றார்.

அரசியல் என்பது சாத்தியமானவற்றைச் சாதிக்கும் ஒரு கலையாகும் எனக் குறிப்பிட்ட அவர், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காணக்கூடிய பொதுவான உபாயங்களை ஒன்றிணைந்து கண்டறிவதே இந்த சந்திப்பின் அடிப்படை என வலியுறுத்தினார்.

தமிழ் பேசும் கட்சிகளின் இந்த ஒற்றுமை முயற்சி காலத்தின் கட்டாயத் தேவை என்று சுட்டிக்காட்டிய ரவூப் ஹக்கீம், இத்தகைய அரசியல் முனைப்பானது சமூகங்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என்று நம்பிக்கை வெளியிட்டார்.

முன்னதாக பல கட்டங்களால் தமிழ் பேசும் கட்சிகளிடையே, பேச்சுவார்த்தை இடம்பெற்று வந்த நிலையில் இன்று முக்கிய தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்

உரிமைகளைப் பாதுகாக்கவும், அரசாங்கத்தின் அரசியல் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் மத்தியில் சிறுபான்மை மக்களின் நலன்களை உறுதிப்படுத்தவும் இந்த ஒன்றிணைந்த பயணம் அடித்தளமாக அமையும் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

கோட்டை நீதவான் இராஜினாமா! கொதிநிலையில் இலங்கை நீதித்துறை!

0

இலங்கை நீதித்துறையின் உயர் மட்டத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது எல்லை அதிகரிப்பு விவகாரத்தில், கீழ் நீதிமன்ற நீதிபதிகள் அரசாங்கத்திற்கு எதிராக அதிரடியான தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளனர். உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீடிக்கும் நோக்கில் அரசாங்கம் கொண்டுவரவிருந்த சட்ட மூலத்திற்கு எதிராக, நாட்டின் நீதவான்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகள் ஒன்றிணைந்து மரண அடி கொடுத்துள்ளனர்.

அதிகார வர்க்கத்தின் இந்தத் திட்டத்தை முற்றாக நிராகரிக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம், கடுவெல நீதிமன்ற வளாகத்தில் கடந்த 11ஆம் திகதி சனிக்கிழமை கூடிய விசேட பொதுக்கூட்டத்தின் போது எடுக்கப்பட்டுள்ளது. அங்கு அரங்கேறிய விடயங்கள் தான் தற்போது ஒட்டுமொத்த நீதித்துறையையும் உலுக்கியெடுத்துள்ளன.

வழமையாக வெளிப்படையாக விவாதிக்கும் நீதிபதிகள், இந்த முறை அரசாங்கத்தின் முன்மொழிவு மீது ஒரு ‘இரகசிய வாக்கெடுப்பை’ (Secret Ballot) நடத்தியுள்ளனர். ஜனநாயகத்தின் உச்சக்கட்டமாக அமைந்த இந்த வாக்கெடுப்பின் முடிவு அரசாங்கத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் திட்டத்திற்கு ஆதரவாக ஒரு ஒற்றை வாக்குக் கூடப் பதிவாகவில்லை! அனைவரும் ஒருமனதாக இந்தத் திட்டத்தை தூக்கியெறிந்துள்ளனர்.

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 65 லிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் வயதை 63 லிருந்து 65 ஆகவும் உயர்த்த நீதியமைச்சு திட்டமிட்டிருந்தது. இந்தத் திட்டத்திற்கு எதிராக நீதிமன்ற சேவைகள் சங்கம் உத்தியோகபூர்வமாக தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்யும் மூன்றாவது சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விசேட கூட்டத்திற்கு முன்பாக நீதித்துறை வட்டாரத்தில் மற்றொரு பரபரப்பும் அரங்கேறியது. சங்கத்தின் தலைவராகப் பதவி வகித்த கொழும்பு கோட்டை நீதவான் பிரசன்ன அமரசேன, கூட்டத்திற்கு முன்னதாக தனது தலைவர் பதவியை அதிரடியாக இராஜினாமா செய்து, உறுப்பினர்களுக்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து எழுந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில், சங்கத்தின் உப தலைவர் கண்டி பிரதான நீதவான் சாமர விக்ரமநாயக்க தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இதில் கொழும்பு, கல்கிஸ்சை, கடுவெல ஆகிய நீதிமன்றங்களின் பிரதான நீதவான்கள் மற்றும் மேலதிக நீதவான்கள் உட்பட 65 முக்கிய நீதித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எடுத்துள்ளதாக சங்கத்தின் செயலாளர் சுரங்க முனசிங்க அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

லக்விஜய நிலக்கரி கொள்வனவு ஊழல் விசாரணையில் அதிரடி திருப்பம்!

0

நிலக்கரி கொள்முதல் தொடர்பான கொடுக்கல் வாங்கல்கள் குறித்து விசாரணை நடத்தும் விசேட ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், லக்விஜய நிலக்கரி மின்நிலையத்தின் பிரதி பொதுமுகாமையாளர் துஷான் அபேகோன் உள்ளிட்ட மூன்று அதிகாரிகள் இன்று (13) சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளனர்.

லக்விஜய மின்நிலையத்தின் பிரதி பொதுமுகாமையாளர் துஷான் அபேயகோன் ஏற்கனவே கடந்த புதன்கிழமை(8) ஆணைக்குழு முன்னிலையில் முன்னிலையாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிலக்கரி கொள்முதல் கொடுக்கல் வாங்கல்களை விசாரணை செய்வதற்கான விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொது விசாரணைகளின் மூன்றாவது நாள் நடவடிக்கைகள் இன்று இடம்பெறவுள்ளன.

இதற்கு முன்பாக, பிரதி மன்றாடியார் நாயகம் கங்கா வாகிஷ்ட ஆராச்சி, பிரதி மன்றாடியார் நாயகம் ஏஞ்சலோ வன் வூட், எரிசக்தி அமைச்சின் செயலாளர் ஜி.எம்.ஆர்.டி. அப்போன்சு, அமைச்சின் மேலதிக செயலாளர் மற்றும் நிறுவனங்களின் பதிவாளர் ஷ்யாமா ஹர்ஷனி உள்ளிட்டோரிடமிருந்து ஆணைக்குழு சாட்சியங்களைப் பதிவு செய்திருந்தது.

இந்த விசாரணையின் போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்கனவே சமர்ப்பித்த உறுதிமொழிகளின் அடிப்படையில் சாட்சியங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

இதேவேளை எதிர்காலத்திலும் விசாரணைகள் தொடரும் என ஆணைக்குழுவின் செயலாளர் டி.வி. பண்டாரசேன தெரிவித்தார்.