Home Blog

நாகவில்லுவில் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ்வின் நினைவுதினம்!

பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று நாகவில்லுவில் இடம்பெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வு!

இலங்கை திருநாட்டில் பெளதீக ரீதியான பல வேலைத்திட்டங்களையும், இடம்பெயர்வு மற்றும் எல்லை நிர்ணயம் தொடர்பான பறந்துபட்ட அறிவினையும் கொண்டிருந்த எருக்கலம்பிட்டியை சேர்ந்த மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது வருட நினைவு தின நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

அந்த வகையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் நினைவுப் பேருரையும், புத்தக வெளியீடு நிகழ்வும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் ஏற்பாட்டில் நேற்று 25.08.2025 புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய அதிபர் ஜனாப் S.M. ஹுஸைமத் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், புத்தி ஜீவிகள் மற்றும் குடும்பத்தார்கள் கலந்தகொண்டமை விஷேட அம்சமாகும்.

சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் பொருளாளர் ஜனாப் ஏ.ஜி. அனீஸ் (Bsc.Agri) அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.

மேலும் இஸ்லாமிய கற்கை அறபு மொழிப் பீட, தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களினால் நூல் அறிமுக உரையும், நினைவுப் பேருரையும் மிகவும் உணர்வுபூர்வமாக நிகழ்த்தப்பட்டது.

கிழக்கு மற்றும் தென் கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பங்களிப்பு அளப்பெரியது என நினைவு கூறிய பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன், வடக்கில் ஏற்பட்ட யுத்தம் மற்றும் முஸ்லிம்களின் இடம்பெயர்வு குறித்து அதீத அக்கறையுடன் செயற்பட்ட மிக முக்கியமானவர் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்கள் எனவும் எடுத்துரைத்தார்.

வடக்கு முஸ்லிம்களின் இடம்பெயர்வு மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பில் அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களுடன் பலதரப்பட்ட கலந்துரையாடல்களை நடத்தி, சர்வதேசம் வரை இவ்விடயங்களை கொண்டுசென்ற மகான் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் என பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் தனது உரையில் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் புதல்வி சட்டத்தரணி எப்.சப்னா ஹஸ்புல்லாஹ் அவர்களினால் ஏற்புரை நிகழ்த்தப்பட்டதுடன், நூல் வெளியீடு நிகழ்வும் இடம்பெற்றது.

நூலின் முதற்பிரதியை ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தரும், புத்தளம் எருக்கலம்பிட்டி பள்ளிவாசல் நிர்வாக சபையின் முன்னாள் உறுப்பினருமான ஜனாப் ரஹ்மத்துல்லாஹ் (GS) அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

மேலும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் செயலாளர் ஜனாப் எஸ்.எச்.எம். றிஸ்னி அவர்களினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டதுடன், தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன், மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பாரியாருக்கும் நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில், பேராசிரியர்கள், கல்விமான்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், பாடசாலைச் சமூகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் குடும்பத்தார்கள் என பலரும் கலந்து சிறப்பித்ததுடன், ஈ நியூஸ் பெஸ்ட் ஊடக நிறுவனம் ஊடக அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரணிலுக்காக ஒன்று திரண்ட அரசியல் தலைவர்கள்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விசாரணை கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது, நாட்டின் அடிப்படை ஜனநாயக நிறுவனங்களின் வலிமை குறித்து கடுமையான கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் விளைவுகள் ஒரு தனிநபரின் அல்லது எந்தவொரு அரசியல் கட்சிகளின் தலைவிதியையும் விட, சமூகத்தின் உரிமைகளுக்கான பிரச்சினைகளை தோற்றிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் தலைவர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைகளை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது மற்றும் விளக்கமறியலை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து நடத்திய விசேட ஊடக சந்திப்பில் பங்கேற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரல முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் அறிக்கையை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

போர்த்துக்கல் அணி சாம்பியன் ஆனது!

‘நேஷன்ஸ் லீக்’ கால்பந்தில் போர்ச்சுகல் அணி சாம்பியன் ஆனது. பைனலில் ‘பெனால்டி ஷூட் அவுட்டில்’ 5-3 என ஸ்பெயினை வீழ்த்தியது.

ஐரோப்பிய கால்பந்து அணிகளுக்காக ‘நேஷன்ஸ் லீக்’ தொடர் நடத்தப்படுகிறது. மொத்தம் 54 அணிகள் பங்கேற்றன. நேற்று ஜெர்மனியின் முனிக் நகரில் நடந்த பைனலில், போர்ச்சுகல், நடப்பு யூரோ சாம்பியன் ஸ்பெயின் பலப்பரீட்சை நடத்தின. போட்டியின் 21வது நிமிடம் ஜுபிமெண்டி (ஸ்பெயின்), 26வது நிமிடம் மெண்டிஸ் (போர்ச்சுகல்) தலா ஒரு கோல் அடித்தனர். 45வது நிமிடம் மைக்கேல் ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் ஸ்பெயின் அணி 2-1 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் 61 வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். போர்ச்சுகல் அணிக்காக இவர் அடித்த 138வது கோல் இது. 90 நிமிட முடிவில் போட்டி 2-2 என சமன் ஆனது. அடுத்து நடந்த கூடுதல் நேரத்திலும் (30 நிமிடம்) இரு அணியும் கோல் அடிக்கவில்லை.

இதையடுத்து வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி ‘பெனால்டி ஷூட் அவுட்டுக்கு’ சென்றது. இரு அணிக்கும் தலா 5 வாய்ப்புகள் தரப்பட்டன. காயம் காரணமாக 88 வது நிமிடம் வெளியேறிய ரொனால்டோ, இதில் பங்கேற்கவில்லை.

முதல் 3 வாய்ப்பில் போர்ச்சுகலின் ராமோஸ், விடின்ஹா, பெர்ணான்டஸ் கோல் அடித்தனர். மறுபக்கம் ஸ்பெயின் தரப்பில் மெரினோ, பயேனா, இஸ்கோ கோல் அடிக்க 3-3 என ஆனது.

4வது வாய்ப்பில் மெண்டெஸ் (போர்ச்சுகல்) கோல் அடிக்க, ஸ்பெயினின் மோராட்டோ அடித்த பந்தை கோல் கீப்பர் டீகோ கோஸ்டா தடுத்து அசத்தினார்.

5வது வாய்ப்பில் நெவேஸ் கோல் அடித்தார். இதையடுத்து 5-3 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் ‘திரில்’ வெற்றி பெற்றது. 2019க்குப் பின் இத்தொடரில் மீண்டும் சாம்பியன் ஆனது.

தில்லையடியில் சிக்கிய கடத்தல் பீடி இலைகள்!

புத்தளத்தில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளுடன் வேன் ஒன்றும் பறிமுதல்!

இலங்கை கடற்படை, பொலிஸாருடன் இணைந்து, புத்தளம், தில்லையடி பகுதியில் 2025 ஜூன் 05 இரவு வேளையில் நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகள் கொண்ட ஒரு வேன் கைப்பற்றப்பட்டது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிறுவனம், புத்தளம் பொலிஸாருடன் இணைந்து தில்லையடி பகுதியில் நடத்திய இந்த சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்று சோதனை செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகளானது வாகனத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் வேன் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களால் ஆபத்தா?

விண்வெளியில் பூமியை சுற்றி வந்துக்கொண்டிருக்கும் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கொள்களை சீனா நினைத்தால் வெறும் 12 மணி நேரத்தில் தாக்கி அழித்துவிட முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் என்கிற செய்தி ஊடகத்தில் இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது தற்போது சீனா 99 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. இவை அனைத்தும் நான்ஜிங் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஆஸ்ட்ரோனாட்டிக்ஸ் பல்கலைக்கழகத்தின் விண்வெளிக் கட்டுப்பாட்டுத் துறையின் இயக்குநர் வூ யுன்ஹுவா தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இவை அனைத்தும் எலான் மஸ்கின் 1400 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை வெறும் 12 மணி நேரத்தில் காலி செய்துவிடும். சீன செயற்கைக்கோளில் லேசர், நுண் அலைகளை உருவாக்கும் கருவி, உளவு கருவிகள் பொருத்தப்பட்டிருக்கலாம். ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் வெறுமென நெட்வொர்க் கொடுக்க மட்டுமே பயன்படுத்தப்படுவதில்லை. தவிர, ராணுவ நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது என சீனா குற்றம்சாட்டி வருகிறது.

அதாவது, உக்ரைன்-ரஷ்யா போரில், உக்ரைன் படைகளுக்கு தகவல்கள் கொடுக்கவும், ரஷ்ய எல்லையை துல்லியமாக கண்காணிக்கவும் இந்த செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த 2022ம் ஆண்டு ரஷ்ய போரின்போது அப்போதைய உக்ரைனின் துணைப் பிரதமரான மைக்கைலோ ஃபெடோரோவ், “ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் சேவையை உடனடியாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த மஸ்க், “உடனடியாக சேவை வழங்கப்படும்” என்று கூறியிருந்தார்.

உக்ரைன் போருடன் மட்டுமே ஸ்டார்லிங்க் நிற்காது, நாளை சீனாவுக்கும்-தைவானுக்கும் பஞ்சாயது ஏற்பட்டால் அப்போதும், தைவானுக்கு சப்போர்ட் செய்ய ஸ்டார்லிங்க் வரும். எனவே இந்த கூட்டு நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்க சீனா இந்த புதிய செயற்கைக்கோள்களை உருவாக்கியிருக்கிறது.

கடந்த 2023ம் ஆண்டு இதற்கான பணிகளை சீனா தொடங்கியது. இந்த திட்டத்திற்கு ‘கியான்ஃபான் மெகா-விண்மீன் திட்டம்’ (Qianfan mega-constellation project) என்றும் பெயரிட்டிருந்தது. நோக்கம் உலகம் முழுவதும் இணைய தொடர்பை வழங்குவதாகும். இதற்காக மொத்தம் 15,000 சிறிய ரக செயற்கைக்கோள்களை ஏவ சீனா முடிவெடுத்தது. இதன் முதல் தொகுப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏவப்பட்டது. இதில் 18 செயற்கைக்கோள்கள் இருந்தன.

ஒவ்வொன்றும் சுமார் 300 கி.கி எடையில் இருந்தது. இவை பூமியிலிருந்து 800 கி.மீ உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டது. இதேபோன்று 2024 டிசம்பரில் அடுத்து இரண்டு தொகுதி ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. தற்போது மொத்தம் 99 செயற்கைக்கோள்கள் விண்வெளியில் இருக்கின்றன. 15,000 செயற்கைக்கோள்களை 3 கட்டங்களாக ஏவ இருக்கிறது. முதல் கட்டத்தில் 1,296 செயற்கைக்கோள்கள் ஏவப்படும். இதில் 648 செயற்கைக்கோள்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஏவப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் கன்னி உரை

அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்புவோம்

தேசியத்துவத்துடனும் ஐக்கியத்துடனும் ஒன்றுபட்டு நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க இன்று (23) காலை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

பதவிப் பிரமாணத்தின் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய முழுமையான உரை:

மக்களால் ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது நமது நாட்டின் ஜனநாயகத்திலிருக்கும் மிக முக்கியமான அம்சமாகும். தேர்தலில் வாக்களித்தல் மற்றும் ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதோடு ஜனநாயகம் நிறைவு பெறுவதில்லை. இது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சம் என்றாலும், நம் நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்த, கட்டமைப்புகளின் வலிமையும், சட்டங்களை வலுப்படுத்துவதும் அவசியம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனவே, எனது பதவிக்காலத்தில் இந்த நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.

அத்துடன், இந்த நாட்டில் ஜனநாயக முறையில் அதிகாரப் பரிமாற்றம் நடந்த வரலாறும் உண்டு. தேர்தலில் நிகழும் அதிகாரப் பரிமாற்றத்தை எந்தத் தலைவரும் நிராகரித்ததில்லை. அதற்கமைய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த மக்கள்ஆணையை சுமூகமாக ஏற்றுக்கொண்டதுடன், ஜனநாயக ரீதியில் அதிகாரத்தை கைமாற்றுவதற்கான அவரின் அர்ப்பணிப்பிற்கும் முன்னுதாரணத்திற்கும் நன்றி தெரிவிக்கிறேன். மேலும் எமக்கு கிடைப்பது மிகவும் சவால் நிறைந்த நாடு என்பதை நன்கு புரிந்து கொண்டிருக்கிறோம். நமது அரசியலில் தூய்மையான, மக்களால் எதிர்பார்க்கப்படும் சிறந்த அரசியல் கலாசாரத்திற்காக அவசியம் காணப்படுகிறது.அதற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

நம் நாட்டின் அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு நல்லெண்ணம் இல்லை. எனவே, அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் மீது மக்கள் மரியாதை மற்றும் நம்பிக்கையை மீட்டெடுக்க எங்கள் தரப்பிலிருந்து முடிந்த அனைத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.

மேலும், நமக்கு முன் இருக்கும் இந்த ஆழமான நெருக்கடியை வெறும் அரசோ, வெறும் அரசியல் கட்சியோ அல்லது ஒரு தனி நபரோ மட்டும் தீர்க்க முடியும் என்று நாங்கள் நம்பவில்லை. ஏனென்றால், நான் முன்பு கூறியது போல், நான் ஒரு மாயாஜால வித்தைக்காரனல்ல. நான் மந்திரவாதியும் இல்லை. நான் இந்த நாட்டின் சாதாரண குடிமகன். எம்மிடம் திறமைகள் உள்ளன. இயலாமைகளும் உள்ளன. தெரிந்த விடயங்களும் உள்ளன அதேபோன்று, தெரியாத விடயங்களும் உள்ளன.

ஆனால் திறமைகளைப் பயன்படுத்தி தெரியாதவற்றை சேகரித்துக்கொண்டு சிறந்த முடிவுகளை எடுத்து இந்த நாட்டை வழிநடத்துவதே எனது தலையாய பணியாகும். அந்த கூட்டுப் பங்களிப்பின் ஒரு அங்கமாக மாறுவது எனது பொறுப்பாகும். மேலும், இந்த நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதில் பொது மக்கள் மற்றும் அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் பாரிய பொறுப்பு உள்ளது. அந்தப் பொறுப்பை நிறைவேற்ற அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்.

ஆனால், நாட்டின் ஜனாதிபதி என்ற முறையில், இந்தப் பணியை முன்னின்று நடத்துவதில் எனக்கு முதன்மையான மற்றும் மிக முக்கியமான பொறுப்பு இருப்பதை நான் ஏற்றுக்கொண்டேன். எனவே, இந்தச் சவாலை வெற்றிகொள்வதற்காக எனக்குக் வழங்கப்பட்டுள்ள பணியை நான் உரிய முறையில் நிறைவேற்றுவேன் என்பதை செயற்பாடு மற்றும் நடைமுறை மூலம் எல்லா சந்தர்ப்பங்களிலும் இந்த நாட்டின் பிரஜைகளுக்கு வெளிப்படுத்த நான் தயாராக இருக்கிறேன்.

மேலும் நமது நாட்டுக்கு சர்வதேச ஆதரவு தேவை. எனவே, உலகில் எத்தகைய அதிகாரப் பிளவுகள் இருந்தாலும், ஒவ்வொரு நாட்டையும் எமக்கு மிகவும் சாதகமாக கையாள்வதே நமது எதிர்பார்ப்பாகும். நாம் உலகில் தனிமைப்படுத்தப்பட்ட நாடு அல்ல. உலகத்துடன் கூட்டாக முன்னேற வேண்டிய ஒரு நாடாகும். அது தொடர்பில் தேவையான முடிவுகளை எடுக்க நாங்கள் சிறிதும் தயங்குவதில்லை.

மேலும், நம் நாட்டைக் கட்டியெழுப்புவதில் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு பெரும் பங்கு உள்ளது. எனவே, நாட்டை மேலும் வலுவாகக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு அவர்கள் ஆதரவளிப்பார்கள் என நான் கருதுகின்றேன்.

நம் நாட்டின் ஜனநாயகத்தின் ஊடாக நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். அதற்காக மக்கள் எனக்கு வாக்களித்தனர்.

மேலும் எனக்கு வழங்கப்படாத வாக்குகளும் உள்ளன. எனவே, எங்களின் வெற்றியின் உள்ளடக்கம் மற்றும் அளவு குறித்து எங்களுக்கு நல்ல புரிதல் உள்ளது. எனவே, எங்களுக்கு ஆதரவு வழங்காத மற்றும் எங்களை நம்பாத பிரஜைகளின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெறுவதே எனது நிர்வாகத்தின் போது எனக்கு வழங்கப்பட்டுள்ள பணியாகும். அந்தப் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

எதிர்காலத்தில் இவை அனைத்தையும் நீங்கள் நடைமுறையில் கண்டுகொள்ள முடியும். அதற்கு அனைத்து மக்களின் ஆதரவையும் எதிர்பார்க்கின்றேன்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தேர்தலில் இவ்வாறுதான் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்

அதிகாரிகள் மற்றும் பிற தேவைகள் முடிந்த பிறகு, மாலை 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (19) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி பிற்பகல் 4.15 மணிளவில் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“எதிர்வரும் 21ம் திகதி வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள் பெறப்பட்டதும், அதிகாரிகள் மற்றும் இதர தேவைகள் முடிந்ததும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் இரவு 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

மாலை 4.15 மணிளவில் தபால் மூல வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

அத்துடன் மாவட்ட அளவில் ஒவ்வொரு வட்டாரத்திலும் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெறும்.

வாக்கு எண்ணிக்கையின் முடிவில் முடிவுகள் கிடைத்தவுடன் ஊடகங்களுக்கு வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையே முதலில் எண்ணப்படும்.

அந்தக் கணக்கெடுப்பின் பின்னர் (மாவட்ட அளவில் எண்ணும் பணி) முதலில் வாக்குப்பெட்டிகளில் உள்ள வாக்குகள் எண்ணப்படும்.

அதன் பிறகு, ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு, தொகுதி மற்றும் மாவட்ட அளவில் அது தயாரிக்கப்படுகிறது.

தேர்தல்கள் செயலகமே ஒட்டுமொத்த முடிவுகளைக் கணக்கிடும்.

எந்த வேட்பாளரும் 50 வீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்றுள்ளாரா என சரிபார்க்கப்படும்.

அப்படியானால், அந்த நேரத்தில் வாக்கு எண்ணும் பணிகள் நிறுத்தப்படும்.

அப்போது ஜனாதிபதியை நாங்கள் அறிவிப்போம்.

எந்த வேட்பாளருக்கும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் கிடைக்காவிடின், விருப்பு வாக்கு எண்ணிக்கைக்கு செல்ல வேண்டும்.

அங்கு, அதிக வாக்குகள் பெற்ற இரண்டு வேட்பாளர்கள் போட்டியில் வைத்து விட்டு  மீதமுள்ள 36 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து நீக்கப்படுவர்” என்றார்.

புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக மாறும்

புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வாத்தியாசலையாக மாற்றம் பெரும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று புத்தளத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ அலிசப்ரி ரஹீம் மற்றும் சிந்தக்க மாயாதுன்ன தலைமையில் புத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்திலே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

புத்தளம் மக்களின் நீண்ட நாள் தேவையாக இருந்து வருகின்ற புத்தளம் தல வைத்தியசாலையை தரமுயர்த்துவது தொடர்பாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ அலிசப்ரி ரஹீம் அவர்களினால் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோலுக்கிணங்க குறித்த வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.

மேலும் புத்தளத்தில் மீன் பிடி தொழிலை முன்னேற்றும் நோக்கத்தில் மீன் பிடி துறைமுகம் ஒன்றை அமைக்கும் யோசனையும் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டதுடன், அதற்கான முன்னெடுப்புகளும் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்டமை புத்தளம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நாட்டில் நிரந்தர பொருளாதார அபிவிருத்தியை நிலை நாட்ட தாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டை பொருளாதார அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவதே தனது பிரதான நோக்கம் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மொட்டுக்கட்சிக்கு எதிராக நிற்கும் முக்கிய அமைச்சர்கள்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக மொட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளரை இந்த வாரம் அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்காதிருக்கவும், மொட்டு சின்னத்தில் தனியாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமக்கு ஆதரவு வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பியிருந்த கடிதம் நேற்றைய தினம் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தினால் அரசியல் குழுவில் முன்வைக்கப்பட்டது.

எவ்வாறாயினும் அந்த கடிதத்தை நிராகரிக்க அரசியல் குழுக் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுவில் 82 பேர் அங்கம் வகிப்பதுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் 72 பேர் பங்கேற்றனர்.

இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த 11 பேர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

மஹிந்தானந்த அலுத்கமகே, பந்துல குணவர்தன, பிரதீப் உந்துகொட, கோகிலா ஹர்ஷனி குணவர்தன, சஹன் பிரதீப், ரமேஸ் பத்திரன, கஞ்சன விஜேசேகர, பிரசன்ன ரணதுங்க, கனக ஹேரத், மொஹான் பிரியதர்ஷன ஆகியோர் கட்சியின் சார்பில் தனியான வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

அத்துடன் பிறிதொரு கட்சியின் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்கும் உறுப்பினர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் யோசனைக்கு 6 பேர் எதிராக வாக்களித்துள்ளனர்.

எவ்வாறாயினும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் எனக் கூறப்பட்ட தம்மிக பெரேரா தொடர்பில் அரசியல் குழுக் கூட்டத்தின்போது எந்தவித கருத்துக்களும் பரிமாற்றிக் கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவளிக்காத 11 பேர் உள்ளிட்ட தரப்பினர் நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தனவின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சைனப் ஆரம்பப் பாடசாலைக்கு ஆளுநர் வருகை!

புத்தளம் சைனப் ஆரம்ப பாடசாலையின் முப்பெரும் விழா பாடசாலை அதிபர் யஹியா தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து புத்தளம் ஜெய்னப் பாடசாலைக்கு 22 லட்சம் ரூபா பெறுமதியான நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு, சிறுவர் விளையாட்டு நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தல் மற்றும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் செயற்திட்டத்தின் கீழ் BCMH நிறுவனத்தினால் கற்றல் உபகரணம் வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் கடந்த செவ்வாய்க்கிழமை (16) வெகு விமர்சையாக இடம்பெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதியாக வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், விசேட அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மற்றும் கௌரவ அதிதியாக புத்தளம் வலயக்கல்விப் பணிப்பாளர் அர்ஜுன ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆரம்ப பாடசாலையின் முக்கியத்துவம் மற்றும் அறிவார்ந்த சமூகத்தை கட்டியெழுப்ப ஆரம்ப பாடசாலை ஆற்றிவருகின்ற அர்ப்பணிப்பு குறித்து விரிவாக பேசிய வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், புத்தளம் மாவட்ட பாடசாலைகளின் துரித வளர்ச்சி பற்றியும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

மேலும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் செயற்திட்டத்திற்கு வடமேல் மாகாண ஆளுநர் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் ஜவ்ஷி ஜமால்தின், இணைப்புச் செயலாளர் எச். அமீர் அலி ஆசிரியர், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் உட்பட உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் அயல் பாடசாலையின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு
நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு

ஹிருணிகாவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறை

கடத்தல் வழக்கில் முன்னாள் எம்.பி ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்தத் தீர்ப்பை அறிவித்தார்.

தெமட்டகொட பகுதியிலுள்ள கடை ஒன்றில் பணிபுரிந்த அமில பிரியந்த அமரசிங்க எனும் இளைஞர் ஒருவரை 2015 டிசம்பர் 21ஆம் திகதி ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு சொந்தமான டிபெண்டர் வாகனத்தில் கடத்திய வழக்கு விசாரணை முடிவில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

29 குற்றங்கள் தொடர்பில் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் 8 பேரும் குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில், அச்சம்பத்திற்கு உதவி, ஒத்தாசை புரிந்ததாக ஹிருணிகா மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்திருந்தார்.

அத்தோடு, சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவின் ஆதரவாளர்கள் 8 பேர் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைதான ஐந்தாம் சந்தேகநபரின் மகள் அளித்துள்ள வாக்குமூலத்தில், தமது தாயாருடன் தொடர்பு பேணிய நபர் ஒருவரை தாம் காண்பித்ததாகவும், அவரை தமது தந்தையும் அவருடன் சென்றவர்களும் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு ஹிருணிகாவிடம் அழைத்துச் சென்றதாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

ஓவியப்போட்டியில் எருக்கலம்பிட்டி மாணவன் முதலாமிடம்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட வட மாகாண மானவர்களுக்கிடையிலான சித்திரப்போட்டியில் மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்றார்.

வீதி விபத்துக்கள் இல்லாத நாளைக்கான பாடசாலையிலிருந்து அணிவக்குப்போம் எனும் தொனிப்பொருளில் கடந்த வியாழக்கிழமை (13.06.2024) அன்று நடாத்தப்பட்ட வட மாகாண மாணவர்களுக்கிடையிலான குறித்த சித்திரப்போட்டியில் சுமார் 2600 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

சித்திரப்போட்டியில் பங்குபற்றிய 2600 மாணவர்களில் 250 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு நேற்றைய தினம் (15.06.2024) அவர்களுக்கான போட்டி இடம்பெற்றது.

நடைபெற்று முடிந்த இறுதிச் சுற்றுப்போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்று பெருமதிமிக்க பரிசில்களை பெற்றுக்கொண்டார்.

முதலாம் இடம் பெற்ற முஹம்மது ஹுசைன் என்ற மாணவனுக்கு சான்றிதல், துவிச்சக்கரவண்டி மற்றும் 8500/- ரூபா பெறுமதியான வவுச்சரும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இதேவேளை குறித்த போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய இல்முதீன் முஹம்மது ஹஸ்பான் 7 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய மற்றொரு மாணவரான முஹம்மது சம்ஹான் 8 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

பாரிய சாவல்களுக்கு மத்தியில் தனி ஒரு மனிதனாக இம் மாணாவர்களை ஊக்கப்படுத்தி, தயார்ப்படுத்தி போட்டியில் பங்குபெறச் செய்து வெற்றிபெறச் செய்த எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியின் சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் அவர்களின் இம் முயற்சிக்கு, பாடசாலை சமூகம் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் நன்றி தெரிவித்தனர்.

தமக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வந்து தேசிய அளவில் இடம்பெறும் போட்டிகளில் மாணவர்களை பங்குபெறச் செய்வதே தனது இலக்கு என சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் எமது ஊடகத்திற்கு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

புத்தளம் எருக்கலம்பிட்டியில் கடும் வெள்ளம்

புத்தளம் பகுதியில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக புத்தளம் பகுதி முழுதும் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.

புத்தளம், தில்லையடி, பாலாவி, புத்தளம் எருக்கலம்பிட்டி, ஹிதாயத் நகர்,  மதுரங்குளி மற்றும் ஏனைய பல கிராமங்களும் வெள்ளித்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமமும் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 1500 குடும்பங்கள் இங்கு வாழ்ந்துவருவதுடன், அனைத்து வீடுகளும் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நூற்றிற்கும் அதிகமான வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் ஐநூற்றுக்கும் அதிகமான வீடுகள் பகுதி அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8ஆம் திகதி ஏற்பட்ட மழை வெள்ளித்தினால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் மற்றும் பாடசாலைகளில் தற்காலிகமாக  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு தினங்களாக இவர்களுக்கான சமைத்த உணவுகள் மூன்று வேலைகளிலும் ஊர் தனவந்தர்களின் உதவியுடனும், பள்ளிவாசல் நிர்வாக சபையின் வழிகாட்டலுடனும் வழங்கப்பட்டு வருவதுடன், ஊர் மக்களுக்கும் உணவு விநியோகங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

இவர்களுக்கான நிவாரண உதவிகள் இதுவரை அரசாங்கத்தினால் வழங்கப்படாத போதிலும், ஊர் மக்களின் பங்களிப்புடன் மாத்திரமே பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு விநியோகங்கள் இதுவரை  வழங்கப்பட்டு வருகின்றது.

புத்தளம் பொத்துவில்லு பகுதியில் உள்ள குளம் மழை நீரினால்  பெருக்கெடுத்துள்ளதால் குறித்த குளத்து நீர் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமத்திற்குள் தொடர்ந்தும் மூன்றாவது நாளாக ஊடறுத்து செல்வதால் வீடுகள் தொடர்ந்தும் நீருள் மூழ்கியுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்தின் நிவாரண உதவிக்காக பல மக்கள் தொடர்ந்தும் எதிர்பார்த்து காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவிவரும் வானிலை அமைப்பில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், பல மாகாணங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பதிவாகக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விடுத்துள்ள விசேட வானிலை முன்னறிவிப்பில் எச்சரித்துள்ளது.

குறிப்பாக மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் ஆகிய மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது இடைவிடாது மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுகின்றன.

இதற்கு இணையாக நாட்டின் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளிலும் பிற்பகல் வேளையில் வானிலை தீவிரமடையவுள்ளது. அம்பாறை, மொனராகலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளை, அனுராதபுரம், மாத்தளை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்பதுடன் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பெரும்பாலும் வறட்சியான வானிலையே நீடிக்கும்.

மழை ஒருபுறமிருக்க, நாட்டின் பல பாகங்களில் காற்றின் வேகமும் சடுதியாக அதிகரிக்கவுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை, மொனராகலை, அம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், இடியுடன் கூடிய மழை தீவிரமடையும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக வீசக்கூடிய அதிவேகக் காற்று மற்றும் மிக ஆபத்தான மின்னல் தாக்கங்கள் காரணமாக ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்த்துக்கொள்ள பொதுமக்கள் அனைவரும் தேவையான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தவறாது பின்பற்றுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.

வறட்சியால் கருகிய பயிர்கள்: விவசாயிகளுக்கு ரூ. 3,000 மில்லியன் நட்டஈடு!

நாட்டின் பிரதான விவசாய மாவட்டங்களில் நிலவிவரும் கடுமையான வறட்சி காரணமாகப் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மிக விரைவாகக் காப்பீட்டு நட்டஈட்டை வழங்கும் நோக்கில், அரசாங்கம் 3,000 மில்லியன் ரூபா நிதியை உடனடியாக ஒதுக்கியுள்ளது.

உலகளாவிய ரீதியில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை மாற்றம் இலங்கையின் விவசாயப் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மொனராகலை, பொலன்னறுவை, அம்பாந்தோட்டை, அனுராதபுரம் மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த நெல் மற்றும் சோளம் உள்ளிட்ட பிரதான பயிர்கள் போதிய நீரின்றி முற்றாகக் கருகிப்போயுள்ளன.

தற்போதைய களநிலைமைத் தரவுகளின்படி, இந்த 5 மாவட்டங்களிலும் 7,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்குச் சொந்தமான சுமார் 8,000 ஏக்கர் விவசாய நிலங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. இதில் நெற்செய்கையில் மட்டும் அனுராதபுரத்தில் 1,923 ஏக்கர்களும், மொனராகலையில் 1,401 ஏக்கர்களும், பொலன்னறுவையில் 1,259 ஏக்கர்களும், அம்பாறையில் 1,055 ஏக்கர்களும், அம்பாந்தோட்டையில் 783 ஏக்கர்களும் நாசமாகியுள்ளமை பதிவாகியுள்ளது.

விவசாயிகளின் இந்த அவல நிலையைக் கருத்திற்கொண்டு, விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரின் நேரடி அறிவுறுத்தலின் பேரில் சேத மதிப்பீட்டுப் பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச் சபையின் கள உத்தியோகத்தர்களும், கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்களும் நேரடியாகப் பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்குச் சென்று தரவுகளைச் சரிபார்த்து வருகின்றனர்.

இந்த விசேட நிவாரணத் திட்டத்தின் கீழ் நெல், சோளம், பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, சோயா மற்றும் மிளகாய் ஆகிய 6 வகையான பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ. 100,000 வீதம், ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 5 ஏக்கர் வரை நட்டஈட்டுத் தொகை வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, இதுவரை தமது பயிர்ச் சேதங்களை அறிவிக்காத விவசாயிகள் எவரேனும் இருப்பின், தாமதிக்காது உடனடியாக அருகிலுள்ள கமநல சேவை நிலையங்களின் சேத அறிவிப்புப் பதிவேட்டில் பதிவு செய்யுமாறு அல்லது பிரதேச விவசாய உத்தியோகத்தர்களைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள 1918 என்ற விவசாய காப்புறுதிச் சபையின் உடனடித் தொலைபேசி இலக்கத்தை அழைக்க முடியும்.

இன்டர்போல் வலையில் வீழ்ந்த ‘பஸ் லலித்’: துபாயில் கைது!

இலங்கையில் பல்வேறு தீவிர குற்றச் செயல்களுடன் தொடர்புடைய முக்கிய பாதாள உலகக் கும்பல் தலைவனும் போதைப்பொருள் கடத்தல்காரருமான லலித் கன்னங்கர (அழைக்கப்படும் ‘பஸ் லலித்’) துபாயில் கைது செய்யப்பட்டு, செவ்வாய்க்கிழமை (25) அதிகாலை குற்றப்புலனாய்வு திணைக்கள (CID) அதிகாரிகளால் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

களுத்துறை தெற்கு பகுதியைச் சேர்ந்த 36 வயதான இந்த நிழலுலக தாதா, நீண்டகாலமாக பாதுகாப்பு பிரிவினருக்கு சவால் விடுத்து வெளிநாட்டில் தலைமறைவாக இருந்துவந்தார். இவருக்கு எதிராக கொலை, கொலை முயற்சி, கூர்மையான ஆயுதங்களால் தாக்குதல் மற்றும் பாரியளவில் கப்பம் கோருதல் உள்ளிட்ட பல வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.

குறிப்பாக, அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கின் அடிப்படையில், மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவினால் பெறப்பட்ட சர்வதேச பொலிஸாரின் (Interpol) ‘சிவப்பு எச்சரிக்கை’ (Red Notice) மூலமாகவே இவர் துபாயில் வைத்து பாதுகாப்பு பிரிவினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

சந்தேகநபர் மீது ஹங்வெல்ல, அவிசாவளை, கட்டுகுருந்த, பாடுக்க, மீகொட மற்றும் கல்தோட்டை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், C-4 வகையைச் சேர்ந்த அதிக சக்திவாய்ந்த வெடிபொருட்களை வைத்திருந்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இவர் மீது நீதிமன்றங்களால் பல திறந்த பிடியாணைகளும் (Open Warrants) பிறப்பிக்கப்பட்டுள்ளன. கொழும்பு உயர் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள கொலை வழக்கு ஒன்றில் ஆஜராகத் தவறியமை, 2021 செப்டம்பர் 20 அன்று நெலுண்துடுவ பகுதியில் நபர் ஒருவரை வீட்டின் முன் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயற்சித்தமை மற்றும் 2022 அக்டோபர் 16 அன்று மூவரை கூர்மையான ஆயுதங்களால் கொடூரமாகத் தாக்கியமை உள்ளிட்ட சம்பவங்கள் இதில் பிரதானமானவை.

இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள ‘பஸ் லலித்’ தற்போது குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசேட தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, அவரது நிழலுலக வலையமைப்பு மற்றும் போதைப்பொருள் கடத்தல்கள் தொடர்பாக தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

சமூக வலைத்தளங்கள் தடை – நியூசிலாந்து அரசின் அதிரடிச் சட்டம்!

சிறுவர்களின் எதிர்காலத்தைக் காக்கவா? அல்லது சர்வதேசப் போக்கைப் பின்பற்றவா?

உலகம் முழுவதும் வளர்ந்து வரும் டிஜிட்டல் ஆதிக்கத்திலிருந்து அடுத்த தலைமுறையைப் பாதுகாக்க பல நாடுகள் தீவிர நடவடிக்கைகளில் இறங்கி வருகின்றன.அவுஸ்திரேலியா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து, தற்போது நியூசிலாந்து அரசும் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்கான கடுமையான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த அதிரடி முடிவின் பின்னணி என்ன? நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் குறிப்பிடுகையில், “எமது நாட்டின் எதிர்காலத் தலைமுறையினருக்கு ஏற்படும் பாதிப்புகளை நாம் சாதாரணமாகப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.நாட்டில் 13 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் மூவரில் ஒருவர் தினமும் 5 மணிநேரத்திற்கும் அதிகமாக இணையத்தில் மூழ்கிக் கிடக்கின்றனர்.இது அவர்களின் மனநலம், தூக்கம், கல்வி மற்றும் குடும்ப வாழ்க்கையை மிகக் கொடூரமாகப் பாதித்து வருவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை சாதாரணமானதல்ல. இன்ஸ்டாகிராம், டிக்ரொக், பேஸ்புக் மற்றும் ஸ்னப்சாட் போன்ற முன்னணி தளங்கள், பயனர் 16 வயதுக்கு மேற்பட்டவரா என்பதை உறுதிப்படுத்த முக அடையாளத் தொழில்நுட்பம் (facial age estimation) மற்றும் டிஜிட்டல் அடையாள அட்டைகளை கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும்.இதில் தவறிழைக்கும் நிறுவனங்களுக்கு அவற்றின் உலகளாவிய வருமானத்தில் 10 சதவீதம் வரை பாரிய அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.அதேவேளை, கல்வி அமைச்சர் எரிகா ஸ்டான்போர்ட் தெளிவுபடுத்தியபடி, சிறுவர்களுக்கோ அவர்களது பெற்றோருக்கோ இதில் எந்தவித சட்ட நடவடிக்கையோ அபராதமோ விதிக்கப்பட மாட்டாது.

எனினும், இந்தச் சட்டம் நடைமுறைக்கு வருமா என்பதில் பெரும் கேள்விக்குறி எழுந்துள்ளது. ஆளும் தேசியக் கட்சியின் கூட்டணிக் கட்சிகளான ACT மற்றும் NZ First ஆகியவை இச்சட்டத்திற்கு வெளிப்படையாகவே முட்டுக்கட்டை போட்டுள்ளன.அவுஸ்திரேலியாவில் கொண்டுவரப்பட்ட இத்தகைய சட்டம் “முற்றிலும் தோல்வியடைந்துள்ளது” என்றும், சிறுவர்கள் இலகுவாக இத்தடைகளைத் தாண்டிவிடுவார்கள் என்றும் அவை வாதிடுகின்றன.அத்துடன் எதிர்க்கட்சியான தொழிற் கட்சியும் பல சந்தேகங்களை முன்வைத்து தனது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை.அரசியல் இழுபறிகளுக்கு மத்தியில் நியூசிலாந்து சிறுவர்களின் டிஜிட்டல் சுவர்களை உடைக்குமா இந்தச் சட்டம் என்பது விரைவில் தெரியவரும்.

தடாலடியாக சரிந்த கச்சா எண்ணெய் விலை!

சர்வதேச சந்தையை உலுக்கும் அமெரிக்காவின் அடுத்த நகர்வு

ஈரான் மீது வரலாற்று ரீதியான புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படவுள்ளன என்ற செய்தி வெளியான உடனேயே, சர்வதேச எண்ணெய் சந்தையில் வர்த்தகர்கள் அவசர அவசரமாக இலாபம் ஈட்டும் நடவடிக்கைகளில் (Profit-taking) இறங்கியுள்ளனர். இதன் எதிரொலியாக, திங்கட்கிழமை வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 1 டொலருக்கும் மேல் சரிவைக் கண்டது. பிரெண்ட் கச்சா எண்ணெய் 1.49 டொலர் குறைந்து 92.90 டொலராகவும், அமெரிக்க WTI கச்சா எண்ணெய் 1.74 டொலர் குறைந்து 85.32 டொலராகவும் வீழ்ச்சியடைந்தன.

கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து 5 சதவீதத்திற்கும் மேல் ஏறுமுகத்தில் இருந்த எண்ணெய் விலை திடீரென சரியக் காரணம் என்ன?

காரணம் வாஷிங்டனில் இருந்து வெளிவரவுள்ள அந்த ஒரு அறிவிப்புதான். அமெரிக்க திறைசேரிச் செயலாளர் ஸ்காட் பெசென்ட், ஈரானுக்கு எதிராக இதுவரை இல்லாத வகையிலான மிகக் கடுமையான தடைகளை அறிவிக்கவுள்ளார். அதேநேரம், ஈரானுடன் வர்த்தகம் செய்யும் ஏனைய நாடுகளுக்கும் தடைகள் விதிக்கப்படும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பகிரங்கமாக எச்சரித்துள்ளது சந்தையில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மறுபுறம், ஈரானின் உயர்மட்டத் தலைமைக்குள் ஏற்பட்டுள்ள உள்முரண்பாடுகள் நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளன. ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுத்தாலும், அந்நாட்டு தீவிர நிலைப்பாட்டாளர்கள் இறுதிவரை மோதும் முடிவில் இருப்பதாக சந்தை ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். இந்த வாரம் முடிவதற்குள் ஈரானின் உண்மையான பிடி யாருக்குச் செல்லும் என்பது தெரிந்துவிடும்.

இதன் நேரடித் தாக்கம் ஏற்கனவே தரைமட்டத்தில் உணரத் தொடங்கிவிட்டது. அமெரிக்காவின் கட்டுப்பாடுகள் காரணமாக சீக்கான ஈரானிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி குறைவடைந்து விலை உயர்ந்துள்ளது. இருப்பினும், ஈராக்கின் கோரிக்கையை ஏற்று சில ஈராக் எண்ணெய்க் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதித்துள்ளது. உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தில் ஐந்தில் ஒரு பங்கை கையாளும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையில், கடந்த வார இறுதியில் வெறும் 20-க்கும் குறைவான சரக்குக் கப்பல்களே கடந்து சென்றுள்ளன.

மத்திய கிழக்கின் இந்த விநியோக நெருக்கடி விரைவில் சீராகுமா? “இல்லை, விநியோக மீட்சி இன்னும் நீண்ட காலம் எடுக்கலாம்” என மோர்கன் ஸ்டான்லி ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். கடலில் உள்ள எண்ணெய்க் கையிருப்பு மிகக் கடுமையான வீழ்ச்சியைக் கண்டுள்ள அதேவேளை, சீனா உள்ளிட்ட நாடுகளின் நிலத்தடி சேமிப்புக் கிடங்குகளிலும் கையிருப்பு குறைந்து வருகின்றது. மத்திய கிழக்கில் நிலவும் இந்த புவிசார் அரசியல் சதுரங்கம், அடுத்த சில நாட்களில் உலகப் பொருளாதாரத்தை எங்கு கொண்டு சேர்க்கப்போகிறது என்பதை சர்வதேசமே உன்னிப்பாகக் கவனித்து வருகின்றது.

அமெரிக்காவுடன் கைகோர்க்கும் நாடுகள் மீது தாக்குதல் – ஈரான் எச்சரிக்கை!

டிரெண்டிங் தலைப்புகள்:

  • வளைகுடாவில் வெடிக்கும் அபாயம்: அமெரிக்காவுடன் கைகோர்க்கும் நாடுகள் மீது தாக்குதல் நடத்த ஈரான் எச்சரிக்கை!
  • எண்ணெய் நிறுவனங்கள் டார்கெட்! டிரம்பின் தடைகளுக்கு எதிராக ஈரானின் அதிரடி பதிலடிப் பிரகடனம்!
  • சம்பாதிக்க துணிந்தால் உள்கட்டமைப்புகள் அழியும்: அண்டை நாடுகளுக்கு ஈரானிய பாதுகாப்புத் தளபதி விடுத்துள்ள பகிரங்க மிரட்டல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் ஒரு பாரிய போர்ப்பதற்றம் உருவாகும் சூழல் தீவிரமடைந்துள்ளது. அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை அமுல்படுத்த முனையும் நாடுகள் பாரிய எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என ஈரான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளமை சர்வதேச அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு எதிராக விதித்துள்ள புதிய கடுமையான பொருளாதாரத் தடைகளைத் தொடர்ந்து, ஈரானின் பாதுகாப்புத் தலைவர் மொஹ்சென் ரெசாய் (Mohsen Rezaei) இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார். ஈரானை முடக்கும் அமெரிக்காவின் பொருளாதார யுத்தத்திற்கு துணைபோகும் எந்தவொரு நாடும் தமது நாட்டின் எதிரி நாடாகவே கணிக்கப்படும் என அவர் மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அத்தோடு நின்றுவிடாமல், அமெரிக்காவின் தடைகளுக்கு ஆதரவளிக்கும் நாடுகளின் முக்கிய பொருளாதார மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மீது ஈரான் தீவிர தாக்குதல்களைத் தொடுக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். வளைகுடா பிராந்தியத்திலுள்ள அண்டை நாடுகள் எவையும் அமெரிக்காவின் இந்த முயற்சிக்கு ஆதரவளிக்கக் கூடாது என அவர் தனது அறிக்கையின் ஊடாகக் கடுமையாக அறிவுறுத்தியுள்ளார்.

குறிப்பாக, மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ள அமெரிக்காவுடன் தொடர்புடைய அனைத்து இராணுவ தளங்கள், வர்த்தக மையங்கள் மற்றும் அமெரிக்க நிறுவனங்களுக்குச் சொந்தமான எண்ணெய் உற்பத்தி தளங்கள் அனைத்தும் ஈரானின் நேரடி இலக்குகளாக மாற்றப்படும் என அரசுத் தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில் அவர் உறுதிபடக் கூறியுள்ளார்.

ஈரான் பாதுகாப்புத் தலைமையின் இந்த அதிரடி அறிக்கை வளைகுடாப் பிராந்தியத்தில் பெரும் பாதுகாப்பு அச்சத்தை ஏற்படுத்தியுள்ள போதிலும், இது தொடர்பில் வளைகுடா நாடுகள் எதுவும் இதுவரை தமது உத்தியோகபூர்வ நிலைப்பாட்டையோ அல்லது பதிலையோ வெளியிடாமல் அமைதி காத்து வருகின்றன.

மஹியங்கனை காட்டுக்குள் நின்ற கார்… மாயமான நிபுணத்துவ மருத்துவர்!

  • காட்டுக்குள் நின்ற கார்… மாயமான நிபுணத்துவ மருத்துவர்: நடுஇரவில் பதுளை-மஹியங்கனை காட்டில் அதிர்ச்சி!
  • யானைகள் உலாவும் அடர்ந்த காட்டில் மருத்துவரின் கார் மீட்பு: இராணுவமும் பொலிஸாரும் களமிறங்கி நள்ளிரவு தேடுதல் வேட்டை!
  • பதுளை போதனா வைத்தியசாலை மயக்க மருந்து நிபுணர் எங்கே? மர்மமான முறையில் காணாமல்போன சம்பவம் பெரும் பரபரப்பு!

பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில் நள்ளிரவில் அரங்கேறியுள்ள ஒரு மர்ம சம்பவம் நாடு முழுவதும் உள்ள மருத்துவத் துறையினர் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பதுளை போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் சிரேஷ்ட மயக்க மருந்து நிபுணத்துவ மருத்துவர் பிரபாத் தயாரத்ன (Dr. Prabhath Dayaratne) என்பவர் திடீரென காணாமல் போயுள்ளதாக பொலிஸார் அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இந்த மர்மத்தின் தொடக்கப் புள்ளியாக, மருத்துவரின் கார் பதுளை – மஹியங்கனை பிரதான வீதியின் 17 ஆம் கட்டைப் பகுதியில் எவரும் இல்லாத நிலையில் கைவிடப்பட்டுக் கிடந்ததை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். கண்டியை வசிப்பிடமாகக் கொண்ட திருமணமான இந்த திறமைமிக்க மருத்துவர், எதற்காக இந்தப் பாதையில் பயணித்தார் அல்லது காருக்கு என்ன நேர்ந்தது என்பது இன்னும் மர்மமாகவே நீடிக்கிறது.

நிலைமையை மேலும் அச்சமூட்டும் வகையில் மாற்றியிருப்பது கார் கண்டுபிடிக்கப்பட்ட அந்த இடம்தான். அடர்ந்த காட்டுப் பகுதியான அவ்விடம் எப்போதும் காட்டு யானைகளின் தீவிர நடமாட்டம் காணப்படும் ஆபத்து நிறைந்த வலயமாகும். காரை விட்டு மருத்துவர் வெளியேறினாரா அல்லது வேறு ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்ததா என்ற கோணத்தில் பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இதனையடுத்து, ஒரு வினாடியும் வீணடிக்காமல் காணாமல்போன மருத்துவரைத் தேடிக் கண்டுபிடிக்கும் நோக்கில் களமிறங்கியுள்ள மஹியங்கனை பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுடன் கைகோர்த்து அடர்ந்த வனப்பகுதிக்குள் பாரிய நள்ளிரவு கூட்டுத் தேடுதல் நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளனர். காட்டுக்குள் எழும் ஒவ்வொரு சத்தத்தையும் உன்னிப்பாகக் கவனித்து உயிரைப் பணயம் வைத்து இந்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சுட்டெரிக்கும் எல் நினோ: குடிநீரின்றித் தவிக்கும் 81,000 க்கும் மேற்பட்ட மக்கள்!

உலகளாவிய ரீதியில் காலநிலைக் கட்டமைப்பை உலுக்கி வரும் ‘எல் நினோ’ (El Niño) தாக்கத்தின் கோரப்பிடிக்குள் இலங்கை மீண்டும் சிக்கத் தொடங்கியுள்ளது. இதன் நேரடி விளைவாக நாட்டின் 7 மாவட்டங்கள் கடும் வறட்சியின் பிடியில் வீழ்ந்துள்ளதாகவும், அங்குள்ள மக்கள் நாளாந்த அத்தியாவசியத் தேவைகளுக்கே பெரும் போராட்டங்களை எதிர்கொண்டு வருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

நிலவும் தீவிர வறண்ட காலநிலை காரணமாக, பாதிக்கப்பட்ட 7 மாவட்டங்களையும் சேர்ந்த 23 பிரதேச செயலகப் பிரிவுகளில் நீர்நிலைகள் வற்றிப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போதைய உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, 25,628 குடும்பங்களைச் சேர்ந்த 81,865 நபர்கள் இந்த கடுமையான காலநிலை மாற்றத்தினால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நிலைமை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதைத் தொடர்ந்து, குடிநீரின்றித் தவிக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அவசர நடவடிக்கைகளை அனர்த்த முகாமைத்துவ நிலையம் துரிதப்படுத்தியுள்ளது. இதற்கமைய, கடுமையான பாதிப்புக்குள்ளான 20 பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள 23,048 குடும்பங்களைச் சேர்ந்த 72,153 பேருக்கு லொறிகள் மற்றும் பவுசர்கள் மூலமாக நாளாந்த குடிநீரை விநியோகிக்கும் திட்டம் களத்தில் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இந்த வறட்சியின் உச்சக்கட்டத் தாக்கம் மொனராகலை மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளது. அங்குள்ள 7 பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் 10,264 குடும்பங்களைச் சேர்ந்த 33,023 பேருக்கு அதிகளவிலான குடிநீர் தொடர்ச்சியாக விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

அதேவேளை, கிழக்கு மாகாணத்திலும் நிலைமை மோசமடைந்து செல்கிறது. மட்டக்களப்பு மாவட்டத்தின் 8 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 9,547 குடும்பங்களின் 28,523 பேருக்கும், அம்பாறை மாவட்டத்தின் 2 பிரதேச செயலகப் பிரிவுகளில் பாதிக்கப்பட்ட 2,537 குடும்பங்களைச் சேர்ந்த 7,882 பேருக்கும் அவசரக் குடிநீர் வழங்கும் பணிகள் முழுவீச்சில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை எதிர்கொள்ள அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் தொடர்ந்தும் களநிலவரங்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.

நாடு தழுவிய ரீதியில் சுகாதாரப் பரிசோதகர்கள் அதிரடிப் போராட்டம்!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளைத் தொடர்ந்து சுகாதாரத் துறையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, இன்று (24) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான மற்றும் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்க இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுகாதார அலுவலகத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுத்தமைக்காக, பொதுச் சுகாதார பரிசோதகர் பி.எச். மிகஸ்தெனிய பழிவாங்கும் நோக்கில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பில் ஏற்கனவே சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்ட போதிலும், இதுவரை எவ்வித தீர்வும் வழங்கப்படவில்லை என்பதே இந்த உடனடிப் போராட்டத்திற்குக் காரணமாக அமைந்துள்ளது.

இப்போராட்டத்தின் தீவிரத்தை வெளிப்படுத்தும் வகையில், நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நிர்வாகப் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நிர்வாகத்திற்கு வழங்கும் அனைத்து வகையான அறிக்கைகள் மற்றும் தரவுப் பகிர்வுகளை முற்றாக இடைநிறுத்துவதற்கு செயற்குழு தீர்மானித்துள்ளது. தகவல் கட்டமைப்புகள் புதுப்பிக்கப்படுவது முடங்கியுள்ளதுடன், இக்காலப்பகுதியில் விடுபடும் எந்தவொரு தரவும் பின்னர் ஒருபோதும் அமைப்புகளில் புதுப்பிக்கப்பட மாட்டாது என சங்கம் மிகத் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

அத்துடன், பி.எச். மிகஸ்தெனியவின் தன்னிச்சையான இடமாற்ற உத்தரவை உடனடியாக இரத்து செய்து, விமான நிலைய முறைகேடுகள் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணையை முன்னெடுக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், கொழும்பு துறைமுகம் மற்றும் கட்டுநாயக்க விமான நிலைய சுகாதார அலுவலகங்களின் அங்கீகரிக்கப்பட்ட உத்தியோகத்தர் ஆளணியைக் குறைக்கும் அதிகாரிகளின் இரகசிய நகர்வுகளுக்கும் சங்கத்தின் பதில் தலைவர் மற்றும் செயலாளர் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

நாடு தழுவிய ரீதியில் சுகாதார தகவல் கட்டமைப்பு இதனால் ஸ்தம்பிக்கும் நிலையை எட்டியுள்ள போதிலும், நியாயமான மற்றும் வெளிப்படையான விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கவும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தாம் தயாராகவே இருப்பதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இறுதியாகத் தெரிவித்துள்ளது.

தடைகளுக்கு மத்தியில் ஈரானுக்குக் கிடைத்த மாபெரும் புதையல்!

டிரெண்டிங் தலைப்புச் செய்திகள்:

  • ஈரானுக்குக் கிடைத்த மாபெரும் புதையல்: 7.5 டிரில்லியன் கன அடி எரிவாயு கண்டுபிடிப்பு!
  • அமெரிக்கத் தடைகளுக்கு பதிலடி: பாரிய எரிவாயுப் படிமத்தை உறுதிப்படுத்தியது ஈரான்!
  • ‘Sweet Gas’ மூலம் உற்பத்திச் செலவு குறையும்: எரிசக்தித் துறையில் புதிய திருப்புமுனை!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான தொடர் போர் மோதல்கள், கடுமையான பொருளாதாரத் தடைகள் என பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில், தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் வகையில் பாரிய இயற்கை எரிவாயுக் களஞ்சியமொன்றை ஈரான் வெற்றிகரமாகக் கண்டறிந்துள்ளது.

ஈரானின் தெற்கு ஃபார்ஸ் மாகாணத்தில் அமைந்துள்ள இயற்கை எரிவாயு வயலிலேயே இந்த பிரமாண்ட படிமம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு அரச ஊடகத்திற்குத் தகவல் வெளியிட்டுள்ள எண்ணெய் வளத்துறை அமைச்சர் மொஹ்சென் பக்னேஜாத், இப்பகுதியில் 7.5 டிரில்லியன் கன அடிக்கும் அதிகமான இயற்கை எரிவாயு இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பூமிக்கு அடியில் கண்டறியப்பட்டுள்ள இந்த அபரிமிதமான இருப்பில், தற்போதைய மீட்பு வீதக் கணிப்பீடுகளின்படி சுமார் 5,700 பில்லியன் கன அடி எரிவாயுவை முழுமையாக பிரித்தெடுத்துப் பயன்படுத்த முடியும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, கண்டறியப்பட்டுள்ள இந்த எரிவாயுவானது குறைந்தளவு நச்சுத்தன்மை கொண்ட உயர்தர ‘ஸ்வீட் கேஸ்’ (Sweet Gas) வகையைச் சேர்ந்ததாகும். இதன் காரணமாக சுத்திகரிப்புக்கான உழைப்பும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுச் செலவுகளும் மிகக் குறைந்த மட்டத்திலேயே இருக்கும் என்பது அந்நாட்டிற்கு இரட்டிப்பு லாபமாக அமைந்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாத இறுதியில் வெடித்த போரினால் ஏற்பட்ட தாக்குதல்களில், ஈரானின் எரிசக்தி உட்கட்டமைப்புகள் பாரிய சேதங்களைச் சந்தித்ததுடன், நாளாந்தம் சுமார் 230 மில்லியன் கன மீற்றர் எரிவாயு உற்பத்தியும் முடங்கியது.போருக்கு முந்தைய காலகட்டத்தில் நாளொன்றுக்கு 650 மில்லியன் கன மீற்றர் எரிவாயுவை உற்பத்தி செய்துவந்த தெஹ்ரான் நிர்வாகம், இழந்த திறனில் 100 மில்லியன் கன மீற்றரை அடுத்த சில மாதங்களில் மீட்டெடுக்கும் தீவிர புனரமைப்புப் பணிகளில் இறங்கியுள்ளது.

ஈரானின் பொருளாதாரத்தை முடக்கும் நோக்கில் அமெரிக்கா புதிய தடைகளை அமுல்படுத்தத் திட்டமிட்டுள்ள இக்கட்டான சூழலில், வெளிவந்துள்ள இந்த 7.5 டிரில்லியன் கன அடி எரிவாயுக் கண்டுபிடிப்பானது, சர்வதேச எரிசக்தி சந்தையில் ஈரானின் பலத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்டியுள்ளது.