Home Blog Page 108

எருக்கலம்பிட்டி ஸகாத் பவுண்டேஷன் அமைப்பின் 19ஆவது மாநாடு!

ஒரு சமூகத்தின் எழுச்சி என்பது தனிமனித முன்னேற்றத்தில் மாத்திரமன்றி, அந்த சமூகம் ஒருவருக்கொருவர் கை கொடுத்து உயர்த்துவதிலேயே தங்கியுள்ளது. அந்த உயரிய நோக்கை இலக்காகக் கொண்டு இயங்கி வரும் எருக்கலம்பிட்டி ஸகாத் பவுண்டேஷன் (Erukulampitty Zakat Foundation) அமைப்பின் 19ஆவது வருடாந்த பொதுக்கூட்டமும் விசேட கலந்துரையாடலும் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு மெட்ரினா ஹோட்டலில் மிகவும் எழுச்சியாக நடைபெற்றது.

வரவேற்பும் தொடக்கமும்

அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் மஸ்கூர் அவர்களின் உருக்கமான வரவேற்புரையுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது. எருக்கலம்பிட்டியின் கௌரவமான பிரமுகர்கள், உலமாக்கள் மற்றும் ஸகாத் கொடையாளிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இச்சங்கமத்தில் கலந்துகொண்டு, தமது ஊர் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினர்.

கடந்த ஆண்டு பிப்ரவரி 18-இல் நடைபெற்ற 18ஆவது பொதுக்கூட்ட அறிக்கையினை அல்ஹாஜ் ஹாரிஸ் அவர்கள் சமர்ப்பிக்க, அதனைத் தொடர்ந்து சபையின் கவனம் நிதி அறிக்கையின் பக்கம் திரும்பியது.

புள்ளிவிபரங்களில் ஒரு மனிதாபிமானப் புரட்சி

பொருளாளர் அல்ஹாஜ் ஸஹாப்தீன் வாபிக் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட 2025/2026ஆம் ஆண்டுக்கான நிதி அறிக்கை, பவுண்டேஷனின் வெளிப்படைத்தன்மையையும் மக்களின் நம்பிக்கையையும் பறைசாற்றுவதாக அமைந்தது.

நிதித் திரட்டல் விபரம்:

  • ஸகாத் நிதி: 183 கொடையாளிகளிடமிருந்து 1,39,46,000 ரூபா.
  • ஸதகா நிதி: 51 கொடையாளிகளிடமிருந்து 33,60,000 ரூபா.
  • மொத்த நிதி (வங்கி வைப்பு உட்பட): 1,92,43,551.46 ரூபா.

“வறுமை ஒழிப்பு என்பது வெறும் உதவித்தொகை வழங்குவதல்ல; அது ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முயற்சி” என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த நிதிகள் பகிரப்பட்டுள்ளன.

வாழ்வாதாரத்தை மாற்றியமைத்த பங்கீடுகள்

மொத்த நிதியில் 1,80,94,000 ரூபா மிகவும் நேர்த்தியான முறையில் பின்வரும் தேவைகளுக்காகப் பகிரப்பட்டுள்ளது:

சுய தொழில் முயற்சி 47,95,000, மருத்துவ உதவி 32,30,000, வீட்டுத் திருத்தப் பணிகள் 31,02,000, கல்வி நடவடிக்கைகள் 24,75,000, வெளிநாட்டு வேலைவாய்ப்பு 16 நபர்களுக்கு உதவி.

சுமார் 266 பயனாளிகள் இந்த நிதிப் பங்கீட்டின் மூலம் நேரடிப் பலன் பெற்றுள்ளனர். வறுமையினால் முடங்கிக் கிடந்த பலரின் வாழ்வுக்கு இந்த பவுண்டேஷன் ஒரு வெளிச்சத்தைக் கொடுத்துள்ளது.

வழிகாட்டலும் பிரார்த்தனையும்

நிகழ்வின் சிறப்பம்சமாக, அமைப்பின் மூத்த உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான அல்ஹாஜ் A.W. ரம்சீன் அவர்கள், பவுண்டேஷனின் கடந்த கால சவால்களையும் நிகழ்கால வெற்றிகளையும் விளக்கிக் கூறி, வருங்காலத் திட்டங்கள் குறித்து தெளிவுபடுத்தினார்.

விசேட அதிதியாகக் கலந்துகொண்ட அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்ஷைக் அர்கம் நூராமித், இஸ்லாமிய பொருளாதாரக் கட்டமைப்பில் ஸகாத்தின் முக்கியத்துவம் குறித்தும், அது சமூகக் கட்டமைப்பை எவ்வாறு பலப்படுத்துகிறது என்பது குறித்தும் ஆழமான கருத்துக்களை முன்வைத்தார்.

முக்கியஸ்தர்களின் ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, அல்ஹாஜ் அரூஸ் மௌலவி அவர்களின் உருக்கமான துஆ பிரார்த்தனையுடன் நிகழ்வு இனிதே நிறைவடைந்தது. கூட்டத்தின் இறுதியில் வழங்கப்பட்ட சிறப்பான விருந்தோம்பல், எருக்கலம்பிட்டி மக்களின் ஒற்றுமையை மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தியது.

11 லட்சத்திற்கும் அதிகமான மீதித் தொகையுடன் அடுத்த கட்டப் பணிகளுக்கு பவுண்டேஷன் தயாராகி வருகின்றது.

தனிநபர் ஸகாத் விநியோகத்தைக் காட்டிலும், ஒரு அமைப்பின் ஊடாகத் திட்டமிடப்பட்டு வழங்கப்படும் ஸகாத் முறைமை எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதற்கு எருக்கலம்பிட்டி ஸகாத் பவுண்டேஷன் ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது.

ஆஸ்திரேலியா அனுப்புவதாக சீட்டிங் செய்த 23 வயது கண்டி இளைஞர்கள்!

ஜூட் சமந்த

விசா ஆலோசனை மையம் என்ற போர்வையில் ஆஸ்திரேலியாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்த இரு இளைஞர்கள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் அதிகாரிகளால் கடந்த வியாழக்கிழமை (02/12) கண்டி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்டி நகரில் “EGA Visa Consultancy என்ற பெயரில் நிறுவனமொன்றை நடத்தி, ஆஸ்திரேலியாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து 35 இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்று, வாக்குறுதியளித்தபடி வேலை வழங்கவில்லை என பணியகத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

அதன்படி, பணியக அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அந்த நிறுவனம் முறையான அனுமதிப்பத்திரம் இன்றி இயங்கி வந்தமை கண்டறியப்பட்டது.

இந்த மோசடி நிறுவனத்தை நடத்தி வந்த கம்பளை மற்றும் தலாத்துஓயா பிரதேசங்களைச் சேர்ந்த 23 வயதுடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கிருந்து 7 வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள், 5 கடவுச்சீட்டுகள் மற்றும் பணப் பற்றுச்சீட்டு புத்தகங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (02/13) கண்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்தச் சோதனையானது சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல் ஆரியவங்சவின் மேற்பார்வையின் கீழ், பிரதான பொலிஸ் பரிசோதகர் பி.பி. ஆரியசிங்க உள்ளிட்ட அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முன்னால் சட்டத்தரணி ஒருவருக்கு பட்டப்பகலில் நேர்ந்த கொடூரம்!

தலங்கம, அக்குரேகொட பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு முன்னால் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் நேற்று (13) பிற்பகல் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். 

குறித்த சட்டத்தரணி ‘கரன்தெனிய சுத்த’ என்ற குற்றவாளியின் நீதிமன்ற வழக்குகளில் முன்னிலையானவர் என பொலிஸார் தெரிவித்தனர். 

அத்துடன், தனது கட்சிக்காரரின் தகவல்களை ‘லொகு பெட்டி’ என்ற குற்றவாளி தலைமையிலான குழுவிற்கு வழங்கிய காரணத்தினால், கரன்தெனிய சுத்தவினால் இந்தத் துப்பாக்கிச் சூடு வழிநடத்தப்பட்டிருக்கலாம் என பாதுகாப்புப் பிரிவினர் சந்தேகிக்கின்றனர். 

அக்குரேகொட பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப் வண்டியில் இருந்த தம்பதியினரை இலக்கு வைத்து இன்று மாலை 5.00 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 

குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாட்டை விளக்குவதற்காக இன்று (14) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய, 14 ஆண்டுகளின் பின்னர் சட்டத்தரணிகள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களினதும் அவசரக் கூட்டமொன்று நாளை (15) கொழும்பில் நடைபெறவுள்ளதாகத் தெரிவித்தார். 

நாளை பிற்பகல் 3.00 மணிக்கு இந்த அவசரக் கூட்டம் அழைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 

“அக்குரேகொட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இன்று சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு கூடியது. 

இது முழு சட்டத்தரணிகள் சமூகத்தையும் பாதிக்கும் ஒரு சம்பவமாகும். இது எமது நிறைவேற்றுக் குழுவினால் மட்டும் தீர்மானிக்கப்பட வேண்டிய விடயமல்ல. 

எனவே, நாளை மாலை 3.00 மணிக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களினதும் அவசரக் கூட்டத்தை அழைக்கின்றோம். 

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை அந்தப் பொதுக்கூட்டத்திலேயே தீர்மானிக்கப்படும். 

நாங்கள் 2012 ஆம் ஆண்டிற்குப் பின்னரே இவ்வாறானதொரு கூட்டத்தை கூட்டுகின்றோம். இறுதியாக முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் அந்தத் தண்டனைப் பிரேரணை பிரச்சினையின் போதே இவ்வாறான கூட்டம் கூட்டப்பட்டது. அதன் பின்னர் 14 வருடங்கள் கழித்தே நாம் இந்தக் கூட்டத்தை அழைக்கின்றோம்” என அவர் தெரிவித்தார்.

இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய கொலையாளிகள் வந்ததாக அடையாளம் காணப்பட்ட மோட்டார் காரின் இலக்கத் தகட்டை பொலிஸார் கண்டறிந்துள்ளனர். அந்த இலக்கத் தகட்டிற்குரிய மோட்டார் கார் தொடர்பில் ஏதேனும் தகவல் இருந்தால் தலங்கம பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு சட்டத்தரணியும் அவரது மனைவியும் உயிரிழந்துள்ளனர். இந்த இரட்டைக் கொலை தொடர்பிலான விசாரணைகளுக்காக பொலிஸ் மா அதிபரால் 10 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மனைவியை உயிரோடு எரித்து சாம்பலாக்கிய கொடூர கணவன்!

குடும்பத் தகராறு முற்றியதில் ஏற்பட்ட சம்பவமொன்றில், கணவன் தனது மனைவியை தீ வைத்து எரித்துக் கொலை செய்துள்ளார். 

பரசன்கஸ்வெவ, மெதகம பகுதியில் நேற்று (13) இந்த கொடூரக் குற்றம் இடம்பெற்றுள்ளது. 

இவ்வாறு உயிரிழந்தவர் பரசன்கஸ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது. 

பரசன்கஸ்வெவ பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், குடும்பத் தகராறு காரணமாகவே கணவன் இந்தக் கொலையைச் செய்துள்ளமை அதில் தெரியவந்துள்ளது. 

சந்தேக நபரைக் கைது செய்வதற்காக பரசன்கஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

புயல் நிவாரண நிதியை அரசிடம் ஒப்படைத்த இரு முதியவர்கள்!

அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு வழங்கப்பட்ட தலா 5 இலட்சம் ரூபாய் நட்டஈட்டுத் தொகையை, தங்களை விட அதிகப் பாதிப்புக்குள்ளான மக்களுக்குப் பயன்படுத்துமாறு கூறி இரு முதியவர்கள் அரசிடம் மீள ஒப்படைத்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் இலங்கையின் மகவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

உன்னத நோக்கம் கொண்ட முதியவர்கள்

மகவ பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மாகடுவாவ பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய எச்.எம்.ஏ. ரன்பண்டா மற்றும் மானிங்கமுவ பகுதியைச் சேர்ந்த 82 வயதுடைய ஆர்.ஐ.பி. டிங்கிரி அம்மா ஆகியோரே இந்த உன்னதமான செயலைச் செய்தவர்களாவர்.

சுழற்காற்று காரணமாக இவர்களது சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்காக மதிப்பிடப்பட்ட தலா 5 இலட்சம் ரூபாய் (மொத்தம் 10 இலட்சம்) நட்டஈட்டுத் தொகையைத் தங்களுக்கு வேண்டாம் எனவும், அதனை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட அனாதரவான மக்களுக்குப் பயன்படுத்துமாறும் கோரி இவர்கள் பிரதேச செயலாளருக்குக் கடிதம் மூலம் அறிவித்துள்ளனர்.

“அரசு பணம் என்பது மக்கள் பணம்”

தங்களது இந்தத் தீர்மானத்திற்கான காரணத்தை விளக்கிய ரன்பண்டா, தமக்கு ஏற்பட்ட சேதத்தை விடவும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மக்கள் சமூகத்தில் இருப்பதைச் சுட்டிக்காட்டினார். “என்னை விட வசதியற்றவர்கள் பலர் உள்ளனர். இந்த அனர்த்தத்தால் எனக்குப் பாதிப்பு ஏற்பட்டது உண்மைதான், ஆனால் என்னால் இன்னும் மீண்டும் எழுந்து நிற்கும் சக்தி இருக்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், “இந்த அனர்த்தத்தால் முழு வாழ்வாதாரத்தையும் இழந்து, உணவிற்குக் கூட வழியின்றித் தவிக்கும் மக்களை நான் கண்டேன். அரசாங்கத்தின் பணம் என்பது மக்களின் பணம். எனவே, இந்தப் பணம் என்னை விட மிகவும் பாதிக்கப்பட்ட ஒருவருக்குச் சென்றால் நான் மகிழ்ச்சியடைவேன்” என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக வழங்கப்பட்ட 25,000 ரூபாவைக் கொண்டு சேதமடைந்த சில பகுதிகளைத் தாம் ஏற்கனவே சரிசெய்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூகத்திற்கான சிறந்த பாடம்

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த மகவ பிரதேச செயலாளர் நதுன் ஆர். சம்பத், நட்டஈடுகளைப் பெற்றுக்கொள்ள மக்கள் முண்டியடிக்கும் இக்காலத்தில், தங்களுக்குக் கிடைத்த தொகையைக்கூட மற்றவர்களுக்காகத் தியாகம் செய்த இவர்களின் செயல் முழுச் சமூகத்திற்கும் ஒரு சிறந்த பாடம் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்தத் தொகையானது உரிய அரச நடைமுறைகளுக்கு அமைய மீண்டும் அனர்த்த நிவாரணப் பணிகளுக்காகவே பயன்படுத்தப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

இந்த முதியவர்களின் செயல் மனிதாபிமானம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை உலகிற்கு உணர்த்தும் ஒரு உன்னத சான்றாக அமைந்துள்ளது.

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பதவியை இழந்தார் சுஹரா புகாரி!

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பதவியை இழந்தார் சுஹரா புகாரி!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் கொழும்பு மாநகர சபைக்குப் பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்த திருமதி முஹம்மது புகாரி பாத்திமா சுஹரா (Mrs. Mohamed Buhari Fathima Sohara), தனது உறுப்பினர் பதவியை இழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்ற கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்டத்தின் (Budget) போது, கட்சியின் தீர்மானத்தை மீறி ஆளும் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு அவர் ஆதரவாக வாக்களித்தார். இதன் காரணமாக அவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் வகித்த மாநகர சபை உறுப்பினர் பதவியும் வெற்றிடமானது.

உள்ளூராட்சி அதிகாரசபைகள் தேர்தல் கட்டளைச் சட்டத்தின் 10A(1)(a) பிரிவின் கீழ், கொழும்பு மாநகர சபையின் தெரிவத்தாட்சி அதிகாரி பியுமி அத்திகலவினால் (Piumi Attygalle) இதற்கான விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 2026 பெப்ரவரி மாதம் 09 ஆம் திகதியிடப்பட்ட 2475/05 இலக்க விசேட வர்த்தமானி மூலம், திருமதி சுஹரா புகாரி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினராக இல்லாது போனமையால், அவரது மாநகர சபை உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரவுடன் நேரடியாக மோதும் ஜீவன் தொண்டமான் எம்.பி!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நேற்று (11) நுவரெலியா மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்த போது, தலவாக்கலை மத்தாகலை தோட்டத் தொழிலாளர்களைச் சந்தித்து அவர்களுடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார். “நாடே ஒன்றாக” (Ratama Ekata) எனும் போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தில் கலந்துகொள்வதற்காக நுவரெலியா செல்லும் வழியில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

ஜனாதிபதியின் இந்த விஜயத்திற்கு மத்தியில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விவகாரத்தில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையின்றி செயற்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த ஜனவரி 30, 2026 அன்று அரசாங்கத்திற்கும் பிராந்திய தோட்ட நிறுவனங்களுக்கும் (RPCs) இடையில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தின்படி, தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை நாளாந்த சம்பளம் 1,350 ரூபாயிலிருந்து 1,550 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனுடன் 200 ரூபாய் வருகை ஊக்கத்தொகையும் சேர்த்து, மொத்த நாளாந்த சம்பளம் 1,750 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பில் 200 ரூபாயை தோட்ட நிறுவனங்களும், எஞ்சிய 200 ரூபாயை அரசாங்கமும் நிதி உதவியாக வழங்கவுள்ளன.

இந்தச் சம்பள உயர்வு குறித்து கருத்து தெரிவித்த ஜீவன் தொண்டமான், தான் சம்பள உயர்வுக்கு எதிரானவர் அல்ல என்றும், ஆனால் அரசாங்கம் முன்னர் உறுதியளித்த தொகையை வழங்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

“ஆரம்பத்தில் 2,138 ரூபாய் அடிப்படைச் சம்பளம் தருவதாக அரசாங்கம் உறுதியளித்தது. ஆனால் இப்போது அதனை 1,750 ரூபாயாகக் குறைத்துள்ளது. பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், தொழிலாளர்களுக்கு அந்த 2,138 ரூபாய் அவசியமில்லையா?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தின் நம்பகத்தன்மை குறித்துப் பேசிய தொண்டமான் முக்கிய விடயங்களை முன்வைத்தார்,

சட்ட வலுவற்ற ஒப்பந்தம்: அரசாங்கத்திற்கும் தோட்ட நிறுவனங்களுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) சட்டப்பூர்வமாக செல்லுபடியாகாது எனக் கூறப்படுவதை அவர் சாடியுள்ளார். வர்த்தமானி அறிவித்தல் இன்றி பொதுப் பணத்தைச் செலவழிப்பதில் எவ்விதப் பொறுப்புக்கூறலும் இல்லை என அவர் தெரிவித்தார்.

பணிக்கொடை (Gratuity) சிக்கல்: பணிக்கொடை பெறுவதற்கு ஒரு தொழிலாளி வருடத்தில் 180 நாட்கள் கட்டாயம் வேலை செய்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை குறித்து அவர் கவலை வெளியிட்டார்.

தொழிலாளர் சுரண்டல்: பல நிறுவனங்கள் தொழிலாளர்களைப் பதிவு செய்யாமல் வைத்திருப்பதன் மூலம் அவர்களுக்கு EPF, ETF மற்றும் மகப்பேறு சலுகைகளை மறுப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

நிறுவனங்களின் நஷ்டக் கணக்கு ஒரு பொய்யா?

தோட்ட நிறுவனங்கள் கடந்த 20 ஆண்டுகளாக நஷ்டம் அடைவதாகக் கூறுவதை ஜீவன் தொண்டமான் முற்றாக நிராகரித்தார். “நஷ்டம் அடையும் எந்தவொரு நிறுவனமும் தர்ம ஸ்தாபனம் போல தசாப்தங்களாக இயங்காது. நஷ்டம் ஏற்பட்டால் ஏன் அவர்கள் இன்னும் எஸ்டேட்டுகளை வைத்திருக்கிறார்கள்?” எனக் கேள்வி எழுப்பிய அவர், நஷ்டம் அடையும் நிறுவனங்களுக்குப் பொதுப் பணத்தை மானியமாக வழங்குவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த ஒப்பந்தத்தின் முழுமையான பிரதியை நாடாளுமன்றத்திலோ அல்லது பொதுமக்களிடமோ சமர்ப்பிக்க அரசாங்கம் தயங்குவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

வங்கதேசத்தில் வரலாற்று சிறப்புமிக்க பொதுத்தேர்தல் இன்று!

வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தால் ஷேக் ஹசீனாவின் 15 ஆண்டு கால ஆட்சி கவிழ்ந்தபின், முதல் முறையாக இன்று பொதுத்தேர்தல் தொடங்கியது.

வங்கதேசத்தில் கடந்த 2024 ஜூலையில் அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பெரும் வன்முறை வெடித்தது. இதைத் தொடர்ந்து, பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு நிர்வாக பொறுப்பேற்றது.

இந்நிலையில், மாணவர்கள் எழுச்சிக்குப் பிறகு முதல் முறையாக இன்று வங்கதேசத்தில் பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது.

இதில், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேசம் தேசியவாத கட்சி (பிஎன்பி) கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

மேலும், இக்கட்சி 11 கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திக்கிறது. இதை எதிர்த்து இஸ்லாமிய ஜமாத் இ இஸ்லாமி கட்சி போட்டியிடுகிறது. கடந்த டிசம்பரில் மறைந்த முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகனான தாரிக் ரஹ்மான் 17 ஆண்டுகள் வெளிநாட்டில் தஞ்சமடைந்து இருந்த நிலையில், ஹசீனா ஆட்சி கவிழ்ப்புக்கு பிறகு சமீபத்தில்தான் நாடு திரும்பினார்.

அந்த வகையில் ஷேக் ஹசீனாவின் பதவி நீக்கத்திற்குப் பிறகு வங்கதேசம் அதன் எதிர்காலத்தை தீர்மானிக்கும் நிலையில், இன்றைய தேர்தலில் மக்கள் தமது வாக்குப்பதிவை மேற்கொண்டு வருகின்றனர்.

புத்தளம் எருக்கலம்பிட்டி ரயில் நிலையப் பணிகள் துரிதம்!

‘டித்வா’ புயலினால் ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தினால் கொழும்பு முதல் புத்தளம் வரையிலான ரயில் சேவைகள் முடக்கப்பட்டிருந்த நிலையில் எதிர்வரும் தினங்களில் ரயில் சேவை மீண்டும் வழமைக்குக் கொண்டுவரப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த காலங்களில் நாட்டைத் தாக்கிய ‘டித்வா’ புயல் காரணமாக இலங்கையின் பல பாகங்களிலும் ரயில் பாதைகள் கடுமையாக சேதமடைந்திருந்தன. இதில் நீர்கொழும்பிலிருந்து புத்தளம் வரையான ரயில் பாதை மிக மோசமான பாதிப்புக்குள்ளானது.

குறிப்பாக, பத்துளுஓயா பாலத்திற்கு அண்மித்த பகுதியில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக சுமார் 200 அடிக்கும் அதிகமான ரயில் பாதை முற்றாக அடித்துச் செல்லப்பட்டு, போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டிருந்தது.

ரயில்வே திணைக்களத்தின் பாதை பராமரிப்புப் பிரிவினர் கடந்த சில வாரங்களாக இந்தப் பாதையை சீரமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்:

இதன் முதற்கட்டமாக மஹவெவ பகுதியில் ஏற்பட்ட சேதங்கள் சரி செய்யப்பட்டு, கடந்த சில நாட்களாக சிலாபம் வரை ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இயக்கப்பட்டன.

அந்த வகையில் பதுலு ஓயா பகுதியில் வெகுவாக சேதமடைந்த ரயில் பாதை சீரமைக்கப்பட்டுள்ளதுடன், புத்தளம் தில்லையடி பகுதியிலும், புத்தளம் எருக்கலம்பிட்டி பகுதியிலும் சேதமடைந்த ரயில் பாதைகளை சீரமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

புத்தளம் தில்லையடி பகுதியின் ரயில் பாதை சீரமைக்கும் பணிகள் நிறைவுபெற்று வருகின்ற நிலையில், புத்தளம் எருக்கலம்பிட்டி ரயில் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்கும் பணிகள் இன்று முதல் வேகமாக இடம்பெற்று வருகின்றன.

புத்தளம் எருக்கலம்பிட்டி ரயில் நிலையத்தின் சீரமைப்பு பணிகள் நிறைவடைய சில தினங்கள் தேவைப்படும் நிலையில், எதிர்வரும் 16ஆம் திகதிகளில் புத்தளம்-கொழும்பு ரயில் சேவையை மீள ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மகுடத்தை தனதாக்கியது நரக்கள்ளி சென். செபஸ்டியன் இல்லம்!

(அரபாத் பஹர்தீன்)

நரக்கள்ளி ரோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலயத்தின் சம்பியன் மகுடத்தை தனதாக்கியது சென். செபஸ்டியன் இல்லம்

கல்பிட்டி கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட நரக்கள்ளி ரோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலயத்தின் நடப்பு ஆண்டிற்கான இல்ல விளையாட்டுப் போட்டியில் 458 புள்ளிகளைப் பெற்ற சென். செபஸ்டியன் இல்லம் சம்பியன் மகுடத்தை தனதாக்கியது.

சுமார் 320 மாணவர்களைக் கொண்ட நரக்கள்ளி ரோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலயத்தின் 2026 ஆம் வருடத்திற்கான இல்ல விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஜனவரி மாதம் 19ஆம் திகதி வீதியோட்ட (மரதன்) நிகழ்வுடன் ஆரம்பித்திருந்தது. இவ் இல்ல விளையாட்டுப் போட்டியில் சென். செபஸ்டியன் மற்றும் சென். அந்தோனிஸ் ஆகிய இரு இல்லங்கள் பலப்பரீட்சை நடாத்தின.

அத்துடன் கல்பிட்டிக் கோட்டப் பிரிவில் இல்ல விளையாட்டுப் போட்டிகளில் கடினப்பந்து (Hardball cricket) போட்டி இடம்பெறும் ஒரே பாடசாலையாகவும் நரக்கள்ளி ரோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலயம் திகழ்கின்றமை சிறப்பம்சமாகும்.

அந்த வகையில் குறித்த இல்ல விளையாட்டுப் போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வு நேற்று (11) பாடசாலை அதிபர் அமல்ராஜ் தலைமையில் பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகியது.

நேற்றைய இறுதிநாள் நிகழ்வில் மாணவர் அணிநடை, குறுந்தூர ஓட்டங்கள், அஞ்சல் ஓட்டங்கள் மற்றும் இல்ல அலங்காரம் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் மாணவிகளின் உடற்பயிற்சிக் கண்காட்சி நடனமும் இடம்பெற்றிருந்தது.

இந்த சிறப்புமிக்க நடப்பாண்டின் இல்ல விளையாட்டுப் போட்டியின் முடிவில் மொத்தமாக 458 புள்ளிகளைப் பெற்ற சென். செபாஸ்டியன் இல்லம் நடப்பாண்டின் சம்பியன் மகுடத்தை தனதாக்கி அசத்தியது. விட்டுக் கொடுப்பின்றி போட்டியிட்ட சென். அந்தோணிஸ் இல்லம் 438 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டது.

இந்நிகழ்வுக்கு சிறப்பு அதீதிகளாக புத்தள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்.டி.எம். தாஹிர், கல்பிட்டி கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஜவாத், நுரைச்சோலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, செனெக் நிறுவன முகாமையாளர், லக்விஜய அனல்மின் நிலைய அதிகாரிகள், கல்பிட்டி கோட்ட ஆசிரிய ஆலோசகர்கள், கல்பிட்டிக் கோட்ட பாடசாலைகளின் அதிபர்கள், பிரதேச மதகுருமார்கள் பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் என பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.