Tuesday, May 5, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 109

காஸா பூமியின் தற்போதைய முழு கல நிலவரம் இதோ!

இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்குக் கரையிலிருந்தும், இரண்டு ஆண்டுகளாக காசா மீது போர் தொடுத்து வரும் காசாவிலிருந்தும் இஸ்ரேலால் அழைத்துச் செல்லப்பட்ட சுமார் 2,000 அரசியல் கைதிகள் மற்றும் வலுக்கட்டாயமாக இழுத்துச்செல்லப்பட்ட மக்களின் விடுதலைக்காக நேற்று திங்கட்கிழமை ரமல்லாவில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் ஒன்றுகூடினர்.

பாலஸ்தீனியர்கள் 96 அரசியல் கைதிகளையும், போரின் போது காசாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெரும்பாலான மக்களையும் வரவேற்றனர்.

இது காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 உயிருள்ள மற்றும் 28 இறந்த இஸ்ரேலிய கைதிகளை விடுவித்து சுமார் 2,000 பாலஸ்தீனிய கைதிகளை பரிமாறிக்கொள்வதன் ஒரு பகுதியாகும்.

அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸால் கைப்பற்றப்பட்ட 200 க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய கைதிகளில், மொத்தம் 114 பேர் முறையே நவம்பர் 2023 மற்றும் ஜனவரி 2025 இல் ஹமாஸுடன் இரண்டு கைதி பரிமாற்றங்களின் போது விடுவிக்கப்பட்டனர்.

மொத்தம் 1,240 பாலஸ்தீனியர்களின் விடுதலைக்கு ஈடாக அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.

இருந்தபோதிலும், இஸ்ரேல் அந்த கைதிகள் விடுவிக்கப்பட்டவுடன் ஒத்துப்போகும் போர்நிறுத்தங்களை மீறி, காசா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசம் முழுவதும் பாலஸ்தீனியர்களை மொத்தமாக கைது செய்தது.

போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் பாலஸ்தீனியர்கள் மற்றும் ஒப்பந்தத்தில் சேர்க்கப்படாதவர்கள் மற்றும் சிறைபிடிக்கப்பட்டிருப்பவர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் ஆயுள் தண்டனை அல்லது நீண்ட சிறைத்தண்டனை அனுபவித்து வந்த 250 பாலஸ்தீன அரசியல் கைதிகள் இஸ்ரேலிய சிறைகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

அல் ஜசீரா தரவுகளின்படி, இந்த கைதிகளில் ஒன்பது பேரைத் தவிர மற்ற அனைவரும் மேற்குக் கரையைச் சேர்ந்தவர்கள், அவர்களில் 157 பேர் மேற்குக் கரையின் சில பகுதிகளை நிர்வகிக்கும் பாலஸ்தீன அதிகாரசபையைக் கட்டுப்படுத்தும் கட்சியான ஃபத்தாவைச் சேர்ந்தவர்கள்.

காசா மீதான இனப்படுகொலைப் போரின்போது கடந்த இரண்டு ஆண்டுகளில் இஸ்ரேலால் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்ட 1,718 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுவிக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

அவர்களில் ஐந்து பேர் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள், இரண்டு பேர் பெண்கள்.

காசாவிலிருந்து காணாமல் போனவர்களில் பெரும்பாலோர் இராணுவ முகாம்களில் அடைக்கப்பட்டனர், அங்கு மனிதாபிமானமற்ற தன்மை மற்றும் சித்திரவதை பரவலாக இருந்தது என்று சர்வதேச மற்றும் இஸ்ரேலிய மற்றும் பாலஸ்தீனிய மனித உரிமைகள் குழுக்கள் தெரிவிக்கின்றன.

பாலஸ்தீனியர்கள் கடுமையாக அடித்து துன்புறுத்தப்பட்டிருந்ததுடன், மருத்துவ புறக்கணிப்பு, பட்டினி மற்றும் பாலியல் பலாத்காரத்திற்கும் ஆளானதாகக் கூறப்படுகிறது.

பாலஸ்தீன கைதிகள் சங்கத்தின் கூற்றுப்படி, அக்டோபர் 7 முதல் 77 கைதிகள் இஸ்ரேலிய காவலில் இறந்துள்ளனர்.

அரசியல் கைதிகளைக் கண்காணிக்கும் பாலஸ்தீன மனித உரிமைகள் அமைப்பான அடமீரின் கூற்றுப்படி, அக்டோபர் 7, 2023 முதல் இஸ்ரேலால் சிறை பிடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,200 லிருந்து 11,100 ஆக அதிகரித்துள்ளது.

இந்த கைதிகளில் பெரும்பாலோர் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையைச் சேர்ந்தவர்கள் – அவர்களில் 400 குழந்தைகளும் அடங்குகின்றது.

பாலஸ்தீன மனித உரிமைகள் குழுவான அல்-ஹக்கைச் சேர்ந்த மனித உரிமை ஆராய்ச்சியாளரான முராத் ஜதல்லா அல் ஜசீராவிடம் தெரிவிக்கையில்:

“இஸ்ரேல் பாலஸ்தீன சமூகத்தை பல்வேறு வழிகளில் அழிக்க முயற்சிக்கிறது, மேலும் குழந்தைகளைக் கைது செய்வது அதற்குப் பயன்படுத்தும் கருவிகளில் ஒன்றாகும்.” என தெரிவித்தார்.

இஸ்ரேல் சிறைபிடித்த பாலஸ்தீனியர்கள் விடுவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே மீண்டும் அவர்களை கைது செய்ய முனைகிறது என்று ஐரோப்பிய வெளியுறவு கவுன்சிலுடன் (ECFR) இஸ்ரேல்-பாலஸ்தீனம் குறித்த நிபுணர் தஹானி முஸ்தபா கூறினார்.

நவம்பர் 2023 இல், தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக காசாவில் ஹமாஸால் பிடிக்கப்பட்ட இஸ்ரேலிய கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேல் 240 பாலஸ்தீன கைதிகளை விடுவித்தது.

சில வாரங்களுக்குப் பிறகு, இஸ்ரேல் அவர்களில் 30 பேரை மீண்டும் கைது செய்தது.

“சிறைவாசம் மற்றும் கைதுகளை ஒரு அரசியல் ஆயுதமாக இஸ்ரேல் பயன்படுத்துவதில் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது, சில சமயங்களில் அது பிற்காலத்தில் பேரம் பேசுவதற்கான நோக்கங்களுக்காக இருக்கலாம்” என்று முஸ்தபா அல் ஜசீராவிடம் கூறினார்.

“[இந்த தற்போதைய ஒப்பந்தத்தின் மூலம்] விடுவிக்கப்படுபவர்கள் மீண்டும் கைது செய்யப்பட மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை,” என்று அவர் மேலும் கூறினார்.

250 உயர்மட்ட அரசியல் கைதிகளில் 96 பேர் மேற்குக் கரை மற்றும் காசாவிற்கு விடுவிக்கப்பட்டாலும், அவர்களில் சுமார் 154 பேர் பாலஸ்தீனத்திலிருந்து ஏனைய நாடுகளுக்கு நாடு கடத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பங்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் விடுதலையைக் கொண்டாடவோ அல்லது ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் பாலஸ்தீனக் கொடிகளை உயர்த்தவோ கூடாது என்று இஸ்ரேல் கட்டளையிட்டுள்ளது.

நாடுகடத்தப்படும் கைதிகளின் குடும்பங்கள், நாடுகடத்தப்பட்ட நாட்டில் அவர்களைச் சந்திக்க வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடுக்க வாய்ப்புள்ளது என தெரியவந்துள்ளது.

மேலும் டிசம்பர் 2024 இல் வடக்கு காசாவில் உள்ள கமெல் அட்வான் மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட புகழ்பெற்ற பாலஸ்தீன மருத்துவர் ஹுசாம் அபு சஃபியா, விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் கைதிகளின் பட்டியலில் இடம்பெறவில்லை.

மனித உரிமை கண்காணிப்பாளர்களின் கூற்றுப்படி, அபு சஃபியா கடுமையான சித்திரவதை மற்றும் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட 45 பேர் கைது!

0

இலங்கை கடற்படையினர், மீன்வளம் நீர்வளத் துறை மற்றும் யாழ்ப்பாண சிறப்புப் படையுடன் இணைந்து, கடந்த பதினைந்து நாட்களில் சட்ட விரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட பலர் கைதுசெய்யப்பட்டனர்.

கடந்த செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 07 வரை நாட்டின் கடல் எல்லைப்பகுதிகளில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மூலம் மற்றும் வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட, உரிமங்கள் இல்லாமல் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட மற்றும் சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நாற்பத்தைந்து (45) சந்தேக நபர்கள் இவ்வாறு கைதுசெய்யப்பட்டனர்.

மேலும் இதனுடன் தொடர்புபட்ட பதினொரு (11) டிங்கி படகுகள், கெப் ரக வண்டியொன்றும் (01) இரண்டு (02) பல நாள் மீன்பிடி படகுகள் என்பன கைப்பற்றப்பட்டன.

அதன்படி, யாழ்ப்பாண நகர எல்லைகள் மற்றும் திருகோணமலை மலைமுந்தல், கொக்குத்துடுவாய், போல்டர் முனை, கோகிலாய், கதிரவேலி முனை, புடுவகட்டு, பாவுல் முனை, ஓட்டமாவடி, பிளான்டன் முனை, கல்குடா, கல்லராவ ஆகிய கடற்கரைகள் மற்றும் கடற்பரப்புகளை உள்ளடக்கிய, வடக்கு மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைகளால் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கைகளில் மீன்பிடி படகுகள், ஒரு கெப் வண்டி மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

மேலும், இந்த நடவடிக்கைகளில் பிடிபட்ட சந்தேக நபர்கள், தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள், மீன்பிடி படகுகள் மற்றும் கெப் வண்டி ஆகியவை கிண்ணியா, முல்லைத்தீவு, குச்சவெளி, லங்காபட்டுன, கோட்பே மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் உள்ள மீன்வள மற்றும் நீர்வளத் துறை அலுவலகங்களில் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டன.

கிளிநொச்சியில் நவீன முறையில் நாற்றுநடுகை!

நவீன முறையில் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்க ஊக்குவித்து, விவசாயிகள் உச்ச பயனை அடையும் செயற்பாடுகளில் ஒன்றான இயந்திர நாற்றுநடுகை கிளிநொச்சி பிரதி மாகாண விவசாயத்திணைக்களத்தினால் நேற்றைய தினம் யூனியன் குளம் பகுதியில் நடுகை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பகுதிக்கு பொறுப்பான விவசாய போதனாசிரியர் தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் வி.சோதிலட்சுமி, பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.

குறித்த பகுதியில் 40 ஏக்கர் வரை இயந்திர நாற்று நடுகை மூலம் செய்கை மேற்கொள்வதற்கு விவசாயிகள் முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெடிக்காத நிலையில் கை குண்டு மீட்பு!

வெடிக்காத நிலையில் கை குண்டு இனம் காணப்பட்டுள்ளது

தர்மபுரம் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட தர்மபுரம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் நேற்று 13.10.2025 வெடிக்காத நிலையில் கை குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த தனியார் காணியினை துப்புரவு செய்துக்கொண்டிருந்த பொழுது வெடிக்காத நிலையில் கை குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக தருமபுர போலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன் சம்பவ இடத்துக்கு விரைந்த தர்மபுரம் போலீசார் இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி நீதிமன்ற அனுமதியின் பின்னர் அப்பகுதியில் இருந்து குண்டினை பாதுகாப்பாக அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர்.

ஆராச்சிகட்டுவ பகுதியில் பிடிபட்ட ஐஸ் போதைப்பொருள்!

0

ஜூட் சமந்த

1694 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஆண் மற்றும் பெண் ஒருவர் ஆராச்சிகட்டுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க சிலாபம் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ஆராச்சிகட்டுவ பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து ஐஸ் போதைப்பொருள் கடத்தப்படுவதாக ஆராச்சிகட்டுவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவரிடமிருந்து 1584 கிராம் ஐஸ் போதைப்பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர். இந்த ஐஸ் தொகை தலா 396 கிராம் கொண்ட 04 பார்சல்களில் பொதி செய்யப்பட்டிருந்தது.

31 வயதான சந்தேக நபர் ஒருவர் மருதானை – இரண்டாம் பாதையில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த சந்தேக நபர் ஆராச்சிகட்டுவ பகுதிக்கு போதைப்பொருள் கொண்டு வருபவர் என்று நம்பப்படுவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சோதனை நடத்தப்பட்ட வீட்டை வாடகைக்கு எடுத்து தற்காலிகமாக வசித்து வந்த 53 வயதுடைய ஒரு பெண்ணையும் போலீசார் கைது செய்தனர்.

அவரிடமிருந்து 100 கிராம் ஐஸ் பறிமுதல் செய்யப்பட்டது. கோதட்டுவ – அம்பகஹா சந்தி வீதியைச் சேர்ந்த சந்தேக நபர், சமீபத்தில் ஆரச்சிகட்டுவ பகுதிக்கு தற்காலிகமாக குடிபெயர்ந்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் கோதட்டுவவிலிருந்து ஆரச்சிகட்டுவ பகுதிக்கு போதைப்பொருள் கடத்த சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட பின்னர் நோய்வாய்ப்பட்ட சந்தேக நபர், சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் சிகிச்சைக்காக சிலாபம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாகவில்லு பாடசாலையில் திறந்து வைக்கப்பட்ட 3 மாடிக்கட்டிடம்!

08 கோடியில்- மூன்று மாடி, பாடசாலைக்கட்டிடம் திறந்து வைப்பு

புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலத்திற்கு நீண்ட நாள் தேவையாக இருந்த மூன்று மாடி பாடசாலைக்கட்டிடம் இன்று (13) காலை பாடசாலையின் அதிபர் ஜனாப் SM ஹுசைமத் தலைமையில் இன்று திறந்து வைக்கப்பட்டது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் றிஷாட் பதியுதீன் அவர்களின் முயற்சியினால், சுமார் 08 கோடி ரூபா நிதியில் அமைக்கப்பட்ட இம் மூன்று மாடி கட்டிடத்தில், சுமார் 500ற்கும் மேற்பட்டவர்கள் அமருமளவான மண்டபம் உள்ளிட்ட வகுப்பறைகளைக்கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இம் மூன்று மாடிக் கட்டிடத்திற்கான வேலைத்திட்டம், பொருளாதார நெருக்கடி, ஆட்சி மாற்றங்கள் மற்றும் பல இன்னோரன்ன சவால்களைத்தாண்டி கட்டி முடிக்கப்பட்டு இன்று வெகு விமர்சையாக திறந்துவைக்கப்பட்டது.

குறித்த கட்டிடத்திற்கான வேலைத்திட்டம் பொருளாதார நெருக்கடி மற்றும் ஆட்சி மாற்றம் காரணமாக இடை நடுவே கைவிடப்பட்டிருந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் விஷேட நிதி ஒதுக்கீட்டின் மூலமே நிர்மாணப்பணிகள் நிறைவுபெற்றன.

உள்நாட்டு யுத்தம் காரணமாக புத்தளம் பகுதிக்கு இடம்பெயர்ந்த வட மாகாண மக்கள் கல்வி மீதுகொண்ட ஆர்வத்தையும், அவர்களின் பெண் பிள்ளைகள் கல்விக்காக செயற்பட்ட விதத்தையும் பார்த்தே புத்தளத்தில் உள்ள ஏனைய பெண் பிள்ளைகளும் கல்வியில் சாதிக்க முன்வந்தார்கள் என புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மது பைசல் தனது உரையில் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் சேவைகளை வெகுவாக பாராட்டிப் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் பைசல், ஆரம்ப காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் அரசியல் செயற்பாட்டுக்கு புத்தளத்தில் தாம் முன் நின்று பாடுபட்டதாகவும் நினைவுகூர்ந்தார்.

புத்தளம் எருக்கலம்பிட்டி பாடசாலைக்கு மூன்று மாடிக் கட்டிடமே தேவை என அதற்கு அயராது பாடுபட்டு, அதனை செய்தி காட்டிய EPIO அமைப்பிற்கு தனது பாராட்டுக்களை தெரிவிப்பதாக நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பேசிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் மர்ஹூம் அல்ஹாஜ் நூர்தீன் மஷூர் அவர்களுக்கும் தனக்கும் இரு வேறு அரசியல் பாதைகள் இருந்தாலும், ஊர் மக்களுக்கான அபிவிருத்தி விடயங்களில் தாம் இருவரும் ஒரே கொள்கைகளை கொண்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.

அரசியல் ரீதியாக தங்களுக்கிடையில் கருத்து முரண்பாடுகள் இருந்தாலும், தனிப்பட்ட ரீதியில் ஒரு சிறந்த உறவு இருந்ததாகக் கூறிய பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் ரிஷாட் பதியுதீன், முன்னாள் அமைச்சர் மர்ஹூம் அல்ஹாஜ் நூர்தீன் மஷூர் அவர்கள் வன்னி மக்களுக்கு செய்த சேவைகளை நினைவுகூர்ந்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்நிகழ்வுக்கு, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஹமம்து பைஷல், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் புத்தளம் மாவட்ட மக்கள் காங்கிரஸ் அமைப்பாளருமான தாஹீர், புத்தளம் பிரதேச சபையின் தவிசாளர் ரதிக மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், புத்தளம் கல்வி வலய அதிகாரிகள் உள்ளிட்டவர்களுடன் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு, மாணவர்கள், மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

மகனை கொல்ல துப்பாக்கியை நீட்டிய தந்தை கைது!

0

ஜூட் சமந்த

தனது மகனை சுட்டுக் கொல்ல முயன்றதாக சந்தேக நபர் ஒருவர் ஆரச்சிகட்டுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆரச்சிகட்டுவ – அத்தங்கனை பகுதியில் இன்று 12 ஆம் திகதி மதியம் குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

தொடுவாவ பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய ஒருவரே இவ்வாறு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கல்கட்டஸ் வகை துப்பாக்கி மற்றும் 12 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டன.

சந்தேக நபர் தனது குழந்தை மற்றும் மனைவியை விட்டுவிட்டு தொடுவாவ பகுதியில் வேறொரு பெண்ணுடன் வசித்து வந்தார். பல வருடம் கழித்து ஆரச்சிகட்டுவ – அத்தங்கனைக்குத் திரும்பிய சந்தேக நபர், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மீண்டும் வாழ விரும்புவதாகக் கூறியுள்ளார். 4 வயதில் தன்னையும் தாயையும் விட்டுச் சென்ற தனது தந்தையை 31 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பி வருவதை குழந்தை விரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்ட வாய்தர்க்கத்தினால் மகனை சுட்டுக் கொல்ல முயன்றதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

ஆரச்சிகட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குவைத் வேலைக்கு ஹோட்டலில் நேர்காணல் செய்தவர் கைது!

0

ஜூட் சமந்த

குவைத்தில் வேலை பெற்றுத்தருவதாக கூறி குருநாகலில் உள்ள ஒரு ஹோட்டலில் நேர்காணல்களை நடத்தி வந்த ஒரு சந்தேக நபர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று 11 ஆம் தேதி இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபரை சோதனை செய்த அதிகாரிகள் 03 வெளிநாட்டு பாஸ்போர்ட்கள், வேலைக்கான விண்ணப்ப படிவங்கள் மற்றும் பல ஆவணங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

சந்தேக நபரிடம் வெளிநாட்டு வேலைகளை வழங்குவதற்கான பதிவு செய்யப்பட்ட உரிமம் இல்லை என்று சந்தேக நபரை சோதனை செய்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர் குருநாகலில் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

இதற்கிடையில், துபாயில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை வழங்குவதாக கூறி ரூ. 80,000 மோசடி செய்த ஒரு பெண்ணையும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 24 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கிரிபத்கொடையைச் சேர்ந்த ஒரு பெண் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் காவல்துறையினரிடம் அளித்த புகாரைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

நாகவில்லு பாடசாலைக்கு ஐகொனிக் அமைப்பின் சூப்பர் திட்டம்!

புத்தளம் எருக்கலம்பிட்டி பாடசாலையின் பிரதான மண்டபத்தின் உள்ளக கட்டமைப்பே புனரமைப்பு செய்து, உயர் தரத்திலான டிஜிட்டல் சவுண்ட் சிஸ்டம் (DIGITAL SOUND SPEAKER SYSTEM) வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று 12.10.2025 புத்தளம் எருக்கலம்பிட்டி பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

எருக்கலம்பிட்டி ஐகொனிக் நண்பர்கள் அமைப்பின் (ICONIC FRIENDS ASSOCIATION-ERUKKALAMPISSY) பூரண அனுசரணையில் பாடசாலையின் பிரதான மண்டபத்தின் உள்ளக கட்டமைப்பே புனரமைப்பு செய்து, உயர் தரத்திலான டிஜிட்டல் சவுண்ட் சிஸ்டம் (DIGITAL SOUND SPEAKER SYSTEM) அமைப்பின் தலைவர் ஜனாப் அரூஸ் அவர்களின் தலைமையில் இன்று மாலை மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

ஐகொனிக் நண்பர்கள் அமைப்பின் கடந்த கால செயற்பாடுகள் மற்றும் தொலை நோக்கு குறித்து அமைப்பின் செயலாளர் ஜனாப் NM நளீம் விரிவாக குறிப்பிட்டார்.

சுமார் ஒரு மில்லியன் செலவில் செய்துமுடிக்கப்பட்ட குறித்த திட்டம், இப்பாடசாலைக்கு மிக முக்கியமானதும் தேவையானதுமாகவும் இருந்ததாக பாடசாலையின் அதிபர் ஜனாப் SM ஹுசைமத் அவர்கள் தனது விஷேட உரையில் தெரிவித்தார்.

மேலும் இவ்வாறான பல சேவைகளை மன்/எருக்கலம்பிட்டி மற்றும் புத்/எருக்கலம்பிட்டி ஆகிய இரு பிரதேசங்களிலும் செய்துவரும் ஐகொனிக் நண்பர்கள் அமைப்பிற்கு பாடசாலை சமூகம் சார்பாக தனது நன்றிகளை தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பாடசாலை மாணவர்களின் மேடை நிகழ்வும் இடம்பெற்றதுடன் ஐகொனிக் நண்பர்கள் அமைப்பிற்கு அவர்களின் பாடசாலை காலத்தில் கல்வி கற்றுக்கொடுத்த ஆசிரியர்களை கெளரவிக்கும் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது.

தமது பாடசாலை நாட்களை மீண்டும் ஒரு முறை மீட்டி, தமக்கு கல்வி கற்றுத்தந்த ஆசிரியர்களின் உயரிய சேவையை பாராட்டி அவர்களை கெளரவித்து நினைவுப்பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டமை அரங்கை அலங்கரித்தது.

நிகழ்வின் இறுதியில் டிஜிட்டல் சவுண்ட் சிஸ்டம் (DIGITAL SOUND SPEAKER SYSTEM) பாடசாலையின் அதிபர் ஜனாப் SM ஹுசைமத் அவர்களிடம் கையளிக்கப்பட்டதுடன், ஐகொனிக் நண்பர்கள் அமைப்பிற்கு அவர்களின் பாடசாலை காலத்தில் கல்வி கற்றுக்கொடுத்து தற்போது மண்ணறையில் வாழும் மர்ஹூம்களுக்காக விஷேட துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் உலமாக்கள், பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலைச் சமூகம், ஏனைய கழகத்தின் உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு ஆசை காட்டி 150 மில்லியன் ரூபாய் மோசடி!

0

ஜூட் சமந்தா

கனடா, ருமேனியா, போலந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 150 மில்லியன் ரூபாய்க்கு மேல் மோசடி செய்த குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் காவல்துறை பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கனடாவில் வசிக்கும் இலங்கை குடிமகன் ஒருவர், நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 150 மில்லியன் ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு புகார் வந்துள்ளது. இந்தப் புகாரின் பேரில், சந்தேக நபர் வெளிநாடு செல்வதைத் தடை செய்யும் நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவை திரும்பப் பெறலாம் என்று கூறி சந்தேக நபர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு அழைத்து வரப்பட்டு, கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையில், மாவனெல்ல பகுதியில் பதிவு இல்லாமல் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்த ஒருவரையும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக காவல் பிரிவு கைது செய்துள்ளது.

ருமேனியா, போலந்து மற்றும் ஜெர்மனியில் வேலைகளை வழங்குவதாகக் கூறி பேஸ்புக்கில் விளம்பரங்களை வெளியிட்டு மோசடி செய்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் 300,000 ரூபாய்க்கும் அதிகமான பணத்தை மோசடி செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கடுவெல மற்றும் மாவனெல்ல நீதவான் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.