826 பேர் கொண்ட ஒரு பெரிய தன்னார்வலர்கள் குழு 5 நாள் நடவடிக்கையைத் தொடங்குகியுள்ளது.
பதுளை மாவட்டத்தை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கத்துடன் மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த 826 பேர் கொண்ட ஒரு பெரிய குழு நேற்று (01) பதுளைக்கு வருகை தந்துள்ளது.
பதுளை மாவட்டத்தை பாதித்த பேரிடர் சூழ்நிலைக்குப் பிறகு இந்த சகோதரத்துவ மனித நேய செயற்பாடு மிகவும் வலுவான சகோதரத்துவத்தின் பங்களிப்பை நாட்டுக்கு எடுத்துக்காட்டியுள்ளது.
சேதமடைந்த பகுதிகளை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் வந்த இந்த குழுக்கள், அடுத்த 5 நாட்களுக்கு பதுளை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பல முக்கிய பகுதிகளுக்கு தன்னார்வ பங்களிப்புகளை வழங்க உள்ளன.
அதன்படி, இந்த நடவடிக்கை பதுளை, லுனுகல, பசறை, சொரணத்தோட்ட, கண்டகெட்டிய, நெகஹகிவுல, வெலிமட, ஊவா பரணகம மற்றும் ஹாலி கால்வாய் ஆகிய பகுதிகளில் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்திற்காக வந்த மாத்தறை குழுவினர், தங்கள் உழைப்பை மட்டுமல்லாமல், பேக்கோ இயந்திரங்கள், எஸ்கவேட்டர்கள், செயின்சாக்கள் மற்றும் தண்ணீர் பவுசர்கள் போன்ற அத்தியாவசிய இயந்திரங்களையும் கொண்டுவந்துள்ளதுடன், நிவாரண நடவடிக்கைகளை விரைவுபடுத்த எதிர்பார்த்துள்ளனர்.
அதற்கு மேலதிகமாக, தன்னார்வ குழுக்களுக்கு தேவையான அடிப்படை பராமரிப்பை வழங்கவும், தன்னார்வ குழுக்களின் சுகாதாரத்தை உறுதி செய்யவும், தேவையான பணித் திட்டத்தின்படி உபகரணங்களுடன் அவர்களை தேவையான பகுதிகளுக்கு கொண்டு செல்லவும் திட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.
மாத்தறையில் இருந்து வந்த இந்த மிகப்பெரிய நிவாரணக் குழு, ஒரு கடினமான சூழ்நிலையில் பதுளைக்கு அவர்கள் வழங்கும் மிகப்பெரிய ஒரு ஆதரவாக இது கருதப்படுவதுடன், பதுளை மக்கள் அவர்களின் அர்ப்பணிப்புக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
நாட்டில் ஏற்பட்ட டித்வா புயல் மற்றும் வெள்ள அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 390ஆக பதிவாகியுள்ளது.
இதேவேளை குறித்த அனர்த்தத்தில் சிக்கி காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 352ஆக உயர்வடைந்துள்ளது.
இன்று காலை 12.02.2025 அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் நாட்டில் ஏற்பட்ட மிக மோசமான இந்த அனர்த்தத்தினால் 3 லட்சத்து 82ஆயிரத்து 651 குடும்பங்களைச் சேர்ந்த 13 லட்சத்து 73ஆயிரத்து 899 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 432 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 15,688 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 57ஆயிரத்து 790 குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 4ஆயிரத்து 597 பேர் 1,368 இடைத்தங்கல் நிலையங்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளதுடன், இவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை அரசாங்கம் துரிதமாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு நன்கொடையாளர்களால் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களை சுங்க வரிகள் மற்றும் கட்டணங்கள் இன்றி இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் ஒரு பொறிமுறையை வகுத்துள்ளது.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை நன்கொடையாக வழங்குவதற்காக வெளிநாட்டு அமைப்புகள், தனிநபர்கள் மற்றும் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் விடுத்த வேண்டுகோள்களைக் கருத்தில் கொண்டே இந்த நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அவர்கள் நாட்டுக்கு அனுப்பும் பொருட்களின் உதவிகளை அனைத்து சுங்க வரிகள் மற்றும் கட்டணங்களில் இருந்து விடுவித்து விரைவாக விநியோகிப்பதற்காக இலகுவான நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நன்கொடைகள் தொடர்பான வழிகாட்டுதல்களுக்காக WWW.CUSTOMS.GOV.LK என்ற இணையத்தளத்தைப் பார்வையிடலாம்.
நன்கொடையாக வழங்கக்கூடிய அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பொருட்களின் வகைகள் பற்றிய விரிவான தகவல்களை WWW.DONATE.GOV.LK என்ற இணையத்தளத்தில் இருந்தும் பெற்றுக்கொள்ளலாம்.
வடக்கு மற்றும் தென் மாகாணங்களில் இன்று (2) இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
ஊவா, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் 2:00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அத்துடன் அம்பாறை மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் தொடர்பாக அறிவிக்கவும்
விலைகளைக் காட்சிப்படுத்தாமல், அதிக விலைக்கு காய்கறிகளை விற்பனை செய்து வந்த, குளியாப்பிட்டிய-கண்டி வீதியில், தெலியகொல்ல பகுதியிலுள்ள இரண்டு காய்கறிக் கடைகள் இன்று குருணாகல் மாவட்ட அதிகாரிகளால் சுற்றி வளைக்கப்பட்டன. எதிர்காலத்தில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் அவசரகால சூழ்நிலையில் சந்தையில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் தொடர்பான முறைப்பாடுகளை பின்வரும் தொலைபேசி எண்களுக்கு தெரிவிக்குமாறு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மத்திய மாகாணம் – 0771088918 மேல் மாகாணம் – 0770106603 வடமேல் மாகாணம் – 0771088902 சபரகமுவ மாகாணம் – 0771088912 ஊவா மாகாணம் – 0771088896 தென் மாகாணம் – 0771088915 வட மாகாணம் – 0771088910 வட மத்திய மாகாணம் – 0771088801 கிழக்கு மாகாணம் – 0770110096
மேலும், இந்த இக்கட்டான நேரத்தில் சந்தையில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மீது எதிர்காலத்தில்கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மேலும் வலியுறுத்தியுள்ளது.
அனர்த்தம் ஏற்பட்டு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ள இத்தருணத்தில் உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்புவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எஃப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களைப் பீதியடையச் செய்து குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செய்திகளைப் பரப்புவது தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் கணினி அவசர புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முப்படை பாதுகாப்புத் தலைமையகத்தில் இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யூ. வுட்லர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
அனர்த்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவும், நலன்களுக்காகவும் சேவைகளையும் விநியோகங்களையும் தொடர்ச்சியாகப் பேணுவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்ற நிலையில், சில நபர்கள் சமூக ஊடகங்கள் மூலம் உண்மைக்குப் புறம்பாக, உறுதிப்படுத்தப்படாத செய்திகளைப் பரப்பும் போக்கு காணப்படுவதாகவும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் குறிப்பிட்டார்.
பொதுமக்களைப் பீதியடையச் செய்யும் மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான அறிக்கைகளை வெளியிடுவதும், பிரசுரிப்பதும் மிகவும் தவறான செயல் என்றும், தவறான தகவல்களைச் சமூகமயமாக்குவது தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
இடைத் தங்கல் முகாம்கள் உட்பட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சில குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இலங்கையின் தண்டனைச் சட்டக் கோவையின்படி பாலியல் வன்புணர்வுகள், அத்துமீறல்கள், திருட்டு மற்றும் கொள்ளைச் செயல்களில் ஈடுபடும் எவருக்கும் எதிராகச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
அத்துடன், அரசாங்கத்தின் தலைமையில் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக முன்னெடுக்கப்படும் கூட்டு நடவடிக்கைக்கு அனைவரும் கௌரவமான பங்களிப்பை வழங்குவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இலங்கைக்கு வருகை தந்திருக்கும் வெளிநாட்டவர்களின் பாதுகாப்பிற்காகப் பொலிஸ் திணைக்களம் பல முக்கியமான மற்றும் துரிதமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
சுற்றுலாப் பயணிகள் தொடர்பான ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின், சுற்றுலாப் பொலிஸ் பிரிவின் பணிப்பாளருக்கு 0718591894, 0112421070 அல்லது 1912 அவசர அழைப்பு இலக்கத்திற்கு அல்லது விமான நிலையம் (சுற்றுலாப் பிரிவு) பொறுப்பதிகாரிக்கு 0718596057 அல்லது விமான நிலையப் பொறுப்பதிகாரிக்கு 0718591640 ஆகிய இலக்கங்களுக்கு அறிவிக்க முடியும்.
இவை தவிர, பொலிஸ் மாஅதிபரின் வழிகாட்டுதலின் பேரில், பொலிஸ் தலைமையகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் விசேட செயற்பாட்டு நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
0718595884, 0718595883, 0718595882, 0718595881, 0718595880 ஆகிய தொலைபேசி இலக்கங்களைத் தொடர்புகொண்டு பாதிக்கப்பட்ட நபர்கள் தொடர்பாகவும் அல்லது வேறு ஏதேனும் பிரச்சினைகள் தொடர்பாகவும் பொதுமக்களுக்கு அறிவிக்க முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அரசு மற்றும் தனியார் துறை பிரதிநிதிகளைக் கொண்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்தின் முகாமைத்துவக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அனர்த்த நிலைமைக்குப் பிறகு நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அனைவரின் பங்களிப்புடன் கூடிய நீண்டகால வலுவான நிதியம் – ஜனாதிபதி
இலங்கையின் சமீபத்திய வரலாற்றில் ஏற்பட்ட மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றான ‘தித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பெரும் சேதத்திற்குப் பிறகு நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்ட ‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்’ நிதியை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த நிதியம் ஜனாதிபதி செயலகத்தின் கீழ் ஒரு சட்டப்பூர்வ நிதியாக நிறுவப்பட உள்ளது, மேலும் அதன் மேலாண்மைக் குழுவில் அரசு மற்றும் தனியார் துறைகளின் பிரதிநிதிகள் இணைக்கப்பட்டுள்ளனர்.
தொழிலாளர் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான டாக்டர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ இதன் தலைவராகவும், ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ஜி.எம்.ஆர்.டி. அப்போன்சோ குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்ற உள்ளனர்.
நிதியை திறம்பட நிர்வகிக்க மேலாண்மைக் குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பொறுப்புகளில் தேவைகளை மதிப்பிடுதல், முன்னுரிமைகளை அமைத்தல், நிதி ஒதுக்கீடு செய்தல் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மீட்பு நடவடிக்கைகளுக்கு நிதி வழங்குதல் ஆகியவை இதில் அடங்கும்.
நிதி தொடர்பான அனைத்து நிதி நடவடிக்கைகளின் நிதி மேலாண்மை, தணிக்கை மற்றும் முழு வெளிப்படைத்தன்மையையும் இந்தக் குழு உறுதி செய்யும்.
⚫ வெளிநாட்டு முதலீட்டுக்கான ஜனாதிபதி சிறப்பு பிரதிநிதி, மேல் மாகாண ஆளுநர் ஹனிஃப் யூசுப், ⚫ நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹஷன சூரியப்பெரும, ⚫ ஜனாதிபதியின் மூத்த பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, ⚫ வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் சுகீஸ்வர குணவர்தன, ⚫ ஹெலிஸ் குழுமத்தின் தலைவர் மோகன் பண்டிதகே, ⚫ ஜோன் கீல்ஸ் தலைவர் கிரிஷான் பாலேந்திரன், ⚫ ஐட்கன் ஸ்பென்ஸின் துணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான டாக்டர் பராக்கிரம திசாநாயக்க, ⚫ பிராண்டெக்ஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அப்ரோஃப் ஒமர், ⚫ LOLC நிர்வாகத் தலைவர் இஷார நாணயக்கார செயற்படுகின்றார்.
அதன்படி, நன்கொடையாளர்கள் தங்கள் நிதி பங்களிப்புகளை உள்ளூர் அல்லது வெளிநாட்டு எந்தவொரு நபருக்கும், இலங்கை ரூபாய் அல்லது எந்த நாணயத்திலும், பின்வரும் இலங்கை வங்கிக் கணக்கிற்கு மாற்றலாம்.
01. Account Name: Deputy Secretary to the Treasury Account Number: 2026450 Bank: Bank of Ceylon Taprobane branch Swift code : BCEYLKLX
இதற்கு மேலதிகமாக, இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டு நாணயக் கணக்குகளில் நேரடியாக நிதியை வைப்புச் செய்யும் நன்கொடையாளர்கள் பின்வரும் கணக்குகள் மூலம் நிதியை வைப்புச் செய்ய வாய்ப்பு கிடைக்கும்.
வெளிநாட்டு நாணயங்களுக்கான கணக்கு விவரங்கள்:
1. US Dollar (USD) Bank: Deutsche Bank Trust Company Americas, New York, USA Recipient Account Name: Central Bank of Sri Lanka Account Number: 04015541 Routing Number: 021001033 SWIFT: BKTRUS33XXX
2. Euro (EUR) Bank: ODDO BHF Bank, Frankfurt am Main, Germany Recipient Account Name: Central Bank of Sri Lanka Account Number: 0000739854 IBAN: DE39500202000000739854 SWIFT: BHFBDEFF500
3. Pound Sterling (GBP) – Account 1 Bank: HSBC Bank Plc, London, UK Recipient Account Name: Central Bank of Sri Lanka Account Number: 39600144 Sort Code: 40-05-15 IBAN: GB48MIDL40051539600144 SWIFT: MIDLGB22XXX
4. Pound Sterling (GBP) – Account 2 Bank: Bank of Ceylon (UK) Ltd, London, UK Recipient Account Name: Central Bank of Sri Lanka Account Number: 88001249 Sort Code: 40-50-56 IBAN: GB89BCEY40505688001249 SWIFT: BCEYGB2LXXX
5. Japanese Yen (JPY) Bank: MUFG Bank, Tokyo, Japan Recipient Account Name: Central Bank of Sri Lanka Account Number: 653-0407895 SWIFT: BOTKJPJTXXX
6. Australian Dollar (AUD) Bank: Reserve Bank of Australia Recipient Account Name: Central Bank of Sri Lanka Account Number: 81736-4 BSB: 092002 SWIFT: RSBKAU2SXXX
புயல் காரணமாக இலங்கை எதிர்கொண்டுள்ள மிகவும் மோசமான நிலைமை தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அதன்படி, அனைத்துக் கட்சித் தலைவர்களும் புதன்கிழமை (03) கொழும்பு, புளவர் வீதியில் உள்ள அரசியல் அலுவலகத்தில் கூடவுள்ளனர்.
கடுமையான இயற்கை அனர்த்தங்களின் போது ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் வெற்றிகரமாக எதிர்கொண்ட அனுபவங்களின் அடிப்படையில், எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
2003 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளத்தின் போதும், வெள்ளத்திற்குப் பிந்தைய காலப்பகுதியிலும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைவர்களுக்கு தெளிவுபடுத்துவார் என்றும் வஜிர அபேவர்தன மேலும் கூறினார்.
இந்தக் கடுமையான அனர்த்தத்திற்குப் பிறகு, பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் ஒரே இடத்திற்கு அழைக்கப்படுவது இதுவே முதல் முறை என்றும் வஜிர அபேவர்தன சுட்டிக்காட்டினார்.
நாட்டில் டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 355 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் 366 பேரை காணவில்லை எனவும் அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இன்று காலை 9 மணிக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் சீரற்ற வானிலை காரணமாக 318,252 குடும்பங்களைச் சேர்ந்த 1,156,860 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகபட்ச உயிரிழப்புகள் கண்டி மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளன.
குறித்த மாவட்டத்தில் மாத்திரம் 88 மரணங்கள் இதுவரை பதிவாகியுள்ளன.
அதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் 75 மரணங்களும், பதுளை மாவட்டத்தில் 71 மரணங்களும், குருநாகலில் 37 மரணங்களும், மாத்தளை மாவட்டத்தில் 23 மரணங்களும் புத்தளம் மாவட்டத்தில் 10 மரணங்களும் இதுவரை பதிவாகியுள்ளன.
மேலும், அனர்த்தங்கள் காரணமாக கண்டி மாவட்டத்தில் 150 பேரும், நுவரெலியாவில் 62 பேரும், பதுளையில் 53 பேரும், கேகாலை மாவட்டத்தில் 46 பேரும், குருநாகலில் 35 பேரும் இதுவரை காணாமல் போயுள்ளனர்.
இதேவேளை களனி ஆற்றில் வெள்ளத்தைக் கட்டுப்படுத்த கட்டப்பட்ட களனிமுல்ல வெள்ள அணை உடையும் அபாயம் இருப்பதாக ஒரு ஆதாரமற்ற செய்தி பரவி வருகிறது. களனிமுல்ல வெள்ள அணை மணல் மூட்டைகளால் பலப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் அந்த பகுதிகளில் உள்ள மக்கள் இது தொடர்பாக தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் பொதுமக்களுக்குத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டின் திடீர் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் பலத்த காற்றின் தாக்கத்தினால் புத்தளம் மாவட்டத்தில் 47ஆயிரத்து 222 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் புத்தளம் மாவட்டத்தில் 301 கிராம சேவையாளர் பிரிவுகளுக்குற்பட்ட 47ஆயிரத்து 222 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.
இதில் ஒரு லட்சத்து 73ஆயிரத்து 165 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த செயலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த அனர்த்தத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 4 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 76 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும், சுமார் 4ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 14ஆயிரத்து 328 பேர் 75 பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் புத்தளம் பிரதேச செயலகத்திற்குற்பட்ட 13ஆயிரத்து 4 குடும்பங்களை சேர்ந்த 47ஆயிரத்து 939 பேர் குறித்த மாவட்டத்தில் அதிகளவாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலாபம் பிரதேச செயலகத்திற்குற்பட்ட 9ஆயிரத்து 214 குடும்பங்களை சேர்ந்த 35ஆயிரத்து 943 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஆராச்சிகட்டுவ பிரதேச செயலகத்திற்குற்பட்ட 8ஆயிரத்து 923 குடும்பங்களை சேர்ந்த 31ஆயிரத்து 200 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.