Saturday, March 28, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 11

ஈரானின் மூன்றாவது உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி (Mojtaba Khamenei) நியமிக்கப்பட்டுள்ளார்.

ஈரானின் முந்தைய உச்ச தலைவராக இருந்த அலி கமேனி, ஒரு வாரத்திற்கு முன்பு நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்த நியமனம் நடைபெற்றுள்ளது.

ஈரானின் 88 மதகுருமார்களைக் கொண்ட ‘நிபுணர்கள் சபை’ (Assembly of Experts), மொஜ்தபா கமேனியை ஈரானின் மூன்றாவது உச்ச தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தது. ஈரானின் பாதுகாப்புப் படைகள் மற்றும் வணிகத் துறைகளில் பெரும் செல்வாக்குக் கொண்ட மொஜ்தபா, தற்போதைய நெருக்கடியான சூழலில் நாட்டை வழிநடத்தத் தகுதியானவர் என்று அந்நாட்டு பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி தெரிவித்துள்ளார். ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) புதிய தலைவருக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.

இந்தப் போர்ச் சூழலால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வைச் சந்தித்துள்ளது. எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 100 டாலரைத் தாண்டியுள்ளது, இது கடந்த 2022 ஜூலைக்குப் பிறகு பதிவான மிக உயர்ந்த விலையாகும். அமெரிக்கக் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 20% உயர்ந்துள்ளது, இதனால் ஆசியப் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடைந்துள்ளன. எனினும், ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தல் நீக்கப்பட்டவுடன் எண்ணெய் விலைகள் விரைவாகக் குறையும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மொஜ்தபாவின் நியமனத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். அமெரிக்காவின் அங்கீகாரம் இன்றி அவர் நீண்ட காலம் பதவியில் நீடிக்க முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார். இதற்கிடையில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானின் ஆட்சியாளர்களை “இரக்கமின்றி” தாக்குவோம் என்றும், ஈரானிய ஆட்சியை நிலைகுலையச் செய்யத் தங்களிடம் திட்டங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒன்பது நாட்களாக நடைபெற்று வரும் இந்த மோதலில், இதுவரை 1,332 ஈரானிய பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். ஈரானின் பதிலடித் தாக்குதல்களில் இதுவரை ஏழு அமெரிக்க ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். தெஹ்ரானில் உள்ள எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களால் அங்கு பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ஈரான் ஆதரவுப் படைகளின் தாக்குதல் அச்சம் காரணமாக, சவுதி அரேபியா, கத்தார், குவைத், ஜோர்டான் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் உள்ள தனது தூதரக அதிகாரிகளை அமெரிக்கா வெளியேற உத்தரவிட்டுள்ளது. இந்த மோதல் ஒரு “ஆபத்தான புதிய கட்டத்தை” எட்டியுள்ளதாக ஈரான் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வென்னப்புவவில் தங்கச் சங்கிலிகளை கொள்ளையடித்த நபர் கைது:

0

ஜூட் சமந்த

வென்னப்புவ பகுதியில் வீதியில் செல்லும் பெண்களின் தங்கச் சங்கிலிகளை கொள்ளையடித்து வந்த நபர் ஒருவரை வென்னப்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று 8ஆம் திகதி மாலை, வென்னப்புவ – வைக்காலை, அங்கம்பிட்டிய பிரதேசத்தில் வைத்து சந்தேகநபரை அப்பகுதி மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். வைக்காலை பகுதியில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பெண்ணொருவரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை சந்தேகநபர் அறுத்துக் கொண்டு தப்பியோட முயன்றுள்ளார். இதன்போது அப்பெண் எழுப்பிய கூச்சலைக் கேட்டு அவ்விடத்திற்கு வந்த பொதுமக்கள் சந்தேகநபரை மடக்கிப் பிடித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தை வீதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கொள்ளைச் சம்பவங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இது போன்ற கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

3வது முறையாக சாம்பியன் ஆனது இந்திய அணி!

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 3வது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

இந்நிலையில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணியில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 89 ரன்களும், அபிஷேக் சர்மா 52 ரன்களும், இஷான்கிஷன் 54 ரன்களும், அக்சர் படேல் 3 விக்கெட்டுகளும், ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

மகரகம வர்த்தக நிலையங்களில் தீ : 400 இலட்சம் ரூபாய் நஷ்டம்!

0

மகரகமை நகரில் இன்று (08) காலை சில வர்த்தக நிலையங்களில் ஏற்பட்ட தீ விபத்தினால் சுமார் 400 இலட்சம் ரூபாய் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 

ஆடை விற்பனையாளர் சங்கத்தின் தலைவர் குசும்சிறி தசநாயக்க ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி இதனைத் தெரிவித்தார். 

இன்று காலை சில வர்த்தக நிலையங்களில் ஏற்பட்ட தீ விபத்தினால் எங்களுக்கு சுமார் 400 இலட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்தத் தீ ஆடை விற்பனை நிலையமொன்றில் ஆரம்பிக்கவில்லை, மாறாக பாரம்பரிய அலங்கார பொருட்களை விற்பனை செய்யும் இடத்திலிருந்தே பரவியது. 

எனினும், தீ பரவியவுடன் அதனைத் தடுப்பதற்கு துரிதமாகச் செயற்பட்ட பொலிஸார், நகர சபை ஊழியர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர ஆகியோருக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

அதேநேரம், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் ஆடைகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட எவ்விதத்திலும் இடமளிக்க மாட்டோம். 

இதேவேளை, தீயணைப்புப் பிரிவினரின் தாமதமே இந்த பாரிய அழிவுக்குக் காரணம் என பிரதேசவாசிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட நபருக்கு ஆயுள் தண்டனை!

0

ஜூட் சமந்த

35 கிராம் 474 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளைக் கைவசம் வைத்திருந்ததோடு, அதனை வியாபாரம் செய்த குற்றத்திற்காக ஒருவருக்குச் சிலாபம் மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. மேல் நீதிமன்ற நீதிபதி நயோமி விக்ரமசேகரவினால் கடந்த 6ஆம் திகதி இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டவர் வென்னப்புவ – கிரிமெட்டியான வத்த பிரதேசத்தைச் சேர்ந்த எம்.ஏ. கசுன் விமங்க என்பவர் ஆவார்.

கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் திகதி அல்லது அதற்கு அண்மைய ஒரு நாளில், கிரிமெட்டியான வத்த பகுதியில் வைத்து வென்னப்புவ பொலிஸாரால் குறித்த நபர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபருக்கு எதிராக போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் அதனை வியாபாரம் செய்தமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரால் சிலாபம் மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

வழக்கு விசாரணைகளின் முடிவில், சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டதையடுத்து, நீதிபதி அவருக்கு இந்த ஆயுள் தண்டனையை வழங்கி உத்தரவிட்டார்.

பிங்கிரிய கொளமுணு ஓயா காப்புக்காடு அதிகார வர்க்கத்தால் படுகொலை!

0

ஜூட் சமந்த

பிங்கிரிய ஊடாகப் பாயும் கொளமுணு ஓயா (Kolamunu Oya) காப்புக்காட்டில் இருந்த பெருமளவிலான கும்புக் மற்றும் மார மரங்கள் வெட்டப்பட்டு, தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளதாகப் பிரதேசவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்த பாரிய அழிவு பிங்கிரிய பொலிஸ் நிலையம் மற்றும் வித்தியா பீடத்திற்கு மிக அருகிலேயே இடம்பெற்றுள்ளது. தெதுரு ஓயாவின் கிளையாகக் கருதப்படும் கொளமுணு ஓயாவைச் சுற்றியுள்ள பகுதி, நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான ஒரு சுற்றாடல் ரீதியாக மிக முக்கியமான வலயமாகும்.

கடந்த அரசாங்க காலத்தில், அரசியல் செல்வாக்குமிக்க நபர்களால் இந்தச் சுற்றாடல் வலயத்திலிருந்த பெருமளவிலான மரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த மரங்களை அழிப்பதற்காக அவற்றுக்கு விஷம் (Poison) செலுத்தியும், மரங்களின் பட்டைகளை உரித்து அவை காய்ந்து போகச் செய்தும் சூட்சுமமான முறைகளைக் கையாண்டுள்ளனர். இவ்வாறு மரங்கள் அழிக்கப்பட்ட பின்னர், அந்த நிலப்பரப்பு கும்பல் வயல் நிலங்களாக மாற்றப்பட்டுள்ளதுடன், அவ்வாறு வயல்களைத் தயார் செய்யத் தேவையான மண் கொளமுணு ஓயா காப்புக்காட்டிலிருந்தே எடுக்கப்பட்டு நிலங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 10 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் இருந்த பாரிய மரங்கள் வெட்டப்பட்டு, சில அரச அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் வெளிப்பிரதேசங்களுக்குக் கடத்தப்பட்டுள்ளதாகக் கிராமவாசிகள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றனர்.

இவ்வளவு பெரிய அழிவு நடக்கும் போது அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்பியுள்ளனர். வெள்ளக் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளைத் தணிப்பதற்காகவே இவ்வாறான காப்புக்காடுகள் பாதுகாக்கப்படுகின்றன. கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போது கொளமுணு ஓயா வான்பாய்ந்து பாரிய சேதங்களை ஏற்படுத்தியிருந்தது. காப்புக்காடு சிதைக்கப்படாமல் இருந்திருந்தால் அச்சேதத்தைக் குறைத்திருக்க முடியும் என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது சட்டவிரோதமாகப் பயிரிடப்பட்டுள்ள வயல் நிலங்களுக்குள் இன்னும் பல மரங்கள் அழிக்கப்பட்ட நிலையில் காணப்படுவதை எஞ்சியுள்ள சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன. கொளமுணு ஓயாவானது பிங்கிரிய பிரதேசத்தின் விவசாய நிலங்களுக்கு நீர் வழங்கும் ஒரு முக்கிய வாழ்வாதாரமாகும்.

இந்த அழிவு தொடருமானால், எதிர்காலத்தில் கொளமுணு ஓயா வறண்டு போகும் அபாயம் உள்ளதுடன், ஒட்டுமொத்த விவசாயமும் பாதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த அழிவிற்குப் பொறுப்பான கடத்தல்காரர்கள் மற்றும் இதைக் கண்டும் காணாமல் இருக்கும் அதிகாரிகள் இதற்கு முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.

ஜனாதிபதி அநுரவுக்கு எச்சரிக்கை விடுத்த உதய கம்மன்பில!

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கைது செய்த ஜனாதிபதி அநுர எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய அமைப்பின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார் .

தனது உத்தியோக பூர்வ எக்ஸ் தனத்திலேயே இதனை பதிவிட்டுள்ளார் .

அவர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது ,

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட காரணமாக அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உண்மையில் ஒரு குற்றமென்றால், இலங்கையில் இருந்த ஒவ்வொரு முன்னாள் ஜனாதிபதிகளும் கைது செய்யப்பட வேண்டும் என்பதே யதார்த்மாகும்.

தகவல் அறியும் உரிமையைப் பயன்படுத்தி ஓஷல ஹேரத் என்பவரால் வுல்வர்ஹாம்டன் (Wolverhampton) பல்கலைக்கழகத்திடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2023 இல் அந்தப் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்தது ஒரு உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட நாளிலிருந்தே நான் கூறி வருவது இது ஒரு பயனற்ற விவாதம் என்பதாகும்.

ஒரு ஜனாதிபதியின் பயணங்கள் உத்தியோகபூர்வமானதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், பாதுகாப்பு மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை அரசாங்கம் வழங்க வேண்டும்.

அது உலக நியதியாகும். இல்லையெனில், நாட்டுத் தலைவர்கள் பாதுகாவலர்கள் இல்லாமலும், பாதுகாப்பு வாகனங்கள் இல்லாமலும் தனிப்பட்ட பயணங்களில் செல்லும் போது எதிரிகளால் இலக்கு வைக்கப்படுவார்கள்.

இந்தக் கைது நடவடிக்கையின் பின்னணியில் உள்ள ஜனாதிபதி அநுரவுக்கும், எதிர்காலத்தில் இந்தக் கைது நடவடிக்கை தன்னைத்தானே தாக்கும் செயலாக அமைந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கு போர்ச் காரணமாக தேயிலைத் துறை கடும் சரிவு!

0

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பிரதான வருமானமான தேயிலைத் துறை கடும் சரிவைச் சந்தித்து வருவதாக இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் லயனெல் ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தாழ் நில தேயிலையில் நூற்றுக்கு 50 வீதத்திற்கும் அதிகமான அல்லது அதற்கும் மேற்பட்ட அளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

அதிலிருந்து ஈரானுக்கு 10 முதல் 15 வீதத்திற்கும் அதிகமான அளவு செல்கிறது. அந்த நாட்டிற்கு நாம் அதிக விலையுடைய தேயிலையையே அனுப்புகின்றோம்.

அவர்களது யுத்த நிலைமை காரணமாக தேயிலை வாங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஏனைய மத்திய கிழக்கு நாடுகளுக்குமான கடல் மார்க்கங்கள் தடைப்பட்டுள்ளதால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இது எங்களைப் பாதிப்பது எவ்வாறெனில், சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு வாராந்தம் அவர்களது கொடுப்பனவுகளை வழங்க வேண்டியுள்ளது.

தேயிலை விற்பனை ஆகாவிட்டால் எங்களால் அதனை வழங்க முடியாது. இது தொடர்ந்தால் மிகவும் பாரிய நிதி நெருக்கடியை நாம் எதிர்கொள்ள வேண்டி வரும்.

இலங்கையில் சுமார் 5 இலட்சம் சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் உள்ளனர். இத்தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டு சுமார் 2 மில்லியன் பேரின் வாழ்வாதாரமாகவும் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை 20% அதிகரிப்பு!

0


(Reuters) ஈரானில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதைக் குறிப்பிட்டு, பாகிஸ்தான் அரசு டீசல் மற்றும் பெட்ரோல் விலையை சுமார் 20% உயர்த்தியுள்ளது.

பெட்ரோலியத் துறை அமைச்சர் அலி பர்வைஸ் மாலிக் ஒரு வீடியோ செய்தியின் மூலம், டீசல் மற்றும் பெட்ரோல் விலையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் லிட்டருக்கு 55 ரூபாய் (0.20 டாலர்) உயர்த்தப்படுவதாக அறிவித்தார்.

இதன்படி, ஒரு லிட்டர் டீசல் 321.17 ரூபாய்க்கும், பெட்ரோல் 335.86 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படவுள்ளது. உலகளவில் பெட்ரோலியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், வேறு வழியின்றி இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விளக்கமளித்துள்ளார். இந்தத் திடீர் உயர்வு நாட்டின் பணவீக்கத்தை அதிகரிக்கச் செய்வதுடன், ஏழை மக்களைப் பெரிதும் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.

விலை உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாகவே, லாகூர் மற்றும் கராச்சி போன்ற முக்கிய நகரங்களில் உள்ள எரிபொருள் நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். லாகூரைச் சேர்ந்த தொழிலதிபர் இம்ரான் ஹுசைன் என்பவர், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில் சுமார் 70 நிமிடங்கள் வரிசையில் காத்திருந்து எரிபொருளை நிரப்பியதாகத் தெரிவித்தார்.

இதற்கிடையில், எரிபொருளைப் பதுக்கி வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் எச்சரித்துள்ளார். தற்போது போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு இருப்பதாகவும், ஆனால் மத்திய கிழக்கு நாடுகளின் நெருக்கடி எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியாததால், இருப்பை நீட்டிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் பெட்ரோலியத் துறை அமைச்சர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் தனது எரிபொருள் தேவையை முக்கியமாக சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திடம் (UAE) இருந்து ஹார்முஸ் நீரிணை வழியாக இறக்குமதி செய்கிறது. இனிவரும் காலங்களில், எரிபொருள் விலைகள் வாராந்திர அடிப்படையில் மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் அமைச்சர் மாலிக் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈரானிய கப்பல்களுக்கு வாய்மொழி அழைப்பு விடுத்தது யார்?

0

இந்தியப் பெருங்கடலில் அண்மையில் அரங்கேறிய நிகழ்வுகள் குறித்து, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

ஈரானிய போர்க்கப்பல்களான IRIS Dena மற்றும் IRIS Bushehr ஆகியவற்றை இலங்கைக்கு வருமாறு இலங்கை கடற்படை தளபதி வாய்மொழியாக அழைப்பு விடுத்ததாக தசநாயக்க தெரிவித்தார். இது தொடர்பாக கடந்த வியாழக்கிழமை கொழும்பிலுள்ள ஈரானிய தூதரைச் சந்தித்தபோது, அந்த இரண்டு கப்பல்கள் குறித்து பல விரிவான தகவல்கள் கிடைத்ததாக அவர் கூறினார்.

“கடற்படை தளபதி ஏன் இந்த இரண்டு கப்பல்களையும் இலங்கை கடற்பரப்பிற்கு வருமாறு வாய்மொழியாகக் கேட்டுக் கொண்டார் என்பது வியப்பாக இருக்கிறது. அரசாங்கம் இது குறித்து அவரிடம் விளக்கம் கேட்க வேண்டும், அவர் தவறு செய்திருப்பது கண்டறியப்பட்டால் அவரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2026 சர்வதேச கடற்படை அணிவகுப்பிற்காக (International Fleet Review) வந்த அந்த இரண்டு கப்பல்களையும் இந்தியா ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், இந்த பொறுப்பு இலங்கை மீது சுமத்தப்பட்டதா என்ற சந்தேகத்தை எழுப்பினார். மத்திய கிழக்கு விவகாரங்களில் இலங்கை அரசு நடுநிலையாகச் செயல்பட வேண்டும் என்றும், இக்கட்டான சூழலில் யாருடனும் கைகோர்க்கக் கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், IRIS Bushehr கப்பலில் இருந்தவர்களின் உயிரைக் காப்பாற்றியதற்காக அவர் அரசாங்கத்தைப் பாராட்டியதுடன், சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் மூலம் ஒரு மிகப்பெரிய பேரழிவு தவிர்க்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.