Home Blog Page 114

“தாய் அனுப்பிய லேட்டஸ்ட் மொபைல் – தடம் மாறிய சிறுமி!

ஜூட் சுமந்த

சமூக ஊடகங்கள் ஊடாக அறிமுகமான 15 வயது சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 22 வயது இளைஞர் ஒருவரை உடப்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் முந்தலமை – பள்ளிவாசல்பாடு பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

பாதிக்கப்பட்ட சிறுமி அனுராதபுரத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், அவரது தாய் சுமார் 8 மாதங்களுக்கு முன்பு வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

தந்தை பராமரிப்பில் இருந்த சிறுமிக்கு, அவரது தாய் நவீன ரக கையடக்கத் தொலைபேசி ஒன்றை அனுப்பியுள்ளார். அத்தொலைபேசி ஊடாக சமூக ஊடக கணக்கைப் பயன்படுத்திய போதே சந்தேகநபரான இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன்போது சிறுமி தனது வயது 17 என அந்த இளைஞரிடம் பொய்யாகக் கூறியுள்ளதோடு, அது பின்னர் காதலாக மாறியுள்ளது.

கடந்த போயா தினத்தன்று இவர்கள் இருவரும் முதன்முதலாக அனுராதபுரத்தில் இரகசியமாகச் சந்தித்துள்ளனர். அதன் பின்னர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி இரவு, சிறுமி தனது தந்தைக்குத் தெரியாமல் பேருந்து மூலம் மதுரங்குளிக்குச் சென்றுள்ளார். அங்கிருந்து தனது காதலரின் முச்சக்கர வண்டியில் அவரது வீட்டிற்குச் சென்ற சிறுமி, அன்றிலிருந்து அவருடன் தங்கியிருந்துள்ளார்.

காணாமல் போன தனது மகளைத் தேடி வந்த தந்தை, கடந்த 29 ஆம் திகதி முந்தலமை – பள்ளிவாசல்பாடு பகுதியில் சிறுமியைக் கண்டுபிடித்தார். அதனைத் தொடர்ந்து, அவர் மகளுடன் உடப்புவ பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு செய்துள்ளார்.

அந்த முறைப்பாட்டின் அடிப்படையில், பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் சந்தேகநபரான இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார். சந்தேகநபர் புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிங்கிரியவில் லொரி மோதி 13 வயது சிறுவன் பரிதாப உயிரிழப்பு!

ஜூட் சமந்த

பிங்கிரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் லொரி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளான இரு சிறுவர்களில் ஒருவர், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று 01 ஆம் திகதி மாலை சிலாபம் – வாரியப்பொல வீதியின் இஹல கொஸ்வத்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர் பிங்கிரிய – ஹல்மில்லவெவ பகுதியைச் சேர்ந்த குமாரசிங்க ஆரச்சிகே நெதும் சனுல குமாரசிங்க (13 வயது) என்ற சிறுவன் ஆவார். அதே பகுதியைச் சேர்ந்த வீரசேகர செனவிரத்ன அதிகார முதியன்சேலாகே எசத நிமசர அதிகார (13 வயது) என்ற மற்றுமொரு சிறுவன் காயமடைந்து சிலாபம் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சிறுவர்கள் இருவரும் வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, வாரியப்பொல திசையில் இருந்து சிலாபம் நோக்கிப் பயணித்த லொரி மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தின் பின்னர் சிறுவர்கள் இருவரும் உடனடியாக பிங்கிரிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் லொரியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்துக்குள்ளான லொரியும் பிங்கிரிய பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனைகள் நடைபெறவுள்ளதுடன், பிங்கிரிய பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

524 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் சிக்கிய தம்பதியினர்!

ஜூட் சமந்த

524 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கையும் களவுமாக தம்பதியினர் ஒருவரை புத்தளம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை நேற்று 01 ஆம் திகதி புத்தளம் – மெல்லன்குளம பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் ஆணமடுவ பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 23 வயதுடைய தம்பதியினர் ஆவர். இவர்கள் சில சமயங்களில் இப்பாகமுவ பகுதியில் உள்ள தமது பாட்டியின் வீட்டில் தங்கியிருந்தும் இந்த போதைப்பொருள் வியாபாரத்தை முன்னெடுத்து வந்துள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி சுமார் 80 இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் ஒன்றையும் பொலிஸார் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.

புத்தளம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு வெளியூர்களில் இருந்து போதைப்பொருளைக் கொண்டு வந்து விற்பனை செய்யும் தம்பதியினர் குறித்து பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து சுமார் ஒரு மாத காலமாக மேற்கொள்ளப்பட்ட இரகசிய கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து, சந்தேகநபர்கள் புத்தளத்திற்கு போதைப்பொருளைக் கடத்தி வந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட தம்பதியினர் வெளிநாடுகளில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நேரடி தொடர்புகளைப் பேணி வருவதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை வெளிப்படுத்துவதற்காக சந்தேகநபர்களைத் தடுத்து வைத்து விசாரணை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிளவுபடும் வைத்திய சங்கங்கள் – தவிக்கும் நோயாளிகள்!

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கை இன்று (02) காலை முதல் தீவிரப்படுத்தப்படும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது. 

இதன்படி, இன்று காலை 8.00 மணி முதல் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. 

தமது கோரிக்கைகள் தொடர்பில் சுகாதார அமைச்சு சாதகமான தீர்வுகளை வழங்கத் தவறியுள்ளதால், இன்று முதல் பின்வரும் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. 

இலங்கையின் அரச வைத்தியசாலைக் கட்டமைப்பு இன்று ஒரு தீர்மானமிக்க சந்திப்புப் புள்ளியில் நிற்கிறது. ஒருபுறம் தமது உரிமைகளுக்காகப் போராடும் வைத்தியர்கள், மறுபுறம் நோயாளர் நலனே முக்கியமெனப் பணிக்குத் திரும்பும் விசேட நிபுணர்கள் என சுகாதாரத்துறை இரண்டு துருவங்களாகப் பிரிந்துள்ளமை நோயாளிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தீவிரமடையும் தொழிற்சங்கப் போராட்டம்

அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு முறையான தீர்வு கிடைக்காத நிலையில், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்றைய தினம் (02) முதல் தமது தொழிற்சங்க நடவடிக்கைகளை நாடளாவிய ரீதியில் தீவிரப்படுத்தத் தீர்மானித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த அந்தச் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச, இன்றைய தினம் முதல் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் விசேட வைத்திய நிபுணர்களும் இந்தத் தொழிற்சங்கப் போராட்டத்தில் இணைந்துகொள்ளத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்தத் தீர்மானம் சுகாதார சேவைகளில் பாரிய தாக்கத்தைச் செலுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலகி நிற்கும் விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம்

இருப்பினும், இந்தப் போராட்டக் களத்தில் ஒரு திருப்பமாக, விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் (AMS) இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையில் இருந்து முற்றாக விலகியுள்ளது.

“எமது சங்கத்தைச் சேர்ந்த எந்தவொரு வைத்தியரும் இன்றைய தினம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதில்லை. எமது உறுப்பினர்கள் அனைவரும் வழமை போன்று தமது கடமைகளை முன்னெடுப்பார்கள்.” என அந்தச் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் விசேட வைத்திய நிபுணர் அசோக குணரத்ன மிகவும் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

வைத்திய சங்கங்களுக்கு இடையிலான இந்த மாறுபட்ட நிலைப்பாடுகள் காரணமாக, வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளர்கள் குழப்பமடைந்துள்ளனர். போராட்டங்கள் தீவிரமடைந்தாலும், விசேட வைத்திய நிபுணர்களின் இந்தத் தீர்மானம் ஓரளவு நிம்மதியைத் தந்துள்ளதாகப் பொதுமக்கள் கருதுகின்றனர்.

தமது உரிமைகளுக்காகப் போராடும் வைத்தியர்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்குமா அல்லது சுகாதாரத் துறையில் நிலவும் இந்தப் பிளவு மேலும் வலுவடையுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மாம்புரி பகுதியில் இடம்பெற்ற எதிர்பாராத விபத்து!

கல்பிட்டி – பாலாவி பிரதான வீதியில், மாம்புரி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற கோர விபத்து இப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நேற்று மாலை, வீதியின் ஓரமாக பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது, மாம்புரி குறுக்கு வீதியிலிருந்து அதிவேகமாக வந்த KDH ரக வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மோதியுள்ளது. குறுக்கு வீதியிலிருந்து பிரதான வீதிக்குள் நுழைய முயன்ற வேனின் வேகம், அங்கிருந்த முச்சக்கரவண்டியை நிலைகுலையச் செய்தது.

வேனின் மோதல் வேகம் எந்தளவுக்கு வீரியமாக இருந்ததென்றால், அடித்துச் செல்லப்பட்ட முச்சக்கரவண்டி அருகில் இருந்த ஒரு வீட்டின் சுவருடன் மோதி நின்றது. அந்த மோதலில் முச்சக்கரவண்டி சுக்குநூறாகச் சிதைந்து உருக்குலைந்தது. இரண்டு வாகனங்களும் பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், விபத்தின் கோரம் சம்பவ இடத்தைப் பார்ப்பவர்களைக் கண் கலங்கச் செய்கிறது.

இந்த விபத்து நேர்ந்த போது முச்சக்கரவண்டியின் உள்ளே அதன் சாரதி அமர்ந்திருந்துள்ளார். எதிர்பாராத இந்தத் தாக்குதலால் பலத்த காயமடைந்த அவர், உடனடியாக மீட்கப்பட்டு புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த நுரைச்சோலை பொலிஸார் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். வாகனத்தை அதிவேகமாகச் செலுத்தியதா அல்லது கவனக்குறைவா என்ற கோணத்தில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வீதியோரத்தில் பாதுகாப்பாக நின்ற வாகனத்திற்கே இந்த நிலை ஏற்பட்டிருப்பது, வீதிப் பாதுகாப்பு குறித்த அச்சத்தை இப்பகுதி மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி அநுரவின் புதிய அவசரகால சட்டத் திருத்தம்!”

நாட்டில் பொது அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. 

ஜனவரி மாதம் 28 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் உத்தரவின் பேரில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

நிலவிய அனர்த்த நிலைமையைக் கருத்திற் கொண்டு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கடந்த நவம்பர் மாதம் 28 ஆம் திகதி பொது பாதுகாப்பு மற்றும் நாட்டின் நல்வாழ்வைப் பாதுகாத்தல் மற்றும் பொதுமக்களின் வாழ்க்கைக்கு அவசியமான விநியோகங்கள் மற்றும் சேவைகளைப் பேணுதல் ஆகியவற்றைக் குறிக்கோளாகக் கொண்டு பொது அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. 

இதற்கிடையில், 2025 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க அவசரகால ஏற்பாடுகள் மற்றும் அதிகாரங்கள் தொடர்பான கட்டளைகளைத் திருத்தம் செய்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

கடந்த நவம்பர் மாதம் 28 ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்ட குறித்த கட்டளைகள், ஜனவரி மாதம் 28 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் திருத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதற்குரிய வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது. 

புதிய அவசரகால கட்டளைகளுக்கு இணங்க, இதற்கு முன்னர் நடைமுறையிலிருந்த பல கட்டளைகளைத் திருத்தம் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், பல புதிய கட்டளைகளை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

அவசரகால நிலைப் பிரகடனத்துடன் அரச அதிகாரிகள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்தும், குறித்த கட்டளைகளுக்கு முரணாகச் செயற்படுபவர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அந்தக் கட்டளைகளின் மூலம் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

தேசிய உதைப்பந்தாட்ட மகுடம் கிண்ணியா அல்-அமீன் வசம்!

போராட்ட குணத்தை வெளிப்படுத்திய எருக்கலம்பிட்டி வீரர்கள்!

பாடசாலைகளுக்கிடையிலான 18 வயதிற்குட்பட்ட தேசிய உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப் போர் நேற்று (31.01.2026) அனுராதபுரம் பண்டுகாபய கல்லூரி மைதானத்தில் உணர்ச்சிகரமாக இடம்பெற்றது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் கிண்ணியா அல்-அமீன் பாடசாலை அணி சாம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.

பரபரப்பான இறுதிப் போட்டி

மாகாண மட்டங்களில் வெற்றிபெற்று தெரிவான 27 சிறந்த பாடசாலை அணிகள் மோதிய இந்தத் தொடரின் இறுதிப்போட்டியில், கிண்ணியா அல்-அமீன் பாடசாலை மற்றும் புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டத்தின் ஆரம்பம் முதலே இரு அணிகளும் அதீத திறமையை வெளிப்படுத்திய நிலையில், ஆட்ட முடிவில் 2:0 என்ற கோல் கணக்கில் கிண்ணியா அல்-அமீன் பாடசாலை வெற்றி பெற்று தேசிய சாம்பியனாக முடிசூடிக்கொண்டது.

எருக்கலம்பிட்டியின் வரலாற்றுப் பயணம்

இறுதிப்போட்டியில் தோல்வியைத் தழுவினாலும், இந்தத் தொடர் முழுவதும் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலய அணி காட்டிய அதிரடி ஆட்டம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

  • முதல் போட்டி: காலி வித்யாலோகா அணியை 3:0 என வீழ்த்தினர்.
  • இரண்டாம் சுற்று: பதுளை அல்-அத்னான் பாடசாலையை 1:0 என வெற்றிகொண்டனர்.
  • காலிறுதி: கிண்ணியா முள்ளிப்பொத்தனை அணியை 2:1 எனத் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினர்.
  • அரையிறுதி: பலம் வாய்ந்த மாவனல்லை ஸாஹிரா கல்லூரியுடன் மோதி, 4:3 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றனர்.

தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்று, புத்தளம் மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்த எருக்கலம்பிட்டி வீரர்களுக்கு ஊர் திரும்பிய போது உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

“எங்கள் சிறுவர்கள் காட்டிய இந்த வீரமும், போராட்ட குணமும் வெற்றியை விட மேலானது. தேசிய அரங்கில் எருக்கலம்பிட்டியின் பெயரை ஓங்கி ஒலிக்கச் செய்துவிட்டார்கள்,” என எருக்கலம்பிட்டி உதைப்பந்தாட்ட ரசிகர் பட்டாளம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

வெற்றி பெற்ற கிண்ணியா அல்-அமீன் பாடசாலைக்கும், இறுதி வரை போராடி இரண்டாம் இடத்தைப் பிடித்த எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இறுதிப்போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தாலும், 27 முன்னணி பாடசாலைகளுக்கு மத்தியில் புத்தளம் மாவட்டத்தின் பெருமையை தேசிய மட்டத்தில் பறைசாற்றிய எருக்கலம்பிட்டி வீரர்களுக்கு ரசிகர்கர்களினால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதேவேளை இடம்பெற்ற குறித்த சுற்றுத்தொடரில் புத்தளம் அசன் குத்தூஸ் கல்லூரி மூன்றாம் இடத்தை பெற்று புத்தளம் மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளமை விஷேட அம்சமாகும்.

புத்தளம் மண்ணின் இரு கல்லூரிகள் இரண்டாம் மற்றும் மூன்றாமிடங்களை பெற்றுக்கொண்டமை அனைத்து கால்பந்தாட்ட ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதிர்காலத்திற்காக வீதிக்கு வந்த புத்தளத்து பெற்றோர்கள்!

கல்வியே ஒரு சமூகத்தின் கண்கள். அந்தக் கண்கள் இருண்டுவிடக் கூடாது என்ற ஆதங்கத்தில், இன்று புத்தளம் நகரில் பெற்றோர்கள் ஒருமித்த குரலில் திரண்டனர்.

6-ம் தர மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தக் கோரி, கல்வி அதிகாரிகளின் கதவுகளைத் தட்டி தங்களது நீதியான கோரிக்கையை முன்வைத்தனர்.

இன்று காலை புத்தளம் வலயக் கல்விப் பணிமனைக்கு முன்பாக பெற்றோர்கள் பெருமளவில் திரண்டனர். எந்தவிதமான வன்முறைகளுமின்றி, மிகவும் அமைதியான முறையில் அதேநேரம் அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

தமது பிள்ளைகளின் கல்வி எதிர்காலம் கேள்விக்குறியாவதை பொறுத்துக்கொள்ள முடியாத பெற்றோர்கள், கைகளில் ஏந்தியிருந்த பதாதைகள் வழியே அதிகாரிகளுக்கு பலமான செய்தியைச் சொல்ல முயன்றனர். “புதிய பாடத்திட்டம் எங்கே?”, “எங்கள் பிள்ளைகளின் கல்வி உரிமையை பறிக்காதே!” போன்ற வாசகங்கள் அந்த இடத்தையே உணர்வுபூர்வமாக மாற்றியது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் பேரணியாகச் சென்று, தமது நியாயமான கோரிக்கைகள் அடங்கிய மகஜரை (Petition) உரிய அதிகாரிகளிடம் கையளித்தனர்.

முதலில், புத்தளம் வலயக் கல்விப் பணிமனையின் நிர்வாக அதிகாரி மனூஷா செவ்வந்தி அவர்களிடம் மகஜர் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, புத்தளம் மாவட்டச் செயலாளர் இந்திக்க சில்வா அவர்களையும் நேரில் சந்தித்து தமது கவலைகளையும் கோரிக்கைகளையும் பெற்றோர்கள் பகிர்ந்து கொண்டனர்.

ஏன் இந்தப் போராட்டம்?

புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டும், அது இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வராதது மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளைப் பாதித்துள்ளதாக பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பரீட்சைகள் நெருங்கும் வேளையில், போதிய வழிகாட்டல்கள் இன்றி மாணவர்கள் தவிப்பதாகவும், இதற்கு கல்வி அமைச்சு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

சமூகத்தின் அடித்தளமான மாணவர்களின் கல்விக்காக, தகிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது வீதிக்கு வந்த பெற்றோர்களின் இந்த முயற்சி, அதிகாரிகளின் செவிகளை எட்டுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஜாம்பவான்களை வீழ்த்தி இறுதிப் போரில் எருக்கலம்பிட்டி சிங்கங்கள்!

இலங்கை கால்பந்து வரலாற்றில் ஒரு சிறிய கிராமத்துப் பாடசாலை தேசிய மட்டத்தைத் திரும்பிப் பார்க்க வைப்பது என்பது சாதாரணமான காரியமல்ல. ஆனால், அதனை இன்று நனவாக்கிக் காட்டியிருக்கிறார்கள் புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 18 வயதிற்குட்பட்ட வீரர்கள்.

18 வயதிற்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான தேசிய உதைப்பந்தாட்டச் சுற்றோப்போட்டி, அனுராதபுரம் பண்டுகாபய கல்லூரி மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முழு இலங்கையையும் தனது பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலய அணி.

மாகாண மட்டங்களில் வெற்றி வாகை சூடிய 27 முன்னணிப் பாடசாலைகள் பங்கேற்ற இந்தத் தொடரில், சிறு கிராமத்துப் பாடசாலையான எருக்கலம்பிட்டி அணியினர் காட்டிய அதீத திறமை, இன்று அவர்களை மகுடத்தைத் தொடும் இறுதிப் போட்டி வரை அழைத்து வந்துள்ளது.

இறுதிப் போட்டிக்கான எருக்கலம்பிட்டி அணியின் இந்தப் பயணம் அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. ஒவ்வொரு கட்டத்திலும் அவர்கள் காட்டிய போராட்ட குணம் வியக்கத்தக்கது:

  • முதல் ஆட்டம்: காலி வித்தியாலோக அணியை 3:0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, தொடக்கத்திலேயே அதிரடி காட்டினர்.
  • இரண்டாவது ஆட்டம்: பதுளை அல்-அத்னான் அணியை 1:0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தனர்.
  • காலிறுதி: கிண்ணியா முள்ளிப்பொத்தனை மகா வித்தியாலயத்துடனான பலப்பரீட்சையில் 2:1 என்ற கணக்கில் த்ரில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினர்.
  • அரையிறுதி: கால்பந்து உலகின் ஜாம்பவானாகக் கருதப்படும் மாவனல்லை ஸாஹிரா கல்லூரியை 4:3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, “நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல” என்பதை உலகுக்கு நிரூபித்து இறுதிப் போட்டிக்குள் கால்பதித்துள்ளனர்.

நான்கு கடினமான கட்டங்களைத் தாண்டி வந்துள்ள எருக்கலம்பிட்டி வீரர்கள், நாளை நடைபெறவுள்ள இறுதிப் பெரும் போரில் கிண்ணியா அல்-அமீன் பாடசாலை அணியுடன் மோதவுள்ளனர். இது வெறும் ஒரு கால்பந்து போட்டி மட்டுமல்ல, புத்தளம் மாவட்டத்தின் விளையாட்டுத் திறமைக்கான அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.

வெறும் அதிர்ஷ்டத்தால் இந்த இடத்திற்கு அவர்கள் வரவில்லை; ஒவ்வொரு நிமிட ஆட்டத்திலும் சிந்திய வியர்வையும், வெற்றிக்காகக் காட்டிய வெறியுமே அவர்களை இங்கு கொண்டு வந்துள்ளது.

எருக்கலம்பிட்டி அணியின் இந்த அசுர வளர்ச்சி, அந்த ஊர் கால்பந்து ரசிகர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், நாளை நடைபெறும் இறுதிப் போட்டியை நேரில் கண்டு தமது வீரர்களை உற்சாகப்படுத்த நாட்டின் பல பாகங்களில் இருந்தும் ஒரு பெரும் ரசிகர் பட்டாளமே அனுராதபுரம் நோக்கிப் படையெடுக்கவுள்ளது.

“மைதானம் எருக்கலம்பிட்டியில் இல்லை, ஆனால் நாளை மைதானத்தில் எருக்கலம்பிட்டிக்காரர்கள் தான் இருப்பார்கள்” எனச் சொல்லும் அளவிற்கு அந்த ஊர் ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டு இருக்கிறார்கள். தமது மண்ணின் மைந்தர்களுக்கு ஊக்கமளிக்க நூற்றுக்கணக்கான ரசிகர்கள் நாளை நேரில் சென்று ஆதரவு வழங்கத் தயாராகிவிட்டனர்.

“எங்கள் மண், எங்கள் வீரர்கள், எங்கள் கிண்ணம்” என்ற உணர்வுடன் ரசிகர்கள் மைதானத்தை அதிரவிடக் காத்திருக்கின்றனர்.

திறமையும், அர்ப்பணிப்பும், விடாமுயற்சியும் கொண்ட எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலய வீரர்கள், நாளை தேசியக் கிண்ணத்தை ஏந்தி வரலாற்றுச் சாதனை படைக்க எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

நுரைச்சோலை பிரேரணை புஸ்வாணமானது!

நிசாம் காரியப்பர் மற்றும் அதாஉல்லாவின் பலத்த எதிர்ப்பினால் நுரைச்சோலை பிரேரணை புஸ்வாணமானது

(எஸ்.எம்.அறூஸ்)

அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரமவின் ஒருங்கிணைப்பிலும், அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரும்,கிராமிய அபிவிருத்தி,சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதியமைச்சருமான வசந்த பியதிஸ்ஸ தலைமையில் இன்று (30) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்நாயக்க, மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மஞ்சுல. ரத்நாயக்க, எம்.எஸ்.உதுமாலெப்பை, முத்து ரத்வத்த, ஏ.ஆதம்பாவா, கே.கோடிஸ்வரன், எம்.எஸ்.அப்துல் வாசித், சட்டத்தரணி நிசாம் காரியப்பர், சட்டத்தரணி பிரியந்த விஜேரத்ன உள்ளிட்ட கிழக்குமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், பாதுகாப்பு உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இங்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும், 2025 – 2026ம் ஆண்டில் அம்பாரை மாவட்ட செயலகம் ஊடாக செயற்படுத்தப்படுகின்ற செயற்திட்டங்கள் மற்றும் வேறு தாபனங்கள் ஊடாக செயற்படுத்தப்படும் செயற்திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

தொடர்ந்தும் அம்பாரை மாவட்டத்தில் காணப்படும் நீர்ப்பாசனம், சுகாதாரம், கல்வி, காணி,வீதி அபிவிருத்தி,திண்மக்கழிவகற்றல், குடிநீர் திட்டம், யானை வேலி பாதுகாப்பு முறைமை போன்ற பல விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் உரிய அதிகாரிகள் இவ்விடயங்களில் அதீக அக்கரையுடன் பணியாற்றுமாறு ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் மற்றும் மாகாண ஆளுநர் ஆகியோரினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

மேலும், நுரைச்சோலை வீட்டுத் திட்டத்தை நீதிமன்றத் தீர்ப்பை மையமாக வைத்து மக்களிடம் கையளிக்கும் பிரேரணையை பிரதியமைச்சர் வசந்த பியதிஸ்ஸ கொண்டு வந்த போது, பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபை மேயர் ஏ.எல்.எம்.அதாஉல்லா ஆகியேர் பலமாக எதிர்த்ததுடன் பாராளுமன்றக் குழுவின் ஊடாகவே இதனை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டுமென நிசாம் காரியப்பர் இங்கு தெரிவித்தார்.

நுரைச்சோலை வீட்டுத் திட்டம் பாதிக்கப்பட்ட மக்களுக்குரியது எனவும் அக்காணிகள் யாவும் அக்கறைப்பற்று பிரதேசத்திற்குரிய காணிகள் என்பதையும் மிகவும் ஆணித்தரமாக குரல் எழுப்பினார். அவருக்கு ஆதரவாக அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் அவர்களும் தனது கருத்தை தெரிவித்தார். இதன்போது இரு தரப்பினருக்குமிடையில் வாக்குவாதம் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கதாகும்.

அத்தோடு எதிர்காலத்தில் பிரதேசங்களின் அபிவிருத்தி வேலைத்திட்ட நிகழ்வுகளில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை கொண்டு வந்த பிரேரணையை ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பிரதியமைச்சருமான வசந்த பியதிஸ்ஸ ஏற்றுக்கொண்டு அதற்கு நடவடிக்கை எடுப்பதாக இங்கு தெரிவித்தார்.

தொடர்ந்தும், பிரஜா சக்தி குழுக்கள் நியமித்தப்படும்போது, கட்சி அரசியல் சாராமல் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என்பதுடன் அவ்வாறு நியமிக்கப்பட்டால் தனக்கு எழுத்து மூலம் அறிவிக்குமாரும் பிரதியமைச்சர் வசந்த பியதிஸ்ஸ குறிப்பிட்டார்.