Wednesday, August 6, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 117

நிதி மோசடி செய்த தம்பதி, வெளியான டுவிஸ்ட்!

0

நிதி மோசடி செய்து படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்ற நிலையில் நேற்று (26) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட தம்பதியினர் எதிர்வரும் ஜனவரி 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பிரைவெல்த் குளோபல் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனம் வர்த்தக நிறுவனங்களுக்கு ஈவுத்தொகை தருவதாக கூறி 160 கோடி ரூபாயை மோசடி செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பல முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.

அதன் பணிப்பாளர், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் 2021 இல் படகில் சட்டவிரோதமாக இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்தது.

பின்னர் சர்வதேச பொலிஸாரின் ஊடாக சந்தேக நபர்களுக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டதுடன், விசாரணையின் போது, ​​சந்தேகநபர் தனது குடும்பத்தினருடன் இந்தியாவின் வேதநாயகம் பகுதியில் தரையிறங்கிய போது அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாக தெரியவந்தது.

பின்னர் சுமார் மூன்று வருடங்கள் அந்நாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர்கள் நேற்று (26) இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.

முதலில் குறித்த நிறுவனத்தின் உரிமையாளரும் அவரது 14 வயது மகனும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

எனினும், அவரது மனைவி இலங்கை வரமுடியாது என்று அங்கு அலைக்கழித்ததைத் தொடர்ந்து, அவரும் வேறு விமானம் மூலம் நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

அதன்படி, அவரும் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் நிதிக் குற்றப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

விசாரணையின் போது, ​​சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் மத்திய வங்கியில் பதிவு செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

தொழிலில் நட்டம் ஏற்பட்டதால், ஈவுத்தொகையை செலுத்தாமல், நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக அவர்கள் கூறியுள்ளனர்.

சம்மாந்துறை, கல்முனை மற்றும் அம்பாறை பிரதேசங்களில் முஸ்லிம்களை குறிவைத்து மேற்படி மோசடி நடவடிக்கைகளை மேற்கொண்டதாக சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

20 லட்சத்தை கடந்த சுற்றுலா பயணிகள்!

0

நேற்று காலை UL 403 என்ற விமானத்தில் பேங்கொக்கில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த மூன்று பேர் கொண்ட குழுவைச் சேர்ந்த பிரசாந்த் என்பவர், இந்த ஆண்டு நாட்டிற்கு வருகை தந்த இருபது இலட்சமாவது சுற்றுலாப் பயணி ஆவார். 

இருபது இலட்சமாவது சுற்றுலா பயணியை வரவேற்பதற்காக சுற்றுலாத் துறை பிரதி அமைச்சர் கலாநிதி ருவன் ரணசிங்க மற்றும் சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் தலைவர் புத்திக ஹேவாவசம் ஆகியோர் விமான நிலையத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் விசேட வைபவமொன்றை ஏற்பாடு செய்திருந்தது. 

ஆண்டொன்றிற்கு 20 இலட்சத்தை தாண்டிய சுற்றுலா பயணிகளின் வருகை இது நான்காவது முறையாகும்.

கிரிஸ்மஸ் கொண்டாட்டத்திற்கு தடையா?

0

ஒரு காலகட்டத்தில், கிறிஸ்தவ மதத்திற்கு ஒவ்வாதது எனக் கருதப்பட்ட ஒரு செயலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை ஆங்கிலேயர்கள் உணர்ந்தனர்.

அதாவது ஒவ்வொரு டிசம்பர் மாதமும், மக்களிடையே ஒரு மிதமிஞ்சிய கொண்டாட்ட சூழல் இருந்தது. எனவே ஏதாவது செய்தாக வேண்டும் என்ற நிலை.

மக்களிடம் ஆடம்பர அல்லது கட்டுப்பாடில்லாத நடத்தை கிறிஸ்தவ வாழ்க்கை முறைக்கு எதிரானதாக பார்க்கப்பட்டது.

மது வகைகளை பரிமாறும் உணவகங்கள் உற்சாகம் கொண்ட மக்களால் நிரம்பியிருந்தன, கடைகள் மற்றும் வணிகங்கள் சீக்கிரமாகவே மூடப்பட்டன, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் விஷேச உணவுகளை சாப்பிடுவதற்காக ஒன்று கூடினர், வீடுகள் தாவரங்களால் அலங்கரிக்கப்பட்டன, அப்போது தெருக்களில் பாடுவது என்பது உலகின் மிகவும் சாதாரண விஷயமாகத் தோன்றியது.

‘உண்மையான’ கிறிஸ்தவர்கள் யார்?

1644இல் ஆங்கிலேய ப்யூரிடன்கள் (Puritans) கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒழிக்க முடிவு செய்தனர். பியூரிடன்கள் என்பவர்கள் கடுமையான மத விதிகளின் மீது நம்பிக்கை கொண்ட புரோடஸ்டன்ட் (Protestant) கிறிஸ்தவர்கள்.

இயேசு கிறிஸ்து டிசம்பர் 25 அன்று பிறந்ததற்கு பைபிளில் ஆதாரம் இல்லை என கூறி ப்யூரிடன் அரசாங்கம் கிறிஸ்துமஸை ஒரு பேகன் (Pagan- கிறிஸ்தவம், இஸ்லாம், யூதம் போன்ற ஆபிரகாமிய சமயங்களைச் சாராதவர்கள்) விடுமுறையாகக் கருதியது.

நாட்காட்டியைப் பற்றிய விஷயத்தில் அவர்கள் ஓரளவு தெளிவாக இருந்தனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை விட்டுக் கொடுங்கள் என்பது தான் பிரச்னையாக இருந்தது. இங்கிலாந்தில் 1660 வரை கிறிஸ்துமஸ் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் தடை செய்யப்பட்டன.

இதனால் டிசம்பர் 25 அன்றும், கடைகள் மற்றும் சந்தைகளைத் திறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதே நேரத்தில் பல தேவாலயங்கள் தங்கள் கதவுகளை மூட வேண்டியிருந்தது. கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடுகள் சட்டவிரோதமானதாக இருந்தன.

கிறிஸ்துமஸ், பிரிட்டன், அமெரிக்கா
படக்குறிப்பு,ஒரு ப்யூரிடன், கிறிஸ்துமஸ் சடங்குகளில் ஈடுபட்டதற்காக குழந்தைகளைக் கண்டிப்பதை சித்தரிக்கும் ஓவியம்

ஆனால், மக்களால் அந்தத் தடையை அவ்வளவு எளிதாக ஏற்க முடியவில்லை.

மீண்டும் ஒன்று கூடி மது அருந்த, விருந்து உண்ண, பாடல்கள் பாட, என தங்களின் சுதந்திரங்களை மீட்டெடுக்க மக்கள் போராட்டங்கள் நடத்தினர்.

மன்னர் இரண்டாம் சார்லஸ் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் வரை, கிறிஸ்துமஸ் எதிர்ப்புச் சட்டம் திரும்பப் பெறப்படவில்லை.

அமெரிக்க ப்யூரிடன்களும் விருந்து மற்றும் கொண்டாட்டங்களை வெறுத்தனர்.

இங்கிலாந்தில் சொல்லப்பட்ட அதே காரணங்களுக்காக, அமெரிக்காவின் மாசசூசெட்ஸிலும் 1659 மற்றும் 1681க்கு இடையில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவில்லை.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களைத் தடைசெய்யும் சட்டம் நீக்கப்பட்ட பிறகும் கூட, பல ப்யூரிடன்கள் ‘டிசம்பர் விடுமுறையை’ பேகன் நம்பிக்கைகளுடன் தொடர்புபடுத்தி வெறுத்தனர்.

கிறிஸ்துமஸ், பிரிட்டன், அமெரிக்கா
படக்குறிப்பு,இயேசு பிறப்பைச் சித்தரிக்கும் ஓவியம்

இயேசுவின் உண்மையான பிறந்த தேதி என்ன?

உண்மை என்னவென்றால், இயேசு கிறிஸ்து எப்போது பிறந்தார் என்பதில் ஒருமித்த கருத்து இல்லை.

சில இறையியலாளர்கள், ‘வயல்களில் மேய்ப்பர்கள் தங்கள் ஆட்டு மந்தைகளை இரவில் கண்காணித்துக் கொண்டிருந்தார்கள்’ என்ற பைபிள் குறிப்பை மேற்கோள் காட்டி, அது வசந்த காலமாக இருக்கலாம் என்று நினைக்கிறார்கள். டிசம்பர் மாதத்தில் அவர்கள் தங்கள் ஆடுகளுக்கு அடைக்கலம் தேடியிருக்கலாம்.

அல்லது அது இலையுதிர்காலமாக இருந்திருக்கலாம். ஆடுகளின் இனச்சேர்க்கை காலம் எனும்போது, ஏற்கனவே இனச்சேர்க்கையில் ஈடுபட்ட ஆடுகளை மற்றவற்றிலிருந்து பிரிக்கும் நோக்கில் மேய்ப்பர்கள் தங்கள் மந்தைகளை கண்காணித்துக் கொண்டு இருந்திருக்கலாம்.

ஆனால் பைபிளில் தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

பேகன் சடங்குகள்

கிறிஸ்துமஸ், பிரிட்டன், அமெரிக்கா
படக்குறிப்பு,இந்த 19ஆம் நூற்றாண்டு ஆங்கில கார்ட்டூன் சித்தரிப்பு போல, ரோமானியர்கள் மது விருந்துகளை விரும்பினர்

ரோமானிய காலத்திலிருந்தே, டிசம்பர் மாத இறுதியில் பண்டிகையைக் கொண்டாடுவது என்பது பேகன் பாரம்பரியத்தின் அங்கமாக இருந்தது.

அடிப்படையில், அது ஒரு அறுவடை திருவிழா. பரிசுகள் பகிரப்பட்டன, வீடுகள் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டன, உண்பதற்கு ஏராளமான உணவு வகைகள் இருந்தன மற்றும் அளவுக்கு அதிகமாக மது அருந்துவது அந்த விடுமுறை காலத்தின் தவிர்க்க முடியாத அம்சமாக இருந்தது.

வரலாற்றாசிரியர் சைமன் செபாக் மான்டிஃபியோரின் கூற்றுப்படி, “பேகன் மரபுகளில், சில ‘கேளிக்கை செயல்பாடுகளில்’ ஈடுபட மக்களுக்கு அனுமதி இருந்தது. இது ஆரம்பகால கிறிஸ்தவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. போட்டி உணர்வை அதிகரித்தது.”

ரோமானியர்கள் படிப்படியாக பேகன் நம்பிக்கைகளை கைவிட்டு கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டனர். இந்த மாற்றத்தில், கிறிஸ்தவ நாட்காட்டி படிப்படியாக பேகன் நாட்காட்டியின் இடத்தை எடுத்துக் கொண்டது.

ஒரு காலகட்டத்தில், ரோமானியர்கள் இரண்டு மரபுகளிலும் பங்கெடுத்தனர். 4ஆம் நூற்றாண்டின் இறுதியில், பேகன் சடங்குகள் மற்றும் கிறிஸ்தவச் சடங்குகள் ஒரே சமயத்தில் (டிசம்பர் மாதத்தில், 14 நாட்களுக்கு) நடத்தப்பட்டன.

ஆனால் இரு மரபுகளுக்கிடையே மோதல் இல்லாமல் இல்லை.

வென்றவர்களும் தோற்றவர்களும்

கிறிஸ்துமஸ், பிரிட்டன், அமெரிக்கா
படக்குறிப்பு,இந்த 19 ஆம் நூற்றாண்டு பிரிட்டிஷ் கார்ட்டூனின் படி, கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது மிதமிஞ்சிய உணவுகள் உட்கொள்ளப்பட்டன

இறுதியில், கிறிஸ்தவம் வெற்றி பெற்றது.

17 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்துமஸ் பண்டிகை மீது நடத்தப்பட்ட போர் என்பது, பேகன் பாரம்பரியத்தின் எச்சங்கள் என்று எதையெல்லாம் ப்யூரிட்டன்கள் கருதினார்களோ, அதை அழிப்பதற்கான அவர்களின் முயற்சியாகவே பார்க்கப்பட்டது.

ஆனால் இப்போது நம்மைச் சுற்றி நடக்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களைப் பார்த்தல் அவர்கள் தோற்றுவிட்டார்கள் என்பது தெளிவாகப் புரியும்.

இந்த பண்டிகை நாட்களில், உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள், வீட்டில் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரத்தை வைப்பார்கள், இறைச்சியை மகிழ்ச்சியோடு சாப்பிடுவார்கள், மதுவை உற்சாகமாக அருந்துவார்கள்.

அவர்களின் இந்த பண்டிகைக் கொண்டாட்டங்களுக்கு பின்னால், சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமையான வரலாறு உள்ளது.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

விராட் கோலியை கடுமையாக கழுவி ஊற்றும் ரசிகர்கள்!

0

மெல்போர்னில் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான பாக்ஸிங் டே டெஸ்டின் முதல் நாளிலேயே, பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

பும்ரா உள்ளிட்ட இந்திய பந்துவீச்சாளர்களைத் திணற வைத்த ஆஸ்திரேலியாவின் இளம் வீரருக்கும் இந்தியாவின் விராட் கோலிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

மைதானத்துக்கு உள்ளேயே உடல் ரீதியாகவும், வார்த்தைகளாலும் நடந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர கள நடுவர் தலையிட வேண்டியிருந்தது.

இந்த மோதல் தொடர்பாக பெரும்பாலும், விராட் கோலி மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இதைத் தொடர்ந்து விராட் கோலிக்கு போட்டியின் சம்பளத்தில் 20 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டது. ஒரு தகுதிக் குறைப்பு புள்ளியும் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது.

பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4-வது டெஸ்ட் வியாழக்கிழமை மெல்போர்னில் தொடங்கியது. ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார்.

சாம் கான்ஸ்டாஸ் மற்றும் உஸ்மான் கவாஜா ஆஸ்திரேலியாவுக்காக இன்னிங்ஸை தொடங்கினர். இது சாம் கான்ஸ்டாஸின் முதல் டெஸ்ட். 19 வயதான அவர், தனது பேட்டிங் திறனுக்காக உள்ளூர் போட்டிகளில் பிரபலமானவர்.

சாம் கான்ஸ்டாஸ் ஆரம்பத்தில் இருந்தே இந்திய பந்துவீச்சை திறமையாகச் சமாளித்து ஆடினார். ஜஸ்ப்ரீத் பும்ராவின் பந்துகளையும் அவர் விட்டு வைக்கவில்லை.

ஆறாவது ஓவரில் பும்ராவின் பந்தில் 2 பவுண்டரிகளும் ஒரு சிக்சரும் அடித்து இந்திய அணியை அச்சுறுத்தினார் கான்ஸ்டாஸ். இந்த சிக்சருக்கு முன்புவரை டெஸ்ட் போட்டிகளில் 4,562 பந்துகளை சிக்சர் விட்டுக்கொடுக்காமல் வீசியிருக்கிறார் பும்ரா. அதனால் பும்ராவின் பந்தில் சிக்சர் அடிக்கவே முடியாது என்ற பெருமை அவருக்கு இருந்தது. இதற்கு முன் 2021-ஆம் ஆண்டில் சிட்னியில் நடந்த டெஸ்டில் கேமரன் கிரீன் சிக்சர் அடித்திருந்தார்.

தான் ஆடிய டெஸ்ட் போட்டிகளிலேயே ஒரு ஓவரில் அதிக ரன்களை பும்ரா விட்டுக் கொடுத்ததும் இந்த ஓவரில்தான். அதில் 18 ரன்கள் எடுக்கப்பட்டன.

“பும்ராவை சமாளிக்க என்னிடம் திட்டம் இருக்கிறது” என்று போட்டிக்கு முன்னரே கூறி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தார் கான்ஸ்டாஸ்.

கான்ஸ்டாஸின் ஆக்ரோஷமான பேட்டிங் காரணமாக இந்தியா தரப்பில் பரபரப்பு ஏற்பட்டது. கான்ஸ்டாஸின் விக்கெட்டை வீழ்த்த கேப்டன் ரோஹித் சர்மா எடுத்த ஒவ்வொரு முயற்சியும் தோல்வியடைந்தது.

பத்தாவது ஓவர் முடிந்த பிறகு கான்ஸ்டாஸ் தனது சக வீரர் உஸ்மான் கவாஜாவை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த கோலி, கான்ஸ்டாஸின் தோளில் மோதினார். பின்னர் இருவரும் கோபமாக வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்டனர். அதைத் தொடர்ந்து, நடுவர் தலையிட்டு இருவரையும் கலைந்து போக வைத்தார்.

பத்தாவது ஓவர் முடிந்த பிறகு கான்ஸ்டாஸ் தனது சக வீரர் உஸ்மான் கவாஜாவை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த கோலி, கான்ஸ்டாஸின் தோளில் மோதினார். பின்னர் இருவரும் கோபமாக வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்டனர். அதைத் தொடர்ந்து, நடுவர் தலையிட்டு இருவரையும் கலைந்து போக வைத்தார்.

புகையிரத போக்குவரத்துக்கு புதிய முகாமையாளர்!

0

புதிய புகையிரதப் பொது முகாமையாளராக ஜே.ஐ.டி. ஜயசுந்தர இன்று (26) மருதானை புகையிரதப் பொது முகாமையாளர் அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை ஆரம்பித்தார்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் போக்குவரத்துப் பிரிவின் பணிப்பாளர் நாயகமாகக் (தொழில்நுட்பம்) இதற்கு முன்னர் கடமையாற்றிய ஜே. ஐ. டி. ஜயசுந்தர , புகையிரதப் பொது முகாமையாளர் பதவியில் பணியாற்றுவதற்காக தற்போது நியமிக்கப்பட்டார்.

இன்று காலை சமய அனுஷ்டானங்களுடன் தனது பதவிக்கான கடமைகளை ஆரம்பித்த புதிய பொது முகாமையாளர், உரையாற்றுகையில்;

புதிய அரசாங்கத்தின் கொள்கைக்கு இணங்க புகையிரதத் திணைக்களம் பொதுமக்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் நிறுவனம் என்பதுடன், இதனை முன்னிலைக்கு கொண்டு வருவதற்கு செயற்படுவதாகவும், அதற்காக அனைவரின் அர்ப்பணிப்பு மற்றும் ஒத்துழைப்பினை எதிர்பார்ப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் (போக்குவரத்து பிரிவு) மேலதிக பொது முகாமையாளர் எல்.எச். திலகரத்ன, துறை சார் அமைச்சின் உயர் அதிகாரிகள், புகையிரத திணைக்களத்தின் அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் மின் கம்பி திருட்டு!

0

கட்டுநாயக்க கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் மின் கம்பிகளை வெட்டுதல் தொடர்பாக அமைச்சுக்கு கிடைக்க பெற்றுள்ள முறைப்பாடுகளை கருத்தில் கொண்டு, அதிவேக நெடுஞ்சாலையின் பாதுகாப்பிற்கு பொலிஸ் விசேட அதிரடிப் படையினரை (STF) சுற்றுலா ரோந்து சேவையின் அடிப்படையில் ஈடுபடுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.

இந்த அதிவேக நெடுஞ்சாலையின் மின்கம்பிகளை வெட்டிச் செல்லும் சந்தர்ப்பங்களில் அந்த திருடர்களுக்கு தண்டனை வழங்கினாலும் எவ்வளவு புதுப்பித்தாலும் மீண்டும் மீண்டும் இந்த செயற்பாடு இடம்பெறுவதுடன், இரவு காலங்களில் இடம்பெறும் இந்த திருட்டினால் வீதியைப் பயன்படுத்தும் நபர்களும் மக்கள் பயப்படுவதாக தெரிய வருகின்றது.

இதற்கான இந்த யோசனை இரவு நேரங்களில் சுற்றுலா ரோந்து சேவையை முறையாக மேற்கொள்வது தீர்வாக அமையும் என்று நெடுஞ்சாலைகள் அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

அவ்வாறே இந்த வீதியில் இடம்பெறும் விபத்துகளின் போதும் அவற்றை உடனடியாக நீக்குவதற்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கும் இந்த அதிரடிப்படையினரின் ஒத்துழைப்பை வழங்குவதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 20 வருடங்கள் நிறைவு!

0

35,000க்கும் அதிகமான உயிர்களை பலிகொண்ட சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் (26) 20 வருடங்கள் நிறைவடைகிறது.

இதற்கமைய நாட்டில் ஏற்பட்ட பல்வேறு அனர்த்தங்களினால் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூரும் வகையில் இன்று “தேசிய பாதுகாப்பு தினம்” அனுஷ்டிக்கப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

2004 ஆம் ஆண்டு சுனாமியில் 35,000 க்கும் அதிகமானோர் பலியானதுடன் 5,000 க்கும் அதிகமானோர் காணாமல் போயினர்.

அதன்படி, 2005ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26ம் திகதி தேசிய பாதுகாப்பு தினமாக அறிவிக்கப்பட்டு வருகிறது.

இவ்வருடம் “தேசிய பாதுகாப்பு தினத்தை” மாவட்ட மட்டத்தில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், பிரதான நிகழ்வு காலி “பெரலிய சுனாமி நினைவுத் தூபிக்கு” ​​முன்பாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுனாமி அனர்த்தம் மற்றும் ஏனைய அனர்த்தங்களினால் உயிரிழந்த மக்களை நினைவு கூறும் வகையில் இன்று காலை 9.25 முதல் 9.27 வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையில், 2004 இல் நாட்டை பாதித்த சுனாமியுடன், சுனாமி எச்சரிக்கைகளைக் கண்டறிய நாட்டின் 14 மாவட்டங்களில் 77 சுனாமி கோபுரங்கள் நிறுவப்பட்டன.

எவ்வாறாயினும், 77 சுனாமி கோபுரங்களில் 5க்கும் குறைவானவையே தற்போது செயற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுனாமி கோபுரங்களை நிறுவுவதற்கான தொழில்நுட்ப ஆதரவை அமெரிக்க நிறுவனம் ஒன்று வழங்கியுள்ளதுடன், கோபுரங்கள் நிர்மாணிக்கப்பட்ட பின்னர் பல தடவைகள் அவற்றை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், குறித்த நிறுவனம் உற்பத்தியை இடைநிறுத்தியதன் காரணமாக, செயலிழந்த கோபுரங்களை சரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

மாவட்ட மட்டத்தில், இராணுவத்தினர் மற்றும் பொலிசார் கோபுரங்களுக்கு பொறுப்பாக இருந்ததுடன் அவை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுகளால் கண்காணிக்கப்பட்டன.

சுனாமி அனர்த்தம் தொடர்பில் சர்வதேச மட்டத்திலிருந்து வளிமண்டலவியல் திணைக்களத்திற்கு கிடைக்கும் தகவலையடுத்து, வளிமண்டலவியல் திணைக்களம் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அறிவித்த பின்னர் இந்த கோபுரங்களை செயற்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த சுனாமி கோபுரங்களின் தொழில்நுட்ப செயல்திறன் குறித்து நிபுணர் குழு மூலம் பரிந்துரைகளை பெற்று எதிர்காலத்தில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்த திட்டங்களை தயாரித்து வருவதாக மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், இதுவரை 14 கடலோர மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 70,000 பேரின் தொலைபேசிகளுக்கு சுனாமி எச்சரிக்கை பற்றிய சமிக்ஞைகளை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், தொலைத்தொடர்பு ஆணைக்குழு, இந்நாட்டில் தொடர்பாடலை வழங்கும் தொலைபேசி வலையமைப்புகள் என்பனவற்றுடன் இணைந்து சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் குறுந்தகவல் மூலம் மக்களுக்கு அறிவிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தற்போதைய தொழில்நுட்பம் காரணமாக இலங்கை சுனாமி போன்ற அனர்த்தங்களுக்கு முகங்கொடுக்க நன்கு தயாராக உள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் புவி விஞ்ஞானப் பிரிவின் பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அதற்கான ஒத்திகைகளை நடத்துவது மிகவும் முக்கியமானது என பேராசிரியர் அதுல சேனாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

உடப்பு மீன்பிடி சங்கத்திற்கு மீன்பிடி வலைகள்!

0

முன்னாள் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பன்முகப் படுத்தப்பட்ட நிதியின் மூலம் உடப்பு ராக்குர்ஷி அம்மன் ஆற்று மீன்பிடி சங்கத்திற்கு ரூ. 500,000.00 பெறுமதியான மீன்பிடி வலைகள் அன்மையில் வழங்கி வைக்கப்பட்டது.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் அவர்களினால் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய குறித்த மீன்பிடி வலைகள் வழங்கிவைக்கப்பட்டது.

இதேவேளை உடப்பு ராகுர்ஷி அம்மன் மீன்பிடி மற்றும் மகளிர் சங்கத்திற்கான ஒரு தொகை கதிரைகளும் வழங்கிவைக்கப்பட்டன.

கடந்த காலங்களில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் அவர்களினால் மக்களுக்கு செய்யப்பட சமத்துவமான சேவைகள் குறித்தும் பயனாளர்களினால் நினைவுகூரப்பட்டது.

முன்னாள் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் அவர்களின் உடப்பு இணைப்பாளர் திரு. செல்வநாயகம் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி நிகழ்வில் BCMH நிறுவன செயற்திட்ட அதிகாரி எம்.எம். நௌபர் அதிதியாக கலந்து கொண்டு மீன்பிடி வலைகளை சங்க அங்கத்தவர்களுக்கு வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது.

12 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு

0

நத்தார் பண்டிகையை முன்னிட்டு நேற்று (25) மட்டக்களப்பு சிறையிலிருந்து 12 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

சிறிய குற்றங்களுக்காகவும், வேறு காரணங்களுக்காகவும் தண்டனை பெற்றவர்களுக்கு நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதியினால் வழங்கப்படுகின்ற பொது மன்னிப்பின் அடிப்படையில் குறித்த பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 12 ஆண் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன் தலைமையில் இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது  சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் உள்ளிட்ட சிறைச்சாலை அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

ஒலிபரப்பு நிலையம் முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும்!

0

மாகாணக் கல்வித் திணைக்களத்தின் நிர்வாகம் மிகவும் பலவீனமடைந்துள்ளது. இதனால் ஆசிரியர்கள் தமது தமக்குரிய சேவைகளைப் பெற்றுக் கொள்வதில் மிகவும் சிரமப்பட்டு வருவதுடன், புதிய மாகாணக் கல்விப் பணிப்பாளர் இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என திருகோணமலை மாவட்ட ஐ.ம.ச பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற முதலாவது மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் போதே இவர் இதனை தெரிவித்தார்.

குறித்த கூட்டத்தில் தொடர்ந்தும் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்,

“சில கடிதங்களுக்கு ஒப்பமிட உரிய உத்தியோகத்தர்கள் இல்லை என்ற காரணம் காட்டி கிடப்பில் போடப்பட்டுள்ளது. பரீட்சைக் கடமை முடிந்து வந்த பின்னர் தான் ஒப்பம் பெற முடியும் என விடயத்திற்குப் பொறுப்பானவர்கள் கூறுவதாக ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பரீட்சை ஒரு மாதமாக நடக்கின்றது. இதிலிருந்து தாமதத்தின் அளவைக் கணக்கிட்டுக் கொள்ள முடியும்.

எனவே, நிர்வாகத்திற்குப் பொறுப்பானவருக்கு பரீட்சைக் கடமைகள் வழங்கக் கூடாது அல்லது அதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும். மாகாணக் கல்விப் பணிப்பாளர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் கும்புறுபிட்டியில் அமைந்துள்ள உப ஒலிபரப்பு நிலையம் முன்னர் ஜேர்மன் வானொலிக்கு சொந்தமாக இருந்தது. தற்போது அது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் உப நிலையமாக செயற்படுகின்றது.

தற்போது இந்த வானொலி உப ஒலிபரப்பு நிலையத்தினூடாக உள்ளுர் நிகழ்ச்சிகள் எதுவும் ஒலிபரப்பப் படுவதில்லை. வெளிநாட்டு ஒலிபரப்பு ஒன்றுக்காக மட்டும் இந்த நிலையம் பயன்படுத்தப்படுகின்றது. அதுவும் மாலை வேளையில் மட்டும் இந்த ஒலிபரப்பு இடம்பெறுகின்றது. இதற்காக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் வாடகை பெறப்படுகின்றது. ஏனைய நேரங்களில் இந்த நிலையம் எவ்வித செயற்பாடும் இன்றி இருக்கின்றது.

இம்மாவட்டத்தில் உள்ள பெறுமதி மிக்க வளம் முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பது கவலைக்குரியது.

எனவே, இந்த ஒலிபரப்பு நிலையம் முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும். இப்பகுதி கலை பண்பாட்டு நிகழ்வுகளை ஒலிபரப்ப முக்கியத்துவம் கொடுக்கப்படலாம். உள்ளுர் செய்திகள் ஒலிபரப்ப வாய்ப்புகள் வழங்கப்படலாம். அறிவு சார்ந்த நிகழ்வுகள், மாணவர் நிகழ்வுகள் எனப் பல்வேறு நிகழ்வுகளுக்கு முக்கியத்தவம் கொடுக்கப்படலாம். இதன் மூலம் மக்கள் மத்தியில் இந்த ஒலிபரப்பு நிலையம் பிரபலமடைந்து விளம்பரங்கள் மூலம் வருமானத்தை ஈட்டிக் கொள்ளலாம். குறிப்பிட்டளவு வேலைவாய்ப்பையும் உருவாக்கலாம்.

எனவே, இப்பகுதி முக்கியஸ்தர்களையும் உள்ளடக்கிய குழு ஒன்றை நியமித்து பரிந்துரைகளைப் பெற்று இதனை அபிவிருத்தி செய்ய வேண்டும். இது தொடர்பான கோரிக்கையை நமது இந்த அபிவிருத்திக்குழு ஊடகத்துறை அமைச்சருக்கு முன் வைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” என அவர் தெரிவித்தார்.

தொடர்ந்தும் பேசிய பாராளுமன்ற உறுப்பினர், கிண்ணியா நகரசபைப் பகுதியின் ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவு ஈச்சந்தீவாகும். விவசாயக் குடும்பங்களே இங்கு அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். இங்கு காட்டு யானைகளின் தொல்லைகள் அதிகமாகக் காணப்படுகின்றன. தென்னை போன்ற வான் பயிர்களை யானைகள் சேதப்படுத்தகின்றன. யானைகளால் வீடுகள் சேதமாக்கப்பட்ட சம்பவங்களும் கடந்த காலங்களில் பதிவாகியுள்ளன. இதனால் இம்மக்கள் இரவு வேளைகளில் அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர். இந்த விடயம் கிண்ணியா பிரதேச செயலாளருக்கு நன்கு தெரியும்.

எனவே, காட்டு யானைகளின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த இப்பகுதியில் யானை வேலி அமைக்கப்பட வேண்டும். சுமார் 2 கிலோமீற்றர் நீளமுள்ள யானை வேலி போதுமானதென இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, இது குறித்து கவனம் செலுத்தி ஈச்சந்தீவுக் கிராமத்தில் யானை வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலாவது அபிவிருத்தி குழு கூட்டத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.