புத்தளம் புழுதிவயல் அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தில் இடம்பெற்ற வருடாந்த பரிசளிப்பு விழா.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
புத்தளம் தெற்கு கோட்டத்துக்குட்பட்ட புழுதிவயல் அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று வெள்ளிக்கிழமை (03) மிக கோலாகலமாக இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் எம்.ஏ.எல்.எம். றிபாய்தீன் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் பிரதம அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம். பைஸல், விஷேட அதிதியாக புத்தளம் வலய கல்விப் பணி மனையின் பிரதிக் கல்விப்பணிப்பாளர் எம்.ஏ.எம். அனீஸ், கௌரவ அதிதியாக புத்தளம் தெற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.எம். நௌஸாத் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது
பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட முஸ்லிம் கலாச்சாரப் போட்டியின் அறிவுக்களஞ்சியப் போட்டியில் மன்/எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய கல்லூரி வட மாகாணத்தில் முதலிடம் பெற்று தேசிய போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே நடைபெற்ற மாவட்ட மட்ட அறிவுக்களஞ்சியப் போட்டியில் மன்/எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய கல்லூரி முதலிடம் பிடித்து மாகாண மட்ட போட்டிக்கு தெரிவாகி இருந்தது.
அந்த வகையில் மன்னார் முருங்கன் பாடசாலையில் நடைபெற்ற மாகாண மட்ட அறிவுக்களஞ்சியப் போட்டியில் மன்/எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய கல்லூரி முதலிடம் பெற்று தேசிய போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
குறித்த போட்டியில் ஒவ்வொரு பாடசாலை சார்பாகவும் 5 மாணவர்கள் கலந்துகொண்டு போட்டியில் பங்கெடுத்தனர்.
மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற மாகாண மட்ட அறிவுக்களஞ்சியப் போட்டியில் ஏனைய சகல பாடசாலைகளையும் வீழ்த்தி மன்/எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய கல்லூரி முதலிடம் பிடித்து தேசிய போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளமை ஓர் சிறப்பம்சமாகும்.
இதேவேளை குறித்த முஸ்லிம் கலாச்சாரப் போட்டியின் அதான் கூறுதல் போட்டியில் மன்/எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவன் எஸ்.சப்ராஸ் முதலிடம் பிடித்து தேசிய போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், அரபு தமிழ் போட்டியில் அதே பாடசாலையைச் சேர்ந்த எச்.அஸ்ரா என்ற மாணவியும் முதலிடம் பிடித்து தேசிய போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
நடைபெற்ற மாகாண மட்ட போட்டிகளில் ஒரே பாடசாலை மூன்று போட்டிகளிலும் முதலிடம் பிடித்து தேசிய போட்டிக்கு தெரிவாகியுள்ளமை விஷேட அம்சமாகும்.
குறித்த போட்டிகளில் பங்குபற்றி வெற்றிபெற சகல வழிகளிலும் மாணவர்களை தயார்படுத்திய ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை சமூகத்திற்கு ஊர் மக்கள் தமது நன்றிகளை தெரிவித்துவரும் அதேவேளை மாணவர்களின் இச்சாதனைக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புத்தளம் மாவட்டத்தில் யானைகள் மற்றும் மனித மோதலை தடுப்பது தொடர்பான விஷேட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று 03.10.2025 புத்தளம் மாவட்ட செயலாளர் Y.I.M. சில்வா தலைமையில் புத்தளம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
குறித்த மாவட்டத்தில் காட்டு யானை மற்றும் மனித மோதல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதை தடுக்கும் நோக்கில் குறித்த ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
காட்டு யானைகள் மற்றும் மனித மோதல்களில் இதுவரை சுமார் 300 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதுடன், 150 இற்கும் அதிகமான மனித உயிர்கள் காவு கொல்லப்பட்டுள்ளதாக சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி தெரிவித்தார்.
காட்டு யானைகளுக்கு தேவையான நீர் மற்றும் உணவு பற்றாக்குறையின் காரணமாகவே காட்டு யானைகள் கிராமங்களுக்குள் ஊடுருவுவதாகவும், அதனை தடுப்பதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வருடத்திற்கு சுமார் 8 மாதங்கள் வரை காட்டு யானைகளின் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்த சுற்றாடல் பிரதி அமைச்சர், யானை மனித மோதல்களினால் ஏற்படும் உயிரிழப்புக்களை தடுப்பதே பிரதான நோக்கம் எனவும் குறிப்பிட்டார்.
காட்டு யானைகள் கிராமப்புறங்களுக்குள் பிரவேசிப்பதை தடுக்க, காட்டுப்பகுதிக்குள் சுமார் 15 குளங்கள் புனரமைக்கப்பட இருப்பதாக புத்தளம் பிராந்திய வனத்துறை பணிப்பாளர் கமால் தென்னகோன் தெரிவித்தார்.
மேலும் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் சுமார் 10 ஆயிரம் தென்னங்கன்றுகள் காட்டு யானைகளின் தாக்குதலினால் முற்றாக சேதமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இவ்வாறான தாக்கங்களை கட்டுப்படுத்த புத்தளம் மாவட்டத்தில் இதுவரை சுமார் 370 கி.மீ தூரத்திற்கு காட்டு யானைகளுக்கான பாதுகாப்பான மின்சார வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை புத்தளம், குருநாகல், அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்கள் காட்டு யானைகளின் அதிக அச்சறுத்தல் இருக்கும் முக்கிய மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
காட்டு யானைகள் மற்றும் மனித மோதல்களை தடுக்கும் நோக்கில், வனத்துறைக்கு 100 கெப் ரக வண்டிகளும், 150 மோட்டார் சைக்கிள்களும் கொள்முதல் செய்ய அமைச்சரவைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச செயலக அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஏனைய அரச நிறுவன அதிகாரிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
கற்பிட்டி வாழைத்தோட்டம் பகுதியில் மூன்று வயது குழந்தை பாலியல் துஷ்பிரயோகம்
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டி, வாழைத்தோட்டம் பகுதியில் மூன்று வயது பெண் குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மிக மோசமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கற்பிட்டி வாழைத்தோட்டம் பகுதியில் வசிக்கும் சுமார் 35 வயதுடைய, திருமணமான நபர் ஒருவர் அதே பகுதியில் வசிக்கும் மூன்று வயது பெண் பிள்ளையை இரகசிய இடம் ஒன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக அந்த குழந்தை மிகுந்த வலியினால் துடித்துள்ளதை அடுத்து மேற்கொண்ட சோதனையின்போது குறித்த சம்பவம் தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் வாழைத்தோட்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய நபரின் வீட்டை ஊர் மக்கள் முற்றுகை இட்டனர்.
இதன்போது தப்பி ஓட முயற்சித்த குறித்த சந்தேக நபர் பெரும் போராட்டத்திற்கு மத்தியில் ஊர் மக்களால் பிடிக்கப்பட்டு கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் பாதிக்கப்பட்ட பெண் குழந்தையை புத்தளம் தள வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதையலில் இருந்து பெறப்பட்டதாகக் கூறி ரத்தினக் கல்லை விற்பனை செய்ய முற்பட்ட மூன்று பேர் நுரைச்சோலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 11 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர்கள் நேற்று 2.10.2025 கல்பிட்டி, திஹலிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மூவரும் வென்னப்புவ – லுனுவில, கல்பிட்டி – ஆலங்குடாவ மற்றும் கல்பிட்டி – திஹாலிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் 56, 54 மற்றும் 34 வயதுடையவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதையலில் இருந்து பெறப்பட்ட ரத்தினக் கல்லை விற்பனை செய்யத் தயாராகும் குழு குறித்து நொரச்சோலை பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் புத்தளம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நிலையில் எதிர்வரும் 11 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி மாவட்டத்தில் வடக்கு மாகாண உலக சுற்றுலா தின நிகழ்வினை நடாத்துவது தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்!
வடக்கு மாகாண உலக சுற்றுலா தின நிகழ்வு எதிர்வரும் திங்கட்கிழமை (06.10.2025) கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் மாலை 4.00மணிக்கு “சுற்றுலாவும் அதன் நிலைபெறான நிலை மாற்றமும்” என்னும் தொனிப் பொருளில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் உலக சுற்றுலா தின நிகழ்வு தொடர்பான ஏற்பாடுகளை இறுதி செய்வதற்கான முன்னாயத்த கலந்துரையாடல் இன்று (03.10.2025) நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில், மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.
இதன்போது பழைய மாவட்ட செயலகத்திலிருந்து பசுமை பூங்கா வரையிலான நடைபவனி ஒழுங்குகள், பல்வேறு கலை நிகழ்வுகள், காட்சிக்கூடங்கள், மேடை ஒழுங்கமைப்பு, ஒலி – ஒளி அமைப்பு, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு ஒழுங்கமைப்புக்கள் தொடர்பாக கலந்துரையாடி முடிவுகள் எட்டப்பட்டன.
இக் கலந்துரையாடவில் வடக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் பணிப்பாளர் வை.யசோதா, கிளிநொச்சி மாவட்ட சமர்த்திப் பணிப்பாளரும் பதில் திட்டமிடல் பணிப்பாளருமான எஸ்.மோகனபவன், கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன், உதவி மாவட்ட செயலாளர் ஹ.சத்தியஜீவிதா, மாவட்ட செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், கரைச்சி பிரதேச சபை செயலாளர் த.ஞானராஜ், வடக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் கலாசார பிரிவு உத்தியோகத்தர்கள், கரைச்சி பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகர்கள், துறை சார்ந்த திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் கலைஞர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்தியாவிலிருந்து கடல் வழியாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 408 கிலோகிராம் பீடி இலைகளை கொண்டு செல்ல தயாரான சந்தேக நபரை நுரைச்சோலை போலீசார் கைது செய்துள்ளனர்.
கல்பிட்டி, ஏத்தாளை பகுதியில் நேற்று 2 ஆம் தேதி இரவு இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.
காவல்துறை சிறப்பு பணியகத்தின் கல்பிட்டி பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட 13 பீடி இலைகள் அடங்கிய பொதிகள் மற்றும் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட ஒரு பொலேரோ ஜீப்பும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
பீடி இலைகளுடன் புத்தளத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர், பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள் மற்றும் ஜீப் புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளன.
நுரைச்சோலை போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் மாவட்ட விளையாட்டு கட்டிட தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளம் (swimming pool) நாளை திறந்துவைக்கப்பட உள்ளது.
மன்னார் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குறித்த நீச்சல் குளம், விளையாட்டு அபிவிருத்தி துறையின் நிதி ஒதுக்கீட்டில் சுமார் ரூ.94 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
நானாட்டம் பிரதேச பிரிவின் நாராவில குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந் நீச்சல் குளம், இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தலைமையில் நாளை பிற்பகல் 2.00 மணியளவில் திறந்துவைக்கப்பட உள்ளது.
இதேவேளை புனித சேவியர் கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட உள்ள, உள்ளக விளையாட்டு மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் விழாவும் நாளைய தினம் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
வறுமையை ஒழிப்பதற்கான பிரச்சாரத்தை தொடங்குவதற்கு அரசு ஊழியர்களுக்கும் ஒரு அசைக்க முடியாத வரலாற்றுப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
புத்தளம் மாவட்டத்தில் உள்ள ஆனமடுவ நகரில் ரூ.163 மில்லியன் செலவில் கட்டப்பட்ட புதிய ஆனமடுவ பிரதேச செயலகக் கட்டிடம் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் டாக்டர் சந்தன அபயரத்ன தலைமையில் இன்று திறந்துவைக்கப்பட்டது.
35 பிரிவுகளைச் சேர்ந்த 140 கிராமங்களை உள்ளடக்கிய ஆனமடுவ பிரதேச செயலகப் பிரிவில் 14,763 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 44,483 மக்கள் இந்தப் பிரிவில் வசிக்கின்றனர், மேலும் இந்தப் புதிய அலுவலக வளாகம் திறக்கப்பட்டதன் மூலம், அவர்களுக்கு தேவையான சேவைகளை எளிதாக அணுக முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் கூறியதாவது;
”பொது சேவையை நெறிப்படுத்தவும், பொது சேவையை திறம்படச் செய்யவும் எங்கள் அமைச்சகம் ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. அழகான வாழ்க்கையுடன் கூடிய பணக்கார நாட்டை உருவாக்குவதே அரசாங்கத்தின் முக்கிய கொள்கை. நாம் ஏன் ஒரு பணக்கார நாட்டை உருவாக்க வேண்டியிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும்.
இந்தப் பகுதியிலும் இந்த நாட்டிலும், ஏராளமான மக்களுக்கு போதுமான சத்தான உணவைப் பெறுவதற்கு வலுவான பொருளாதாரம் இல்லை என்பதை நாங்கள் அறிவோம். முதியவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள், பள்ளிக் குழந்தைகள், முன்பள்ளிக் குழந்தைகள் மற்றும் குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைக்காத ஒரு கடுமையான சோகம் உள்ளது.
“எங்கள் அரசாங்கத்தின் முக்கிய இலக்குகளில் ஒன்று வளமான நாட்டை உருவாக்குவதாகும். அதற்காக, நாங்கள் 3 திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறோம்.
அவற்றில், முக்கிய நோக்கம் வறுமையை ஒழிக்கும் பணி. அந்த நோக்கத்திற்காக, இந்த கட்டிடங்கள் முறையாக தயாரிக்கப்பட்டு, பொது சேவையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. வறுமையை ஒழிக்கும் பணியை அரசாங்கத்தால் மட்டும் நிறைவேற்ற முடியாது. பொது ஊழியர்களாக, ஒரு வளமான நாட்டைக் கட்டியெழுப்பவும், மக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கவும் நீங்கள் அனைவருக்கும் ஈடுசெய்ய முடியாத வரலாற்றுப் பொறுப்பு உள்ளது.” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவான் செனரத், புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கயான் ஜனக மற்றும் முகமது பைசல், ஆனமடுவ பிரதேச சபை உறுப்பினர்கள், பொது நிர்வாக அமைச்சின் கூடுதல் செயலாளர்கள், புத்தளம் மாவட்ட செயலாளர், ஆனமடுவ பிரதேச செயலாளர் மற்றும் பல அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இலங்கை இராணுவத்தின் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் கேணல் வன்னியாராச்சி நெவில் இன்று மதியம் கைது செய்யப்பட்டார்
இலங்கை இராணுவத்தின் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் கேணல் வன்னியாராச்சி நெவில், இன்று 2025.10.02 பிற்பகல் 1.32 மணியளவில் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தின் விசாரணை அதிகாரிகளால் லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் பிரிவு 23 (அ) (1) மற்றும் 2023 ஆம் ஆண்டு 9 ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 127 (1) (எச்) மற்றும் (அ) ஆகியவற்றின் கீழ் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
இவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை பாதுகாப்பு அதிகாரிகாரியாக கடமையாற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.