Thursday, March 19, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 119

உயிர்நீத்த மாணவர்கள் 53 பேருக்கு நினைவேந்தல்!

முல்லைத்தீவு – செஞ்சோலை வளாகத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி!

செஞ்சோலை வளாகத்தில் இலங்கை விமானப்படையினரின் வான் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு நேற்றைய தினம் (14.08.2025) அனுஷ்டிக்கப்பட்டது.

முல்லைத்தீவு – வள்ளிபுனம், இடைக்கட்டு பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் பயிற்சிக்காக சென்றிருந்த மாணவர்கள் மீது இலங்கை விமானப்படை நடத்திய தாக்குதலில் உயிரிழந்த பாடசாலை மாணவர்கள் 53 பேர் மற்றும் பணியாளர்கள் 4 பேரினதும் 19வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வான் தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றது.

உயிரிழந்த உறவுகளுக்கு சுடரேற்றி, அக வணக்கம் செலுத்தி, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

குறித்த அஞ்சலி நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தபிசாளர் வே.கரிகாலன், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர்களான சி.குகனேசன், க.தர்மலவன், இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் பீற்றர் இளஞ்செழியன், கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ச.ஜீவராசா, தாயக நினைவேந்தல் அமைப்பின் தலைவர் முல்லை ஈசன், இளைஞர்கள், பொதுமக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

0

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்.

கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 57 ஆவது வயதில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் ஓரினச்சேர்க்கை குறித்து கர்தினாலின் அதிர்ச்சி தகவல்!

0

நாட்டில் ஓரினச்சேர்க்கையை ஊக்குவிப்பதற்காக வெளிநாட்டு அமைப்புகளுடன் இணைந்து ஒரு குழுவினர் செயல்பட்டு வருவதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

சில அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களும் இதில் ஈடுபட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் நேற்று (14) நடைபெற்ற ருஹுணு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தர்ம கீர்த்தி ஸ்ரீ கலாநிதி அகுரெட்டியே நந்த நாயக்க தேரருக்கு மியன்மார் அரசாங்கத்தால் ‘அக்கமஹா பண்டிதர்’ கௌரவப் பட்டம் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட கர்தினால் இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அரசியலமைப்புத் திருத்தத்தில் மனித உரிமைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மன்னாருக்கு ஒரு மாத காலக்கெடு!

0

மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதா? அல்லது தற்காலிகமாக கைவிடுவதா? என்பது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபடுவோருடன் கலந்துரையாடி முடிவு எடுக்கப்படும் என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மார்க்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார். 

2ஆம் கட்ட காற்றாலை அபிவிருத்தி திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மன்னாரில் மக்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

குறித்த போராட்டத்தை கைவிடுமாறு அரசாங்க அதிபர் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு பதில் வழங்கும் வகையில் அருட்தந்தை மார்க்கஸ் அடிகளார் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

மன்னாரில் இரண்டாம் கட்ட காற்றாலை அமைத்தல் மற்றும் கனிய மண் அகழ்வை முற்றிலும் நிறுத்த கோரி மன்னார் மக்கள் சுழற்சி முறையில் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், மன்னார் மக்கள் சார்பாக ஐந்து பிரதிநிதிகள் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் (13) ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். 

அந்த சந்திப்பில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை தற்காலிகமாக ஒரு மாதத்திற்கு நிறுத்தி, அந்த காலப்பகுதியில் அதன் சாதக பாதகங்கள் தொடர்பில் அறிக்கையொன்றை தயாரிப்பதற்கும், மக்களின் கருத்துக்களை கேட்டு அறிவதற்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கில் இடம்பெற்ற அதிபர் நியமனத்தில் பாரிய மோசடி!

கிளிநொச்சியில் முறைகேடான அதிபர் நியமனம் வழங்கப்பட்டதாக தெரிவித்து இன்றைய தினம் 14.08.2025 இலங்கை சிவசேன அமைப்பு மற்றும் திரு. மாதவன் அவர்கள் ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

குறித்த ஊடக சந்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

வட மாகாணக் கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சீன் செயலாளரால் 2025.03.04. திகதி இடப்பட்ட கடிதப்பிரகாரம், வடமாகாணத்தின் 7 பாடசாலைகளுக்கு அதிபர் வெற்றிடத்தை நிரப்புவதற்கு விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது.

அவற்றுள் கிளி/ சென்திரேசா மகளிர் கல்லூரியும் ஒன்றாகும் (IAB). குறித்த பாடசாலைக்கு அதிபர் தரம் Iஐ சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது.

அதிபர் தரம் 1ஐ சேர்ந்தவர்கள் இருவரும், அதிபர் தரம் 2-1ஐ சேர்ந்தவர்கள் இருவரும், அதிபர் தரம் IIIஐ சேர்ந்தவர்கள் இருவருமாக அறுவர் கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்தில் இருந்து விண்ணப்பித்து இருந்தனர். (இணைப்பு | கிளிநொச்சி தெற்கு வலய RTI தகவல்)

யாழ் கல்வி வலயத்தில் இருந்து யா/ ஸ்ரீ சோமஸ்கந்தா இந்து ஆரம்பப் பாடசாலை அதிபர் திருமதி தேவகுமார் உதயகலா மட்டும் விண்ணப்பித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (இணைப்பு || யாழ் கல்வி வலய RTI தகவல்)

எனினும் தற்பொழுது கிளி/ சென்திரேசா மகளிர் கல்லூரிக்கு நியமிக்கப்பட்டுள்ள, யாழ்/ நல்லூர் சென்பெனடிக் றோ.க.த.க. வித்தியாலய அதிபர் அருட்சகோதரி மரியவசந்தி யாழ் கல்வி வலயத்தில் இருந்து விண்ணப்பித்து இருந்தமைக்கான எவ்வித ஆதாரங்களும் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் நேர்முகத் தேர்வுப் பட்டியலில் அருட்சகோதரி மரியவசந்தியின் பெயர் இடம் பெற்றுள்ளதுடன், புள்ளிகள் இடப்பட்டுள்ளன.

மேலும் நேர்ர்முகத் தேர்வுக்கு அழைப்புக் கடிதம் செயலாளரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், புள்ளிகள் அடிப்படையில் அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (இணைப்பு III RTI தகவல் மாவட்ட கல்வி அமைச்சு)

இத்தகைய தகவல்களின் அடிப்படையில் பின்வரும் வினாக்களை சம்மந்தப்பட்டவர்களிடம் இருந்து நாம் கேட்க விரும்புவதாக அவர்கள் தெரிவித்தனர்.

  1. விண்ணப்பித்திருக்காத அதிபர் ஒருவரை நேர்முகத் தேர்வுக்கு எந்த அதிபர் நியமன சுற்று நிருபப் பிரகாரம் செயலாளர் அழைத்துள்ளார்?
  1. அதிபர் பதவிக்கு விண்ணப்பித்திருக்காத ஒருவரை நேர்முகத் தேர்வுக்கு அழைக்கும் அதிகாரத்தை செயலாளருக்கு யார் வழங்கியது?
  2. இந்த முறைகேடான கல்வி நிர்வாக செயற்பாட்டின் மூலம் நேமுகத் தேர்வுக்கு அழைக்காது புறக்கணிக்கப்பட்டுள்ள அதிபர் தரம் 1,2 – 11 வகையைச் சேர்ந்த தகுதியான அதிபர்களின் தொழில் கௌரவம், தொழில் உரிமை மீறப்பட்டிருப்பதற்கு யார் பொறுப்புக் கூறுவது?
  3. ஒரு IAB பாடசாலைக்கு அதிபர் தரம் Iஐ சேர்ந்தவர்களே நியமிக்கப்பட வேண்டும் என 2023/3 இலக்க சுற்று நிருபம் தெரிவிக்கின்ற போது, குறித்த சுற்றுநிருபத்தை மீறி தரம் III அதிபரை எவ்வாறு நியமிக்க முடியும்? GCE O/L கல்வித்தரம் உடைய அதிபரினால் IAB பாடசாலை ஒன்றை நடாத்த முடியுமா? அறிவு குறைவான அதிபரின் செயற்பாடுகள் மாணவர் கல்வியை பாதிக்காதா?
  4. 2023/3 1.10 சுற்றுநிருபப் பிரகாரம் மிகை அதிபர் அணி என தரம் I, II அதிபர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருப்பது படுமோசமான முறைகேடாகும். காரணம் 2012.10.05 இல் இருந்து மேற்குறித்த மிகை அதிபர் அணி என்பது நீக்கப்பட்டு இவர்களுக்கும் இடமாற்றங்கள், பதவியுயர்வுகள் வழங்கலாம் என நிரல் அமைச்சால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அறிந்திருக்கவில்லையா? அத்தகைய ஒருவர் செயலாளராக பதவி வகிக்கலாமா?
  5. குறித்த அருட்சகோதரியை குறித்த பாடசாலைக்கு திட்டமிட்ட வகையில் முறைகேடாக, அவசர அவசரமாக நியமித்ததன் மர்மமான பின்னனி என்ன? குறித்த பாடசாலையில் முன்னைய அதிபரினால் மேற் கொள்ளப்பட்டுள்ள ஊழல் மோசடிகளை மூடி மறைப்பதற்காகவா? என எண்ணத் தோன்றுகிறது.
  6. 95% இந்துசமய பிள்ளைகளைக் கொண்டுள்ள குறித்த பாடசாலைக்கு தகுதியினமான தரம் II அதிபரை நியமித்ததன் திட்டமிடப்பட்ட பின்னனி யாது?
  7. இத்தகைய முறைகேடான, கல்வி நிரவாகச் சட்டத்திற்கு விரோதமான அதிபர் நியமனத்தை மேற் கொள்வதற்கு பின்னால் இருப்பவர்கள் யாவர்?

மேற்படி வினாக்களுக்கான விடைகளைத் தேடும் போது வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரது முறைகேடான கல்வி நிர்வாக செயற்பாடுகள், கல்வி நிர்வாக சட்ட மீறல்கள், அவரது கள்ளத்தனங்கள், கபடத்தனங்கள், மதவாத அடிப்படையிலான செயற்பாடுகள் வெளிவரும் என என்னுகின்றோம்.

எனவே குறித்த முறைகேடான அதிபர் நியமனம் தொடர்பில் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி நிவாரணங்களை வழங்குமாறு வடமகாகாண ஆளுநர், பிரதம செயலாளர் என்ற வகையில் தயவுடனும் பணிவுடனும் கேட்டுக் கொள்கின்றோம்.

  1. கிளி/ சென்திரேசா மகளிர் கல்லூரிக்கு நியமிக்கப்பட்டிருக்கும் தகுதியீனமான அதிபரை அகற்றி தகுதியான அதிபரை நியமிக்க பொருத்தமான நடவடிக்கையை மேற்கொண்டு உதவுக.
  2. 95% இந்துசமய பிள்ளைகளை உடைய குறித்த பாடசாலைக்கு இந்து சமயம் சார்ந்த அதிபரை நியமனம் செய்து உதவுக.
  3. 2023/3 சுற்றுநிருபப் பிரகாரம் தரம் 1ஐ சேர்ந்த அதிபரை நியமித்து உதவுக.
  4. மதவாத அடிப்படையில் முறைகேடாகவும், பக்கச் சார்பாகவும், திட்டமிட்ட வகையில் செயற்பட்டு அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ள செயலாளர் மீது இலங்கை தாபன விதி கோவை 2ம் தொகுதியின் 48ம் அத்தியாயத்தின் 13.1 பிரிவின் கீழ் முறையான ஒழுக்காற்று விசாரணையை மேற் கொண்டு நீதி வழங்கவும்.
  5. அவ்வாறே செயலாளரின் சட்ட மீறல்களுக்கு துணை நின்ற அருட்சகோதரி மீதும் வலயப் பணிப்பாளர்கள் மீதும் முறையான ஒழுக்காற்று விசாரணையை மேற்கொண்டு தண்டனை வழங்கும்.
  6. இத்தகைய குளறுபடிகள் செய்து முறைகேடான கல்வி நிர்வாகத்தை மேற் கொண்டுள்ள செயலாளரின் சுயவிபரக் கோவையை பரிசீலித்து கல்வித்தமைகள், தொழிற் தகமைகளை உறுதிப்படுத்த பொருத்தமான நடவடிக்கைகளை மேற் கொள்ளவும்.
  7. அவ்வாறே GCE O/L தரத்துடன் அதிபர் தரம் IIIஐ சேர்ந்த அருட்சகோதரி மரியவசந்தியின் சுயவிபரக்கோவையில் உள்ள கல்வித்தரம், தொழிற்தரம், சான்றிதழ்களையும் பரிசீலித்து போலியானதா? சரியானதா? என உறுதிப்படுத்தவும். நேர்முகத் தேர்வில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களையும் பரிசீலிக்கவும்.
  8. வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரது கல்வி நிர்வாக முறைகேடுகள், கல்வி நிர்வாக சட்ட மீறல்கள் உறுதிப்படுத்தப்பட்டு குற்றவாளியாக காணப்படும் பட்சத்தில் அவரது பதவியினை சட்டப்படி பறித்து வெறிதும் வெற்றும் ஆக்குவதற்கு பொருத்தமான சட்ட நிடவடிக்கையை மேற் கொண்டு உதவுக.
  9. எல்லாவற்றுக்கும் மேலாக தகுதி இருந்தும் மதவாத அடிப்படையிலும் கபடத்தனமாகவும் செயலாளரினால் நிராகரிக்கப்பட்டு பாதிக்கப் பட்டுள்ள தரம் I,II அதிபர்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்க ஆவன செய்யவும். என தெரிவித்தனர்

விளையாட்டு சங்கங்களுக்கு வைக்கப்பட்ட ஆப்பு!

0

விளையாட்டு சங்கங்களில் பதவிக் காலத்தைக் வரையறுக்கும் ஒழுங்குவிதிகளுக்கு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அனுமதி கிடைத்துள்ளதாக குழுவின் தலைவரும் விளையாட்டு அமைச்சருமான சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார்.

இந்த ஒழுங்குவிதிகள் ஒரு புதிய விளையாட்டு கலாசாரத்தின் ஆரம்பமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கு முன்னர் விளையாட்டுக்கள் சட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகளில் காணப்பட்ட குறைபாடுகள் மற்றும் சிக்கலான விடயங்களை தவிர்ப்பதற்கு புதிய ஒழுங்குவிதிகளைத் தயாரித்துள்ளதாகவும், பொதுவாக அனைத்து விளையாட்டுச் சங்கங்களினதும் விளையாட்டினதும் அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

விளையாட்டுச் சங்கமொன்றின் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளை வகிக்கும் காலத்தை அதிகபட்சம் 8 வருடங்களுக்கு வரையறுப்பதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன், இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை தேர்வு நடத்தப்பட வேண்டும் என ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சர்வதேச சங்கங்களின் தரநிலைகளை கருத்திற்கொண்டு இந்தக் காலவரையறை தீர்மானிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுச் சங்கங்களில் நீண்டகாலம் பதவிகளை வகித்துக்கொண்டு மேற்கொள்ளப்படும் முறைகேடுகள் தொடர்பில் இதற்கு முன்னர் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் அந்த நிலைமையை தடுப்பதற்கு இது காரணமாகும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அத்துடன், பெண்கள் சம்பந்தப்பட்ட விளையாட்டுச் சங்கங்களுக்கு குறைந்தது இரண்டு பெண்கள் பிரதிநிதித்துவம் செய்வதற்கான வாய்ப்பை வழங்குவதற்கும் இந்த ஒழுங்குவிதிகள் மூலம் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் புதியதொரு விளையாட்டுக் கலாசாரம் ஏற்படுவதாகவும் விளையாட்டுடன் தொடர்புபட்ட சகல தரப்பினரதும் நேர்மறையான பதில்கள் இதற்குக் கிடைத்துள்ளதாகவும் குழுவின் தலைவர் இதன்போது தெரிவித்தார்.

அடுத்த பாராளுமன்ற வாரத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள தேசிய அரச பேரவையின் 1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுக்கள் சட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட 2437/24 இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகளுக்கு இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை கௌரவ அமைச்சர் சுனில் குமார கமகே அவர்களின் தலைமையில் 2025.08.07 ஆம் திகதி கூடிய அந்தக் குழுவின் கூட்டத்தின் போதே இந்த அனுமதி வழங்கப்பட்டது. இளைஞர் விவகாரங்கள் கௌரவ பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, விளையாட்டுத்துறை கௌரவ பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறையுடன் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதன்போது குழுவின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். அதற்கமைய, அவற்றுக்கான தீர்வுகள் வழங்குவது தொடர்பிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்களின் அதிகாரிகள் சிலரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

40 வருடங்களின் பின்னர் பாரிய திருத்தப் பணி!

0

நான்கு தசாப்தங்களுக்கு பின்னர், இலங்கை பாராளுமன்றத்தில் பாரிய திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

அமைச்சரவையின் அனுமதிக்கு அமைய 42 வருடங்களுக்குப் பின்னர் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவின் அறிவுறுத்தலுக்கு அமைய பாராளுமன்றத்தில் பாரிய அளவிலான திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதற்கமைய, பாராளுமன்ற கட்டடத்தொகுதியின் கொன்கிரீட் மேல்தளம் (Roof Terrace) மீது காணப்படும் மண் அகற்றப்பட்டு, திருத்தப் பணிகள் இந்நாட்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

அது மாத்திரமன்றி, கூரைகளின் பீலிகள் (Roof Gutters),செப்புக் கதவு (Copper Door), பாராளுமன்ற வைத்திய நிலையம் (Parliament Medical Center), கழிவறைக் கட்டமைப்பு (Washrooms) மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் அணி அறை என்பவற்றிலும் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சிறு அளவிலான திருத்தப் பணிகள் மற்றும் பராமரிப்புக்கள் இணைப்புப் பொறியியல் திணைக்களத்தினால் இதுவரை மேற்கொள்ளப்பட்டிருப்பினும், பாரிய அளவிலான திருத்த வேலைகள் தற்போதே முன்னெடுக்கப்படுகின்றன. 

இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

பொலிஸ் பிரிவின் மிக முக்கிய உயர் அதிகாரி கைது!

0

பொலிஸ் கலாசார பிரிவின் பதில் பணிப்பாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஸ் கமகே இன்று (14) கைது செய்யப்பட்டுள்ளார். 

இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு அதிகாரிகளினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபருக்கு எதிரான பல்வேறு இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடி தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சில் ஓர் புதிய அத்தியாயம்!

0

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்.

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு ஏற்ப செயற்திட்டமொன்றை வகுத்து, கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்ளும் நோக்கத்துடன், பல்வேறு துறைகளில் அனுபவம் வாய்ந்தவர்களை கல்வித் துறையில் ஈடுபடுத்த வேண்டியதன் அவசியத்தின் அடிப்படையில், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கு நியமிக்கப்பட்டுள்ள தன்னார்வ ஆலோசனை சபை உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று (13) காலை கல்வி அமைச்சு வளாகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெற்றது.

ஒவ்வொரு அமைச்சருக்கும் அவர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான கொள்கை முடிவுகளை எடுப்பதில் உதவ ஒரு ஆலோசகர் அல்லது குழுவை நியமிக்க ஜனாதிபதி செயலகம் வழங்கியுள்ள அறிவுறுத்தல்கள் மற்றும் பரிந்துரைகளின்படி இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆலோசனை சபையின் உறுப்பினர்களா

  1. சங்கைக்குரிய மொரகந்தேகொட ஆரியவன்ச தேரர் – சிரேஷ்ட விரிவுரையாளர், ருஹுணு பல்கலைக்கழகம்
  2. பேராசிரியர் காலிங்க டியூடர் சில்வா – ஓய்வுபெற்ற பேராசிரியர், பேராதனைப் பல்கலைக்கழகம்
  3. பேராசிரியர் ஷியாமணி ஹெட்டியாரச்சி – பேராசிரியர், மாற்றுத்திறனாளிகள் கல்விப் பிரிவு, மருத்துவ பீடம், களனி பல்கலைக்கழகம்
  4. திரு. ஆனந்த கலப்பத்தி – ஆணையாளர், லான்செட் (Lancect) ஆணைக்குழு
  5. கலாநிதி சங்கரபிள்ளை அறிவழகன் – புள்ளிவிபரவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
  6. வைத்தியர் சயூரி ருவன்மலி பெரேரா – மனநல மருத்துவ சிரேஷ்ட விரிவுரையாளர் பேராதனை மருத்துவ பீடம் மற்றும் பேராதனை போதனா வைத்தியசாலையின் மனநல மருத்துவ ஆலோசகர்.
  7. திரு. தம்மிக்க அழகப்பெரும – தலைவர், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்
  8. திரு. ரமிந்து பெரேரா – விரிவுரையாளர், இலங்கை திறந்த பல்கலைக்கழகம்
  9. திரு. ரத்நாயக்க கருணாசிறி – ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர்
  10. வைத்தியர். வை. எச். சஷிதர டி சில்வா – மருத்துவர்களுக்கான விளையாட்டு மருத்துவ உடற்தகுதி தேசிய பயிற்சித் திட்டத்தின் வளவாளர்
  11. திரு. டி. ஜோன் குயின்டஸ் – ஓய்வுபெற்ற கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகம்
  12. திரு. டி. எம். பிரேமவர்தன – ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர்
  13. கலாநிதி ஜானக ஜயலத் – சிரேஷ்ட விரிவுரையாளர், தொழில்சார் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
  14. கலாநிதி வசந்த ஹேரத் – ஆசிய பசிபிக் முன்பராய அபிவிருத்திக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி.

ஆகியோர் நியமனங்களைப் பெற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்வில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன மற்றும் அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கஞ்சா செய்கைக்கு ஏழு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி!

0

கஞ்சா பயிர்ச்செய்கை சட்டரீதியாக்கப்படுவது, பாதுகாப்பில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மற்றும் நாட்டை பின்னோக்கி கொண்டு செல்லும் ஒரு திட்டமாகும் என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.

கஞ்சா பயிர்ச்செய்கைக்கு ஏழு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது.

முதலீட்டுச் சபையின் பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் ஒரு திட்டமாக கஞ்சா பயிர்ச்செய்கைக்கான அனுமதி 7 வெளிநாட்டு முதலீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கடந்த 12.08.2025 அன்று தெரிவித்தார்.

இதன் நோக்கம், பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் பயிர்ச்செய்கையின் அனைத்து பகுதிகளையும் ஏற்றுமதிக்கு மட்டுமே பயன்படுத்துவதும், நாட்டிற்கு பொருளாதார நன்மைகளைப் பெறுவதும் என்பதை அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

கடந்த காலங்களில், இந்த முடிவை இலங்கையில் செயற்படுத்த எத்தணித்திருந்தனர்.

எனினும், இலங்கை மருத்துவ சங்கம், இலங்கை மனநல மருத்துவர்கள் சங்கம், சமூக மருத்துவர்கள் சங்கம் மற்றும் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் சமூகங்களின் செல்வாக்கு காரணமாக முயற்சிகள் முறியடிக்கப்பட்டன.

முந்தைய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட திட்டத்தை செயல்படுத்த தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது மிகவும் வருந்தத்தக்க விடயமாகவுள்ளது.

இந்த திட்டத்தை ஏற்கனவே ஆட்சியில் இருந்த அரசாங்கம் இத்திட்டத்தை அமுல்படுத்த முயன்ற போது தற்போதைய தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சர், அதனைக் கேலி செய்து எதிர்ப்பினை தெரிவித்திருந்தமை அவரது சமூக ஊடக கணக்குகளில் காணப்பட்டது.

அது போன்ற சிறந்த நிலையில் இருந்த ஒருவர், தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சரான பின்னர், இந்த திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதானது வருந்தத்தக்கது.

கஞ்சாவை சட்டப்பூர்வ பொருளாக மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளும் காணப்பட்டாலும், உலகளாவிய ரீதியில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குவதற்கான முயற்சியானது, பொதுமக்களின் எதிர்ப்பு மற்றும் அறிஞர்களின் எதிர்ப்பால் தோல்வியடைந்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

எனவே, இது கஞ்சா வியாபாரத்தின் இறுதி இலக்கை அடையப் பயன்படுத்தப்படும் ஒரு மூலோபாயத் திட்டமாகும்.

புதிய அரசாங்கம் அந்த திட்டத்தின் ஒரு தரப்பாக மாறியுள்ளது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.

சர்வதேச சந்தையில் கஞ்சா அதிகமாக காணப்படுகின்றது, எனினும் சர்வதேச ரீதியாக தேவை அதிகரிக்கவில்லை, சந்தையின் இடைவெளி நிரப்பப்பட்டுள்ளது. ஆகவே சர்வதேச ரீதியாக கஞ்சா சந்தை தற்போது வளர்ச்சியை நோக்கிச் செல்ல முடியாது.

பொருளாதார நன்மைகள் என்று கூறும் தவறான அறிக்கைகளின் அடிப்படையில் இது போன்ற முடிவுகளை எடுப்பதன் மூலம் எமது நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் மேலும் அதிகரித்து பல பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளுக்கு வழிவகுக்கும் ஒரு சூழ்நிலை ஏற்படும் என்பதை மிகுந்த வருத்தத்துடன் கூற வேண்டும்.

தற்போதைய அரசாங்கம் அத்தகைய முடிவை எட்டியுள்ளது ஆச்சரியமாகவும், சந்தேகமாகவும் உள்ளது.

குறிப்பாக, முந்தைய அரசாங்கங்கள் எடுத்த பல நடவடிக்கைகளை விமர்சித்து தடுத்து நிறுத்தும் தற்போதைய அரசாங்கம், முந்தைய அரசாங்கங்கள் கொண்டு வந்த திட்டத்தை இவ்வளவு விரைவாக செயல்படுத்த நடவடிக்கை எடுப்பது மிகவும் வலுவான சந்தேகங்களை எழுப்புகிறது.

கஞ்சா பயிர்ச்செய்கை சட்டரீதியாக்கப்படின், இந்த முடிவு எதிர்காலத்தில் நமது நாட்டின் சுகாதாரம், சமூகம், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மற்றும் நாட்டை பின்னோக்கிக் கொண்டு செல்லும் ஒரு திட்டமாகும் என்பதை இறுதியாக நாம் வலியுறுத்துகின்றோம்.

மக்களின் நட்பு அரசாங்கமாக, இந்த முடிவை உடனடியாக மாற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட வேண்டும் என்று மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் வலியுறுத்தியுள்ளது.