உடன் அமுலாகும் வகையில் மின்சார சபை ஊழியர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரை அவர்களது விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதன் பொது முகாமையாளர் எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று கடந்த 21 ஆம் திகதி வௌியானது.
1979 ஆம் ஆண்டு 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொது சேவைகள் சட்டத்தின் 2 ஆம் உறுப்புரிமையின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின்படி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கையெழுத்திடப்பட்டு வௌியிடப்பட்டது.
சாதாரண பொது வாழ்க்கையைப் பேணுவதற்கு அவசியமானவை மற்றும் அத்தகைய சேவைகளுக்கு இடையூறு அல்லது தடை ஏற்படக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டு குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஒரு பகுதியாக விளங்கும் சாட் ஜி.பி.டி. செயலியை பயன்படுத்தி, லாட்டரி வென்ற அமெரிக்கப் பெண்ணின் செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சாட் ஜி.பி.டி. என்னும் செயற்கை நுண்ணறிவு உரையாடி செயலி மூலமாக தகவல்களை கேட்டு பெறுவது அதிகரித்து வருகிறது. அமெரிக்காவின் விர்ஜீனியாவை சேர்ந்தவர் கேரி எட்வர்ட்ஸ். லாட்டரி வாங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் லாட்டரி வெல்ல முடிவு செய்து சாட் ஜி.பி.டி.யிடம் தற்போது எந்த எண் தொடர் கொண்ட லாட்டரி சீட்டை வாங்கலாம் என ஆலோசனை கேட்டுள்ளார்.
அது பரிந்துரைத்த எண்களை அடிப்படையாகக் கொண்டு வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 1.50 லட்சம் அமெரிக்க டாலர்கள் (இலங்கை மதிப்பில் சுமார் ரூபா 4.53 கோடி) பரிசு விழுந்துள்ளது.
இது குறித்து பேசும் அவர், இந்த வெற்றிப் பணத்தை முழுமையாக என் மறைந்த கணவரின் நினைவாக நன்கொடையாக வழங்க முடிவு செய்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் சாட் ஜி.பி.டி. உதவியால் லாட்டரி வென்றுள்ளதோடு, அந்த பரிசுத்தொகையை முழுமையாக நன்கொடையாக வழங்கும் அவரது முடிவும் இணையத்தில் பெரும் கவனம் பெற்றுள்ளது.
தேசியக் கணக்காய்வு (திருத்த) சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்.
தேசியக் கணக்காய்வு (திருத்த) சட்டமூலத்தைக் கௌரவ (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (22) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.
தேசியக் கணக்காய்வு (திருத்த) சட்டமூலம் 2025.07.08 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், 2025.09.11 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தேசியக் கணக்காய்வு (திருத்த) சட்டமூலத்தினூடாக 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்கத் தேசியக் கணக்காய்வு சட்டம் திருத்தப்படுகின்றது.
அதற்கமைய, கணக்காய்வாளர் நாயகத்தினால் பரிந்துரைக்கப்படும் மிகைக்கட்டணம் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்குக் கட்டமைப்பு, காலவரையறை, நடவடிக்கை முறை உள்ளடங்கலாக மிகைக் கட்டணப் பரிசீலனைக் குழுவொன்றை நியமிப்பதற்கான ஏற்பாடுகளை வழங்குவது இந்தத் திருத்தத்தின் பிரதான நோக்கமாகும்.
அத்துடன், மோசடி அல்லது ஊழல் தொடர்பில் செயற்படும் நிறுவனங்களுக்கு முறைப்பாடு செய்வதற்குக் கணக்காய்வாளர் நாயகத்துக்கு அதிகாரம் வழங்குதல் மற்றும் வருடாந்த விரிவுபடுத்தப்பட்ட முகாமைத்துவ கணக்காய்வு அறிக்கையைச் சமர்ப்பிக்கும் காலம் 5 மாதத்திலிருந்து 6 மாதமாக அதிகரித்தல் பிரதான திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அத்துடன், முதன்மை சட்டவாக்கத்தின் 42 மற்றும் 43 ஆம் பிரிவுகளின் கீழ் தவறுகளை மேற்கொள்ளும் நபர்களுக்கான தண்டனை குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இந்தச் சட்டமூலம் 2025 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்கத் தேசியக் கணக்காய்வு (திருத்த) சட்டமாக நடைமுறைக்கு வருகின்றது.
அரசாங்கத்தின் அபிவிருத்தியை கரைச்சி பிரதேச சபை குறிப்பாக தவிசாளர் தடுப்பதாக தெரிவித்து தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்டது.
அரசாங்கத்தின் அபிவிருத்தியை மக்களுக்கு கிடைக்கவிடாது கரைச்சி பிரதேச சபை செயற்படுவதாக தெரிவித்து குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சுயலாப அரசியல் நோக்கில் கிளிநொச்சியின் அபிவிருத்தியை தடுக்காதே, அதிகாரத்தால் மக்களை ஆள நினைக்காதே, இதுவரை காலமும் ஏமாற்றியது போதும், அப்பாவி மக்களுக்கு அநியாயம் செய்யாதே போன்ற சுலோகங்களையும் ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிளிநொச்சி நகர சித்தி விநாயகர் ஆலய முன்றலில் இருந்து பேரணியாக பிரதேச சபை வரை சென்று பிரதேச சபைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட நேரம் சபை தவிசாளர் அலுவலகத்தில் இல்லாத நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிசார் பிரதேச சபையின் செயலாளரை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். கரைச்சி பிரதேச சபை செயலாளர் தங்கபாண்டி ஞானராஜ் அவர்களிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கையளித்திருந்தனர்.
தங்காலை சீனிமோதர பகுதியில் புதுப்பிக்கப்பட்டு வந்த வீடொன்றில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அங்கு சோதனை செய்த போது, வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு லொறியில் ஐஸ் போதைப்பொருள் அடங்கிய 10 பொதிகளையும் கண்டுபிடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கிடையில், வீட்டில் இருந்த மற்றொரு நபர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக தங்காலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரும் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து பொலிஸார் தற்போது விசாரணைகளை தொடங்கியுள்ளதுடன், இந்த சம்பவம் குறித்து அரச இரசாயன பகுப்பாய்வாளரால் பரிசோதனையும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் கொள்முதல் மற்றும் டெண்டர் செயல்முறைகளில் விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு செயல்பாட்டில் முறைசாரா முன்மொழிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அதன் ஊழியர்கள் கடந்த 17 நாட்களாக சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
தொழிற்சங்க நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் இன்று நள்ளிரவு முதல் கொள்முதல் மற்றும் டெண்டர் செயல்முறைகளில் விலகவுள்ளதாக இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு செயல்பாட்டில் முறைசாரா முன்மொழிவுகள், ஊழியர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் சட்டவிரோத நடவடிக்கைகள், நிலுவையில் உள்ள ஊக்கத்தொகையை வழங்குதல் மற்றும் உரிய பதவி உயர்வுகளை வழங்குதல் உள்ளிட்ட 16 கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் இந்த தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வட்டவளையில் வயோதிபப் பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (21) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டவளை குயில்வத்த பகுதியைச் சேர்ந்த 62 வயதான வயோதிபப் பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வீட்டின் பின்புறமாக தோட்டத்தில் உள்ள மரத்தில் சேலையால் தூக்கிட்ட நிலையில், அவர் சடலமாக காணப்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் குறித்த மரணத்தில் சந்தேகம் இருப்பதால், சடலமாக மீட்கப்பட்ட வயோதிபப் பெண், தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலையா செய்யப்பட்டாரா? என பல கோணங்களில் வட்டவளை பொலிஸாருடன் ஹட்டன் தடயவியல் பொலிஸாரும் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 5.634 மில்லியன் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
பின்னர் அநுரகுமார திசாநாயக்க கடந்த ஆண்டு செப்டம்பர் 23 ஆம் திகதி ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.
இந்தநிலையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பதவியேற்றதிலிருந்து, நாட்டில் நேரடி வெளிநாட்டு முதலீடு ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கடந்த ஆண்டில் 1.048 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு நேரடி முதலீட்டைப் பெறப்பட்டதாக இலங்கை முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது.
இந்த முதலீடுகளில் 65%க்கும் அதிகமானவை முன்னணி உலகளாவிய முதலீட்டாளர்களால் செய்யப்பட்டவை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, 2025ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் மாத்திரம் 780 மில்லியன் டொலர் வெளிநாட்டு முதலீடுகளை இலங்கை ஈர்த்துள்ளதாகவும், இவ்வருடத்திற்கான ஒரு பில்லியன் டொலர் இலக்கை அடையமுடியும் என நம்புவதாகவும் இலங்கை முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது.
கரந்தெனிய பிரதேச சபைத் தவிசாளர் மஹீல் முனசிங்க திடீர் உடல் நலக் குறைவினால் காலமானார்.
இன்று (21) காலை உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அவர் சுகவீனமடைந்த நிலையில் கரந்தெனிய பொரலந்த வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தேசிய மக்கள் சக்தி கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட மஹீல் முனசிங்க, கரந்தெனிய பிரதேச சபையின் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.
47 வயதான அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பிராந்திய கலந்துரையாடல் மற்றும் சீன-இலங்கை ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை 12வது Beijing Xiangshan Forumல் பாதுகாப்புச் செயலாளர்
சீனாவில் நடைபெறும் 12வது Beijing Xiangshan Forum உயர்மட்டக் கூட்டத்தில் உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு), உலகளாவிய மற்றும் பிராந்திய பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதில் கூட்டு உரையாடல், பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
“ஒவ்வொரு நாட்டின் நியாயமான பாதுகாப்பு தேவைகளை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும், மேலும் கலந்துரையாடல் மற்றும் ஆலோசனை மூலம் நாடுகளுக்கு இடையேயான வேறுபாடுகள் மற்றும் சர்ச்சைகளுக்கு அமைதியான தீர்வுகளை ஊக்குவிக்க வேண்டும் என்றார். பிராந்தியவாதத்தை நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் மற்றும் பிராந்திய பொருளாதார ஒருங்கிணைப்பை சீராக முன்னெடுக்க வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
12வது Beijing Xiangshan Forum 17 முதல் 19 (செப்டம்பர்) வரை பெய்ஜிங்கில் உள்ள பெய்ஜிங்கி சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறுகிறது. நான்காவது அமர்வில் “Building regional peace through dialog and consultation” என்ற தலைப்பில் இன்று (19) அவர் உரையாற்றினார்.
இந்த உயர்மட்ட பாதுகாப்பு கலந்துரையாடலுக்கு சீன அரசாங்கம் அழைப்பு விடுத்ததற்கு பாதுகாப்பு செயலாளர் நன்றி தெரிவித்தார். இக்கலந்துரையாடல் ஆசிய-பசுபிக் மற்றும் அதற்கு அப்பால் கலந்துரையாடலை வளர்ப்பதற்கும் அமைதியை மேம்படுத்துவதற்கும் ஒரு முக்கிய தளமாக மாறியுள்ளது என்றும் கூறினார்.
அனைத்து நாடுகளின் நியாயமான பாதுகாப்பு தேவைகளை மதித்து, கலந்துரையாடல் மூலம் சர்ச்சைகளைத் தீர்க்க வேண்டும் என்ற ஜனாதிபதி Xi Jinping அவர்களை மேற்கோள் காட்டி, உண்மையான அமைதி, மோதல்கள் இல்லாததன் மூலம் மட்டுமல்ல, கலந்துரையாடல், புரிதல் மற்றும் ஆக்கபூர்வமான ஈடுபாட்டின் மூலமும் அடையப்படுகிறது என்று பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டார்.
இலங்கையின் மூலோபாய இருப்பிடத்தை எடுத்துரைத்த அவர், இந்து சமுத்திரம் ஒரு அமைதியான பிராந்தியமாகவும், ஒத்துழைப்புக்குத் திறந்ததாகவும், மோதல்களிலிருந்து விடுபட்டதாகவும் இருப்பதை உறுதி செய்வதற்கான நாட்டின் நீண்டகால உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார். “இலங்கை அமைதி மற்றும் ஒத்துழைப்பின் பாலமாக செயல்படத் தயாராக உள்ளது, கிழக்கு மற்றும் மேற்குக்கும் இடையே இணைப்பு, வர்த்தகம் மற்றும் கலாச்சார உரையாடலை எளிதாக்குகிறது” என்று அவர் கூறினார்.
இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நீடித்த நட்பை பாதுகாப்பு செயலாளர் மேலும் வலியுறுத்தினார், நம்பிக்கை, பரஸ்பர மரியாதை மற்றும் கூட்டாண்மை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஏழு தசாப்த கால இருதரப்பு உறவுகளையம் அவர் நினைவு கூர்ந்தார். இலங்கையின் இறையாண்மை மற்றும் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதில் சீனாவின் உறுதியான ஆதரவையும், இராணுவப் பயிற்சி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான அதன் பங்களிப்பையும் அவர் நினைவுபடுத்தினார்.