Tuesday, June 3, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 124

எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி நுழைவாயல் திறந்து வைப்பு

0

மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய மைதான நுழைவாயில் பழைய மாணவர்களான IDEAL FREINDS 1974 BACH அமைப்பினரால் நிர்மாணிக்கப்பட்டு நேற்றைய தினம் (05.02.20223) ஞாயிற்றுக்கிழமை பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது.

மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய இல்ல விளையாட்டுப்போட்டியின் இறுதி நாளான நேற்றைய தினம் குறித்த மைதான நுழைவாயில் திறந்து வைக்கப்பட்டது.

கல்லூரியின் பழைய மாணவர்களான IDEAL FREINDS 1974 அமைப்பின் பூரண அனுசரணையுடன் 100 அடி நீளமான மதில் சுமார் 15 லட்சம் செலவில் நிர்மாணிக்கப்பட்டு IDEAL FREINDS 1974 அமைப்பின் தலைவர் ஐயூப் சபாஹி அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

நாட்டில் ஏற்பட்ட கொரோனா காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த கட்டுமான பணிகள் பல தடைகளையும் தாண்டி பாடசாலையின் நலன் கருதி நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கம், பழைய மாணவர் சங்கம் மற்றும் நலன்விரும்பிகள் கலந்து சிறப்பித்தனர்.

கட்சியின் உயர்பீட உறுப்பினராக எஸ்.எம். ரிஜாஜ் தெரிவு

0

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினராக (member of high command) புத்தள பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் எஸ். சதக்கத்துல்லாஹ் றிஜாஜ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு கலுபோவில றொஸ்வூத் சிலோன் ஹோட்டலில் இன்று இடம்பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பேராளர் மாநாட்டில் ஜனாப் எஸ். சதக்கத்துல்லாஹ் றிஜாஜ் கட்சியின் உயர்பீட உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

கட்சியின் தலைவராக ரிஷாட் பதியுதீன் அவர்கள் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்ட அதேவேளை, செயலாளராக Y.L.S. ஹமீட்  தெரிவுசெய்யப்பட்டார்.

கட்சியின் இன்றைய பேராளர் மாநாட்டில் 40 உயர்பீட உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், புத்தளம் மாவட்டத்தின் உயர்பீட உறுப்பினராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் நவவி அவர்களும், கல்பிட்டி தொகுதியை பிரதிநிதித்துவப்பப்டுத்தி கல்பிட்டி பிராதேச உறுப்பினர் ஆஷிக் அவர்களும்  தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

புத்தளம் பி.சபை உறுப்பினரால் பொத்/பாடசாலைக்கு நிதி ஒதுக்கீடு

0

புத்தளம் பி.சபை உறுப்பினர் ஜனாப் S.M. ரிஜாஜ் அவர்களினால்  பு/பொத்துவில்லு சிங்கள பாடசாலைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பாடசாலைக்கு வழங்கிவைக்கப்பட்டது.

பு/பொத்துவில்லு சிங்கள பாடசாலையில் நீண்டகால தேவையாக காணப்பட்ட, மாணவர்களுக்கான  துவிச்சக்கரவண்டி கூடாரம் அமைப்பது  தொடர்பான முறைப்பாடு  பாடசாலை அதிபர் திரு ADUS குமார அவர்களினால் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் S.M. ரிஜாஜ் அவர்களுக்கு கொண்டுசெல்லப்பட்டது.

இதனை அடுத்து மாணவர்களுக்கான  துவிச்சக்கரவண்டி கூடாரம் அமைப்பதற்காண வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கு புத்தளம் பிரதேச சபை உறுப்பினரால் நிதி உதவி வழங்கப்பட்டது.

இன்றைய இந் நிகழ்வில் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் S.M. ரிஜாஜ், பாடசாலை அதிபர் திரு ADUS குமார, வடமாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் M S நாஸர் (Ret AO), மற்றும் பாடசாலை ஆசிரியல்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் நாகவில்லு விஜயம்

0

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நேற்று வெள்ளிக்கிழமை புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலயத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலயத்திற்கு மூன்று மாடி கட்டிடம் ஒன்றின் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.

கட்டிடத்திற்கான  கட்டுமான பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற வேளையில் ஏற்பட்ட  அரசியல் மாற்றங்களினால் குறித்த கட்டிட நிர்மாணப்பணிகள்  இடை நடுவில் கைவிடப்பட்டது.

இதனால் மாணவர்களுக்கான ஏற்பட்டுள்ள வகுப்பறை பற்றாக்குறை  தொடர்பாக புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் எஸ்.எம். ரிஜாஜ் அவர்களுக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, புத்தளம் பிரதேச சபை உறுப்பினரினால் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் கவனத்திற்கு குறித்த  கொண்டுசெல்லப்பட்டது.

இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் குவைத் நாட்டின் அல் நூரி சரிடி நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஆகியோர் நேற்று வெள்ளிக்கிழமை புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலயத்திற்கு கள விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.

இடை நடுவில் கைவிடப்பட்ட குறித்த மூன்று மாடி கட்டிட கட்டுமானப்பணிகள் மிக விரைவில் மீண்டும் ஆரம்பிக்கப்படும்  எனவும், அதற்கான சகல நடடிக்கைகளையும் தாம்  துரிதப்படுத்துவதாகவும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

மேலும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட கரப்பந்தாட்ட மைதானத்தையும் ( Volleyball Court ) பார்வையிட்டதுடன் மேலதிக குறைகளையும் கேட்டறிந்துகொண்டார்.

குறித்த நிகழ்வில் பாடசாலை அதிபர், பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊர் ஜமாத்தார்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

 

நாகவில்லு அஹதிய்யா பாடசாலையில் இலவச கருத்தரங்கு

0

புத்தளம் எருக்கலம்பிட்டி  அஹதிய்யா பாடசாலையில் இன்று 23.10.2022 ஞாயிற்றுக்கிழமை இலவச கருத்தரங்கு ஒன்று புத்தளம் எருக்கலம்பிட்டி பழைய மாணவர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

எதிர்வரும் மாதம் நடைபெற இருக்கும் அஹதிய்யா பாடசாலைகளுக்கான வருடாந்த இடைநிலை பரீட்சையை நோக்காக கொண்டு நடத்தப்பட்ட இன்றைய இலவச கருத்தரங்கில் சுமார் ஐம்பதுக்கும் அதிகமான புத்தளம் எருக்கலம்பிட்டி மாணவர்கள் கலந்துகொண்டனர்.

புத்தளம் எருக்கலம்பிட்டி  அஹதிய்யா பாடசாலையின் அதிபர் ஜனாப் பஸ்மி அவர்களின் வழிகாட்டலினால் புத்தளம் எருக்கலம்பிட்டி பழைய மாணவர்கள் சங்கத்தின் அனுசரணையுடன்  இன்றைய தினம் இரண்டு இலவச கருத்தரங்குகள் இடம்பெற்றது.

இதில் தரம் 9,10 மற்றும் 11 மாணவர்கள் கலந்துகொண்டதுடன், வருடாந்த இடைநிலை பரீட்சை தொடர்பான சிறந்த வழிகாட்டலும் ஆலோசனைகளும் வளவாளர்களினால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டமை விஷேட அம்சமாகும்.

மேலுமொரு இலவச கருத்தரங்கு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பழைய மாணவர்கள் சங்கத்தின் அனுசரணையுடன் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாகவில்லில் எருக்கலம்பிட்டி FC காரியாலய திறப்பு விழா

0

எருக்கலம்பிட்டி FC கழகத்தின் காரியாலய திறப்பு விழா நிகழ்வு நேற்று 16.10.2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.

புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமத்தில் உருவாக்கப்பட்ட எருக்கலம்பிட்டி FC கழகம் தற்போது புத்தளம் லீக் போட்டிகளில் விளையாடி வருவதுடன் பல கிண்ணங்களை சுவீகரித்துள்ளமை விசேட அம்சமாகும்.

கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற மர்ஹூம் கே.ஏ. பாயிஸ் அவர்களின் ஜாபகார்த்தமாக புத்தளம் நகரசபையினால் நடாத்தப்பட்ட புத்தளம் லீக் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில்  எருக்கலம்பிட்டி FC பங்குபற்றி இருதிப்போட்டிக்கு தெரிவானது.

எருக்கலம்பிட்டி எப்.சி மற்றும் புத்தளம் லிவர்பூல் அணியினருக்கிடையில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் எருக்கலம்பிட்டி எப்.சி அணி இரண்டாம் இடத்தை தட்டிச்சென்றது.

அந்த வகையில் கழகத்தின் செயற்பாடுகளை முன்னோக்கிச் செல்ல கழகத்திற்கான புதிய காரியாலயம் ஒன்று நேற்றைய தினம் கழகத்தின் தலைவர் திரு சிஹாம் அவர்களினால் நாகவில்லு ஜும்மாஹ் பள்ளிவாசலுக்கு அருகாமையில் உள்ள ஜனாப் நவ்பர் கட்டிட தொகுதியில் திறந்து வைக்கப்பட்டது.

இதில் பள்ளிவாசல் இமாம், பள்ளிவாசல் நிர்வாகத்தினர், கழக உறுப்பினர்கள் மற்றும் ஊர் ஜமாத்தினர் என பெரும்திரளானோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

மாகாண மட்ட போட்டியில் நாகவில்லு பாடசாலை சாம்பியன்

0

பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் 16 வயதின் கீழ் போட்டியில் புத்தளம் எருக்கலம்பிட்டி பாடசாலை சாம்பியன் ஆனது.

கடந்த 21 ஆம் திகதி குருநாகல் மல்லியதேவ பாடசாலை மைதானத்தில் ஆரம்பமான  பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி தற்போது இரு தினங்களாக இடம்பெற்றுவருகிறது.

இதில் 16, 18, 20 வயது பிரிவுகளுக்கியிடையேயான போட்டிகள் இடம்பெற்று வருவதுடன் 16 வயது பிரிவிற்கான சுற்றுப்போட்டியில் புத்தளம் எருக்கலம்பிட்டி பாடசாலை மற்றும் கட்டுனேறிய புனித செபாஸ்டியன் கல்லூரிகள் இறுதிப்போட்டியில் மோதின.

ஆரம்பம் முதல் விறுவிறுப்பாக இடம்பெற்ற இறுதிப்போட்டியில் இரு அணிகளும் எதுவித கோள்களும் போடாத நிலையில் தண்ட உதை மூலம் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது.

தண்ட உதை மூலம் புத்தளம் எருக்கலம்பிட்டி பாடசாலை 4 கோள்களையும் கட்டுனேறிய புனித செபாஸ்டியன் கல்லூரி 3 கோள்களையும் பெற்றுக்கொண்டன. மேலதிக ஒரு கோல் மூலம் புத்தளம் எருக்கலம்பிட்டி பாடசாலை 16 வயது பிரிவில் சாம்பியன் ஆனது.

இவ்வெற்றிக்காக பாடுபட்ட வீரர்கள், ஆசிரியர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவருக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்..

 

நாகவில்லு அரபுக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா

0

புத்தளம் நாகவில்லு குல்லியத்துள் மனார் அரபுக்கல்லூரியின்  பட்டமளிப்பு விழா இன்று 04.09.2022 ஜாயிற்றுக்கிழமை காலை 09.00 மணியளவில் புத்தளம் எருக்கலம்பிட்டி ஜும்மா பள்ளிவாசலில் இடம்பெற்றது.

குல்லியத்துள் மனார் அரபுக்கல்லூரியின் தலைவர் அல்ஹாஜ் A.C. ஜபருல்லாஹ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற கல்லூரியின்  பட்டமளிப்பு விழாவில் இம்முறை 31 ஹாபில்ஹல் பட்டம்பெற்று வெளியாகியுள்ளனர்.

01.05.2002 ஆம் ஆண்டு 11 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட குல்லியத்துள் மனார் அரபுக்கல்லூரியில் இதுவரை 99 ஹாபிழ்கள் பட்டம் பெற்று வெளியாகி கல்லூரிக்கு நற்பெயரை ஈட்டி தந்துள்ளனர்.

நீண்ட காலமாக மெளலவி அஷ் ஷேய்க் M.H. அப்துல் ஹலீம் அவர்கள் அதிபராக கடமையாற்றி வருவதுடன் மேலும் இரண்டு உலமாக்களும்  அரபுக்கல்லூரியில் பல சிரமங்களுக்கு மத்தியில் கடமையாற்றி வருகின்றனர்.

நான்காவது முறையாக இடம்பெற்ற இப் பட்டமளிப்பு நிகழ்வில் நிர்வாக உறுப்பினர்கள், உலமாக்கள், பெற்றோர்கள், ஊர் ஜமாத்தினர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

பேராசிரியர் S.H. ஹஸ்புல்லா மறைந்து 4 ஆண்டுகள் நிறைவு

0

இலங்கை சிறுபான்மை முஸ்லிம்களின் – குறிப்பாக வடக்கு முஸ்லிம்களது இருப்புக்கான போராட்டத்தின் ஆய்வுக்குரல் ஓய்ந்து இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. 2018 ஆகஸ்ட் 25 ஆம் திகதி பேராசிரியர் S.H. ஹஸ்புல்லா வபாத்தானார்.

மாகாண எல்லை நிருணயக் குழுவின் அறிக்கை ஒரு பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்ற வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது அக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவராகக் கடமையாற்றிய பேராசிரியர் மர்ஹூம் S.H. ஹஸ்புல்லா அவர்கள் இலங்கை முஸ்லிம் சமூகத்துக்கு பாதகமான அவ்வறிக்கை தோற்கடிக்கப்பட வேண்டும் என்று இறுதி அவாக் கொண்டிருந்தார்.

இலங்கை அரசியல் வரலாற்றில் 2018.08.24 அன்று குறித்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த அமைச்சர் உட்பட சமுகமளித்த 139 பாராளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து எதிர்த்து வாக்களித்து தோற்கடித்த ஒரேயொரு அறிக்கையாக அது இருந்தது.

மறுநாள் 2018.08.25 ஆம் திகதி பேராசிரியர் ஹஸ்புல்லா சேர் தனது 67 வயதில் யாழ்ப்பாணத்தில் வபாத்தானார். உள்ளத்தை அறிந்த இறைவன் அன்னாரை உளத்திருப்தியுடன் எடுத்துக் கொண்டான்.

1990 இல் புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களில் ஒருவரும் கல்விமானுமாகிய எருக்கலம்பிட்டியைச் சேர்ந்த பேராசிரியர் ஹஸ்புல்லா அவர்கள் இவ்வெளியேற்றத்தின் மூலம் பாரிய கடமைப் பொறுப்புக்களை சுமந்து கொண்டார்.

அப்போது பேராதனைப் பல்கலைக்கழக புவியியல் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராக இருந்த அவர், களத்தில் இறங்கினார். புத்தளத்தில் வடக்கு முஸ்லிம்கள் வாழும் அகதி முகாம்களில் வலம் வரத் தொடங்கினார்.

யுத்த சூழலில் நிராயுதபாணிகளாக இருந்த தமது சமுதாயத்துக்கு நடந்த அநியாயத்தைக் கண்டு அம்மக்களுக்காக அறிவு ரீதியில் பணியாற்றத் தொடங்கினார்.

காலப்போக்கில் இலங்கை முழுவதுமான முஸ்லிம் சமூகத்தின் நலன் மற்றும் இருத்தலுக்காகவும் தேசத்தின் சுபிட்சம் மற்றும் அமைதிக்காகவும் அரும்பாடுபட்டார்.

வடக்கு முஸ்லிம்கள் தமது பலவந்த வெளியேற்றத்தில் இழந்த சொத்துக்கள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டு அவ்வறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கச் செய்தார்.

1993 ஜூன் 26 இல் கொழும்பு சாஹிரா கல்லூரி மண்டபத்தில் அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடு ஏற்பாடு செய்த ‘வட மாகாண அகதி மாணவர்களின் கல்விப் பிரச்சினை’ பற்றிய கருத்தரங்கில் பேராசிரியர் ஹஸ்புல்லா அவர்கள் 25 பக்க கட்டுரையொன்றை சமர்ப்பித்து ஆற்றிய உரையின் போது அவரை நான் முதன்முறையாகக் கண்டேன். அன்று அவருடன் பேசினேன்.

அதன் பின்னர் ‘வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பு’ (NMRO) நிறுவப்பட்டு அதன் தலைவராக பேராசிரியர் S.H. ஹஸ்புல்லா அவர்களும் உப தலைவராக மௌலவி B.A.S. சுப்யான் அவர்களும் செயலாளராக பொறியியலாளர் A.L.M. புர்ஹானுத்தீன் அவர்களும் பொருளாளராக சகாப்தீன் லுக்மான் அவர்களும் செயற்பட்ட காலத்தில் அவ்வமைப்புடன் நெருங்கிப் பணியாற்றினேன்.

கொழும்புப் பல்கலைக்கழகத்தில் நான் கல்வி கற்ற காலத்தில் NMRO அலுவலகத்தில் என்னாலான பணிகளை மேற்கொண்டு வந்தேன். அங்கு அடிக்கடி ஹஸ்புல்லா சேர் வந்து செல்வார். கொழும்பில் அவர் செல்ல வேண்டிய சில இடங்களுக்கு என்னையும் ஆட்டோவில் அழைத்துச் சென்று அவர் இறங்கிடுவார். செலவுக்கு பணம் உள்ளதா? என அடிக்கடி என்னிடம் கேட்டுக் கொள்வார்.

மிக எளிமையாக இருப்பார். கொழும்பில் எங்களுடன் தங்கியிருக்கும் போதும் அகதிமுகாம் பயணங்களின் போதும் சாரம் உடுத்தி எந்தக் கஷ்டமான தங்குமிடத்திலும் பொறுமையுடன் தூங்கி எழும்புவார். சிரித்த முகத்துடனும் நெகிழ்வுத் தன்மையுடனும் குழுவாகப் பணியாற்ற விரும்புவார்.

வடக்கு முஸ்லிம்கள் தொடர்பான கருத்தையும் நிலைப்பாட்டையும் சொல்ல வேண்டிய இடங்களில் தெளிவாகவும் உறுதியாகவும் கவனமாகவும் சொல்வார். ஆவண ரீதியாக மாத்திரமன்றி தேவையானபோது களத்தில் இறங்கிப் போராடவும் அவர் தயங்கியதில்லை.

1995 அக்டோபர் 27 இல் கொழும்பில் UNHCR அலுவலகத்திற்கு முன்னால் பேராசிரியர் ஹஸ்புல்லா அவர்களின் தலைமையில் NMRO நடத்திய ஆர்ப்பாட்டத்தில் நானும் கலந்து கொண்டிருந்தேன். அகதி அந்தஸ்தை வலியுறுத்தியும் வடக்கு முஸ்லிம்களின் விவகாரத்தை உலகறியச் செய்யவும் அப்போராட்டத்தை அவர் திட்டமிட்டிருந்தார்.

வட மாகாண முஸ்லிம்களின் வெளியேற்றம் சாதாரணமாகப் பார்க்கப்படக் கூடாது என்பதில் பேராசிரியர் ஹஸ்புல்லா அதிக கவனம் கொண்டிருந்தார். நாடு விட்டு நாடு சென்றால் மாத்திரமே ‘அகதி’ என்ற அந்தஸ்தில் உரிமைகளும் தேவைகளும் நிறைவேற்றப்படுவது போல வடபுல முஸ்லிம்களும் அவ்வாறான உரித்துக்கு கவனம் கொள்ளப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் கடைசி வரை இருந்தார்.

புத்தளத்திலேயே ஒரு நிரந்தர மீள்குடியேற்றம் இடம்பெறுவதை அவர் வன்மையாகக் கண்டித்தார். வட மாகாணத்திலுள்ள தமது சொந்த வாழிடத்தில் கௌரவமாக மீள்குடியேற்றப்பட்டு, இழப்பீடுகள் பெற்று, மீண்டும் துரத்தியடிக்கப்படாத உத்தரவாதத்துடன் சுதந்திரமாக வாழ்வதே உண்மையான மீள்குடியேற்றம் என அடிக்கடி கூறி வருவார். இதில் சர்வதேச நியமங்கள் பின்பற்றப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி வந்தார்.

புத்தளத்தில் சில வசதி வாய்ப்புகளுடன் தற்காலிகத் தீர்வாகவே புதிய குடியேற்றங்கள் இருக்க வேண்டும் என்றும் அதன்மூலம் வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகள் முடிவுற்றதாக கருதப்பட்டு விடக்கூடாது என்றும் இது குறித்து அரசியல் தரப்பு தெளிவாக அறிவிக்க வேண்டும் என்றும் விடாப்பிடியாக நின்றார். இதனால் அரசியல் தரப்புகளின் நிலைப்பாடுகளுடன் முரண் ஏற்பட்டது.

பேராசிரியர் ஹஸ்புல்லா எப்போதும் அரசியல்வாதிகளிடமிருந்து சற்று விலகியிருக்கவே விரும்பினார். அவருடைய செயற்பாடுகள் அரசியலுக்கானது என கட்டவிழ்த்துவிடப்பட்ட விமர்சனங்கள் குறித்து அவர் கூறும்போது ‘எதிர்காலத்தில் தான் அரசியலுக்குள் நுழையாதிருக்கும் போது மக்கள் தன்னை இயல்பாகவே புரிந்து கொள்வார்கள்’ என்பார்.

வடக்கு முஸ்லிம்கள் தொடர்பான அரசியல்வாதிகளின் போக்குகள் குறித்து அவர் மனக்கிலேசம் கொண்டிருந்தார். அரசியல் தரப்பினால் அதிகாரத்தின் மூலம் ஆற்றப்படக்கூடிய சில தேவைகளுக்காக அரசியல்வாதிகளுடன் அவர் அவ்வப்போது தொடர்பில் இருந்தார். ஆனால் தம்முடன் வந்து இணைந்து கொள்ளும்படி அரசியல்வாதிகள் விடுத்து வந்த அழைப்புகளை அவர் அடியோடு நிராகரித்தார்.

வடக்கில் தமிழ் சகோதரர்களுடன் பரஸ்பர புரிந்துணர்வு அடிப்படையிலான சமாதான அமைதி உறவையும் புத்தளத்தில் உள்ளூர் – இடம்பெயர்ந்தோர் சக வாழ்வையும் கட்டியெழுப்ப அவர் அரும்பாடுபட்டார்.

உலக வங்கியின் உதவித் திட்டத்தின் கீழ் புத்தளத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட வடக்கு முஸ்லிம்களுக்கான வீட்டுத்திட்டம் தொடர்பான பௌதீக சாத்தியவள அறிக்கை தயாரிக்கும் குழுவுக்கு பேராசிரியர் ஹஸ்புல்லா தலைமை தாங்கினார். அக்குழுவில் என்னையும் ஓர் உறுப்பினராக சேர்த்திருந்தார்.

புத்தளம் மாவட்டத்தில் இவ்வீட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ள இடங்கள் குடியிருப்புக்குப் பொருத்தமற்றவை என்ற நிலைப்பாட்டில் அவர் உறுதியாக இருந்தார்.

வடக்கு முஸ்லிம்களின் விவகாரம் குறித்து தென்னிலங்கை முஸ்லிம் புத்திஜீவிகள் மற்றும் தேசிய – சர்வதேச கல்விமான்களுடன் அவர் தொடர்பில் இருந்தார். ஆங்கில ஊடகங்களில் எழுதி வந்தார். இதற்காக அவர் அடிக்கடி வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டிருந்தார்.

யுத்த காலப்பகுதியில் அவரது பாதுகாப்புக் குறித்து அச்சுறுத்தல் காணப்பட்டிருந்தது. இதுபற்றி அவரிடம் விசாரித்தால் இலேசாக புன்னகைத்து விட்டுச் செல்வார். மனிதர் என்ற வகையில் தனிப்பட்ட முறையில் அவருக்கிருந்த கவலைகளையோ பிரச்சினைகளையோ பற்றிப் பேச மாட்டார்.

2002 அரசு – புலிகள் சமாதான முன்னெடுப்பு காலத்தில் முஸ்லிம்களை ஒரு பங்காளராக்கவும் அப்பேச்சுவார்த்தைகளில் வடக்கு முஸ்லிம்கள் குறித்து கவனம் செலுத்தப்படவும் அதிக முயற்சி மேற்கொண்டார். வெளிநாடுகளில் பேச்சுவார்த்தை இடம்பெற்றபோது அவ்விடங்களுக்கும் சென்றார். புரிந்துணர்வு ஒப்பந்தப்படி உருவாக்கப்பட்ட SIHRN இல் தனது உயரிய பங்களிப்பை வழங்கியிருந்தார்.

2009 யுத்த முடிவில் முசலி முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தின் போது ஏற்பட்ட வில்பத்து விவகாரம் குறித்து அதிக கவனம் கொண்டார். முசலி தெற்கில் முஸ்லிம்களின் பூர்வீகம் குறித்து கேள்வி எழுந்தபோது ஆய்வு ரீதியாக பதிலளிக்க அதிக களப் பயணங்களை மேற்கொண்டிருந்தார்.

முசலிப் பிரதேச நிலங்கள் பலவற்றை ஒதுக்குக் காடுகளாக பிரகனப்படுத்திய 2012, 2017 அதிவிசேட வர்த்தமானிகளின் தாற்பரியங்கள் குறித்துக் கண்டறிந்தார். பலவந்த வெளியேற்றத்தின் மூலம் காடுகளான மக்களின் வாழ்விடங்கள் வில்பத்து வனாந்தரம் என பிரச்சாரம் மேலெழுந்த போது அதிக கவலை கொண்டவராகக் காணப்பட்டார்.

இதற்காக அன்னாரது இறுதிக் காலங்களில் அடிக்கடி முசலி வந்து செல்வார். அளவக்கை சிறுக்குளத்தில் அமைந்துள்ள ஆசிரியர் M.M. மஸ்தான் (தௌபீக்) அவர்களின் வீட்டில் வந்து தங்கி நின்று முசலியில் ஆய்வுப் பணிகளில் ஈடுபடும் காலத்தில் எனக்கும் அழைப்பு விடுப்பார். கள நிலவரம் குறித்து கலந்துரையாடி வந்தார். அக்காலப் பகுதியில் அவர் வேகமாக செயற்பட்டார். அதிகம் சிந்தித்துக் கொண்டிருப்பார்.

இறுதியில் ‘மீள்குடியேற்ற உரிமை மறுப்பு’ (Denying the Right to Return – Resettlement in Musali South and the Wilpattu Controversy) எனும் 120 பக்கங்கொண்ட ஆங்கில மொழி மூல ஆய்வு நூலொன்றை 2015 ஒக்டோபரில் கொழும்பு தபால் நிலைய கேட்போர் கூடத்தில் வெளியிட்டார்.

தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழு உறுப்பினராக 2015 நவம்பர் 13 முதல் கடமையாற்றி வந்த பேராசிரியர் ஹஸ்புல்லா அவர்கள் 2017 ஒக்டோபர் 4 முதல் மாகாண எல்லை நிர்ணய குழுவிலும் இடம் பெற்றார்.

இக்குழுவின் ஆய்வுகளும் முடிவுகளும் நாடளாவிய முஸ்லிம் சிறுபான்மையினருக்கு மிகப் பாதகமான முறையில் இருப்பதாகக் கூறி வந்த அவர் குழுவின் அறிக்கையில் கையெழுத்திடுவதைத் தாமதித்தார். இறுதியில் தனியான இணைப்பொன்றையும் சமர்ப்பித்தார்.

அவரது விருப்பம் போலவே குறித்த அறிக்கை 2018 இல் பாராளுமன்ற வாக்கெடுப்பில் படுதோல்வியடைந்ததில் அவர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். அதுவே அவரது கடைசிக் கட்டமாக இருந்தது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் ஹஸ்புல்லா அவர்கள் 2018 இல் யாழ்ப்பாணத்தில் வபாத்தானார். தனது பிறந்த மண்ணான எருக்கலம்பிட்டியில் நல்லடக்கம் செய்யப்பட்ட போது அன்னாரின் முகத்தை இறுதியாகப் பார்த்தேன்.

பேராசிரியர் ஹஸ்புல்லா அவர்கள் எந்த சமூகத்தின் விடிவுக்காக தனது கால நேரங்களை செலவளித்து அதிகமதிகம் பாடுபட்டாரோ அந்த சமூகத்திற்கு (அரசியல்வாதிகளைத் தெரிந்தளவுக்கு) பேராசிரியரது புலமையும் சமூக விடிவுக்கான அவரது அர்ப்பணிப்புமிக்க சேவையும் புரியாது என்றே நினைக்கிறேன்.

பேராசிரியரது ஆய்வுப் பணிகள் மூலம் திரட்டப்பட்ட தகவல்கள் பல இன்னும் வெளியிடப்பட்டிருக்கவில்லை. குறிப்பாக மன்னார் தீவு முஸ்லிம்கள் மற்றும் யாழ்ப்பாண முஸ்லிம்கள் தொடர்பான வெளியீடுகளைச் சொல்லலாம். இவை வெளிவராமை குறித்த கவலை என்னில் மேலோங்கியுள்ளது.

இறுதிவரை அறிவார்ந்த பல தளங்களில் சமூக நலனுக்காகவும் தேசத்தின் அமைதிக்காகவும் பணியாற்றிய பேராசிரியர் மர்ஹூம் ஹஸ்புல்லா அவர்களுக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவனபதியை வாஜிபாக்க வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.

Muhuseen Raisudeen,
Musali,
Chilawathurai.

நாகவில்லு முஸர்ரப் ஹோட்டல் காடையர்களால் சேதம்

0

புத்தளம் நாகவில்லு முஸர்ரப் ஹோட்டல் இன்று அதிகாலை சில காடையர்களால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 2.30 மணியளவில் குறித்த உணவகம் இவ்வாறு உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த உணவகத்திற்கு போதையில் வருகை தந்த இருவரினால் குழப்பம் ஏற்படுத்தப்பட்டு அங்கிருந்து திரும்பிச் சென்றிருந்ததுடன் மேலும் சில காடையர்களுடன் குறித்த உணவகத்திற்கு அவர்கள் மீண்டும் வருகை தந்து அங்கிருந்த பொருட்களை உடைத்து பாரிய சேதத்தை ஏற்படுத்தி சென்றுள்ளனர்.

வருகை தந்த காடையர்கள் மிலேச்சத்தனமான தாக்குதலை ஏற்படுத்தியதுடன் இன முருகளை ஏற்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டு வேறு விதமான குழப்பத்தை ஏற்படுத்தவும் முயட்சித்துள்ளனர்.

உணவகத்தில் இருந்த உணவுகள், கண்ணாடிகள் மற்றும் தளபாடங்கள் பாரிய அளவில் சேதமாகியுள்ளதுடன் உணவகத்தில் இருந்தவர்களை அச்சுறுத்தியும் அங்கிருந்து சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் இன்று அதிகாலை புத்தளம் போலீசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இதுவரை மேலதிக நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் தகவல் கிடைத்துள்ளன.

இதேவேளை தொடர்ச்சியாக சில காடையர்களினால் இவ்வாறு குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.