Sunday, May 3, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 128

கிழக்கு ஐரோப்பாவில் உருவாகிய போர் பதட்டம்!

0

உக்ரைன் மீதான தாக்குதலின்போது ரஷ்ய ட்ரோன்கள் நேட்டோ உறுப்பு நாடுகளான ருமேனியா மற்றும் போலந்தின் வான்பரப்பில் ஊடுருவிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்கியதில் இருந்து, ருமேனியா எல்லையோர பகுதிகளில் அவ்வப்போது ரஷ்ய ட்ரோன்களின் பாகங்கள் விழுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

இந்த சூழலில், கடந்த வாரம் நேட்டோ உறுப்பு நாடான போலந்தின் வான்பரப்பில் ரஷ்ய ட்ரோன்கள் ஊடுருவியதாகவும், அவற்றில் சிலவற்றை சுட்டு வீழ்த்தியதாகவும் போலந்து ராணுவம் தெரிவித்தது. இதன் தொடர்ச்சியாக, தற்போது ருமேனியாவின் வான்பரப்பிலும் ரஷ்ய ட்ரோன் ஒன்று ஊடுருவியதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உக்ரைனின் உள்கட்டமைப்புகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியபோது, இந்த ட்ரோன் ருமேனிய வான்பரப்பிற்குள் நுழைந்ததை ரேடாரில் கண்டறிந்ததாகவும், உடனடியாக இரண்டு எஃப்-16 ரக போர் விமானங்கள் விரட்டிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில்லா வெச்சே என்ற எல்லையோர கிராமத்தின் அருகே அந்த ட்ரோன் ரேடார் பார்வையில் இருந்து திடீரென மறைந்துள்ளது.

இந்த ட்ரோன் குடியிருப்பு பகுதிகள் மீது பறக்காததால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த ஊடுருவல் தற்செயலானது அல்ல என்றும், இது போரை விரிவுபடுத்த ரஷ்யா வெளிப்படையான முயற்சி செய்கிறது என்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், அந்த ட்ரோன் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் ருமேனியாவிற்குள் ஊடுருவி, நேட்டோ வான்பரப்பில் 50 நிமிடங்கள் வரை பறந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தொடர் ஊடுருவல் சம்பவங்களைத் தொடர்ந்து, நேட்டோ அமைப்பு தனது கிழக்கு எல்லையில் வான் பாதுகாப்பை பலப்படுத்த ‘ஈஸ்டர்ன் சென்ட்ரி’ என்ற புதிய பாதுகாப்பு திட்டத்தை அறிவித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் பங்களிப்புடன், எஃப்-16, ரஃபேல், யூரோஃபைட்டர் ரக போர் விமானங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் கிழக்கு ஐரோப்பிய எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தங்கள் வான்பரப்பில் நுழையும் ட்ரோன்களை சுட்டு வீழ்த்த ராணுவத்திற்கு அதிகாரம் வழங்கும் சட்டத்தை ருமேனியா நாடாளுமன்றம் சமீபத்தில் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.

கண்டியில் இடம்பெற்ற மாணவர்கள் கெளரவிப்பு நிகழ்வு!

0

ஜனாதிபதி நிதியம் இப்போது 100% மக்களுக்காகச் செயற்படுகிறது.

வரப்பிரசாதம் பெற்ற ஒரு குழுவினரால் அவர்களின் வரப்பிரசாதமாக மாற்றிக் கொண்டிருந்த ஜனாதிபதி நிதியம், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் 100% மக்களுக்காகப் பயன்படுத்தப்படுவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

2023 (2024) மற்றும் 2024 க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்தையும் உள்வாங்கும் வகையில், ஒவ்வொரு பாடத்துறையின் கீழும் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு கண்டி மாவட்ட செயலகத்தில் இன்று (14.09.2025) இடம்பெற்றது.

ஜனாதிபதி நிதியம் எடுத்த தீர்மானத்திற்கு அமைய, சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களைக் கௌரவிப்பதற்கான, மத்திய மாகாண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.

இதன்போது சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்குப் பிரதமர் அவர்களால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.

2023 (2024) மற்றும் 2024 க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் ஒவ்வொரு பாடத்துறையின் கீழும் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் வாழ்த்து தெரிவித்த பிரதமர், அவர்களுக்குக் கிடைத்த இந்த வாய்ப்பானது நாட்டின் எதிர்கால மாற்றத்திற்குத் தேவையான பங்களிப்பையும் தலைமைத்துவத்தையும் பெற்றுத்தரக் காரணமாக அமையும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,

“ஜனாதிபதி நிதியம் பற்றிப் பேசும்போது அதைத் தவறாகப் பயன்படுத்தப்பட்ட விதம் பற்றியே அதிகம் கேள்விப்படுகிறோம். வரப்பிரசாதம் பெற்ற ஒரு குழுவினரால் அவர்களது சலுகைகள் மற்றும் நலன்களை அதிகரித்துக்கொள்ளவே இந்த நிதியம் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டு வந்திருந்தது.

ஆயினும் இன்று அந்த நிலைமை முற்றிலும் மாறி, ஜனாதிபதி நிதியத்தின் உண்மையான நோக்கத்திற்காக அதை 100% பயன்படுத்துவதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். இந்த நிதியம் இப்போது மக்களுக்கு நெருக்கமாகி, மக்கள் தங்கள் பிரதேசத்திலேயே அதனை எளிதாகப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.

அதேபோல், மனித வளத்தை மேம்படுத்துவதை அரசாங்கம் தனது முதன்மைப் பணியாக அடையாளம் கண்டுள்ளது. அந்த நோக்கத்துடனேயே நாம் கல்வியில் முதலீடு செய்கிறோம். அந்த முதலீடானது பண ரீதியில் மட்டுமன்றி ஏனைய அனைத்துத் துறைகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மாறிவரும் உலகில் வித்தியாசமான விதத்தில் சிந்திக்கக்கூடிய, ஒரு விடயத்தின் அனைத்துப் பக்கங்களையும் பார்க்கக்கூடிய, உலகத்தை மாற்றக்கூடிய மனிதநேயம் மிக்க குடிமக்களை உருவாக்குவதற்கே நாம் முயற்சிக்கிறோம்.”

இந்த நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன அவர்கள்,

“ஜனாதிபதி நிதியம் என்பது மக்களின் நிதியம், அதேபோன்று அது மக்களின் தனி உரிமையாகும். அதனை முறையாக மக்களிடம் ஒப்படைப்பதே நமது பொறுப்பு.

தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த ஜனநாயக ரீதியிலான மாற்றத்தின் கீழ், மனித வளத்தை அபிவிருத்தி செய்தல் மிகவும் அவசியமானதாகும். இலங்கை அதிக எண்ணிக்கையிலான இளம் வயதினரைக் கொண்ட ஒரு நாடாகும். ஆகையினாலே, அந்த மாற்றத்தை அடைய இந்த அரசாங்கம் உங்களுக்காக அந்த கல்விச் சூழலை உருவாக்கி வருகிறது” என தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பாராளுமன்ற கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன, மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ். அபயகோன், கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர சேனவிரத்ன, புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவலக பிரதி அமைச்சர் கமகேதர திசாநாயக்க, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி ஹன்சக விஜேமுனி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை அதிகாரிகள், நிர்வாகத் துறை அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

– பிரதமர் ஊடகப் பிரிவு.

போருக்கு செல்ல முன் உங்களை பார்க்க வந்தேன் – விஜய்!

0

நேற்று திருச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரம் ஆரம்பமாகியுள்ளது. நேற்று காலை 9 மணி அளவில் திருச்சி விமான நிலையத்திற்கு விஜய் வருகை தந்திருந்தார். அங்கிருந்து காலை 10 மணிக்கு மரக்கடைக்கு வந்து தனது பிரச்சாரத்தை விஜய் துவங்கி இருக்க வேண்டும்.

ஆனால், தொண்டர்கள் மற்றும் திருச்சி மக்களின் அமோகமான வரவேற்பின் காரணமாக விஜய்யின் பிரச்சார வாகனம் சொன்னபடி சரியான நேரத்திற்கு அங்கு வரமுடியவில்லை. மதியம் 2 மணிக்கு வந்த இடத்திற்கு வந்த நிலையில், கிட்டத்தட்ட 3 மணி அளவில் தான் விஜய் தனது பேச்சை தொடங்கினார்.

இந்த நிலையில், அவர் பேசியது பெரிதும் வைரலாகியுள்ளது. அங்கு பேசிய அவர்;

”எல்லோருக்கும் வணக்கம், போருக்கு செல்வதற்கு முன்பு உங்களை பார்க்க வந்துள்ளேன். அரசியலில் களம் இறங்க அண்ணா முடிவெடுத்த இடம் திருச்சி. பெரியார் வாழ்ந்த மண் திருச்சி. கல்வி மதச்சார்பின்மைக்கு பெயர் பெற்ற இடம் திருச்சி. திருச்சியில் தொடங்கிய அனைத்துமே திருப்பு முனையாகதான் அமையும் என சொல்லுவார்கள். ஜனநாயக போருக்கு முன் மக்களை பார்க்க வந்துள்ளேன். மக்கள் கூட்டத்தை பார்க்கும்போது பரவசமாகிறது. தவெக தொண்டர்களை பார்க்கும்போது பரவசமாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும் உள்ளது” என கூறினார்.

மேலும் “திமுக அரசு எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. சொன்னீர்களே, செய்தீர்களா..” என கேள்வி எழுப்பிய விஜய், ”டீசல் விலை ரூ. 3 குறைப்பு, மாணவர்கள் கல்விக்கடன் ரத்து, அரசு வேலையில் பெண்களுக்கு 40% சதவீதம் இட ஒதுக்கீடு, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம், அரசுப்பணியில் இரண்டு லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் போன்ற வாக்குறுதிகள் என்ன ஆனது? நம்ம கேள்வி கேட்டுகிட்டே இருக்க வேண்டியதுதான். திமுகவினரிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வரப்போவதில்லை” என அவர் தெரிவித்தார்.

“கல்வி, மின்சாரம், மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளை தவெக செய்துகொடுக்கும். பெண்கள் பாதுகாப்பில் சட்ட பிரச்சனைகளில் நோ காம்ரமைஸ். நடைமுறைக்கு எது சாத்தியமோ, அதையே நாங்கள் சொல்வோம். வெற்றி நிச்சயம். மீண்டும் சந்திக்கும் வரை, நன்றி வணக்கம்” என கூறி தனது உரையை நிறைவு செய்தார். 

ஜப்பான் குறித்த ஓர் சுவாரஷ்யமான விடயம்!

0

ஜப்பானில் இதுவரை இல்லாத அளவுக்கு 100 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. செப்டம்பர் 1-ம் தேதி நிலவரப்படி, நாட்டில் 99,763 பேர் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள், இது கடந்த ஆண்டை விட 4,644 அதிகரித்துள்ளது. இந்த வயதில் ஜப்பான் தொடர்ந்து 55-வது ஆண்டாக புதிய சாதனை படைத்துள்ளது. பெண்கள் பெரும்பான்மையாக உள்ளனர், மொத்தத்தில் சுமார் 88% பேர் இதில் அடங்குவர்.

ஜப்பானின் வயதான பெண் 114 வயதான ககாவா ஷிகேகோ, அதே நேரத்தில் வயதான ஆண் 111 வயதான மிசுனோ கியோடகா. ஜப்பானிய அரசாங்கம் 1963 ஆம் ஆண்டில் நூற்றாண்டைச் சேர்ந்தவர்களைக் கண்காணிக்கத் தொடங்கியது, அப்போது 153 பேர் மட்டுமே 100 வயதை எட்டினர். ஜப்பானின் குறிப்பிடத்தக்க நீண்ட ஆயுள் ஆரோக்கியமான வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் மற்றும் வலுவான சுகாதார அமைப்பு ஆகியவற்றின் கலவையால் ஏற்படுகிறது. சராசரி ஆயுட்காலம் 84.5 ஆண்டுகள் ஆகும், இது மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது மிக உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, 100 வயது வரை வாழ்வதற்கான வாய்ப்புகளில் ஜப்பான் உலகில் முதலிடத்தில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், பிரதமர் 100 வயது அடையும் மக்களுக்கு வாழ்த்து கடிதங்கள் மற்றும் பரிசுகளை அனுப்புகிறார. சமூகத்திற்கு அவர்களின் பங்களிப்பை கௌரவிப்பதாகவும், முதியோர் நலன் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிப்பதாகவும் கூறுகிறார்.

இலங்கையில் யுத்தக் குற்றங்கள் நடைபெறவில்லையா?

0

இலங்கையில் யுத்தக் குற்றங்கள் நடைபெறவில்லை என பாதுகாப்பு  பிரதி அமைச்சர் அருண ஜயசேகர கூறியதற்கு பதிலளித்த EPRLF தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், அவரிடம் விசாரணை நடத்தினால் யுத்தக் குற்றங்களில் அவரது பங்கு தெரியவரும் என தெரிவித்தார். 

செம்மணிப் புதைகுழி, பாதுகாப்பு வலயங்களில் மக்கள் மீது மோட்டார் குண்டுத் தாக்குதல்கள் உள்ளிட்டவை யுத்தக் குற்றங்கள் என அவர் சுட்டிக்காட்டினார்.

அருண ஜயசேகர, முன்னாள் இராணுவ வீரர் என்பதால் முப்படைகளைப் பாதுகாக்கும் நோக்கில் இவ்வாறு பேசுவதாகவும், உள்ளக விசாரணைகள் மூலம் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது எனவும் பிரேமச்சந்திரன் வலியுறுத்தினார். 

சர்வதேச விசாரணை மூலமே உண்மைகளை நிரூபிக்க முடியும் எனவும், இலங்கை அரசாங்கங்கள் முப்படைகளைப் பாதுகாக்கவே முயல்வதாகவும், இதனால் தமிழ் மக்களுக்கு நீதி மறுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

உள்ளக விசாரணைகளில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும், சர்வதேச விசாரணை அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.  

மூன்று பொலிஸாருக்கு 7 வருட கடூழிய சிறை!

0

பொலன்னறுவையில் 2004ஆம் ஆண்டு ஹோட்டல் முகாமையாளர் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மூன்று பொலிசாருக்கு பொலன்னறுவை மேல் நீதிமன்ற நீதிபதி கடந்த வௌ்ளிக்கிழமை (12) , ஏழு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

2004இல், பொலன்னறுவை மாவட்ட போதை ஒழிப்பு பொலிஸ் பிரிவைச் சேர்ந்த நான்கு பொலிசார், பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தலைமையில், சட்டவிரோத மதுபானம் தேடி ஹோட்டல் ஒன்றில் சோதனை நடத்தினர். 

இதன்போது ஹோட்டல் முகாமையாளருக்கும் பொலிசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பொலிசார் அவரைத் தாக்கியதில் முகாமையாளர் உயிரிழந்தார்.

இதையடுத்து, நான்கு பொலிசாரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். 

பின்னர், அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். 

வழக்கு விசாரணை பொலன்னறுவை மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தபோது, பொலிஸ் பரிசோதகர் வசந்த நோயால் உயிரிழந்தார்.

எஞ்சிய மூன்று பொலிசாருக்கு 2025 ஜனவரியில் மீண்டும் பணி வழங்கப்பட்டு, அவர்களில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஜெகத் பிரியந்த மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்துக்கும், மற்ற இருவர் வேறு மாவட்ட பொலிஸ் நிலையங்களுக்கும் இடமாற்றப்பட்டனர்.

2025 செப்டம்பர் 12 அன்று, மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மூன்று பொலிசாரும் ஆஜராகினர். 

சாட்சிகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் அவர்கள் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டு, ஏழு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 

தீர்ப்புக்குப் பின், மூவரும் சிறைச்சாலை அதிகாரிகளால் பொலன்னறுவை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்த அதிசய மருந்து வைரல்!

சீனாவில் வெறும் 3 நிமிடங்களில் உடைந்த எலும்புகளை ஒட்டவைக்கும் மருத்துவ பசை கண்டுபிடிக்கப்பட்டு, மருத்துவ உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எலும்பு முறிவு சிகிச்சையில், உடைந்த எலும்புகளை மீண்டும் இணைக்கவும், எலும்பியல் கருவிகளைப் பொருத்தவும் குறிப்பிட்ட பசையைக் கண்டுபிடிப்பது என்பது மருத்துவ உலகின் நீண்ட கால கனவாக இருந்து வந்தது.

கடந்த 1940ம் ஆண்டுகளில் ஜெலட்டின் மற்றும் பிசின் கொண்டு உருவாக்கப்பட்ட பசைகள், உயிரியல் ரீதியாக உடலுடன் பொருந்தாத தன்மை காரணமாக நிராகரிக்கப்பட்டன.

தற்போது சந்தையில் எலும்புகளை இணைக்கும் சிமெண்ட்கள் மற்றும் இடைவெளிகளை நிரப்பும் கலவைகள் பயன்பாட்டில் இருந்தாலும், அவற்றுக்கு உண்மையான ஒட்டும் தன்மை கிடையாது. இந்தச் சூழலில், சீன விஞ்ஞானிகள் புதியதொரு பசையைக் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.

சீனாவின் கிழக்கு ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள சர் ரன் ரன் ஷா மருத்துவமனையின் எலும்பியல் நிபுணர் லின் சியான்ஃபெங் தலைமையிலான ஆய்வுக் குழுவினர், ‘போன் 02’ என்ற புதிய மருத்துவப் பசையை உருவாக்கியுள்ளனர். கடலுக்கு அடியில் பாலங்களில் சிப்பிகள் உறுதியாக ஒட்டிக்கொண்டிருப்பதைக் கண்டதன் மூலம் இந்த பசையை உருவாக்கும் எண்ணம் தனக்குத் தோன்றியதாக லின் சியான்ஃபெங் குறிப்பிட்டார்.

இந்தப் பசை, ரத்தம் நிறைந்த சூழலிலும் மூன்று நிமிடங்களுக்குள் உடைந்த எலும்புகளைத் துல்லியமாக ஒட்டவைக்கும் திறன் கொண்டது. எலும்பு குணமடையும்போது, இந்தப் பசை உடலால் இயற்கையாகவே உறிஞ்சப்பட்டுவிடும். இதனால், சிகிச்சைக்குப் பின் பொருத்தப்பட்ட உலோகத் தகடுகள் மற்றும் ஆணிகளை அகற்ற மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

இதுவரை 150க்கும் மேற்பட்ட நோயாளிகளிடம் இந்தப் பசை வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், உலோகத் தகடுகளுக்கு மாற்றாக இந்தப் பசை எதிர்காலத்தில் பயன்படுத்தப்பட்டு, அதனால் ஏற்படும் தொற்று மற்றும் பிற அபாயங்களைக் குறைக்க முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கனமூலை பாடசாலையில் இடம்பெற்ற கெளரவிப்பு விழா!

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

புத்தளம் தெற்கு கோட்டத்துக்குட்பட்ட கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை பாராட்டு கௌரவிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (12) பாடசாலையின் கேட்போர் கூடத்தில் பாடசாலையின் அதிபர் பீ.எம். முஸ்னி தலைமையில் நடைபெற்றது.

பாடசாலை அபிவிருத்திச் சங்கம் உட்பட கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் கே.எம்.எம். பைஸர் மரிக்கார், பழைய மாணவியர் சங்கம் மற்றும் சமூகவியலாளர் எம்.ஏ.எம். ஹஸ்மத்கான் ஆகியோரின் அனுசரணையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இம்முறை 05 ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுபுள்ளிக்கு மேல் பெற்ற முகம்மது பஸ்லின் பௌஸ் அஹமட் (147), முகம்மது பைரூஸ் முகம்மது அப்னான் (141) அஜ்வாத் பாத்திமா அஸா (137) ஆகிய 03 மாணவர்களுடன், பல்கலைக்கழகம் தெரிவான மூன்று மாணவர்களும் இதன் போது கௌரவிக்கப்பட்டனர்.|

சதகதுல்லா மஸியா 3ஏ (கொழும்பு பல்கலைக்கழகம்), முகம்மது ஹில்மியாஸ் பஸ்ரா 3ஏ (கிழக்கு பல்கலைக்கழகம்), முகம்மது பாயிஸ் முகம்மது பாதில் 2ஏ,1 பீ (தென் கிழக்கு பல்கலைக்கழகம்) ஆகிய மூவரும் கௌரவிக்கப்பட்டனர்

இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

கிராமப்புற மக்களுக்கு சுகாதாரத்தை வழங்கும் “ஆரோக்கியம்”

0

கிராமப்புற மக்களுக்கு சுகாதாரத்தை வழங்கும் “ஆரோக்கியம்” நடமாடும் சுகாதார மருத்துவமனை திட்டத்தின் மூன்றாவது திட்டம் இரத்தினபுரி, எஹலியகொட, ஹெவயின்ன கந்த வித்தியாலயத்தில் இன்று நடைபெற்றது.

கிராமப்புற மக்களின் சுகாதார நிலையை மேம்படுத்துதல், மக்களின் நாள்பட்ட மற்றும் கடுமையான நோய்களைக் கண்டறிதல், சிகிச்சை அளித்தல் மற்றும் மேலதிக சிகிச்சை சேவைகளுக்காக அரசு மருத்துவமனைகளில் உள்ள சிறப்பு மருத்துவமனைகளுக்கு பரிந்துரைத்தல் ஆகிய முக்கிய நோக்கங்களுடன், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் அறிவுறுத்தலின் பேரில், நாடு முழுவதும் நடத்தப்படும் “ஆரோக்கியம்” நடமாடும் சுகாதார மருத்துவமனை திட்டத்தின் மற்றொரு திட்டத்தை இன்று (13) காலை இரத்தினபுரி மாவட்டம், எஹலியகொட பிரதேச செயலகப் பிரிவின் மேற்கு கலட்டுவாவ, ஹெவயின்ன கந்த வித்தியாலயத்தில் தொடங்கியது.

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் பங்கேற்புடன் தொடங்கப்பட்ட “ஆரோக்கிய” நடமாடும் சுகாதார மருத்துவமனை இன்று மாலை 5 மணி வரை நடைபெற்றது.

மேலும் ஆய்வக சேவைகள், பல் மருத்துவமனை, கண் மருத்துவமனை, இரத்த சர்க்கரை அளவு பரிசோதனை, இரத்த லிப்பிட் அளவு பரிசோதனை, உடல் நிறை குறியீட்டெண் அளவீடு, இரத்த அழுத்த அளவீடு, பெண்கள் சுகாதார மருத்துவமனை, ஆயுர்வேத மருத்துவ மருத்துவமனை, சிறுநீரக மருத்துவமனை, தொற்றா நோய்கள் மருத்துவமனை, உளவியல் ஆலோசனை சேவைகள், ஊட்டச்சத்து ஆலோசனை சேவைகள் மற்றும் சீன அக்குபஞ்சர் மற்றும் சுகாதார கல்வி திட்டங்கள் மற்றும் மருந்துகளை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகளை இந்த திட்டம் வழங்குகின்றது.

இந்த நிகழ்வில் பேசிய சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ,

ஆரோக்கிய சுகாதார மருத்துவமனை திட்டம் ஒரு கிராமத்தை தோராயமாக தேர்ந்தெடுக்கும் திட்டம் அல்ல என்றும், “ஆரோக்கிய” நடமாடும் சுகாதார மருத்துவமனை திட்டம் ஆரோக்கியமான நாட்டிற்கான “ஆரோக்கியமான இலங்கை” திட்டத்தின் ஒரு அங்கமாக செயல்படுத்தப்படுகிறது என்று வலியுறுத்தினார்.

இதற்கு இணையாக, மக்களுக்கு நெருக்கமான சுகாதார மையங்கள் நிறுவப்படும் என்றும், அங்கு மக்களின் நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து, சிகிச்சைக்காக பரிந்துரைக்க முடியும், பின்தொடர்ந்து, மேலும் சிகிச்சைக்காக உயர் மருத்துவமனைகளுக்கு அனுப்ப முடியும் என்றும் அவர் கூறினார். மேலும், இது 8000-10000 மக்களை உள்ளடக்கிய ஒரு சிகிச்சை மையமாகவும், இது ஒரு சுகாதார மற்றும் நல்வாழ்வு மையமாகவும் இருக்கும் என்று அமைச்சர் கூறினார்.

செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் நாட்டின் ஐந்து மாவட்டங்களில், ஆரோக்கிய சுவா கிளினிக் மையம் என்ற பெயரில் பத்து மையங்கள் முன்னோடித் திட்டங்களாக நிறுவப்படும் என்றும், அவற்றில் ஒன்று செப்டம்பர் 27 ஆம் தேதி இரத்தினபுரி மாவட்டத்தின் எத் ஓயா பகுதியில் நிறுவப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்த ஆண்டு அடுத்த சில மாதங்களில் நூறு சுகாதார மையங்களுக்கான அடிக்கல் நாட்டப்படும் என்றும், மூன்று ஆண்டுகளுக்குள் ஆயிரம் சுகாதார மையங்களுடன் மக்களை உள்ளடக்கும் என்று நம்புவதாகவும் அமைச்சர் கூறினார்.

தற்போது முக்கிய சவாலாக இருப்பது தொற்றாத நோய்கள் என்றும், அவற்றிலிருந்து நாட்டு மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் ஆரோக்கிய சுவா கிளினிக் மையம் நிறுவப்பட்டு சுகாதார கிளினிக்குகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

தொற்றாத நோய்களுக்கு ஆளாகக்கூடிய மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்றும், அவர்கள் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டாலும், மிகச் சிலரே சிகிச்சை பெறுகிறார்கள் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மக்களே தொடர்ந்து சிகிச்சை பெறுவதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.

நாட்டின் மக்கள் தொகையில் 25% பேர் சில ஆண்டுகளில் முதியவர்களாக மாறுவார்கள் என்பதை வலியுறுத்திய அமைச்சர், ஊட்டச்சத்து நிலை மற்றும் மன ஆரோக்கியம் போன்ற பிரச்சினைகளில் சிறப்பு கவனம் செலுத்தி, கிராமப்புற மட்டத்தில் இதுபோன்ற நடமாடும் கிளினிக்குகள் தீவு முழுவதும் நடத்தப்படும் என்றும் கூறினார்.

கொழும்பு தேசிய மருத்துவமனை, இரத்தினபுரி போதனா மருத்துவமனை, இரத்தினபுரி பிராந்திய சுகாதார சேவைகள் இயக்குநரக அலுவலகம், அவிசாவெல்லா மாவட்ட பொது மருத்துவமனை, எஹெலியகொட அடிப்படை மருத்துவமனை, அவிசாவெல்லா சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம், எஹெலியகொட சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம் மற்றும் சபரகமுவ மாகாண ஆயுர்வேத துறை உள்ளிட்ட சுகாதார நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளில் பணிபுரியும் நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட நிபுணர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவ மற்றும் துணை மருத்துவ நிபுணர்கள் மற்றும் இளைய ஊழியர்கள் இந்த நடமாடும் சுகாதார கிளினிக்கிற்கு தங்கள் சேவைகளை வழங்கி வருகின்றனர்.

நடமாடும் கிளினிக் நடத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பெரும்பாலான மக்கள் தேயிலை, ரப்பர், மிளகு, இலவங்கப்பட்டை போன்ற பயிர்களை பயிரிடுவதில் ஈடுபட்டுள்ள குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் ஈட்டுபவர்களே.

இந்த மருத்துவ மனையில் கலந்து கொண்ட மக்கள், சுகாதார அமைச்சர் மற்றும் அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் தங்கள் கிராமங்களுக்கு வந்து இதுபோன்ற நடமாடும் மருத்துவ மனைகளை நடத்தி, நாள்பட்ட நோய்கள், தொற்று நோய்கள், தொற்றாத நோய்களைக் கண்டறிந்து, அவற்றுக்கு சிகிச்சை அளித்து, மேலதிக சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு பரிந்துரைத்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்தனர்.

எஹெலியகொட பிரதேச சபையின் தலைவர் பந்துலசேன துனுவில, எஹெலியகொட பிரதேச சபை உறுப்பினர் வஜிர சுசந்த ஜெயசிங்க, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் மூத்த உதவிச் செயலாளர் (தகவல் மற்றும் விளம்பரம்), லக்ஷ்மேந்திர தமயந்த்குமார தென்னகோன், இரத்தினபுரி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், டாக்டர் அனுஜா ரொட்ரிகோ, ஹெவயின்ன கந்த வித்தியாலயத்தின் முதல்வர் எச்.ஜி.எஸ். குணசேகர மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கற்பிட்டியில் இடம்பெற்ற வருடாந்த கண்காட்சி!

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி அந்நூர் பாலர் பாடசாலையின் வருடாந்த கண்காட்சி இம்முறை பாடசாலையின் வளாகத்தில் அதிபர் எஸ்.எம் அரூஸியா உம்மா தலைமையில் கடந்த புதன் கிழமை (10) சிறப்பாக இடம்பெற்றது.

கண்காட்சி நிகழ்வின் பிரதம அதிதியாக கற்பிட்டி பிரதேச சபையின் பாலர் பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜே.எச்.ஆர்.பீ ஜயமஹா கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்தார்.

சிறார்களின் திறமை மற்றும் ஆற்றல்கள் கழிவுப் பொருட்களை கொண்டு வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளதுடன், பாலர் பாடசாலையின் ஆசிரியர்களான எம்.எப் திப்னா பானு, ஏ.எப் அம்னா, எஸ் எப் சுமையா, ஏ.எஸ்.எப் றீஹா ஆகியோரின் பங்களிப்புடன் பெற்றோர்களின் ஒத்துழைப்பு வழங்கப்பட்டு மிகவும் நேர்த்தியாக கண்காட்சி பொருட்கள் உருவாக்கப்பட்டிருந்தது.

இதேவேளை நிகழ்வின் கௌரவ அதிதியாக கற்பிட்டி அந்நூர் பாலர் பாடசாலையின் செயலாளர் எம். நாசர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.