Thursday, July 30, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 14

இதய நோயாளிகளுக்கு கொழும்பில் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை மையம்!

0

இலங்கையில் மாரடைப்பு மற்றும் இருதய நோய்களால் பாதிக்கப்படும் ஆயிரக்கணக்கான ஏழை எளிய மக்களின் உயிர்களைக் காக்கும் நோக்கில், ஒரு மாபெரும் மருத்துவப் புரட்சி இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அரங்கேறியுள்ளது. தனியார் வைத்தியசாலைகளில் பல இலட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டிய அதிநவீன இருதய நோய் சிகிச்சைகளை, இனி நமது நாட்டின் சாதாரண மக்களும் மிக இலகுவாகவும் இலவசமாகவும் பெற்றுக்கொள்ளும் புதிய யுகம் பிறந்துள்ளது.

இலங்கை மருத்துவத்துறையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் வகையில், 600 மில்லியனுக்கும் அதிக முதலீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட இரண்டு ‘கேத் லேப்’ (Cardiac Catheterization Laboratory Complex) எனப்படும் இருதய நோய் சிகிச்சை ஆய்வகங்கள் மற்றும் முழுமையாக நவீன மயப்படுத்தப்பட்ட இருதய நோய் சாய்சாலை பிரிவு (Renovated Cardiology Day Case Unit) என்பன இன்று (02) உத்தியோகபூர்வமாக மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டன. இத்திறப்பு விழாவை சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ அவர்கள் தலைமை தாங்கி நடாத்தி வைத்தார்.

ஒரு வருடக் காத்திருப்புப் பட்டியல்… இனி ஒரே மாதத்தில் முடியப்போகுது!

இதய அறுவை சிகிச்சை மற்றும் அஞ்சியோகிராம் (Angiogram) போன்ற அவசரப் பரிசோதனைகளுக்காக இலங்கை மக்கள் இதுவரை மாதக்கணக்கில், ஏன் ஒரு வருடம் வரை கூட அரச வைத்தியசாலைகளில் காத்திருக்க வேண்டிய ஒரு துரதிர்ஷ்டவசமான நிலை காணப்பட்டது. ஆனால், இந்த புதிய ஆய்வகங்களின் வருகையோடு, அந்த ஒரு வருடக் காத்திருப்புப் பட்டியலை வெறும் ஒரே மாதமாகக் குறைப்பதற்கான துரித திட்டங்கள் தற்போது அரசாங்கத்தினால் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதுமட்டுமன்றி, நாட்டின் இருதய சிகிச்சை வரலாற்றையே மாற்றியமைக்கப் போகும் மற்றுமொரு பிரம்மாண்ட அறிவிப்பையும் அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ இதன்போது வெளியிட்டார். வரும் 2029 ஆம் ஆண்டளவில், தேசிய வைத்தியசாலை வளாகத்திற்குள் சகல நவீன வசதிகளையும் கொண்ட 16 மாடிகளை உடைய பிரம்மாண்ட ‘தேசிய இருதயநோய் சிகிச்சை நிலையம்’ அமைக்கப்பட்டு, மக்களின் பாவனைக்கு முழுமையாக கையளிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள இந்த அதிநவீன தொழில்நுட்ப கட்டமைப்பு மாற்றமானது, இனிவரும் காலங்களில் இதய நோய்களால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையை பெருமளவில் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நவீன உலகிற்கு ஈடுகொடுக்கும் வகையிலான இந்த மருத்துவ வசதிகள், இலங்கையர்களுக்கு தங்குதடையற்ற, தரமான சுகாதார சேவையை உறுதி செய்யும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

தாயைக் கத்தியால் வெட்டி, வாழ்ந்த வீட்டிற்கும் தீ வைத்த கொடூர மகன்!

0

இலங்கை இணைய ஊடகங்களில் தற்போது அதிவேகமாகப் பகிரப்பட்டு வரும் ஒரு அதிர்ச்சித் தகவல் எமது செய்திப் பிரிவுக்குக் கிடைத்துள்ளது. பெற்ற தாய் என்றும் பாராமல், அவர் வசித்து வந்த வீட்டிற்குத் தீ வைத்ததுடன், அவரை கூர்மையான ஆயுதத்தால் வெட்டிப் படுகாயப்படுத்திய கொடூர மகன் ஒருவரைத் தேடி மாரவில பொலிஸார் வலை வீசியுள்ளனர். நாத்தாண்டியா, அசோகபுர பகுதியில் கடந்த 30ஆம் திகதி மாலை இந்தத் துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

வர்ணகுலசூரிய பெர்னாண்டோ (வயது 59) என்ற அசோகபுரத்தைச் சேர்ந்த தாயே இவ்வாறு மாரவில தள வைத்தியசாலையில் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவத்தன்று இந்தத் தாயின் வீட்டிற்கு வந்த அவரது மகன், தாயுடன் ஏற்பட்ட தகராறில் வீட்டைத் தீயிட்டு கொளுத்தியுள்ளார். இதனால் செய்வதறியாது திகைத்த தாய், உடனடியாக மாரவில பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டையடுத்து அன்றைய தினமே மாலை மாரவில பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டு திரும்பியுள்ளனர். பொலிஸார் வந்து விசாரித்ததால் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற மகன், பொலிஸார் அங்கிருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மீண்டும் தாயின் இருப்பிடத்திற்குத் தேடி வந்து தாயை சரமாரியாக தாக்கியுள்ளார்.

வைத்தியசாலை கட்டிலில் இருந்து தாய் சொன்ன வாக்குமூலம்!

“என் மகன் என் வீட்டைக் கொளுத்தினான். அதுபற்றி பொலிஸார் வந்து விசாரித்த கோபத்தில், பொலிஸார் போன உடனேயே ஓடிவந்து என்னைக் கத்தியால் வெட்டினான். அந்த வீட்டில் நான் மட்டும்தான் தனியாக வாழ்ந்து வந்தேன்” என பாதிக்கப்பட்ட தாய் வைத்தியசாலை பொலிஸாரிடம் கண்ணீருடன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தற்போது நாத்தாண்டியா – தம்போவ பகுதியைச் சேர்ந்த சந்தேக நபரான மகன் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கு மாரவில பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தகவல்: ஜூட் சமந்த

வீதி விபத்துக்களில் உயிர்களைக் காக்க பொலிஸாருக்கு விசேட பயிற்சி!

0

இன்றைய அவசர உலகில் வீதி விபத்துக்கள் நாளாந்தம் அதிகரித்து வரும் நிலையில், விபத்தில் சிக்குபவர்களின் உயிர்களைத் தற்காத்துக்கொள்ளும் நோக்கில் இலங்கையில் மிக முக்கியமானதொரு செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் வீதியில் பயணிக்கும் போது எப்போது என்ன நடக்கும் என்று யாராலும் கூற முடியாது. திடீரென ஒரு விபத்து நேர்ந்தால், ஆம்புலன்ஸ் வரும் வரை அல்லது காயமடைந்தவரை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வரைக்கும் இடைப்பட்ட சில நிமிடங்கள் இருக்கிறதே… அதுதான் ஒரு மனிதனின் வாழ்வா சாவா என்பதைத் தீர்மானிக்கும் ‘கோல்டன் ஹவர்’ (Golden Hour).

இந்த முக்கியமான நேரத்தில் விபத்தில் சிக்குபவர்களின் உயிரை எப்படிக் காப்பாற்றுவது? இதோ இதற்கான பதிலை சிலாபம் பொலிஸார் இப்போது கையில் எடுத்துள்ளனர்.

09 பொலிஸ் நிலையங்கள்… 37 ஹீரோக்கள்!

வீதி விபத்துக்கள் இடம்பெறும் போது சம்பவ இடத்திற்கு முதன்முதலாக ஓடி வருவது போக்குவரத்து பொலிஸார்தான். ஆனால், அவர்களுக்கு மருத்துவ முதலுதவி பற்றிய முறையான அறிவு இல்லாவிட்டால், காயமடைந்தவர்களைக் கையாள்வதில் சிக்கல் ஏற்படும். இதனை உணர்ந்து, சிலாபம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலக கேட்போர் கூடத்தில் அண்மையில் ஒரு விசேட பயிற்சிப் பட்டறை அரங்கேறியது.

சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 09 பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த 37 போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் இந்த அதிமுக்கியத்துவம் வாய்ந்த பயிற்சியில் உள்வாங்கப்பட்டனர்.

செஞ்சிலுவைச் சங்கம் வழங்கிய ‘லைஃப் சேவிங்’ வித்தைகள்

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் புத்தளம் கிளையினர்தான் பொலிஸாருக்கு இந்த உன்னதமான பயிற்சியை வழங்க முன்வந்தனர். விபத்து நடந்த இடத்தில் இரத்தப் போக்கை எப்படிக் கட்டுப்படுத்துவது, செயற்கை சுவாசம் (CPR) எவ்வாறு வழங்குவது, எலும்பு முறிவுகள் ஏற்பட்டால் நோயாளியை எவ்வாறு தூக்குவது போன்ற பல அவசர கால முதலுதவி உத்திகள் செய்முறை ரீதியாக பொலிஸாருக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டன.

இனி சிலாப வீதிகளில் விபத்துக்கள் நேர்ந்தால், அங்கு நிற்கும் பொலிஸார் வெறும் சட்டம் ஒழுங்கை மட்டும் காப்பவர்களாக இருக்க மாட்டார்கள்; மாறாக உயிர்காக்கும் முதலுதவியாளர்களாகவும் செயற்படுவார்கள் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

இந்தப் பயிற்சியை மிகச் சிறந்த முறையில் நிறைவு செய்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பாராட்டுக்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

தகவல் மற்றும் புகைப்படம்: ஜூட் சமந்த

பொசன் பார்த்துவிட்டு திரும்பியபோது அண்ணன் கண்முன்னே தம்பிக்கு நேர்ந்த கதி!

0

ஜுட் சமந்த

புத்தளம்: பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பக்தி மயமான கொண்டாட்டங்கள் இடம்பெற்று வரும் வேளையில், ஆனமடுவ பகுதியில் ஒட்டுமொத்த கிராமத்தையுமே உரைய வைத்த ஒரு துயரச் சம்பவம் பதிவாகியுள்ளது. ஆனமடுவ நகரில் கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொசன் வலயத்தை பார்ப்பதற்காக, புத்தளம் அட்டவில்லுவ பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் குழுவினர் தங்களது மோட்டார் சைக்கிள்களில் உற்சாகமாகப் புறப்பட்டுள்ளனர். ஆனால், அந்தப் பயணம் தங்களின் வாழ்வையே புரட்டிப்போடும் என்று அவர்கள் சற்றும் நினைத்திருக்கவில்லை.

வண்ணமயமான பொசன் வலயத்தை கண்டு ரசித்துவிட்டு, கடந்த 1 ஆம் திகதி நள்ளிரவு இவர்கள் மீண்டும் மோட்டார் சைக்கிள்களில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். புத்தளம் – ஆனமடுவ பிரதான வீதியின் கொட்டுக்கச்சிய பகுதியை அவர்கள் கடந்தபோது, ஒரு மோட்டார் சைக்கிள் மட்டும் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, வீதியோரமாக இருந்த கொட்டுக்கச்சிய குளத்தையும் கச்சிமடுவ குளத்தையும் இணைக்கும் பிரதான நீர்ப்பாசன கால்வாய்க்குள் பாய்ந்து தலைகீழாகக் கவிழ்ந்தது.

மோட்டார் சைக்கிளைச் செலுத்திய 19 வயதுடைய சசிந்து லக்ஷான் என்ற இளைஞன், விபத்தின் வேகத்தில் ஆழமான கால்வாய் நீருக்குள் மூழ்கினான். அவருடன் பின்னால் பயணித்த அண்ணனான பசிந்து லக்ஷான், எப்படியோ போராடி கால்வாய்க் கரைக்கு வந்து, தம்பியைக் காப்பாற்றுமாறு வீதியில் நின்று அலறியுள்ளார். ஆனால், அவர்களுடன் முன்னால் சென்ற நண்பர்களின் மோட்டார் சைக்கிள்கள் அதற்குள் அந்த இடத்தை தாண்டி வெகுதூரம் சென்றுவிட்டதால், அண்ணனின் அபயக்குரல் யாருக்கும் கேட்கவில்லை. நள்ளிரவு இருளில் என்ன செய்வதென்று தெரியாமல் அந்த அண்ணன் தவித்த தவிப்பு நெஞ்சை உலுக்குவதாக இருந்தது.

அந்தச் சமயத்தில், அதிர்ஷ்டவசமாக அந்த வீதியால் வந்த வேன் ஒன்றில் பயணித்தவர்கள், வீதியோரத்தில் காயங்களுடன் அலறிக்கொண்டிருந்த இளைஞனைக் கண்டு வாகனத்தை நிறுத்தியுள்ளனர். நிலைமையை உணர்ந்த அவர்கள், உடனடியாகச் செயற்பட்டு கால்வாய்க்குள் மூழ்கியிருந்த சசிந்துவை மீட்டு, இருவரையும் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு சேர்த்தனர். எனினும், அங்கு பரிசோதித்த வைத்தியர்கள் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய சசிந்து லக்ஷான் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகக் கைவிரித்தனர்.

இதேவேளை, படுகாயமடைந்த அண்ணன் பசிந்துவின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால், அவர் மேலதிக அவசர சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அவசரமாக மாற்றப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிள் அளவுக்கு அதிகமான அதிவேகத்தில் பயணித்தமையே இந்த விபத்துக்குக் காரணம் என ஆனமடுவ பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஒரு கண நேர வேக ஆசை, ஒரு இளம் உயிரைப் பறித்து, மற்றொருவரை மரணப் போராட்டத்திற்குள் தள்ளியுள்ளது குறித்து ஆனமடுவ பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த 3 நாட்களுக்கு நாடு தழுவிய ஒழிப்புத் திட்டம்!

0

இலங்கையில் சைலண்டாக பரவி வரும் டெங்கு காய்ச்சல் தற்போது கட்டுக்கடங்காத நிலையை எட்டியுள்ளது. நாளாந்தம் பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கை அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உயர்ந்து வரும் நிலையில், இதனைப் போர்க்கால அடிப்படையில் எதிர்கொள்ள அரசாங்கம் அதிரடி முடிவொன்றை எடுத்துள்ளது.

நாட்டில் டெங்கு பரவல் அதிகரித்து வரும் சூழலில், இன்று (02) முதல் மூன்று நாட்களுக்கு நாடு தழுவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்புத் திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வழிகாட்டலின் கீழ் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

“தூய்மையான இலங்கை” (Clean Sri Lanka) வேலைத்திட்டத்துடன் இணைந்து, நாடு முழுவதிலும் உள்ள மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களின் அதிகாரிகள் இந்த விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் பங்கெடுக்கவுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த ஆண்டில் இதுவரை நாடு முழுவதும் 55,406 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்திலேயே அதிகளவான பாதிப்புகள் பதிவாகியுள்ளதாகவும் அங்கு இதுவரை 21,565 பேருக்கு டெங்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு அதிக ஆபத்துள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளின் எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது.

அதிகரித்து வரும் இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் சுற்றாடலைத் தூய்மையாக வைத்திருக்குமாறு சுகாதாரப் பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.

78 கிலோ கேரளா கஞ்சாவுடன் இளைஞர் கைது!

0

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த 31 வயது நபர் ஒருவர், காரில் 78 கிலோ கேரள கஞ்சாவை கடத்தி சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்தனர். 

வவுனியா – நெடுங்கேணி பொலிஸ் நிலைய அதிகாரிகள் கடந்த 30 ஆம் திகதி இரவு பெரியகுளம் சந்தி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடியில், சொகுசு கார் ஒன்றினை சோதனை செய்த போது அதில் கேரள கஞ்சா 78 கிலோகிராம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கேரளா கஞ்சா மீட்கப்பட்டதுடன், அதில் பயணித்த நபரும் கைது செய்யப்பட்டார். 

நெடுங்கேணி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு, குறித்த வாகனம் நிறுத்தி சோதனை செய்த போது இந்த கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

சந்தேகநபர் 31 வயதுடைய புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். இந்த சம்பவம் தொடர்பாக நெடுங்கேணி பொலிஸ் நிலைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னார் மக்கள் வங்கி கிளையினால் பூக்குளம் முன்பள்ளிக்கு பேருதவி!

0

மன்னார் பகுதியில் நீண்ட நாட்களாக அடிப்படை வசதிகளின்றி கல்வி கற்று வந்த முன்பள்ளிப் பிள்ளைகளின் முகங்களில், மக்கள் வங்கியின் பிறந்தநாள் கொண்டாட்டம் புதியதொரு ஒளியை ஏற்றியுள்ளது.

ஒரு நிறுவனம் தனது 65ஆவது மைல்கல்லை எட்டும்போது ஆடம்பரமாகக் கொண்டாடுவதுதான் வழக்கம். ஆனால், மக்கள் வங்கி தனது 65ஆவது பிறந்தநாளை, சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள ஒரு கிராமத்து பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக அர்ப்பணித்து, அனைவரினதும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. மக்கள் வங்கியின் மன்னார் கிளையின் முகாமையாளர் திரு ஹக் முஹம்மது அரூஸ் தலைமையில் இந்த நெகிழ்ச்சியான மனிதநேய உதவித்திட்டம் அண்மையில் முன்னெடுக்கப்பட்டது.

பூக்குளம் பிள்ளைகளுக்குக் கிடைத்த ‘உயிர்கொடுப்பு’

மன்னார், பூக்குளம் முன்பள்ளி பாடசாலையில் கல்வி பயிலும் குட்டிப் பிள்ளைகள், முறையான தளபாட வசதிகள் இன்றி பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர். தளபாடத் தட்டுப்பாடு என்பது அந்தப் பிள்ளைகளின் அன்றாட கற்றல் ஆர்வத்தையே பாதித்திருந்தது. இதனைத் துல்லியமாக அடையாளம் கண்டுகொண்ட மக்கள் வங்கியின் மன்னார் கிளை அதிகாரிகள், அந்தப் பாடசாலைக்கு நேரடியாகச் சென்று பிள்ளைகளுக்குத் தேவையான அத்தியாவசிய தளபாடச் சாமான்களை முற்றிலும் இலவசமாக அன்பளிப்புச் செய்துள்ளனர்.

இந்தத் தளபாடங்கள் கையளிக்கும் நிகழ்வானது வெறும் ஒரு கொடுக்கல் வாங்கலாக அமையாமல், அந்தப் பகுதி மக்களின் நீண்டகாலக் குறைபாட்டைத் தீர்க்கும் ஒரு உன்னத நிகழ்வாக அமைந்தது. மன்னார் மக்கள் வங்கியின் முகாமையாளர் உற்பட ஏனைய அதிகாரிகள், பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் எனப் பலரது முன்னிலையில் இந்த உதவிப் பொருட்கள் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன. “எங்கள் பிள்ளைகளின் கல்விக்குக் கிடைத்த ஆகச்சிறந்த பிறந்தநாள் பரிசு இது” எனப் பெற்றோர் இதன்போது நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர்.

16 வருட சிறைத்தண்டனைக்கு சவால் விடுத்த சரண குணவர்தன!

0

இலங்கை அரசியலிலும் ஊடகங்களிலும் கடந்த சில நாட்களாகப் பேசும்பொருளாக இருந்த முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவின் விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. நான்கு ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்டு, கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் தமக்கு விதிக்கப்பட்ட 16 வருட கடுங்காவல் சிறைத்தண்டனையை எதிர்த்து அவர் தற்போது மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டியுள்ளார். கடந்த ஜூன் மாதம் 9ஆம் திகதி வழங்கப்பட்ட இந்த அதிரடித் தீர்ப்பை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதே அவரது பிரதான கோரிக்கையாக உள்ளது.

சரண குணவர்தன அபிவிருத்தி அதிர்ஷ்டலாபச் சபையின் (Development Lotteries Board) தலைவராகப் பதவியிலிருந்த காலகட்டத்தில், அந்த நிறுவனத்திற்காக வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்றுக்கொண்டதில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டது. இதன் மூலம் அவர் அரசாங்கத்திற்கு பெருமளவு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக லஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு (CIABOC) சுட்டிக்காட்டியுள்ளது.

நீண்டகால விசாரணைகளின் பின்னர், லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் 2022ஆம் ஆண்டில் அவருக்கு எதிராக நான்கு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளின் இறுதித் தீர்ப்பாகவே அண்மையில் 16 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், இந்தத் தீர்ப்பில் சட்ட ரீதியான குறைபாடுகள் இருப்பதாகக் கூறி சரண குணவர்தன தரப்பு மேல்முறையீடு செய்துள்ளதால், இந்த அரசியல்-சட்டப் போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கிய நகர்ந்துள்ளது. மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்த மனுக்களை ஏற்குமா, தீர்ப்பில் மாற்றம் வருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேல் மாகாணத்தை உலுக்கும் டெங்கு: இதுவரை 32 மரணங்கள்!

0

இலங்கையில் அண்மைக்காலமாகப் பேசப்படும் பொருளாதார, அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில், சத்தமில்லாமல் ஒட்டுமொத்த நாட்டையும் அச்சுறுத்தும் ஒரு பாரிய அரக்கனாக டெங்கு நோய் உருவெடுத்து வருகின்றது. நாம் அன்றாடம் கடந்து செல்லும் ஒரு நுளம்புதானே என்று அலட்சியமாக இருந்தால், அது உயிரைப் பறிக்கும் ஆபத்தாக மாறக்கூடும் என்பதை தற்போதைய புள்ளிவிபரங்கள் மிகத் தெளிவாக நிரூபித்துள்ளன. ஆம், இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 55,000 ஐக் கடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே மாதத்தில் கொத்தாகப் பரவிய நோய்!

தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ தரவுகளின்படி, மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 55,406 ஆக உயர்ந்துள்ளதுடன், துரதிஷ்டவசமாக 32 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் மிகவும் ஆபத்தான விடயம் என்னவென்றால், கடந்த ஜூன் மாதத்தில் மாத்திரம் 21,565 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதாவது, மொத்தப் பாதிப்பில் கிட்டத் தட்ட அரைவாசிப் பங்கு ஒரே மாதத்தில் பதிவாகியுள்ளது. நிலைமை எவ்வளவு தீவிரமாக இருக்கின்றது என்பதற்கு, கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள 1,024 நோயாளர்களே சாட்சியாகும்.

ரெட் அலெர்ட் (Red Alert) வலயத்தில் மேல் மாகாணம்:

இந்த டெங்குப் பேரலையின் பிரதான மையப்புள்ளியாக மேல் மாகாணமே மாறியுள்ளது. மாவட்ட ரீதியாகப் பார்க்கும்போது, கொழும்பு மாவட்டத்தில் 11,392 நோயாளர்களும், கம்பஹா மாவட்டத்தில் 11,006 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். சனநெரிசல் மிக்க இந்த மாவட்டங்களில் வசிப்பவர்கள் ஒவ்வொரு நிமிடமும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

“பொதுமக்கள் இன்னமும் நுளம்புகள் முட்டையிடும் இடங்களை முழுமையாகச் சுத்தம் செய்யாமல் இருப்பதே இந்தத் தீவிரப் பரவலுக்கு முதன்மைக் காரணம்” என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் தற்காலிக இயக்குநர் வைத்தியர் கபில கன்னங்கர சுட்டிக்காட்டியுள்ளார். நாம் போடும் சிறிய பிளாஸ்டிக் மூடி, உடைந்த போத்தல்கள், டயர்கள் மற்றும் பூச்சாடித் தட்டுகளில் தேங்கும் ஒரு துளித் தண்ணீரே இந்த அச்சுறுத்தலின் ஆரம்பப் புள்ளியாக அமைகின்றது. இனிவரும் நாட்களில் நோயாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டுமாயின், நுளம்புகள் பெருகும் இடங்களை முற்றாக அழிப்பதைத் தவிர வேறு வழியே இல்லை.

பாடசாலைகளையும் அரச அலுவலகங்களையும் குறிவைக்கும் நுளம்புகள்!

தற்போது வீடுகளை விட, எமது பிள்ளைகள் கல்வி கற்கும் பாடசாலைகள் மற்றும் அரச நிறுவனங்களைச் சூழவே டெங்கு மிக வேகமாகப் பரவி வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. எனவே, இது குறித்து பெற்றோர், ஆசிரியர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் வெறும் பார்வையாளர்களாக இராமல், கூடுதல் அவதானத்துடனும் பொறுப்புடனும் உடனடியாகச் செயற்பட வேண்டிய தருணம் இதுவாகும். உங்கள் சூழலை இன்றே சோதியுங்கள், இல்லையேல் அடுத்த பாதிப்பு உங்களுடையதாகக் கூட இருக்கலாம்!

தரம் 5 புலமைப்பரிசிலைக் குறிவைத்து ஆனமடுவையில் ‘மிஹிகத வருண 2026’

0

ஜுட் சமந்த

இன்றைய டிஜிட்டல் உலகில் ஸ்மார்ட்போன் திரைகளுக்குள் சுருங்கிப்போயிருக்கும் சிறுவர்களுக்கு, இயற்கையின் அருமையையும் நமது பாரம்பரியத்தின் பெருமையையும் நேரில் காட்டினால் எப்படியிருக்கும்? அதிலும், சில மாதங்களுக்கு முன்பு சூறாவளியின் கோரத்தாண்டவத்தால் நிலைகுலைந்து போன ஒரு பாடசாலை, பீனிக்ஸ் பறவை போல மீண்டெழுந்து இவ்வாறானதொரு பிரம்மாண்டத்தை நிகழ்த்தியிருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், ஆனமடுவ மண்டலான கனிஷ்ட வித்தியாலயத்தில் அண்மையில் அரங்கேறிய ‘மிஹிகத வருண 2026’ சூழலியல் கண்காட்சி, பிராந்தியத்தையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சூறாவளி தந்த வடு.. சோர்ந்து போகாத மனிதர்கள்!

உண்மையில் இந்த வெற்றியின் பின்னணியில் ஒரு கண்ணீர்க் கதை இருக்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீசிய ‘தித்வா’ (Ditwa) சூறாவளியின் போது, மண்டலான குளத்தின் அணைக்கட்டு உடைந்ததில் இந்தப் பாடசாலை வெள்ளத்தில் மூழ்கியது. அழகாக இருந்த பாடசாலைத் தோட்டம் முற்றாக அழிந்ததுடன், கட்டடங்களும் கடும் சேதங்களுக்கு உள்ளாகின. “எல்லாம் போச்சு” என்று கைவிட்டிடாமல், அதிபர் சாகரிகா சந்தமாலி தலைமையிலான குழுவினர், டிசம்பர் மாதமே களத்தில் குதித்தனர். இடிபாடுகளுக்கு மத்தியிலிருந்து, வெறும் சில மாதங்களில் ஒரு பசுமைச் சோலையை அவர்கள் எப்படி உருவாக்கினார்கள் என்பதுதான் தற்போதைய பேசுபொருள்!

வீட்டுத் தோட்டம் முதல் விண்வெளி வரை!

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களை இலக்கு வைத்தே இந்த கண்காட்சி திட்டமிடப்பட்டது. பரீட்சைக்கான 16 முக்கிய பாடக் கருப்பொருள்களில், 9 கருப்பொருள்களை மையமாக வைத்து கண்காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. வீட்டுத் தோட்டம், பழங்கால மற்றும் தற்கால மத வழிபாட்டுத் தலங்கள், நீர்ப்பாசனத் தொழில்நுட்பம், போக்குவரத்துப் பாதுகாப்பு, நவீன கண்டுபிடிப்புகள் எனப் பல பிரிவுகள் இதில் அடங்கியிருந்தன. எல்லாவற்றிற்கும் மேலாக, விண்வெளி குறித்த கூடமும், தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்த ‘ஆதிவாசிகள் கிராமமும்’ வந்திருந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகளின் நெஞ்சங்களைக் கொள்ளைகொண்டன.

“இன்றைய பிள்ளைகள் பலரும் பார்த்திராத, ஏன்… கேள்விப்பட்டிராத பல பழங்காலக் கருவிகளும், வீட்டு உபயோகப் பொருட்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. எமது முன்னோர்களின் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்குக் கடத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக, பெற்றோர்கள் கிராமம் கிராமமாகத் அலைந்து திரிந்து, தேடிக் கண்டுபிடித்து இப்பொருட்களைக் கொண்டு வந்தனர்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் பாடசாலை அதிபர்.

மதிப்பெண்கள் மட்டுமல்ல, மன மாற்றமே இலக்கு!

வெறும் பரீட்சை மதிப்பெண்களைப் பெறுவது மட்டுமல்ல இந்த கண்காட்சியின் நோக்கம். “இங்கு வரும் ஒவ்வொரு பிள்ளைக்கும், நாமும் எமது வீட்டில் இப்படி ஒரு சூழலை உருவாக்க வேண்டும், இயற்கையை நேசிக்க வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும். அதில் நாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம்” என்கிறார் அதிபர் சாகரிகா சந்தமாலி.

ஆசிரியர்கள், பெற்றோர், கிராம மக்கள் மற்றும் அரச அதிகாரிகள் என ஒட்டுமொத்த சமூகமும் கைகோர்த்தால், சூறாவளிப் பேரழிவைக் கூட ஒரு சரித்திர சாதனையாக மாற்ற முடியும் என்பதற்கு இந்த ‘மிஹிகத வருண 2026’ சூழலியல் கண்காட்சி ஒரு வாழும் உதாரணம்!