‘தூய்மை இலங்கை’ செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக நாடு முழுவதும் 50 பேருந்து நிலையங்களை தூய்மைப்படுத்தல் மற்றும் புனரமைத்தல் செயற்றிட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள மாகாணமட்ட குழுவின் முதலாவது கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று திங்கட் கிழமை (18.08.2025) நடைபெற்றது.
வடக்கு மாகாணத்தில், யாழ்ப்பாணம், நெல்லியடி, பளை, முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, மன்னார், நானாட்டான், வவுனியா, வெங்கலச்செட்டிக்குளம் ஆகிய 9 பேருந்து நிலையங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தப் பேருந்து நிலையங்கள் அமைந்துள்ள பிரதேச செயலர் பிரிவு ரீதியாக பிரதேச மட்டக் குழுக்கள் அமைக்கப்பட்டு, குழுக்களின் தலைவர்களாக அந்தந்த பிரதேச செயலர்கள் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள பேருந்து நிலையங்களின் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து விதமான வசதிகளின் மேம்பாடுகள், விரிவாக்கம் தொடர்பிலும் அவற்றை மதிப்பீடு செய்து அறிக்கை தயாரிக்குமாறும், பிரதேச மட்டக் குழுவில் அவற்றை ஆராய்ந்து அதன் பின்னர் மாகாண மட்டக் குழுவில் அதனைச் சமர்ப்பிக்குமாறும் ஆளுநர் இன்றைய கலந்துரையாடலில் குறிப்பிட்டார்.
வடக்கின் சகல மாவட்டங்களினதும் பிரதான நகரங்களிலுள்ள பேருந்து நிலையங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளபோதும், கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரம் கிளிநொச்சி நகர பேருந்து நிலையம் தெரிவு செய்யப்படாமையால் அதனையும் இதில் உள்வாங்குமாறு போக்குவரத்து அமைச்சைக் கோருவதற்கு இன்றைய கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.
அதேபோல, முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு நகர பேருந்து நிலையம் நகர அபிவிருத்தி அதிகார சபையின் நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளமையால் அதற்குப் பதிலாக மாங்குளம் பேருந்து நிலையத்தை இந்தத் திட்டத்தில் உள்வாங்குவது தொடர்பிலும் இன்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டு அது தொடர்பான கோரிக்கையும் முன்வைக்கத் தீர்மானிக்கப்பட்டது.
காசா போரை முடிவுக்குக் கொண்டுவரவும், முற்றுகையிடப்பட்ட பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தத்தை கோரியும் இஸ்ரேலில் லட்சக்கணக்கான போராட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காசா நகரத்தின் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் இராணுவம் தீவிரப்படுத்தி, பல்லாயிரக்கணக்கான பட்டினியால் வாடும் பாலஸ்தீனியர்களை அநியாயமாக கொல்வதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்திற்காக கூடியிருந்த போராட்டக்காரர்கள் மீது இஸ்ரேலிய காவல்துறை தண்ணீர் பீய்ச்சி அடித்ததுடன், பலரை கைதுசெய்துள்ளனர்.
நேற்று இரவு டெல் அவிவில் இரவு நேரத்தில் கிட்டத்தட்ட ஐந்து லட்சம் மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இது கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு போர் தொடங்கியதிலிருந்து இன்றுவரை இடம்பெற்ற மிகப்பெரிய மற்றும் கடுமையான போராட்டம் ஆகும் என அவர்கள் தெரிவித்தனர்.
இஸ்ரேலிய பள்ளிகள், வணிகங்கள் மற்றும் பொது போக்குவரத்து மூடப்பட்டு முக்கிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் மூடப்பட்டன, இஸ்ரேலிய செய்தித்தாள் ஹாரெட்ஸ், இஸ்ரேலிய கலைஞர்கள், பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் ஆதரவு தெரிவித்து வேலைநிறுத்தத்தில் இணைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் மற்றும் வணிக மன்றம், ஜெருசலேம் ஹீப்ரு பல்கலைக்கழகம் உள்ளிட்ட முக்கிய தொழிற்சங்கங்களும் வேலைநிறுத்தத்தில் தங்கள் பங்கேற்பை உறுதிப்படுத்தின.மேலும் சண்டை நடந்தால் காசாவில் எஞ்சியிருப்பதாக நம்பப்படும் 50 கைதிகள் ஆபத்தில் சிக்கக்கூடும் என்று அஞ்சும் போராட்டக்காரர்கள், அவர்களில் சுமார் 20 பேர் மட்டுமே உயிருடன் இருப்பதாகக் கருதப்படுகிறார்கள், “நாங்கள் பணயக்கைதிகளின் உடல்களை எதிர்த்துப் போரில் வெற்றி பெற மாட்டோம்” என்று கோஷமிட்டனர்.
“இராணுவ அழுத்தம் பணயக்கைதிகளை மீண்டும் கொண்டு வராது – அது அவர்களை மட்டுமே கொல்கிறது” என்று முன்னாள் கைதி அர்பெல் யெஹூட் டெல் அவிவின் “பணயக்கைதிகள் சதுக்கத்தில்” நடந்த ஆர்ப்பாட்டத்தில் கூறினார். “அவர்களை மீண்டும் கொண்டு வருவதற்கான ஒரே வழி, ஒரே நேரத்தில் ஒரு ஒப்பந்தம் மூலம் மட்டுமே.” என அவர் தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், ஆர்வலர்கள் காசாவில் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் முகங்களால் மூடப்பட்ட ஒரு பெரிய இஸ்ரேலிய கொடியை ஏந்திச் சென்றனர். உள்ளூர் அறிக்கைகளின்படி, டெல் அவிவ் மற்றும் ஜெருசலேமை இணைக்கும் நெடுஞ்சாலை உட்பட முக்கிய சாலைகளையும் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். அங்கு டயர்கள் எரிக்கப்பட்டு போக்குவரத்து ஸ்தம்பித்தது.
கைதிகளின் உறவினர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பணயக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்கள் மன்றம், நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை அறிவித்தது.
“இஸ்ரேலியர்கள் அனைவரும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல. உத்தியோகபூர்வ கொள்கையை எதிர்க்கும் ஒரு கணிசமான பகுதியினர் இங்கு உள்ளனர்,” என்று போராட்டக்காரர்கள் கூறினர், அவர்களில் சிலர் “681” பொறிக்கப்பட்ட கொடிகளை ஏந்திச் சென்றனர்.
மேலும் ஒற்றுமையைக் காட்டும் விதமாக ஏராளமான வணிகங்களும் நகராட்சிகளும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. டெல் அவிவில் உள்ள இரண்டு முக்கிய திரையரங்குகளும் தங்கள் நிகழ்ச்சிகளை நிறுத்தின. ஜெருசலேமில், ஆர்ப்பாட்டக்காரர்கள் அணிவகுப்புகளில் இணைந்ததால் வணிகங்கள் மூடப்பட்டன.
“போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய நேரம் இது. அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்க வேண்டிய நேரம் இது. மேலும் இஸ்ரேல் மீண்டு, மிகவும் நிலையான மத்திய கிழக்கை நோக்கி நகர உதவ வேண்டிய நேரம் இது” என்று AFP இடம் பேசிய 54 வயதான சுற்றுலா வழிகாட்டி டோரன் வில்ஃபாண்ட் கூறினார்.
“அவர்கள் எங்களைத் தடுக்க மாட்டார்கள், அவர்கள் எங்களை சோர்வடையச் செய்ய மாட்டார்கள், அவர்கள் எங்களை சோர்வடையச் செய்ய மாட்டார்கள். பணயக்கைதிகள் வீடு திரும்பும் வரை, ஒரு ஒப்பந்தம் ஏற்படும் வரை, போர் முடியும் வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம்,” என்று அவர் மேலும் கூறினார்.
யாழ்ப்பாணத்தைத் தவிர, வடக்கு-கிழக்கு மாகாணங்களில் உள்ள ஏனைய பகுதிகளில் ஹர்த்தால் வெற்றிகரமாக அமைந்ததாக தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் ஆகியோர் கூட்டாக அறிவித்தனர்.
யாழ்ப்பாணத்தில் இன்று (18) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் அவர்கள் இதனை அறிவித்தனர்.
இந்த ஊடகச் சந்திப்பில், வடக்கு-கிழக்கு மாகாணங்களில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றக் கோரி தமிழரசு கட்சி ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்ததாகவும், இதற்கு பெரும்பாலான பகுதிகளில் ஆதரவு கிடைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாண நகரப் பகுதியில் மட்டுமே வர்த்தக நிலையங்கள் திறந்திருந்தன. இந்தப் பகுதியில் ஆதரவு கிடைக்காதது மனவருத்தம் அளிப்பதாக சுமந்திரன் குறிப்பிட்டார்.
ஹர்த்தால் அறிவிப்பு வெளியான உடனே, ஜனாதிபதி மற்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க உள்ளிட்டோர் தமிழரசு கட்சியைத் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், முல்லைத்தீவு முத்தையன்கட்டு இராணுவ முகாமை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் உறுதியளித்ததாகவும் சுமந்திரன் தெரிவித்தார்.
இதனை அவர் ஹர்த்தாலின் வெற்றியாகக் கருதுவதாகக் கூறினார். இந்த ஹர்த்தால் ஒரு அடையாளப் போராட்டமாக இருந்தாலும், இராணுவ முகாம்களை அகற்றக் கோரி எதிர்காலத்தில் மேலும் போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுப்போம் என்று சிவஞானம் உறுதியளித்தார்.
இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்காத நிலையில் வழமைபோன்று இன்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், கிளிநொச்சி நகர வர்த்தக சங்கம் காலை 10மணி வரை கதவை மூடுமாறு அறிவித்த நிலையில் கிளிநொச்சி நகரத்தில் உள்ள கடைகள் சில 10மணி வரை மூடப்பட்டு, பின்பு மீண்டும் திறக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும் பரந்தன் உள்ளிட்ட மாவட்டத்தில் ஏனைய சிறிய நகரங்களிலும் வர்த்தக நிலையங்கள் திறந்திருந்ததாக அவர் தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள சட்டச் சிக்கல்கள் தீர்க்கப்பட்ட பின்னர், அடுத்த ஆண்டு முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
கிளிநொச்சி பகுதியில் நேற்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் பிமல் ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
“நாங்கள் 2025 இல் தேர்தலை நடத்தினோம். 2024 நவம்பரிலும் தேர்தலையும் நடத்தினோம். அடுத்த ஆண்டு முதல் 6 மாதங்களில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவோம் என்று நம்புகிறோம்.
சட்டத் தடைகள் உள்ளன. அவற்றை அகற்ற முயற்சிக்கிறோம். அரசியலமைப்பைக் கொண்டுவருவது குறித்து எங்களிடம் கொள்கை முடிவு உள்ளது. அரசியலமைப்பைக் கொண்டுவருவது ஒரு விரிவான செயல்முறை.
அதற்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதே எங்கள் இலக்கு. மாகாண சபைத் தேர்தலை நடத்திய பிறகு அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் குறித்த விரிவான அரசியல் திட்டத்தைத் தொடங்குவோம்.” என்றார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (18) ஹர்த்தால் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் இராணுவ முகாமுக்குள் நுழைந்த ஒரு குழுவினர் இராணுவ அதிகாரிகளால் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், முகாமுக்குள் நுழைந்த மற்றொரு இளைஞர் முத்துஐயன்கட்டு குளத்தில் உயிரிழந்து கிடந்ததை அடுத்து இராணுவம் இதற்குக் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது.
சம்பவம் குறித்து இரண்டு விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணை நடத்தி வருவதுடன், மூன்று இராணுவ சிப்பாய்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும், இளைஞரின் மரணத்திற்கு நீதி கோரி இன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் நடத்துவதாக தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவை இந்த ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் வடக்கு, கிழக்கில் அளவுக்கு அதிகமான இராணுவப் பிரசன்னம் மற்றும் இராணுவ அடக்குமுறைகளுக்கு எதிராக இன்று (18) ஹர்த்தால் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படுவதாகவும், அது பலரின் நன்மை கருதி காலையில் மாத்திரம் நடைபெறும் எனவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், இலங்கை தமிழரசுக் கட்சி அனைத்து தமிழ் தேசிய அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடி இராணுவ பிரசன்னத்திற்கு எதிரான போராட்டத்திற்கான முடிவை எடுத்திருக்க வேண்டும் என்றும் மாறாக தன்னிச்சையாக எடுத்த முடிவு தவறானது என்றும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
எனினும் முப்படைகளுக்கும் எதிராக ஆயுதம் ஏந்தியவர்கள் என்ற வகையில் இராணுவ பிரசன்னத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தமிழீழ விடுதலை இயக்கம் ‘ரெலோ’ ஆகிய நாம் ஆதரவளிக்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சுமந்திரனால் தனிப்பட்ட முறையில் தீர்மானம் எடுத்து அழைப்பு விடுக்கப்பட்ட ஹர்த்தாலுக்கு ஆதரவினை வழங்காமல் எதிர்ப்பினை தெரிவிப்பதாக மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒன்றியத்தின் தலைவர் சபாரத்தினம் சிவயோகநாதன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது ஹர்த்தாலுக்கு ஆதரவினை வழங்கவில்லை என ஒன்றியத்தின் செயலாளர் தேவதாஸ் அனோஜன் தெரிவித்துள்ளார்.
தனி ஒரு அரசியல் கட்சியின் ஹர்த்தாலுக்கான அழைப்பிற்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது ஆதரவை வழங்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று முன்னெடுக்கப்படும் ஹர்த்தால் தொடர்பாக நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, அரசாங்கத்தையும் பாதுகாப்புப் படையினரையும் குறிவைத்து திரிபுவாதங்கள் மற்றும் பொய்யான பிரச்சாரங்களால் மக்கள் ஏமாறுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறினார்.
இந்த சம்பவத்தின் உண்மைகளைத் திரித்து, தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம், சில அரசியல் குழுக்கள் வடக்கு, கிழக்கு மக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும், இதுபோன்ற பிரச்சாரங்களுக்கு அவர்கள் ஏமாறக்கூடாது என்றும், உண்மைகளைப் புரிந்துகொண்டு அமைதியாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை இன்று காலை வவுனியா நகரின் வணிக நிலையங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், மதியம் 12.00 மணி முதல் மீண்டும் வணிக நிலையங்கள் திறக்கப்பட்டு வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
குறித்த ஊழியர்கள் தமது சேவையில் இருந்து விலகி பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
தபால் ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவு, நிர்வாக அலுவலகம் மற்றும் கணக்காய்வு அலுவலகங்களில் ஊழியர்களின் பணியை ஆரம்பிக்கும் நேரம் மற்றும் வெளியேறும் நேரம் என்பவற்றை கைவிரல் அடையாள இயந்திரங்களில் பதிய வேண்டும் என்ற அறிவுறுத்தல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தல் உள்ளிட்ட 19 கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.
அந்தவகையில், தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நாட்டின் சகல மாவட்டங்களிலும் உள்ள பிரதான தபால் நிலையங்கள் மற்றும் கிளை தபால் நிலையங்கள் ஞாயிற்றுக்கிழமை (17) மாலை முதல் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கனடா நாட்டின் மிக பெரிய விமான நிறுவனமான ஏர் கனடா 64 நாடுகளுக்கு தினமும் 300க்கும் மேல் விமானங்களை இயக்கி வருகிறது.
ஊதியம் தொடர்பாக ஏர் கனடா விமானப்பணியாளர்களுக்கும் ஏர் கனடா நிறுவனத்திற்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடந்து வந்த நிலையில், குறித்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் தாங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக புதன்கிழமை இரவே விமான பணியாளர்கள் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில், நேற்று காலையில் இருந்தே சுமார் 10,000க்கும் அதிமான விமான பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் விமான சேவையை நிறுத்துவதாக ஏர் கனடா நேற்று அறிவித்தது. ஏர் கனடாவின் இந்த அறிவிப்பால் 1,30,000 பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விமானங்கள் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, பயணச்சீட்டு உறுதி செய்யப்படாத பயணிகள் விமான நிலையத்திற்கு வர வேண்டாம் என்றும், மற்ற பயணிகள் விமான சேவையை உறுதி செய்த பிறகு விமான நிலையத்திற்கு வரவும் ஏர் கனடா நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
வவுனியா ஓமந்தை ஏ9 வீதியில் இன்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன் 13 பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கண்டியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த கெப் ரக பொலரோ வாகனம், வவுனியா ஓமந்தை மாணிக்கர் வளவுப்பகுதியில் சென்றுகொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியது. விபத்தின் போது குறித்த வாகனத்தில் பெண்கள் சிறுவர்கள் உட்பட 15ற்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர்.
விபத்தினால் வாகனத்தில் இருந்த அனைவரும் வீதியில் தூக்கிவீசப்பட்ட நிலையில் படுகாயமடைந்திருந்தனர்.
மேலும் இலகுரக வாகனம் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகிய பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த கனரக வாகனம் குறித்த வாகனத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியது.
இதன்போது வீதியால் பயணித்த பொதுமக்களின் உதவியுடன் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்தில் சம்பவ இடத்திலேயே பெண் உட்பட இருவர் உயிரிழந்ததுடன் 13 பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் முல்லைத்தீவு விசுவமடு பகுதியை சேர்ந்த யாழினி (வயது 33, சுயன் (வயது 30) என்று தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்த அனைவரும் ஒரே குடும்பங்களை சேர்ந்த உறவினர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. அவர்கள் கண்டியில் இடம்பெற்ற மரணவீடு ஒன்றிற்கு சென்று விட்டு மீண்டும் விசுவமடு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதேவேளை படுகாயமடைந்த சிறுவன் ஒருவன் உட்பட மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விபத்து தொடர்பாக வவுனியா ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
பாகிஸ்தானின் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பலியானவர்கள் எண்ணிக்கை 344 ஆக உயர்ந்துள்ளது.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகின்றது. தொடர் மழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட சம்பவங்களில் 279 பேர் இறந்ததாக முதல் கட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் பலியானவர்கள் எண்ணிக்கை 344ஆக அதிகரித்துள்ளது.
புனேர் நகரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு மட்டும் சுமார் 184பேர் உயிரிழந்துள்ளனர். ஷாங்க்லா மாவட்டத்தில் 36 பேர், மன்சேராவில் 23 பேர், ஸ்வாட்டில் 22 பேர், பனெஜரில் 21 பேர், பட்டாகிராமில்15 பேர் லோயர்ட டிர் பகுதியில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே வருகிற 21ம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.