Monday, July 21, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 143

அறநெறி கல்வியை கட்டாயமாக்க திட்டம்

0
அறநெறி கல்வியை கட்டாயப்படுத்துவதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் அறநெறி பாடசாலைகளுக்கு செல்லாத மாணவர்கள் தொடர்பில் கணக்கெடுப்பு நடத்துமாறும் அவர் அதிகாரிகளை பணித்துள்ளார்.

அந்த மாணவர்களை அறநெறி பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சமூகத்தில் ஏற்பட்டுள்ள பல்வேறுப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு சிறந்த சமூகத்தை கட்டியெழுப்புவதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.

இந்த வேலைத்திட்டங்களுக்கு அமைய, அறநெறி பாடசாலை ஆசிரியர்களின் அறிவை மேம்படுத்துவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக புத்தசாசன அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய மாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்பு!

0
இங்கிலாந்தில், பொதுநலவாய செயலகத்தில் இடம்பெறும் பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்றுள்ளார்.

நாளை இடம்பெறவுள்ள மன்னர் மூன்றாம் சார்ள்ஸின் முடிசூட்டு விழாவில் பங்கேற்பதற்காக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இங்கிலாந்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்தநிலையில், இன்று இடம்பெறும் பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதேநேரம், ருவண்டா ஜனாதிபதி போல் ககாமையும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க லண்டனில் சந்தித்துள்ளார்.

இதன்போது, இதுதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா

0
நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் கடந்த 24 மணித்தியாலங்களில் அடையாளம் காணப்பட்டதாக குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இதுவரையில் நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 672,207 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் கொரோனா மரணங்கள் எதுவும் பதிவாகவில்லை எனவும் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத நல்லிணக்கத்தை போற்றுபவர்களே உண்மையான பெளத்தர்கள்

0

மனித இனம் முழுவதற்கும் இணக்கமான நடைமுறையை வழிநடத்தும் தூய தர்மத்தால் ஈர்க்கப்பட்டு மனித நேயத்துடன் மத நல்லிணக்கத்தைப் போற்றும் ஒவ்வொருவரும் இருந்தால் அவர்கள் பௌத்தத்தை உண்மையாக பின்பற்றுபவர்கள் ஆவர் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது :

இலங்கையர்களுக்கும் உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களுக்கும் உலக மக்கள் அனைவருக்கும் வெசாக் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

கௌதம புத்தரின் பிறப்பு, ஞானம் மற்றும் இறப்பு ஆகியவை பௌத்தத்தின் மிகப்பெரிய பண்டிகையாகும். இது உலகின் பௌத்த மக்களால் மிகுந்த நம்பிக்கையுடன் கொண்டாடப்படுகிறது.

இவ்வுலகில் நிலைநாட்டப்பட்ட தோற்கடிக்க முடியாத தத்துவத்தை உலகுக்கு அருளியவர். பிரபஞ்சத்தில் உள்ள பூரண உண்மையைக் கண்டு புத்தபிரான் உபதேசித்த ஸ்ரீ சதர்மம் நிரந்தரமானது என்பதை நாளுக்கு நாள் நிரூபித்து வருகிறது.

பௌத்த சகாப்தம் எப்பொழுதும் பௌதிக வாழ்க்கையை போஷித்து அதன் அடிப்படையில் ஆழ்நிலை வாழ்க்கையை வளர்க்க நடைமுறைச் செயல்களின் ஒழுங்கைக் காட்டியுள்ளது. மேலும் அந்தக் கண்ணோட்டத்தில் பௌத்தம் மிகவும் அடிப்படை மற்றும் மேம்பட்ட வாழ்க்கை முறையாகும்.

தர்மம் என்றால் என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த புத்தர், “யோ தம்மன் பஸ்ஸதி,ஸோ மன் பஸ்ஸதி யோ மன் பஸ்ஸதி ஸோ தம்மன் பஸ்ஸதி ”  எவன் தர்மத்தைப் பார்க்கிறானோ அவன் என்னைப் பார்க்கிறான்.எவன் என்னைப் பார்க்கிறானோ அவன் தர்மத்தை பார்க்கிறான்.

புத்தபெருமானின் தர்மம் உலக உயிரினங்கள் அனைத்திற்கும் தனித்துவம் மிக்க கருணை நிரம்பிய தர்மமாகும். மனித இனம் முழுவதற்கும் இணக்கமான நடைமுறையை வழிநடத்தும் தூய தர்மத்தால் ஈர்க்கப்பட்டு மனித நேயத்துடன் மத நல்லிணக்கத்தைப் போற்றும் ஒவ்வொருவரும் இருந்தால், அவர்கள் பௌத்தத்தை உண்மையாக பின்பற்றுபவர்கள் ஆவர்.

எனவே,உலகின் மிகப் பெரிய தர்மத்தில் தஞ்சம் புகுந்த உன்னத குடிமக்களாக, உலக உயிரினங்கள் மீது கருணை, பாசம் மற்றும் அன்புடன் மகத்தான வெசாக் நாட்களைக் கொண்டாடுவோம்.

இன்றைய சிக்கலான காலநிலை

0

கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் பொலநறுவை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் ஆங்காங்கே மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

14 ஆண்டுகளின் பின்னர் ஒருவர் பலி

0
இலங்கையில், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 15 பேருக்கு மலேரியா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மலேரியா தொற்று பரம்பல் உள்ள நாடுகளுக்கு சென்று திரும்பியவர்களுக்கு இவ்வாறு தொற்றுறுதியாகியுள்ளது.

14 ஆண்டுகளின் பின்னர், இந்த ஆண்டு, பேருவளை பகுதியைச் சேர்ந்த ஒருவர், மலேரியா தொற்றினால் உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆபிரிக்க நாட்டுக்கு சென்று திரும்பியிருந்த நிலையில், அவருக்கு மலேரியா தொற்று உறுதியாகியுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம் – உடுவில் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு, கடந்த 30 ஆம் திகதி மலேரியா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மலேரியா பரம்பல் குறித்து யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு விளக்கமளித்தார்

ஹஜ் நிதி­யத்தில் 14 கோடிக்கும் அதிக பணம்.

0
ஹஜ் நிதி­யத்தின் வங்கிக் கணக்கில் 14 கோடி 59 இலட்­சத்து 29 ஆயி­ரத்து 858 ரூபாவும் 83 சதமும் காணப்­ப­டு­கின்ற விடயம் தக­வ­ல­றியும் கோரிக்­கையின் ஊடாக தெரி­ய­வந்­துள்­ளது.
இந்­நிதி இலங்கை வங்­கியின் சேமிப்புக் கணக்கு மற்றும் முழா­ரபா கணக்கு ஆகி­ய­வற்றில் காணப்­ப­டு­வ­தாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் தெரி­வித்­தது.
ஹஜ் தொடர்­பான செயற்­பா­டு­களை மேற்­கொள்­வ­தற்கும், ஹாஜி­களின் நலன்­க­ளுக்­கா­கவும், சமூ­கத்தின் தேவை­யா­க­வுள்ள திட்­டங்­களை நிறை­வேற்­று­வ­தற்கும் ஹஜ் நிதி­யத்தின் ஒரு தொகு­தி­யினை பயன்­ப­டுத்த முடியும்” என திணைக்­க­ளத்தின் தகவல் அதி­கா­ரி­ உதவிப் பணிப்­பாளர் எம்.எஸ். அலா அஹமட் தெரி­வித்தார்.
இந்த வரு­டத்­திற்­கான ஹஜ் ஏற்­பா­டுகள் தொடர்பில் கடந்த மார்ச் 14ஆம் திகதி முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­திற்கு சமர்ப்­பிக்­கப்­பட்ட தக­வ­ல­றியும் விண்­ணப்­பத்­திற்கு கடந்த மார்ச் 28ஆம் திகதி திணைக்­க­ளத்­தினால் வழங்­கப்­பட்ட பதி­லி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
ஹஜ் மற்றும் உம்ரா கட­மை­களை ஒழுங்­கு­ப­டுத்­து­வது தொடர்பில் உயர் நீதி­மன்­றத்­தினால் சில வழி­காட்­டல்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. இதன் நான்­கா­வது பகு­தியில் கட்­டண வரு­மா­னத்­தினை முகாமை செய்­வது தொடர்பில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
இதற்­க­மைய ஒவ்­வொரு யாத்­தி­ரிகர்­க­ளுக்­கு­மான பதிவுக் கட்­ட­ண­மாக 4 ஆயிரம் ரூபா­வினை ஹஜ் முக­வர்கள் திணைக்­க­ளத்­திற்கு செலுத்த வேண்டும்.
அதேபோன்று ஒவ்­வொரு யாத்­தி­ரிகர்­களும் மீளச் செலுத்தக் கூடிய 25 ஆயிரம் ரூபா­வினை திணைக்­க­ளத்­திற்கு செலுத்த வேண்டும். ஹஜ் குழு­வினால் சேக­ரிக்­கப்­படும் பதி­வுக்­கட்­டணம், நன்­கொடை, ஏனைய வரு­மா­னங்கள் அனைத்தும் அரச வங்­கி­யொன்றில் ஹஜ் கணக்­காக பேணப்­படும். இந்த நிதிக்கு ஹஜ் குழுவே பொறுப்­பாகும்.
இந்த வருடம் இலங்­கைக்கு 3,500 ஹஜ் கோட்­டாக்கள் கிடைக்கப் பெற்­றுள்­ளன. இதற்­கான உத்­த­ர­வாத பண­மாக (warranty money) ஒரு கோட்­டா­விற்கு 68 சவூதி றியால்கள் வீதம் 238,000 சவூதி றியால்கள் செலுத்த வேண்டும். இதன் இன்­றைய இலங்கை ரூபா பெறு­மதி சுமார் 2 கோடி 2 இலட்­சத்து 30 ஆயி­ர­மாகும்.
ஹஜ் நிதி­யத்தின் ஊடாக செலுத்­தப்­ப­ட­வுள்ள இத்­தொகை, ஹஜ் முக­வர்­க­ளி­ட­மி­ருந்து பின்னர் அற­வி­டப்­பட்­ட­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.
இதே­வேளை, 150 பேஸாக்­களும் (Bessa) இம்­முறை இலங்­கைக்கு கிடைக்கப் பெற்­றுள்­ளன. 45 ஹாஜி­க­ளுக்கு ஒன்று என்ற அடிப்­ப­டையில் பேஸாக்கள் ஹஜ் முக­வர்­க­ளுக்கு பகிர்ந்­த­ளிக்­கப்­ப­ட­வுள்­ளன.
இவ்­வாறு பகிர்ந்­த­ளிக்­கப்­பட்ட பின்னர் மீத­முள்ள பேஸாக்கள் மருத்­துவக் குழு மற்றும் நிர்­வாக தன்­னார்­வலர்­களை அனு­ம­திக்­கப்­பட்ட அள­வு­கோலின் அடிப்­ப­டையில் தெரி­வு­செய்து வழங்­கப்­ப­ட­வுள்­ளன.
முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் பதவி வழி அடிப்­ப­டையில் ஹஜ் குழுவின் உறுப்­பி­ன­ராக செயற்­ப­டுவார். இதனால், ஹஜ் குழு எடுக்கும் தீர்­மா­னங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதும், அதனை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்கும் அதி­கா­ரமும் திணைக்­க­ளத்தின் பணிப்­பா­ள­ருக்கே உள்­ளது.
அது மாத்­தி­ர­மல்­லாமல், ஹஜ் குழுவின் அங்­கீ­கா­ரத்­துடன் ஹஜ் நிதி­யத்­தி­லி­ருந்து மேற்­கொள்­ளப்­படும் கொடுப்­ப­ன­வு­க­ளுக்கு அனு­மதி வழங்கும் அங்­கீ­கா­ரமும் திணைக்­க­ளத்தின் பணிப்­பா­ளரி­டமே காணப்­ப­டு­கின்­றது.
இதே­வேளை, சவூதி அர­சாங்­கத்­துடன் பேச்­சு­வார்த்தை நடத்தி இலங்கை யார்த்­தி­ரிகர்­க­ளுக்­கான கோட்­டா­வினைப் பெறல், ஹாஜி­க­ளுக்­கான போக்­கு­வ­ரத்து மற்றும் மினா தங்­கு­மிட வச­திகள் போன்ற ஏற்­பா­டு­களைச் செய்­வ­தற்­காக சவூதி அரே­பிய நிறு­வ­னங்­க­ளுடன் ஒப்­பந்தம் செய்தல், சுயேட்­சை­யாக செயற்­படும் ஒரு குழுவை நிய­மித்து ஹஜ் முக­வர்­க­ளுக்கு நேர்­முகப் பரீட்­சை­யினை மேற்­கொண்டு அக்­கு­ழு­வினால் பரிந்­துரை செய்­யப்­படும் ஹஜ் முக­வர்கள் தொடர்பில் இறுதித் தீர்­மானம் எடுத்தல், விமான சேவை முக­வர்­க­ளுடன் கலந்­து­ரை­யாடி ஹாஜிகள் செலுத்த வேண்­டிய விமான பயணச் சீட்­டுக்­கான கட்­ட­ணத்­தினை குறைக்க நட­வ­டிக்கை எடுத்தல் போன்­றன ஹஜ் குழுவின் பிர­தான செயற்­பா­டு­க­ளாகும்.
இதற்கு மேல­தி­க­மாக ஹஜ் முக­வர்கள் யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு வாக்­கு­றுதி வழங்­கி­யது போன்று செயற்­ப­டு­கின்­ற­னரா என்­பதை திணைக்­க­ளத்­துடன் இணைந்து மேற்­பார்வை செய்தல், ஹஜ் முடி­வுற்­றதும் முக­வர்கள் தொடர்பில் கருத்துக் கணிப்­பொன்று மேற்­கொள்ளப்­ப­டு­வதை உறு­திப்­ப­டுத்தல், ஹஜ் முடி­வுற்­றதும் முகவர்கள் தொடர்பான முறைப்­பா­டு­களை பெற்று சுயேட்­சை­யான குழு­வொன்றை நிய­மித்து விசா­ரணை மேற்­கொள்ளல், விசா­ரணைக் குழுவின் பரிந்­துரை தொடர்­பான இறுதித் தீர்­மா­னத்­தினை எடுத்தல் போன்ற பணி­களும் ஹஜ் குழு­விடம் காணப்படுகின்றது.

போலி கலாநிதி – பேராசிரியர்களுக்கு எதிராக நடவடிக்கை

0
கலாநிதி மற்றும் பேராசிரியர்கள் போன்ற பட்டங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க தேவையான சட்ட மாற்றங்களை முன்வைக்க வேண்டும் என அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த குறிப்பிட்ட நபர்கள் கலாநிதி மற்றும் பேராசிரியர் பட்டங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவது குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளதாக கோப் குழு தெரிவித்துள்ளது.
இலங்கையின் பல்கலைக்கழக முறைமை மற்றும் உயர்கல்வி தொடர்பான பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் கோப் குழுவுக்கு அண்மையில் அழைக்கப்பட்டிருந்தார்.
அதன்போது, கலாநிதி பட்டம் மற்றும் பேராசிரியர் பட்டங்களை முறையற்ற வகையில் பயன்படுத்தியமைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு ஆணைக்குழுவுக்கு சட்ட ஏற்பாடுகள் இல்லை என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
கலாநிதி மற்றும் பேராசிரியர் பட்டங்கள் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்படுவதால், இந்த விவகாரத்தில் ஆணைக்குழு தலையிட வேண்டும் என்று வலியுறுத்திய கோப் குழு, அத்தகைய பட்டங்களை முறையற்றவாறு பயன்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு தேவையான சட்ட மாற்றங்களை ஒரு மாதத்திற்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

நேரடியாக மோதிக்கொண்ட காம்பிர்,விராட் கோலி

0

லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நேற்று லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக விராட் கோஹ்லி, கௌதம் கம்பீர் மற்றும் நவீன்-உல்-ஹக் ஆகியோர் மீது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை (BCCI) கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, ரோயல் செலஞ்சர்ஸ் வீரர் கோஹ்லி, லக்னோவ் அணியின் ஆலோசகர் கம்பீர் ஆகியோருக்கு போட்டிக்கட்டணத்தில் 100% அபராதமும், லக்னோவ் அணியின் நவீன்-உல்-ஹக்கிற்கு போட்டி கட்டணத்தில் 50% வீத அபராதமும் விதிக்கப்பட்டது.

கம்பீர், கோஹ்லி மற்றும் நவீன் ஆகியோர் தத்தம் குற்றங்களை ஒப்புக் கொண்டு அபராதங்களை ஏற்றுக்கொண்டதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.

நேற்றைய போட்டியில் லக்னோவ் சுப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 18 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.

இதன்படி, அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்களை இழந்து 126 ஓட்டங்களைப் பெற்றது.

தொடர்ந்து 127 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய லக்னோவ் சுப்பர் ஜெயன்ட்ஸ் அணி 19.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்களையும் இழந்து 108 ஓட்டங்களைப் பெற்று தோல்வியை தழுவியது.

போட்டியை தொடர்ந்து ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் விராட் கோலிக்கும் லக்னோவ் சுப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல்-ஹக்குக்கும் இடையேயான உரையாடலில் அமைதியின்மை ஏற்பட்டது.

முன்னதாக 17 ஆவது ஓவரில் நவீன் உல்-ஹக் துடுப்பாடிக் கொண்டிருந்தபோது களத்தில் இருவருக்கு வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில் ஆட்டத்தின் பின்னரான கைகுலுக்களின்போது இந்த முறுகல் மீண்டும் துளிர்விட்டது.

இதனையடுத்து பெங்களூர் அணியின் விராட் கோஹ்லியும் லக்னோவ் அணியின் நவீன் உல்-ஹக்கும் அவர்களது அணியினரால் விலக்கப்பட்டனர்.

இதனையடுத்து விராட் கோலி, லக்னவ் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீருடன் உரையாடியிருந்தார்.

எனினும் கௌதம் கம்பீர், விராட் கோஹ்லியுடனான உரையாடலிலும் அமைதியடையவில்லை.

இந்தநிலையில், ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியமை தொடர்பில் சம்பந்தப்பட்ட மூவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 

 

குறையும் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை

0
இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோகிராம் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை குறைக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதன்படி, குறித்த எரிவாயுவின் விலை குறைந்தது 100 ரூபாவினால் குறைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை  1005 ரூபாவால் குறைக்கப்பட்டது.

இந்தநிலையில் குறித்த எரிவாயு கொள்கலன் தற்போது 3,738 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.  இன்று நள்ளிரவு முதல் இந்த விலையில், மாற்றம் ஏற்படும் என்று லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.