கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த நபர் ஒருவர் நேற்றைய (24) தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியை சேர்ந்த 63 வயதான நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் மூன்று பிள்ளைகளும் மனைவியும் கனடாவில் உள்ளனர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கனடாவில் இருந்து அவரது மச்சான் முறையானவருடன் யாழ்ப்பாணம் வந்திருந்தார்.
யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்த வேளை நேற்று உயிரிழந்துள்ளார்.
நேற்று பிற்பகல் அவரது வீட்டுக்கு சென்ற மச்சான் அவர் சடலமாக இருப்பதை அவதானித்த நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸாராருக்கு தகவல் வழங்கினார்.
அவரது சடலமானது மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
முல்லைத்தீவு, மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் அமைந்துள்ள வீட்டு வளாகத்தில் கிணறு ஒன்றில் இருந்து தாயும் 2 பிள்ளைகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராமத்தில் 2 பிள்ளைகளோடு வசித்து வந்த நிலையில், குறித்த தாய் ஒருவரும் அவரது 2 பிள்ளைகளும் அவர் வசித்து வந்த வீட்டில் இருந்து சுமார் 500 மீற்றருக்கு அப்பால் உள்ள அரச வீட்டு திட்டத்தில் உள்ள வீட்டுத்திட்ட பயனாளி ஒருவரின் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக இன்று (24) மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
இன்று காலை குறித்த கிணற்றின் அருகில் கான் பேக் ஒன்றும் இதர பொருட்கள் சிலவும் காணப்பட்டதை அடுத்து ஊரில் உள்ள மக்கள் அந்த விடயம் தொடர்பில் கிராம அலுவலர் மற்றும் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதன் அடிப்படையில் அங்கு வருகை தந்த கிராம அலுவலர் மற்றும் பொலிஸார் கிணற்றில் சடலங்கள் இருப்பதை அடையாளம் கண்டனர்.
இதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி சம்பவ இடத்திற்கு வருகை தந்து பார்வையிட்டதன் பின்னர் சடலங்கள் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட சடலங்களை மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் உசாகரன் மாலினி (வயது 38) தாய் மற்றும் மிக்சா (வயது 11) மகள் சதுசா (வயது 04) ஆகியவர்களாவர்.
இவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது என்ன நடந்தது என்பது தொடர்பில் மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மலைகளின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு (55-60) கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மணிக்கு (40-50) கிலோமீற்றர் வேகத்தில் மிதமான காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்றினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
இலங்கையில் இப்படி ஒரு கிராமத்தில் இப்படி ஒரு பாடசாலை உள்ளதா எனப் பலர் வியக்கும் வகையில் கண்டி மாவட்ட எல்லையில், மினிப்பே பிரதேசத்தில் கலமுதுன என்ற கிராமத்தில் ஒரு பாடசாலை இயங்கி வருகிறது.
மினிப்பே, கலமுதுனவில் அமைந்துள்ள பாடசாலைக்கு மிகவும் கடினமான பாதையூடாகவே பயணிக்க வேண்டியுள்ளது. குறித்த பாடசாலையில் ஒரேயொரு அசிரியர் மாத்திரமே கல்வி கற்பிக்கின்றார். அங்கு எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. வாகனங்ள் ஏதும் குறித்த பகுதிக்கு செல்லமுடியாது. குறிப்பிட்ட தூரம் வாகனத்தில் சென்று பின்னர் மைல் தூரம் நடை பயணமாகவே பாடசாலைக்கு செல்ல வேண்டும்.
ஆனால் இம் முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் அந்த ஒரு ஆசிரியர் மாத்திரமே சகல பாடங்களையும் கற்பித்து அனைத்து பாடங்களிலும் மாணவர்கள் சிறப்பாக தேர்ச்சி பெறவைத்துள்ளார். ஆனால் அங்கு 11 ம் தரத்தில் 5 மாணவிகள் மாத்திரமே கல்வி கற்று வந்துள்ளனர். மேலதிக வகுப்பு வசதிகள் கிடையாது. மின்சாரம் கிடையாது, தொலைபேசி வசதி இல்லை, பத்திரிகைகள் கூட அங்கு கிடைப்பதில்லை.
மினிப்பே பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள கலமுதுன கிராமத்தில், 40 குடும்பங்கள் வசிக்கின்றன. குறித்த குடும்பங்கள் அனைவரும் பௌத்த சிங்களவர்கள், விவசாயத்தையும் இயற்கை மழையையும் நம்பி வாழ்பவர்கள்.
அங்குள்ள ஒரே பாடசாலையில் 18 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இந்த பின்தங்கிய பாடசாலையில் படித்து, கல்வி பொதுத் தராதரப் சாதாரண தர பரீட்சையில் ஐந்து பேர் தோற்றி, நான்கு பேர் திறமையாகச் சித்தியடைந்துள்ளனர். அவர்கள் ஒரே ஆசிரியரின் சிறந்த வழிகாட்டுதலின் காரணமாக, அனைத்து பாடங்களிலும் சிறப்பாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்தப் பாடசாலைக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 3 ஆம் திகதியன்று பி. ஜனக தனுந்தர ஆங்கில பாடம் கற்பிக்கும் ஆசிரியராக வந்து சேர்ந்தார். இவர் அனுராதபுர மாவட்டத்தைச் சேர்ந்தவர். குறித்த பாடசாலைகளில் கல்வி கற்கும் பிள்ளைகளுக்காக அவர் மேற்கொண்ட அர்ப்பணிப்புக்கள் காரணமாக, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் மாணவர்கள் திறமை சித்தியடைந்தனர்.
முதலாம் ஆண்டு முதல் க.பொ.த. (சா/த) வரை வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்தப் பாடசாலையில் விஞ்ஞான ஆய்வு கூடமோ அல்லது அடிப்படை வசதிகளோ இல்லாத நிலையில் மாணவர்கள் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், மனைப் பொருளியல், மற்றும் வணிக பாடங்களைக் கற்பிக்கவும், அதிபராக கடமையாற்றவும் தனி ஒரு ஆசிரியராக இவர் செய்துவரும் வரும் சேவை வார்த்தைகளால் விபரிக்க முடியாதவை.
குறித்த கிராமத்திற்கு ஒரேயொரு அரச அதிகாரியான கிராம அலுவலர் மட்டுமே அங்கு செல்கிறார். அதுவும் தேர்தல் பணிக்காக தேர்தல் காலங்களில் மாத்திரமே அங்கு வருவதாக பொது மக்கள் கூறுகின்றனர். அண்மையில் மஹியங்கனை வர்த்தக சங்க உறுப்பினர்கள் இந்த ஆசிரியருக்கு ஒரு பாராட்டு விழாவை நடத்தி அவரது மனிதாபிமான சேவையை பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடங்களுடன் ஒப்பிடும்போது இந்த வருடம் ரம்புட்டான் மரங்களால் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
ரம்புட்டான் மரங்களை விலங்குகளிடமிருந்து பாதுகாக்க சிலர் மின்சார கம்பிகள் கொண்டு பாதுகாப்பு வேலிகள் அமைப்பதால், இந்த விபத்துக்கள் ஏற்படுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் விசேட அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் விராஜ் ரோஹன அபேகோன் தெரிவித்தார்.
அதன்படி, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் தற்போது பலர் சிகிச்சை பெற்று வருவதாக விசேட அறுவை சிகிச்சை நிபுணர் விராஜ் ரோஹன அபேகோன் குறிப்பிட்டார்.
இதேவேளை, சிறு குழந்தைகளுக்கு பெற்றோர் ரம்புட்டான் கொடுக்கும் போது மிகுந்த அவதானத்துடன் இருக்கமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இலங்கை 59வது இடத்தை பிடித்துள்ளது.
குற்ற விகிதம், பொது பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை அடிப்படையாக கொண்டு நம்பியோ தரவுத் தளம் ஒவ்வொரு ஆண்டும் மிகவும் பாதுகாப்பான நாடுகள் பட்டியலை வெளியிடுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு நம்பியோ பாதுகாப்பு குறியீட்டின்படி (Numbeo Safety Index) 2025-ம் ஆண்டில் உலகின் பாதுகாப்பான நாடாக பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினுக்கு இடையில் அமைந்துள்ள ஒரு சிறிய ஐரோப்பிய நாடான அன்டோரா உள்ளது. 2வது இடத்தில் ஐக்கிய அரபு அமீரகமும், 3வது இடத்தில் கத்தார் நாடுகளும் உள்ளன.
147 நாடுகளில், இலங்கை 59வது இடத்தையும், இந்தியா 66-வது இடத்தையும் பிடித்துள்ளதுடன், இங்கிலாந்து 87வது இடமும், அமெரிக்கா 89வது இடமும் பிடித்துள்ளன.
தெற்காசிய நாடுகளில், சீனா 15வது இடத்தில் உள்ளதுடன், பாகிஸ்தான் 65வது இடத்தையும், வங்கதேசம் 126வது இடத்தையும் பிடித்துள்ளன.
நம்பியோ பாதுகாப்பு குறியீட்டின்படி அன்டோரா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், தைவான், ஓமன், ஐல் ஆப் மேன் (ஐரிஸ் கடல் தீவு), ஹாங்காங் (சீனா), ஆர்மீனியா, சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களை பிடித்துள்ளன. இந்த தரவரிசையில் 19.3 புள்ளிகளுடன் கடைசி இடத்தில், அதாவது மோசமான பாதுகாப்பு கொண்ட நாடாக வெனிசுலா உள்ளது.
வெளிநாட்டுப் பயிற்சி பெற்று இந்நாட்டிற்கு வரும் சிறப்பு மருத்துவர்கள் நாட்டில் தங்கி இருந்து பணி புரியும் நிலை தற்போது காணப்படுவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான வைத்தியசாலையான மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அண்மையில் விசேட கண்காணிப்பு விஜயமொன்றை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கொண்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளையும் முறையான அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்து அந்த மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு தரமான மற்றும் வினைத்திறனான சுகாதார சேவைகளை வழங்கும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து சுகாதாரப் பிரிவு தலைவர்களுடனும் ஒரு விசேட கலந்துரையாடலொன்றை நடத்தும் பொருட்டு இந்த கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களால் மக்களுக்கு வழங்கப்படும் சுகாதார சேவைகளின் தற்போதைய நிலைமைகள் குறித்து சிறப்பு ஆய்வு மேற்கொண்ட சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏறாவூர் மருத்துவமனையில் சிறப்பு ஆய்வு ஒன்றையும் மேற்கொண்டார்.
ஏறாவூர் மருத்துவமனையை அடிப்படை மருத்துவமனையாக மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்துவதாக குறித்த கண்காணிப்பு விஜயத்தின்போது அவர் தெரிவித்தார்.
ஆய்வைத் தொடர்ந்து, மருத்துவமனையில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, ஏறாவூர் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுடன் மருத்துவமனை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற சிறப்புக் கலந்துரையாடலின் போது, மேற்கண்ட விடயங்களை அமைச்சர் தெரிவித்தார்.
இதில், வெளிநாட்டுப் பயிற்சி பெற்று இந்நாட்டிற்கு வரும் சில சிறப்பு மருத்துவர்கள் வடக்கு மற்றும் கிழக்கு போன்ற தொலைதூரப் பகுதிகளில் முதல் நியமனம் பெற்று மீண்டும் வெளிநாடுகளுக்குச் செல்வதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்கம் பொறுப்பேற்றபோது சுமார் 70 சதவீதமாக இருந்த நிலைமை தற்போது குறைந்து வருவதாகவும், வெளிநாடுகளுக்குச் செல்வதற்குப் பதிலாக நாட்டிலேயே தங்கி இருந்து பணி புரியும் மருத்துவர்களின் எண்ணிக்கை 60-70 சதவீதம் வரை இருப்பதாகவும், இது ஒரு நேர்மறையான விடயம் என்றும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
சுமார் 20 வருடங்களுக்கு முன் வைத்தியராகப் பணியாற்றிய மட்டக்களப்பு வைத்தியசாலையின் கண்காணிப்புச் சுற்றுப்பயணத்தில் இணைந்தமை ஒரு தனித்துவமான அனுபவமாக இருந்ததாக அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பரவியது போல் இந்தியா உள்ளபட இந்திய பெருங்கடல் பகுதிகளில் உள்ள நாடுகளில் சிக்குன்குனியா நோய் பரவல் அபாயம் இருப்பதாகவும், கடந்த 2004-2005ம் ஆண்டை போல் இந்தியா, இலங்கை உள்பட உலகம் முழுவதும் சிக்குன்குனியா பாதிப்பு அதிகரிக்க உள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த சிக்குன்குனியா பரவல் உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் என்று உலக சுகாதார அமைப்பு வார்னிங் செய்துள்ளது.
இதுதொடர்பாக ஜெனீவாவில் உலக சுகாதார அமைப்பின் மருத்துவ அதிகாரி டயானா ரோஜாஸ் அல்வாரெஸ் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சிக்குன்குனியா வைரஸ் தொற்று நோய் உலகத்தையே உலுக்கியது. இது இப்போது மீண்டும் பரவும் அபாயம் உள்ளது. இதனால் சிக்குன்குனியா பரவலை தடுக்க தேவையான நடவடிக்கை தேவை. ஏனென்றால் வரலாறு மீண்டும் வருவதை நாங்கள் பார்க்கிறோம். இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் மொத்தம் 119 நாடுகள் உள்ளன. மொத்த மக்கள்தொகை 5.6 பில்லியன் (ஒரு பில்லியன் என்பது 100 கோடி). தற்போது பல நாடுகளில் மக்கள் அதிக காய்ச்சல், மூட்டு வலியால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். முன்னதாக 2004 -2005ம் ஆண்டு காலக்கட்டத்தில் சிக்குன்குனியா உலகம் முழுவதும் 5 லட்சம் பேரை பாதித்தது.
குறிப்பாக சிறிய தீவு நாடுகளில் பரவ தொடங்கி உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது அதேபோன்ற நிலை உருவாகி உள்ளது. இந்திய பெருங்கடல் தீவுகளில் லா ரீயூனியன் மயோட் மற்றும் மொரீஷியஸில் பாதிப்பகள் அதிகரித்துள்ளன. இதில் லா ரீயூனியனை எடுத்து கொண்டால் அங்குள்ள மக்கள்தொகையில் 3ல் ஒரு பங்கு மக்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிக்குன்குனியா ஏற்கனவே மடகாஸ்கர், சோமாலியா மற்றும் கென்யாவிற்கு நுழைந்துவிட்டது. இந்தியா, இலங்கை உள்பட தென்கிழக்கு ஆசியாவில் தொற்றுநோய் பரவலை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பாவிலும் சிக்குன்குனியா பாதிப்பு தொடங்கிஉள்ளது.
மே 1ம் தேதி முதல் பிரான்சிலும் 800 பேர் வரை சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பும் இந்திய பெருங்கடல் தீவுகளில் தான் சிக்குன்குனியா பரவ தொடங்கி உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியது. இப்போதும் இந்திய பெருங்கடல் தீவுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் உலக சுகாதார அமைப்பு இந்த எச்சரிக்கையை செய்துள்ளது.
சிக்குன்குனியாவை ஏடிஸ் வகை கொசுக்கள் பரப்புகின்றன. இந்த கொசுக்கள் கடிப்பதன் மூலம் நோய் பரவுகிறது. இந்த கொசுக்கள் பகலில் தான் கடிக்கும். இதனால் பொதுமக்கள் முடிந்தவரை உடல் முழுவதும் மறைக்கும் வகையிலான ஆடைகளை அணிவது நல்லது.
சிக்குன்குனியாவுக்கு என்று பிரத்யேகமாக சிகிச்சை இல்லை. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே சிறந்தது. இதனால் வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மழைக்காலம் என்பதால் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
சிக்குன்குனியாவுக்கு சில அறிகுறிகள் உள்ளன. காய்ச்சல், மூட்டு வலி, மற்றும் தடிப்பு போன்ற அறிகுறிகளைக் கொண்டுள்ளது. சிக்குன்குனியா உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாது எனினும் நோய் பாதிப்பால் சில வாரங்கள் வரை மக்களை முடக்கிப்போடும் சக்தி கொண்டது. இதனால் யாராவது சிக்குன்குனியா அறிகுறி, சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டால் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும்.
புத்தளம் – மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொடுவா கடல் பகுதியில் நேற்று (22) சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கரையொதுங்கிய சடலம், சிலாபம் பகுதியில் இருந்து கடந்த சனிக்கிழமை (19) கடலுக்குச் சென்று காணாமல் போன இரண்டு மீனவர்களில் ஒருவருடைய என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மதுரங்குளி பொலிஸார் குறிப்பிட்டனர்.
37 வயதான நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சிலாபம் பகுதியில் இருந்து கடந்த சனிக்கிழமை (19) கடலுக்குச் சென்ற மூன்று மீன்பிடி இயந்திர படகுகள் பலத்த காற்று மற்றும் புயலில் சிக்கி காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது இரண்டு மீன்பிடி இயந்திர படகுகளில் பயணித்த மீனவர்கள் பாதுகாப்பாக நீந்தி கரை சேர்ந்துள்ளனர்.
இந்நிலையில், மற்றுமொரு படகில் பயணித்த 37 மற்றும் 40 வயதுடைய இரண்டு மீனவர்கள் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு காணாமல் போன மீன்பிடி படகு மற்றும் அதில் இருந்த இரண்டு மீனவர்களையும் தேடி சனிக்கிழமை (19) இரவு இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் மூலம் கடற்பிரதேசங்களில் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில், காணாமல் போனதாக கூறப்படும் மீன்பிடி படகு மாத்திரம் ஞாயிற்றுக்கிழமை (20) காலை சிலாபம் பகுதியில் கரையொதுங்கியுள்ளதாகவும், எனினும் இரண்டு மீனவர்கள் தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நிலையிலேயே, காணாமல் போன இரண்டு மீனவர்களில் ஒருவருடைய சடலம் மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட தொடுவா கடல் பகுதியில் கரையொதுங்கிய நிலையில் இன்று (22) மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட குறித்த சடலம் திடீர் மரண விசாரணையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலம் புத்தளம் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மதுரங்குளி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, காணாமல் போன 40 வயதான மற்றைய மீனவரை தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
அம்பாறை, பதியதலாவ, மரங்கல பகுதியை சேர்ந்த இளம் பெண்ணொருவர் இன்று (23) அதிகாலை அவரது காதலனால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதுடன், பின்னர் காதலனும் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு பிரவேசித்த இளைஞன், இளம் பெண்ணின் தாய் மற்றும் தந்தை மீதும் வெட்டுக்காயங்களை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த தாயும் தந்தையும் தற்போது மஹா ஓயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொலை செய்யப்பட்டவர் 22 வயதான சரோஜா உதயங்கனி என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கொலையைச் செய்த இளைஞன் மொனராகலை பகுதியைச் சேர்ந்த 31 வயதானவர் என தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து பதியதலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.