Sunday, November 9, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 179

ஹட்டன் பஸ் விபத்து – நடந்தது என்ன?

0

ஹட்டனிலிருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று இன்று சனிக்கிழமை (21) விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.

ஹட்டனிலிருந்து பயணித்த குறித்த பஸ் ஹட்டன் மல்லியப்பு வாடி வீட்டுக்கருகில் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து  விபத்துக்குள்ளானது.

பஸ்ஸில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாகவே விபத்து இடம்பெற்றுதுள்ளது.

பஸ்ஸின் சாரதி , நடத்துனர் உட்பட பயணிகள் 53 பேர் காயமுற்ற நிலையில் டிக்கோயா மற்றும் வட்டவளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

ஹட்டனைச் சேர்ந்த 14 வயதுடைய பாடசாலை மாணவர், 68 வயதுடைய கண்டியைச் சேர்ந்த பெண் மற்றும் மற்றுமொரு பெண் என மூன்று பேர் உயிரிழந்தனர்.

பாடசாலை மாணவன் தனது சகோதரியுடன் மருந்து எடுப்பதற்காக சென்ற போதே இவ்விபத்தில் சிக்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

காயமடைந்தவர்களில் 10 பேர் கண்டி போதனா வைத்தியசாலைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

குறித்த விபத்து தொடர்பாக பஸ் சாரதியிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

பஸ் கட்டுப்பாட்டை இழந்து கதவு திறக்கப்பட்டு தான் பஸ்சில் இருந்து கீழே விழுந்ததாக சாரதி குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், விபத்துக்குள்ளான பஸ்ஸில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமரா அமைப்பின் தரவுத்தளத்தை ஹட்டன் பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.

விபத்து நடந்து சிறிது நேரம் கழித்து, ஒருவர் தனது கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்தி தொடர்புடைய சிசிடிவியை அணுகி காட்சிகள் நீக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கல்வி நிர்வாக சேவையின் அதிகாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள்!

0

அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் கல்விச்சேவைக் குழுவின் அறிவித்தலுக்கு இணங்க, தேசிய பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை இலங்கை கல்வி நிர்வாக சேவையின் தரம் I  அதிபர் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஏற்றதாக,  இலங்கை கல்வி நிர்வாக சேவையின் தரம் I அதிகாரிகளிடம் இருந்து விண்ணப்பங்களை கல்வி அமைச்சு கோரியுள்ளது.

அதற்காக   சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ள அறிவித்தல், பாடசாலை பதிவேடு, புள்ளி விபரம் மற்றும் மாதிரி விண்ணப்ப படிவங்களை 2024.12.11 ஆம் திகதி அன்று கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது டன் 2024.12.31 ஆம் திகதி விண்ணப்பங்களை அனுப்புவதற்கான இறுதித் திகதியாகும். 

அதன்படி அந்த அறிவித்தல், பாடசாலை பதிவேடு, புள்ளி விபரம் மற்றும் மாதிரி விண்ணப்பப் படிவம் என்பவற்றை கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் “விசேட அறிவித்தல்”  எனும் பகுதியில் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த பிராண்ட் அம்பாசிடர்கள்!

0

உலகில் முதன்முறையாக மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக 100 பிராண்ட் அம்பாசிடர்கள் (brand ambassador) நியமிக்கபட்டார்கள்.

மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் உலகில் முதன்முறையாக 100 சிறப்புப் பயிற்சி பெற்ற வர்த்தக நாம தூதர்கள் (brand ambassador) குழுவொன்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் தன்னார்வ சேவைக்காக நியமிக்கபட்டது.

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைந்த வைத்தியசாலையினால் தெரிவு செய்யப்பட்ட 100 பேர் கொண்ட குழு விசேட பயிற்சியின் பின்னர் வர்த்தக நாம தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

“மூளை ஆரோக்கியத்திற்கான 10 தேவையான விஷயங்கள்” எனப்படும் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான 10 முக்கிய விஷயங்களைப் பற்றி மக்களுக்குத் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த பிராண்ட் தூதர்கள் பயன்படுத்த பட உள்ளனர்.

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகமும் அதனுடன் இணைந்த வைத்தியசாலையும் இணைந்து இத்திட்டத்தை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளன.

எதிர்காலத்தில் “மூளை ஆரோக்கியத்திற்கான 10 தேவையான விஷயங்கள்” என்று அழைக்கப்படும் சுகாதார மேம்பாட்டு செயல்முறை ஆரோக்கியமான உணவு முறைகள், உடல் செயல்பாடு, ஒரு நல்ல குடிமகனாக இருப்பது மற்றும் நல்ல சமூக உறவுகளை உருவாக்குதல், உடல் எடை மற்றும் இடுப்பு சுற்றளவை நல்ல சரியான அளவில் வைத்திருத்தல், புகைபிடிப்பதைத் தவிர்த்தல், கொலஸ்ட்ரால் அளவை நல்ல சரியான அளவில் வைத்திருத்தல், இரத்த சர்க்கரை மேலாண்மை, இரத்த அழுத்த மேலாண்மை, நேர்மறை மன மேலாண்மை மற்றும் ஆரோக்கியமான தூக்கம் ஆகியவை இதில் அடங்கும்.

திறப்பு விழாவில் கலந்து கொண்ட சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ, மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் மக்களைக் கல்வியூட்டுவதற்கும் மேற்கொள்ளப்படும் இம்முயற்சி மகத்தான செயல் என்றும், இதற்கு முன்னின்று செயற்படும் அனைவருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றும் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், இந்த தன்னார்வ சேவையானது இந்த நாட்டில் சுகாதார சேவையில் ஒரு நல்ல மாற்றத்திற்கான ஆரம்பத்தை குறிக்கிறது என்றும் தெரிவித்தார். நோய்த்தடுப்பு மற்றும் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதற்கு அரசாங்கம் வருடாந்தம் பெருமளவு பணம் செலவழிப்பதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், இவ்வாறான தன்னார்வ சேவைகள் மூலம் நோய்களுக்கு ஆளாகாமல் இருப்பதற்கான ஆலோசனைகளையும் விழிப்புணர்வையும் இந்நாட்டு மக்களுக்கு வழங்க முடியும் எனவும் தெரிவித்தார். இந்த முக்கியமான பணியை ஆதரிக்க அரசு எப்போதும் தயாராக இருப்பதாகவும், நோய் தடுப்புக்கு முன்னுரிமை அளிப்பது தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என்றும், அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

உலக மக்கள்தொகையான 08 பில்லியனில் கிட்டத்தட்ட 04 பில்லியன் அதாவது 3.4 பில்லியன் பேர் தற்போது மூளை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை சுமார் 400 மூளை நோய்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மூளையின் முக்கிய நோய்கள் பக்கவாதம், டிமென்ஷியா, ஒற்றைத் தலைவலி என்பன அதில் அடங்குகின்றன.

மேலும், சர்க்கரை நோயினால் ஏற்படும் புற நரம்பு பாதிப்பு, மனித வாழ்வை அதிகம் பாதிக்கும் நோயாக கண்டறியப்பட்டு, மூளை நோய்கள் குறித்து முறையான விழிப்புணர்வு அளிப்பதன் மூலம், 90 சதவீதத்துக்கும் அதிகமான நோய்களை தடுக்க முடியும் என்பதும் தெரியவந்தது.

குளோபல் பேஷண்ட் அட்வகேசி கோலிஷன் (Global Patient Advocacy Coalition-GPAC) மற்றும் முன்னணி சர்வதேச நிறுவனங்கள் (Leading international organization) இந்த திட்டத்தில் பங்களிக்க தயாராக உள்ளன.

சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்க, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொண்ட (ஓய்வு), சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அசேல குணவர்தன, சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக உபவேந்தர் ரியர் அட்மிரல் தம்மிக்க குமார, பேராசிரியர் திஸ்ஸ மற்றும் பேராசிரியர்கள் மற்றும் விசேட வைத்தியர்கள் அடங்கிய குழுவினர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ரெஸ்லின் வீரர் ரே மிஸ்டீரியோ திடீர் மரணம்!

0

புகழ்பெற்ற WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ சீனியர், தனது 66வது வயதில் காலமானார்.

புகழ்பெற்ற WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ சீனியரின் மறைவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

புகழ்பெற்ற மெக்சிகன் மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ சீனியர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. WWE போட்டிகளில் மாமா (அங்கிள்) என்று வாஞ்சையோடு அழைக்கப்படும் இவரது இயற்பெயர் மிகுவல் ஏஞ்சல் லோபஸ் டயஸ்.

இவருக்கு தற்போது வயது  66 ஆகும். அதேநேரம், அவரது உயிரிழப்புக்கான சரியான காரணம் எதும் விளக்கப்படவில்லை. உயரம் குறைவானவராக இருந்தாலும், மிகுந்த பராக்கிரமத்துடன் சண்டையிட்டு எதிராளிகளை நிலைகுலைய செய்யும் வல்லமை கொண்டவர்.

களத்தில் அவரது செயல்பாடுகள் எதிராளிகளையே மிரட்சியடைய செய்யும். குறிப்பாக, கயிறுகளுக்கு இடையில் சுழன்று சென்று, எதிராளிகளின் முகத்தில் உதைக்கும் அவரது ட்ரேட்மார்க் ஷாட், மிகவும் பிரபலமானதாகும். இந்நிலையில், ரே மிஸ்டீரியோவின் மறைவிற்கு, உலகெங்கிலும் இருந்து ரசிகர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அரசியல் செல்வாக்குக்கு இடமில்லை. நடவடிக்கை எடுக்கப்படும்!

0

அரச சேவையை முறையான அரச பொறிமுறையாக மாற்றும் சவால் எம்முன் உள்ளது

-ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

எமது நாட்டின் அரச சேவையை முறையான அரச பொறிமுறையாக மாற்றும் சவால் எம்முன் உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

எமது நாட்டில் தற்போதுள்ள அரச நிறுவனங்களை மீளாய்வு செய்ய நியமிக்கப்பட்டிருக்கும், புதிய குழுவின் ஊடாக அரசியல் செல்வாக்கை பொருட்படுத்தாமல், அவை தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நாரஹேன்பிட்டியில் உள்ள ‘நில மெதுர’ கட்டிடத்தில் அமைந்துள்ள உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று (20) நடைபெற்ற மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசாங்க அதிபரிலிருந்து மாவட்டச் செயலாளர் என பதவிப் பெயர் மாற்றம் பெற்ற இந்த சேவையானது 200 வருடங்கள் பழமையானது எனவும், எமது நாட்டை புதிய திசையில் வழிநடத்துவதில் பெரும் பங்காற்றியுள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார்.

இருப்பினும், இறுதி நோக்கம் மற்றும் இலக்கு தொடர்பில் திருப்தியடையும் வகையில் தற்போதைய நிலைமை இல்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி, அரச நிறுவனமொன்றில் நியாயமான சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று மக்களுக்கு சிறிதும் நம்பிக்கை இல்லை என்றும், அரசு என்ற வகையில் முழுக் கட்டமைப்பும் சரிவை கண்டுள்ளதெனவும் தெரிவித்தார்.

சரிவடைந்திருக்கும், கட்டமைப்பை மீள உருவாக்க நாம் தயாரா? இல்லையா? என்பது குறித்து எம்மை நாமே கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

மக்கள் ஆணையின் எதிர்பார்ப்புகளுக்கு அரசியல் அதிகாரம் மட்டுமல்ல, அரச சேவையும் பொறுப்புக் கூற வேண்டும் என்பதையும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார்.

அரச சேவையில் இருக்கின்ற கதிரை தொடர்பான பிரச்சினை தனக்கு இல்லை எனவும், கதிரையில் அமர வைப்பதற்கு யார் இருக்கின்றார்கள் என்ற பிரச்சினையே தனக்கு இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

உலகில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை உள்வாங்கி, அவற்றுக்கு இசைவான மாற்றங்களை செய்துகொண்டு , தமது துறைக்கு தலைமைத்துவம் வழங்கி அதனை வெற்றியை நோக்கி

வழிநடத்தும் கதிரைகள் வெற்றிடமாக காணப்படுகின்றதென கூறிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தனது இந்திய விஜயத்தின் போது ​1500 அதிகாரிகளை ​இந்தியாவிற்கு அனுப்பி பயிற்சி அளிக்க இணக்கம் எட்டப்பட்டது என்றும் கூறினார்.

அடுத்த வருடத்தில் உயர்தரத்தில் சித்தியடையும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு வெளிநாட்டில் கல்வி கற்பதற்கு அரசாங்கத்தின் புலமைப்பரிசில்களை வழங்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சில நிறுவனங்கள் மற்றும் பதவிகள் எந்த அடிப்படையில் உருவாக்கப்பட்டன என்பது பிரச்சினையாக உள்ளதாகவும், எமது நாட்டின் அரச சேவையை முறையான அரச பொறிமுறையாக மாற்றும் சவால் எம்முன் காணப்படுவதால், அதற்கான புதிய வியூகம் ஒன்று அவசியப்படுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

எமது நாட்டில் தற்போதுள்ள அரச நிறுவனங்களை மீளாய்வு செய்வதற்கான புதிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அரசியல் செல்வாக்குகளை பொருட்படுத்தாமல் அவை தொடர்பிலான தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் குறிப்பிட்டார்.

அரச சேவையை மட்டுப்படுத்தும் எதிர்பார்ப்பு தனக்கு இல்லை எனவும், ஆனால் அரச சேவையை நடத்திச் செல்வதற்கான செலவில் பிரச்சினைகள் இருப்பதால், அரச சேவையை ஒரே நிலைப்பாட்டில் உறுதியுடன் இருந்து முறையான பொறிமுறைக்கு கொண்டு வர வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்தப் பணிகளை நடைமுறைப்படுத்த அரசியல் அதிகார அடிப்படையில் தனது அதிகபட்ச பங்களிப்பை வழங்குவதாகவும், அரச அதிகாரிகளின் பங்களிப்பே இந்தப் பணிகளின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மக்கள் ஆணையின் 80% எதிர்பார்ப்புகளை அரச உத்தியோகத்தர்களே வௌிப்படுத்தியுள்ளனர் என்ற வகையில், அரசியல் அதிகார தரப்பின் பணிகளுக்கு அவர்கள் இணக்கம் மற்றும் அங்கீகாரத்தை வழங்கியுள்ளனர். எனவே, இவை இரண்டும் இருவேறு முரண்பாடான குழுக்கள் அல்ல என்பதையும் இரண்டும் இணக்கமான குழுக்கள் என்பதையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அதன்படி, அரசியல் அதிகாரம் மற்றும் பொதுச் சேவையின் எதிர்பார்ப்புக்கள் மற்றும் இலக்குகள் சமநிலையானதாக காணப்படுவதை கடந்த மக்கள் ஆணை வௌிப்படுத்தியிருப்பதால், இரு தரப்பினராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட பணியே எம்முன் உள்ளதெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும், மக்களுடன் தொடர்புபடும் திட்டங்கள் மீளாய்வு செய்யப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டம் விரைவுபடுத்தப்பட்டு, புதிய வருடத்தின் ஜனவரி முதலாம் திகதி முதல் ‘Clean Sri Lanka’ திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

எமது நாட்டை புதிய நிலைக்கு உயர்த்தி வைப்பதற்காக, வறுமையை ஒழித்தல், டிஜிட்டல் மயமாக்கல், சமூகத்தை கருத்தியல் ரீதியாக மாற்றியமைத்தல் என்ற மூன்று துறைகளின் கீழ் ‘Clean Sri Lanka’ ஊடாக பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அந்த பணியை நிறைவேற்றும் போது எந்தவொரு உத்தியோகத்தருக்கும் அசௌகரியம், அநீதி அல்லது அசாதாரணம் இழைக்கப்பட்டால், அந்த நபரின் பாதுகாப்பிற்காக தாம் முன் நிற்பதாக உறுதியளித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, எவரேனும் அதிகாரியொருவர் அந்த திட்டத்தை சிதைக்கும் நோக்கில் தாமதப்படுத்தாவாராயின் அதற்கும் நியாயமான முறையில் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி ஏ. எச். எம். எச். அபயரத்ன, அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் பி. ருவன் செனரத், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பிரதமரின் செயலாளர் ஜி. பிரதீப் சபுதந்திரி, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். அலோக பண்டார, மாவட்ட அரசாங்க அதிபர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட மு.ஜ ரணில்!

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து பணம் வழங்கப்பட்ட விதம் குறித்து விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள், அனைத்து விண்ணப்பங்களுக்கும் பணம் செலுத்தப்பட்டதாகவும், அதற்காக 1515 மில்லியன் ரூபாவும், 2023 இல் 839 மில்லியன் ரூபாவும், 2024 செப்டெம்பர் வரையிலான காலப்பகுதியில் நோயாளர்களுக்கான மருத்துவ உதவியாக சுமார் 450 மில்லியன் ரூபாவும் செலுத்தப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பிரதிநிதிகள் தனிப்பட்ட ரீதியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த போதிலும், ஒரு கோரிக்கையை தவிர ஏனைய அனைத்து கோரிக்கைகளுக்கும் ஜனாதிபதி நிதியத்தின் பொது நடைமுறைகளை பின்பற்றி 10 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான நிதியுதவி வழங்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

2022 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் திகதி வரை ஜனாதிபதி நிதியத்தில் வைக்கப்பட்டிருந்த 7,000 மில்லியன் ரூபாவை பணத்திற்காக, பல்வேறு கொடுப்பனவுகள் இருந்தபோதிலும், 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி வரை 11,000 மில்லியன் ரூபாவைத் தாண்டிய மீதியை பேணுவதற்கு தாம் நடவடிக்கை எடுத்ததாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கடந்த 11 மாதங்களில் தனது பாதுகாப்புச் செலவுகளுக்காக 82 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பறிபோகுமா பாராளுமன்ற உறுப்பினர் பதவி?

0

அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்கி ரிட் ஆணையை பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

புதிய சுதந்திர முன்னியின் தலைவர் ஓஷல ஹேரத் இந்த மனுவை சமர்ப்பித்துள்ளார்.

அதில், பிரதிவாதிகளாக அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே, பாராளுமன்ற பொது செயலாளர், ருஹுனு பல்கலைக்கழகம் மற்றும் அதன் உபவேந்தர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

கடந்த பொதுத் தேர்தலின் பின்னர் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.

உபாலி பன்னிலகே பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட போது, ​​அவர் ருஹுனு பல்கலைக்கழகத்தில் சமூக விஞ்ஞான பேராசிரியராக பணியாற்றியதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச சேவையில் ஈடுபட்டிருக்கும் வேளையில் இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவது, அரசியலமைப்பின் 91வது பிரிவின் கீழ் சட்டத்திற்கு முரணானது எனவும் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்வதற்கு தகுதியற்றதாகும் எனவும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இதன்படி, அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகேவை பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்தல், பாராளுமன்றத்தில் அமர்ந்து வாக்களிப்பதற்கும் தகுதியற்றவர் என தீர்ப்பளிக்குமாறும், அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக ரிட் ஆணை பிறப்பிக்குமாறும் மனுதாரர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம்  கோரியுள்ளார்.

துறைகளை காட்டிக் கொடுத்த அரசாங்கம்!

0

இந்திய ஆக்கிரமிப்பை கடுமையாக எதிர்த்த ரோஹண விஜேவீரவின் கொள்கையைப் பின்பற்றும் கட்சியின் தலைவரது ஆட்சியில் இலங்கையின் மின்சக்தி மற்றும் வலுசக்தி துறைகள் அந்நாட்டிடம் காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.

எட்கா ஒப்பந்தத்தின் ஊடாக எதிர்கால சந்ததியினரின் தொழில் வாய்ப்புக்களை பறிப்பதற்கான சதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

தேசிய சுதந்திர முன்னணி தலைமையகத்தில் புதன்கிழமை (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உயர் வலு மின் தொகுப்பை நிறுவ இணக்கம் காணப்பட்டதாக இரு தலைவர்களதும் கூட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து இலங்கைக்கு பல்பொருள் குழாய் அமைக்கும் திட்டத்தின் ஊடாக எரிபொருள் மற்றும் திரவ நிலை இயற்கை எரிவாயு பரிமாற்றத்தை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது மேலதிக மின்சாரம் காணப்படுவதால் அதனை இந்தியாவுக்கு விற்பனை செய்வதற்கு இது சிறந்த வாய்ப்பாகும் என்று அரசாங்கம் குறிப்பிடுகின்றது. இன்று மின்சாரம் தேவைக்கதிகமானதாக இருந்தாலும் நாடு அபிவிருத்தியடையும் போதும் அதனைப் பயன்படுத்த முடியும்.

அத்தோடு அவசர நிலைமைகளின் போது இந்தியாவிடமிருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்து கொள்வதற்கும் இந்த திட்டம் உதவும் என்றும் கூறப்படுகிறது.

பங்களாதேஷ் அவசர நிலைமையின் போது அதானியிடமிருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்தது. பின்னர் மின் கட்டணத்தை செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டதால், முழு நாடும் இருளடைந்தது.

இலங்கையிலும் தற்போது வலுசக்தி துறையுடன் விளையாட ஆரம்பித்துள்ளனர். இது மிகவும் பாரதூரமானதாகும். எதிர்காலத்தில் மின்சாரத்துக்காக இந்தியாவிடம் கையேந்த வேண்டிய நிலைமைக்கு உள்ளாக்குவதற்கான நடவடிக்கைகளே இதன் ஊடாக முன்னெடுக்கப்படுகிறது.

அரசியல், கலாசார, வலுசக்தி மற்றும் பொருளாதார ரீதியில் இலங்கையுடன் இணைப்பை ஏற்படுத்த விரும்புவதாக இந்தியா குறிப்பிடுகிறது. மலிவான, நம்பகமான எரிசக்தியை வழங்குவதற்காக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு பல்பொருள் குழாய் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த இந்தியா, இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையேயான ஒத்துழைப்பு என்ற ஒரு விடயமும் அந்த கூட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் ஊடாக எரிபொருளுக்காகவும் நாம் முழுமையாக இந்தியாவை தங்கியிருக்க வேண்டிய நிலைமையே ஏற்படும். தற்போது இந்தியா, ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் எரிபொருளைப் பெற்று அதனை சுத்திகரித்து லங்கா ஐ.ஓ.சி.க்கு வழங்குகிறது. இதன் ஊடாக ஐ.ஓ.சி.க்கு பாரிய இலாபம் கிடைக்கின்றது. எனவே மேற்குறிப்பிடப்பட்ட இந்த குழாய் திட்டம் ஒருபோதும் இலங்கையின் எரிபொருள் துறைக்கு பாதுகாப்பானதாக அமையப்போவதில்லை. அது மாத்திரமின்றி தோல்வியடைந்த வலுசக்தி துறையை தோற்றுவிப்பதாகவும் இத்திட்டம் அமையும்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணங்கிய விடயங்களையே தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றார். எதிர்காலத்தில் இந்தியாவுக்கு சாதகமான ஆட்சி முறை இலங்கையில் ஏற்படாவிட்டால், அதில் தாக்கங்களை ஏற்படுத்துவதற்கு இந்த குழாய் திட்டங்களைப் பயன்படுத்தக் கூடும். மாலைத்தீவில் இந்தியாவை விட சீனாவுக்கு சாதகமான ஆட்சி ஏற்பட்டமையால் இந்திய சுற்றுலாப்பயணிகள் அந்நாட்டுக்கு செல்வது கூட தடுக்கப்பட்டது.

இந்திய ஆக்கிரமிப்பு தொடர்பில் இலங்கைக்கு கற்றுக் கொடுத்த ரோஹண விஜேவீரவின் நாமத்தைப் பயன்படுத்துபவர்களின் ஆட்சியின் கீழ் இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமையே பாரிய பேரிடராகும். இலங்கையின் வலுசக்தி துறையில் தலையிடுவதற்கு யாருக்கும் இடமளிக்கப் போவதில்லை எனக் கூறியவர்கள், இன்று இந்தியாவுக்கு சென்று வலுசக்தி மற்றும் மின்சக்தி துறையை காட்டிக் கொடுத்துள்ளனர்.

இதேவேளை எட்கா ஒப்பந்தம் குறித்தும் பேசப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் இந்திய தொழிலாளர்கள் இலங்கையின் தொழில் சந்தைகளுக்குள் கட்டுப்பாடின்றி பிரவேசிக்க முடியும்.

தமிழ்நாட்டிலுள்ள ஒருவர் எவ்வாறு கடவுச்சீட்டு இன்றி டில்லிக்கு சென்று தொழிலில் ஈடுபட முடியுமோ, அதேபோன்று இலங்கைக்குள்ளும் பிரவேசிக்கக் கூடிய நிலைமை ஏற்படும்.

எட்கா தொடர்பில் பேச வேண்டிய தேவை கூட இல்லை. அது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தால் அதற்கு இணங்க வேண்டியேற்படும். அவ்வாறு இணங்கினால் இந்தியாவிலிருந்து குறைந்த செலவில் இலங்கைக்கு மனித வளங்கள் இறக்குமதியாகும். இது பாரதூரமானதாகும்.

பொது மக்கள் இது தொடர்பில் ஆழமாக சிந்திக்க வேண்டும். எதிர்கால சந்ததியினருக்கான தொழில் வாய்ப்புக்களை பறிப்பதற்கான ஆரம்பமே இதுவாகும். இதற்கு எதிராக நாம் குரல்கொடுப்போம் என்றார்.

சீன அரசுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அநுர!

0

கடன் மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார நெருக்கடியின் போது ஒத்துழைப்பு வழங்கியமைக்கு ஜனாதிபதி சீன அரசாங்கத்துக்கு நன்றி தெரிவிப்பு

கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கைக்கு கடன் பெற்றுக்கொடுத்தமைக்காக சீன அரசாங்கத்துக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நன்றி தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சீன மக்கள் குடியரசின் அரசியல் ஆலோசனைக் சம்மேளன (CPPCC) தேசியக் குழுவின் உப தலைவர் கின் பொயோங் (Qin Boyong) ஆகியோருக்கு இடையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று (18) நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் காணப்படும் நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்தி, புதிய அரசாங்கத்துடன் தொடர்ந்தும் செயற்பட எதிர்பார்த்திருப்பதாகவும் கின் பொயோங் தெரிவித்தார்.

அதேபோல் நாட்டின் அனர்த்த நிலைமைகளின் போது உதவிகளை வழங்கியமை மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகளை வழங்கியமைக்காகவும் நன்றி கூறிய ஜனாதிபதி சீன அரசாங்கத்தின் ஒத்துழைப்பை தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

இடைநடுவில் நிறுத்தப்பட்டிருக்கும் மத்திய அதிவேக வீதியில் சீனாவிற்கு பொறுப்பான பகுதிகளை நிறைவு செய்ய வேண்டுமென வலியுறுத்திய ஜனாதிபதி, கொழும்பு துறைமுக நகரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை மையப்படுத்தி விநியோக மத்தியஸ்தானம் மற்றும் நிறுவன வேலைத்திட்டங்களை விரைவாக ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

குறித்த வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கவும், பல்வேறு காரணங்களுக்காக இடைநடுவில் நிறுத்தப்பட்டிருக்கும் சமுத்திர ஆய்வு பணிகளை மீள ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் உப தலைவர் இதன்போது கூறினார்.

அத்தோடு, ஹம்பாந்தோட்டை முதலீட்டு வலயத்தை அண்மித்து சீன நிறுவனங்களை அமைத்து உலக அளவில் இலங்கைக்கு மிகச் சிறந்ததொரு பிரவேசத்தை ஏற்படுத்தித் கொடுக்க எதிர்பார்த்திருப்பதுடன்,எதிர்வரும் காலங்களில் சீனாவுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவிருக்கும் ஜனாதிபதியை வரவேற்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வௌிநாட்டு அலுவல்கள், வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஷ்வி சாலி, சீன மக்கள் குடியரசின் அரசியல் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் மா யூசியாங் (Ma Youxiang) ஆகியோர் இதன்போது கலந்துகொண்டனர்

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு

இன்றைய வானிலை மாற்றங்கள், முக்கிய அறிவிப்பு!

0

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 2 நாட்களில் வடமேற்குத் திசையில் வடக்கு தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேச கரையை நோக்கி நகரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்றைய தினத்திற்கான (டிசம்பர் 19ஆம் திகதி) வானிலை முன்னறிவிப்பு

வடக்கு, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.