Thursday, June 25, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 180

மட்டக்களப்பு மாவட்ட வைத்தியசாலைகளுக்கு திடீர் விஜயம்!

0

வெளிநாட்டுப் பயிற்சி பெற்று இந்நாட்டிற்கு வரும் சிறப்பு மருத்துவர்கள் நாட்டில் தங்கி இருந்து பணி புரியும் நிலை தற்போது காணப்படுவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான வைத்தியசாலையான மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அண்மையில் விசேட கண்காணிப்பு விஜயமொன்றை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கொண்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளையும் முறையான அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்து அந்த மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு தரமான மற்றும் வினைத்திறனான சுகாதார சேவைகளை வழங்கும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து சுகாதாரப் பிரிவு தலைவர்களுடனும் ஒரு விசேட கலந்துரையாடலொன்றை நடத்தும் பொருட்டு இந்த கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களால் மக்களுக்கு வழங்கப்படும் சுகாதார சேவைகளின் தற்போதைய நிலைமைகள் குறித்து சிறப்பு ஆய்வு மேற்கொண்ட சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏறாவூர் மருத்துவமனையில் சிறப்பு ஆய்வு ஒன்றையும் மேற்கொண்டார்.

ஏறாவூர் மருத்துவமனையை அடிப்படை மருத்துவமனையாக மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்துவதாக குறித்த கண்காணிப்பு விஜயத்தின்போது அவர் தெரிவித்தார்.

ஆய்வைத் தொடர்ந்து, மருத்துவமனையில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, ஏறாவூர் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுடன் மருத்துவமனை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற சிறப்புக் கலந்துரையாடலின் போது, மேற்கண்ட விடயங்களை அமைச்சர் தெரிவித்தார்.

இதில், வெளிநாட்டுப் பயிற்சி பெற்று இந்நாட்டிற்கு வரும் சில சிறப்பு மருத்துவர்கள் வடக்கு மற்றும் கிழக்கு போன்ற தொலைதூரப் பகுதிகளில் முதல் நியமனம் பெற்று மீண்டும் வெளிநாடுகளுக்குச் செல்வதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்கம் பொறுப்பேற்றபோது சுமார் 70 சதவீதமாக இருந்த நிலைமை தற்போது குறைந்து வருவதாகவும், வெளிநாடுகளுக்குச் செல்வதற்குப் பதிலாக நாட்டிலேயே தங்கி இருந்து பணி புரியும் மருத்துவர்களின் எண்ணிக்கை 60-70 சதவீதம் வரை இருப்பதாகவும், இது ஒரு நேர்மறையான விடயம் என்றும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

சுமார் 20 வருடங்களுக்கு முன் வைத்தியராகப் பணியாற்றிய மட்டக்களப்பு வைத்தியசாலையின் கண்காணிப்புச் சுற்றுப்பயணத்தில் இணைந்தமை ஒரு தனித்துவமான அனுபவமாக இருந்ததாக அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிக்குன்குனியா குறித்து WHO கடும் எச்சரிக்கை!

0

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பரவியது போல் இந்தியா உள்ளபட இந்திய பெருங்கடல் பகுதிகளில் உள்ள நாடுகளில் சிக்குன்குனியா நோய் பரவல் அபாயம் இருப்பதாகவும், கடந்த 2004-2005ம் ஆண்டை போல் இந்தியா, இலங்கை உள்பட உலகம் முழுவதும் சிக்குன்குனியா பாதிப்பு அதிகரிக்க உள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த சிக்குன்குனியா பரவல் உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் என்று உலக சுகாதார அமைப்பு வார்னிங் செய்துள்ளது.

இதுதொடர்பாக ஜெனீவாவில் உலக சுகாதார அமைப்பின் மருத்துவ அதிகாரி டயானா ரோஜாஸ் அல்வாரெஸ் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சிக்குன்குனியா வைரஸ் தொற்று நோய் உலகத்தையே உலுக்கியது. இது இப்போது மீண்டும் பரவும் அபாயம் உள்ளது. இதனால் சிக்குன்குனியா பரவலை தடுக்க தேவையான நடவடிக்கை தேவை. ஏனென்றால் வரலாறு மீண்டும் வருவதை நாங்கள் பார்க்கிறோம். இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் மொத்தம் 119 நாடுகள் உள்ளன. மொத்த மக்கள்தொகை 5.6 பில்லியன் (ஒரு பில்லியன் என்பது 100 கோடி). தற்போது பல நாடுகளில் மக்கள் அதிக காய்ச்சல், மூட்டு வலியால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். முன்னதாக 2004 -2005ம் ஆண்டு காலக்கட்டத்தில் சிக்குன்குனியா உலகம் முழுவதும் 5 லட்சம் பேரை பாதித்தது.

குறிப்பாக சிறிய தீவு நாடுகளில் பரவ தொடங்கி உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது அதேபோன்ற நிலை உருவாகி உள்ளது. இந்திய பெருங்கடல் தீவுகளில் லா ரீயூனியன் மயோட் மற்றும் மொரீஷியஸில் பாதிப்பகள் அதிகரித்துள்ளன. இதில் லா ரீயூனியனை எடுத்து கொண்டால் அங்குள்ள மக்கள்தொகையில் 3ல் ஒரு பங்கு மக்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிக்குன்குனியா ஏற்கனவே மடகாஸ்கர், சோமாலியா மற்றும் கென்யாவிற்கு நுழைந்துவிட்டது. இந்தியா, இலங்கை உள்பட தென்கிழக்கு ஆசியாவில் தொற்றுநோய் பரவலை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பாவிலும் சிக்குன்குனியா பாதிப்பு தொடங்கிஉள்ளது.

மே 1ம் தேதி முதல் பிரான்சிலும் 800 பேர் வரை சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பும் இந்திய பெருங்கடல் தீவுகளில் தான் சிக்குன்குனியா பரவ தொடங்கி உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியது. இப்போதும் இந்திய பெருங்கடல் தீவுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் உலக சுகாதார அமைப்பு இந்த எச்சரிக்கையை செய்துள்ளது.

சிக்குன்குனியாவை ஏடிஸ் வகை கொசுக்கள் பரப்புகின்றன. இந்த கொசுக்கள் கடிப்பதன் மூலம் நோய் பரவுகிறது. இந்த கொசுக்கள் பகலில் தான் கடிக்கும். இதனால் பொதுமக்கள் முடிந்தவரை உடல் முழுவதும் மறைக்கும் வகையிலான ஆடைகளை அணிவது நல்லது.

சிக்குன்குனியாவுக்கு என்று பிரத்யேகமாக சிகிச்சை இல்லை. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே சிறந்தது. இதனால் வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மழைக்காலம் என்பதால் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

சிக்குன்குனியாவுக்கு சில அறிகுறிகள் உள்ளன. காய்ச்சல், மூட்டு வலி, மற்றும் தடிப்பு போன்ற அறிகுறிகளைக் கொண்டுள்ளது. சிக்குன்குனியா உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாது எனினும் நோய் பாதிப்பால் சில வாரங்கள் வரை மக்களை முடக்கிப்போடும் சக்தி கொண்டது. இதனால் யாராவது சிக்குன்குனியா அறிகுறி, சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டால் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும்.

தொடுவா கடலில் கரையொதுங்கிய சடலம்!

0

புத்தளம் – மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொடுவா கடல் பகுதியில் நேற்று (22) சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்வாறு கரையொதுங்கிய சடலம், சிலாபம் பகுதியில் இருந்து கடந்த சனிக்கிழமை (19) கடலுக்குச் சென்று காணாமல் போன இரண்டு மீனவர்களில் ஒருவருடைய என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மதுரங்குளி பொலிஸார் குறிப்பிட்டனர். 

37 வயதான நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

சிலாபம் பகுதியில் இருந்து கடந்த சனிக்கிழமை (19) கடலுக்குச் சென்ற மூன்று மீன்பிடி இயந்திர படகுகள் பலத்த காற்று மற்றும் புயலில் சிக்கி காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதன்போது இரண்டு மீன்பிடி இயந்திர படகுகளில் பயணித்த மீனவர்கள் பாதுகாப்பாக நீந்தி கரை சேர்ந்துள்ளனர். 

இந்நிலையில், மற்றுமொரு படகில் பயணித்த 37 மற்றும் 40 வயதுடைய இரண்டு மீனவர்கள் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது. 

இவ்வாறு காணாமல் போன மீன்பிடி படகு மற்றும் அதில் இருந்த இரண்டு மீனவர்களையும் தேடி சனிக்கிழமை (19) இரவு இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் மூலம் கடற்பிரதேசங்களில் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. 

இந்த நிலையில், காணாமல் போனதாக கூறப்படும் மீன்பிடி படகு மாத்திரம் ஞாயிற்றுக்கிழமை (20) காலை சிலாபம் பகுதியில் கரையொதுங்கியுள்ளதாகவும், எனினும் இரண்டு மீனவர்கள் தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த நிலையிலேயே, காணாமல் போன இரண்டு மீனவர்களில் ஒருவருடைய சடலம் மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட தொடுவா கடல் பகுதியில் கரையொதுங்கிய நிலையில் இன்று (22) மீட்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு மீட்கப்பட்ட குறித்த சடலம் திடீர் மரண விசாரணையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலம் புத்தளம் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மதுரங்குளி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். 

இதேவேளை, காணாமல் போன 40 வயதான மற்றைய மீனவரை தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

-புத்தளம் நிருபர் ரஸ்மின்-

காதலியை கொலை செய்து காதலனும் தற்கொலை!

0

அம்பாறை, பதியதலாவ, மரங்கல பகுதியை சேர்ந்த இளம் பெண்ணொருவர் இன்று (23) அதிகாலை அவரது காதலனால் கழுத்தறுத்து கொலை  செய்யப்பட்டுள்ளதுடன், பின்னர் காதலனும் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு பிரவேசித்த இளைஞன், இளம் பெண்ணின் தாய் மற்றும் தந்தை மீதும் வெட்டுக்காயங்களை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த தாயும் தந்தையும் தற்போது மஹா ஓயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கொலை செய்யப்பட்டவர் 22 வயதான சரோஜா உதயங்கனி என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கொலையைச் செய்த இளைஞன் மொனராகலை பகுதியைச் சேர்ந்த 31 வயதானவர் என தெரியவந்துள்ளது. 

சம்பவம் குறித்து பதியதலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ரணில் குறித்து உயர் நீதிமன்றின் அதிரடி அறிவிப்பு!

0

2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 ஆம் திகதி போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த அப்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால சட்ட விதிமுறைகளின் ஊடாக அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவால் பொது மக்கள் பாதுகாப்பு சட்டத்தின் இரண்டாவது சரத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட அவசரகால சட்ட விதிமுறைகள் தன்னிச்சையானவை மற்றும் அதிகாரமற்றவை என்று மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வின் பெரும்பான்மையான நீதியரசர்கள் தீர்ப்பளித்தனர். 

தலைமை நீதியரசர் முர்து பெர்னாண்டோ மற்றும் யசந்த கோத்தாகொட ஆகிய பெரும்பான்மை நீதியரசர்கள் இந்த தீர்ப்பை வழங்கினர். 

இருப்பினும், மூவரடங்கிய நீதியரசர்கள் அமர்வின் உறுப்பினரான நீதியரசர் அர்ஜுன ஒபேசேகர, தனது தீர்ப்பை வழங்கும்போது, பதில் ஜனாதிபதியின் அவசரகாலச் சட்ட பிரகடனம் ஊடாக அடிப்படை மனித உரிமைகளை மீறப்படவில்லை என்று கூறினார். 

மாற்றுக் கொள்கை மையம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையளார் அம்பிகா சற்குணநாதன் மற்றும் லிபரல் இளைஞர் இயக்கம் ஆகியவை இந்த அடிப்படை உரிமைகள் மனுக்களை தாக்கல் செய்திருந்தன. 

மனுதாரர்களின் வழக்கு கட்டணங்களை அரசாங்கம் செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டது.

வவுனியா பகுதியில் மீட்கப்பட்ட பயங்கர வெடி பொருட்கள்!

0

வவுனியா நேரியகுளம் பகுதியில் வீடு ஒன்றில் நிலத்தின் கீழ் புதைக்கப்பட்ட 86 கைக்குண்டுகளுடன் ஒருவர் வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு விசாரணை பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட நபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் கொழும்பிலிருந்து வருகை தந்த புலனாய்வுத்துறை அதிகாரிகளோடு வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு விசாரணை பிரிவு பொலிசாரும் இணைந்து செட்டிகுளம் துட்டுவாகை மற்றும் நேரியகுளம் பகுதிகளில் உள்ள இரு வீடுகளில் சோதனையை மேற்கொண்டனர்.

இதன்போது நேரியகுளத்தில் வீடு ஒன்றின் அருகாமையில் பிளாஸ்டிக் பரல் ஒன்றினுள் 86 கைக்குண்டுகள், ரி- 56 ரக துப்பாக்கிக்கான ரவைகள், கைத்துப்பாக்கிக்கான மூன்று ரவைகள், 5600 போதை மாத்திரைகள், 10 கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன நிலத்தின் கீழ் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டன.

இதனையடுத்து குறித்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தேடுதல் நடவடிக்கையின் போது வவுனியா குற்றத்தடுப்பு விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயதிலக தலைமையில், பொலிஸ் பரிசோதகர் ராஜபக்ச மற்றும் ராஜகுரு, பொலிஸ் அதிகாரிகளான ரன்வல, ரூபசிங்க, பாலசூரிய, சனுஷ், கேரத், சனத், பண்டார, திசாநாயக ஆகியோர் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் ரத்து!

0

நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமைகள் மற்றும் சலுகைகளை இரத்து செய்வதற்கான புதிய சட்ட மூலத்தை தயாரிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அனைத்து ஜனாதிபதிகளுக்கும் பொதுவாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எவருக்கும் சிறப்புரிமை வழங்கப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (22) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு சட்ட ரீதியாக வழங்கப்பட்டுள்ள அனைத்து சிறப்புரிமைகளும் இதன் மூலம் இரத்து செய்யப்படும். இந்த சட்ட மூலம் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.  பாராளுமன்றத்தில் அனுமதி கிடைத்த பின்னரே சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடிய கால அவகாசம் தொடர்பில் குறிப்பிட முடியும். மிகக்குறுகிய காலத்துக்குள் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இங்கு எந்தவொரு நபருக்கும் சிறப்புரிமை வழங்கப்பட மாட்டாது. முன்னாள் ஜனாதிபதிகள் அனைவரும் ஒரே மட்டத்திலேயே நடத்தப்படுவர். தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் அனைத்து ஜனாதிபதிகளுக்கும் பொதுவாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு எனும் போது முன்னாள் ஜனாதிபதிகள் மாத்திரமின்றி நாட்டு பிரஜைகளும் கவனத்தில் கொள்ளப்படுவர். அனைவரது பாதுகாப்பையும் கருத்திற் கொண்டு உரிய நடவடிக்கைககள் முன்னெடுக்கப்படும்.

1986 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க ஜனாதிபதியின் உரித்துக்கள் (நீக்கல்) சட்டமூலத்தை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’  எனும்  அரசாங்க கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டதற்கமைய, முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தவர்களுக்கு வழங்கப்படுகின்ற விசேட சிறப்புரிமைகளை இரத்துச் செய்வதற்கு இயலுமாகும் வகையில் 1986 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க ஜனாதிபதியின் உரித்துக்கள் சட்டத்தை நீக்குவதற்காக சட்டமூலமொன்றை தயாரிப்பதற்காக கடந்த ஜூன் 16ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த பணிகளுக்காக சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள ஜனாதிபதியின் உரித்துக்கள் (நீக்கல்) சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது. அதற்கமைய, குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றார்.

ஏமனில் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து?

0

நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ஏமன் ரத்து செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 10 நாட்களாகவே இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், இதில் இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு, அவர் இந்தியா அழைத்து வரப்படுவார் என்று பேச்சுவார்த்தைகளை முன்னின்று நடத்திய Global Peace Initiative அமைப்பின் தலைவர் டாக்டர் கே.ஏ. பால் தெரிவித்துள்ளார்.

ஏமன் நாட்டை சேர்ந்த மஹ்தி என்பவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே நிமிஷா பிரியா சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறார். அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரணத் தண்டையை விதித்திருந்தது. சட்ட வாய்ப்புகள் அனைத்தும் முடிந்த நிலையில், இம்மாதத் தொடக்கத்தில் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே மத்திய அரசு உட்பட பல்வேறு தரப்பும் எடுத்த முயற்சியைத் தொடர்ந்து மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த 10 நாட்களாகவே இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், இதில் இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏமன் நாட்டில் இருந்த Global Peace Initiative அமைப்பின் தலைவர் டாக்டர் கே.ஏ. பால் இது தொடர்பாக வீடியோவை வெளியிட்டுள்ளார். நிமிஷா பிரியா மரண தண்டனை ரத்து செய்யப்படுகிறது என்றும் நிமிஷா பிரியா விடுதலை செய்யப்பட்டு, இந்தியா அழைத்துச் செல்லப்படுவார் என்றும் டாக்டர் கே.ஏ. பால் தெரிவித்துள்ளார். வலிமையான முயற்சிகள் மற்றும் பிரார்த்தனை காரணமாகவே இது சாத்தியமாகியுள்ளதாகவும் ஏமன் தலைவர்களுக்கு இதற்காக நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் டாக்டர் கே.ஏ. பால் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் ஏமன் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக இது குறித்து எந்தவொரு அறிவிப்பும் இல்லை. மேலும், நிமிஷா பிரியாவின் குடும்பத்தினரும் கூட இந்தச் செய்தியை உறுதி செய்யவில்லை. மேலும், பால் விளம்பர பிரியர் என்பதால் அவரை நம்ப முடியுமா என்ற கேள்வியை நிமிஷா குடும்பத்தார் முன்வைக்கிறார்கள். இதனால் நிமிஷாவின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பதில் கேள்வி தொடர்ந்தே வருகிறது..

மஹ்தி என்பவரைக் கொன்ற குற்றச்சாட்டில் நிமிஷா பிரியா சிறையில் இருக்கிறார். அவரது குடும்பத்தினருக்கு ரத்தப் பணம் கொடுத்து மன்னிப்பு கோரும் முயற்சிகள் நடந்து வருகிறது. ஆனால், உயிரிழந்த மஹ்தியின் சகோதரர் சமீபத்தில் அளித்த நேர்காணலில், நிமிஷா பிரியாவுக்கு மன்னிப்பே இல்லை என்றும் அவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியே தீர வேண்டும் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வடக்கில் ஆரம்பமான பனை எழுச்சி வாரம்!

பனை உற்பத்திப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் ஊடாக எமது நாட்டுக்கு பெரும் அந்நியச்செலவாணி கிடைக்கப்பெற்று வருகின்றது.

எதிர்காலத்தில் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி பொறிமுறையை இலகுவாக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். இதன் ஊடாக இடைத்தரகர்களை விட உற்பத்தியாளர்களே அதிக இலாபத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். அவர்களின் வாழ்வாதாரமும் மேம்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் வடக்கு மாகாண பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்கள் இணைந்து நடத்தும், வடக்கு மாகாண பனை எழுச்சி வாரத்தை முன்னிட்டு ‘எங்கள் வாழ்வியலில் பனை’ என்னும் தலைப்பிலான கண்காட்சியை, நல்லூர் முத்திரைச்சந்தியிலுள்ள சங்கிலியன் பூங்காவில் வடக்கு மாகாண ஆளுநர் இன்று செவ்வாய்க்கிழமை காலை (22.07.2025) ஆரம்பித்து வைத்தார். அதன் பின்னர் ஒவ்வொரு கண்காட்சிக் கூடங்களையும் ஆளுநர் பார்வையிட்டார்.

இங்கு உரையாற்றிய ஆளுநர்,

மில்வைக்ட் கனகராஜா சகல இடங்களிலும் பனை விதைகளை நடுகை செய்து பனையை வளர்த்த ஒருவர். பனைகள் இல்லாத தேசம் இருக்கக் கூடாது என்பதற்காக அரும்பாடுபட்டவர். அவரின் நினைவு நாள் இந்தப் பனை வாரத்தின் ஆரம்ப நாளாக உள்ளது.

எமது மாகாணத்தின், மாவட்டத்தின் சொத்தாகவுள்ள பனை வளத்தைப் பயன்படுத்தி பல்வேறு உற்பத்திப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதை நம்பியுள்ள மக்களின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டும். அவர்களின் உற்பத்திக்கு நியாயமான விலை கிடைக்கவேண்டும்.

பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்கள் மிகச் சிறப்பாகச் செயற்படுகின்றன. ஆனால் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் அந்தளவுக்கு இல்லை. கடந்த காலங்களில் அவர்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டிருந்தாலும் அதைப்பயன்படுத்தி அவர்கள் முன்னேறவில்லை.

ஆனால் பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்கள் அவ்வாறில்லை. இவ்வாறு சிறப்பாகச் செயற்படுவர்களுக்கு அடுத்துவரும் ஆண்டுகளில் கூடுதலான நிதி ஒதுக்கீட்டை வழங்க முடியும், என ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனின் பிரதிநிதியாக கௌரவ மாநகரசபை உறுப்பினர் சு.கபிலன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் மு.நந்தகோபாலன், வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் ந.திருலிங்கநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

வடக்கில் மக்கள் முறைப்பாட்டுக்கு அவசர இலக்கம்!

வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் பொது மக்கள் முறைப்பாட்டு இலக்கம் அறிமுகம் குறித்த இலக்கத்தினை கொண்ட விழிப்புணர்வு பிரசுரத்தை பேருந்துகளில் ஒட்டும் பணி கிளிநொச்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதியின் பரிந்துரைக்கமைய பொது போக்குவரத்தின்போது பொது மக்களுக்கான அசெளகரியங்கள், இடர்பாடுகளை முறையிடுவதற்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் கட்டமைப்பின் நடவடிக்கை மூலம் வடமாகாணத்தில் பொது மக்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகளை முறையிடுவதற்கான புதிய அவசர இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் விழிப்புணர்வு பிரசுரத்தை பேருந்துகளில் ஒட்டும் பணிகள் கிளிநொச்சியில் இன்று முன்னெடுக்கப்பட்டதுடன், இதனைத் தொடர்ந்து ஏனைய நான்கு மாவட்டங்களிலும் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த செயற்பாடு கிளிநொச்சி பேருந்து நிலைய பொறுப்பதிகாரி ஈஸ்வரதேவன் கோபிதன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பதில் அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.