வன்னியின் மைந்தனும், முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான மர்ஹூம் நூர்தீன் மஷூரின் எழில் கொஞ்சும் எருக்கலம் பிட்டியில் 15 ஆவது ஹஜ் விழாவின் இறுதி நாள் நிகழ்வு நேற்று வெகு விமர்சையாக இடம்பெற்றது.
முன்னாள் மன்னார் பிரதேச சபை தலைவர் இஸ்மாயில் இஸ்ஸதீனின் ஏற்பாட்டில், சிரேஷ்ட சுங்கப் பணிப்பாளர் சட்டத்தரணி லுக்மான் சஹாப்தீன் தலைமையில், ஆயிரக்கணக்கானோரின் பங்குபற்றலுடன் வெகு விமர்சையாக நடைபெற்ற குறித்த நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
மக்கள் வெள்ளத்தில் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்பளிக்கப்பட்டதுடன், அவர் உதைப்பந்தாட்டப் போட்டியையும் மிகுந்த ஆவலுடன் கண்டுகளித்தார்.
விறுவிறுப்பாக இடம்பெற்ற உதைப்பந்தாட்ட இறுதிப்போட்டியில் எருக்கலம்பிட்டி யூத் அணியினரை எருக்கலம்பிட்டி எப்.சீ அணியினர் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கிக்கொண்டனர்.
குறித்த நிகழ்வில் முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் உதுமாலெப்பை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக், உயர்பீட உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் பெருந்திரளாகப் பங்குபற்றினர்.
‘நேஷன்ஸ் லீக்’ கால்பந்தில் போர்ச்சுகல் அணி சாம்பியன் ஆனது. பைனலில் ‘பெனால்டி ஷூட் அவுட்டில்’ 5-3 என ஸ்பெயினை வீழ்த்தியது.
ஐரோப்பிய கால்பந்து அணிகளுக்காக ‘நேஷன்ஸ் லீக்’ தொடர் நடத்தப்படுகிறது. மொத்தம் 54 அணிகள் பங்கேற்றன. நேற்று ஜெர்மனியின் முனிக் நகரில் நடந்த பைனலில், போர்ச்சுகல், நடப்பு யூரோ சாம்பியன் ஸ்பெயின் பலப்பரீட்சை நடத்தின. போட்டியின் 21வது நிமிடம் ஜுபிமெண்டி (ஸ்பெயின்), 26வது நிமிடம் மெண்டிஸ் (போர்ச்சுகல்) தலா ஒரு கோல் அடித்தனர். 45வது நிமிடம் மைக்கேல் ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் ஸ்பெயின் அணி 2-1 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் 61 வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். போர்ச்சுகல் அணிக்காக இவர் அடித்த 138வது கோல் இது. 90 நிமிட முடிவில் போட்டி 2-2 என சமன் ஆனது. அடுத்து நடந்த கூடுதல் நேரத்திலும் (30 நிமிடம்) இரு அணியும் கோல் அடிக்கவில்லை.
இதையடுத்து வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி ‘பெனால்டி ஷூட் அவுட்டுக்கு’ சென்றது. இரு அணிக்கும் தலா 5 வாய்ப்புகள் தரப்பட்டன. காயம் காரணமாக 88 வது நிமிடம் வெளியேறிய ரொனால்டோ, இதில் பங்கேற்கவில்லை.
முதல் 3 வாய்ப்பில் போர்ச்சுகலின் ராமோஸ், விடின்ஹா, பெர்ணான்டஸ் கோல் அடித்தனர். மறுபக்கம் ஸ்பெயின் தரப்பில் மெரினோ, பயேனா, இஸ்கோ கோல் அடிக்க 3-3 என ஆனது.
4வது வாய்ப்பில் மெண்டெஸ் (போர்ச்சுகல்) கோல் அடிக்க, ஸ்பெயினின் மோராட்டோ அடித்த பந்தை கோல் கீப்பர் டீகோ கோஸ்டா தடுத்து அசத்தினார்.
5வது வாய்ப்பில் நெவேஸ் கோல் அடித்தார். இதையடுத்து 5-3 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் ‘திரில்’ வெற்றி பெற்றது. 2019க்குப் பின் இத்தொடரில் மீண்டும் சாம்பியன் ஆனது.
புத்தளத்தில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளுடன் வேன் ஒன்றும் பறிமுதல்!
இலங்கை கடற்படை, பொலிஸாருடன் இணைந்து, புத்தளம், தில்லையடி பகுதியில் 2025 ஜூன் 05 இரவு வேளையில் நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகள் கொண்ட ஒரு வேன் கைப்பற்றப்பட்டது.
அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிறுவனம், புத்தளம் பொலிஸாருடன் இணைந்து தில்லையடி பகுதியில் நடத்திய இந்த சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்று சோதனை செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகளானது வாகனத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் வேன் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
பௌத்த மதத்தால் பெறப்பட்ட நாகரிக பாரம்பரியத்துடன், சிறந்த சமூக மாற்றத்திற்காக ஒன்றிணைவோம் – ஜனாதிபதி
பௌத்த மதத்துடன் ஏற்பட்ட மாற்றமானது இலங்கை மக்கள் நாகரீகமான தேசமாக மாற உதவியது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க மிஹிந்தலை விகாரையில் இன்று (10) நடைபெற்ற தேசிய பொசொன் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
“பௌத்த தர்மத்தால் முழு உலகமும் ஒளிரட்டும்” என்ற தொனிப்பொருளின் கீழ், இம்முறை, தேசிய பொசொன் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இலங்கை தேசத்தை நாகரிக மாற்றத்திற்கு இட்டுச் சென்ற மகிந்த தேரரின் வருகை மற்றும் மிஹிந்தலையை மறந்துவிட்டு, தேசிய பொசொன் நிகழ்வை கொண்டாட முடியாது என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.
எனவே, இவ்வாறான ஆன்மீக விழுமியங்களைக் கொண்ட நிலத்தைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாப்பது ஒரு அரசின் பொறுப்பாகும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இந்தப் பொறுப்பை பூமியுடன் உணர்வுபூர்வமான தொடர்புடைய பிரஜைகளால் மாத்திரமே நிறைவேற்ற முடியும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அநுராதபுர நகரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மஹிந்த தேரரின் இலங்கை வருகையுடன் நமது நாடு தேரவாத பௌத்த தத்துவம் மற்றும் பாரம்பரியத்தின் மையமாக மாறியது. சமூக மாற்றத்திற்கும் ஆன்மீக விழிப்புணர்வுக்கும் வழிவகுத்த இந்த அற்புதமான நிகழ்வு, வெறும் மத அர்த்தத்தைத் தாண்டி, கலாசாரம், சமூகம் மற்றும் அரசியல் உட்பட நமது நாட்டின் அனைத்து அம்சங்களிலும் மிகவும் மேம்பட்ட கட்டமைப்பை உருவாக்குவதில் வெற்றி பெற்றுள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அந்த சமூகத்தை மீண்டும் இந்த பூமியில் நிலைநிறுத்துவதன் மூலம் நாட்டிற்கு அவசியமான சமூக மற்றும் சுற்றாடல் நெறிமுறை சார்ந்த புதிய மனப்பான்மையுடன் கூடிய நவீன நாகரீக அரசை கட்டியெழுப்புவதற்கான கைவிட முடியாத பொறுப்பை நிறைவேற்றுவேன் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
இலங்கையின் முதல் நகரம், முதல் குளம், முதல் அறுவை சிகிச்சைத் தளம் மற்றும் யோத கால்வாய் போன்ற பாரம்பரியங்களைக் கொண்ட அநுராதபுரத்தை அதன் பண்டைய பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் புனரமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
இந்திய உதவியின் கீழ் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள இந்தியப் பிரதமர் ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,
எந்த தேசமும் நிலைத்து நிற்க வலுவான அடித்தளம் தேவை. புத்தரின் தத்துவத்தின் மூலம் இலங்கை மக்கள் அத்தகைய வலுவான அடித்தளத்தைப் பெற்றுள்ளனர். கல்வியில் பின்னடைந்த சமுதாயத்தில் வலிமையான பிரஜைகளை எதிர்பார்க்க முடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பௌத்தம் இந்நாட்டில் கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்தியது. விகாரைகளைப் பிரிவெனாக்களாக மாற்றுவதன் மூலம், இந்நாட்டு மக்களுக்கு ஆன்மீகத்தையும் அறிவையும் வழங்கும் சமூக நோக்கத்தை நிறைவேற்றுவதில் பௌத்தம் பெரும் பங்காற்றியது. இது ஒரு நாகரீக சமூக பொறிமுறையின் தோற்றத்திற்கு வழிவகுத்தது. அதற்காக 2500 ஆண்டுகால வரலாற்றில் இந்நாட்டில் செயற்பட்ட தேரர்கள் அனைவருக்கும் நாம் நன்றியுடன் இருக்க வேண்டும்.
ஆனால் இப்போது அந்தச் சமூகப் பொறிமுறை வீழ்ச்சியடைந்து விட்டது. சில பொலிஸார் குற்றவாளிகளை பாதுகாக்கும் நிலையில் உள்ளனர். குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் சில அதிகாரிகள் சட்டவிரோத கடவுச்சீட்டுகளை வழங்கும் நிலை தோன்றியுள்ளது.
பாதாள உலகத் தலைவர்களுக்கு விமானப் பயணச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. சிறைச்சாலைகள் திணைக்களத்தில் உள்ள சிலர் சட்டவிரோதமாக கைதிகளை விடுவித்துள்ளனர். போக்குவரத்துத் திணைக்களத்தில் உள்ள சில அதிகாரிகள் சட்டவிரோத செயல்களைச் செய்துள்ளனர். இந்த நிறுவனங்கள் குறித்து பிரஜைகள் மகிழ்ச்சியான மனநிலையில் இல்லை. எனவே, பிரஜைகளின் பிரஜைப் பொறுப்பை உருவாக்க நெறிமுறை சார் திட்டம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். இதற்கான வழிகாட்டுதலை இந்தப் பௌத்த தத்துவத்தின் மூலம் பெறலாம்.
ஒரு நெறிமுறை சார்ந்த தேசமாக, இந்த அரச நிறுவனங்களின் பின்னடைவை மீண்டும் மீட்டெடுக்க நாம் செயற்பட்டு வருகிறோம். இந்த பணியை கைவிடாமல் நிறைவேற்ற, சாதாரண குடிமக்களின் ஆதரவும் நமக்கு அவசியம். இந்த வீழ்ச்சியடைந்த யுகத்தை முடிவுக்கு கொண்டு வந்து, பௌதிக மற்றும் ஆன்மீக ரீதியாக மேம்பட்ட வாழ்க்கைத் தரத்திற்கு இந்த நாட்டை மாற்றும் பொறுப்பைக் கைவிடாமல் நிறைவேற்ற, சாதாரண மக்களும் ஒன்றுபட வேண்டும்.
இரண்டு வருடங்களாக அரச அனுசரணையுடன் தேசிய பொசொன் நிகழ்வை நடத்த முடியாமல் இருந்த நிலையில், இது தொடர்பில் தீர்க்கமான முடிவை எடுத்து மிஹிந்தலையில் தேசிய பொசொன் நிகழ்வை நடத்தியதற்காக மிஹிந்தலை ரஜமகா விகாரையின் விகாராதிபதி கலாநிதி வலவாஹெங்குனுவெவே தம்மரதன தேரர், ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார்.
மிஹிந்தலை விகாரவாசி வண, சுருக்குளமே இந்திரரதன தேரரால் வரவேற்பும், நோக்கம் தொடர்பான விளக்கமும் வழங்கப்பட்டது.
மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி கலாநிதி வலவாஹெங்குணவெவே தம்மரதன தேரர், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, அமைச்சர் வசந்த சமரசிங்க, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க, பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான சேன நாணாயக்கார, திலின தாருக சமரகோன், பாக்ய ஸ்ரீ ஹேரத், அநுராதபுரம் மாவட்ட செயலாளர் ரஞ்சித் விமலசூரிய மற்றும் பெருந்திரளான மக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு, வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்த முன்னெச்சரிக்கை நிலையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு நாளை (11) பிற்பகல் 2:30 மணி வரை செல்லுபடியாகும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
சிலாபத்தில் இருந்து புத்தளம், மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பகுதிகள் தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவநிலையின் தாக்கம் காரணமாக, சிலாபத்தில் இருந்து புத்தளம், மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகமானது, அவ்வப்போது மணிக்கு 60-70 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும், என்பதுடன் அந்த கடல் பகுதிகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாக காணப்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கடல் பகுதிகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரை பயணம் செய்ய வேண்டாம் என கடற்சார் மற்றும் மீனவ சமூகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்படும் அடுத்தடுத்த அறிவிப்புகளை கவனமாக பின்பற்றுமாறு மீனவ மற்றும் கடற்சார் சமூகங்களுக்கு மேலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிரபலமான ChatGPT சேவை உலகம் முழுவதும் செயலிழந்துவிட்டதாக கூறப்படுகிறது.
உலகெங்கிலும் உள்ள பல பயனர்களால் ChatGPT சேவையை அணுக முடியவில்லை என வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக ஒரு தானியங்கி செய்தி தோன்றி பதில்களை உருவாக்குவதில் கோளாறு இருப்பதாகக் கூறுகிறது, எனவே கோளாறு தொடர்ந்தால், தயவுசெய்து உதவி மையத்தைத் தொடர்பு கொள்ளவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த நேரத்தில் OpenAI அதிகாரப்பூர்வ விளக்கத்தை வெளியிடவில்லை, எனபதுடன், தமது குழு இந்த சிக்கலை பரிசீலித்து வருவதாகக் கூறியுள்ளது.
நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்ட கல்பிட்டி பிரதேச சபை முன்னாள் தவிசாளர் எம்.எச்.எம். மின்ஹாஜ் இன்று காலை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
நுரைச்சோலை கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான நிலத்தை கல்பிட்டி பிரதேச சபை தவிசாளராக இருந்த சமயம் வேறொருவருக்கு குத்தகைக்கு பெற்றுக்கொடுத்தமை தொடர்பில் நேற்றைய தினம் அவர் கைதுசெய்யப்பட்டார்.
தாம் கல்பிட்டி பிரதேச சபை தவிசாளராக இருந்தபோது, சட்ட ரீதியாக குறித்த காணியை வேறொரு நபருக்கு குத்தகைக்கு பெற்றுக்கொடுத்ததாகவும், அதற்கான சகல ஆவணங்களும் தம்மிடம் இருப்பதாகவும் கல்பிட்டி பிரதேச சபை முன்னாள் தவிசாளர் எம்.எச்.எம். மின்ஹாஜ் எமது ஊடகத்திற்கு தெரிவித்தார்.
இருந்த போதிலும் கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான குறித்த காணி தொடர்பாக ஏற்கனவே வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த காணியில் உள்ள கடையை உடனடியாக அகற்றுமாறு கூறிய அரச உத்தியோகத்தருடன் நேற்று வாக்குவாதத்துடன் ஈடுபட்டத்திற்கு பலி தீர்க்கும் வகையிலே தமது கைது இடம்பெற்றுள்ளதாகவும், தாம் ஊழல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் பொய்யான செய்தி பரப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
குறித்த காணி தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கின்ற சமயம், நேற்றைய தினம் விடயத்திற்கு பொறுப்பான குறித்த அரச உத்தியோகத்தர் அரசியல் அழுத்தங்களினால் தம்முடன் எவ்வித நியாயமுமின்றி முரண்பட்டதாக எம்.எச்.எம். மின்ஹாஜ் கவலை தெரிவித்தார்.
இவ்வாறான நிலையிலேயே தாம் நேற்றைய தினம் கல்பிட்டி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு, இன்று காலை விடுவிக்கப்பட்டதாகவும் எமது ஊடகத்திற்கு தெரிவித்தார்.
மேலும் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் கல்பிட்டி பிரதேச சபை முன்னாள் தவிசாளர் எம்.எச்.எம். மின்ஹாஜ் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
2025 ஹஜ் ஏற்பாடு மிகச் சிறப்பு – சவூதி அரசின் அர்ப்பணிப்புக்கு முழு முஸ்லிம் சமூகமும் வாழ்த்து.
ஆக்கம் – ஊடகவியலாளர் எஸ். சினீஸ் கான்
ஹஜ் என்பது இஸ்லாத்தின் ஜந்தாவது கடமையும் வசதி படைத்தவர்கள் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய ஆன்மீக கடமையாகும். வருடாவருடம் பல நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் அல்லாஹ்வின் பாதையில் இறையருளை பெறும் நோக்கில் இவ் யாத்திரையை மேற்கொள்கின்றனர். இம்முறையும் சுமார் இரண்டு மில்லியன் மக்கள் ஹஜ் யாத்திரையில் பங்கேற்றனர்.
2025 ஆம் ஆண்டு ஹஜ் ஏற்பாடு உலகமெங்கும் கவனத்தை ஈர்க்கும் விதமாக மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆண்டு சவூதி அரேபியா அரசு ஹஜ் யாத்திரைக்கு அளித்திருக்கும் ஏற்பாடுகள் முன்பை விட அதிக உன்னதமான நவீன முறையில் காணப்பட்டது.
சவூதி அரேபிய அரசு கடந்த சில ஆண்டுகளாக ஹஜ் ஏற்பாடுகளை மேம்படுத்த, யாத்திரையாளர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் வசதிகளுக்கு மிகுந்த கவனம் செலுத்தி வந்ததுடன் இம்முறை உயர் தொழில்நுட்பம் மற்றும் நவீன வசதிகள் உருவாக்கப்பட்டு உயர்ந்த சேவை வழங்கப்பட்டது. ஹஜ் யாத்திரிகள் எதிர்நோக்கும் சிரமங்களை குறைத்து, அவர்கள் ஆன்மிக பயணத்தை அமைதியானதும் பாதுகாப்பானதுமாக மேற்கொள்ள சவூதி அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கை பாராட்டத்தக்கது.
உயர்தரமான சுகாதார வசதிகள்
லட்சக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் கூடும் சூழ்நிலையில், நோய்கள் பரவாமல் இருக்க சுகாதார வசதிகள் மிக மிக அவசியமானவை. இந்த ஆண்டில், சவூதி அரசு அனைத்துப் புனித தலங்களிலும் நவீன மருத்துவ நிலையங்கள், அவசர சிகிச்சை, வைத்திய முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டதுடன் 24 மணிநேர டிஜிட்டல் மதுத்துவ சேவையும் மேற்கொள்ளப்பட்டது.
பாதுகாப்பு நடவடிக்கை
மக்கள் ஒரே இடத்தில் கூடும்போது ஏற்படக்கூடிய நெருக்கடிகளைத் தடுக்க, பாதுகாப்பு படைகளின் பங்கு இவ்வாண்டு மிக முக்கியமானதாக இருந்தது. மனிதக் கூட்டங்களை ஒழுங்குபடுத்தும் பணியில் நுட்பம் மற்றும் அனுபவம் கலந்து செயல்பட்டனர். பயணிகள் சுதாரிக்கக்கூடிய இடர்பாடுகளை முன்னிலையே அறிந்து தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதுடன் நவீன தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்பட்டது.
நவீன தொழில்நுட்பம்
தொடர்புத் தகவல், தரவுகளின் பகிர்வு, வழிகாட்டல், குழுக்களை ஒழுங்குபடுத்தல் ஆகியவற்றில் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகித்தது. ஹஜ் பயணிகளுக்கான மொபைல் செயலிகள் போன்ற வழிகாட்டும் உபகரணங்கள் ஆகியவை பயணிகளின் அனுபவத்தை எளிமையாக்கின.
நிர்வாக ஒழுங்குமுறை
புனித மஸ்ஜிதுகள், மினா, அறஃபா, முஸ்தலிபா போன்ற இடங்களில் தங்கும் வசதிகள் மற்றும் போக்குவரத்து வழிகள் உள்ளிட்ட அனைத்தும் முன்நோக்கிப் பரிசீலிக்கப்பட்டு மிகச் சிறப்பாக நவீன அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு பயணியும் அந்த பயணத்தின் புனிதத்தையும் அமைதியையும் உணரக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டது.
இவ்வாண்டுக்கான ஹஜ் யாத்திரை யாத்திரிகள் உட்பட முழு முஸ்லிம் சமூகத்தினதும் பாராட்டை பெற்றதற்கு காரணம் சவூதி அரேபிய அரசாங்கத்தின் திறமையான திட்டமிடலும், பல்துறை ஒத்துழைப்புக்கள் தான் எனலாம்.
போசன் பண்டிகைக்காக நாடு முழுவதும் 19,185 போசன் தானம்.
2025 ஆம் ஆண்டு பொசன் பண்டிகைக்காக நாடு முழுவதும் 19,185 பொசன் டன்சல்கள் வழங்கும் நிகழ்வு பதிவுசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் (பொது சுகாதார சேவைகள்) மேலதிக செயலாளர் டாக்டர் லக்ஷ்மி சோமதுங்க குறிப்பிட்டார்.
சுகாதார இயக்குநர் ஜெனரல் 2025.05.06 தேதியிட்ட “பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான தன்சலை ஏற்பாடு செய்வதற்கான விரிவான வழிகாட்டுதல்கள்” என்ற சிறப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளார்.
வழிகாட்டுதல்கள் தொடரில் சுகாதார அதிகாரிகளுடன் தன்சலை பதிவு செய்தல், பொது சுகாதார ஆய்வாளர்களால் தகவல்களைச் சேகரித்தல், உணவு தயாரிப்பவர்களின் தனிப்பட்ட சுகாதாரத்தை உறுதி செய்தல், உணவு கையாளுபவர்கள் பின்பற்ற வேண்டிய கைகளை சுத்தமாக வைத்திருத்தல், உணவு கையாளுபவர்களின் சுகாதார நிலை, பயன்படுத்தப்படும் பொருட்கள், உணவு தயாரித்தல், கழிவுகளை அகற்றுதல், உணவு சுகாதார விழிப்புணர்வு, உணவு சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு சோதனை போன்றவை அடங்கும்.