யாழ்ப்பாணம், கொட்டடி பகுதியைச் சேர்ந்த பற்றிக்கிளே ஜோபாஸ் (வயது 48) என்பவர், நேற்று (25) இரவு அளவுக்கு அதிகமாக மதுபானம் அருந்தி, தவறான முடிவெடுத்து தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நேற்றிரவு மதுபானம் அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து உணவு உண்ட பின்னர் உறங்கியுள்ளார்.
இந்நிலையில், அதிகாலை 4:15 மணியளவில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
உடனடியாக அவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தினர்.
சடலத்தின் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
அளவுக்கு அதிகமாக மதுபானம் அருந்தியதால் தன்நிலை மறந்து இவர் உயிரை மாய்த்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கிளிநொச்சி விஜயம்!
ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இன்றைய தினம் 25.07.2025 கிளிநொச்சி தெற்கு வளைய கல்வி பணிமனைக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
கிளிநொச்சி வளைய கல்வி பணிமனை மற்றும் துணுக்காய் கல்வி வளையங்களில் பாரிய அளவிலான ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாகவும், இதில் விசேடமாக விஞ்ஞானம், ஐ.சி.டி போன்ற பாடங்களுக்கு அதிகமாக பற்றாக்குறை நிலவுகின்றதாகவும் தெரிவித்தார்.
மேலும் சில பாடசாலைகள் நடத்த முடியாத அளவில் பாரிய ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாகவும் அதிர்ச்சி தகவல் ஒன்றினை தெரிவித்தார்.
காளிசநொச்சி வளையத்தில் மாத்திரம் 75 பேர் இடமாற்றம் பெற்று சென்றுள்ள போதிலும், 35 புதிய ஆசிரியர்கள் மாத்திரமே திரும்பி வந்துள்ளனர் எனவும், இதேபோன்று முல்லத்தீவு, துணுகாய் கல்வி வளையங்களில் இதேபோன்ற நிலைமை காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
கல்வியை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான வளங்கள் பற்றாக்குறையாக காணப்படுவதாகவும், வடமாகாண ஆளுனறுக்கே இது தொடர்பான முழுமையான அதிகாரங்கள் இருப்பதாகவும், இதற்கான உரிய தீர்வினை அவர்களே எடுக்க வேண்டும் எனவும் இவ்விடயம் தொடர்பாக ஆராய்வதற்கே கிளிநொச்சி பகுதிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கிளிநொச்சி போலீஸ் நிலையத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிளிநொச்சி போலீஸ் நிலையத்தில் இன்றைய தினம் 25.07.2025 குடும்பப் பிணக்கு தொடர்பாக விசாரணைகளுக்காக அழைத்து வரப்பட்ட சந்தேக நபர் ஒருவர் விசாரணைகளுக்காக போலீஸ் நிலையத்தின் விசாரணை கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மதியம் 12.20 மணயளவில் தான் அணிந்திருந்த சாரத்தின் ஒரு பகுதியை கிழித்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த நபர் கிளிநொச்சி புகையிரத நிலைய வீதியைச் சேர்ந்த 66 வயதுடைய இரத்தினம் ராசு என்பதுடன், இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த நபர் ஒருவர் நேற்றைய (24) தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியை சேர்ந்த 63 வயதான நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் மூன்று பிள்ளைகளும் மனைவியும் கனடாவில் உள்ளனர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கனடாவில் இருந்து அவரது மச்சான் முறையானவருடன் யாழ்ப்பாணம் வந்திருந்தார்.
யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்த வேளை நேற்று உயிரிழந்துள்ளார்.
நேற்று பிற்பகல் அவரது வீட்டுக்கு சென்ற மச்சான் அவர் சடலமாக இருப்பதை அவதானித்த நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸாராருக்கு தகவல் வழங்கினார்.
அவரது சடலமானது மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
முல்லைத்தீவு, மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் அமைந்துள்ள வீட்டு வளாகத்தில் கிணறு ஒன்றில் இருந்து தாயும் 2 பிள்ளைகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராமத்தில் 2 பிள்ளைகளோடு வசித்து வந்த நிலையில், குறித்த தாய் ஒருவரும் அவரது 2 பிள்ளைகளும் அவர் வசித்து வந்த வீட்டில் இருந்து சுமார் 500 மீற்றருக்கு அப்பால் உள்ள அரச வீட்டு திட்டத்தில் உள்ள வீட்டுத்திட்ட பயனாளி ஒருவரின் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக இன்று (24) மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
இன்று காலை குறித்த கிணற்றின் அருகில் கான் பேக் ஒன்றும் இதர பொருட்கள் சிலவும் காணப்பட்டதை அடுத்து ஊரில் உள்ள மக்கள் அந்த விடயம் தொடர்பில் கிராம அலுவலர் மற்றும் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதன் அடிப்படையில் அங்கு வருகை தந்த கிராம அலுவலர் மற்றும் பொலிஸார் கிணற்றில் சடலங்கள் இருப்பதை அடையாளம் கண்டனர்.
இதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி சம்பவ இடத்திற்கு வருகை தந்து பார்வையிட்டதன் பின்னர் சடலங்கள் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட சடலங்களை மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் உசாகரன் மாலினி (வயது 38) தாய் மற்றும் மிக்சா (வயது 11) மகள் சதுசா (வயது 04) ஆகியவர்களாவர்.
இவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது என்ன நடந்தது என்பது தொடர்பில் மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மலைகளின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு (55-60) கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மணிக்கு (40-50) கிலோமீற்றர் வேகத்தில் மிதமான காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்றினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
இலங்கையில் இப்படி ஒரு கிராமத்தில் இப்படி ஒரு பாடசாலை உள்ளதா எனப் பலர் வியக்கும் வகையில் கண்டி மாவட்ட எல்லையில், மினிப்பே பிரதேசத்தில் கலமுதுன என்ற கிராமத்தில் ஒரு பாடசாலை இயங்கி வருகிறது.
மினிப்பே, கலமுதுனவில் அமைந்துள்ள பாடசாலைக்கு மிகவும் கடினமான பாதையூடாகவே பயணிக்க வேண்டியுள்ளது. குறித்த பாடசாலையில் ஒரேயொரு அசிரியர் மாத்திரமே கல்வி கற்பிக்கின்றார். அங்கு எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. வாகனங்ள் ஏதும் குறித்த பகுதிக்கு செல்லமுடியாது. குறிப்பிட்ட தூரம் வாகனத்தில் சென்று பின்னர் மைல் தூரம் நடை பயணமாகவே பாடசாலைக்கு செல்ல வேண்டும்.
ஆனால் இம் முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் அந்த ஒரு ஆசிரியர் மாத்திரமே சகல பாடங்களையும் கற்பித்து அனைத்து பாடங்களிலும் மாணவர்கள் சிறப்பாக தேர்ச்சி பெறவைத்துள்ளார். ஆனால் அங்கு 11 ம் தரத்தில் 5 மாணவிகள் மாத்திரமே கல்வி கற்று வந்துள்ளனர். மேலதிக வகுப்பு வசதிகள் கிடையாது. மின்சாரம் கிடையாது, தொலைபேசி வசதி இல்லை, பத்திரிகைகள் கூட அங்கு கிடைப்பதில்லை.
மினிப்பே பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள கலமுதுன கிராமத்தில், 40 குடும்பங்கள் வசிக்கின்றன. குறித்த குடும்பங்கள் அனைவரும் பௌத்த சிங்களவர்கள், விவசாயத்தையும் இயற்கை மழையையும் நம்பி வாழ்பவர்கள்.
அங்குள்ள ஒரே பாடசாலையில் 18 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இந்த பின்தங்கிய பாடசாலையில் படித்து, கல்வி பொதுத் தராதரப் சாதாரண தர பரீட்சையில் ஐந்து பேர் தோற்றி, நான்கு பேர் திறமையாகச் சித்தியடைந்துள்ளனர். அவர்கள் ஒரே ஆசிரியரின் சிறந்த வழிகாட்டுதலின் காரணமாக, அனைத்து பாடங்களிலும் சிறப்பாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்தப் பாடசாலைக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 3 ஆம் திகதியன்று பி. ஜனக தனுந்தர ஆங்கில பாடம் கற்பிக்கும் ஆசிரியராக வந்து சேர்ந்தார். இவர் அனுராதபுர மாவட்டத்தைச் சேர்ந்தவர். குறித்த பாடசாலைகளில் கல்வி கற்கும் பிள்ளைகளுக்காக அவர் மேற்கொண்ட அர்ப்பணிப்புக்கள் காரணமாக, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் மாணவர்கள் திறமை சித்தியடைந்தனர்.
முதலாம் ஆண்டு முதல் க.பொ.த. (சா/த) வரை வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்தப் பாடசாலையில் விஞ்ஞான ஆய்வு கூடமோ அல்லது அடிப்படை வசதிகளோ இல்லாத நிலையில் மாணவர்கள் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், மனைப் பொருளியல், மற்றும் வணிக பாடங்களைக் கற்பிக்கவும், அதிபராக கடமையாற்றவும் தனி ஒரு ஆசிரியராக இவர் செய்துவரும் வரும் சேவை வார்த்தைகளால் விபரிக்க முடியாதவை.
குறித்த கிராமத்திற்கு ஒரேயொரு அரச அதிகாரியான கிராம அலுவலர் மட்டுமே அங்கு செல்கிறார். அதுவும் தேர்தல் பணிக்காக தேர்தல் காலங்களில் மாத்திரமே அங்கு வருவதாக பொது மக்கள் கூறுகின்றனர். அண்மையில் மஹியங்கனை வர்த்தக சங்க உறுப்பினர்கள் இந்த ஆசிரியருக்கு ஒரு பாராட்டு விழாவை நடத்தி அவரது மனிதாபிமான சேவையை பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடங்களுடன் ஒப்பிடும்போது இந்த வருடம் ரம்புட்டான் மரங்களால் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
ரம்புட்டான் மரங்களை விலங்குகளிடமிருந்து பாதுகாக்க சிலர் மின்சார கம்பிகள் கொண்டு பாதுகாப்பு வேலிகள் அமைப்பதால், இந்த விபத்துக்கள் ஏற்படுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் விசேட அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் விராஜ் ரோஹன அபேகோன் தெரிவித்தார்.
அதன்படி, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் தற்போது பலர் சிகிச்சை பெற்று வருவதாக விசேட அறுவை சிகிச்சை நிபுணர் விராஜ் ரோஹன அபேகோன் குறிப்பிட்டார்.
இதேவேளை, சிறு குழந்தைகளுக்கு பெற்றோர் ரம்புட்டான் கொடுக்கும் போது மிகுந்த அவதானத்துடன் இருக்கமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இலங்கை 59வது இடத்தை பிடித்துள்ளது.
குற்ற விகிதம், பொது பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை அடிப்படையாக கொண்டு நம்பியோ தரவுத் தளம் ஒவ்வொரு ஆண்டும் மிகவும் பாதுகாப்பான நாடுகள் பட்டியலை வெளியிடுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு நம்பியோ பாதுகாப்பு குறியீட்டின்படி (Numbeo Safety Index) 2025-ம் ஆண்டில் உலகின் பாதுகாப்பான நாடாக பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினுக்கு இடையில் அமைந்துள்ள ஒரு சிறிய ஐரோப்பிய நாடான அன்டோரா உள்ளது. 2வது இடத்தில் ஐக்கிய அரபு அமீரகமும், 3வது இடத்தில் கத்தார் நாடுகளும் உள்ளன.
147 நாடுகளில், இலங்கை 59வது இடத்தையும், இந்தியா 66-வது இடத்தையும் பிடித்துள்ளதுடன், இங்கிலாந்து 87வது இடமும், அமெரிக்கா 89வது இடமும் பிடித்துள்ளன.
தெற்காசிய நாடுகளில், சீனா 15வது இடத்தில் உள்ளதுடன், பாகிஸ்தான் 65வது இடத்தையும், வங்கதேசம் 126வது இடத்தையும் பிடித்துள்ளன.
நம்பியோ பாதுகாப்பு குறியீட்டின்படி அன்டோரா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், தைவான், ஓமன், ஐல் ஆப் மேன் (ஐரிஸ் கடல் தீவு), ஹாங்காங் (சீனா), ஆர்மீனியா, சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களை பிடித்துள்ளன. இந்த தரவரிசையில் 19.3 புள்ளிகளுடன் கடைசி இடத்தில், அதாவது மோசமான பாதுகாப்பு கொண்ட நாடாக வெனிசுலா உள்ளது.